Friday, February 27, 2015

தொல்பொருட்களை நாசமாக்கிய ஐ.எஸ். மத அடிப்படைவாதிகளின் பண்பாட்டு அழிப்பு


ஈராக்கில் மொசுல் நகரில், 2500 வருடங்கள் பழமையான தொல்பொருட்கள், ISIS மத அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. மொசுல் மியூசியத்தில் நடந்த அராஜகத்தை தாங்களே வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான சில குறிப்புகள்.

ஈராக் நாட்டை ஆண்ட சதாம் ஹுசைன் எந்தளவு கொடுங்கோலனாக இருந்தாலும், தனது தாய்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த தொல்பொருட்களை பேணிப் பாதுகாத்து வந்தார். ஆனால், ஈராக்கிற்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்ய விரும்பிய அமெரிக்கா, சதாமை பதவியில் இருந்து அகற்றி விட்டு, தனது படைகளை அனுப்பி ஆக்கிரமித்தது.

அப்போதே ஈராக்கின் தொல்பொருட்களை நாசமாக்கும் அராஜக செயல்கள் தொடங்கி விட்டன. பாக்தாத், மற்றும் பல நகரங்களில் இருந்த மியூசியங்கள் சூறையாடப் பட்டன. திருடர்கள் தாம் கொண்டு செல்ல முடியாதவற்றை அடித்து நொறுக்கினார்கள். ஈராக்கில் திருடப் பட்ட பொக்கிஷங்கள், மேற்கத்திய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப் பட்டன.

ஈராக் மட்டுமல்ல, சிரியாவும் பல்லாயிரம் வருட காலம் பழமையான, அரும் பெரும் தொல்பொருட்களை கொண்ட நாடு தான். அங்கேயும் அமெரிக்கா வெறுத்த ஆசாத்தின் சர்வாதிகார அரசு தான், அந்தப் பொக்கிஷங்களை பாதுகாத்து வந்தது.

அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஆசாத் அரசுக்கு எதிரான "விடுதலைப் போராளிகளை" ஆதரித்தார்கள். அந்த "விடுதலைப் போராளிகள்" வேறு யாருமல்ல. சன்னி இஸ்லாம் மத அடிப்படைவாதக் குழுக்கள் தான். மேற்குலகம் "மிதவாத" சாயம் பூசிய FSA கூட, ஒரு மத அடிப்படைவாத அமைப்பு தான். சிரியாவில் பல பகுதிகள் தீவிரவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் வந்த போதே, பழம் பெருமை வாய்ந்த கலைப் பொக்கிஷங்களை அடித்து நொறுக்கி நாசமாக்கும் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.

சன்னி இஸ்லாம் மத அடிப்படைவாதக் குழுக்கள், இஸ்லாத்திற்கு முந்திய நாகரிகங்களை காட்டும் சிலைகள், சிற்பங்கள், தொல்பொருட்களை மட்டும் அழிக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இஸ்லாமிய தத்துவ அறிஞர்கள், கவிஞர்களின் சிலைகள், சமாதிகளையும் உடைத்தார்கள்.

சிரியா உள்நாட்டுப் போரில் ஆதிக்கம் பெறத் தொடங்கிய, ISIS, அல் நுஸ்ரா ஆகிய இரண்டும் ஏட்டிக்குப் போட்டியாக சிலை உடைப்புகளில் ஈடுபட்டன. உண்மையில், பாரம்பரிய தொல்பொருட்களை அழிக்கும் மரபு இஸ்லாம் எனும் மதத்திற்கு மட்டுமே உரிய விசேட அம்சம் அல்ல. 

17 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. குறிப்பாக புரட்டஸ்தாந்து மதப் பிரிவை ஸ்தாபித்த லூதரை பின்பற்றிய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், ஏசு, மரியாள் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். குறிப்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில், நிறைய சிலை உடைப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு காலத்தில், பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யம், மத்திய கிழக்கில் மிகப் பெரிய பிரதேசத்தை ஆண்டது. இஸ்லாமிய கலீபாக்களின் காலத்தில் கூட, பண்டைய நாகரிகத்தை காட்டும் பொக்கிஷங்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கான படையெடுப்பு நடந்த காலத்தில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. 

மதம் பரப்பும் போரில், சில பழம் பெருமை வாய்ந்த நகரங்கள் அழிந்துள்ளன. ஆனால், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாம் ஆதிக்க மதமான பின்னர், அப்படி எதுவும் நடக்கவில்லை. குடிமக்களுக்கும், தேசத்தின் வளங்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பு மன்னருடையது. அந்தக் கடமையை இஸ்லாமிய கலீபாக்கள் நிறைவேற்றி வந்தனர்.

ஆகையினால், கண்டிக்கப் பட வேண்டிய ஐ.எஸ். மத வெறியர்களின் செயலை, ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கும் எதிரானதாக திசை திருப்புவது உள்நோக்கம் கொண்டது. முஸ்லிம்கள் எல்லோரும் சிலை உடைப்பாளர்கள், அல்லது அதை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது அரசியல் பிரச்சாரமே தவிர, உண்மை அல்ல. 

எல்லா மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் இருப்பார்கள். அவர்கள் மத நூல்கள் கூறும் போதனைகளை தமது அரசியலுக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்துக் கொள்வார்கள். இன்றைக்கும் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் குழுக்களுக்கும், ஐ.எஸ்., அல்கைதா போன்ற இஸ்லாமிய அடிபப்டைவாத குழுக்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளில், நடைமுறையில் உள்ள அரசு அதிகாரம் மிகவும் பலமானது. அதனால், மத அடிப்படைவாதிகளினால் எதுவும் செய்ய முடியாதுள்ளது. ஆனால், சிரியா, ஈராக்கில் நிலைமை அப்படி அல்ல. அங்கேயுள்ள அரசு அதிகாரம் மிகவும் பலவீனமானது. தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை மீட்க முடியாமல் வருடக் கணக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த குழப்பகரமான சூழ்நிலையில், ஐ.எஸ். என்ற மிகவும் பலமான மத அடிப்படைவாத இயக்கம், தனது அராஜகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

ISIS இயக்கம், ஏற்கனவே பல தொல்பொருட்களை சூறையாடியுள்ளது. சிரியாவில் உள்ள மியூசியங்களில் திருடப் பட்ட தொல்பொருட்கள், பிரிட்டனில் கள்ளச் சந்தையில் விற்கப் பட்டுள்ளன. இதன் மூலம், ஐ.எஸ். இயக்கம் தனது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொண்டது. (Islamic State is selling looted Syrian art in London to fund its fight)

மேலும், மொசுல் அருங்காட்சியகத்தில் அடித்து நொறுக்கப் பட்ட பொக்கிஷங்கள் அசலானவை அல்ல! அவை காலனிய காலத்தில் பிளாஸ்டர் சீமெந்து கலந்து செய்யப் பட்ட போலிகள். ஒரிஜினல் பொக்கிஷங்கள் சில பாக்தாத்தில் உள்ளன. பெரும்பாலான தொல்பொருட்கள் காலனிய காலத்தில் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப் பட்டன. அவை இன்றைக்கும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. (Islamic State fighters smash historic statues in Iraq)

எது எப்படியிருப்பினும், ISIS போன்ற மத அடிப்படைவாத அல்லது பயங்கரவாத அமைப்புகளின் செயல்கள், மத்திய கிழக்கில் வாழும் பெரும்பான்மையான அரபு- இஸ்லாமியருக்கும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளன. ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களில் குறைந்தது ஐந்து அல்லது பத்து சதவீதம் அவர்களை ஆதரிக்கலாம். மற்றவர்கள் எதிர்த்துப் பேசினால் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு பக்கம் ஈராக் அரசும், ஷியா ஆயுதபாணிக் குழுக்களும், ஈராக்கில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம், ஆசாத் அரசும், ஹிஸ்புல்லாவும் சிரியாவில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. மேற்குலகில் இருப்பவர்கள், உண்மையிலேயே சிரியா, ஈராக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்க விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் அரச படைகளை ஆதரிப்பது தான். 

ஆனால், அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் நேரங்களில், மேற்குலகம் மெத்தனப் போக்கை காட்டி வருகின்றது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ளும் ISIS, ஈராக், சிரியா மக்களுக்கு எதிரான பண்பாட்டு அழிப்புப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

Tuesday, February 24, 2015

சேகுவேராவின் சர்ச்சைக்குரிய பேரன் மெக்சிகோவில் காலமானார்

உலகப் புகழ் பெற்ற புரட்சியாளர் சேகுவேராவின் பேரன்,  "கானக் சஞ்செஸ் குவேரா" (Canek Sanchez Guevara), மெக்சிகோவில் காலமானார். 21 ஜனவரி அன்று,மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, அறுவைச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

 காலஞ் சென்ற கானக் சஞ்செஸ், சேகுவேராவின் புதல்வியான ஹில்டித்தாவின் மகனாவார். அவரது தந்தை அல்பேர்ட்டோ சஞ்செஸ் ஒரு மெக்சிகோ இடதுசாரி ஆவார். 1974 ம் ஆண்டு, கியூபாவில் பிறந்த கானஸ் சஞ்செஸ், இளம் பராயத்தில் தாய், தந்தையருடன் கியூபாவிலும், ஸ்பெயினிலும் வளர்ந்து வந்தார்.

பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கானக் சஞ்செஸ் குவேரா தனது தாத்தாவை மாதிரி ஒரு கம்யூனிஸ்டாக அல்லாமல், ஓர் அனார்க்கிஸ்டாக வாழ்ந்தார். ஐரோப்பிய அராஜகவாதிகள் மாதிரி Punk கலாச்சாரத்துடன் சிகையலங்காரம் செய்து கொண்டிருந்தார். இசையில் நாட்டம் கொண்டவராக ஒரு Heavy metal இசைக்குழுவை நடத்தி வந்தார். இவரது தன்னிச்சையாக திரியும் போக்கு, கியூப சமூகத்திற்கு ஒத்து வரவில்லை. பல தடவை, தனிப்பட்ட முறையில் பொலிஸ் சோதனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

ஸ்பெயினில் இருந்து கியூபா திரும்பிச் சென்ற சமயம், அரசு அவருக்கு இராணுவத்தில் தலைமை அதிகாரிப் பதவி ஒன்றை வழங்க முன் வந்தது. ஆனால், கியூப அரசுடன் முரண்பட்ட கானக் சஞ்செஸ் குவேரா, கியூபாவை விட்டு வெளியேறி, மெக்சிகோவில் குடியேறினார். 1996 ம் ஆண்டு, தனது 22 வது வயதில், பல நெருக்குதல்கள் காரணமாக வெளியேறியுள்ளார்.

கானக் சஞ்செஸ் குவேரா, கியூபாவில் வாழ்ந்த காலங்களில் காஸ்ட்ரோ அரசை விமர்சித்த இடதுசாரிகளில் ஒருவராக விளங்கினார். சேகுவேராவின் பேரன் என்பதால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு எதிர்பார்த்ததும் முக்கியமான காரணம். அதனால், தனது தனித் தன்மை பாதிக்கப் படுவதாக உணர்ந்தார். 

காஸ்ட்ரோ அரசுக்கு எதிரான, கானக் சஞ்செஸ் தெரிவித்த கடுமையான விமர்சனங்கள் யாவும் அவரது அனார்க்கிஸ்ட் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. "காஸ்ட்ரோ அரசானது கிறிஸ்தவ மீட்பரின் அரசாட்சி போன்று நடந்து கொள்கிறது. ஒரு சோஷலிச ஆளும் வர்க்கத்தை கொண்ட அரசு இயந்திரம், மக்களை நசுக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருப்பதாக..." என்று குறிப்பிட்டுள்ளார்.

கானக் சஞ்செஸ், தனது பார்வையில், "கியூப அரசு (மக்கள்) ஜனநாயகத் தன்மை கொண்டதோ அல்லது கம்யூனிசத் தன்மை கொண்டதோ அல்ல" என்று விமர்சித்துள்ளார். சோஷலிசம், கம்யூனிசம், அனார்க்கிசம் போன்ற கோட்பாடுகளை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு, இத்தகைய விமர்சனங்கள் புதிதல்ல. அனார்க்கிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச சமுதாயம் அமைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இருப்பினும், அனார்க்கிஸ்டுகள் அது நேரடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். கம்யூனிஸ்டுகள் அதற்கு முதலில் ஒரு சோஷலிச அரசு அமைக்க வேண்டும் என்கின்றனர். சோஷலிச அரசானது, வழமையான அடக்குமுறை இயந்திரமாகவே இருக்கும் என்றும், அது காலப்போக்கில் கம்யூனிச சமுதாயம் உருவாகும் முன்னர் வாடி உலர்ந்து விடும் என்றும் லெனின் கூறியுள்ளார்.

மெக்சிகோவில் வாழ்ந்த கானக் சஞ்செஸ், அங்கிருந்த அனார்க்கிஸ்ட் குழுக்களுடன் சேர்ந்து இயங்கினார். ஒரு எழுத்தாளராக, இசைக் கலைஞராக, புகைப்படப் பிடிப்பாளராக வாழ்ந்த கானக் சஞ்செஸ் சாகும் பொழுது அவரது வயது 40 மட்டுமே.

Friday, February 20, 2015

காயமடைந்த பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற இந்தியப் படையினர்


சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின் சடலங்களை காட்டும் படங்கள், சட்டிஸ்காரில் வெளியாகும் ஹிந்தி சஞ்சிகை ஒன்றில் பிரசுரமாகி உள்ளன. அது குறித்து மாவோயிஸ்ட் ஆதரவு தகவல் மையம் வெளியிட்ட விரிவான அறிக்கை:
__________________________________________________________________________


துணை இராணுவ மற்றும் சத்தீஸ்கர் போலீஸ் படைகளால், பெண்கள் கெரில்லாக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிப்போம்!

அக்டோபர் 8, மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் சட்டீஸ்கர் காவல் படைகள், மாவட்ட காவல் படைகள் மற்றும் கோயா கமாண்டோக்கள், பிஜப்பூர் மாவட்டத்தில் பொட்டம் (பொட்டெனர்) கிராமத்தில் கொரில்லா குழுவினரை தாக்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பெண் தோழர்கள் பூனம் ஜமிலி, மத்கம் ரம்பத்தி மற்றும் மத்கம் லட்சுமி தியாகியாயினர். மத்கம் ரம்பத்தி துப்பாக்கி சூடு நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

பூனம் ஜமிலி காயம்பட்டிருந்த வேளையிலே மத்கம் லட்சுமி படுகாயம் அடைந்தார். இராணுவத்தினர் காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொன்றனர். காவல் துறை பூனம் ஜமிலியின் நிர்வாண உடலை புகைப்படங்களை எடுத்து, பத்திரிகைகளுக்கு விநியோகித்தனர். சத்தீஸ்கரின் இந்தி பத்திரிகை இந்த புகைப்படங்களை பதிப்பித்தது.

பொட்டம் சம்பவம் தற்போது மூன்றாம் கட்டத்திலுள்ள பசுமை வேட்டை நடவடிக்கையின் (OGH) பகுதியாக மத்திய ரிசர்வ் காவல் படைகளும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா காவல் படைகளும் நடத்தி வரும் எண்ணிலடங்கா கொலைகள், வன்புணர்ச்சிகள் மற்றும் அழிவு நடவடிக்கைகளில் கூடுதலான ஒரு சம்பவமே. 2012 ஜூனில் சி 60 அதிரடிப்படையினர், கட்சிரோலி மாவட்டத்தின் இடபள்ளி தாலுகாவில் மெட்ரி கிராமத்தின் அருகே பெண்கள் கெரில்லாக்களை தாக்கினர். காயமடைந்த ஆறு பெண்கள் கெரில்லாக்களை பிடித்தனர், அவர்களை வன்புணர்ச்சி செய்து கொடூரமாக கொன்றனர். அதன்பின் இறந்த உடல்களுடன் அருவருப்பூட்டும் வகையில் நடந்து கொண்டனர்.

பொட்டம் சம்பவத்தில், இராணுவத்தினர் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்கள் எல்லா உரிமைகளையும் தங்கள் இரும்பு பூட்சுகளினால் நசுக்கியுள்ளனர் என்பதோடு அரசமைப்பு மற்றும் சட்டங்களுக்கு எதிரான அக்கிரமங்களை புரிந்துள்ளனர். அவர்கள் நாகரீக சமூகத்தின் ஒவ்வொரு நாகரீக ஒழுக்கத்தையும் காற்று வெளிகளில் தூக்கியெறிந்ததன் மூலம் தங்களின் வெட்கமின்மையைற்றதனத்தை வெளிக்காட்டியுள்ளனர். 

அவர்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் நாகரீக சமூகத்தின் மதிப்பீடுகளை மீறியுள்ளதோடு காயமடைந்த வீரர்களும் கைதிகளும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் இன்னும் கூடுதலாய் பெண் கிளர்ச்சியாளர்கள் காயப்பட்ட நிலையில் இருக்கும் போது, அவர்கள் மிகவும் கவனமாக நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்ற யுத்த விதிகளையும் மீறியுள்ளார். இது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் படி, மனித உரிமை மீறல் மட்டுமல்ல மேலும் ஒரு போர் குற்றத்தின் நிறைவேற்றமும் கூட.

ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தப்படி இத்தகைய போர் குற்றத்திற்கு உள்ளாகும் நபர்கள் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது காவல் படைகளின் கொடூரமான குற்றவியல் பத்திரத்தை மட்டுமல்ல அவர்களின் மற்றும் குற்றவியல் இயல்பையும் சுட்டிக்காட்டுகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையும், இத்தகைய அரசாங்க படைகளின் கொடூரமான குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றி கேள்விகள் எழுப்பினாலும் கூட பெண் கெரில்லாக்களின் நிர்வாண படங்களை வெளியிட்டதன் மூலம் அது தன் சொந்த அற நெறிகளை மீறிவருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

தண்டகாரண்ய இயக்கத்தை ஒடுக்க மத்திய மாநில அரசாங்கங்களால் முன்னெடுத்து செல்லப்பட்ட சல்வா ஜூடுமின் போதும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் பச்சை வேட்டை நடவடிக்கையின்போதும் எண்ணற்ற அக்கிரமங்களும் படுகொலைகளும் நடத்தப்பட்டன இன்னும் நடத்தப்பட்டுவருகின்றன. காவல்துறை குண்டர்கள் நாகரீக சமூகத்திற்கு சவால் விடும் வகையில் அவர்களின் மனிதத்தன்மையற்ற புகைப்படமெடுத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை வெளிட்டது அனைத்து எல்லைகளையும், மீறியுள்ளது. வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்ட கொடூரமானது .

நாங்கள் மக்களிடமும் ஜனநாயகவாதிகளிடமும் குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமும் இத்தகைய அருவருக்கத்தக்க குற்ற இயல்பையும் மனிதத்தன்மையற்றதுமான சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்க கோருகிறோம்.

நாங்கள் போட்டேம் அக்கிரமங்களை புரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை தண்டிக்க கோரும் இயக்கங்களை கட்ட குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளை வேண்டுகிறோம்.

நாங்கள் இத்தகைய அருவருக்கத்தக்க மனிதத்தன்மையற்ற சட்டவிரோத மனித உரிமை மீறல்களை புறிந்து பின் காவல்துறையால் பிறகு வெளியிடப்பட்ட புகைப்படங்களை பதிப்பித்த சத்தீஸ்கர் இந்தி பத்திரிகையின் செயலை கண்டிக்க அனைத்து இந்திய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பதிப்பாசிரியர்களின் கழகங்களை கேட்டுக் கொள்கிறோம்

- புரட்சிகர ஜனநாயக முன்னணி


Condemn the murders of women guerillas by the paramilitary and Chhattisgarh police forces Punish the police who raped the injured women guerillas and murdered them

On October 8, the central paramilitary forces and the Chhattisgarh police forces, district police forces and Koya commandos attacked our guerilla squad at Pottem (Pottenar) village in Bijapur district. In this firing three women comrades Punem Jamili, Madkam Rambatti and Madkam Lakshmi were martyred. Madkam Rambatti was killed on the spot in the firing. Madkam Lakshmi was seriously injured while Punem Jamili was also injured. The jawans raped the injured women guerillas and killed them. 

The police took photos of the naked body of Punem Jamili and released those to the press. A Hindi magazine of Chhattisgarh published those photos. Pottem incident is one more incident in the innumerable murders, rapes and destruction perpetrated by the CRPF and Chhattisgarh and Maharashtra police forces as part of Operation Green Hunt (OGH), now in its third phase. In June 2012 C-60 commandos attacked women guerillas near Medri village in Etapalli taluq of Gadchiroli district, caught six women comrades who were injured, raped them and murdered them in cold blood. Then they behaved obscenely with the dead bodies.

In the Pottem incident, the jawans have suppressed with their iron boots all rights to the women guaranteed by the Constitution and perpetrated these atrocities which are against the Constitution and the law. They displayed their shamelessness by throwing to winds every civilized norm of the civil society. They horribly violated the values of a civil society and rules of war which stipulate that injured soldiers and captives should be treated with respect and that too when women insurgents are in an injured state, they should be treated more sensitively.

This is not only a violation of human rights according to the international human rights law but would also constitute a war crime. According to the Geneva Convention persons perpetrating such war crimes should be tried by international courts. Raping and murdering injured women guerillas denotes the brutal and criminal character of the police forces and their criminal nature.

The media and the newspaper industry, instead of raising questions on such brutal, criminal and illegal acts of the government forces, is violating its own ethics by publishing the naked photos of the women guerilla. This is highly objectionable.

Whether during the Salwa Judum that was carried on by the central and state governments to suppress the Dandakaranya movement or during the OGH, ongoing since the past five years, countless such atrocities and murders were perpetrated and still being perpetrated. The police goons taking photos of their inhuman and criminal activities by challenging the civil society and displaying them is violating all limits and callous beyond words.

We are appealing to the people, democrats, civil rights and human rights organizations to condemn such obscene, criminal, inhuman, illegal acts that violate the Constitution too. We appeal to the civil and human rights organizations to build movements to demand the booking of cases on jawans who perpetrated the Pottem atrocities and punish them.

We are appealing to the all India journalists’ unions and editors’ guilds to condemn the act of the Chhattisgarh Hindi magazine that published the photo released by the police after perpetrating such an obscene, inhuman and illegal human rights violation.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, February 17, 2015

அரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- பண்பாட்டுக் கூறுகள்

பழைய மரக்கேஷ் நகரம் 

புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், தங்களுக்கும் அரேபியருக்கும் இடையில் ஜென்மப் பகை இருப்பது போன்று காட்டிக் கொள்வார்கள். தாங்கள் அரேபியரை விட மேலானவர்கள் (அனால், வெள்ளையரை விட கீழானவர்கள்) என்று கருதிக் கொள்வோரும் உண்டு. இது உயர்வுச் சிக்கலும், தாழ்வுச் சிக்கலும் கலந்த மனோவியல் பிரச்சினை. 

பெரும்பான்மைத் தமிழர்கள் இந்துக்கள், பெரும்பான்மை அரேபியர்கள் முஸ்லிம்கள் என்ற மத வேறுபாட்டுக்கு அப்பால், இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையில் பல கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுகின்றன. சிலநேரம் 80% சதவீத ஒற்றுமை இருக்கிறதோ என்று ஐயுறும் அளவிற்கு, அவர்களது நடத்தைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் அமைந்துள்ளன.

நான் வழமையாக முடி வெட்டிக் கொள்வதற்காக, வீட்டுக்கு அருகில் இருக்கும் மொரோக்கோ - அரேபியர் ஒருவரின் சலூனுக்கு செல்வதுண்டு. அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கே அரட்டை அடிப்பதற்காக கூடுவார்கள். (நம்ம ஊர் சலூன் ஞாபகம் வருகிறதா?) அப்படிக் கூடும் அரபி இளைஞர்கள் பலதையும் பத்தையும் பற்றி அலசுவார்கள். அவர்கள் அரைவாசி அரபி, அரைவாசி டச்சு மொழி கலந்து பேசுவதால், எனக்கும் சிலது விளங்கும். சொற்கள் மட்டுமல்ல, வசனங்கள் கூட இரண்டு மொழிகளிலும் கலந்து  கதைப்பார்கள். 

எனது ஐந்து வயது மகன் செல்லும் ஆரம்ப பாடசாலையில், நிறைய மொரோக்கோ - அரபிக் குழந்தைகள் படிக்கின்றன. அவர்களை கூட்டி வரும் தாய், தந்தையர் தமது பிள்ளைகளுடன், டச்சு மொழியில் மட்டுமே உரையாடுவார்கள். தமிழர்களைப் போன்று தான் அரபுக் காரர்களும். தங்களது பிள்ளை டச்சு போன்ற ஐரோப்பிய மொழி கதைப்பதைக் கேட்டு ஆனந்தம் அடைவார்கள். 

காரணம் கேட்டால், சிறு வயதில் இருந்தே பிள்ளை டச்சு மொழியை கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் நன்றாகப் படிக்கும் என்று சொல்வார்கள். எல்லாப் பெற்றோருக்கும் தம் பிள்ளை நன்றாகப் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதனால், அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது.

ஒரு தடவை, சுற்றுலாப் பயணியாக மொரோக்கோ நாட்டிற்கு சென்றிருந்தேன். மொரோக்கோ ஒரு காலத்தில் பிரெஞ்சுக் காலனியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. அகடிர் நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் அமர்ந்திருந்த நேரம், தனியாக இருந்த அழகான யுவதியுடன், ஒரு இளைஞன் பேச்சுக் கொடுத்தான். 

இருவரும் மொரோக்கோவை தாயகமாக கொண்ட, அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களது அறிமுக உரையாடல் முழுவதும் பிரெஞ்சு மொழியில் அமைந்திருந்தது. நமது தமிழர்களில் பலர், ஆங்கிலத்தில் கதைப்பதை பெருமையாகக் கருதுவது போன்று, மொரோக்கோ அரேபியர்கள் பிரெஞ்சு கதைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.

நான் எந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாக சென்றாலும், சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும் சாதாரண பேருந்து சேவையில் பயணம் செய்வது வழக்கம். அகடிர் நகரில் இருந்து மரக்கேஷ் நகருக்கு செல்லும் கடுகதி பேருந்து வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த வண்டி, இடையில் பிரேக் டவுன் ஆகி ஓடாமல் நின்று விட்டது. 

அதனால், வேறொரு வண்டி வரும் வரையில் பயணிகள் எல்லோரும் இறங்கி தெருவில் நின்று கொண்டிருந்தோம். பேருந்து வண்டியில் பயணம் செய்த மொரோக்கோக் காரர்கள், அநேகமானோர் மத்திய தர வர்க்கத்தினர். முன் பின் அறிமுகமில்லாத அவர்களும் தமக்குள் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடினார்கள்!

போர்த்துகேயரின் காவல் கோட்டை,
அகடிர் 
மொரோக்கோவில் அகடிர் நகரத்தை, தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல வருடங்களாக, போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பாண்டிச்சேரி மாதிரி அதுவும் ஒரு கடற்கரைப் பட்டிணம். அகடிர் நகர மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில், ஒரு இளம் மொரோக்கோ தம்பதிகள் அறிமுகமானார்கள். 

சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய அவர்கள் என்னுடன் மணிக் கணக்கில் உரையாடினார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எளிமையாக நடந்து கொண்டாலும், அவர்களின் மனதில் ஒரு வகை உயர் சாதிப் பெருமிதம் இருப்பது தெரிந்தது. அதாவது, இறைதூதர் முகமது நபியின் வம்சாவளியினர் என்று தம்மைக் கூறிக் கொண்டனர். அது குறித்த தகவல்களை, பரம்பரை பரம்பரையாக கடத்திக் கொண்டு வருவதாகக் கூறினார்கள்.

மொரோக்கோ சமூக அமைப்பிற்கும், இந்திய, இலங்கை சமூக அமைப்பிற்கும் இடையில் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகமாக இருந்ததை, அந்த இளம் தம்பதிகளுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அரசியல், பொருளாதாரம், சமூகம், என்று பல மட்டங்களிலும் நிறைய ஒற்றுமைகள் காணப் பட்டன.

மொரோக்கோவில் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகளின் பிரதானமான தொழில், பொது மக்களின் பணத்தை சுரண்டுவது தான். ஆளும் கட்சி பதவியில் இருக்கும் ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடித்து சேர்த்த பின்னர், அடுத்த தேர்தலில் வென்று வரும் எதிர்க் கட்சி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடிப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொள்ளையடிப்பதற்கு வசதியாக ஐந்து வருட காலம் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால், மொரோக்கோ நாட்டில் ஒருவர் மட்டும் தனது ஆயுள் காலம் முழுவதும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறார். மக்கள் அவரை தேர்தலில் தோற்கடிக்க முடியாது. அவர் தான் மொரோக்கோவின் மன்னர்!

"உலகில் பெரிய பள்ளிவாசல்",
காசப்பிளாங்கா 
மொரோக்கோவின் மன்னர் காலம் முழுவதும் நாட்டை சுரண்டுவது போதாது என்று, காசாபிளாங்கா நகரில் "உலகில் பெரிய பள்ளிவாசல்" ஒன்றைக் கட்டி, அதிலும் பெரும் பணம் ஊழல் செய்துள்ளார். 

நமது ஊரில் கோயில் நிதி சேகரிப்பது என்ற பெயரில், ஒரு பட்டாளமே திரண்டு வந்து காசு சேர்த்துக் கொண்டு செல்வதைப் போன்று தான் மொரோக்கோவிலும் நடந்துள்ளது. இந்தக் காலத்தில் வர்த்தக நோக்கத்திற்காக கோயில் கட்ட நிதி திரட்டுகிறார்கள் என்று சாதாரண தமிழ் மக்கள் பேசிக் கொள்வதைப் போன்று தான், மொரோக்கோவில் சாதாரண அரபு மக்களும் பேசிக் கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்?

அரசியலில் மட்டும் தான் ஊழல் என்பதில்லை. வர்த்தக நிறுவனங்களிலும் ஊழல் தான் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். ஏனென்றால், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, நிறுவனத்தின் முதலாளி அல்லது மனேஜரை தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் உறவினர்கள், நண்பர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். 

அப்படி யாரையும் தெரியாது என்றால், நிறையப் பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், திறமை இல்லா விட்டாலும் மனேஜருடன் நெருக்கமாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். பாவாடை எந்தளவுக்கு உயருகின்றதோ, அந்தளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப் படுமாம்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் எந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்களோ, மொரோக்கோவில் முஸ்லிம் பெண்களும் அந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ளதைப் போன்று, இன்னமும் அழியாத நிலப்பிரபுத்துவ கால பழக்க வழக்கங்கள், மொரோக்கோவிலும் உள்ளன. வெளியில் உள்ளவர்கள் அதைப் பார்த்து விட்டு, "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பழமைவாத மொரோக்கோ காரர்களும் அப்படி சொல்லிக் கொள்வதுண்டு.

நான் மொரோக்கோவில் எல்லா இடங்களுக்கும் செல்லா விட்டாலும், குறைந்தது மூன்று, நான்கு நகரங்களைப் பார்த்து விட்டேன். எங்கேயும் முக்காடு போட்ட இளம் பெண்களைக் காணவில்லை. மிக மிக அரிதாகத் தான் இளம் யுவதிகள் முக்காடு அணிகிறார்கள். அதற்கு மாறாக, வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் வயதான குடும்பப் பெண்மணிகள் முக்காடு அணிகிறார்கள்.

சரித்திர காலத்தில் இருந்து, பொதுவாக மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் அரேபியர்கள் முக்காடு அணிவதில்லை. அது அவர்களது பண்பாட்டில் இல்லை. ஆனால், இன்று அது பழமைவாத கலாச்சார அடையாளமாக பின்பற்றப் படுகின்றது.

அதாவது, இந்தியாவில் வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்பப் பெண்மணிகள் சேலை அணிந்து செல்வது போன்று தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அநேகமாக இளம் வயதில் ஐரோப்பிய பாணி உடை அணியும் நங்கையர்கள், திருமணமாகி குழந்தை பெற்றதும் அடக்கமான உடை (முக்காடு) அணியத் தொடங்கி விடுவார்கள்.

அதே நேரத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளம் மொரோக்கோ பெண்கள் பெருமளவில் முக்காடு அணிகிறார்கள். அந்தப் பழக்கமும் அண்மையில், கடந்த இருபதாண்டுகளுக்குள் தோன்றியது தான். அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் கலாச்சாரத்தை கட்டிக் காக்கிறார்களாம். இதிலும் தமிழர்களுடன் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். 

புலம்பெயர்ந்த நாட்டில், "பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம், கோயில் திருவிழா செய்கிறோம், பொங்கல், தீபாவளி கொண்டாடுகிறோம், தமிழ்ப் பெண்கள் புடவை உடுத்துகிறார்கள்..." என்றெல்லாம் கூறி தமிழ் இனப் பெருமை பேசிக் கொள்வதில்லையா? அதையே தான் அரேபியர்களும் செய்கிறார்கள். எந்த வித்தியாசமும் இல்லை.

இந்து இந்தியாவில் உள்ளதைப் போன்று தான், முஸ்லிம் மொரோக்கோவிலும் பெண்களின் "கற்புக்கு" முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆண் எத்தனை பெண்களுடனும் உறவு வைத்திருக்கலாம். ஆனால், ஒரு பெண் திருமணம் முடிக்கும் வரையில் கன்னியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பாலியல் சுதந்திரம் அனுபவிக்கும் ஆண் சகோதரர்கள், தமது சகோதரிகளுக்கு அந்த சுதந்திரத்தை கொடுக்க மறுப்பார்கள். "படிக்கப் போகிறேன் என்று சொல்லி கண்டவனுடன் காதலித்துக் கொண்டு திரிகிறாயா? வீட்டுக்குள்ளே  இருடி...!" என்று சொல்லி தம்பியே அக்காவை அடக்கி வைக்கும் சம்பவங்கள் வழமையாக நடக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம், முன்பிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், பெண்களும் வீட்டுக்கு வெளியே சென்று, படித்து, பட்டம் பெற்று, வேலை செய்யும் லிபரல் சமுதாயத்தில், அது சில நேரம் கேலிக்குரியதாகி விடுகின்றது. மொரோக்கோ பெண்களுக்கும் காதலிப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அவர்களின் காதலில் தலையிடுவது அரசாங்கம் அல்ல, மாறாக குடும்ப உறுப்பினர்கள்.

திருமணத்திற்கு முன்னர் காதலிக்கும், சிலநேரம் காதலனுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள் நிறையப் பேர் மொரோக்கோவில் உள்ளனர். அவர்களது காதல் திருமணத்தில் முடியாவிட்டால் அதோ கதி தான். இந்திய சமுதாயத்தில் அப்படியான பென்னுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருமோ, அது அவ்வளவையும் மொரோக்கோ பெண்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணக்கார வீடுகளில், அந்தப் பிரச்சினையை அப்படியே அமுக்கி விடுவார்கள். ஆனால், நடுத்தர வர்க்க, ஏழைக் குடும்பங்களில் கெளரவம் பார்ப்பார்கள். அதனாலேயே குடும்பங்களில் அடிதடிகள் நடக்கும்.

தமிழ் சமூகத்திற்குள் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று தெரிந்தவர்களுக்கு, நான் இங்கே விரிவாக சொல்லிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கிறது. தமிழர்கள், அரேபியர்களுக்கு இடையிலான இது போன்ற ஒற்றுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்
அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்
பண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்

Friday, February 13, 2015

உன்னைப் போல் ஒருவன் : உலகமயமாகும் புலி எதிர்ப்பு சினிமா


சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த, கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை பலர் பார்த்து இரசித்திருப்பார்கள். கதையின் கரு வழமையான தீவிரவாதிகள் பற்றிய கதை தான். ஆயினும், எதற்காக தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கமல் அந்தப் படத்தில் ஒரு லெக்சர் அடிப்பார். அதைப் பார்த்து இரசித்த தமிழர்கள், குறிப்பாக புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள், "அது முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே எதிரான படம்" என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள்.

கமல்ஹாசன் நடித்து வெளியான சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் படம் வெளியான நேரம், கமல் அதே கதையில் தாலிபானுக்கு பதிலாக புலிகளை வைத்துக் கூட எடுத்திருக்கலாம். விஸ்வரூபம் புலிகளுக்கும் எதிரானது என்று, அந்தத் திரைப்படம் தொடர்பான விமர்சனக் கட்டுரையில் எழுதி இருந்தேன். அன்று விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த, புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு அது உவப்பானதாக இருந்திராது. (பார்க்க: விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்  http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_16.html ) என்ன செய்வது? உலக யதார்த்தம் அவர்கள் நினைப்பதற்கு மாறாகவே இருக்கின்றது.

உன்னைப் போல் ஒருவன் திரைப்படம், வேறொரு இந்தியப் படத்தின் (A Wednesday) ரீமேக் தான். அதை இன்னொரு தடவை ரீமேக் செய்து, ஆங்கிலத்தில் எடுத்திருக்கிறார்கள். "A Common Man" (http://www.imdb.com/title/tt2104837/) என்ற பெயரில், இலங்கையில் தயாரிக்கப் பட்டு 2013 ம் ஆண்டு வெளியானது.

ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் Ben Kingsley நடித்த அந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க கொழும்பு நகரில் படமாக்கப் பட்டுள்ளது. படத்தை தயாரித்ததும் இலங்கையை சேர்ந்த நிறுவனம் தான். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ஆகியவற்றுக்கான சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

உன்னைப்போல் ஒருவன், இந்தியாவில் குண்டு வைத்த முஸ்லிம் தீவிரவாதிகளைப் பற்றிய கதையை சொல்கிறது. அதற்கு மாறாக, A Common Man தமிழ்த் தீவிரவாதிகள் பற்றிய கதையை சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம், படம் முழுவதும் உன்னைப் போல் ஒருவனை நினைவுபடுத்துகின்றது.

A Common Man படத்தின் தொடக்கத்திலேயே, 1996 ம் ஆண்டு, கொழும்பு நகர மத்தியில் புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலான, மத்திய வங்கி குண்டு வெடிப்பை காட்டுகிறார்கள். உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி, "காமன் மேன்" ஆக வரும் பென் கிங்ஸ்லி, படத்தின் இறுதிக் கட்டத்தில், தென்னிலங்கையில் புலிகள் நடத்திய முக்கியமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிடுவார்.

அமெரிக்க நடிகரான Ben Kingsley யும், பிரிட்டிஷ் நடிகரான Ben Cross உம் பிரதானமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அவர்களைத் தவிர ஏனையோர் இலங்கை நடிகர்கள். சிறிலங்கா பொலிஸ், சிறிலங்கா இராணுவம் படத் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. அமெரிக்க, இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்று சொல்லப் பட்டாலும், இந்தியக் கலைஞர்களும் படத் தயாரிப்பில் பங்களித்துள்ளார்கள்.

சிறிலங்கா அரசின் புலி எதிர்ப்புக் கருத்துக்களை சர்வதேசியமயப் படுத்தி இருக்கும், A Common Man திரைப்படத்திற்கு இன்று வரையில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஆச்சரியத்திற்குரியது. சென்னையில் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் பிரசன்ன விதானகேயின் சிங்களத் திரைப்படம் காண்பிக்கப் பட்ட நேரம், அதை "நுணுக்கமான இனப்படுகொலை" என்று சிலர் உளறிக் கொண்டு திரிந்தனர்.

ஹிந்தி, சிங்கள மொழிகளில் கூட, புலிகளை கொச்சைப் படுத்தும் சினிமா வரக்கூடாது என்று தடுக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்த ஆங்கிலத் திரைப்படம் வெளியானது தெரியாதா? மெட்ராஸ் கபே, கத்திக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள், காமன் மேனை எதிர்க்க முடியாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிய மாயம் என்ன? அமெரிக்கா சம்பந்தப் பட்டிருப்பதால் எல்லோருக்கும் நடுக்கம் வந்து விட்டது போலும்.

கமலின் உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் தீவிரவாத எதிர்ப்புப் படங்கள், அடிப்படையில் தமிழ்த் தீவிரவாதத்திற்கும் எதிரான அரசியலைத் தான் பேசுகின்றன. அத்தகைய படங்களை வரவேற்று, ஆதரிக்கும் தமிழர்கள் புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இந்திய - இலங்கை அரசுக்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

போலித் தமிழ் தேசியவாதிகளின் மொழியில் சொன்னால், "நுணுக்கமான இனப்படுகொலை" இது தான். புலிகளை அழிக்கப் பட வேண்டிய பயங்கரவாத சக்தியாக சித்தரிக்கும் A Common Man, உலகம் முழுவதும் சினிமா இரசிகர்களின் மனங்களில் நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய முக்கியமான படம் இது தான்.

இன்றைக்கும் சில இந்து, அல்லது கிறிஸ்தவ அடிப்படைவாத தமிழர்கள், இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வு காரணமாக, "முஸ்லிம் பயங்கரவாதம் அழிக்கப் பட வேண்டும்" என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முஸ்லிம் வெறுப்பு அரசியல், புலிகளுக்கும் எதிரானது என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. அது எப்படி சாத்தியமாகும் என்று அறிய விரும்புவோர், உன்னைப்போல் ஒருவன், A Common Man ஆகிய இரண்டு திரைப் படங்களையும் பார்க்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை : மீண்டும் சூடு பிடிக்கும் தண்ணீருக்கான போராட்டம்


யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைவதால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அவர்களது போராட்டக் குணாம்சம் பாராட்டத் தக்கது.

தமிழீழப் போராட்டம், தேசியவாத கருத்தியல் சார்ந்தது  என்பதால், அதற்கும் ஏகாதிபத்தியத்திற்கும், அல்லது பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை என்று கடந்த முப்பதாண்டுகளாக புளுகிக் கொண்டு திரிந்தார்கள். அநேகமாக கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள், தூய தேசியவாதம் பேசி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை மூடி மறைத்தார்கள். தற்போது சிலர் மீண்டும், அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

யாழ்ப்பாணத்திற்கான மின்சார விநியோகம் செய்வதற்காக, சுன்னாகத்தில் மின் பிறப்பாக்கிகள் பொருத்தப் பட்டன. அதன் மூலம் ஒரு காலத்தில், யாழ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு ஆகிய யாழ் குடா நாட்டின் மேற்குப் பகுதிகளுக்கு மட்டும் மின்சாரம் கிடைத்து வந்தது. அதற்கு காரணம் உள்ளது. அந்தப் பகுதிகளில் தான் சன நெருக்கம் அதிகம். பெரும்பாலான யாழ் உயர் சாதியினர், மேட்டுக்குடியினர் அங்கே தான் வசிக்கின்றனர்.

யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளான வட மராட்சி, தென் மராட்சி பகுதிகளுக்கு எண்பதுகளின் இறுதிப் பகுதியில், தெற்கில் இருந்து கொண்டு வரப் பட்ட லக்சபான மின்சாரம் வழங்கப் பட்டது. சுன்னாகத்தில் உற்பத்தி செய்யப் படுவது அசுத்தமான அனல் மின்சாரம். அதே நேரத்தில், தென்னிலங்கை லக்சபான நீர்த்தேக்கத்தில் இருந்து வந்தது சுத்தமான மின்சாரம். ஈழப் போர் தீவிரமடைந்த காலத்தில், லக்சபான மின்சாரம் துண்டிக்கப் பட்டாலும், சுன்னாகம் அனல் மின் நிலையம், சில குறைபாடுகளுடன் இடைக்கிடை இயங்கிக் கொண்டிருந்தது.

ஈழப்போர் தொடங்கிய எண்பதுகள் வரையில், இலங்கை முழுவதும் பெரும் தொழிற்துறைகள் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. அதனால், சுன்னாகம் அனல் மின்சார நிலையமும் அரசுடைமையாக இருந்தது. அப்போதெல்லாம் நிலத்தடி நீர் மாசடைவது தொடர்பான பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. ஈழப்போரின் இறுதியில், இலங்கையின் பொருளாதாரமும் உலகமயமாக்கலின் கீழ் கொண்டு வரப் பட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்கள், இலங்கையில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப் பட்டது. அதனால் வந்தது வினை.


ஒரு மலேசிய பன்னாட்டு நிறுவனம், "நொதேர்ன் பவர்" என்ற பெயரில் சுன்னாகம் அனல் மின்சார நிலையத்தை வாங்கி நடத்தியது. உலகில் எந்த நாட்டிலும், பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச் சூழல் தொடர்பாக அக்கறை காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலும் அது தான் நடந்தது. நொதேர்ன் பவர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பாவித்த கழிவு எண்ணையை, நிலத்தடி நீர் நிலைகளில் கலக்க விட்டது. 

தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் அது கறாராக நடைமுறைப் படுத்துவதால், அங்கே உற்பத்திச் செலவுகள் அதிகம். ஆனால், இலங்கை போன்ற வறிய நாடுகளின் அரசாங்கங்களை பண பலத்தின் மூலம் பணிய வைக்கும் நிறுவனங்கள், அந்த விதி முறைகளை பின்பற்றுவதில்லை. சுன்னாகத்திலும் அது தான் நடந்தது.

சுன்னாகம் மட்டுமல்ல, தென்னிலங்கையில் வெலிவாரியா, கேரளாவில் பிளாச்சி மாடா, மற்றும் பல ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச் சூழலை மாசடையைச் செய்கின்றன. பிளாச்சி மாடாவில் கொக்கோ கோலா கம்பனி நிலத்தடி நீரை உறிஞ்சி மாசடைய வைத்ததால் அங்கே பெரும் போராட்டம் நடந்தது. 

"கத்தி" எனும் சினிமாப் படத்தின் கதை, அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பாட்டது. அப்போது, "கத்தி ஒரு கம்யூனிசப் படமா?" என்று நக்கல் அடித்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் கூட, இன்று இந்த யாழ்ப்பாண நீர் மாசடைவதற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அத்தகைய இரட்டை வேடம், யாழ்ப்பாண மக்களால் கண்டிக்கப் பட வேண்டும். இன்று சுன்னாகம் நீர்ப் பிரச்சினைக்காக போராடுவதற்காக மட்டும் முன்னுக்கு வரும் இவர்கள், பிளாச்சிமாடா, வெலிவாரியா பிரச்சினைகள் நடந்த நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால், இப்போதாவது தமது கடந்த கால தவறுகளை உணர்ந்து, தம்மை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடையும் பிரச்சினைக்காக, கொழும்பில் கூட கவன ஈர்ப்பு போராட்டம் நடந்துள்ளது. பாராட்ட வேண்டிய நல்ல விடயம். ஆனால், அதற்குள்ளும் சிலரது (யாழ் மத்தியதர வர்க்க) சுயநலம் ஒளிந்திருப்பதை மறுக்க முடியாது. கொழும்பில் வாழும் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் பூர்வீகம் வலிகாமம் பகுதியாக இருக்கும். அதனால் தமது ஊர், தமது உறவினர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ற காரணத்தினாலும், அவர்களில் பலர் போராட்டத்திற்கு முன்வந்துள்ளனர்.

உண்மையில், யாழ்ப்பாணம் ஒரு வறண்ட பிரதேசம். அதனை சோமாலியாவுடன் ஒப்பிடலாம். சோமாலியாவில் உள்ள சில பகுதிகளும், யாழ் மாவட்டமும் புவியியல் அமைப்பில் ஒரே மாதிரியாக உள்ளன. அதனால் பிரச்சினைகளும் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. சோமாலியாவில் தோன்றிய தண்ணீர்ப் பிரச்சினை, வரட்சி காரணமாக அங்கே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்தது. 

யாழ்ப்பாணத்தில் ஈழப் போர் தொடங்குவதற்கும் எழுபதுகளில் ஏற்பட்ட வரட்சி, தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக இருந்தது. ஈழப் போராட்டக் குழுக்களும், சோமாலியா போராளிக் குழுக்களும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நடத்தைகளை கொண்டிருந்தன என்பது இன்னும் விசேஷம்.  அந்த நாட்டிலும் சாதிப் பாகுபாடுகள் உள்ளன. இவை எல்லாம் சோமாலியா நாட்டு அகதிகளுடன் உரையாடிய நேரம் அறிந்து கொண்ட விடயங்கள். ஆனால், அதைப் பற்றி எழுதினால், கட்டுரையின் நோக்கம் திசை திருப்பப் பட்டு விடும் என்பதால், அது பற்றி நான் இங்கே ஆராய விரும்பவில்லை.

ஒரு காலத்தில், யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகவும் தீவிரமாக இருந்தது. உண்மையில், ஈழத் தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணம், வன்னி ஆகிய பகுதிகளை விட யாழ்ப்பாணத்தில் சாதிப் பாகுபாடு அதிகமாக இருந்துள்ளது. அதற்குக் காரணமும், நிலத்தடி நீர்ப் பிரச்சினை தான்.

யாழ்ப்பாண குடாநாட்டில் ஆறுகள் எதுவும் கிடையாது. மன்னர் காலத்தில் தோண்டப்பட்ட தொண்டமானாறு கடல் நீரையே கொண்டுள்ளதால், அது பயிர்ச் செய்கைக்கு ஏற்றது அல்ல. வன்னியில் உள்ளதைப் போல பெரிய குளங்களும் அங்கே இல்லை. வருடாந்த மழை வீழ்ச்சியும் குறைவு. அதனால், நிலத்தடி நீர் தான் பிரதானமானது.

யாழ் குடாநாட்டில் நிலத்தடி நீர் எல்லா இடங்களிலும் குடிப்பதற்கான நன்னீராக இருப்பதில்லை. பெரும்பாலான இடங்களில் உவர் நீர் தான் கிடைக்கும். யாழ்ப்பாண புவியியல் அமைப்பை அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை இது. நன்னீர் கிடைக்கும் கிணறுகள், ஒன்றில் கோயில்களுக்கு அருகில், அல்லது உயர் சாதியினரின் நிலங்களில் தான் இருக்கும். 

தாழ்த்தப் பட்ட சாதியினர் வாழும் இடங்களில் உள்ள கிணறுகளில் பெரும்பாலும் உவர் தண்ணீர் தான் கிடைக்கும். தாழ்த்தப் பட்ட சாதியினர், தமது குடி தண்ணீர் தேவைக்காக, கோயில் கிணறுகளில், அல்லது உயர் சாதியினரின் வீடுகளில் தான் தண்ணீர் அள்ளிக் கொண்டு வருவார்கள். அதுவும் அவர்களாக அள்ளிக் கொள்ள முடியாது. உயர் சாதி நபர் ஒருவர் கிணற்றில் அள்ளி குடத்தில் ஊற்றிக் கொடுக்க வேண்டும்.

எங்கள் ஊருக்கு அருகில் இருந்த கோயிலின் நல்ல தண்ணீர்க் கிணற்றில், ஒரு தடவை தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் தாமாகவே தண்ணீர் அள்ளி விட்டார்கள். அதனால், "கிணறு தீட்டுப் பட்டு விட்டது" என்று சொல்லிய உயர் சாதியினர், அங்கே கழிவு எண்ணையை கொண்டு வந்து கொட்டினார்கள். அதற்குப் பிறகு கிணற்று நீர் முழுவதையும் வாரி இறைத்து விட்டு தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஈழப் போர் தொடங்கிய 1982 ம் ஆண்டளவில் நடந்த சம்பவம் இது. யாழ் குடாநாடு முழுவதும் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட உண்மைகள், இன்றைக்கு சுன்னாகம் நீருக்காக போராடும் உயர் சாதியை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை. தங்களது வீட்டுக் கிணற்றுக்குள் ஒரு பன்னாட்டு நிறுவனம் கொட்டிய கழிவு எண்ணைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களிடம் கேட்டால், யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது என்று பூசி மெழுகுவார்கள்.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். முன்னொரு காலத்தில், உயர் சாதி யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தரப்படுத்தலால் பாதிக்கப் பட்ட காரணத்தினால் ஈழப் போராட்டம் நடந்தது போன்று, தற்போதும் அதே வர்க்கத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் தான் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இதற்கிடையே, "சுயநிர்ணய உரிமை கேட்ட தமிழர்கள், கடைசியில் நிலத்தடி நீர் உரிமைக்காக போராட வேண்டிய அவலம் நேர்ந்து விட்டது..." என்று தமிழ்த் தேசியவாதிகள் புலம்பித் திரிகிறார்கள். அது அவர்களது அரசியல் அறிவின் போதாமையை வெளிப்படுத்துகிறது. சுயநிர்ணய உரிமை என்பது நிலத்தடி நீரையும் உள்ளடக்கியது தான். தண்ணீரும் ஓர் அத்தியாவசியப் பொருள் என்பதால், அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமிழீழம் கிடைத்தால் அதைச் செய்ய மாட்டார்களா? 

அது மட்டுமல்ல, தமிழீழம் கிடைத்தால் "திறந்த சந்தைப் பொருளாதாரம்" என்று சொல்லிக் கொண்டு, நொதேர்ன் பவர் போன்ற பன்னாட்டு கம்பனிகள் முதலிடுவதை அனுமதிப்பார்களா? "ஆம்" என்றால், அவர்களும் யாழ்ப்பாண மக்களின் எதிரிகள் தான். யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், சிறிலங்கா அரசுக்கு எதிராக மட்டும் போராடினால் போதாது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வலதுசாரித் தேசியவாதத்திற்கும் எதிராக தமது போராட்டத்தை விரிவு படுத்த வேண்டிய நேரம் இது.


இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, February 10, 2015

மேற்குலக வெள்ளையின பயங்கரவாதிகளின் காலனிய காட்டுமிராண்டித்தனம்

பிரெஞ்சு அரச பயங்கரவாதம்: அல்ஜீரியாவில் பிரான்ஸ் அறிமுகப் படுத்திய உயர்ந்த நாகரிகம் இது தான்.
******
இவை, காலனிய வரலாற்றுக் காலகட்டத்திலும், 2 ம் உலகப்போர் காலத்திலும், "நாகரிகமடைந்த" பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு சில உதாரணங்கள். இன்றைய அல்கைதா, ISIS போன்ற பயங்கரவாத இயக்கங்களின் முன்னோடிகளான ஐரோப்பிய எஜமானர்களும் அதே மாதிரியான பயங்கரவாத செயல்களை செய்துள்ளனர். தாய் பத்தடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயாதா?

*******



மலேசியாவில், பிரிட்டனின் காலனிய பயங்கரவாதம்! அவசரகால சட்ட காலத்தில், மலேசிய கம்யூனிஸ்டுகளின் தலைகளை வெட்டி மகிழ்ந்த பிரிட்டிஷ் படையினர். 

2 ம் உலகப்போர் நடந்த காலத்தில், மலேசியாவை ஆக்கிரமித்த ஜப்பானியப் படைகளுக்கு எதிராக, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தது. அப்போது பிரிட்டன் அவர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவியது. 

ஆனால், போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி மலேசியாவின் இயற்கை வளங்களை, குறிப்பாக ரப்பர் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்க விரும்பியது. அதனால், பிரிட்டிஷ் காலனிய இராணுவத்திற்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில் போர் மூண்டது. 

உண்மையில் மலேசியாவின் இயற்கை வளங்களை சுரண்டிய பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்காகவே பிரிட்டன் யுத்தத்தில் குதித்தது. காப்புறுதி நிறுவனங்கள் பணம் தர மறுக்கும் என்ற காரணத்தினால், மலேசியாவில் உள்நாட்டுப் போர் நடக்கும் விடயம் மூடி மறைக்கப் பட்டது. அதற்குப் பதிலாக "அவசர கால நிலைமை" பிரகடனம் செய்யப் பட்டது.

******

இவர்கள் சிரியாவின் ISIS பயங்கரவாதிகள் அல்லர். அவர்களுக்கு முன்னோடிகளான ஜெர்மன் நாஸி பயங்கரவாதிகள்.

 2 ம் உலகப்போர் காலத்தில், முன்னாள் யூகோஸ்லேவியாவின் ஸ்லோவேனியா பகுதியை நாஸி படையினர் ஆக்கிரமித்திருந்தனர். அப்போது ஜெர்மன் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து, கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். 

தமக்கு சவாலாக விளங்கிய கம்யூனிசப் போராளிகளை பிடித்து, கோடாலியால் தலைகளை வெட்டி, அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 

ஐரோப்பிய நாசிகளாக இருந்தாலும், சிரியாவில் ISIS ஆக இருந்தாலும், உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர்.பாசிஸ்டுகளுக்கு இடையில் இன, மத, மொழி வேறுபாடு எதுவும் கிடையாது. 

German Atrocities in the Balkans: German-Occupied Slovenia, 1944 http://serbianna.com/blogs/savich/archives/2622

******


ISIS காட்டுமிராண்டிகள் ஒருவரை உயிரோடு எரித்தார்கள். 

அவர்களின் முன்னோடிகளான காட்டுமிராண்டி அமெரிக்க நிறவெறியர்கள், ஆயிரக்கணக்கான கருப்பின மக்களை உயிரோடு எரித்தார்கள். 
 அமெரிக்க அடிவருடிகளுக்கு இது சமர்ப்பணம்:
Yes, ISIS Burned a Man Alive: White Americans Did the Same Thing to Black People by the Thousands 
http://www.dailykos.com/story/2015/02/04/1362325/-ISIS-Burned-a-Man-Alive-That-It-is-Nothing-Compared-to-the-Spectacular-Lynchings-of-Black-Americans?detail=facebook

Sunday, February 08, 2015

சார்லி தாக்குதலில் இலாபம் சம்பாதித்த கோடீஸ்வரர்!


பிரான்சின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திர வார இதழான சார்லி எப்டோ (Charlie Hebdo) முன்னர் ஒரு காலத்தில் இடதுசாரிப் பத்திரிகையாக இருந்தது. 1900 ஆம் ஆண்டளவில், முதலாளித்துவத்திற்கும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும் எதிராக வெளிவந்த L'assiette au beurre பத்திரிகையின் தொடர்ச்சியாக தன்னைக் கூறிக் கொண்டது.

ஆனால், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அதன் போக்கு மாறியது. அது ஒரு வலதுசாரிப் பத்திரிகையாக, பிரெஞ்சு இடதுசாரிகளால் எதிர்க்கப் பட்ட பிரெஞ்சு அரசின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. இன்னும் அதிகமாக, சிலநேரம் தீவிர வலதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டையும் ஏற்றுக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இனவாதிகளின் கருத்துக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டால், பத்திரிகையின் விற்பனை அதிகரிக்கும் என்று நிர்வாகம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, அதன் விற்பனை சரிந்து கொண்டே சென்றது.

ரோத்ஷீல்ட்ஸ் பற்றி தெரியாதவர் உலகில் யாரும் இருக்க முடியாது. வங்கித்துறையில் ஜாம்பவான்களாக திகழும், ஜேர்மனிய யூதக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒன்றான ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்கு இஸ்ரேலிலும், உலகின் பல பாகங்களிலும் சொத்துக்கள் குவிந்துள்ளன.

பிரான்சின் கேலிச்சித்திர வார இதழான Charlie Hebdo, அண்மைக் காலமாக நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதன் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அதனால், ஏற்கனவே பிரான்ஸின் பிரபல தினசரியான, Libération பத்திரிகை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டது.

ரோத்ஷீல்ட்ஸ் குடும்ப உறுப்பினரான Édouard baron de Rothschild, தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் Charlie Hebdo பத்திரிகையை வாங்கி இருந்தார். ஏற்கனவே, Libération அவர் கைகளில் இருந்த படியால், சார்லி எப்டோ வாங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்குள் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அரசியலில் நேரடியாக தலையிட வேண்டி வரும் என்ற அச்சம். இரண்டு, ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையை வாங்குவதை யாரும் விரும்பவில்லை.

ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்தில் சார்லி எப்டோ வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், இறுதியாக எடுவார்ட் பாரோன் அதை வாங்கி விட்டிருந்தார். இந்தத் தகவலை அவரது மருமகனான Philippe baron தெரிவித்திருந்தார். சார்லி எப்டோ பத்திரிகை அலுவலகம் மீதான பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அந்தப் பத்திரிகை மில்லியன் கணக்கான பிரதிகள் விற்கப் பட்டமை யாவரும் அறிந்ததே. இதனால், அன்று அதனை குறைந்த விலை கொடுத்து வாங்கிய கோடீஸ்வரர், மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதித்திருப்பார்.

இந்தத் தகவல், நெதர்லாந்தில் வெளியாகும் Quote எனும் மாத இதழில் வெளியாகி உள்ளது. அதற்கான இணைப்பு இது: 
DE ROTHSCHILD'S DRUKKEN CHARLIE HEBDO: ’WIJ TWIJFELDEN OF WE KRANT MOETEN UITGEVEN' 

பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல், மொசாட் அல்லது மேற்கத்திய உளவு நிறுவனம் ஒன்றினால் நடத்தப் பட்டது என்று அப்போதே சிலர் சொல்லத் தொடங்கி இருந்தனர். தமது சந்தேகங்களுக்கு சில ஆதாரங்களையும் காட்டினார்கள். இராணுவ கமாண்டோக்கள் போன்று ஆயுதமேந்தி, தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற காரில் ஓர் அடையாள அட்டை கண்டெடுக்கப் பட்டது. இந்தளவு தூரம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியவர்கள், அடையாள அட்டையை மறந்து போய் விட்டுச் செல்லுமளவிற்கு முட்டாள்களாக இருந்திருப்பார்கள் என்று கூற முடியாது. மேலும் சார்லி எப்டோ தாக்குதல் பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதிலேயும் பல மர்மங்கள் மறைந்துள்ளன. 
French police chief committed suicide after Charlie Hebdo attack;


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Thursday, February 05, 2015

ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட "தமிழ்த் தேசிய" தலைவர்கள்!

ஆள் பாதி, ஆடை பாதி, அமெரிக்கா மீதி!

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka)

பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது, "சிங்களவர்களிடம் தமிழர்கள் அடிமைப் பட்ட தினமாகையினால், அதனை தமிழர்கள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்" என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், "அன்றைக்கே ஈழம் கேட்காமல் விட்ட தமிழ்த் தலைவர்களின் தவறு" பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

வரலாறு தெரியாமல், அல்லது அது குறித்து பக்கச் சார்பற்ற ஆய்வு இல்லாமல், இது போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாது. பிரிட்டிஷ்காரர்கள் எந்தக் காலத்திலும் இழக்க விரும்பியிராத, இந்தியாவே கையை விட்டுப் போகிறது என்ற கவலையில், இலவச இணைப்பாக வழங்கப் பட்டது தான், இலங்கையின் சுதந்திரம்.

பிரிட்டன் தனது பணக்கார காலனியான சுதந்திர இந்தியாவின் பலத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் தீராத தலையிடியை உண்டுபண்ணும் நோக்கில், பாகிஸ்தான் பிரிவினைக்காக பாடு பட்டது. அதே நேரம், இலங்கையில் ஈழம் பிரிப்பதற்கு அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை.

உண்மையில் அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் யாரிடமும் தனி ஈழம் கேட்கும் எண்ணம் இருக்கவில்லை. அதற்குக் காரணம், அன்று யாருடைய மனதிலும் தமிழ் தேசிய உணர்வு இருக்கவில்லை. இன்னும் சொன்னால், தமிழர் என்ற இன உணர்வே அப்போது உருவாகி இருக்கவில்லை. 

தமிழ் தேசியக் கருத்தியல், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு, குறைந்தது இரு தசாப்த காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து முரண்பட்டு பிரிந்து சென்ற, தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் காரணமாக, பிற்காலத்தில் உருவானது தான் தமிழ்த் தேசிய அரசியல். 

சேர் பொன் இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைமைகள் தங்களை ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவர்களாக கருதிக் கொள்ளவில்லை. தாம் சார்ந்த வெள்ளாள சாதியின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுப்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. 

ஆங்கிலேயர் காலத்தில், படித்த மேட்டுக்குடி வர்க்கமாக உருவான வெள்ளாளர்கள் தான், இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கொவிகம என்று அழைக்கப் பட்டாலும், மொழி கடந்து திருமண உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு, சாதி அபிமானம் நிலையானதாக இருந்துள்ளது. 

அன்றிருந்த சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினருக்கென சில பொதுவான அம்சங்கள் இருந்தன. அதுவே அவர்களது சாதி - வர்க்க ஒற்றுமைக்கு முக்கிய காரணம். அவர்களின் பூர்வீகம் சிங்களமாக, அல்லது தமிழாக இருந்தாலும், அவர்கள் தமது தாய்மொழியை புறக்கணித்து வந்தனர். அதற்குப் பதிலாக அன்னியரின் ஆங்கில மொழியையே வீட்டிலும் வெளியிலும் பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை தழுவி, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றி வந்தனர்.

அன்றைய சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் நலன்களும் ஒன்றாகவே இருந்தன. வர்த்தக நலன்களுக்காக, முஸ்லிம்களுடன் முரண்பட்டார்கள். இலங்கையில் முதன்முதலாக தோன்றிய இனக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்வதற்காக, சேர் பொன் இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்கை வாதாடி வென்று கொண்டு வந்தார். நாடு திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்றார்கள்.

மேற்படி சம்பவத்தை நினைவுகூரும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், "ஒரு தமிழ்த் தலைவரை சிங்களவர்கள் மதித்த காலம்..." என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் அது, அவர் ஒரு தமிழர் என்பதற்காக கிடைத்த மரியாதை அல்ல. இராமநாதனின் சாதிக்கு, அல்லது வர்க்கத்திற்கு கிடைத்த மரியாதை. இலங்கையில் அன்றிருந்த சாதி உணர்வு, வர்க்க உணர்வு என்பன அந்தளவு இறுக்கமானது.

சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் ஒற்றுமைக்கு இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். அன்று முஸ்லிம்களுக்கு அடுத்ததாக, இந்தியர்கள் கொழும்பு வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வந்த பெருமளவு கூலித் தொழிலாளர்கள், கொழும்புத் துறைமுகம் போன்ற தொழிற்துறைகளில் வேலை செய்தார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். கணிசமான அளவு தெலுங்கர்கள், மலையாளிகளும் இருந்தனர்.

அன்றைய இலங்கைப் பொருளாதாரம் மலேசியாவை விட முன்னேறிய நிலையில் இருந்தது. அதாவது, இன்றைக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற பணக்கார நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைப் போன்று, அன்று பல இந்திய தொழிலாளர்கள் பணக்கார இலங்கைக்கு வேலை தேடிச் சென்றார்கள். 

ஒவ்வொரு வருடமும் பெருகிக் கொண்டிருந்த இந்திய குடியேறிகளை தடுப்பதற்காக தோன்றிய சிங்கள இனவாத அரசியல், பிற்காலத்தில் தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பியது. கொழும்பு இந்தியர்கள் மட்டுமல்ல, மலையக தோட்டத் தொழிலாளர்களினதும் குடியுரிமையை பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் வந்த நேரம், "தமிழ்த் தலைவர்" ஜிஜி பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார்.

இப்படியான கலாச்சார பின்புலத்தைக் கொண்ட "தமிழ்த் தலைவர்கள்" எவ்வாறு ஈழம் கேட்டிருப்பார்கள்? அது அவர்களது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயம். ஆங்கிலேயர் போன பின்பு, இலங்கை முழுவதையும் தங்களது வெள்ளாள சாதி ஆளப் போகிறது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள். எவ்வாறு நாட்டை கூறு போட சம்மதித்திருப்பார்கள்? சிலநேரம், அன்றைக்கு ஒரு புலிகள் இயக்கம் தோன்றி, ஈழப் போராட்டம் நடத்தி இருந்தால், அதை நசுக்குவதற்கு இவர்களே முன் நின்று உழைத்திருப்பார்கள்.

எல்லாவற்றையும் "சிங்களம் - தமிழ்" என்று, கருப்பு வெள்ளையாக பார்ப்பது தான், தேசியவாத அரசியல் கோட்பாடு. ஆனால், அது எல்லா இடங்களிலும், எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக் கூடிய சூத்திரம் அல்ல. இலங்கையின் சாதிய அரசியல், அதற்குப் பின்னால் மறைந்திருந்த வர்க்க அரசியல், இவற்றை ஆராயாமல் பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிக்க முடியாது.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Sunday, February 01, 2015

அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்


பாரிஸ் நகரில் புதிதாக வந்து குடியேறும் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பிரான்ஸ் பற்றி நிறைய தவறான கருத்துக்கள் காணப்படுவது வழமை. அதற்கு முதல் காரணம் அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறார்கள். பாரிஸ் நகரை சுற்றிலும், ஏராளமான தமிழர்கள், குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வாழ்வதால், அது ஒரு மூடுண்ட சமுதாயமாக இருக்கிறது.

Gare du Nord ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள லா சாப்பல் (La Chapelle), பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாக கூடும் பகுதி ஆகும். அங்கே வரிசைக்கு தமிழ்க் கடைகள் தான் இருக்கும். பலசரக்குக் கடைகள், புடவைக் கடைகள், உணவகங்கள், முடி திருத்தும் சலூன், புத்தகக் கடை போன்ற எல்லாம் அங்கே உண்டு. போதாக்குறைக்கு வார இறுதியில் திரையரங்கில் புதிதாக வந்த தமிழ் சினிமாப்படம் போடுவார்கள்.

உண்மையில், சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் கூட, அந்தப் பகுதியில் அல்ஜீரியர்கள், ஆப்பிரிக்கர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் தான் பெருமளவில் இருந்தன. புலம்பெயர்ந்த தமிழர்கள் சில தெருக்களை தமக்கென "ஆக்கிரமித்து" விட்டார்கள்.

பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரும்பான்மையானோர், தமிழரைத் தவிர மற்ற இனத்தவருடனும் பழகுவதில்லை. (தமக்கு அப்படி எந்த தேவையும் இல்லையென்று சிலர் நேரடியாகவே சொல்வதுண்டு.) இது ஒரு வகையில் "கெட்டோ" (Ghetto) மனப்பான்மையை உண்டாக்குகின்றது. 

பெரும்பாலான பாரிஸ் தமிழர்களுக்குகும், அல்ஜீரிய சமூகத்திற்கும் இடையில் நட்பு ரீதியான பழக்கம் மிகவும் குறைவு.  அல்ஜீரியர்களை "அடையார்" என்று பட்டப் பெயர் சூட்டி அழைப்பார்கள். நேரடிப் பழக்கம் இல்லா விட்டாலும், ஆதாரம் இல்லாவிட்டாலும், எப்போதும் அல்ஜீரியர்களைப் பற்றிப் பல எதிர்மறையான கதைகளை மட்டுமே பேசுவார்கள்.

ஏனென்று கேட்டால், அவர்கள் "திருடர்கள், கிரிமினல்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்," என்று பல காரணங்களை அடுக்குவார்கள். போதாக்குறைக்கு, "சமீப காலமாக பிரான்ஸின் அமைதியைக் குலைக்கும், ஷரியா சட்டம் கோரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்கள் தான்..." என்று சொல்வார்கள்.

இன்றைக்கு, பிரான்சில் வாழும் அல்ஜீரியர்களை, "இஸ்லாமிய பயங்கரவாதிகளாக" அல்லது "திருடர்களாக" மட்டுமே கருதி மிரண்டு கொண்டிருக்கும், அரைவேக்காடுகளுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை. பிரான்சில் வாழும் அல்ஜீரிய குடியேறிகளில் பலர், அந்த நாட்டிற்கு சர்வதேச புகழைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமாக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று பல துறைகளிலும் பிரகாசித்து வந்திருக்கின்றனர். பலரது புகழ் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றது. பிரபல பெண் ஆவணப் பட இயக்குனர் யாமினா (Yamina Benguigui), இன்றுள்ள பிரான்சுவா ஹோலந்த் அரசினால் கடல் கடந்த பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

பிரெஞ்சு தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடிய சிடான் (Zinedine Yazid Zidan) பற்றி கேள்விப் படாத விளையாட்டு இரசிகர்களே இருக்க முடியாது. இப்படிப் பலரது பெயர்களைக் குறிப்பிடலாம்.

அப்படியான, பிரான்சில் குடியேறிய அல்ஜீரிய பிரபலங்களில் ஒருவர் காலித் (Khaled Hadj Ibrahim). உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகர். அமெரிக்காவில் சிறந்த பாடகருக்கான கிராமி விருதை (Grammy Awards) பெற்றவர். அல்ஜீரியாவில், காலித் பிறந்த ஊரில், அடித்தட்டு சமூக மக்களால் இசைக்கப்படும், நாட்டார் பாடல்கள் வகையை சேர்ந்த ராய் (Raï) இசை மூலம் உலகப் புகழ் பெற்றார். தமிழக சினிமா மூலம் பிரபலமான "கானா பாடல்கள்" வகையுடன் இதை ஒப்பிடலாம்.

1996 ம் ஆண்டு, ராய் இசையில், காலித் பாடிய "ஆயிஷா... ஆயிஷா..." எனும் பிரெஞ்சு மொழிப் பாடல், பல ஐரோப்பிய நாடுகளில் வருடக் கணக்காக பிரபலமாக இருந்தது. அன்று அந்தப் பாடல் வரிகளை முணுமுணுக்காத ஐரோப்பிய இளைஞர்களின் வாய்கள் இல்லை. MTV போன்ற இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில், வாரக் கணக்காக முதல் பத்து பாடல் தெரிவுகளில் ஒன்றாக இருந்தது.

அந்தக் காலங்களில், காலித்தின் ஆயிஷா ஆயிஷா பாடலின் இசையை நகலெடுத்து, நமது தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்தனர். இன்றைக்கும் அந்தப் பாடல்களை இரசிக்கும் தமிழர்கள் பலருக்கு, தாங்கள் ஒரு அரபி இசையை கேட்கிறோம் என்ற உண்மை தெரியாமல் இருக்கலாம்.

இசைக்கு மொழி கிடையாது. ஓரளவு பிரெஞ்சு மொழி தெரிந்தவர்கள், அந்தப் பாடலை இரசித்துக் கேட்க விரும்புவார்கள் என்பதால், பாடல் வரிகளை கீழே தந்திருக்கிறேன்.

Cheb Khaled - Aicha

Cheb Khaled - Aicha [Official Video] Original https://www.youtube.com/watch?v=8be8zBJWDJw


Comme si je n'existais pas,
elle est passée à côté de moi
Sans un regard, reine de Saba,
j'ai dit, Aïcha, prends, tout est pour toi

Voici, les perles, les bijoux,
 aussi l'or autour de ton cou
Les fruits, biens mûrs au goût de miel,
ma vie, Aicha si tu m'aimes!

J'irai où ton souffle nous mène,
dans les pays d'ivoire et débène
J'effacerais tes larmes, tes peines,
rien n'est trop beau pour une si belle

Aïcha, Aïcha écoute-moi,
Aïcha, Aïcha t'en vas pas,
Aïcha, Aïcha regarde moi,
Aïcha, Aïcha reponds-moi

Je dirais le mots des poèmes,
je jouerais les musiques du ciel,
je prendrais les rayons du soleil,
pour élairer tes yeux de reine

Oooh! Aïcha, Aïcha écoute-moi,
Aïcha, Aïcha t'en vas pas

Elle a dit: "Garde tes trésors, moi,
je vaux mieux que tout ça.
Des barreaux sont des barreaux même en or
Je veux les mêmes droits que toi
Et du respect pour chaque jour,
moi je ne veux que l'amour"