Showing posts with label வர்க்கப் புரட்சி. Show all posts
Showing posts with label வர்க்கப் புரட்சி. Show all posts

Wednesday, January 17, 2018

முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டத்தில் சோஷலிசக் கரு தோன்றும்

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்
 (பாகம் - மூன்று) 

முதலாளித்துவ அரசை தூக்கி எறிவதற்கு ஓர் ஆயுதப் புரட்சி அவசியமா? பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கிய ஆயுதமேந்திய மக்கள் எழுச்சி எந்தக் காலகட்டத்தில் தோன்றும்? அதன் அரசியல் சமூகப் பின்னணி என்ன? நட்பு சக்திகள் எவை? பகைச் சக்திகள் எவை? ஏகபோக முதலாளித்துவ அரசின் குணங்குறிகள்...

இந்தக் கட்டத்தில், உழைக்கும் வர்க்கமும் அதன் நட்பு சக்திகளும் முன்னரங்கிற்கு வந்து போராடுகின்றன. அந்தப் போராட்டத்தை எந்தளவு வன்முறை பிரயோகித்தும் அடக்கி விட முடியாது. உழைக்கும் வர்க்கம் தனது தற்காப்புக்காக ஆயுதமேந்தி இருக்கும். மிகப் பெரிய அளவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் காரணமாக மோதல்கள் இடம்பெறும். முதலாளித்துவ அரசுக்கெதிரான அதிகாரத்திற்கான ஆயுத மோதல்கள் ஓர் உள்நாட்டுப் போராக காணப்படும். கம்யூனிசக் கருத்துக்கள் பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களினால் உள்வாங்கப் பட்டு, இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்கள்.

முதலாளிய வர்க்கம் தப்ப வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும். ஏகபோக முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுத்து வந்த கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டிருக்கும். அரசு இயந்திரம் இயங்க இயலாமல் போய் விடும். அறிவுஜீவிகளான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தினால் வென்றெடுக்கப் பட்டிருப்பார்கள், அல்லது நடுநிலை வகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருப்பார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நேரடி செயற்பாட்டுக்கான கோஷங்களின் மூலம் ஆயுதப் போராட்டக் களத்தில் குதிக்கும். அது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாக கருதப்படும். இந்த போராட்ட வடிவத்தில் உத்திகளும், தந்திரோபாயங்களும் மாறுபடும். கட்சியும், உழைக்கும் வர்க்கம், இந்தக் கட்டத்தில் ஏற்படும் அனுபவ பாடங்களில் இருந்து புதிய படிப்பினைகளை பெற வேண்டி இருக்கும்.

வர்க்கப் போராட்டமானது, எவருடைய விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால் தூண்டப் படுகின்றது. உழைக்கும் வர்க்கம் தீர்மானகரமான முடிவெடுக்க வைக்கும் காலகட்டம் எவ்வாறு உருவாகின்றது என்பதை இப்போது பார்ப்போம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் சுதந்திரமான போட்டியை ஆராய்ந்து எழுதியுள்ளனர். இருப்பினும், முதலாளித்துவமானது சுதந்திர வர்த்தகப் போட்டி என்ற காலகட்டத்துடன் நின்று விடவில்லை. அதற்கும் அப்பால் வளர்ச்சி அடைந்தது. அது ஏகபோக முதலாளித்துவம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தது. அது பின்னர் ஏகபோக முதலாளித்துவ அரசாக பரிணமித்தது.

"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" நூலில் லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 
//போட்டியானது ஏகபோகமாக மாற்றப் பட்டது. அதன் விளைவாக உற்பத்தி பெருமளவில் சமூகமயமாக்கப் பட்டது. விசேடமாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும், அதன் வளர்ச்சியும் சமூகமயமாக்குவதற்கு உதவின. இது ஏதோ ஒரு வகையில் சுதந்திரமாக போட்டியிடும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாறுபடுகின்றது. அவர்கள் ஒருவரை மற்றவர் அறியாமல் பரவி இருந்ததுடன், வெளித்தெரியாத சந்தை ஒன்றுக்காக உற்பத்தி செய்தனர்..... ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்த முதலாளித்துவமானது உற்பத்தியை சமூகமயமக்கும் கட்டத்திற்கு நேரடியாக வழிநடத்திச் செல்கின்றது. அதன் அர்த்தம், எல்லா முதலாளிகளையும், அவர்களது விருப்பத்திற்கு மாறாக, புதியதொரு சமூக ஒழுங்கமைப்பை நோக்கி நகர்த்திச் செல்கின்றது. அது முழுமையான சுதந்திர (வர்த்தகப்) போட்டியில் இருந்து முழுமையான சமூகமயமாக்கும் கட்டத்திற்கு மாற்றமடைகின்றது.// - லெனின்

லெனினின் கூற்றை நாம் இலங்கை, இந்திய நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த நாடுகள் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்த காலத்திற்குப் பிறகு, சுதந்திரமாக போட்டியிடும் முதலாளித்துவ நடைமுறையை கொண்டிருந்தது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த மாதிரியான காலகட்டம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாட்டில் மட்டுமல்லாது, ஒவ்வொரு பிரதேசத்திலும் வித்தியாசமான பொருட்கள் உற்பத்தியாகி சந்தைக்கு வந்தன.

அது மட்டுமல்லாது, மேற்குலகில் சந்தைக்கு வந்த புதிய தொழில்நுட்பமானது, இலங்கை, இந்தியாவில் பாவனைக்கு வருவதற்கு பல வருடங்கள் எடுத்தன. ஆனால், இப்போது நிலைமை அப்படி அல்ல. கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, அனைத்து புதிய தொழில்நுட்பக் கருவிகளும் உடனுக்குடன் வாங்கக் கூடியதாக உள்ளது.

அதன் அர்த்தம், ஏகபோக முதலாளித்துவம் மேலாதிக்கம் செலுத்துவதால் உற்பத்தி உலகமயமாகியுள்ளது. முதலாளிகள் விரும்பியோ, விரும்பாமலோ, உற்பத்தி சமூகமயமாகி விட்டது. அதாவது, உற்பத்தி சமூகமயமாகும் போதே சோஷலிசத்தின் கரு உருவாகி விட்டது.

முதலாளித்துவத்தின் இந்த வளர்ச்சிக் கட்டம் இன்றியமையாதது. இது சமூகத்திற்கான உற்பத்திக்கும், தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கிறது. இத்தகைய புதிய சமுதாய மாற்றம் ஏற்படும் நேரத்தில், முதலாளித்துவத்தின் உள்ளே சோஷலிசம் என்ற புதிய சமுதாய அமைப்பு தோன்றுகின்றது.

இந்த வளர்ச்சிக் கட்டத்தில், சோஷலிசம் முற்றிலும் புதியதொரு பாத்திரத்தை ஏற்கிறது. அரசு என்பதன் மூன்று வகை வளர்ச்சிக் கட்டங்கள்: 
  1. சுதந்திர வர்த்தகப் போட்டி கொண்ட முதலாளித்துவ காலகட்டத்தில், அரசு முதலாளிய வர்க்கம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தியது. 
  2. முதலாளிய வர்க்கத்தில் ஒரு பிரிவினர் ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். அத்தகைய ஏகபோக முதலாளித்துவ காலத்தில், வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் அரசை தமக்கு அடிபணிய வைத்தன. 
  3. ஏகபோக அரசு அமையும் காலத்தில், அரசு முற்றுமுழுதாக ஏகபோக மேலாண்மை பெற்ற நிறுவனங்களின் கருவி ஆகின்றது.

இன்னும் விரிவாக, "ஏகபோக முதலாளித்துவ அரசு" என்றால் என்ன?

ஏகபோக முதலாளிய அதிகாரம், அரச கட்டமைப்புடன் ஒன்று சேரும். அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும், ஏகபோக பொருளாதார - அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும். அந்த வகையில், இன்று பல மேற்கத்திய நாடுகளில் ஏகபோக முதலாளித்துவ அதிகாரக் கட்டமைப்பே உள்ளது. அது சிறு வணிகர்களையும், சிறு முதலாளிகளையும் அடக்கியொடுக்கி அழித்து விட்டது.

உதாரணத்திற்கு, எந்த மேற்கத்திய நாட்டிலும் பெட்டிக் கடைகள், தனியார் மரக்கறிக் கடைகள் போன்றவற்றை காண்பதரிது. ஏகபோக முதலாளிய நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகள் அந்த இடத்தை பிடித்து விட்டன. பெட்டிக் கடைகள் கூட நாடளாவிய பெரிய நிறுவனம் ஒன்றின் கிளைகளாக மாறி விட்டன. இந்த மாற்றம் தற்போது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் விரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஏகபோக முதலாளித்துவ அரசு என்ற கட்டத்தை அடைவது, முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் இறுதிக் கட்டம் ஆகும். இதை லெனின் ஏற்கனவே கண்டறிந்ததுடன், அதை வர்க்கப் போராட்டத்திற்கான தீர்மானமாகவும் எடுத்துரைத்தார்.

//முதலாளித்துவமானது ஏகாதிபத்தியம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது ஏகபோக முதலாளித்துவம். (உலகப்)போரின் விளைவாக ஏகபோக முதலாளித்துவ அரசு உருவானது. நாங்கள் தற்போது சோஷலிசத்திற்கான படிக்கட்டை கொண்ட உலகப் பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தில் நிற்கிறோம்.// - லெனின்

ஆகையினால், இன்றுள்ள ஏகபோக முதலாளித்துவ அரசு கட்டமைப்பை, சோஷலிசத்திற்கு செல்வதற்கான படிக்கட்டாக நாம் கருத வேண்டும். அதன் குணங்குறிகளை நாம் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

  • தொழிநுட்ப வளர்ச்சியானது இன்று பலமடங்கு விரிவடைந்துள்ளது. கணணி மயமாக்களில் இருந்து மிகச் சிறிய இலத்திரனியல் கருவிகள் பாவிக்கும் அளவிற்கு வந்து விட்டது. அதாவது, மிகத் தீவிரமாக உற்பத்திகள் சமூகமயமாக்கப் பட்டுள்ளன. உதாரணத்திற்கு, இன்று ஸ்மார்ட் போன் பாவனை உலகம் முழுவதும் கிராமங்களில் கூட நுழைந்து விட்டது. புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகும் அடுத்த நாளே, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கின்றன. இது எந்தளவு தூரம் உற்பத்தி சமூக மயமாகியுள்ளது என்ற உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இதன் அடுத்த படியாக, உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்கும் கட்டத்தை (சோஷலிசம்) நோக்கி நகர வேண்டும்.

  • புதிய தொழில்நுட்ப வசதிகள் ஆவன, மிகப் பெரிய, உறுதியாக வளரக் கூடிய நிறுவனங்களில் தங்கியுள்ளன. அது கார்பரேட் நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இதெல்லாம் திட்டமிட்ட பொருளாதார செயற்பாட்டை கொண்டுள்ளன. முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த திட்டமிட்ட பொருளாதாரத்தை பார்த்து கேலி பேசியவர்கள், இன்று கார்பரேட் நிறுவனங்களின் திட்டமிட்ட பொருளாதாரத்தை ஆதரிக்கும் முரண்நகையை காணலாம். இரண்டு இடங்களிலும் திட்டமிடல் பொருளாதாரம் என்பது ஒரே விடயமாக இருந்த போதிலும், கார்பரேட் நிறுவனங்களால் செயற்படுத்தப் படும் பொழுது அது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகவே, நாம் இனி வருங்காலத்தில் சுரண்டலற்ற திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை வருகின்றது. ஏகபோக முதலாளித்துவ அரசு, தானாக பதவி விலகி அதிகாரத்தை கைவிட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது. பாட்டாளிவர்க்கம் கேட்டவுடன் ஏகபோக முதலாளித்துவம் அரசு அதிகாரத்தை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்து விடும் என்று யாராவது நம்பினால், அவர் கனவு காண்பவராக இருப்பார். இந்தக் கட்டத்தில் வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோளானது, அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.


(பிற்குறிப்பு: ஒரு மார்க்ஸிய வகுப்பிற்காக தயார் படுத்திய குறிப்புகளைக் கொண்டு எழுதிய  கட்டுரை. Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. மேலதிக விளக்கம் தேவைப் படுவோர் அந்த நூலை வாசிக்கலாம்.)



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Tuesday, December 12, 2017

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

(பாகம் - இரண்டு)


ஒரு வர்க்கப் புரட்சிக்கு தயாராக இல்லாத, இன்றைய காலத்தில், எமது தந்திரோபாயங்கள் எப்படி இருக்க வேண்டும்? 

இன்றைய காலகட்டத்தின் தோற்றப்பாடுகள்:

- இந்தக் காலகட்டமானது முதலாளிய வர்க்கத்தின் கூடுதல் பலமாகவும், உழைக்கும் வர்க்கத்தின் பலவீனமாகவும் உணரப்படும்.

- மூலதனம் தனது முகவர்களான சீர்திருத்தவாதிகள், திருத்தல்வாதிகளை பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணாம்சத்தை முறியடிக்கப் பார்க்கும். வர்க்க உணர்வை அரித்து துருப்பிடிக்க வைக்கும்.

- இந்தக் காலகட்டத்தில், உழைக்கும் வர்க்கமானது முதலாளிய அரசை நொறுக்கி விட்டு சோஷலிசத்தை கொண்டு வருவதற்கான கடமையில் இருந்து பல வருட காலம் பின்தள்ளப் பட்டிருக்கும்.

- ஏகபோக மூலதனத்தின் ஆட்சி அசைக்க முடியாத அளவு பலமாக இருக்கும். அரச இயந்திரம் பழுதில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்காத படியால், அவை முதலாளிய வர்க்கத்திற்கு நெருக்கடி உண்டாக்க மாட்டா.

அத்தகைய "அமைதியான" காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

- வர்க்கப் போராட்டத்திற்கான பள்ளிக்கூடம் அமைக்கலாம். உழைக்கும் வர்க்கத்தை அரசியல்மயப் படுத்தும் கல்வி புகட்டலாம். பொறுமையான, படிப்படியான தொழிற்சங்கப் போராட்டங்களை கட்டமைக்கலாம்.

- தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தற்காலிக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன் நின்று விடக் கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோள்கள் பற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மத்தியில் இருந்து தோன்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம், சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகளை எதிர்த்துப் போராட வேண்டும்.

- வர்க்க உணர்வு தானாக உருவாவதில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில் உறங்கிக் கிடக்கும் வர்க்க உணர்வை தட்டி எழுப்ப வேண்டும். அதை சோஷலிசத்திற்கான குறிக்கோளுடன் இணைக்க வேண்டும்.

- உழைக்கும் வர்க்கத்தினுள் படிப்படியாக வர்க்க குணாம்சத்தை புகுத்த வேண்டும். முதலாளிய அரசு அதிகாரத்துடனான ஒவ்வொரு மோதலையும், உரிமைகளை நசுக்கும் ஒவ்வொரு அடக்குமுறையையும் பயன்படுத்தி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்.

- குட்டி முதலாளிய வர்க்கத்தின் மீதும் செல்வாக்குப் பிரயோகிக்க வேண்டும். அவர்களுடன் ஒரு புரட்சிகர கூட்டு வைக்க முடியாவிட்டாலும், முதலாளிய அரசின் ஆட்சி குறித்த அவர்களது அவநம்பிக்கையை, அதிருப்தியை பயன்படுத்தி அரசுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும்.

- மூலதன ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான குட்டி முதலாளிய வர்க்கத்தின் போராட்டத்தை நிபந்தனையுடன் ஆதரிப்பதன் மூலம், அவர்களை உழைக்கும் வர்க்க போராட்ட வழிக்கு கொண்டு வர முடியும்.

*******

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

- இந்தக் கட்டத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலை மாறி விடும். உழைக்கும் வர்க்கம் தற்காப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு, முன்னரங்கிற்கு வந்து தாக்குதல் நடத்தும் கட்டத்திற்கு வந்திருக்கும். தொழிலாளர்களின் போராட்டமானது மிகப் பிரமாண்டமான பேரணிகளாகவும், வேலை நிறுத்தங்களாகவும் நடைபெறும்.

- தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகள் மறையும். உழைக்கும் வர்க்கமானது அதிகாரத்தை கைப்பற்றும் இலக்கை நெருங்கி இருக்கும். அதனால், இந்த காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கம் தந்திரோபாய தாக்குதல்களை தொடங்கி இருக்கும்.

- இந்தக் கட்டத்தில் முதலாளிய வர்க்கத்தின் பலவீனம் தெரிய வரும். பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று நெருக்கடியை அடையும் பொழுது, ஏகபோக முதலாளித்துவம் எந்தவொரு சமரசத்திற்கும் வர முடியாது. அது சமூக நல சீர்திருத்தங்களின் முடிவின் தொடக்கமாக இருக்கும். இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள்வது கடினமாக இருக்கும்.

- அரசு இயந்திரம் துருப் பிடிக்கத் தொடங்கும். இடையில் நிற்கும் குட்டி முதலாளிய வர்க்கமும் கிளர்ச்சி செய்யத் தொடங்கும். முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் பலமிழக்கும். பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மக்கள் விரோத குணாம்சத்தை உழைக்கும் வர்க்கம் கண்டு கொள்ளும்.

- முதலாளிய வர்க்கம் நேரடி அடக்குமுறையில் ஈடுபடும். அரசு அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் நாள்தோறும் நடக்கும். இந்தக் கட்டத்தில் இருந்து தான் வர்க்கப் போராட்டம் தொடர்கின்றது.

- இந்தக் கட்டத்தில் அரசியல் போராட்டம் முதன்மையானது. அரசியல் கோரிக்கைகள் சமூக மாற்றத்திற்கான சுலோகங்களாக மாறும். அது மக்களை எழுச்சி கொள்ள வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றத் தூண்டும். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமானது, புரட்சிகர பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையின் கீழ் ஒரு விடுதலைப் போராட்டமாக பரிணமிப்பதற்கான கிளர்ச்சியையும் பிரச்சாரங்களையும் கொண்டிருக்கும்.

- இந்தப் போராட்டங்கள் ஊடாக, தொழிற்சாலைகளில் வேர் பரப்பியுள்ள (கம்யூனிஸ்ட்) கட்சியானது, ஒரு வெகுஜனக் கட்சியாக வளர்ச்சி அடையும். அதன் உத்திகளுக்கான இயங்குதளம் விரிவடையும். இது உழைக்கும் வர்க்கத்தை பலதரப் பட்ட போராட்டங்களை நடத்துவதற்கு ஊக்குவிக்கும். அதன் வியூகத்திற்கான வாய்ப்புகளும் வளர்ச்சி அடையும். நடுத்தர வர்க்கமான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் மத்தியிலும் கட்சிக்கு ஆதரவு கூடும். அந்த வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக இழுத்தெடுக்க முடியும்.

- வர்க்கப் போராட்டத்தை ஒரு புரட்சியை நோக்கி நகர்த்திச் செல்வதே, இந்தக் கால கட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

- இந்தக் காலகட்டம், பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டத்துடன் ஒன்று சேர்க்கும், விரிவான, ஆழமான போராட்டமாக பரிணமிக்கிறது. குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை பாட்டாளிவர்க்க சார்பானவர்களாக வென்றெடுத்து, அவர்கள் எல்லோரையும் தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆக்கி, இதுவரை அறியப் படாத போராட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது.

- மாற்றத்திற்கான சுலோகங்களைக் கொண்டு அரசியல்மயப் படுத்த வேண்டும். அரச இயந்திரத்தை துருப்பிடிக்க வைப்பதுடன் நன்று விடாது, அரச அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களை எமது தந்திரோபாய முடிவுகளுக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும்.

- கம்யூனிஸ்ட் கட்சியை வெகுஜன செயற்பாட்டுகளை ஒழுங்கு படுத்தும் மக்கள் கட்சியாக மாற்ற வேண்டும். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு புரட்சி ஒன்றே மாற்று வழி என்பதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

(Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle - பாட்டாளி வர்க்க கல்வி நூலில் இருந்து சில பகுதிகள்) 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, February 21, 2017

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும் 
(Strategy and Tactics in the Class Struggle)

பாடம் ஒன்று : வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

இன்று வரையிலான வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறே ஆகும் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி உள்ளனர். வர்க்கப் போராட்டம் என்பது ஒன்றுடன் ஒன்று இணைய முடியாத இரண்டு பகைச் சக்திகளுக்கு இடையிலான போர் ஆகும்.

அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனம் என்ற பிரசுரத்தில் மார்க்ஸ் எழுதிய முன்னுரையில் இருந்து, வர்க்கப் போராட்டம் பற்றிய சுருக்கமான முக்கிய குறிப்புகள்:

- சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து வர்க்கப் போராட்டம் உருவாகின்றது.

- ஆரம்பத்தில் மனிதர்களின் சுய விருப்புகளுக்கு அப்பாற்பட்டு வர்க்கப் போராட்டம் பரிணமிக்கிறது. இருப்பினும் தற்போதுள்ள சமூக அமைப்பின் இந்த தீவிர மாற்றமானது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உணர்வு பூர்வமான புரட்சிகர நடைமுறையை கோரி நிற்கிறது.

- இரு துருவங்களான சக்திகளுக்கு இடையிலான பகை முரண்பாடுகளை உண்டாக்கும் தோற்றுவாயை ஒழித்துக் கட்டுவதற்கு வர்க்கப் போராட்டம் முயல்கின்றது. காலத்திற்கு ஒவ்வாத உற்பத்தி உறவுச் சங்கிலியில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுதலை செய்வதை குறிக்கோளாக கொண்டது.

- பழைய சமுதாயத்திற்கு உள்ளேயே புதிய பொருளாதார சமூக அடிப்படை தயார் படுத்தப் படுகின்றது.

இன்றைய காலத்தில், ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் இரண்டு பிரதானமான வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. ஒன்று, ஏகபோக முதலாளிகளால் தலைமை தாங்கப் படும் முதலாளித்துவ வர்க்கம். இரண்டு, உழைக்கும் வர்க்கம். இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையில் வர்க்கப் போராட்டம் நடக்கிறது.

"முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கொல்வதற்கான ஆயுதங்களை மட்டும் உருவாக்கவில்லை. அவற்றை இயக்குவதற்காக நவீன உழைக்கும் வர்க்கம் அல்லது பாட்டாளிகளையும் உருவாக்கியது." - மார்க்ஸ்/எங்கெல்ஸ் (தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகள்)

ஆகையினால், வர்க்கப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத அம்சங்களாக பின்வரும் தோற்றப்பாடுகளை கருதலாம். முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இது வாழ்வா, சாவா போராட்டம். உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் அடிமைத்தளை அல்லது விடுதலைக்கான போராட்டம்.

மேற்படி காரணத்தால், முதலாளித்துவ வர்க்கம் அடக்குமுறையை கையில் எடுக்கிறது. உழைக்கும் வர்க்கம் ஒரு கொடூரமான எதிரியை தூக்கி எறியப் பார்க்கிறது.

இந்த இரண்டு பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையிலான போர் தான் வர்க்கப் போராட்டம் ஆகும். அமைதியான காலத்தில் அது மறைமுகமாக நடக்கிறது. ஆனால், ஆயுதமேந்திய எழுச்சியின் பொழுது, அது தீவிரமடைந்து உச்சத்தை தொடுகின்றது.

மனித விருப்புக்கு மாறாக, அன்றாட வாழ்வில் முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையில் வர்க்கப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து அரசியல் வியூகமும், உத்திகளும் பிறக்கின்றன. இருப்பினும் அது ஒரு புறவயமான தோற்றப்பாடு ஆகும். மறுபக்கத்தில், தற்சார்புடைய உணர்வு பூர்வமான போர்களும் நடக்க வாய்ப்புண்டு.

இது குறித்து ஸ்டாலின் கொடுத்த விளக்கம் : "வர்க்கப் போராட்டத்திற்கான புறவயமான காரணிகளை விட, உழைப்பாளர்களின் உணர்வுபூர்வமான தன்னெழுச்சி எமக்கு முக்கியமானது. அதற்குக் காரணம், இந்த இயக்கமே வியூகத்தையும், உத்திகளையும் வகுக்கின்றது. புறவயமான சக்திகள் தாக்கம் செலுத்தும் சூழலில் எந்த வியூகமும் இருப்பதில்லை. ஆனால், அகவயமான இயக்கத்தில் வியூகமானது பரந்துவிரிந்துள்ளது. அங்கு வியூகமானது இயக்கத்தின் வேகத்தை அதிகரிக்கவோ அல்லது பின்தள்ளவோ உதவுகின்றது. அந்த இயக்கத்தின் திறன்மிக்க செயற்பாடுகள் அல்லது குறைபாடுகள் அதைத் தீர்மானிக்கிறது." -ஸ்டாலின், (ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் வியூகமும், உத்திகளும் பற்றிய ஆய்வுகள்)

இராணுவ அறிவியலில் இருந்து தான் வியூகமும், உத்திகளும் தோன்றின. பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் வர்க்கப் போராட்டமும் ஒரு போர் தான். அந்த வகையில், அதுவும் போர்க்கலைக்கு நெருக்கமானது. அரசியல் உத்திகளும், போர் உத்திகளும் பற்றி பேசிய லெனின், தனது கட்சி ஊழியர்கள் கிளவுஸ் விட்ஸ் எழுதிய நூல்களை படிக்குமாறு கோரினார்.

கிளவுத்ஸ்விட்ஸ் பிரஷிய (ஜெர்மன்) படையில் ஜெனரலாகவும், இராணுவக் கல்லூரி அதிபராகவும் இருந்தார். அவர் 1832 ம் ஆண்டு எழுதிய போரியல் பற்றிய நூலில் எழுதிய வாசகங்கள் உலகப் புகழ் பெற்றன. அதை பல தடவைகள் லெனின் மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். 

அதாவது, "யுத்தம் என்பதும் ஒரு வகையில் அரசியல் கொள்கையின் தொடர்ச்சி. அந்த வகையில், போர் கூட ஒரு அரசியல் செயற்பாடு தான்." என்பது அவரது கூற்று. போரும் அரசியலும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன. ஆகையினால், வர்க்கப் போராட்டத்திற்காக போர்க்கலையின் விதிகளை பற்றி அறிந்து கொள்வதும் "சமாதான" காலத்தில் முன்னெடுக்கப் படும் அரசியல் தான்.

கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய போர்க்கலை இந்தக் காலகட்டத்திற்கு ஏற்றது அல்ல என்று ஸ்டாலின் அதைப் புறக்கணித்து வந்தார். இந்தக் காலத்தில் இராணுவ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்ட நவீன காலத்தில், இயந்திரங்கள் போர்க்கலையை தீர்மானிக்கிறது என்பது ஸ்டாலினின் வாதமாக இருந்தது. 

லெனினிடம் அத்தகைய கருத்துக்கள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய இராணுவ போதனைகளில் உள்ள அரசியல் முக்கியமானது என்று கருதினார். இராணுவ தொழில்நுட்ப கருவிகளின் வளர்ச்சி பற்றி மட்டுமே ஸ்டாலின் சிலாகித்து பேசியிருந்தால் அதில் தவறேதும் இல்லை. ஏனெனில், இன்றைய போர்க்கருவிகள் முன்பிருந்ததை விட பல மடங்கு திறன் வாய்ந்ததாகவும், போரின் வியூகங்களை தீர்மானிக்கும் சக்தி படைத்தனவாகவும் உள்ளன.

"தாக்குதல்களில் ஈடுபடுத்தப் படும் இராணுவ சக்திகளின் கோட்பாடு உத்திகள் எனப்படும். அந்தத் தாக்குதல்களை போர் எனும் இறுதி இலக்கை நோக்கி பாவிக்கும் கோட்பாடு வியூகம் எனப்படும்." - கிளவுத்ஸ்விட்ஸ்

அந்த வகையில் வியூகம் முதன்மையானது. அது போர் முழுவதினதும் குறிக்கோள் என்னவென்பதை தீர்மானிக்கிறது. அத்துடன், ஒவ்வொரு தாக்குதலுக்கும் பின்னால் உள்ள அடிப்படை நோக்கம் என்னவென்பதையும் சொல்கின்றது. உத்திகள் இரண்டாம் பட்சமானவை. ஒவ்வொரு தாக்குதலும், சமர்களும் எவ்வாறு நடத்தப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

வியூகம் என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப் பட்ட நிபந்தனை. சக்திக்கு மீறிய அழுத்தங்கள் வந்தால் அன்றி, அது போரின் திசையை மாற்றுவதில்லை. ஆனால், சண்டை நடந்து கொண்டிருக்கும் சூழலில் புதிய புதிய உத்திகள்  எழலாம். அவை நிபந்தனைக்கு உரியவை அல்ல. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியவை. வியூகம் வகுப்பதற்கு ஒரு நீண்டகால திட்டமும், அது பற்றிய தொலைநோக்கும் அவசியம். ஒவ்வொரு சமரிலும் பயன்படுத்தப் படும் உத்திகள் முக்கியத்துவம் குறைந்த குறுகிய கால திட்டங்கள் ஆகும்.

இராணுவ அறிவியலில் பின்பற்றப்படும் அதே வகையான வியூகமும், தந்திரோபாயமும், மார்க்சிய லெனினிச கோட்பாட்டிலும் பிரயோகிக்கலாம். அதற்காக உழைக்கும் வர்க்கம் தனது இலக்கை தீர்மானித்துக் கொள்வதுடன், அது சார்ந்த வியூகத்தையும், உத்திகளையும் பின்பற்ற வேண்டும்.

"பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்றிருப்போரின் அறிவியலை, மார்க்சிய லெனினிச வியூகமும், உத்திகளும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன." - ஸ்டாலின்

இந்த சமூகத்தின் புறவயமான காரணிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, உழைக்கும் வர்க்கத்தின் இறுதி இலக்கு எதுவென்பதை மார்க்சிய லெனினிசம் தீர்மானிக்கிறது. மார்க்சிய லெனினிச வியூகங்களும், உத்திகளும் சமூக அசைவியக்கத்தில் பலவிடங்களிலும் பிரயோகிக்கப் படலாம். அது பிரச்சார வேலைத் திட்டங்களை வளர்க்கிறது. போராட்ட சக்திகளையும், உறங்குநிலையில் உள்ள ஆதரவு சக்திகளையும் இனங் காண்கின்றது. போர்க் களம், ஆதரவுத் தளங்களை தீர்மானிக்கிறது. சிறிய சிறிய சண்டைகள், பெரியதொரு போருக்கு இட்டுச் செல்கின்றன. 

வர்க்கப் போரில், முன்னணி அரங்கில் நின்று போரிடும் பிரதானமான இராணுவம் உழைக்கும் வர்க்கம் ஆகும். நாட்டுப்புற விவசாயிகள் ஆதரவு சக்திகள். உழைக்கும் மக்களின் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போரை வழிநடத்தும் தளபதிகள் ஆகும்.


உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர குறிக்கோள் எதுவென கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம் ஒன்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்: 
"நவீன சமுதாயத்தில் இருக்கும் வர்க்கங்களை கண்டுபிடித்ததாக நான் பிரகடனப் படுத்தவில்லை. எனக்கு முன்னரே, பல வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளித்துவ வரலாற்று அறிஞர்கள் சரித்திர காலத்தில் வர்க்கங்களுக்கு இடையில் நடந்த போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள். பொருளாதார கட்டமைப்புகளை பற்றி எழுதிய முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் அது பற்றி சொன்னார்கள். எனது பங்களிப்புகள்: 
1.உற்பத்தி வளர்ச்சியில் வர்க்கங்களின் உந்துசக்தியை எடுத்துக் காட்டியது.
2.வர்க்கப் போராட்டமானது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் அவசியத்தை உண்டாக்கும் என்றது. 
3.அது வர்க்க வேற்றுமைகளை ஒழித்து, வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் இடைநிலைப் பாத்திரம் வகிக்கும் என்றது." 
- Karl marx letter to Joseph Weydemeyer on March 5, 1852



(பிற்குறிப்பு: Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle நூலில் இருந்து எடுக்கப் பட்ட பகுதிகள். இந்நூலானது ஜெர்மன் மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான தத்துவார்த்த வழிகாட்டியாக உள்ளது.)

Thursday, October 23, 2014

ஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரிட்டனின் காலனிய சூழ்ச்சியும்


ஹாங்காங்கில் நடக்கும் மாணவர் போராட்டத்தை, "ஜனநாயக மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்" போன்று சித்தரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், அதன் பின்னணி பற்றி விபரிப்பதில்லை. ஹாங்காங் ஆசியாவில் ஒரு முதலாளித்துவ அதிசயம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, அங்கு நடந்த காலனிய எதிர்ப்பு போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. ஹாங்காங் பிரிட்டனின் காலனிய அடிமை நாடாக இருந்த காலத்தில், அது அமைதியாக இருந்ததாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி நடந்தது என்பதையும், பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் அதனை ஈவிரக்கமின்றி அடக்கியது என்பதையும் அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

நூறு வருடங்களாக ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்திருந்தாலும், ஆரம்பத்தில் அது ஒரு பணக்கார நாடாக இருக்கவில்லை. ஆசியாவில் இருந்த பிற ஐரோப்பியக் காலனிகள் போன்று கடுமையான சுரண்டலால் பாதிக்கப் பட்டிருந்தது. வசதி வாய்ப்புகளை விட, வறுமையும், பிணியும் அதிகமாக காணப்பட்டது. பிரிட்டனின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த சீனர்கள் மட்டும் ஹாங்காங் பிரஜைகள் ஆகவில்லை. சீன பெருநிலப் பரப்பில் இருந்து காலங்காலமாக குடியேறிகள் வந்து கொண்டிருந்தார்கள். சீன - ஜப்பான் போரின் பொழுதும், கம்யூனிஸ்ட் - குவாமிந்தாங் போரின் பொழுதும், பல்லாயிரக் கணக்கான சீனர்கள், அகதிகளாக வந்து சேர்ந்திருந்தனர். அவர்களின் வம்சாவளியினர், 21 ம் நூற்றாண்டில் வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றமை நகைப்புக்குரியது.


ஹாங்காங் மாணவர் போராட்டம் "ஜனநாயகத்திற்கானது" என்று கூறப் பட்டாலும், அதற்குள் சீன குடியேற்றத்தை எதிர்க்கும் இனவாத சக்திகளின் ஆதிக்கமும் காணப் படுகின்றது. 2012 ம் ஆண்டு, "வெட்டுக்கிளி எதிர்ப்பு இயக்கம்" ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. தீவிர வலதுசாரிகளின் அமைப்பு, பெருநிலப் பரப்பில் இருந்து வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்புப் நாளேடு ஒன்றில், "வெட்டுக்கிளி ஹாங்காங் மீது படையெடுக்க காத்திருப்பது" போன்றதொரு கருத்துப் படம் போட்டு, அதற்கு கீழே பின்வருமாறு எழுதி இருந்தது: "சீனாவில் இருந்து வரும் கர்ப்பிணிப் பெண்கள், ஹாங்காங்கில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம், ஹாங்காங்கின் மக்கள் நல கொடுப்பனவுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள்...."

பொதுவாகவே, ஹாங்காங் சீனர்கள், பெருநிலப்பரப்பில் வாழும் சீனர்களை கீழானவர்களாக பார்ப்பதுண்டு. காலனிய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை மறக்காமல், அவர்களை "நாகரிமைடையாத சீனர்கள்" என்று கருதிக் கொள்வார்கள். "ஹாங்காங் சீனர்கள் காண்டனீஸ்-சீன மொழி பேசுவார்கள். சீனாவில் உள்ள சீனர்கள் மாண்டரின்-சீன மொழி பேசுவார்கள்." என்று யாராவது இதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஹாங்காங்கில் மாண்டரின் - சீன மொழி பேசுவபவர்கள் மீதான துவேஷம் சற்று அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், ஹாங்காங் தீவுகளுக்கு அயலில் உள்ள சீன மாகாணங்களிலும் காண்டனீஸ் மொழி தான் பேசுவார்கள் என்பதை மறந்து விடலாகாது. ஹாங்காங்கில் குடியேறியுள்ள பெரும்பாலான சீனர்கள், காண்டனீஸ் சீன மொழி பேசுவோர் தான்.

ஹாங்காங் மாணவர்களின் போராட்டத்தை, ஹாங்காங் வர்த்தகர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு காரணம் உண்டு. வருடந்தோறும் ஹாங்காங் வரும் உல்லாசப் பிரயாணிகளில் 75% சீன பெருநிலப் பரப்பில் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, ஹாங்காங் அருகில் உள்ள ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையத்தில் ஹாங்காங் முதலாளிகள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர். ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையம் எண்பதுகளிலேயே இயங்கத் தொடங்கி விட்டது. அப்போதே சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான இரு தரப்பு போக்குவரத்து ஆரம்பமாகி விட்டது. அதாவது, ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே, சீனாவுடன் நல்லுறவு நிலவியது. ஆனால் அது பிற்காலத்தில் ஏற்பட்ட உறவு. அதற்கு முன்னர், காலனிய ஆட்சியாளர்களினால் ஹாங்காங் சீனாவிடம் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தது.

சீனாவில் தோன்றிய பொதுவுடமைப் புரட்சி, பெருமளவு சீனர்கள் வாழும் ஆசிய நாடுகளிலும் பரவியது. ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல. 1966 ஆம் ஆண்டின் இறுதியில், தொழிற்சாலைகளில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள், வெகு விரைவில் காலனிய நிர்வாகத்திற்கு சவாலாக மாறினார்கள். நகரத் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், அடிக்கடி காவல்துறையினருடனான மோதல்களில் முடிந்தது. 

பல நிறுவனங்களில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டங்களினால், ஹாங்காங் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. காலனிய படைகளில் கடமையில் இருந்த சீன இன போலிஸ்காரர்களை, தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நம்பினார்கள். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. சீனப் பொலிஸ்காரர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தனர்.

பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் நாட்டில், கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கப் படா விட்டாலும், அது பகிரங்கமாகவே இயங்கி வந்தது. கம்யூனிஸ்ட் செய்தித் தாள்கள் வெளியாகின. ஒரு வானொலி நிலையம் கூட இயங்கியது. அந்தளவுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. "மாவோவின் மேற்கோள்கள்" எனும் சிவப்பு நிற சிறிய கைநூல், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டது. சீனாவில் கலாச்சாரப் புரட்சி காலத்தில் நடந்தது போன்று, ஹாங்காங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களினால் எடுத்துச் செல்லப் பட்டது.

பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வனுமுறை பிரயோகித்தது. செய்தித்தாள்கள் தடை செய்யப் பட்டன. அச்சகங்கள் மூடப் பட்டன. கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். அரச ஒடுக்குமுறை காரணமாக, கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் தலைமறைவாக இயங்கத் தொடங்கினார்கள். காலனிய ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் குண்டு வீச்சுக்கு இலக்காகின. 1967 ஆம் ஆண்டு, ஒரு வருடத்திற்குள், ஹாங்காங் முழுவதும் நூற்றுக் கணக்கான குண்டுகள் வெடித்தன. காலனிய அதிகாரிகள், பொலிஸ்காரர்கள் மட்டுமல்லாது சில பொது மக்களும் குண்டு வெடிப்புகளுக்கு பலியானார்கள். அனேகமாக, பொது மக்களின் உயிரிழப்புகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு குறைந்திருக்கலாம்.

ஹாங்காங் கம்யூனிஸ்ட் கிளர்ச்சி முறியடிக்கப் பட்டமைக்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

  1. ஆயிரக் கணக்கான குண்டுகள் செயலிழக்க செய்யப் பட்டன அல்லது வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. 
  2. நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இரகசிய மறைவிடம் கண்டுபிடிக்கப் பட்டது. 
  3. கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள். ஆயிரக் கணக்கானோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அதை விட, ஆயிரக் கணக்கானோர் சீனாவுக்கு நாடுகடத்தப் பட்டனர். 
  4. எல்லாவற்றிற்கும் அப்பால், செஞ்சீனத்தின் ஆதரவு கிடைக்காமல் விட்டமை ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது. 


உண்மையில், மாவோ தலைமையிலான செஞ்சீனம், ஹாங்காங் புரட்சியை ஆரம்பத்தில் வரவேற்று ஆதரித்திருந்தது. ஹாங்காங் ஆதரவு போராட்டங்களையும் நடத்தி இருந்தது. ஆயினும், கிளர்ச்சி உச்சகட்டத்தை அடையும் நேரம், சீனப் படைகள் ஹாங்காங்கை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது. சிலநேரம் சீனத் தலைமையிடம் அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தாலும், பின்னர் கைவிடப் பட்டது. பிரிட்டனுடன் நேரடியாக மோதும் நிலையை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹாங்காங் சீனாவுக்கு திரும்பக் கிடைக்க இருந்தது என்பதையும் மறந்து விடலாகாது. இன்னொரு ஐரோப்பிய காலனியான மாக்காவ், போர்த்துக்கேயரின் பலவீனம் காரணமாக, ஏற்கனவே சீன ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது.

1967 கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் விளைவாக ஹாங்காங் ஒரு வகையில் நன்மை அடைந்தது என்றே கூற வேண்டும். ஏனென்றால், அது வரைக்கும் ஒரு வறிய நாடாக இருந்த ஹாங்காங், அதற்குப் பிறகு தான் பணக்கார நாடாக மாறியது. மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி உண்டாவதை தடுக்கும் நோக்கில், பிரிட்டிஷ் நிர்வாகம் பல விட்டுக் கொடுப்புகளை செய்தது. ஹாங்காங் சீனர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. பிரிட்டனில் இருப்பதைப் போன்று, சமூக நலத்துறை உருவாக்கப் பட்டது.

பிரிட்டிஷ் நிர்வாகம், புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி,  வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தது மட்டுமல்லாது, ஊதியமும் உயர்த்தப் பட்டது. ஹாங்காங் துறைமுகம் ஆசியாவில் மிகவும் முக்கியமான துறைமுகமாக மாறியது. இன்றைக்கும் ஹாங்காங்கின் பெருமளவு வருமானம் துறைமுகத்தில் இருந்து கிடைக்கின்றது. மொத்தத்தில், ஹாங்காங் ஆசியாவில் வளர்ந்து வரும் (முதலாளித்துவ) பொருளாதார அதிசயமாக மாற்றிக் காட்டப் பட்டது. கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்திரா விட்டால், ஹாங்காங் இன்றைக்கும் ஒரு வறிய நாடாகவே தொடர்ந்தும் இருந்திருக்கும்.

ஹாங்காங்கில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், 1997 ஆம் ஆண்டு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆசியாவின் "புலிப் பாய்ச்சல் பொருளாதார வளர்ச்சி" அத்துடன் முடிவுக்கு வந்தது. ஹாங்காங் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. 1997 நெருக்கடியில் இருந்து மீண்டு வருகையில், 2007 ஆம் ஆண்டு இன்னொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது ஹாங்காங்கில் வேலையில்லாப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

உயர்கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும், குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். அதை விட மாதாந்த ஊதியத்தில் அரைவாசி வீட்டு வாடைகைக்கு செலவிட வேண்டும். சுருக்கமாக, பொருளாதார நெருக்கடி காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஹாங்காங்கில் ஏற்பட்டன.

உலகில் பல இயக்கங்கள், தாங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக போராடுவதாக சொல்லிக் கொள்வதில்லை. ஹாங்காங்கின் ஜனநாயக இயக்கமும் அப்படித் தான். வெளிப்பார்வைக்கு மட்டும் தான் அது ஜனநாயகத்திற்கான இயக்கம். உள்ளே அது இனவாதிகள், பிரதேசவாதிகள், தீவிர வலதுசாரிகளின் ஆளுமைக்குள் உள்ளது. அது மட்டுமல்ல, முன்னாள் பிரிட்டிஷ் காலனிய எஜமானான பிரிட்டனின் பங்களிப்பும் உள்ளது. ஜனநாயகம் கோரும் மாணவர்கள் சிலர், வெளிப்படையாகவே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை ஆதரிக்கின்றனர்.

1967 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முடிவில், பிரிட்டிஷ் நிர்வாகம் பெரியதொரு சமூக சுத்திகரிப்பை செய்திருந்தது. காலனிய எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்டுகள் போன்றோரை பிடித்து சிறையில் அடைத்தது அல்லது சீனாவுக்கு நாடு கடத்தி இருந்தது. சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சிகளை மட்டும் இயங்க அனுமதித்தது. மேலும், தீவிர வலதுசாரிகள், காலனிய விசுவாசிகள் போன்றோரை வளர்த்தெடுத்தது. அன்று பிரிட்டிஷ்காரர்கள் நடைமுறைப் படுத்திய திட்டங்கள், இன்று பலன் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு, காலனிய கடந்த காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலதிக தகவல்களுக்கு:

Friday, June 13, 2014

பாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப் பட்ட சோஷலிசத்திற்கான வர்க்கப் போராட்டம்


பாகிஸ்தான் என்றதும், இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், தாலிபானும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு, சராசரி பொது மக்களின் மனங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் இன்றைக்கும் நிலவும் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகள், அதற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம், யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை. மிதவாத சமூக ஜனநாயகவாதிகள் முதல் தீவிர மாவோயிஸ்ட்கள் வரையில், இன்றைக்கும் பல இடதுசாரி கட்சிகள் அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எழுபதுகளில், ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஆப்கான் முஜாகிதீன் குழுக்களுக்கு உதவிய வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், பலருக்குத் தெரியாத ஓர் உண்மை உண்டு. பாகிஸ்தானில் இயங்கும் கம்யூனிஸ்ட் அமைப்புகள், சோவியத் இராணுவ உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் நிலவுவதாக அப்போது வதந்தி கிளப்பி விடப் பட்டது. அந்தக் காரணத்தைக் கூறித் தான், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தது.

பாகிஸ்தானில், அஷ்டநகர் மக்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தின் ஊடாக தமது சமூக பண்பாட்டு விடுதலையை பெற்றுக் கொண்டனர். மார்க்சிய லெனினிச சித்தாந்தம், அந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது. அஷ்ட நகர் என்பது, சமஸ்கிருதத்தில் எட்டு கிராமங்களை குறிக்கும். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த சோஷலிசப் புரட்சியை பற்றிய முழுமையான ஆவணப் படம் இது. வரலாற்றில் மறைக்கப் பட்ட பாகிஸ்தானிய உழைக்கும் மக்களின் போராட்டம் பற்றிய ஆவணப் படுத்தல்.

 

Hashtnagar - a song of another world door ammaraziz1


மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்: 
 Pakistan: Hashtnagar, a land forgotten

Saturday, January 04, 2014

நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்

(இரண்டாம் பாகம்)


உலக வரலாற்றில் முதல் தடவையாக, பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்பட்ட போதிலும், ஒரு பின்தங்கிய விவசாய நாடான ரஷ்யாவை சோஷலிச நாடாக்க முடியுமா என்பதில் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன. “முதலில் எமது நாட்டில் சோஷலிசம்" நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வாதிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தை தக்க வைத்த பின்னர், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக, சோஷலிசத்தை கொண்டு வர வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டினார். ஸ்டாலின் தனி ஒரு ஆளாக செயற்படவில்லை. ஸ்டாலினுடன், மத்திய குழுவை சேர்ந்த இன்னும் இரண்டு தலைவர்கள் கூட்டுச் சேர்ந்து குழுவாக இயங்கினார்கள். ஸ்டாலின் குழு, ட்ராஸ்கி குழு, புகாரின் குழு என்பன, தத்தமது கொள்கைகளை விளக்கி, தட்டச்சு செய்த பிரதிகளை கட்சி உறுப்பினர்களுக்கு விநியோகித்தார்கள். இந்தக் குழுக்களுக்கு இடையிலான விவாதங்கள், மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக நடந்தன.

ஸ்டாலின் எழுதிய “லெனினிசத்தின் அடிப்படைகள்" ஒரு வரலாற்று முக்கியமான ஆவணம் ஆகும். 1920 ம் ஆண்டு எழுதப் பட்டாலும், பிற்காலத்தில் சில திருத்தங்களுடன் நடைமுறைக்கு வந்தது. ஸ்டாலினும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத கடும்போக்காளராக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப, ஸ்டாலின் சில கலாச்சார விட்டுக் கொடுப்புகளை செய்தார். குறிப்பாக, 1935 ம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்டாலினின் சோஷலிசக் கட்டுமானம் காரணமாக பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்தது. மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தொழிற்துறை புரட்சி காரணமாக ஐம்பது ஆண்டுகளில் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியை, ஸ்டாலினின் சோவியத் யூனியன் பத்து வருடங்களுக்குள் எட்டியிருந்தது.

பொருளாதார வளர்ச்சி காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஒரு காலத்தில் மேட்டுக்குடியினர் மட்டுமே அனுபவித்த உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது. மேட்டுக்குடியினர் ஆடம்பர வாழ்க்கை வசதிகளை அனுபவித்த காலத்தில், அந்தப் பொருட்களின் விலைகள் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு இருந்தன. ஆனால், ஸ்டாலின் காலத்தில், எல்லோரும் வாங்கக் கூடியதாக, ஆடம்பர பாவனைப் பொருட்களின் விலைகள் குறைந்திருந்தன. உணவுப் பொருட்களும், பாவனைப் பொருட்களும் தாராளமாக கிடைத்து வந்ததால், அவற்றை விற்பனை செய்வதற்கு புதிதாக பல்பொருள் அங்காடிகள் திறக்கப் பட்டன. நாம் இன்றைக்கு மேலைத்தேய நாகரீகமாக கருதும் “சூப்பர் மார்க்கட்" , சோவியத் யூனியனில் 1930 ம் ஆண்டே வந்து விட்டது. நாடு முழுவதும், பெரிய, சிறிய நகரங்களில் எல்லாம் சூப்பர் மார்க்கட்டுகள் உருவாகின.

சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததால், வசதி வாய்ப்புகள் அதிகரித்தன. அதனால் கொண்டாட்டங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகரித்தன. ஆரம்ப கால புரட்சியாளர்கள் பிற்போக்கு கலாச்சாரமாக ஒதுக்கித் தள்ளியதைக் கூட, அரசியலற்ற சாதாரண மக்கள் அனுபவிப்பதற்கான சுதந்திரத்தை ஸ்டாலின் வழங்கினார். உதாரணத்திற்கு, 1917 புரட்சிக்குப் பின்னர், திருமணத்தில் மோதிரம் மாற்றிக் கொள்வது தடை செய்யப் பட்டது. புரட்சியாளர்கள் அதனை பிற்போக்கு கிறிஸ்தவ கலாச்சார சின்னமாக கருதினார்கள். ஆனால், ஸ்டாலின் காலத்தில் அது அனுமதிக்கப் பட்டது. அதனால் தங்க மோதிரங்கள் செய்து கொடுக்கும் நகைக் கடைகளும் தோன்றின. அதே போன்று, நடனம் ஆடுவது மேட்டுக்குடி கலாச்சாரம் என்று கருதிய புரட்சியாளர்கள், எல்லா வகை நடனங்களையும் தடை செய்திருந்தார்கள். ஸ்டாலின், நடனத்தை அனைத்து மக்களினதும் பொழுதுபோக்கு உரிமையாக மாற்றினார். அதனால், நாடு முழுவதும் நடனப் பள்ளிகள் தோன்றின.

சோவியத் மக்களின் கலாச்சார மறுமலர்ச்சியின் ஒரு கட்டமாக, பிரமாண்டமான அணிவகுப்புகளும், ஸ்டாலினை மையப் படுத்திய தலைமை வழிபாடும் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டன. அவற்றில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தார்கள். நமது நாடுகளில், கோயில்/தேவாலய திருவிழாக்களில் கலந்து கொள்ளும் மக்களின் மனநிலையோடு அதனை ஒப்பிடலாம். ஆனால், “ஸ்டாலினை மையப் படுத்திய தலைமை வழிபாடு” குறித்து அதிக கவனமெடுத்து உயர்த்திப் பிடித்த மேலைத்தேய புத்திஜீவிகள், அதற்குப் பின்னால் இருந்த பொது மக்களின் பண்பாட்டுக் கூறுகளை கண்டுகொள்வதில்லை. அதாவது, அத்தகைய அரசியல் நிகழ்வுகள், பொது மக்களிற்கு உற்சாகத்தை கொடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களில்  ஒரு பகுதி மட்டுமே. ஆனால், மேற்குலகில் வாழ்ந்தவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.  “ஸ்டாலினிச சர்வாதிகாரம்" மட்டுமே அவர்களின் கண்களை உறுத்தியது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தொழிற்துறை வளர்ச்சியை, ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பத்து வருடங்களில் ஈடுகட்டின. ஒரு கட்டத்தில், சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை முந்திக் கொண்டு சென்றது. சோவியத் ரூபிளின் பெறுமதி, அமெரிக்க டாலரை விட உயர்ந்திருந்தது. அந்த பொருளாதார அதிசயம் எப்படி சாத்தியமானது? எவ்வாறு ஒரு பின்தங்கிய விவசாய நாடு, ஒரு குறுகிய காலத்தில் முன்னேறிய தொழிற்துறை வல்லரசாக மாறியது? ஸ்டாலின் தீர்க்கதரிசனத்துடன் முன்மொழிந்த “ஒரே நாட்டில் சோஷலிசம் சாத்தியம்” என்ற நிலைப்பாடு மிக முக்கியமானது.

இன்றைக்கு, ஒரு உப கண்டம் என்று அழைக்கப் படும் இந்தியாவில் கூட, மேற்கத்திய மூலதனம் இல்லாமல் பொருளாதாரத்தை நடத்துவதை, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலினின் சோவியத் யூனியன், மேற்கத்திய நாடுகளிடம் ஒரு சல்லிக் காசு கூட கடன் வாங்காமல், தனது சொந்தப் பலத்தில் பொருளாதாரத்தை கட்டியது. மேற்கத்திய நாடுகளில் பெரிதும் வெறுக்கப் பட்ட, கிராமங்கள் தோறும் அமைக்கப் பட்ட கூட்டுத்துவ பண்ணைகள் (Collective farms), பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன. 

ஸ்டாலின், ரஷ்ய பொருளாதாரத்தின் மிகப் பெரிய தொழில் துறையான விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்தார். விவசாயம், பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொன்னால் அது மிகையாகாது. கூட்டுறவுப் பண்ணைகள் அமைப்பதன் மூலம், விவசாயிகள் உற்பத்தியை பெருக்கினார்கள். கிராமங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்த படியால், நகரங்களில் தொழிற்சாலைகள் ஒழுங்காக இயங்கத் தொடங்கின. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளை அரசே பொறுப்பெடுத்துக் கொண்டதால், நகரங்களில் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்தன. அது நகர்ப்புற தொழிலாளர்களை வேலைக்கு செல்ல ஊக்குவித்தது.

மேற்குலகில் வெறுக்கப்பட்ட, “ஸ்டாலினிச சர்வாதிகாரம்” நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்த நிலைமை வேறு. பொருட்களின் விலையை சந்தை தீர்மானித்த காலத்தில், கிராமப்புற விவசாய உற்பத்தியாளர்கள் இலாபமடைந்தனர். ஆனால், நகர்ப் புறங்களில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்தனர். சோவியத் அரசு யாருடைய பக்கம் நின்றிருக்க வேண்டும்? விவசாய உற்பத்தியாளர்களுக்கு இலாபம் கிடைப்பது முக்கியமா? அல்லது நகர்ப்புற தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பது முக்கியமா?

ஏறச் சொன்னால் குதிரைக்கு கோபம் வரும், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம் வரும். நிச்சயமாக, இது இலகுவாக தீர்க்கக் கூடிய பிரச்சினை அல்ல. எத்தகைய அரசாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இந்தப் பிரச்சினையை சமாளித்திருக்க முடியாது. நாட்டுப்புறங்களில் கூட்டுறவுப் பண்ணைகள் அமைப்பதன் மூலம், விவசாய உற்பத்தியை பெருக்கலாம். ஆனால், பெருமளவு நிலங்களும், கால்நடைகளும் “கூலாக்”(Kulak) என்றழைக்கப் பட்ட பணக்கார விவசாயிகளிடம் இருந்தன. (கூலாக் என்ற சொல், ஊரில் இருந்த பணம் படைத்தவர்கள் எல்லோரையும் சுட்டிக் காட்ட பயன்பட்டது. நிலவுடமையாளர்கள் மட்டுமல்லாது, சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களும், கிராமத்து மக்களால் கூலாக் என இனம் காணப் பட்டனர்.)

இதுவரை காலமும், தமது சொத்துக்களை வைத்திருந்து ஆதாயமடைந்த கூலாக்குகள், கூட்டுறவுப் பண்ணை முறையை எதிர்த்தார்கள். ஒத்துழைக்க மறுத்தார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால், தம்மிடம் இருந்த சொத்துக்களை அழித்தார்கள், கால்நடைகளை வெட்டிக் கொன்றார்கள். தமக்குக் கிடைக்காதது, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற குறுகிய மனோபாவத்துடன் நடந்து கொண்டனர். ஏற்றத் தாழ்வான சமுதாய அமைப்பில் அது எதிர்பார்க்கக் கூடிய ஒன்று தான். இந்திய, இலங்கைக் கிராமங்களில் வசதியாக வாழும் பண்ணையார்கள், பணக்கார விவசாயிகள் கூட, தமது சொத்துக்களை ஊரில் உள்ள எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். ஊரில் ஏற்றத் தாழ்வு நீங்கி விட்டால், ஏழைக் குடியானவர்கள் மேல் நாட்டாண்மை செலுத்த முடியுமா? உயர் சாதிப் பெருமை பேச முடியுமா?

கூலாக்குகளை ஒரு வர்க்கமாக அறிவித்த ஸ்டாலின், கூலாக் வர்க்கத்தை இல்லாமல் செய்வதற்கான வர்க்கப் போராட்டம் அவசியம் என்பதை தெளிவு படுத்தினார். கிராமங்கள் தோறும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டன. கூடிய சீக்கிரத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவுப் பண்ணைகள் நிறுவப் பட வேண்டும். அதற்கு ஒத்துழைக்க மறுக்கும் கூலாக்குகள் வெளியேற்றப் பட வேண்டும்.

சோவியத் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. மார்க்சிய தத்துவம் பற்றி, அதற்கு முன்னர் கேள்விப் படாதவர்கள் கூட கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். சிலர் பதவிக்காக, பகட்டுக்காக கட்சியில் சேர்ந்தார்கள். இருந்த போதிலும், புதிதாக சேரும் உறுப்பினர்களின் வர்க்கப் பின்னணி கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் கூலித் தொழிலாளியின் பிள்ளையாக இருந்தால், அல்லது மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால், பல இடங்களில் அதுவே போதுமான தகைமையாக கருதப் பட்டது. வறுமையான குடும்பங்களில் இருந்து வந்த புத்திசாலி இளைஞர்கள் பலர், பிற்காலத்தில் கல்வியறிவு பெற்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக வந்தார்கள்.

நமது நாடுகளில் கூட, வறுமைப் பட்ட இளைஞர்கள் மனதில், அந்த வர்க்கத்திற்கே உரிய  கிளர்ச்சிகர மனப்பான்மை இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதற்கு வடிகால் தேடிக் கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஈழப் போராட்டம் நடந்த காலத்தில், ஊரில் இருந்த பணக்கார விவசாயிகள் (தமிழ் கூலாக்?) பலர், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள்.   புலம்பெயர்ந்த பணக்கார விவசாயக் குடும்பங்கள், தமது வீடுகளில் உறவினர்களை இருத்தி விட்டு சென்றார்கள். சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அப்படி ஒரு ஏற்பாடு செய்யா விட்டால், ஊரில் இருக்கும் ஏழைத் தமிழர்கள், அந்த சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்வார்கள் என்ற அச்சம் அவர்கள் மனதில் குடி கொண்டிருந்தது. பலர் அந்த நோக்கத்திற்காகவே, புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு புலிகளுக்கு தாராளமான நிதியுதவி செய்து வந்தனர்.

ஈழப்போர் நடந்த காலத்தில், பல ஏழைக் குடும்பங்கள், ஊரில் வெறுமையாக கிடந்த வீடுகளை உடைத்துத் திறந்து குடியேறின. புலிகளின் ஆட்சிக் காலத்தில், “போராளிக் குடும்பம்”, “மாவீரர் குடும்பம்” என்று பல ஏழைக் குடும்பங்கள் வசிப்பதற்கு, “புலம்பெயர்ந்த கூலாக்குகளின்” வீடுகள் வழங்கப் பட்டன. ஈழப் போர் நடந்த காலத்தில், நிறைய பணக்காரக் குடும்பங்கள் புலம்பெயர்ந்து சென்றது போல, ரஷ்யாவிலும் யுத்தம் காரணமாக பல ரஷ்யக் கூலாக் குடும்பங்கள் புலம்பெயர்ந்திருந்தன. அப்படியானவர்களின் சொத்துக்களை கூட்டுறவுப் பண்ணைகள் இலகுவாக அபகரித்துக் கொண்டன.

ரஷ்யா முழுவதும் இருந்த கூலாக்குகளை வெளியேற்றிய கதைகளைக் கூறும் ஏராளமான நூல்கள் மேற்கத்திய நாடுகளில் விற்பனையாகின்றன. மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது போல, ஸ்டாலின் அனுப்பிய போலிஸ் படை, திடீரென ஒரு நாள் இரவு கதவைத் தட்டி, எல்லாக் கூலாக் குடும்பங்களையும் வெளியேற்றவில்லை. சில இடங்களில் அப்படி நடந்திருந்தாலும், பெரும்பான்மையான கிராமங்களில் வறுமைப் பட்ட குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களே முன் நின்று கூலாக்குகளை வெளியேற்றினார்கள். அதைச் செய்வதற்கான அதிகாரத்தை, கட்சி அவர்களுக்கு வழங்கி இருந்தது.

ஏழைகளின் உதவியுடன் பணக்காரர்களை வெளியேற்றுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. அந்தப் பிரதேச கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர், ஊரில் இருந்த மிகவும் வறுமையான இளைஞர்களிடம் ஆயுதங்களை கொடுத்து விடுவார். அந்த இளைஞர்கள், நேராக கூலாக் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்றனர். கூலாக் குடும்பங்களை வெளியேற்றி விட்டு, வீட்டையும், சொத்துக்களையும் பறித்துக் கொண்டார்கள். வெளியேற்றப் பட்ட கூலாக் குடும்பங்களை, பொலிஸ் கூட்டிச் சென்று தடுப்பு முகாம்களில் போட்டது. கூலாக்குக்களை வெளியேற்றிய இளைஞர்கள் பலர், கூட்டுறவுப் பண்ணைகளின் தலைவர்களானார்கள். கூலாக்குகளின் வீடுகளை, கூட்டுறவுப் பண்ணையின் அலுவலகமாக மாற்றினார்கள்.

எல்லா இடங்களிலும், கூலாக்குகள் குடும்பத்துடன் வெளியேற்றப் படவில்லை. பல இடங்களில் தானியங்களை பதுக்கிய கூலாக்குகள் மட்டும் காட்டிக் கொடுக்கப் பட்டனர். யூரல் மலைப் பகுதி கிராமம் ஒன்றில், பவ்லிக் என்ற பருவ வயது சிறுவன், தனது தந்தையை காட்டிக் கொடுத்தான். கூலாக்குகள் தப்பிச் செல்வதற்கு போலிப் பத்திரங்கள் கொடுத்து உதவியதாக, அவர் குற்றஞ் சாட்டப் பட்டு கைது செய்யப் பட்டார். பவ்லிக் பின்னர், அவனது உறவினர்களால் கொலை செய்யப் பட்டான். அதற்குப் பின்னர், பவ்லிக் சோவியத் சிறுவர்களின் நாயகனாக சித்தரிக்கப் பட்டான். அந்தக் காலங்களில், பாடசாலைகளில் பயின்ற சிறுவர்கள், தங்கள் ஊரில் இருக்கும் கூலாக்குகளை காட்டிக் கொடுப்பதை பெருமையாகக் கருதினார்கள். ஊரில் யார் எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை, சிறுவர்கள் இலகுவாக கண்டுபிடித்தார்கள்.

ஊரில் இருந்த பணக்காரக் குடும்பங்களை வெளியேற்றிய ஏழை இளைஞர்கள் எல்லோரும் நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில இடங்களில், சிறு சச்சரவு கூட கொலையில் முடிந்தது. சில இடங்களில், கூலாக் குடும்பங்கள் வைத்திருந்த எல்லாப் பொருட்களையும் பறித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், கூலாக் எதிர்ப் புரட்சியாளர்களை வெளியேற்றுவதும், ஒவ்வொரு ஊரிலும் கூட்டுத்துவ பண்ணை அமைப்பதும் மட்டுமே முக்கியமானதாகப் பட்டது.

கூட்டுறவுப் பண்ணை மாதிரியை கொண்ட கூட்டுத்துவப் பண்ணைகள், சில இடங்களில் விவசாய அறிவற்ற முகாமையாளர்களினால் நடத்தப் பட்டதால், உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. உண்மையில், வெளியேற்றப் பட்ட கூலாக்குகள் விவசாய நிபுணர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. காலங்காலமாக விவசாயக் கூலிகளாக வேலை செய்து பழக்கப் பட்ட மக்கள், தாமே விவசாயிகளாக பொறுப்பேற்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல. இந்தக் குறைபாடுகள் காரணமாக, பல பண்ணைகள் நட்டத்தில் இயங்கின. ஆனால், விரைவிலேயே பண்ணை உறுப்பினர்கள் தமது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டார்கள். புதிய விவசாய நிபுணர்கள் உருவானார்கள்.

ஸ்டாலின் கொண்டு வந்த கூட்டுத்துவப் பண்ணை அமைப்பு, ஏற்கனவே மேற்கு ஐரோப்பாவில் நன்கு பரிச்சயமான, கூட்டுறவுப் பண்ணைகளில் இருந்து மாறுபட்டது. ஊரில் உள்ள பெரும்பாலான நிலங்களும், கால்நடைகளும் கூட்டுத்துவ பண்ணையின் பொதுச் சொத்தாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், பண்ணையில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு குடும்பமும், வீட்டோடு சேர்ந்த தோட்டம் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார்கள். அதிலே அவர்கள் தமக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டனர். அதை விட, ஆடு,மாடு, கோழி எல்லாம் வளர்த்து உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். ஸ்டாலின் கூட, தனி நபர்களின் சொத்துரிமையை ஆதரித்து பேசியுள்ளார்: “ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று சிறு சொத்து வைத்திருக்க விரும்புவது இயற்கையானது. அது குற்றம் அல்ல.”

ரஷ்ய மொழியில் Kolkhoz என்று அழைக்கப் பட்ட கூட்டுத்துவப் பண்ணைகளின் வளர்ச்சிக்கு, சோவியத் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. MTS (Machine-Tractor Station) என்ற அரச நிறுவனம், விவசாய இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கி உதவியது. சோவியத் ஒன்றியத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் MTS கிளைகள் திறக்கப் பட்டன. ஒவ்வொரு MTS கிளைக்கும், பத்துக்கும் குறையாத கூட்டுத்துவ பண்ணைகள் வாடிக்கையாளர்களாக இருந்தன. விவசாய உபகரணங்களும், டிராக்டர்களும் பண்ணைகளின் பாவனைக்கு கடனாக வழங்கப் பட்டன.

அவற்றிற்கான மாதாந்த தவணைத் தொகையை, பண்ணைகள் பண்டமாற்று மூலம் செலுத்தி வந்தன. அதாவது, அவை உற்பத்தி செய்த தானியம், பால், இறைச்சி போன்றன பணத்திற்கு பதிலாக வழங்கப் பட்டன. கூட்டுத்துவ பண்ணை எதிலும், பணப் புழக்கம் இருக்கவில்லை. உறுப்பினர்கள் பணத்தையே கண்ணால் காணவில்லை. அவர்கள் வேலை செய்த நாட்கள், பணத்திற்கு பதிலாக கணக்கு வைக்கப் பட்டன. ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்தால், நான்கு மணித்தியாலங்களை சேமித்துக் கொள்வார். வருடக் கடைசியில் மொத்தமாக சேமிக்கப் பட்ட தொகை, பணமாக மாற்றப் படா விட்டாலும், அதன் பெறுமதிக்கு நிகரான பாவனைப் பொருட்களை பெற்றுக் கொள்வார்கள்.

கூட்டுத்துவ பண்ணை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், அதில் வேலை செய்பவர்கள் தான். அதே நேரம், அவர்களே பண்ணையின் உரிமையாளர்களாகவும் உள்ளனர். அதனால், பண்ணையில் அவர்களால் உற்பத்தி செய்யப் பட்ட விளை பொருட்களில், மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கு கிடைக்கும். (பங்கு வணிகத்தில் செலுத்தப் படும் டிவிடெண்ட் போன்றது.) விளைச்சலில் ஒரு பகுதி, உதாரணத்திற்கு விதை நெல் போன்றன, பண்ணையிலேயே மறு உற்பத்திக்காக சேமித்து வைக்கப் படும். மூன்றாவது பங்கை, அரசு வாங்கிக் கொள்ளும். 

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1. ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 
____________________________________________________________________________________________

 ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

Friday, January 03, 2014

ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்

(முதலாம் பாகம்)


ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு,  போல்ஷெவிக் கட்சியினரின் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றாலும், புரட்சியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. முடியாட்சிக்கு விசுவாசமான வெண் படைகளுக்கும், செம் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஏற்கனவே, முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட தோல்வியில், அதன் அழிவில் இருந்து மீள முடியாத மக்கள், மீண்டும் ஒரு போருக்குள் தள்ளப் பட்டனர்.

நாடு முழுவதும், மீண்டும் பல இலட்சம் மக்கள் மடிந்தனர். பல இலட்சம் சொத்துக்கள் நாசமாகின. இறுதியில், செம்படையினர் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றாலும், அதற்காக பெரியதொரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. இடையறாது நடந்த போரினால், பட்டினிச் சாவுகளும் அன்றாட நிகழ்வுகளாகின. எல்லாம் ஓய்ந்து அமைதி திரும்பிய காலத்தில், குறைந்தது பத்து மில்லியன் மக்கள் பலியாகி விட்டிருந்தனர்.

உள்நாட்டுப் போரின் முடிவில், மார்க்சிஸ்டுகள் அதிகாரத்தை நிலை நாட்டினாலும், அவர்கள் கனவு கண்ட சோஷலிச சொர்க்கத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஒரு சோஷலிச நாடு எப்படி இருக்கும் என்ற விளக்கக் கையேடு எதையும் கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கவில்லை. இதற்கிடையே அராஜகவாதிகள் பல சோவியத் சங்கங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

அராஜகவாதிகள் நேரடி ஜனநாயகம், நேரடி கம்யூனிசம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும், ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, குரோன்ஸ்டாட் சோவியத் மீது தாக்குதல் நடத்திய பின்னர், அராஜகவாதிகளின் சோவியத்துகள் கலைக்கப் பட்டன. அதற்குப் பிறகும் ஜனநாயக அமைப்பு தொடர்ந்திருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், எந்தக் கட்சியையும் சேராமல் சுயேச்சையாக போட்டியிட்ட தனி நபர்களும் மட்டுமே சோவியத் சபைகளுக்கு தெரிவு செய்யப் பட்டார்கள். 

உள்நாட்டு, உலகப் போர்களினால் கடுமையாக பாதிக்கப் ரஷ்யா, அழிவின் விளிம்பில் நின்றது.  லெனின் தற்காலிக தீர்வாக, “புதிய பொருளாதாரக் கொள்கை" (NEP) ஒன்றை அறிவித்தார். முக்கியமான தொழிற்துறைகள், பெரிய நிறுவனங்கள் மாத்திரம் தேசியமயமாக்கப் பட்டன. சிறிய தொழிற்சாலைகளும், சிறு கைத்தொழில்களும், பிராந்திய முதலாளிகளின் கீழே இயங்கிக் கொண்டிருந்தன. விவசாய உற்பத்தியும் வழக்கமான பண்ணையார்கள், பணக்கார விவசாயிகளின் (கூலாக்)  ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 

(கம்யூனிச) போல்ஷெவிக் கட்சியின் புதிய சோவியத் அரசு, தனது கட்டுப்பாட்டின் கீழ், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு சுதந்திரம் கொடுத்திருந்தது. இதனால் நகரங்களில் சிறு முதலாளிகளும், வணிகர்களும், கிராமங்களில் பண்ணையார்களும் புதிது புதிதாக உருவானார்கள். இதனால், நகர்ப்புறங்களில் தொழிலாளர்களும், கிராமப் புறங்களில் ஏழை விவசாயிகளும் பு.பொ.கொ.(NEP) மீது வெறுப்புக் கொண்டனர். அவர்கள் நம்பியிருந்த சோஷலிசப் புரட்சி நடக்காததால் ஏமாற்றமடைந்தனர். அவர்கள், மீண்டும் முதலாளிகளின், பண்ணையார்களின் கீழ் வேலை செய்யும் நிலைமையை விரும்பவில்லை. சோவியத் அரசு, தங்களது வர்க்க அபிலாஷைகளை பிரதிபலிக்கும் அரசு என்று அவர்கள் நம்பியிருந்தனர்.

லெனினின் மறைவுக்குப் பின்னரும், ஸ்டாலினின் ஆரம்ப காலங்களிலும் ரஷ்யா முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. புதிய சோவியத் அரசின் அதிகாரிகள் எல்லோரும் அரசியல் அறிவு பெற்றிருக்கவில்லை. பொதுவாக, ஆசியாவில் அல்லது ஆப்பிரிக்காவில் இன்றுள்ள சராசரி வறிய நாடொன்றின் நிலைமை தான், அந்தக் கால (1917 - 1930) சோவியத் யூனியனிலும் நிலவியது. லெனின் பு.பொ.கொள்கையை ஒரு தற்காலிக தீர்வாகக் கருதி இருந்தார். 

லெனினின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. புகாரின் தலைமையிலான வலது கம்யூனிஸ்டுகள், NEP கொள்கையை தொடர விரும்பினார்கள். ஆனால், நாட்டுப்புறங்களில் இருந்த பணக்கார விவசாயிகள், தங்களது விவசாய உற்பத்திக்கு அதிக விலை எதிர்பார்த்தார்கள். அரசு அவர்கள் கேட்ட விலையை கொடுக்க மறுத்ததால், நகரங்களுக்கான உணவு விநியோகம் தடைப் பட்டது. நகரங்களில் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், முரண்பாடற்ற சகோதரத்துவ வர்க்கங்கங்களாக கருதப் பட்ட, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

சோவியத் நாட்டு ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும், எல்லோரும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்று கருதினார்கள். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தான், உழைக்கும் மக்களுக்கு உறுதியளித்த சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால், அதற்கு பெருமளவு மூலதனம் தேவைப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த மூலதனம், காலனிகளில் இருந்து சுரண்டிய செல்வம், என்று கார்ல் மார்க்ஸ் எழுதியதை எல்லோரும் படித்திருந்தார்கள். புதிதாக தோன்றியுள்ள சோவியத் ஒன்றியம், அவ்வாறு காலனிகளை பிடித்து சுரண்டி மூலதனம் சேர்க்க முடியாது.

1917 ல் போல்ஷெவிக் கட்சியினர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், தமக்கும் பழைய சார் மன்னனின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தனர். அதன் அர்த்தம், சார் மன்னன் வாங்கியிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கு, புதிய அரசு பொறுப்பேற்க முடியாது. தமது கடன் பணம் திரும்பி வராது என்று தெரிய வந்ததும், பிரிட்டன், ஜப்பான் போன்ற கடன் கொடுத்த நாடுகள், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் தொடுத்தன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் சில பகுதிகளை சிறிது காலம் ஆக்கிரமித்திருந்தன. மீண்டும் ஒரு போர். இந்த தடவையும், ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து விட்டு, செம்படை வெற்றி வாகை சூடியது. ஆனால், வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் முற்றாக துண்டிக்கப் பட்டன. அதற்குப் பிறகும், அவர்கள் சோவியத் நாட்டுப் பொருளாதாரத்தில் முதலிட முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள், ட்ராஸ்கி பிரதிநிதித்துவப் படுத்திய இடது கம்யூனிஸ்டுகள் என்ற பிரிவு இருந்தது. அவர்கள் “நிரந்தரப் புரட்சியை" எதிர்பார்த்தார்கள். அதாவது, சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசத்தை கொண்டு வருவது இப்போதைக்கு சாத்தியப் படாது. முதலில், மார்க்ஸ் எதிர்பார்த்தது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சி ஏற்பட வேண்டும். அதற்குப் பின்னர், அந்த நாடுகள் சோவியத் யூனியனின் நட்பு நாடுகளாகி உதவி செய்யும். ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகளில் புரட்சி வரும் வரை காத்திருப்பது, இலவு காத்த கிளியின் கதையாகியது. 

ஜெர்மனி, ஹங்கேரியில் சில மாதங்கள் நிலைத்திருந்த புரட்சிகளை தவிர, வேறெந்த நாட்டிலும் புரட்சி நடக்கவில்லை. ஆனால், பாராளுமன்ற ஜனநாயக சீர்திருத்தங்கள் வந்தன. இதனால், தேர்தல்களில் போட்டியிடும் சமூக - ஜனநாயகக் கட்சிகளும், அரசை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுமாக இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்க மக்கள், வேறொரு கட்டத்தை நோக்கி (ஜனநாயக சோஷலிசம்) நகர்ந்து சென்றனர். மேற்குலகில் அன்றிருந்த நிலைமை, ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சியின் தத்துவங்களை பிரதிபலித்ததால், இன்றைக்கும் பல ட்ராஸ்கிச கட்சிகள் சமூக ஜனநாயக அரசியலை பெரிதும் விரும்புகின்றன. இன்று மேற்குலக நாடுகளில், ட்ராஸ்கிச அமைப்புகள் பெருமளவு ஆதரவாளர்களை கொண்டிருப்பது தற்செயல் அல்ல.

ஸ்டாலின் ஆட்சி செய்த காலத்தில், அல்லது போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், ஒரு சர்வாதிகாரியின் (முன்னர் லெனின், பின்னர் ஸ்டாலின்) எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, மக்களை வருத்தியதாக நினைப்பவர்கள் பலர். ஒரு புரட்சி நடக்கும் நாட்டில், எதிரெதிர் அரசியல் கருத்துக் கொண்ட அணிகளுக்கு இடையில் மோதல் நிலைமை உருவாகும். அதிலே ஒரு அணி அதிக பலம் பெறுவதும், அது பிற சிறிய குழுக்களை ஒடுக்குவதும் வரலாறு முழுக்க நடந்து வந்துள்ளது. கிரேக்க-ரோமன் சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவ மதம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்ட காலத்தில், பல்வேறு கிறிஸ்தவக் குழுக்கள் இயங்கின. 

கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு இடையில், மாறு பட்ட கோட்பாடுகள் இருந்தது மட்டுமல்ல, விவிலிய நூல் கூட தனித் தனியாக எழுதப் பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் பலம் பெற்ற குழுவினர், மற்ற குழுக்களை சேர்ந்த கிறிஸ்தவர்களை ஒடுக்கினார்கள். கிரேக்கம் முதல் எகிப்து வரையில் பல ஆயிரம் மாற்றுக் கருத்தாளர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதன் பிறகு தான், நாம் இப்போது அறிந்து வைத்திருக்கும் உலகளாவிய கிறிஸ்தவ மதமும், பொதுவான விவிலிய நூலும் உருவானது. அதாவது மதப் போரில் வென்றவர்கள், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை மூலம், தமது கருத்துக்களை உலகம் முழுவதும் ஏற்க வைத்தார்கள். அதை யாரும் இன்றைக்கு நினைவுகூருவதில்லை.

பிரிட்டனில் குரொம்வெல் மன்னராட்சிக்கு எதிராக நடத்திய புரட்சியினால் தான், பாராளுமன்றம் என்ற ஒன்று உருவானது. அப்போதும், "பாராளுமன்றத்திற்கான புரட்சியில்" பல இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர். மன்னரைக் கொன்று பாராளுமன்ற அமைப்பை ஸ்தாபித்தாலும், குரொம்வெல் ஒரு சர்வாதிகாரியாகத் தான் ஆட்சி நடத்தினார். இதே போன்ற நிலைமை, பிரெஞ்சுப் புரட்சியிலும் காணப் பட்டது. மன்னர், பிரபுக்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப் பட்டனர்.

பிரான்ஸ் முழுவதும் கத்தோலிக்க பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் கூட கொன்று குவிக்கப் பட்டனர். அது மட்டுமல்ல, ஒரு காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் நின்று பாடுபட்ட சக தோழர்கள், சில வருடங்களின் பின்னர் ரொபெஸ்பியரின்  சர்வாதிகார ஆட்சியில் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் போது இலட்சக் கணக்கான மக்களும், ஒரு பிரிவு புரட்சியாளர்களும் அழித்தொழிக்கப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் லிபரல் கொள்கைகளை ஐரோப்பா முழுவதும் பரப்பக் கிளம்பிய, நெப்போலியனின் போர்களில் கொல்லப் பட்ட பிற ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அது ஒரு கோடியை தாண்டும்.

ஒரு காலத்தில், சர்வாதிகாரிகளினால் மக்கள் மீது திணிக்கப் பட்ட கிறிஸ்தவ மதத்தையும், லிபரல் சித்தாந்தத்தையும் பின்பற்றுவதற்கு பெருமைப் படுவோர், "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" பற்றி பேசுவது அபத்தமானது. உலகம் முழுவதும், புரட்சிகர சமுதாயம் ஒன்று உருவாகும் காலத்தில், சர்வாதிகாரம், படுகொலைகள், குழு மோதல்கள் எல்லாம்  நடந்து கொண்டு தானிருக்கின்றன. நாம் இன்றைக்கு வாழும், "மேற்கத்திய விழுமியங்களை கொண்ட ஜனநாயக சமுதாயம்" கூட, சர்வாதிகாரம், படுகொலைகள், போர்கள் இல்லாமல் நடைமுறைச் சாத்தியமாகி இருக்காது. பலர் இந்த யதார்த்தத்தை உணர்வதில்லை. இன்றைக்கும் ஏராளமான உலக மக்கள் ஸ்டாலினை ஆதரிப்பதை, ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியை ஆதரிப்பதாக திரிபு படுத்துவது அபத்தமானது. அன்றைய சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஒரு நாட்டில் சோஷலிச பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணிந்த பின்னர் தான், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம்  மேம்பட்டது.

ஒரு நாட்டில், எப்படிப் பட்ட கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும், மக்களுக்கு அது ஏற்புடையதாக இல்லாவிட்டால், எதிர்த்துக் கிளர்ச்சி செய்வார்கள். மக்கள் எழுச்சியை எந்த அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு அடிபணிந்து தான் செல்ல வேண்டும். ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்திலும், பெருமளவு மக்கள் அரசு இயந்திரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்துள்ளனர். அவர்களது கோபாவேசம் முழுவதும் புதிய பொருளாதாரக் கொள்கையினால் பலனடைந்த சிறு பிரிவினருக்கு எதிராக இருந்தது. 

அந்தக் கொள்கையின் முன்னெழுத்துகளால், “NEP காரர்கள்" என்று அழைக்கப் பட்ட பிரிவினர் மீது, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். கம்யூனிஸ்டுகளான போல்ஷெவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும், ஒரு தசாப்த காலமாக சோவியத் யூனியனில் முதலாளித்துவ-சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அதன் அர்த்தம், அடக்குமுறையை திணிக்கும் வர்க்கமும், அடக்கப்படும் வர்க்கமும் சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டது. புதிய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்க தலைமை பற்றி பேசிக் கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் முதலாளிகளால் சுரண்டப் பட்டுக் கொண்டிருந்தால், யாருக்குத் தான் கோபம் வராது?

மக்கள் தமது மனக் குமுறல்களை பல வழிகளிலும் காட்டினார்கள். தமது எதிர்ப்புக் குரல்களை சுவர்களில் எழுதினார்கள். நேரடியாக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்கள். தொழிற்சாலைகளில் நடந்த முறைகேடுகள், அதிகாரிகளின் ஊழல்கள், உணவுப் பற்றாக்குறை, வீட்டுப் பிரச்சினை போன்ற எல்லாவற்றையும், மக்கள் கடிதங்களில் விபரித்து எழுதினார்கள். நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் எழுச்சிகளும், வேலை நிறுத்தங்களும் வெடித்தன. (அந்தக் கடிதங்கள் எல்லாம் மொஸ்கோ நகரில், “Obshchestvo i vlast 1930, povestvovanie v dokumentakh” என்ற பெயரிலான ஆவணத்தில் இன்றைக்கும் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.)

ஒரு பக்கத்தில், ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடு காலத்திற்கு ஒவ்வாததாக கருதப் பட்டது. நிரந்தரப் புரட்சிக்கு காத்திருந்தால், மக்கள் தொடர்ந்தும் பட்டினி கிடக்க வேண்டியிருந்திருக்கும். மறு பக்கத்தில், புகாரினின் “சந்தை சோஷலிசக் கோட்பாட்டினால்" ஒரு பிரிவினர் மட்டுமே நன்மை அடைய முடிந்தது. (புகாரினின் கோட்பாடான சந்தை-சோஷலிச பொருளாதாரம், பிற்காலத்தில் டெங்சியாவோபிங்கினால் சீனாவில் கொண்டு வரப் பட்டது.) இதன் மூலம், ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவு செல்வம் சேர்ப்பதற்கு சுதந்திரம் கிடைத்தது. அதனால், நகரங்களில் சிறு முதலாளிகளும் (அல்லது தொழில் முனைவோரும்), கிராமங்களில் பணக்கார விவசாயிகளும் மட்டுமே நன்மை அடைந்தனர். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

(தொடரும்)


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 


ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

Tuesday, January 24, 2012

சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி


"பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது" என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், "சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது." என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள "பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி" அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது. இனவாத அமைப்புகளின் சுயரூபம் வெளிப்படும் தருணம் ஒன்றுண்டு. ஒரு நாட்டில், என்றைக்கு வர்க்கப் பிரச்சினை மேலெழுந்து வருகின்றதோ, அன்றைக்கு அனைத்து இனவாதிகளும் ஒரே அணியில் சேர்ந்து நிற்பார்கள். இதுவரை காலமும், ஜென்ம விரோதிகளாக பாவனை செய்து வந்த சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும், இன்று ஒரே நோக்கத்துடன் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணலாம். வர்க்கப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதை மறுப்பது மட்டுமல்ல, அதனை அடக்குவதிலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான எதிரி இடதுசாரிகள் என்பதால், அவர்கள் சிறிலங்கா அரசின் இருப்பை காப்பாற்றுவதற்காக பாடுபடுவார்கள். எந்தவொரு தமிழ் இனவாதிக்கும், சிறிலங்கா அரசை கவிழ்க்கும் எண்ணம் அறவே கிடையாது. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

டிசம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் லலித், குகன் என்ற இரண்டு சமூக ஆர்வலர்கள் காணாமல் போனார்கள். லலித் சிங்கள இனத்தையும், குகன் தமிழ் இனத்தையும் சேர்ந்தவர்கள். போர் நடந்த காலத்தில் காணாமல்போன மக்களை மீட்டுத் தருமாறு, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லலித், குகன் ஆகியோர் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள். கானாமல்போனோருக்காக போராடியவர்கள் காணாமல் போகும் அதிசயம் இலங்கையில் மட்டுமே நடக்கின்றது. யாழ் குடாநாடு சிறிலங்கா படையினரின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. இராணுவ அதிகாரத்தை மீறி, ஈ,எறும்பு கூட நுழைய முடியாது. அவ்வாறான இடத்தில் காணாமல் போனவர்களை மாதக் கணக்காக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு இராணுவமே பொறுப்பு. அந்த ஆர்வலர்கள் இருவரும் காணாமல் போகவில்லை. கடத்தப் பட்டுள்ளனர், என்றே மக்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப் பட்டது.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, சமாதானம் நிலவுவதாக, அரசு கூறி வரும் வேளையில், நிராயுதபாணிகளான இரண்டு ஆர்வலர்கள் கடத்தப் பட வேண்டிய காரணம் என்ன? அரசு இப்போது யாரைக் கண்டு அஞ்சுகின்றது? வைகோ அறிவித்தது போன்று, "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" ஆரம்பமாகி விட்டதா? காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காட்டி வரும் அலட்சியப் போக்கு, அந்த சாத்தியப் பாட்டை நிராகரிக்கின்றது. மேலும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" என்பது, தமிழ் உணர்வாளர்களை கிளர்ச்சியடைய வைத்து ஆதாயம் தேடும் மலின அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். போரின் இறுதிக் கட்டத்தில், காங்கிரஸ் அரசு சற்றே இறங்கி வந்ததாக நோர்வே கூறுகின்றது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டாமென்றும், அப்போது நடந்த பொதுத் தேர்தலில் பாஜக வெல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும், வைகோ தூது அனுப்பினார். வைகோவின் ஆலோசனைக்கு செவி மடுத்த புலித் தலைவர்கள், இறுதி வரை இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது, "பிரபாகரன் ஆகிய புலித் தலைவர்களை தப்ப விடாமல் தடுத்து பலி கொடுத்த," வைகோவின் துரோகம் குறித்து தமிழ் உணர்வாளர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயின் அறிக்கை அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது. "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" பற்றிய வைகோவின் அறிவிப்பு, அவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் முயற்சியே தவிர வேறில்லை. ஆகவே, வட இலங்கையில், தமிழ் தேசியம் தவிர, வேறொரு சக்தி, சிறிலங்கா அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி எது? எதற்காக தமிழ் ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கின்றன?

"வட பகுதி மக்கள், நீண்ட காலமாக இடதுசாரி அரசியலை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டாதவர்கள். தமிழரின் உரிமைப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்க விரும்புகிறோம்." - ஜேவிபி யில் இருந்து பிரிந்த மத்திய குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார். "இலங்கையில் வர்க்கப் போராட்டம் சாத்தியமேயில்லை, தமிழர்களுக்கு தேசிய விடுதலை தவிர வேறெந்த அரசியல் குறித்தும் அக்கறை அற்றவர்கள்." தமிழ் தேசியவாதிகளைக் கேட்டால் அப்படித் தான் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கொள்கை சிறந்தது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது ஆபத்தானது. தமிழ் தேசிய உணர்வை விட, தமிழ் மக்களின் வர்க்கப் பிரச்சினை, புலிகளின் முப்பதாண்டு கால ஈழப்போருக்கு உறுதுணையாக இருந்தது. வசதி படைத்தோர் அதிகமாக வாழும் யாழ் மாவட்டத்தை விட, பொருளாதாரத்தால் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் போராளிகளானார்கள். வசதி படைத்த மக்கள், வெளிநாடுகளுக்கு சென்று, யுத்த செலவுகளுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர், வெளிநாட்டு பணவரவும் நின்று விட்டது. புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், ஒன்றில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள், அல்லது இராணுவ புலனாய்வுத் துறையில் பணியாற்றுகின்றனர். உண்மையில், அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள், ஆயிரக் கணக்கான சாதாரண போராளிகள் தான். இராணுவத்திடம் சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வேலை வாய்ப்பின்றி கஷ்டப் பட்டார்கள். அவர்கள் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என்பதால், பெற்றோராலும் உதவி செய்ய முடியாத நிலைமை.

புலிகள் அமைப்பும் அழிந்து விட்ட பிறகு, புலம்பெயர்ந்த தமிழ் சகோதரர்களால் கைவிடப் பட்ட நிலையில், முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசு, மேற்குலக நிதியில் நடக்கும் புனர்வாழ்வு நிலையங்களில் சில காலம் வைத்திருந்து, ஏதாவது தொழிற்பயிற்சியை கற்பித்து விட்டு விடுவித்து விடுகின்றது. சிறு தொகையினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும், அரசாங்க வேலைகளும் வழங்கப் பட்டன. பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். முன்னாள் போராளிகளில் சிலர் அரச இராணுவத்தின் வீரர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால், ஒரு காலத்தில் எதிரியாக கருதி போரிட்ட சிறிலங்கா இராணுவத்தில் எல்லோரும் போய்ச் சேர மாட்டார்கள். சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான அடக்குமுறை காரணமாக, தாமாகவே புலிகள் அமைப்பில் சேர்ந்த போராளிகள் பலருள்ளனர். அவர்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் கோர முகத்தையும், அதன் அடக்குமுறைக் கருவியான இராணுவத்தையும் மிகச் சரியாக இனங் கண்டவர்கள்.

ஒரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே அரசியல் கட்சிகள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தின. தமிழ்க் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சி தோன்றிய காலத்திலும், அது "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" என்று தான் பெயரிட்டுக் கொண்டது. தமிழீழத் தமிழர்கள் என்பதை விட, அகில இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொண்டது. பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சியின் தோற்றமும், அவர்களின் தமிழீழ கோரிக்கையும் ஈழப்போர் வரை செல்வாக்கு செலுத்தியது. கடந்த முப்பதாண்டு காலமாக, இடதுசாரிக் கட்சிகளை ஓரங் கட்டுவதிலே தான், தமிழ் தேசியக் கட்சிகள் குறியாக இருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம், "தமிழ் தேசியக் கோட்பாடு புனிதமானது, அதற்கு இடதுசாரிகள் உடன்படுகிறார்கள் இல்லை." என்பது தான். "தமிழீழம் சாத்தியமா? இல்லையா?" என்பது குறித்து, யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்களில் இடதுசாரிகளுடன் விவாதங்கள் நடந்தன. இதற்கிடையில், தெற்கில் ரோகன விஜேவீர தலைமையில் குட்டி-பூர்ஷுவா இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். அவர்களது மார்க்சியமும்- சிங்கள தேசியவாதமும் கலந்த புதிய இயக்கமான ஜேவிபியில் தமிழ் மக்களுக்கு இடம் இருக்கவில்லை. தோல்வியுற்ற 1971 கிளர்ச்சியின் பின்னர், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் தமிழர் உரிமைப் பிரச்சினை குறித்து கவனம் எடுத்தனர். அவ்வாறு சென்றவர்களில் லயனல் போபகே போன்ற சிலரைக் குறிப்பிடலாம்.

1988 -1989 காலத்திய, ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர், மேலும் சிலர் பிரிந்து சென்றனர். சுனந்த தேசப்பிரிய போன்ற ஊடகவியலாளர்கள் அத்தகையோரில் முக்கியமானவர்கள். லயனல் போபகே, சுனந்த தேசப்பிரிய போன்றோர், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு சிறிலங்கா அரசையும், ஜேவிபி யையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜேவிபி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக, இனவாத அரசியல் பேசி வந்தது. மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய நாளில் இருந்து, ஜேவிபியின் தனித்துவமான இனவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார். அதனால், ஜேவிபிக்கு ஆதரவளித்த இனவாத சிங்கள வாக்காளர்கள், ராஜபக்ச பக்கம் திரும்பி விட்டனர். விமல் வீரவன்ச தலைமையில் ஒரு குழு, ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று ஆளும் கட்சியுடன் இணைந்தது. அதற்கும் ராஜபக்சவின் சாணக்கியம் (சூழ்ச்சி) காரணம் என்று நம்பப் படுகின்றது. ஒரு காலத்தில், மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்பட்ட ஜேவிபி, இன்று மிகவும் பலவீனமடைந்து காணப் படுகின்றது. அந்த நிலையில், அண்மையில் மேலும் ஒரு பிளவு. இந்த முறை கட்சி இரண்டாக உடைந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் இரண்டு பக்கமும் சம அளவில் பிரிந்து சென்றனர்.

நீண்ட காலமாக, ஜேவிபியின் வெளிநாட்டு தொடர்பாளராகவும், நிதி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் செயற்பட்டவர் பிரேம்குமார் குணரத்தினம். புலிகள் இயக்கத்தின் ஆயுத, நிதி விநியோகத்தை நெறிப் படுத்திய கேபி போன்று, ஜேவிபிக்கு குணரத்தினம் இருந்தார். இவர் ஒரு மேற்கிலங்கைத் தமிழர். சிங்கள மொழியில் கல்வி கற்றதால், தமிழ் எழுதத் தெரியாது. ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் திருகோணமலையில் செயற்பட்ட நேரம், சில தமிழ் தேசிய போராளிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார். இதனால், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளுக்கும், குனரத்தினத்திற்கும் தொடர்பிருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகப் படுகின்றது. அதனை உறுதிப் படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், குணரத்தினம் பற்றிய விபரங்கள், ஜேவிபி யில் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும். ஜேவிபி, இரண்டு சமாந்தரமான அமைப்புகளாக செயற்படுகின்றது. ஒன்று, வெளிப்படையாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர்கள். இரண்டு, மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் தலைமறைவாக இயங்கும் உறுப்பினர்கள். உண்மையில், தலைமறைவு உறுப்பினர்கள் தான் இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்றனர். 1971 ல் ஒரு தடவை, 1989 ல் மறு தடவை, ஜேவிபி இயக்கம் அரச படைகளினால் அழிக்கப் பட்டது. அப்போது அரச ஒடுக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த உறுப்பினர்களை ஒன்று சேர்ந்தது, இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பினார்கள்.

குணரத்தினம் தலைமையில் இரகசியமாக இயங்கிய அமைப்பினால் தான், மிகக் குறுகிய காலத்தினுள் அந்த சாதனையை நிறைவேற்றினார்கள். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த குணரத்தினம், சில வருடங்களுக்கு முன்னர், சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், தாயகம் திரும்பினார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்த போதிலும், அரசு எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. குணரட்ணத்தின் அண்மைய புகைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே, கிழக்கிலங்கையில் இருந்து கிடைத்த தகவல்கள், அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, கருணா குழுவினர் பிரிந்திருந்த நேரம் அது. பிரபாகரன் தலைமையிலான புலிகளினால், கருணாவின் கிளர்ச்சி ஒடுக்கப் பட்டது. இதனால் அரசியல் வாழ்வை விட்டு ஒதுங்கிய கருணா ஆதரவுப் போராளிகள், பணத் தேவைக்காக தம்மிடமிருந்த இயந்திரத் துப்பாக்கிகளை விற்று விட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை வாங்குவதில், ஜேவிபி ஆர்வம் காட்டியுள்ளது. இந்தச் செய்தி காதுக்கெட்டியவுடன், அரச மட்டத்தில் கலக்கம் ஏற்பட்டது. தேசிய நீரோட்டத்தில் இணைந்து, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் ஜேவிபிக்கு ஆயுதங்கள் எதற்கு? எதிர்காலத்தில் அரசை கவிழ்ப்பதற்காக, இரகசியமாக திட்டம் தீட்டுகிறார்களா?

(இன்னும் வரும்)



மேலதிக தகவல்களுக்கு :
1.‘Military abducted Lalith, Kugan’
2.Love of Democracy and Securing Human Rights, Are these an Offence in Sri Lanka?
3.Former Tigers 'threatened' in north
4.'Ex-LTTE cadres are with us' Jana Aragala Group

Friday, July 29, 2011

ஏழை யூதரின் எழுச்சி! இஸ்ரேலில் வர்க்கப் புரட்சி!!

"தேனும்,பாலும் ஆறாக ஓடும் நாடாக, ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட" இஸ்ரேலில் வர்க்கப் போராட்டம். மூன்று லட்சம் இஸ்ரேலியர்கள் சமூக நீதி கோரி வீதியில் ஆர்ப்பாட்டம். சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு. இஸ்ரேலில் ஆரம்பித்துள்ள மக்கள் எழுச்சியை காட்டும் வீடியோ ஆதாரம்.

விலைவாசி, வீட்டு வாடகை என்பன உயர்ந்து கொண்டே போகின்றன. அதற்கு ஈடுகட்டுமளவு ஊதியம் இல்லை. சம்பளத்தை அதிகரிக்காதது மட்டுமல்ல, பல முதலாளிகள் மாதக் கணக்காக சம்பளப் பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். பொருளாதார சுமையால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பதாயிரம் ஏழை யூதர்கள், கடந்த வாரம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக, டெல் அவிவ் நகரின் மத்தியில் கூடாரங்களை அமைத்து போராடி வருகின்றனர். துனிசியாவில், எகிப்தில் இடம்பெற்ற அரபுலக மக்கள் எழுச்சி போன்று, இஸ்ரேலிலும் முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். இஸ்ரேலிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடைசியாக நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கு பற்றியுள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாஹு, போலந்துக்கு செல்லவிருந்த விஜயத்தை இரத்து செய்துள்ளார். தேசிய பத்திரிகை (Haaretz ) ஒன்றின் கருத்து கணிப்பில், 87 % இஸ்ரேலியர்கள் போராட்டத்தை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவத் துறை ஊழியர்கள், தாதிகள், வைத்தியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

(மேலதிக செய்திகள் தொடரும்....)