Showing posts with label போராளிகள். Show all posts
Showing posts with label போராளிகள். Show all posts

Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

Saturday, January 07, 2017

முன்னாள் போராளிகளின் உரிமைகளுக்காக "எழுக தமிழ்" வேலை நிறுத்தம்!


கிளிநொச்சி - இரணைமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள் ஒன்று சேர்ந்து தமக்கு வேலை வாய்ப்பு வேணும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பலர், தங்கள் கைக்குழந்தையுடன் வந்து நின்றனர்.

2.1.2017 அன்று, காலை 10.30 மணியளவில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள், தாங்கள் புனா்வாழ்வுப் பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள். புனா்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறும் கேட்டனர்.

ஈழப் போர் முடிந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும், முன்னாள் புலிப் போராளிகள் வேலை வாய்ப்பில்லாமல் வறுமையில் வாடுவது தொடர்கதையாக உள்ளது. போர் நடந்த காலத்தில், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கோடி கோடியாக பணம் வந்து குவிந்து கொண்டிருந்தது. அதனால் அந்தக் காலத்தில் அங்கவீனர்களான முன்னாள் போராளிகளையும் பராமரிக்கும் பொறிமுறை இருந்தது. அவர்களுக்கான இலகுவான வேலை வாய்ப்புகளும் வழங்கப் பட்டன.

ஐந்து வருடங்கள் போராளியாக கடமையாற்றியவர்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்கப் பட்டிருந்தது. முன்னாள் போராளிகளாக கருதப் பட்ட அவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் இருந்தன. இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவெனில், விடுதலைப் புலிகள் இயக்கமே மிகப் பெரிய வேலை வழங்குனராக இருந்தது. அவர்களால் நடத்தப் பட்ட பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு வகைப் பட்ட தொழில் வாய்ப்புகள் இருந்தன.

சிறிலங்கா அரசின் முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் வேலை வாய்ப்புகளையும், சம்பளத்தையும் சந்தையே தீர்மானித்தது. அதே மாதிரியான பொறிமுறை புலிகளின் "நடைமுறை தமிழீழ அரசில்" இருக்கவில்லை. எல்லாவற்றையும் புலிகள் இயக்கத் தலைமையே தீர்மானித்தது. எந்த நிறுவனம் நடத்த வேண்டும்? எத்தனை தொழில் வாய்ப்புகள்? யாருக்கு வேலை கொடுக்க வேண்டும்? சம்பளம் எவ்வளவு? இது எல்லாவற்றையும் அவர்களே தீர்மானித்தார்கள்.

போர் முடிந்த பின்னர், பல்லாயிரக் கணக்கான முன்னாள் போராளிகளை பராமரிப்பதற்கான பொறிமுறை இல்லாமல் போனது. அதாவது அவர்கள் இப்போது போராளிகள் அல்ல. ஆகையினால் அவர்களை வைத்து பராமரித்து வந்த முகாம் என்ற அமைப்பு தற்போது இல்லை. அப்படியானால் அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக வேலை செய்ய வேண்டும். ஆனால், இலங்கையின் முதலாளித்துவப் பொருளாதார கட்டமைப்பில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதில்லை. புதிய தொழில்களை உருவாக்குவதற்கான பொறிமுறைகளும் இல்லை. அதை சந்தை தான் தீர்மானிக்க வேண்டும். இதன் மூலம் அரசு தனது கடமையை தட்டிக் கழிக்கிறது.

சிறிலங்கா அரசு முன்னாள் போராளிகளை இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு முகாம்களில் வைத்திருந்து, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தது. அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளும், அவற்றின் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வந்தன. அவர்கள் வெளியே வந்த பின்னர் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. அவர்கள் போராளியாவதற்கு முன்பிருந்த அதே சமுதாய அமைப்பு இப்போதும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. பெரும்பாலான முன்னாள் போராளிகள் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு உதவும் அளவிற்கு பெற்றோரிடம், அல்லது உறவினரிடம் வசதி இருக்கவில்லை. அவர்களும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழைகள் தானே?

புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுக்கும் கடமை தனக்கு இருப்பதாக அரசு கருதுவதாக தெரியவில்லை. நீங்களாகவே வேலை தேடிக் கொள்ளுங்கள் என்று கைவிட்டு விட்டது. அதே நேரம், தமிழர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த நிதி ஒரேயடியாக நின்று விட்டது. உள்ளூர் தமிழ் முதலாளிகள், அல்லது தொழில் முனைவோர் யாரும், முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த விரும்பவில்லை.

உள்ளூர் தமிழ் முதலாளிகள் முன்னாள் போராளிகளை புறக்கணிப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. புலிகளின் ஆட்சிக் காலத்தில் போராளிகளுக்கு பெரும் மதிப்பு இருந்தது. சிலர் பொது மக்களின் மீது அதிகாரத்தை பிரயோகிப்பவர்களாக இருந்தனர். அப்போது பலரின் மனதில் ஏற்பட்ட வெறுப்பை வைத்து இப்போது பழிவாங்குகிறார்கள். இரண்டாவது காரணம், முன்னாள் போராளிகளுடன் தொடர்பு கொள்ள பலர் அஞ்சுகின்றனர். தேவையில்லாமல், புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்புக்கு ஆளாக வேண்டி வரும் என நினைக்கிறார்கள். அது மட்டுமல்ல, தற்போது முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதாகவும் சந்தேகப் படுகிறார்கள்.

இது போன்ற காரணங்களினால், ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் முன்னாள் போராளிகள் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் அவலம் தொடர்கின்றது. இந்த இடத்தில் ஒரு நியாயமான கேள்வி எழலாம். வேலையில்லாதவர்கள் எவ்வாறு இவ்வளவு காலமும் உயிர் வாழ முடிந்தது? சிலநேரம் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்திருக்கலாம். ஆனால், போர் முடிந்த பின்னர் அவற்றின் உதவிகள் வர வர குறைந்து கொண்டே செல்கின்றன. அப்படியானால் வேறென்ன வழி இருந்தது?

இலங்கை மாதிரியான வறிய நாடுகளில் வேலை இல்லாமல் ஒருவர் உயிர் வாழ முடியாது. அவர் இல்லாவிட்டால் யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் அவருக்காக வேலை செய்வார். பெரும்பாலும் இவை தற்காலிகமான வேலைகளாக இருப்பதால், வறுமையில் இருந்து மீள முடியாத நச்சுச் சுழல் ஒன்றிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

"தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை பெற வேண்டும்" என்று இருபத்திநான்கு மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் யாரும், முன்னாள் போராளிகளின் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. சக தமிழனின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்தனர். கிளிநொச்சியில் நடந்த முன்னாள் போராளிகளின் வேலை தேடும் போராட்டம் பற்றிய தகவல், சமூக வலைத் தளங்களில் பரவலாக பலரை சென்றடைந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த தமிழ்த் தேசியவாதிகள் கன்னாபின்னாவென்று உளறத் தொடங்கினார்கள். இருப்பினும், ஆய்வு மனப்பான்மை கொண்ட தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் நிலைத்தகவலில் கொடுத்த விளக்கம் மட்டும் பிரச்சினைக்கான தீர்வு பற்றியதாக இருந்தது. தீவிர வலதுசாரி தமிழ்த் தேசிய இயக்கமான தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளராக அறியப்படும் அந்த ஊடகவியலாளர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:

//7 வருடங்களுக்கு முன்னர் எந்த இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதே இராணுவத்திடம் மீள்வாழ்வுக்கு கையேந்தி நிற்க வேண்டிய நிலையை முன்னாள் போராளிகள் எதிர்நோக்கியிருக்கின்றனர். வெளிச்சூழலில் அவர்களுக்குப் பொருத்தமான வேலைகள் இல்லாமயே இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவிடம் வேலை கேட்டுச் செல்லக் காரணம் எனச் சொல்லியிருக்கின்றனர். அப்படியாயின் சிவில் பாதுகாப்பு படையினரிடமே முன்னாள் போராளிகளுக்குப் பொருத்தமான வேலைகள் உண்டு. சிவில் பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் வேலைகள் என்னவெனில், விவசாய பண்ணைகள் செய்தல், கல்லறுத்தல், கட்டுமானப்பணிகளில் ஈடுபடல், உயர்தரம் வரை கல்வி கற்றிருந்தால் முன்பள்ளி ஆசிரியர் இவைகளைத் தான் முன்னாள் போராளிகள் தங்களுக்குப் பொருத்தமான வேலைகள் என்கின்றனர். இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா? தாராளமாகவே உண்டு. வன்னியில் பாரம்பரியமான விவசாய கிராமங்களில் விவசாய நடவடிக்கைகளைப் பலரும் கைவிட்டிருக்கின்றனர். அதற்குப் பிரதான காரணம் கூலியாட்கள் இன்மையே. நாளொன்றுக்கு 1500 ரூபா சம்பளம் கொடுத்தும் கூலியாட்களைப் பெறமுடியாத சூழல் இருக்கின்றது. தொழிலாளிகள் இன்மையால் உப உணவுப் பயிர்ச்செய்கை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதையும் அவதானிக்கின்றேன்.// (- Jera Thambi; https://www.facebook.com/JERA.jeyarajh/posts/1219723188111232?pnref=story)

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்களப் பேரினவாத அரசின் தமிழர் விரோதப் போக்கை அம்பலப் படுத்த தயங்காத கடும்போக்கு ஊடகவியலாளர், இந்த விடயத்தில் மட்டும் அரசைக் கண்டிக்காமல் மென்போக்குடன் நடந்து கொள்வது ஆச்சரியத்திற்குரியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேலை கொடுக்காத அரசை திட்டித் தீர்ப்பார் என்று எதிர்பார்த்தால், நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

"ஏய், சிங்கள அரசே! முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடு!" என்று சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அறச்சீற்றம் கொள்ள வேண்டிய கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள், மென்போக்காக அடக்கி வாசிக்கிறார்கள். "எழுக தமிழ்" என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்த் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தி வட மாகாணத்தை ஸ்தம்பிதமடைய வைத்திருக்கலாம். அவ்வாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், முன்னாள் போராளிகளை தனியார் துறையில் வேலை தேடுமாறு அறிவுறுத்துவதன் மூலம் ஒரு ஒடுக்குமுறை அரசை பாதுகாக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா?

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவு அரச இயந்திரத்தின் ஓர் அங்கம் என்பது அவர் அறியாதது அல்ல. முன்னாள் போராளிகள் இராணுவத்தில் போர்வீரர்களாக சேர்வதற்காக அங்கே வேலை கேட்டுச் செல்லவில்லை. அதை மேற்படி ஊடகவியலாளர் உறுதிப் படுத்துகின்றார். ஆனால், "எதற்காக அரசிடம் வேலை கேட்டு கையேந்துகிறீர்கள்?" என்பது தான் அவரது "ஆதங்கம்"! அதனால் தான் "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" என்று கேட்கிறார்.

சிங்கள அரசு நிறுவனத்தில் உத்தியோகம் பார்க்கும் பல தமிழ்த் தேசியவாதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளர்களாக உள்ளனர். அதற்கு ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும். தமிழ்த் தேசிய ஆர்வலர் ஒருவர், பாடசாலை ஆசிரியராக இருந்தாலும், வட மாகாணத்தின் கீழான நிறுவனம் ஒன்றில் வேலை செய்தாலும், அவர் அரசுக்குவேலை செய்கிறார். அதாவது சிங்கள அரசிடம் கைநீட்டி சம்பளம் வாங்குகிறார். பல்கலைக்கழக பட்டதாரிகளான இவர்களுக்கு, "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" சிங்கள அரசுக்கு கீழே அடிமையாக வேலை செய்வதை விட, ஒரு தமிழ் முதலாளியின் கீழ்  வேலை செய்வதை பெருமையாகக் கருதவில்லையா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் அரசுக்கு வரி கட்டுகிறார்கள். நேரடியான வரிகள், மறைமுகமான வரிகள் என்று பலவுண்டு. அரசு மக்களிடம் இருந்து அறவிடும் வரிப் பணத்தை என்ன செய்கிறது? அதை மீண்டும் மக்களுக்கே செலவிட வேண்டாமா? ஆசிரியராக அரசு உத்தியோகம் பார்க்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எங்கிருந்து சம்பளம் வருகின்றது? மக்களிடம் இருந்து எடுக்கும் வரிப்பணம் தானே சம்பளமாக மாறுகின்றது?

பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்கலாம் என்றால், பத்தாம் வகுப்பை முடிக்காத முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுப்பது எப்படி தவறாகும்? அரசிடம் வேலை கேட்டு போராடுவது எப்படித் தவறாகும்? தனது பிரஜைக்கு வேலை கொடுப்பது அரசின் கடமைகளில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக, அதன் சாத்தியப்பாடுகள் குறைவு என்பதால், தனிநபருக்கு வேலை கொடுக்காததற்காக அரசின் மீது வழக்குப் போட முடியாது. ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

ஒரு தொழிலை பெற்றுக் கொள்வதும், வறுமையில் இருந்து மீளுவதும் மனித உரிமைகள் இல்லையா? குறிப்பாக, அவை தமிழர்களின் உரிமைகள் இல்லையா? அதையெல்லாம் புறக்கணித்து விட்ட, எந்த உரிமைகளுக்காக போராடுகின்றீர்கள்? மனிதன் வாழ்வதற்கான உரிமை தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது.

வாழ்வாதாரத்திற்காக தான் முன்னாள் போராளிகள் போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு வேலை கொடு என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமா? அரசு இறங்கி வரவில்லை என்றால், "எழுக தமிழ்" கோஷத்துடன் வேலை நிறுத்தம் ஒன்றை அறிவியுங்கள். சிங்களப் பேரினவாத அரசை பணிய வைக்கக் கூடிய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது ஏன்?

Tuesday, December 27, 2016

வறுமை காரணமாக முஸ்லிமாக மதம் மாறிய முன்னாள் புலிப் போராளி!

வன்னியில் வாழ்ந்த முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை.

லண்டன் IBC தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப் படத்தில் காட்டப் பட்ட அந்தத் தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். (ஈழத் தமிழன் வெட்கப்படவேண்ட ஒரு வீடியோ) இதைக் காண நேரும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், "கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு கம்பு சுற்றக் கிளம்புவார்கள்.

அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பிய அறிவிப்பாளர் "இது ஒரு நுணுக்கமான இனவழிப்பு" என்று பிதற்றினார். இதைக் கூறிய நிராஜ் டேவிட் என்ற அந்த அறிவிப்பாளர் ஒரு கிறிஸ்தவர்.முன்பொரு தடவை "தமிழர்கள் யூதர்களாக (மதம்) மாற வேண்டும்" என்று ஆலோசனை கூறியவர். இஸ்ரேலையும், யூதர்களையும் புகழ்ந்து கட்டுரைகள் எழுதிக் குவித்தவர். முஸ்லிமாக மாறும் தமிழர்கள் "இன்னொரு இனமாகி" விடுவார்கள். அதனால் அது ஒரு "நுணுக்கமான இனவழிப்பு" என்று விளக்கம் கூறுகிறார். முன்பு நிராஜ் டேவிட்டின் ஆலோசனையை கேட்டு தமிழர்கள் யூதர்களாக மாறி இருந்தால், அது இனவழிப்பு ஆகாதா? ஏன் இந்த இரட்டை வேடம்?

பரமேஸ்வரி சீவகன் அவர்கள் தயாரித்துள்ள இந்த ஆவணப் படத்தில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே பேட்டி கண்டுள்ளனர். இவர்களைப் போன்று பலர் இருக்கிறார்கள் என்பதை அவரே கூறி இருந்தார். அதாவது, இந்த ஆவணப் படத்தில் காட்டப் படுபவர் மட்டுமல்லாது, ஏற்கனவே பல முன்னாள் போராளிகள் முஸ்லிம்களாக மதம் மாறியுள்ளனர்.

அதற்கான காரணத்தை ஆராய்ந்த மனநல மருத்துவர் பின்வரும் காரணங்களை கூறினார். முன்பு அவர்கள் சார்ந்திருந்த சைவக் கோயில்களில் இது போன்ற பிரச்சனைகளை கையாளும் நடைமுறை எதுவும் இல்லை. அது ஒரு பெரிய குறைபாடு. மேலை நாடுகளில் இருப்பது மாதிரி மனோவியல் ஆலோசனைகள் வழங்கும் பொறிமுறைகளும் போதுமான அளவிற்கு இல்லை. நகர்ப் புறங்களில் வாழும் வசதி படைத்தவர்களுக்கு கிட்டும் இது போன்ற சலுகைகள், போரினால் பாதிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் மதம் மாறுவதன் மூலம் பல நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிகின்றது.

முஸ்லிமாக மாறிய முன்னாள் போராளியும் அதனை தெளிவாக குறிப்பிடுகின்றார் போரில் பாதிக்கப் பட்டு நோயாளியான அவருக்கு உதவுவதற்கு இந்து சமூகத்தில் யாரும் முன்வரவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவுடன் இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, இங்கு சமூகத்தில் ஒதுக்கப் பட்டவர்கள் ஆதரவின்மை காரணமாக மன அழுத்தங்களுக்கு ஆளாவது கவனிக்கத் தக்கது. அவர் எதிர்பார்க்கும் ஆதரவும், அரவணைப்பும் புறக்கணிக்கப் படும் பொழுது, அது கிடைக்கும் இடத்தை நோக்கிச் செல்வதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேலும் முஸ்லிமாக மதம் மாறியதால், புலனாய்வுத்துறையினரின் சந்தேகக் கண்களில் இருந்து தப்பி நிம்மதியாக வாழ முடிந்துள்ளது.

இது போன்றதொரு சம்பவத்தை எங்கள் ஊரிலேயே கேள்விப் பட்டிருக்கிறேன். எனது உறவினர்களில் ஒருவர், இறுதியுத்தத்திற்கு முன்னர் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்து வந்தார். அவரைத் தேடி வீட்டுக்குச் சென்ற படையினர், கைது செய்து அழைத்துச் சென்ற பின்னர் காணாமல்போயுள்ளார். அதற்குப் பின்னர், அவரது மனைவியும் பிள்ளைகளும் அநாதரவாக நின்றனர். மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த நிலைமையில், அந்தப் பெண் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார்.

முன்பு கிழக்கு மாகாணத்தில் பெருமளவு காணப்பட்ட அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள், தற்போது வட மாகாணத்திலும் பல்கிப் பெருகி உள்ளன. அதில் சேர்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் அல்லது ஒடுக்கப் பட்ட சமூகத்தினர். ஆவணப் படத்தில் வரும் மனோதத்துவ நிபுணர் சொல்வதைப் போல, இதன் மூலம் அவர்களுக்கு ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது. இது ஒரு மனோவியல் பிரச்சினை. அதைத் தீர்ப்பதற்கான சமூகக் கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும். ஆனால், பாமர மக்களுக்கு தெரிந்த ஒரே வழி மதம் மாறினால் ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது என்பது தான்.

சிவசேனை போன்ற இந்து மதவாதிகள், இந்தப் பிரச்சினையை கையாளத் தெரியாமல், "மதம் மாற்றுகிறார்கள்" என்று பிற மதங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. மாறாக, இருக்கும் பிரச்சினையை கூர்மைப் படுத்தவே அது உதவும். இங்கே பிரச்சினை மதம் அல்ல. இலங்கை போன்ற வறிய நாடுகளில், ஆதரவற்றவர்களை தாங்கிப் பிடிக்கும் நிறுவனமோ அதற்கான நடைமுறையோ எதுவும் இல்லை.

மேற்கத்திய நாடுகளில், அரசு அதற்கான வழிவகைகளை செய்து கொடுத்துள்ள படியால், அங்கு யாரும் மதம் மாறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது, ஒரு சோஷலிச நாட்டில் அல்லதுமேலைத்தேய நலன்புரி அரசுக்களில் நடைமுறையில் இருந்தது போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பு அவசியமாகின்றது. அதைப் புறக்கணித்து விட்டு, வெறுமனே "கட்டாய மத மாற்றம் நடக்கிறது" என்று குற்றம் சாட்டுவதால் பயனேதுமில்லை. இலங்கையில் உள்ள தமிழ் பேசும் சிவில் சமூகம் தொடர்ந்தும் ஏழைகளை புறக்கணித்து வந்தால், அவர்களும் தமக்குத் தெரிந்த மதம் மாறும் வழிகளை பின்பற்றுவதை தடுக்க முடியாது.

வாய் நிறைய தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே, தமது சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இரக்கப் படாத கயவர்கள் இவர்கள். தமது இனத் துரோகத்தை மறைப்பதற்காக எந்த பித்தலாட்டத்தையும் செய்யத் தயங்காதவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் வசதிபடைத்த புலி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு முன்னாள் புலிப் போராளிக்கு உதவி செய்தாலே போதும். அதையும் இந்த ஆவணப் படமே கூறுகின்றது.

ஈழத் தமிழர் மத்தியில் உள்ள ஏற்றத் தாழ்வை மூடி மறைத்துக் கொண்டே "எல்லோரும் தமிழர் என்று ஒரே இனமாக சிந்திக்கிறார்கள்" என்று பிதற்றிக் கொண்டிருக்கும் வீணர்கள் உண்மைகளை பேசப் போவதில்லை. இன்று கைவிடப் பட்ட முன்னாள் புலிப் போராளிகள் வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.

ஈழப் போர் முடிந்தவுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த போராளிகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக ஒதுக்கப் பட்டனர். எந்த நேரமும் சந்தேகப் படும் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடி ஒரு பக்கம். வேலை வாய்ப்பில்லாத படியால் தொடர்ந்தும் வறுமைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் மறுபக்கம். அதேநேரம், போர் அனுபவங்களால் ஏற்பட்ட மன அழுத்தங்களால் மனநிலை பாதிக்கப் பட்டுமுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு, எந்தவொரு இந்து மத அமைப்போ அல்லது தமிழ்த் தேசிய அமைப்போ முன்வரவில்லை. அப்படியான நிலையில் அவர்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மத மாற்றத்தை எதிர்ப்பவர்கள் முதலில் வறுமையை ஒழிக்க முன்வாருங்கள். அதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயுங்கள். இல்லாவிட்டால் அங்கு நடக்கும் மதமாற்றத்திற்கு, நீங்களும் ஒரு வகையில் உடந்தை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

Saturday, July 11, 2015

பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்


முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர். அது எந்தளவு தூரம் உண்மை என்பதை சம்பந்தப் பட்டவர்கள் தான் கூற வேண்டும்.

தற்போது பாராளுமன்ற பொதுத் தேர்தல் வரும் நேரம், எதிர்பாராத விதமாக முன்னாள் புலிப் போராளிகளின் விடயம் சூடு பிடித்துள்ளது. அவர்கள் தனிக் கட்சியாக பதிவு செய்தமை ஒரு முக்கிய காரணம். அரசின் ஆசீர்வாதத்துடன், கூட்டமைப்பு பிரமுகரான வித்தியாதரன் அவர்களை அணிசேர்த்து நிறுவனமயப் படுத்தி உள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர், தமிழ் சமூகத்தால் இரக்கமற்று ஒதுக்கப் பட்டு, பல அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் அவலம் புறக்கணிக்கத் தக்கதல்ல. இதிலே வர்க்கம் சார்ந்த பிரச்சினை இருப்பதை நாங்கள் மறுக்க முடியாது. வசதியான குடும்பங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள், ஏதோ ஒரு வகையில் நன்றாக வாழ்கிறார்கள். ஒன்றில் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உள்நாட்டில் ஏதாவது தொழிலை தேடிக் கொண்டுள்ளனர். அவர்களது பெற்றோர் வசதியாக இருந்த படியால் தான் அதெல்லாம் சாத்தியமானது.

இங்கே நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முன்னாள் போராளிகள், வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள். போராளியாவதற்கு முன்னரும், போர் முடிந்த பின்னரும், அவர்களது குடும்ப வறுமை மாறவில்லை. சிலநேரம், அவர்களது ஏழைப் பெற்றோர் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டிருப்பார்கள். தமது பிள்ளைகளுக்கு உள்ளூரில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தரும் அளவு வசதியற்ற பெற்றோரால், வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமா?

முன்னாள் புலிப் போராளிகளின் வர்க்கப் பிரச்சினை, எம்மில் பலரின் கவனத்தைப் பெறாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அவர்களால் ஏற்படக் கூடிய ஆபத்தை, அரசு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது. எம்மில் பலர் தவறாக நினைப்பது போல, புலிகளின் முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக நடந்ததற்கு காரணம், "தமிழ் இன உணர்வு" மட்டும் அல்ல. அதுவும் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல.

ஈழப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் கவனிப்பதில்லை. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பின்தங்கிய நிலைமை. குறிப்பாக, வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் நிலவிய வறுமை. சிங்களம், தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான நிலத்திற்கான போராட்டம். இது போன்ற பல காரணங்கள் போராளிகளை உருவாக்கி விட்டிருந்தன.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் எதுவும் இன்று வரையில் தீர்க்கப் படவில்லை. முதலாளித்துவ நலன் சார்ந்த சிறிலங்கா அரசு, அவை குறித்து பாராமுகமாக இருக்கிறது. இனப்பிரச்சினை தீர்க்கப் பட வேண்டுமானால், பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டி இருக்கும். அது மறுபக்கத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலையும் வெளிப்படுத்தி விடும். ஆகவே, இனப்பிரச்சினை தொடர்ந்திருக்க வேண்டுமென்று தான், முதலாளித்துவ- சிறிலங்கா அரசும் எதிர்பார்க்கும்.

இது போன்ற சூழ்நிலை, மீண்டும் ஒரு புலிகள் இயக்கத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் தூண்டி விடாதா? தமிழ் இன உணர்வாளர்கள் சொல்லிக் கொள்வதைப் போன்று, அந்தப் போராட்டம் புலிகளின் பெயரில் நடக்கப் போவதுமில்லை, பிரபாகரன் தலைமை தாங்கப் போவதுமில்லை. இனிவரப்போகும் ஆயுதப்போராட்டமானது, வேறொரு இயக்கத்தின் பெயரில், வேறொரு வடிவத்தில் நடக்கலாம்.

இலங்கையில் இனிமேல் ஒரு ஆயுதப்போராட்டம் நடக்கும் நிலைமை தோன்றினால், போர்க்கள அனுபவம் பெற்ற முன்னாள் போராளிகள் அதில் இணைந்து போராட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட இலங்கை அரசு, தமிழ் தேசியப் பிரமுகர் வித்தியாதரனுடன் கூட்டுச் சேர்ந்து, அதைத் தடுப்பதற்காக "தமிழ் ஜேவிபி" ஒன்றை உருவாக்கி உள்ளது.

TNA பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இதனை கோடிட்டுக் காட்டி உள்ளார். முன்னொரு காலத்தில் ஆயுதமேந்திப் போரிட்ட ஜேவிபி உறுப்பினர்களை, "ஜனநாயக அரசியல் நீரோட்டத்தினுள்" இழுத்து வந்ததைப் போன்று, முன்னாள் புலிப் போராளிகளும் கொண்டு வரப் பட வேண்டும் என்று கூறினார். முதலாளித்துவ மேலாதிக்கத்திற்குட்பட்ட பாராளுமன்ற- ஜனநாயக சாக்கடைக்குள் இறங்கிய ஜேவிபி அதற்குள் அமிழ்ந்து போனது. 

பன்றியுடன் சேர்ந்த பசுக்கன்றும் மலம் தின்னும் என்பது ஒரு பழமொழி. ஆயினும், முதலாளித்துவ நலனைப் பாதுகாக்கும், சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் அதையே "வெகுஜன அரசியல்" என்று காட்டி வருகின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகள் "ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள்" இழுத்து வரப் பட்ட பின்னணி அது தான். இந்த உண்மைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரியாது என்று நினைக்கவில்லை. இருப்பினும்,  புலிப் போராளிகளின் அரசியல் பிரவேசத்தை ஒரு வித வன்மத்துடன் அணுகுகின்றனர்.

இவ்வளவு காலமும் புலிகளை ஆதரிப்பதாக நடித்துக் கொண்டிருந்த போலித் தமிழ் தேசியவாதிகள் பலர், முன்னாள் புலிப் போராளிகள் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வருகின்றனர். உதாரணத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் புலிப் போராளிகளைப் பற்றிய கூற்று, பலத்த சர்ச்சையை உருவாக்கி விட்டுள்ளது.(அதாவது உண்மையான போராளிகள் , முள்ளிவாய்க்காலிலேயே சயனைட் அடித்து இறந்துவிட்டதாக இவர் தெரிவித்திருந்தார்)

முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உட்பட, சிங்களக் கட்சிகள் எதுவும் தடுக்கவில்லை. முன்பொரு தடவை, யாழ் மாவட்ட இராணுவ தளபதி, "முன்னாள் புலிப் போராளிகள், இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, வேறெந்தக் கட்சியிலும் சேர்ந்து அரசியல் நடத்துவதற்கு தடையில்லை...!" என்று தெரிவித்திருந்தார். 

அதாவது, இடதுசாரி அரசியல் தமது இருப்பிற்கு ஆபத்தானது என்பதை, இந்தக் கூற்றின் மூலம் அரசு நேரடியாகவே தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு "ஒரு பிரிவினைவாதக் கட்சியாக" இருந்தாலும், அது ஒரு வலதுசாரிக் கட்சி என்பதால், சிறிலங்கா அரசின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்றது. ஆகவே, முன்னாள் புலிப் போராளிகளை ஏதாவது ஒரு வலதுசாரிக் கட்சியில் சேருமாறு அரசே அறிவுறுத்தியுள்ளது. 

இயற்கையாகவே, முன்னாள் புலிப் போராளிகளின் தெரிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கும். TNA தான் நம்பகமான "ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள்", "தமிழ் தேசியத் தலைவர்கள்", இது போன்ற கருத்துக்கள் அவர்கள் மனதிலும் இருந்திருக்கலாம். அதனால், அரசியல் உணர்வு கொண்ட முன்னாள் போராளிகள் பலர், கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கும், வேட்பாளராக நிற்பதற்கும் விண்ணப்பித்ததாகவும், ஆனால் அவை நிராகரிக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகளின் விண்ணப்பங்களை நிராகரித்தமைக்கு கூட்டமைப்பு தகுந்த காரணம் எதையும் கூறவில்லை. ஆனால், "ஆயுதமேந்திய நபர்களை சேர்க்க விரும்பவில்லை" என்று ஒரு நொண்டிச்சாட்டு சொல்லப் படுகின்றது. "அப்படியானால், தமிழரசுக் கட்சியைத் தவிர, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற மூன்று கட்சிகளும் ஒரு காலத்தில் ஆயுதபாணிகளாக இருந்தவை தானே?" என்று முன்னாள் புலிப் போராளிகள் கேட்பதிலும் நியாயமிருக்கிறது.

உண்மையில், தமிழ் தேசிய அரசியல் களத்தில் ஒரு சதிப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கூட்டமைப்பின் முன்னோடிகளான கூட்டணியின் இடத்தைப் பிடிப்பதற்கு, தமிழரசுக் கட்சியினர் முயன்று வருகின்றனர். அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, அனைத்துத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டாலும், அடிப்படையில் மேட்டுக்குடியினரின் கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் என்பது தற்செயல் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, "சட்டத்தரணிகளின் கட்சியாக" மேட்டுக்குடி வர்க்க நலன்களை மட்டுமே பாதுகாக்க விரும்புகிறது. அது தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்களின் விளம்பரங்களை எடுத்துப் பார்த்தாலே தெரியும். பெரும்பாலான வேட்பாளர்களின் பெயர்களுக்குப் பின்னால், ஆங்கில எழுத்துக்களில் உள்ள பட்டங்கள், சாமானிய மக்களைப் பயமுறுத்தும். படிக்க வேண்டிய வயதில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிப் போராளிகள், அந்தப்  பட்டங்களுக்கு எங்கே போவார்கள்?

ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பினால் தான், முன்னாள் புலிப் போராளிகள் தனிக் கட்சியாக பதிவு செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அது NGO பாணியில், ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் நலன்களை பேசுவதாக மட்டுமே இருக்கும். தமிழ் தேசிய அரசியலில் தலைமையை கைப்பற்றும் அளவுக்கு பலமானதாக இருக்காது. இருப்பினும், ஏதோ ஒரு வகை அச்சம் கூட்டமைப்பு தலைவர்கள் முகத்தில் தெரிகின்றது.

ஈழத் தமிழ் சமூகமும், தனக்குள்ளே வர்க்க முரண்பாடுகளைக் கொண்ட சமூகம் தான். போலித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு காரணம், அவர்களும் வர்க்க அரசியலில் பங்காளிகள் என்பதால் தான்.

கார்ல் மார்க்ஸ் பிரபலமான கூற்றான, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கம்" தான் புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த முன்னாள் புலிப் போராளிகள் பலர், ஈழப் போராட்டத்தின் ஊடாகத் தான் அரசியல் முனைப்புப் பெற்றனர். " அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்" என்று மாவோ சொன்னதை நடைமுறை அனுபவத்தின் ஊடாக புரிந்து வைத்திருக்கின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகள் நம்பிக் கொண்டிருக்கும், தமிழ் தேசிய அரசியல், இன்று மேட்டுக்குடி வலதுசாரிகளால் அவர்களது வர்க்க நலன்களுக்காக நடத்தப் படுகின்றது என்ற உண்மை இப்போது தான் உறைக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியில் தமிழ் முதலாளிகள் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பலருக்கும் தெரிந்த உண்மை அது.

கூட்டமைப்பின் பிரபல பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் முதலாளியாகவும் இருக்கிறார். அவரது உதயன் நிறுவனம் பத்திரிகை மட்டும் வெளியிடவில்லை. தங்குவிடுதிகள் போன்ற பிற துறைகளிலும் முதலிட்டுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. 

கூட்டமைப்பினர் தமது வர்த்தக, வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பின் கதவால் சிறிலங்கா அரசுடன் பேரம் பேசுவதும் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஒரு சாக்கடை என்ற உண்மையை, முன்னாள் புலிப் போராளிகளும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 

அதற்குப் பிறகு... என்ன செய்ய வேண்டும்? அதற்கான பதிலை லெனின் நூறு வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார். இன்றைய ஈழத் தமிழ் அரசியல் சூழ்நிலைக்கும் அது பொருந்தும். 

Tuesday, January 17, 2012

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்

இந்தியாவில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தண்டகாரண்யாவில், இந்த ஆவணப் படம் படமாக்கப் பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகக் குழுவினர், அடர்ந்த காட்டிற்குள் மாவோயிஸ்ட் போராளிகளின் முகாமில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர்.