Tuesday, January 24, 2012

சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி


"பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது" என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், "சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது." என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள "பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி" அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது. இனவாத அமைப்புகளின் சுயரூபம் வெளிப்படும் தருணம் ஒன்றுண்டு. ஒரு நாட்டில், என்றைக்கு வர்க்கப் பிரச்சினை மேலெழுந்து வருகின்றதோ, அன்றைக்கு அனைத்து இனவாதிகளும் ஒரே அணியில் சேர்ந்து நிற்பார்கள். இதுவரை காலமும், ஜென்ம விரோதிகளாக பாவனை செய்து வந்த சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும், இன்று ஒரே நோக்கத்துடன் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணலாம். வர்க்கப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதை மறுப்பது மட்டுமல்ல, அதனை அடக்குவதிலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான எதிரி இடதுசாரிகள் என்பதால், அவர்கள் சிறிலங்கா அரசின் இருப்பை காப்பாற்றுவதற்காக பாடுபடுவார்கள். எந்தவொரு தமிழ் இனவாதிக்கும், சிறிலங்கா அரசை கவிழ்க்கும் எண்ணம் அறவே கிடையாது. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

டிசம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் லலித், குகன் என்ற இரண்டு சமூக ஆர்வலர்கள் காணாமல் போனார்கள். லலித் சிங்கள இனத்தையும், குகன் தமிழ் இனத்தையும் சேர்ந்தவர்கள். போர் நடந்த காலத்தில் காணாமல்போன மக்களை மீட்டுத் தருமாறு, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லலித், குகன் ஆகியோர் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள். கானாமல்போனோருக்காக போராடியவர்கள் காணாமல் போகும் அதிசயம் இலங்கையில் மட்டுமே நடக்கின்றது. யாழ் குடாநாடு சிறிலங்கா படையினரின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. இராணுவ அதிகாரத்தை மீறி, ஈ,எறும்பு கூட நுழைய முடியாது. அவ்வாறான இடத்தில் காணாமல் போனவர்களை மாதக் கணக்காக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு இராணுவமே பொறுப்பு. அந்த ஆர்வலர்கள் இருவரும் காணாமல் போகவில்லை. கடத்தப் பட்டுள்ளனர், என்றே மக்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப் பட்டது.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, சமாதானம் நிலவுவதாக, அரசு கூறி வரும் வேளையில், நிராயுதபாணிகளான இரண்டு ஆர்வலர்கள் கடத்தப் பட வேண்டிய காரணம் என்ன? அரசு இப்போது யாரைக் கண்டு அஞ்சுகின்றது? வைகோ அறிவித்தது போன்று, "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" ஆரம்பமாகி விட்டதா? காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காட்டி வரும் அலட்சியப் போக்கு, அந்த சாத்தியப் பாட்டை நிராகரிக்கின்றது. மேலும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" என்பது, தமிழ் உணர்வாளர்களை கிளர்ச்சியடைய வைத்து ஆதாயம் தேடும் மலின அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். போரின் இறுதிக் கட்டத்தில், காங்கிரஸ் அரசு சற்றே இறங்கி வந்ததாக நோர்வே கூறுகின்றது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டாமென்றும், அப்போது நடந்த பொதுத் தேர்தலில் பாஜக வெல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும், வைகோ தூது அனுப்பினார். வைகோவின் ஆலோசனைக்கு செவி மடுத்த புலித் தலைவர்கள், இறுதி வரை இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது, "பிரபாகரன் ஆகிய புலித் தலைவர்களை தப்ப விடாமல் தடுத்து பலி கொடுத்த," வைகோவின் துரோகம் குறித்து தமிழ் உணர்வாளர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயின் அறிக்கை அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது. "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" பற்றிய வைகோவின் அறிவிப்பு, அவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் முயற்சியே தவிர வேறில்லை. ஆகவே, வட இலங்கையில், தமிழ் தேசியம் தவிர, வேறொரு சக்தி, சிறிலங்கா அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி எது? எதற்காக தமிழ் ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கின்றன?

"வட பகுதி மக்கள், நீண்ட காலமாக இடதுசாரி அரசியலை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டாதவர்கள். தமிழரின் உரிமைப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்க விரும்புகிறோம்." - ஜேவிபி யில் இருந்து பிரிந்த மத்திய குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார். "இலங்கையில் வர்க்கப் போராட்டம் சாத்தியமேயில்லை, தமிழர்களுக்கு தேசிய விடுதலை தவிர வேறெந்த அரசியல் குறித்தும் அக்கறை அற்றவர்கள்." தமிழ் தேசியவாதிகளைக் கேட்டால் அப்படித் தான் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கொள்கை சிறந்தது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது ஆபத்தானது. தமிழ் தேசிய உணர்வை விட, தமிழ் மக்களின் வர்க்கப் பிரச்சினை, புலிகளின் முப்பதாண்டு கால ஈழப்போருக்கு உறுதுணையாக இருந்தது. வசதி படைத்தோர் அதிகமாக வாழும் யாழ் மாவட்டத்தை விட, பொருளாதாரத்தால் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் போராளிகளானார்கள். வசதி படைத்த மக்கள், வெளிநாடுகளுக்கு சென்று, யுத்த செலவுகளுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர், வெளிநாட்டு பணவரவும் நின்று விட்டது. புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், ஒன்றில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள், அல்லது இராணுவ புலனாய்வுத் துறையில் பணியாற்றுகின்றனர். உண்மையில், அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள், ஆயிரக் கணக்கான சாதாரண போராளிகள் தான். இராணுவத்திடம் சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வேலை வாய்ப்பின்றி கஷ்டப் பட்டார்கள். அவர்கள் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என்பதால், பெற்றோராலும் உதவி செய்ய முடியாத நிலைமை.

புலிகள் அமைப்பும் அழிந்து விட்ட பிறகு, புலம்பெயர்ந்த தமிழ் சகோதரர்களால் கைவிடப் பட்ட நிலையில், முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசு, மேற்குலக நிதியில் நடக்கும் புனர்வாழ்வு நிலையங்களில் சில காலம் வைத்திருந்து, ஏதாவது தொழிற்பயிற்சியை கற்பித்து விட்டு விடுவித்து விடுகின்றது. சிறு தொகையினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும், அரசாங்க வேலைகளும் வழங்கப் பட்டன. பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். முன்னாள் போராளிகளில் சிலர் அரச இராணுவத்தின் வீரர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால், ஒரு காலத்தில் எதிரியாக கருதி போரிட்ட சிறிலங்கா இராணுவத்தில் எல்லோரும் போய்ச் சேர மாட்டார்கள். சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான அடக்குமுறை காரணமாக, தாமாகவே புலிகள் அமைப்பில் சேர்ந்த போராளிகள் பலருள்ளனர். அவர்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் கோர முகத்தையும், அதன் அடக்குமுறைக் கருவியான இராணுவத்தையும் மிகச் சரியாக இனங் கண்டவர்கள்.

ஒரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே அரசியல் கட்சிகள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தின. தமிழ்க் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சி தோன்றிய காலத்திலும், அது "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" என்று தான் பெயரிட்டுக் கொண்டது. தமிழீழத் தமிழர்கள் என்பதை விட, அகில இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொண்டது. பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சியின் தோற்றமும், அவர்களின் தமிழீழ கோரிக்கையும் ஈழப்போர் வரை செல்வாக்கு செலுத்தியது. கடந்த முப்பதாண்டு காலமாக, இடதுசாரிக் கட்சிகளை ஓரங் கட்டுவதிலே தான், தமிழ் தேசியக் கட்சிகள் குறியாக இருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம், "தமிழ் தேசியக் கோட்பாடு புனிதமானது, அதற்கு இடதுசாரிகள் உடன்படுகிறார்கள் இல்லை." என்பது தான். "தமிழீழம் சாத்தியமா? இல்லையா?" என்பது குறித்து, யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்களில் இடதுசாரிகளுடன் விவாதங்கள் நடந்தன. இதற்கிடையில், தெற்கில் ரோகன விஜேவீர தலைமையில் குட்டி-பூர்ஷுவா இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். அவர்களது மார்க்சியமும்- சிங்கள தேசியவாதமும் கலந்த புதிய இயக்கமான ஜேவிபியில் தமிழ் மக்களுக்கு இடம் இருக்கவில்லை. தோல்வியுற்ற 1971 கிளர்ச்சியின் பின்னர், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் தமிழர் உரிமைப் பிரச்சினை குறித்து கவனம் எடுத்தனர். அவ்வாறு சென்றவர்களில் லயனல் போபகே போன்ற சிலரைக் குறிப்பிடலாம்.

1988 -1989 காலத்திய, ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர், மேலும் சிலர் பிரிந்து சென்றனர். சுனந்த தேசப்பிரிய போன்ற ஊடகவியலாளர்கள் அத்தகையோரில் முக்கியமானவர்கள். லயனல் போபகே, சுனந்த தேசப்பிரிய போன்றோர், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு சிறிலங்கா அரசையும், ஜேவிபி யையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜேவிபி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக, இனவாத அரசியல் பேசி வந்தது. மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய நாளில் இருந்து, ஜேவிபியின் தனித்துவமான இனவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார். அதனால், ஜேவிபிக்கு ஆதரவளித்த இனவாத சிங்கள வாக்காளர்கள், ராஜபக்ச பக்கம் திரும்பி விட்டனர். விமல் வீரவன்ச தலைமையில் ஒரு குழு, ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று ஆளும் கட்சியுடன் இணைந்தது. அதற்கும் ராஜபக்சவின் சாணக்கியம் (சூழ்ச்சி) காரணம் என்று நம்பப் படுகின்றது. ஒரு காலத்தில், மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்பட்ட ஜேவிபி, இன்று மிகவும் பலவீனமடைந்து காணப் படுகின்றது. அந்த நிலையில், அண்மையில் மேலும் ஒரு பிளவு. இந்த முறை கட்சி இரண்டாக உடைந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் இரண்டு பக்கமும் சம அளவில் பிரிந்து சென்றனர்.

நீண்ட காலமாக, ஜேவிபியின் வெளிநாட்டு தொடர்பாளராகவும், நிதி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் செயற்பட்டவர் பிரேம்குமார் குணரத்தினம். புலிகள் இயக்கத்தின் ஆயுத, நிதி விநியோகத்தை நெறிப் படுத்திய கேபி போன்று, ஜேவிபிக்கு குணரத்தினம் இருந்தார். இவர் ஒரு மேற்கிலங்கைத் தமிழர். சிங்கள மொழியில் கல்வி கற்றதால், தமிழ் எழுதத் தெரியாது. ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் திருகோணமலையில் செயற்பட்ட நேரம், சில தமிழ் தேசிய போராளிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார். இதனால், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளுக்கும், குனரத்தினத்திற்கும் தொடர்பிருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகப் படுகின்றது. அதனை உறுதிப் படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், குணரத்தினம் பற்றிய விபரங்கள், ஜேவிபி யில் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும். ஜேவிபி, இரண்டு சமாந்தரமான அமைப்புகளாக செயற்படுகின்றது. ஒன்று, வெளிப்படையாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர்கள். இரண்டு, மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் தலைமறைவாக இயங்கும் உறுப்பினர்கள். உண்மையில், தலைமறைவு உறுப்பினர்கள் தான் இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்றனர். 1971 ல் ஒரு தடவை, 1989 ல் மறு தடவை, ஜேவிபி இயக்கம் அரச படைகளினால் அழிக்கப் பட்டது. அப்போது அரச ஒடுக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த உறுப்பினர்களை ஒன்று சேர்ந்தது, இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பினார்கள்.

குணரத்தினம் தலைமையில் இரகசியமாக இயங்கிய அமைப்பினால் தான், மிகக் குறுகிய காலத்தினுள் அந்த சாதனையை நிறைவேற்றினார்கள். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த குணரத்தினம், சில வருடங்களுக்கு முன்னர், சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், தாயகம் திரும்பினார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்த போதிலும், அரசு எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. குணரட்ணத்தின் அண்மைய புகைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே, கிழக்கிலங்கையில் இருந்து கிடைத்த தகவல்கள், அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, கருணா குழுவினர் பிரிந்திருந்த நேரம் அது. பிரபாகரன் தலைமையிலான புலிகளினால், கருணாவின் கிளர்ச்சி ஒடுக்கப் பட்டது. இதனால் அரசியல் வாழ்வை விட்டு ஒதுங்கிய கருணா ஆதரவுப் போராளிகள், பணத் தேவைக்காக தம்மிடமிருந்த இயந்திரத் துப்பாக்கிகளை விற்று விட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை வாங்குவதில், ஜேவிபி ஆர்வம் காட்டியுள்ளது. இந்தச் செய்தி காதுக்கெட்டியவுடன், அரச மட்டத்தில் கலக்கம் ஏற்பட்டது. தேசிய நீரோட்டத்தில் இணைந்து, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் ஜேவிபிக்கு ஆயுதங்கள் எதற்கு? எதிர்காலத்தில் அரசை கவிழ்ப்பதற்காக, இரகசியமாக திட்டம் தீட்டுகிறார்களா?

(இன்னும் வரும்)



மேலதிக தகவல்களுக்கு :
1.‘Military abducted Lalith, Kugan’
2.Love of Democracy and Securing Human Rights, Are these an Offence in Sri Lanka?
3.Former Tigers 'threatened' in north
4.'Ex-LTTE cadres are with us' Jana Aragala Group

2 comments:

aotspr said...

எல்லாம் அரசியல்...
உங்கள் பகிர்வுக்கு நன்றி......


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
நமக்கு இந்த புரட்சி என்பதில் நம்பிக்கை போய் விட்டது.அனைத்துமே வல்லரசுகளின் இராஜ தந்திர நடவடிக்கைககளே. ஒரு குழுவிற்கு ஆய்தம் கொடுப்பார்கள். காரியம் முடிந்தது கை கழுவுவார்கள்.
ஒருவேளை சீனா இதற்கு பிண்ணணியில் உள்ளது என்றால் அதற்கேற்ற எதிர்வினைகளை அமெரிக்க இந்தியா மூலம் செய்யும்.
உடனே இந்தியாவிற்கு[அப்போதைய அரசு] தமிழர் மேல கரிசனம் உடையது போல் காட்டி பிரச்சினையை திசை திருப்புவார்கள்.

தமிழ் சிங்கள மக்கள் வர்க்க ரீதியாக ஒன்றிணைவதன் [நல்லது என்றாலும்]வாய்ப்பு குறைவு என்றே கருதுகிறேன். இப்படி புரட்சி என்று ஏற்கெனவே உயிர் மட்டும் மிச்சம் இருக்கும் சாமான்ய தமிழ் மக்களை துன்புறுத்தாமல் இருந்தால் போதும் என்ற எண்ணமே வருகிறது.
நன்றி