Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Sunday, April 05, 2020

சர்வதேச மருந்துச் சந்தையில் சீனாவின் மேலாதிக்கம்


"சீன வைரஸ்" என்று சொல்லி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அமெரிக்காவுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தி விடப் போவதாக எச்சரித்ததும் வாயை மூடிக் கொண்டார். அதற்குப் பிறகு ஒழுங்கு மரியாதையாக கொரோனா வைரஸ் என்று சொல்லத் தொடங்கினார். சர்வதேச மருந்து சந்தையில் சீனாவின் மேலாதிக்கம் பற்றிக் குறிப்பிட இந்த ஒரு உதாரணம் போதும்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள மருந்துகள் மட்டுமல்ல, முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் கூட சீனாவில் இருந்து தான் இறக்குமதியாகின்றன. அந்தளவுக்கு மேற்கத்திய நாடுகள் சீனாவில் தங்கியுள்ளன. அதற்குக் காரணம் என்ன? முதலாளித்துவ உலகமயமாக்கல்.

பொதுவாக எல்லா முதலாளிகளும் உற்பத்தி செலவுகளை குறைப்பது எப்படி என்று தான் சிந்திப்பார்கள். குறிப்பாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம். மேற்கத்திய நாடுகளில் சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக உற்பத்தித் தொழிற்துறை முழுவதும் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறே மருந்துத் தொழிற்சாலைகளும் சீனாவில் இயங்கத் தொடங்கின. சீனாவில் உற்பத்தி செலவு குறைவு என்பதால் மருந்துகளின் விலைகளும் குறைவாக உள்ளன.

உலக நாடுகள் தமது மருந்துத் தேவைக்காக சீனாவில் தங்கியிருப்பதானது சிலநேரம் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருந்து உற்பத்தியும், ஏற்றுமதியும் நின்று விட்டது. இதனால் ஐரோப்பாவில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிலநேரம் சீனா இதனை பூகோள அரசியலுக்கு பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம் டிரம்பின் சீன வைரஸ் சர்ச்சை தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தெரிவித்த எச்சரிக்கை.

இதற்கு என்ன தீர்வு? ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் தன்னிறைவு காண வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன. முன்பு ஐரோப்பாவில் இயங்கி வந்த மருந்து கம்பனிகள் நட்டம் ஏற்பட்டதால் பூட்டப்பட்டன. ஆகவே இவற்றை அரசாங்கம் தேசியமயமாக்க வேண்டும். இப்படியான நடைமுறைகள் ஒரு சோஷலிச நாட்டில் தான் நடக்கும். ஆனால், மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் பட வேண்டுமானால் தேசியமயமாக்கல் அவசியம்.


Wednesday, July 31, 2019

சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள்!

ஒரு காலத்தில் அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்து சென்று சோவியத் யூனியனில் குடியேறி இருந்தனர்! இன்று இதைச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் முப்பதுகளில் இருந்த உலகம் வேறு. அமெரிக்காவின் பங்குச் சந்தை நெருக்கடி காரணமாக, முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சோவியத் சோஷலிச பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அதைக் குறிப்பிடத் தவறவில்லை. உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கையில், சோவியத் யூனியனில் நாளுக்கொரு தொழிற்சாலை திறக்கப் படுவதாக தெரிவித்துக் கொண்டிருந்தன. இனிமேல் உலகம் முழுவதும் சோவியத்தின் சோஷலிச பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தான் ஒரே வழி என்பது பொதுவான வெகுஜன கருத்தாக இருந்தது.

இருபதுகளின் பிற்பகுதியில் ஸ்டாலின் கொண்டு வந்த ஐந்தாண்டுத் திட்டம் காரணமாக சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. இது அன்று உலகம் முழுவதும் தெரிந்த உண்மை. சோவியத் பொருளாதாரம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், ஒரு கட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கூட இல்லாத பற்றாக்குறை நிலவியது. சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டிருந்தனர். ஏற்கனவே ஏராளமான ஜெர்மன் பொறியியலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.

அன்றைய சோவியத் யூனியனில் பொறியியலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில், பொறியியலாளர் போன்ற அதிக சம்பளம் கிடைக்கும் மத்தியதர வர்க்க வேலைகள் உயர்வாகக் கருதப் படவில்லை. சோவியத் யூனியன் தொழிலாளர்களின் நாடு என்பதால், உடல் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் குறைவான சம்பளம் பெறுவதும், தொழிலாளி கூடுதலான சம்பளம் பெறுவதும் சாதாரணமான விடயம்.

அது மட்டுமல்ல, பொறியியலாளர், மருத்துவர் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளை செய்பவர்கள் குட்டி முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக கருதப் பட்டனர். அதாவது, அவர்கள் உடல் உழைப்பாளிகளை விட அதிகம் சம்பாதிப்பதால் பாட்டாளி வர்க்கத்தை அவமதிப்பார்கள் என்பதும் பொதுப் புத்தியில் உறைந்திருந்தது. இது ஜார் மன்னன் காலத்தில் இருந்த வர்க்க ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், புரட்சி நடந்து பதின்மூன்று வருடங்களே நிறைவடைந்த நிலையில் வர்க்க முரண்பாடுகள் முற்றாக மறைந்திருக்கவில்லை.

இதனால் ஒரு தொழிற்சாலையில் பெரும் சேதம் விளைவிக்கும் விபத்து நடந்தால் முதலில் குற்றம் சாட்டப் படுபவர் ஒரு பொறியியலாளராக அல்லது முகாமையாளராக இருப்பார். அவர் வேண்டுமென்றே நாசகார வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் படவும் இடமுண்டு. இது போன்ற காரணங்களினாலும் பலர் பொறியியலாளர் வேலை செய்ய முன்வராமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், உள்நாட்டில் இல்லாத மனித வளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய சோவியத் யூனியனில் ஏற்பட்டிருந்தது. 

ஏராளமான இலங்கையர்கள், இந்தியர்கள், வளைகுடா அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது போன்று தான், அன்றைய காலத்தில் அமெரிக்கர்கள் சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்றனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோவியத் யூனியன் பொன் விளையும் பூமியாகத் தெரிந்தது. 

அன்றைய காலகட்டத்தில் முழு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியன் மட்டுமே பணக்கார நாடு என்று சொல்லும் தரத்தில் இருந்தது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப் பட்டிருந்தன.  ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், நோர்வே, பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருந்து பொறியியலாளர்கள் வேலை தேடி சோவியத் யூனியனுக்கு சென்றனர்.

இருப்பினும், அமெரிக்க தொழில்நுட்ப அறிவுக்கு சோவியத் யூனியனில் அதிக மதிப்பு இருந்தது. ஆகையினால், சோவியத் யூனியன் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  அமெரிக்கர்களின் சோவியத் நோக்கிய புலம்பெயர்வு, மூன்று வகையாக நடந்தது. ஒன்று, தாமாகவே வேலை தேடிச் சென்றவர்கள். இரண்டு, வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தக் கூலிகளாக அனுப்பப் பட்டவர்கள். மூன்று, அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் உருவான தொழிற்துறை கட்டுமானங்களில் பணியாற்ற அனுப்பப் பட்டவர்கள். 

அன்றைய அமெரிக்காவில் நிலவிய கொடூரமான இனவெறிக் கொள்கை காரணமாக, ஏராளமான கறுப்பின மக்களும் சோவியத் யூனியனில் குடியேற விரும்பினார்கள். அங்கு அவர்கள் சம உரிமை பெற்ற மனிதர்களாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப் பட்டனர். அந்த வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. மேலும் சர்வதேச மட்டத்தில், "இனப்பாகுபாடு பாராட்டும் முதலாளித்துவ அமெரிக்காவை விட, சகல இனத்தவரையும் சமமாக நடத்தும் சோஷலிச சோவியத் நாடு சிறந்தது" என்று சோவியத் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

கறுப்பர், வெள்ளையர் பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில்  தொழிற் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், பொறியியலாளர்களுக்கு சோவியத் யூனியனில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதிக சம்பளமும் கிடைத்தது. சம்பளத்தில் ஒரு பகுதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலப் படும். அதை விட, மாதம் 200-300 ரூபிள்கள் கையில் கிடைக்கும். 

புலம்பெயர்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், சராசரி சோவியத் சம்பளத்தை விட இரண்டு அல்லது மூன்று  மடங்கு அதிகம். இது வெளிநாட்டு தொழில் முகவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது.  மேலும், சோவியத் நாட்டில் உணவுப் பொருட்கள் மிகவும் மலிவு. மருத்துவ வசதி இலவசம். பிள்ளைகளுக்கான கல்வியும் இலவசம். இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்தால் யார் தான் மறுக்கப் போகிறார்கள்? ஒப்பந்தப் படி, ஓர் அமெரிக்க வேலையாள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று வரலாம். 

சோவியத் யூனியனுக்கு புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கர்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில்  சென்றவர்கள் தான் பெரும்பான்மை. குறிப்பிட்ட அளவினர் கம்யூனிச சித்தாந்தம் மீதான ஈடுபாடு காரணமாக சென்றனர். இவ்விரண்டு பிரிவினரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தாமுண்டு வேலையுண்டு என இருந்து விட்டனர். அதே நேரம்,மலிவு விலையில் மது கிடைக்கிறது என்ற ஆசையில் சென்று, குடித்து விட்டு தகாராறுகளில் ஈடுபட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் எந்த மன்னிப்பும் இன்றி திருப்பி அனுப்பப் பட்டனர்.

அன்றைய உலகப் பொருளாதார நிலைமையில், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் கூட சோவியத் யூனியனில் முதலிடுவதற்கு தாமாக விரும்பி முன்வந்தன. இது இரண்டு தரப்பிற்கும் ஆதாயம் கிடைக்கும் விடயம். சோவியத் அரசுக்கு அந்நிய தொழில்நுட்ப அறிவு ஆதாயமாகக் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான  பொருளாதாரத்தை கொண்ட நாட்டில் முதலிட்டு இலாபம் சம்பாதிக்க முடிகிறது. 

இந்த முதலீடுகள் அனைத்தும் Joint Venture பாணியிலான கூட்டு முயற்சியாக அமைந்திருந்தன. அதாவது, புதிதாக உருவாக்கப்படும் தொழிலகம் ஒன்றில் சோவியத் அரசும், வெளிநாட்டு நிறுவனமும் சரிசமமான பங்குகளில் முதலீடு செய்யும். தொழிலகத்தில் உற்பத்தி அதிகரிக்கும் நேரம் விற்பனையால் கிடைக்கும் இலாபப் பணம் சரிசமமாக பங்கிடப்படும். ஒப்பந்த காலம் வரையில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் தனது பங்குகளுக்கான இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் தொழிலகம் முழுவதும் சோவியத் அரசுடமையாகி விடும்.

1929 ம் ஆண்டு சோவிய‌த் அர‌சுக்கும் அமெரிக்க‌ Ford நிறுவ‌ன‌த்திற்கும் இடையில் ஓர் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப் ப‌ட்ட‌து. இத‌ன் விளைவாக‌, நிஸ்னி நொவ்கொரொத் (Nizhny Novgorod) ந‌க‌ரில் ஒரு பிர‌மாண்ட‌மான‌ கார் த‌யாரிக்கும் தொழிற்சாலை க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ அமெரிக்க‌ பொறியிய‌லாள‌ர்க‌ள், தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ள் சோவிய‌த் யூனிய‌னில் த‌ங்கி இருந்து வேலை செய்த‌ன‌ர். இதற்காக புதியதொரு நகரம் நிர்மாணிக்கப் பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்வோர் தங்குவதற்கான வீடுகள் மட்டுமல்லாது, மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றனவும் புதிதாக கட்டப் பட்டன.

ஒப்ப‌ந்த‌ப் ப‌டி, சோவிய‌த் அர‌சு முத‌லாவ‌து வ‌ருட‌ம் குறிப்பிட்ட‌ள‌வு போர்ட் கார்க‌ளை வாங்குவ‌தாக‌ தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து. இரண்டாவது வ‌ருட‌ம் அமெரிக்காவில் இருந்து த‌ருவிக்க‌ப் ப‌ட்ட‌ வாக‌ன‌ உதிரிப் பாக‌ங்க‌ள் சோவியத் யூனியனில் பொருத்த‌ப் ப‌டும். மூன்றாவது வருடம் சோவியத் உதிரிப் பாகங்களை கொண்டு அமெரிக்கக் கார் தயாரிக்கப் படும். நான்காவது வருடம் கார் முழுவ‌தும் சோவியத் தயாரிப்பாகவே இருக்கும்.

ஒப்பந்தப் படி, ப‌த்தாண்டுக‌ளுக்குள் போர்ட் நிறுவ‌ன‌ம் த‌ன‌து பேட்ட‌ன்ட் உரிமையையும், தொழில்நுட்ப‌ அறிவையும் சோவிய‌த் அர‌சிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். திட்ட‌மிட்ட‌ ப‌டி ப‌த்தாண்டுக‌ளுக்குள் தொழிற்சாலை முழுவ‌தும் சோவிய‌த் வ‌ச‌மாகிய‌து. அன்று அமெரிக்க‌ர்க‌ள் க‌ட்டிய‌ கார் தொழிற்சாலை GAZ என்ற‌ பெய‌ரில் இப்போதும் இய‌ங்கிக் கொண்டிருக்கிற‌து. இடையில் முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப் பட்டிருந்தாலும், அது அமெரிக்கர்கள் கட்டிய தொழிற்சாலை என்ற வரலாற்று உண்மையை மறைக்க முடியாது.

ஸ்டாலின்கிராட் நகரில் டிராக்டர்கள் உற்பத்தி செய்வதற்காக கட்டப் பட்ட தொழிற்சாலை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியால் உருவானது தான். இன்று அது Volgograd Tractor Plant என்று அழைக்கப் படுகின்றது. அமெரிக்காவில் தொழிற்துறை வளாகம் கட்டுவதில் சிறந்து விளங்கிய, பிரபலமான Albert Kahn Associates Inc நிறுவனம் தான் அந்த டிராக்டர் தொழிற்சாலையை கட்டிக் கொடுத்தது. இதற்காக ஆயிரக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள் தருவிக்கப் பட்டனர். முப்பதுகளில் உற்பத்தியை தொடங்கிய காலத்திலேயே மில்லியன் கணக்கான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு, சோவியத் நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் பாதிக்கப் பட்ட கட்டிடங்களில் டிராக்டர் தொழிற்சாலையும் ஒன்று. யுத்தம் முடிந்த பின்னர் மீளக் கட்டியெழுப்ப பட்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அமெரிக்கர்கள் ஆற்றிய பங்களிப்பு மறைக்கப் பட்ட காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் உருவான பனிப்போர், அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் எதிரிகளாக்கி விட்டது. அதற்குப் பின்னர் எதிரி நாட்டுப் பிரஜைகள் தனது நாட்டில் இருப்பதை சோவியத் அரசு வெளிப்படுத்த விரும்பவில்லை. மறுபக்கத்தில், அமெரிக்க அரசு தனது நாட்டுப் பிரஜைகள் சோவியத் யூனியனின் இருந்தனர் என்ற தகவல்கள் முழுவதையும் இருட்டடிப்பு செய்தது. போரினால் பாதிக்கப் பட்ட அமெரிக்கப் பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரி தூதுவராலயத்திற்கு அனுப்பிய கடிதங்கள் கூட உதாசீனம் செய்யப் பட்டன.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர்ந்த குடியேறிகளின் நிலைமை மிக மோசமாகி விட்டது. நாடு முழுவதும் நிலவிய போர்ச் சூழல் காரணமாக எல்லோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தேசப் பாதுகாப்பை காரணமாகக் காட்டி நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டவரும் தப்பவில்லை. ஒரு சில அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டதும், ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே போர் முடிந்த பின்னரும் சோவியத் யூனியனில் தங்கி இருந்தனர்.


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரைக்கான பல ஆதாரங்கள் அமெரிக்க ஊடகவியலாளர் H.R. Knickkerbocker எழுதிய De Roode Handel dreigt எனும் நூலில் இருந்து எடுத்திருக்கிறேன். நெதர்லாந்தில், டச்சு மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பாக A.W. Sijthoff's uitgeversmij n.v. பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலை வாங்கினேன்.)

Sunday, July 02, 2017

வட கொரியாவில் பொருளாதாரம் வளர்கிறது! மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது!!


"வ‌ட‌ கொரிய‌ர்க‌ள் ப‌ட்டினி கிட‌க்கிறார்க‌ள்... புல்லைச் சாப்பிடுகிறார்க‌ள்" என்று வாய் கூசாம‌ல் புளுகிய‌ ப‌ன்னாடைக‌ளைக் க‌ண்டால் இதைத் தெரிவியுங்க‌ள்:

பொருளாதார‌த் த‌டைக‌ளுக்கு ம‌த்தியிலும் வட‌ கொரிய‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ந்து கொண்டிருப்ப‌தாக‌வும், ம‌க்க‌ளிட‌ம் தாராள‌மான‌ ப‌ண‌ப் புழ‌க்க‌ம் அதிக‌ரித்துள்ள‌தாக‌வும், நெத‌ர்லாந்து ப‌த்திரிகையான‌ NRC Handelsblad (1-7-17) த‌கவ‌ல் தெரிவித்துள்ள‌து.

பியாங்கியாங் ந‌க‌ரில் வ‌ருடாந்த‌ம் ந‌ட‌க்கும் ச‌ர்வ‌தேச‌ வ‌ர்த்த‌க‌ ச‌ந்தையில் ட‌ச்சு வ‌ணிக‌ர்க‌ளும் க‌டை போட்டிருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுட‌ன் சென்ற‌ செய்தியாள‌ர் தெரிவித்த‌ விப‌ர‌ங்க‌ள்:

ச‌ந்தையில் பெரும‌ள‌வு சீன‌ வியாபாரிக‌ளை காண‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து. அடுத்த‌ இட‌த்தில் ஈரானிய‌ர்க‌ள் அதிக‌ம். இந்த‌ இரு நாடுக‌ளும் வ‌ட‌ கொரியாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பால் அதிக‌ ஆதாய‌ம் பெறுகின்ற‌ன‌. வ‌ருடாவ‌ருட‌ம் க‌ண்காட்சி போன்று ந‌ட‌க்கும் ச‌ந்தையில், சாதார‌ண‌ வீட்டுப் பாவ‌னைப் பொருட்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, கார் கூட‌ விற்ப‌னையாகிற‌து.

அங்கு வ‌ரும் வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்கள் ம‌ருந்துக‌ள், மின்ன‌ணு உப‌க‌ர‌ண‌ங்க‌ள், என்று ப‌ல‌ பாவ‌னைப் பொருட்க‌ளை பெட்டி பெட்டியாக‌ வாங்கிச் செல்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு வ‌ருட‌மும் விற்ப‌னை கூடிக் கொண்டு செல்வ‌தாக‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

"என‌து நிறுவ‌ன‌த்திற்கு இலாப‌ம் வ‌ர‌வில்லை என்றால், என்னை எத‌ற்கு வ‌ட‌ கொரியாவுக்கு அனுப்ப‌ப் போகிறார்க‌ள்?" என்று ஒரு சீன‌ விற்ப‌னையாள‌ர் கேட்டார். "தான் முத‌ல் த‌ட‌வையாக,‌ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் வ‌ந்த‌ நேர‌ம், இந்த‌ள‌வு வியாபார‌ம் ந‌ட‌க்கும் என்று நினைத்திருக்க‌வில்லை" என்று ஓர் ஈரானிய‌ர் கூறினார்.

வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்க‌ள் கைக‌ளில் அமெரிக்க‌ டால‌ர், சீன‌ ரென்மினி போன்ற‌ ச‌ர்வ‌தேச‌ நாண‌ய‌ங்க‌ள் தாராள‌மாக‌ப் புழ‌ங்குகின்ற‌ன‌. அந்த‌ ச‌ந்தையில் பொருட்க‌ளை வாங்குவ‌த‌ற்கு அந்நிய‌ செலாவ‌ணி அவ‌சிய‌ம். அங்கு யாருமே வ‌ட‌ கொரிய‌ நாண‌ய‌ம் கொடுத்து வாங்க‌வில்லை.

பொருளாதார‌த் த‌டைக‌ளால் நாற்புற‌மும் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ வ‌ட‌ கொரியாவுக்குள், அந்நிய‌ நாண‌ய‌ங்க‌ள் செல்வ‌து எப்ப‌டி என்ப‌து ஒரு புரியாத‌ புதிர். சீனாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பு ம‌ட்டும் கார‌ணம் அல்ல‌. ஏராள‌மான‌ வ‌ட‌ கொரிய‌ர்க‌ள், ர‌ஷ்யா, சீனா, ம‌ற்றும் ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வேலை செய்து ப‌ண‌ம் அனுப்புகிறார்க‌ள். அத்துட‌ன் க‌ட‌த்த‌லும் தாராள‌மாக‌ ந‌ட‌க்கிற‌து.

வ‌ட‌ கொரியாவின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி கார‌ண‌மாக‌, 2011 ம் ஆண்டில் இருந்து வட‌ கொரிய‌ உழைப்பாளிக‌ளின் ச‌ம்ப‌ள‌ம் வ‌ருட‌த்திற்கு 2% கூடிக் கொண்டிருக்கிற‌து. வீட்டு வாட‌கை இல்லை. கல்வி, மருத்துவ செலவு இலவசம். எரிபொருள், போக்குவ‌ர‌த்து செல‌வும் மிக‌க் குறைவு. இத‌னால் சராசரி வட கொரியரின் கையில் மிஞ்சும் ப‌ண‌மும் கூடியுள்ள‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ட‌ கொரிய‌ பொருளாதார‌த்தில் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ சீர்திருத்த‌ங்க‌ளும் அத‌ன் வ‌ள‌ர்ச்சிக்கு கார‌ண‌ம். தென்கொரிய‌ பொருளிய‌ல் நிபுண‌ர்க‌ளே இதை உறுதிப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

தென் அமெரிக்க மத்திய வங்கியின் கணிப்பின் படி, வட கொரியாவின் பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு 1,5 முதல் 3 சதவீதமாக இருக்கலாம். கடந்த ஐந்து வருடங்களில், வட கொரியர்களின் வருடாந்த சம்பளம் 1.000 இலிருந்து 1.500 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

பெருமளவு வர்த்தகம் சீனாவுடன் நடக்கிறது என்பது வெள்ளிடைமலை. சந்தையில் நவீன சீன வாகனங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. வட கொரிய தெருக்களில் சீன வாகனங்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சீன இயந்திரங்களே வேலை செய்கின்றன.

சீனாவுடனான மொத்த வர்த்தகம், 1995 ம் ஆண்டு அரை பில்லியன் டாலர் அளவில் இருந்தது. 2016 ம் ஆண்டு அது 5,5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவை சீன சுங்கத்துறை, மற்றும் உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து எடுத்த தகவல்கள். சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான வர்த்தகத்துடன் (44 பில்லியன் டாலர்) ஒப்பிடும் பொழுது அது ஒன்றுமே இல்லை. இருப்பினும் அந்தத் தொகையானது வட கொரிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருந்தது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மறைந்து கொண்டிருக்கிறது. உழவர்கள் வயல்களில் மாடு கட்டி உழுவதும், கையால் உபகரணங்களை பாவிப்பதும், இன்னமும் சில இடங்களில் உள்ளது. ஆனால், நகரங்கள் மட்டுமல்லாது, கிராமங்களும் விரைவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றன. வொன்சான் போகும் வழி நெடுகிலும், கூரையில் சூரிய ஒளிக் கலங்களுடன், புதிய கல்வீடுகள் கட்டப்படும் காட்சியைக் காணலாம்.

வட கொரிய பொருளியல் நிபுணர்களுடன் பேசினால், இப்போதும் அவர்கள் "தேசியத் தலைவர்" கிம் இல் சுங் பெயரைக் குறிப்பிட்டுப் பேசத் தயங்குவதில்லை. தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, கிம் இல் சுங் உருவாக்கிய ஜூச்சே சித்தாந்தம் தற்போதும் நடைமுறையில் இருப்பதாக அரசு சொல்லிக் கொள்கிறது. இருப்பினும், வட கொரியப் பொருளாதாரம் பெருமளவு சீனாவில் தங்கியுள்ளது. எண்ணை கூட சீனாவில் இருந்து தான் வருகின்றது.

சீனாவில் தங்கியிருப்பதானது, ஒரு பக்கத்தில் வரப்பிரசாதமாகவும், மறுபக்கத்தில் பெரும் ஆபத்தாகவும் கருதப் படுகின்றது. அண்மையில், சீன பெற்றோலிய நிறுவனம், இன்னமும் கட்ட வேண்டிய பணம் பாக்கி இருப்பதாக கூறி, வட கொரியாவுக்கான எண்ணை விநியோகத்தை துண்டித்தது. 

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீனா அவ்வாறு நடந்து கொண்டது என்று வட கொரிய அரசு குற்றம் சாட்டுகின்றது. அணுவாயுத ஏவுகணைத் திட்டத்தை கைவிடச் சொல்லியே அந்த அழுத்தம் பிரயோகிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தம்மைத் தலைநிமிர வைத்த அணுவாயுத திட்டத்தை கைவிடுவதற்கு வட கொரியர்கள் தயாராக இல்லை.

Saturday, March 04, 2017

கழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை? - ஒரு பொருளியல் குறிப்பு



தயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். "பணம் என்றால் என்ன? முதலாளித்துவப் பொருளாதாரம் எப்படி இயங்குகின்றது?" இவை போன்ற அடிப்படை அறிவு இல்லாமல், கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்களுக்கு தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்து அவமானப் படாதீர்கள். 

கம்யூனிச எதிர்ப்புக் காய்ச்சலால் பீடிக்கப் பட்ட தமிழ் அறிவுஜீவிகள் பலர், தற்போது அடிக்கடி பிதற்றுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இலங்கையிலும், அதிலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பொதுவுடமைக்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு சகிக்க முடியாத அறிவுஜீவிகள், மிகவும் அபத்தமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இலங்கையில் முதலாளித்துவ பத்திரிகையான வீரகேசரியில், ஓர்   அபத்தமான கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை ஒன்று பிரசுரமானது. (27.02.2017)  "பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு" என்ற தலைப்பிலான கட்டுரையில், "முதலாளித்துவத்தின் குறைபாடுகளை" பொதுவுடைமை என்று திரித்து எழுதி பித்தலாட்டம் நடந்துள்ளது. (கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு)

அதாவது, கட்டுரையில் முதலாளித்துவம் என்பதற்கு பதிலாக, பொதுவுடைமை என்று மாற்றி எழுதியுள்ளார். அதற்குக் காரணம், அவருக்கு பொதுவுடைமை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. ஒரு அறிவுஜீவி தனது அறியாமையை வெளிப்படுத்தி எழுதியுள்ள கட்டுரையின் உண்மைத் தன்மையை ஆராயாமல், வீரகேசரி பத்திரிகை ஞாயிறு வாரமஞ்சரியில் பிரசுரித்து விட்டது. நான் அந்தக் கட்டுரையில் இருந்த அபத்தமான தகவல்களை சுட்டிக் காட்டி எழுதிய விமர்சனக் கட்டுரையை வீரகேசரிக்கு அனுப்பியும் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. (எனது மறுப்புக் கட்டுரை:பொதுவுடமை ஒரு "சிந்தனைவாதம்"(?) - ஒரு அபத்தக் குறிப்பு)

இலங்கையில் பத்தாம் வகுப்பில் இருந்து வணிகவியல் படிக்க முடியும். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயங்குகிறது என்பதை, பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் இலட்சக் கணக்கில் இருப்பார்கள். சாதாரணமான வணிகவியல் மாணவனுக்கே இலகுவாக புரியக்  கூடிய அபத்தமான கருத்துக்களை, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் "பெரும் மதிப்புக்குரிய" வீரகேசரி பத்திரிகை பிரசுரித்தது எப்படி?

எவ்வாறு ஒரு எழுத்தாளர் முதலாளித்துவத்தை பொதுவுடைமை என்று திரித்து தனது வாசகர்களை ஏமாற்ற முடிந்தது? அதற்குக் காரணம் பின்னால் உள்ள வர்க்க விரோத சிந்தனை. அதாவது, கம்யூனிசம் பற்றி நீங்கள் எத்தகைய அவதூறுகளையும் பரப்பலாம். அதற்கு வெகுஜன ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படும். அதைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு கூட்டம் தயாராக உள்ளது. குறிப்பாக, படித்த மத்திய தர வர்க்கத்தினர், குட்டி முதலாளிய சிந்தனை கொண்டோர் அதை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர்.

இந்தக் கட்டுரையாளர் தான் "கிழக்கு ஜெர்மனியில் ஏழாண்டுகள் கல்வி கற்றதாகவும், அங்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுதிய நூல்களை ஜெர்மன் மொழியில் கற்று, பரீட்சை எழுதி, சித்தி பெற்றதாகவும்" குறிப்பிட்டுள்ளார். எனது எதிர்வினைக்கு பதில் அளிக்க முடியாமல் சமாளித்து  "மார்க்ஸ் எழுதியதை ஜெர்மன் மொழியில் படிக்குமாறு(?)" பதில் கூறினார். 

விவிலிய நூலை கிரேக்க மொழியில் படிக்குமாறு சொன்னதைப் போன்று அவரது பதில் அமைந்திருந்தது. ஏற்கனவே மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் கடைகளில் விற்பனையாகின்றன. மொழிபெயர்ப்பு எந்தப் பிழையுமில்லாமல் சரியான பொருள் தருகின்றதா என்பது தான் முக்கியம். அவற்றை ஆங்கிலத்தில் அல்லது ஜெர்மன் மொழியில் படிக்குமாறு சொல்வதெல்லாம் அறிவுஜீவிகளின் தலைக்கனம்.

கட்டுரையில் இருந்து: //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.... அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன... இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்!

அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.

சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).

சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.// (ஆசி கந்தராஜா)

உண்மையில் இவருக்கு பொருளாதாரம் பற்றிய அரிச்சுவடி தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது. //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.// இதைச் சொல்லி விட்டு அமெரிக்க டாலர், ஸ்டேர்லிங் பவுன்ஸ் என்று தாவுகிறார். நாணயம் என்பது பரிவர்த்தனைக்கான ஊடகம். அது மட்டுமே பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. முதலில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும், சோஷலிச பொருளாதாரத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று பார்த்து விட்டு பணப் புழக்கத்திற்கு வருவோம்.

முதலாளித்துவ பொருளாதாரம் என்பது இயற்கையாக உருவாவது. அதனால் தான் சுதந்திர சந்தை பற்றிய கதையாடல்களும் வருகின்றன. அதாவது, சந்தையில் குறிப்பிட்ட பொருளுக்கு கேள்வி இருக்குமானால் அதை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொட்டுவார்கள். இதனால் நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு.

சந்தையில் தாராளமாக எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ள நன்மை. கேள்வி குறைந்து பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அந்த நேரம் மிதமிஞ்சிய நுகர்வுப் பொருட்களை யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் அழிக்க வேண்டி இருக்கும். இது முதலாளித்துவத்தின் தீய விளைவு.

அதற்கு மாறாக, சோஷலிச பொருளாதாரம் இயற்கையாக உருவாவதில்லை. அது எப்போதும் திட்டமிடப் பட்டதாக உள்ளது. அதனால் தான் சோஷலிச நாடுகளில், ஐந்தாண்டுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் பற்றிய கதையாடல்களும் நடந்து கொண்டிருந்தன. அதாவது, ஒட்டு மொத்த சமூகத்திலும் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு எந்தளவு தேவை இருக்கிறது என்பதற்கு அமைய, அந்தப் பொருள் அளவாக உற்பத்தி செய்யப்படும். 

அதற்கு முதலில் ஒரு நாட்டின் சனத்தொகை எவ்வளவு என்பன போன்ற புள்ளிவிபரங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும். இதிலும் நன்மை, தீமை இரண்டும் உண்டு. நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் தேவைகள் பூர்த்தி செய்யப் படுவது ஒரு நன்மை. ஆகையினால், கிடைக்கும் நுகர்வுப் பொருட்களை யாரும் வீணாக்க மாட்டார்கள். ஆனால் அதில் தீமையும் உள்ளது. ஒரு சில நேரம், எதிர்பார்ப்புகள் பிழைத்துப் போவதால், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதனால் தான் முன்னாள் சோஷலிச நாடுகளில் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது.

மேற்படி பொருளாதார அடிப்படை பற்றி எதுவும் பேசாமால், எடுத்த எடுப்பில் அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுன் என்று பேசுவது பாமரத்தனமானது. ஆம், அது பாமரத் தனமானது தான். சாதாரணமான மக்களுக்கு எப்போதும் டாலர்,பவுன் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். கடினச் செலாவணி (hard currency) எனப்படும் டாலர், பவுன், யூரோக்களை சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று உழைப்பவர் ஏராளம். அது சாதாரண மக்களின் மனநிலை. ஒரு மெத்தப் படித்த அறிவுஜீவி தனது "அனுபவக் குறிப்புகள்" என்று எழுதலாமா?

ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டம் என்று சொல்வார்கள். இது பற்றி லெனின் எழுதிய நூலில் புள்ளிவிபரங்களுடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 19 ம் நூற்றாண்டில் நவீன காலத்து சர்வதேச வர்த்தகம் தொடங்கியது. அப்போது பிரித்தானியா உலகில் அரைவாசியை காலனிப் படுத்தியதால், அதன் நாணயமான ஸ்டேர்லிங் பவுன்ஸ் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசானது. அதனால், சர்வதேச பொருளாதாரத்திலும் அமெரிக்காவின் மேலாதிக்கம் அதிகரித்தது. அதன் நிமித்தம், அமெரிக்க டாலர்களின் பாவனையும் கூடியது.

எதற்காக அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன? அதற்குப் பின்னால் உள்ள பொருளாதார காரணம் என்ன? அதற்கு முதலில் நாங்கள் பணம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பண்டமாற்று மூலமே வர்த்தகம் நடந்த காலத்தில் பணம் கொண்டுவரப் பட்டது. ஆனால், நாம் கண்ணால் காணும் பணம் ஒரு உலோகத் துண்டு அல்லது கடதாசி தான். பாவனையாளர்களான நாங்கள் தான் அதற்கு மதிப்பை கூட்டுகிறோம்.

ஆரம்பத்தில் தங்கம் அல்லது வெள்ளித் துண்டு தான் நாணயமாக பயன்படுத்தப் பட்டது. தங்கத்தின் பெறுமதியும், நாணயத்தின் பெறுமதியும் ஒன்றாக இருந்தது. தங்கத்தை வீட்டில் வைத்திருக்கப் பயந்த மக்கள், அவற்றை பாதுகாப்பாக நகை அடைவுக் கடைக்காரரிடம் கொடுத்தார்கள். அடைவுக் கடைக்காரர் தான் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டை எழுதிக் கொடுத்தார். பின்னர் அதுவே மக்கள் மத்தியில் பரிமாற்றிக் கொள்ள பட்டது. அதாவது, பற்றுச் சீட்டில் எழுதி உள்ள அளவு தங்கம் எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில், அது நாணயத் தாள் போன்று பயன்படுத்தப் பட்டது.

முதலாம் உலகப்போர் வரைக்கும், ஒரு நாட்டில் பணத்தாள்களை புழக்கத்திற்கு விடும் மத்திய வங்கி அதற்கு அளவான தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டியிருந்தது. டாலர், பவுன்ஸ் போன்ற அந்நிய செலாவணியும் தங்கத்திற்குப் பதிலாக வைத்திருந்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகள் உட்பட, இப்போதும் உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளில் பின்பற்றப் படும் நடைமுறை அது தான். தங்கத்திற்கும், பணத்திற்கும் இடையிலான உறவு நூற்றுக்கு நூறு வீதம் சரிசமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முதலாம் உலகப் போர் தொடங்க முன்னரே (குறிப்பாக 1914 இலிருந்து) மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில், மத்திய வங்கி குறைந்த பட்சம் நாற்பது சதவீத தங்கம் வைத்திருந்தாலே போதும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்குக் காரணம், தங்கத்தின் பெறுமதிக்கும், நாணயத்தின் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பு எப்போதோ துண்டிக்கப் பட்டு விட்டது.

தற்காலத்தில், நாணயத்தின் பெறுமதி தனியாக தீர்மானிக்கப் படுகின்றது. சாதாரணமாக பங்குச் சந்தை நிலவரத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்த உண்மை தெளிவாகப் புரியும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, டாலர் சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதே மாதிரி, பிற்காலத்தில் யூரோ நாணயமும் கொண்டு வரப் பட்டது. சுருக்கமாக, முன்பு தங்கம் வகித்த பாத்திரத்தை, தற்போது டாலர், யூரோ நாணயங்கள் நிரப்புகின்றன. அதனால் தங்கத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது.

ஆகவே, ஆசி கந்தராஜா கட்டுரையில் எழுதியது எத்தனை அபத்தமானது என்பது இப்போது நன்றாகப் புரிந்திருக்கும். அவர் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஏதோதோ உளறுகிறார்: //சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது.//

பணம் மட்டும் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. மேலும் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது ஒரு ஐரோப்பியப் பழமொழி! இன்றைக்கும் நீங்கள் ஒரு சாதாரண ஐரோப்பியக் குடிமகனிடம் கேட்டாலும் அதைச் சொல்வான். அதை "கார்ல் மார்க்ஸ் சொன்ன பொருளாதார தத்துவம்" என்று திரிப்பது எத்தனை அபத்தமானது? 

உண்மையில் அவருக்கு கார்ல் மார்க்ஸ் சொன்னது எதுவும் தெரியாது. அதே நேரம் பொருளாதாரமும் தெரியாது. பணம் ஓரிடத்தில் நிரந்தரமாக தங்கக் கூடாது என்பதற்காக தான், மேற்குலக நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவித்தார்கள். அது தற்போது இந்தியா, இலங்கை போன்ற பழமைவாத கலாச்சாரம் கொண்ட நாடுகளிலும் வந்து விட்டது.

//சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும்.// இது ஒரு மிகப் பெரிய பொய். இவர் முதலாளித்துவ நாடுகளின் பணம் பற்றிய கோட்பாட்டை, அதுவும் அரைவேக்காட்டுத்தனமாக, சோஷலிச நாடுகளுடையதாக திரிக்கிறார். தன்னை மாதிரியே, தனது கட்டுரையை வாசிப்பவர்களுக்கும் பொருளாதார அடிப்படை எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் மடமையை என்னவென்பது?

முதலாளித்துவ நாடுகளில் பணம் எத்தகைய பங்கு வகிக்கின்றதோ, அதே பங்கை சோஷலிச நாடுகளிலும் வகிக்கும். ஏனென்றால், பணம் என்பது ஒரு பரிவர்த்தனை ஊடகம் மட்டுமே. பணத்தை இல்லாதொழிப்பது தான் கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால இலட்சியம். அதனால், சோஷலிச நாடுகளில் சில இடங்களில் பண்டமாற்று ஊக்குவிக்கப் பட்டது. பிற சோஷலிச நாடுகளுடனும் பண்டமாற்று மூலம் வர்த்தகம் நடந்தது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில் பாவனைக்கும், விற்பனைக்கும் விடப்படும் பொருட்களுக்கும், பணப் புழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆயினும், அங்கே கூட, "பொருளின் பெறுமதிக்கு ஏற்ப பணம் புழக்கத்திற்கு" விடப் படுவதில்லை. அது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. அமெரிக்க பொருளியல் அறிஞர் இர்விங் பிஷர் (Irving Fisher) எழுதிய பணம் பற்றிய கோட்பாடு தான் இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளால் பின்பற்றப் படுகின்றன. அது என்ன கோட்பாடு?

வங்கிகள் பணத்தை உருவாக்கி சமூகத்தில் புழக்கத்திற்கு விடுகின்றன. இதை "பண உற்பத்தி" (M) என்று குறித்துக் கொள்வோம். அந்தப் பணம் கடனாகவோ, ஏற்றுமதியாகவோ பரிமாற்றம் செய்யப் படுகின்றது. அதை "பரிமாற்றம்" (V) என்று குறித்துக் கொள்வோம். பரிமாற்றம் விரைவாக நடந்து கொண்டிருந்தால், புதிய பணமும் உருவாகிக் கொண்டிருக்கும். ஒருவேளை கடன் வாங்க யாருமில்லை, அல்லது எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டார்கள் என்றால், புதிய பணம் உருவாகாது.

சமூகத்தில் பணம் பெருகும் பொழுது, இன்னொரு பக்கத்தில் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கும். அதை "விற்பனைப் பொருட்கள்" (P) என்று குறித்துக் கொள்வோம். பொருட்களின் பாவனையும், விற்பனையும் விரைவாக கூடிக் கொண்டிருக்கும். அதை "விற்பனை" (T) என்று குறித்துக் கொள்வோம்.

ஒரு பக்கத்தில், M கூடும் பொழுது V கூடுகிறது (M x V). மறுபக்கத்தில், P கூடும் பொழுது T கூடுகின்றது (P x T). இவ்விரண்டும் சமமாக இருந்தால் தான் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட முடியும்.

அதாவது, MV = PT.

ஒரு நாட்டில் பணவீக்கம் எப்படி ஏற்படுகின்றது? புதிதாக அச்சடிக்கப் படும் பணத் தாள்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வாங்குவதற்கு தேவையான பொருட்கள் குறைவாகவும் இருந்தால் பணவீக்கம் என்கிறோம். ஆனால், பொதுவாக ஒரு நாட்டில் பணவீக்கம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். பணக்கார முதலாளித்துவ நாடுகளிலும் இருக்கவே செய்யும். அதற்குக் காரணம் கடன்களும், பரிவர்த்தனைகளும் அதிகமாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் புதிய பணத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி பொருளாதார தத்துவத்திற்கு அமையத் தான், அமெரிக்க டாலர்களும், பிரிட்டிஷ் பவுன்களும் உலகம் முழுக்க சுற்றுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிற உலக நாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறன. அதன் அர்த்தம், அதே ஒரு மில்லியன் டாலர்கள் அமெரிக்க நாட்டுக்குள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன. அதாவது, வழமைக்கு மாறாக இரண்டு மடங்கு டாலர்கள் அச்சிடப் பட்டுள்ளன.

இந்த இடத்தில் ஆசி கந்தராஜா ஒரு நகைப்புக்குரிய, அரைவேக்காட்டுத்தனமான காரணத்தை கூறுகின்றார்: //இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.//😄😄😄

கந்தராஜாவின் கூற்றில் உள்ள அபத்தம் என்னவென்று அதை வாசிக்கும் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் அளவு தான் பணத் தாள்களை அச்சிட வேண்டும் என்பது நியதி என்றால், வெளியில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் டாலர்களுக்கு அளவான தங்கத்திற்கு எங்கே போவார்கள்? அருகில் உள்ள கனடா, மெக்சிகோ மீது படை எடுத்து அங்கிருக்கும் தங்கத்தை எல்லாம் கொள்ளையடிக்க வேண்டும்! அமெரிக்கா ஒரு "ஜனநாயக" நாடு, அப்படி நடக்காது என்று வைத்துக் கொண்டால், ஏற்கனவே அமெரிக்காவினுள் டாலர் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு இருக்க வேண்டும். அதாவது அங்கு பணச் சுருக்கம் (deflation) நிலவ வேண்டும்.

அப்படியானால், அமெரிக்காவின் பொருளாதார பலத்தின் சூக்குமம் என்ன? கடன், கடன், கடன் மட்டுமே! நாட்டில் எவ்வளவுக்கெவ்வளவு கடன் அதிகரிக்கின்றதோ அதற்கு ஏற்றவாறு பணத் தாள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒருவர் வங்கியில் பத்தாயிரம் டாலர்கள் கடனாக கேட்கிறார். வங்கி தன்னிடம் இருந்த பத்தாயிரம் டாலரை எடுத்துக் கொடுத்து விட்டு, நடப்புக் கணக்கில் எழுதி வைக்கின்றது. நடப்புக் கணக்கு என்பது ஒரு நிரந்தரமில்லாத தற்காலிகமான கணக்கு. ஏன் அதில் குறித்துக் கொள்கிறது? கடனாக கொடுக்கப் பட்ட பத்தாயிரம் டாலருக்கு ஈடாக புதிதாக பத்தாயிரம் டாலர்கள் உருவாக்கப் படுகின்றன. அதாவது, கடனில் இருந்து புதிய பணம் பிறக்கிறது.

ஒரு நாட்டில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் காலத்தில் கடனில் உருவாகும் புதிய பணத்தால் எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. ஆனால், ஒரு காலத்தில் எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டால், அல்லது கட்டாமல் ஓடி விட்டால், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உண்டாகும். 2008 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்ததும் அது தான். புதிது புதிதாக வீடுகளை கட்டி, கடனுக்கு விற்று வந்தார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கூட வீடு வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் பெரும்பான்மை கடனாளிகள் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை உருவானது. அதன் விளைவு? நிதி நெருக்கடி. மிகப் பெரிய அமெரிக்க வங்கிகள் கூட திவாலாகின.

ஆகவே, கந்தராஜா சொல்வது மாதிரி, வெளிநாடுகளில் உள்ள டாலர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வந்தால் அங்கே ஏற்படப் போவது "சடுதியான பணவீக்கம்" அல்ல. மாறாக, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி. பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடையும். ஒரு தேசமே திவாலாகி விடும். பொதுவுடமையை விமர்சிப்பதற்கு முன்னர், முதலாளித்துவம் என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளுங்கள்.

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஆதாரமாக Arnold Heertje எழுதிய Economie நூலில் சில பகுதிகளை எடுத்திருக்கிறேன். அவர் ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். ஒரு முதலாளித்துவ நாடான நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக பேராசிரியராக கடமையாற்றி உள்ளார். அவருக்கு எனது நன்றிகள்.)

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Monday, December 12, 2016

"கருப்புப்பண ஒழிப்பு" போர்வையில் இந்திய வங்கிகளின் ஆக்கிரமிப்பு


இந்தியாவில் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பானது, கறுப்புப் பண ஒழிப்பை விட வேறு நோக்கங்களை கொண்டிருந்தது. உண்மையில் அது ஓர் அதிர்ச்சி வைத்தியமாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி நாணயப் பரிமாற்றமாக நடைபெறுகின்றது. அதை முழுவதும் "பிளாஸ்டிக் பணம்" என்று சொல்லப் படும், டெபிட் கார்ட் பரிவர்த்தனையாக மாற்றும் திட்டம் அரசிடம் இருக்கலாம். இதன் மூலம் பணத்தை யாரும் கண்ணால் காண முடியாது. ஆனால் அது பரிவர்த்தனையில் இருக்கும்.

மேலைத்தேய நாடுகளில் நாணய நோட்டுக்களின் பாவனை மிகவும் குறைவு. ஒருவர் நாள் கணக்கில், சிலநேரம் மாதக் கணக்கில் கூட காசை கண்ணால் காணாமல் வாழ முடியும். பையில் பணம் இல்லாமல் வெளியே நடமாட முடியும். அதாவது, வங்கி அட்டை மட்டுமே போதுமானது. மேற்கு ஐரோப்பாவில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களில் பலர், ஐம்பது யூரோவுக்கு மேற்பட்ட நோட்டுக்களை கண்ணால் காணவில்லை என்பது புதினமல்ல.

இந்தியாவிலும் அது போன்றதொரு நிலைமையை கொண்டு வருவதற்காக, அரசு ஒரு அதிர்ச்சி வைத்தியம் நடத்தி உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையான மக்கள் வங்கிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். இனிமேல் அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் வங்கிகள் ஊடாகவே நடைபெறும். அதற்காக ஊக்குவிக்கப் படும். சிறிய பெட்டிக் கடைகள், சந்தை வியாபாரிகள் கூட டெபிட் கார்ட் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

வேடிக்கை என்னவென்றால், இதன் மூலம் கறுப்புப் பணம் அதிகரிக்குமே தவிரக் குறையாது. சிறிய பணக்காரர்கள், சிறிய முதலாளிகள் மட்டும் பாதிக்கப் படுவார்கள். அவர்களது முதலீடுகள் குறையும். வர்த்தகம் நலிவடையும். அதே நேரத்தில், மறுபக்கத்தில் பெரிய பணக்காரர்களும், பெரிய முதலாளிகளும் வளர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தேங்கும் கறுப்புப் பணத்தை, இலகுவாக வரி இல்லா சொர்க்கத் தீவுகளுக்கு அனுப்பி விடுவார்கள்.

ஆதார் அட்டைக்கும் "கறுப்புப் பண ஒழிப்பு" க்கும் சம்பந்தம் இருக்கிறதா? இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதன் மூலம், சிறிய நிறுவனங்களுக்கு அல்லது சிறிய முதலாளிகளின் அழிவுக் காலம் ஆரம்பமாகியுள்ளது!

இந்திய அரசு 500, 1000 ரூபா நோட்டுக்களை செல்லாதாக்கிய அறிவித்தலுக்கு முன்னரே ஆதார் அட்டை திட்டம் வந்து விட்டது. இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலகட்டத்தில் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆதார் அட்டை திட்டம் ஏற்கனவே மேற்குலக நாடுகளில் நடைமுறையில் உள்ளது தான். அங்கு புதிதாக வேலைக்கு சேரும் ஒருவர், முக்கியமாக மூன்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 1.அடையாள அட்டை 2.ஆள் அடையாள இலக்கம் 3.வங்கிக் கணக்கிலக்கம்

இவை இல்லாமல் ஒருவர் வேலை செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, எந்த நிறுவனமும் யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது. ஆதார் அட்டை என்ற ஆள் அடையாள இலக்கம் அரச வரித் திணைக்களத்தில் பதிவில் இருக்கும். அதன் மூலம் யார் எங்கே வேலை செய்தார்? எவ்வளவு பணம் சம்பளமாகப் பெற்றுக் கொண்டார்? இது போன்ற விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கலாம்.

ஒவ்வொரு நிறுவனமும் வேலைக்கு அமர்த்தும் தொழிலாளியின் ஆள் அடையாள இலக்கத்தை வாங்கி பதிவு செய்வதன் மூலம் சம்பளத் தொகை பற்றிய விபரங்களையும் அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த வழமைக்கு மாறாக, ஒரு நிறுவனம் தனது வேலையாளுக்கு "கையில் பணம் கொடுத்தது" தெரிய வந்தால், அது பெரும் மோசடிக் குற்றமாகக் கருதப் படும். அந்தக் குற்றத்திற்காக, அரசுக்கு பெருமளவு தண்டப் பணம் கட்ட வேண்டி இருக்கும்.

சிலநேரம், தனி நபர்கள் தமது வீட்டு திருத்த வேலைகளுக்காக வேலையாட்களை நாட்கூலிக்கு அமர்த்துவார்கள். அவர்கள் எந்தக் கணக்கு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் பண நோட்டுக்களாக கையில் கொடுப்பார்கள். இது மேற்கத்திய நாடுகளிலும் நடக்கிறது. இது சிலநேரம், "சட்டத்தின் படி தவறாக இருந்தாலும்" கண்காணிப்பதில் உள்ள சிரமம் காரணமாக அரசு கண்டுகொள்வதில்லை.

ஆனால், சிறிய நிறுவனங்களின் பாடு திண்டாட்டமாகி விடும். ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட நிறுவனங்கள் என்பதால், ஊழியர்களின் சம்பளத்தையும் வங்கி மூலமாகத் தான் செலுத்த வேண்டும். ஒரு தொழிலாளி சில மணிநேரங்கள் வேலை செய்திருந்தாலும், கணக்கு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், பின்னர் நடக்கும் பரிசோதனையில் குறிப்பிட்ட நிறுவனம் நிதி மோசடி செய்ததாக கருதப் படும்.

தமது ஊழியர்களின் சம்பளம் ஒழுங்காக கணக்கு பார்த்து வங்கியில் போடுவது, பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால், சிறிய நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தில் தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கப் பார்ப்பது வழமை. குறைந்த பட்சம், கையில் பணம் கொடுப்பதால் அரசுக்கு கட்டும் வரியை ஆவது மிச்சம் பிடிக்கலாம்.

வேலையாட்கள் கட்ட வேண்டிய வருமான வரி தவிர, அவர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக கம்பனி கட்ட வேண்டிய வரி தனியானது. இதைத் தவிர காப்புறுதிகளும் கட்டப் படுவதில்லை. கையில் சம்பளம் கொடுப்பதால், அரசுக்கு வரி இழப்பும், காப்புறுதி நிறுவனங்களுக்கு வருமான இழப்பும் ஏற்படுகின்றது. எல்லோருடைய சம்பளப் பணமும் வங்கி மூலமே செலுத்தப் பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் அந்த நிலையில் மாற்றம் வரும்.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதன் மூலம், சிறிய நிறுவனங்களுக்கு அல்லது சிறிய முதலாளிகளின் அழிவுக் காலம் ஆரம்பமாகியுள்ளது என்று சொல்லலாம்! அன்றாட கூலித் தொழிலாளர்கள் தம்மிடமுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அல்லலுற்றதை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். கையில் காசிருந்தும் எதையும் வாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தனர்.

பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சிறிய நிறுவனங்கள் தான். அவர்கள் எப்போதும் சம்பளம் கொடுப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கைவசம் வைத்திருப்பார்கள். காசு செல்லாத பிரச்சினையால் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களது நம்பகத் தன்மையும் அடி பட்டுப் போனது.

எதிர்காலத்தில், மிகச் சிறிய பொருளாதாரத் துறைகளிலும் பெரிய நிறுவனங்கள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சிறிய நிறுவனங்களை தரகர்களாக அல்லது தமக்கு கீழ்ப்பட்ட கிளை நிறுவனமாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வளவு காலமும் சுதந்திரமாக இயங்கிய சிறிய முதலாளிகள் இனிமேல் தரகர்களாக மாறுவார்கள்.

இந்தத் திட்டத்தினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தலாம்.

1. சிறிய நிறுவனங்களை புதைகுழிக்குள் அனுப்பலாம். இதனால், "தாராள சுதந்திர சந்தையில்" போட்டி குறைக்கப் படும்.

2. அடித்தட்டு கூலித் தொழிலாளர்களும் தாமாகவே பெரிய நிறுவனங்களுக்குள் உள்வாங்கப் படுவார்கள். அவர்களுக்கான சம்பளப் பணம் வங்கிகளில் செலுத்தப் படும். இதனால் வங்கிகளுக்கு பெருந்தொகைப் பணம் இருப்பில் வந்து சேரும்.

500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதால் பாதிப்படையாத ஒரு பிரிவும் இருந்தது. பெரிய நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்பவர்களும் தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். நாளாந்தம் வங்கிப் பரிவர்த்தனை செய்வதில் உள்ள அனுகூலங்களை அனுபவிப்பவர்கள்.

ஒரு சிலர், "நாம் டெபிட் கார்ட் பாவிக்கிறோம்" என்று மிதப்பாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரிந்தார்கள். அப்படி அவர்களை சொல்ல வைத்தது எதுவென்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இதற்குப் பின்னால் உள்ள சிக்கலான பொருளாதார சூட்சுமங்களையும் அறிந்திருக்க மாட்டார்கள்.

நாங்கள் நூறு ரூபாயை இன்னொருவருக்கு பரிவர்த்தனை செய்யும் பொழுது அதன் மதிப்பு குறையாமல் நூறு ரூபாயாகவே இருக்கும். ஆனால், "கேஷ் லெஸ் பொருளாதாரம்" எனப்படும், வங்கி அட்டைகளின் மூலம் நடக்கும் பரிவர்த்தனையில் எமக்கு சிறியளவில் பண இழப்பு ஏற்படும்.

பணப் பரிவர்த்தனை முழுவதும் வங்கிகள் ஊடாக நடக்குமானால் அதற்கான சேவைக் கட்டணமும் அறவிடப் படும். ஏனென்றால் வங்கி ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல. பணத்தை வைத்து தொழில் நடத்தும் ஒரு வர்த்தக ஸ்தாபனம். இதனால் நாம் எல்லோரும், எமது வருமானத்தில் ஒரு குறிப்பிட்டளவு பகுதி வங்கிகளுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்தியாவில் தற்போது நடைபெறும் மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளில் குறைந்தது நாற்பது வருடங்களுக்கு முன்னரே வந்து விட்டன. ஒரு கூலித் தொழிலாளியாக இருந்தாலும், அனைத்து உழைப்பாளிகளும் தமது சம்பளத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்கின்றனர்.

எமது சம்பளம் அப்படியே ஒரு சதம் மாற்றம் இல்லாமல் எமது கைக்கு வருகிறது என்று சொல்ல முடியாது. வங்கியின் இடைத் தரகர் வேலைக்கு நாம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்சம் வங்கி அட்டையை பயன்படுத்துவதற்காக வாடகை கட்ட வேண்டும்.

ATM மூலமாக வங்கியில் இருந்து பணம் எடுத்தால், அதற்கும் சேவைக் கட்டணம் கட்ட வேண்டும். அதாவது எமது பணத்தை நாம் எடுப்பதற்கு காசு கொடுக்க வேண்டும்! அதை நாம் தவிர்க்க முடியாது. இதை விட வங்கி ஊடாக இன்னொரு கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யவும் காசு கொடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு இது சாதாரணமான விடயமாகத் தெரியலாம். ஆனால், வருடந்தோறும் வங்கிகள் எம்மிடம் இருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றன என்பதை ஆராய்வதில்லை.

நான் ஐரோப்பாவுக்கு வந்த புதிதில், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு, ஒவ்வொரு தடவையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் கட்டணம் அறவிடப் பட்டது. சொந்த வங்கியை தவிர்த்து, வேறொரு வங்கியில் பணம் எடுத்தால் அதற்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், டெபிட் கார்ட் அல்லது வங்கி அட்டை மூலமாக பணம் செலுத்தினாலும் கமிஷன் கொடுக்க வேண்டி இருந்தது.

அனேகமாக, பத்து வருடங்களுக்கு முன்னர் தான் அந்த நிலைமை மாறியது. அதுவும் அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக மாற்றிக் கொண்டார்கள். மேலும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது. இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் வங்கிகள் எந்தக் கவலையும் இல்லாமல் வாடிக்கையாளரின் பணத்தை சுரண்டலாம். அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லை. மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை.

இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் கூட வங்கிகள் வருடாந்த சேவைக் கட்டணம் அறவிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதாவது, வங்கியை பயன்படுத்துவதற்கு அல்லது வங்கி அட்டையை பாவிப்பதற்கான கட்டணம். அதே நேரம், வங்கிகள் முன்பு நேரடியாக அறவிட்ட பரிவர்த்தனைக் கட்டணத்தை, தற்போது மறைமுகமாக எடுக்கிறார்கள்.

நாம் ஒரு கடையில் டெபிட் கார்ட் பாவித்து பொருட்களை வாங்கினால், அந்தப் பரிவர்த்தனைக்கு ஒரு கட்டணம் உண்டு. நாங்கள் அதைக் கட்டுவதில்லை என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் பொருட்கள் வாங்கிய கடை வங்கிக்கு கட்டிக் கொண்டிருக்கும். அவர்கள் அந்தத் தொகையை பொருட்களின் விலைகளுடன் சேர்த்து விடுவார்கள். ஆகவே, இறுதியில் நாம் தான் அந்தக் கட்டணத்தை கட்டுகிறோம்.

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நாணய நோட்டுக்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனை பல மடங்கு அதிகம். எண்பது சதவீத பொருளாதாரம் வங்கிகளை தவிர்த்து விட்டு நடப்பதாக கருதப் படுகின்றது. இது வங்கித் துறைக்கும், நிதி மூலதன முதலாளிகளுக்கும் "மிகப் பெரிய இழப்பு"!

"டிஜிட்டல் இந்தியாவில்", அனைத்து மக்களையும் வங்கிகளில் தங்கியிருக்க வைத்தால், பில்லியன் கணக்கான ரூபாய்கள் வங்கி முதலாளிகளின் கையிருப்பில் குவியும். அவர்கள் அந்தப் பணத்தை பேரழிவு யுத்தங்களிலும் முதலிட்டு மேலதிக இலாபம் சம்பாதிக்கலாம்.

Saturday, June 06, 2015

கடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்


மிலேச்சத்தனமான முதலாளித்துவ சர்வாதிகாரம் பற்றிய உண்மைகளை உரைப்பவர்கள், "நீர்க்குமிழிக்குள் வாழ்கிறார்கள்" என்று ஒரு நண்பர் விமர்சித்திருந்தார். இன்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரம், அடிப்படையில் ஒரு நீர்க்குமிழி பொருளாதாரம் என்பதற்கு அடுத்தடுத்து வந்த நெருக்கடிகளே சாட்சியம் கூறுகின்றன. அண்மையில் அமெரிக்காவில் வந்த கடன் நெருக்கடி, கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்? இது பற்றிய ஆவணப் படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், Zembla ஊடகவியலாளர்கள் தயாரித்தளித்த நிகழ்ச்சியில் பேசப் பட்ட விடயங்களை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

பண்டைய காலத்தில், மெசப்பத்தோமியா நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை ஆனால் கடன் இருந்தது. கடன் பத்திரங்களை கல்வெட்டுகளில் பொறித்து வைத்தார்கள். மத்திய காலத்தில், போர்ச் செலவுகளுக்காக, மன்னர்கள் வணிகர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. அது நவீன கால கடன் வழங்கும் வங்கிகளின் தோற்றத்திற்கு வித்திட்டது.

நாங்கள் எல்லோரும் கடன் வாங்குகிறோம். தனி மனிதர்கள் கடன் வாங்குவது போல, அரசுகளும் கடன் வாங்குகின்றன. அரசு என்பதற்காக, கடன் கொடுப்பவர்கள் தமது நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வதில்லை. ஒரு சாதாரண மனிதன், அளவுக்கு மிஞ்சி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அவனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், பட்டினி கிடந்தாயினும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுவார்கள். 

அதையே தான், நாடுகள் விடயத்திலும் பின்பற்றுகிறார்கள். கடன் வாங்கிய அரசுகள், தமது செலவுகளை சிக்கனப் படுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை நாங்கள் அரசியல்-பொருளாதார கலைச்சொல்லில் சிக்கனப் படுத்தும் கொள்கை (Austerity) என்று சொல்கிறோம். ஆனால் விஷயம் ஒன்று தான். "உன்னுடைய செலவுகளை குறைத்து, மிச்சம் பிடித்து, வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடு."

இன்று கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் அது தான். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப் பட்ட காலத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். ஒரு ஐரோப்பிய நாடு அந்த அமைப்பில் உறுப்புரிமை பெறுவதற்காக, கடன்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். அது அந்த தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியின் அளவுக்கு கீழே, அதாவது 60% க்கும் கீழே இருக்க வேண்டும். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மொத்த பொருளாதார உற்பத்தியையும் (BNP), மொத்த கடன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். கடன் தொகை BNP யை விட அதிகரித்து விட்டால், அந்த நாடு திவாலாகி விடும். கிரேக்க நாட்டில் அது தான் நடந்தது. மொத்த கடன் தொகை, மொத்த பொருளாதார உற்பத்தியை விட, 129% அதிகமாக இருந்தது!

கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விட, அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெரிதும் விரும்புகின்றன. கடன் வாங்கிய நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கடனை திருப்பி வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆனால், நாடுகள் விடயத்தில் அப்படி அல்ல. ஓர் அரசு கடன் வாங்கினால், அந்த நாடு கடனை குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டாலும், வங்கிகள் கவலைப் படப் போவதில்லை. ஏன்?

இலங்கை, இந்தியா போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற பணக்கார நாடுகளும் கடன் வாங்குகின்றன. கடன் விடயத்தில், ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாகுபாடு கிடையாது. அதாவது, கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரையில் எல்லா அரசுகளும் ஒன்று தான். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்தால் சரி.

இந்தக் கடன்களை யார் அடைக்கப் போகிறார்கள்? நிச்சயமாக, வரி கட்டும் சாதாரண மக்கள் தான். ஒவ்வொரு நாளும் இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. வருங்காலத்தில் அவர்கள் வரி கட்டுவார்கள். அதாவது, தனது சொந்த நாட்டு மக்களை பிணை வைத்து தான், அரசுகள் கடன் வாங்குகின்றன. எமது அரசுக்கள் வாங்கிய கடன்களையும், வட்டிகளையும் நாங்கள் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். 

அதனால் தான், எந்த நாட்டு அரசு கடன் கேட்டாலும், அது இலங்கை மாதிரி போரினால் அழிந்து கொண்டிருக்கும் ஏழை நாடாக இருந்தாலும், வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன. அதற்குக் காரணம், அந்தப் பணத்தை எந்தக் காலத்திலும் திருப்பி வாங்கலாம். நூறு வருடங்களுக்குப் பிறகு அங்கு பிறக்கும் பிள்ளைகளிடம் இருந்தென்றாலும் வட்டியோடு வாங்கலாம். 

கடன்களுக்காக கட்டப் படும் வட்டித் தொகையினால், வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. வங்கிகளைப் பொறுத்தவரையில், கடன் என்பது பணம் பெருக்கும் இயந்திரம். இதனால், உலகின் ஒரு மூலையில் பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ள பணம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில், ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அரசுகள், வங்கிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதனால் பொது மக்கள் நலன் பேணும் திட்டங்களை கைவிடுகின்றன. அதன் விளைவு என்ன? மக்கள் தமது அரசுகள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒரு பலமான தலைவருக்காக ஏங்குகிறார்கள். 

அந்தப் புதிய அரசியல் தலைவர் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி எவர் பேசினாலும், அவரது அரசியல் பின்னணி பற்றி ஆராயாமல் ஆதரிக்கிறனர். ஜெர்மனியில் நாஸிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த நிலைமையில், இன்றைய ஐரோப்பா உள்ளது. அந்த ஆபத்து குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியில் எச்சரிக்கையுணர்வு இல்லை. இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவில்லையா? இருக்கிறது. புரட்சி மட்டுமே தீர்வைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் புரட்சி நடந்து புதிதாக ஆட்சியமைக்கும் அரசு புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கடன்களை இரத்து செய்ய முடியும். அது மட்டுமல்ல, உலகப்போர்களும் கடன்களை இரத்து செய்வதற்கான காரணங்களை வழங்குகின்றன. 

உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் பழைய கடன்கள் யாவும் இரத்து செய்யப் பட்டன. அதனால் தான் ஜெர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ச்சி அடைய முடிந்தது. அன்று கடன்களை இரத்து செய்தபடியால் நன்மை அடைந்த ஜெர்மனி, இன்று கிரீசுக்கு தான் வழங்கிய கடன்களை இரத்து செய்ய மறுத்து வருகின்றது!

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு:
De schuldenmachine; http://www.npo.nl/zembla/20-05-2015/VARA_101372895

Saturday, January 24, 2015

தாமஸ் பிக்கெட்டி, யார் இவர்?


தாமஸ் பிக்கெட்டி. யார் இவர்? பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞர். அவர் எழுதிய 21 ம் நூற்றாண்டின் மூலதனம் எனும் நூல், 27 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அவர் செல்லுமிடமெங்கும் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு உரிய வரவேற்புக் கிடைக்கிறது. நெதர்லாந்து அரசாங்கம் அவரை அழைத்து பாராளுமன்றத்தில் பேச வைக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சொற்பொழிவாற்றிய மண்டபம் ஜனத்திரளால் நிறைந்து காணப் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

 21 ம் நூற்றாண்டின் மூலதனம் நூல், கார்ல் மார்க்ஸ் எழுதிய காலத்தால் அழியாத மூலதனம் நூலை நினைவுபடுத்தினாலும், தாமஸ் பிக்கெட்டி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் இடதுசாரியோ, அல்லது வலதுசாரியோ அல்ல. ஆனால், இடதுசாரிகள் அவரைக் கொண்டாடினார்கள். வலதுசாரிகள் அவரை கௌரவித்தார்கள். இத்தனைக்கும் காரணம், பணக்கார மேற்கத்திய நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை, ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில், பொருளாதாரம் சம்பந்தமான முற்போக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் Tegenlicht, தாமஸ் பிக்கெட்டியை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தாமஸ் பிக்கெட்டி செல்லுமிடமெங்கும், முற்போக்கான வரி அறவிடப் பட வேண்டும் என்று கோரி வருகின்றார். அது என்ன முற்போக்கு வரி? இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில், அரசுகள் வருமான வரி அறவிட்டு வருகின்றன. உழைப்பவர்கள் எல்லோரும், தாம் பெற்ற ஊதியத்திற்கு செலுத்த வேண்டிய வரி, இனிமேல் தேவையில்லை. ஏனென்றால் அது வறுமையை அதிகரிக்கின்றது.

அதற்குப் பதிலாக, சொத்து வரி அதிகரிக்கப் பட வேண்டும். சொத்து என்பது பணக்காரர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமல்ல. பெரும் நிறுவனங்களின் மூலதன திரட்சியும் சொத்து தான். அரசாங்கம் அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு வரி தான் அறவிட்டு வருகின்றது.

வேலை செய்யும் எல்லோரும் கட்டும் வருமான வரியும், பணக்காரர்களின் சொத்துக்களுக்கான மிகக் குறைந்தளவு வரியும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அதிகரிக்க வைக்கிறது. பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான். 

நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் ஒரு புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆகையினால், அரசாங்கங்கள் உடனடியாக முற்போக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். உழைப்பவர்கள் மீதான வருமான வரியை நிறுத்தி விட்டு, சொத்துக்கள் மீதான கூடுதல் வரி அறவிடப் பட வேண்டும்.

"பிரெஞ்சுப் புரட்சி மாதிரி ஒரு வன்முறைப் புரட்சியை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பிக்கெட்டி அளித்த பதில்: 
"இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்துள்ள மக்கள் எழுச்சியும் புரட்சியின் ஒரு கட்டம் தான். புரட்சி என்பது என்ன? சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை தக்க வைத்திருப்பது தான் முக்கியமானது.

"கம்யூனிசம் தோற்றுப் போன சித்தாந்தம்..." என்று இப்போதும் அறியாமை காரணமாக சொல்லித் திரிபவர்கள், "முதலாளித்துவம் வெற்றி அடைந்த சித்தாந்தம்" என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் லிபரல் கொள்கை தோற்றுப் போனதால், பிற்காலத்தில் நவ- லிபரலிச கொள்கை வந்தது. Trickle down economy எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றார்கள்.

அதாவது, நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது மாதிரி, பணக்காரர்களை வாழவைத்தால் ஏழைகளுக்கும் நன்மை கிடைக்கும் என்ற தத்துவம். ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை மேலும் ஏழையாவதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 

Trickle down economy ஆல் நன்மை அடைந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இதை நாங்கள் ஏன் முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லிக் கொள்வதில்லை? உண்மையில் முதலாளித்துவம் தோல்வியின் விளிம்பில் நின்ற படியால் தான், தாமஸ் பிக்கெட்டியை கௌரவிக்கின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு கீழே. தாமஸ் பிக்கெட்டி ஆங்கிலத்தில் பேசுவதால், டச்சு மொழி தெரியாதவர்களும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.



இது தொடர்பான முன்னைய பதிவு:

Wednesday, January 21, 2015

அப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...


 பிரான்ஸ் நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய, "21 ம் நூற்றாண்டு மூலதனம்" நூல் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது இலகுவாக வாசித்தறியக் கூடிய நூல் இல்லையென்றாலும், அதை வாசிப்பதற்கு பொருளாதாரம் பற்றிய முன் அறிவு தேவையில்லை. 

நெதர்லாந்தில், வருமானம் குறைந்தோருக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப் படும் MUG சஞ்சிகையில் (ஜனவரி 2015), அந்த நூல் பற்றிய விமர்சனம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஒரு காலத்தில் சமத்துவ சமுதாயம் இருந்ததாக கருதப் பட்ட நெதர்லாந்து பொருளாதாரம் குறித்தும் தனியாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது. 

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய மாயைகளை கொண்டிருக்கும் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அவை. தாமஸ் பிக்கெட்டி பற்றிய கட்டுரையை, தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறேன்.
 -------------------------------------------------------------

தாமஸ் பிக்கெட்டி பற்றி பலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். பிரெஞ்சு பொருளியல் அறிஞர், உலகம் முழுவதும் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். 21 ம் நூற்றாண்டு மூலதனம் எனும் ஒரு தடிமனான, கடுமையான நூல் ஒன்றை எழுதிய சமூக விஞ்ஞானியை பொருத்தவரையில் அது குறிப்பிடத் தக்க விடயம்.

அவர் ஒரு புதிய கார்ல் மார்க்ஸ் என்று அழைக்கப் பட்டார். ஆனால், பிக்கெட்டி அதை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தை வெறுக்கிறார். ஆயினும், இந்த நூல் சொல்ல வரும் செய்தி இடதுசாரியக் கருத்தியல் என்பதை மறுக்க முடியாது. உலகத்தில் ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரிக்கின்றது. நாங்கள் எதுவுமே செய்யாவிட்டால், 19 நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது கையளவு முதலாளிகள் மட்டுமே பணம் வைத்திருந்தார்கள். பாட்டாளிகள் வருந்தி செத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த முன்னறிவிப்பு தேவையற்ற விடயம் அல்ல. பிக்கெட்டி சில தோழர்களுடன் சேர்ந்து, மிகவும் விரிவான ஆய்வொன்றை செய்துள்ளார். கடந்த இரு நூறாண்டுகளாக, ஐரோப்பா, அமெரிக்காவில் மாற்றமடைந்து வரும் வருமானம், சொத்து அதிகரிப்பை ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிக்காக, அவருக்கு ஆதரவாக இடதுசாரி முகாமில் இருந்தும், வலதுசாரி முகாமில் இருந்தும் பலத்த கரகோஷம் எழுந்தது.

அவர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்று யாரும் புறக்கணிக்க முடியவில்லை. தற்காலத்தில் நாங்கள் உழைத்து சம்பாதிப்பதை விட, பணத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது தான் பிக்கெட்டியின் கூற்றின் சாராம்சம் ஆகும். யாராவது பரம்பரைச் சொத்து வைத்திருந்தால், அவர் பங்குகள், வட்டிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு தான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்.

1980 க்குப் பிறகு தான், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவானது. நம்ப முடியாத அளவு சம்பளம் வாங்கிய உயர்மட்ட நிர்வாகிகள் வந்தார்கள். கடந்த சில தசாப்த காலமாக, குறிப்பாக நிதித் துறையில், அதி கூடிய சம்பள விகிதம் 700 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய தர வர்க்கத்தின் வருமானம் வருடத்திற்கு ஓரிரு சதவீதமே கூடியது. அமெரிக்காவில், 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசியை சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் குறித்து, பிக்கெட்டி நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர்களது திறமைக்கு மதிப்புக் கொடுத்து அந்த ஊதியம் வழங்கப் படவில்லை. அதிகம் சம்பாதிப்போரின் வர்க்கம் ஒன்று உருவானது. அவர்கள் தமது சம்பளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய சொத்துக்களை சேர்த்ததுடன், அவற்றை வரியில்லாத சொர்க்கபுரிகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அத்தகைய பணக்காரர்களின் பிள்ளைகள், அந்த செல்வத்தை நிர்வகித்து வந்தாலே போதுமானது. அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஏனென்றால், சொத்து எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு அது கூடிக் கொண்டே செல்லும்.

இதெல்லாம் அமெரிக்காவில் தான் என்று பலர் நினைக்கிறார்கள். நெதர்லாந்து ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கொண்ட நாடு. இங்கே அது பொருந்தாது என்று நினைக்கலாம். பிக்கெட்டி தனது நூலில் நெதர்லாந்தைப் பற்றி மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆனால், டச்சு சமூக விஞ்ஞானிகள் அதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். வருமானத்தை பங்கிடுவதை பற்றி மட்டுமே ஆராய்ந்தால், சமத்துவ சமுதாயம் என்பது ஓரளவு சரியாக கருதப் படலாம். ஆனால், சொத்துக்களை பார்த்தோமானால், நெதர்லாந்து நாட்டிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை அவதானிக்கலாம். 10 சதவீத பணக்காரர்கள், இந்த நாட்டில் உள்ள மொத்த சொத்துக்களில் 60 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கின்றனர். Van Landschot வங்கியின் தகவலின் படி அது முக்கால்வாசிப் பங்கு.

சொத்து அளவீட்டின் படி, நெதர்லாந்தும் ஏற்றத்தாழ்வு அதிகமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான். குறைந்தளவு செல்வம் வைத்திருக்கும், அல்லது கடன்களை நம்பி வாழும், சனத்தொகையின் அரைவாசி மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கேயும் அதிகமாகும். இந்த நாட்டிலும் வறுமை அதிகரிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் அது குறித்து ஆய்வு செய்யும் Sociaal Cultureel Planbureau, Central Bureau voor de Statistiek ஆகிய நிறுவனங்கள் 2014 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே அது குறிப்பிடப் பட்டுள்ளது.

பெரும்பாலான டச்சுக் காரர்களுக்கு, அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கும். இன்றைய வயோதிபர்கள், அவர்களது காலத்தில், ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஒன்றில் வளர்ந்து வந்தனர். முப்பதுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள், மற்றும் பணக்கார காலனியான இந்தோனேசியாவின் இழப்பு என்பன, எதிர்பாராத அளவிற்கு மூலதனத்தை நொறுக்கி இருந்தன. பலரது தனிப்பட்ட சொத்துக்கள் காற்றில் கரைந்தன. 

1950 க்குப் பின்னர், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் முன்னெப்போதும் இல்லாதவாறு குறைந்திருந்தது. மீள் கட்டுமானத்தில் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 4 - 5 சதவீதம் என உயர்ந்தது. அதனால் சம்பளங்களும் கூடிக் கொண்டிருந்தன. 1980 வரையில் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த பொருளாதார நெருக்கடி, எல்லாவற்றிற்கும் முடிவு கட்டியது.

1950 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலம் தனித்துவமானது. பொதுவாக பொருளாதாரம், வருடத்திற்கு அதிக பட்சம் 1 அல்லது 2 சதவீதம் தான் உயரும் என்று பிக்கெட்டி கூறுகின்றார். சொத்துக்கள் வருடத்திற்கு 5 சதவீதம் உயரும். சொத்துடமையாளர்களுக்கும், உடைமைகள் அற்ற பிரிவினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உயர்ந்து கொண்டு செல்லும். நலன்புரி அரசு சிதைக்கப் பட்டதும், பணக்காரர்கள் குறைந்தளவு வரி கட்டுவதும், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் காரணிகள் ஆகும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். அரசு கூட ஏழையாகின்றது.

19 ம் நூற்றாண்டை திரும்பிப் பார்ப்போம். சமுதாய ஏற்றத்தாழ்வு அபாயகரமானது என்று பிக்கெட்டி எச்சரிக்கை விடுக்கிறார். ஜனநாயகம் அப்போது அகற்றப் பட்டது. அதீத பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார்கள். சொத்துக்கள் ஏதும் வைத்திராதவர்கள், சமுதாயத்திற்கு வெளியே நிற்பதாக உணர்ந்தனர். தாமஸ் பிக்கெட்டி : "மேட்டுக்குடியினருக்கு எதிரானவன் என்று என் மேல் குற்றஞ் சாட்டப் பட்டது. ஆனால், உச்சியை விட அடித்தளம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்."

இதற்கொரு தீர்வு இருக்கிறதா? உலகளாவிய முற்போக்கான சொத்து வரி ஒன்றை பிக்கெட்டி முன் மொழிகின்றார். அப்படியான வரி அறவிடுவதற்கு உலகம் முழுவதும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை தான். அது பிக்கெட்டிக்கும் தெரியும். இருப்பினும், அவர் தனது ஆலோசனையை, வரி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் ஒரு அளவீடாக குறித்து வைத்திருக்கிறார். அது யதார்த்தமானது.

(நன்றி: Mug Magazine, Januari 2015)

Sunday, November 16, 2014

மார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் பாட்டாளிகள்


"ஆங்கிலம் படித்தால், உலகம் முழுக்க போகலாம்" என்று சொல்லும் பலரை இன்றைக்கும் பார்க்கிறேன். உலகம் முழுவதும் நாடோடிகளாக அலைந்து, அந்நிய நாட்டு அறிவுச் செல்வங்களை கொண்டு வரும் நோக்கில் அப்படிப் பேசுகிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால், உலகம் சுற்ற விரும்பிய வாலிபர்கள், யுவதிகள், ஏதோ ஓர் ஆங்கிலம் பேசும் மேற்கத்திய நாட்டில் தங்கி விட்ட பிறகு, அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தான், அவர்கள் சொல்ல வருவது தெளிவாகும். அதாவது, "உலகில் எந்த முதலாளி எனது உழைப்புக்கு அதிக விலை கொடுக்கிறானோ, அவனுக்கு எனது உழைப்பை விற்பதற்கு தயாராக இருக்கிறேன்..." என்பது தான் அவர்கள் சொல்ல விரும்பிய, ஆனால் சொல்லாமல் மறைத்த உண்மை ஆகும்.

சர்வதேச சந்தையில் உழைப்பை விற்பதற்கு, ஆங்கிலப் புலமை உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களில் யாருக்கும் தாய்நாடும் கிடையாது, தாய்நாட்டுப் பற்றும் கிடையாது. அதைத் தான், கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னரே எடுத்துக் கூறினார்: "பாட்டாளி வர்க்க மக்களுக்கு தாய் நாடு கிடையாது!" இன்று புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனும், மார்க்ஸின் கூற்று உண்மை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"மேலும் தாய்நாட்டையும், தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றஞ் சாட்டப் படுகின்றார்கள். தொழிளார்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் இருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றிற்கும் முதலாக அரசியல் மேலாண்மை பெற்றிருக்க வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கமும் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. ஆனால், அந்த சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல." - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை)

சோஷலிச நாடுகளின் பொருளாதாரத்தில் என்ன குறைபாடு? என்று நமக்கு பொருளாதார வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கூறும் காரணம் இது: "எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்றால், அங்கே போட்டி இருக்காது. தொழிலாளர்களுக்கு வேலை மீதான ஆர்வம் குறைந்து விடும். அதனால் மிகக் குறைவாக வேலை செய்வார்கள். அது உற்பத்தியை பாதிக்கும்..."

அதே பொருளாதாரப் புலிகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு கூறும் காரணமும், கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும். அதாவது, "அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. அதே நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்தால், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் கடுமையாக வேலை வாங்குவார்கள். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்..."

அதெல்லாம் உண்மையா? ஏற்கனவே பல தசாப்தங்களாக, 90% பொருளாதாரத்தை தனியார் துறைகள் நிர்வகிக்கும், முதலாளித்துவ நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது? போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? இல்லை. அப்படி யாராவது சொன்னால், அது மிகப் பெரிய பொய் ஆகும். பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி இன்னமும் மறையவில்லை. ஆனால், நெருக்கடியை காரணமாகக் காட்டி, பல வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துள்ளன.

"சோம்பேறிகளை" பணி நீக்கம் செய்து விட்டு, சுறுசுறுப்பான வேலையாட்களை மட்டும் வைத்துக் கொண்டன. முன்பு பத்துப் பேர் செய்த வேலையை ஒருவரை செய்ய வைத்து, "உற்பத்தித்திறனை அதிகரிக்க வைத்தன." இதனால் இலாபம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வேலையாள் தலை மீதும் வேலைப் பளு கூடியது. சுறுசுறுப்பான வேலையாட்கள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளானார்கள். விளைவு?

நெதர்லாந்து முதலாளிகளின் பொருளியல் நாளேடான Het Financiëele Dagblad (15-11-2014) பத்திரிகையில் வந்த தகவலை கீழே தருகிறேன்:
 //அதிக வேலைப்பளு (Burn out) காரணமாக, ஊழியர்கள் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்பது அதிகரித்தது. அதனால் தொழிலகங்களில் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்தது. அது மட்டுமல்ல, சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கும் ஊழியர்களுக்கான செலவுகளும் அதிகரித்தன.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் நிற்கும் ஊழியர்களை பரிசோதிக்க, கம்பனி மருத்துவர் ஒருவரை நியமிப்பார்கள். அதற்கு தனியான செலவு. அதை சம்பந்தப் பட்ட கம்பனியே கட்ட வேண்டும். மேலும் சுகயீன விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு பதிலாக, தற்காலிக வேலையாள் ஒருவரைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்படும் மேலதிக செலவுகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேற்படி செலவுகளால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்படுகின்றது. எப்பாடு பட்டாவது, குறைந்தது 1% சுகயீனமுற்ற ஊழியர்களை, ஒழுங்காக வேலைக்கு வர வைத்தாலே போதும். நாடு முழுவதும் ஆறு பில்லியன் யூரோக்கள் உற்பத்தியை கூட்டலாம்.

அதிகரித்து வரும் ஊழியர்களின் சுகயீன விடுப்பை கவனத்தில் எடுத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு யோசனையை நடைமுறைப் படுத்த உள்ளன. விரைவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் "சுகாதார நிர்வாகி" ஒருவர் நியமிக்கப் படுவார். ஊழியர்களின் உடல் நலனை கவனிப்பது அவரது முழுநேர வேலையாக இருக்கும். ஊழியர்கள் என்ன சாப்பிட வேண்டும்? எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்? இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்களாம். உடற்பயிற்சி, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றி இனிமேல் கம்பனிகளில் வகுப்புகள் எடுக்கப் படும்.// (Het Financiëele Dagblad)

இந்தத் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் உள்ளன. ஆனால், வேலையாட்களின் எண்ணிக்கையை கூட்டி, வேலைப் பளுவை குறைக்கும் திட்டம் எதுவும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை. உயர்கல்வி கற்ற, நல்ல சம்பளம் வாங்கும் ஊழியர்களே அடிக்கடி சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கிறார்கள். அதற்காகத் தான், அந்த முதலாளிகளின் பத்திரிகை அக்கறையோடு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது.

சாதாரண தொழிலாளர்களைப் பற்றி இங்கே கூறத் தேவையில்லை. அவர்களது உடல் நலனை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஒரு தொழிலாளி கடுமையான நோய் வாய்ப்பட்டால், அவரை நீக்கி விட்டு, புதிதாக ஒருவரை நியமிப்பார்கள்.

மேலை நாடுகளில் வேலை செய்யும் பல தமிழ் தொழிலாளர்கள், கடுமையாக உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் நாற்பது வயதை எட்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனாலும், ஒரு முதலாளிய சமூகத்தில், அவர்களைப் பற்றி கவலைப் பட யார் இருக்கிறார்கள்? ஏனென்றால், சந்தையில் அளவுக்கு மிஞ்சிய தொழிலாளர்கள் குவிந்து போயுள்ளனர்.

"ஓர் உழைப்பாளி தனது இயற்கைக்கு மாறான அதிகப் படியான வேலையை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றார். அதனால் அவர் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக துன்பத்தை அனுபவிக்கிறார். சுதந்திரமாக வளர்ச்சி அடைய முடியாமல், அவரது உடல் நலனும், மன நலனும் குன்றுகின்றது.உடலளவில் சோர்வுற்று, மனதளவில் தாழ்த்தப் படுகின்றார். வேலை செய்யும் இடத்தில் ஓர் அந்நியத் தன்மையை உணர்கின்றார்..." - கார்ல் மார்க்ஸ்

Monday, July 14, 2014

பாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்டாகும்

பாலஸ்தீன பிரச்சினை, எந்தளவு தூரம் உலகப் பொருளாதாரத்தை, தங்களது சொந்த வாழ்க்கையையும் பாதிக்க வல்லது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எண்ணை தர மாட்டோம் என்று பகிஷ்கரிப்பு செய்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும், இது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும். அந்த நிலைமை ஏற்கனவே ஒரு தடவை ஏற்பட்டிருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.

1967 ம் ஆண்டு நடந்த போரில் தான் இஸ்ரேல் இன்றுள்ள பாலஸ்தீன பிரதேசங்களை (காஸா, மேற்குக் கரை) ஆக்கிரமித்தது. அத்துடன் நில்லாது, சிரியாவின் கோலான் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும் ஆக்கிரமித்தது.

1973 ம் ஆண்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்காக, சிரியாவும், எகிப்தும், இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. இஸ்ரேலில் அது யொம் கிப்பூர் யுத்தம் என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் போரிலும், அதற்கு முன்னரும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. உண்மையில் அமெரிக்க உதவி காரணமாகவே இஸ்ரேல் போர்களில் வென்று வந்தது. 

இதனால், இஸ்ரேலுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை தண்டிப்பதற்காக, அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணை தர மறுத்து விட்டன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், எண்ணை ஏற்றுமதித் தடையால் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன. அந்தக் காலங்களில் வீதிகளில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை.

எண்ணைத் தடையானது, பல மேற்கத்திய நாடுகளை, அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாட்டில் இருந்து விலக வைத்தது. நேட்டோ கூட்டமைப்பில், அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன. எண்ணைத் தடை இன்னும் சில மாதங்கள் நீடித்து இருந்தால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கும்.

உண்மையில், அன்றைய நெருக்கடி காரணமாக மேற்குலக நாடுகள் நேரடியாக பாதிக்கப் பட்டாலும், பிற உலக நாடுகளிலும் அது பல பொருளாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கியது. அன்றிருந்த சோவியத் எதிர் முகாம் இன்று இல்லை. உலகில் அனேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தங்கி உள்ளன. அப்படியான நிலையில், இன்று ஓர் எண்ணைத் தடை ஏற்பட்டால்? விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

அன்றைய காலங்களில், மத்திய கிழக்கு முழுவதும் முற்போக்கு அரபு தேசியவாதம் பிரபலமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள், அரபு தேசியவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டின. தாங்கள் ஒன்று பட்டால், உலக வல்லரசான அமெரிக்காவை கூட காலடியில் விழ வைக்கலாம் என்று உணர்ந்து கொண்டன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்கான மன்னராட்சி நாடுகள் கூட, வேறு வழியின்றி அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், அரபு நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமெரிக்கா பல சூழ்ச்சிகளில் இறங்கியது.

உலகில் இனியொரு தடவை எண்ணைத் தடை வரக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பல திட்டங்களை வகுத்தது. அதில் முக்கியமானது இஸ்லாமியவாதம். எண்ணைத் தடை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்தது. சவூதி அரேபியாவின் கஜானா நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் கடும்போக்கு இஸ்லாமியவாத வளர்ப்பதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்துமாறு அமெரிக்காவே ஆலோசனை வழங்கியது. இன்று பல உலக நாடுகளில் அட்டகாசம் செய்யும் வகாபிச தீவிரவாதக் குழுக்கள் பல, அன்றைய சவூதி பெட்ரோலிய டாலரில் உருவாக்கப் பட்டவை தான்.

யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வஞ்சகப் புகழ்ச்சியில் அமெரிக்கர்களை வெல்ல ஆள் கிடையாது. முன்னொரு காலத்தில் இந்தியாவை காலனிப் படுத்திய பிரிட்டிஷ்காரர்கள், "நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்த மதத்தை கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்துக்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். "முன்தோன்றிய மூத்த குடி உங்களுடையது" என்று தமிழர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அமெரிக்கர்களும் அதே வழியை பின் பற்றி, இஸ்லாமியர்களின் "மதப் பெருமைகளை" மீட்டுக் கொடுத்தார்கள். இன்று எல்லா அரபு நாடுகளிலும், நாசர் முன்மொழிந்த முற்போக்கு அரபு தேசியவாதம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது.

பாலஸ்தீன பிரச்சினையை "முஸ்லிம்களின் பிரச்சினை" என்று மதவாத நோக்கில் பார்ப்பவர்கள் தான் அதிகம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அப்படியான கருத்துக்களை பரப்புவதற்கு, தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். "உலகில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும், எதற்காக பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை?" என்று சிலர் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படையில் அவர்களும் மதவாதிகள் தான். "உலகில் இத்தனை கிறிஸ்தவ நாடுகள் இருந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்ற கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலஸ்தீனர்களில் குறைந்தது பத்து சத வீதமானோர் கிறிஸ்தவர்கள். அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் உட்பட, விவிலிய நூலில் கூறப்படும் பல இடங்கள் பாலஸ்தீனத்தில் உள்ளன. அந்த இடங்களில் இப்போதும் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பாலஸ்தீன அரேபியர்கள். எதற்காக உலக கிறிஸ்தவர்கள் யாரும் தமது புனித பூமியை பாதுகாக்க முன்வரவில்லை? கிறிஸ்துவின் காலத்தில் இருந்து அங்கு வாழும் கிறிஸ்தவ- பாலஸ்தீனர்களை காப்பாற்ற முன் வரவில்லை?

ஒரு காலத்தில் பாலஸ்தீன இயக்கங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கின. அந்தக் காலங்களில், ஈழத்திற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் பேணப் பட்டு வந்தன. அந்த உண்மையை இன்றைக்கு பலர் மறந்து விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களையும், தமிழர்களையும் ஒன்று சேர விடாது பிரித்து வைத்ததில், மொசாட், சிஐஏ உளவாளிகளின் பங்கு இருந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதன் பின்னணியில், அந்நிய கைக்கூலிகளின் ஏகாதிபத்திய ஆதரவு பிரச்சாரமும் இருந்துள்ளது. அதன் மூலம் பல தசாப்தங்களாக, தமிழர்கள் பாலஸ்தீனத்தை பற்றி நினைக்க விடாது தடுத்து வந்தனர். பழைய தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டு விட்டன.

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. ஈழப்போர் குறித்த செய்திகளுக்கு மேற்கத்திய ஊடகங்களே ஆர்வம் காட்டாத நிலையில், அரபு ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. பாலஸ்தீனம் மட்டும் அல்ல, இஸ்ரேலில் வாழும் மக்களுக்கும் இலங்கையில் நடந்த போர் பற்றி எதுவும் தெரியாது. பெரும்பான்மையான இஸ்ரேலிய யூதர்களுக்கு, தமிழர்கள் என்ற இனம் உலகில் வாழும் உண்மை கூடத் தெரியாது. இந்த நிலைமையில், பாலஸ்தீனர்களை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் 

Sunday, July 13, 2014

முதலாளித்துவத்தை மாற்றுவதற்கு மக்களுக்கு பொருளியல் அறிவு அவசியம்

"பொருளாதாரம் என்பது ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. முதலாளித்துவத்தில் உள்ள குறைகளை களைய வேண்டுமானால், முதலில் மக்கள் அனைவருக்கும் பொருளாதாரம் பற்றிய அறிவு கிடைக்கச் செய்வது அவசியம். பொதுவாக எல்லா விஷயங்களிலும் பலருக்கு ஆர்வமும், தெரிவிப்பதற்கு ஏதாவதொரு கருத்தும் இருக்கும். ஆனால், பொருளாதாரம் சம்பந்தமாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. புரிந்து கொள்ள கஷ்டமானது என்று சாமானியர்கள் நினைக்கிறார்கள். அது அப்படி ஒன்றும் கடினமான சமாச்சாரம் அல்ல. உண்மையில் பொருளியல் அறிஞர்கள் தான் வேண்டுமென்றே அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்."

பிரிட்டனில் வாழும் தென் கொரிய பொருளியல் அறிஞர் ஹ ஜூன் சங் (Ha-Joon Chang) இவ்வாறு தெரிவித்தார். பொருளாதாரத்தை அனைவருக்கும் எளிதாக புரிய வைக்கும் நோக்கில் Economics: The User's Guide என்ற நூலை எழுதி இருக்கிறார். 

நெதர்லாந்து பத்திரிகை ஒன்றுடனான பேட்டியில், ஹ ஜூன் சங் தெரிவித்த கருத்துக்கள் சில:

  • பொருளாதாரம் என்றால் நாங்கள் எதைப் புரிந்து கொள்கிறோம்?


முக்கியமான விடயம் என்னவெனில், பொருளியலில் ஒரு கேள்விக்கு ஒரு பதில் தான் இருக்கின்றது என்பதில்லை. அது ஒரு விஞ்ஞானம் அல்ல. பொருளியல் நிபுணர்கள் கூறும் "உண்மைகளை" சந்தேகித்து கேள்வி எழுப்பலாம். வேறொரு கொள்கை வகுக்க வேண்டுமென கேட்கலாம். 

பொருளாதாரம் என்பது ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஒவ்வொரு பொருளியல் உண்மைக்கும் பின்னால் ஒரு அரசியல் மறைந்திருக்கிறது. அனேகமாக, அந்த "உண்மைகள்" அவற்றை அறிவிப்பவரின் நலன்களில் தங்கி உள்ளது.

பொருளியல் அறிஞர்கள், நாங்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல, சமத்துவமின்மை ஒரு தவிர்க்கவியலாத தோற்றப்பாடு அல்ல. இயற்கையாக நடக்கும் மோசமான காலநிலை போன்றதல்ல அது. சமத்துவமின்மையை நாங்கள் எதிர்த்து போராடலாம்.

  • இன்றைய முதலாளித்துவ அமைப்பில் என்ன குறைபாடு?


எல்லாமே தவறாகப் போய்க் கொண்டிருக்கின்றன. ஐம்பதுகளுக்கும் எழுபதுகளுக்கும் இடைப் பட்ட காலத்தில், முதலாளித்துவம் எங்களுக்கு நிறைய வழங்கல்களை செய்துள்ளது. உலகப் பொருளாதாரம் ஒவ்வோர் ஆண்டும் 2 அல்லது 3 சதவீதத்தால் வளர்ந்து கொண்டிருந்தது. வங்கி நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. அன்றைக்கும் சமத்துவமின்மை இருந்தது. ஆனால், இன்றுள்ள அளவிற்கு பெரியதொரு இடைவெளி காணப் படவில்லை.

இன்றைய பொருளாதாரம் மிகவும் அரிதாகத் தான் வளர்கின்றது. சமத்துவமின்மை எல்லா இடங்களிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது வரையில் எத்தனை பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன என்பதை எண்ணுவதையே விட்டு விட்டோம். எப்படி அது நடந்தது?

ஏனென்றால், நாங்கள் நிதித் துறை மீதான கட்டுப்பாடுகளை, அளவுக்கு அதிகமாகவே தளர்த்தி விட்டோம். சந்தை மிகவும் பலமானதாக மாறி விட்டது. முதலாளித்துவம் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் தான் பலனளிக்கும். ஐம்பதுகள், எழுபதுகளில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்ததற்கு காரணம், அன்று நிறைய கண்டிப்பான விதிகள் இருந்தன.

  • எப்படிப் பட்ட பொருளாதார மாதிரி நமக்கு வேண்டும்?


உற்பத்தியை பெருக்குவதற்காக நிறைய முதலிடப் பட வேண்டும். இன்றுள்ள நிறுவனங்கள் ஆராய்ச்சிகளிலும், தொழிற்கல்வி அளிப்பதிலும் மிகவும் அரிதாகவே முதலிடுகின்றன. ஏனென்றால், விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பும் பங்குதாரர்கள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். நிறுவனங்கள், வளர்ச்சியில் முதலிடுவதை விட, தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதன் மூலம் அவர்களுக்கு உடனடியாகவே பணம் கிடைக்கும். 

பங்குகளின் மீது ஒரு விசேட வரி அறவிடுவதன் மூலம் அதைத் தடுக்கலாம். பங்குதாரர்கள் ஒரு குறிப்பிட்ட காலம், தமது பங்குகளின் இலாபத்தை எடுக்காமல் வைத்திருந்தால், குறைவான வரி செலுத்த முடியும் என சலுகை கொடுக்கலாம். அடுத்த படியாக, நிதித் துறை கண்டிப்பான சட்டங்களின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும். சமத்துவமின்மை பிரச்சினை குறைக்கப் பட வேண்டும். அரசாங்கம் இதில் முக்கிய பாத்திரம் ஆற்ற முடியும். அது தான் ஆட்ட விதிகளை தீர்மானிக்க வேண்டும். வழி காட்ட வேண்டும்.

  • இது எதுவும் நடக்காது விட்டால்?


மீண்டும் ஒரு பொருளாதார அல்லது நிதி நெருக்கடி ஏற்படும். இப்போதே பல நீர்க் குமிழிகள் தோன்றுகின்றன. புதிய நெருக்கடியை தீர்ப்பதற்கு எம்மிடம் பணம் இருக்காது. அப்போது அது மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வரும்.
மூலப் பிரதி

(நன்றி: NRC Weekend, 12 &13 juli 2014)


பொருளியல் அறிஞர் ஹ ஜூன் சங் பற்றிய முன்னைய பதிவு: முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்