
சிறு வயதில், வீட்டில் எல்லோரும் சாமி கும்பிடும் பொழுது, சிவபெருமான் படம் மட்டும் கண்ணை உறுத்தும். பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் தலையில் வைத்துள்ள சிவன், இமயமலைச் சாரலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். இமய மலைக்கும், இலங்கைக்கும் இடையிலான புவியியல் வித்தியாசங்களை கணக்கில் எடுக்கும் பொழுது, சிவபெருமான் எனக்கு அந்நியமான ஒருவராக தெரிந்தார். இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால், கைலாச மலையில் வசிக்கும் சிவன், எவ்வாறு எமக்கு கடவுளாக முடியும்? இந்தக் கேள்விக்கு சைவ மத நம்பிக்கையாளர்களான பெற்றோரும், மதக் கல்வி போதித்த ஆசிரியர்களும் சரியான பதிலைக் கூற முடியவில்லை. இந்து மதம், இந்திய உப கண்டத்திற்கு பொதுவான சமயம், என்று பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்தார்கள். என்ன இருந்தாலும், சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் வரும் விசித்திர உருவமாக காட்சியளித்த சிவபெருமானின் மூலத்தை அறியும் ஆர்வம் மட்டும் மறையவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டில், எனது தேடுதலுக்கான தீனி கிடைத்தது. ஆம்ஸ்டர்டாம் நூலகத்தில், நாம் அதிகம் அறிந்திராத நாடுகளைப் பற்றிய நூல்களை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக, மொங்கோலியா பற்றிய நூலில், அவர்களது கடவுளரின் படங்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன.
பண்டைய மொங்கோலியா இன்று இரண்டாகப் பிரிந்துள்ளது. நாட்டின் அரைவாசிப் பகுதி, சீன தேசத்துடன் இணைக்கப்பட்டு, "உள்ளக மொங்கோலியா" என்ற மாநிலமாக உள்ளது. பெரும்பான்மையான மொங்கோலியர்கள் பௌத்த மதத்தினர். ஆனால், பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி, கணபதி அவர்கள் வணங்கும் தெய்வங்களாக இருந்தன. நமக்கு நன்கு பரிச்சயமான அதே இந்துத் தெய்வங்கள் தான். அந்தப் படங்களில் சற்று வித்தியாசமாக, மொங்கோலியர் போன்ற சப்பட்டை மூக்குடன், தட்டை முகத்துடன் காணப்பட்டனர். சரஸ்வதி வைத்திருந்த வீணை, மொங்கோலியரின் பாரம்பரிய நரம்பிசைக் கருவி போலத் தோன்றியது. இந்தக் கருவி இன்றைக்கும் மத்திய ஆசியாவின், துருக்கி இன மக்களால் இசைக்கப் படுகின்றது. மொங்கோலிய மக்களும் துருக்கி மொழி பேசும் இனத்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.இந்து மதம் உண்மையில் பிராமணர்களின் மதம். ஆரியர்கள் என்போர், மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளை நிறமான மக்கட் கூட்டத்தினர். இது குறித்த பல தகவல்களை, ஏற்கனவே பகுத்தறிவு நூல்களில் வாசித்தறிந்திருக்கிறேன். மொங்கோலியாவில் இந்து மதக் கடவுளரின் படங்கள், ஆரியரை வேறொரு கோணத்தில் ஆராய வைத்தது. வெள்ளையின மக்கள், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து புறப்பட்டிருக்கலாம். ஒரு பிரிவினர் ஐரோப்பாவிலும், மறு பிரிவினர் ஈரான் வழியாக இந்தியாவை வந்தடைந்தனர். ஐரோப்பிய மொழிகளில் "கொகேசியர்கள்" என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில் ஆரியர்களின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் பகுதியில் இன்று வாழும் மக்கள், சீனர்கள் போன்று தோற்றமளிக்கும் துருக்கி இனத்தவர்கள். பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய இடப்பெயர்வில், இனத்தூய்மை காப்பாற்றப் பட்டிருக்கும் என்று கூற முடியாது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியையும் கருத்தில் எடுக்க வேண்டும். இவை எல்லாம், சமூக விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவுகள்.
மொங்கோலியா நாட்டின் புராணக் கதைகளை வாசித்த பொழுது, இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. மொங்கோலியர்கள் பௌத்தர்கள் என்பதால், அந்தக் கதைகளில் புத்தரின் பெயரையும் சேர்த்திருக்கின்றனர். சில கதைகள், மொங்கோலிய நாடோடி சமூகத்தை அடிநாதமாக கொண்டுள்ளன. இருப்பினும், சில கதைகள் இந்து மதக் கதைகளை ஒத்திருக்கின்றன. இன்று, இந்து மதமானது பல்லினங்களை சேர்ந்தவர்களின் நம்பிக்கையாக மாறி விட்டது. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, குறிப்பிட்ட சில (வட இந்திய) இனத்தவர்களின் மதமாக இருந்துள்ளது. அந்த வகையில், வட இந்திய இனக் குழுக்களும், மொங்கோலிய இனத்தவரும் ஒரே மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையில், மத்திய ஆசியாவை சேர்ந்த பிற துருக்கிய இனத்தவர்கள் மத்தியிலும் இது போன்ற புராணக் கதைகள் நிலவியிருக்கலாம். ஆனால், இஸ்லாம் மதமானது அவற்றை மறக்கச் செய்து விட்டது. அதற்கு மாறாக, பௌத்த மதத்தினுள் தெய்வங்களுக்கு வெற்றிடம் இருப்பதால், மொங்கோலிய மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளையும் உள்வாங்கியுள்ளது.
மொங்கோலியாவில், அதன் எல்லையோரமாக உள்ள ரஷ்ய பகுதிகளில் திபெத்திய பிரிவான "லாமாயிச பௌத்தம்" பின்பற்றப் படுகின்றது. அதனால் தான், மனிதர்களின் சிருஷ்டி பற்றிய மொங்கோலிய கதை, கடவுளின் இடத்தில் ஒரு லாமா (திபெத்திய பௌத்த மதகுரு) வை குறிப்பிடுகின்றது. முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு லாமா, ஒன்பது சொர்க்கங்களையும், ஒன்பது உலகங்களையும், ஒன்பது ஆறுகளையும் படைத்ததாக அந்தக் கதை கூறுகின்றது. திபெத்திய மத நம்பிக்கையின் படி, "ஒன்பது" மிக முக்கியமான அதிர்ஷ்ட எண். இந்து மதத்தில் அது ஏழாக மாறி விட்டது. இந்து மத நம்பிக்கையின் பிரகாரம், கடவுள் எல்லாவற்றையும் ஏழு, ஏழாக படைத்துள்ளார். ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம்). ஏழு ஆறுகள் (சிந்து, அஷிக்னி, பருஷ்னி, ஸரஸ்வதி, யமுனா, கங்கை மற்றும் சரயூ). திபெத்திய பௌத்தர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது, இந்துக்களின் அதிர்ஷ்ட எண்ணான ஏழு ஆகிய நம்பிக்கைகள் கைலாய மலையில் இருந்து தோன்றின. அது குறித்து பிறிதொரு இடத்தில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த ஆய்வாளர்கள், மொங்கோலிய புராணக் கதைகளை தொகுத்துள்ளனர்.(Mongol creation stories: man, Mongol tribes, the natural world, and Mongol deities, Nassen-Bayer; Kevin Stuart, Asian Folklore Studies, Vol.51 No.2, pp.323-334) அவற்றில் சில. நிது மலையில், காட்டுக்குள் இருக்கும் குளம் ஒன்றினுள் தேவ லோக கன்னிகைகள் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியால் சென்று கொண்டிருந்த ஒரு வேட்டைக்காரன் அந்தக் காட்சியைக் கண்டு விட்டான். ஒரு கன்னியின் உடைகளை எடுத்து மறைத்து வைத்தான். ஒரு மானுடன் பார்த்து விட்டதை அறிந்த தேவ லோக கன்னிகள், அன்னப் பறவையாக மாறி சொர்க்கத்திற்கு பறந்து சென்று விட்டனர். ஆடைகளை பறிகொடுத்த கன்னி மட்டும், பூமியில் தங்கி விட்டாள். வேடனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவனை மணந்து ஒரு குழந்தை ஈன்றெடுத்தாள். தேவ லோக கன்னிகைகள் நீண்ட காலம் பூவுலகில் வாழ முடியாது. அதனால், தேவ லோகம் செல்வதற்கு தக்க தருணம் பார்த்து காத்திருந்தாள். ஒரு நாள், குழந்தையை தனியாக தொட்டிலில் விட்டு, அதற்கு காவலாக ஒரு மஞ்சள் பறவையை நியமித்து விட்டு தேவ லோகத்திற்கு சென்று விட்டாள். அந்தக் குழந்தையின் வழித்தோன்றல்கள் தாமே என, Dorbed என்ற மொங்கோலிய இனக்குழுவினர் நம்புகின்றனர்.
இந்து மதத்தில் இதே போன்றதொரு கதை உள்ளது. அதிலும் தேவ லோக கன்னிகள், பூலோக வனத்தில் உள்ள குளத்தில் நீராடுகின்றனர். தேவ லோகத்தை சேர்ந்த மேனகை, விஸ்வாமித்திர முனிவருடன் குடித்தனம் நடத்தி, ஒரு குழந்தையை பெற்றெடுத்து விட்டு சென்றதாக ஒரு கதை உண்டு. அந்தக் கதையில், மேனகை விட்டுச் சென்ற குழந்தையை சகுந்தப் பறவைகள் கொஞ்சியதால், சகுந்தலா என்று பெயர் வந்தது. இந்திய இந்துக்களும், மொங்கோலியர்களும் ஒரே புராணக் கதையை பகிர்ந்து கொள்வது எப்படிச் சாத்தியமானது? ஒரே வேரில் இருந்து கிளம்பிய கிளைகள் போன்று, இரு இனங்கள் வெவ்வேறு திசைகளில் புலம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும். அந்த வேர் எங்கேயுள்ளது? கி.மு. 5000 வருடங்களுக்கு முன்னர், ஒரே மொழி பேசும் இனங்கள் ஓரிடத்தில் ஒன்றாக வாழ்ந்துள்ளன. அது ஈரானுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட இமய மலைப் பிரதேசம் ஆகும். ஆரிய இனங்களின் குடிசனப் பரம்பலை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், அவர்கள் நாடோடிக் கூட்டங்களாக இந்தியா வந்தடைந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்களில் ஒன்று, புராணக் கதைகள். குறிப்பாக ஈரானிய ஆரிய இனம், இந்திய ஆரிய இனத்திற்கு நெருக்கமானது. ஈரானிய புராணங்களிலும் தேவர்கள், அசுரர்கள் வருகின்றனர். இந்துக்களின் ரிக் வேதமும், ஈரானியர்களின் அவேஸ்தாவும் ஒரே மாதிரியான கதைகளை கொண்டுள்ளன.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதைப் பற்றிய இந்துக்களின் நம்பிக்கை என்ன? சூரியனையும், சந்திரனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன. அதனால் தான் கிரகணம் ஏற்படுகின்றது. அதற்கு விஷ்ணுபுராணம் கூறும் கதை இது. ஒரு முறை பாற்கடலை கடையும் பொழுது, ராகு என்ற அசுரன், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் ஒளிந்திருந்து அமிர்தத்தை பருகி விட்டான். இதைக் கண்ட விஷ்ணு சக்கராயுதத்தை வீசி ராகுவின் தலையை சீவி எறிந்தார். அமிர்தத்தை அருந்தியதால் உயிர் பிழைத்த, ராகுவின் தலையுடன் பாம்பின் வாலையும், ராகுவின் உடலுடன் பாம்பின் தலையையும் இணைத்து விட்டார்கள். அவை தான் ராகு, கேது என்ற கிரகங்கள். கிட்டத்தட்ட இதே போன்ற கதையொன்று மொங்கோலியரிடம் புழங்கி வருகின்றது.
கடவுள் ஒரு தடவை, மிகவும் சக்தி படைத்த ராட்சதனான ராகுவை (கவனிக்கவும்: மொங்கோலிய பெயரும் ராகு தான்.) தண்டிக்க நினைத்தார். இதை அறிந்த ராகு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட, தேடிக் கண்டு பிடித்து வருமாறு, கடவுள் சூரியனை அனுப்பி வைத்தார். எங்கேயும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் சூரியன் திரும்பி விட்டான். கடவுள் அதற்குப் பிறகு சந்திரனை அனுப்பினார். சந்திரன் ராகுவை பிடித்துக் கொண்டு வந்து கொடுக்கவே, கடவுள் தண்டனை வழங்கினார். அன்றில் இருந்து, தன்னை பிடித்துக் கொடுத்த சூரியனையும், சந்திரனையும் விரட்டுவதே ராகுவின் வேலையாகி விட்டது. அதனால் தான், சூரிய- சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.
புராணக் கதைகள் உண்மையில் நடந்தவையா, அல்லது கற்பனையா என்ற விவாதத்திற்கு அப்பால், அவை குறிப்பிட்ட மக்களின் பாரம்பரியத்தை கட்டிக் காக்க உதவுகின்றன. ஒவ்வொரு இனமும், தமது தனித்துவத்தை பேணுவதற்காக, இது போன்ற கதைகளை பரம்பரை பரம்பரையாக சொல்லி வருகின்றது. தாமே கடவுளின் நேரடி வழித்தோன்றல்களாக காட்டுவதற்கும் இந்தக் கதைகளை உருவாக்கி உள்ளனர். சில நேரம், அவர்களின் மூதாதையர் இடம் பெயர்ந்து வந்த தாயகத்தை நினைவூட்டுவதாகவும் அமைந்திருக்கும். வருங்கால சந்ததியினர், தமது பூர்வீகத்தை மறக்காமல் இருப்பதற்கு புராணக் கதைகள் உதவுகின்றன. அந்த வகையில் பார்த்தால், "இந்துக்களின்" பூர்வீகமும் இந்தியாவாக இருக்க முடியாது.
உண்மையில் "இந்து" என்ற சொல், பிற்காலத்தில் உருவானது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவான பின்னர் புழக்கத்தில் வந்த சொல்லாகும். சிந்து நதியை எல்லையாக கொண்டிருந்த முஸ்லிம்கள், நதிக்கு அப்பால் இருந்த பகுதியை ஹிந்துஸ்தானம் என்று அழைத்தனர். ஆகவே, இந்துக்களின் தாயகம் இந்தியா என்று நினைப்பது தவறான எண்ணக் கரு. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், அந்த மண்ணுக்கு உரிமை கொண்டாடுவதைப் போன்றது தான் இதுவும். வைதீக இந்துக்களான பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இனமாக, இமய மலைப் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களின் பூர்வீகம், இன்று சீனாவின் பகுதியாகவுள்ள திபெத்தில் உள்ளது. அதனை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. சிவபெருமானும், சிவஸ்திகாவும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள். இந்துக்களின் தாயக பூமியை தரிசிக்க வேண்டுமானால், நாம் சீனா செல்ல வேண்டும்.
(தொடரும்)
******************************************************************************** இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
8 reacties:
நீங்கள் சொல்வது போல், இந்துக்கள் என்பவர் இந்தியாவில் வாழ்பவரையே குறிக்கும், ஆங்கிலேயராலேயே அது ஒரு மதத்தின் பெயராக மாற்றப் பட்டது என படித்திருக்கிறேன். இதை இந்து அறிஞர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். பகிர்வுக்கு நன்றி
// சிவபெருமானும், சிவஸ்திகாவும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள். இந்துக்களின் தாயக பூமியை தரிசிக்க வேண்டுமானால், நாம் சீனா செல்ல வேண்டும்.//
இது ஒரு தவறானத் தகவல், பார்பனர்களின் வேதங்களில் சிவபெருமான் சிறப்பு செய்யப்பட்டிருக்கவில்லை, ஆண்குறித் தெய்வம் என்று பழிக்கப்பட்டுள்ளது என்பதாகத்தான் நான் படித்துள்ளேன், மாறாக சிந்துசமவெளி நாகரீகம் உள்ளிட்டவைகளில் சிவபெருமான் பசுபதி நாதராகக் காட்டப்பட்டுள்ளார். பெயர்பெற்றத் கடவுள்களுக்கு புராணம் அமைத்து அதை வேத தெய்வங்களாக்கியவை அனைத்தும் பின்னர் நடந்தவை.
கண்ணன் என்கிற கிருஷ்ணன் ஆயர்குலத்தின் தலைவனாகவும், சிவபெருமான், முருகன், பிள்ளையார் உள்ளிட்ட தெய்வங்கள் குறிஞ்சி நிலத்தவரின் தெய்வமாகவும் தான் படித்துள்ளேன்
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே!
கோவி கண்ணன், நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பாக விளக்கமான கட்டுரை எழுதவிருக்கிறேன். இதே தொடரில் வரும். நீங்கள் கூறுவது சரி. ஆனால், இந்தக் கட்டுரையானது புதிய தகவல்களை கொடுப்பதற்காக வேறொரு கோணத்தில் இருந்து எழுதப் படுகின்றது.
நன்றாக எழுதப்பட்டடுள்ளது புதிய திசையில் எம்மிடம் உள்ள கருத்துக்களையும் தருப்பியுள்ளீர்கள்.
காளித்தெய்வம் என்பது நாம் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயரும்போது எம்முடன் எடுத்து வந்த தெய்வமாகவே நான்பார்க்கிறேன் பின்னர் இந்த காளி கூட ஒரு கட்டத்தில் சிவபெருமானை அடக்கி ஆள்வதாக குறிப்பிடப்படும் கதைகளையும் வாசித்துள்ளோன் காளியே மூன்று தெவிகளாக பிரிந்து மூன்று பிரதான தெய்வங்களான பிரம்மா விஸ்ணு சிவன்போன்றோரை மணந்தும் கடவுள்களின் இராட்சியம் படைக்கப்படுவதை காணலாம்.
இன்று இந்த காளி தெய்வம் பற்றி பல ஆபிர்க்க மக்களிடமம் பல கருத்து எழுந்துள்ளத காளி என்பது தமது அடையாளம் என்றும் தம்மிடமிருந்தே இந்தியர்கள் இந்துக்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
நீங்கள் குறிப்பிடும் கொக்கேசியர்கள் எனப்படுவோர் ஒரு நோயின் காரணமாகவே வெள்ளை நிறத்தை பெற்றனர் என்றும் இந்த வழித்தோன்றல்களே வெள்ளை நிறம் எனவும் பின்னர் பாரிய வரலாற்று மாற்றங்களின்hல் இந்த வெள்ளை நிறமும் ஆதிக்கம் பெறக்கூடிய மனித நிறமாக நிறமூர்த்தங்களில் மாற்றங்கள் ஏற்ப்பட்டுக்கொண்டன என்றும் அறிந்தேன்.
மேலும் உங்களால் எழுதப்பட்ட பல கருத்துக்களை இஸ்லாமியர்களுடன் இணைக்கமுடியும் இன்றும் இஸ்லாமிய நாடுகளில் சிவனுக்கு கொவில் வழிபாடுகள் உள்ளது(நேரடியாக இந்து முறைப்படி இல்லை அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லையே) இஸலாமியர்கள் உருவவழிபாட்டை உடைக்கிறார்கள் அப்படி உடைக்கப்பட்ட உருவங்களை மதிக்கவே மெக்காவில் காபரா கட்டப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
இஸ்லாமிய மாலை எண்ணி ஜபித்தல் மற்ம் காசிக்கு போய் காசியர் ஆவத போன்று கஜக்கு போனால் காஜியார் ஆவதும் தொழுகை நேரங்கள் உடன்பாடுகள் சந்திர கலண்டர் இப்படி பல மனித தொடர்புகளை இணைத்து மனிதர்களின் அடிப்படையில் ஒன்றான பொதுவானவற்றுடன் இணையலாம்.
த சோதிலிங்கம்.
இந்திய ஆதிகுடிகள் வணங்கியது சிவலிங்கம். பின்னர் ஆரியர்கள் அடிமைபடுதியபோது தமது அழித்தல் கடவுளே(ருத்திரன்) உங்களது சிவன் என்று திரிபு படுத்தி அடக்கியாண்டார்கள்.
எந்தக் கோவில் மூலத்தானத்திலும் சிவலிங்கமே கானப்படுமேயன்றி, சிவபெருமான் சிலை காணபடாது.
இதே போலவே முருகு தெய்வம் எனக்கு ச்கந்தனாக திரிபுபடுத்தப் பட்டது.
இது போன்ற ஆயிரம் யூகங்களை கூற முடியும். ஆனால் இதற்கான வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் வேண்டுமே? அங்கு இருந்து இங்கு வந்தார்கள் என்று சொல்லும் பொழுது இங்கு இருந்து அங்கு சென்றார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?
இதை தானே கிறித்துவ பாதரியார் கால்டுவேல் மற்றும் சம்ஸ்கிரதமே தெரியாதா மேக்ஸ் முல்லரும் சொன்னது.
இது ஒன்றும் புதிய விசயம் அல்ல. சரி தொல் பொருள் துறை ஆய்வில் ஏதேனும் இது குறித்த ஆதாரங்கள் உள்ளனவா?
புத்தமதம் சீனாவில் உள்ளது. அதற்காக புத்தர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்வீர்களா?
இது ஒன்றும் புதிய கதை அல்ல... மாயன் முதல் செவ்விந்தியர்கள் கதை வரை இவ்வாறு திரிப்புகளை எழுதுவது தானே.. மிஷினரிகளின் வேலை....
முக்கியமான விசயம். நாளை நீங்கள் இந்தோனேஷியா மற்றும் கம்போடியா போனால் அங்கு கூட இது போன்ற ஹிந்து அடையாளங்கள் உள்ளன. உடனே ஹிந்துகளின் தாயகம் இந்தோனேஷியா என்று சொல்வீர்களா? மங்கோலியாவில் இருப்பவர்களுக்கு இங்கு உள்ள ஹிந்துக்களுக்கும் உள்ள மரபணு ஆய்வுகள் எதேனும் உள்ளதா?
ஏன் என்றால் கடந்த மாதம் வெளியான மரபணு ஆய்வில்
(The American Society of Human Genetics)
ஹிந்துஸ்தானில் நீங்கள் சொல்லும் இனகலப்பு என்பது 60000 வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் நடந்து இருக்க வாய்ப்பு உண்டு அதற்கு முன்பு நடக்க வாய்பே இல்லை என்று சொல்லப்பட்டுள்லது.
http://www.newsofdelhi.com/society-religions/no-foreign-genes-or-dna-entered-india-after-60000-bc-study
கம்யூனிஸ்டுகள் சிறுபான்மை ஒட்டு பொறுக்கிகள் என்பது அறிந்த ஒரு விசயமே....
அதற்காக மத மாற்ற வியாபாரத்திற்கு நீங்கள் இந்த அளவுக்கு அடித்து பிடுத்து வேலை செய்வீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை :)
Post a Comment