Showing posts with label பண்டைய தமிழர். Show all posts
Showing posts with label பண்டைய தமிழர். Show all posts

Sunday, October 06, 2019

ஏன் "திராவிட மொழிகள்" என்று சொல்ல வேண்டும்?


அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.

ஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை! அவர்களது மொழியில் "டொய்ச்" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் "டொய்ச் லாந்து" (Deutschland).

ஆகவே "ஜெர்மனிய மொழிகள்" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

இருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே "பிரஷிய டொய்ச்" (Preußisch), மேற்கே "நீடர் (தாழ்ந்த) டொய்ச்" (Niederdeutsch), தெற்கே "ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் "நெடர்லான்ட்ஸ்" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் "ஆபிரிக்கான்ஸ்" (Afrikaans) மொழி.

இன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.

தமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.

பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.

அதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.

வரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.

Saturday, September 17, 2016

அரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே! இதோ ஆதாரம்!!


இந்தியா பற்றிய சுற்றுலா நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தத் தகவல் கண்ணில் பட்டது. "தென் கர்நாடகா மாநிலத்தில் குடகு மலைப் பிரதேசத்தில் குடவர்கள் என்ற சிறுபான்மை மொழி பேசும் இனம் வாழ்கின்றது. அவர்கள் பிற கன்னடர்களை விட வித்தியாசமாக வெள்ளையாக இருப்பார்கள். இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்த நேரம், அந்தப் படையில் வந்த ஐரோப்பிய இனத்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்..." இவ்வாறு அந்த நூலில் எழுதப் பட்டிருந்தது.

 2003 ம் ஆண்டு, இந்தியா சுற்றுலா சென்றிருந்த நேரம், குடகு மலைப் பிரதேச தலைநகரான மடிக்கேரிக்கும் சென்றிருந்தேன். மடிக்கேரி மியூசியத்தில் இருந்தவர்களிடம் குடவா இனத்தவர் பற்றிக் கேட்டேன். அப்போது அங்கிருந்த அலுவலர் "குடவா என்று தனியான இனம் எதுவும் இல்லை. அவர்களும் கன்னடர்கள் தான்." என்றார். அந்த ஊரை சுற்றிக் காட்டிய ஆட்டோக் காரரிடம் பேச்சுக் கொடுத்த பொழுது, அவர் தான் துளு மொழி பேசுவதாக கூறினார். எனது நேரம் போதாமை காரணமாக, அங்கே தங்கி இருந்து ஆராயாமல், மைசூர் ஊடாக கோயம்புத்தூருக்கு சென்று விட்டேன்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து "நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அது தொடர்பாக பண்டைய அரேபியர்கள் பற்றியும் ஆராய வேண்டியிருந்தது. அப்போது அரேபியருக்கும், சேர நாட்டுக்கும், இடையிலான வர்த்தகத் தொடர்புகள் பற்றிய தகவலும் கிடைக்கப் பெற்றன.

அரேபியருக்கும், தமிழருக்கும் இடையிலான அறுந்து போன தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு குடகு மலைக்கு செல்லுங்கள். புராதன திராவிட மொழியான குடகு மொழி, தமிழும், மலையாளமும் கலந்தது போன்றிருக்கும். குடகு மக்கள், கர்நாடகாவில் காவிரிநதி ஊற்றெடுக்கும் இடத்தில் வாழ்கின்றனர். காவிரி நதி நீருக்காக சண்டை பிடிக்கும் கன்னடர்களும், தமிழர்களும், குடகு மக்கள் குறித்து அக்கறைப் படுவதில்லை.

குடவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இன்றைக்கும் பழங்குடிகள் மாதிரி இயற்கைத் தெய்வங்களை வழிபடுகின்றனர். காவேரி அவர்களுக்கு குல தெய்வம். காவேரி சங்கிரிந்தி என்பது அவர்களுக்கு முக்கியமான பண்டிகைத் தினம். காவேரி நதி ஊற்றெடுக்கும் இடம் தலைக்காவேரி என்று அழைக்கப் படுகின்றது. அதை "இந்துக்களின் புனித ஸ்தலமாக" விளம்பரம் செய்வது ஒரு மோசடி. சுற்றுலாப் பயணிகள், "இந்துக்களுக்கு புனிதமான" தலைக்காவேரியை பார்ப்பதற்கு படையெடுக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் சுற்றுச் சூழல் அசுத்தமடைவதாக குடவர்கள் குறை கூறுகின்றனர்.

குடகு இன மக்கள், பிற இந்தியர்கள் மாதிரி நாகரிகமடைந்த சமூகம் தான். நவநாகரிக உடை அணிந்து, நவீன நுகர்வுக் கலாச்சாரத்தை அனுபவிப்பவர்கள் தான். இருப்பினும், தமது மரபை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். திருமண சடங்குகளில் சீதனம் கொடுப்பதில்லை. தாலி கட்டுவதில்லை. ஐயர் மந்திரம் ஓதுவதில்லை. மூத்தோர் கூடி மணம் முடித்து வைக்கிறார்கள்.

பழங்குடியின மக்கள் பெண் தெய்வங்களை வழிபடுவதுடன், தம்மினப் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பது வழமை. குடவர் இனப் பெண்களை குடத்திகள் என அழைப்பர். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் சேலை அணிகிறார்கள். இருப்பினும், சேலைத் தலைப்பை முதுகைச் சுற்றி எடுத்து செருகுவது ஒரு வித்தியாசமான பாணி.

குடவர் ஆண்களது பாரம்பரிய உடையும் வித்தியாசமானது. தலைப்பாகை கட்டி, இடுப்பில் பட்டாக் கத்தி செருகி இருப்பார்கள். குடவர் ஆண்களின் பாரம்பரிய நடனம் கிட்டத்தட்ட அரேபியரின் நடனம் போன்றிருக்கும். அது போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இன்றைக்கும் குடவர்கள் தம்மை சிறந்த போர்வீரர்களாக கருதிக் கொள்கிறார்கள். இந்திய இராணுவத்திலும் பணி புரிகிறார்கள்.

அரேபியா தீபகற்பத்தில், ஒமான், யேமன் நாடுகளில் வாழும் அரேபியர்களின் கலாச்சாரம் தனித்தன்மை கொண்டது. அவர்களது பாரம்பரிய உடையில் இருந்தே பிற அரேபியர்களிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்கலாம். அவர்கள் இந்திய பாணியில் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். அத்துடன் இடுப்பில் பட்டாக் கத்தியை செருகி இருப்பார்கள். அந்தப் பிரதேச அரேபியரையும், கத்தியையும் பிரிக்க முடியாது. கூடப் பிறந்த உடல் உறுப்பு மாதிரி அந்தக் கத்தியை எப்போதும் வைத்திருப்பார்கள்.



ஒமான், யேமன் அரேபியரின் கத்தி பற்றி மேலும் ஆராய்ந்து பார்ப்போம். அதன் முனை அரிவாள் மாதிரி வளைந்து இருக்கும். தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான "திருப்பாச்சி அரிவாள்", "வீச்சு அரிவாள்" போன்றன அரேபியாவில் இருந்து வந்த கத்திகள் என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அரிவாள் இன்று குடவா இனத்தவரின் தேசிய சின்னமாக மாறி விட்டது. அந்தளவுக்கு அவர்கள் தமது அரிவாளை எண்ணி பெருமை கொள்கின்றனர்.

பண்டைய தமிழர்களின் மரபுகளில் ஒன்று வாழை வெட்டுதல். இன்றைய தமிழர்களுக்கு அந்த சம்பிரதாயம் பற்றி எதுவும் தெரியாது. சூரன் போர் திருவிழாக்களில் மட்டும் வாழை வெட்டுவதை காணலாம். குடவா மக்கள், இன்றைக்கும் வாழை வெட்டும் சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றார். திருமண சடங்குகளில் வீச்சரிவாளால் வாழை வெட்டும் சடங்கு நடக்கும். இதை நீங்களாகவே இணையத்தில் உள்ள வீடியோக்களில் பார்க்கலாம்.

சங்க கால தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சிப் பூ பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும். எத்தனை தமிழர்கள் குறிஞ்சிப் பூவை பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி. குடவா மக்கள் இன்றைக்கும் குறிஞ்சிப் பூவில் இருந்து சாறு எடுத்து வருகின்றனர்! அவர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில் காணப்படும் குறிஞ்சிப் பூ, மருத்துவத்திற்கு இன்றியமையாதது. அதன் சாறு பல நோய்களை குணப் படுத்த உதவுகின்றது.

குடவர்கள் இன்று அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகி விட்டனர். குறைந்தது ஒன்றரை மில்லியன் குடவர்கள் மட்டுமே மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்றி வருகின்றனர். கர்நாடகா மாநில அரசு அவர்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யாமல் புறக்கணித்து வருகின்றது. மருத்துவ வசதிகளுக்கும், கல்வி கற்பதற்கும் மைசூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 

அது மட்டுமல்ல. கர்நாடகா அரசு, குடவர்களை சிறுபான்மை மொழி பேசும் இனமாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. புள்ளிவிபரக் கணக்கெடுப்பில், கன்னடர்களாகவும், இந்துக்களாகவும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்து வைத்துள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், குடவர்கள் பெரிய ராஜ்ஜியம் ஒன்றை கட்டி ஆண்டார்கள். இன்றைய குடகு மலை மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள கண்ணனூர், கொடுங்கொள்ளூர் பகுதிகளும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், கொங்கு நாட்டுப் பகுதிகளும், குடகு மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ளன. 

கோயம்புத்தூரை அண்டிய கொங்கு நாட்டுப் பகுதிகளில்,ஒரு காலத்தில் "கங்கீ" என்ற வட்டாரத் தமிழ் பேசப் பட்டது. அந்த வட்டாரத் தமிழ், குடகு மொழிக்கு நெருக்கமானது. இன்றைக்கும் தமிழர்கள் குடகு மொழியை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் ஐம்பது சதவீதமாவது எமக்குப் புரிந்து கொள்ள முடியும்.

குடகு இனத்தவரின் பூர்வீகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் படி மேற்கே உள்ள நாடொன்றில் இருந்து கடல் கடந்து வந்ததாக தெரிகின்றது. அதாவது, அவர்களது முன்னோர்கள் ஒமான் - யேமன் பகுதிகளில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம்.

குடவர்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் யாவும் சேர நாட்டுடன் தொடர்பு கொண்டவை. குடாக்கடல் அருகில் உள்ள தீவை சேர்ந்த குடவர்கள், ஆரம்ப காலங்களில் கடற்கொள்ளையர்களாக சேர நாட்டு மன்னனுக்கு தொந்தரவாக இருந்து வந்தனர். பிற்காலத்தில் மன்னனுடன் இணக்கமாக சென்று, சேர நாட்டிற்கு உட்பட்ட சிற்றரசை ஆண்டு வந்தனர். பண்டைய குடவர்கள் தமது பிரதேசத்தை குடா நாடு என்றும் அழைத்தனர்.

குடவர்கள் இன்று, மலை வாழ் மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு காலத்தில் வட கேரள கரையோரப் பிரதேசங்களிலும் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். குடவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் யாருக்கும் தெரியாது. குடா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாலா? அல்லது மேற்கில் இருந்து வந்தவர்கள் என்பதாலா? இன்றைக்கும் அது குறித்து மானிடவியல் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை.

குடகு மொழியானது, நவீன தமிழுக்கு முந்திய புராதன திராவிட மொழிப் பிரிவை சேர்ந்தது. மானிடவியல் அறிஞர்கள் அதனை மலையாளத் தமிழ் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, மலையாளமும், தமிழும் கலந்த மொழி போன்றிருக்கும். "மாப்பிளை பாஷா (அல்லது பியாரி பாஷே)" அந்தப் பிரிவை சேர்ந்தது. 

இன்றைக்கும் கேரளா மாநிலத்தில், முஸ்லிம்களை "மாப்பிள்ளைகள்" என்றும் அழைக்கிறார்கள். அது எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். தமக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ள கேரளா மாப்பிள்ளை மார், எப்போதுமே முஸ்லிம்களாக இருந்தவர்கள் அல்ல. பல்வேறு மதங்களை பின்பற்றியவர்கள்.

ஒரு காலத்தில், அதாவது சேர மன்னன் ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவர்களுக்கும் மாப்பிள்ளைகள் என்ற பெயர் இருந்தது. இன்று அவர்கள் "சிரிய கிறிஸ்தவர்கள்" என்று தனியான பிரிவாகி விட்டனர். கேரளாவை சேர மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே, அங்கு குடியேறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், உள்ளூர் மக்களில் சிலரை மதம்மாற்றி இருந்தனர். சேர மன்னன் அதைத் தடுக்கவில்லை.

அரேபியா தீபகற்பம் இஸ்லாமிய மயமாகிய காலத்தில், பெருமளவு அரேபிய அகதிகள் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை அல்லது பாரம்பரிய சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றிய அரேபியர்கள் ஆவர். அரேபியர்கள் மட்டுமல்ல, துருக்கி, பார்சி, கிரேக்க மொழி பேசும் மக்களும் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

சேர நாடான கேரளாவில் குடியேறிய மேற்காசிய அகதிகள் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர். தமிழில் மாப்பிள்ளை என்றால் என்ன அர்த்தம் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மகளை மணம் முடிக்கும் மருமகன். அது ஒரு மரியாதைக்குரிய சொல். சேர நாட்டில் குடியேறிய அரேபியா அகதிகளும், உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்த படியால் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர்.

மாப்பிளைகள் குறைந்தது 1500 வருட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால், குடவர்கள் அதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே வந்து குடியேறி விட்டனர். அதனால், இன்றைக்கும் இரண்டு பிரிவினரும் வெவ்வேறு இனத்தவராக அடையாளப் படுத்தப் படுகின்றனர். 

இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் இன்றைக்கும் தமது தனித் தன்மையை பேணி வருவதால் தான் இந்த விபரம் எல்லாம் தெரிய வந்துள்ளன. உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து, பிற்காலத்தில் தமிழர், மலையாளிகள், கன்னடர்கள் என்று (இனம்) மாறியவர்கள் ஏராளம் பேருண்டு.

அந்நிய குடியேறிகளான மாப்பிள்ளைகளின் வம்சாவளியினர் இன்றைக்கும் உள்ளனர். அவர்களை இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். மதத்தால் இஸ்லாமியரான அவர்கள், தோற்றத்தில் ஐரோப்பியர் மாதிரி இருப்பார்கள். ஆனால், பேசும் மொழி தமிழ் மாதிரி இருக்கும்!

கேரளாவில் வாழ்பவர்கள், மாப்பிளை பாஷா (மலையாள கிளை மொழி) பேசுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் வாழ்பவர்கள், அதையே "பியாரி பாஷா" என்ற பெயரில் பேசுகின்றனர். அதை எழுதும் போது கன்னட எழுத்துக்களை பாவிக்கிறார்கள். 

எம்மை எல்லாம் ஆச்சரியப் படுத்தும் விடயம் என்னவெனில், மாப்பிள்ளை/பியாரி பாஷாவில் 75% தமிழர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்! சந்தேகமிருந்தால் இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்க்கவும். 

பண்டைய காலத்தில், ஐரோப்பியரும், அரேபியரும், தென்னிந்திய அரசுக்களுடன் வர்த்தகம் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப் பட்டுள்ள ரோமர் காலத்து நாணயங்கள் அதற்கு ஆதாரம். பாண்டிய நாட்டில் ஏராளமான ரோமானியர்கள் குடியேறி இருந்தனர். 

ரோமானியர்கள், பாண்டிய மன்னனின் கூலிப்படையாகவும் இருந்துள்ளனர். (அந்தக் காலங்களில் "தேசிய இராணுவம்" கிடையாது.) பாண்டியர்களின் வீழ்ச்சியுடன் அவர்களும் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். ஒன்றில் தாயகம் திரும்பி இருக்கலாம், அல்லது உள்ளூர் மக்களுடன் கலந்திருக்கலாம். இரண்டாவது  தெரிவுக்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளன.

தென்னிந்தியாவில் குடியேறிய ரோமர்கள், உண்மையில் கிரேக்க மொழி பேசுவோர் ஆவர். அதனால், அவர்கள் "யவனர்கள்" என்று அழைக்கப் பட்டனர். இன்றைய கிரேக்க தேசத்தில் "இயோனியா" என்ற மாகாணம் உள்ளது. அவர்களும் கடலோடிகள் சமூகம் தான். இயோனியர்கள் என்பது தமிழில் யவனர்கள் என்று திரிபடைந்து இருக்கலாம். சேர நாட்டில் (கேரளா) அவர்கள் "ஜோனகர்கள்" என்று அழைக்கப் பட்டனர்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் "சோனகர்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். இலங்கையில் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த இந்த விபரம், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வரலாற்றுக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த யவனர்கள், சோனகர்களாக மாறி இருக்கலாம். அது இன்று எல்லா முஸ்லிம்களையும் குறிப்பிட பயன்படுத்தப் படும் சொல்லாகி விட்டது. 

இன்றைய இலங்கை முஸ்லிம்கள் தம்மை தனியான இனமாக காட்டிக் கொள்வதற்கு, சோனகர்கள் வரலாற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது தற்கால தேசியவாத அரசியல். பண்டைய காலத்து மக்களினதும், நவீன காலத்து மக்களினதும், சமூக - அரசியல் கருத்தியலில் மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

உசாத்துணை மேலதிக தகவல்களுக்கு:


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tracing The Exotic Kodavas

Wednesday, December 17, 2014

பபுவா நியூ கினியாவில் தமிழ் மொழி!


பபுவா நியூ கினி பற்றி கேள்விப் பட்ட தமிழர்கள் மிகக் குறைவு. பபுவா மக்களும் தமிழர்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தமிழகத்திற்கும், பபுவா நியூ கினிக்கும் நடுவில் எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம்! இத்தனை தொலைவில் வாழும் பழங்குடி மக்களின் மொழியில் ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்கள் புழங்கி வருகின்றன.

பல இடங்களின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் தமிழ் போன்று ஒலிக்கின்றன. உதாரணத்திற்கு: வா (Wau), கரிமுகம் (Karimui), பூ (Pua), இரவி (Erave), லிங்கம், நாகம் இன்னும் பல. ஒரு மலைக்குப் பெயர் "காவேரி ஹில்ஸ்". அங்கே நிலம் இன்றைக்கும் "பூமி" என்றே அழைக்கப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், பபுவா நியூ கினியா பற்றி வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆங்கிலேய, டச்சு காலனியாதிக்கவாதிகள் அந்தப் பிரதேசத்தை "கண்டுபிடித்த" போது, புராதன கால மனித சமுதாயம் இருப்பதை கண்டறிந்தார்கள்.

காலனிய ஆட்சி காரணமாக, பெரும்பான்மையான பபுவா மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி விட்டார்கள். அதனால், கிறிஸ்தவப் பெயரை சூட்டிக் கொண்டாலும், குடும்பப் பெயராக பபுவா மொழிப் பெயர் ஒன்றை வைத்துக் கொள்கின்றனர். அவையும் தமிழ் போன்றே ஒலிக்கின்றன. உதாரணத்திற்கு: Kuala (குள்ளன்), Muliah (மூலை), Koleala (கோழிக் காரன்)... இன்றைய பபுவா பாராளுமன்றம் அமைந்திருக்கும் இடத்தின் பெயர் Waigani (வாய்க் காரன்).

இதை கேட்ட உடனே, "பார்த்தீர்களா! கல் தோன்றா மண் தோன்றாக் காலத்திற்கு முந்திய தமிழ்..." என்று இனப் பெருமை பேசக் கிளம்பி விடாதீர்கள். "தமிழ்" என்ற பெயர்ச் சொல் நவீன காலத்திற்குரியது. அதற்கு முன்னர் எழுதப் படாத பல மொழிகளை முன் - தமிழ் (Proto - Tamil) என்று அழைக்கலாம்.

அது ஒரே மொழியாகவோ, அல்லது பல மொழிகளின் சேர்க்கையாகவோ இருந்திருக்கலாம். அதைப் பற்றி அதிகம் தெரியாத படியால் தான், தமிழ் என்ற பொதுப் பெயரால் அழைக்கிறோம். மேலும் இந்தோனேசியாவில் பேசப்படும் மொழிகளில் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

இன்றைக்கும் பபுவா நியூ கினியில் பல நூறு வித்தியாசமான மொழிகள் பேசப் படுகின்றன. (இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு பபுவாவிலும் அதே மொழிகள் பேசப் படுகின்றன.) ஏற்கனவே பல அழிந்து விட்டன. கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்றவர்கள், பெரும்பான்மை மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆங்கிலேய பேரினவாதிகள் (அல்லது அவுஸ்திரேலியர்கள்) அவுஸ்திரேலியாவின் பூர்வீகப் பெயர்களை அழித்து விட்டு, அவற்றை ஆங்கில மயப் படுத்தினார்கள். ஆனால், பபுவா நியூ கினியாவில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் புகுத்தினார்கள்.

பபுவாவில் பூர்வீக இடப் பெயர்கள் அப்படியே இருந்தாலும், ஆங்கில மயமாக்கல் காரணமாக சில மாற்றங்களுக்குள்ளாகி இருக்கலாம். டச்சுக் காரர்களின் காலனிய மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பபுவா பிரதேசம், பிற்காலத்தில் இந்தோனேசிய ஆக்கிரமிப்பினால் மேலும் பாதிப்புக்குள்ளாகியது.

எழுத்து வடிவம் இல்லாதிருந்த பபுவா மக்களின் பூர்வீகம் குறித்து அறிந்து கொள்வது கடினம். ஆயினும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை, மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை எடுத்துக் காட்டுகின்றது. இவை எல்லாம், நாம் இது வரை காலமும் படித்து வந்த சரித்திரம் பொய்யானது என்பதை நிரூபிக்கின்றன. 

இராமாயணக் கதை கூட ஆதியில் வேறு விதமாக சொல்லப் பட்டிருக்கலாம். அது இந்தியாவில் நடந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பபுவாவில் சில இடங்களின் பெயர்கள், "ராம் - இராவண சகோதரர்கள்" என்று உள்ளன. இராமாயணக் கதை நடந்ததாக கருதப்பட்ட கால கட்டத்திற்கு முந்திய காலத்தில் இருந்தே,  பபுவாவில் மனித இனங்கள் இருந்து வருகின்றன.)

தமிழர்களின் பூர்வீகம் இந்தியா அல்லது "குமரி கண்டம்" என்பது, இனத் தூய்மைவாதம் சார்ந்த நவீன கால அரசியல் கோட்பாடு. தமிழர்களின் பூர்வீகம், ஆப்பிரிக்காவோ அல்லது பபுவா நியூ கினியாவாகவோ கூட இருக்கலாம். ஏன் அந்தத் திசையில் யாரும் ஆய்வு செய்வதில்லை? தற்கால பூகோள அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு தான், பபுவா கருப்பின மக்களோடு எங்களை இனங் காண விடாமல் தடுக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு:

பபுவா பற்றிய முன்னைய பதிவுகள்:

Saturday, January 14, 2012

தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்



அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப் பொங்கல் வாழ்த்துக்கள்!

மேற்கத்திய நாட்டு மக்கள் "கிறிஸ்துமஸ்" என்ற பெயரில் கொண்டாடும் பண்டிகையை, தமிழர்கள் தைப்பொங்கல் என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்! பலருக்கு இதனை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்குக் காரணம், "உலகத்தில், தமிழர்கள் மட்டுமே தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர்." என்று தமிழ் மக்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளனர்.

உலகத்தில் தமிழர்கள் மட்டுமே வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் "அறிவுஜீவிகள்", இன்றைக்கும் அவ்வாறு தான் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், "தைப்பொங்கல் தினத்தை புத்தாண்டாக கொண்டாட வேண்டுமா?" என்று, நமது தமிழ் அறிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். உழவர் திருநாளான பொங்கலும், புது வருடப் பிறப்பும் ஒரே காலத்தில் வருகின்றது. இரண்டுமே சரி தான். அதே நேரம், பண்டிகையின் வேறு சில கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

பண்டைய தமிழர்களைப் பொறுத்த வரையில், தைப் பொங்கல், புது வருடம் என்பதற்கு அப்பால்,அந்த தினம் வேறு காரணங்களிற்காக முக்கியத்துவம் பெறுகின்றது.
சாதி, மத, வர்க்கங்களைக் கடந்த ஒரேயொரு சமத்துவமான பண்டிகை நாள் பொங்கல் மட்டுமே. பொங்கல் கொண்டாடுவது, தமிழர்களுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு அல்ல. உலகின் பண்டைய நாகரீகங்களுக்குப் பொதுவான தினம் அது. பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமே விசேஷமான பண்டிகை அல்ல, பல உலக இனங்களுக்குப் பொதுவானது. 

பிற்காலத்தில் தோன்றிய மதங்கள், அதன் முக்கியத்துவத்தை மறைத்து விட்டன. மேற்குலகில் கிறிஸ்தவ மதமும், இந்தியாவில் இந்து மதமும் அந்த மாபெரும் இருட்டடிப்பு வேலையை நிறைவேற்றின. தமிழகத்தில் நீண்ட காலமாக "இந்து எதிர்ப்பு போர்" நடந்து வந்ததால், இந்து மதம் மிகவும் தாமதமாகத் தான் அதனது ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டியது. அதனால் தான், பண்டைய தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் திருநாள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.

பொங்கல் எதற்காகக் கொண்டாடப் படுகின்றது? விவசாயிகள் தமது வயலில் விளைந்த தானியத்தை, பானையில் இட்டுப் பொங்கி சூரியக் கடவுளுக்கு படைப்பார்கள். (அரிசி உணவு சீனர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது. அதனால், பண்டைய தமிழர்கள் அரிசியைத் தவிர வேறு தானியங்களில் பொங்கல் செய்திருப்பார்கள்.) அமெரிக்க கண்டத்தில் வாழும் செவ்விந்தியர்கள், அறுவடை செய்த சோளத்தை கடவுளுக்கு படைக்கும் பண்டிகை ஒன்றைக் கொண்டாடுகின்றனர்.

பழந் தமிழர்கள் பொங்கலுக்கு முதல் நாள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து வந்து,ஊரில் உள்ள பொது இடத்தில் போட்டு எரித்தார்கள்.(Bonfire) இந்தப் பழக்கம், பாபிலோன், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப் பட்டது. அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் சென்றிருந்த வேளை, ஈஸ்டர் தினத்தன்று கிராமங்களில் பொது இடங்களில் நெருப்பு மூட்டுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கேயும், கிராம மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை கொண்டு வந்து போட்டு, ஊர் கூடி எரிப்பார்கள்.

உலகின் பிற இனங்களும் விவசாய சமூகங்களாக இருந்துள்ளன, இருந்து வருகின்றன. பிற இனங்ககளைச் சேர்ந்த விவசாயிகளும், அறுவடை நாள் என்று ஒன்றைக் கொண்டாடும் சாத்தியக்கூறுகள் உண்டல்லவா? தமிழ்ப் பெருமை பேசுவோர், மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகை கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. அதனால் தான், "கிறிஸ்தவ" ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்த, "பொங்கல் பண்டிகைகள்" அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. கிறிஸ்துமஸ் தினத்திற்கும், தைப் பொங்கலுக்கும் என்ன தொடர்பு? அதற்கு கிறிஸ்தவத்திற்கு முந்திய ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை சற்று அறிந்து கொள்ள வேண்டும்.

வட ஐரோப்பிய பகுதிகளில், அதாவது ஸ்கண்டிநேவிய நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம், "யூல்" (அல்லது யூலே) என்று அழைக்கப் படுகின்றது. இங்கிலாந்தில், சில இடங்களில் யூல் பண்டிகை கிறிஸ்துமஸ் தினத்தை விட்டு தனியாக கொண்டாடப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய பாரம்பரியத்தின் படி, யூல் பண்டிகை, விவசாயிகளின் அறுவடை நாளாகவே கொண்டாடப் படுகின்றது. ஆனால், அந்த நாடுகளில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைக்க முடியாது. அங்கெல்லாம், குளிர் காலத்தில் மாதம் முழுவதும் சூரியனைக் காண முடியாது.

டிசம்பர் 21 - ஜனவரி 21 வரையிலான நாட்கள், வருடத்திலேயே சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் நாட்கள். அந்த நேரத்தில், சூரியனின் வரவுக்காக வேண்டி வழிபாடு நடத்தும் நோக்குடன், பண்டிகை கொண்டாடுவது உசிதமல்லவா? வட ஐரோப்பாவில், கோடை காலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பனிக் காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியது தான். பனிக்காலம் ஆரம்பமாகும் முன்னர், பயிரிட்ட உணவுப் பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்து களஞ்சியப் படுத்தி வைத்திருப்பார்கள். யூல் பண்டிகையின் போது, அறுவடை செய்த பொருட்களை உண்டு, களித்து அனுபவிப்பார்கள். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் இறைச்சியும் அப்போது நுகரப்படும்.

ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 21 அன்று, சூரியன் இடம் மாறுகின்றது. (பூமியின் வட பகுதியில் டிசம்பர் 21 என்றால், தென் பகுதியில் டிசம்பர் 25 அளவில் அந்த மாற்றம் நடக்கலாம்.) ரஷ்யாவின் துருவப் பகுதியில், அல்லது நோர்வேயின் வட முனையில் வாழ்பவர்கள், சூரியன் இடம் மாறும் அதிசயத்தை கண்ணால் காணலாம். இந்தியாவில், இந்து மத நம்பிக்கையின் படி, "சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதாக" கூறுகின்றனர். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை, உலகின் பல பாகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

பண்டைய தமிழர்கள், அதனை தைப்பொங்கல் தினம் என்று அழைத்தனர். பெயர்கள் வேறாக இருந்த போதிலும், பண்டிகை கொண்டாடப் படுவதன் நோக்கம் ஒன்று தான். பொங்கல் பண்டிகையை புது வருடப் பிறப்பாக கருதினால் அதில் தவறெதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். குறிப்பாக, இஸ்லாத்திற்கு முந்திய ஈரானில், டிசம்பர் 25, யால்டா தினம் கொண்டாடப் பட்டது. யால்டாவில் இருந்து மருவியது தான் யூல். அது மித்ரா (மேஹ்ர்) கடவுளின் பிறந்த தினமாகவும் கொண்டாடப் பட்டது. பண்டைய ஈரானில் யால்டா ஒரு அறுவடை நாளாகவும், அதே நேரத்தில் புது வருடம் பிறப்பதாகவும் கருதப் பட்டது. "யால்டா" என்றால், பிறப்பு என்று அர்த்தம் வரும்.

ஐரோப்பியக் கண்டத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வேலையில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க திருச்சபை, மக்கள் ஆதரவு பெற்ற வேற்று மத கொண்டாட்டங்களை உள்வாங்கிக் கொண்டது, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் எல்லாம் அவ்வாறு கிறிஸ்தவத்திற்கு மாற்றப் பட்ட பண்டிகைகள் தான். கிறிஸ்துமஸ், சூரிய ஒளி மிகக் குறைவாகக் கிடைக்கும் தினம். ஈஸ்டர், இரவும், பகலும் சரிசமமாக வரும் இளவேனில் காலத்தின் தொடக்கம். இந்தக் காரணங்களுக்காகத் தான், அந்தப் பண்டிகைகள் கொண்டாடப் பட்டனவே தவிர, அவற்றிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்த இடத்தில் யாராவது "புத்திசாலித் தனமான" கேள்வி ஒன்றை எழுப்பலாம். கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வருகின்றது, ஆனால் பொங்கல் ஜனவரி 15 அல்லவா வருகின்றது?

சூரியனின் பருவகால மாற்றம், உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப் படுவதில்லை. ஜப்பானியர்கள், சீனர்கள், யூதர்கள், ஆப்பிரிக்காவில் டோகன் இனத்தவர்கள், என்று பலவிதமான மக்கள் வெவ்வேறு தினங்களில் ஒரே மாதிரியான பண்டிகையை கொண்டாடுகின்றனர். டிசம்பர் 25 அன்று தான் கிறிஸ்துமஸ் என்று, தீர்மானம் நிறைவேற்றியது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. கிரேக்க, ரஷ்ய கிறிஸ்தவர்கள் ஜனவரி 6 ம் தேதி அன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தான் சூரியக் கலண்டரை அமுல் படுத்தியது. அதற்கு முன்னர், சந்திரக் கலண்டர் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பாவனையில் இருந்தது. அந்தக் கலண்டரின் படி, நாட்கள் மாறி மாறி வரும்.

சங்க காலத்தில் பொங்கல் பண்டிகை வேறு விதமாகக் கொண்டாடப் பட்டது. மார்கழி மாதம், பெண்கள் பாவை நோன்பு இருந்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருமணமாகாத கன்னிப் பெண்கள், காலையில் எழுந்து நீராடி, ஒரு மாதம் விரதம் இருப்பார்கள். அதனால் இது "தை நீராடல்" என்றும் அழைக்கப் படுகின்றது. பொங்கல் பண்டிகையின் போது, அனைவரும் சாதி,மத வேறுபாடின்றி கலந்து கொள்வார்கள். அன்றைக்கு மட்டும் வர்க்க வேறுபாடுகளும் தளர்த்தப் படும். அதனால், பொங்கல் பண்டிகையை, பண்டைய தமிழரின் சமதர்மத் திருவிழா என்றும் அழைக்கலாம்.

இன்று பல வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கு, அரிவாளும், சுட்டியலும் சின்னத்தைக் கண்டாலே ஒவ்வாமை நோய் வந்து விடுகின்றது. எமது முன்னோர்கள், பொங்கல் தினத்தன்று, நெற் கதிர் அறுக்கும் அரிவாளுக்கும், நிலத்தைப் பண்படுத்தும் கலப்பைக்கும், சந்தனம் பூசி மரியாதை செலுத்துவார்கள். இராணுவ கலாச்சாரத்தை வளர்க்கும் பார்ப்பனீய ஆயுதபூஜையை விட, தமிழ் உழைக்கும் வர்க்கப் பொங்கல் திருநாள் பல மடங்கு சிறந்தது.

பண்டைய பாபிலோன், அல்லது ஈரானில், இது இன்னும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அன்றைக்கு மட்டும், அடிமைகள் எஜமானர்கள் போன்று நடந்து கொள்ள அனுமதிக்கப் படுவர். எஜமானர்கள் அடிமைகளாக நடந்து கொள்வார்கள். பெண்களுக்கும் சுதந்திரம் வழங்கப் படும். இது போன்ற நடைமுறையினால், நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து, குழப்பகரமான சூழ்நிலை நிலவுவது போன்று காணப்படும். பாபிலோனியரின், இறையியல் நம்பிக்கை அதிலிருந்து ஆரம்பமாகின்றது. அதாவது, பூமியில் ஆரம்பத்தில் குழப்பகரமான சூழ்நிலை இருந்ததாகவும், அதன் பிறகே அதிகாரம் நிலைநாட்டப் பட்டதாகவும் நம்புகிறார்கள். எது எப்படி இருப்பினும், அந்த சில நாட்களுக்காவது, எஜமானர்களும், அடிமைகளும் நண்பர்களாக நடந்து கொள்வது குறிப்பிடத் தக்கது. இந்த சமதர்மப் பண்டிகைக் கலாச்சாரம், ஒரு காலத்தில் ரோமாபுரி வரையில் பரவி இருந்தது.

பழந் தமிழரின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமாயின், நாம் பொங்கல் பண்டிகையை, வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாளாக கொண்டாட வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு:

1 Pongal History
2 List of harvest festivals
3 Yule festival
****************************************


பொங்கலுடன் தொடர்புடைய யால்டா தினம் பற்றிய கட்டுரை: