Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Wednesday, January 13, 2021

ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்

"இலங்கை சீனாவின் காலனி ஆகிறது" என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் பலருக்கு ஆபிரிக்காவில் என்ன நிலைமை என்பது தெரியாது. இலங்கையை விட பல மடங்கு அதிகமாக, ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவ பாதிப்புகள் மிகத்தெளிவாக உணரப்படுகின்றன அதுமட்டுமல்ல ஆப்பிரிக்கர்கள் சீனர்களின் இனவாத பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிசய படத் தக்கவாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் சீனாவின் நவ காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்ப பாடசாலைகளில் இருந்து சீன மொழி கற்பிக்கப்படுகின்றது அங்கு சீன மொழி படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த முரண்பாட்டை நாம் எப்படி புரிந்து கொள்வது? அது குறித்து ஒரு சிறிய ஆய்வு. 


கானா நாட்டின் தலைநகர் ஆக்ராவில் ஒரு ஊடகவியலாளர் ஒரு தடவை சீன உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருந்தார். அப்போது அந்த ரெஸ்டாரண்ட்டின் சீன உரிமையாளர், ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்று கூறி அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். "எவ்வாறு கானா நாட்டில் விருந்தினராக தங்கியுள்ள ஒரு சீன நாட்டு ரெஸ்டாரன்ட் உரிமையாளர், உள் நாட்டவரை அனுமதிக்க மறுக்க முடியும்?" என்று கேள்வி கேட்ட ஊடகவியலாளர் உடனடியாக சில இளைஞர்களை கூட்டி வந்து வாயில் கதவை அடைத்து போராட்டம் நடத்தினார். அன்றிலிருந்து அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அனைவரையும் உள்ளே வந்து சாப்பிட அனுமதித்தார். 

 

கென்யாவின் தலைநகர் நைரோபியிலும் இதே போன்ற பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கும் பல ரெஸ்டோரண்டுகள் சீனர்களையும் ஐரோப்பியர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவில் சீன நிறுவனங்களின் ரயில் பாதை கட்டுமான பணியில் வேலை செய்யும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் சீன தொழிலாளர்களுடன் ஒன்று சேர முடியாமல் இருப்பதாகவும் அது மட்டுமல்ல சீனர்கள் பாவிக்கும் கழிவறையை கூட பாவிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை சீனா தொழில் வழங்குனர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆப்பிரிக்கர்களை குரங்குகள் என்று திட்டியதால் கென்யா முழுவதும் சீனர்களுக்கு எதிரான போராட்டம் நடந்ததது.

புலமைப்பரிசில் கிடைத்து சீனாவுக்கு படிக்க சென்ற ஆப்பிரிக்கர்கள் கூட, அங்கு தாம் மூன்று வருடங்களுக்கு மேலே வாழ்ந்த போதிலும், சீன மொழியை சரளமாக பேசினாலும் சீன மாணவர்களுடன் ஒன்று கலக்க முடியாமல் இருந்ததை தெரிவித்துள்ளனர். சீனாவில் குவாங்சவ் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் ஆப்பிரிக்கர்கள் வாழ்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அங்கிருந்த ஆப்பிரிக்கர்கள் தான் வைரஸை கொண்டு வந்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இவையாவும் சீனர்கள் ஆப்பிரிக்கர்கள் மீது காட்டிய இனவாத பாகுபாட்டுக்கு சில உதாரணங்கள். அதற்காக சீனர்கள் எல்லோரும் இனவாதிகள் என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. உலகில் எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் இனவாதிகளும் இருக்கிறார்கள். இனவாதமற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்கள் மத்தியில் கூட இனவாதிகள் இருக்கிறார்கள். பெரும்பாலான இனவாதிகள் தாம் பேசுவது இனவாதம் என்பதை உணர்வதில்லை. இது தான் உலக வழக்கம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். தமிழர்களில் சிலர் கூட ஆப்பிரிக்கர்கள் விடயத்தில் இனவாதிகள் ஆக நடந்து கொள்வதைக் காணலாம். ஆப்பிரிக்கர்களை "காப்பிலிகள்" என்று ஒதுக்கி வைப்பது மாத்திரமல்லாது, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் கொண்டுள்ளனர்.

பஞ்சம், பசி, பட்டினி என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் நிலைமை என்று தான் நினைத்துக் கொள்கிறார்கள். இவையாவும் மேற்கத்திய ஊடகங்களினாலும், ஹாலிவுட் திரைப்படங்களினாலும் உலக மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளன. சீனர்களும் இந்த ஒரு பக்க சார்பான உலகப் பார்வைக்கு பலியானவர்கள் தான். ஆப்பிரிக்கர்களின் கருப்பு நிற மேனியை பஞ்சம், பசி, பட்டினி, வறுமை முட்டாள்தனம் போன்றவற்றுடன் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக சீனர்கள் காட்டும் இனவாத பாகுபாடும் அத்தகைய மனநிலையில் இருந்து தான் உருவாகின்றது. ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக எமது தமிழர்களில் சிலர் எத்தகைய இனவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்களோ, அதையே தான் சீனர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களில் நிலவும் இனவாதம் தொடர்பாக ஆய்வு செய்த கானா நாட்டு பேராசிரியர் ஒருவர், இது குறிப்பிட்ட தனிநபர் சார்ந்த நடத்தையாக மட்டுமே இருப்பதாக கண்டறிந்தார். அதாவது எல்லா சீன மனேஜர்களும், பணியாளர்களும் இனவாதப் பாகுபாடு காட்டுவதில்லை. அதிகபட்சம் 6 அல்லது 7 சம்பவங்களை மட்டுமே அவரால் இனவாதமாக நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஐரோப்பியர்கள் போன்று சீனர்கள் மத்தியில் இனவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது ஐரோப்பியர்கள் இனவாதத்தை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தனர். ஆனால் சீனர்களை பொறுத்தவரையில் அது அந்த தனிநபர் சார்ந்த விடயமாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்கள் இதை ஊதிப் பெருக்கி வருகின்றன. அத்துடன் முன்னாள் காலனியாதிக்க வாதிகளான மேற்கத்திய நாடுகளும் இதை தமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக கருதுகின்றன. தமது  ஊடகங்களை பயன்படுத்தி சீனர்களின் இனவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றனர். அதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன. 


முதலாவதாக பொருளாதார ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்கு போட்டியாக வந்துள்ள சீனாவை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக அவர்கள் ஆப்பிரிக்கர்களை, ஏன் தமிழர்களையும் கூட தமக்கு ஆதரவாக பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றன.

இரண்டாவதாக ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தாம் கடந்த காலத்தில் செய்த காலனியாதிக்க கொடுமைகளையும் இனவெறிப் பாகுபாட்டையும் மூடி மறைக்க முயல்கின்றனர். அதைப் பூசி மெழுகி வெள்ளை அடிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். சீனர்களுக்கு எதிராக கம்பு சுற்றும் தமிழர்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எதிர்மறையாக சொல்ல மாட்டார்கள்.

சீனாவுடனான உறவுகளில் பல ஏமாற்றங்கள் கிடைத்திருந்த போதிலும் இன்றைக்கும் ஆபிரிக்க நாடுகள் சீனாவை தமது பிரதானமான வணிகக் கூட்டாளியாக கருதுகின்றனர். இதுவரை காலமும் மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதென்றால் பல நிபந்தனைகள் விதித்து வந்தனர். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்று அந்த நிபந்தனைகள் இருக்கும். ஆனால் சீனா இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இது சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

மறுபக்கத்தில் 54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டமானது சீனாவுக்கு ஒரு மிகப் பெரியதொரு முதலீட்டுக்கான வாய்ப்பை கொடுத்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகள் அமைப்பது, போன்ற கட்டுமான பணிகளில் மட்டும் அல்லாது எண்ணை அகழ்வு, சுரங்கத்தொழில், கடற் தொழில் போன்றவற்றிலும் சீனா முதலிட்டு வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் அதற்கு ஒரு மிகப்பெரிய விலை கொடுக்கின்றன பெரும்பாலும் இந்த முதலீட்டுக்கான கடன் தொகை அதிகம் மட்டுமல்லாது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் மிகக் குறைவு. கூட்டாக முதலிட்டாலும் சீன நிறுவனங்களுக்கு பெருமளவு விட்டுக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத காரணத்தினால் கென்யா தனது துறைமுகத்தை சீனாவுக்கு இழக்கப் போகிறது என்ற வதந்தி அந்த நாட்டில் உலாவுன்றது. இந்த கடன் பொறி காரணமாக, ஆப்பிரிக்கர்கள் சீனாவையும் மேற்கத்திய நாடுகள் போன்றதொரு நவ காலனித்துவ வல்லரசாக பார்க்கின்றனர்.

ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக வேலை நிமித்தம் ஆபிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் அந் நாட்டு மொழிகளை கற்க மறுத்து வருகின்றனர். இதுவும் முன்பு ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் நடந்துகொண்ட முறையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது. இது போன்று தான் முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியேறி வாழ்ந்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை, அல்லது ஏதாவதொரு உள்நாட்டு மொழியை கற்றுக் கொள்ள மறுத்து வந்தார்கள். அதற்குப் பதிலாக தமிழர்கள் தான் ஆங்கிலேயர்களின் மொழியை கற்றுக் கொண்டு அதை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றது.

சீன மொழியை தாமாக விரும்பி படிப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. சீன மொழி கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலைக்கு மூலை வந்துவிட்டன. ஆரம்ப பாடசாலையில் இருந்து சீன மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் சீன மொழி கலாச்சாரம் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. உள்ளூர் தரகு முதலாளிகளும் இந்த போக்கை ஊக்குவித்து வளர்த்து வருகின்றனர். இலங்கை இந்தியாவில் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைப்பது போன்று இன்று ஆப்பிரிக்க நாடுகளில் சீன மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.


இந்தக் கட்டுரை யூடியூப் வீடியோவாக பதிவேற்றப் பட்டுள்ளது:

Sunday, April 26, 2020

Fake News: வைரஸ் இழப்புகளுக்கு சீனாவிடம் இழப்பீடு கோரும் அமெரிக்கா

எச்சரிக்கை! FAKE NEWS!! 
"வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் வூஹான் சோதனைக்கூடம்" என்பது ஒரு பொய்ச் செய்தி. 
தீவிர வலதுசாரி விஷமிகள் பரப்பும் வதந்தி.


பிரான்ஸ், பாரிஸில் வசிக்கும் குமாரதாசன் (Kumarathasan Karthigesu) என்பவர் "வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் என்று குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டப்படும் சீனாவின் யுஹான் பரிசோதனைக்கூடம்" என்ற தலைப்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதிய பொய்ச் செய்தியை இதுவரை 152 பேர் பகிர்ந்துள்ளனர். இதை எழுதியவர் ஒரு பிரபல ஈழத்து "ஊடகவியலாளர்"(?) என்று சொல்கிறார்கள். அப்படியான ஒருவரே இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராயாமல் எழுதியுள்ளார். ஒருவேளை அவரும் ஒரு தீவிர வலதுசாரியாக இருந்தால், தனது வழமையான அரசியல் பிரச்சாரத்திற்கு சாதகமாக இந்த வதந்தியை பயன்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் விஷமிகள் விரிக்கும் சூழ்ச்சி வலைக்குள் நாமும் விழுந்து விடக் கூடாது.

இந்த விஷமத்தனமான வதந்தியின் ஆதி மூலம் அமெரிக்கா. வேறு யார்? குறிப்பாக ஜனாதிபதி டிரம்பிற்கு நெருக்கமான தீவிர வலதுசாரிகள். யார் இந்த டிரம்ப்? கிருமிநாசினி குடித்தால் கொரோனா வைரஸ் செத்து விடும் என்று கூறிய "அறிவாளி". இன்று வரையில் உலகிலேயே அதிகப்படியான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவில் மட்டுமே நடந்துள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஜனாதிபதி டிரம்ப் விமானநிலையங்களை மூடாமல் lock down கொண்டு வர மறுத்து வந்தார். Lockdown போட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என்பதற்காக தனது சொந்த மக்களை பலி கொடுக்கவும் தயங்காத அரசுத் தலைவர்.

இதுவரை நாற்பதாயிரம் பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் பரவுதலுக்கு பொறுப்பேற்க மறுக்கும் டிரம்ப் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். உலக சுகாதார நிறுவனம் கூட இவரது குற்றச்சாட்டுக்கு தப்பவில்லை. கொரோனா மரணங்களுக்கு காரணம் அமெரிக்க அரசின் நிர்வாக குறைபாடுகள் என்பதை மறைப்பதற்காக வேண்டுமென்றே பல பொய்யான செய்திகள் புனைந்து பரப்பப் படுகின்றன. டிரம்புக்கு ஆதரவான தீவிர வலதுசாரி இணையத் தளங்களிலும், Fox news தொலைக்காட்சியிலும் இந்த பொய்ச் செய்திகள் பரப்பப் படுகின்றன.

கொரோனா வைரசானது சீனாவில் வூஹான் ஆய்வுகூடத்தில் உருவாக்கப் பட்டது, அல்லது அங்கிருந்து தப்பியது, வேண்டுமென்றே பரப்பப் பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமெரிக்க நுண்ணுயிரியல் விஞ்ஞானிகளே இது உண்மையல்ல என்று மறுத்துள்ளனர். இது விஞ்ஞானபூர்வமான தகவல் அல்ல என்றும் அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப் படும் வதந்தி என்றும் கூறியுள்ளனர்.

ஒரு வதந்தியை மட்டும் "ஆதாரமாக" வைத்துக் கொண்டு குமாரதாசன் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டுள்ளார். உலகம் முழுவதும் வைரஸ் பரவியதற்கு சீனாவே பொறுப்பு என்றும், அதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் "தங்களது இழப்புகளுக்குரிய 'பில்' லை சீனாவிடம் கொடுக்கத் தயாராகின்றன" என்று சிறுபிள்ளை கூட நம்ப முடியாத விடயங்களை எல்லாம் கற்பனை செய்து எழுதுகிறார். அதே மாதிரி, எபோலாவை பரப்பியதற்கு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவிடம் 'பில்' கொடுக்கலாமா என்பதையும் கேட்டுச் சொன்னால் நல்லது. (எபோலா வைரஸ் அமெரிக்காவில் தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது.)

ஒரு பேச்சுக்கு இது சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும், பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய உயிரியல் யுத்தத்திற்காக வட கொரியா, வியட்நாம், சீனா, கியூபா, போன்ற பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு 'பில்' அனுப்பி நஷ்டஈடு கோரக் காத்திருக்கின்றன. இவையெல்லாம் அமெரிக்கா திட்டமிட்டு செய்த இனப்படுகொலைகளுக்குள் அடங்கும். இது விடயத்திலும் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று பின்னராக நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டல்லவா ஊடகவியலாளரே?

அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை, தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் தமிழில் மொழிபெயர்த்து எழுதி பரப்பியுள்ளனர். இதுவும் அவர்களது தீவிர வலதுசாரி அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான். இந்த விஷமிகள் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இது ஒரு பொய்ச் செய்தி என்பதை நிரூபிப்பதற்கான நிறைய ஆதாரங்கள் இந்த இணைப்பில் உள்ளன:
Scientists Haven’t Found Proof The Coronavirus Escaped From A Lab In Wuhan. Trump Supporters Are Spreading The Rumor Anyway. 
https://www.buzzfeednews.com/article/ryanhatesthis/coronavirus-rumors-escape-lab-china-fox-news-trump?fbclid=IwAR3xsqG7pWS5y6e78l6CllDAPkzHttHUqqKMK3996RKqanyEZl297BDseQc

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

நெதர்லாந்து தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி. அதிலும் மேற்படி வூஹான் ஆய்வுகூடம் பற்றிய பொய் செய்தியை பரப்பியது டிரம்ப் சார்பான தீவிர வலதுசாரி இணையத் தளங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
 

Sunday, April 05, 2020

சர்வதேச மருந்துச் சந்தையில் சீனாவின் மேலாதிக்கம்


"சீன வைரஸ்" என்று சொல்லி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அமெரிக்காவுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தி விடப் போவதாக எச்சரித்ததும் வாயை மூடிக் கொண்டார். அதற்குப் பிறகு ஒழுங்கு மரியாதையாக கொரோனா வைரஸ் என்று சொல்லத் தொடங்கினார். சர்வதேச மருந்து சந்தையில் சீனாவின் மேலாதிக்கம் பற்றிக் குறிப்பிட இந்த ஒரு உதாரணம் போதும்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள மருந்துகள் மட்டுமல்ல, முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் கூட சீனாவில் இருந்து தான் இறக்குமதியாகின்றன. அந்தளவுக்கு மேற்கத்திய நாடுகள் சீனாவில் தங்கியுள்ளன. அதற்குக் காரணம் என்ன? முதலாளித்துவ உலகமயமாக்கல்.

பொதுவாக எல்லா முதலாளிகளும் உற்பத்தி செலவுகளை குறைப்பது எப்படி என்று தான் சிந்திப்பார்கள். குறிப்பாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம். மேற்கத்திய நாடுகளில் சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக உற்பத்தித் தொழிற்துறை முழுவதும் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறே மருந்துத் தொழிற்சாலைகளும் சீனாவில் இயங்கத் தொடங்கின. சீனாவில் உற்பத்தி செலவு குறைவு என்பதால் மருந்துகளின் விலைகளும் குறைவாக உள்ளன.

உலக நாடுகள் தமது மருந்துத் தேவைக்காக சீனாவில் தங்கியிருப்பதானது சிலநேரம் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருந்து உற்பத்தியும், ஏற்றுமதியும் நின்று விட்டது. இதனால் ஐரோப்பாவில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிலநேரம் சீனா இதனை பூகோள அரசியலுக்கு பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம் டிரம்பின் சீன வைரஸ் சர்ச்சை தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தெரிவித்த எச்சரிக்கை.

இதற்கு என்ன தீர்வு? ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் தன்னிறைவு காண வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன. முன்பு ஐரோப்பாவில் இயங்கி வந்த மருந்து கம்பனிகள் நட்டம் ஏற்பட்டதால் பூட்டப்பட்டன. ஆகவே இவற்றை அரசாங்கம் தேசியமயமாக்க வேண்டும். இப்படியான நடைமுறைகள் ஒரு சோஷலிச நாட்டில் தான் நடக்கும். ஆனால், மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் பட வேண்டுமானால் தேசியமயமாக்கல் அவசியம்.


Friday, April 03, 2020

முதலாளித்துவ வைரஸ் - உலகமயமாக்கப் பட்ட தொற்று நோய்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த "முதலாளித்துவ உலகமயமாக்கல்" வேண்டுமென்றே மூடி மறைக்கப் படுகின்றது. உலகமயமாக்கலின் ஆபத்தை மக்கள் அறியாமல் தடுப்பதற்காக, முதலாளித்துவ கைக்கூலிகளால் வேண்டுமென்றே சீனாவுக்கு அல்லது சீனர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் பரப்பப் படுகின்றன. "இது சீனாவின் சதி... திட்டமிட்டு கொரோனா நோயாளிகளை உலகம் முழுவதும் பரப்பியது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கப் பட்டன. இதன் மூலம் முதலாளித்துவ உலகமயமாக்கலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகின்றனர். 

பலர் வெகுளித்தனமாக நினைப்பது போல, சீனாவில் இருப்பவர்கள் அனைவரும் சீனர்கள் அல்ல. சீனாவின் பல நகரங்களை, நியூ யோர்க், லண்டன், பாரிஸ் போன்ற மேற்கத்திய நகரங்களுடன் ஒப்பிடலாம். அதாவது பல்லின மக்கள் குடியேறியுள்ள பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட நகரங்கள். 

உலகில் முதன்முதலாக கொரொனோ நோய்த் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் வசித்து வந்தனர். அதற்குக் காரணம் அங்கு நிறைய பன்னாட்டுக் கம்பனிகள் தளம் அமைத்துள்ளன. அவற்றில் வேலை செய்ய வந்த பலர் வூஹானில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அவர்களில் பலர் தமது தாயகத்திற்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் காவிச் சென்றனர் என்பது தெரியாது. 

அமெரிக்காவின் மக்டொனால்ட்ஸ், பெப்சி, ஜெர்மனியின் சீமன்ஸ், பிரான்சின் பேஜோ, சித்ரோயன், சுவீடனின் இகேயா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வூஹானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே சீனர்கள். நிர்வாக மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பியர்கள். இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் சீனர்களை அமர்த்துவதில்லை. அதற்குக் காரணம், அந்த நிறுவனங்களின் தொழிநுட்ப அறிவு ஒரு இராணுவ இரகசியம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. 




Monday, March 30, 2020

சீனாவில் கொரோனா இறப்புகள் பற்றி மிகைப்படுத்திய பிரச்சாரம்


இது செய்தி அல்ல வதந்தி:

சீனாவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 40000 க்கும் அதிகம் என்று குறிப்பிடும் சில ஆதாரமற்ற தகவல்களை பலர் பகிர்ந்து கொள்வதை காணக் கூடியதாக உள்ளது. இதில் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களை பார்த்தாலே இது ஆதாரமற்ற வதந்தி என்று தெரிந்து விடும். 
- அத்தனை பேர் இறந்திருக்கலாம் என "மதிப்பிடப் படுகிறது." அதாவது ஒருவரது ஊகம். 
- இதற்கான ஆதாரம் தேடினால், தனிநபர்கள் சமூகவலைத் தளங்களில் பகிரும் பதிவுகளை காட்டுகிறார்கள்.

அதாவது நம்மூரில் பரப்பப் படும் வாட்சப் வதந்திகள் மாதிரி சீனாவிலும் பரப்பும் ஆட்கள் இருக்கிறார்கள். அங்கேயும் அவற்றை உண்மையென்று நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. அதையெல்லாம் ஒரு ஊடகம் எடுத்து வெளியிடுகிறது. நாங்களும் அதை கேள்வி கேட்காமல் நம்பி விடுகிறோம்.

இந்த டிவிட்டர் தகவல் RFA இணையத் தளத்தை ஆதாரம் காட்டுகிறது. யார் இந்த RFA? Radio Free Asia. முன்பு பனிப்போர் காலத்தில் Radio Free Europe என்ற வானொலி இயங்கியதை அறிந்திருப்பீர்கள். அன்று CIA நிதியில் இயங்கிய RFE இன் ஆசிய சேவை தான் RFA. இரண்டும் ஒன்று தான். அன்றும் இன்றும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் பற்றி வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பி குழப்பத்தை உண்டு பண்ணுவது தான் இந்த பிரச்சார வானொலியின் நோக்கம்.

சீனாவில் வூஹான் நகரம் 2 மாத Lockdown இல் இருந்த காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ கணக்கை விட அதிகமாக இருக்கலாம். அதை மறுப்பதற்கு இல்லை. மருத்துவ வசதி கிட்டாமல் வீடுகளில் இறந்தவர்கள், வேறு நோய்கள் காரணமாக இறந்தவர்கள் கணக்கெடுக்கப் படாமல் இருந்திருக்கலாம். அதையெல்லாம் சேர்த்தாலும் கூட கண்ணை மூடிக் கொண்டு "ஒரு மில்லியன் சாவுகள்" என்று சும்மா அடித்து விட முடியாது.

இந்தத் தவறு தற்போது ஐரோப்பாவிலும் நடக்கிறது. இங்கேயும் உண்மையான இறந்தவர்களின் தொகை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிகம். ஸ்பெயின், மாட்ரிட் நகரில் ஒரு கைவிடப் பட்ட கொரோனா மருத்துவமனையை இராணுவம் பொறுப்பெடுத்த நேரம், அங்கு பல நோயாளிகள் உயிரோடு இருந்தனர். அதாவது, மருத்துவப் பணியாளர்கள் அவர்களை அப்படியே கிடந்து சாகட்டும் என்று விட்டு விட்டு வெளியேறி விட்டனர். இத்தாலியில் அம்புலன்ஸ் வருவதற்கு மணித்தியாலக் கணக்கில் தாமதித்த படியால் பலர் உயிரிழந்தனர்.

அதை விட பல ஐரோப்பிய நாடுகளில் முன்பு மருத்துவ மனையில் கிடந்த "சாதாரண" நோயாளிகள் (புற்று நோயாளிகள் போன்றவர்கள்) வெளியேற்றப் பட்டனர். அவர்களில் பலரும் மருத்துவ வசதி இன்றி வீடுகளில் கிடந்து இறந்துள்ளனர். அதெல்லாம் கொரோனா மரண எண்ணிக்கையில் வருவதில்லை. அதற்காக "இத்தாலியில் ஒரு மில்லியன் பேர் கொரோனாவால் மரணம். ஆதாரம் சமூகவலைத்தளங்கள்." என்று பொறுப்பற்ற முறையில் வதந்தி பரப்ப முடியாது.

இன்று ஐரோப்பாவில் உள்ள நிலைமை தான் அன்று சீனாவிலும் இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அதற்காக அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்று சொல்வதெல்லாம் மிகைப் படுத்தல். (சீனா என்றால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் வேறு.) நாம் விரும்பிய படி ஒரு தொகையை கற்பனை பண்ணலாம். அதை சமூகவலைத்தளங்களிலும் பரப்பலாம். ஆனால், அவையெல்லாம் உண்மை என்று அர்த்தம் அல்ல.

*****



நெதர்லாந்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படுவதை விட அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் மரணமுற்றவர்கள் அரச புள்ளிவிபரத்தில் சேர்க்கப் படுவதில்லை. ஒரு நோயாளி இறந்த பிறகு Covid- 19 இருக்கிறதா என்று பரிசோதிக்கப் படுவதில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு மட்டுமே தெரியும். அவை அரச பதிவில் உள்ளடக்கப் படுவதில்லை.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப் படுகின்றது. கொரோனா தொற்றுகுள்ளான நோயாளிகளை பதிவு செய்து வரும் அரச மருத்துவ ஆய்வு மையமான RIVM இது குறித்து அலட்சியமாக நடந்து கொள்கிறது.

அதாவது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் மட்டுமே கணக்கிடுகிறது. அதற்கு மாறாக வீடுகளில் இருந்து மரணமடையும் நோயாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது. இதனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உண்மையான எண்ணிக்கை அதை விட அதிகம்.

தகவலுக்கு நன்றி: Zembla)
Huisartsen: ‘Niet geteste patiënten die overlijden aan corona ontbreken in sterftecijfer RIVM’
 

Sunday, August 25, 2019

ஹாங்காங் போராட்டம் - நடந்தது என்ன?


ஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து?


முன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங் 1997 ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது ஹாங்காங் தொட‌ர்ந்தும் த‌னித்துவ‌ம் பேணுவ‌த‌ற்கு சீனா ச‌ம்ம‌தித்த‌து. அத‌னால் சீனாவுக்கும் இலாப‌ம் கிடைத்த‌து. அப்போது தான் சீனா முத‌லாளித்துவ‌ உல‌கில் காலடி எடுத்து வைத்திருந்த‌து.

உல‌கில் பெருமள‌வு மூல‌த‌ன‌ம் புழ‌க்க‌த்தில் உள்ள‌ நாடுக‌ளில் ஹாங்காங்கும் ஒன்று. ஆக‌வே சீனாவுக்கு அருகில் உள்ள‌ ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் சீன‌ ச‌ந்தையில் முத‌லிட‌ ஓடி வ‌ருவார்க‌ள். அத‌னால் சீன‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ச்சி அடையும் என்று க‌ண‌க்குப் போட்ட‌து. அப்ப‌டியே ந‌ட‌ந்த‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ம‌று ப‌க்க‌மாக‌ சீன‌ அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ள் கூட‌ ஹாங்காங் ப‌ங்குச் ச‌ந்தையில் முத‌லிட்டு இலாப‌ம் ச‌ம்பாதித்துள்ள‌ன‌.

த‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி எம‌க்கு ஊட‌க‌ங்க‌ள் ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌. இது "குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்தும் ச‌ட்ட‌ம்" தொட‌ர்பான‌ அர‌சிய‌ல் பிர‌ச்சினை என்ப‌து ஒரு ப‌குதி உண்மை ம‌ட்டுமே. அது அல்ல‌ முக்கிய‌ கார‌ண‌ம். உண்மையில் குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்துவ‌தை எந்த‌ நாடும் த‌வ‌றென்று சொல்ல‌ப் போவ‌தில்லை. ஹாங்காங் ம‌க்க‌ளும் அந்த‌ள‌வு முட்டாள்க‌ள் அல்ல‌.

உண்மையான‌ பிர‌ச்சினை வேறெங்கோ உள்ள‌து. ஹாங்காங்கில் இன்று வ‌ரையில் பிரிட்டிஷ் கால‌னிய‌ கால‌ ச‌ட்ட‌ம் தான் அமுலில் உள்ள‌து. Common Law என்ற‌ பிரிட்டிஷ் ச‌ட்ட‌ம் நிதித் துறையில் அதிக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதிப்ப‌தில்லை. laisser faire (பிரெஞ்சு சொல்லின் அர்த்த‌ம் "செய்ய‌ விடு") எனும் பொருளாதார‌ சூத்திர‌த்தின் அடிப்ப‌டையில், வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு த‌லையீடு இன்றி வ‌ர்த்த‌க‌ம் செய்து அதிக‌ இலாப‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். சுருக்க‌மாக‌, குறுக்கு வ‌ழியில் ப‌ண‌க்கார‌ராக‌ வர விரும்புவோருக்கு ஹாங்காங் ஒரு சிற‌ந்த‌ நாடு.

ஹாங்காங் அதி தாராள‌வாத‌ பொருளாதார‌த்தை கொண்டுள்ள‌தால் சாத‌க‌ம் ம‌ட்டும‌ல்ல‌ பாத‌க‌மும் உண்டு. அத‌ன் அர்த்த‌ம் அங்கு ந‌ட‌க்கும் மூல‌த‌ன‌ப் பாய்ச்ச‌லையும் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது. யார் எத்த‌னை கோடி டால‌ர் ப‌ண‌ம் ச‌ட்ட‌விரோத‌மாக‌ ச‌ம்பாதித்தார்க‌ள்? அதை எங்கே ப‌துக்கி வைக்கிறார்க‌ள்? இந்த‌க் கேள்விக‌ளுக்கு விடை தெரியாது.

இத‌னால் சீன‌ அர‌சால் புதிய கட்டுப்பாடுகள் போடப் பட்டன. நிதி மூல‌த‌ன‌ம் ஹாங்காங்கை விட்டு வேறு நாடுக‌ளுக்கு செல்வ‌தை க‌ட்டுப்ப‌டுத்தும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. அத‌ன் ஒரு ப‌குதி தான் குற்ற‌வாளிக‌ளை நாடு க‌ட‌த்தும் ச‌ட்ட‌ம். அதாவ‌து கோடிக்க‌ண‌க்கில் ப‌ண‌ மோச‌டி செய்த‌ க‌ம்ப‌னி நிர்வாகியும் குற்ற‌வாளி தான். புதிய‌ ச‌ட்ட‌த்தினால் அப்ப‌டியான‌ ஊழ‌ல்பேர்வ‌ழிக‌ள் நிறைய‌ அக‌ப்ப‌டுவார்க‌ள் என்ற‌ அச்ச‌ம் எழுந்த‌து. அத‌ன் விளைவு தான் அங்கு ந‌ட‌க்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள்.

அநேக‌மாக‌ எல்லா பெரிய‌ வ‌ங்கி நிறுவ‌ன‌ங்க‌ளும் ஹாங்காங்கில் த‌ள‌ம் அமைத்துள்ள‌ன‌. அதே போன்று பெரிய‌ அக்க‌வுன்ட‌ன்ட் நிறுவ‌ன‌ங்க‌ளும் உள்ள‌ன‌. அவை அங்கு முத‌லிட‌ வ‌ரும் ப‌ன்னாட்டு கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்குகின்ற‌ன‌. ஆனால், அவை அதை ம‌ட்டும் செய்ய‌வில்லை. அர‌சிய‌லிலும் த‌லையிடுகின்ற‌ன‌ என்ப‌த‌ற்கு அங்கு ந‌டக்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளே சாட்சிய‌ம்.

கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் நினைத்தால் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை தெருவுக்கு கொண்டு வ‌ந்து ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ வைக்க‌ முடியும். அத‌ற்கு ஆதார‌மாக‌ KPMG, EY, Deloitte, PwC ஆகிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் வெளியிட்ட‌ ஆர்ப்பாட்ட‌க் கார‌ரை ஆத‌ரிக்கும் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை குறிப்பிட‌லாம். இது அங்கு எந்த‌ள‌வு தூர‌ம் கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் அர‌சிய‌லில் ஈடுப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நிரூபிக்கின்ற‌து. இது குறித்து சீன அர‌சு க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌ பின்ன‌ர் த‌ம‌து ஆதரவை வெளிப்ப‌டையாக‌ காட்டிக் கொள்வ‌தில்லை.

சீன‌ அர‌சுக்கும், ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இடையிலான‌ பிர‌ச்சினையில், அரசின் அழுத்த‌ம் அதிக‌ரிக்கும் போதெல்லாம் "ம‌க்க‌ள் எழுச்சி" ஏற்ப‌டுகிற‌து. உதார‌ண‌த்திற்கு, ஹாங்காங் விமான‌ சேவைக‌ள் நிறுவ‌ன‌மான‌ க‌தே ப‌சிபிக் தலைவ‌ர் ப‌த‌வி வில‌கினார். அந்த‌ நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ நேர‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை என்று அர‌சு குற்ற‌ம் சாட்டி இருந்த‌தே ப‌த‌வி வில‌க‌லுக்கு கார‌ண‌ம். அதைத் தொட‌ர்ந்து எங்கிருந்தோ வ‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் விமான‌ நிலைய‌த்தை முற்றுகையிட்டு விமான‌ப் போக்குவ‌ர‌த்தை சீர்குலைத்த‌ன‌ர்.

முன்னைய‌ ச‌ம்ப‌வ‌த்தை இருட்ட‌டிப்பு செய்து விட்டு பின்னைய‌தை ப‌ற்றி ம‌ட்டுமே ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் தெரிவித்த‌ன‌. அதே மாதிரி ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆத‌ர‌வான‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்தும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ளில் காட்ட‌ப் ப‌டுவ‌தில்லை. அது ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கூட‌ த‌டைசெய்ய‌ப் ப‌டும் என்று ட்விட்ட‌ர் ப‌கிர‌ங்க‌மாக‌ அறிவித்திருந்த‌து.

Tuesday, March 20, 2018

மொங்கோலியர் ஆட்சியில் சீனாவில் குடியேறிய சோழ வணிகர்கள்


இந்து மத புராணக் கதையொன்றை காட்டும் சோழர் கால கல்வெட்டு. தென் சீனாவில் உள்ள குவாங்ஸௌ (Quanzou) நகரத்தில் கண்டெடுக்கப் பட்டது. 13 ம் நூற்றாண்டில் இருந்த, சிவன் கோயில் ஒன்றின் எஞ்சிய பகுதி அது.

அந்தக் கோயில் தற்போது இடிபாடுகளுடன் காணப்படுகின்றது. ஒரு காலத்தில், குவாங் ஸௌ நகரில் இந்து-தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் அது.

சீன, தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும், குவாங் ஸௌ அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. "சீனாவை ஆண்ட மொங்கோலிய சக்கரவர்த்தி செங்கிஸ்கானுக்கு நல்லாசி வேண்டி கட்டப்பட்ட கோயில்" என்று ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. அன்றைய சோழ சாம்ராஜ்யத்திற்கும், செங்கிஸ்கானுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை இது காட்டுகின்றது.

சோழ நாட்டு தமிழ் வணிகர்கள், சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். அவர்களில் சிலர், குவாங் ஸௌ நகரில் தங்கி விட்டனர். அன்று சீனாவை ஆண்ட சொங் அரச பரம்பரைக்கும், சோழர்களுக்கும் இடையில் கடல் வாணிபம் தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. இதனால், மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கானுக்கு சோழ வணிகர்கள் உதவினார்கள்.

செங்கிஸ்கான் சாம்ராஜ்யத்தில், இந்து மதம் உட்பட, அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது. பிற்காலத்தில் சீனாவில் இந்து மதம் அழிந்து விட்டாலும், இருபதாம் நூற்றாண்டு வரையில், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றுவோர் (சோழ நாட்டு தமிழர்களின் வம்சாவளியினர் ?) வாழ்ந்து வந்துள்ளனர். மாவோவின் கலாச்சாரப் புரட்சியில், அவை எல்லாம் நிலப்பிரபுத்துவ எச்சங்களாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டன. (Quanzhou Overseas-relations History Museum; http://www.chinamuseums.com/quanzhou_overseas.htm )

மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் பன்னாட்டு வர்த்தகம் ஊக்குவிக்கப் பட்டது. இன்றுள்ள மாதிரி வர்த்தகர்களுக்கு இடையில் பணப் பரிமாற்றங்கள் இலகுவாக நடந்து கொண்டிருந்தது. இன்று பரவலாக புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு மொங்கோலிய சாம்ராஜ்யம் முழுவதும் பயன்பாட்டில் இருந்தது. பண்டைய சீனர்கள் கண்டுபிடித்த "பறக்கும் காசு" என அழைக்கப்பட்ட நாணயத் தாள், அதாவது கடதாசியில் அச்சிடப் பட்ட நாணயத் தாள் வணிகத்தை இலகுபடுத்தி இருந்தது.

அப்போது சீனாவை ஆண்ட மொங்கோலிய கான் சக்கரவர்த்தியின் அரசுப் பிரதிநிதிகள், இந்த நாணயத் தாளை அச்சிட்டு கையொப்பமிட்டு கொடுத்தனர். அதில் கான் சக்கரவர்த்தியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நாணயத் தால் சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலும் செல்லுபடியானது.

அந்த நாணயத் தாள் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடிந்தது. விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களான முத்துக்கள், நவரத்தினக் கற்கள் கூட வாங்கலாம். எல்லா வணிகர்களும் நாணயத் தாள்கள் வைத்திருந்தனர்.

அதே நேரம், 17 ம் நூற்றாண்டு வரையில், ஐரோப்பாவில் நாணயத்தாள் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அப்போதெல்லாம் ஐரோப்பியர்கள் தங்க, வெள்ளி நாணயக் குற்றிகளை காவிக் கொண்டு திரிந்தனர்.

உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள் மொங்கோலியர்கள் தான். அது பற்றிய எதிர்மறையான தகவல்களே வரலாற்று நூல்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. இருப்பினும், மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் இருந்த சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஐரோப்பாவுக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்தது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், உலகில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வது இலகுவான காரியம் அல்ல. அதை நடைமுறைப் படுத்துவதற்காக தபால் சேவை கொண்டுவரப் பட்டது. மேற்கே கருங்கடலில் இருந்து கிழக்கே பசுபிக் சமுத்திரம் வரையில், தபால் சேவை சிறப்பாக இயங்கியது.

சாம்ராஜ்யத்திற்குள் இருந்த மாகாணங்களில் இருந்தும் செல்லும் அனைத்துப் பாதைகளும், (சீனாவில் இருந்த) தலைநகர் கான்பாலிக்கை வந்தடைந்தன. 40 அல்லது 70 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு தபால் நிலையம் இருந்தது.

அங்கிருந்து தபால் கொண்டு செல்வதற்கு 200 தொடக்கம் 400 வரையிலான குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. சராசரியாக ஒரு கடிதம், ஒரு நாளைக்கு நானூறு கிலோமீட்டர் பயணம் செய்திருக்கும். ஐரோப்பாவில், 19ம் நூற்றாண்டில் தான் இது போன்று ரயில் வண்டி மூலம் கொண்டு செல்லும் தபால் சேவை அறிமுகப் படுத்தப் பட்டது.

மேலும் கான் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம் அனைத்து மக்களுக்குமான நலன்புரி அரசாங்கமாகவும் இயங்கியது. களஞ்சிய அறைகளில் எந்நேரமும் தானியங்கள் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும். விளைச்சல் குறைவான காலத்தில் மானிய அடிப்படையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் படும். அத்துடன் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது.

ஏழைகளுக்கு தேவையான உணவு மட்டுமல்லாது, உடைகளையும் அரசு கொடுத்தது. கோடை காலம், குளிர் காலத்திற்கு அவசியமான உடைகள் வழங்கப் பட்டன. இதற்காக ஆடை தயாரிப்பாளர்கள் ஒரு நாள் உழைப்பை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்தது. யார் யாருக்கு உடுபுடைவகள் வழங்க வேண்டும் என்ற விபரங்களை அரசு அலுவலர்கள் குறித்து வைத்திருந்தனர். ஐரோப்பாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து தான், இது போன்ற நலன்புரி அரசு நடைமுறைக்கு வந்தது.

Saturday, February 03, 2018

மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்!


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார். 

அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார். 

இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.

அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் "மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்" அமைக்கப் பட்டது.

இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.

மார்க்சிய - லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.

(மேலேயுள்ள படத்தில் : மார்க்சிய - லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)

Wednesday, May 11, 2016

சீனக் கலாச்சாரப் புரட்சி: அரசு அதிகாரிகளை அடக்கிய மக்கள் அதிகாரம்!

கலாச்சாரப் புரட்சி
பற்றிய அறிவிப்பு 

சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்த காலத்தில், விவசாயிகள், தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாக, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இலகுவாக்கப் பட்டன, அல்லது இல்லாதொழிக்கப் பட்டன.

அதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க முன்னர், இரண்டு, அல்லது மூன்று வருடங்கள் ஒரு தொழிற்சாலையில் (அல்லது வயலில்) வேலை செய்திருக்க வேண்டும். அவரது சக தொழிலாளிகளால் முன்மொழியப் பட வேண்டும் என்று மாற்றியமைக்கப் பட்டது.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள், தொழிலகங்களில் இருந்த நிர்வாகிகளுக்குப் பதிலாக புரட்சிகர கமிட்டியின் தலைமைத்துவத்தை கொண்டு வந்தார்கள். தொழிற்சாலைகளில் இருந்த ஒரே நிர்வாகி முறை ஒழிக்கப் பட்டு, அந்த இடத்தில் புரட்சிகர தொழிலாளர்கள், கட்சி உறுப்பினர்களின் கூட்டுத் தலைமைத்துவம் கொண்டு வரப் பட்டது.

நாட்டுப்புறங்களுக்கு செல்ல
தயாராகும் மாணவர்கள் 
சீனப் புரட்சியின் பின்னர், நகர்ப்புற மாணவர்கள் நாட்டுப்புறங்களுக்கு சென்று, நடைமுறை சோஷலிச கல்வி கற்க வேண்டுமென பணிக்கப் பட்டது. கிராமங்களில் சாதாரண விவசாயிகளின் குடிசைகளில் தங்கியிருந்து, அவர்கள் தரும் உணவை சாப்பிட்டு, பகலில் வயல்களில் வேலை செய்ய வேண்டும்.

நாடுமுழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினர் தவிர்ந்த அனைவருக்கும் இந்த விதி கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

வசதியான மத்தியதர வர்க்க குடும்பங்களில் பிறந்த இளைஞர்கள், வசதியற்ற குடிசைகளில் செங்கல் அடுக்கப் பட்ட படுக்கையில் பாய் விரித்துப் படுத்தனர். உழவர்கள் காய்ச்சும் கஞ்சியோ, கூழோ வாங்கிச் சாப்பிட்டனர். வாரத்தில் ஒரு நாள் தான் இறைச்சி கிடைத்தது.

எல்லா இளைஞர்களும் அதை மனம் கோணாமல் வாங்கிச் சாப்பிட்டனர் என்று சொல்ல முடியாது. வாய்க்கு ருசியாக உண்ண வேண்டுமென்ற ஆசையில், அருகில் இருந்த சிறிய நகரங்களுக்கு சென்று, கையில் இருந்த பணத்தை கொடுத்து உணவுவிடுதியில் சாப்பிட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் அகப்பட்டால் "மேட்டுக்குடி கலாச்சாரத்தை பின்பற்றியதற்காக" அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்டனர்.

அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள், மக்களை நசுக்கினார்கள் என்று தான் கேள்விப் படுகிறோம். அதற்கு மாறாக, மக்கள் ஆட்சியாளர்களை நசுக்கியது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோமா? அதற்குப் பெயர் "மக்கள் அதிகாரம்". சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்த பத்தாண்டுகளாக அது தான் நடந்தது.

சீனா முழுவதும் சிறிய, பெரிய நகரங்கள் எங்கும், செம்காவலர்கள் உருவானார்கள். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பில்லாத மாணவர்களும், மக்கள் திரளும் அதில் அங்கம் வகித்தனர். தமது ஊரில் இருந்த அதிகார வர்க்கத்தை குறி வைத்து தாக்கினார்கள். மிகவும் பலம் வாய்ந்த ஆளுநர்கள், மேயர்கள், கட்சித் தலைவர்கள் யாரும் தப்பவில்லை.

இங்கேயுள்ள படங்களில், கவர்னர், மேயர், மற்றும் கட்சித் தலைவர்கள், மக்கள் முன்னிலையில் தலை குனிந்து நிற்கிறார்கள். அவர்கள் செய்த குற்றங்கள் கழுத்தில் எழுதிக் கட்டப் பட்டுள்ளன. பெருந்திரளான மக்களின் முன்னிலையில், ஒரு கதிரையில் ஏறி நின்ற படி, மணிக் கணக்காக தலை குனிந்திருக்க வேண்டும். குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்ட பின்னர், தெருத்தெருவாக ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டனர்.
பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட,
 தமது மேலதிகாரிகளை 
குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தினார்கள். 
தலையில் உள்ள கடதாசித் தொப்பியில் 
குற்றச்சாட்டுகள் எழுதப் பட்டுள்ளன.

பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட, தமது மேலதிகாரிகளை குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தினார்கள். தலைமை நிர்வாகிகள் பெரிய வீடுகளில் வசித்துக் கொண்டு, வேலைக்கு ரஷ்ய கார்களை ஓட்டி வந்தனர். அவை பூர்ஷுவா (முதலாளிய) கலாச்சாரம் என்று ஊழியர்கள் குற்றஞ் சாட்டினார்கள். அதற்குப் பிறகு சிறிய வீடுகளுக்கு மாறிய நிர்வாகிகள், பொதுப் போக்குவரத்து வண்டிகளை பயன்படுத்தினார்கள்.  

மேற்கத்திய "ஜனநாயக" நாடுகளில் வாழும் மக்கள் இது போன்ற காட்சிகளை நினைத்துப் பார்க்க முடியுமா? தமது ஊரில் உள்ள அதிகாரம் படைத்த மேயர், கவர்னர்களை அவர்களால் கிட்ட நெருங்கக் கூட முடியாது.

"பல கட்சி ஜனநாயகம்" நிலவும் நாடொன்றில், குறைந்த பட்சம் ஆளும்கட்சி உறுப்பினரை இவ்வாறு நிறுத்த முடியுமா? அவர்கள் குற்றம் இழைத்தால், நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்வார்கள். பணபலம், அதிகார பலம் உள்ளவன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க முடியும்.

இது தான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், பாட்டாளிவர்க்க ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசம். பலர் தவறாக நினைப்பது போன்று, சோஷலிச நாடுகளில் "ஒரு கட்சி" ஆட்சியில் இருப்பதில்லை. மாறாக ஒரு வர்க்கம், அதாவது பாட்டாளி வர்க்கம் ஆட்சியில் அமர்ந்திருக்கும். ஒருவர் கட்சி உறுப்பினராவதற்கும், கட்சிக்குள் தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்கும், பாட்டாளி வர்க்க சமூகப் பின்னணி அவசியமானது.


மிகவும் சக்திவாய்ந்த மனிதராக இருந்த, கட்சியின் பிராந்திய தலைமைச் செயலாளர் Wang Yilun, பல்கலைக்கழக மாணவர்களினால் திரிபுவாதியாகவும்,  எதிர்ப்புரட்சியாளராகவும் குற்றம் சாட்டப் பட்டார். 

அரசு நிறுவனங்களுக்குள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே கூட வர்க்கப் போராட்டம் நடக்கலாம், நடந்துள்ளது. இதைத் தான் "ஸ்டாலினின் சர்வாதிகாரம்", "மாவோவின் சர்வாதிகாரம்" என்று மேற்குலகில் பிரச்சாரம் செய்தனர்.
மாவோ சிந்தனைகளை
படித்து விவாதிக்கும் மக்கள் திரள்
 

19 மே 1966 ம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியிடம் இருந்து "மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சி" பற்றிய அறிவித்தல் வெளியானது. பெய்ஜிங் பாடசாலைகளில் தொடங்கிய "செம் காவலர்கள்" இயக்கம், நாடு முழுவதும் இருந்த கல்வி நிலையங்களில் பரவியது. 

உண்மையில் அது மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய இயக்கம். அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணிக்கும் தொடர்பு இருக்கவில்லை. அதனால் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப் படாதவர்களாக இருந்தனர்.

ஆரம்பத்தில் பிரதமர் லியூ சொக்கி செம் காவலர் இயக்கத்தை அடக்க விரும்பினார். மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருந்தன. ஆனால், மாவோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 

5 ஆகஸ்ட் 1966 அன்று, "தலைமையகத்தை தாக்குங்கள்" என்று மாவோ அறிவித்தார். மாவோ செம்காவலர் பாணியில் கையில் செந்நிறப் படி அணிந்து, தானே கைப்பட எழுதிய சுவரொட்டியுடன் மக்கள் முன்னால் தோன்றினார். (கம்யூனிஸ்ட்) கட்சியின் தலைமைப் பீடம் "பூர்ஷுவா தலைமையகம்" என்று அதில் குற்றம் சாட்டப் பட்டிருந்தது.

செம் காவலர் இயக்கத்திற்கு மாவோவின் ஆதரவு கிடைத்து வந்ததால், அவர்கள் துணிச்சலுடன் ஆளும் கட்சி தலைவர்களைக் கூட தாக்கத் தொடங்கினார்கள். திரிபுவாதிகள் என்று இனங்காணப்பட்ட பலர் மக்கள் முன்னால் நிறுத்தப் பட்டனர். பிரதமர் லியூ சொக்கி கூட குற்றம் சாட்டப் பட்டார். பலர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டார்.

மியூசியமாக மாறிய 
ஒரு  நிலப்பிரபுவின் வீடு.
 பாவித்த ஆடம்பரப் பொருட்கள்
மக்களின் பார்வைக்காக 

வைக்கப் பட்டிருக்கின்றன. 

அதிகார வர்க்கத்தில் இருந்த கட்சித் தலைவர்களைத் தவிர, செல்வந்தர்கள், நிலப்பிரபுக்கள், வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள், வியாபாரிகளும் "துர் நடத்தை" கொண்டவர்களாக குற்றம் சாட்டப் பட்டு, மக்கள் முன்னால் அவமானப் படுத்தப் பட்டனர்.

கிராமங்களில் ஆடம்பரமாக வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகளின் வீடுகள், அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களுடன் கைப்பற்றப் பட்டன. அவை மக்கள் பார்வையிடுவதற்காக அருங்காட்சியமாக மாற்றப் பட்டன.

இவற்றைத் தவிர, ஒவ்வொரு ஊரிலும், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொது வெளியில், மாவோவின் சிந்தனைகளை படிப்பதும், அதை நடைமுறைப்படுத்துவதும் பற்றி விவாதிக்கப் பட்டது. அனேகமாக, இந்தக் காட்சிகள் மட்டுமே மேற்கத்திய ஊடகங்களினால் மிகைப் படுத்தி தெரிவிக்கப் பட்டன.




படங்கள், தகவல்களுக்கு நன்றி: 
Red- Color News Soldier, Li Shenzheng
Rode Morgen, 1 mei 2016



Tuesday, June 23, 2015

இந்தியாவுக்கு எதிரான வியூகத்தில் சீனா தமிழ் தேசியவாதிகளுக்கு உதவுமா?

சீனாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு, பூகோள அரசியல் தந்திரோபாயம் குறித்த ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு நிபுணர்கள் குழு இயங்குகின்றது. China Institute of International Studies (CIIS) (http://www.ciis.org.cn/english/index.htm ) என்ற அந்த அமைப்பில், இந்தியா தொடர்பான கட்டுரை ஒன்று சீன மொழியில் பிரசுரமானது. 

Zhan Lue என்ற புனைபெயரில் ஒரு நிபுணர் எழுதிய கட்டுரை, இன்று வரையில் யாருடைய கவனத்தையும் பெறவில்லை. ஆனால், அதில் தமிழ் தேசியவாதிகள் பற்றியும் குறிப்பிட்டிருப்பது எம்மைப் பொருத்தவரையில் முக்கியமான விடயம் தான்!

அந்தக் கட்டுரையின் சாராம்சம் இது: 
சீனா தனது நட்பு நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவற்றுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவில் பத்து அல்லது இருபது தனி நாடுகளை உருவாக்குவதற்கு முன் வர வேண்டும். சீனா சிறிதளவு முயற்சி எடுத்தாலே, இந்திய மாநிலங்களை உடைத்து விடலாம். அதற்காக, சீனா பல வேறுபட்ட தேசிய இனங்களுடன் கூட்டுச் சேர வேண்டும். அசாமியர்கள், காஷ்மீரிகள், தமிழர்கள் போன்ற தேசியவாதிகள் தமக்கான தனி நாட்டை அமைத்துக் கொள்வதற்கு உதவ வேண்டும்.
(ஆதாரம்: Where China Meets India, Burma and the New Crossroads of Asia, by Thant Myint-U) 

சீனாவிலும், இந்தியாவிலும் இந்த அறிக்கையை பலர் அபத்தம் என்று புறக்கணித்திருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நடைமுறைச் சாத்தியமற்றது என்று சொல்ல முடியாது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நட்புறவு அறுந்து, மோதல் நிலைக்கு செல்லும் காலகட்டத்தில் அந்த அறிக்கை தூசு தட்டி எடுக்கப் பட்டு, அதில் கூறப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப் படுத்த முனையலாம்.

அனேகமாக, இந்திய அரசு ஏற்கனவே இப்படியான அபாயம் இருப்பதைப் பற்றி யோசித்து இருக்கலாம். அதனால், தானே முந்திக் கொண்டு, இந்திய நலன் சார்ந்த தமிழ் தேசிய சக்திகளை உருவாக்கி விட்டிருக்கலாம். அதை நாம் அனுபவத்தில் கண்டறியலாம். 

தங்களைத் தாங்களே தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் பலர், சீனாவை கடுமையான தொனியில் எதிர்ப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். அதே நேரம் இந்தியா தொடர்பான மென்மையான போக்கை கடைப் பிடிக்கின்றனர். 

"கருணாநிதி - சோனியா" அல்லது "திமுக - காங்கிரஸ்" போன்ற தனி நபர்களையும், கட்சிகளையும் மட்டும் எதிர்த்தால் போதும், அதுவே இந்திய எதிர்ப்புவாதம் ஆகிவிடும் என்று சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இன்னொரு கட்டத்தில், மோடியையும், பாஜகவையும் ஆதரித்தார்கள். அப்படி இல்லா விடினும், இந்தியாவில் இருந்து பிரிவது பற்றி பேசாமல், இந்திய இறையாண்மைக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.

ஈழப்போரின் இறுதியில், சீனா சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்தது. கன ரக ஆயுதங்களை விற்றது என்று சிலர் காரணங்களை அடுக்கலாம். அதெல்லாம் உண்மை தான். ஆனால், சர்வதேச விவகாரங்களில், சீனாவும் ஒரு மேற்கத்திய வல்லரசு போன்றே நடந்து கொள்கின்றது. 

ஒரு நாட்டுக்குள் நிலவும் தேசிய இனப் பிரச்சினையில், அது இரண்டு பக்கத்தையும் ஆதரிக்கும். ஒன்றை நேரடியாகவும், மற்றதை மறைமுகமாகவும் ஆதரிக்கும். சீனாவின் இந்த தந்திரோபாயம், ஏற்கனவே மியான்மரில் வெற்றிகரமாக பாவிக்கப் பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்திடம் மட்டுமல்ல, புலிகளிடமும் சீன ஆயுதங்கள் தான் இருந்தன என்பது இரகசியமல்ல. புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் தங்கியிருந்து ஆயுதங்களை கடத்தி வந்ததும் தெரிந்த விடயம். அவர் எங்கே, யாரிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினார் என்பதை ஆராய்ந்தாலே போதும். மியான்மரிலும், கம்போடியாவிலும் சீன ஆயுதங்களை விற்பனை செய்யும் தரகர்கள் உள்ளனர்.

மியான்மரில் சீன எல்லையோரம் "வா" சிறுபான்மை இன மக்களின் தனி நாட்டுக்காக போராடிய கிளர்ச்சிப் படை (United Wa State Army), தசாப்த காலமாக ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்துள்ளது. அதற்கு சீனா மறைமுகமான ஆதரவு வழங்குவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்தப் பிரதேசத்தில் சீன நாணயம் புழக்கத்தில் உள்ளது. சீனாவில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப் படுகின்றது. பெரும்பாலான முதலீடுகள் சீனர்களுடையவை.

நவீன ஆயுதங்களை கொண்டுள்ள United Wa State Army (UWSA), தனது "de facto வா தேசத்திற்கு" வருமானம் தேடுவதற்காக ஆயுத விற்பனையில் இறங்கியுள்ளது. சீனா தனது இராணுவத்தை நவீனப் படுத்தும் பொருட்டு, பழைய AK-47, T-56 ரக துப்பாக்கிகளை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலைக்கோ விற்று விட்டது. சீனாவுடன் தொடர்புடைய ஆயுதத் தரகர்கள் அவற்றை வாங்கி விற்கின்றனர். UWSA , அவற்றை மணிப்பூர் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் இயங்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு விற்றுள்ளன. 

அண்மையில் மியான்மர் எல்லைக்குள் நுளைந்த இந்திய இராணுவம், அங்கு முகாமிட்டிருந்த இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கு மியான்மர் அரசு மறைமுகமான ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. வெளியில் தெரியா விட்டாலும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாக ஏற்படும் பதிலிப் போர்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தானிருக்கின்றன.

Monday, June 22, 2015

சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம் மிக்க "பெண்களின் ராஜ்ஜியம்"!


புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும்.

சுவிட்சர்லாந்து போன்ற அழகான இடங்களைக் கொண்ட லிஜியான் நகரத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் மொசுவோ மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. சீனாவின் அங்கீகரிக்கப் பட்ட தேசிய இனங்களில் அதுவும் ஒன்று.

சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள், தீபெத்தோ- பர்மிய இனக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திபெத்திய, பர்மிய மொழிகளுக்கு இடைப்பட்ட தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் பாலின சமத்துவம் நிலவுவது அந்த இனத்தின் சிறப்பம்சம் ஆகும். அந்தச் சமுதாயத்தில் பெண்கள் தான் தலைமை வகிக்கின்றனர். வயலில் இறங்கி கடின வேலைகளை செய்வதும் பெண்கள் தான்! ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிப் பொழுதுபோக்குவார்கள்.

மொசுவோ மக்கள் இன்றைக்கும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றனர். வயது வந்த பெண்களுக்கு மட்டும் தனியான அறை ஒதுக்கப் பட்டிருக்கும். ஒரு பருவமடைந்த பெண், தனக்கான ஆண் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவர் விரும்பும் ஆண், அன்றைய இரவு அவருடன் தங்கலாம். விடிந்தவுடன் அந்த உறவு முடிந்து விடுகின்றது. மொசுவா மக்கள் இதனை "நடக்கும் திருமணங்கள்" என்று அழைக்கின்றனர்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை வெளியில் உள்ளோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மொசுவா பெண்களின் பாலியல் சுதந்திரம் என்பது, தினசரி ஓர் ஆடவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதல்ல. ஓர் உறவானது, ஒரு நாள் மட்டுமல்லாது வருடக் கணக்காகவும் நீடிக்கலாம். அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும், மாற்றிக் கொள்ளவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்ட எந்த ஆணும், தானே தந்தை என்று சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பது, முழுக்க முழுக்க பெண் வீட்டார் பொறுப்பு. இவர் தான் தந்தை என்று யாராவது இனம் காணப் பட்டாலும், குழந்தைக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. தொடர்ந்து, தாயான பெண்ணின் சகோதரர்கள் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள். மொசுவா மொழியில் "அப்பா என்ற ஒரு சொல்" கூடக் கிடையாது!

வேலைக்குப் போவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும் பெண்களாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாதிக்க சமுதாயமாக இருக்கவில்லை. மாறாக எல்லாக் கட்டத்திலும் பால் சமத்துவம் பேணப் படுகின்றது. சிலநேரம், ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டால், ஆண்கள் அதிகமாக உள்ள இன்னொரு குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை பரிமாறிக் கொள்வார்கள்.

மொசுவா சமுதாயத்தில் பாலியல் சுதந்திரம் சர்வ சாதாரணமான விடயம் என்பதால், அங்கு யாரும் புறம் பேசுவதில்லை. ஒருவரது "கள்ள உறவு" பற்றிய கிசு கிசு கதைகளை யாரும் பேசுவதில்லை. அது மட்டுமல்ல, யாரும் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. 

அந்தச் சமுதாயமானது, புராதன கால பொதுவுடைமைச் சமூக- பொருளாதார உற்பத்திகளை இன்று வரைக்கும் தொடர்ந்தும் பேணி வருகின்றது.  "இது எனது உடைமை... எனது சொத்து..." என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அதனால், சண்டை, சச்சரவு, திருட்டு, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை போன்ற எந்த விதமான சமூகவிரோத செயல்களும் அங்கு இல்லை. 

சீனா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதும், மொசுவா மக்களை தனியான தேசியமாக அங்கீகரித்தனர். கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் மாத்திரம், நடக்கும் திருமண முறையை கைவிட்டு விட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். உண்மையில் அன்றிருந்து பலர் நீடித்த திருமண உறவுகளை பின்பற்றத் தொடங்கினார்கள். கலாச்சாரப் புரட்சி முடிந்த பின்னர், மரபு வழித் திருமணங்கள் மீண்டும் அதிகரித்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒட்டு மொத்த சீனாவின் பொருளாதாரம் மாற்றமடைந்தது. சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவித்தார்கள். அது மொசுவா மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கியது. பொதுவாக, அழகான மலைப் பிரதேசங்களை கொண்ட யுன்னான் மாகாணத்திற்கு, சீன உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்தார்கள். சுற்றுலா துறை நிறுவனங்கள், மொசுவா பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

"மகளிர் தேசம்" என்ற விளம்பரத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப் பட்டனர். பாரம்பரியமாக தந்தை வழி சமுதாயத்தில் வந்த சீனர்களுக்கு, "பெண்களின் தேசம்" பற்றிய தகவல்கள் புதுமையாகத் தோன்றின. பலர் அங்கே சுதந்திரமான பாலியல் தொழில் நடப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர். சுற்றுலா நிறுவனங்களும், "நடக்கும் திருமணத்தில் ஒரு நாள் மணமகனாவது எப்படி?" என்று விளம்பரம் செய்து சீன ஆண்களை கவர்ந்தார்கள்.

அனேகமாக, மொசுவோ பற்றிய கற்பனையான கிளுகிளுப்பூட்டும் கதைகளை மட்டுமே கேள்விப் பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. சுற்றுலா நிறுவனங்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளன. மொசுவா பிரதேசத்தில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்கி அங்கு சில மொசுவா பெண்களை பாலியல் தொழிலாளர்களாக அமர்த்தினார்கள்.

தமது சமுதாயத்தைப் பற்றிய தவறான கதைகள் பரப்பப் படுவதையிட்டு, மொசுவா மக்கள் பலர் எரிச்சலுற்றுள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் சுற்றுலாத் துறை கொண்டு வரும் வருமானத்தை இழக்கவும் விரும்பவில்லை. பாரம்பரியமாக பெண்கள் தலைமை தாங்கிய, அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்த மொசுவோ சமுதாயத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டானது. புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக, மொசுவா ஆண்கள் நன்மை அடைந்தனர்.

சுற்றுலா ஸ்தலங்களில், சேவைத் துறையில் உள்ள பல வேலைகளை பெண்களே செய்தாலும், ஆண்கள் தொடர்பாளர்களாகவும், முகவர்களாகவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இருப்பினும் இத்தகைய பொருளாதார மாற்றமானது, அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய வறுமையான கிராமங்களை மட்டுமே பாதித்து வருகின்றது. பெரும்பான்மையான மொசுவா பெண்கள், இப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே, பாரம்பரிய தாய் வழி குடும்ப உறவுகளை கட்டிக் காத்து வருகின்றனர்.


Friday, April 24, 2015

சம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் அடைத்த தொழிலாளர்கள்


இது தான் முதலாளித்துவத்தின் கெட்ட கனவு. உண்மையில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், முதலாளிகளுக்கு தமது பாதுகாப்பு குறித்து அச்சமேற்படுவது இயல்பு.

2013 ம் ஆண்டு, சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழிலதிபரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், சில நாட்களாக தமது முதலாளியை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப் படாததால், கொதிப்புற்ற தொழிலாளர்கள் கம்பனி நிர்வாகியை பிடித்து அடைத்து வைத்தார்கள். பலர் பணி நீக்கம் செய்யப் படலாம் என்ற அச்சமும், அவர்களை இந்த நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது.

ஒரு கூண்டுக்குள் அடைக்கப் பட்ட விலங்கு போன்ற நிலையில் உள்ள முதலாளிக்கு, படுப்பதற்கு ஒரு படுக்கை மட்டுமே கொடுத்திருந்தார்கள். அணைக்கப் படாத மின்குமிழ் வெளிச்சம், சுற்றியுள்ள தொழிலாளரின் கூச்சல் காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என்று அந்த நிர்வாகி குறைப் பட்டார்.

அவர் தப்பியோட முடியாதவாறு, வெளியே 60 அல்லது 70 தொழிலாளர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆறு நாட்களாக, உடுத்த உடுப்புடன் காலம் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் அவருக்கு மூன்று வேளை உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்த முதலாளியை விடுவிப்பதற்கு, அமெரிக்க தூதுவராலயம் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டார். 

உலகம் முழுவதும் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும், இரக்கமற்ற முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும்  அமையும்.


மேலதிக விபரங்களுக்கு:
American boss held hostage by Chinese workers in Beijing - video 

Tuesday, April 14, 2015

நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்


ஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune)

மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.

கனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது. 

பெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

பிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார். 

அன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.

பார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின. 

நடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது. 

ஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார். 

பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.

பெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune

Thursday, April 09, 2015

மாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம்


சீனா ஒரு முதலாளித்துவ நாடான பின்னர், அங்கு பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மேற்கத்திய ஊடகங்களில் வெளிவருவதில்லை.

குவாங்டோங் (Guangdong) நகரில் உள்ள பொலிஸ் நிலையமும், பொலிஸ் கார்களும் மக்களால் அடித்து சேதப் படுத்தப் பட்டன. 

"சீனாவில் சுதந்திரம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது" என்றெல்லாம் எமக்குப் போதிக்கும் மேற்கத்திய ஊடகங்கள், இது போன்ற தகவல்களை தெரிவிக்காமல் மறைக்கும் காரணம் என்ன? தங்கள் நாட்டு மக்களும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சமா?


குவாங்டொங் நகர சபை அனுமதியுடன், அங்கு ஒரு கழிவுப் பொருட்களை எரிப்பதற்கான உலை (incinerator) கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தது. அயலில் உள்ள லங்க்தாங் (Langtang) நகர சபை "China Resources Cement Holdings" நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

குறிப்பாக, லங்க்தாங் நகரவாசிகள், தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மையாக, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆலை கட்டப் படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசடைய வைத்துள்ளது. அதற்கும் மேலாக புதிய உலை சூழலை இன்னும் அதிகமாக மாசு படுத்தும் என்று நம்பினார்கள்.


அயலில் உள்ள இன்னொரு நகரமான லுவோடிங் (Luoding) வாசிகள், உள்ளூர் பாடசாலைகளோடு சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் சீமெந்து ஆலை ஏற்கனவே தமது நீர் நிலைகளையும், வளிமண்டலத்தையும் மாசு படுத்தி விட்டதாக குறைப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை வந்தால், அதனால் தமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஏப்ரல் 6 ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அடக்குமுறை பிரயோகித்துள்ளது. கவச உடை அணிந்த பொலிஸ் படையினர், தடியடிப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், இருபது பேரை கைது செய்துமுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டத்தில், பொலிசார் வன்முறை பிரயோகித்த செயலானது பொது மக்களை ஆத்திரமடைய வைத்தது. பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் சிறுவர்களும் பாதிக்கப் பட்டனர்.

முதலாளிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள பொலிஸ் நடவடிக்கை, தமது நியாயமான போராட்டத்தை உதாசீனப் படுத்தியதை கண்டு பொறுக்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து, பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணில் கண்ட பொருட்களை அடித்து நிர்மூலமாக்கினார்கள்.

மக்கள் எழுச்சி காரணமாக, தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. இது மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப் பட வேண்டும்.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக, சீன சமூக வலைத் தளங்களில் பிரசுரமான படங்களை இங்கே இணைத்துள்ளேன்.




Thursday, October 23, 2014

ஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரிட்டனின் காலனிய சூழ்ச்சியும்


ஹாங்காங்கில் நடக்கும் மாணவர் போராட்டத்தை, "ஜனநாயக மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்" போன்று சித்தரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், அதன் பின்னணி பற்றி விபரிப்பதில்லை. ஹாங்காங் ஆசியாவில் ஒரு முதலாளித்துவ அதிசயம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, அங்கு நடந்த காலனிய எதிர்ப்பு போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. ஹாங்காங் பிரிட்டனின் காலனிய அடிமை நாடாக இருந்த காலத்தில், அது அமைதியாக இருந்ததாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி நடந்தது என்பதையும், பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் அதனை ஈவிரக்கமின்றி அடக்கியது என்பதையும் அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

நூறு வருடங்களாக ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்திருந்தாலும், ஆரம்பத்தில் அது ஒரு பணக்கார நாடாக இருக்கவில்லை. ஆசியாவில் இருந்த பிற ஐரோப்பியக் காலனிகள் போன்று கடுமையான சுரண்டலால் பாதிக்கப் பட்டிருந்தது. வசதி வாய்ப்புகளை விட, வறுமையும், பிணியும் அதிகமாக காணப்பட்டது. பிரிட்டனின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த சீனர்கள் மட்டும் ஹாங்காங் பிரஜைகள் ஆகவில்லை. சீன பெருநிலப் பரப்பில் இருந்து காலங்காலமாக குடியேறிகள் வந்து கொண்டிருந்தார்கள். சீன - ஜப்பான் போரின் பொழுதும், கம்யூனிஸ்ட் - குவாமிந்தாங் போரின் பொழுதும், பல்லாயிரக் கணக்கான சீனர்கள், அகதிகளாக வந்து சேர்ந்திருந்தனர். அவர்களின் வம்சாவளியினர், 21 ம் நூற்றாண்டில் வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றமை நகைப்புக்குரியது.


ஹாங்காங் மாணவர் போராட்டம் "ஜனநாயகத்திற்கானது" என்று கூறப் பட்டாலும், அதற்குள் சீன குடியேற்றத்தை எதிர்க்கும் இனவாத சக்திகளின் ஆதிக்கமும் காணப் படுகின்றது. 2012 ம் ஆண்டு, "வெட்டுக்கிளி எதிர்ப்பு இயக்கம்" ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. தீவிர வலதுசாரிகளின் அமைப்பு, பெருநிலப் பரப்பில் இருந்து வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்புப் நாளேடு ஒன்றில், "வெட்டுக்கிளி ஹாங்காங் மீது படையெடுக்க காத்திருப்பது" போன்றதொரு கருத்துப் படம் போட்டு, அதற்கு கீழே பின்வருமாறு எழுதி இருந்தது: "சீனாவில் இருந்து வரும் கர்ப்பிணிப் பெண்கள், ஹாங்காங்கில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம், ஹாங்காங்கின் மக்கள் நல கொடுப்பனவுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள்...."

பொதுவாகவே, ஹாங்காங் சீனர்கள், பெருநிலப்பரப்பில் வாழும் சீனர்களை கீழானவர்களாக பார்ப்பதுண்டு. காலனிய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை மறக்காமல், அவர்களை "நாகரிமைடையாத சீனர்கள்" என்று கருதிக் கொள்வார்கள். "ஹாங்காங் சீனர்கள் காண்டனீஸ்-சீன மொழி பேசுவார்கள். சீனாவில் உள்ள சீனர்கள் மாண்டரின்-சீன மொழி பேசுவார்கள்." என்று யாராவது இதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஹாங்காங்கில் மாண்டரின் - சீன மொழி பேசுவபவர்கள் மீதான துவேஷம் சற்று அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், ஹாங்காங் தீவுகளுக்கு அயலில் உள்ள சீன மாகாணங்களிலும் காண்டனீஸ் மொழி தான் பேசுவார்கள் என்பதை மறந்து விடலாகாது. ஹாங்காங்கில் குடியேறியுள்ள பெரும்பாலான சீனர்கள், காண்டனீஸ் சீன மொழி பேசுவோர் தான்.

ஹாங்காங் மாணவர்களின் போராட்டத்தை, ஹாங்காங் வர்த்தகர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு காரணம் உண்டு. வருடந்தோறும் ஹாங்காங் வரும் உல்லாசப் பிரயாணிகளில் 75% சீன பெருநிலப் பரப்பில் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, ஹாங்காங் அருகில் உள்ள ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையத்தில் ஹாங்காங் முதலாளிகள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர். ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையம் எண்பதுகளிலேயே இயங்கத் தொடங்கி விட்டது. அப்போதே சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான இரு தரப்பு போக்குவரத்து ஆரம்பமாகி விட்டது. அதாவது, ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே, சீனாவுடன் நல்லுறவு நிலவியது. ஆனால் அது பிற்காலத்தில் ஏற்பட்ட உறவு. அதற்கு முன்னர், காலனிய ஆட்சியாளர்களினால் ஹாங்காங் சீனாவிடம் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தது.

சீனாவில் தோன்றிய பொதுவுடமைப் புரட்சி, பெருமளவு சீனர்கள் வாழும் ஆசிய நாடுகளிலும் பரவியது. ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல. 1966 ஆம் ஆண்டின் இறுதியில், தொழிற்சாலைகளில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள், வெகு விரைவில் காலனிய நிர்வாகத்திற்கு சவாலாக மாறினார்கள். நகரத் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், அடிக்கடி காவல்துறையினருடனான மோதல்களில் முடிந்தது. 

பல நிறுவனங்களில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டங்களினால், ஹாங்காங் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. காலனிய படைகளில் கடமையில் இருந்த சீன இன போலிஸ்காரர்களை, தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நம்பினார்கள். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. சீனப் பொலிஸ்காரர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தனர்.

பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் நாட்டில், கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கப் படா விட்டாலும், அது பகிரங்கமாகவே இயங்கி வந்தது. கம்யூனிஸ்ட் செய்தித் தாள்கள் வெளியாகின. ஒரு வானொலி நிலையம் கூட இயங்கியது. அந்தளவுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. "மாவோவின் மேற்கோள்கள்" எனும் சிவப்பு நிற சிறிய கைநூல், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டது. சீனாவில் கலாச்சாரப் புரட்சி காலத்தில் நடந்தது போன்று, ஹாங்காங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களினால் எடுத்துச் செல்லப் பட்டது.

பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வனுமுறை பிரயோகித்தது. செய்தித்தாள்கள் தடை செய்யப் பட்டன. அச்சகங்கள் மூடப் பட்டன. கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். அரச ஒடுக்குமுறை காரணமாக, கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் தலைமறைவாக இயங்கத் தொடங்கினார்கள். காலனிய ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் குண்டு வீச்சுக்கு இலக்காகின. 1967 ஆம் ஆண்டு, ஒரு வருடத்திற்குள், ஹாங்காங் முழுவதும் நூற்றுக் கணக்கான குண்டுகள் வெடித்தன. காலனிய அதிகாரிகள், பொலிஸ்காரர்கள் மட்டுமல்லாது சில பொது மக்களும் குண்டு வெடிப்புகளுக்கு பலியானார்கள். அனேகமாக, பொது மக்களின் உயிரிழப்புகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு குறைந்திருக்கலாம்.

ஹாங்காங் கம்யூனிஸ்ட் கிளர்ச்சி முறியடிக்கப் பட்டமைக்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

  1. ஆயிரக் கணக்கான குண்டுகள் செயலிழக்க செய்யப் பட்டன அல்லது வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. 
  2. நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இரகசிய மறைவிடம் கண்டுபிடிக்கப் பட்டது. 
  3. கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள். ஆயிரக் கணக்கானோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அதை விட, ஆயிரக் கணக்கானோர் சீனாவுக்கு நாடுகடத்தப் பட்டனர். 
  4. எல்லாவற்றிற்கும் அப்பால், செஞ்சீனத்தின் ஆதரவு கிடைக்காமல் விட்டமை ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது. 


உண்மையில், மாவோ தலைமையிலான செஞ்சீனம், ஹாங்காங் புரட்சியை ஆரம்பத்தில் வரவேற்று ஆதரித்திருந்தது. ஹாங்காங் ஆதரவு போராட்டங்களையும் நடத்தி இருந்தது. ஆயினும், கிளர்ச்சி உச்சகட்டத்தை அடையும் நேரம், சீனப் படைகள் ஹாங்காங்கை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது. சிலநேரம் சீனத் தலைமையிடம் அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தாலும், பின்னர் கைவிடப் பட்டது. பிரிட்டனுடன் நேரடியாக மோதும் நிலையை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹாங்காங் சீனாவுக்கு திரும்பக் கிடைக்க இருந்தது என்பதையும் மறந்து விடலாகாது. இன்னொரு ஐரோப்பிய காலனியான மாக்காவ், போர்த்துக்கேயரின் பலவீனம் காரணமாக, ஏற்கனவே சீன ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது.

1967 கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் விளைவாக ஹாங்காங் ஒரு வகையில் நன்மை அடைந்தது என்றே கூற வேண்டும். ஏனென்றால், அது வரைக்கும் ஒரு வறிய நாடாக இருந்த ஹாங்காங், அதற்குப் பிறகு தான் பணக்கார நாடாக மாறியது. மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி உண்டாவதை தடுக்கும் நோக்கில், பிரிட்டிஷ் நிர்வாகம் பல விட்டுக் கொடுப்புகளை செய்தது. ஹாங்காங் சீனர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. பிரிட்டனில் இருப்பதைப் போன்று, சமூக நலத்துறை உருவாக்கப் பட்டது.

பிரிட்டிஷ் நிர்வாகம், புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி,  வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தது மட்டுமல்லாது, ஊதியமும் உயர்த்தப் பட்டது. ஹாங்காங் துறைமுகம் ஆசியாவில் மிகவும் முக்கியமான துறைமுகமாக மாறியது. இன்றைக்கும் ஹாங்காங்கின் பெருமளவு வருமானம் துறைமுகத்தில் இருந்து கிடைக்கின்றது. மொத்தத்தில், ஹாங்காங் ஆசியாவில் வளர்ந்து வரும் (முதலாளித்துவ) பொருளாதார அதிசயமாக மாற்றிக் காட்டப் பட்டது. கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்திரா விட்டால், ஹாங்காங் இன்றைக்கும் ஒரு வறிய நாடாகவே தொடர்ந்தும் இருந்திருக்கும்.

ஹாங்காங்கில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், 1997 ஆம் ஆண்டு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆசியாவின் "புலிப் பாய்ச்சல் பொருளாதார வளர்ச்சி" அத்துடன் முடிவுக்கு வந்தது. ஹாங்காங் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. 1997 நெருக்கடியில் இருந்து மீண்டு வருகையில், 2007 ஆம் ஆண்டு இன்னொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது ஹாங்காங்கில் வேலையில்லாப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

உயர்கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும், குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். அதை விட மாதாந்த ஊதியத்தில் அரைவாசி வீட்டு வாடைகைக்கு செலவிட வேண்டும். சுருக்கமாக, பொருளாதார நெருக்கடி காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஹாங்காங்கில் ஏற்பட்டன.

உலகில் பல இயக்கங்கள், தாங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக போராடுவதாக சொல்லிக் கொள்வதில்லை. ஹாங்காங்கின் ஜனநாயக இயக்கமும் அப்படித் தான். வெளிப்பார்வைக்கு மட்டும் தான் அது ஜனநாயகத்திற்கான இயக்கம். உள்ளே அது இனவாதிகள், பிரதேசவாதிகள், தீவிர வலதுசாரிகளின் ஆளுமைக்குள் உள்ளது. அது மட்டுமல்ல, முன்னாள் பிரிட்டிஷ் காலனிய எஜமானான பிரிட்டனின் பங்களிப்பும் உள்ளது. ஜனநாயகம் கோரும் மாணவர்கள் சிலர், வெளிப்படையாகவே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை ஆதரிக்கின்றனர்.

1967 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முடிவில், பிரிட்டிஷ் நிர்வாகம் பெரியதொரு சமூக சுத்திகரிப்பை செய்திருந்தது. காலனிய எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்டுகள் போன்றோரை பிடித்து சிறையில் அடைத்தது அல்லது சீனாவுக்கு நாடு கடத்தி இருந்தது. சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சிகளை மட்டும் இயங்க அனுமதித்தது. மேலும், தீவிர வலதுசாரிகள், காலனிய விசுவாசிகள் போன்றோரை வளர்த்தெடுத்தது. அன்று பிரிட்டிஷ்காரர்கள் நடைமுறைப் படுத்திய திட்டங்கள், இன்று பலன் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு, காலனிய கடந்த காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலதிக தகவல்களுக்கு: