Showing posts with label ஆப்பிரிக்கா. Show all posts
Showing posts with label ஆப்பிரிக்கா. Show all posts

Wednesday, January 13, 2021

ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்

"இலங்கை சீனாவின் காலனி ஆகிறது" என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் பலருக்கு ஆபிரிக்காவில் என்ன நிலைமை என்பது தெரியாது. இலங்கையை விட பல மடங்கு அதிகமாக, ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவ பாதிப்புகள் மிகத்தெளிவாக உணரப்படுகின்றன அதுமட்டுமல்ல ஆப்பிரிக்கர்கள் சீனர்களின் இனவாத பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிசய படத் தக்கவாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் சீனாவின் நவ காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்ப பாடசாலைகளில் இருந்து சீன மொழி கற்பிக்கப்படுகின்றது அங்கு சீன மொழி படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த முரண்பாட்டை நாம் எப்படி புரிந்து கொள்வது? அது குறித்து ஒரு சிறிய ஆய்வு. 


கானா நாட்டின் தலைநகர் ஆக்ராவில் ஒரு ஊடகவியலாளர் ஒரு தடவை சீன உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருந்தார். அப்போது அந்த ரெஸ்டாரண்ட்டின் சீன உரிமையாளர், ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்று கூறி அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். "எவ்வாறு கானா நாட்டில் விருந்தினராக தங்கியுள்ள ஒரு சீன நாட்டு ரெஸ்டாரன்ட் உரிமையாளர், உள் நாட்டவரை அனுமதிக்க மறுக்க முடியும்?" என்று கேள்வி கேட்ட ஊடகவியலாளர் உடனடியாக சில இளைஞர்களை கூட்டி வந்து வாயில் கதவை அடைத்து போராட்டம் நடத்தினார். அன்றிலிருந்து அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அனைவரையும் உள்ளே வந்து சாப்பிட அனுமதித்தார். 

 

கென்யாவின் தலைநகர் நைரோபியிலும் இதே போன்ற பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கும் பல ரெஸ்டோரண்டுகள் சீனர்களையும் ஐரோப்பியர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவில் சீன நிறுவனங்களின் ரயில் பாதை கட்டுமான பணியில் வேலை செய்யும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் சீன தொழிலாளர்களுடன் ஒன்று சேர முடியாமல் இருப்பதாகவும் அது மட்டுமல்ல சீனர்கள் பாவிக்கும் கழிவறையை கூட பாவிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை சீனா தொழில் வழங்குனர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆப்பிரிக்கர்களை குரங்குகள் என்று திட்டியதால் கென்யா முழுவதும் சீனர்களுக்கு எதிரான போராட்டம் நடந்ததது.

புலமைப்பரிசில் கிடைத்து சீனாவுக்கு படிக்க சென்ற ஆப்பிரிக்கர்கள் கூட, அங்கு தாம் மூன்று வருடங்களுக்கு மேலே வாழ்ந்த போதிலும், சீன மொழியை சரளமாக பேசினாலும் சீன மாணவர்களுடன் ஒன்று கலக்க முடியாமல் இருந்ததை தெரிவித்துள்ளனர். சீனாவில் குவாங்சவ் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் ஆப்பிரிக்கர்கள் வாழ்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அங்கிருந்த ஆப்பிரிக்கர்கள் தான் வைரஸை கொண்டு வந்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இவையாவும் சீனர்கள் ஆப்பிரிக்கர்கள் மீது காட்டிய இனவாத பாகுபாட்டுக்கு சில உதாரணங்கள். அதற்காக சீனர்கள் எல்லோரும் இனவாதிகள் என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. உலகில் எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் இனவாதிகளும் இருக்கிறார்கள். இனவாதமற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்கள் மத்தியில் கூட இனவாதிகள் இருக்கிறார்கள். பெரும்பாலான இனவாதிகள் தாம் பேசுவது இனவாதம் என்பதை உணர்வதில்லை. இது தான் உலக வழக்கம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். தமிழர்களில் சிலர் கூட ஆப்பிரிக்கர்கள் விடயத்தில் இனவாதிகள் ஆக நடந்து கொள்வதைக் காணலாம். ஆப்பிரிக்கர்களை "காப்பிலிகள்" என்று ஒதுக்கி வைப்பது மாத்திரமல்லாது, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் கொண்டுள்ளனர்.

பஞ்சம், பசி, பட்டினி என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் நிலைமை என்று தான் நினைத்துக் கொள்கிறார்கள். இவையாவும் மேற்கத்திய ஊடகங்களினாலும், ஹாலிவுட் திரைப்படங்களினாலும் உலக மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளன. சீனர்களும் இந்த ஒரு பக்க சார்பான உலகப் பார்வைக்கு பலியானவர்கள் தான். ஆப்பிரிக்கர்களின் கருப்பு நிற மேனியை பஞ்சம், பசி, பட்டினி, வறுமை முட்டாள்தனம் போன்றவற்றுடன் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக சீனர்கள் காட்டும் இனவாத பாகுபாடும் அத்தகைய மனநிலையில் இருந்து தான் உருவாகின்றது. ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக எமது தமிழர்களில் சிலர் எத்தகைய இனவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்களோ, அதையே தான் சீனர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களில் நிலவும் இனவாதம் தொடர்பாக ஆய்வு செய்த கானா நாட்டு பேராசிரியர் ஒருவர், இது குறிப்பிட்ட தனிநபர் சார்ந்த நடத்தையாக மட்டுமே இருப்பதாக கண்டறிந்தார். அதாவது எல்லா சீன மனேஜர்களும், பணியாளர்களும் இனவாதப் பாகுபாடு காட்டுவதில்லை. அதிகபட்சம் 6 அல்லது 7 சம்பவங்களை மட்டுமே அவரால் இனவாதமாக நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஐரோப்பியர்கள் போன்று சீனர்கள் மத்தியில் இனவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது ஐரோப்பியர்கள் இனவாதத்தை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தனர். ஆனால் சீனர்களை பொறுத்தவரையில் அது அந்த தனிநபர் சார்ந்த விடயமாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்கள் இதை ஊதிப் பெருக்கி வருகின்றன. அத்துடன் முன்னாள் காலனியாதிக்க வாதிகளான மேற்கத்திய நாடுகளும் இதை தமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக கருதுகின்றன. தமது  ஊடகங்களை பயன்படுத்தி சீனர்களின் இனவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றனர். அதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன. 


முதலாவதாக பொருளாதார ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்கு போட்டியாக வந்துள்ள சீனாவை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக அவர்கள் ஆப்பிரிக்கர்களை, ஏன் தமிழர்களையும் கூட தமக்கு ஆதரவாக பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றன.

இரண்டாவதாக ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தாம் கடந்த காலத்தில் செய்த காலனியாதிக்க கொடுமைகளையும் இனவெறிப் பாகுபாட்டையும் மூடி மறைக்க முயல்கின்றனர். அதைப் பூசி மெழுகி வெள்ளை அடிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். சீனர்களுக்கு எதிராக கம்பு சுற்றும் தமிழர்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எதிர்மறையாக சொல்ல மாட்டார்கள்.

சீனாவுடனான உறவுகளில் பல ஏமாற்றங்கள் கிடைத்திருந்த போதிலும் இன்றைக்கும் ஆபிரிக்க நாடுகள் சீனாவை தமது பிரதானமான வணிகக் கூட்டாளியாக கருதுகின்றனர். இதுவரை காலமும் மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதென்றால் பல நிபந்தனைகள் விதித்து வந்தனர். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்று அந்த நிபந்தனைகள் இருக்கும். ஆனால் சீனா இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இது சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

மறுபக்கத்தில் 54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டமானது சீனாவுக்கு ஒரு மிகப் பெரியதொரு முதலீட்டுக்கான வாய்ப்பை கொடுத்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகள் அமைப்பது, போன்ற கட்டுமான பணிகளில் மட்டும் அல்லாது எண்ணை அகழ்வு, சுரங்கத்தொழில், கடற் தொழில் போன்றவற்றிலும் சீனா முதலிட்டு வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் அதற்கு ஒரு மிகப்பெரிய விலை கொடுக்கின்றன பெரும்பாலும் இந்த முதலீட்டுக்கான கடன் தொகை அதிகம் மட்டுமல்லாது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் மிகக் குறைவு. கூட்டாக முதலிட்டாலும் சீன நிறுவனங்களுக்கு பெருமளவு விட்டுக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத காரணத்தினால் கென்யா தனது துறைமுகத்தை சீனாவுக்கு இழக்கப் போகிறது என்ற வதந்தி அந்த நாட்டில் உலாவுன்றது. இந்த கடன் பொறி காரணமாக, ஆப்பிரிக்கர்கள் சீனாவையும் மேற்கத்திய நாடுகள் போன்றதொரு நவ காலனித்துவ வல்லரசாக பார்க்கின்றனர்.

ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக வேலை நிமித்தம் ஆபிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் அந் நாட்டு மொழிகளை கற்க மறுத்து வருகின்றனர். இதுவும் முன்பு ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் நடந்துகொண்ட முறையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது. இது போன்று தான் முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியேறி வாழ்ந்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை, அல்லது ஏதாவதொரு உள்நாட்டு மொழியை கற்றுக் கொள்ள மறுத்து வந்தார்கள். அதற்குப் பதிலாக தமிழர்கள் தான் ஆங்கிலேயர்களின் மொழியை கற்றுக் கொண்டு அதை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றது.

சீன மொழியை தாமாக விரும்பி படிப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. சீன மொழி கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலைக்கு மூலை வந்துவிட்டன. ஆரம்ப பாடசாலையில் இருந்து சீன மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் சீன மொழி கலாச்சாரம் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. உள்ளூர் தரகு முதலாளிகளும் இந்த போக்கை ஊக்குவித்து வளர்த்து வருகின்றனர். இலங்கை இந்தியாவில் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைப்பது போன்று இன்று ஆப்பிரிக்க நாடுகளில் சீன மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.


இந்தக் கட்டுரை யூடியூப் வீடியோவாக பதிவேற்றப் பட்டுள்ளது:

Tuesday, May 05, 2020

மொசாம்பிக்கில் திடீரென முளைத்த ஐ.எஸ். இயக்கம்! அமெரிக்கா, இஸ்ரேலின் சதியா?


மொசாம்பிக் வட பகுதியில் உள்ள Cabo Delagado மாகாணத்தில் ஐ.எஸ். ஜிகாதிக் குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படுகொலை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்திருந்த போதிலும், இப்போது தான் வெளிவந்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக, மொசாம்பிக்கின் வட பகுதியில் "மத்திய ஆப்பிரிக்க இஸ்லாமிய தேசம்" (Islamic State Central Africa Province (ISCAP)) என்ற பெயரிலான ஒரு ஜிகாதி இயக்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. மார்ச் மாதம் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அப்போது நடந்த சண்டையில் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு விழுத்தியதாக வீடியோ வெளியிட்டனர்.

அந்தப் பிரதேசங்களை ஜிகாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில், அங்கிருந்த வங்கிக் கிளைகளை கொள்ளையடித்து, அரச கட்டிடங்களுக்கு தீவைத்தனர். மதுபானக் கடைகளை மூடி, அங்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் பின்பற்றப் பட வேண்டும் என உத்தரவிட்டனர். ஐ.எஸ். சின்னம் பொறித்த கருப்பு- வெள்ளை கொடிகளை பறக்க விட்டனர். அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்த போதிலும், மக்கள் மத்தியில் ஜிகாதி தீவிரவாதிகளுக்கான ஆதரவு மிக மிகக் குறைவு. அதனால் தான் தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர்.

மொசாம்பிக்கில் எவ்வாறு இந்த ஐ.எஸ். ஜிகாதிக் குழு திடீரென முளைத்தது? குறுகிய காலத்தில் அரச படைகளை எதிர்த்துப் போரிட்டு குறிப்பிட்ட சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது எப்படி? அதுவும் உள்நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமானது எப்படி?

மொசாம்பிக்கில் திடீர் ஜிகாதிகள் உருவாகக் காரணம் என்ன? இவர்களை திரை மறைவில் இருந்து இயக்கும் உலக நாடுகள் எவை? இஸ்ரேல்? அமெரிக்கா? ஏனெனில் இந்த யுத்தத்திற்கு பின்னால் இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி மறைந்துள்ளது. அண்மையில் தான் Cabo Delagado மாகாணத்தில் நிறைய எரிவாயு வளம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
ஐ.எஸ். இயக்கம் சிரியாவில் நடந்த போரில் தோற்கடிக்கப் பட்டாலும், அது இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான், லிபியாவில் ஐ.எஸ். இயங்கி வருகின்றது. ஆப்பிரிக்காவில் அண்மையில் பல நாடுகளிலும் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். உரிமை கோரியிருந்தது. மேற்கத்திய நாடுகள் அதைப் பற்றி எந்தக் கவலையுமற்று காணப் படுகின்றன.

Saturday, October 05, 2019

பூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்!


வ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர். அந்த‌ ச‌மூக‌த்தில் எல்லாவ‌ற்றிலும் பெண்க‌ளுக்கு தான் முத‌லிட‌ம்.

அல்ஜீரியா, மாலி, நைஜ‌ர், நைஜீரியா, மொரோக்கோ, மொரிட்டானியா ஆகிய‌ நாடுக‌ளை இணைக்கும் ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் நாடோடி வாழ்க்கை வாழும் துவார‌க் ம‌க்க‌ள் தனித்துவ‌மான‌ பெர்ப‌ர் மொழி பேசுகின்ற‌ன‌ர். வ‌ட‌ ஆப்பிரிக்காவுக்கு அரேபிய‌ர்க‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்ன‌ர் அந்த‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்ந்த‌வ‌ர்கள். த‌ற்போது ப‌ல‌ தேச‌ங்க‌ளுக்குள் பிள‌வு ப‌ட்டு, ஒடுக்க‌ப் ப‌டும் சிறுபான்மையின‌ ம‌க்க‌ளாகி விட்ட‌ன‌ர்.

அரேபிய‌ப் ப‌டையெடுப்புக‌ளுக்கு பின்ன‌ர் துவார‌க் ம‌க்க‌ள் இஸ்லாமிய‌ராக‌ மாறி விட்டிருந்தாலும், த‌ம‌து த‌னித்துவ‌மான‌ க‌லாச்சார‌த்தை கைவிட‌வில்லை. அவை எம‌க்கு ம‌ட்டும‌ல்லாது, அங்கு வாழும் அரேபிய‌ருக்கும் புதினமான‌வை.

அது ஒரு முற்றிலும் மாறுப‌ட்ட‌ ச‌முதாய‌ம். துவார‌க் பெண்க‌ள் அந்நிய‌ ஆட‌வ‌ருக்கு முன்னால் கூட‌ முக‌த்தை மூடுவ‌தில்லை. ஆனால், ஆண்க‌ள் க‌ட்டாய‌ம் முக‌த்தை மூட‌ வேண்டும். இதை அவ‌ர்க‌ள் ப‌ருவ‌ வ‌ய‌தில் இருந்தே பின்ப‌ற்றுகிறார்க‌ள்.

அதாவ‌து ஒரு துவார‌க் ஆண் த‌ன‌து ம‌னைவிக்கு முன்னால் மட்டுமே முக‌த்தை மூடாம‌ல் இருக்க‌லாம். வெளியில் எந்த‌ப் பெண்ணும் பார்க்க‌ முடியாம‌ல் முக‌த்தை மூடி இருக்க‌ வேண்டும். விருந்தின‌ருட‌ன் சாப்பிடும் பொழுது கூட‌ முக‌த்திரையை அக‌ற்றாம‌ல் உண‌வை வாய்க்குள் செலுத்த‌ வேண்டும். வீட்டில் உள்ள‌ பெண் பேச‌த் தொட‌ங்கினால் ஆண் வாயை மூடிக் கொள்ள‌ வேண்டும்!

திரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌த‌மா என்று முத‌லில் பெண் தான் ஆணைக் கேட்க வேண்டும்! அதே மாதிரி ம‌ண‌ முறிவுகளும் சாதார‌ண‌ம். ஒரு பெண் ம‌றும‌ண‌ம் முடிப்ப‌து குடும்ப‌த்தில் ஒரு கொண்டாட்ட‌ நிக‌ழ்வாக‌ வ‌ர‌வேற்க‌ப் ப‌டும். விவாக‌ர‌த்து செய்தால் சொத்துக்க‌ள் அனைத்தும் பெண்ணுக்கே உரிமையாகும். அத்துட‌ன் திரும‌ணமான‌ பெண் வேறு ஆண் துணையை வைத்திருந்தாலும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள்.

உண்மையில் ப‌ண்டைய‌ கால‌த்தில் நில‌விய‌ தாய் வ‌ழிச் ச‌மூக‌த்தின் தொட‌ர்ச்சி தான் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ரின் ம‌ர‌பு. அதை அவ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் வருட‌ங்க‌ளாக‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள். ஆண் மேலாதிக்க‌த்தை வலியுறுத்தும் இஸ்லாமிய‌ ம‌த‌ம் கூட‌ அதில் எந்த‌ மாற்ற‌த்தையும் கொண்டு வ‌ர‌வில்லை.

ஆனால், அண்மைக் கால‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் அர‌சிய‌ல் இஸ்லாம் துவார‌க் ம‌க்க‌ள‌யும் விட்டு வைக்க‌வில்லை. ISIS எனும் பெய‌ரில் இய‌ங்கும் ப‌ல்வேறு ஆயுத‌க் குழுக்க‌ள் பெண்க‌ளை பூர்க்கா அணிய‌ வற்புறுத்துகின்ற‌ன‌. குறிப்பாக‌ மாலி, நைஜீரியாவின் வ‌ட‌ ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் உள்நாட்டுப் போர் கார‌ணமாக‌ த‌னித்துவ‌மான‌ துவார‌க் க‌லாச்சார‌ம் அச்சுறுத்த‌லுக்குள்ளாகி இருக்கிற‌து.

Saturday, March 17, 2018

ஆப்பிரிக்கக் கடவுள் முப்பாட்டன் முருகனுக்கு ஆரோகரா!


தமிழர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை பற்றி, ஏற்கனவே பேராசிரியர் அறவாணன் போன்றோர் ஆய்வு செய்து எழுதி வைத்துள்ளனர். சொத்து வழி உறவு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், உழவுத் தொழிலில் பயன்படுத்தும் சாதனங்கள், போன்றவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.

இந்திய உப கண்டத்தில் மட்டுமல்லாது, ஆபிரிக்காவிலும் வேரூன்றியுள்ள சாதிய சமுதாய அமைப்பும், ஒரே பூர்வீகத்தை உறுதிப் படுத்துகின்றது. காசி நகரம் திராவிடர்களுடையதாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்காவின் பண்டைய குஷி ராஜ்யத்தின் பெயருடன் ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.

பண்டைய எகிப்தியரின் ஓசிரிஸ்-இசிஸ் கதை, தமிழர்களின் கோவலன்- கண்ணகி கதையுடன் ஒற்றுமைகளை கொண்டுள்ளது. கண்ணகி அம்மன் வழிபாடு, பண்டிகைகள் சில ஆப்பிரிக்க மதங்களிலும் காணப் படுகிறன. எகிப்தியரின் ஆமுன் தெய்வத்திற்கும், அம்மனுக்கும் இடையிலான பெயர்ப் பொருத்தமும் கவனிக்கத் தக்கது.

ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! "முருங்கு (Murungu) கடவுள்" என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது! தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்!

தமிழர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் என்று நிரூபிப்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. இருந்தாலும், தமிழினவாதிகள் எப்பொழுதும், தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மூத்த குடிப் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், ஆபிரிக்கர்களுடனான ஒற்றுமைகளை புறக்கணிப்பதன் காரணம் என்ன?

தமிழினவாதக் கோட்பாடு, ஒரு ஐரோப்பிய மையவாத சிந்தனையின் பக்க விளைவு. ஐரோப்பியர்களை நாகரீகத்தில் உயர்ந்தவர்களாகவும், ஆப்பிரிக்கர்களை நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிய காட்டுமிராண்டிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் பண்டைய ராஜ்யமான கூஷி என்ற பெயர், திராவிட மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் காணப்படுகின்றன. வட இந்தியாவில் காசி நகரத்தை திராவிடர்களே கட்டியிருக்க வேண்டும். காஷ்மீர் என்ற பெயர் கூட, அங்கு கூஷி திராவிடரின் நாடு இருந்தமைக்கான சான்றாகும். சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தை நகரம் பற்றி இராமாயணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முதல் வட இந்தியா வரை வியாபித்திருந்த குஷானா சாம்ராஜ்யம், திராவிட நாகரீகத்தை கட்டி வளர்த்தது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளால் செழிப்புற்றது. குஷானா சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி கனிஷ்கா காலத்தில், புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனா வரை பரவி இருந்தது. குஷானா சாம்ராஜ்யத்தின் பௌத்த மதப் பின்னணி காரணமாக, இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, தமிழினவாதிகளும் அதன் திராவிடப் பழம் பெருமையை புறக்கணித்து வந்துள்ளனர்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம்: //ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”). இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது.//
(https://www.facebook.com/rosyrascalring/posts/1268068239894446?hc_location=ufi)

சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

Sunday, March 08, 2015

நிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்


அங்கோலாவின் கடைசி அரசியான நிசிங்காவின் வரலாற்றைக் கூறும் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலும் நாகரிகமடைந்த நாடுகளும், அங்கே மன்னராட்சிகளும் இருந்துள்ளன. ஐரோப்பிய காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பெரும் போர்கள் நடந்துள்ளன. ஐரோப்பியரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆப்பிரிக்க வரலாறு, தற்போது மெல்ல மெல்ல வெளிவருகின்றது.

17 ம் நூற்றாண்டில் அங்கோலாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர்கள், அங்கிருந்த மன்னன் நின்கோலா வின் பெயரே, அந்த நாட்டின் பெயர் என்று தவறாக நினைத்துக் கொண்டார்கள். அதனால், முபுண்டு மொழி பேசும் மக்கள் வாழ்ந்த இராச்சியத்தின் பெயர், அன்றிலிருந்து அங்கோலா என்று அழைக்கப் படலாயிற்று.

1583 ம் ஆண்டு, கிளுவாஞ்சி மன்னருக்கு மகளாக பிறந்த நிசிங்கா, வருங்காலத்தில் இராணியாக வருவாள் என்பதை, ஒரு அப்போதே ஒரு பெண் சோதிடர் அறிவித்திருந்தார். கிளுவாஞ்சி மன்னர், போருக்கு செல்லும் போதெல்லாம், இளவரசி நிசிங்காவை தன்னோடு அழைத்துச் செல்வார்.

அங்கோலா மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஒன்றை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள், அங்கே கோட்டை கட்டி, மன்னருக்கு கீழ்ப்படிவான குடிமக்களையும் பிடித்து வைத்திருந்தனர். அப்போது நடந்த போரின் முடிவில், அங்கோலா மன்னருக்கும், போர்த்துகேய ஆளுநருக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

போர்த்துக்கேயருடனான சமாதான ஒப்பந்தத்தில் இளவரசி நிசிங்கா கையொப்பம் இட்டிருந்தார். சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக, கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறி ஞானஸ்நானம் எடுத்து, Dona Anna de Sousa எனும் போர்த்துகேய பெயரை சூட்டிக் கொண்டார். ஆயினும், போர்த்துகேய காலனியாதிக்கவாதிகள் ஒப்பந்தத்தை மீறியதுடன், மீண்டும் போருக்குள் இழுத்து விட்டனர். பல வருடங்களாக தொடர்ந்த போரில், நிசிங்காவின் சகோதர்கள் கொல்லப் பட்டனர். இறுதியாக, மீண்டும் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப் பட்டது.

இதற்கிடையில், அங்கோலாவின் இன்றைய தலைநகர் லுவாண்டா உட்பட பல கரையோர பிரதேசங்கள், போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் வந்து விட்டிருந்தன. ஏனைய உள்நாட்டுப் பிரதேசங்களில், நிசிங்கா தனது இராசதானியை கட்டியெழுப்ப விரும்பினார். ஆயினும், நீண்ட காலமாக நீடித்த போர் ஏற்படுத்திய அழிவுகள், விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை.

நிசிங்கா தனது 80 வது வயதில், 17 டிசம்பர் 1663, மதங்கா எனுமிடத்தில் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் காலனிய ஆட்சியதிகாரம் விரிவடைந்தது. பல்லாயிரக் கணக்கான அங்கோலா குடிமக்கள், அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அங்கோலா முழுவதும் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அங்கோலா இராணி நிசிங்காவின் வரலாறு முழுவதும் ஏற்கனவே எழுத்தில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. தற்போது அது சினிமாப் படமாக தயாரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேய மொழி பேசும் இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Njinga - Rainha de Angola trailer english

Sunday, November 02, 2014

பூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்!

"மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்." - தோமஸ் சங்கரா


பூர்கினா பாசோவில் மக்கள் எழுச்சி. ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு சென்று பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். ஆப்பிரிக்க நாடான பூர்கினா பாசோவில், இப்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி பற்றி, பெரும்பாலான ஊடகங்கள் எதுவும் கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றன. ஏனென்றால், அங்கே கடந்த 27 வருடங்களுகளாக அதிகாரத்தில் இருந்தவர், ஒரு மேற்குலக நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்.

முன்னாள் கம்யூனிச ஜனாதிபதி தோமஸ் சங்கராவை படுகொலை செய்து விட்டு, இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் தான், இந்நாள் சர்வாதிகாரி Blaise Compaore. பிரான்ஸ் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன், கடந்த முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார்.

பிளேஸ் கொம்பாரே, தனது பதவிக் காலத்தை நீடிக்க விரும்பிய பொழுது, பொறுத்தது போதும் என்ற மனநிலையில் இருந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர். இலட்சக் கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். பூர்கினா பாசொவை ஒரு சோஷலிச நாடாக ஆட்சி செய்த தோமஸ் சங்கராவின் உருவப் படங்கள், பேரணிகளில் பரவலாகக் காணப் பட்டன. புரட்சியாளர்களை மக்கள் மறப்பதில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தலைவன் தோமஸ் சங்கராவை படுகொலை செய்தவர்களுக்கு, இன்று மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.

தலைநகரில் கூடிய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. அதனால் கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, பிளேஸ் கொம்பாரேயின் பதவிக் காலத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்தனர். அதனால் சீற்றம் கொண்ட மக்கள் பாராளுமன்றத்தை முற்றாக எரித்து நாசமாக்கியுள்ளனர். அந்தச் சம்மபவம் நடந்த நேரம், அங்கே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சமூகமளித்திருக்கவில்லை.

அதே நேரம், பிற அரசு அலுவலகங்களும் தாக்கப் பட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையம் கூட மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டது. தற்போதைய ஆட்சியாளர் சர்வாதிகாரி பிளேஸ் கொம்பாரேயின் சிலைகள் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன.அதே நேரம், அதற்கு அருகில் இருந்த கடாபியின் சிலையை சேதப் படுத்தாமல் விட்டு வைத்தார்கள். பூர்கினா பாசோ மக்கள், தமது ஏகாதிபத்திய அடிவருடியான கொம்பாரேயை எந்தளவு தூரம் வெறுத்தார்கள் என்பதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான கடாபியை எந்தளவு விரும்பினார்கள் என்பதும் இதிலிருந்து புலனாகும்.

பிளேஸ் கொம்பாரே நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அதற்குப் பின்னர், அவரது பதவிக் கால நீடிப்பு செல்லுபடியாகாது என்று, "பாராளுமன்றம்" (அப்படி ஒன்று இருக்கிறதா?) அறிவித்தமை தான் உச்சகட்ட நகைச்சுவை. தற்போது இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தலைநகர் உகாடுகுவில் உள்ள அமெரிக்க, பிரெஞ்சு தூதுவர்கள் எதிர்கால ஆட்சியாளர் தமக்கேற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்றே எத்ரிபார்ப்பார்கள். அதனால், இராணுவ ஆட்சி நடந்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், பூர்கினா பாசோ மக்கள் அதற்கு அடிபணிந்து போகும் நிலையில் இல்லை. தற்போதைய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப் பட்டு வருகின்றன.

"நீங்கள் தனி மனிதர்களான புரட்சியாளர்களை கொலை செய்யலாம். ஆனால் உங்களால் சித்தாந்தங்களை கொல்ல முடியாது." - தோமஸ் சங்கரா ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிய புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஆவி, 27 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ளது. பூர்கினா பாசோவில் தோமஸ் சங்கரா விதைத்த புரட்சி விதைகள், இன்று மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது. தலைநகர் உகாடுகுவில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் காணப் பட்ட ஒரு வாசகம்: "தோமஸ் சங்கரா, உனது புதல்வர்களைப் பார்! நாங்கள் உனது போராட்டத்தை முன்னெடுக்கிறோம்."

மார்க்சியப் புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதமும், அவரது ஆட்சியின் கீழான நான்காண்டு சோஷலிச பொற்காலம் பற்றிய ஏக்கமும், பூர்கினா பாசோ இளந் தலைமுறையினரை போராடத் தூண்டிய காரணங்களாக இருந்துள்ளன. "இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசம் செத்து விட்டது. இன்றைய இளந்தலைமுறையினர் முதலாளித்துவத்தை ஆராதிக்கிறார்கள்..." எனும் அறியாமை இருளில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை: 
Spirit of ‘Africa’s Che Guevara’ found in Burkina Faso uprising  http://america.aljazeera.com/articles/2014/10/31/burkina-faso-explainer.html

பூர்கினா பாசோவில், புரட்சியை பாதுகாக்கும் மக்கள் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக சங்கரிஸ்ட் கட்சி ஆராய்ந்து வருகின்றது. ஆபிரிக்காவின் 21 ம் நூற்றாண்டின் இளம் மார்க்சிஸ்டுகள், மறைந்த கம்யூனிச தலைவர் தோமஸ் சங்கராவை பின்பற்றி, தங்களை "சங்கிரிஸ்டுகள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் "பொருளாதார விடுதலைப் போராளிகள்" (EFF) கட்சியினரும் தங்களை சங்கிரிஸ்டுகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில், தற்போது இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக பரவி வருகிறது. உதாரணத்திற்கு, கொங்கோவில் பட்ரிஸ் லுமும்பாவை பின்பற்றுவோர் தம்மை, "லுமும்பிஸ்ட்" என்று அழைத்துக் கொள்கின்றனர். பெயர் எப்படி இருந்தாலும், சித்தாந்தம் எதுவென்பது தான் முக்கியம். தென் ஆப்பிரிக்காவில் EFF கட்சியினர், ஒவ்வொரு தடவையும் தோமஸ் சங்கரா மீது உறுதிமொழி எடுக்கின்றனர். அதே நேரம், உறுப்பினர்களுக்கு மார்க்சிய லெனினிச வகுப்புகளை நடத்துகிறார்கள். 

பூர்கினா பாசோ நாட்டை சேர்ந்த சங்கிரிஸ்ட்கள் பற்றி எமக்கு தெரிந்தவை மிகச் சொற்பமே. சில நேரம், பிளேஸ் கொம்பாரேயின் 27 வருட கால சர்வாதிகார ஆட்சி காரணமாக அரசியல் பேசாமல் ஒதுங்கி இருந்திருக்கலாம். இனி வருங்காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கை என்ன என்று தெரிந்து விடும்.

"அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே!"


இது தொடர்பான முன்னைய பதிவு: 

Wednesday, October 30, 2013

ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆப்பிரிக்க இளவரசன் - அறியாத வரலாறு

ஆப்பிரிக்காவில் இருந்து, அடிமைகளாக கொண்டு செல்லப் பட்டு, அமெரிக்க கண்டத்தில் குடியமர்த்தப் பட்ட கறுப்பின மக்கள், இருபதாம் நூற்றாண்டிலும் சம உரிமைக்காக போராட வேண்டி இருந்தது. அதே நேரம், பதினெட்டாம் நூற்றாண்டில், ஒரு ஆப்பிரிக்க -கறுப்பின அடிமை, ரஷ்யப் பேரரசில் ஒரு இளவரசனாக வர முடிந்துள்ளது! அவர் அன்று ஐரோப்பாவிலேயே சிறந்த கல்விமானாக போற்றப் பட்டார். ரஷ்ய சாம்ராஜ்யத்தின் புத்திசாதுர்யம் மிக்க இராணுவ நிபுணராக மதிக்கப் பட்டார். இது ஒன்றும் கற்பனைக் கதை அல்ல. உண்மை வரலாறு.

முதலில் நாம், பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்யாவின் சமூக-அரசியல் பின்புலத்தை ஆராய வேண்டும்.ரஷ்ய சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விஸ்தரிக்கப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், துருக்கி ஓட்டோமான்களின் ஆட்சிக்குள் இருந்த பகுதிகளையும் கைப்பற்றியது. அனேகமாக, தெற்கு ரஷ்ய பகுதிகள் எல்லாம், ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தவை. ஆயிரம் வருட காலத்திற்கு முன்பிருந்தே, அரபு வணிகர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சில கறுப்பின அடிமைகள், துருக்கியரின் சாம்ராஜ்யத்தினுள், பல பகுதிகளிலும் இருந்துள்ளனர். அங்கிருந்து, ரஷ்ய தலைநகரான சென். பீட்டர்ஸ்பெர்க் வரையில், ஆப்பிரிக்க அடிமைகள் விற்பனை செய்யப் பட்டனர். மிக மிகக் குறைந்தளவு என்றாலும், ரஷ்யாவில் ஏற்கனவே சில கறுப்பின அடிமைகள் இருந்துள்ளனர்.

அமெரிக்க கண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளுக்கும், அரேபிய வணிகர்கள் கொண்டு சென்ற அடிமைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முதலில், அரேபியர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை நடத்திய விதமும், மேற்கு ஐரோப்பியர்கள் நடத்திய விதமும் நேர் எதிரானவை.  மேற்கு ஐரோப்பியர்கள், அடிமைகளை பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தும் நோக்குடன் கொண்டு சென்றனர். அதனால், மிகக் கொடூரமாக நடத்தினார்கள். பொருளாதார காரணங்களுக்காக நிறவாதம் ஒரு கொள்கையாக வளர்க்கப் பட்டது. கறுப்பின அடிமைகளையும், வெள்ளையின குடியேறிகளையும் ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்தார்கள்.

அரேபியர்கள், ஆப்பிரிக்க அடிமைகளை, வீட்டு வேலைக்காரர்கள் போன்று வைத்திருந்தார்கள். அரண்மனைகளில், மாளிகைகளில் சேவகர்களாக வைத்திருந்தார்கள். அரேபியர்கள், தாம் தேர்ந்தெடுத்த சிறந்த அடிமைகளை, துருக்கி சுல்த்தானின் அரண்மனைக்கு பரிசாக கொடுத்தார்கள். சுல்த்தானின் அடிமைகளில் சிலர்  அதிர்ஷ்டசாலிகள். திறமைசாலிகள் படித்து முன்னேற முடிந்தது. அரேபியர்கள் வைத்திருந்த அடிமைகள், குறிப்பிட்ட கால கடின உழைப்பிற்குப் பின்னர், "சுதந்திரம் வாங்கி" சமுதாயத்தில் ஒன்று கலக்க முடிந்தது. இது பண்டைய கிரேக்க, ரோமர் காலத்தில் இருந்த அடிமை முறையின் தொடர்ச்சி ஆகும். ஆகவே, ரஷ்யர்களும் அரேபியர்கள் போன்று தான், தமது அடிமைகளையும் நடத்தி வந்தனர். அவர்களை ஒரு தனியான சமுதாயமாக, இனவாத நோக்கில் பார்க்கப் படாததால் தான், இன்றைக்கும் அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கிடைப்பதில்லை. மேலும், ரோமர்கள் ஆண்ட காலத்திலும், அதற்குப் பின்னரும், பல்வேறு வெள்ளையின மக்களும் அடிமைகளாக விற்கப் பட்டனர். அதனால், கறுப்பினத்தவர்களை மட்டுமே அடிமைகளாக கருதும் எண்ணம் தோன்றவில்லை.

கறுப்பினத்தவரை கீழ்த்தரமாக பேசுவதற்காக, மேற்கு ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் "நீக்ரோ" என்ற சொல், ரஷ்ய மொழியில் இருக்கவில்லை. அது பிற்காலத்தில், மேற்குலக கலாச்சார தாக்கத்தால் உள்வாங்கப் பட்டது. ரஷ்யர்கள் "மூர்கள்" என்று வட ஆப்பிரிக்க இஸ்லாமியர் எல்லோரையும் அழைத்தனர். அது ஒரு மதவாத அர்த்தம் கொண்ட சொல் ஆகும். அதைவிட, கிரேக்க மொழியில் இருந்து கடன்வாங்கிய "மவுர்" என்ற சொல் கருப்பர்களை குறிப்பிட பயன்படுத்தினார்கள். இலக்கியவாதிகள் "அரப்"(Arap)என்ற சொல்லையும் பயன்படுத்தினார்கள். எது எப்படி இருப்பினும், அன்றைய அமெரிக்காவில் நிலவிய இனவெறிக் கொள்கை எதுவும் ரஷ்யாவில் பரவி இருக்கவில்லை. சிலர் தனிப்பட்ட முறையில், கருப்பர்கள் மீது வெறுப்பைக் காட்டியிருக்க வாய்ப்புண்டு.

ரஷ்யாவில் பிறந்த உலகப் புகழ் பெற்ற கவிஞர் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) பற்றி அறியாதவர் எவருமில்லை. ஆனால், புஷ்கினின் கொள்ளுப் பாட்டன் ஒரு கறுப்பின அடிமை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் பெயர்: ஆப்ராம் பெட்ரோவிச் கன்னிபல் (Abram Petrovich Gannibal). அது ஆப்ராம் பெட்ரோவிச் ஞானஸ்நானம் எடுத்த பின்னர் சூட்டப்பட்ட பெயர். இயற்பெயர் தெரியவில்லை. கன்னிபல் என்பது, ஹனிபல் என்ற பெயரின் திரிபு. பண்டைய காலத்தில், ரோமர்களை எதிர்த்துப் போராடிய, வட ஆப்பிரிக்க மன்னன் ஒருவனின் பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தார்.

புஷ்கினால் எழுதி, முடிக்கப் படாத Peter the Great's Negro என்ற நாவலில் இருந்தே, அவரைப் பற்றிய தகவல் கிடைத்தது. சென். பீட்டர்ஸ்பெர்க் அரண்மனையில், இன்றைக்கும் அவரது ஓவியம் ஒன்றுள்ளது. ஆப்ராம் பெட்ரோவிச் பிறந்த வருடம் 1781. அவர் பிறந்த இடம் எதுவென  ஆய்வாளர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்த சர்ச்சை அண்மையில் தான் தீர்க்கப் பட்டது. புஷ்கின் தனது நாவலில் "லகோன்" என்று குறிப்பிட்டார். அந்த இடம் சாட் ஏரிக்கு அருகில் உள்ளது. தற்போது கமெரூன் நாட்டுக்கு சொந்தமானது. இந்த தகவல் வெளிவந்த பின்னர், கமெரூன் நாட்டில், புஷ்கினும், கன்னிபலும் தேசிய நாயகர்களாக போற்றப் படுகின்றனர்.

கன்னிபல் சார் மன்னனின் அரசவையில் அதிகாரம் படைத்த இளவரசராக வீற்றிருந்தவர். அதனால் அவருக்கென்று ஒரு அரச இலச்சினை இருந்தது. அதில் யானையின் படமும், யானையின் முதுகுக்கு மேலே கிரீடமும் காணப் பட்டது. கன்னிபலின் பூர்வீகத்தை நினைவுபடுத்தும் இலச்சினை அது. கன்னிபல் ஒரு ஆப்பிரிக்க அரச வம்சத்தில் பிறந்த இளவரசர் ஆவார். அவரது முன்னோர்கள் ஆண்ட ஆப்பிரிக்க தேசம் எதுவென தெரியவில்லை. எத்தியோப்பியாவில் இருந்த தேசம் என்று கருதப் பட்டது. (ஏனெனில், அன்று எத்தியோப்பியா தான், ஐரோப்பாவுக்கு வெளியில் இருந்த ஒரேயொரு கிறிஸ்தவ நாடு.)

அந்நிய தேச மன்னர் ஒருவருக்கு, யானை ஒன்றில் அனுப்பப்பட்ட பரிசுப் பொதிகளுடன், சிறுவனாக இருந்த கன்னிபல் பயணம் செய்து கொண்டிருந்தார். இடையில் தொடரணியை வழிமறித்த அரேபியர்கள், பரிசுப் பொருட்களை கொள்ளையடித்து, பயணம் செய்தவர்களை சிறைப் பிடித்தார்கள். அப்போது ஏழு வயது சிறுவனாக இருந்த கன்னிபல், அரேபிய கொள்ளையர்களினால் அடிமையாக்கப் பட்டான். அரேபியர்கள் அந்த சிறுவனை, துருக்கி சுல்த்தானுக்கு பரிசளித்தார்கள். (அந்தக் காலத்தில், பெரியவர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதற்காக, பிள்ளைகளை துருக்கி சுல்த்தான் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கும் வழக்கம் இருந்தது.)

இஸ்தான்புல் நகரில் உள்ள சுல்த்தானின் அரண்மனையில் அடிமையாக வைத்திருந்த ஏழு வயதுச் சிறுவனை, ரஷ்ய தூதுவர் ஒருவர் கண்டார். அவர் அந்த அடிமைச் சிறுவனை வாங்கி, ரஷ்ய சக்கரவர்த்தி பீட்டருக்கு பரிசாக கொடுத்தார். ரஷ்ய சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய மாபெரும் பீட்டர் சக்கரவர்த்தி, ஆப்பிரிக்க சிறுவனின் புத்திக் கூர்மையை கண்டு வியந்தார். அவனை தனது வளர்ப்பு மகனாக தத்தெடுத்துக் கொண்டார்.

ரஷ்யப் பேரரசில், ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக மட்டும் கொண்டு வரப் படவில்லை. ஆப்பிரிக்க குழந்தைகளை, ரஷ்ய பிரபுக்கள் தத்தெடுக்கும் வழக்கம் ஏற்கனவே இருந்தது. அதனால், "ஒரு ஆப்பிரிக்க கருப்பன் ரஷ்ய இளவரசனாக தத்தெடுக்கப்பட்டமை, யார் கண்ணையும் உறுத்தவில்லை. சிறுவனான கன்னிபல், வளர்ப்புத் தந்தையான சக்கரவர்த்தியின் விருப்பத்திற்குரிய பிள்ளையானார். பீட்டர் சக்கரவர்த்தி, அவரை சிறுவயதிலேயே போர் முனைக்கு கொண்டு சென்றதனால், பிற்காலத்தில் சிறந்த இராணுவ நிபுணராக வந்தார். முன்னரங்க நிலைகளில், எண்கோண கணித முறைப்படி கோட்டைகள் கட்டுவது பற்றிய வரைபடங்கள், இன்றைக்கும் கன்னிபலின் நிபுணத்துவத்திற்கு சான்று பகர்கின்றன.

இன்று நமது நாட்டு மேட்டுக்குடியினர், வீட்டிலும் ஆங்கிலம் பேசி, அமெரிக்கா சென்று படித்து விட்டு வருவார்கள். அது போன்று, ரஷ்யப் பேரரசின் மேட்டுக் குடியினருக்கு, பிரான்ஸ் இருந்தது. அவர்கள் உயர்கல்வி கற்பதற்காக, பாரிஸ் சென்று படித்து விட்டு வருவார்கள். ரஷ்ய மேட்டுக்குடியினர், வீட்டிலும் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடுவார்கள். அது அன்று கௌரமாகக் கருதப் பட்டது. ஆதலினால், கன்னிபல் சில வருட காலம் பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்றார். கணிதம், விஞ்ஞானம், தத்துவ இயல், போன்ற பல பாடங்களில் திறமை பெற்று விளங்கினார். பிரெஞ்சு தத்துவஞானி வோல்தேயர் சம காலத்தவர் தான். வோல்தேயர் கன்னிபலின் நண்பனாக இருந்தவர். கன்னிபலின் புத்திக் கூர்மையை பாராட்டி எழுதி உள்ளார். வோல்தேயர், ஆப்பிரிக்கர்களை காலனிய அடிமைகளாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர. அவர் சந்தித்த கன்னிபல் என்ற அறிவாளி, ஒரு கறுப்பர் என்பது ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கும்.

வளர்ப்புத் தந்தையான மாபெரும் பீட்டரின் மரணத்தின் பின்னர், கன்னிபலின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. புதிய சார் மன்னனாக முடி சூட்டிக் கொண்ட இளவரசன் மென்ஷிகோவ், கன்னிபலின் பதவியை பறித்து, சைபீரியாவுக்கு நாடு கடத்தினார். ஆயினும், அன்று சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்காக இடையறாது யுத்தம் செய்து கொண்டிருந்த ரஷ்யாவில்,கன்னிபலின் இராணுவ நிபுணத்துவம் பெரிதும் தேவைப் பட்டது. அதற்காக மன்னித்து விடுதலை செய்யப் பட்டார்.

சில வருடங்களின் பின்னர், மறைந்த பீட்டரின் புதல்வி எலிசபெத் மகா ராணியானார். அவரது ஆணையின் பேரில், கன்னிபல் ரஷ்ய இராணுவத்தில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப் பட்டார். அத்துடன், தலினின் (இன்று எஸ்தோனியாவின் தலைநகரம்) நகரின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்தார். இன்றும் கன்னிபல் வாழ்ந்த அரண்மனையும், அவர் கைப்பட எழுதிய ஆவணங்களும் தலினின் நகரில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு: 
Gannibal, The Moor of Petersburg by Hugh Barnes

Friday, January 18, 2013

மாலியில் கேலிக்குள்ளான பிரான்ஸின் நவ காலனிய ஆக்கிரமிப்பு

மீண்டும் ஒரு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". பின்லாடனின் மரணத்தோடு, "அல்கைதா அழிந்து விட்டது" என்று பெரு மூச்சு விட்டவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி. மாலி என்ற ஆப்பிரிக்க நாட்டில், பிரான்சின் வான் படைகள் "அல்கைதாவுக்கு எதிராக போரிடுவதாக" அறிவித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் மாலியில் என்ன நடக்கின்றது? இது ஒரு நவ -காலனித்துவ ஆக்கிரமிப்பாகுமா? அல்லது பிரான்ஸ் கூற விரும்புவது போல, "அல்கைதாவுக்கு எதிரான போர்" ஆக கருதலாமா? 

வடக்கு மாலியில், துவாரக் இன மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தகவல்களுக்கு, நான் முன்னர் எழுதிய கட்டுரையை வாசிக்கவும்.(சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை) இம்முறை வடக்கு மாலியினை ஆக்கிரமிக்க விரும்பும் ஏகாதிபத்திய தலையீடு பற்றி ஆராய்வோம். உலகம் முழுவதும் தனி நாடு கோரிப் போராடும் இயக்கங்களும், அதன் ஆதரவாளர்களும் மாலியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது.  மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள், ஏற்கனவே தமது காலனிகளின் எல்லைகளை தமது நிர்வாக வசதிக்கேற்ப பிரித்துள்ளன. அவற்றை மாற்ற விரும்பும் சக்திகள் யாராக இருந்தாலும், ஐ.நா. தலைமையிலான ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்நோக்க வேண்டியிருக்கும். 

"இந்தியாவில் வாழும் தமிழர்களையும், இலங்கையில் வாழும் தமிழர்களையும், இடையிலே புகுந்த ஆங்கிலேயர்கள் இரண்டாக பிரித்து விட்டார்கள். ஈழத் தமிழர்களை சிங்களவன் கையிலும், தமிழ்நாட்டு தமிழர்களை ஹிந்திக்காரன் கையிலும் ஒப்படைத்து விட்டார்கள். அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்..." என்று பலர் அங்கலாய்ப்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள். மாலியில் வாழும் துவாரக் இன மக்களும் அதே மாதியான முறைப்பாடுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 1936 ம் ஆண்டு வரையில் கூட, பிரெஞ்சு காலனிகளான  மாலி, நைஜர், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள், ஒரே நாடாக இருந்ததை அந்தக் கால வரைபடத்தை பார்ப்பவர் புரிந்து கொள்ளலாம். (பார்க்க: 1936 ல் பிரெஞ்சுக் காலனிகளின் வரைபடம், http://upload.wikimedia.org/wikipedia/commons/3/38/AOFMap1936.jpg) பிரெஞ்சுக் காரர்கள் தமது நிர்வாக வசதி கருதி இன்றுள்ள எல்லைகளை பிரித்து விட்டார்கள். அன்றிலிருந்து, "இது இராமன் கிழித்த கோடு. இதை தாண்டினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்..." என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு மாலியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், தங்களை மாலியின் பிற இனங்களிடமிருந்து, வேறுபடுத்திக் காட்டிக் கொள்கின்றனர். நிறவேற்றுமை ஒரு முக்கிய அடையாளம். மாலியின் தெற்குப் பகுதியில் வாழும் இனங்கள், பிற ஆப்பிக்கர்களைப் போல கருப்பாக இருக்கையில், துவாரக் மக்கள் சிவப்பாக இருக்கின்றனர். அதனால் தாம் வெள்ளையர் என்ற எண்ணமும் அவர்களிடம் உண்டு. (இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் ஆரியர் வருகை போன்று, ஆப்பிரிக்காவில் வெள்ளையினத்தவரின் குடியேற்றங்கள் இடம்பெற்ற வரலாற்றையும் மறுப்பதற்கில்லை.) துவாரக் மக்கள், ஒரு பாரம்பரிய நாடோடிக் குழுமம் ஆகும். இஸ்லாம் பரவிய தொடக்க காலத்தில் இருந்தே அரேபியருடன் வாணிபம் செய்து வருவதால், இன்று பெருமளவு அரபி மொழி பேசுகின்றனர். ஆனால், அவர்களுக்கென்றொரு தனியான மொழி உள்ளது. ஒரு காலத்தில் அதற்கு தனியான எழுத்து வடிவமும் இருந்தது. (பார்க்க: Berber languages, http://en.wikipedia.org/wiki/Berber_languages)

ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர் கால் பதிப்பதற்கு முன்னர், அதாவது 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, சஹாரா பாலைவனத்திற்கு ஊடான சர்வதேச வர்த்தகம், துவாரக் வியாபாரிகளின் கைகளில் இருந்தது. அவர்கள் ஒட்டகங்களில் பொதிகளை ஏற்றிக் கொண்டு, சஹாரா பாலைவனத்திற்கு ஊடாக பயணம் செய்து வந்தனர். அதனால் சஹாரா பாலைவனத்தில் எல்லா இடங்களும் அவர்களுக்கு பரிச்சயமானவை. அந்தக் காலங்களில், தங்கம், யானைத் தந்தம், அடிமைகள் போன்ற சர்வதேச சந்தைக்கு பிரதானமான பண்டங்களை, ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு விநியோகம் செய்து வந்தனர். சஹாரா பிரதேசத்தை காலனிப் படுத்திய பிரான்ஸ், இன்றைய தேசங்களின் எல்லைகளை பிரித்தது. அதனால், துவாரக் இன மக்கள், அல்ஜீரியா, மொரிட்டானியா, மொரோக்கோ, மாலி ஆகிய நவீன தேசிய எல்லைகளினால் துண்டாடப் பட்டனர். "துவாரக் இன மக்கள் பல நாடுகளில் வாழ்ந்த போதிலும், அவர்களுக்கென்றொரு நாடில்லை," என்ற தேசியவாத இயக்கமும் அப்போது தான் ஆரம்பமாகியது. குறிப்பாக, வடக்கு மாலியில் வாழ்ந்த துவாரக் இன மக்கள், மாலி அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி ஒன்றை ஆரம்பித்தனர்.

இருபது வருடங்களுக்கு முன்னர், தொன்னூறுகளில் வெடித்த துவாரக் தேசிய எழுச்சி கொடூரமாக அடக்கப் பட்டது. அந்தப் பிரதேசத்தில் வாழும், வேற்றின மக்களின் உதவியோடு, மாலியின் தேசிய இராணுவம் ஒரு இனவழிப்பு போரை நடத்தியது. அப்போது நடந்த இனப்படுகொலைகளை, ஐ.நா., அல்லது சர்வதேச சமூகம் நீண்ட காலமாக புறக்கணித்து வந்தது. போரில் தோற்கடிக்கப்பட்ட துவாரக் விடுதலைப் போராளிகள், லிபியாவில் தஞ்சம் கோரினார்கள். லிபியாவில் அன்றிருந்த கடாபி அரசு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு நில்லாது, லிபிய இராணுவத்திலும் சேர்த்துக் கொண்டது. கடாபியினால் வளர்க்கப்பட்ட துவாரக் போராளிகள், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கொள்கைகளை கற்றுக்  கொண்டனர். லிபியாவில் கடாபியின் வீழ்ச்சியின் பின்னர், புதிய உத்வேகத்துடன் தமது தாயகம் திரும்பினார்கள். போகும் பொழுது, லிபிய இராணுவ முகாம்களில் இருந்த நவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். 

தமது தாயகத்தை வந்தடைந்த துவாரக் போராளிகள், அங்கிருந்த மாலி தேசிய இராணுவத்துடன் போரிட்டு வென்று, பல பிரதேசங்களை கைப்பற்றினார்கள். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், துவாரக் இன மக்களுக்கான "அசாவத்" என்ற தனி நாட்டை பிரகடனம் செய்தனர். ஆனால், உலக வரைபடத்தில் புதிதாக உதயமான நாட்டை சேர்த்துக் கொள்ள ஐ.நா. சபை முன்வரவில்லை. மாறாக, பிரிவினைவாதிகளை  ஒடுக்க விரும்பிய மாலி அரசுக்கு சார்பாக நடந்து கொண்டது. வல்லரசு நாடுகள் அந்த தனி நாட்டை அழிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது. உலகில் எந்த நாட்டிலும், குறிப்பிட்ட இனத்திற்கான தாயகம் அமைக்க விரும்பும் இயக்கம், தனது சொந்த பலத்தில் உரிமை கோரும் பிரதேசங்களை விடுதலை செய்தால், அவர்களுக்கும் இது தான் கதி, என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டது. ஏன் என்று கேட்டால், அது தான் நவ-காலனித்துவம். அதாவது ஐரோப்பிய காலனிய காலகட்டம், வரலாற்றில் இன்னும் முற்றுப் பெறவில்லை. அது வேறு வடிவில் தொடர்கின்றது. 

இது வரையும், முன் கதைச் சுருக்கத்தை பார்த்தோம். இனி, இன்றைய பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைக்கான காரணங்களை விரிவாக ஆராய்வோம்:

1. பிரான்ஸ் இதனை அல்கைதாவுக்கு எதிரான போர் என்று அறிவித்துள்ளது. உண்மையில் அங்கே அல்கைதா இருக்கின்றதா? 

அமெரிக்காவில் தாயாரிக்கப் பட்ட, பின்லாடன் நடித்த அல்கைதா என்ற சினிமாவுக்கும், மாலியில் இருப்பதாக கருதப்படும் அல்கைதாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. துவாரக் மக்கள் தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். அங்கு ஏற்கனவே சவூதி அரேபியாவின் பணத்தில் வளர்ந்த மத அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் ஆப்கானிய தாலிபான்களைப் போன்று நடந்து கொள்கின்றனர். சவூதி அரேபியாவில் இருப்பதைப் போல, கடும்போக்கு ஷரியா  சட்டத்தை அமுல் படுத்தி இருக்கின்றனர். திருட்டுக் குற்றத்திற்கு கை வெட்டுதல், கள்ள உறவு வைத்த குற்றத்திற்கு கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை நிறைவேற்றுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில், மாலி நாட்டு இசை உலகப்புகழ் பெற்றது. அப்படிப்பட்ட நாட்டில், இசை கேட்பதை தடை செய்துள்ளனர். மேலும் இஸ்லாமிய மத புனிதர்களுக்கு கட்டிய சமாதிகளை கூட விடாமல், புராதன சின்னங்களை உடைத்து நொறுக்கி உள்ளனர்.  

ஆரம்பத்தில் MNLA (பிரெஞ்சு மொழியில்:Mouvement National pour la Libération de l'Azawadhttp://en.wikipedia.org/wiki/National_Movement_for_the_Liberation_of_Azawad) என்ற மதச் சார்பற்ற இயக்கம் தான் தனி நாடு கேட்டு ஆயுதமேந்தி போராடியது. அது ஒரு தேசியவாத இயக்கமாக தொடங்கினாலும், காலப்போக்கில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. இதனால் மதச்சார்பற்ற தேசியவாதிகள் ஓரங்கட்டப் பட்டனர். அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற "அன்சார் தினே", இஸ்லாமியவாதத்தை இயக்க சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. முன்னொரு காலத்தில், அந்தப் பிரதேசத்தில் "இஸ்லாமிய மஹ்ரப் கோரும் அல்கைதா"  (AQMI) என்ற ஒன்று இயங்கியது. அவர்களில் சிலர், முன்பு ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக போராடிய அரேபியர்கள் என்பது உண்மை தான். இன்று அந்த இயக்கம் சிதைந்து, அன்சார் தினே யுடன் சேர்ந்து விட்டார்கள். இவற்றை விட இன்னும் இரண்டு சிறிய குழுக்கள் இயங்குகின்றன. 

2. வடக்கு மாலியில், அசாவத் என்ற தனி நாடு கிடைத்தவுடன் திருப்திப் படாது, மாலியின் பிற பகுதிகளையும் பிடிக்க வேண்டிய தேவை என்ன? 

வடக்கத்திய கிளர்ச்சியாளருக்கு எதிரான போரில், மாலி இராணுவம் வெல்ல முடியவில்லை. அதன் விளைவாக, தலைநகர் பமாக்கோ வில் ஒரு இராணுவ சதிப்புரட்சி நடந்தது. மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் இயலாமையை காரணம் காட்டி, இராணுவ அதிகாரிகள் அரசைப் பொறுப்பேற்றனர். இராணுவ ஆட்சியாளர்களின் தலைவர், அமெரிக்காவில் இராணுவ பயிற்சி பெற்ற, அமெரிக்க நலன்களுக்கு விசுவாசமான ஒருவர். இராணுவ ஆட்சி ஏற்பட்ட பின்னரும், போரில் வெற்றி கிட்டவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எதிர்பார்த்ததற்கு மாறாக, நிலைமை தலைகீழாக மாறியது. நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை உருவாகியதால், இராணுவத்திற்குள் ஒழுக்கம் சீர்குலைந்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிளர்ச்சிப் படையினர், ஆச்சரியப் படுமளவுக்கு விரைவாக பல இடங்களை கைப்பற்றினார்கள். சில நாட்களுக்குள், ஒவ்வொரு நகரமாக கிளர்ச்சிப் படையினரிடம் வீழ்ந்தன. 

மாலி நாட்டின் சனத்தொகையில் 90% மானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். ஆகவே, இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், "அசாவத்" என்ற தனி நாட்டின் எல்லைகளை தாண்டி, பிற பிரதேசங்களையும் கைப்பற்ற போரிட்டு வருகின்றன. இதனால், மாலி நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் செல்வாக்குட்பட்ட பிரதேசமாகியது. குறிப்பாக வடக்குக்கும், தெற்குக்கும் நடுவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொன்னா என்ற நகரத்தை கைப்பற்றியதுடன், பிரான்ஸ் களத்தில் இறங்கியது. முன்பு அமெரிக்கா அறிவித்ததைப் போல, "அல்கைதாவுக்கு எதிரான அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. பிரான்சுக்கு ஆதரவாக பெயர் குறிப்பிட விரும்பாத பிற ஐரோப்பிய நாடுகளும் தமது போர் விமானங்களை அனுப்பி வைத்தன. அமெரிக்கா ஆதரவு தெரிவித்த போதிலும், முழுப் பொறுப்பையும் பிரான்சிடம் விட்டு விட்டது. 

இதிலே வேடிக்கை என்னவென்றால், ஏற்கனவே மாலியின் தேசிய இராணுவத்திற்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி வழங்கப் பட்டிருந்தது. அன்று அமெரிக்கா, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" ஒரு கூட்டாளி நாட்டை தயார் படுத்துவதாக கூறியது. இன்று நடப்பதை வைத்துப் பார்த்தால், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போர் படுதோல்வியை தழுவியுள்ளது. வடக்கத்திய போராளிகளின் கை ஓங்கிக் கொண்டு வருகையில், மாலியின் தேசிய இராணுவத்தை சேர்ந்த வீரர்கள் பலர், இராணுவத்தை விட்டோடி போராளிகளுடன்  சேர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் சிறப்பு இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் பலர், அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள். குறைந்தது 1600 வீரர்கள், இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.  அதனால், இன்று மேற்கத்திய நாடுகள், தாம் வளர்த்து விட்ட பிள்ளைகளுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவும் பிரான்சும், பெரும் எதிர்பார்ப்புகளுடன் வழங்கிய ஆயுதங்கள், பயிற்சி, இராணுவ தந்திரோபாயங்கள் எல்லாம், இன்று அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகின்றன. 

3. பிரான்சின் படையெடுப்புக்கு பின்னணியில், அதன் நவ-காலனிய அபிலாஷைகள் உள்ளனவா?

நவ காலனியம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாவிட்டால், பிரான்சின் முன்னாள் காலனி ஒன்றை உதாரணத்திற்கு காட்டலாம். 19 ம் நூற்றாண்டின் காலனிய மேலாதிக்கம், 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை பிரான்ஸ் என்றைக்கும் மறைத்ததில்லை. பிரான்ஸ் தனது முன்னாள் ஆப்பிரிக்க காலனி நாடொன்றில் தலையிடுவது, இதுவே முதல் தடவை அல்ல. எந்தவொரு உள்நாட்டுப் பிரச்சினையும் இல்லாமல், அமைதியாக இருக்கும் முன்னாள் காலனி நாடுகளில் கூட பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப் பட்டுள்ளன. எங்காவது ஒரு நாட்டில், பிரான்சின் நலன்களுக்கு எதிரான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், அதனை கவிழ்ப்பதற்கு பின் நிற்பதில்லை. 

வடக்கு மாலியில், அதாவது கிளர்ச்சியாளர் வசம் உள்ள அசாவத் என்ற தனி நாட்டில், பெருமளவு யுரேனியம் காணப் படுகின்றது. மேலும் இன்னமும் அகழப் படாத எண்ணை வளமும் இருக்கின்றது. குறிப்பாக யுரேனியப் படிமங்கள் பற்றிய தகவல், பிரான்சுக்கு மிகவும் முக்கியமானது. பிரான்ஸ் நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் 70% மாகிலும், அணுசக்தி மூலம் உற்பத்தியாகின்றது. அதற்கான மூலப்பொருளான யுரேனியம் மாலியில் கிடைக்கின்றது என்றால் சும்மா விடுவார்களா? மாலியில் மட்டுமே அல்கைதா போன்ற இஸ்லாமிய தீவிரவாதம் தலை தூக்கியுள்ளதாக இருப்பதாக பசப்புவது உலகை ஏமாற்றுவதற்கு மட்டுமே. அந்தக் காரணம் உண்மையானால், சிரியாவில் அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கங்களை பிரான்ஸ் ஆதரிப்பது, முரண்நகையாக தோன்றவில்லையா? அங்கே ஆசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், கொடூரமான மதவாத சட்டங்கள் அமுல்படுத்தப் படுவதை அறியவில்லையா? சிரிய கிளர்ச்சிக் குழுக்களில், பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் இருப்பதைப் பற்றி எல்லாம் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளனவே? 

மாலியில் பிரான்சின் இராணுவ நடவடிக்கை, இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது தெரியாது. இன்னும் இரண்டு வாரங்களில் முடிந்து விடும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா புகுந்த கதையாகிப் போவதற்கு வாய்ப்புண்டு. அங்கே பத்தாண்டுகள் கடந்த பின்னரும் தாலிபான்களை அழிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாது, அயல் நாடான பாகிஸ்தானிலும் புதிதாக ஒரு தாலிபான் முளைத்தது. அந்த நிலைமை மாலியிலும் ஏற்படலாம். துவாரக் இன மக்கள், வடக்கு மாலியில் மட்டுமல்லாது, நைஜர், அல்ஜீரியா போன்ற அயல் நாடுகளிலும் உள்ளனர். தமிழகத் தமிழர்கள் ஈழப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்ததைப் போல, அயல் நாடுகளில் வாழும் துவாரக் மக்களும், மாலியின் அசாவத் என்ற தனி நாட்டுக்கான போராட்டத்தை ஆதரிக்கின்றனர். 

மாலி மீதான பிரான்சின் ஆக்கிரமிப்பு போருக்கு பதிலடியாக, அல்ஜீரியாவில் எரிவாயு தொழிலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப் பட்டமை, நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்த்துகின்றன. மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போல என்றொரு பழமொழி உண்டு. வடக்கு மாலியை பிரெஞ்சுப் படைகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாலும், சஹாரப் பாலைவனத்திற்குள் எலிகளைப் போன்று பதுங்கிக் கொள்ளும் போராளிகளைப் பிடிப்பது கடினமாக இருக்கலாம். சஹாரா பாலைவன மண்ணின் மைந்தர்களுக்கு, அங்கிருந்து கெரில்லாப் போரை நடத்துவது இலகுவாக இருக்கலாம். இறுதியாக ஒரு தகவல், அசாவத் என்ற வடக்கு மாலியின் நிலப்பரப்பு, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு சமமானது. 

மேலதிக தகவல்களுக்கு:
French Strikes in Mali Supplant Caution of U.S.
Mali: France’s Neo-Colonial War for Uranium?
France Sends Reinforcements to Confront Islamist Forces in Mali
Mali conflict: France has opened gates of hell, say rebels


**************************************

மாலி பற்றிய முன்னைய பதிவுகள்:
சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை


Monday, May 21, 2012

ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்!

உலகில் இரண்டு இனங்கள், முற்றாக அழித்தொழிக்கப் பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு கீழே உள்ள தாஸ்மானியா தீவில் வாழ்ந்த பழங்குடி இனம், ஆங்கிலேயரால் ஒருவர் விடாமல் இனவழிப்பு செய்யப் பட்டது. இது நடந்தது 19 ம் நூற்றாண்டில். அது ஒரு கருப்பினம். ஆனால், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களைக் கொண்ட, வெள்ளையினம் ஒன்றும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் இனவழிப்பு செய்யப் பட்டது. யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இன்னுமொரு அதிசயம் காத்திருக்கின்றது. அந்த வெள்ளையினம் ஆபிரிக்காவில் வாழ்ந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் பேசிய மொழி திராவிட குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.

காலனிய காலகட்ட வரலாற்றின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. 16 ம் நூற்றாண்டில், ஆபிரிக்க கண்டத்திற்கு அருகில் உள்ள தீவொன்றில் வாழ்ந்த தனித்துவமான இனம் ஒன்றும் முற்றாக அழிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், அதுவே "ஐரோப்பியரின் முதலாவது காலனியப் படையெடுப்பும், முதலாவது காலனிய இனப்படுகொலையும் ஆகும். அங்கிருந்து தான், அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களை காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரும் பயணம் தொடங்கியது. "கிரான் கனாரியா" என்று அழைக்கப்படும் அந்த தீவுக் கூட்டம், இன்று ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் மனத்தைக் கவர்ந்த உல்லாச விடுதிகளால் நிரம்பியுள்ளது. அங்கு உல்லாசமாக பொழுதைக் களிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த மண்ணில் நடந்த இனவழிப்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Tenerife, Fuerto Ventura , இந்தப் பெயர்களை அறிந்திராத இளந் தலைமுறையை சேர்ந்த ஐரோப்பியர்கள் மிகக் குறைவு. வெதுவெதுப்பான காலநிலை, வெள்ளை மணல் கடற்கரை, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவுகள். காதல் ஜோடிகள், இளம் தம்பதிகள் தேனிலவை இன்பமாக கழிப்பதற்கு அங்கே தான் அடிக்கடி செல்வார்கள். இன்று அந்த தீவுகள் ஸ்பெயினுக்கு சொந்தமானவை. ஆனால், ஸ்பெயின் பெருநிலப் பரப்பில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன! அதே நேரம், ஆப்பிரிக்க கண்டத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன. மொரோக்கோ கரையில் இருந்து, வெறும் நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே! அதன் பூகோள அமைவிடம் காரணமாக, ஸ்பெயின் ஆபிரிக்காவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோரி வருகின்றது. இன்று அந்த தீவின் சனத்தொகையில் பெரும் பகுதி, ஸ்பெயினில் இருந்து வந்து குடியேறியவர்களின் வம்சாவளியினர் ஆவர். ஸ்பெயின் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்திரா விட்டால், அதுவும் தென் ஆப்பிரிக்கா போன்று ஒரு "வெள்ளையர் குடியேறிய நாடாக" கணிக்கப் பட்டிருக்கும்.

15 ம் நூற்றாண்டில், அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடிக்க கிளம்பிய கொலம்பஸின் கப்பல்கள், முதலில் கிரான் கனாரியா தீவுகளுக்கு சென்று தான் பயணத்தை தொடர்ந்தன. அந்த தீவுகளுக்கு அருகில் ஓடும் கடல் நீரோட்டம், தென் அமெரிக்கா வரையில் கொண்டு சென்று விடும். அதற்கு முன்னரே, போர்த்துகீசிய அல்லது ஸ்பானிய மாலுமிகள், அந்த தீவை கண்டு பிடித்திருந்தனர். அப்போதிருந்தே, ஸ்பானிய குடியேற்றவாசிகள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வருகையின் போது, அந்த தீவுகள் வெறுமையாக இருக்கவில்லை. அங்கு "குவாஞ்சே" (Guanche) என்றழைக்கப்படும் இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த நூறாண்டுகள், பூர்வீக மக்களும், ஸ்பானிய குடியேற்றவாசிகளும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். ஆயுதபலம் மிக்க ஐரோப்பியர்கள், கண்ணில் பட்ட குவாஞ்சே மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். நூறாண்டுகளாக தொடர்ந்த இனவழிப்புப் போரின் இறுதியில், மோசமான தொற்று நோய் ஒன்று பரவியது. வெட்ட வெளியில் கொன்று போடப்பட்ட சடலங்களில் இருந்தே, அந்த நோய்கிருமிகள் தோன்றி இருக்க வேண்டும். 16 ம் நூற்றாண்டின் இறுதியில், அந்த தீவுகளில் ஒருவர் கூட மிஞ்சாமல், பூர்வகுடி மக்கள் முற்றாக துடைத்தழிக்கப் பட்டனர்.

கிரான் கனாரியாவின் பூர்வ குடிகள் பற்றிய தகவல்கள், மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. அதனால் இன்றளவும், அவர்களை "மர்மமான பழங்குடி இனம்" என்றே குறிப்பிடுகின்றனர். பெருமளவு தகவல்கள், ஸ்பானிய குடியேற்றவாசிகளிடம் இருந்தே கிடைக்கப் பெற்றாலும், ரோமர் காலத்தில் மொரிட்டானியாவை (அல்லது மொரோக்கோ) ஆட்சி செய்த மன்னன் ஜூபா, சில குறிப்புகளை எழுதியுள்ளான். அதிலும், அந்த தீவுகளின் அமைவிடம் பற்றியே குறிப்பிடப் படுகின்றது. பூர்வகுடிகளான குவாஞ்சே மக்கள், முன்பு ஆப்பிரிக்க பெருநிலத்தில் வாழ்ந்து வந்ததாகவும், ஜூபா மன்னனால் சிறைப் படுத்தப் பட்டு நாடு கடத்தப் பட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர். முன்பு வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடிகள், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக ஒடுக்கப் பட்டு, கிரான் கனாரியா தீவுகளுக்கு தப்பியோடி, அவற்றை தமது புகலிடமாக்கி இருப்பார்கள், என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கின்றது. எது எப்படி இருப்பினும், கிரான் கனாரியாவின் பூர்வீக மக்களுக்கும், ஆபிரிக்காவுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனை உறுதிப் படுத்தும் தரவுகளை பின்னர் பார்ப்போம்.

கிரான் கனாரியா பூர்வகுடி மக்கள், கற்கால மனிதர்களைப் போல குகைகளில் வாழ்ந்தார்கள். ஆனால், சில தீவுகளில் கற்களைக் கொண்டு வீடுகள் கட்டப் பட்டிருந்தன. அனேகமாக, எல்லா தீவுகளிலும் பரவலாக காணப்பட்ட விசாலமான குகைகள், வீடு கட்டி வாழ வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்க மாட்டாது. அந்த மக்கள் குகைகளில் வாழ்ந்தாலும், ஆட்டுத் தோல் உடுத்தினாலும், "நாகரீகம் அடைந்திருக்கவில்லை" என்று கூற முடியாது. குடிமக்களை ஆட்சி செய்ய அரசர்களும், சட்டவிதிகளும் இருந்துள்ளன. அரசர்களும் குகைகளில் தான் வாழ்ந்தனர். பொதுவுடமைப் பொருளாதாரம் நிலவியது. குவாஞ்சே மக்கள், சிறந்த போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். சுமார் பத்தடி நீளமான தடியொன்றை ஊன்றிய படி, மலைப் பாறைகளை தாண்டி பாய்வதில் வல்லவர்கள். குவாஞ்சே மக்கள், தமது இறந்த உறவினர்களின் உடல்களை, எகிப்திய 'மம்மி' போன்று பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவக் கலை அறிந்திருந்தனர். பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், ஏராளமான மம்மிகளை அழித்து விட்டனர். இருந்தாலும், இன்றைக்கும் சில அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. எகிப்தில் இருப்பதைப் போன்று, கனாரி தீவுகளிலும் "பிரமிட்" கட்டிடங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் அழியாமல் பேணிப் பாதுகாக்கப் படும், பிரமிட்களை கட்டியவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கின்றது.
குவாஞ்சே மக்கள், பல தீவுகளில் தனித்து வாழ்ந்தாலும், ஒரே மொழி பேசினார்கள். அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்பது ஒரு சிறப்பம்சம்! கிட்டத்தட்ட அதே மாதிரியான மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். எழுத்து கூட ஒற்றுமையைக் கொண்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வாழும், துவாரக் இன மக்கள், பெர்பர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்களது அமாசிக் மொழியும், எழுத்தும் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. (துவாரக் இனமக்களைப் பற்றி அறிவதற்கு, நான் முன்பு எழுதிய சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை என்ற கட்டுரையை வாசிக்கவும்.) இன்றைய மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியாவில் வாழும் "பெர்பர்கள்" என்ற இனம், ஒடுக்கப்படும் சிறுபான்மையினமாக உள்ளது. "பெர்பர்கள்" என்ற சொல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் சூட்டிய இழிவுப் பெயராகும். இன்று, அவர்கள் பேசும் மொழியின் பேரில், "அமாசிக்" இனம் என்று அழைக்கப் படுகின்றனர். அமாசிக் மொழிக்கும், அந்த பிராந்தியத்தில் பேசப்படும் அரபி மொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு சொல் கூட ஒற்றுமையில்லை! எழுத்து வடிவத்தில் கூட, ஆங்கிலமும், சீன மொழியும் போன்று, மிகப் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம், அமாசிக் மொழிக்கும், கிரான் கனாரியா பூர்வகுடிகளின் மொழிக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.

மொழியியல் அறிஞர்கள் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார்கள். கனாரி தீவுகளில் பேசப்பட்ட மொழிக்கும், திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டுகின்றனர். பல சொற்களுக்கு இடையில் ஒற்றுமை இருப்பது, ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. குவாஞ்சே மக்கள் பேசிய மொழியின் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது. அநேகமான சொற்கள், பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரரால், அவர்களின் உச்சரிப்புக்கேற்ப தொகுக்கப் பட்டன. பொதுவாகவே, ஐரோப்பிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல சொற்களின் ஒற்றுமை மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கின்றன. Ere (குவாஞ்சே) - ஏரி(தமிழ்), Atidamane (அரசி) - ஆதி அம்மன், Xerco (காலணி) - செருப்பு, Irrichen (தானியம்) - அரிசி.... இப்படிப் பல. (மேலதிக தகவல்களுக்கு: குவாஞ்சே மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள்) இந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, "முன் தோன்றிய மூத்த குடி தமிழினம்" என இனப் பெருமிதம் பேசுவது எமது அறியாமையைக் காட்டுகின்றது. மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். அது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஒரு மொழியானது பல்வேறு இனங்களுக்குள்ளும் பரவக் கூடியது.

வட ஆப்பிரிக்காவின் அமாசிக் மக்களுக்கும், கிரான் கனாரியாவின் குவாஞ்சே மக்களுக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமை, அவர்களது தோற்றம். இன்றைக்கும் அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியாவில் வாழும், அமாசிக் (பேர்பர்) மக்கள், ஐரோப்பிய வெள்ளயினத்தின் உடற்கூறுகளை கொண்டுள்ளனர்! வெள்ளயினத்திற்கே உரிய சிறப்பம்சம் என்று கருதப்படும், வெளுப்பான தோல் நிறம், நீலக் கண்கள், செந்நிறத் தலைமுடி, போன்ற உடற்கூறுகளை கொண்ட மக்களை நீங்கள் இன்றைக்கும் அங்கே பார்க்கலாம். கிரான் கனாரியா தீவுக் கூட்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி இனமும், வெள்ளையரைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை பிற்காலத்தில் வந்த ஸ்பானிய குடியேற்றவாசிகளும் குறித்து வைத்துள்ளனர். பெரும்பாலும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் கொண்ட ஆபிரிக்க கண்டத்தில், பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் வெள்ளையினம் எப்படித் தோன்றியது? இந்தக் கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. உலகில் இன்னமும் துலங்காத மர்மங்களில் அதுவும் ஒன்று.

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். மனிதர்களை கருப்பு, வெள்ளை என்று இனம் பிரித்துப் பார்க்கும் வழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. அண்ணளவாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு, தோல் நிறம் முக்கியமானதாகத் தெரியவில்லை. அதனால், "வெள்ளையர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? கருப்பர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?" என்றெல்லாம் அன்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. இயற்கை வளங்களுக்கான போட்டியே, மனித இன வரலாற்றில் முக்கியமானதாக இருந்துள்ளது. இனத் தூய்மை பற்றி பேசும் கடும்போக்காளர்கள் கூட, இறுதியில் பொருளாதாரத்தில் குறியாக இருப்பார்கள். வரலாறு அதனைத் தான் எமக்கு கற்பித்துள்ளது.

காலனித்துவ காலம் முழுவதும், வெள்ளையின நிறவெறியை நிலைநிறுத்த பாடுபட்ட காலனியாதிக்கவாதிகள், எதற்காக ஒரு வெள்ளயினத்தை பூண்டோடு அழித்தார்கள்? அது மட்டுமா? வட ஆப்பிரிக்காவில் இலட்சக் கணக்கில் வாழ்ந்த வெள்ளையின மக்களையும், காலனிய அடிமைகளாகத் தானே வைத்திருந்தார்கள்? அவர்களை "சகோதரர்களாக" நடத்தும் எண்ணம் ஏன் தோன்றவில்லை? பூமியில் அரிதாகக் கிடைக்கும் நிலம், உணவு போன்ற வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டி, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்கின்றது. "இனவுணர்வு","மொழியுணர்வு", "தேசிய உணர்வு", "மத உணர்வு"..... இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட குழுவின் பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக போடப்படும் திரைகள் ஆகும்.





Monday, April 02, 2012

சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை

உலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றன. ஆப்பிரிக்காவில், மாலி நாட்டில், அசாவாத் (Azawad ) என்ற தனி நாடு கோரும், துவாரக் இனத்தவர் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை? அவர்களது குறிக்கோள் என்ன? துவாரக் இனத்தவரின் பிரச்சினை என்ன? எதற்காக, சர்வதேச சமூகம் அவர்களை புறக்கணிக்கின்றது?

"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை." ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாக கருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள் மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும் கூட வித்தியாசமாக இருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், என்னோடு ஒரு மாலி நாட்டு அகதி தங்கியிருந்தார். "இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்று மாலி நாட்டில் இருப்பதாக," அவர் என்னைப் பார்த்து கூறினார். "ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம் கொண்ட மக்கள்" என்ற தகவல், அன்று எனக்கும் புதிதாக இருந்தது. அது குறித்து துருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியை சேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

ஆப்பிரிக்கா கண்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாட்டு எல்லைகளும், ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களால் கீறப் பட்டவை தான். ஆமாம், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசையில் வைத்து, அடிமட்டத்தால் அளந்து கோடு கீறப் பட்டவை தான், ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள். அந்த எல்லைகளுக்குள், ஒரே மொழி பேசும் மக்களின் வாழ்விடங்கள் துண்டாடப் பட்டன. வேற்றினத்தவர்களுடன் ஒன்று சேர்த்து வைக்கப் பட்டனர். அவ்வாறு தான், மாலியின் வடக்கே வாழும் துவாரக் இன மக்கள், தெற்கே வாழும் பம்பாரா இன மக்களுடன் சேர்த்து வைக்கப் பட்டனர். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக எல்லைக்குட்பட்ட அந்தப் பிரதேசம் தான் இன்றைய மாலி குடியரசு.

நாற்பதுக்கும் அதிகமான மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்தாலும், பம்பாரா மொழியை இரண்டாம் மொழியாக பேசக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால், காலனிய கால பிரெஞ்சு மொழி, படித்தவர்கள் மட்டத்தில் மட்டுமே பேசப் பட்டு வருகின்றது. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களில், 90 வீதமானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்கள். மாலி ஒரு காலத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அதன் தலைநகரான திம்புக்டுவில், ஆயிரம் ஆண்டு கால பழமையான பல்கலைக்கழகமும், நூலகமும் இன்றைக்கும் உள்ளன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில், எந்தவொரு நாட்டிலும், பல்கலைக்கழகமோ அல்லது நூலகமோ இருக்கவில்லை!

பண்டைய திம்புக்டு நகரம் அமைந்துள்ள, மாலியின் வட பகுதி தான், உள்நாட்டு யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், அந்தப் பிரதேசத்தில் அசாவாத் என்ற தனி நாடு அமைக்க விரும்புகின்றனர். அதே வட பிராந்தியத்தில் வாழும் சொங்கை என்ற இன மக்களுக்கும், துவாரக் இனத்தவர்களுக்கும் ஒத்துப் போகாது. சொங்கை என்பது தனியான மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் அல்ல. அவர்கள் பண்டைய சாம்ராஜ்யம் ஒன்றை ஆண்ட மக்கட் பிரிவினர்.

"ஆண்ட பரம்பரைக் கனவு" அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பிரிந்து செல்லும் தனி நாடொன்றில், "நாடோடிக் கூட்டமான" துவாரக் இனத்தவரால் ஆளப் படுவதை வெறுக்கின்றனர். இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஈழம் கோரும் தமிழர்களுக்கும், அதே பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றது அது. மாலி அரசும், துவாரக் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக, சொங்கை ஆயுதக் குழுக்களை பயன்படுத்தியது. தற்பொழுது மாலியில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அது போன்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

துவாரக் இனத்தவர்கள், தமக்கென தனியான கலாச்சாரங்களை கொண்டுள்ளனர். சுருக்கமாக அவர்களை பாலைவன மக்கள் என்று அழைக்கலாம். சஹாரா பாலைவனப் பிரதேசம் தான் அவர்களது வாழ்விடம். துவாரக் இன மக்கள் மாலியில் மட்டுமல்லாது, நைஜர், லிபியா, அல்ஜீரியா, மொரிட்டானியா, பூர்கினா பாசோ, ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆதி காலத்தில் இருந்தே, சஹாரா பாலைவனத்தின் ஊடான வர்த்தகம் தான் அவர்களது முக்கிய தொழில் என்பதால், அவர்கள் ஒரு நாடோடி சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒட்டகங்களில் பொதிகளை சுமந்த படி, பாலைவனத்தை ஊடறுத்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் துவாரக் மக்களை, இன்றைய வணிக கப்பல் போக்குவரத்து கம்பெனிகளோடு ஒப்பிடலாம். ஐரோப்பியரின் வருகையினால், பாலைவன வர்த்தகம் தடைப்பட்டது மட்டுமல்ல, நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்க வேண்டியேற்பட்டது. துவாரக் இனத்தவர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர் இனத்திற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களின் தோல் நிறம் கறுத்திருக்கும். பெர்பர்கள் பேசும் தமாஷிக் மொழியுடன், அரபியும் பேசுகின்றனர். அநேகமாக, அனைத்து துவாரக் மக்களும் இஸ்லாமிய மதத்தவர்கள்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், துவாரக் இனத்தவரின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. தீவிரமான அரபு தேசியவாதியாகவிருந்த கடாபி, பிற அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டாததால், அரபு தேசியத்தை கைவிட்டார். அதன் பிறகு ஆப்பிரிக்க தேசியத்தை கையில் எடுத்தார். அதிலும் கடாபி ஒரு இஸ்லாமியவாதியாகவும் இருந்ததால், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் விவகாரம் அவருக்கு உவப்பானதாக இருந்தது. மாலியில் அவாசாத் என்ற தனி நாடொன்றை உருவாக்கும் கனவை நனவாக்க காத்திருந்தவர்கள், கடாபியின் உதவியைப் பெற முடிந்தது. லிபியாவிலும் துவாரக் இன மக்கள் வாழ்ந்தததினால், இந்த தொடர்பு இலகுவாக ஏற்பட்டது.

லிபிய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய, ஆப்பிரிக்கர்களின் துணைப் படையிலும், துவாரக் போராளிகளே அதிகமாக காணப்பட்டனர். மாலியில் தொன்னூறுகளில் வெடித்த அசாவத் விடுதலைப் போரிலும், லிபியாவில் பயிற்சி பெற்ற துவாரக் போராளிகளே பங்குபற்றினார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை, அன்று கடாபி அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்களின் பின்னர், போராளிக் குழுக்களுக்கும், மாலி அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கும் லிபியா மத்தியஸ்தம் வகித்தது! இலங்கையில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய இந்தியா, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அனுசரணையாளராக செயற்பட்டமை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வீட்டுக்கு வீடு வாசற்படி இருந்தால், நாட்டுக்கு நாடு இருக்காதா?

மாலியில் மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்தத்திற்கும், லிபியாவில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. லிபியாவில் கடாபி இருக்கும் வரையில், துவாரக் போராளிகளுக்கு புகலிடம் கிடைத்து வந்தது. கடாபிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்த லிபியர்கள், (கறுப்பின) ஆப்பிக்கர்களை வெறுக்கும் இனவெறியர்கள். இதனால், துவாரக் போராளிகள், கடாபியின் இராணுவத்துடன் சேர்ந்து போரிடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. நேட்டோ விமானக் குண்டுவீச்சின் பின்னர், கடாபியின் இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில், லிபியாவில் தங்கியிருந்த துவாரக் போராளிகள், தமது தாயகமான மாலிக்கு திரும்பினார்கள். அவர்கள் போகும் பொழுது, வெறுங் கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. லிபிய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளை கொள்ளையடித்து, நவீன ஆயுதங்களை திரட்டிக் கொண்டு ஓடினார்கள். போகும் வழியில், அதிர்ஷ்டம் ஆகாயத்தில் இருந்து விழுந்தது! லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நேட்டோ விமானங்கள் ஆயுதங்களை பாரசூட் மூலம் போட்டனர். இவ்வாறு போடப்பட்ட நேட்டோ ஆயுதங்களில் சில துவாரக் போராளிகளின் வசம் சிக்கின. அவர்கள் அதையும் சேகரித்துக் கொண்டு, மாலியில் குவித்து வைத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கவோ நகர இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பல்குழல் எறிகணைகளை ஏவும் பீரங்கிகள் பாவிக்கப் பட்டுள்ளன. நவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிய துவாரக் போராளிகளின் தாக்குதகளை சமாளிக்க முடியாத மாலி இராணுவம் நிலைகுலைந்தது. ஏற்கனவே, கிடால் மாகாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துவாரக் இனத்தவர் தனி நாடு கோரும் அவாசாத் மாநிலத்தில், அரைவாசிப் பகுதி அவர்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கிறது. இனி, திம்புக்டு மாகாணம் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. அதையும் கைப்பற்றி விட்டால், வட பிராந்தியம், மாலியுடன் துண்டிக்கப் பட்டு விடும்.

துவாரக் விடுதலை இயக்கங்களுடன், இஸ்லாமியவாத இயக்கங்களும் சேர்ந்து போரிடுகின்றன. இதனால், சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தனி நாடு, சர்வதேச இஸ்லாமியவாத சக்திகளுக்கு தளமாக அமையலாம் என்று மேற்குலகம் அஞ்சுகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் தலையீடானது, மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியவாத சக்திகளை ஊக்குவித்தது போன்று தான் இங்கேயும் நடக்கின்றது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட பின்னர், கடாபியின் ஆவி வட ஆப்பிரிக்காவை அச்சுறுத்துகின்றது. ஏற்கனவே துவாரக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர், நைஜீரியா போன்ற நாடுகளிலும் ஆயுத வன்முறை ஆங்காங்கே தலைகாட்டி வருகின்றது.

மாலியில் இராணுவத்தில் ஒரு பிரிவினர் சதிப்புரட்சி செய்து, மாலியின் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனாதிபதி அமடு துமானி துரே, பிரிவினைவாத இயக்கத்தை அடக்க முடியவில்லை என்று காரணம் காட்டியே சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது. இதனை அவர்கள் "அன்னையர் எழுச்சி"யின் விளைவு என்றும் கூறுகின்றனர். அதாவது, போதுமான அளவு பயிற்சியற்ற மாலி இராணுவ வீரர்கள், வடக்கே சென்று சவப் பெட்டிகளில் திரும்பி வருகின்றனர். நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இராணுவ தரப்பிலான இழப்புகளினால், தென் மாலி மக்களின் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்தது. தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பிய தாய்மார், தலைநகர் பமாகொவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராணுவத்திற்குள் இருந்த கடும்போக்காளர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர். சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கும் கேப்டன் அமடு சனக்கோ, அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாமல் உள்ளது. எனினும், இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரே, கவோ நகரம் துவாரக் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப் பட்டது. இதனால், மாலி இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களால் அசாவாத் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியுமா, எனது கேள்விக்குறி தான். நிலைமை மோசமடைந்தால், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக பிரான்சின், நேரடித் தலையீடு இடம்பெறலாம். கடாபி இறந்த பின்னரும், கடாபியின் ஆவி வந்து தொல்லை கொடுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?
************************************************


மேலதிக தகவல்களுக்கு:
அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையும் (பிரெஞ்சு மொழி) சில வீடியோக்களும்
Tuareg rebellion (2007–2009)
Tuareg people
Libya Spillover Leads to Mali Coup

Saturday, January 21, 2012

தமிழரின் பூர்வீகம் ஆப்பிரிக்கா! இந்துக்களின் பூர்வீகம் துருக்கிஸ்தான்!!

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்ற கட்டுரைத் தொடரில், இந்துக்கள் (ஆரியர்கள்) மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி இனத்தவர்கள் என்று பல விளக்கங்களுடன் எழுதி இருந்தேன். (இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!) அப்போது எனது கட்டுரைகளை நிராகரித்த நண்பர்கள், இந்த ஆவணப் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள், ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிவர்கள் என்பதையும், முன்னர் ஒரு தடவை ஆப்பிரிக்கா தொடர்பான கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். (ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்) தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டு மகிழும் தமிழினவாதிகள், எந்தவொரு ஆப்பிரிக்க மொழியுடனும் ஒப்பிட நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தமிழரின் ஆப்பிரிக்க தொடர்பை கண்டுகொள்ளாமல், "முன் தோன்றிய மூத்த குடி" என்று பெருமை பேசுவதால் பயனென்ன விளைந்திடப் போகின்றது? தமிழர்களின் ஆப்பிரிக்க பூர்வீகம் குறித்து ஆராய்வதற்கு, எந்தவொரு தமிழ் அறிஞரும் முன்வராதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த நிலைமை இனி வருங்காலத்தில் மாற வேண்டும். "நாம் தமிழ் பேசும் ஆப்பிரிக்க இனத்தவர்கள்" என்று பெருமையாக பேசிடும் காலம் வர வேண்டும்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது. சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.


இந்துக்களின் புனித நூலான ரிக்வேதம், அமிர்தம் என்று குறிப்பிடும் சோம பானம், இன்றும் ஆப்கானிஸ்தானில் கிடைக்கிறது! சோம பானம் தயாரிக்க பயன்படும் சோமா செடி, ஆப்கானிஸ்தானில் மட்டுமே வளர்கின்றது. வட இந்திய "இந்துக்களும்", ஆப்கானிய "முஸ்லிம்களும்" அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளன. மொழியல் ஆய்வின் பிரகாரம், சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களும், ஐரோப்பியரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படும் ஒரே மாதிரியான சொற்கள் அதனை நிரூபிக்கின்றன. உதாரணத்திற்கு, சமஸ்கிருதத்தில் குதிரையை குறிக்கும் "அஸ்வா" என்ற சொல், லிதுவேனியா மொழியிலும் ஒன்றாக உள்ளது.

துருக்மெனிஸ்தான், காரகோரம் பாலைவனத்தில் இந்து ஆரியர்களின் நாகரீகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மன்னரின் புதைகுழி பல தகவல்களை வழங்குகின்றது. இந்தியாவில், சிந்து வெளி நாகரிக காலத்தில் குதிரைகளின் பாவனை அறியப் படவில்லை. வந்தேறுகுடிகளான ஆரியராலேயே அவை அறிமுகப் படுத்தப் பட்டன. துருக்மேநிச்தானில் மன்னரின் புதைகுழியில் குதிரையின் எலும்புக்கூடும், ரிக் வேதம் விபரிப்பது போன்ற ரதங்களும் கண்டெடுக்கப் பட்டன. சோம பானம் தயாரிக்க பயன்படுத்தும் இடமும் அங்கே காணப்படுகின்றது. இந்தியாவின் இந்து ஆரியர்கள், துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து ஈரானை நோக்கி நகர்ந்துள்ளனர். அங்கிருந்து வட இந்தியாவில் குடியேறி உள்ளனர்.





தமிழர், இந்துக்களின் பூர்வீகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள்:
* ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்
* இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!

Tuesday, July 12, 2011

சோதனையை எதிர்நோக்கும் தெற்கு சூடான் விடுதலை



(புதிதாக சுதந்திரமடைந்த தெற்கு சூடான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கை)

9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய் கூட தமிழீழத்தில் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தெற்கு சூடான் சுதந்திர நாடாகிய போதிலும், அங்குள்ள வறுமை போன்ற பிரச்சினைகள் தீர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். கடன் வழங்கும் நாடுகளும், இந்த நிலைமையைப் பயன்படுத்தி தெற்கு சூடானை அடிமைப் படுத்த முனையலாம். சுதந்திரமடைந்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமையை இங்கு ஆராய்வோம்.

ஈழப்போர் போன்று தான், தெற்கு சூடான் போரும் நீண்ட காலம் (1983 - 2005 ) இழுபட்டது. சூடான் இராணுவமும், பிரிவினை கோரிய தென் சூடான் மக்கள் விடுதலைப் படையும் (SPLA ), பல்லாயிரம் மக்களின் உயிரிழப்புகளுக்கும், சொத்தழிவுக்கும் காரணகர்த்தாக்கள். சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். பெருமளவு இடம்பெயர்ந்தோர், சூடான் தலைநகரமான கார்ட்டூமில் தங்கிவிட, சிறு தொகை அகதிகள் அங்கிருந்து மேற்கு நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். இலங்கையிலும் இதே போன்ற நிலைமை காணப்பட்டதை, நான் இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. 2005 ம் ஆண்டு, இரண்டு பரம்பரை எதிரிகளும் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தையில் தீர்வு காண முன்வந்தார்கள். கார்ட்டூமின் "அரபு பேரினவாதி" பஷீரும், தெற்கு சூடானின் "தேசியத் தலைவர்" ஜோன் காரெங்கும் சந்தித்து சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அந்த ஒப்பந்தப்படி, 2011 ஜனவரி மாதம், தெற்கு சூடான் விடுதலை குறித்து சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

இலங்கையிலும் 2002 ம் ஆண்டு, சிங்கள அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. நோர்வே மத்தியஸ்தத்துடன் சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால், தெற்கு சூடான் சுதந்திரத்திற்கு வழிவகுத்த திருப்புமுனையான நிகழ்வை தமிழ்த் தேசியவாதிகள் புறக்கணிக்கின்றனர். இலங்கை, சூடான் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மேலைத்தேய மத்தியஸ்தம் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. ஆனால், சூடானில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டது. ஆனால் இது போன்றதொரு கோரிக்கையை, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகள் ஏனோ முன்வைக்கவில்லை. அத்தகைய கோரிக்கையை சிறிலங்கா அரசோ, அல்லது சர்வதேசமோ ஏற்றிருக்குமா என்பது வேறு விடயம். மத்தியஸ்தம் வகித்த நோர்வே கூட ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு காணுமாறு வலியுறுத்தி வந்தது. இருப்பினும், பேச்சுவார்த்தையின் முடிவில் சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டது என்பதையும், அதன் பெறுபேறாகக் கிடைத்த சர்வசன வாக்கெடுப்பு, தெற்கு சூடானின் சுதந்திரத்திற்கு வழி சமைத்தது என்பதை மறந்து விடலாகாது.

ஜனவரி 2011 ல் இடம்பெற்ற சர்வசன வாக்கெடுப்பில், 98 .3 சதவீத மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொறுப்பில், அமைதியாக அந்தத் தேர்தல் நடைபெற்றது. தெற்கு சூடான் விடுதலைக்காக போராடிய SPLA தான், புதிய தேசத்தின் அரசுப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. SPLA என்பது இராணுவப் பிரிவின் பெயர். SPLM என்பது கட்சியின் பெயர். கட்சிக்கும், இராணுவத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகக்குறைவு. அது போலத்தான், தெற்கு சூடான் அரசு முழுவதையும் SPLM உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தெற்கு சூடானின் தேசியத் தலைவர் ஜோன் காரெங் எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். தற்போது முன்னாள் தலைவரின் வலதுகரமான Salva Kiir தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். 2005 ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்த நாளில் இருந்து, தெற்கு சூடானில் SPLM ஆட்சி தான் நடந்து வருகிறது. பிற அரசியல் அமைப்புகள் SPLM ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கி விட்டன. புதிய தேசம் உதயமான அடுத்த நாள் பலரை ஆச்சரியப்பட வைத்த மாற்றம் ஒன்று இடம்பெற்றது. கார்ட்டூமில் ஆளும் கட்சியான, பஷீரின் "சூடான் தேசிய காங்கிரஸ்", தெற்கு சூடான் பாராளுமன்றத்திலும் ஒரு ஆசனத்தை வைத்திருக்கிறது. பெரும்பாலும் தெற்கு சூடானை சேர்ந்தவர்களே அங்கம் வகிக்கும் கட்சியின் மாநிலப் பிரிவு கார்ட்டூமுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டு SPLM முடன் சேர்ந்துள்ளது.

புதிய தேசத்தின் பதவிகள் யாவும் SPLM செல்வாக்கு உள்ளவர்களுக்கே வழங்கப் படுகின்றது. சுதந்திர தேசத்தில் வாய்ப்புக் கிடைக்கும், என்று நம்பியிருந்த புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தெற்கு சூடானில் முப்பது வருடங்கள் இடையறாது யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை, அகதிகளாக புலம்பெயர்ந்த பலர் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூடானின் தலைநகர் கார்ட்டூமில் வாழ்ந்தவர்கள் பெருமளவில் திரும்பி வருகின்றனர். அவர்களில் பலர் தாயகத்தை கண்டிராத இளந்தலைமுறையை சேர்ந்தவர்கள். முப்பதாண்டு கால யுத்தம் ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது. புலம்பெயர்ந்த தெற்கு சூடானியர்கள் எதிர்காலம் குறித்த கனாக்களுடன் திரும்பி வந்தாலும், தாயகத்தில் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. "புலம்பெயர்ந்தவர்கள் அரபு பேரினவாதிகளுடன் ஒத்துழைத்த துரோகிகள்" என்று கூறுகின்றனர். கார்ட்டூமில் SPLA யின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கிய விசுவாசிகளுக்கும், அது தான் நிலைமை. "எமது தாயகத்தை விட்டோடியவர்கள் துரோகிகள்" என்று SPLM தெற்கு சூடானில் பிரச்சாரம் செய்து வந்ததை மறுக்க முடியாது. (மறுபக்கம் புலம்பெயர்ந்தோர் அனுப்பிய நிதியில் இயக்கம் வளர்ந்தது.) இருப்பினும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அந்த நிலைமைக்கு காரணம். தெற்கு சூடான் அபிவிருத்தியால் பின்தங்கிய பகுதி. அங்கே தொழில் வாய்ப்புக் குறைவு காரணமாக ஏழ்மை நிலைமையில் இருந்து மீள்வது கடினம். அதற்கு மாறாக, கார்ட்டூமில் குடியேறியோர் தொழிற்துறை வளர்ச்சியடைந்த நகரத்தின் பலாபலன்களைப் பெற்றுக் கொண்டவர்கள். கடின உழைப்பால் வசதியான வாழ்வைப் பெற்றுக் கொண்டவர்கள். இந்த பொருளாதார வேறுபாடு, தெற்கு சூடானில் சமூகப் பிரச்சினையாக பரிணமித்துள்ளது.

கடந்த காலங்களில், புலம்பெயர்ந்தோர் மத்தியில் SPLM மின் பரப்புரைகள் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருந்தன. "தெற்கு சூடான் விடுதலை கிடைத்து விட்டால் போதும், நாடு சுபீட்சமடையும். சுதந்திரமடைந்த பின்னர், வறுமையும், சமுதாய வேற்றுமைகளும் மறைந்து விடும்." என்று பிரச்சாரம் செய்து புலம்பெயர்ந்தோர் ஆதரவைத் திரட்டினார்கள். "விடுதலையடைந்த தெற்கு சூடானில் பாலும், தேனும் ஆறாக ஓடும்," என்று சொல்லாத குறை. புலம்பெயர்ந்த மண்ணில் தெற்கு சூடான் தேசியத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள், தாயகம் திரும்பிய பின்னர் உண்மையை உணருகின்றனர். "இங்குள்ள குழந்தைகள் வாய்க்காலில் ஓடும் அசுத்த நீரை பருகுவதைக் கண்டேன். வறுமை காரணமாக வெறும் உப்புக்கட்டியைக் கூட ஆகாரமாக உண்கின்றனர். எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கலங்கி நிற்கிறேன்..." இவ்வாறு கூறினார், கார்ட்டூமில் கணித ஆசிரியராக பணியாற்றிய ஒருவர். தெற்கு சூடானின் தலைநகரமாக மாறியுள்ள "ஜூபா"(Juba) வின் சனத்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளது. நகரத்தில் குடியேறும் புதியவர்கள், காட்டுப்புறமாக உள்ள Güdel என்ற இடத்தில் வசிக்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வறண்ட பிரதேசம் அது. "குடிநீர்க் குழாய் ஒன்று கூட இல்லை. பவுசரில் எடுத்து வரும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்." என்று அங்கலாய்த்தனர் புதிய நகர்வாசிகள்.

தெற்கு சூடான், சுதந்திரமடைந்த பின்னரும், வடக்கு சூடானில் தங்கியிருக்க வேண்டும். குறிப்பாக அதிக வருமானத்தை ஈட்டித் தரப் போகும் எண்ணை ஏற்றுமதிக்கு வடக்கு சூடானின் ஒத்துழைப்பு அவசியம். ஏற்றுமதிக்கு தேவையான குழாய்ப் பாதைகளும், துறைமுகங்களும் வடக்கு சூடானில் அமைந்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான பங்கு, வடக்கு சூடானுக்கு கிடைக்கும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்படும். இத்தகைய காரணங்களால் தான்,கார்ட்டூம் அரசு தெற்கு சூடான் பிரிவினைக்கு சம்மதித்தது. எரிபொருள் விநியோகத்தை பொறுப்பேற்ற சீனா, வடக்கு சூடான் அரசுடனும், தெற்கு சூடான் அரசுடனும் புதிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில், சீனா வடக்கு சூடான் அரசுக்கு ஆயுத விநியோகம் செய்துள்ளமை அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும், மேலைத்தேய ஆதரவு கிட்டுமென்பதற்காக, SPLM ஒருபோதும் சீன எதிர்ப்பு பிரச்சாரம் செய்யவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி ஆதரவு இருந்த போதிலும், சுதந்திர தெற்கு சூடான் சீனாவை நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை SPLM அரசு உணர்ந்திருந்தது. இனி வரும் காலங்களிலும், தெற்கு சூடான் எண்ணையை சீனாவே வாங்கப் போகின்றது. சந்தையில் எண்ணை விலை நிர்ணயிப்பதன் மூலமும், வட்டிக்கு கடன் வழங்குவதன் மூலமும் தான், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் இலாபம் சம்பாதிக்கப் போகின்றன. தெற்கு சூடானை நிரந்தர கடனாளியாக்குவதன் மூலம், தமது காலனியாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.

தெற்கு சூடான் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.
தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்
2. சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்