Showing posts with label மெக்சிகோ. Show all posts
Showing posts with label மெக்சிகோ. Show all posts

Tuesday, February 24, 2015

சேகுவேராவின் சர்ச்சைக்குரிய பேரன் மெக்சிகோவில் காலமானார்

உலகப் புகழ் பெற்ற புரட்சியாளர் சேகுவேராவின் பேரன்,  "கானக் சஞ்செஸ் குவேரா" (Canek Sanchez Guevara), மெக்சிகோவில் காலமானார். 21 ஜனவரி அன்று,மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, அறுவைச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

 காலஞ் சென்ற கானக் சஞ்செஸ், சேகுவேராவின் புதல்வியான ஹில்டித்தாவின் மகனாவார். அவரது தந்தை அல்பேர்ட்டோ சஞ்செஸ் ஒரு மெக்சிகோ இடதுசாரி ஆவார். 1974 ம் ஆண்டு, கியூபாவில் பிறந்த கானஸ் சஞ்செஸ், இளம் பராயத்தில் தாய், தந்தையருடன் கியூபாவிலும், ஸ்பெயினிலும் வளர்ந்து வந்தார்.

பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கானக் சஞ்செஸ் குவேரா தனது தாத்தாவை மாதிரி ஒரு கம்யூனிஸ்டாக அல்லாமல், ஓர் அனார்க்கிஸ்டாக வாழ்ந்தார். ஐரோப்பிய அராஜகவாதிகள் மாதிரி Punk கலாச்சாரத்துடன் சிகையலங்காரம் செய்து கொண்டிருந்தார். இசையில் நாட்டம் கொண்டவராக ஒரு Heavy metal இசைக்குழுவை நடத்தி வந்தார். இவரது தன்னிச்சையாக திரியும் போக்கு, கியூப சமூகத்திற்கு ஒத்து வரவில்லை. பல தடவை, தனிப்பட்ட முறையில் பொலிஸ் சோதனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

ஸ்பெயினில் இருந்து கியூபா திரும்பிச் சென்ற சமயம், அரசு அவருக்கு இராணுவத்தில் தலைமை அதிகாரிப் பதவி ஒன்றை வழங்க முன் வந்தது. ஆனால், கியூப அரசுடன் முரண்பட்ட கானக் சஞ்செஸ் குவேரா, கியூபாவை விட்டு வெளியேறி, மெக்சிகோவில் குடியேறினார். 1996 ம் ஆண்டு, தனது 22 வது வயதில், பல நெருக்குதல்கள் காரணமாக வெளியேறியுள்ளார்.

கானக் சஞ்செஸ் குவேரா, கியூபாவில் வாழ்ந்த காலங்களில் காஸ்ட்ரோ அரசை விமர்சித்த இடதுசாரிகளில் ஒருவராக விளங்கினார். சேகுவேராவின் பேரன் என்பதால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு எதிர்பார்த்ததும் முக்கியமான காரணம். அதனால், தனது தனித் தன்மை பாதிக்கப் படுவதாக உணர்ந்தார். 

காஸ்ட்ரோ அரசுக்கு எதிரான, கானக் சஞ்செஸ் தெரிவித்த கடுமையான விமர்சனங்கள் யாவும் அவரது அனார்க்கிஸ்ட் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. "காஸ்ட்ரோ அரசானது கிறிஸ்தவ மீட்பரின் அரசாட்சி போன்று நடந்து கொள்கிறது. ஒரு சோஷலிச ஆளும் வர்க்கத்தை கொண்ட அரசு இயந்திரம், மக்களை நசுக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருப்பதாக..." என்று குறிப்பிட்டுள்ளார்.

கானக் சஞ்செஸ், தனது பார்வையில், "கியூப அரசு (மக்கள்) ஜனநாயகத் தன்மை கொண்டதோ அல்லது கம்யூனிசத் தன்மை கொண்டதோ அல்ல" என்று விமர்சித்துள்ளார். சோஷலிசம், கம்யூனிசம், அனார்க்கிசம் போன்ற கோட்பாடுகளை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு, இத்தகைய விமர்சனங்கள் புதிதல்ல. அனார்க்கிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச சமுதாயம் அமைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இருப்பினும், அனார்க்கிஸ்டுகள் அது நேரடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். கம்யூனிஸ்டுகள் அதற்கு முதலில் ஒரு சோஷலிச அரசு அமைக்க வேண்டும் என்கின்றனர். சோஷலிச அரசானது, வழமையான அடக்குமுறை இயந்திரமாகவே இருக்கும் என்றும், அது காலப்போக்கில் கம்யூனிச சமுதாயம் உருவாகும் முன்னர் வாடி உலர்ந்து விடும் என்றும் லெனின் கூறியுள்ளார்.

மெக்சிகோவில் வாழ்ந்த கானக் சஞ்செஸ், அங்கிருந்த அனார்க்கிஸ்ட் குழுக்களுடன் சேர்ந்து இயங்கினார். ஒரு எழுத்தாளராக, இசைக் கலைஞராக, புகைப்படப் பிடிப்பாளராக வாழ்ந்த கானக் சஞ்செஸ் சாகும் பொழுது அவரது வயது 40 மட்டுமே.

Friday, December 28, 2012

21.12.12, சமதர்ம உலகின் தொடக்கம்! மெக்சிகோவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

"மாயன்களின் உலக அழிவு தினமான" 21 டிசம்பர் 2012 அன்று, மெக்சிகோ, சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 டிசம்பர், மாயன்களின் கலண்டரில், பக்தூன் எனப்படும், 5.125 வருடங்களைக் கொண்ட ஒரு யுகத்தின் முடிவாகும். அன்றைய தினம் புது யுகம் ஒன்று ஆரம்பமாகின்றது. தற்பொழுது மலர்ந்துள்ள புது யுகத்தில், உலகம் முழுவதும் சமதர்ம சமுதாயம் உருவாகும் என்பதை குறிக்கும் முகமாக அந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒழுங்கு படுத்தப் பட்டது. "21.12.12 அன்று, உலகம் அழிந்து விடும்" என்று பிதற்றிக் கொண்டிருந்த பைத்தியங்களைப் பற்றி எல்லாம் முதன்மையான செய்திகளாக தெரிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், மெக்சிகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்தன.

சியாப்பாஸ் மாநிலத்தில் வாழும் பூர்வகுடி செவ்விந்தியர்கள், "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) என்ற மார்க்சிய-லெனினிச அமைப்பின் அழைப்பை ஏற்று பெருமளவில் கலந்து கொண்டனர். சுமார் நாற்பதாயிரம் பேர், இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள். எல்லோரும் தமது முகத்தை மூடும், கருப்புநிற குல்லாய் அணிந்திருந்தனர். அந்தக் குல்லாயில் பொறிக்கப்பட்ட இலக்கமானது, அவர்கள் எந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பதைக் குறித்தது. சியாப்பாஸ் மாநிலத்தில் பல பகுதிகள், இன்றைக்கும் EZLN கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.

21.12.12  மெக்சிகோவில் நடந்துள்ள ஆர்ப்பாட்டமானது,  பூர்வீக மக்களின் உரிமைப் போராட்டத்தை மட்டும் எதிரொலிக்கவில்லை. மார்க்சிய- லெனினிசம் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரேயொரு சித்தாந்தம் என்பதையும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகள் வீழ்ந்து கொண்டிருந்த தொன்னூறுகளில், மெக்சிகோவில் ஒரு மார்க்சிய-லெனினிச இயக்கம் தோன்றியது என்று சொன்னால் பலருக்கு நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த இயக்கம், கடந்த இரு தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நம்புவதற்கு இன்னும் கஷ்டமாக இருக்கும். சில நேரம், கற்பனையை விட உண்மை அதிசயமாக இருக்கும். 

மேலதிக விபரங்களுக்கு, இந்த இணையத் தளத்தை பார்க்கவும்:
EL GRITO SILENCIOSO DE 40 MIL ZAPATISTAS 

மெக்சிகோவில் பூர்வீக செவ்விந்திய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சியாப்பாஸ் மாநிலத்தில்,  "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) கெரில்லா இயக்கம், ஒரு சில நாட்களுக்குள், பல நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 1 ஜனவரி 1994 ம் ஆண்டு, சுமார் 3000 போராளிகள், அந்த தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தனர். Ocosingo, Las Margaritas, Huixtán, Oxchuc, Rancho Nuevo, Altamirano, Chanal ஆகிய நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அரச அலுவலகங்களும், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் நிர்மூலமாக்கப் பட்டன. சிறைகள் உடைக்கப் பட்டு, கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். அரசு அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால் கிராமப் புறங்களில் கணிசமான பல பகுதிகள் EZLN கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பிற்காலத்தில், அரச படைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய போதிலும், காடுகளும், மலைகளும் சேர்ந்த பகுதிகளில், இன்றைக்கும் EZLN நடமாட்டம் காணப் படுகின்றது.

மெக்சிகோவில் தலைமறைவாக இயங்கும், "Zapatista Army of National Liberation" புரட்சிகர அமைப்பின் தளபதி மார்கோஸ், ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கை:
 

நீங்கள் அதைக் கேட்டீர்களா? 
அது அவர்களுடைய உலகம் நொறுங்கி விழுவதன் சத்தம் 
எமது புது உலகம் எழுகின்றது 
பகல் என்றிருந்த நாள், இரவாக இருந்தது 
இரவு பகலாக மாறும், அதுவே நாளாகும். 
ஜனநாயகம்! 
சுதந்திரம்! 
நீதி! 

Communiqué of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the Zapatista Army of National Liberation. Mexico. 

 21 December 2012 

To whom it may concern 

 DID YOU HEAR? 
 It is the sound of their world collapsing. 
 It is that of ours rising anew. 
The day that was the day, used to be night. 
And night will be the day, that will be the day. 
Democracy! Freedom! Justice! 

From the Mountains of the Mexican Southeast. 

On behalf of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the EZLN Subcomandante Insurgente Marcos 
Mexico, 
December 2012

Wednesday, January 18, 2012

அமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப் புயல்

(மெக்சிகோ, பகுதி : 3 )

கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் "ஹிஸ்பானியர்கள்" என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மெக்சிகோவின் மாநிலங்களை சேர்ந்தோரே அவ்வாறு அழைக்கப் பாடலாயினர். தற்போது அந்தச் சொல், லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகளையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றது. அமெரிக்க-மெக்சிகோ போரின் விளைவாக, லட்சக்கணக்கான மெக்சிக்கர்கள் ஒரே இரவில் அமெரிக்கர்களாக மாறி விட்டனர். போருக்குப் பின்னர், நியூ மெக்சிகோ, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் குடியேற்றம் அதிகரித்தது. ஆக்கிரமிக்கப் பட்ட மாநிலங்களின் அரசியல், பொருளாதார மையங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களுக்கு முன்னர் அங்கேயே வாழ்ந்து வந்த மெக்சிக்கர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளானார்கள். ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் விவசாயக் கூலிகளாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பொதுவாக எல்லாவிடங்களிலும் மெக்சிக்க தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் பட்டது.

மெக்சிகோ சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்கு, மொழி தடைக்கல்லாக இருந்தது. இதனால் இரண்டாவது தலைமுறை ஆங்கில மொழிப் புலமை பெற வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி அமெரிக்க பிரஜையாவதை ஊக்குவிக்கும் அமைப்புகளும் தோன்றின. இவ்வாறான பின்னணியைக் கொண்ட பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், இரண்டுங் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களால் அமெரிக்க மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்க முடியவில்லை. அதே நேரம், மெக்சிகோ வேர்களும் அந்நியமாகத் தெரிந்தன. இரண்டு கலாச்சாரங்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த இளந்தலைமுறை, தனக்கென தனியான அடையாளம் தேடத் தொடங்கியது. கல்வி நிறைவடையாமலே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுதல். பெற்றோரின் "இழிந்த தொழிலை" செய்வதற்கு மனம் ஒப்பாமை. குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம். இன்னோரன்ன காரணங்களால் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த மெக்சிக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில், தொள தொள கோட்டும், காற்சட்டையும் மெக்சிக்க இளம் சமுதாயம் மத்தியில் நாகரீகமாகவிருந்தது. அதனால் அமெரிக்க போலிஸ், அவ்வாறான உடை அணிந்த இளைஞர்களை கைது செய்யத் தொடங்கியது. இன்று ஒரு நாட்டில், "இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், மனித உரிமைகளை மீறும் முரட்டு நாடு" என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறிய வேளை, மெக்சிக்கர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியிருந்தனர். அதனால், சகோதர லத்தீன் அமெரிக்க குடியேறிகளை தாழ்வாகப் பார்க்கத் தொடங்கினர். ஒரே மொழியான ஸ்பானிஷ், அவர்களை ஒன்றிணைக்கவில்லை. நகரங்களில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனியான பகுதிகள் உருவாகின. இன்றும் கூட, அந்த சமூகங்கள் ஒன்றை மற்றொன்று வெறுக்கும் நிலைமை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு, கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியதால், அமெரிக்க அரசின் கவனம் முழுவதும் கியூப குடியேறிகள் மீது குவிந்திருந்தது. இதனால் கொதித்தெழுந்த மெக்சிக்கர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். "உலகில் உள்ள இனங்கள் எல்லாம் மொழியடிப்படையில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன...", என்பன போன்ற தமிழினவாதிகளின் பெருங் கதையாடல்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. செயற்கையாகத் தோன்றும் மொழிவாரித் தேசியங்களில், எப்போதும் பலமான நடுத்தர வர்க்கம் ஒன்று ஆதிக்கம் செலுத்தும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் சுதந்திரம் பெற்ற நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்பது உணரப்பட்டது. அன்று முதல் இன்று வரை, வறுமை ஒழிப்பு, நிலங்களை மறுபங்கீடு செய்வது, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும், இது தான் நிலைமை. மெக்சிகோவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சமூகப் புரட்சிக்கு அமெரிக்காவும் ஒரு வகையில் உதவியுள்ளது.

பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது வழமையானது. திறமையில்லாத அதிபரை விழுத்துவதும், அந்த இடத்தில் இன்னொரு தலையாட்டிப் பொம்மையை நிறுவுவதும், அமெரிக்காவுக்கு கைவந்த கலைகள். சில நேரம் அரசைக் கவிழ்ப்பது கடினமாகவிருந்தால், ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சிக் குழுக்களை தூண்டி விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டியாஸ் என்ற சர்வாதிகாரி ஆண்ட காலத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் தோன்றின. மெக்சிகோ எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், சுரங்கத் தொழில் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தது. டியாஸ் ஆட்சியில் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் நலன்கள் சிறப்பாக கவனிக்கப் பட்டன. பூர்வீக இந்தியர்களும், கலப்பின மேஸ்தீசோக்களும் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதால், வறுமையில் வாடினார்கள். அவர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல்கள் கேட்டன. இன்றும் மெக்சிகோவில் காவிய நாயகனாக புகழப்படும் "பாஞ்சோ வியா", வட மெக்சிகோவில் சிறு கெரில்லாக் குழுவுக்கு தலைமை தாங்கினார். பாஞ்சோ வியாவின் கெரில்லாக்கள், முதலில் சிறு நகரங்களையும், பின்னர் பெரு நகரங்களையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கான ஆயுத விநியோகம், அமெரிக்க எல்லையில் இருந்து வந்து கொண்டிருந்தது. படிப்பறிவற்ற, சாதாரண திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்த பாஞ்சோ வியா, தான் சொல்கிற படி கேட்பான், என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம். "நிலவுடமையாளர்களைக் கொல்லுங்கள்! நிலங்களை பறித்தெடுங்கள்!!" என்பன போன்ற கோஷங்கள் வலுக்கவே அமெரிக்கா விழித்துக் கொண்டது. ஆயுத விநியோகம் தடைப் பட்டதால், பாஞ்சோ வியாவின் படையினர், அமெரிக்க இலக்குகளையும் குறி வைத்துத் தாக்கினார்கள். பாஞ்சோ வியா பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் கைப்பற்றிய இடங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலங்களை பகிர்ந்தளித்தார். கல்விச்சாலைகள் கட்டினார்.

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி, பூர்வீக இந்தியர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். இந்தியர்கள் அதிகளவில் வாழும் தென் மெக்சிகோவில் "சப்பாத்தா" வின் தலைமையில் புரட்சி வெடித்தது. இன்றைக்கும் கூட, மெக்சிகோ இந்திய மக்களுக்கு சப்பாத்தா ஒரு ஒப்பற்ற தலைவன். பாஞ்சோ வியாவின் படைகளும், சப்பாத்தாவின் படைகளும் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டன. தலைநகரான மெக்சிகோ நகரில், அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிப் படைகள் தலைநகரைக் கைப்பற்றவும், ஜனாதிபதி அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரவும் சரியாகவிருந்தது. ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்த 1917 ம் ஆண்டு, மெக்சிகோவின் சமூகப் புரட்சி வெற்றி வாகை சூடியது. ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை காப்பாற்றுவது தான் கடினமானது. மெக்சிகோவில் புரட்சியை நடத்தியவர்கள் மத்தியில் பொதுவான அரசியல் சித்தாந்தம் காணப்படவில்லை. லிபரல் முற்போக்காளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அனார்கிஸ்டுகள், இந்திய தேசியவாதிகள், இவை எதிலும் சாராத "ராபின் ஹூட் வகையறாக்கள்" போன்ற பல்வேறு கலவைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவே நேரம் சரியாகவிருந்தது. இந்த குழப்பத்தில், நடுத்தர வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்திய லிபரல் முற்போக்காளர்கள் ஆட்சி அமைக்க முன்வந்தார்கள். சுமார் எழுபதாண்டுகளாக PRI என்ற, "புரட்சியை பாதுகாக்கும்" கட்சி ஆட்சி செலுத்தியது. , காலப்போக்கில் PRI , நம்மூர் திராவிடக் கட்சிகளைப் போல, பெயரில் மட்டும் புரட்சியைக் கொண்ட கட்சியாக மாறி விட்டது. ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தை வைத்திருந்ததால், கட்சித் தலைவர்கள் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோ தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை பேணி வருகின்றது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஜனநாயாகமற்ற தேர்தல்கள் போன்ற குறைகள் இருந்த போதிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படவில்லை. முதலாளிகள் சொத்தைப் பெருக்கிக் கொள்ள சுதந்திரம் வழங்கப் பட்டது. அந்நிய முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கமைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான், ஸ்டாலினுடன் முரண்பட்ட ட்ராஸ்கி, மெக்சிகோவை தனது இரண்டாவது தாயகமாக்கினார். மெக்சிகோ உலகப் புரட்சியாளர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது என்ற கூற்று, வெறும் மிகைப்படுத்தல் அல்ல. குவாத்தமாலாவில் நடந்த சதிப்புரட்சியை தொடர்ந்து வெளியேறிய சேகுவேராவும், கியூபாவில் இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியுற்று ஓடி வந்த பிடல் காஸ்ட்ரோவும் அங்கே தான் சந்தித்துக் கொண்டனர். மெக்சிகோவில் இருந்து தான் கியூபாப் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன. கியூபப் புரட்சியாளர்கள் மெக்சிகோ கரையை விட்டு "கிரான்மா" படகில் புறப்பட்ட நாளில் இருந்து, சோஷலிச கியூபாவின் நிர்மாணம் வரையில், மெக்சிகோ அரசு துணை நின்றது. சிறந்த இராஜதந்திர உறவைக் கொண்ட அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காமல், கியூபப் புரட்சியை ஆதரித்தது. அதற்காக மெக்சிகோ அரசைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட முடியாது. மத்திய அமெரிக்காவில் நிகராகுவா, எல்சல்வடோர் கெரிலாக்களின் போராட்டத்திற்கு மெக்சிகோ ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக தனது நாட்டுக்குள் காத்திருக்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மெக்சிகோ அரசு எதிர்பார்த்த பூதம் கிளம்பி விட்டிருந்தது.

1994 ம் ஆண்டு, அமெரிக்காவின் தலைமையில் NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் வரிகளை தளர்த்துவது, வணிகத்தை அதிகரிப்பது, அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். உண்மையில் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோவில் தடையின்றி சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த ஒப்பந்தம் அது. 1 ஜனவரி 1994 , மெக்சிகோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று, தென் மெக்சிகோ மாநிலமான சியாப்பாசில் புரட்சி வெடித்தது. பூர்வீக இந்தியர்களின் காவிய நாயகனான சப்பாத்தாவின் பெயரில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. சப்பாத்திஸ்டா தேசிய விடுதலை இராணுவம், ஒரு சில நாட்களுக்குள் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் யாரும் கேள்விப்படாத மார்க்சிய அமைப்பு, அதனை தலைமை தாங்கிய மார்கோஸ் என்ற மர்ம ஆசாமி, குறுகிய காலத்திற்குள் முன்னேறிய போராளிகளின் வேகம், என்பன உலகை உலுக்கி எடுத்தன. சர்வதேச ஊடகங்களின் கவனம் முழுவதும் சியாப்பாஸ் மீது குவிந்தது. மெக்சிகோ விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கு தாக்குப் படிக்க முடியாமல், போராளிகள் மலைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். புரட்சி தொடங்கிய வேகத்திலேயே நசுக்கப்பட்டாலும், மெக்சிகோ அரசு, சப்பாதிஸ்டாக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. சமாதான உடன்படிக்கை காரணமாக, சப்பாதிஸ்தாக்கள் அதற்குப் பிறகு ஒரு துப்பாக்கி வெட்டுக் கூட தீர்க்கவில்லை. இருப்பினும், சியாப்பாஸ் மாநிலத்தில் இராணுவ பிரசன்னம் நீடிக்கிறது.

நீண்ட காலமாக சபாதிஸ்தாக்களின் தலைவரான மார்கோஸ் குறித்த வதந்திகள் உலாவின. எப்போதும் குளிருக்கு அணியும் முகமூடியோடு காணப்படும் மார்கோஸ் ஒரு பூர்வீக இந்தியர் என்று தான் முதலில் கருதப் பட்டது. ஆனால், மெக்சிகோ அரசின் புலனாய்வின் படி, மார்கோஸ் ஒரு முன்னைநாள் பல்கலைக்கழக பேராசிரியர். ஸ்பானிய வேர்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் "ஒரு மார்க்சிய- தலித் விடுதலை இயக்கத்திற்கு, ஒரு பிராமணர் தலைமை தாங்குகிறார்..." என்பது போன்ற சர்ச்சை அது. இருப்பினும், சியாப்பாசில் பெரும்பான்மையாக வாழும் பூர்வீக இந்தியர்களுக்கு, மார்கோசின் பூர்வீகத்தை அறியும் ஆவல் இல்லை. சியாப்பாஸ், மெக்சிகோவில் மிகவும் பின்தங்கிய வறிய மாநிலம். தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் அபிவிருத்தியடையாத, அரசினால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம். பெரு நகரத்தில் வசதியாக வாழ்ந்த ஒருவர், சியாப்பாஸ் ஏழை இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதை பலர் வரவேற்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து பல சமூக ஆர்வலர்கள், இடதுசாரி இளைஞர்கள் சியாப்பாஸ் சென்றனர். பூர்வீக இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்குபற்ற விரும்பினார்கள். காட்டுக்குள் நடக்கும் கலந்துரையாடல்களில் உரையாற்றும் மார்கோஸ், "நவ தாராளவாதக் கொள்கைக்கு எதிரான மார்க்சிய சொல்லணிகளால் மக்களை மயக்குவதாக..." எதிராளிகள் குறை கூறுகின்றனர். இருப்பினும், மெக்சிகோவின் உள்ளேயே அதிகம் அறியப்படாத சியாப்பாஸ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ததில், மார்கோசின் பங்கு அளப்பரியது.

ஒஹகா (Oaxaca ), சியாபாஸ் போன்று தெற்கே இருக்கும் பூர்வீக இந்தியர்களை பெரும்பான்மையாக கொண்ட இன்னொரு மாநிலம். மைய அரசினால் புறந் தள்ளப்பட்ட, வறுமையான மாநிலம். காலனிய காலம் முதல், இன்று வரை மெக்சிகோ பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட சாதியாக சுரண்டப் படுகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த மெக்சிகோவிற்குள் சம உரிமைகளுக்காக போராடினார்கள். சியாப்பாஸ் மாநிலத்தை சேர்ந்த சப்பாத்தா என்ற இந்தியத் தலைவர், வட மெக்சிகோ பாஞ்சாவியாவுடன் இணைந்து, அரச அதிகாரத்தை கைப்பற்றினார். அவருக்கு முன்னர், ஒஹாகா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு இந்தியத் தலைவர், மெக்சிகோவின் ஜனாதிபதியானார். மெக்சிகோவின் முதலாவது பழங்குடியின ஜனாதிபதியான ஹுவாராஸ், சிறு வயதில் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்காரனாக பணியாற்றி வந்தார். பிற்காலத்தில் விடாமுயற்சியுடன் சட்டம் பயின்று நாட்டின் அதிபரான ஹுவாரசின் ஆட்சியில் பூர்வீக இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. ஹுவாராஸ், சப்பாத்தா போன்ற பழங்குடியினத் தலைவர்கள், மெக்சிகோவின் பிற இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றிருந்ததால் தான், தமது சமூகத்தினரது உரிமைகளையும் பெற முடிந்தது. அதனால், மெக்சிகோவின் பிற இனத்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களும், இந்திய பழங்குடியினரின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். தேசிய இன விடுதலைக்காக போராடுவோர் அறிந்து வைத்திருக்க வேண்டிய உண்மை இது. இந்திய பழங்குடி மக்கள், 21 ம் நூற்றாண்டிலும், குறுந்தேசியவாத சகதிக்குள் சிக்காது, வெளிநாட்டு ஆதரவைத் திரட்ட முடிந்தது. 2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மீண்டும் சர்வதேச ஆர்வலர்கள் புரட்சியை பாதுகாக்க மெக்சிகோ பயணமானார்கள்.

2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் வெடித்த புரட்சிக்கு, பள்ளிக்கூடங்களின் இழிநிலை காரணமாக அமைந்தது. நம்மூர் அரசுப் பள்ளிகளில் நிலவும் அதே குறைபாடுகள் தான் அங்கேயும். மானியக் குறைப்பால் கவனிக்கப்படாத பாடசாலைகள். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள். பாடநூல்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாமல் திண்டாடும் ஏழை மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்தி விடுதல். காலங்காலமாக அரசினால் தீர்க்கப்படாத பிரச்சினையை, உழைக்கும் வர்க்கப் புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. ஒஹாகாவில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் (SNTE) முதலில் ஊதிய உயர்வு கோரித் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தது. பின்னர் பிற உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். மாநிலத் தலைநகரின் மத்தியில் கூடாரங்கள் அமைத்து போராடியவர்கள், விரைவிலேயே நகரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

மெக்சிகோவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நகராட்சி, உள்ளூராட்சி அலுவலகங்கள் புரட்சியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய அரசாங்கம் பொறுப்பேற்றது. "ஒஹாகா மக்கள் ஜனநாயக பேரவை" என்று அந்த அரசுக்கு பெயரிடப் பட்டது. ஒவ்வொரு தெருவிலும் புரட்சிக் கமிட்டிகள் உருவாகின. அந்தந்த தெருவில் வாழும் மக்கள் கூடி கமிட்டிக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். இந்தக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பேரவைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஒஹாகா புரட்சிக்கு முன் நின்று உழைத்த ஆசிரியர்கள் சங்கம், பாடசாலைகளை இயக்கியது. மாணவர்களுக்கு வழமையான பாடத் திட்டத்துடன், சமுதாயத்திற்கு தேவையான அறிவையும் புகட்டினார்கள். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வானொலிச் சேவை, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. அதனால், புரட்சி எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பரந்து வாழும் வெளி மாவட்ட மக்களும் அறிந்து கொண்டனர். சர்வதேச ஆர்வலர்களும், இந்த வானொலி நிலையங்களில் பணியாற்றினார்கள்.

ஒஹாகா புரட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. புரட்சியை வழிநடத்தியவர்களுக்குள்ளே, சிலரது சுயநலப் போக்கு காரணமாக பதவி சுகத்தை நாடிச் சென்று சீர்குலைத்தனர். பிற மாநிலங்களுக்கு புரட்சியை கொண்டு செல்லும் திட்டங்களும் அறவே இருக்கவில்லை. (அனார்கிஸ்டுகள், டிராஸ்கிஸ்டுகள் செல்வாக்கு அதிகம்.) மெக்சிகோ மத்திய அரசு இராணுவ அடக்குமுறையை ஏவி விட்டது. வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒரு சர்வதேசிய ஆர்வலர் கூட, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இராணுவத்தின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் சிறிய அளவில், நிதானமாக நடந்து கொண்டிருப்பதால், வெளியுலகத்திற்கு செய்தி போய்ச் சேர்வதில்லை. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளாதார நெருக்கடிகளும், மெக்சிகோவில் புதிய புரட்சிகளை தோற்றுவிக்கும். தென்-மேற்கு அமெரிக்க மாநிலங்களில் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக்கர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றமை குறிப்பிடத் தக்கது. காலங்காலமாக நடைமுறையில் உள்ள, ஐரோப்பாவை, இஸ்ரேலை மையப் படுத்திய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை மாற்றும் சக்தி அவர்களுக்குண்டு. அமெரிக்காவின் கொல்லையில் அமர்ந்திருக்கும் மெக்சிகோவில் சுழன்று கொண்டிருக்கும் புரட்சிப்புயல், வல்லாதிக்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது.


(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவு :
1 மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்
2 அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்

Thursday, January 05, 2012

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்

(இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா)

(மெக்சிகோ, பகுதி : இரண்டு)


அது என்னவோ தெரியவில்லை. மெக்சிகோவுக்கும் கடவுளுக்கும் ஒரு நாளும் ஒத்துப் போவதில்லை. வரலாற்றில் எந்தப் பிரச்சினை வந்தாலும் மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் புரட்சியாளர்கள் நாடு கடத்தி விட்டனர். இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் அல்ல. மெக்சிக்கோ வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள். காலனியாதிக்கம் செய்யும் எண்ணத்தோடு வந்த ஸ்பானியர்களை, அன்றைய அஸ்தேக் சக்கரவர்த்தி கடவுளின் தூதர்கள் என்று தவறாக கருதினான். அந்த தப்பெண்ணம் ஒரு தலை சிறந்த நாகரீகத்தின் அழிவிலும், இரண்டு லட்சம் மக்களின் இனப்படுகொலையிலும் சென்று முடித்தது.

"பூர்வீக செவ்விந்திய மக்களை ஆண்ட மன்னர்கள் மதத்தின் பெயரால் மூடுண்ட சமுதாயத்தை வழிநடத்தினார்கள். மக்களை அறியாமை என்ற இருளில் வைத்திருந்தார்கள்." நமது காலத்திய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும் இவ்வாறான பிரச்சாரம் செய்கின்றனர். (உதாரணம்: மெல் கிப்சனின் அபோகலிப்டோ திரைப்படம்) ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மெக்சிகோ மக்களின் வாழ்வில் ஒளியேற்றவில்லை. நாடு முழுவதும் காளான் போல முளைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மக்களை அடிமை இருளில் வைத்திருந்தன. மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதி இந்த தேவாலயங்களின் சொத்தாக இருந்தது. அவற்றில் கூலி விவசாயிகளை கொத்தடிமைகளாக வேலை செய்வித்து சுரண்டிய பணத்தை தேவாலயங்கள் வட்டிக்கு கொடுத்தன. பிற நிலவுடமையாளர்களும், முதலாளிகளும் தேவாலயங்களிடம் கடன் வாங்கியதால், மதகுருக்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.

ஒரு ஊரில் ஒரு தேவாலயம் இருக்குமாகில், அந்த மத நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பாதிரிகள் சாதாரண மக்களை சுரண்டி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு குழந்தையின் பிறப்பு முதல், அது வளர்ந்து திருமணம் செய்து மரணம் அடைவது வரையில், ஒவ்வொரு சடங்கிற்கும் பாதிரியிடம் செல்ல வேண்டும். அவர் அதற்கென வசூலிக்கும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு ஏழை உழைப்பாளி தனது வருமானத்தில் பாதியை ஆவது இது போன்ற செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் எந்த மனிதனும் சுதந்திரமாக வாழ முடியாது. யாராவது கட்டுப்படியாகாது என்று தேவையற்ற சடங்குகளை தவிர்க்க விரும்பினால் மதத்தில் இருந்து விலக்கப் படுவார்கள். மெக்சிகோ மக்களின் விடுதலைக்காக போராடிய ஹிடால்கோ கூட அவ்வாறு மத நீக்கம் செய்யப் பட்டார். இவ்வளவவிற்கும் மெக்சிகோவின் தேசிய நாயகனான ஹிடால்கோ ஒரு முன்னாள் பாதிரியார்! எசுயிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

மெக்சிகோ புரட்சியின் வேர்கள், அன்று தாய்நாடாக கருதப்பட்ட ஸ்பானியாவின் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. ஐரோப்பாவில் சிலுவைப் போர் காலத்தில், பல கிறிஸ்தவ இயக்கங்கள் தோன்றியிருந்தன. மதத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகள், பிற்காலத்தில் பணபலம் கொண்ட தேசங்கடந்த நிறுவனங்களாக மாறி விட்டன. எசுயிஸ்ட் சபை அவற்றில் ஒன்று. மெக்சிகோவில் குடியேறிய அதன் அங்கத்தவர்கள் வைத்திருந்த அசையும், அசையா சொத்துகளும், விவசாய உற்பத்தியில் கிடைத்த வருமானமும், அரசை அச்சமடைய வைத்தது. எசுயிஸ்ட் அமைப்பினர் சித்தாந்த பற்றுக் கொண்டவர்கள் என்பதால், அவர்களின் பண்ணைகள் சிறப்பாக பராமரிக்கப் பட்டன. எசுயிஸ்ட் உறுப்பினர்கள் அரச அடக்குமுறைக்கு ஆளானதால், அவர்களின் பண்ணைகளும் அழிக்கப் பட்டன. இதனால், ஜீவனோபாயத்திற்காக எசுயிஸ்ட் பண்ணைகளில் தொழில் செய்த பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப் பட்டனர். ஹிடால்கோ பாதிரியார், அரச அடக்குமுறையினால் பாதிக்கப் பட்ட மக்களை ஒன்று திரட்டினார். மெக்சிகோவில் பிறந்த ஸ்பானிய வம்சாவழியினர் முதல், பூர்வீக இந்தியர்கள் வரை அவரின் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற நடந்த முதலாவது சுதந்திரப் போரும் அது தான்.

ஹிடால்கோ தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி விரைவிலேயே அடக்கப்பட்டாலும், சுதந்திர வேட்கை மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஸ்பெயினில் மன்னராட்சிக்கு எதிரான தாராளவாத (லிபரல்) கொள்கையாளர்களின் எழுச்சி, ஆங்கிலேயருக்கு எதிரான வட- அமெரிக்க காலனிகளின் சுதந்திரப் பிரகடனம், ஹைத்தியில் கறுப்பின அடிமைகளின் புரட்சி, போன்ற பல சர்வதேச நிகழ்வுகள் மெக்சிகோவின் சுதந்திரத்தை விரிவுபடுத்திய புறக் காரணிகளாகும். புதிய சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகளை கூறும் ரூசோ, வோல்டேயர் ஆகியோரின் நூல்கள் படித்தவர்களால் பரவலாக வாசிக்கப்பட்டன. இதன் விளைவாக நாஸ்திகவாதம் பேசும் லிபரல்கள் உருவாகினார்கள். மெக்சிகோவில், நூறாண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போருக்கும் கொள்கை வேறுபாடே காரணமாக அமைந்திருந்தது. நிலப்புரபுக்கள், பழமைவாதிகள், மதகுருக்கள் ஆகியோர் தமக்கென தனியான இராணுவம் ஒன்றை வைத்திருந்தனர். மறு பக்கத்தில், லிபரல், சமதர்ம கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோரும் இராணுவ பலத்தை கொண்டிருந்தனர். பூர்வீக இந்திய சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹுவாரேஸ் லிபரல்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த முரண்பாடு அதிகரித்தது.

மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகளுக்கும், மதச் சார்பற்ற லிபரல்களுக்கும் இடையிலான தீராப் பகை, இரத்தம் சிந்தும் போராக பரிணமித்தது. இரண்டு தரப்பிலும், தீவிரவாதிகள் குரூரத்தின் உச்சிக்கு சென்றனர். பழமைவாதிகள் மதச்சார்பற்ற பாடசாலை ஆசிரியர்களை கொன்றார்கள். பதிலுக்கு லிபரல்கள், பாதிரிகளை கொன்று தேவாலயங்களை கொளுத்தினார்கள். நீண்ட காலம் நீடித்த போரின் முடிவில், சில லிபரல்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது ரஷ்யாவில், போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்த அதே காலத்தில், மெக்சிகோவிலும் உள்நாட்டுப் போர் நடந்தது. சமூக மாற்றத்திற்கான புரட்சிகர யுத்தத்தின் இறுதியில் சோஷலிசம் மலரா விட்டாலும், வர்க்க எதிரிகளுக்கு இடையிலான சமரசமும், நிலையான ஆட்சியும் ஏற்பட்டது. அது வரையில் நடந்த உள் நாட்டுப் போர்களில், கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர். தேசத்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதமடையும் அளவிற்கு சொத்தழிவு ஏற்பட்டது. ஒரு வகையில், மெக்சிகோவின் வறுமைக்கு அதுவும் ஒரு காரணம்.

மெக்சிகோவின் உள்நாட்டுப் போருக்கு, மக்களிடையே பிளவுகளை உருவாக்கிய சாதிய படிநிலை அமைப்பு முக்கிய காரணம். பிற நாடுகளில் நடந்ததைப் போல, லிபரல்கள் தான் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த "மெக்சிகோ தேசியத்தை" உருவாக்கினார்கள். அதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டின் கடல் கடந்த மாகாணமாகவே கருதப் பட்டு வந்தது. மெக்சிகோவை காலனிப்படுத்திய முதல் நாளில் இருந்து, சுதந்திரம் பெற்ற நாள் வரையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தனர். அதாவது, மெக்சிகோ நாட்டின் அரசியல், இராணுவ, பொருளாதார நிர்வாகப் பொறுப்புகளுக்கு, ஸ்பெயினில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டு வந்தனர். அவர்களது சேவைக்காலம் முடிந்ததும், தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள். அப்படியானவர்களே ஸ்பெயின் மன்னருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஸ்பானிய குடாநாட்டை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தப்படும் "peninsulares " வகுப்பை சேர்ந்தோரே உயர்சாதியினராவர்.

தமிழில் சாதி என்பதை, ஆங்கிலத்தில் "Caste" என்று மொழிபெயர்ப்பது தவறானது. ஏனெனில் "Caste" என்ற சொல், மத்திய/தென் அமெரிக்காவின் காலனிய கால சமுதாயத்தை குறிக்கும் சொல்லாகும். அதற்கும் இந்திய சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம், அதே நேரம் வேற்றுமைகளும் நிறைய இருக்கின்றன. ஸ்பானிய பெற்றோருக்கு மெக்சிகோவில் பிறந்த பிள்ளைகள் "கிரயோல்கள்". இவர்கள் தூய ஸ்பானிய வம்சாவழியினர் என்றாலும், மெக்சிகோ மண்ணின் மைந்தர்கள் என்பதால், விசுவாசம் குறைந்தவர்களாக கருதப் பட்டனர். சாதிய படிநிலையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், சொத்துடமையிலும், நிர்வாகத்திலும், கல்வியிலும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தாம் புறக்கணிக்கப் படுவதாக உணர்ந்த கிரயோல்கள், ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார்கள். பூர்வீக இந்தியர்களுக்கும், ஸ்பானிய குடியேறிகளுக்கும் இடையில் பிறந்த பிள்ளைகள் "Mestizo" என அழைக்கப் படலாயினர். பூர்வீக இந்தியர்களும், மெஸ்தீசொக்களும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக நடத்தப் பட்டனர். அவர்கள் பண்ணையடிமைகளாக, விவசாயக் கூலிகளாக மட்டுமே வேலை செய்ய முடியும். இவ்விரு சாதியினரும் உடமைகளற்ற ஏழைகளாக இருந்தனர். அந்த அவல நிலை 21 ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

மெக்சிகோவின் பொருளாதாரத்தை உள்நாட்டுப் போர்கள் சிதைத்து நாசமாக்கின. வெளிநாட்டு சக்திகள், இதையே சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவை அடிமை நாடாக்க முயன்றன. சுதந்திர நாடான மெக்சிகோவுக்கு பிரிட்டனும், பிரான்சும் கந்து வட்டிக்கு கடன் வழங்கி வந்தன. வட்டி, இடைத்தரகர்களின் கமிஷன் போன்ற செலவுகளை கழித்து விட்டு, அரைவாசி கடன் தொகையை தான் மெக்சிகோவுக்கு கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரிக்கவே, பணத்தை அறவிடுவது என்ற சாட்டில் பிரான்ஸ் படையெடுத்தது. மெக்சிகோவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு இராணுவத்தை எதிர்த்து போராடி வென்ற, சாண்டா அனா என்ற படைத் தளபதி, பின்னர் ஆறு தடவைகள் ஜனாதிபதியானார். சுமார் கால் நூற்றாண்டு காலம் மெக்சிகோவை ஆண்ட, சாண்டா அனா காலத்தில் தான், வட அமெரிக்காவுடன் யுத்தம் வெடித்தது. இன்று ஐக்கிய அமெரிக்க குடியரசின் மாநிலமான டெக்சாஸ் மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்பானியர்களுக்கு அங்கே சென்று குடியேறும் ஆர்வம் இல்லாதிருந்த படியால், அமெரிக்க-ஆங்கிலேயர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப் பட்டது. கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து மதப் பிரிவினைகள் ஆழமாக வேரூன்றி இருந்த காலம் அது. டெக்சாசில் (ஆங்கிலேய) புரட்டஸ்தாந்துகாரர்கள் அதிகளவில் குடியேறினர். அவர்கள் டெக்சாசை தனி நாடாக பிரகடனம் செய்தனர். சாண்டா அனா அனுப்பிய படைகள் கிளர்ச்சியாளர்களை நசுக்கியது.

எல் அலெமோ என்ற இடத்தில் டெக்சாஸ் பிரிவினைவாதிகளின் இராணுவத்தையும், மக்களையும் படுகொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் தலையீட்டை தூண்டியது எனலாம். மெக்சிக்கர்களுக்கு, அது ஒரு பிரிவினைவாதிகளை அடக்கிய "எல் அலெமோ யுத்தம்". ஆனால், அமெரிக்கா அதனை "எல் அலெமோ இனப்படுகொலை" என்று பிரச்சாரம் செய்தது. உணர்ச்சிவசப்பட்ட மக்களின் "தேசிய எழுச்சி", மெக்சிகோ மீது படையெடுக்க உதவியது. நூறாண்டுகளுக்குப் பின்னர் ஈராக்கில் நடந்ததைப் போல, அதுவும் ஒரு "மனிதாபிமானத் தலையீடு" தான். குவைத்தை மீட்க ஈராக் மீது போர் தொடுத்தது போன்று, "டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்பதற்காக" அந்த போர் நடவடிக்கை அமைந்திருந்தது. பண்டைய காலங்களில் தான் பொண்ணுக்காக, பெண்ணுக்காக என்றெல்லாம் காரணம் சொல்லி, ஒரு சாம்ராஜ்யம் தன்னை விஸ்தரித்துக் கொள்ளும். இது தனி மனித சுதந்திரத்தை சட்டமாக்கிய புரட்சிகர அமெரிக்கா அல்லவா? அதனால், "தனியொருவனுக்கு சுதந்திரம் இல்லாத" நாடுகள் மீது படையெடுக்கிறார்கள். 19 ம் நூற்றாண்டில் படையெடுத்து ஆக்கிரமித்த நிலங்கள், அமெரிக்க கண்டத்தில் இருந்தன. குறிப்பாக மெக்சிகோவின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா விழுங்கி விட்டது.

நூறாண்டுகளுக்கு ஒரு தடவை வரலாறு திரும்பும் போலும். அமெரிக்காவின் ஆயுதபலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல், இராணுவ பலம் குன்றிய ஈராக் குவைத்தை விட்டோடியது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் மெக்சிகோ தோற்றதற்கும் அதுவே காரணம். மெக்சிகோ படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், நவீன ஆயுதங்களுடன் போரிட்ட அமெரிக்க படைகளை எதிர்க்க முடியாமல் பின்வாங்கியது. டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்கும் போர் என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். குறைந்தது பத்து ஆண்டுகளாவது சுதந்திர நாடாக இருந்த டெக்சாஸ், "வாக்கெடுப்பில் மக்களின் விருப்பின் பேரில்" அமெரிக்காவின் மாநிலமாகியது. இன்று அது எண்ணை வளம் மிக்க பணக்கார மாநிலமாக திகழ்கின்றது. 1848 ல், மேலதிகமாக மெக்சிகோவின் பிற பகுதிகளும் அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டன. அமெரிக்க மாநிலங்களான நியூ மெக்சிகோ, கலிபோர்னியா, போன்ற பகுதிகளை, அன்று 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்கள். ரியோ கிராண்டே ஆறு, இன்றுள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக் கோடாக வரையறுக்கப் பட்டது. இன்றைய அமெரிக்க அரசியலில், மெக்சிக்கர்களின் குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக பிரச்சாரம் செய்யப் படுகின்றது. பணக்கார அமெரிக்காவை நாடி வரும் மெக்சிக்கர்கள் முன் வைக்கும் வாதமும் வலுவானது தான். அதாவது அண்ணளவாக மெக்சிகோவின் அரைவாசி நிலப்பரப்பு அமெரிக்க வசமாகியுள்ளது. "நாங்கள் எல்லையைக் கடக்கவில்லை. எல்லை தான் எங்களைக் கடந்தது." என்பது மெக்சிகோ குடியேறிகளின் வாதமாகவுள்ளது.

அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் நடந்த போரும், ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களும் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அமெரிக்க மாணவர்களுக்கு முக்கிய பாடங்கள் அல்ல. ஆனால், மெக்சிகோவின் இளம் சமுதாயம், "அந்த அவமானகரமான தோல்வியை" நினைவு கூறுவது அவசியம் என்று அரசு கருதுகின்றது. இதனால் வடக்கே உள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஸ்தரிப்புவாதம் குறித்த அச்சம், இளையோர் மனதில் குடி கொண்டுள்ளது. அமெரிக்க- மெக்சிகோ போர், எதிர்கால அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வருகையை கட்டியம் கூறியது. "அமெரிக்காவின் கொல்லைப்புறத் தோட்டம்" என்று வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகளாகின. ஆரம்பத்தில் பத்துக்கும் குறையாத ஆங்கிலேயக் காலனிகளைக் கொண்டு உருவான அமெரிக்கா என்ற புதிய தேசம், வட மெக்சிகோ மாநிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம் வல்லரசாகியது. நிலங்களை அபகரிப்பதிலும், வளங்களை சுரண்டுவதிலும் காட்டிய அக்கறையை, அங்கே வாழ்ந்த மக்கள் மீது காட்டவில்லை. அந்த மக்கள் தாம் இழந்த செல்வத்தை தேடி அமெரிக்கா செல்வது நியாயமானது. அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் என்பதால், கேட்பாரின்றி திருப்பி அனுப்பப் படுகின்றனர். இதனால், அமெரிக்கா மீது வன்மம் கொண்ட மக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருகி வருகின்றனர்.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவு :
மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்

Monday, January 02, 2012

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்


(மெக்சிகோ, பகுதி : ஒன்று)

மெக்சிகோ நகரின் பிரபல ஆடம்பர உணவுவிடுதி. மாலை நேர உணவை சுவைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், எதிர்பாராத அறிவிப்பொன்றால் அதிர்ச்சி அடைகின்றனர். "இன்னும் இருபது நிமிடங்களில் இங்கே ஒரு முக்கிய நபர் விஜயம் செய்ய இருக்கின்றார். அவர் விருந்துண்டு விட்டு செல்லும் வரையில் யாரும் இருப்பிடத்தை விட்டு அகலக் கூடாது. உங்கள் அனைவரதும் செல்லிடத் தொலைபேசிகள் இப்போது முதல் பறிமுதல் செய்யப்படும்.வி.ஐ.பி. விடுதியை விட்டு சென்ற பின்னரே திருப்பித் தரப்படும்." சுமார் ஒரு மணித்தியாலமாக உணவுவிடுதியின் வாடிக்கையாளர்கள் மலசல கூடத்திற்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்த வி.ஐ.பி., ஒரு போதைவஸ்து கடத்தல் குழுவின் தலைவன். மெக்சிகோவில் மாபியா கும்பல்களின் அதிகாரம், அங்கே ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்துமளவு வளர்ந்துள்ளது. இந்த வருடம் (2010) கோலாகலமாக நடந்த மெக்சிகோ புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கிரிமினல்களின் நிழல் படர்ந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான் ஒரு கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 70 இளைஞர்களின் சடலங்கள் உலகச் செய்தியானது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் போது, போதைவஸ்து கடத்த சம்மதிக்காத அப்பாவி வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள். மாபியாக்களின் உத்தரவுக்கு அடிபணியாத போலிஸ்காரர்களையே சர்வசாதாரணமாக கொன்று வீசுகிறார்கள். விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதைவிட மாபியா கும்பல்கள் தமக்குள்ளே கணக்குத் தீர்க்கும் விதம் குரூரமானது. எங்கேயாவது தலை வேறு, முண்டம் வேறாக சடலம் கண்டெடுக்கப் பட்டால், அது போட்டிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கும்.

மெக்சிகோ அரசின் சகல துறைகளிலும் மாபியாக்களின் செல்வாக்கு பரவி இருப்பதால், அவர்களை ஒடுக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. மேலும் கொலம்பியாவில் நடந்ததைப் போன்று, ஏழை மக்கள் மத்தியில் இருந்தே அடியாட்களையும், ஆதரவாளர்களையும் திரட்டும் மாபியாக்கள், அந்த மக்களின் நலனுக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றனர். மெக்சிகோவில் (மாபியா) வள்ளல்களை போற்றும் இசைநிகழ்ச்சிகள் கூட நடக்கின்றன. மெக்சிகோ பெட்ரோலியமும், கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பூமி. ஆனால் அவற்றை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி, சிறுபான்மை மேட்டுக்குடியினரினால் மட்டுமே அனுபவிக்கப்படுகின்றது. பெரும்பான்மை மக்கள், தாராளமாக கிடைக்கும் சோளத்தைக் கூட வாங்க முடியாத ஏழைகளாக அல்லல் படுகின்றனர். உணவுக்காக பயன்படும் சோளத்தில் அமெரிக்க நிறுவனங்கள் எதனோல் எரிபொருள் தயாரிப்பதும், அந்த அத்தியாவசிய உணவுப்பொருளின் விலையேற்றத்திற்கு காரணம். மெக்சிக்கோ தேசிய உணவான தொர்த்தியா (Tortilla ) சோளத்தில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. அது பூர்வீக குடிகளின் பாரம்பரிய உணவு. அந்த மண்ணில், 8000 (எண்ணாயிரம்) வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் உணவாக சோளம் இருந்துள்ளமை, அண்மைய அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. மெக்சிகோ அரசு, உள்நாட்டில் விளையும் சோளத்தை எரிபொருள் தயாரிக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அதே நேரம் உணவுத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட, அமெரிக்காவில் இருந்து சோளம் இறக்குமதி செய்கின்றது. (இதைத் தானா உலகமயமாக்கல் என்று கூறுவார்கள்?)

"கடவுள் மெக்சிகோவை அனைத்து வளங்களும் நிறைந்த செல்வந்த பூமியாக படைத்திருந்தாராம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டில் வாழும் மக்கள் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்களா? என்று யாரோ கேட்டார்களாம். கவலைப்படாதே, அதனை ஈடுகட்ட தான் நான் அந்த வளமான நாட்டை மெக்சிக்கர்களை கொண்டு நிரப்பினேன், என்று பதிலளித்தாராம் கடவுள்." மெக்சிக்கர்களின் நையாண்டி கதைக்குப் பின்னே ஒரு நிரந்தர சோகம் இழையோடுகின்றது. தீராத வறுமைக்கு பல காரணங்கள் உண்டு. 16 ம் நூற்றாண்டில், உலகம் காணாத இனவழிப்பு செய்து செல்வத்தை கொள்ளையடித்த ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள். 19 ம் நூற்றாண்டில், மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதியை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியம். 20 நூற்றாண்டு சமூகப் புரட்சியை, பூர்ஷுவா ஆதிக்க அரசியலாக மாற்றிய PRI என்ற ஒரு கட்சி சர்வாதிகாரம். இதைவிட கடந்த 300 வருடங்களாக நாட்டாண்மை செய்யும் பிரிட்டன், பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற கந்து வட்டிக் கடன்காரர்கள். உலகில் வேறெந்த நாட்டிற்கும் ஏற்படாத விசித்திர அனுபவம் எல்லாம் மெக்சிகோவிற்கு ஏற்பட்டுள்ளது.

நமது அன்றாட உணவுப் பொருட்கள் பலவற்றின் தாயகம் மெக்சிகோ. சோளம், அவரைக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி வகைகளை மெக்சிகோவை ஆக்கிரமிக்கும் நாள் வரையில் ஐரோப்பியர்கள் கண்டு, கேட்டிருக்கவில்லை. இன்று புகை பிடிப்பது ஒரு பாஷனாகி விட்டது. அமெரிக்க மால்பரோ புகைப்பவர்களுக்கு, புகையிலையின் தாயகம் மெக்சிகோ என்பது தெரியாது. இன்று சுவிஸ் சாக்லேட் வாங்குவதும், பரிசளிப்பதும் மேட்டுக்குடி கலாச்சாரமாகி விட்டது. ஆனால் சாக்லேட்டை சுவிட்சர்லாந்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மெக்சிகர்கள். சாக்லேட்டை அவர்கள் சுவை மிகுந்த சக்தி தரும் பானமாக குடித்து வந்தார்கள். ஐரோப்பியர்கள் முதன்முறையாக அஸ்டெக் சக்கரவர்த்தியின் அரண்மனையில் தான் சுவைத்தார்கள். பண்டைய மெக்சிக்கர்களின் மொழியில் அதன் பெயர் Xocoatl. ("சோகோ" என்றால் சூடு, "ஆடில்" என்றால் நீர். ஐரோப்பியரின் வாயில் அது சாக்லேடாக மருவியது.) அவர்கள் அதனை தேவர்கள் அருந்தும் சோமபானமாக கருதினார்கள். சக்தி தரும் பானம் என்பதால், ஆட்சியாளர்களும், படையினரும் விரும்பி அருந்தினார்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எல்லாம் ஐரோப்பியர்கள் பின்னர் முழு உலகுக்கும் அறிமுகப் படுத்தினார்கள். அது மட்டுமல்ல மெக்சிக்கர்களின் புகையிலைக்கும், சாக்லேட்டுக்கும் இன்று ஐரோப்பியர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் மிளகாய்க்கும், தக்காளிக்கும் உரிமை கொண்டாடப் போகிறார்கள்.


ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் மெக்சிகோவை பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம். பல நூறு மொழிகளைப் பேசும் பல்லினத்தவர்களின் தேசங்களைக் கொண்ட உப கண்டமாக விளங்கியது. அவ்வப்போது பல உன்னத நாகரீகங்கள் வேறு வேறு இடங்களில் தோன்றி மறைந்துள்ளன. சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளும், சுயாட்சி நகரங்களின் அதிபதிகளும் இடையறாத போரில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மெக்சிகோ ஆட்சியாளர்களுக்கு பொதுவான குணாம்சம் ஒன்றிருந்தது. மதகுருக்களே மன்னர்களாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்கள். மதவழிபாட்டு ஸ்தலமும், அரசியல் அதிகார மையமும் ஒன்றாக இருந்தது. அவர்களின் கீழே போரிடுவதை தொழிலாக கொண்ட போர்வீரர்கள். இவர்கள் எல்லோருக்கும் உணவளித்துக் கொண்டிருந்த அடித்தட்டு விவசாயக் குடிமக்கள். சரித்திரம் எப்போதும் மன்னர்களின் கதைகளையே குறித்து வைக்கின்றது. புராதன மெக்சிகோவிலும் புகழ் பூத்த ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், மாண்டார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் என்றென்றும் அடக்கமாக கிராமங்களில் உழுதுண்டு, பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். உழைக்கும் மக்களின் வம்சாவளி, 21 ம் நூற்றாண்டு மெக்சிகோவிலும் அப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Olmeken என்ற இனத்தவர்களே ஆதி கால மெக்சிகோ நாகரீகங்களின் முன்னோடிகள். (கி.மு. 1200 - 500) இன்றைய வெராகுரூஸ், டபாஸ்கோ மாநிலங்களில் அவர்களது ராஜ்ஜியம் பரவியிருந்தது. காடழித்து விவசாயம் செய்யும் சேனைப் பயிர்ச் செய்கையில் சிறந்து விளங்கினார்கள். வானசாஸ்திரம் கற்ற அறிஞர்கள், தானியங்களை விதைக்க ஏற்ற காலம் எதுவென்று சரியாகக் கணித்துச் சொன்னார்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் உண்டு என்று கூட கணித்து வைத்திருந்தனர். அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது. இயற்கை அழிவாலோ, அல்லது வேற்றினத்தவர்களின் படையெடுப்பு காரணமாகவோ ஒல்மேகன் நாகரீகம் வரலாற்றில் காணாமல் போனது. பிற்காலத்தில் பாராண்ட மாயா, அஸ்டெக் இனத்தவர்களும் அவர்களது அறிவுச் சொத்துகளை சுவீகரித்துக் கொண்டார்கள். மத்திய மெக்சிகோவில் தேயோட்டிஹுவகன் (Teotihuacanen ) என்ற இனத்தவர்களின் வளர்ச்சியடைந்த நாகரீகம் இருந்தது. அவர்களின் பூர்வீகமும், அழிவுக்கான காரணமும் இன்று வரை மர்மமாக உள்ளது. கி.பி. 200 - 600 வரையிலான காலப்பகுதியில் இரண்டு லட்சம் பேர் வசித்த பிரமாண்டமான கட்டிடங்களைக் கொண்ட பாழடைந்த நகரம், இன்றும் அவர்களின் நாகரிக மேன்மைக்கு சாட்சியமாக நிலைத்து நிற்கின்றது. மெக்சிகோவில் இன்றைக்கும் கண்டுபிடிக்கப் படாத பல புராதன நகரங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருக்கின்றன.

மெக்சிகோவில் ஸ்பானிய காலனியப் படைகள் வந்திறங்கிய பொழுது, அஸ்தேக் சாம்ராஜ்யம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. வட அமெரிக்க கண்டம் முழுவதிலும் அதி உயர் நாகரீகமடைந்த நாடாக திகழ்ந்தது. இன்றைய தலைநகரம், மெக்சிகோ நகரில் தான் Tenochtitlan என்ற அஸ்தேக் தலைநகரம் இருந்தது. அந்த தேச மக்கள் "மெக்சிகர்கள்" என அழைக்கப்பட்டனர். மெக்சிகர்கள் தொலை தூரத்தில் வடக்குத் திசையில் இருந்த பூர்வீக தேசமான, Aztlan னிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு. அவர்களது கடவுளான ஹுயிட்சிலோபோச்லி தெற்கில் ஒரு தேசத்தை தருவதாக வாக்களித்து இருந்தார். கற்றாழை செடி ஒன்றின் மீது பாம்பை பிடித்து வைத்திருக்கும் கருடனைக் காணும் இடத்தில் அந்த புதிய தேசத்தை நிர்மாணிக்குமாறு பணித்திருந்தார். மெக்சிக்கர்கள் நாடோடிகளாக அலைந்த நீண்ட பயணத்தின் இறுதியில் ஒரு நாள், அதாவது சரியாக 13-03-1325 அன்று அந்தக் காட்சியைக் கண்டார்கள். (பாழடைந்த அஸ்தேக் நகர இடிபாடுகளில் காணப்பட்ட குறிப்பு. தினக்காட்டி நமது காலத்திற்கேற்ப கணிக்கப்பட்டுள்ளது.) இன்றைக்கும் மெக்சிகோ குடியரசின் சின்னமாக கற்றாழை மீது பாம்பைக் கொத்தும் கருடன் படம் நிலைத்து நிற்கின்றது.

கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் வந்திறங்கிய போதிலும், மெக்சிகோ மீதான படையெடுப்பு இன்னொரு ஸ்பானிய தளபதியான கொர்தேஸ் (Cortes) தலைமையில் இடம்பெற்றது. 12 -04 -1519 , சுமார் ஐநூறு ஸ்பானியப் படையினர் பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் வெராகுரூஸ் கடற்கரையில் வந்திறங்கினார்கள். மிகவும் தந்திரசாலியான கொர்தேசுக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்தது. ஸ்பானியர்களுடன் ராஜதந்திர உறவை விரும்பிய குறுநில மன்னன் ஒருவன் வழங்கிய மலிஞ்சே என்ற இளவரசி கொர்தேசின் வைப்பாட்டியானாள். விரைவில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற இளவரசி மலிஞ்சே உதவியுடன் அயலில் இருந்த அரசுகளின் அணியை சேர்க்க முடிந்தது. அஸ்தேக் சாம்ராஜ்யம் பிற இனத்தவர்களின் நாடுகளை வென்று ஆக்கிரமித்து வந்தார்கள். அதனால் வெறுப்புற்றிருந்த குறுநில மன்னர்கள், சக்கரவர்த்தியை வீழ்த்த ஸ்பானிய படைகளுக்கு உதவினார்கள். ஸ்பானியர்கள் எதிர்காலத்தில் தம்மையும் அடக்கி ஆளப் போகிறார்கள் என்பதை, அன்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. சாம்ராஜ்யத் தலைநகரை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஸ்பானியப் படைகள் அஸ்தேக் சக்கரவர்த்தி மேக்டசூமா (Mectezuma ) வை மட்டும் கொலை செய்யவில்லை. அஸ்தேக் தலைநகரத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். அழகிய அஸ்தேக் கட்டிடக் கலைக்கு சிறப்பு சேர்த்த பிரமாண்டமான ஆலயங்களும், மாளிகைகளும் உடைக்கபட்டு, கற்கள் பெயர்த்துச் செல்லப்பட்டன. இன்று மெக்சிகோ நகரில் பழமையான கத்தோலிக்க தேவாலயங்கள் யாவும், அஸ்டெக் இடிபாடுகளின் மீதே கட்டி எழுப்பப்பட்டன. ஸ்பானிய ஆக்கிரமிப்புப் போர் நடந்த காலத்தில் அஸ்தேக் தலைநகரில் மட்டும் நான்கு லட்சம் குடிமக்கள் வாழ்ந்தார்கள். அன்றைய உலகம் முழுவதிலும் அந்தளவு சனநெருக்கம் உள்ள நகரங்கள் அரிதாகவே இருந்தன. புராதன தலைநகரத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான குடிமக்களுக்கு என்ன நடந்தது?

Bartolome de las Casas என்ற பாதிரியார் ஸ்பானிய காலனியப் படைகளின் ஆக்கிரமிப்புப் போரின் போது மெக்சிகோவில் இருந்துள்ளார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பிற பாதிரிகளைப் போலவே, "பாவாத்மாக்களான" பழங்குடி செவ்விந்தியர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கத்தில் தான் அங்கே சென்றார். ஆனால் மெக்சிகோ சென்ற பின்னர் தான், தம்மை கிறிஸ்தவர்களாக அழைத்துக் கொள்ளும் ஸ்பானியர்கள் கொடூரமான பாவங்களை செய்வதை நேரில் கண்டார். ஸ்பானிய படையினர் கொன்று குவித்த பூர்வீக மக்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஸ்பானியர்கள் உலகம் அதுவரை காணாத இனவழிப்பில் ஈடுபட்டதாக பார்தொலோமே குறிப்பெழுதி வைத்துள்ளார். கத்தோலிக்க பாதிரிகள், கிறிஸ்தவர்கள் அல்லாதோரை அடிமை வேலை வாங்குவதை அங்கீகரித்த காலமது. ஆனால் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய செவ்விந்திய மக்களையும் அடிமைகளாக வேலை வாங்கப் படுவதை ஏற்க முடியாது, என்று பர்தொலோமே பாதிரியார் வாதாடினார். இவரது கோரிக்கை ஸ்பெயின் அரசனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றைக்கும் மெக்சிகோவில் அவர் காவிய நாயகனாக போற்றப் படுகின்றார். ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு (San Cristobal de las Casas) அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது தாயகமான ஸ்பெயினில் காலனியாதிக்கவாதிகள், பார்த்தலோமே ஒரு துரோகி என்று தூற்றினார்கள். அதற்கு காரணம் மெக்சிகோவில் நடந்த இனப்படுகொலைகளை, கொள்ளைகளை எல்லாம் அவர் பதிவு செய்து வைத்தது தான். "அழிக்கப்பட்ட மேற்கிந்திய நாடுகளின் வரலாறு" என்ற நூல் அன்றைய ஸ்பெயினின் எதிரிகளான ஆங்கிலேயராலும், ஒல்லாந்துக்காரராலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (இந்த நூலின் பிரதிகள் இன்று அரிதாகவே கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடித் படிக்கவும்.)

இன்றைய மெக்சிகோவின் மொழியும், கலாச்சாரமும் ஸ்பெயினிடம் இருந்து கிடைத்த சொத்துக்களாகும். நூறு மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட மெக்சிகோ, உலகிலேயே அதிகமான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடாகும். மொத்த சனத்தொகையில் என்பது வீதமானோர் ஐரோப்பியர்களுக்கும், பூர்வீக செவ்விந்தியருக்கும் இடையில் பிறந்த கலப்பினத்தவர்கள். இதனால் மெக்சிக்கர்களின் சிந்தனைப் போக்கு, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஐரோப்பியத் தன்மை சற்று அதிகமாகவே காணப்படுவது வழக்கம். 1910 ல் வெடித்த சமூக-கலாச்சாரப் புரட்சி அதற்கு முடிவு கட்டியது. பெருநில உடமையாளர்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கமும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வகுடி மக்களும் எழுச்சி பெற்றனர். அதே கால கட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக்குகள் புரட்சிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். சோவியத் புரட்சியை நேரில் கண்டு, "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை எழுதிய அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீட், மெக்சிகோ புரட்சியையும் பதிவு செய்துள்ளார். மெக்சிகோ கூலி விவசாயிகளை ஆயுதமேந்த வைத்த காவிய நாயகன், பாஞ்சோ விய்யா(Pancho Villa) வையும் சந்தித்துள்ளார்.

மெக்சிகோ புரட்சி, உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த மத நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அடுத்து வந்த பல தசாப்தங்களுக்கு மதகுருக்கள் வீதியில் செல்லவே அஞ்சினார்கள். டபாஸ்கோ மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் "காலை வணக்கம், கடவுள் இல்லை!" என்று முகமன் கூற வேண்டுமென்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மை புரட்சியாளர்கள் கலப்பினத்தவர்களாக இருந்த போதிலும், பூர்வகுடி செவ்விந்தியரின் வம்சாவளியினராக "ஞானஸ்நானம்" பெற்றனர். ஸ்பானியர்களை அந்நிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களாக பார்த்தனர். மெக்சிகோவை காலனிய அடிமைப் படுத்திய ஸ்பானிய தளபதி கொர்தேசின் சாம்பல், மெக்சிகோ நகர மருத்துவமனையில் ஒரு ஜாடியில் பாதுகாத்து வைக்கப் பட்டிருந்தது. புரட்சியாளர்கள் அந்த ஜாடியை அபகரித்து சாம்பலைக் கொட்டினார்கள். காலனியவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியான அஸ்தேக் சக்கரவர்த்தியின் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக அப்படி செய்தார்கள். இன்றும் கூட மெக்சிகோவில் எந்த இடத்திலும் கொர்தேசுக்கு ஒரு சிலை கூட இல்லை. (லத்தீன்) அமெரிக்கக் கண்டத்தில் இனவழிப்பு மூலம் ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நிறுவியவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை. அவர்களின் வாரிசுகளே மக்கள் புரட்சி மூலம் தம் மீது விழுந்த களங்கத்தை துடைப்பார்கள். மெக்சிகோவின் கலாச்சாரப் புரட்சி இருபதாம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கும் எதிரொலித்தது.

(தொடரும்)