Showing posts with label பொருளியல். Show all posts
Showing posts with label பொருளியல். Show all posts

Wednesday, March 22, 2017

சேமிப்பு பணம் வைப்பிலிட்டால் வங்கிக்கு வட்டி கட்ட வேண்டும்!


இனி வருங்காலத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடும் பணத்திற்கு நாமே வட்டி கட்ட வேண்டி இருக்கும்! சிரிக்காதீர்கள், இது ஜோக் அல்ல! உண்மையில் நடக்கவுள்ளது.

நெதர்லாந்தில் Triodos வங்கி சேமிப்புப் பணத்திற்கு 0% வட்டி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆமாம், சேமிப்புப் பணத்திற்கு ஒரு சதம் கூட வட்டி கிடையாது. ஏற்கனவே பல ஐரோப்பிய வங்கிகள் மிகக் குறைந்த வட்டி கொடுத்து வந்துள்ளன.

இனிமேல் அது எதிர்மறை வட்டியாகவும் இருக்கலாம். அதாவது, நாங்கள் சேமிப்புக் கணக்கில் போடும் பணத்திற்கு நாமே தான் வட்டியும் கட்ட வேண்டும். அந்த வட்டிப் பணம் வங்கிக்கே போய்ச் சேரும்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். உங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் 24.437 யூரோக்களுக்கு அதிகமான பணம் வைப்பில் இட்டுள்ளீர்களா? அப்படியானால் அது உங்கள் சொத்தாக கருதப் படும். அதாவது அந்தப் பணத்திற்காக அரசுக்கு மேலதிகமாக சொத்து வரி கட்ட வேண்டும்!

எதற்காக சேமிப்புக்கான வட்டி குறைந்து கொண்டே செல்கின்றது? அதற்குக் காரணம் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி வீதத்தை குறைத்துள்ளது. வட்டி குறைவாக இருந்தால் மத்திய வங்கியில் இருந்து வர்த்தக வங்கிகள் எடுக்கும் கடன் தொகையும் அதிகரிக்கும். மறுபக்கத்தில் அந்த வங்கிகள் மக்களுக்கு கொடுக்கும் கடனும் அதிகரிக்கும்.

சேமிப்பில் பணத்தை வைப்பிலிடுவதை மத்திய வங்கி ஊக்குவிக்கவில்லை. அதனால் இவ்வளவு காலமும் சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்த வட்டி கொடுக்கப் பட்டு வந்தது. அதற்குக் காரணம் பணம் சுற்றிச் சுழல வேண்டும். மக்கள் பணத்தை சேமிப்பதை விட, செலவளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது.

சேமிப்பு பணத்திற்கு வட்டி குறைவதற்கு இன்னொரு காரணம் பணவீக்கம். எங்களது சேமிப்புப் பணத்திற்கு கிடைக்கும் வட்டி பணவீக்கத்தை விட அதிகமாக இருந்தால் தான் நன்மை உண்டு. இல்லாவிட்டால் அந்த வட்டியால் எந்தப் பயனும் இல்லை. உதாரணத்திற்கு, ஆயிரத்திற்கு பத்து ரூபாய் வட்டி சம்பாதித்து விட்டதாக நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. பணவீக்கம் காரணமாக அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை.

உண்மையில் நாட்டில் ஓரளவு பணவீக்கம் இருப்பதை வங்கிகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் பணவீக்கம் இருந்தால் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அது பொருளாதாரத்திற்கு நல்லது. எப்படி? இன்றைய விலையை விட நாளைய விலை அதிகமாக இருக்கலாம். இனி வருங்காலத்தில் விலை கூடுமே தவிரக் குறையாது என்று நாமாகவே முடிவெடுப்போம். அதை கருத்தில் கொண்டு, நாங்கள் இன்றைக்கே அந்தப் பொருளை வாங்கி விடுவோம். அதனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். விற்பனை கூடினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

சுருக்கமாக, பணம் ஓரிடத்தில் தேங்காமல் சுற்றிச் சுழல வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை. அவ்வாறு சுற்றிச் சுழலும் பணம் எல்லோரிடமும் வந்து சேரும் என்று நாங்கள் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், பணம் இறுதியில் ஒரு சில பணக்காரர்களின் பைகளில் சென்று தேங்கி விடுகின்றது. சாதாரண மக்கள் ஓட்டாண்டிகளாக சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவவழித்துக் கொண்டிருக்க வேண்டும். முதலாளிகள் அதை மூலதனமாக திரட்டிக் கொண்டிருப்பார்கள். இதற்குப் பெயர் தான்  முதலாளித்துவம்.

உசாத்துணை: 

பிற்குறிப்பு: பெரும்பாலான கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு முதலாளித்துவத்தை பற்றி எதுவும் தெரியாது. இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் ஒரு "பேராசிரியர்"(?) மார்க்சியத்தை ஏட்டுச் சுரைக்காய் என்று கேலி செய்யும் கட்டுரை ஒன்றை எழுதினார். (பார்க்க:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு அதில் அவர் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது கார்ல் மார்க்ஸின் தத்துவம் என்று கட்டுரை முழுக்க எழுதி இருந்தார். உண்மையில் அது ஒரு டச்சுப் பழமொழி. முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கை. அதை பொதுவுடைமை என்று திரித்துக் கூறுவது மக்களை முட்டாள்களாக்கும் செயல். (வாசிக்கவும்: கழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை? - ஒரு பொருளியல் குறிப்பு)

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Tuesday, April 05, 2016

சோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறிமுகம்


சோவியத் யூனியனில் சோஷலிச பொருளாதார கட்டுமானம் எவ்வாறு இயங்கியது? எத்தனை முதலாளித்துவ அரசியல் ஆர்வலர்கள் அதைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள்? சோவியத் நாட்டில் தொழிலகங்கள் எவ்வாறு நிர்வகிக்கப் பட்டன? நம் நாட்டில், வணிகவியல், பொருளியல், முகாமைத்துவப் படிப்புகளில் பட்டம் வாங்கியவர்களுக்கே அது குறித்த அறிவு கிடையாது. சோஷலிச நாடுகளின் பொருளாதார அமைப்பு, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இரண்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உள்ளன. அவற்றை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

சோவியத் யூனியனின் பொருளாதார கட்டுமானம் எப்படி இயங்கியது என்பதை அங்கு நேரில் சென்று ஆராய்ந்து கூறியவர்களை விரல் விட்டு என்னலாம். பொதுவாக மேற்குலக ஊடகங்களினால் பரப்பப் படும் கட்டுக்கதைகளை உண்மை என்று நம்பி ஏமாறுவோர் ஏராளம். ஐம்பதுகளில் சோவியத் யூனியனுக்கு சுற்றுலா சென்ற, அமெரிக்க பொருளியல் நிபுணர் David Granick, அங்கு தான் கண்டவற்றை The Red Executive என்ற நூலாக எழுதி இருக்கிறார். 1960 ம் ஆண்டு வெளியான அந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஒரு பழைய புத்தகக் கடையில் அதன் டச்சு மொழிபெயர்ப்பு நூல் இருந்ததைக் கண்டு வாங்கி விட்டேன். அதிலிருந்த பல தகவல்களை இங்கே சுருக்கமாக எழுதுகின்றேன். மேலதிக விளக்கம் தேவைப்படுமிடத்து, அதனை அடைப்புக்குறிக்குள் (italic) எழுதி இருக்கிறேன்.


மொஸ்கோ நகரில் சுற்றுலாப் பயணியாக வந்திறங்கிய டேவிட், "இன்டூரிஸ்ட்" எனப்படும் சுற்றுலா மையத்தை தொடர்பு கொண்டு தொழிற்சாலை ஒன்றை பார்வையிட விரும்புவதாக கேட்டிருக்கிறார். வழமையாக மியூசியம், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் இன்டூரிஸ்ட் அலுவலகம் அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இறுதியில் தானாகவே நேரில் சென்று பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டார். ஒரு டாக்சியை பிடித்து தொழிற்சாலை ஒன்றின் வாசலில் போயிறங்கினார். அதன் தலைமை முகாமையாளரை சந்திக்க வேண்டும் என்பது அவரது நோக்கம். ஆனால், எப்படித் தொடர்பு கொள்வது?

தொழிற்சாலைக்குள்ளே போவதற்கு விசேட பாஸ் வேண்டும். வாயிற் காவலர் பாஸ் கொடுக்கும் இடத்திற்கு செல்லுமாறு அவரை அனுப்பி வைத்தார். அங்கு புதிதாக வேலை தேடி வந்தவர்களுடன் வரிசையில் காத்து நின்று பாஸ் எடுத்து விட்டார். இருப்பினும் நிர்வாகியை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இவரது அமெரிக்க பாஸ்போர்ட்டை வாங்கி திருப்பித் திருப்பி பார்த்து விட்டு, பிராந்திய பொருளியல் திணைக்களம் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

சோவியத் யூனியனில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழமையான விடயம். தொழிற்சாலைகள், பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களை பார்வையிடுவதற்கு விசேட பாஸ் வைத்திருக்க வேண்டும். எங்கும் எதற்கும் பாஸ் தான். ஆனால், சட்டத்தில் இருக்கும் பல விடயங்கள் நடைமுறையில் கறாராக பின்பற்றப் படுவதில்லை. உக்ரைனில், இளம் கம்யூனிஸ்ட் கழக செயலாளரான இளம் பெண் ஒருவரை டேவிட் சந்திக்க நேர்ந்தது. அப்போது, தான் கம்யூனிஸ்ட் கட்சி அடையாள அட்டையை எப்போதும் கொண்டு திரிவதில்லை என்றும் கூட்டங்களிலும் அதைப் பார்க்காமல் உள்ளே அனுமதித்தார்கள் என்றும் சொன்னார்.

மொஸ்கோ நகர சபையின் அலுலகத்திற்கு சென்ற டேவிட், தொழிற்சாலைகளை பார்வையிட அனுமதி கேட்டிருக்கிறார். அவரை வரவேற்ற அதிகாரிகள், குறைந்தது பத்து தொழிற்சாலைகளின் பெயரைக் கூறுமாறு கேட்டனர். இவர் சொன்ன இடங்களில் எல்லாம் தொலைபேசி அழைப்பு எடுத்து விசாரித்தனர். பல தொழிலதிபர்கள் நேரமில்லை என்று தட்டிக் கழித்தனர். இறுதியில் ஒரு தொழிற்சாலையில் அனுமதி கிடைத்தது. சோவியத் நாட்டில் அரசாங்கம் ஒரு மத்தியஸ்தர் போன்று நடந்து கொள்கின்றது என்பதும், சம்பந்தப் பட்ட நிறுவனமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதும் அதிலிருந்து தெரிய வந்தது.

சோவியத் முகாமையாளர்களும், அமெரிக்க முகாமையாளர்களும் ஒரே மாதிரியான கல்வித் தகமையை கொண்டிருக்கின்றனர். கணக்கியல், புள்ளி விபரம், முகாமைத்துவம்,அலுவலக நிர்வாகம் போன்ற பாடங்களை படிக்கின்றனர். ஆனாலும், கல்வி அமைப்பில் வித்தியாசம் உள்ளது. அமெரிக்க முகாமையாளர் உயர்தர வணிகக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறுகின்றார். சோவியத் முகாமையாளர் பொறியியல் கல்லூரியில் படிப்பதால் பொறியியலாளர் பட்டம் பெறுகின்றார். அது மட்டுமல்லாது, படித்து முடிப்பதற்கு முன்னரே தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறார்.

பெரும்பாலும் இளம் முகாமையாளர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளூராட்சி சபைகள் அவர்களுக்கான வெற்றிடங்களை ஒதுக்கி வைத்திருக்கும். இதனால் பட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு நகரத்தில் முகாமையாளர் பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை என்றால், பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பார்கள். வேறு இடங்களில் இருந்து விண்ணப்பம் அனுப்புவோரில் தகுதியானவரை சேர்த்துக் கொள்வார்கள்.

அமெரிக்க நிறுவனங்களை நிர்வகிக்கும் முகாமையாளர்கள் பெருமளவு இலாபம் சம்பாதிப்பதை, அல்லது செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதற்கு மாறாக, சோவியத் தொழிலதிபர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பதுடன், சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லது செயலாளர் ஒரு தொழிற்சாலை முகாமையாளராக வந்திருக்கிறார்கள். இதை குறித்து வைத்துக் கொண்டு, தொழிலக நிர்வாகத்தையும் கட்சி கட்டுப்படுத்துவதாக சிலர் கருதலாம். அது உண்மையா?

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விட்டுப் பேசுகின்றோம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது செயலாளர்கள் கூட, பெரும்பாலும் ஏதாவதொரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் முழு நேரத் தொழிலாளர்கள், ஓய்வு நேரத்தில் கட்சி வேலைகளை தொண்டு அடிப்படையில் செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, தகுதி வாய்ந்த தொழிலாளர் ஒருவர், கட்சி உறுப்பினராக இருந்து, கல்லூரியில் படித்து பட்டம் பெற்று முகாமையாளராக வருவது சாதாரணமான விடயம்.

குறிப்பிட்ட சில விடயங்களில், மேற்கத்திய நாடுகளில் இருந்த அதே அமைப்பு முறை, சோவியத் யூனியனிலும் பின்பற்றப் பட்டு வந்தது. சோஷலிச அரசியல் அமைப்பிலும், எல்லோருக்கும், எல்லா தொழில்களுக்கும், பதவி வேறுபாடின்றி ஒரே சம்பளம் வழங்குவதில்லை. கல்வித் தகுதி, அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளம் அதிகரிக்கும். (சோஷலிச நாடுகளில் எல்லோருக்கும் ஒரே அளவான சம்பளம் வழங்கியதால், உற்பத்தி குறைந்தது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அதில் எந்த உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, நிர்வாகி தொழிலாளியை விட இருபது மடங்கு அதிகமாக சம்பாதிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.)

சோவியத் யூனியனில், அதிக சம்பளம் வாங்குவோர் அந்தக் காசைக் கொண்டு பெரிதாக எதையும் அனுபவிக்க முடியாது. சொத்துக்களை வாங்கிச் சேர்க்க முடியாது. அதிக பட்சம், தனக்கென சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அது கூட ஆடம்பரமான வீடாக இருக்கக் கூடாது. வீட்டின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். (மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சட்டம் உள்ளது. நாம் நினைத்த மாதிரி கட்ட முடியாது.)

முதலாளித்துவ நாடுகளில் பெரிய நிறுவனங்களை நடத்தும் முகாமையாளர்கள், அதிக சம்பளம் எடுப்பதால் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதன் மூலம் தான் பணி புரியும் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருப்பார். ஆனால், சோஷலிச நாட்டில் அதனை நினைத்துப் பார்க்கவே முடியாது. சோவியத் முகாமையாளர், தனது நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்க முடியாது. இலாபத்தில் பங்கு கிடையாது. தனது பிள்ளைகளை உயர்தரமான தனியார் பாடசாலைக்கு அனுப்ப முடியாது.

ஐம்பதுகளில், ஒரு சராசரி தொழிலாளரின் மாதாந்த சம்பளம் எழுநூறு அல்லது எண்ணூறு ரூபிள்கள். அதே நேரம், தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி மூவாயிரம் ரூபிள் சம்பாதித்தார். அதை விட மேலதிகமாக 1500 ரூபிள்கள் போனசாக கிடைக்கும். ஆனால், அதிகம் சம்பாதிப்பவர்கள் வருமான வரியாக 13% கட்ட வேண்டும். அது கூட அமெரிக்காவை விடக் குறைவு தான்.

முகாமையாளர்கள் தொழிலாளர்களை விட அதிகமாக சம்பாதித்தாலும் அவர்கள் எப்போதும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. குறிப்பாக ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், தொலதிபர்கள், முகாமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப் படும் ஆபத்து நிலவியது. ஒரே இரவில் பலரது பதவிகள் பறிபோயின.

புரட்சிக்குப் பின்னரான காலத்தில், பொதுவாக முகாமையாளர்கள் மேட்டுக்குடி (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவர்களாக கருதப் பட்டனர். உயர் மத்தியதர வர்க்க பின்னணி காரணமாக, புரட்சிக்கு எதிரான சதிகளில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டனர். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் திடீரென செயற்படாமல் நின்று விட்டால், நாசவேலை காரணமாக இருக்கலாம் என நம்பப் பட்டது. நாசவேலைக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல தொழிலதிபர்கள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டனர். ஐம்பதுகளுக்குப் பிறகு அந்தப் பயம் நீங்கி விட்டது.

சோவியத் யூனியனில் அரசு திட்டமிடல் பொருளாதாரத்தை அமுல் படுத்தி வந்தது. அதன் அர்த்தம், ஒரு தொழிற்சாலைக்கு வேண்டிய சகலதும் அரசு வழங்கும். முதலீடு மட்டுமல்லாது, மூலப்பொருட்களையும் அரசு வழங்கியது. ஒரு தொழிற்சாலை எந்தளவு மூலப்பொருள் பாவிக்க வேண்டும், எந்தளவு முடிவுப் பொருட்களை விற்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்தது. அதாவது, சந்தைப் படுத்துவது, விற்பனையை அதிகரிப்பது போன்ற விடயங்கள் முகாமையாளர்களின் பிரச்சினை அல்ல. அதை அரசே பார்த்துக் கொள்ளும். (இதனால் விளம்பரங்களுக்கு பெருமளவு பணம் செலவிடுவதும், தொழிலாளர்கள் சுரண்டப் படுவதும் தவிர்க்கப் படுகின்றது. அதற்கு அங்கு இடமேயில்லை.)

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் அரசு முடிவெடுத்தது. (குறைந்த பட்ச ஊதிய அளவை விடக் குறைவாக சம்பளம் கொடுக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.) உண்மையில், அரசும், தொழிற்சங்கமும் இணைந்து அது போன்ற முடிவுகளை எடுத்து வந்தன. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் சம்பளத் திட்டம் மாறுபடும். இது சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதே மாதிரியான திட்டம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அரசு கொடுத்த வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை நிர்வகிப்பது மட்டுமே முகாமையாளர்களின் கடமை. முதலீடு செய்யும் உரிமையாளராக அரசே இருப்பதால், விற்பனையினால் கிடைக்கும் இலாபத்தையும் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதில், முதலாளித்துவ நாடுகளுக்கும், சோஷலிச நாடுகளுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. ஆயினும் சந்தைப் படுத்தலில் வித்தியாசம் உள்ளது. சோஷலிச நாட்டில் விளம்பரம் செய்து அதிகளவு வாடிக்கையார்களை கவர வேண்டிய தேவை இல்லை. வேறு நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை.

அதற்காக, விற்பனை தொடர்பாக தொழிலதிபர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. தொழிற்சாலையில் உற்பத்தியான முடிவுப் பொருட்கள், பெருமளவு கொள்வனவு செய்யும் விநியோக நிறுவனத்திடம் விற்கப் படும். விநியோகஸ்தர்கள் சில்லறைக் கடைகளுக்கு கொண்டு சென்று கொடுப்பார்கள். இறுதியில் நுகர்வோர் தான் தரத்தை தீர்மானிக்கிறார்கள். அதனால், நுகர்வோரின் தேவைக்கு ஏற்றவாறு புதிய மாதிரிகளும் சந்தைக்கு வரும்.

நுகர்வோரின் சுவைக்கு ஏற்றவாறு, சற்று ஆடம்பரமாக வடிவமைக்கப் பட்டு விலை கூட்டி விற்கப்படும் பொருட்களும் உண்டு. அந்த ஆடம்பர மாதிரிகளை வடிவமைப்பதும், அவற்றின் விலைகளை தீர்மானிப்பதும் தொழிலதிபர்களின் பொறுப்பு. அதில் அரசு தலையிடுவதில்லை. ஆனால், ஒரு பொருளின் அடிப்படை விலை எதுவென அரசு மட்டுமே தீர்மானிக்கும். உண்மையில், ஒரு பொருளின் விலையை உற்பத்திச் செலவுகள் தீர்மானிக்கின்றன என்பது தெரிந்த விடயம். அதற்கும் சற்று அதிகமான விலையில் சந்தையில் விற்கப் படும். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் அனைவரும் வாங்கும் விலையில் இருக்க வேண்டும். அதற்காக கணிசமான அளவுக்கு விலையை குறைத்து விற்பார்கள். துண்டு விழும் தொகையை அரசு மானியம் ஈடுகட்டும்.

ஒவ்வொரு தொழிற்சாலையின் தொழிலாளர்களும், கோடை கால விடுமுறையை தமது பிள்ளைகளுடன் களிப்பதற்கு உரிமை உண்டு. கடற்கரை போன்ற சுற்றுலாத் ஸ்தலங்களில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப் படும். தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளும் தங்கிக் கொள்ளலாம். தொழிலாளர்களின் சுற்றுலா செலவு முற்றிலும் இலவசம். பிள்ளைகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பிள்ளைக்கு அதிக பட்சம் தொண்ணூறு ரூபிள்கள் (அன்றைய மதிப்பில் பத்து அமெரிக்க டாலர்கள்) கட்ட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நிறுவனங்கள் பிள்ளைகளுக்கும் இலவச பயணச் சீட்டு வழங்கின. தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட கடமைகளில், கோடைகால விடுமுறைகளை ஒழுங்கு படுத்தும் பொறுப்பும் அடங்கும்.

Wednesday, January 21, 2015

அப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...


 பிரான்ஸ் நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய, "21 ம் நூற்றாண்டு மூலதனம்" நூல் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது இலகுவாக வாசித்தறியக் கூடிய நூல் இல்லையென்றாலும், அதை வாசிப்பதற்கு பொருளாதாரம் பற்றிய முன் அறிவு தேவையில்லை. 

நெதர்லாந்தில், வருமானம் குறைந்தோருக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப் படும் MUG சஞ்சிகையில் (ஜனவரி 2015), அந்த நூல் பற்றிய விமர்சனம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஒரு காலத்தில் சமத்துவ சமுதாயம் இருந்ததாக கருதப் பட்ட நெதர்லாந்து பொருளாதாரம் குறித்தும் தனியாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது. 

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய மாயைகளை கொண்டிருக்கும் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அவை. தாமஸ் பிக்கெட்டி பற்றிய கட்டுரையை, தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறேன்.
 -------------------------------------------------------------

தாமஸ் பிக்கெட்டி பற்றி பலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். பிரெஞ்சு பொருளியல் அறிஞர், உலகம் முழுவதும் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். 21 ம் நூற்றாண்டு மூலதனம் எனும் ஒரு தடிமனான, கடுமையான நூல் ஒன்றை எழுதிய சமூக விஞ்ஞானியை பொருத்தவரையில் அது குறிப்பிடத் தக்க விடயம்.

அவர் ஒரு புதிய கார்ல் மார்க்ஸ் என்று அழைக்கப் பட்டார். ஆனால், பிக்கெட்டி அதை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தை வெறுக்கிறார். ஆயினும், இந்த நூல் சொல்ல வரும் செய்தி இடதுசாரியக் கருத்தியல் என்பதை மறுக்க முடியாது. உலகத்தில் ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரிக்கின்றது. நாங்கள் எதுவுமே செய்யாவிட்டால், 19 நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது கையளவு முதலாளிகள் மட்டுமே பணம் வைத்திருந்தார்கள். பாட்டாளிகள் வருந்தி செத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த முன்னறிவிப்பு தேவையற்ற விடயம் அல்ல. பிக்கெட்டி சில தோழர்களுடன் சேர்ந்து, மிகவும் விரிவான ஆய்வொன்றை செய்துள்ளார். கடந்த இரு நூறாண்டுகளாக, ஐரோப்பா, அமெரிக்காவில் மாற்றமடைந்து வரும் வருமானம், சொத்து அதிகரிப்பை ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிக்காக, அவருக்கு ஆதரவாக இடதுசாரி முகாமில் இருந்தும், வலதுசாரி முகாமில் இருந்தும் பலத்த கரகோஷம் எழுந்தது.

அவர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்று யாரும் புறக்கணிக்க முடியவில்லை. தற்காலத்தில் நாங்கள் உழைத்து சம்பாதிப்பதை விட, பணத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது தான் பிக்கெட்டியின் கூற்றின் சாராம்சம் ஆகும். யாராவது பரம்பரைச் சொத்து வைத்திருந்தால், அவர் பங்குகள், வட்டிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு தான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்.

1980 க்குப் பிறகு தான், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவானது. நம்ப முடியாத அளவு சம்பளம் வாங்கிய உயர்மட்ட நிர்வாகிகள் வந்தார்கள். கடந்த சில தசாப்த காலமாக, குறிப்பாக நிதித் துறையில், அதி கூடிய சம்பள விகிதம் 700 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய தர வர்க்கத்தின் வருமானம் வருடத்திற்கு ஓரிரு சதவீதமே கூடியது. அமெரிக்காவில், 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசியை சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் குறித்து, பிக்கெட்டி நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர்களது திறமைக்கு மதிப்புக் கொடுத்து அந்த ஊதியம் வழங்கப் படவில்லை. அதிகம் சம்பாதிப்போரின் வர்க்கம் ஒன்று உருவானது. அவர்கள் தமது சம்பளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய சொத்துக்களை சேர்த்ததுடன், அவற்றை வரியில்லாத சொர்க்கபுரிகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அத்தகைய பணக்காரர்களின் பிள்ளைகள், அந்த செல்வத்தை நிர்வகித்து வந்தாலே போதுமானது. அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஏனென்றால், சொத்து எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு அது கூடிக் கொண்டே செல்லும்.

இதெல்லாம் அமெரிக்காவில் தான் என்று பலர் நினைக்கிறார்கள். நெதர்லாந்து ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கொண்ட நாடு. இங்கே அது பொருந்தாது என்று நினைக்கலாம். பிக்கெட்டி தனது நூலில் நெதர்லாந்தைப் பற்றி மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆனால், டச்சு சமூக விஞ்ஞானிகள் அதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். வருமானத்தை பங்கிடுவதை பற்றி மட்டுமே ஆராய்ந்தால், சமத்துவ சமுதாயம் என்பது ஓரளவு சரியாக கருதப் படலாம். ஆனால், சொத்துக்களை பார்த்தோமானால், நெதர்லாந்து நாட்டிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை அவதானிக்கலாம். 10 சதவீத பணக்காரர்கள், இந்த நாட்டில் உள்ள மொத்த சொத்துக்களில் 60 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கின்றனர். Van Landschot வங்கியின் தகவலின் படி அது முக்கால்வாசிப் பங்கு.

சொத்து அளவீட்டின் படி, நெதர்லாந்தும் ஏற்றத்தாழ்வு அதிகமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான். குறைந்தளவு செல்வம் வைத்திருக்கும், அல்லது கடன்களை நம்பி வாழும், சனத்தொகையின் அரைவாசி மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கேயும் அதிகமாகும். இந்த நாட்டிலும் வறுமை அதிகரிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் அது குறித்து ஆய்வு செய்யும் Sociaal Cultureel Planbureau, Central Bureau voor de Statistiek ஆகிய நிறுவனங்கள் 2014 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே அது குறிப்பிடப் பட்டுள்ளது.

பெரும்பாலான டச்சுக் காரர்களுக்கு, அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கும். இன்றைய வயோதிபர்கள், அவர்களது காலத்தில், ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஒன்றில் வளர்ந்து வந்தனர். முப்பதுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள், மற்றும் பணக்கார காலனியான இந்தோனேசியாவின் இழப்பு என்பன, எதிர்பாராத அளவிற்கு மூலதனத்தை நொறுக்கி இருந்தன. பலரது தனிப்பட்ட சொத்துக்கள் காற்றில் கரைந்தன. 

1950 க்குப் பின்னர், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் முன்னெப்போதும் இல்லாதவாறு குறைந்திருந்தது. மீள் கட்டுமானத்தில் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 4 - 5 சதவீதம் என உயர்ந்தது. அதனால் சம்பளங்களும் கூடிக் கொண்டிருந்தன. 1980 வரையில் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த பொருளாதார நெருக்கடி, எல்லாவற்றிற்கும் முடிவு கட்டியது.

1950 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலம் தனித்துவமானது. பொதுவாக பொருளாதாரம், வருடத்திற்கு அதிக பட்சம் 1 அல்லது 2 சதவீதம் தான் உயரும் என்று பிக்கெட்டி கூறுகின்றார். சொத்துக்கள் வருடத்திற்கு 5 சதவீதம் உயரும். சொத்துடமையாளர்களுக்கும், உடைமைகள் அற்ற பிரிவினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உயர்ந்து கொண்டு செல்லும். நலன்புரி அரசு சிதைக்கப் பட்டதும், பணக்காரர்கள் குறைந்தளவு வரி கட்டுவதும், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் காரணிகள் ஆகும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். அரசு கூட ஏழையாகின்றது.

19 ம் நூற்றாண்டை திரும்பிப் பார்ப்போம். சமுதாய ஏற்றத்தாழ்வு அபாயகரமானது என்று பிக்கெட்டி எச்சரிக்கை விடுக்கிறார். ஜனநாயகம் அப்போது அகற்றப் பட்டது. அதீத பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார்கள். சொத்துக்கள் ஏதும் வைத்திராதவர்கள், சமுதாயத்திற்கு வெளியே நிற்பதாக உணர்ந்தனர். தாமஸ் பிக்கெட்டி : "மேட்டுக்குடியினருக்கு எதிரானவன் என்று என் மேல் குற்றஞ் சாட்டப் பட்டது. ஆனால், உச்சியை விட அடித்தளம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்."

இதற்கொரு தீர்வு இருக்கிறதா? உலகளாவிய முற்போக்கான சொத்து வரி ஒன்றை பிக்கெட்டி முன் மொழிகின்றார். அப்படியான வரி அறவிடுவதற்கு உலகம் முழுவதும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை தான். அது பிக்கெட்டிக்கும் தெரியும். இருப்பினும், அவர் தனது ஆலோசனையை, வரி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் ஒரு அளவீடாக குறித்து வைத்திருக்கிறார். அது யதார்த்தமானது.

(நன்றி: Mug Magazine, Januari 2015)

Thursday, December 18, 2014

"யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்


இது முற்போக்கு டச்சு இணையத் தளம் ஒன்றில் (http://onsfundament.nl/het-komt-allemaal-door-de-buitenlanders/) பிரசுரமான, மிகவும் அருமையான கட்டுரை.

ஐரோப்பாவில், குறிப்பாக நெதர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பரவிவருகின்றது. பூர்வீக வெள்ளையின மக்கள், தங்களது பொருளாதார பிரச்சினைகளுக்கு, வெளிநாட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்யும் கட்டுரை இது.

நாம் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கியது. இதை வாசிக்கும் தமிழர்கள், நெதர்லாந்து அல்லது ஐரோப்பாவின் யதார்த்த நிலைமையை புரிந்து கொள்வார்கள். அங்கு வாழும் மக்களின் மனோநிலையை உணர்ந்து கொள்வார்கள்.

இந்தக் கட்டுரை பூர்வீக டச்சுக்காரர்களை நோக்கி எழுதப் பட்டாலும், வர்க்க உணர்வற்ற தமிழர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஆகையினால், தமிழ் பேசும் மக்களுக்காக அதனை மொழிபெயர்த்து தருகிறேன்:
________________________________________________________________________________


 எல்லாவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் தான் காரணம்! 

அடிக்கடி என்ன கேள்விப் படுகின்றீர்கள்? நெதர்லாந்தில் எல்லாமே பிழையாக நடக்கிறது. அதற்குக் காரணம் வெளிநாட்டவர்கள்.


  • அகதிகள்: "சொந்த மக்களுக்கு" உதவி செய்ய வேண்டிய அரசாங்கம், அகதிகளுக்காக பணத்தை செலவளிக்கின்றது. 
  • முஸ்லிம்கள் : அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள். எங்கள் மேல் இஸ்லாத்தை திணிக்கப் பார்க்கிறார்கள். 
  •  மொரோக்கோ குடியேறிகள்: திருட மட்டுமே தெரிந்த வேலை செய்யாத சோம்பேறிகள். 
  • கிழக்கு ஐரோப்பியர்கள்: எங்களது தொழில் வாய்ப்புகளை பறிக்கிறார்கள்.


சிலநேரம், இதை வாசிக்கும் நீங்களும் இப்படி எல்லாம் நினைத்திருப்பீர்கள். மிகவும் நன்றி. இப்படியான கதைகளை பரப்புவதன் மூலம், மக்களை ஒடுக்கி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கு உதவுகின்றீர்கள்.

அகதிகளின் வருகையினால் தான், சுகாதாரப் பணியகங்கள் மூடப் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை இழுத்து மூடி விட்டால், சுகாதார சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப் படுமா? எதற்காக மக்கள் தங்கள் வீடு, வாசல்களை துறந்து வெளியேறுகின்றார்கள் என்று ஒரு நிமிடமேனும் நினைத்துப் பார்த்தீர்களா? சிலநேரம், அவர்கள் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், குண்டு வீச்சினால் பாதிக்கப் பட்டிருக்கலாம், அல்லது கைது செய்வதற்காக தேடப் படலாம். எமது அரசாங்கம் அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை விரும்புகின்றது.

நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?  மக்டொனால்ட்ஸ் முதல் சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வரை. ஏன் எங்கள் தேசத்தின் மேலான அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து எந்தக் கவலையுமற்று இருக்கிறீர்கள்? அமெரிக்கா ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டான நாடு என்ற பிரச்சாரத்தை இன்னமும் நம்புகிறீர்களா? அந்த நாடு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது மட்டுமல்லாது, நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக அதே பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்கின்றது.

எங்களது நாட்டில் குறைந்தளவு மொரோக்கோ குடியேறிகள் இருந்திருந்தால், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்புகள், இவை எல்லாம் மறைந்து விடுமா? தொழிலகங்களில் வழமைக்கு மாறாக அதிக வேலை வாங்கப் படுவதற்கும், அரசு கொடுக்கும் சமூகநல உதவித்தொகை போதாமல் இருப்பதற்கும், "அந்த" மொரோக்கோ காரர்கள் தான் காரணமா? உண்மையில் யார் யாரிடம் இருந்து திருடுகிறார்கள்? உங்களிடம் இருந்து திருடும் அதே மேட்டுக்குடி வர்க்கம் தான், மொரோக்கோ காரர்களிடமும் இருந்து திருடுகின்றது.

"அந்த" கிழக்கு ஐரோப்பியர்களினால் தான், உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை மூடி விட்டால், உங்களுக்கு ஒரு நிரந்தர வேலைக்கான ஒப்பந்தம் கிடைக்குமா? பார ஊர்திகளின் (லொறி) முதலாளிகளும், ஷெல் போன்ற நிறுவனங்களும், ஐரோப்பாவில் மலிவு விலை கூலிகளை தேடிப் போவது, கிழக்கு ஐரோப்பிய மக்களின் குற்றமா? ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் இயற்றுவதற்கு கிழக்கு ஐரோப்பியர்கள் தான் காரணமா? நீங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க வழியில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சிலநேரம், இந்த நாட்டில் எல்லாமே பிழையாக நடப்பதற்கு எங்கள் மேல் தவறு இருக்கலாம். எங்களது தவறு? ஆமாம், எங்களது தவறு தான். ஏனென்றால், இந்த நாட்டில் வாழும் நாங்கள் தெளிவாக சிந்திப்பதில்லை. இங்கே என்ன நடக்கிறது, அது ஏன் நடக்கிறது என்று அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே வர்க்கத்தை, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை அறியாமல் இருக்கிறோம்.

உலகம் முழுவதும் தங்கள் இருப்பிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள், பணத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறோம். ஏனென்றால், தோல்நிறம், பூர்வீகம், மதம் போன்ற வித்தியாசங்களை பெரிதென எண்ணி, எங்களை நாங்களே பிரித்துக் கொள்கிறோம். எங்களுடைய பணம் எந்த வர்க்கத்திடம் போய்ச் சேருகின்றது என்ற உண்மையை அறியாதிருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை பற்றி அறியாதிருக்கிறோம்.

எங்களை விட வித்தியாசமாக தோன்றும் மனிதர்கள் மேல் சீறிப் பாய்வது மிகவும் இலகுவானது. ஏனென்றால், முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி கொள்வதும், அவர்களது அரசியல் அமைப்பை எதிர்ப்பதும், "நெதர்லாந்து பண்பாடு" அல்ல! அப்படித் தானே? முன்னாள் லிபரல் கட்சிக்காரரும், இந்நாள் "கார்ப்பரேட்களுக்கான கட்சி"(PVV) நடத்துபவருமான ஒருவர், அமெரிக்க, இஸ்ரேலிய கோடீஸ்வரர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு நெதர்லாந்தை நாசமாக்குவதற்கு உதவுகிறார். அவர் சொல்லும் கதைகளை கேட்டு ஏமாறுகிறோம். 

இந்த பொம்மைகள், தொழிலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் பக்கம் நிற்பதாக நினைக்கிறீர்களா? அவர்கள் தான் (பூர்வீக) நெதர்லாந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இனிப்பாகப் பேசுகிறவர்களை நம்புகிறீர்களா? வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்பு போன்ற திட்டங்களுக்கு, பாராளுமன்றத்தில் அவர்களும் தான் சம்மதிக்கிறார்கள். (உழைக்கும் வர்க்கம்) பிரிந்திருப்பதால் பலவீனமாகப் போகிறோம் என்பதை நீங்கள் உணரவில்லையா?

இன்னும் உணரவே இல்லை? அப்படியானால், தங்களது நிதி வழங்குநர்கள் முன்னேற வேண்டுமென்பதற்காக, இந்த சமூகத்தை இன்னும் விரைவாக உடைக்கும் நபர்களை பற்றியும் முறைப்பாடு செய்ய வராதீர்கள். ஏனென்றால், அவர்கள் அகதிகள், மொரோக்கோ காரர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள் ஆகியோரை மட்டுமல்ல, வேலை செய்யும் எல்லோரையும் பிடித்து அடக்குவார்கள். அதனை நீங்கள் பொறுத்திருந்து பார்ப்பீர்கள். 

தொழிற்சங்கம் ஒன்றின் மூலம் நிறுவனமயமாகும் ஒவ்வொருவரும், நல்லதொரு எதிர்காலத்திற்காக கிளர்ந்து எழும் ஒவ்வொருவரும் அடக்கப் படுவார்கள். ஒன்றில் வன்முறை மூலம், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை மூலம் இது நடக்கும். அதனால், அந்த நேரம் உங்களைப் பிடிக்க வந்தால், சிலநேரம் நீங்களும் தப்பி ஓட வேண்டி இருக்கும். அந்த நேரம், உங்களை ஒரு நாட்டில் அகதியாக வரவேற்பார்கள் என்று நம்புவோமாக...


(இது ஒரு மொழிபெயர்ப்பு. மூலக் கட்டுரையை வாசிப்பதற்கு: ‘Het komt allemaal door de buitenlanders’)

Friday, December 12, 2014

மூலதனம் கற்போம் - 3 : மதிப்பின் இரு வடிவங்கள்

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் 
(பாகம் - 3) 


 பிரிவு 3 - மதிப்பின் வடிவம் அல்லது பரிவர்த்தனை மதிப்பு

இரும்பு, துணி, தானியம் போன்று இயற்கையில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் வெளித்தெரியும் பௌதிக வடிவம் காரணமாக விற்பனைக்கான சரக்குகளாக இருக்கின்றன. அவை பயன் மதிப்பையும், அதே நேரம் மதிப்பையும் தம்முள் கொண்டுள்ளன என்பதை இது வரையும் பார்த்தோம். அந்த மதிப்புக்கு பின்னால், மனித உழைப்பும், சமுதாயப் பெறுமதியும் இருக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம்.

எமது கண்களுக்கு தெரியும், மதிப்பு எனும் ஆரம்பக் கட்டத்திற்கு திரும்பி வருவோம். விற்பனைக்கான ஒவ்வொரு சரக்கும், அவற்றின் பௌதிக தன்மைகளுக்கு அப்பால் ஒரு பொதுவான மதிப்பைக் கொண்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது இரும்பு, துணி, தானியம் என்பன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பொருட்கள். ஆனால், அவற்றின் விலைகளை துல்லியமாக நிர்ணயிக்கிறோம். எப்படி?

ஒரு சரக்கு, வேறு வகையை சேர்ந்த இன்னொரு சரக்குடன் கொண்ட மதிப்பு சார்ந்த சாதாரண மனித உழைப்பு பற்றிப் பார்த்தோம். பொருட்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு மதிப்பு அங்கே இருக்க வேண்டும். நவீன காலத்தில், அந்தப் பொதுவான மதிப்பு பணம் எனும் ஒன்றால் தீர்மானிக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆயினும், நாங்கள் இங்கே ஓர் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். பணம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் என்ன? அது எப்படி தோன்றியது? பணத்தின் மதிப்பு என்ன? ஒரு பொதுவான மதிப்பு எப்படிப் பணமாக மாறியது? முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் செய்ய விரும்பாத வேலை இது. அவர்கள் ஒரு பொருளின் மதிப்பு எப்படிப் பணமாகிறது என்று ஆராய்வதில்லை. ஏனென்றால், மதிப்புக்குப் பின்னால் உள்ள மனித உழைப்பு ஓர் அடிமையுடையதாக கூட இருக்கலாம். அது பற்றி மார்க்ஸ் கொடுக்கும் விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.


1. மதிப்பின் இரு துருவங்கள் : ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும்  

நாம் முன்னர் பார்த்த உதாரணத்தில், துணியானது சட்டையின் மதிப்பாக இருக்கின்றது. அதே நேரம், சட்டை துணியின் மதிப்பை அடையாளப் படுத்துகின்றது. துணி தனது மதிப்பை நேரடியாக காட்டினால், சட்டை துணியின் மதிப்பை மறைமுகமாக காட்டுகின்றது. சட்டையை துணியுடன் ஒப்பிட்டு, துணியின் மதிப்பை நிர்ணயிக்கிறோம். அதனால் துணியின் மதிப்பானது "ஒப்பீட்டு வடிவம்" ஆகும்.

அதே நேரம், இன்னொரு பொருளான சட்டையை, அதனுடன் மாறுபட்ட துணியுடன் சமப்படுத்துகின்றோம். அது "சமத்துவ வடிவம்" ஆகும். ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும், ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள, ஒன்றை விட்டு மற்றதை பிரிக்க முடியாத தன்மைகள் ஆகும். உதாரணத்திற்கு, காந்தம் ஒன்றின் இரண்டு துருவங்களும், ஒன்றோடொன்று எதிரானதாக இருந்தாலும், ஒரே பொருளின் பகுதிகள் தான்.

உலகில் யாரும் ஒரே மாதிரியான பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதில்லை. சட்டைக்கு பதிலாக சட்டையை, அல்லது துணிக்கு பதிலாக துணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். 2 மீட்டர் துணி = 2 மீட்டர் துணி. இதற்கு ஓர் அர்த்தமும் கிடையாது. எனவே துணியின் மதிப்பை, வேறொரு பொருளுடன் ஒப்பிடுவதன் மூலம் தான் அதன் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதற்கு முதலில் அந்த வேறொரு பொருளை சமப் படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

2 மீட்டர் துணி = ஒரு சட்டை என்று பார்த்தோம். அப்படியானால், ஒரு சட்டையின் பெறுமானம், 2 மீட்டர் துணிக்கு சமமானது என்றும் அர்த்தமாகின்றது. இந்த ஒப்பீட்டை மறு பக்கமாக திருப்பி விட்டுப் பார்த்தால், சட்டை துணியின் மதிப்பையும், அதே நேரம் தனது மதிப்பையும், தானே தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அதனால், இவ்விரண்டு பொருட்களிலும் உள்ள, காந்தம் போன்ற எதிரெதிர் துருவங்கள் தான், ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துகின்றன.

ஓரிடத்தில், ஒரு சரக்கின் பெறுமதி அதன் ஒப்பீட்டு வடிவமா, அல்லது சமத்துவ வடிவமா என்பதை, இடம், கேள்வி என்பன தீர்மானிக்கின்றன. அந்தச் சரக்கின் மதிப்பு முக்கியமா, அல்லது அது இன்னொரு பொருளின் மதிப்புக்கு மாற்றீடாக பயன்படுகிறதா என்பதைப் பொறுத்தது.

இனி, மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தையும், சமத்துவ வடிவத்தையும் தனித் தனியாக, விரிவாகப் ஆராய்வோம்.



2. மதிப்பின் ஒப்பீட்டு வடிவம்

(அ.) ஒப்பீட்டு வடிவத்தின் உள்ளடக்கம்

நடைமுறை வாழ்க்கையில், இரண்டு சரக்குகளின் மதிப்புகளை, நாங்கள் அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு அளக்கிறோம். 2 மீட்டர் துணி = 1 சட்டையா அல்லது 5 சட்டைகளா? குறிப்பிட்ட அளவிலான துணியின் பெறுமானம் எத்தனை சட்டைகளுக்கு சமமானது என்று தான் பார்க்கிறோம். இதன் மூலம், நாங்கள் துணியின் மதிப்பு தான் தெரிவிக்கப் படுகின்றது. எப்படி? அதற்கு சமமாக சட்டையை கொண்டு வந்து நிறுத்துகிறோம். அதாவது, சட்டை ஒரு கண்ணாடி மாதிரி செயற்படுகின்றது. துணியின் பிம்பத்தை பிரதிபலிக்கின்றது.

மதிப்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான், சட்டையுடன் பரிவர்த்தனை செய்கின்றோம். இதனை ஒரு இரசாயனவியல் சூத்திரத்தின் மூலம் புரிய வைக்கலாம். பியூட்றிக் அமிலம், புரோபைல் பார்மேட் இரண்டும் வேறு பட்ட பொருட்கள். ஆனால் இரண்டுமே கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூலப் பொருட்களை சம விகிதங்களில் (C₄H₈O₂) கொண்டுள்ளன.

சட்டையை துணிக்கு சமமான பொருளாக கருதுவதன் மூலம், சட்டையில் மறைந்திருக்கும் உழைப்பை, துணியில் மறைந்திருக்கும் உழைப்புடன் சமப் படுத்துகின்றோம் என்பது தான் அதன் அர்த்தம். நெசவு செய்வதும், தைப்பதும் இரண்டு வேறு பட்ட தொழில்கள் தான். ஆனால், நெசவுக்கு பின்னால் மறைந்துள்ள மனித உழைப்பை பெயர்த்தெடுத்து, தையலுக்கு பின்னால் உள்ள மனித உழைப்புடன் பொதுவாக்குகின்றோம்.

மனித உழைப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மதிப்பைத் தீர்மானிக்கின்றது. ஆனால், அதுவே மதிப்பாக இருப்பதில்லை. ஒரு பொருளில் உருக் கொள்ளும் பொழுது அதன் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. துணியின் மதிப்புகளின் சேர்க்கையாக சட்டை உள்ளது. துணிக்கு சமமான பொருளாக ஒரே இயல்பைக் கொண்டுள்ளது. ஆனால், சட்டை தான் இங்கே மதிப்பை பிரதிபலிக்கிறது.

சட்டை தனியாக இருந்தால் அது மதிப்பெதையும் காட்டுவதில்லை. துணியோடு ஒப்பிடும் போது தான் அது தன் மதிப்பைப் பெறுகின்றது. உதாரணத்திற்கு, சாதாரண உடையில் இருப்பவருடன் ஒப்பிடும் பொழுது, கோட்டு சூட்டு போட்ட ஆசாமி மதிப்புக்கு உரியவராகத் தெரிகின்றார். ஆடம்பர ஆடை அணிந்தவரின் மதிப்பானது, சாதாரண ஆடை அணிந்தவருடன் ஒப்பிடுவதனாலேயே தெரிவிக்கப் படுகின்றது.

ஒப்பீட்டு வடிவத்தில், சட்டை துணியுடன் சமமாக்கும் பொழுது, சட்டை எனும் உருவமானது மதிப்பின் உருவமாகின்றது. அதாவது ஒரு பொருளின் மதிப்பு இன்னொரு பொருளின் பயன்மதிப்பு ஆகும். மதிப்பு என்ற வகையில் துணியும் சட்டையும் ஒன்று தான். அதாவது, துணியின் மதிப்பு தற்போது சட்டை என்ற வடிவத்தைப் பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ மதத்தில், அதன் நம்பிக்கையாளர்கள், ஏசு கிறிஸ்து எனும் மேய்ப்பனின் ஆடுகளாக கருதப் படுவது போன்ற மாற்றம் இது.

துணியும், சட்டையும் உதாரணத்தை உலகில் உள்ள எல்லா சரக்குகளுக்கும் பொருத்திப் பார்ப்பலாம். சரக்கு X ஒன்றின் மதிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக, சரக்கு Y உள்ளது. மனித உழைப்பின் பொருள் வடிவமான சரக்குகள், ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதன் மூலம், தமக்கிடையிலான மதிப்பை தெரிவிக்கின்றன. பயன்மதிப்பு கொண்ட Y, தன்னுடன் உறவு கொண்ட X இன் மதிப்பை தெரிவிக்கிறது. இவ்வாறு ஒரு பொருளின் மாயன் மதிப்பின் ஊடாக, இன்னொரு பொருளின் மதிப்பை தெரிவிப்பதானது மதிப்பின் ஒப்பீட்டு வடிவம் ஆகின்றது.


(ஆ) ஒப்பீட்டு மதிப்பின் அளவு வழி தீர்மானிப்பு

ஒவ்வொரு சரக்கும் பத்து மூட்டை அரிசி, இருபது கிலோ மிளகாய்த் தூள், என்றெல்லாம் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. எந்த சரக்கின் எந்த அளவிலும் மனித உழைப்பு மறைந்துள்ளது. எமது உதாரணத்தில், துணியை சட்டைக்கு சமமாக்குவது மட்டுமல்லாது, 2 மீட்டர் துணி என்று ஒரு திட்டவட்டமான அளவையும் தீர்மானிக்கிறோம். 

இரண்டு மீட்டர் துணி = ஒரு சட்டை என்ற சமன்பாடு, அதாவது துணியின் பெறுமானத்தை சட்டைக்கு சமப் படுத்தும் போது, இரண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் ஒரே அளவான உழைப்பு செலவாகி உள்ளது என்பதை உறுதிப் படுத்துகின்றோம். ஆனால், உழைப்பு நேரம் என்பது, உற்பத்தி திறனுக்கு ஏற்றவாறு மாறு படும். அதை நாங்கள் இங்கே பரிசீலிக்க இருக்கிறோம்.

உதாரணம் 1 : சட்டையின் மதிப்பு மாறாமல் அப்படியே உள்ளது. ஆனால், துணியின் மதிப்பு மாறுகின்றது. பருவ மழை வீழ்ச்சி குறைந்து விட்டதால், அல்லது நிலம் தரிசாகிப் போனதால், துணி உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் இரட்டிப்பாகின்றது. அப்படியானால் துணியின் மதிப்பும் இரண்டு மடங்காகும். முன்பு 2 மீட்டர் துணியில் அடங்கியுள்ள உழைப்பில் சரி பாதி தான், தற்போது ஒரு சட்டைக்கு சமமானது. அப்படியானால், 2 மீட்டர் துணி = 2 மீட்டர் சட்டை என்று சமன்பாட்டை மாற்ற வேண்டும். 

அதே நேரம், நெசவு இயந்திரங்கள் கணணி மயப் பட்டதன் விளைவாக துணி செய்வதற்கான உற்பத்தி நேரம் சரி பாதியாகக் குறைகின்றது. அப்படியானால், துணியின் மதிப்பும் சரி பாதியாகக் குறைகிறது. ஆகவே இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை ஆகின்றது. சரக்கு B இன் மதிப்பு (இங்கே சட்டை) மாறாதிருந்தால், அதன் ஊடாக தெரிவிக்கப் படும் சரக்கு A இன் மதிப்பு நேர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

உதாரணம் 2 : தற்போது துணியின் மதிப்பு மாறாமல் இருக்கிறது, ஆனால் சட்டையின் மதிப்பு மாறுபடுகின்றது. ஒரு சட்டை தைக்க அவசியமான உழைப்பு நேரம் இரு மடங்காகிறது. அதனால் இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை என்றாகிறது.

மறு பக்கம், சட்டையின் மதிப்பு சரி பாதியாகக் குறைந்தால், இரண்டு மீட்டர் துணி = இரண்டு சட்டைகள் ஆகின்றன. சரக்கு A (இங்கே:துணி) இன் மதிப்பு மாறாதிருந்தால், சரக்கு B (இங்கே : சட்டை) மூலமாக தெரிவிக்கப் படும் அதன் மதிப்பு, எதிர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு உதாரணங்களையும் ஒப்பு நோக்கினால், ஒப்பீட்டு மதிப்பின் மாற்றம் முற்றிலும் மாறுபட்ட எதிரெதிர் காரணிகளினால் ஏற்படலாம் என்பதைக் காண்கிறோம். ஒரு சரக்கின் மதிப்பு மாறாதிருந்தாலும், அதன் ஒப்பீட்டு மதிப்பு மாறலாம். மதிப்பு மாறினாலும் ஒப்பீட்டு மதிப்பு மாறாமல் இருக்கலாம்.

இந்த உதாரணங்களை நாங்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெறால், நிஜ வாழ்க்கையில், இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் பாத்திரத்தை பணம் வகிக்கின்றது. நாட்டில் எதற்காக பணத்தின் பெறுமதி கூடிக் குறைகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மேற்படி உதாரணங்கள் உதவும்.


3. மதிப்பின் சமத்துவ வடிவம் 

சமத்துவ வடிவம் மூன்று குணங்களை கொண்டுள்ளது:
1. ஒரு சரக்கின் பயன் மதிப்பு, தனக்கு எதிரான மதிப்பின் விம்பம் ஆகின்றது.
2. ஒரு சரக்கில் மறைந்துள்ள உழைப்பு, அதன் எதிரில் உள்ள சரக்கின் நேரடியான உழைப்பின் உருவமாகிறது.
3. தனி நபர்களின் உழைப்பு, சமூகத் தன்மையுள்ள உழைப்பின் வடிவத்தைக் கொண்டுள்ளது.

மேற்கொண்டு இவற்றை விரிவாகப் பார்ப்போம்.

A எனும் பொருளும், B எனும் பொருளும் உறவு கொள்ளும் நேரம், B இன் உடல் A இன் மதிப்பாகிறது. ஒரு சரக்கு தனது சொந்த உடலை, சொந்த மதிப்பின் வெளிப்பாடாக காட்டிக் கொள்ள முடியாது. அதனால் வேறொரு சரக்கின் பயன் மதிப்பை ஏற்றுக் கொள்வது அவசியமானது.

சரக்குகளின் பயன் மதிப்புகள் ஒரே அளவில் சமப் படுத்தக் கூடியவை என்பதை, பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். தராசு ஒன்றை எடுத்துக் கொள்வோம். எமக்கு ஐந்து கிலோ கிழங்குகள் தேவை. தராசின் ஒரு தட்டில் சில கிழங்குகளை போடுவோம். அடுத்த தட்டில் ஐந்து கிலோ இரும்புத் துண்டை எடுத்துப் போடுகிறோம். இங்கே இரும்பு தன்னை இரும்பாகக் காட்டிக் கொள்வதில்லை. எடை அளக்கும் பொருளாக உள்ளது.

எடை என்ற வகையில், இரும்பும், கிழங்கும் ஒன்று தான். வெவ்வேறு பண்புகளை கொண்ட பொருட்கள் இரண்டும், ஒரே கனமாக இல்லையென்றால், அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொள்ள முடியாது. தராசின் உதாரணத்தில், இரும்புத் துண்டு எடையை மட்டுமே குறிப்பது போன்று, எமது முன்னைய உதாரணத்தில் சட்டை துணியுடனான மதிப்பை மட்டுமே தெரிவிக்கின்றது.

ஆயினும், தராசின் ஒப்புவமை அது மட்டும் தான். எடை அளக்கும் இரும்புத் துண்டு, கிழங்கின் எடையை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால், சட்டையும், துணியும் இயற்கையல்லாத ஒன்றின் (உழைப்பு) மதிப்பை தெரிவிக்கின்றன. அது ஒரு வித்தியாசம் ஆகும்.

துணியின் ஒப்பீட்டு வடிவம், அதன் குணங்களில் இருந்து வேறுபட்ட சட்டையை போல் இருக்கிறது என்றால், அதன் அடிமட்டத்தில் சமூக உறவு மறைந்திருக்கிறது என்று அர்த்தம். சமத்துவ வடிவில் இது நேர்மாறாக காட்டிக் கொள்ளும். சரக்காகிய சட்டை அது உள்ள நிலையிலேயே மதிப்பை தெரிவிக்கின்றது. அது இயற்கையாக கிடைத்த மதிப்பின் வடிவம்.

சட்டை, துணியுடன் சமமான நிலையில் இருக்கும் உறவு நீடிக்கும் வரை தான் இது பொருந்தும். அதாவது, ஒப்பிடுவதற்கு துணி இல்லா விட்டால், சட்டைக்கும் மதிப்பு இருக்காது. விம்பங்களின் விநோதங்களில் இது முக்கியமானது. குடி மக்கள் இருப்பதால் தான், ஒருவர் அரசராக இருக்கிறார். மாறாக, அவர் அரசராக இருப்பதால் தான், தாங்கள் குடி மக்களாக இருப்பதாக எல்லோரும் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் முக்கியத்துவம் பல வகையானது. அது வெப்பத்திலும், குளிரிலும் இருந்து எமது உடலைப் பாதுகாக்கின்றது. சமத்துவ வடிவத்தை காட்டுகின்றது. அதே நேரம், பரிவர்த்தனை செய்து கொள்ளத் தக்கதாக உள்ளது. சமத்துவ வடிவத்தின் இந்த புதிரான தன்மை, முதலாளிய பொருளாதார அறிஞர்கள் அதைப் பணமாக புரிந்து கொள்ளும் வரையில் தெரிய வருவதில்லை.

அவர்கள் சரக்குகளுக்கு மாற்றீடாக தங்கம், வெள்ளியை கொண்டு வருவதன் மூலம், அந்த மாயத் தன்மையை விளக்க முனைகின்றனர்.  நமது முன்னைய உதாரணமான, "2 மீட்டர் துணி = 1 சட்டை" என்ற சாமானிய மதிப்புத் தெரிவிப்பு அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

சமத்துவமாக்குவதற்கு பயன்படும் சரக்கின் உடல் உருவம், நேரடியான மனித உழைப்பின் பொருள் வடிவமாக உள்ளது. அதே நேரம், மறைபொருளான உழைப்பின் உற்பத்தி வடிவமாகவும் இருக்கிறது. தையலிலும், நெசவிலும் மனித உழைப்புச் சக்தி செலவிடப் படுகின்றது. எனவே மனித உழைப்பு என்ற பொதுவான குணத்தை பெற்றுள்ளன. ஆனால், மதிப்புத் தெரிவிப்பில் ஒரு தலை கீழ் மாற்றம் ஏற்படுகின்றது.

அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். எடுத்துக் காட்டாக, நெசவு தான் துணியின் மதிப்பை உருவாக்குகிறது. அதற்கு காரணம், அது நெசவு என்பதால் அல்ல, மனித உழைப்பு என்ற பொதுக் குணத்தை கொண்டிருக்கும் காரணத்தினால் தான். இந்த உண்மையை நிரூபிப்பது எப்படி? நெசவு மூலம் உற்பத்தி செய்யப் பட்ட ஒரு பொருளை, இன்னொரு வடிவமான தையல் மூலம் உற்பத்தி செய்யப் பட்ட சட்டைக்கு சமமாக நிறுத்துவதன் மூலம் நிரூபிக்கலாம்.

இவ்வாறு ஒரு பொருளின் குறுக்கப் பட்ட மனித உழைப்பு, அதன் எதிரில் உள்ள நேரடியான மனித உழைப்பின் விம்பம் ஆகின்றமை, சமத்துவ வடிவின் இரண்டாவது குணம் ஆகும்.

தையலில் உள்ள திண்மையான உழைப்பு, துணியில் உறைந்துள்ள உழைப்புடனும் சேர்ந்து வருவதால், அது சமூகப் பெறுமானம் உள்ள உழைப்பாக மாறுகின்றது. இவ்வாறு தனியாட்களின் உழைப்பு, சமூகத் தன்மை கொண்ட உழைப்பெனும் வடிவம், சமத்துவ வடிவத்தின் மூன்றாவது விசேட குணமாகும்.

இயற்கையில் உள்ள இவ்வாறான பொருளாதார வடிவங்களை, பொருட்களின் குணாம்சங்களை, மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில் பகுப்பாய்வு செய்துள்ளார். சரக்குகளின் பண வடிவம் உயர்நிலை வளர்ச்சி என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், வேறொரு சரக்குடன் ஒப்பிடும் பொழுது, அதன் மதிப்பு விருப்பம் போல எடுத்துக் கொள்ளப் படுகின்றது என்று கூறுகின்றார்.

அரிஸ்டோட்டிலின் உதாரணம்: "5 படுக்கைகள் = ஒரு வீடு".  அதே 5 படுக்கைகளை குறிப்பிட்ட அளவு பணத்திற்கு சமமானதாக ஆக்கலாம். வீடு பண்பு வழியில் படுக்கைக்கு சமமான மதிப்புருவமாக்கப் பட வேண்டியது அவசியம் என்கிறார். "சமத்துவம் இல்லாமல் பரிவர்த்தனை இருக்க முடியாது. பொதுவான அளவீடு இன்றி சமத்துவம் இருக்க முடியாது." என்பது அரிஸ்டோட்டிலின் வாதம். ஆனால் மேலும் அவர் கூறும் பொழுது: "யதார்த்த வாழ்வில், பல்வேறு பட்ட பொருட்களை ஒன்றுக்கொன்று அளப்பது சாத்தியமில்லை." என்கிறார்.

இங்கே அவர் பொருட்களின் தரங்களை, தன்மைகளை அளப்பதை தான் அப்படிக் குறிப்பிடுகிறார். நடைமுறை வாழ்கையை இலகுவாக்குவதற்கான, ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே, இந்த அளவிடல் முறையை பின்பற்றலாம் என்பது அவரது முடிவு.

ஆகவே, மதிப்பு பற்றிய கருத்தியலின் பற்றாக்குறை காரணமாக, அரிஸ்டோட்டில் தனது பகுப்பாய்வு தோல்வியடைந்ததாக கூறுகின்றார். படுக்கைகளையும், வீட்டையும் சமமாக்கும் அந்தப் "பொதுத் தன்மை" எது? அரிஸ்டோட்டில் அப்படியொன்று இருக்க முடியாது என்கிறார். ஏன் இருக்க முடியாது? படுக்கையுடன் ஒப்பிடும் பொழுது, வீடானது சமமான, அடையாள படுத்தத் தக்க ஏதோ ஒன்றை தன்னுள் கொண்டுள்ளது. அது தான் மனித உழைப்பு.

சரக்குகளுக்கு மதிப்பை கொடுப்பது உழைப்பு தான் என்பதை, அரிஸ்டோட்டில் பார்க்க விடாமல் ஒன்று தடுத்து விட்டது. அன்றைய கிரேக்க சமுதாயம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களின் சமத்துவமின்மை மட்டுமல்லாது, உழைப்புச் சக்திகளின் சமத்துவமின்மையையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

மதிப்பின் வடிவத்தை தீர்க்கும் புதிரானது, மக்கள் மனதில் மனிதர்கள் சம உரிமை கொண்டவர்கள், மனித உழைப்பு சமத்துவமானது, என்ற கருத்தியல் நிலை பெறும் காலத்தில் தான் தீர்க்கப் படும். பொருட்களின் வடிவம், பொதுவான மனித உழைப்பின் உற்பத்தியாக கருதப் படும் ஒரு சமுதாயத்தில் அது சாத்தியமாகும். சரக்குகளின் உரிமையாளர்கள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சமுதாயத்தில் அது புரிந்து கொள்ளப் படும்.

இருப்பினும், சரக்குகளின் மதிப்பின் வெளிப்பாட்டில் ஒரு சமத்துவ உறவு இருக்கின்றது என்ற உண்மையை அரிஸ்டோட்டில் என்ற மேதை கண்டுபிடித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுதாய நிலவரங்கள் மட்டுமே, சமத்துவ உறவின் பின்னால் என்ன இருந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க விடாமல் அவரைத் தடுத்து விட்டன.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 

Monday, December 08, 2014

மூலதனம் கற்போம் : உழைப்பின் இரட்டைத் தன்மை

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் (பாகம் - 2)


ஒரு சரக்கில் மறைந்துள்ள மனித உழைப்பானது, பயன் மதிப்பாகவும், பரிவர்த்தனை மதிப்பாகவும் தன்னைக் காட்டிக் கொள்கின்றது என்று பார்த்தோம். உழைப்பின் இரட்டைத் தன்மையை கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது, நாம் இன்றைக்கும் கல்லூரிகளில் படிக்கும், அதே முதலாளித்துவ பொருளியல் பாடம் பற்றித் தான் மார்க்ஸ் பேசுகின்றார். ஒரு பொருளின் மதிப்பை, மனித உழைப்புத் தான் தீர்மானிக்கின்றது என்பதைத் தான், மார்க்ஸ் இங்கே நிறுவ விரும்புகிறார். அதாவது, மூலதனம் புத்தகம் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீதான விமர்சனமாகவே எழுதப் பட்டுள்ளது.

உழைப்பின் இரட்டைத் தன்மையை இன்னும் விரிவாகப் பார்ப்போம். ஒரு மீட்டர் துணி, ஒரு சட்டை ஆகிய இரண்டு சரக்குகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக, நாங்கள் அவற்றின் மதிப்பை எப்படித் தீர்மானிக்கிறோம்? துணியை விட சட்டையின் மதிப்பு அதிகம் என்று நினைத்துக் கொள்கிறோம். தற்போதைக்கு அப்படியே வைத்துக் கொள்வோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி, ஒரு சட்டையின் பெறுமதிக்கு சமமானது. (W = 2 W)

சட்டையும், துணியும் பார்க்கும் போதே வித்தியாசம் தெரியும் பொருட்கள். அதாவது, இரண்டு வெவ்வேறு பண்புகள் கொண்டவை. அவற்றை உற்பத்தி செய்யும் தையல் இயந்திரம், நெசவு இயந்திரம் என்பனவும் வித்தியாசமான பண்புகளை கொண்டவை.

அவ்வாறு வெவ்வேறு பண்புகளை கொண்டிருப்பதால் தான், அவற்றுக்கு இடையே சரக்குகள் என்ற உறவு இருக்கிறது. அதாவது, யாரும் ஒரு சட்டைக்குப் பதிலாக, இன்னொரு சட்டையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தனக்குப் பயன்படும், தன்னிடம் இல்லாத இன்னொரு பொருளுடன் தான் பண்டமாற்று செய்வார்கள்.

பண்பு ரீதியாக மாறு பட்ட பொருட்கள் தான், சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினையை உண்டாக்குகின்றன. அதனால், பொருட்களின் மதிப்பு கூடிக் குறைகிறது என்பது முதலாளித்துவ பொருளியல் அறிஞர்களின் வாதம். மார்க்ஸ் அதனை மறுக்கிறார். புராதன இந்திய உற்பத்தி முறையில், (முதலாளித்துவ) சரக்கு உற்பத்தி இருக்கவில்லை. ஆனால், அங்கே வேலைப் பிரிவினை இருந்துள்ளது.

நமக்கு நன்கு பரிச்சயமான இன்னொரு உதாரணமான தொழிற்சாலையை எடுத்துக் கொள்வோம். அங்கே பல்வேறு பிரிவுகளில் பிரிக்கப் பட்டுள்ள தொழிலாளர்கள், ஒரு சரக்கின் வேறுபட்ட பாகங்களை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் அவற்றை தமக்குள் பண்டமாற்று செய்து கொள்வதில்லை.

உழைப்பின் வெவ்வேறு வகைகளில் இருந்து உருவாகும் உற்பத்திப் பொருட்கள் தான் சரக்குகள் ஆக முடியும். சுருக்கமாக, பயன் மதிப்புள்ள பொருட்கள் எல்லாம் பண்பு வழியில் வேறுபட்டதாக இருப்பதால் தான், சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

தனிப்பட்ட உற்பத்தியாளர்களினால் அவர்களது சொந்த நலனுக்காகவும் சேர்த்து தயாரிக்கும் பயன்மதிப்புள்ள பொருட்கள், பின்னர் சமுதாய உழைப்புப் பிரிவினையாக வளர்ச்சி அடைகின்றது. ஒரு சட்டையை தைத்த தையல்காரர், அந்த சட்டையை அவரே அணிந்திருக்கலாம், அல்லது யாரோ ஒரு வாடிக்கையாளர் அணிந்திருக்கலாம். அந்த சட்டையின் பயன் மதிப்பு மாறப் போவதில்லை.

தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப் படாத புராதன காலத்தில் வாழ்ந்த மக்களும், சீதோஷ்ண நிலையில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆடைகளை தயாரித்து அணிந்து கொண்டார்கள். இன்றைக்கும் பனி படர்ந்த வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்கள், மான் தோலில் இருந்து தமக்கான குளிர் அங்கியை தாமாகவே தயாரித்துக் கொள்கிறார்கள். அங்கே எந்த தையல்காரரும் கிடையாது.

துணியும், சட்டையும், இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய செல்வங்கள் தான். இயற்கை அளித்த மூலப்பொருட்களை மனிதர்களின் தேவைக்காக பயன்படுத்தும் விளைபொருட்கள் அவை. எனவே, உழைப்பு பயன்மதிப்பாக அல்லது பயனுள்ள உழைப்பாக இருக்கிறது.

உழைப்பு என்பது, சமுதாயத்தின் எல்லா வடிவங்களுக்கும் பொருந்தக் கூடிய, மனித இனம் உயிர் வாழ்வதற்கு தேவையான இன்றியமையாத தேவை ஆகும். அது மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றம்.

பயன்மதிப்புள்ள பொருட்களில் உள்ள உழைப்பை தனியாக பிரித்து எடுத்து விட்டால், இயற்கையின் ஆதாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஒரு சரக்கில் அது மட்டும் முக்கியமானால், இயற்கை செயற்படுவது போல மனிதனும் செயற்பட முடியும். மந்திரத்தால் சட்டை ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாத விடயம்.

ஆனால், மறுபக்கத்தில், உழைப்பு மட்டும் பயன் மதிப்புகளின் ஒரே ஆதாரம் அல்ல. வடிவத்தை மாற்றும் செயற்பாட்டில் இயற்கைச் சக்திகள் மனிதனுக்கு உதவுகின்றன. வில்லியம் பெட்டி என்பவர் கூறியது போல, "உழைப்பு ஒரு பொருளுக்கு தந்தையாகவும், பூமி அதன் தாயாகவும் உள்ளது."

ஒரு சட்டையின் மதிப்பு, துணியின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமானது என்று பார்த்தோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி ஒரு சட்டைக்கு சமமானது என்று அறிந்து வைத்திருக்கிறோம். இது வெறும் அளவு சார்ந்த வேறுபாடு. ஒரே ஆள், நெசவு வேலை, தையல் வேலை இரண்டையும் செய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டல்லவா?

ஒரு வேலையாள் ஒரு நாள் நெசவு வேலை செய்து துணி உற்பத்தி செய்கிறார். அவரே மறுநாள் தையல் வேலை செய்து சட்டை உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், துணி, சட்டை ஆகிய பண்பு ரீதியாக மாறுபட்ட பொருட்கள் இரண்டும், ஒரே ஆளின் ஒரே உழைப்பைத் தானே கொண்டிருக்கின்றன? நமது முதலாளித்துவ உலகில் ஒரே ஆள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வேலைகளை செய்வதைக் காணலாம்.

பொருள் உற்பத்தி என்பது, ஒவ்வொரு மனிதனினதும் மூளை, தசை, நரம்புகளின், மனித உழைப்பின் செலவீடு தான். மனித உழைப்பை இரண்டு வகைகளில் செலவிட முடியும் என்பதை மேலே கண்டோம். அதாவது, ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அங்கே மனித உழைப்பு பிரயோகிக்கப் படுகின்றது.

அது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த பின்னர், பல விதங்களில் செலவிட முடியும் என்பது உண்மை தான். தேர்ச்சி பெற்ற தொழிலாளி, உயர் கல்வி கற்ற வங்கிப் பணியாளர், உழைப்பை வேறொரு மட்டத்தில் செலுத்துகின்றனர். ஆனால், சரக்கின் மதிப்பானது கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பின் செலவீட்டை குறிக்கின்றது.

ஒரு சாதாரண தொழிலாளியின் தேர்ச்சி அடையாத உடல் உழைப்பை சாமானிய உழைப்பு என்று கொள்வோம். தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது, ஒன்று திரட்டப் பட்ட சாமானிய உழைப்பாகும். அதாவது, பன்மடங்காக்கப் பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப் படுகின்றது.

ஒரு தேர்ச்சி பெற்ற உழைப்பு, தேர்ச்சி அடையாத சாமானிய உழைப்புடன் ஒப்பிட்டு சமன் செய்யப் படுகின்றது. அதாவது, சாமானிய உழைப்பு, ஒரு பொருளின் மதிப்பை அளப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப் படுகின்றது. (ஒரு கூலித் தொழிலாளிக்கு வழங்கும் கூலி வேறு விடயம். அதைப் பற்றி இங்கே பேசவில்லை. ஒரு தொழிலாளி வழங்கும் உழைப்பு நேரம் தான் கணிக்கப் படுகின்றது.)

சட்டையின் மதிப்பு, துணியை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கருதிக் கொண்டோம். இந்த வேறுபாடு எங்கிருந்து முளைத்தது? சட்டையில் அடங்கியுள்ள உழைப்பில் பாதியளவு தான் துணியில் அடங்கியுள்ளது. இன்னொரு விதமாகக் கூறினால், துணியின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பைப் போன்று இரு மடங்கு, சட்டை உற்பத்திக்கு செலவிடப் பட்டிருக்க வேண்டும்.

ஆகவே, ஒரு சரக்கின் பயன் மதிப்பில் மறைந்துள்ள உழைப்பை பண்பு ரீதியாக அளவிடுகின்றோம். அதற்கு மாறாக, (பரிவர்த்தனை) மதிப்பு அளவு ரீதியாக கணக்கிடப் படுகின்றது. "ஒரு பொருளைப் பாவிப்பதால் என்ன பிரயோசனம்?" என்று அதன் பயன் மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம். "அந்தப் பொருள் எவ்வளவு விற்பனைக்கு வருகின்றது? அது எவ்வளவு காலம் பாவிக்கும்?" என்று அதன் (பரிவர்த்தனை) மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம்.

உதாரணத்திற்கு, ஒரு சட்டை உற்பத்தி செய்யத் தேவையான உற்பத்தித் திறன் (இயந்திரங்கள், தொழில்நுட்பம்) மாறாமல் அப்படியே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப்படும் சட்டைகளின் மதிப்பு அவற்றின் தொகைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். அதாவது, ஒரு சட்டை உற்பத்தி செய்வதற்கு ஒரு வேலை நாள் தேவைப் பட்டால், இரண்டு சட்டைகள் உற்பத்தி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவை.

ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு சட்டையின் உற்பத்திக்கு தேவையான வேலை நாள் இரு மடங்காகின்றது. அப்படியானால், முன்னர் இரு சட்டைகளுக்கு இருந்த பெறுமதி, தற்போது ஒரு சட்டைக்கு இருக்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு சட்டைக்கு அரை நாள் வேலை நேரம் மட்டும் தேவைப் பட்டால், ஒரு சட்டையின் பெறுமானம் இரண்டு சட்டைகளுடையதாக மாறும். சுருக்கமாக, ஒரு பொருளின் உற்பத்திக்கு செலவிடப் பட்ட பயனுள்ள உழைப்பு அதே பண்பு கொண்டதாக நீடிக்கிறது. ஆனால், உழைப்பின் அளவு மாறியுள்ளது.

பயன் மதிப்புகளின் அளவிலான அதிகரிப்பு, பொருட் செல்வத்தின் அதிகரிப்பாகும். ஒருவர் அணிவதற்கு ஒரு சட்டை தான் தேவை. இரண்டு சட்டைகள் என்பது இரண்டு பேருக்குரியது. ஆனால், சட்டைகள் அதிகரிக்கும் பொழுது, அவற்றின் மதிப்பின் பெறுமதி குறைகின்றது. உற்பத்தி செய்யப்படும் அதிகளவு பொருட்களின் எண்ணிக்கையினால் செல்வம் அதிகரித்தாலும், மதிப்பால் குறைகின்றது. இந்த எதிரெதிர் திசையிலான போக்கிற்கு காரணம், உழைப்பின் இரட்டைத் தன்மை ஆகும்.

உற்பத்தித்திறன் என்பதும் மறைபொருளான உழைப்பின் வடிவம் தான். அதாவது, இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கவும், முன்கூட்டியே மனித உழைப்பு செலவிடப் பட்டுள்ளது. மனித உழைப்புச் சக்தியின் செலவீடு தான், அனைத்துப் பொருட்களிலும் மறைந்திருக்கும் உழைப்பு. மனித உழைப்பு சரக்கின் மதிப்பை படைக்கிறது, அதன் மதிப்பாகவே இருக்கிறது.

பிற்குறிப்பு: முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆதம் ஸ்மித், சரக்குகளை மதிப்பிடுவது மனித உழைப்பு என்பதை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், உழைப்பின் அளவைக் கொண்டல்ல, உழைப்பின் மதிப்பைக் கொண்டு சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறார். "ஒரு உழைப்பாளியின் ஆரோக்கியம், வலிமை, முனைப்பு சம அளவில் இருக்க வேண்டும். தொழிலாளி தனது மகிழ்ச்சி, ஓய்வு, சுதந்திரத்தின் ஒரு பகுதியை இழக்க வேண்டும்." என்று சொல்கிறார். (நாடுகளின் செல்வம், புத்தகம் 1) ஆதம் ஸ்மித் நவீன கால கூலித் தொழிலாளியை நினைத்து அப்படி எழுதி இருக்கிறார். உழைப்பு என்பது உலகில் தோன்றிய ஜீவராசிகளின் இயல்பான நடவடிக்கை என்று அவர் கருதவில்லை.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 
1. மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்

Monday, November 24, 2014

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்



மூலதனம் வாசிப்பு 

கம்யூனிசத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு கூட, ஒரு தகுதி வேண்டும். அவர்கள் முதலில் முதலாளித்துவத்தை பற்றி சிறிதளவேனும் அறிந்து வைத்திருக்க வேண்டும். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் முதலாவது பாகத்தின் தலைப்பு இது: "முதலாளித்துவ பொருளுற்பத்தி." 

மூலதனம் நூலை வாசித்து புரிந்து கொள்ளக் கஷ்டப் படுபவர்களுக்கும், வாசிக்க விரும்பாமல் எதிர்ப்பவர்களுக்கும் பிரயோசனப் படும் வகையில், ஒவ்வொரு பகுதியாக எடுத்து விவாதிப்பது நல்லது என்று நினைக்கிறேன். மூலதனம் வாசிப்பில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் எல்லோரும் ஆசிரியராகவும், மாணவராகவும் இருக்கலாம். 

முன்னாள் சோஷலிச நாடுகளில், ஒவ்வொரு தொழிலாளியும், சனிக்கிழமைகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டும். அங்கே பொருளியல் பாடம் படிக்க வேண்டும். அந்த எட்டு மணித்தியாலமும், வேலை நேரமாகக் கணிக்கப் பட்டு சம்பளம் கொடுத்து வந்தார்கள்.

உலகில் எந்த சர்வாதிகாரி தனது மக்களைப் படிக்க வைப்பான்? மேற்கத்திய முதலாளித்துவ "ஜனநாயக" நாடுகளில் கூட, தொழிலாளர்களுக்கு பொருளியல் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 




(மூலதனம், முதலாம் பாகம், புத்தகம் ஒன்று)

அத்தியாயம் ஒன்று : சரக்கு 

பிரிவு 1 : பயன் மதிப்பும், மதிப்பும் 


1. பயன் மதிப்பு 

உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் பயன் மதிப்பு (use value) இருக்கும். ஒரு சடப் பொருளின் "உள்ளார்ந்த தன்மை" என்ற தத்துவத்தின் படியும் அதைக் கூறலாம். ஒரு பொருள் பயன்படுத்தப் படுவதால், அல்லது நுகரப் படுவதால் பயன்மதிப்பு உண்டாகின்றது.

ஒரு பொருள், மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால், அதற்கு பயன்மதிப்புக் கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, அரிசி உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றது. அதே போன்று, உடை காலநிலைக்கு ஏற்றவாறு உடலைப் பாதுகாப்பதற்கும், மானத்தை மறைப்பதற்கும் உதவுகின்றது.

அநேகமாக, எல்லாப் பொருட்களுக்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாம் சரக்கு ஆவதில்லை. பண்டமாற்றுக்கு அல்லது வர்த்தகப் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்லப்படும் பொருள் மட்டுமே சரக்கு (Commodity) ஆகின்றது.

உதாரணத்திற்கு, காட்டில் இருக்கும் மாமரத்தில் காய்க்கும் மாங்கனிகளுக்கும் பயன்மதிப்பு இருக்கிறது. (அவற்றை நுகர முடியும்.) ஆனால், அவை சரக்காக மாட்டாது. ஏனென்றால், யாரும் அவற்றை பறித்துச் சென்று விற்பதில்லை. ஆனால், வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் மாமரத்தில் இருந்து கிடைக்கும் பழங்களை சந்தையில் கொண்டு சென்று விற்கின்றனர். ஆகவே, அந்தப் பழங்கள் சரக்குகள் ஆகின்றன.

பயன்மதிப்பு கொண்ட பொருட்கள், பரிவர்த்தனைக்காக எடுத்துச் செல்லப் படுகின்றன. இன்றைய காலத்தில் பணத்தின் மூலம் பரிவர்த்தனையை இலகுவாக தீர்மானிக்க முடிகின்றது. ஆனால், பணம் புழக்கத்தில் இல்லாத பண்டைய காலங்களில் பண்டமாற்று மூலம் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப் பட்டன.

வித்தியாசமான பௌதிகத் தன்மை கொண்ட பொருட்களை, ஒன்றுக்கொன்று சமமாக பண்டமாற்று செய்வது எப்படி?


2. பரிவர்த்தனை மதிப்பு

ஒரு பொருளின் பயன் மதிப்பை அறிந்து கொள்வது இலகு. அதன் பௌதிக, இரசாயனத் தன்மை மாற்றங்களைக் கொண்டு விலை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, நமது தோட்டத்தில் பறித்த மாம்பழங்கள், அல்லது வளர்த்த கோழியை கொண்டு சென்று சந்தையில் விற்கும் பொழுது, வாங்குவோரின் நுகர்வுத் தேவையை பொறுத்து, அதன் பயன் மதிப்பை (அல்லது விற்கும் விலையை) முடிவு செய்கிறோம். ஆனால், நாணயப் புழக்கம் இல்லாத பண்டைய காலத்தில், அவற்றை வேறொரு பொருளுடன் பண்டமாற்று செய்ய வேண்டியிருந்திருக்கும்.

ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட அளவு அரிசித் தானியத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடை அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளுடன் பண்டமாற்று செய்து கொள்கிறார். இவை யாவும் வெவ்வேறு பயன் மதிப்புக் கொண்டவை. அது மட்டுமல்லாது, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற, வேறு பட்ட அளவீடுகளை கொண்டவையாக உள்ளன.

சந்தைக்கு வந்த விவசாயி ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக, குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடையை கைமாற்றிக் கொண்டு செல்கிறார். அப்படியானால், குறிப்பிட்ட பொருட்களுக்கு இடையில், ஒன்றுக்கொன்று சமமாக மாற்றிக் கொள்ளத்தக்க பரிவர்த்தனை மதிப்பு ஒன்று இருக்க வேண்டும்.

கணிதத்தில், ஒரு வடிவத்தின் பரப்பளவைக் கணக்கிடுவதற்கு, அதனை பல முக்கோணங்களாக பிரித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முக்கோணத்தையும் அளப்பதற்கு, அடிப் பாகத்தின் பாதியையும், செங்கோட்டின் உயரத்தையும் பெருக்கி விடையைத் தெரிந்து கொள்கிறோம். அந்தக் கணித சூத்திரம் கண்ணுக்குப் புலப் படாத ஏதோ ஒன்றால் பெறப் படுகின்றது.

அதே போன்று, பொருட்களுக்கு இடையிலான பரிவர்த்தனை மதிப்பையும், கண்ணுக்குப் புலப் படாத "ஏதோ ஒன்று" தீர்மானிக்கிறது. அது எது? ஒவ்வொரு சரக்கிற்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வேறுபட்ட தன்மை கொண்டவை. அரிசியையும், இரும்பையும், சமப் படுத்துவது எப்படி? ஆகவே, ஒரு பொருளின் பயன் மதிப்பை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், ஒரு பொதுவான குணவியல்பு எஞ்சியுள்ளது.

ஆகவே, சரக்குகளை கைமாற்றிக் கொள்ளும் பொழுது வெளிப்படும், பொதுவான குணாம்சம் தான் உண்மையான மதிப்பு ஆகும். அந்தப் பொதுவான குணாம்சம், மனித உழைப்புத் தான். ஒரு தானியத்தை பயிரிடுவதற்கும், ஒரு தளபாடத்தை செய்வதற்கும், ஓர் ஆடையை நெசவு செய்வதற்கும் மனித உழைப்பு செலவிடப் படுகின்றது. அந்த மனித உழைப்பு தான், பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிக்கிறது.

இப்போது இன்னொரு பிரச்சினை எழுகின்றது. மனித உழைப்பின் விலையை தீர்மானிப்பது எப்படி? மணித்தியாலங்கள், நாட்கள், வாரங்கள் என்பன, ஒரு பொருளைத் தயாரிப்பதற்கு எந்தளவு மனித உழைப்பு செலவிடப் பட்டது என்பதை கணிக்க உதவுகின்றது.

அப்படியானால், ஒரு சோம்பேறி அதிக நேரம் எடுத்து ஆறுதலாக வேலை செய்து முடித்தால், குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படி நினைத்துக் கொள்வது தவறு. மனித உழைப்பு எனும் பொழுது, அது ஒரு தனி மனிதனின் உழைப்பைக் குறிப்பதல்ல. ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பைக் குறிக்கின்றது.

அதாவது, ஒரு சோம்பேறி, ஒரு சுறுசுறுப்பானவன், இரண்டுக்கும் இடையிலான சராசரி தொழிலாளியின் சராசரி உழைப்புத் தான், ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பில் அடங்குகின்றது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கிறது. அதுவே, ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பு. அதாவது ஒரு பொருளின் உண்மையான மதிப்பு.


3. மனித உழைப்பும் உற்பத்தித் திறனும் 

"கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்து, இன்றைய உலகம் எவ்வளவோ மாற்றத்தைக் கண்டு விட்டது. அதனால், அன்று மார்க்ஸ் கூறியவை இன்றைக்கு செல்லுபடியாகாது..." என்று வாதாடுவோர் பலருண்டு. அவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை வாசித்திருக்க மாட்டார்கள். விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவினால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, மூலதனம் நூலில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

ஒரு காலத்தில், மடிக் கணணி, கைத் தொலைபேசி என்பன மிகவும் விலை அதிகமான ஆடம்பரப் பொருட்களாக இருந்துள்ளன. அதற்குக் காரணம், அவற்றைத் தயாரிக்கத் தேவையான கொல்த்தான் எனும் மூலப் பொருள், பூமியில் மிக அரிதாகக் கிடைத்து வந்தது. பிற்காலத்தில் கொங்கோ நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக கொல்த்தான் உற்பத்தியை அதிகரித்தது. அதனால், மடிக் கணணி,கைத் தொலைபேசி என்பனவற்றின் விலைகளும் மட மடவென சரிந்தன.

மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் கிண்டலாக ஓர் உண்மையைக் கூறுகின்றார். "நிலக்கரியை வைரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தார்கள் என்றால், வைரத்தின் விலை செங்கல்லை விடக் குறைவாக இருக்கும்." வைரம், தங்கம் போன்ற கனிம வளங்கள், இயற்கையில் மிக அரிதாகக் கிடைப்பதால், அதைத் தேடுவதற்கான மனித உழைப்பும் அதிகரிக்கின்றது. அதனால் அதன் விலையும் அதிகமாக உள்ளது. இதிலே சுரங்கத் தொழிலாளரின் உடல் உழைப்பு மட்டுமல்ல, பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் மூளை உழைப்பும் சம்பந்தப் பட்டுள்ளது.

ஒரு சரக்கின் உற்பத்திக்கு தேவையான உழைப்பு மாறாது இருந்தால், அதன் மதிப்பும் மாறாமல் இருக்கும். ஒரு காலத்தில், கையால் நெசவு செய்பவரின் உழைப்பு, உடுக்கும் ஆடையில் மதிப்பாக இருந்தது. அதே உழைப்பு இன்றைக்கும் தொடருமானால், உடைகளின் விலையும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால்,நெசவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், உடைகளின் விலை பெருமளவு குறைந்தது.

முன்பு விசைத் தறியில் நெசவு செய்த தொழிலாளர்களின் அதே உழைப்பு நேரம், பின்னர் தொழிற்சாலைகளிலும் மாறவில்லை. ஆனால் உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்தது. ஆகவே மனித உழைப்பு மட்டுமல்லாது, உற்பத்தித் திறனும் ஒரு பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது. உண்மையில் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளில் நெசவு இயந்திரங்கள் வந்த பின்னர், உழைப்பின் நேரம் அரைவாசியாகக் குறைந்தது.

அதாவது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்புத் தான், ஒரு பண்டத்தின் மதிப்பையும், பருமனையும் நிர்ணயிக்கின்றது. பொதுவாக, உற்பத்தித் திறன் (நவீன தொழில்நுட்பம்) உயர்வாக இருந்தால், ஒரு பண்டத்தின் உற்பத்திக்கு தேவைப் படும் உழைப்பின் நேரமும் குறையும். அதன் மதிப்பும் குறையும். கடந்த தசாப்த காலமாக, கணனித் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பொருள் உற்பத்திக்கான செலவும் வீழ்ச்சி அடைந்தது. அந்த நோக்கத்தோடு தான், வருங்காலத்தில் ரோபோக்கள் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

எந்த இடத்தில் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கு பண்டத்திற்கு தேவைப்படும் மனித உழைப்பின் அளவும், மதிப்பும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, இந்தியாவில் பாரம்பரிய விவசாய முறைகளை பின்பற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தக்காளியின் விலை சந்தையில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், அதை உற்பத்தி செய்வதற்கான மனித உழைப்பு அதிகம்.

அதே இந்திய சந்தையில், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மரபணு மாற்றம் செய்யப் பட்ட தக்காளிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. அவர்களது விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு என்பன உற்பத்தித் திறனை உயர்த்தி உள்ளது. மனித உழைப்பை குறைத்துள்ளது. அதனால் விலையும் குறைந்துள்ளது.

ஒரு பயன்மதிப்பு கொண்ட பண்டத்தில், கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பு இறுகி இருப்பதாலேயே அது மதிப்பைப் பெற்றிருக்கிறது. (விற்பனைக்கான சரக்காக மாறுகிறது.) ஆயினும், பயன் மதிப்புக் கொண்ட எல்லாம், மதிப்புப் பெறுவதில்லை. காற்று, தரிசு நிலம், புல்வெளிகள் என்பன பயன் மதிப்புக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்தியாவில் ஒரிசா மாநிலக் காடுகளில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனம் வரும் வரையில், அந்த இடத்தின் பயன்மதிப்புக் குறித்து யாரும் அக்கறைப் படவில்லை.

ஒரு பொருள் விற்பனைக்கான சரக்காக மாறாமலே, அது மனித உழைப்பைக் கொண்டதாகவும், மனிதர்களுக்கு பிரயோசனமானதாகவும் இருக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் தனது தேவைக்காக, தானாகவே ஒரு மேசையை உற்பத்தி செய்கிறார். அவர் அந்தப் பொருளில் பயன் மதிப்பை உருவாக்குகிறார். ஆனால், அது விற்பனைக்கான சரக்கு அல்ல.

ஒருவர் உற்பத்தி செய்யும் பொருள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அதாவது, அதற்கு ஒரு சமுதாயப் பயன் மதிப்பு கிடைக்க வேண்டும். ஆயினும், நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு குடியானவன் தனது தானிய உற்பத்தியில் ஒரு பகுதியை நிலவுடமையாளருக்கும், கோயிலுக்கு தானமாகவும் கொடுக்க வேண்டி இருந்தது.

ஆகவே, ஒரு பொருள் உறபத்தி செய்யப் பட்டு, மற்றவர்களுக்கு பயன்பட்டாலும் எப்போதுமே அது சரக்காகி விடுவதில்லை. அந்தப் பொருளின் பயன் மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும் இன்னொருவருக்கு, பரிவர்த்தனை மூலம் கைமாற வேண்டும். அதாவது பண்டமாற்று செய்யப் பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பயன் எதுவும் கிடையாது. அதில் அடங்கி இருக்கும் உழைப்பும் மதிக்கப் படுவதில்லை.

பெரும்பாலும் உழைப்பாளர்களாக இருக்கும் நாங்கள், எங்களது உழைப்பை முதலாளி கொடுக்கும் பணத்துக்காக பரிவர்த்தனை செய்து கொள்கிறோம். அவ்வாறு தான், முதலாளித்துவ உற்பத்தியில், எமது உழைப்பு கூட விற்பனைச் சரக்காக மாறுகின்றது.

Tuesday, January 10, 2012

நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு

சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், நான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:



முன்னுரை

2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.

நெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.

அன்புடன்,
கலையரசன்

Tuesday, March 17, 2009

பொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி?

வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம்.

The Crisis of Credit Visualized

The Crisis of Credit Visualized from Jonathan Jarvis on Vimeo.