Showing posts with label நக்சலைட். Show all posts
Showing posts with label நக்சலைட். Show all posts

Sunday, December 20, 2020

தமிழ்நாடு புரட்சிக்கு வித்திட்ட விசைத்தறி தொழிலாளர் போராட்டம்


தறியுடன் நாவல் விமர்சனம்...

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த மக்கள் புரட்சியை விலாவாரியாக விவரிக்கும் ஒரு நாவல் தமிழில் இதுவரை காலத்திலும் வரவில்லை எனலாம். இரா. பாரதிநாதன் எழுதிய தறியுடன் நாவல் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்துள்ளது. தமிழ்நாட்டின் வட மேல் மாவட்டங்களான திருப்பூர், சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் எண்பதுகளில் நக்சலைட் புரட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த தொழிலாளர் போராட்டம் தான் இந்த நாவலின் கதைக்கரு. இதை எழுதிய இரா. பாரதிநாதன் ஒரு விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்தவர் என்பது மட்டுமல்லாது, அங்கு நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்காக போலீசில் பிடிபட்டு சித்திரவதைப் பட்டு வருடக் கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். இந்த நாவலில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனை அல்ல.

உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப் பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, சில புனைவுகளுடன் இந்த நாவல் எழுதப் பட்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடந்துள்ளதா என்ற பிரமிப்பு ஏற்பட்டுகிறது. சமூகப்புரட்சி சம்பந்தப்பட்ட நாவல் என்றால், அது ரஷ்யாவை, அல்லது வியட்நாமை கதைக் களனாக கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த நாவலை வாசிக்க வேண்டும். இதில் சாதி, மத பேதமின்றி, வர்க்க உணர்வுடன் போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரும் தமிழ் பேசும் தமிழ்நாட்டுக் காரர்கள். வர்க்கப் போராட்டத்தில் மொழி முரண்பாட்டுக்கும் இடமில்லை. தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த கத்தார், அங்கு சென்று புரட்சிகர இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நாவலின் இறுதியில் வருகிறது.

திருப்பூர் பகுதிகளில் பரவலாகக் காணப்படும், விசைத்தறி இயந்திரங்கள் பாவித்து, நெசவு செய்யும் தொழிற்சாலைகள் தான் இந்த நாவலின் அச்சாணி. உள்நாட்டு ஆடைத் தேவைக்காக மட்டுமல்லாது, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யும் சிறிதும் பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களை பற்றி சிந்திப்பதில்லை. கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை சுரண்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகின்றன. இயந்திரங்களின் பேரிரைச்சல் காரணமாக காதுகள் செவிடாகலாம். ஆனால் எந்த முதலாளியும் காதுகளுக்கு கவசம் வாங்கிக் கொடுப்பதில்லை. இதைவிட பஞ்சுத் துகள்களை சுவாசித்து காலப்போக்கில் காச நோய் வந்து செத்தவர்கள் பலருண்டு. இருப்பினும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களை வாங்கினால் தனது இலாபத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டி வருமே என்பது தான் முதலாளிகளின் கவலை.

பெரும்பாலான விசைத்தறிகளை சொந்தமாக வைத்திருக்கும் சிறு முதலாளிகள், பெரும் மூலதன முதலாளிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. காலப்போக்கில் அவர்களும் பெரும் மூலதன திமிங்கிலங்களால் விழுங்கப் படுவார்கள். அது குறித்து எந்த அரசியல் விழிப்புணர்வும் இல்லாத, குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை சேர்ந்த சிறு முதலாளிகள், ஈவிரக்கமின்றி தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் தாமும் ஒரு நாள் பெரிய முதலாளியாக வரலாம் எனக் கனவு காண்கிறார்கள். இந்த உண்மையும் நாவலில் ஓரிடத்தில் பேசப் படுகின்றது.

இருப்பினும் இந்த நாவலின் கதை சிறு முதலாளிகளுக்கு எதிரான போராட்டக் களமாக விரிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தொழிற்புரட்சிக்கு பின்னரான லண்டன், மான்செஸ்டர் நகரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அறியாதவர்கள் இந்த நாவலை வாசிக்கவும். அப்போதும் இதே மாதிரித் தான் சிறிதும், பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தன. அன்றிருந்த லண்டன், மான்செஸ்டர் தொழிலகங்களில் இதே நிலைமை தான் காணப்பட்டது. அங்கும் அப்போது தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இயந்திரங்களில் அகப்பட்டு கைகளை இழந்து முடமானவர்கள் பலருண்டு.

அவ்வாறு இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப் பட்ட ஒரு பெண் தொழிலாளியின் துயரச் சம்பவத்தில் இருந்து தான் தறியுடன் நாவலின் கதை ஆரம்பமாகிறது. சம்பந்தப்பட்ட முதலாளி விபத்தில் சிக்கிய தொழிலாளியின் மருத்துவ செலவுகளை பொறுப்பேற்க மறுப்பதுடன், சிறு தொகையை கொடுத்து ஏமாற்ற முனைகிறான். இந்த அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் மார்க்சிய நூல்களை கண்டாலே ஓட்டமெடுத்த ரங்கன் என்ற தொழிலாளி, தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக அரசியலுக்குள் இழுக்கப் படுகிறான். அன்றிலிருந்து ஒரு தீவிர இளம் புரட்சியானாக மாறுகிறான். அந்த ரங்கன் தான் இந்த நாவலின் கதாநாயகன்.

அரசியல் உணர்வற்ற சாதாரண மக்கள் எவ்வாறு அரசியல்மயப் படுகிறார்கள் என்பதை, இந்த நாவல் விரிவாகக் கூறுகின்றது. அதைக் கதாசிரியர் சாதாரண மனிதர்களின் பேச்சு மொழியில் எழுதிச் செல்கிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளராக அந்த மக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை விபரிக்கிறார். உதாரணத்திற்கு ஒரு மரமேறும் தொழிலாளியின் உதவியை நாடிச் செல்லும் ரங்கனை, அரசியலை வெறுக்கும் அவனது மனைவி கண்டபடி திட்டி விரட்டும் காட்சி ஒன்று வருகின்றது. பிற்காலத்தில் அதே பெண் அரசியலை புரிந்து கொள்வதுடன் புரட்சிப் பாடல்கள் பாடும் பெண்கள் குழுவிலும் பங்கெடுக்கிறார்.

அன்றைய காலத்தில் தலைமறைவாக இயங்கி வந்த நக்சலைட் இயக்கம், விசைத்தறித் தொழிலாளர் சங்கம் அமைப்பதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகின்றது. உண்மையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் இயக்கம் தலைமறைவாக மட்டுமல்லாது, இது போன்று வெளிப்படையாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை நாவல் உணர்த்துகிறது. தலைமறைவாக மட்டும் இயங்கும் கெரில்லா இயக்கம், சிலநேரம் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டுப் போகலாம். அதைத் தடுப்பதற்கு தொழிற்சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகள் ஊடாக செயற்படுவதும் அவசியமானது. 
 
மேலும் வெளிப்படையாக இயங்குவோர் அரசு வழங்கும் ஜனநாயக வெளியை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. கைது செய்யப் பட்டவர்களை விடுவிப்பதற்காக வழக்காடுவது, நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது, பிணையில் விடுவிப்பது என்பனவும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி தான். சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப் பட்டிருந்த போதிலும், அதற்குள்ளும் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். நாவலின் சில அத்தியாயங்கள் சிறைச்சாலைக்குள் நடக்கும் உரிமைப் போராட்டங்களை விளக்குகின்றன.

தறியுடன் நாவலின் கதை, எண்பதுகளில் நக்சலைட்டுகள் தலைமறைவாக இயங்கிய காலத்தில் நடக்கிறது. நக்சலைட் இயக்கத்தின் முழுநேரப் பணியாளர்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, தொழிலாளர் போராட்டங்களுக்கு தத்துவார்த்த வழி காட்டுகின்றனர். அவர்களில் தகுதியான செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து அரசியல் வகுப்புகள் நடத்துகின்றனர். பொதுவாக எல்லா தலைமறைவு இயக்கங்களும், தமது உறுப்பினர்கள் ஒன்று கூடும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களை மிக இரகசியமாக வைத்திருப்பார்கள். உறுப்பினர்களின் உண்மைப் பெயர் மறைக்கப் பட்டு புனைபெயர் பாவிக்கப் படும். இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் பற்றி இந்த நாவல் விரிவாகப் பேசுகின்றது.

அதை வாசிக்கும் பொழுது, எனக்கு ஈழப் போராட்டம் தொடங்கிய காலகட்டம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக எண்பதுகளின் தொடக்கப் பகுதிகளில் ஈழ விடுதலை அமைப்புகளும் இதே மாதிரித் தான் இயங்கின. கூட்டம் நடக்கும் இடம் குறித்து சில மணிநேரங்களுக்கு முன்னர் தான் வாய் வழியாக அறிவிக்கப் படும். சிலநேரம் வேறொரு கிராமத்திற்கு சென்று தங்க வேண்டியும் இருக்கலாம். அனேகமாக ஊருக்கு வெளியே அடித்தட்டு மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியாக இருக்கும். திடீரென ரோந்து சுற்றும் போலிஸ் வாகனம் வந்தால், எந்தப் பக்கத்தால் தப்பிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, அந்த மறைவிடம் தெரிவு செய்யப் பட்டிருக்கும். தமிழ்நாட்டில் நக்சலைட் புரட்சி இயக்கமும், ஈழத்தில் ஈழ விடுதலை இயக்கமும் வெவ்வேறு குறிக்கோள்களுக்காக போராடினாலும், இரகசிய நடவடிக்கை குறித்த செயற்பாடுகளில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகின்றது.

தறியுடன் நாவலை வாசிக்கும் பொழுது, கிளாசிக்கல் நாவலாக புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவலை வாசித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைகளை கொண்டவை. அதாவது அரசியல் என்னவென்றே அறியாத கதாபாத்திரங்கள், தொழிற்சாலைகளில் நடக்கும் சுரண்டலை எதிர்த்து தமது உரிமைகளுக்காக போராடுவதன் ஊடாக அரசியலை கற்றுக் கொள்கின்றன. எழுநூறு பக்கங்களுக்கு அதிகமாக விரியும் தறியுடன் நாவல், பிற நாவல்களைப் போன்று சாதாரண மக்களின் இன்பம், துன்பம், காதல், சோகம், கோபம் போன்ற உணர்வுகளை மட்டும் பேசவில்லை. இடையிடையே அரசியல் குறிப்புகளும் வருகின்றன. உதாரணத்திற்கு நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளான சாதிமறுப்புத் திருமணம், பெண்களின் சமத்துவம் போன்ற விடயங்களில் அரசியல் விளக்கவுரைகளும் சேர்க்கப் பட்டுள்ளன.

இந்த நாவலை வாசிக்கும் வாசகர்கள், வழமை போல வாசித்து முடிந்த பின், ஒரு மூலையில் போட்டு விட்டு சென்று விட முடியாது. இந்த நாவல் சொல்ல வரும் அரசியல் கருத்துக்கள் மூலம் தெளிவான உலகறிவைப் பெற்றுக் கொள்வார்கள். அதனால் எல்லா வகையான தரத்தை உடையவர்களுக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் எழுதப் பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, கதை எந்த இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. இதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களில் தறியுடன் குறிப்பிடத் தக்க இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாவல் ஒரு நடந்து முடிந்த கதையை பற்றி மட்டுமல்லாது, இனிமேல் நடக்கப் போகும் கதைகளை பற்றியும் கூறுகின்றது.

- கலையரசன் 
20-12-2020

 
நூலின் பெயர்: தறியுடன் 
ஆசிரியர்: இரா. பாரதிநாதன்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம் 
4/413, 3வது வீதி பாரதி நகர், பிச்சம்பாளையம் 
திருப்பூர் 641 603 
94866 41586 
gunarpf@gmail.com 
விலை இந்திய ரூபா: 650.00

Sunday, November 24, 2019

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

"நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்": அனைவரும் வாசித்து அறிந்திருக்க வேண்டிய ஆவணம். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். 432 பக்கங்களை சில நாட்களில் வாசித்து முடிக்கும் அளவிற்கு சுவையாக எழுதப் பட்டுள்ளது.

 இது ஒருவரது சுயசரிதை தான். ஆனால், இதனூடாக பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அறுபதுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவுகள். திருத்தல்வாததிற்கு எதிரான போராட்டம். புரட்சிகர அரசியலுக்காக ஒரு புதிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடமைப்பாடு. அதற்கான தத்துவார்த்த விவாதங்கள். அஜிதா இது போன்ற விடயங்களை, நூலின் ஆரம்பத்தில் இலகுவான மொழி நடையில் கூறிச் செல்கிறார்.

ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான அஜிதா, தீவிர கம்யூனிச அரசியல் ஈடுபாடு காரணமாக நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து காடுகளில் தலைமறைவாக வாழும் அளவிற்கு துணிச்சல் உள்ள பெண்மணி. ஆரம்ப கால நக்சலைட் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்த ஒரே பெண்ணாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் அவரது நினைவுக்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.

அஜிதாவின் தாயும், தந்தையும் கூட நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்கள் தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர். இவரது தந்தை கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகிய நேரம், "சி.ஐ.ஏ. உளவாளி" என்று எந்த ஆதாரமும் இன்றி அவதூறு செய்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியின் தலைவர் சாரு மாஜும்தார் கூட அஜிதா குடும்பத்தினரை புறக்கணிக்கும் அளவிற்கு கட்சிக்குள் கழுத்தறுக்கும் நபர்கள் இருந்துள்ளனர்.

வட இந்தியாவில் சாரு மாஜும்தாரால் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டியிலும், பின்னர் உருவாக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) போன்றவற்றில் அஜிதாவின் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கெடுத்துள்ளனர். (பிற்காலத்தில் சாரு மாஜும்தாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.) அதே நேரம், கேரளாவுக்கு வருகை தரும் திருத்தல்வாத மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, மகாநாட்டுக்கு அருகில் மாவோவின் நூல்களை விற்பனை செய்வது என்று இவர்களது ஆரம்ப கால கிளர்ச்சி அரசியல் இருந்துள்ளது.

மலைப் பகுதியை சேர்ந்த வயநாட்டு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது தான் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தயாராகிறார்கள். அப்போது மன உறுதியற்றவர்கள் விலகிச் செல்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத துணிச்சலான போராளிகள், ஆயுதப்போராட்டம் பற்றிய முன் அனுபவம் ஏதும் இல்லாத நிலையிலும் காடுகளுக்குள் முகாமிட்டு தங்கியுள்ளனர். அப்போது அவர்களது கைகளில் இரண்டு, மூன்று துப்பாக்கிகளும், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்துள்ளன.

நக்சலைட் போராளிகள் ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளனர். அங்கிருந்த தொலைத்தொடர்பு கருவியை சேதப் படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் நிலச்சுவாந்தர்களான ஜமீன்தார்கள் வீடுகளை தாக்கி, அங்கு அடமானம் வைக்கப் பட்டிருந்த விவசாயிகளின் கடன் பத்திரங்களை கொளுத்தி உள்ளனர். ஜமீன்தார்களிடம் இருந்த பணம், நகைகளை சூறையாடியுள்ளனர். இதனால் இயக்கத்தின் நிதித் தேவையை ஈடுகட்ட முடிந்தாலும், ஆயுதப்போராட்டம் குறித்த சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அத்தனையும் வீணாகிப் போயின.

உழைக்கும் மக்களின் வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி ஆதிவாசி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவின் பிற பாகங்களில் இருந்து வந்து குடியேறி தமது நிலங்களை பறித்துக் கொண்ட பிற மலையாளிகளை விட இந்த நக்சலைட் புரட்சியாளர்கள் வேறுபட்டுத் தெரிந்தனர். அதனால் அவர்களுக்கு ஆதிவாசி மக்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கி உள்ளனர். மேலும் ஆதிவாசி இளைஞர்கள் தான் காடுகளில் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். இருப்பினும் நீண்ட காலம் தலைமறைவாக வாழ முடியாத காரணத்தால், அல்லது வேறு வழி தெரியாத படியால் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுள்ளனர். அஜிதா உட்பட எஞ்சியோர் ஆள்நடமாட்டம் உள்ள கிராமப் பகுதிக்கு வந்த நேரம், பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வழமையான வெகுஜன அரசியலில் தெருக்களில் போராட்டம் நடத்துவதற்கும், தலைமறைவு அரசியலில் ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கும் இடையிலான வேறுபாட்டை, அன்று அஜிதா போன்றோர் புரிந்து கொள்ளவில்லை. இதை அவரே தனது நூலில் ஒத்துக் கொள்கிறார். இருப்பினும் "இது தனிநபர் சாகசம்" என்று சொல்வதையும் மறுக்கிறார். அவர்களது ஆயுதப்போராட்டத்திற்கு ஆதிவாசி மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இந்தியாவில் புரட்சிக்கான தேவையும் இருந்துள்ளது. வாயளவில் புரட்சி பற்றிப் பேசிக் கொண்டே, செயலில் எதையும் காட்டாத கபடவேடதாரிகள் ஒரு மிகப்பெரிய தடையாக (குறிப்பாக தேர்தல் அரசியலில் ஈடுபடும் வலது-இடது கம்யூனிஸ்ட் கட்சியினர்.) இருந்துள்ளனர். அரசாங்கமும் வாய்ச் சொல் வீரர்கள் தமக்கு ஆபத்தில்லாதவர்கள் என்பதால் சில விட்டுக்கொடுப்புகளை செய்கின்றது.

இந்த நூல் அறுபதுகள், எழுபதுகள் காலகட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், அன்றிருந்த நிலைமை இன்றும் தொடர்வதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு மாவோயிஸ்டுகள் போலிசால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களும் சரணடைய வந்தவர்கள் என்றும், பொலிஸ் முதலில் கைது செய்து பின்னர் "என்கவுண்டர்" கொலை செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. இதே மாதிரியான சம்பவங்கள் அறுபதுகள், எழுபதுகளிலும் நடந்துள்ளதை அஜிதாவின் நூல் வாயிலாக அறிய முடிகின்றது.

நூலின் அரைவாசிப் பகுதி, அஜிதாவின் சிறை வாழ்க்கையை பற்றி விவரிக்கின்றது. அவர் சிறைச்சாலையில் பிற கைதிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கதைகளை எழுதி உள்ளார். அவை அடித்தட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் குரூரமான சமூக யதார்த்தம் பற்றிப் பேசுகின்றன. அஜிதா ஓர் ஆயுட்தண்டனை கைதியாக சிறையில் கழித்த காலத்தில் தான் மார்க்சிய நூல்களை ஆழமாகக் கற்றுள்ளார். தீராத்துயருக்குள் சிக்கிக் கொண்டாலும் மன உறுதியை காப்பாற்றுவதற்கு மார்க்சியப் படிப்பு அவருக்கு உதவியுள்ளது. இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் முடிவுக்கு வந்து, மத்தியில் ஆட்சி மாறியதும் பெரும்பாலான நக்சலைட் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்.

நக்சலைட் புரட்சியாளர்கள் போலீசில் பிடிபட்டவுடன் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. எந்தக் குற்றமும் செய்திராதவரைக் கூட அடித்து கையை உடைக்கும் அளவுக்கு போலிசின் வன்மம் மேலோங்கி காணப்பட்டது. சிறைக்குள் கைதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை கோரினாலும் அடி, உதை, சித்திரவதை தான் பதிலாகக் கிடைக்கும். அந்தளவுக்கு நக்சலைட் புரட்சியாளர்களை கீழ்மக்கள் போன்று, காவல்துறையினரால் வெறுக்கப் பட்டுள்ளனர்.

நக்சலைட் கைதிகள் அத்தனை போரையும் நிரந்தர நோயாளியாக்கும் நோக்குடன் போலிஸ் சித்திரவதைகள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் அவர்கள் விடுதலையான போதிலும் நிரந்தர நோயாளிகளாக காலம் கழிக்க வேண்டிய அவல நிலை. இதை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக கருத வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் குழுவினர் ஒடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான்.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் மட்டுமே ஒடுக்குமுறைக்கு காரணம் அல்ல. ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வர்க்க முரண்பாடு காரணமாக அதிகார வர்க்கம் அளவுகடந்த வன்முறையை, ஒடுக்குமுறையை பிரயோகிக்கத் தயங்காது என்பதை "நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்" நமக்கு உணர்த்துகின்றன.

Monday, December 22, 2014

இந்தியாவில் மாறி வரும் மாவோயிஸ்டுகளின் போரியல் தந்திரம்


கேரளாவில், காவல்துறையினருக்கும், கந்து வட்டி மாபியாவுக்கும் இடையில் நடந்த, இரகசிய தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுள்ள மாவோயிஸ்டுகள், அதனை மக்கள் முன்னிலையில் பகிரங்கப் படுத்தியுள்ளனர். பொலிஸ் மாவோயிஸ்டுகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், மாவோயிஸ்டுகள் பொலிசின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது புதிய விடயம்!

கேரளாவில் தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட் குழு, மக்களிடம் விநியோகித்த "காட்டுத் தீ" எனும் பத்திரிகையில், அந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தமது தொழில்நுட்பப் பிரிவினரால் ஒட்டுக் கேட்கப் பட்ட உரையாடல் எனக் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், வயநாட்டில் உள்ள வெள்ளமுண்டா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. அதே பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி தான் ஒட்டுக் கேட்கப் பட்டுள்ளது.

பதிவு செய்யப் பட்ட உரையாடலில், நாசர் எனும் கந்துவட்டிக் காரனுடன் தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரி, அங்கு ரெய்டு நடக்க இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நாசர், மேலதிகாரிகளுடன் பேசிப் பார்க்குமாறு கூறுகின்றார். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கூறும் அதிகாரி, காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்.

இந்த தகவலை வெளியிட்ட மாவோயிஸ்டுகள், பொது மக்கள் கந்து வட்டிக் காரர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்றும், "பிளேடு மாபியா" என்று அழைக்கப் படும் கந்து வட்டிக் காரர்கள் பற்றி மாவோயிஸ்ட் தளத்தில், அல்லது ஒரு செயற்பாட்டாளரிடம் முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுள்ளனர். (Deccan Chronicle, 14 dec. 2014)

பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், காண்டிராக்டர்கள்,போன்றவர்களிடம் இருந்து, மாவோயிஸ்டுகள் பெருமளவு பணத்தை வரியாக அறவிடுவதாக, இந்திய அரசு கூறுகின்றது. சரியான தொகை தெரியா விட்டாலும், வருடாந்தம் குறைந்தது 140 கோடி ரூபாய்கள் மாவோயிஸ்டுகளுக்கு வருமானமாகக் கிடைப்பதாக, பாராளுமன்றத்திற்கு பதிலளித்த அமைச்சர் Kiren Rijiju தெரிவித்துள்ளார்.

இந்திய மாவோயிஸ்டுகள், தமது போரியல் தந்திரத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுவரை காலமும் நடத்தி வந்த கெரில்லா தாக்குதல்களில் இருந்து, நடமாடும் போர்முறைக்கு, தமது தாக்குதல்களை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். (The Asian Age, 14 dec. 2014)

தமது பிரதேசத்தில் உள்ள பாதுகாப்புப் படைகளை அகற்றும் வகையில், தமது நடமாடும் போர் முறை அமைந்திருக்கும் என்று, ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுத பலம் அதிகரித்துள்ளதாக, பாதுகாப்புத்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.

நடமாடும் போர் முறை கெரில்லாத் தாக்குதல்களையும் உள்ளடக்கியது. ஆனால் வித்தியாசமானது. கெரில்லாக்கள் தாக்கி விட்டு, பின்னர் தமது மறைவிடங்களில் பதுங்கிக் கொள்வார்கள். நீண்ட காலத்திற்கு வேறு தாக்குதல் எதுவும் நடக்காது. ஆனால், நடமாடும் படையணி தாக்கி விட்டு முன்னேறிச் செல்லும். 

பொதுவாக இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எங்கோ ஒருகாட்டுப் பகுதியில் இருக்கும். இடையில் உள்ள பகுதிகளில் படையினரின் கட்டுப்பாடு இருக்கும். அங்குள்ள படையினரின் காவலரண்கள், சிறுமுகாம்கள் போன்றவற்றை தகர்ப்பதன்மூலம், அவர்களைப் பின்வாங்கச் செய்ய வேண்டும். அதற்குத் தான் நடமாடும் படையணி தேவை.

கமாண்டோக்கள் மாதிரி சிறப்புப் பயிற்சி பெற்ற படையணி, ஓரிடத்தில் தாக்குதல் நடத்தி விட்டு, அதற்கு அருகில் உள்ள வேறொரு இடத்தில் தாக்குதல் நடத்தும். அப்படியே தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும். சுருக்கமாக, போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதையை உருவாக்குவது. அங்கே அவர்கள் நிலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், படையினரின் நடமாட்டம் குறையும். மேலதிக விளக்கத்திற்கு, சேகுவேராவின் கெரில்லா யுத்தம், மற்றும் மாவோவின் இராணுவப் படைப்புகளை வாசிக்கவும்.

இது ஏற்கனவே ஈழப் போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட தந்திரோபாயம் தான். 1985 ம் ஆண்டு, ஈழத்தில் ஆயுதப் போராட்டம் நடத்திய மார்க்சிய லெனினிச இயக்கமான ஈரோஸ், நடமாடும் போரியல் தந்திரோபாயத்தை பயன்படுத்தி இருந்தது. வடக்கே யாழ் குடாநாட்டில் இருந்து கிளம்பும் ஒரு படையணி, தெற்கே மட்டக்களப்புக்கு செல்ல வேண்டும். இடையில் சந்திக்கும் சிறிலங்கா படையினருடன் மோதல்கள் ஏற்படும். 

ஒரே கெரில்லா படையணி தான், அந்த மோதல்களுக்கு காரணமாக இருந்திருக்கும். அதன் மூலம் விநியோகப் பாதையை, களத் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். பல வருடங்களுக்குப் பின்னர், புலிகளும் அந்த தந்திரோபாயத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். புலிகளின் இராணுவ தந்திரோபாயங்களை வகுத்தவர்களும், மாவோவின் இராணுவப் படைப்புகளை வாசித்திருந்தார்கள். ஆனால், அதை வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை.

Wednesday, March 28, 2012

நக்சலைட் திரைப்படம் : "ரெட் அலெர்ட்" - ஓர் உண்மைக் கதை

இந்தியாவில் நக்சலைட்களின் போருக்குள் தற்செயலாக சிக்கிக் கொண்ட, ஒரு குடியானவனின் கதை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விறுவிறுப்பான திரைப்படம். முழுமையான வீடியோவை இந்தத் தளத்தில் கண்டு களிக்கலாம்.



This is the true story of Narsimha, a farm labourer, who desperately needed money to fund the education of his children. He finds himself in the midst of Naxalites where his mission becomes a mere subset of a greater cause that the militant's pursue. From being a mere cook to actually training in weapons to being involved in shootouts and kidnapping, Narsimha himself in the thick of life he had never bargained for. A confrontation with the group leaders turns his life upside down; he is now on the run from both law and the militants.

Narsimha has to take one vital decision that could make or break him. But the decision ends in creating a conflicting situation that has him torn between conscience and survival. Red Alert- The War Within hurtles towards a cathartic end that blows apart a few myths about life and the complicated systems that engulfs it. Red Alert- The War Within is a volatile account of today's times...culled straight from today's torrid headlines

Starring:
Sunil Shetty
Vinod Khanna
Nasseruddin Shah
Sameera Reddy
Ayesha Dharker
Bhagyashree

Awards:
Director's Vision Award at 2009 Stuttgart Film Festival
Best Actor Award (Sunil Shetty) at 2009 SAIFF (South Asian International Film Festival)

Tuesday, January 17, 2012

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்

இந்தியாவில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தண்டகாரண்யாவில், இந்த ஆவணப் படம் படமாக்கப் பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகக் குழுவினர், அடர்ந்த காட்டிற்குள் மாவோயிஸ்ட் போராளிகளின் முகாமில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர்.

Friday, April 09, 2010

இந்திய இராணுவத்தை நிலைகுலைய வைத்த நக்சலைட்கள்

இந்திய துணைப் படையினருக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய சட்டிஸ்கார் தாக்குதலின் பின்னர் வெளியான அல்ஜசீரா விசேட அறிக்கை. மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷான்ஜியின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சம்.
"இந்திய சனத்தொகையில் தொண்ணூறு சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மக்களுக்கெதிரான அரச பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் எவர் மீதும் தாக்குதல் தொடுப்போம்." - கிஷான்ஜி.


Monday, December 14, 2009

மேற்கு வங்கத்தில் மாபெரும் நக்சலைட் கலைவிழா

இந்திய மத்திய அரசுக்கும், மேற்கு வங்க மாநில அரசுக்கும் சவால் விடும் வண்ணம், 'ஜங்கல்மஹால்' என்ற இடத்தில் மாவோயிஸ்ட் இராணுவப்பிரிவின் (மக்கள் விடுதலைப் படை) ஆண்டுவிழா (டிசம்பர் 2) நடைபெற்றுள்ளது. Asian Age பத்திரிகையில் ( Dec. 6th 2009 ) இதுபற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மேற்கு வங்காள மாநிலத்தின், மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ளது ஜங்கல்மஹால். ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆயுதமேந்திய மக்கள் விடுதலைப் படையினரின் பிரசன்னம் அந்தப் பகுதி முழுவதும் காணப்பட்டது. சுற்று வட்டாரத்தில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் விழாவிற்கு சமூகமளித்திருந்தனர். கிஷேன்ஜி, ராகேஷ் ஆகிய இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்கள்.

ஜன்கல்மஹாலிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் செங்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஒலிபெருக்கிகளில் புரட்சிக்கீதங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. மக்களிடையே விழாவுக்கு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இவ்வளவும் பகிரங்கமாக, அரசுக்கு சவால் விடும் வகையில் நடைபெற்ற போதிலும், மாநிலப் போலிஸ் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. காவல்துறையினர் மாவோயிஸ்ட் ஆயுதபாணிகளை எதிர்கொள்ள துணிவின்றி பொலிஸ் நிலையத்திற்குள் பதுங்கியிருந்தனர். இதனால் சினமுற்ற உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிடம் இருந்து விளக்கத்தை கோரியுள்ளனர். மேற்கு வங்கப் பொலிஸ்காரர்கள் பலர் மாவோயிஸ்ட் அரசியலுக்கு தார்மீக ஆதரவு வழங்குவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு முன்னரும் பல தடவை, மாவோயிஸ்ட் கூட்டங்கள் குறித்து வரும் தகவல்கள் மீது, எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மேற்கு மிட்னாபூர் மாவட்டம் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் இருப்பதை, நடைபெற்ற சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

CPI (Maoist) மத்திய குழு உறுப்பினர் கிஷேன்ஜி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை பின்னர் துண்டுப்பிரசுரமாக கிராம மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரதேசத்தில் தற்போது அறுவடைக் காலமாகையினால், விவசாயிகளின் பாதுகாப்பை மக்கள் விடுதலைப் படை பொறுப்பு எடுத்துள்ளதாக தெரிவித்தார். கிஷேன்ஜி உரையிலிருந்து: "வயல்களில் நமது ஆயுதமேந்திய வீரர்கள் காவல் காப்பார்கள். ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் ஏழை ஆதிவாசிகளை பாதுகாக்க பயன்படுத்துவார்கள். அறுவடைக் காலத்தில் போரை முன்னெடுப்பதினால் விவசாயிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சுட்டிக்காட்டினோம். ஆனால் எமக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு அரசு மறுத்து விட்டது. அதனாலேயே இந்த ஏற்பாடு."

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பங்களாதேஷ் மாவோயிஸ்ட்கள் தமது கட்சியை மறு சீரமைத்துள்ளதாகவும், விரைவில் அந்த நாட்டிலும் மக்கள் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். அது குறித்த மேலதிக விபரங்களுக்கு: