Showing posts with label மகாவம்சம். Show all posts
Showing posts with label மகாவம்சம். Show all posts

Friday, October 16, 2020

மகாவம்சம் சொல்லாத "திராவிட விஜயன்" கதை!

Thor Heyderdahl ஒரு பிரபலமான நோர்வீஜிய அகழ்வாராய்ச்சியாளர். அவர் எழுதிய The Maldive Mystery என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. பண்டைய நாகரிகங்கள் பற்றிய தோர் ஹெய்டர்தாள் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, ஆதி கால மனிதர்கள் வைக்கோல் படகுகளில் அட்லாண்டிக், பசுபிக் சமுத்திரங்களை கடந்து பிரயாணம் செய்தனர் என்பதை நிரூபித்தவர். ஆதி கால கடலோடிகள் பயன்படுத்திய அதே புற்களால் கட்டப் பட்ட KON TIKI என்ற படகை தானே உருவாக்கி அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து சென்றவர். அந்தச் சம்பவம் திரைப்படமாகவும் வந்தது. 

தென் அமெரிக்கா மட்டுமல்ல, மாலைதீவும் ஏற்கனவே பண்டைய கால மனிதர்களால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கலாம் என்பது அவரது வாதம். அதை நிரூபிப்பதற்காக இரண்டு, மூன்று தடவைகள் மாலைதீவுக்கு பயணம் செய்து, அரசின் உதவியுடன் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் தயங்கிய மாலைதீவு அரசு பின்னர் வேண்டிய அளவு ஒத்துழைப்பு வழங்கியது.

இன்று நூறு சதவீதம் இஸ்லாமியர்களாக உள்ள மாலைதீவு பிரஜைகள், தமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமற்று உள்ளனர். அதற்கு அங்குள்ள மத அடிப்படைவாத சக்திகளின் எதிர்ப்பும் ஒரு காரணம். மாலைதீவுக்கு இஸ்லாம் வருவதற்கு முன்னர், அங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் போன்று வாழ்ந்து வந்ததாக நம்ப வைக்கப் பட்டுள்ளனர். ஆகையினால், மாலைதீவுவாசிகளின் இஸ்லாத்திற்கு முந்திய மத நம்பிக்கைகளை காட்டும் இடிபாடுகள் எதையும் விட்டு வைக்கவில்லை. அவை அடித்து நொறுக்கப் பட்டன.

தோர் ஹைடர்தாளின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் கடும் பிரயத்தனத்தின் பின்னரே, புராதன கோயில்கள் இருந்த இடங்களை கண்டுபிடித்தனர். அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாலைதீவில் வாழ்ந்த மக்கள் இந்துக்களாகவும், பௌத்தர்களாகவும் இருந்த உண்மையை கண்டுபிடித்தனர். இது ஏற்கனவே மாலைதீவு அரசில் உள்ளவர்களுக்கு தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை.

மாலைதீவு ஆயிரம் தீவுகளை கொண்ட தேசம். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அனேகமாக தொலைதூர தீவுகளில் பண்டைய மதச் சின்னங்கள் இன்னமும் காணப்படுகின்றன. இந்த அகழ்வாராய்ச்சி குழுவினரும் அந்தத் தீவுகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த எழுபது, எண்பது வயதுகளை கடந்த வயோதிபர்களை கண்டு கதைத்தனர். அதன் மூலம் ரேடின் என்ற பண்டைய இன மக்கள் பற்றி அறிந்து கொள்கின்றனர். அவர்கள் பிரமிட் மாதிரியான கட்டிடங்களை கட்டியுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ரேடின் இன மக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டனர்.

இலங்கையில் இருந்து பௌத்த- சிங்களவர்கள் படையெடுத்து வந்து மாலைதீவுகளை கைப்பற்றிய வரலாறு இன்று வரை பேசப் படுகின்றது. அதனால் மாலைதீவில் பல நூறாண்டுகள் பௌத்த மதம் இருந்துள்ளது. பண்டைய ரேடின் இனத்தவர்கள் கட்டிய பிரமிட்டின் இடிபாடுகளின் மீது புத்த ஸ்தூபா கட்டப் பட்டது. அவற்றின் இடிபாடுகளும் அங்கே உள்ளன. இன்றைய மாலைதீவு மக்கள், இலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களை அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதினாலும், அங்கு இனக்கலப்பு நடந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கும் மாலைதீவு மக்கள் பேசும் தீவேஹி மொழி கிட்டத்தட்ட சிங்களம் போன்றிருக்கும்.

மாலைதீவு மக்கள் பேசும் மொழியில் நிறைய தமிழ்ச் சொற்கள் உள்ளன. குறிப்பாக உறவுமுறைகளை தமிழில் அழைக்கிறார்கள். இதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்து சென்ற தமிழர்களும் மாலைதீவில் குடியேறி இருக்கலாம் என அறிய முடிகிறது. அத்துடன் மாலைதீவில் கண்டெடுக்கப் பட்ட இந்து மதச் சின்னங்களும், கோயில் இடிபாடுகளும் தமிழர்களுடையவையாக இருக்கலாம். அதே நேரம், வட இந்தியாவில், குறிப்பாக குஜராத்தில் இருந்து வந்து மாலைதீவில் குடியேறியவர்களும் இந்துக்களாக இருக்கலாம். அதற்கு ஆதாரமாக நல்லது என்பதற்காக பயன்படுத்தும் அதே சொல் குஜராத்தில் பேசப் படுவதை சுட்டிக் காட்டுகிறார்.

மாலைதீவின் வட இந்தியக் குடியேறிகளுடனான தொடர்பானது, அந்நாட்டின் பண்டைய வரலாற்றைக் கூறும் செப்புத்தகடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாலே அருங்காட்சியகத்தில் உள்ள இந்த செப்புத் தகட்டில் எழுதப் பட்டுள்ள ஒரு புராணக் கதை, இலங்கையில் மகாவசத்தில் எழுதப் பட்ட விஜயன் கதையை ஒத்திருப்பது ஆச்சரியத்திற்கு உரியது.

மகாவம்சத்தில் வரும் விஜயன் கதை இவ்வாறு கூறுகின்றது: வட இந்தியாவில் ஒரு நாட்டை ஆண்ட சிங்கத்திற்கு பிறந்த மன்னன், தனது மகனான விஜயனையும், அவனது எழுநூறு தோழர்களையும் இரண்டு கப்பல்களில் ஏற்றி நாடுகடத்தி விட்டான். ஒரு கப்பல் நாகதீபத்தை (இலங்கை) வந்தடைந்தது. இன்னொரு கப்பல் மகிழதீவை அடைந்தது. மகாவம்சம் மகிழதீவு எனக் குறிப்பிடுவது மாலைதீவாக இருக்கலாம்.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயம் உள்ளது. ஒரு கப்பலில் ஆண்களும், இன்னொரு கப்பலில் பெண்களும், பிள்ளைகளுமாக இரண்டு கப்பல்கள் சென்றுள்ளன. ஆண்களின் கப்பல் இலங்கையை சென்றடைந்தது. பெண்களின் கப்பல் மாலைதீவை சென்றடைந்தது. அண்மைய வரலாற்றுக் காலகட்டத்திலும் மாலைதீவு "பெண்களின் ஆட்சி" நடக்கும் நாடாக கருதப்பட்டு வந்தது. இஸ்லாம் பரவிய காலத்தில் மாலைதீவை ஓர் அரசி ஆண்டு வந்தாள். அதை அரேபிய யாத்ரீகர்களும் தமது பயணக் குறிப்புகளில் எழுதி உள்ளனர். இன்றைக்கும் மாலைதீவு சமூகத்தில் பெண்களுக்கு அதிக உரிமைகள் உள்ளன.

மாலைதீவின் பண்டைய வரலாற்றைக் கூறும் செப்புத்தகடுகளில் எழுதப்பட்ட புராணக் கதையில் விஜயன் என்ற பெயர் மட்டுமே இல்லை. மற்றும்படி பல தகவல்கள் ஒத்துப் போகின்றன. அதிலும் வட இந்தியாவில் இருந்து எழுநூறு பேர் இரண்டு கப்பல்களில் வந்ததாக எழுதப் பட்டுள்ளது. இருப்பினும் ஒரு இடத்தில் மாறுபடுகிறது.

மாலைதீவு வரலாற்றின் படி, வட இந்திய நாட்டை ஆண்ட மன்னன் சிங்கத்திற்கு பிறக்கவில்லை. ஆனால், அவன் ஒரு காட்டு மனிதனை அரண்மனையில் வளர்த்து வந்ததாக கூறுகின்றது. அதாவது, காட்டுக்கு வேட்டையாட சென்ற மன்னன் இந்த காட்டு மனிதனை கண்டு அழைத்து வந்திருக்கிறான். மிருகம் போன்று நான்கு கால்களில் நடந்த அந்த மனிதனுக்கு எந்த மொழியும் பேசத் தெரிந்திருக்கவில்லை. அரண்மனையில் வளர்க்கப் பட்ட காட்டு மனிதன் மன்னனின் மொழியை பேசக் கற்றுக் கொண்டதுடன், அவனுக்கு காட்டுக்குள் உள்ள திரவியங்களையும் அடையாளம் காட்டியுள்ளான்.

ஒரு கட்டத்தில் பட்டத்து இளவரசியான தனது மகள் காட்டு மனிதன் மீது காதல் கொண்ட படியால், ஆத்திரமடைந்த மன்னன் இரண்டு போரையும் நாடுகடத்தி விடுகிறான். அந்தக் காட்டு மனிதனும், இளவரசியும் மாலைதீவில் வந்திறங்கி அரச வம்சத்தை தொடங்கியதாக கதை நகர்ந்து செல்கிறது. அநேகமாக இந்தக் காட்டு மனிதன், இலங்கை மகாவம்சக் கதையில் சிங்கமாக திரிபு பட்டிருக்கலாம். காட்டுக்குள் தவற விடப் பட்ட குழந்தை, காட்டு விலங்குகளால் வளர்க்கப் பட்ட கதைகளை கேள்விப் பட்டிருப்போம். இதுவும் அதே போன்று நடந்திருக்கலாம். அநேகமாக இந்த காட்டு மனிதன் சிங்கமாக திரிபடைந்து இருக்கலாம்.

விஜயனும் தோழர்களும் கிழக்கிந்திய பிரதேசமான வங்காளம் அல்லது ஒரிசாவில் இருந்து வந்திருக்கலாம் என சிங்களவர்களால் நீண்ட காலமாக நம்பப் பட்டு வந்தது. மகாவம்சத்தில் அப்படி எழுதப் பட்டிருந்தது. நாம் இங்கே ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விஜயன் கதை நடந்ததாக மகாவம்சம் கூறும் காலகட்டத்தில் எழுதப்பட்ட வரலாறு எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதற்கு இருநூறு வருடங்களுக்குப் பின்னர் தான் பௌத்த மதம் இலங்கைக்கு வந்தது.

இலங்கைக்கு பௌத்த மதம் வந்து முன்னூறு வருடங்களுக்கு பிறகு தான் மகாவம்சம் எழுதப் பட்டது. ஆகவே மகாவம்சம் எழுதிய காலத்திலேயே விஜயனின் கதை ஒரு புராணக் கதையாகி விட்டது. அது நடந்தமைக்கான எந்த ஆதாரமும் கிடையாது. நாட்டார் கதைகள் போன்று ஒரு செவி வழிக் கதையாக மக்களால் பேசப் பட்டு வந்த விஜயன் கதையை தான் மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. ஆகவே அதை எழுதியவர்களுக்கும் அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது.

மேலும் மகாவம்சம் பௌத்த மதத்தை மேன்மைப் படுத்தும் நூல் ஆகும். சிங்களவரின் பூர்வீகம் என்னவாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் என்ன மொழி பேசினாலும், இலங்கையில் பௌத்த மதத்தின் வரலாற்றைக் கூறுவது தான் அதன் நோக்கம். அதற்கு பொருத்தமாக ஒரு ஜாதகக் கதையை தெரிவு செய்துள்ளது. அதாவது, வட இந்தியாவில் புத்த மதம் சார்ந்து பரப்பப் பட்ட ஜாதகக் கதைகளில் விஜயன் கதையும் ஒன்று. அதைத் தான் மகாவம்சம் சில மாற்றங்களுடன் பிரதி எடுத்துள்ளது. ஒரு வேளை, சிங்களவர்கள் இந்துக்களாக இருந்திருந்தால், மகாவம்சமும் இந்து மதத்தை உயர்த்திப் பிடித்திருக்கும். அது இராமனின் கதையில் இருந்து இலங்கையின் வரலாற்றை சொல்லத் தொடங்கி இருக்கும்.

இந்த உண்மையை, தோர் ஹைடர்தாள் தனது குஜராத் பயணத்தின் மூலம் இந்த நூலில் நிரூபிக்கிறார். அவர் குஜராத்தில் பாரூஷ் என்ற பண்டைய நாகரிகம் நிலவிய இடத்தை சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு காணப்பட்ட இந்து சின்னங்கள் மாலைதீவு இடிபாடுகளில் கண்டெடுக்கப் பட்டன. அந்தப் பிரதேசம் ஒரு காலத்தில் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்பு பட்டிருந்தது. அதாவது, குஜராத்தின் பாரூஷ் பிரதேசமும் ஹரப்பா நாகரிகம் நிலவிய இடம் தான். இலங்கைக்கு கடற்பயணம் செய்த விஜயனும், தோழர்களும் குஜராத்தில் இருந்தே சென்றிருக்க வேண்டும். The Maldive Mystery நூலில் எழுதப்பட்டுள்ள இந்த உண்மையை, தற்கால வரலாற்று ஆசிரியர்கள் கூட உறுதிப் படுத்தி உள்ளனர்.

மேற்படி தரவுகளில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம்:

  • இலங்கையில் சிங்களவர்கள் முன்னொரு காலத்தில் இந்து மதத்தை பின்பற்றிய தமிழர்களாக இருந்தவர்கள். வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய குழுவினரின் ஆதிக்கம் காரணமாகத் தான் சிங்களம் என்ற புதிய மொழி தோன்றியது. அதைப் பேசியவர்கள் சிங்களவர்கள் ஆனார்கள். சிங்களம் இந்தோ- ஆரிய மொழியாக வகைப் படுத்தப் படுகின்றது. வட இந்திய குடியேறிகள் கொண்டு வந்த சமஸ்கிருதம், பாளி மொழிகள், தமிழுடன் கலந்து சிங்களம் உருவாகியது.
  • குஜராத்தியர்கள் பேசும் மொழியும் இந்தோ- ஆரிய மொழி தான். அது மட்டுமல்ல, ஹரப்பா நாகரிகம் நிலவிய பாகிஸ்தான் பகுதியில் வாழும் மக்கள் சிந்தி என்ற இன்னொரு இந்தோ- ஆரிய மொழியை பேசுகிறார்கள். இன்றைக்கும் சிந்தி மக்கள் தமது முன்னோர்கள் தான் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியதாக சொல்லிக் கொள்கிறார்கள்.

  • ஹரப்பா நாகரிகம் தமிழர்களுடையது என்று நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் பேசினார்கள், அல்லது அது போன்ற திராவிட மொழியை பேசினார்கள் என்கிறோம். அது உண்மையாயின், அங்கு வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் தாம் பேசிய திராவிட (அல்லது தமிழ்) மொழியை கைவிட்டு விட்டு இந்தோ- ஆரிய மொழியை பேசத் தொடங்கி இருக்கலாம். அவர்கள் இனத்தால் திராவிடர்களாகவும், மொழியால் ஆரியர்களாகவும் இருந்திருக்கலாம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் காட்டலாம். அந்தப் பிரதேசத்தில் பேசப்படும் பிராஹுய் ஒரு திராவிட மொழி. பலுச்சி ஒரு இந்தோ ஆரிய மொழி. ஆனால், முன்னொரு காலத்தில் பிராஹுய் மொழி பேசிய மக்கள் தான் பிற்காலத்தில் பலுச்சி மொழி பேசுவோராக மாறினார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
  • இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த நாகரிக சமுதாயம், கொலம்பஸ் போன்ற கடலோடிகளாக பிற நாடுகளை கண்டுபிடிக்கும் கடற்பயணங்களை மேற்கொண்டிருக்கலாம். அவ்வாறு கிளம்பிய குழுக்களில் ஒன்று இலங்கையை வந்தடைந்து, அங்கேயே குடியேறி இருக்கலாம். அவர்கள் அங்கு வாழ்ந்த இயக்கர், நாகர் போன்ற பழங்குடி இன மக்களை படுகொலை செய்து, எஞ்சியவர்களுடன் இனக்கலப்பு செய்துள்ளனர். இதே மாதிரியான வரலாறு, உலகின் பிற பாகங்களிலும் நடந்துள்ளது. உதாரணத்திற்கு, கொலம்பஸின் கடற்பயணங்களின் போது கண்டுபிடிக்கப் பட்ட மத்திய அமெரிக்கப் பகுதிகளில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், அங்கு வாழ்ந்த மாயா, அஸ்தேக் பழங்குடி இன மக்களை படுகொலை செய்து எஞ்சியவர்களுடன் இனக்கலப்பு செய்தனர். இன்று மெக்சிக்கோவில் இந்தக் கலப்பினத்தவர் தான பெரும்பான்மையாக உள்ளனர். 

 

இது குறித்து நான் வெளியிட்ட காணொளிப் பதிவு:

Monday, January 16, 2012

எல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்



[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 3)

"ஏலாரா என்ற ஒரு தமிழ்க்குடிமகன்,சோழ நாட்டில் இருந்து வந்து, அசெலாவை வென்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள், நண்பன் பகைவன் என்று பாராமல் நீதி செலுத்தினான்." (மகாவம்சம்)

துட்ட கைமுனு மகாவம்சத்திற்குப் பிடித்த கதாநாயகனாக இருந்த போதிலும், அவன் எதிரியான எல்லாளனை பற்றியும் வானளாவப் புகழ்கின்றது. "எமது நண்பர்கள் எல்லாம் நல்லவர்கள். நமது எதிரிகள் எப்போதுமே கெட்டவர்கள்." என்ற கறுப்பு, வெள்ளைப் பார்வை, குறுகிய அரசியல் நலன்களை பெற்றுத் தரலாம். ஆனால், உண்மையை அறிந்து கொள்வதற்கு உதவப் போவதில்லை. சிங்கள இனவாதிகள், துட்டகைமுனுவை தமது மாவீரனாக போற்றுவதற்கு கூறும் நியாயம், "எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன்" என்பது தான். மகாவம்சம் குறிப்பிடும் முதலாவது அந்நிய ஆக்கிரமிப்பானது, விஜயனதும், அவன் தோழர்களினதும் வருகை தான். தம்மை விஜயனின் வம்சாவளியினர் என்று கூறிக் கொள்ளும் சிங்கள இனவாதிகள், எல்லாளன் போன்றோரை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டுவது வேடிக்கையானது. உண்மையில், இருபதாம் நூற்றாண்டு சிங்கள-தமிழ் முரண்பாட்டு அரசியலுக்கு ஏற்றவாறு, தம்மை பூர்வ குடிகளாக காட்டுவதே அவர்களது நோக்கம். இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிங்களவர்கள், தமிழர்களின் முன்னோர்கள் இலங்கையின் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர். அதே நேரம், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்கள் திரளுடனும் கலந்துள்ளனர். இன்றுள்ள சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலப்பினங்கள் தான். குறுகிய மனோபாவம் கொண்ட இனவாதிகள் மட்டும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வட இந்தியாவில் (வங்காள தேசம்?) இருந்து வந்து குடியேறிய விஜயனும், தோழர்களும் பேசிய மொழி என்ன? அவர்களது மதம் என்ன? அவர்கள் முதலில் பழங்குடி இனமான இயக்கர் இனப் பெண்களையும், பின்னர் பாண்டிய நாட்டுப் பெண்களையும் மணம் முடித்து வாழ்ந்துள்ளனர். அவர்களது சந்ததியினர் சிங்களவர்களா, அல்லது தமிழர்களா? உண்மையில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர், சிங்களவர், தமிழர் என்ற பேதம் உருவாகி இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மொழி ஒரு இனத்தின் குறியீடாக கருதப் படவில்லை. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள், உலகில் தோன்றலாயின. அது ஒரு "மதப் புரட்சி". நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை, நிறுவனமயப் பட்ட மதத்துடன் இனம் கண்டான். மேற்குலகில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட மத நிறுவனங்கள். இந்திய உப கண்டத்தில், பௌத்தமும், சமணமும் நிறுவன மயப் பட்ட மதங்களாக கருதப் பட்டன. இந்து மதத்தை ஒரு மதமாக கருத முடியாதா? அன்றிருந்த இந்து மதம், இன்றுள்ளதை விட மிகவும் வித்தியாசமானது. யாரும் இந்து மதத்தில் புதிதாக சேர முடியாது, அந்த மதத்தில் பிறந்திருக்க வேண்டும். இத்தகைய கடுமையான விதிகளால், பிராமணர்கள் மட்டுமே இந்துக்களாக இருந்தனர். அதனால், பிற சாதிகளை சேர்ந்த மக்கள், ஒன்றில் பௌத்த மதத்திற்கு, அல்லது சமண மதத்தில் சேர்ந்ததில் வியப்பில்லை.

தமிழகத்தில் பல்லவர் காலத்தில், இந்து மதம் மீளுயிர்ப்புப் பெற்றது. மக்களுக்கு புரியக் கூடிய மொழியிலேயே மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் உணர்ந்து கொண்டனர். அவர்கள் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, பௌத்த, சமண மதத்தவர் மீது புனிதப் போரை தொடுத்தார்கள். சோழர்கள் காலத்தில், மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் புனிதப் போர் தீவிரமடைந்தது. ஆனால், தமிழகத்தில் இந்து மதம் தலை தூக்குவதற்கு முன்னர், இன்னொரு மதப்போர் நடந்தது. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் இடையிலான போர் அது. அந்தப் போரில் சமணர்கள் வென்றனர். தமிழ் பௌத்தர்கள் பலர், புத்த மதத்தின் கோட்டையாக விளங்கிய இலங்கைக்கு சென்று அடைக்கலம் கோரினார்கள்.
"பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன.சில காலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. ....... கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்." (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி)

இன்றைக்கு பௌத்த மதத்தை பின்பற்றும் அனைவரும் சிங்களவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் தமிழர்களாகவும் உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரும் இதே மாதிரித் தான் இருந்திருப்பார்களா? இந்துக்களின் "தாய் நாடான" இந்தியாவிலேயே, இந்து மதம் அழிந்து கொண்டு சென்றது. இலங்கையில் அது தனியாக நிலைத்து நின்றிருக்குமா?
"தமிழ் நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர, ஏனைய தொழில்களை எல்லாம் இந்த மதம் சிறப்பித்து போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலான பயிர்த் தொழிலை,பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்,சமண சமயம் பயிர்த் தொழிலை சிறந்த தொழில் என்று போற்றியது.....சேர, சோழ,பாண்டிய, பல்லவ அரசர்களில் சமண சமயத்தை சேர்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்திற்கு ஆசியும், செல்வாக்கும் ஏற்பட்டன." (சமணமும் தமிழும்)

ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் சமண மதம் பரவியிருந்திருப்பின், இலங்கையிலும் பரவியிருக்க வாய்ப்புண்டல்லவா?
அன்று தமிழகத்தில் நிலவிய சூழ்நிலை போன்று தான், இலங்கையிலும் காணப்பட்டது. மக்கள் ஒன்றில் பௌத்தர்களாக, அல்லது சமணர்களாக இருந்தனர். வட பகுதியில் சமணர்களும், தென் பகுதியில் பௌத்தர்களும் பெரும்பான்மையாக இருந்திருப்பார். மக்கள் சிங்களம், தமிழ் எந்த மொழியைப் பேசினாலும், அவர்கள் இவ்விரண்டு மதங்களில் ஒன்றைப் பின்பற்றினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரை, முன்னொரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அது போன்று, வேறு பல சமணக் கோயில்கள், பிற்காலத்தில் பௌத்த விகாரைகளாக அல்லது சைவக் கோயில்களாக மாற்றப் பட்டிருக்கலாம்.

ஈழத்தில் சமண சமயம் சீரும் சிறப்புடனும் இருந்ததைக் குறிக்கும் இன்னொரு சான்று, எல்லாளனின் வரலாறு. எல்லாளன் சமண மதத்தை சேர்ந்தவன் என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கு முதலில், எல்லாளன் ஒரு இந்து மன்னன் என்பதற்கு, யாராவது ஆதாரத்தை காட்டியுள்ளனரா? இலங்கையை ஆண்ட இந்து- சோழ மன்னர்கள், சைவக் கோயில்களைக் கட்டியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. எல்லாளன் ஒரு சைவக் கோயிலையாவது கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்து மதங்களையும் சமமாக நடத்தியதாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. "எல்லாளன் சென்ற தேர் ஒரு தடவை, புத்த ஸ்தூபியின் ஒரு இடத்தில் இடித்து விட்டது. அரசன் அதனை வேண்டுமென்றே செய்யா விட்டாலும், தேரின் மீதிருந்து இறங்கி வீதியில் படுத்துக் கொண்டு, தான் மீது தேரைச் செலுத்த சொன்னான். ஆனால், பிட்சுக்கள் அதனை அனுமதிக்கவில்லை..... அவன் அந்த பதினைந்து ஸ்தூபிகளை செப்பனிட்டு விட்டுப் புதிதாக நிறுவ, பதினைந்தாயிரம் காசுபணம் செலவிட்டான்." (மகாவம்சம்)

எல்லாளனின் நீதி வழங்கும் நெறி முறைக்கு உதாரணமாக, படுக்கையின் மேல் கட்டப் பட்ட மணி பற்றிய கதை கூறப் படுகின்றது.
" அவனுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. நீதி கேட்டு வந்தவர்கள், எந்த நேரத்திலும் அதை அடித்து அரசனை அழைக்கலாம். அந்த அரசனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. ஒரு நாள் திசா குளத்திற்கு அந்த மகன் தேரில் சென்ற போது, தெரியாமல் தாய்ப்பசுவுடன் படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் தேரை ஏற்றிக் கொன்று விட்டான். அந்தப் பசு மனவேதனையில் மணியை அடித்தது. அதே தேர்ச் சக்கரத்தின் அடியில் மகனைக் கிடத்தி கழுத்தின் மீது தேரைச் செலுத்தித் தலையைத் துண்டித்தான்." (மகாவம்சம்) ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காக, தனது மகனைக் கொன்ற நியாயவானாக எல்லாளன் மகாவம்சத்தால் புகழப் படுகிறான். இந்தப் பெருமை வேறெந்த தமிழ் மன்னனுக்கோ, அல்லது சிங்கள மன்னனுக்கோ கிடைக்கவில்லை. இதிலே கவனிக்கப் பட வேண்டிய இரண்டு அம்சங்கள். ஒன்று, மிருகங்களையும் மனிதருக்கு சமமாக மதிக்கும் ஜீவகாருண்யம். இரண்டு, பசுவும்,பறவையும் கூட நீதி கேட்டு வரக் கூடியதாக கட்டப்பட்ட மணி. இவையெல்லாம், இந்து மரபு அல்ல. சமண மத நம்பிக்கைகள். இன்றைக்கும் தீவிர சமண மதப் பற்றாளர்கள், வெளியில் போகும் பொழுது வாயை துணியால் கட்டிக் கொள்வார்கள். அதற்கு காரணம், தெரியாமல் எந்தப் பூச்சியாவது வாய்க்குள் அகப்பட்டு சாகக் கூடாது என்பது தான்.

நமது காலத்திய இனவாதிகள், எல்லாளன்- துட்ட கைமுனு போரை, சிங்கள- தமிழ் போராக திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது சிங்கள-தமிழ் முரண்பாட்டால் எழுந்த போரல்ல. அதே நேரம், பௌத்த - இந்து மதங்களுக்கு இடையிலான யுத்தமும் அல்ல. ஒரு வேளை, தமிழகத்தில் தீர்க்கப்படாத பௌத்த - சமண மோதல், இலங்கையில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அந்தக் கருத்தை உறுதிப் படுத்தும் சான்றுகள் கிடைக்கவில்லை. துட்ட கைமுனுவின் பக்கத்தில் தமிழ் வீரர்கள் போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்கு துரோகமிழைத்து விட்டு, "சிங்கள மன்னனான" துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா .... இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்!

எல்லாளன் - துட்ட கைமுனு போர், நமது காலத்திய இனப் பிரச்சினையுடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கும். சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் வரலாற்றைத் திரித்து, தமக்கேற்றவாறு அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் யாவும், எல்லாளனுக்கும், துட்ட கைமுனுவிற்கும் அபகீர்த்தியை தேடித் தருகின்றன. துட்ட கைமுனுவுக்கு சிங்கள முலாம் பூசியதும், எல்லாளனுக்கு சைவ முலாம் பூசியதும், மன்னிக்க முடியாத வரலாற்று மோசடிகளாகும். நமது காலத்திய இனவாதிகள் பெரிதும் விரும்பும், இன அல்லது மத முரண்பாட்டுப் போர்கள், கி.பி. 9 ம் அல்லது 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றின. ராஜராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் இலங்கை வரையில் விஸ்தரிக்கப் பட்டது.

சோழர்கள் "தமிழுணர்வு" கொண்டவர்கள் அல்ல, மாறாக "சைவ ஆகம மத உணர்வு" கொண்டவர்கள். அவர்களது செயற்பாடுகள் பல மத அடிப்படைவாதிகளின் செயல்களை ஒத்துள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புப் படைகளால், இலங்கையில் பௌத்த மதம் நசுக்கப் பட்டது. புத்த விகாரைகள் இடிக்கப் பட்டன, புத்த பிக்குகள் கொல்லப் பட்டனர். பிற்காலத்தில், விஜபாகு அரசனால் சோழர்கள் வெளியேற்றப் பட்டாலும், அப்போது பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு ஒரு பிக்கு கூட இருக்கவில்லை! அதனால் பர்மாவில் இருந்து புத்த பிக்குகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!! இத்தகைய கொந்தளிப்பான காலகட்டத்தின் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. பௌத்த மதத்திற்கு நேர்ந்த நெருக்கடிகளை பட்டியலிடும் மகாவம்சம், சோழர்களால் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில், மகாவம்சம் ஒரு பக்கச் சார்பாகவே எழுதப் பட்டுள்ளது.

(முற்றும்)


தொடரின் முன்னைய பதிவுகள் :
2.துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!
1.மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

Thursday, January 12, 2012

துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!

[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 2)

துட்டகைமுனு என்ற பண்டைய சரித்திர கால மன்னன், இன்று சிங்கள தேசியவாதிகளின் ஒப்பற்ற கதாநாயகன். தமிழர்களுடனான இன முரண்பாட்டுப் போரில், துட்டகைமுனுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் பட்டது. சிறிலங்கா அரசு கூட, தனது சிறப்புப் படையணிக்கு, "கெமுனு படைப்பிரிவு" என்று பெயரிட்டிருந்தது. "துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை போரிட்டு வென்றதாலேயே", அவனுக்கு அவ்வளவு மரியாதை. இந்தக் கதையானது, பாடசாலை மாணவர்களுக்கான, சிங்கள மொழிப் பாட நூலில் கூட எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின், சரித்திரப் பாட புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான அரச பாடத்திட்டம், ஒரே மாதிரியான சரித்திரத்தை தான் போதிக்கின்றது. இதிலே குறிப்பிட்டளவு பகுதி, மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. வேடிக்கை என்னவென்றால், சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், ஒரே கதைக்கு வெவ்வேறு விதமான பொழிப்புரைகள் வழங்கி வருகின்றனர்.

எமக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரியர் பின்வருமாறு விபரிப்பார். "எமது தமிழ் மன்னர்கள், சிங்களவர்களை ருஹுனு (தென் பகுதி) வரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் கடலுக்குள் குதித்திருப்பார்கள்." வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகும். "மகாவம்ச மனோபாவம்", சிங்களவர்களை மட்டுமல்லாது, தமிழர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. பண்டைய மன்னர்களின் சரித்திரத்தை, சிங்கள, தமிழ் முரண்பாடாக மாற்றுவதில் மகாவம்சம் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளது. இருப்பினும், அது முழுக்க முழுக்க தமிழின விரோதக் கருத்துக்கள் கொண்டது எனக் கூறி விட முடியாது. மகாவம்சத்தைப் பொறுத்த வரையில், புத்த மதத்தை பாதுகாத்து பேணி வளர்க்கும் மன்னர்கள் எல்லோரும் அதற்கு நாயகர்கள் தான். பௌத்த ஆலயங்களை கட்டிய, அல்லது தானம் வழங்கிய, தமிழ் மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகளின் பெயர்களை குறிப்பிடத் தவறவில்லை.
"ஸ்ரீசங்கபோதியின் சேனைத் தலைவனாக விளங்கிய பொத்தசதா என்ற தமிழன், ஜெத்தவன விகாரைக்கு ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான். மகாகந்தன் என்ற தமிழ் அமைச்சன், தனது பெயரில் ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான்." ( சூளவம்சம். 22 )
அதே நேரம், புத்த விகாரைகளை நாசப்படுத்தி, மத வழிபாட்டை ஒடுக்கிய மன்னர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றது. சீதாவாக்க ராஜசிங்க என்ற "பௌத்த-சிங்கள மன்னன்", இந்து மதத்திற்கு மாறி, பல புத்த பிக்குகளை கொன்ற கதை ஒன்று மகாவம்சத்தில் உள்ளது.

"இலங்கையில் முதன்முதலாக பௌத்த சமயத்தை தழுவிய தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஒரு தமிழன் தெரியுமா?" என்று கூறி, தமிழ்த் தேசியவாதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். ஆனால், அவர்களிடம் "துட்டகைமுனு யார்?", என்று கேட்டால், ஒரு சிங்களவன் என்ற பதில் வரும். தேவநம்பியதீசன் என்ற தமிழ் அரசனின் பரம்பரையில் வந்த துட்டகைமுனு எப்படி சிங்களவன் ஆனான்? துட்டகைமுனுவின் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் எல்லாம், "மூத்தசிவன், காக்கவண்ண திஸ்ஸ" என்று தமிழ்ப் பெயராகக் காணப்படுகின்றன. இதனை தமிழ்த் தேசிய இணையத் தளமான Tamil Canadian விரிவாக விளக்குகின்றது.
It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father`s side Kavan Tissa, and his mother`s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith. (Source : www.tamilcanadian,com)

அப்படியானால், தமிழ் மன்னர்களான எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையில் எதற்காக போர் மூள வேண்டும்? ஒரே இன மக்களிடையே நிலவும், உறவினரின் கொலைக்காக பழிவாங்கும் பகையுணர்ச்சி தான் காரணம். பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் வழக்கம். துட்டகைமுனுவின் பாட்டனான அசெலாவை கொன்று தான், எல்லாளன் ஆட்சியைக் கைப்பற்றினான். தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து, இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து வந்த, புகழ்பெற்ற உள்நாட்டு அரச பரம்பரைக்கு, அது ஒரு பேரிழப்பு. பண்டைய இலங்கையில், எத்தனையோ அரச பரம்பரைகள் இருந்த போதிலும், முதன் முதலாக பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட அரச வம்சம் என்பதால், மகாவம்சத்தினால் போற்றப் பட்டது. தெற்குப் பகுதி குறுநில மன்னர்களை போரில் வென்று, ருஹுனு மாநிலத்தை ஒன்றாக்கிய பெருமை, துட்டகைமுனுவின் தந்தை கவன்திஸ்ஸவை சேரும்.

துட்டகைமுனுவும், அவன் சகோதரனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், தந்தையான கவன்திஸ்ஸ அவர்களுக்கு தினசரி உணவூட்டுவான். அப்பொழுது "தமிழர்களிடம் யுத்தம் செய்வதில்லை" என்று உறுதிமொழி தருமாறு கேட்டிருக்கிறான். சகோதரர்கள் இருவரும், உறுதிமொழி கொடுக்க மறுத்து சாப்பிடாமல் போயிருக்கிறார்கள். துட்டகைமுனு வாலிபனாக வளர்ந்த காலத்தில், "தமிழர்களுடன் போரிட மறுத்த" தந்தையை சேலை கட்டிக் கொள்ளுமாறு பரிகசித்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக, கவன்திஸ்ஸ எல்லாளனுடன் போரிடுவதை விரும்பவில்லை. அந்தக் காரணம் என்ன? அதனை மகாவம்சம் விளக்கவில்லை. ஒரு வேளை, "எல்லாளனுடன் போரிடுவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல, என்று கவன்திஸ்ஸ நினைத்திருக்கலாம். நீதியும், நேர்மையும் மிக்க மன்னனாக இலங்கை மக்களால் மதிக்கப்பட்ட எல்லாளனை எதிர்ப்பது புத்திசாலித் தனமானதல்ல." என்று நினைத்திருக்கலாம். துட்டகைமுனு இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து, பல வருடங்கள் மலேயாவில் தங்கியிருந்திருக்கிறான். அவன் தகப்பனின் சொல் கேளாத தனயன் என்பதால் தான், "துஷ்ட காமினி" (துட்ட கைமுனு அல்லது துட்ட கெமுனு) என்று பெயர் வந்தது.

இலங்கை முழுவதும், சிங்களவர், தமிழர் பேதமின்றி, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எல்லாளனின் புகழ் பரவியிருந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, பௌத்தர்களாலும் மதிக்கப் பட்ட எல்லாளனை, போரிட்டு வெல்வது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மலேயாவில் இருந்து திரும்பிய துட்டகைமுனு, எல்லாளன் மீது போர் தொடுக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தான். எல்லாளன் நீதிநெறி தவறாத அரசனாக ஆட்சி புரிந்த போதிலும், அவனது பிற்கால ஆட்சிக் காலத்தில், சில பௌத்த விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறுகிய மதவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்ட, சில குறுநில மன்னர்களும், தளபதிகளுமே அதற்கு காரணம். அவர்களால் துன்புறுத்தப்பட்ட புத்த பிக்குகள் எல்லாளனின் நாட்டை விட்டோடி, துட்டகைமுனுவின் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

உண்மையில், எல்லாளனின் வீழ்ச்சி அப்போதிருந்தே ஆரம்பமாகி இருக்க வேண்டும். துட்டகைமுனு, "பௌத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரை" அறிவிப்பதற்கு, அது போன்ற சம்பவங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. எல்லாளனின் பூர்வீகம் சோழ மண்டலம் என்பதால், அன்னியர்கள் மீதான வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ளவே, அதிர்ஷ்டக் காற்று துட்டகைமுனு பக்கம் வீசியது. எல்லாளனின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், பௌத்தர்களும் ஒரு தாய் மக்களாக சரிசமமாக நடத்தப் பட்டனர். அதனால் தான், எல்லாளனின் ஆட்சியை நாற்பத்துநான்கு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த உண்மையை, குறுகிய இனவாத மனோபாவம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை, எல்லாளன் இன்று ஆண்டிருந்தால், சிங்களவர்களையும், தமிழர்களையும் சகோதரர்களாக கருதிய காரணத்திற்காக, அவனுக்கு துரோகிப் பட்டம் சூட்டியிருப்பார்கள்.

துட்டகைமுனு ஒரு தமிழன், அவனது படையில் தமிழ் வீரர்களும் இருந்துள்ளனர். அப்படியாயின், மகாவம்சம் எதற்காக தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்கின்றது? இதற்கான விடையை, கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.

கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை "வேறு இனமாக" காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. மகாவம்சத்தில் காணப்படும் தமிழர் விரோத கருத்துகளின் மூலமும், நோக்கமும் அது தான். அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள், தமக்கென சொந்தமாக சிங்கள மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றில் செயற்கையாக உருவாக்கப் படும் இனம் ஒவ்வொன்றும், தனக்கென பிரத்தியேகமான பூர்வீகக் கதைகளையும் கற்பித்துக் கொள்ளும். அதற்கு சிங்கள இனமும் விதி விலக்கல்ல.

மகாவம்சம் பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம், அதனது தவறான மொழிபெயர்ப்பு. இந்திய இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போன்று, இலங்கை (சிங்கள) புத்தர்களுக்கு பாளி புனித நூல்களின் மொழியாகவிருந்தது. சமஸ்கிருதம் போன்றே, பாளி மொழியும் பிற்காலத்தில் யாராலும் பேசப்படாமல் அழிந்து போனது. 19 ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் மகாவம்சத்தை கண்டெடுத்தார்கள். 1837 ல், George Turnour என்ற ஆங்கிலேய அரச அதிகாரி, மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரையில், "இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இந்திய படையெடுப்பாளர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்." இன்றைக்கும் பல பிரிட்டிஷ்காரர்களின் மனதில் மறைந்துள்ள தவறான அபிப்பிராயம், மகாவம்சத்தை மொழிபெயர்த்த காலத்திலும் இருந்திருக்கும். இன்றைக்கு நாம் வாசிக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் யாவும், ஆங்கில மொழியில் எழுதப் பட்ட மூலப் பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை தான். சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் சமூக விஞ்ஞானம் போதித்த ஆங்கிலேய இனவாத கற்பிதத்திற்கு ஏற்றதாக, இந்த மொழிபெயர்ப்புகள் (மொழி திரிப்புகள்) அமைந்துள்ளன.

மகாவம்சத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் பிற்காலத்தில் எழுதப் பட்டது தான். இதனால், இந்த மொழிபெயர்ப்புகள் யாவும் மூலப் பிரதியில் இருந்து மாறியிருக்க வாய்ப்புண்டு. துட்டகைமுனுவின் தாயின் வரலாற்றைக் கூறும் கதையில் காணப்படும் முரண்பாடே அதற்கு ஒரு உதாரணம். துட்டகைமுனுவின் தாயான விஹாரமகாதேவி, களனி நாட்டை (இலங்கையின் மேல் மாகாணம்) சேர்ந்த இளவரசி என்று, ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப் பட்டுள்ளது. அவள் கல்யாணி நாட்டை சேர்ந்த இளவரசி என்று இன்னொரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. இவ்விரண்டில் எது சரியானது? இது ஒன்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட எழுத்துப் பிழையல்ல.

கல்யாணி நாடு, மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு அருகில் இருந்த தீவாகும். அதனை சுனாமி தாக்கி அழித்தாக செவிவழிக் கதை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், ராணி விஹாரமகாதேவி ஒரு சிங்களத்தியோ, அல்லது தமிழச்சியோ அல்ல என்பது நிரூபணமாகின்றது. ஆனால், ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணான, வேறொரு இனத்தை சேர்ந்த விகாரமகாதேவி தான், அதிகமான தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தாள் என்பது வியப்புக்குரியது. தனது மகன் துட்டகைமுனு குழந்தையாக இருக்கும் பொழுதே, அவன் மனதில் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறாள். போர்க்களத்திற்கு நேரில் சென்று படை நகர்த்திய பெண்ணாக போற்றப்படும், விகாரமகாதேவி தமிழர்களை வெறுக்க காரணம் என்ன?

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள் :
மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

Monday, January 09, 2012

மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான "புனித நூல்" ஒன்று இருக்குமானால், அது மகாவம்சம் தான். இவ்விரண்டு மொழித் தேசிய இனவாதிகளும், அடிக்கடி மகாவம்சத்தை உதாரணமாகக் காட்டிப் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக துட்டகைமுனுவின் கதை, அதில் அவன் தமிழர்களைப் பற்றிக் கூறும் வாசகம், அளவுக்கு அதிகமாகவே மேற்கோள் காட்டப் படுகின்றது. ("கங்காவுக்கு அப்பால் தமிழர்களும், இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது, நான் எப்படி கை, கால்களை நீட்டி சுகமாகப் படுக்க முடியும்?" - துட்டகைமுனு) எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.

அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.

சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.

பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை" உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.

இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.

எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை "மலபாரிகள்" என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.

நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் "அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.

எது எப்படி இருப்பினும், துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.
“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).

அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், "அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது" என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.

ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.
அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?


(தொடரும்)

Saturday, December 24, 2011

எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"



[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 10]
(பத்தாம் பாகம்)



இன்றைக்கு பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசும் இனங்கள், "இயேசு கிறிஸ்து நம்மவரே" என்று நம்புகின்றன. மக்களின் மத நம்பிக்கையை, தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் இனத் தேசியவாதிகள் அவ்வாறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தேசியவாத அரசியலையும், இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மதத்தையும் இணைப்பதால் பல வேடிக்கை வினோதங்கள் அரங்கேறுகின்றன.

"முருகன் தமிழ்க் கடவுள்" என்று, தமிழர்கள் சொந்தம் கொண்டாடுவதும் அது போன்ற நகைச்சுவை தான். ஏனெனில், மறு பக்கத்தில் சிங்களவர்களும், "முருகன் ஒரு சிங்களக் கடவுள்" என்று சொந்தம் கொண்டாடுவதை இவர்கள் அறியவில்லை. உண்மையில், முருகன் தமிழனுமில்லை, சிங்களவனுமில்லை. பழங்குடியின மக்களால் வழிபடப் பட்ட, இன்னும் சொல்லப் போனால், அரேபிய தீபகற்பம் வரை மதிக்கப் பட்ட, உலகிற் சிறந்த அறிவுஜீவி தான் முருகக் கடவுள். மனித நாகரீகம் வளராத காலத்தில் வாழ்ந்த ஞானியை, மக்கள் ஒரு தெய்வமாக வழிபட விரும்பியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்றைக்கு ஒரு நாகரீகமடைந்த அறிவு சார் சமுதாயம், வீரப் பிரதாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ, அன்றைக்கே முருகனின் பெருமைகளும் மறைந்து போயின.

இன அடிப்படையிலான கலாச்சார ஆதிக்கம் போன்றது தான், ஒரு மதத்தின் ஆதிக்கமும். வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறிய, இந்து ஆரியர்கள், தாம் வென்ற நாடுகளின் அரசுகளை மட்டுமல்ல, கலாச்சாரங்களையும் அழித்தார்கள். இராமாயணக் காலம் எப்போது என்று தெரியவில்லை. இருப்பினும், இலங்கையின் உன்னத நாகரீகம் வடக்கே இருந்து படையெடுத்து வந்த இராமனால் அழிக்கப் பட்டதை இராமாயணமே தெரிவிக்கின்றது. அன்றில் இருந்து, இலங்கையில் இந்து மத (ஆரிய இன) ஆதிக்க கலாச்சாரம் வலுப் பெற்றது. இலங்கையில் இன்றைக்கு வாழும், தமிழர்களும், சிங்களவர்களும், இந்து-ஆரிய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.

"சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல." என்ற உண்மையை சிங்கள புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போன்று, "தமிழர்கள் இந்துக்கள் அல்ல." என்பதை தமிழ் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆரிய மயப்பட்ட தமிழர்களும், இந்துக் கலாச்சாரத்தை பின்பற்றும் சிங்களவர்களும், தமது பூர்வீகத்தை கங்கைக் கரையில் (வட இந்தியாவில்) தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான், இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படும் தகவல்கள் புதிதாக தோன்றுகின்றன. தமிழர்கள் தமது தொன்மையான நாகரீகத்தை மறந்து போனதற்கு காரணம், பிற்காலத்தில் வந்த இந்து நாகரீகம் அவர்களை சிந்தனைப் போக்கை மாற்றியது.

சிங்களவர்கள் என்ற புதிய மொழி பேசும் இனம் தோன்றுவதற்கு பௌத்த மதம் காரணமாக இருந்தாலும், இந்து மதக் கலாச்சாரம் முழுவதுமாக மறையவில்லை. இலங்கையில் பௌத்த மதம் காலூன்றிய பின்னரும், விஷ்ணுவை, சிவனை வழிபட்ட "சிங்கள" மன்னர்களின் கதைகள், மகாவம்சத்தில் கூறப் பட்டுள்ளன. சோழத் தமிழ் மன்னனான எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெற்றுள்ளான். போரில் தான் வென்றால், கதிர்காமத்தில் முருகனுக்கு பெரியதொரு கோயில் கட்டித் தருவதாக துட்டகைமுனு வாக்களித்துள்ளான். அதே போன்று, "கதிர்காமக் கந்ததனின் அருளால்" போரில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு, வாக்களித்த படியே கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டிக் கொடுத்துள்ளான். (பார்க்கவும்:
A Short History of kataragama and Theivanaiamman Thevasthanam)

இலங்கையில், முதன் முதலாக பௌத்த மதத்தை தழுவிய தேவநம்பிய தீசன் முதல், ஐந்தாம் மகிந்தன் காலம் வரையில், கதிர்காமம் உள்நாட்டு மன்னர்களினால் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. இந்த மன்னர்களை எல்லாம் சிங்களவர்கள் என்றோ, அல்லது தமிழர்கள் என்றோ முத்திரை குத்துவது, எமது அறியாமையின் பாற் பட்டது. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழிப் பிரிவினை தோன்றியது. இன்றைக்கும், யாழ்ப்பாண வட்டார மொழியாக பேசப்படும் தமிழுக்கும், சிங்கள பேச்சு மொழிக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் அதனை உறுதிப் படுத்துகின்றன.

துட்டகைமுனு போன்ற மன்னர்கள் சிங்களவர்கள் என்று, மகாவம்சத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிங்கள- தமிழ் இனவாதிகள் தான், தமது அரசியல் லாபங்களுக்காக அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றனர். "எல்லாளன் நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்த மன்னன்" என்று மகாவம்சம் எல்லாளனின் நற்செயல்களை புகழ்ந்து எழுதியுள்ளது. அதே நேரம், எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பளனாகவும் (சோழ ஏகாதிபத்தியம்) சித்தரிக்கப் படுகின்றான். (பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள், வேண்டுமென்றே சோழர்களை, தமிழர்கள் என்று மாற்றி எழுதியுள்ளார்கள்.) ஆகவே, அந்நியர்களிடம் இருந்து நாட்டை விடுதலை செய்வதற்காக, துட்டகைமுனுவிற்கு கதிர்காமக் கந்தன் உதவி புரிந்ததாகத் தான் மகாவம்ச வரலாறு கூற விளைகின்றது. எல்லாள-துட்டகைமுனு யுத்தத்தை, சிங்கள- தமிழ் யுத்தமாகக் கருதும் அடிப்படையே தவறானது.

இன்றைக்கு, சிங்கள இனவாதிகள் துட்டகைமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, தமிழினவாதிகள் எல்லாளனை தமது நாயகனாக மகிமைப் படுத்துகின்றனர். இரண்டு தரப்பினரும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்றை திரிக்கின்றனர். அன்று நடந்ததை சிங்கள-தமிழ் யுத்தமாகவோ, அல்லது பௌத்த-இந்து முரண்பாடாகவோ பார்ப்பது தவறு. கதிர்காமம், அன்றில் இருந்து இன்று வரையில், சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான புண்ணியஸ்தலமாகும். முஸ்லிம்களும் கதிர்காமம் சென்று வழிபடுவது வியப்பை உண்டாக்கலாம். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) இன்று அங்கே, "இந்துக் கதிர்காமம்", "பௌத்த கதிர்காமம்", "இஸ்லாமிய கதிர்காமம்" என்று மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக வாழ்ந்த மக்களை, பிற்காலத்தில் வந்த மதங்கள் மூன்றாகப் பிரித்து வைத்துள்ளன. (ம்ஹ்ம்... மனிதன் மாறி விட்டான்... மதத்தில் ஏறி விட்டான்...)

முருக வழிபாடு, இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கு பரவி இருக்க வேண்டும். இலங்கையின் பூர்வீக மக்களான வேடுவர்களால் கூட, முருகன் அறிவின் கடவுளாக போற்றப் படுவது கவனத்திற்கு உரியது. ஏனெனில், பொதுவாக, "நாகரீகமடையாத காட்டுமிராண்டி கால பழங்குடி சமுதாயங்கள்", தமது கடவுளை வீர சூர பராக்கிரமசாலிகளாகவே சித்தரிப்பார்கள். முருகனின் விடயத்தில் அது தலைகீழாக நடந்துள்ளது. ஆதிகாலம் தொடக்கம் கதிர்காமத்தில் முருகனை பூஜித்து வரும் பழங்குடி இனமான வேடுவர்கள், "உலகில் உள்ள அனைத்து அறிவையும் திரட்டி வைத்திருந்த ஞானியாகவே" முருகனை வழிபடுகின்றனர். எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்ட வேடுவர்களைப் பொறுத்த வரையில், வேட்டைக்கான நிபுணத்துவத்திற்கு மட்டும் கந்தனின் அருள் போதுமானதாக இருந்துள்ளது.

"சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக", இந்தியாவில் இந்து மதம் கந்தனைப் போற்றுகின்றது. அதே போன்று, "புத்தருக்கு ஞானோபதேசம் செய்ததாக", சீனாவில் பௌத்த மதம், முருகனை போற்றுகின்றது. ஆதி கால முருகனின் கையில், போர்க் கருவியான ஈட்டி (வேல்) இருக்கவில்லை. (கதிர்காம கோயிலின் மூலஸ்தானம் திரை போட்டு மறைக்கப் பட்டிருப்பதால், பல சந்தேகங்கள் எழுவது இயற்கை. அந்த மர்மம் இன்னும் துலங்கவில்லை.) ஆதி கால முருகக் கடவுளின் கையில் ஒரு ஊன்று கோல் இருந்தது. பழனி முருகனும், கையில் ஒரு தடி வைத்திருப்பதால், "தண்டாயுதபாணி" என்று அழைக்கப் படுவது இங்கே குறிப்பிடத் தக்கது. இலங்கையை சேர்ந்த வேடுவர்கள், முருகனை ஒரு கிழவனாகவே வழிபட்டுள்ளனர். ஒரு வயோதிபரின் கையில் ஊன்றுகோல் இருப்பது வழமை தானே? இலங்கையில் வாழ்ந்த வயதான ஞானி (தீர்க்கதரிசி) யின் பெருமைகள், மேற்கு ஆசிய நாடுகளிலும் அறியப் பட்டுள்ளன. (அந்த விபரங்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.)

"எதற்காக நமது தெய்வங்களின் கைகளில், எப்போதும் ஒரு ஆயுதம் இருக்கின்றது?" என்பது பல இந்துக்களின் மனத்தைக் குடையும் கேள்வி. அதற்கான விடை இது தான். இவை எல்லாம் ஆரிய மயமாக்கப் பட்ட தெய்வங்கள். முருகன் மட்டுமல்லாது, சிவன், கிருஷ்ணன் போன்ற பல இந்திய தெய்வங்கள் ஆதி காலத்தில் ஆயுதங்களோடு காட்சியளிக்கவில்லை. (உதாரணத்திற்கு, திபெத்திய சிவனின் கையில் சூலாயுதம் கிடையாது.) என்றைக்கு, ஆரிய இனத்தவர்களும் அவற்றை தமது கடவுளராக ஏற்றுக் கொண்டனரோ, அன்றில் இருந்து அவர்கள் கைகளில் ஆயுதங்கள் முளைத்து விட்டன.

அந்நிய வெள்ளையின ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட உள்நாட்டு கறுப்பின மக்கள், சில போர்த் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். காளி, பைரவர் போன்ற தெய்வங்கள் போரின் நிமித்தம் முக்கியத்துவம் பெறுவதால், அவற்றின் கைகளில் ஆயுதங்கள் இருந்துள்ளன. பிற்காலத்தில், போரில் வென்ற இந்துக்களான ஆரியர்கள், போர்த் தெய்வங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதன் மூலம், உள்ளூர் மக்கள் மீது கலாச்சார அடிமைத்தனம் திணிக்கப் பட்டது. இந்த அடிமைத்தனம் இன்றைக்கும் பலரின் மனதில் காணப்படுகின்றது.

வரலாற்றில் ஆரிய இனம், அறிவு சார் சமுதாயமாக இருக்கவில்லை. மற்றைய இன மக்கள் மீது போர் தொடுத்து, அடிமைப் படுத்தி, சொத்துகளை சூறையாடி வாழ்ந்த நிஜமான காட்டுமிராண்டி சமுதாயமே ஆரிய இனம் ஆகும். அவர்களைப் பொறுத்த வரையில், விவேகத்தை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில், வெறித்தனமான வீரம் தான் அவர்களை பல நாடுகளுக்கு அதிபதிகளாக்கியது. பிறர் செல்வங்களை கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்தது. (இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. ரிக் வேதத்திலேயே எழுதப் பட்டுள்ளன.) இன்றைக்கும், இனவெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் தலைவர்கள், ஆரியரின் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதை கண்கூடாக காணலாம். "மூத்தகுடித் தமிழர்கள்", ஆரியர்கள் போன்று காட்டுமிராண்டிகள் அல்ல. ஒரு அறிவு சார்ந்த சமுதாயமாக, நாகரீகத்தில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால், தமிழர்கள் என்றைக்கு இந்து மதத்தை பின்பற்றத் தொடங்கினரோ, அன்றில் இருந்தே தமிழரின் பெருமைகள் மறக்கப் பட்டு விட்டன.

இன்றைய நவீன யுகத்திலும், இந்து மதத்தவர்கள், முருகனை ஒரு யுத்தக் கடவுளாகத் தான் பார்க்கின்றனர். ஒவ்வொரு வருடமும், முருகன் கோயில்களில் நடைபெறும் "சூரன் போர்" அதற்கு சான்று பகர்கின்றது. முருகன் கனரக ஆயுதங்களுடன் சூரனோடு போரிட்ட காட்சியை, மதச் சடங்கு என்ற பெயரில் மேடையேற்றுகின்றனர். சூரனின் படைகளை துவம்சம் செய்த முருகன், சூர சம்ஹாரத்திற்குப் பிறகு கதிர்காமத்தில் தங்கி விட்டதாக இந்துக்கள் நம்புகின்றனர். (எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு யுத்தக் கடவுளான முருகனிடம் ஆசீர்வாதம் வேண்டியதில் வியப்பில்லை.)

மகாவம்சமும் ஆரிய மயப் பட்ட மன்னர்களின் வரலாற்றை தான் கூறுகின்றது. மகாவம்சம் மட்டுமல்ல, எந்தவொரு இந்துப் புராணமும், இதிகாசங்களும் பூர்வீக மக்களின் கதைகளை எழுதியதில்லை. அவ்வாறு குறிப்பிட்டாலும், அந்த மக்களை "நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகம்" என்று தான் கூறுகின்றன. உதாரணத்திற்கு, இராவணனின் மக்களை அரக்கர்கள் என்று, இந்துக்களின் இராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. பௌத்தர்களின் மகாவம்சம், இலங்கையில் புத்தரின் வருகைக்கு முன்னர், பேய்களை போன்ற தோற்றம் கொண்ட மக்கள் (இயக்கர்கள்) வாழ்ந்ததாக எழுதுகின்றது. "அரக்கர்கள், இயக்கர்கள்", இவை போன்ற இழி சொற்களினால், மூத்த குடிகளின் நாகரீகம் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டன.

மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார ஆதிக்கம் என்பதைப் பலர் உணருவதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம், எந்தப் பிரிவினரின், அல்லது சாதியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பது தான் முக்கியமானது. பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கும் வரையில், அந்தப் பிரிவினரின் ஆதிக்கம் தொடரவே செய்யும். தமிழ் தேசியத்தை புரட்சிகரமான மாற்று அரசியலாக முன் வைக்க வேண்டுமானால், மதங்களுக்கு எதிரான தார்மீகப் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். உலகின் முதல் மனிதன் (ஆதாம்?) இலங்கையில் தோன்றியிருக்கலாம், என்று கூறப் படுவதன் சாத்தியப்பாட்டை, தமிழ் தேசிய பிரச்சாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளாத காரணம் என்ன? இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல், அல்லது அறிய முயற்சிக்காமல், "முன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் நாம்." என்று பெருமை பேசுவதில் பயனேது?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்