Showing posts with label திருமுருகன் காந்தி. Show all posts
Showing posts with label திருமுருகன் காந்தி. Show all posts

Wednesday, December 08, 2021

திருமுருகன் காந்தியின் திருகோணமலை கோளாறு பதிகம்

திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து திருமுருகன் காந்தி சில மாணவர்களுக்கு பாடம் நடத்தும் காணொளி பார்க்கக் கிடைத்தது. (https://twitter.com/i/status/1466347425136791561) அதில் அவர் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாறு, புவியியல், சமூகக் கட்டமைப்பு குறித்து அரைகுறை அறிவுடன் பகிரப் படும் இது போன்ற தகவல்களால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. அத்துடன் ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும்.


முதலில் திருகோணமலை இனப்பரம்பல் தொடர்பாக சில சுருக்கமான குறிப்புகள்:

- திருமுருகன் காந்தி குறிப்பிடும் தமிழீழம் அல்லது தமிழர் பிரதேசம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை குறிக்கும். குறிப்பாக திருகோணமலை பட்டினமும், அதை அண்டிய பகுதிகளும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தனித் தன்மை கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது. குறிப்பாக திருகோணமலைத் தமிழர்கள், யாழ்ப்பாண, மட்டக்களப்பு தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாகவும் மாறுபட்டவர்கள். உதாரணத்திற்கு, அங்கே சாதிப் பாகுபாடுகள் பார்ப்பது மிக மிகக் குறைவு. அதற்கு பல நூறாண்டுகளாக திருகோணமலையில் வசித்து வந்த ஐரோப்பிய குடியேறிகளின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம்.

- கிழக்கு மாகாணத்திற்குள் அடங்கும் திருகோணமலை "தமிழர் பிரதேசம்" என்று சொன்னாலும், அந்த மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பகுதிகளில் முஸ்லிம்கள் (அல்லது இலங்கைச் சோனகர்கள்) எண்ணிக்கை மிக அதிகம். அந்தப் பகுதிகள் நேரடியாக துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ளன.

- தொண்ணூறுகளில் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்ற, இன முரண்பாடுகளில் விரிசலை உண்டாக்கிய புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள் காரணமாக, கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கத் தலைப்பட்டனர். ஒரு தனியான தேசிய இனமாக பிரிந்து நின்றனர்.

- அது போதாதென்று, ஆகஸ்ட் 2006ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் மூதூரை கைப்பற்றிய புலிகள் அங்கிருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றினார்கள். ஆகவே, 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, 2006 ஆம் ஆண்டு மூதூரிலுமாக, இரண்டு தடவைகள் முஸ்லிகள் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். இன்னொருவிதமாக சொன்னால், புலிகளின் பார்வையில் தமிழீழம் என்பது "தூய" தமிழர்களின் பிரதேசம். அங்கிருந்து சிங்களவர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவார்கள். இதுபோன்ற புலிகளின் இனவாத நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களுக்கு தமிழீழப் போராட்டத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருமுருகன் காந்தி இதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், திருகோணமலையை சேர்த்து ஈழம் அமைத்து விடுவோம் என்று கனவு காண்கிறார்.

- திருகோணமலை மாவட்டத்தை, வடக்கில் உள்ள முல்லைத்தீவுடன் இணைக்கும் பதவியா பகுதியில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதைத் தவிர துறைமுகத்தை அண்டிய கந்தளாய், சேருவில பகுதிகளிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக குடியேறியவர்கள் என்பது உண்மை தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சிங்களவர்களை ஈழம் கிடைத்த பின்னர் இனச்சுத்திகரிப்பு செய்ய முடியாது.

இனி திருமுருகன் காந்தி கூறிய வரலாற்றுத் திரிபுகளுக்கு வருவோம்: 

- இரண்டாம் உலகப்போர் காலத்தில் மலேசியா, பர்மா வரை வந்து விட்ட ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக திருகோணமலையில் இருந்து தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டு சென்றதாக திருமுருகன் காந்தி கூறுகின்றார்.

- உண்மையில் அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சுருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தன. திருகோணமலை துறைமுகமும், அங்கிருந்த படைத்தளமும் ஜப்பானிய வான்படை விமானங்களால் தாக்கப்பட்டது. அப்போது நடந்த தாக்குதல்களில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. பல விமானங்கள், கப்பல்கள் அழிக்கப் பட்டன.

- இந்தியாவை இந்திரா காந்தி ஆண்ட காலத்தில், திருகோணமலைக்கு அமெரிக்க இராணுவம் வந்திறங்கவிருந்ததாகவும் அதனால் தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப் படதாகவும் திருமுருகன் காந்தி கூறுகின்றார். இது எந்த ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல்.

- அந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்க இராணுவம் வருவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இருக்கவில்லை. ஆனால், புத்தளத்தில் வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவைக்கான ஒலிபரப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. புத்தளம் இந்தியாவுக்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து அமெரிக்கா உளவறிய முயற்சிக்கலாம் என்று இந்திய அரசு விசனம் தெரிவித்திருந்தது.

- ஆனால், இந்தியா ஈழப் போராட்டத்திற்கு உதவியதன் காரணம் அதுவல்ல. பனிப்போர் காலத்தில் ஒரு நாடு எந்த முகாமில் இருக்கிறது என்பதைப் பொறுத்து, எதிரி முகாமின் பதிலிப் போராக உள்நாட்டு குழப்பங்கள் தூண்டி விடப்பட்டன. 1977 ம் ஆண்டிலிருந்து இலங்கை அமெரிக்காவுக்கு நெருக்கமாக சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னர் இலங்கையும் சோவியத் முகாமில் இருந்த படியால், இந்திரா காலத்து இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இது ஒரு மிகப்பெரிய பண்பியல் மாற்றம். ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு, சோவியத் யூனியன் விழுந்த பின்னர் எல்லா நாடுகளும் ஒரே அமெரிக்க குடையின் கீழ் வந்து விட்டன.

- மேலதிகமாக திருமுருகன் காந்தி சொல்லாத ஒரு தகவலையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். (நிச்சயமாக அவர் இதை உங்களுக்கு சொல்ல மாட்டார்.) திருகோணமலையில் 1956 ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அந்த வருடம் தான் தன்னை ஒரு இடதுசாரி சமூக ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்ட பண்டாரநாயக்க பிரதமரானார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, மிகப்பெரிய பிரிட்டிஷ் கம்பனிகளை அரசுடமையாக்கியது. அத்துடன் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் இராணுவ முகாமையும் விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிரகாரம் "முடிக்குரிய" பிரிட்டிஷ் படைகள் வெளியேற, அந்த இடத்தில் "முடிக்குரிய" சிலோன் படைகள் நிலைகொண்டன.

- இலங்கையின் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான அரசியல், இராணுவ, பொருளாதார மாற்றங்களின் பின்னர், 1958 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதைத் தூண்டி விட்டவர்கள், அன்று எதிர்க்கட்சியாக இருந்த, பிரிட்டிஷ் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி. அன்றிலிருந்து வளர்ந்து வந்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினை முள்ளிவாய்க்காலில் ஒரு துயர முடிவை சந்தித்தது. ஈழப்போர் முடிந்து பத்து வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியா மீண்டும் திருகோணமலையில் படைத்தளம் அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசும் அதற்கு சம்மதித்துள்ளது. 

திருகோணமலை கோளாறு பதிகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.


Tuesday, December 23, 2014

திருமுருகன் காந்தி குறை கூறும் "புலி ஆதரவு இடதுசாரிகள்" என்ன செய்தார்கள்?



பல வருட காலமாக, இடதுசாரியத்தை வசை பாடுவதும், மார்க்சியத்தின் மீது சேறு பூசுவதுமாக பலர் இயங்கி வருகிறார்கள். ஈழப் போரில் தமது விலை மதிக்க முடியாத உயிர்களை அர்ப்பணித்த, தமிழ் உழைக்கும் வர்க்க மக்களை அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் இதன் மூலம், உழைக்கும் மக்களை ஒடுக்கும் முதலாளிய வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கிறார்கள் என்பது, இடது சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கும் போதே தெரிந்து விடுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் ட்ராஸ்கிஸ்ட் அமைப்புகள், தங்களை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ளும் அதே நேரம் "நாங்கள் ஸ்டாலினிஸ்டுகள் இல்லை" என்று கூறி அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வார்கள். அதே மாதிரி, தமிழ் நாட்டில் இயங்கும் மே 17 அமைப்பினரும் நடந்து கொள்கிறார்கள். தங்களையும் இடதுசாரிகளாக காட்டிக் கொள்ளும் அதே நேரம், "நாங்கள் மார்க்சிஸ்டுகளோ அல்லது மாவோயிஸ்டுகளோ அல்ல" என்று கூறுவதன் மூலம், இந்திய அரசுக்கு நல்ல பிள்ளைகளாக காட்டிக் கொள்கிறார்கள். 

 //உலக அளவில் இருக்கும் இடதுசாரிகளின் நிலைப்பாடுகள், எந்த அளவின் இன்றும் இருக்கிறது? ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை இதுவரை உலக இடதுசாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் ?// என்று மே பதினேழு இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கேட்கிறார்.

இந்தக் கேள்வியை அவர் யாரிடம் கேட்கிறார் என்று புரியவில்லை. இதைக் கேட்டு எமக்கெல்லாம் தலை முடியை பிய்த்துக் கொள்ளாத குறை.

எனது குழப்பத்திற்கு காரணம் இவை தான்:

  1. அவர் தன்னைத் தானே ஓர் இடதுசாரியாகவும் காட்டிக் கொள்பவர். தோழர் என்று அழைத்துக் கொள்வார். ஏகாதிபத்தியம் பற்றியும் பேசுவார். 
  2.  அவர் தன்னை ஒரு கடும்போக்கு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்பவர். புலிகளுக்காக விட்டுக் கொடுக்காமல் வாதாடி வருபவர்.

இப்போது நாங்கள் தான் அவரிடம் அதே கேள்விகளை தொடுக்க வேண்டும். ஏனென்றால், எனக்குத் தெரிந்த வரையில், உலக அளவில் செயற்படும் புலிகளின் முகவர்கள் பலர், தத்தமது நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் அங்கம் வகிக்கிறார்கள். அநேகமாக அவை எல்லாம், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சிகளாக இருக்கும்.

பிரிட்டனில் Labour Party, பிரான்சில் Parti Socialiste(PS), ஜெர்மனியில் Sozialdemokratische Partei Deutschlands (SDP), நோர்வேயில் Arbeiderspartiet, நெதர்லாந்தில் Partij van de Arbeid (PvdA), கனடாவில் New Democratic Party (NDP) ... இப்படி ஒவ்வொரு மேற்கத்திய நாட்டிலும் உள்ள இடதுசாரிக் கட்சியில், பெருமளவு புலி ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.

Labour Party, Arbeiderspartiet, Partij van de Arbeid ஆகிய கட்சிகளின் பெயரே அந்தந்த மொழிகளில் "தொழிற் கட்சி" என்றிருக்கிறது. Parti Socialiste, Sozialdemokratische Partei Deutschlands ஆகிய கட்சிகளின் பெயரில் "சோஷலிசம்" இருக்கிறது.    மேற்குறிப்பிட்ட இடதுசாரிக் கட்சிகள், பல தடவைகள் அரசாங்கம் அமைத்துள்ளன என்பதும், ஏகாதிபத்திய போர்களுக்கு தலைமை தாங்கியுள்ளன என்பதும் இரகசியம் அல்ல.

புலிகளை ஆதரிக்கும் தமிழ் இடதுசாரிகள், சாதாரண கட்சி உறுப்பினர்களாக மட்டுமல்லாமல், பாராளுமன்ற உறுப்பினராகக் கூட வந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கனடாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் "தமிழ் இடதுசாரி" ராதிகா சிற்சபேசன், NDP எனும் இடதுசாரிக் கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவானார். அவர் கனடாவில் புலிகள் ஒழுங்கு படுத்தும், மாவீரர் தின நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்பவர். புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வருபவர். 

திருமுருகன் காந்தி குற்றஞ்சாட்டும் "உலக அளவில் இருக்கும் இடதுசாரிகள்", புலிகளாகவும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை, இப்போது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகி இருக்கும்.

அவரது அடுத்த கேள்வி: "ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை இதுவரை உலக இடதுசாரிகள் எவ்வாறு கையாண்டார்கள்?"

இது கட்டாயம், சம்பந்தப் பட்டவர்களினால் பதில் கூறப் பட வேண்டிய நியாயமான கேள்வி தான். ஒரு பக்கம் புலிகளை ஆதரித்துக் கொண்டே, மறுபக்கம் இனப்படுகொலைகளை நடத்திய ஏகாதிபத்திய அரசியல் கட்சிகளில் தொடர்ந்தும் உறுப்பினர்களாக இருப்பது எப்படி? இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுசரணையாக இருந்த, புலிகளுக்கு பல விட்டுக்கொடுப்புகளை செய்த எரிக் சொல்ஹைம் ஒரு நோர்வீஜிய இடதுசாரி (Sosialistisk Venstreparti). அப்போது ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசாங்கத்தின்(Arbeiderspartiet, Sosialistisk Venstreparti கூட்டணி) சார்பாக, பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராக இருந்தார். பேச்சுவார்த்தை காலம் முழுவதும், அவருக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதம் கிடைத்திருந்தது.

இறுதி யுத்தத்தின் பின்னர், முன்பு எரிக் சொல்ஹைம் புகழ் பாடிய புலி ஆதரவாளர்கள், இனப்படுகொலையை / போரினை தவறாகக் கையாண்டதாக அவரைத் திட்டினார்கள். அதற்குப் பிறகு, எத்தனை புலி ஆதரவாளர்கள், Arbeiderspartiet கட்சியில் இருந்து விலகினார்கள்? அல்லது அதற்கு வாக்களிக்காமல் விட்டார்கள்? இன்றைக்கும் நோர்வேயில் பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் Arbeiderspartiet க்கு தான் தேர்தலில் ஒட்டுப் போடுகின்றார்கள்.

பிரிட்டனில், டோனி பிளேரின் லேபர் பார்ட்டி ஆட்சியில் இருந்த காலத்தில் தான், புலிகள் இயக்கம் தடைசெய்யப் பட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் போடப் பட்டது. லேபர் அரசு, இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்தது. இந்த உண்மைகள் எல்லாம் ஊடகங்களில் பகிரங்கமான பின்னர், எத்தனை புலி ஆதரவாளர்கள் லேபர் கட்சியை விட்டு விலகினார்கள்?

லேபர், கன்சர்வேட்டிவ் ஆகிய இரண்டு கட்சிகளும் தான் பிரிட்டனை மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிர்வகிப்பதும் அந்த இரண்டு கட்சிகள் தான். "இடதுசாரி" லேபர் கட்சியும் ஒரு ஏகாதிபத்தியக் கட்சி தான் என்பது, ஈராக் மீதான படையெடுப்புக்கு ஆதரவு கொடுத்த நேரமே வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். 2003 ம் ஆண்டு ஈராக்கில் நடந்த இனப்படுகொலை/போரில் நேரடியாகப் பங்கெடுத்திருந்தது.

அப்போது பிரதமராக இருந்த டோனி பிளேர், மகிந்த ராஜபக்சேவுக்கு நிகரான இனப்படுகொலையாளி/போர்க்குற்றவாளி என்று உலகம் முழுவதும் குற்றஞ்சாட்டப் பட்டவர். இந்த உண்மைகள் தெரிந்த பின்னர், எத்தனை தமிழர்கள் லேபர் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தார்கள்? அல்லது அதற்கு ஒட்டுப் போடாமல் விட்டார்கள்? அவர்களில் எத்தனை பேர் புலி ஆதரவாளர்கள்?

ஏகாதிபத்திய லேபர் கட்சியை நிராகரித்த, எத்தனை "இடதுசாரி" தமிழர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) அல்லது அது போன்ற வேறு சிறிய இடதுசாரிக் கட்சிகளில் சேர்ந்தார்கள்? பலருக்கு பிரிட்டனில் அப்படி ஒரு கட்சி இருப்பதே தெரிந்திருக்காது. தெரிந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஆர்வம் இருந்திருக்காது.

அமெரிக்காவில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியும் ஓர் "இடதுசாரிக்" கட்சி தான். இன்றைக்கும் வலதுசாரி குடியரசுக் கட்சியின் கடும்போக்காளர்கள், ஒபாமாவை "கம்யூனிஸ்ட்" என்றும் திட்டுவார்கள். அதற்குக் காரணம், ஒபாமா அனைவருக்குமான மருத்துவக் காப்புறுதி திட்டத்தை நடைமுறைப் படுத்த விரும்பியது தான்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் (புலி ஆதரவாளர்களும் தான்) ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு தான் ஒட்டுப் போடுவார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர், அதே ஜனநாயகக் கட்சி சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு, புலிகள் இலட்சக் கணக்கான டாலர்களை தேர்தல் நிதியாக வழங்கினார்கள்.

"இடதுசாரி" ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. பல நூறு அப்பாவி மக்கள் பலியானார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் ஏகாதிபத்திய சுயரூபம் தெரிந்த பின்னர் தான், 2008 ம் ஆண்டு "ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு" உருவாக்கப் பட்டது.

ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பினை ஸ்தாபித்தவர்களும், தற்போதும் அதை நடத்திக் கொண்டிருப்பவர்களும் அமெரிக்கப் புலி ஆதரவாளர்கள் தான்.  "நாடு கடந்த தமிழீழ அரசு", இன்றைக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை, "புலி ஆதரவு தமிழ் இடதுசாரிகள்" இவ்வாறு தான் கையாண்டார்கள்.

ஒரு பல்கலைக்கழக பட்டதாரியான திருமுருகன் காந்தி, இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் பேசுகிறார் என்று நாங்கள் கருத முடியாது. இடதுசாரிகள் என்பது, பல வகையான அரசியல் கோட்பாடு கொண்ட கட்சிகளை, அமைப்புகளை அல்லது தனி நபர்களை குறிக்கும். அது ஒருபோதும் ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களை குறிப்பிடாது.

மேற்கத்திய நாடுகளில், பொதுவாக சமூக ஜனநாயக கட்சிகளை, இடதுசாரிகள் என்று தான் அழைப்பார்கள். அவர்களும் நாட்டில் தாங்கள் மட்டுமே இடதுசாரிகள் என்று பாவனை செய்து கொள்வார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாகவே, இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகள், ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளனர். எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அது நடந்தது.  அதனால் தான் அதிருப்தி கொண்ட பிரிவினர் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் பிரிந்து சென்றார்கள். அது வரலாறு.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இடது என்று சொல்லிக் கொள்ள விரும்பாத டோனி பிளேர், தனது கட்சிக்கு "New Labour" என்று பெயரிட்டுக் கொண்டார். ஏனென்றால், முதலாளித்துவ ஜனநாயகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அதற்கு ஏற்றவாறு மாற வேண்டுமாம்.

"ஆஹ்... நான்... வந்து... அந்த... மார்க்சிய - லெனினிச கட்சிகளை பற்றிக் குறிப்பிட்டேன் ..." என்று திருமுருகன் காந்தி மழுப்பலாம். அப்படியானால், அவருக்கு ஐரோப்பிய அல்லது உலக வரலாறு பற்றிய அறிவு மிகச் சொற்பம் என்று நினைக்க வேண்டியுள்ளது.

ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளை இனப்படுகொலை செய்து முடித்திருந்தது. வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, குவாத்தமாலா, அங்கோலா, மொசாம்பிக்.... இந்த நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளில் கொல்லப் பட்டோர் எத்தனை?

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஈழப் புலிகள் மாதிரி ஆயுதப் போராட்டம் நடத்திய, நூற்றுக் கணக்கான கம்யூனிஸ்ட் இளைஞர்கள் கொன்று குவிக்கப் பட்ட வரலாறு தெரியுமா? மார்க்சிய - லெனினிசம் பேசிய குற்றத்திற்காக, எத்தனை பேர் பயங்கரவாதிகளாக சிறைகளில் அடைக்கப் பட்டனர் என்பது தெரியுமா? இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. சிலநேரம், இப்போது தான் வாழ்க்கையில் முதல் தடவையாக கேள்விப் படுவீர்கள்.

அநேகமாக எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான கருத்து ரீதியிலான அழித்தொழிப்பு நடந்துள்ளது. அதாவது, கொலை செய்வதில்லை, சித்திரவதை செய்வதில்லை, ஆனால் மனிதர்களை நடைப்பிணமாக அலைய விடுவார்கள். படிக்க விடாமல், வேலை வாய்ப்பை பறித்து, குடும்பங்களை சிதைத்தார்கள். அதுவும் ஒரு வன்முறை தான்.

அமெரிக்காவில் மக்கார்த்தி ஒடுக்குமுறைக்கு பலியான கம்யூனிஸ்டுகள் எத்தனை? ஏன் மேற்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது? ஹங்கேரி மீதான சோவியத் படையெடுப்புக்கு பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கம்யூனிஸ்டுகளை விரட்டி விரட்டி கல்லெறிந்து தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன என்பது தெரியுமா?

பாடசாலைகளிலும், ஊடகங்களிலும் ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்ற இடையறாத பிரச்சாரத்தின் மூலம், மக்கள் மனதில் கம்யூனிச வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்தார்கள். ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைக்கு சந்தா கட்டினாலும், அவரது வேலை பறிபோகும். இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும், மார்க்சிய லெனினிஸ்டுகள் என்று சொல்லக் கூடிய யாராவது அரசியலில் நிலைத்து நிற்க முடிந்திருக்குமா?

ஏகாதிபத்தியத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டு, வசதியாக ஈழ அரசியல் பேசலாம். ஆனால், மார்க்சிய- லெனினிசம் பேச முடியாது. உலகமயமாக்கப் பட்ட உலகில், எங்கேயும் அதற்கு இடமில்லை. ஏனென்றால், உலகில் எல்லா நாடுகளிலும், முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டு தானிருக்கும். நீங்கள் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், ஏகாதிபத்தியத்தின் பார்வையில் உழைக்கும் மக்களின் விடுதலை பற்றிப் பேசுவோர் எல்லோரும் எதிரிகள் தான்.

நிலவுக்கஞ்சி பரதேசம் போக முடியாது.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Sunday, December 21, 2014

இடதுசாரி ஆவிகளை எழுப்பும் திருமுருகன் காந்தியின் இடது சந்தர்ப்பவாதம்

இல்லாத எதிராளிகளுடன் காற்றில் கம்பு சுழற்றுவதைப் போல, மே பதினேழு தலைவர் திருமுருகன் காந்தி, "இடதுசாரிகள் அதைச் செய்யவில்லை... இதைச் செய்யவில்லை..." என்று குற்றப் பத்திரிகை வாசிக்கிறார். "2009 ம் ஆண்டு, ஏகாதிபத்தியம் புலிகளை அழித்த நேரம், உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகள், மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தவில்லையாம்." இது உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை.

ஏகாதிபத்தியம் என்பதே இடதுசாரிகளின் கொள்கை சார்ந்தது தான். புலிகள் இருந்த காலத்தில் "சிங்கள ஏகாதிபத்தியம்" பற்றி மட்டுமே பேசினார்கள். மேற்கத்திய நாடுகளை அவர்கள் ஏகாதிபத்தியமாக பார்க்கவில்லை. இன்றைக்கும், 95% ஈழப் புலி ஆதரவாளர்களின் கொள்கையும் அது தான். ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று மறுப்பார்கள்.

திருமுருகன் காந்தி, ஏகாதிபத்தியமே புலிகளை அழித்தது என்று கூறுவதன் மூலம் தன்னையும் ஓர் இடதுசாரி சிந்தனையாளராகக் காட்டிக் கொள்கிறார். அதற்குப் பிறகு, இடதுசாரிகளை குறை கூறும் முரண்பாட்டை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

"இடது சந்தர்ப்பவாத அரசியல்"  அவரது நலன்களுக்கு வசதியாக இருக்கிறது என்றால், அவர் குற்றஞ் சாட்டும் "இடதுசாரிகளும்" அதே இடது சந்தர்ப்பவாதிகளாகத் தான் இருப்பார்கள் என்ற உண்மையை அறியாதது ஏனோ?

திருமுருகன் காந்தி கூறும் அதே ஏகாதிபத்தியம், புலிகளை அழிப்பதற்கு 25 வருடங்களுக்கு முன்னரே, இடதுசாரிகள், அல்லது மார்க்சிய லெனினிஸ்டுகளை அழித்தொழித்து விட்டது என்ற உண்மை அவருக்குத் தெரியாதா? தொண்ணூறுகளில் நடந்த பெர்லின் மதில் வீழ்ச்சி, சோவியத் யூனியன் உடைவு, இவற்றிற்குப் பின்னர், "கம்யூனிசம் புதைகுழிக்குள் போன வரலாறு" தெரியாதா? 

"இடதுசாரிய கொள்கைகள் காலாவதியாகி விட்டன" என்று, பல "இடதுசாரிகளே" பாதை மாறிய கதை தெரியாதா? அதற்குப் பிறகு தேசியவாதமே நிரந்தரமான, நிலையான கொள்கை என்று, சில முன்னாள் இடதுசாரிகள் கூட நம்பத்தொடங்கினார்கள் என்பது தெரியாதா? தமிழ்நாட்டிலேயே அதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

25 வருடங்களுக்கு முன்னர், 1991 ல் அழிந்து போன இடதுசாரிகள், 2009 ல் புலிகளை காப்பாற்ற ஓடி வரவில்லை என்று, திருமுருகன் காந்தி குற்றஞ் சாட்டுவது, இந்த வருடத்தின் மிகச் சிறந்த காமெடி. அவர் இன்னமும் பனிப்போர் காலத்தில் வாழ்வதாகவே எனக்குப் படுகின்றது. ஏனெனில், இடதுசாரிகள், மார்க்சிய லெனினிஸ்டுகள் பற்றி அவர் கொடுக்கும் "ஓவர் பில்ட் அப் வியாக்கியானம்" சிரிப்பை வரவழைக்கிறது.

என்னவோ இடதுசாரிகள் தான், இப்போதும் உலகை நடுநடுங்க வைக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இடதுசாரிகள் அந்தளவு பலமாக இருந்தால், அமெரிக்கா தனது "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை", முஸ்லிம்களுக்கு எதிராக அல்ல, இடதுசாரிகளுக்கு எதிராக நடத்தி இருந்திருக்கும்.

ஆயினும், திருமுருகன் காந்தி இங்கே மிகவும் தைரியமாக, ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார். உண்மையில் சர்வதேச இடதுசாரிகள் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள். புலிகள் ஒரு பக்கம், இலங்கை, இந்தியா, அல்லது சர்வதேசத்தில் இடதுசாரிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார்கள். ஆனால் மறு பக்கத்தில், உலக அரசியல் போக்குகளில் இடதுசாரிகளின் பங்களிப்பு மிகவும் குறைவு என்று அலட்சியப் படுத்தினார்கள். 

குறிப்பிடத் தக்க சிங்கள இடதுசாரிகள் கூட, புலிகளின் நண்பர்களாக இருந்தார்கள். விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற சிங்கள இடதுசாரிகள் புலிகளின் மேடைகளில் தோன்றி பேசினார்கள். ஒரு தலைமறைவு சிங்கள இடதுசாரிக் குழுவுக்கு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது. அவர்கள் கொழும்பில் புலிகளுக்காக குண்டுகளை வெடிக்க வைத்திருக்கிறார்கள்.

அதே நேரம், இந்தியாவில் ஆயுதப் புரட்சிக்கு போராடிய இடதுசாரிகளை புலிகள் புறக்கணித்ததும் வரலாறு. தமிழ் நாட்டின் பிரிவினைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ்நாடு விடுதலைப் படை, புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக இந்திய புலனாய்வுத்துறை குற்றஞ் சாட்டி வந்தது. பிற்காலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு புலிகள் பயிற்சி அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. "இந்திய அரசின் தலையீட்டை தடுக்கும் வகையில் இடதுசாரிகள் மக்களை அணிதிரட்டவில்லை." என்று, 2009 க்குப் பிறகு அரசியலுக்கு வந்த திருமுருகன் காந்தி கண்டுபிடிக்கிறார். 

உண்மையில், இந்திய மக்களை அணிதிரட்டக் கூடிய இடதுசாரிகளை புலிகள் ஆதரிக்காமல் புறக்கணித்து வந்தனர். அதற்குக் காரணம், இந்திய அரசின் எதிரிகளுடன் தொடர்பு வைத்தால், இந்திய மத்திய அரசை பகைக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வேயன்றி வேறொன்றுமில்லை. அதற்குப் பதிலாக, இந்திய அரசுக்கு முண்டு கொடுத்த வைகோ, ராமதாஸ், நெடுமாறன் வகையறாக்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். அவர்களை மலை போல் நம்பி இருந்தார்கள்.

மேலும் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், புலிகள் ஒரு பலவீனமான அரசியல் சக்தியாக கருதிய இடதுசாரிகளை என்றைக்குமே பொருட்படுத்தவில்லை. இலங்கையில், இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச மட்டத்திலும், ஓர் அரசியல் அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு, இடதுசாரிகளுக்கு அரசியல் பலம் அல்லது செல்வாக்கு கிடையாது என்று புலிகள் நம்பினார்கள். 

மேற்கத்திய நாடுகளில் இயங்கிய, மிகச் சிறிய மார்க்சிய லெனினிச கட்சிகள், மாவோயிச கட்சிகள், அனார்க்கிஸ்ட் குழுக்கள், ட்ராஸ்கிச சோஷலிச கட்சிகள் இவற்றுடனும் புலம்பெயர்ந்த புலி செயற்பாட்டாளர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். 2009 ம் ஆண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அவர்களும் உதவி செய்திருக்கிறார்கள். அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு இடதுசாரிகள் வழமையாக சென்று வந்தனர். ஆனால், இடதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புலி ஆதரவாளர்களை விரல் விட்டு எண்ண முடியும். அநேகமாக இல்லையெனலாம்.

உண்மையில் புலிகள், திருமுருகன் காந்தி முதன்மைக் குற்றவாளிகளாக சுட்டிக் காட்டும், அதே மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியை நாடினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ஒற்றைத் துருவ உலக அரசியலில், இடதுசாரிகளை  விட வலதுசாரிகள் பிரயோசனமாக இருப்பார்கள் என்று நம்பினார்கள். அதனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு தேர்தல் நிதி வழங்கினார்கள். 2008 ம் ஆண்டு தொடங்கப் பட்ட, "ஒபாமாவுக்கான தமிழர்  அமைப்பு" இன்னமும் இயங்குகின்றது.  (பார்க்க: http://www.prweb.com/releases/2008/10/prweb1426594.htm)

புலம்பெயர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர்கள் பலர், அந்தந்த நாடுகளில் உள்ள ஆளும் கட்சிகளின் உறுப்பினர்களாக கூட இருந்திருக்கிறார்கள். இன்னமும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கனடாவின் பிரபல தமிழ் அரசியல்வாதியான ராதிகா சிற்சபேசன் ஒரு புலி ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. ஆனால், அவர் உறுப்பினராக உள்ள NDP கட்சி, ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான கனடாவின் ஏகாதிபத்திய போர்களுக்கு ஆதரவாக இருந்தது.  (NDP: Part of the Imperialist System, http://www.pcr-rcp.ca/en/archives/741)

உண்மையில், திருமுருகன் காந்தியிடமும், ஏகாதிபத்தியம் பற்றிய தெளிவான விளக்கம் கிடையாது. புலிகள் அழியும் போது மட்டும் தானா, ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருப்பது அவர் கண்களுக்கு தெரிந்தது? அதற்கு  முன்னரும், பின்னரும் ஏகாதிபத்தியம் என்ன செய்தது என்று சொல்வாரா?  இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில், இனங்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதும், யுத்தங்களை உண்டாக்கி ஆயுதங்களை விற்பதும் ஏகாதிபத்தியம் தான். அதற்காக இரண்டு பக்கமும் நண்பனாக நடிப்பார்கள். இறுதியில் மறுகாலனியாதிக்கத்தில் கொண்டு வந்து முடிப்பார்கள்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: