Showing posts with label இனவாதம். Show all posts
Showing posts with label இனவாதம். Show all posts

Friday, April 06, 2018

"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்!" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்


"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்!"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்

இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே! அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம். 
  • - "இவர் யார்?" 
  • - "சிங்கள - பௌத்த பேரினவாதி." 
  • - "இவர் இங்கே என்ன செய்கிறார்?" 
  • - "தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்."
  • - "இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?"
  • - "இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ!"

இப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். "பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
"படம் பார், பாடம் படி!"

சிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.

உலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

இந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது?

சிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா? சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா?

சாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா? எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும்? எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.

இங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.

போராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.

ஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
  • "இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே!"
  • "இடதுசாரியம் சோறு போடாது, மக்களே! வலது பக்கம் திரும்புங்கள்."
  •  "இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்."
  •  "இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது! புரிந்ததா?"


இந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.

இந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான்? இதைக் காட்டி பிழைக்க முடியுமா? நாலு காசு சம்பாதிக்க முடியுமா? இல்லைத் தானே? கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.

இந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

புத்த‌ பிக்குக‌ள் எல்லோரும் ஒரே அர‌சிய‌லை பின்ப‌ற்றுவ‌தில்லை. முன்னிலை சோஷ‌லிச‌க் க‌ட்சி ம‌ற்றும் ப‌ல‌ சிங்க‌ள‌ இட‌துசாரி அமைப்புக‌ளில் புத்த‌ பிக்குக‌ளும் செய‌ற்ப‌டுவ‌துண்டு. அவ‌ர்க‌ள் த‌மிழ்ப் ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் போராட்ட‌ங்க‌ளில் த‌மிழ் ம‌க்க‌ளோடு க‌ல‌ந்து கொள்வ‌தில் என்ன‌ த‌ப்பு? க‌ண்ட‌தை எல்லாம் ச‌ந்தேக‌ப் ப‌டுவ‌த‌ன் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளை ஒதுக்கி வைக்கிறோம். ப‌கைவ‌ர்க‌ளை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே த‌னிமைப்ப‌டுத்திக் கொள்கிறோம்.

படத்திற்கு நன்றி: Newton Mariya Mainthan

பிக்கு பற்றிய விபரம் : //வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.// 


Wednesday, July 19, 2017

இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பன்னிரண்டு)
"உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களையும் விட, யூதர்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்." இந்த தவறான கருத்தை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இருக்கிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, யூதர்கள் குறித்த மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். உலகிலேயே அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட இனமான யூதர்கள் எதையாவது கண்டுபிடித்து மனித குலத்திற்கு வழங்கி இருக்கிறார்களா? காகிதம், வெடிமருந்து, பட்டுத் துணி, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். யூதர்கள் கண்டுபிடித்ததாக கூறக்கூடிய ஒரே விடயம் மதம் சார்ந்தது. "பல தெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஒரே கடவுளை வழிபடும் மதத்தை தோற்றுவித்தார்கள்," என்று கூறலாம். ஆனால் யூதர்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் ஓரிறைக் கொள்கை இருந்துள்ளது. பாரோ மன்னர்கள் ஆண்ட எகிப்தில், ஆமன் என்ற ஒரே கடவுளை வழிபடும் மதம் சிறிது காலம் அரச மதமாக இருந்தது.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் சில நண்பர்கள், "இதோ பாருங்கள், யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள், தத்துவ ஞானிகள்..." என்று ஒரு பெரிய பட்டியலையே கொண்டு வருவார்கள். அந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பிரஜைகள் என்பது ஒரு தற்செயல் அல்ல. சீனா, அரேபியா, இந்தியா என்று உலகம் முழுவதும் திருடிய அறிவுச் செல்வங்களை ஐரோப்பியர்கள் தமதாக்கிக் கொண்டார்கள். இந்த மாபெரும் அறிவுத்திருட்டு இடம்பெற்ற வரலாறு ஒரு பெரிய கதை. "பூமி உருண்டையானது" என்று கூறியவர்களை தூக்கில் போட்ட தேசத்தில் இருந்து, எப்படி ஒரு விஞ்ஞானி தோன்ற முடியும்? சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா? சிலுவைப்போரினால் விளைந்த நன்மையாக, ஐரோப்பியர்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தான் விஞ்ஞானம், அறிவியல், கணக்கியல், வான சாஸ்திரம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக, ஐரோப்பியர்கள் பின்னர் அவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தார்கள். அறிவியல் சார்ந்த நவீன கல்வியும் அப்போது தான் உருவானது.

எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகக் கூறினால், படித்த யூத அறிஞர்கள் பலர் தம்மை மதச் சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அன்றிருந்த யூத பழமைவாதிகள், "அவர்கள் யூதர்கள் இல்லை," என்று கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர் என்று மற்றவர்கள் தான் கூறுகிறார்கள். அவர் எந்தவொரு இன அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ளாதவராக, ஒரு நாஸ்திகராக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன், யூத தேசியவாதிகளான சியோனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்தார். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக, என்னை "தமிழன் இல்லை" என்று சில நண்பர்கள் கூறுகின்றனர். முரண்நகையாக இதே நண்பர்கள் தான், "யூத மதச் சார்பற்ற, யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத" விஞ்ஞானிகளின் பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

யூதர்கள் மட்டும் எப்படி அறிவுக்கூர்மை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்க முடியும்? மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் "யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்," என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், "பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்." என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு காட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா?")

நிறவெறியர்களான சில விஞ்ஞானிகளும், ஹிட்லரும், "வெள்ளையர்களே உலகில் சிறந்த அறிவுக்கூர்மை கொண்டவர்கள்." என்றனர். இப்போதெல்லாம் விஞ்ஞானத்தை காட்டி தான் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். "மரபணுச் சோதனையின் படி, யூதர்கள் தனியான மரபணு கொண்டவர்கள்," என்றும், "புத்தியும், திறமையும் மரபணு மூலம் கடத்தப்படுகின்றது." என்றும் கூறுவார்கள். ஹிட்லர் போன்ற இனவெறியர்களும் அதைத் தான் பரப்புரை செய்தனர். "வெள்ளையினத்தவர்கள் மூளைசாலிகள், கறுப்பினத்தவர்கள் முட்டாள்கள். இது மரபணுவில் எழுதப்பட்டுள்ளது." என்றார்கள். "மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது." என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.

1975 ல், அமெரிக்க விஞ்ஞானி வில்சன், "சமூக உயிரியல்" என்றொன்றை கண்டுபிடித்தார். இதனை விஞ்ஞானம் என்பதை விட, வலது தீவிரவாத அரசியல் கருத்துருவாக்கம் என்பதே சாலப்பொருத்தம். சமூக- உயிரியல்வாதிகள் புத்திசாலித்தனத்திற்கும், செல்வத்திற்கும் முடிச்சுப் போடுகின்றனர். "ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்." இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள். பிறருடன் இனக்கலப்பு செய்யாத தூய இனமாக கருதப்படும் யூதர்கள், சமூக- உயிரியல்வாதிகளால் அடிக்கடி உதாரணம் காட்டப்படுகிறார்கள்.

யூதர்கள் கொண்டுள்ள விசேட மரபணுக்கள் காரணமாக, அவர்கள் புத்திசாலிகளாகவும், பணக்காரர்களாகவும் இருக்கின்றனர். உலகையே ஆட்டிப் படைக்கின்றனர்.(Eugenics:
A social movement in which the population of a society, country, or the world is to be improved by controlling the passing on of hereditary information through mating
.) உலகம் முழுவதையும் ஆள்வதற்கு யூதர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை விளக்கும் நூல் ( The Protocols of the Elders of Zion) ஒன்று 1903 ல் வெளியானது. ஹிட்லரும், நாஜிகளும் அவற்றை பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்தார்கள். "வங்கிகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் யூதர்களின் கைகளில் இருக்கின்றன." (ஏனென்றால் யூதர்கள் தான் புத்திசாலிகள் ஆயிற்றே) என்ற பொய்ப் பரப்புரை, யூதர்கள் மீதான வன்முறைக்கு ஜெர்மனியரின் ஆதரவை திரட்டியது. யூதர்களின் உதாரணத்தை பின்பற்றி, இனக்கலப்பற்ற தூய ஆரிய இனத்தை உருவாக்க வேண்டுமென்பது ஹிட்லரின் கனவு. யூதர்கள் பற்றிய பிரமை கொண்ட தமிழர்கள், "சாதி, மத, இனக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக வாதாடினால்," ஆச்சரியப்பட எதுவுமில்லை. நிறவெறி, இனவெறி, சாதிவெறி எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.

(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Tuesday, May 30, 2017

இயற்கை அழிவில் இன்பம் காணும் இனவாதத்தை விட்டொழிப்போம்


சிங்க‌ள‌ பேரின‌வாத‌ அர‌சின் நிக‌ழ்ச்சிநிர‌லில் இய‌ங்கும் ஈழ‌த்து த‌மிழின‌வாதிக‌ள், மீண்டும் ம‌க்க‌ளை பிரித்து வைக்கும் சூழ்ச்சியில் இற‌ங்கி உள்ள‌ன‌ர்.

அண்மையில் தென்னில‌ங்கையில் வெள்ள‌த்தால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளை, முள்ளிவாய்க்கால் போரினால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளுட‌ன் ஒப்பிட்டு, "எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌டும் போது பார்த்துக் கொண்டிருந்த‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும்..." என்று இன‌வாத‌ப் பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர்.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இல‌ங்கையின் இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றி அரைகுறையாக‌ அறிந்து கொண்ட‌, அல்ல‌து ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பும் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌ப் போரின் ப‌ல்வேறு ப‌ரிமாணங்க‌ளும் தெரியாது.

இறுதிப் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ரே, தென்னில‌ங்கையில் அர‌ச‌ அட‌க்குமுறை தொட‌ங்கி விட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ சிங்க‌ள‌ அர‌சியல் ஆர்வ‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டு சிறைக‌ளில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். "இன‌த் துரோகிக‌ள், புலிக‌ளின் ஒட்டுக் குழுக்க‌ள்" என்றெல்லாம் பிர‌ச்சார‌ம் செய்து ம‌க்க‌ள் ம‌த்தியில் அந்நிய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அதைத் த‌விர‌ ஊட‌க‌ங்க‌ள் க‌டுமையான‌ த‌ணிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌. பாதுகாப்பு கார‌ண‌ங்க‌ளை குறிப்பிட்டு க‌ருத்து சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. இத‌னால் ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தே தெரியாத‌ நிலை இருந்த‌து. அமெரிக்க‌ ம‌க்க‌ளைப் போன்று, சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் இது ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் என்று ந‌ம்ப‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ளில் இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

ஒரு நாட்டில் ம‌க்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைத்தால், ஆள்வ‌து இல‌குவாகி விடும். ஒவ்வொரு இன‌மும் த‌ங்க‌ள‌து பாதிப்புக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து சிந்திக்கும். த‌ங்க‌ள‌து த‌ர‌ப்பு இழ‌ப்புக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே திரும்ப‌த் திரும்ப‌ பேசி ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெறுப்பை விதைப்பார்க‌ள். சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள், த‌மிழ் இன‌வாதிக‌ள், முஸ்லிம் இன‌வாதிக‌ள் எல்லோரும் இதில் கைதேர்ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள‌து அர‌சிய‌ல், கொள்கை, ந‌டைமுறை எல்லாம் ஒன்று தான்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் இஸ்ரேலில் காட்டுத்தீ ப‌ர‌வி பெரும் நாச‌ம் விளைவித்த‌து. அப்போது ப‌ல‌ முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ள் "இது அல்லாவின் த‌ண்ட‌னை" என்றார்க‌ள். அதே மாதிரி, த‌மிழ் அடிப்ப‌டைவாதிக‌ளும் பேசுகின்ற‌ன‌ர். தென்னில‌ங்கை வெள்ள‌ அழிவுக‌ள் "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்கிறார்க‌ள்.

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளும் வெள்ள‌ அழிவுக‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனாலும் த‌மிழின‌வாதிக‌ளுக்கு அதைப் ப‌ற்றி எந்த‌க் க‌வ‌லையும் இல்லை. தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளையும் த‌ம‌து ச‌கோத‌ர‌ இன‌மாக‌ க‌ருதாத‌ குருட்டுத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல் பார்வை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர்.

வ‌ட‌க்கில் த‌மிழ‌ரும், தெற்கில் சிங்க‌ள‌வ‌ரும் இரு வேறு உல‌க‌ங்க‌ளில் வாழ்கின்ற‌ன‌ர். இந்த‌ வேறுபாட்டை அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிற‌து. 1971 ம் ஆண்டு தெற்கில் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் வ‌ட‌க்கில் இருந்த‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள்? எந்த‌ எதிர்ப்பும் காட்டாம‌ல் மௌன‌மாக‌ இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு பிற‌ இனங்க‌ளை ப‌ற்றி எந்த‌ அக்கறையும் இருக்க‌வில்லை.

அதே மாதிரித் தானே சிங்க‌ள‌த் தேசிய‌வாதிக‌ளும் ந‌ட‌ந்து கொள்வார்க‌ள்? இவ‌ர்க‌ள் பேசும் மொழிக‌ள் வேறாக‌ இருந்தாலும் தேசிய‌வாத‌ம் என்ற‌ சுய‌ந‌ல‌வாத‌க் கொள்கை ஒன்று தானே? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய‌ ம‌ட்டைக‌ள் தானே? ச‌ட்டியை பார்த்து அடுப்பு க‌றுப்பு என்று சொல்லிய‌தாம்.

வெள்ள‌ அன‌ர்த்த‌ங்க‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான். ஈழ‌ப்போரை நட‌த்தி ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌டுகொலைக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும், த‌ள‌ப‌திக‌ளும் எந்த‌ப் பாதிப்புக்கும் உட்ப‌ட‌வில்லை. இது உண்மையிலேயே "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்றால், உண்மையில் அவ‌ர்க‌ள் அல்ல‌வா பாதிக்க‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும்?

இன‌வாத‌ம் பேசுவ‌து ஒரு சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல். எந்த‌ அறிவும் அத‌ற்குத் தேவையில்லை. சாதாரண‌ மக்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைப்ப‌தன் மூல‌ம் விடுத‌லை பெற‌ முடியாது. அத‌ற்குப் பெய‌ர் சுய‌நிர்ண‌ய‌மும் அல்ல‌. எந்த‌ அர‌சிய‌ல் கோட்பாடும‌ற்ற‌ இன‌வாத‌க் கோஷ‌ங்க‌ள் இறுதியில் ஆள்வோருக்கே ந‌ன்மை உண்டாக்கும்.

இனக்குழுவாத சுயநல அரசியலுக்கு தமிழ்த் தேசியம் என்று பெயர் வைக்காதீர்கள். அது உங்களது அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. நீங்கள் தேசிய அரசியலில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், சர்வதேச அரசியலில் ஸீரோ தான்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் மரணமடைந்தும், இலட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தும் உள்ளனர். இது இலங்கையில் சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தம்.

தென்னிலங்கை என்றாலே அங்கே சிங்களவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்று தான் வடக்கு-கிழக்கு தமிழ்த் தேசிய "அறிஞர்கள்" நினைத்துக் கொள்கிறார்கள். ஆகையினால், "முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பழிவாங்கலாக, தற்போது கடவுள் சிங்களவர்களை தண்டிக்கிறார்..." என்று சொல்லிக் கொண்டனர்.

ஒருவர் கவிதையாக எழுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட "சிங்கள" மக்களுக்கு, சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொன்னார். இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டு, தமிழர்களை இருட்டறைக்குள் வைத்திருக்கவே உதவுகின்றன.

வெள்ள அழிவுகளை ஏற்படுத்திய "கடவுளின் தண்டனை" காரணமாக, சிங்கள மக்கள் விழிப்படைந்து தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக வருந்துவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. அது சிறுபிள்ளைத்தனமான மூட நம்பிக்கை என்பதை சிலர் பின்னர் உணர்ந்து கொண்டனர்.

இந்தியா, சீனா, ஜப்பான், மற்றும் பல உலக நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றன. உலக நாடுகளில் எல்லா ஊடகங்களிலும் இலங்கையில் நடந்த வெள்ள அனர்த்தம் முக்கிய செய்தியாக இடம்பெற்றது.

அதனால், "தமிழ்த் தேசியவாதிகளின்" கோபம் சர்வதேசம் மீது திரும்பியது. "முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்த நேரம் இந்த சர்வதேசம் எங்கே இருந்தது? தமிழ் மக்கள் அழிந்த நேரம், ஏன் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?" என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.

இவர்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில் ஏறாத சில விடயங்கள் உள்ளன. போரில் மனிதனால் உண்டாக்கப் படும் அழிவுகள், அவரவர் அரசியல் நலன் சார்ந்தே பார்க்கப் படும். உலக மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை ஏகாதிபத்திய நலன் சார்ந்த சர்வதேச ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.

கொங்கோவில் நடந்த போரில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட நேரம் சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை. அப்போது அந்த மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இன்று, யேமன், தெற்கு சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர்களினால் கொல்லப் படும் மக்கள் பற்றிய தகவல்கள், நமது "தமிழ்த் தேசிய அறிஞர்களுக்கு" கூடத் தெரியாது. ஏனென்றால், அதில் சர்வதேசம் கவனம் செலுத்தவில்லை.

அதே நேரம், வறட்சியால் பாதிக்கப் பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு, அங்கு பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப் படுகின்றன. அதற்கான நிதி சேகரிக்கும் விளம்பரங்கள் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி காண்பிக்கப் படுகின்றன. "போர் நடந்த காலத்தில் எமது இனம் அழிக்கப் பட்ட நேரம், ஏன் சர்வதேசம் பாராமுகமாக இருந்தது?" என்று அந்த ஆப்பிரிக்க நாடுகளின் மக்களும் கேட்கலாம்.

முன்னொரு காலத்தில் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த போர்கள், தற்போது இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு கடத்தப் படுகின்றன. அதாவது, முன்னர் ஐரோப்பியர்கள் பிரிந்து நின்று தமக்குள் யுத்தம் செய்தார்கள். தற்போது மூன்றாமுலக நாடுகளின் மக்களை இன, மத அடிப்படையில் பிரிந்து நின்று யுத்தம் செய்ய வைக்கிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் யுத்தங்களுக்கும், முதலாளித்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. யுத்தம் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். கடன் கொடுக்கும் வங்கிகளின் வட்டியால் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். "ஆதலினால் யுத்தம் செய்வீர்!" என்பது முதலாளித்துவ அடிப்படை தத்துவம்.

அதே மாதிரி, இயற்கைப் பேரழிவுகளுக்கும், முதலாளித்துவத்திற்கும் தொடர்பு இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெரும் நிறுவனங்களின் இலாபவெறி காரணமாக பூமியின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பல்வேறு தீய விளைவுகளை உண்டாக்குகிறது. வெள்ள அனர்த்தம் அதில் ஒன்று.

இயற்கைப் பேரழிவுகளால், முதலாம் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனால், மூன்றாமுலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெருந்தொகையில் மக்கள் கொல்லப் பாடவும், வீடுகளை இழக்கவும் காரணமாகி விடுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் நிகராகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் வந்த வெள்ளப் பெருக்கு, இலங்கையை விட அதிகமான அழிவுகளை உண்டாக்கி இருந்தது.

ஆகவே, போரினால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், இயற்கையால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், மேலைத்தேய முதலாளித்துவம் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டுள்ளது. போர் போன்ற செயற்கை அழிவுகள் மனிதனால் உண்டாக்கப் பட்டவை என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அது சிறு பிள்ளைக்கும் புரியும்.

ஆனால், இயற்கை அழிவுகளில் சர்வதேச முதலாளித்துவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக் கொள்வது இலகு. மெத்தப் படித்தவர்கள் கூட இயற்கை அழிவுக்கு காரணமான காலநிலை மாற்றம் என்ற காரணியை நம்ப மறுப்பார்கள். அதனால் தான் சர்வதேசம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

Thursday, March 16, 2017

நெதர்லாந்து தேர்தல்: இனவாதிகளின் "தேசிய வீழ்ச்சி"! இடதுசாரிகளின் எழுச்சி!!

நெதர்லாந்து பொதுத் தேர்தல்: இனவாதம் தோற்கடிக்கப் பட்டது!
15-3-2017 ல் நடந்த நெதர்லாந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல் உலகளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், பிரித்தானியாவின் Brexit வாக்கெடுப்பு, அமெரிக்காவில் டிரம்பின் தெரிவுக்குப் பிறகு நடந்த பிரதானமான தேர்தல் இது. அந்த நிகழ்வுகள் நெதர்லாந்தின் இனவாத அரசியல்வாதி வில்டர்சின் வெற்றி வாய்ப்புக்கு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப் பட்டது.

ஊடகங்களால் ஊதிப் பெருக்கப் பட்ட இனவாத அரசியல் எழுச்சி இறுதியில் நடக்கவேயில்லை. வில்டர்சின் சுதந்திரக் கட்சி (PVV) 20 ஆசனங்களை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த தேர்தலை விட ஐந்து ஆசனங்கள் அதிகமாக எடுத்துள்ளது. இருப்பினும் அதை ஒரு வெற்றியாக கருத முடியாது. உண்மையில் வில்டர்சின் இனவாத அரசியலுக்கு கிடைத்த தோல்வியே அது.

உண்மையில் சுதந்திரக் கட்சி முழுக்க முழுக்க தனிமனித வழிபாட்டைக் கொண்டுள்ளது. அதன் தலைவர் வில்டர்ஸ் மட்டும் தான் எல்லாமே. அவரது வாயில் இருந்து வருவது தான் அரசியல். தன்னை ஒரு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டிருந்தார். மசூதிகளை மூட வேண்டும், குரானை தடை செய்ய வேண்டும் என்று தீவிர அரசியல் பேசினார். அதே நேரம், அகதிகள், குடியேறிகள் வருவதை தடை செய்யவேண்டும் என்றும் பேசி வருபவர்.

வழமையாக இப்படியானவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஊடகங்கள், அமெரிக்காவில் டிரம்பின் வெற்றிக்குப் பின்னர் நெதர்லாந்தில் வில்டர்ஸ் வெற்றி பெறலாம் என்ற மாயையை உருவாக்கி விட்டிருந்தன. கடந்த வருடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்புகளில் கூட வில்டர்சின் சுதந்திரக் கட்சி குறைந்தது முப்பது ஆசனங்களை பெற்று முதலிடத்திற்கு வரும் என்று எதிர்வு கூறப் பட்டது. ஆனால் அந்த கணிப்புகள் இறுதியில் பொய்த்து விட்டன. அதற்கு என்ன காரணம்?

உண்மையில் வில்டர்ஸ் ஊடகங்களை நம்பி அரசியல் செய்து வந்தார். "பாதுகாப்பு குறைபாடு காரணமாக" வாக்காளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஏற்கனவே "மொரோக்கோ குடியேறிகளை குறைப்போம்" என்ற இனவாதப் பேச்சு காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டிருந்தார். அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சி கைகூடவில்லை.

வில்டர்ஸ் தனது எதிராளிகளுடன் விவாதிப்பதை தவிர்த்து வந்தார். ரொட்டர்டாம் மசூதியில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டும் செல்லவில்லை. அது மட்டுமல்ல, ஊடகங்கள் ஒழுங்கு படுத்திய விவாத அரங்குகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். அதே நேரம், பிரதமர் மார்க் ருத்தே ஒரு முக்கியமான அறிவிப்பை விடுத்தார். PVV பெரிய கட்சிகளில் ஒன்றாக வந்தாலும், அதனோடு கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

மார்க் ருத்தேயின் அறிவிப்பு வில்டர்சின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். ஏனென்றால், நெதர்லாந்தில் கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக கூட்டு அரசாங்கம் தான் ஆட்சி அமைக்கின்றது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலைமையில் கூட்டணியை விட மாற்று வழி இல்லை. 

அடிப்படையில், மார்க் ருத்தேயின் லிபரல் கட்சியும், வில்டர்சின் சுதந்திரக் கட்சியும் முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள் தான். ஆனால், வில்டர்ஸ் பகிரங்கமாக இனவாதம் பேசுவதால், அவரது கட்சியோடு கூட்டு அரசாங்கம் அமைப்பது சங்கடத்திற்கு உள்ளாக்கும் என்பது மார்க் ருத்தேவுக்கு தெரியும்.

தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பிரதமர் மார்க் ருத்தவும், வில்டர்சும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக் கொண்டனர். டச்சு மக்களின் மருத்துவ வசதிகளுக்கான செலவினத்தை குறைத்துள்ள அரசாங்கம், அகதிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க உதவுகின்றது என்று வில்டர்ஸ் குற்றம் சாட்டினார். அகதிகளை வர விடாமல் தடுப்பதற்கு எல்லையில் மதில் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், வில்டர்ஸ் அகதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தை வலிந்து புகுத்தினார். அகதிகளை வெளியேற்றினால், குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தால் உள்நாட்டு டச்சு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொன்னார். பிரித்தானியா மாதிரி, நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றார்.

இவை எல்லாம் சாத்தியமா என்பது ஒருபுறமிருக்க, ஆளும் லிபரல் கட்சி ஏற்கனவே குடியேறிகள் விடயத்தில் கடுமையாகத் தான் நடந்து கொள்கின்றது. வில்டர்ஸ் நேரடியாக சொல்வதை, லிபரல் கட்சி சுற்றிவளைத்து சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். அகதிகள் வருகையை தடுப்பதற்காக துருக்கியுடன் ஒப்பந்தம் செய்ததை அந்த விவாதத்தில் மார்க் ருத்தே சுட்டிக் காட்டினார். அதாவது, "நாங்களும் அகதிகளுக்கு எதிரானவர்கள் தான்" என்பதை சொல்லாமல் சொன்னார்.

வீட்டுக்கு வீடு குரான் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வில்டர்ஸ் சொன்னதை நினைவுபடுத்திய மார்க் ருத்தே, "அந்த குரான் பொலிஸ் எப்படி இயங்கும்?" என்று கேட்டார். அதற்கு பதில் கூற முடியாமல் வில்டர்ஸ் தடுமாறினார். "ஓ! போலி வாக்குறுதி கொடுத்தீர்களா?" என்று மார்க் ருத்தே கிண்டலடித்தார்.

உண்மையில், வில்டர்ஸ் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. அகதிகள், முஸ்லிம்கள், குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அப்படி நடந்தால் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும். இந்த நாட்டில் துப்பரவுப் பணி போன்ற அடித்தட்டு வேலைகளை செய்வோர் அந்தப் பிரிவினர் தான்.

அகதிகள், முஸ்லிம்களை வெளியேற்றுவதால் உள்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. முதலாவதாக, பெரும்பாலான டச்சுக் காரர்கள் அடித்தட்டு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. இரண்டாவதாக, மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வர மாட்டார்கள். மூன்றாவதாக, இன்றைய நிலையில் எந்த முதலாளியும் சம்பளம் கூட்டிக் கொடுக்க தயாராக இல்லை.

மேலும், வில்டர்ஸ் போன்ற இனவாத சக்திகளின் எழுச்சிக்கு "உலகமயமாக்கல்" காரணம் என்றும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அப்படிச் சொல்வதும் அதே இனவாத சக்திகள் தான். "தேசிய எழுச்சி" என்ற பெயரில் உலகமயமாக்கலை தடுப்பது நடைமுறைச் சாத்தியமன்று.

நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நினைத்தும் பார்க்க முடியாது. ஒருவேளை, பிரித்தானியா மாதிரி பிரிந்தாலும் உலகமயமாக்கலில் இருந்து தப்ப முடியாது. அதற்குக் காரணம் நெதர்லாந்து பொருளாதாரமும் உலகமயமாக்கலால் நன்மை அடைகின்றது. பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், சிறிய ஏற்றுமதி நிறுவனங்களும் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்கின்றன.

ஆகவே, வில்டர்ஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது. பெரிய முதலாளித்துவ நிறுவனங்களை பகைக்க முடியாது. அதனால், அவருக்கு ஓட்டுப் போட்ட மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும், வில்டர்சின் "தேசிய எழுச்சி" எந்தளவு தூய்மையானது? இன்னொரு விதமாகக் கேட்டால், வில்டர்ஸ் உண்மையிலேயே ஒரு "தேசியவாதி" தானா? அவரது கட்சிக்கு இஸ்ரேல், அமெரிக்காவில் இருந்து நிதியுதவி கிடைப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. கடந்த வருடம், வில்டர்ஸ் இஸ்ரேலின் கைப்பொம்மையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வுத்துறையால் (AIVD) விசாரணை செய்யப் பட்டார்.

எதற்காக வில்டர்ஸ் போன்ற இனவாதிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது? உண்மையில் ஊடகங்கள் இப்படியானவர்களை வளர்த்து விடுகின்றன. பல வருடங்களாக பொருளாதாரப் பிரச்சினை நிலவியது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அரசாங்கம் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், மக்கள் அனுபவித்த சலுகைகளை வெட்டியது.

காலங்காலமாக ஆண்டு வரும் பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனால், மக்கள் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. மக்களின் ஏமாற்றத்திற்கு வடிகாலாக, வில்டர்ஸ் போன்ற இனவாதக் கோமாளிகளை மாற்று அரசியல் சக்தியாக காட்டுகிறார்கள். இந்த நாடகம் இன்னும் சில வருடங்கள் அரங்கேறும்.

நெதர்லாந்து தேர்தல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்த தகவல் ஒன்றுள்ளது. 21 ம் நூற்றாண்டின் முற்போக்கு இடதுசாரிகள் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளனர். குறிப்பாக, இட‌துசாரி ப‌சுமைக் க‌ட்சி (Groen Links) மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள‌து. க‌ட‌ந்த‌ தேர்தலை விட‌ 10 ஆச‌ன‌ங்க‌ள் அதிக‌மாக‌ப் பெற்றுள்ள‌து. த‌லைந‌க‌ர் ஆம்ஸ்ட‌ர்டாமில் அதுவே பெரிய‌ க‌ட்சி. இன்னொரு இடதுசாரிக் கட்சியான சோஷலிசக் கட்சியும் 15 ஆசனங்களுடன் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது.

அதே நேர‌ம், பாரம்பரிய சமூக ஜனநாயக அரசியல் வழிவந்த, வ‌ல‌துசாரி அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ போலி இட‌துசாரி தொழிற்க‌ட்சி (PvdA) அவமானகரமான ப‌டுதோல்வி அடைந்துள்ள‌து. இவ்வ‌ள‌வு கால‌மும் அது பெரிய‌ ஆளும் க‌ட்சிக‌ளில் ஒன்றாக‌ இருந்த‌து. இந்தத் தேர்தலில் வெறும் 9 ஆச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் எடுத்துள்ள‌து. இது ஒரு வ‌ர‌லாற்றுத் தோல்வி ஆகும்.

புதிய‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Groen Links (ப‌சுமை இட‌து), 1992 ம் ஆண்டு உருவான‌ ந‌வீன‌ இட‌துசாரிக் க‌ட்சி ஆகும். தொண்ணூறுகளில் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் நெருக்கடிக்கு உள்ளான நெதர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி (CPN) கலைக்கப் பட்டு, இன்னும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, Groen Links என்ற புதிய கட்சி உருவாக்கப் பட்டது.

தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த சுற்றுச் சூழலியல் அரசியலுடன், செல்வத்தை பங்கிட்டு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இடதுசாரி அரசியலையும் சேர்த்துக் கொண்டது. அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர் இளைய தலைமுறையை சேர்ந்த இடதுசாரி என்பதால், பெரும்பாலான இளைஞர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.

Thursday, December 25, 2014

தேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்


இன்று (25-12-2014) கிறிஸ்துமஸ் போர்நிறுத்தத்தின் நூறாவது ஆண்டு நினைவு தினம். ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1914 ம் ஆண்டு, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று போர்நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் எந்தளவு தூரம் ஒருவரையொருவர் வெறுக்கும் பகைவர்கள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. நூறு வருடங்களுக்கு முந்திய ஐரோப்பியர்களும், அப்படித் தான் வாழ்ந்தார்கள். தேசியவெறி, இனவெறி காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பிய தேசிய இனங்கள், தமிழர்-சிங்களவர், இந்தியர்-பாகிஸ்தானிகளை விட மோசமான பகைவர்களாக இருந்தனர். ஐரோப்பியர்களின் தேசியவெறி, கோடிக் கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. இனவெறியூட்டப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் படைகள், ஈவிரக்கமின்றி படுகொலைகளை செய்து கொண்டிருந்தன. அப்படியான ஒரு தருணத்தில் தான், கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் வந்தது.

பெல்ஜியத்தில், ஒரு பக்கம் ஜெர்மன் படைகளும், மறுபக்கம் பிரிட்டிஷ் படைகளும் போர்க் களத்தில் நின்று கொண்டிருந்தன. அன்றைய ஐரோப்பாவில், ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், தமிழர், சிங்களவர் மாதிரி ஜென்மப் பகைவர்கள் ஆவர். அப்படியான தேசியவெறி/இனவெறி ஊட்டப்பட்ட படைவீரர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டதும், ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.

காட்டுமிராண்டித் தனமான போருக்கு மத்தியில், போர்நிறுத்தம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. ஜெர்மன் படையினரும், பிரிட்டிஷ் படையினரும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் பரிசுகளை பகிர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து கால்பந்து விளையாடினார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த எதிரிகள், போர்நிறுத்த காலம் முழுவதும் நட்புடன் பழகினார்கள்.

படையினருக்கு இடையில் இது போன்ற நட்புறவு தொடர்ந்திருக்க ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா? மீண்டும் போர் வந்தது. ஒன்றாக கால்பந்து விளையாடியவர்கள், மீண்டும் துப்பாக்கிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல இலட்சம் பேரைக் காவு கொண்ட போர், 1917 ம் ஆண்டு தான் ஓய்ந்தது.

ஈழப்போர் நடந்த காலத்திலும், இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று, யாழ்ப்பாண தமிழ்ப் பொது மக்களால் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசப் பட்டது.

பலாலி இராணுவ முகாமுக்கு அருகில், சிறிலங்கா படையினரும், புலிகளும் எதிரெதிரே காவலரண்களை போட்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் உரிமை கோரப் படாத பிரதேசம் (No man's land) இருந்தது. அங்கே எப்போதும் சண்டை நடப்பதில்லை. சில நேரம் அமைதியாக இருக்கும். சிங்களப் படையினரும், புலிப் போராளிகளும், நட்பாகவும் பேசிக் கொள்வார்கள். அப்போது பழக்கமான புலிப் போராளியிடம், சிங்களப் படையினன் பின்வருமாறு கூறினானாம்: "என்னுடைய ஐயாவும், உன்னுடைய ஐயாவும் ஏ.சி. ரூமுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நானும், நீயும் தான் இந்த வெட்ட வெளியில் நின்று சண்டை பிடிக்கிறோம்..."

தேசியவெறி/இனவெறிக் கொள்கையால் ஆதாயம் அடையும் பிரிவினர், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று மறுக்கலாம். ஆனால், சாதாரண சிங்கள-தமிழ் மக்கள், சாதாரண சிங்களப் படையினர், தமிழ்ப் புலிப் போராளிகள் எல்லோரும், தேசியவாதிகளோ அல்லது இனவாதிகளோ அல்ல. அப்படி கருதிக் கொள்வது ஒரு கற்பனாவாதம்.

Wednesday, April 23, 2014

நெதர்லாந்தில் ஓர் "இனவாதக் கிராமம்"


"சிங்கள, தமிழ் பாட்டாளி வர்க்க ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்? சிங்கள ஏழைகள், பாட்டாளிகள் தான், தீவிரமான இனவெறியர்களாக உள்ளனர்." தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மேட்டுக்குடித் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் சிலர், இது போன்ற வாதங்களைக் கூறி, இடதுசாரியத்தை நிராகரிப்பதுண்டு. இது சிங்கள பாட்டாளிகளுக்கு மட்டுமே பொதுவான குணாம்சம் அல்ல. உலகம் முழுவதும் அப்படித் தான். "பணக்கார மேற்கத்திய நாடான" நெதர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

அண்மைக்காலமாக, டய்ன்டோர்ப் (Duindorp) எனும் கிராம மக்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்களில் ஈடுபடுவதாக, டச்சு ஊடகங்களில் பரபரப்பாக பேசப் படுகின்றது. அரசாங்க மட்டத்திலும், டய்ன்டோர்ப் மக்களின் இனவெறிக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

டய்ன்டோர்ப், நெதர்லாந்தின் அரசியல் தலைநகரமான டென் ஹாக் (The Hague) கிற்கு அருகில் உள்ள ஒரு மீன்பிடிக் கிராமம். அங்கு வாழும் பூர்வீக டச்சு மக்களில் பெரும்பாலானோர், குறைந்தளவு வருமானம் ஈட்டும் மீனவர்கள் அல்லது தொழிலாளர்கள். அதாவது பாட்டாளி வர்க்க மக்கள். அது ஒரு "மூடுண்ட சமுதாயம்". வெளியார் யாரும் அங்கு வந்து குடியேறுவதை, அவர்கள் அனுமதிப்பதில்லை.

டய்ன்டோர்ப் கிராமத்தில், பல குடியிருப்புகளை கட்டியுள்ள Vestia நிறுவனம், பல வெளிநாட்டவர்களையும் குடியமர்த்தி உள்ளது. அங்கு வாழும் வெளிநாட்டவர்கள், தினசரி இனத் துவேஷத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் வீட்டு ஜன்னல்கள் கல் வீசி உடைக்கப் பட்டுள்ளன. வீட்டுச் சுவர்களில், கதவுகளில், "நாஸி ஸ்வாஸ்திகா" சின்னம் வரையப் பட்டது. வீதியில் நடந்தால், இனவாதக் கூச்சல்களை சகித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

அங்கு நடக்கும் சம்பவங்களை ஆவணப் படுத்தச் சென்ற உள்ளூர் தொலைக்காட்சி கமெராவுக்கு முன்னாலேயே இனவாதம் பேசுகின்றனர். வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி, தமது நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று சொல்கின்றனர்.

டய்ன்டோர்ப் கிராமத்தில் தான், இனவாதக் கட்சியான PVV க்கு அதிக வாக்குகள் (35%) கிடைத்துள்ளன. டய்ன்டோர்ப் மக்கள் உண்மையிலேயே இனவாதிகள் தானா? இது குறித்து சில ஊடகங்கள் ஆராய்ந்த பொழுது, அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரம் என்பது தெரிய வந்துள்ளது.

எந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும், அடித்தட்டு மக்கள் தான் அதிகமாகப் பாதிக்கப் படுவார்கள். டய்ன்டோர்ப்வாசிகளில் அதிகமானோர், வேலை வாய்ப்பின்மையால் அரச உதவித் தொகையில் வாழ்கின்றனர். முன்பு அவர்கள் செய்து வந்த மீன்பிடித் தொழிற்துறை நலிவடைந்து விட்டது. அதே நேரம், வாடகை வீடுகளை கட்டிக் கொடுக்கும் நிறுவனம், வீட்டுமனை சந்தையை கட்டுப்படுத்துவதற்காக, குறைந்தளவு வீடுகளையே குறைவான வாடகைக்கு விடுகின்றது. (நெதர்லாந்தில், வாடகை வீடுகளை வழமையாக பெரிய நிறுவனங்கள் தான் கட்டிக் கொடுக்கின்றன.)

வீட்டு மனை நிறுவனம், "பழைய கட்டிடங்கள்" என்று கூறி, ஏழைகளின் வீடுகளை உடைத்து, அங்கே புதிய கட்டிடங்களை கட்டி வருகின்றது. (இது வழமையாக நாடு முழுவதும் நடக்கின்றது.) நவீன வசதிகளுடன் கூடிய புதிய வீடுகளுக்கு, வாடகை கட்டி குடியேறும் அளவிற்கு, அங்குள்ள மக்களிடம் பண வசதி இல்லை. டய்ன்டோர்ப்வாசிகளின் வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்கு, வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு, பொருளாதாரப் பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. அவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம், தமது இடத்தில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் தான். தங்களுக்கு வீடு கிடைக்காத பொழுது, எங்கிருந்தோ வரும் வெளிநாட்டவர்களுக்கு எப்படிக் கிடைக்கின்றது என்ற பொறாமை உணர்வும், இனவாதத்தை தூண்டி விடுகின்றது. உண்மையில், ஒரு சிறு தொகையினர் தான் இனவெறிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்கள் தான் உள்ளூர் அரசியலில் தாக்கம் செலுத்துகின்றனர்.

பொதுவாக, நெதர்லாந்து மக்களிடம் இனவாதம் கிடையாது என்று, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழும் வெளிநாட்டவர்கள் நினைக்கின்றனர். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் பொருளாதாரப் பிரச்சினைகள் வரும் நேரம், இனவாதம் அதிகரிக்கின்றது. நெதர்லாந்தில் மூன்று தலைமுறைகளாக வாழும், துருக்கி, மொரோக்கோ நாட்டவர்கள் அதை உணர்ந்துள்ளனர்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்தில் வேலை வாய்ப்புக் கிடைத்து வந்து குடியேறிய முதலாவது தலைமுறையினர், உள்ளூர் டச்சு மக்களினால் வரவேற்கப் பட்டனர். அன்று பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் வேலை கிடைத்து வந்த காலம் அது. இன்று காலம் மாறி விட்டது. பூர்வீக டச்சு சமுதாயத்திலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகின்றது. கூடவே வறுமையும் அதிகரிக்கின்றது. கஷ்டமான காலத்தில், மக்கள் மத்தியில் ஏற்படும் மனக் கசப்புகள், அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக திரும்பி விடும் அபாயம் உள்ளது.

இனவாதக் கட்சிகள், அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஏழை மக்களை இனவாதிகளாக மாற்றும் சதிவேலைகளில் ஈடுபடுகின்றன. இந்த இனவாதக் கட்சிகளுக்கு பின்புலத்தில், பெரும் முதலாளிகள் இருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல.

மேலதிக தகவல்களுக்கு : 
Duindorp: is Nederland racistischer geworden?; http://www.eenvandaag.nl/binnenland/50801/duindorp_is_nederland_racistischer_geworden_ Allochtonen weggepest in Duindorp; 
http://nos.nl/artikel/637119-allochtonen-weggepest-in-duindorp.html

Thursday, June 02, 2011

"சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக!" - யமுனா

[இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு] (பகுதி : 2)

 பத்தாம்பசலித்தனமான வைதீக மார்க்சியத்தை துறந்து, நவீன மார்க்சியராக ஞானஸ்நானம் பெற்ற யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்:
//ஏகாதிபத்தியம் போலவே மனித உரிமை எனும் பிரச்சினையும் மார்க்சியர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தையும் மனித உரிமையையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது என்பது அவர்களைப் பொறுத்து பெரும் சிக்கலாக இருக்கிறது.//

காலனியாதிக்க காலத்தில் இருந்து தொடரும் பிரிட்டிஷ், பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் குறித்த பாமரனின் புரிதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். பிரிட்டிஷார் தம்மை "ஏகாதிபத்தியம்" என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. "தனி மனித சுதந்திரங்களின் தாயகமான" அமெரிக்க சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட பொழுது, ஏகாதிபத்தியம் என்ற சொல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நடைமுறையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.

எந்தவொரு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடும், மனித உரிமைகளை மதித்து நடந்ததாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. இருபதாம் நூற்றாண்டிலும் நிறவேற்றுமை நிலவியது. வெள்ளையர் தவிர்ந்த மற்றவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும், பாலியல் பலாத்காரம் செய்வதும், கொலை செய்வதும் தவறாக கருதாத காலம் ஒன்றிருந்தது. உலகம் காணாத அளவு இனப்படுகொலை நடத்தியிரா விட்டால், அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்கள் அவர்களுக்கு சொந்தமாகியிராது. இன்று மனித உரிமை பேசும் நாடுகள் தான், உலக வரலாற்றில் முதன் முதலாக இரசாயனக் குண்டுகள், அணு குண்டுகள் எல்லாம் போட்டார்கள். அத்தகைய ஏகாதிபத்தியங்கள் மனித உரிமை பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போலாகாதா?

பனிப்போர் காலத்தில், சோஷலிச நாடுகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு "மனித உரிமைகள் பிரச்சினை" பயன்படுத்தப் பட்டது. சோஷலிச நாடுகளில் பல கட்சி தேர்தல், கருத்துச் சுதந்திரம், சொத்து சேர்க்கும் சுதந்திரம் கிடையாது என்பன மனித உரிமைகள் பிரச்சினைகளாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதற்கு மாறாக, சோஷலிச நாடுகள் முன்வைத்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி, உணவு, வீடு போன்ற அடிப்படை மனித உரிமைகள் புறக்கணிக்கப் பட்டன.

மேற்கத்திய நாடுகள் வலியுறுத்திய மனித உரிமைகள், முதலாளிகளும், மேட்டுக்குடி வர்க்கத்தினரும் புவியின் வளங்களை அனுபவிக்கக் கோரும் உரிமையாகும். இதனை முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த மக்கள் காலந் தாழ்த்தித் தான் உணர்ந்து கொண்டனர். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். ஆகவே, தமிழ் மக்களும் ஏகாதிபத்தியம் பேசும் "மனித உரிமைகளின் தார்ப்பரியம் என்னவென்று", பட்டு அனுபவிக்க வேண்டுமென்பதே யமுனா ராஜேந்திரனின் பேரவா.

யமுனா: //தனிமனித உரிமை என்பதனை சொத்துரிமையுடன் வைத்து மட்டுமே புரிந்து கொள்வது வைதீக மார்க்சியர்களின் பார்வை. சொத்துரிமை என்பது அல்லாமல் தனி மனித உரிமை என்பதனை கலாச்சாரம், உயிர் வாழ்தலுக்கான உரிமை, மனிதன் எனும் சுயகண்ணியத்துக்கான உரிமை எனும் அடிப்படையில் பெரும்பாலுமான மார்க்சியர் காணத் தவறுகிறார்கள்.//

சொத்துரிமை மட்டுமே மனித உரிமை என்று எந்த மார்க்சியர்கள் கூறினார்கள்? முன்னர் கூறியது போன்ற, "உணவு, உறையுள், கல்வி, தொழில்" போன்ற உரிமைகள் உயிர் வாழ்தலுக்கான உரிமை இல்லையா? நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கையில், உலகின் முக்கால்வாசி வளங்களை பணக்காரர்கள் நுகர்வதை, எந்தவொரு மனித உரிமைவாதியும் தட்டிக் கேட்கவில்லை. உயிர்வாழ உரிமையற்று நாள் தோறும் மரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக மார்க்சியர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தேசியவாதிகள் அவர்களை திரும்பியும் பார்ப்பதில்லை. வயிற்றை விட மானம் முக்கியம் என்று அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

யமுனா: //மனிதனது இருத்தல் சார்ந்த மனிதகண்ணியம் (human dignity) எனும் பிரச்சினை குறித்த, தலித்திய மீட்சி, இன மீட்சி எனும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளை இதனாலேயே இவர்களால் சரியாக அணுகமுடியாமலும் போகிறது.//

இலங்கையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காக மார்க்சியர்கள் தான் போராடினார்கள். சாதியொழிப்புப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக ஒழுங்கு படுத்தியதில், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. அந்தக் காலங்களில் தமிழ் தேசியவாதிகள் தலித் விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டனர். தலித் மக்களை ஒடுக்கிய சாதிவெறியர்களுக்கு தமிழ் தேசியவாதிகள் புகலிடம் வழங்கினார்கள். பேரினவாதிகளின் பாராளுமன்றத்திலும் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்கள். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட சம்பவமே, சிங்கள பேரினவாதம் முதலாவது தமிழின ஒடுக்குமுறை.

மலையகத் தமிழர்கள் தலித்துக்கள் என்ற காரணத்தால், தமிழ் தேசியவாதிகள் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை. மாறாக, சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து தமிழின ஒடுக்குமுறை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அதற்குப் பிறகு வட- கிழக்கு தமிழர் மீதான சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையை, தமிழ் இனவாதம் மூலம் எதிர்கொண்டார்கள். இரண்டு பக்கமும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இனவாதம் தீவிரமாக வளர்ந்தது. அத்தகைய சூழ்நிலையில் மார்க்சியர்கள் எவ்வாறு அணுக வேண்டும்? இப்போதும் கூட, தமிழர்களுக்கு எந்த இசங்களும் வேண்டாம், "நேஷனலிசம்" மட்டுமே வேண்டும் என்று நம்பும் தமிழ் தேசியர்கள், மார்க்சிய அணுகுமுறைகளை ஏற்றுக் கொள்வார்களா?

யமுனா: //தமிழ் மக்களுக்கான நீதி என்னும் பிரச்சினை என்ன ஆனது?//

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையினால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று, யமுனா எப்படி நம்புகிறார்? "போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டால், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் குரோதம் அதிகரிக்கும். தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்கள் நடக்கலாம்." இவ்வாறு ஈழத்தமிழர்கள் அச்சமடைந்திருப்பதாக அமெரிக்க தூதுவரின் கேபிளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் தெரிவித்தது.(விக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர் தயாரில்லை) அதை விட, போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல, புலிகளின் ஆதரவாளர்களும் விரும்பவில்லை. ஏனெனில் நிபுணர் குழு அறிக்கை இராணுவமும், புலிகளும் மனித குலத்திற்கு விரோதமான குற்றங்கள் புரிந்ததாக கூறுகின்றது. இதற்கான சாட்சியங்களை போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

ஆகவே நீதி கோரும் தமிழர்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. சிறிலங்கா அரச, இராணுவ அதிகாரிகள், சிறிலங்கா சார்பாக துணை நின்ற இந்திய, அமெரிக்க தலைவர்கள், புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப் படுவார்களா? //முன்னாள் ஆந்திர நக்சல் ஆதரவாளரும் பின்னாளில் முழுமையான மனித உரிமையாளராகவும் பரிமாணம் எய்திய அமரர் பாலகோபால் போன்றோருக்கு இந்தத் தரிசனம் இருந்தது. இந்தக் காரணத்தினாலேயே விடுதலைப் புலிகள் பற்றி, அவர்களது மனித உரிமைமீறல்கள் பற்றி கடுமையான விமர்சனங்களுடனேயே அவர் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். அவர் இன்று இருந்திருப்பின் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையையும் முதலாக அவர் வரவேற்றிருப்பார் எனவே நான் நம்புகிறேன். - யமுனா ராஜேந்திரன்//

யமுனா: //தமிழ் மக்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏதேனும் முனைப்புக்கள் இந்த இடதுசாரிகளிடம் உண்டா? இது ஏதும் இல்லாத நிலைமையில் தெற்கிலுள்ள இடதுசாரிகளுடன் தமிழர்கள் இணைந்து போராடுவது என்பதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை.//

கடந்த அறுபதாண்டுகளாக சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் எழுந்துள்ளது. சிங்கள இனவாதிகள் ஒரு புறம், தமிழ் இனவாதிகள் மறுபுறம் அந்த தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர். பெரும்பான்மை சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது. பெரும்பான்மை தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது. இரண்டு சமூகங்களும் தனிதனி தீவுகளாக வளர்ந்து வந்ததால், இடதுசாரிகளும் பிரிந்து விட்டனர். இரு துருவங்களாகிக் கிடக்கும் இவ்விரு இனங்களிற்கு மத்தியில், தொடர்பை ஏற்படுத்துவது எப்படி என்பதை, யமுனா ராஜேந்திரன் விளக்க வேண்டும். "சிங்களவனோடு பேசக்கூடாது, பார்த்து சிரிக்கக் கூடாது." என்று தமிழினவாதிகள் எங்களுக்கு தடையுத்தரவு போடுகின்றனர். அவர்களையும், சிங்கள இனவாதிகளையும் சமாளிக்கும் தந்திரோபாயங்களை யமுனா ராஜேந்திரன் எமக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

யமுனா: //தமிழீழப் பிரிவினையை ஒப்புவதுபோல எப்போதேனும் இந்தியாவோ அல்லது அமெரிக்க மேற்கத்திய அரசுகளோ செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவான தோற்றப்பாட்டை அமெரிக்க மேற்கத்திய அரசுகள் காண்பிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் என்ன?//

தமிழீழப் பிரிவினையை இந்தியாவோ, மேற்கத்திய அரசுகளோ ஏற்கவில்லை. ஆனால், தமிழீழப் பிரிவினையை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புகளை பேணி வருகின்றன. அதே நேரம், சிறிலங்கா அரசுடனான உறவுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்கின்றன. இலங்கையில் சிங்கள, தமிழ் இனங்களை நிரந்தரமாக பிரித்து வைக்க, இவ்விரு சக்திகளும் உதவுவார்கள் என்பது, ஏகாதிபத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

உலகம் முழுவதும் மனித உரிமைகளை போதிக்கும் நடுநிலையாளர்கள் அல்லவா? இரண்டு தரப்பிற்கும் பொதுவானவர்கள் என்று காட்ட வேண்டாமா? மகிந்த ராஜபக்சவின் அரசு, நாட்டை எந்தளவு விலை பேச தயாராக இருக்கிறது என்பது தான் அவர்களுக்கு தேவையானது. முன்னர் ஒரு தடவை இந்தியா, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்தது. அதே வேலையை அமெரிக்கா இன்று, நாடு கடந்த தமிழீழ அரசை வைத்துச் செய்கிறது.

யமுனா: //அனைத்து மக்களை ஒன்றிணையச் செய்ய வேண்டும். இலங்கை நிலைமையில் அனைத்து மக்கள் என்றால் யார்? மேலே கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, பெரமுனா, சம சமாஜக் கட்சி போன்ற இடதுசாரிகளா? அல்லது இவர்களால் தலைமை தாங்கப்படும் இனவாதம் பீடிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளி வர்க்கமா? ஓன்றிணைவு இவர்களுடன், எதன் அடிப்படையில், எவ்வாறு சாத்தியம்?//

யமுனா ராஜேந்திரன் சுற்றி வளைத்துச் சொல்வதை, தமிழினவாதிகள் ஒரே வாக்கியத்தில் சுருக்கமாக முடித்து விடுகின்றனர். "சிங்களவனுடன் சேர்ந்து வாழ முடியாது." இந்தியாவில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் இடதுசாரி கட்சிகள் சீரழிந்து கிடப்பதைப் போலத் தான் இலங்கையிலும் நடக்கிறது. ஜேவிபி யை தவிர பிற இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. உலகம் முழுவதும் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு இலங்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்துவதற்கென்றே இனவாதப் பூதம் கிளப்பி விடப்பட்டது.

சிங்களவர்களை மட்டுமல்ல, தமிழர்களையும் பிடித்தாட்டும் இனவாதப் பூதத்தை விரட்டாமல், அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பது எப்படி? "இனவாதம் பீடிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளி வர்க்கம்" என்று யமுனா எழுதுவது சுத்த அபத்தம். இலங்கைத் தொழிலாளி வர்க்கத்துடன் யமுனாவுக்கு எந்தப் பரிச்சயமும் கிடையாது. "இனவாதத்தால் பீடிக்கப்பட்ட தமிழ் தொழிலாளி வர்க்கம்..." என்று ஒரு சிங்கள எழுத்தாளர் எழுதியிருந்தால், யமுனாவும் அவரது வாசகர்களும் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். ஆனால், சிங்கள அல்லது தமிழ் இனவாதத்தை ஆதரிக்கும் எல்லோரும் இவ்வாறு தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஈழத்தில் வாழும் தமிழர்கள், மார்க்ஸியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். கடந்த முப்பதாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய தமிழ் தேசிய அரசியல், இடதுசாரி சிந்தனைகளை முற்றாக துடைத்தழித்து விட்டது. தமிழ்த் தேசியத்தை தவிர வேறெதுவும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. (யமுனாவின் மொழியில் கூறினால்: "இனவாதத்தால் பீடிக்கப்பட்ட தமிழ் தொழிலாளி வர்க்கம்.) சிங்களப் பகுதிகளிலும் அது தான் நிலைமை. மார்க்ஸியம், சோஷலிசம் போன்ற சொற்களைக் கூட கேள்விப்படாத மக்கள் தான் பெரும்பான்மையினர். தமிழ் தொழிலாளி வர்க்கத்துடன், சிங்கள தொழிலாளி வர்க்கம் சேரக் கூடாது என்பதில் சிறிலங்கா அரசு மிகக் கவனமாக உள்ளது. தமிழ் தேசியவாதிகளின் நோக்கமும் அது தான்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை எந்தவொரு இடதுசாரியும் இதுவரை மறுத்ததில்லை. யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் கூட்டிய சர்வகட்சி மகாநாட்டுத் தீர்மானங்களை கிடப்பில் போட்ட மகிந்த ராஜபக்சவின் செயல் கண்டிக்கத் தக்கது. அவரே உறுதிமொழி அளித்த 13 வது சீர்திருத்தத்தையும் அமுல்படுத்தவில்லை. இப்படியான தருணத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் மீது அந்நிய சக்தி அழுத்தம் கொடுப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா. நிபுணர் குழு அப்படியான தீர்வைப் பெற்றுத் தருவதற்காக உருவானதல்ல.

இப்போதே நிபுணர் குழு அறிக்கைக்கு பின்னர், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் கச்சை கட்டத் தொடங்கி விட்டனர். அறிக்கையில் சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், "அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. நாட்டைப் பாதுகாத்த வீரர்களுக்கு அபகீர்த்தி உண்டாக்குகின்றன.", இவ்வாறு சிங்கள இனவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழினவாதிகளும் அதே மாதிரியான அரசியலில் ஈடுபடுகின்றனர். அறிக்கையில் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், "விடுதலைக்கு போராடிய புலிகளுக்கு அபகீர்த்தி உண்டாக்கிய" அறிக்கையை நிராகரிக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் தற்போது ஐ.நா. மன்றத்தை மாசு படுத்தி ஒதுக்க கிளம்பியுள்ளமை, அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது.

(முற்றும்)

பகுதி 1:
இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு http://kalaiy.blogspot.nl/2011/06/blog-post.html

Tuesday, June 08, 2010

கனவான்களின் ஜெர்மனியில் ஒரு கருப்பன் படும் பாடு


"-  ஏய்! கருப்பா தள்ளிப்போ!"
 -"
ஏய்! வெள்ளை!"
-"ஏய்... என்ன வெள்ளை? உனது எஜமானைப் பார்த்து அப்படி சொல்ல மாட்டாய்."
-"நான் வெள்ளை என்று மட்டுமே சொன்னேன்."
"-வெள்ளை என்றால் ஜெர்மன் என்று அர்த்தம், நண்பா"
"-அப்படி என்றால் என்ன? விளங்கப் படுத்து."
"எனது ..... "
(முதுகைத் திருப்பி வளைந்து பிட்டத்தைக் காட்டுகிறான்.)

நிலைமை மோசமடையும் போலத் தெரிகின்றது. சுற்றவிருக்கும் உதைபந்தாட்ட வெறியர்கள் குடித்து விட்டு சண்டைக்கு வருவார்கள் போல் தெரிகின்றது. அவர்களது சட்டையில் காணப்படும் ஹிட்லரையும், நாஜிகளையும் நினைவு கூறும் வாசகங்கள் வேறு பயமுறுத்துகின்றன.

ஜெர்மனியில் டிரெஸ்டென் நகர உதைபந்தாட்ட அரங்கத்திற்கு முன்னால் நடந்த சம்பவம். இருபது வயது மதிக்கத் தக்க வெள்ளையின உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு மத்தியில், தன்னந்ததனியாக ஒரு கருப்பன் நின்றிருந்த பொழுது இடம்பெற்ற வாக்குவாதம் அது. அந்த கருப்பன் உண்மையில் ஒரு வெள்ளையின ஜெர்மானியர்! பிரபல எழுத்தாளர் Günter Wallraff. "உன்னதமான நாகரீகத்தைக் கொண்ட" ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர். இம்முறை அவர் எடுத்துக் கொண்ட விஷயம் "நிறவாதம்". சாமானியர்களான "அப்பாவி" ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இதற்காக தனது மேனியின் நிறத்தையே கருப்பாக மாற்றிக் கொண்டு, ஒரு ஆப்பிரிக்க கருப்பனாக வாழ்ந்து பார்த்திருக்கிறார்.

வெள்ளை நிறத் தோலை கறுப்பு நிறமாக்குவது நடைமுறைச் சாத்தியமல்ல. 1959 ம் ஆண்டு, John Howard Griffin என்ற எழுத்தாளர் அமெரிக்காவில் "ஒரு கருப்பனாக" பயணம் செய்து கறுப்பினத்தவர்களின் அவலங்களை Black Like Me என்ற நூலில் பதிவு செய்தார். தனது தோலை கறுக்க வைக்க அவர் பாவித்த மாத்திரைகள் இறுதியில் அவருக்கு எமனாக மாறின. குய்ந்தர் வல்ராப் அது போன்ற ஆபத்தான பரிசோதனையை செய்யவில்லை. பெண்களுக்கு மேக்கப் போடும் ஒரு நிபுணரை அணுகியுள்ளார். விசேஷ ஸ்ப்ரே மூலம் அவரது தோலை கறுக்க வைத்துள்ளார். தலையில் சுருட்டைமுடி விக் அணிந்து கொண்டார். பார்ப்பதற்கு அசல் ஆப்பிரிக்க கருப்பன் போல இருந்த அவரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.

வால்ராப் தன்னோடு சில நடிகர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கறுப்பனைப் பற்றி சாதாரண வெள்ளையர்கள் தமக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அறியும் ஒற்றர்கள். தேவைப்பட்டால் சம்பாஷணைகளை கமெராவில் அல்லது ஒலிவாங்கி மூலம் பதிவு செய்து கொண்டு வருவார்கள். வால்ராப் "கருப்பனாக" வாழ்ந்து பார்த்த அனுபவங்களை, "அற்புதமான புது உலகம்" (Aus der schönen neuen Welt) என்ற நூலில் எழுதியுள்ளார். அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறேன். வால்ராபின் பயணம் கிழக்கு ஜெர்மனியில் அரசர் காலத்து மாளிகைகளையும், பூந் தோட்டங்களையும் கொண்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற வெர்லிட்ஸ் எனுமிடத்தில் ஆரம்பிக்கின்றது.

ஜெர்மன் உல்லாசப்பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஆற்றில் மிதந்து சென்று கொண்டிருக்கிறது. வழிகாட்டி ஜெர்மன் சரித்திரக் கதைகளை சொல்லிக் கொண்டு வருகிறார். "..... அன்று இளவரசர் Franz விரும்பிய பெண்ணை மணம் முடிக்க, பிரசிய நாட்டு அரசனான அவரது தந்தை விடவில்லை. பிரன்ஸ் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் வாழ விரும்பினார். ஆனால் அரசன் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இறுதியில் இளவரசர் மாமன் மகளை கலியாணம் செய்து கொண்டு ஜெர்மனியிலேயே தங்கி விட்டார்." கேட்டுக் கொண்டிருந்த வால்ராபினால் சும்மா இருக்க முடியவில்லை. "(முறைப் பெண்ணை மணம் முடிப்பது) தடை செய்யப் பட்டுள்ளது அல்லவா? இதையெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட (பெற்றோர் நிச்சயித்த) திருமணங்கள் என்றல்லவா சொல்வார்கள்?"

ஜெர்மனியில் வாழும் இஸ்லாமிய, இந்து சமூகங்கள் மத்தியில் உறவுக்குள் திருமண ஒப்பந்தங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த "காட்டுமிராண்டி கால" வழக்கத்தை ஜெர்மன் அரசாங்கமும், ஊடகங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. "ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணங்கள்" பிற்போக்கு கலாச்சாரம் கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம் எனக் கூறி வருகின்றன. (தமிழ் வாசகர்களுக்கு ஜெர்மன் சமூக கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தும் எனது சிறு விளக்கம். தமிழ்க் கலாச்சாரத்தில் "பெற்றோர் நிச்சயித்ததாக" கூறுவதை, அவர்கள் "நிறுவனமயப் படுத்தலாக" புரிந்து கொள்கின்றனர். நூலில் இல்லை.) இன்றைய ஜெர்மானியர்கள் கருதுவதைப்போல "ஆதி காலம் தொட்டு நாகரீகமடைந்த சமூகமாக" இருக்கவில்லை. ஜேர்மனிய சமூகமும் பல "பிற்போக்கு அம்சங்களை" கொண்டிருந்தது. இதைத் தான் அன்று அந்தப் படகுப் பயணத்தில், சக ஜெர்மானியர்களுக்கு வல்ராப் தெளிவு படுத்தியுள்ளார்.

வல்ராபின் விமர்சனம் பலரை புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. படகுப் பயணம் முடிவடையும் தருணம் இவரருகில் வந்த ஜெர்மன்காரர் கேட்கிறார்:
 - " நீ எப்படி இவ்வளவு சரளமாக ஜெர்மன் பேசுகிறாய்? "
- " தான்சானியாவில் கோதே (ஜெர்மன் மொழிக்) கல்லூரியில் கற்றேன்."
ஒருவருக்கொருவர் தெரியாத மற்ற பயணிகள் "நீங்கள்" என்று பன்மை விகுதியில் அழைக்கின்றனர். இவர் மட்டும் "நீ" என்கிறார். பொதுவாகவே மேற்கு ஜெர்மானியர்களை விட கிழக்கு ஜெர்மானியர்கள் "நீங்கள்" பாவிப்பது குறிப்பிடத் தக்கது.
-" வேலை செய்கிறாயா?" 
"- இல்லை"
-"இங்கே படகு வலிக்கும் வேலை கிடைக்கலாம்" (சைகை செய்து காட்டுகிறார்.)
நான் ஒரு கருப்பன் என்பதால் கூலி வேலைக்கு தான் லாயக்கு என்று அவர் கருதுவது புரிகின்றது.

வேறு பல சந்தர்ப்பங்களிலும், தனக்கு ஜெர்மன் புரியாது என நினைத்துக் கொண்டு தன் முன்னிலையில் ஜெர்மன் மொழியில் பேசி சிரித்தவர்கள், பற்றி வல்ராப் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டவரை கேலிப்பொருளாக கருதுவது நவீன நிறவாதம். ஜெர்மனியில் மட்டுமல்ல, வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற சிறுமைப்படுத்தும் ஏளனப் பேச்சுகள் சகஜம். இந்தியர்கள், ஆபிரிக்கர்கள் போல தோற்றமளிப்பவர்களிடம் எடுத்தவுடன் ஆங்கிலத்தில் பேசுவது கூட அதற்குள் அடக்கம்! (அதாவது உங்களுக்கு "ஆங்கிலம் போன்ற இலகுவான மொழிகளை" மட்டுமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் உண்டு.) மொழியறிவு குறைந்த வெள்ளையின ஐரோப்பியர்களுடன், அப்படி (ஆங்கிலத்தில் பேசுவது) நடந்து கொள்ள மாட்டார்கள்.

மேற்கு ஜெர்மனியில் கெல்ன் நகரத்தில், வல்ராப் பத்திரிகையில் வீடு வாடகைக்கு விளம்பரத்தை பார்த்து விட்டு தொலைபேசியில் அழைக்கிறார். வீட்டைப் பார்வையிட நேரம் கணித்து விட்டு அங்கே செல்கிறார். வீட்டை சுற்றிக் காட்டும் வயதான ஜெர்மன் மாது, "படிகளை சுத்தப் படுத்த மாதம் 26 யூரோ" மேலதிகமாக கேட்கிறார். வல்ராப் சென்று மறைய, அவர் அனுப்பிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். என்ன அதிசயம்! அவர்கள் 26 யூரோ கொடுப்பதற்கு பதிலாக, படிகளை தாமே சுத்தப் படுத்திக் கொள்வதாக கூற அதற்கு அந்த மூதாட்டி சம்மதிக்கிறார். மேலும் சற்று முன்னர் வந்து விட்டுப் போன கறுப்பனைப் பற்றி முறைப்பாடு செய்கிறார். "அவன் இங்கிருக்க வேண்டிய ஆள் இல்லை. வீடு வாடகைக்கு எடுக்க வந்தான். தொலைபேசியில் பேசிய பொழுது சரளமாக ஜெர்மன் பேசினான். வருபவன் கருப்பா, வெள்ளையா என்று தொலைபேசியில் மணந்து பார்க்க முடியுமா?"

காட்டில் வேட்டையாடும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் வெள்ளை ஜெர்மானியர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். வல்ராப் அதையும் ஒரு கை பார்த்து விடுவது என்று களத்தில் இறங்குகிறார். தென் ஜெர்மன் மாநிலமான Beieren இல், தனது ஆப்பிரிக்க நண்பனையும் சேர்த்துக் கொண்டு, "வேட்டை அனுமதிப் பத்திரம்" பெறுவதற்காக அரசாங்க அலுவலகம் செல்கிறார். அலுவலக வரவேற்பறையில் நின்றிருந்த பெண் "இரண்டு கறுப்பன்கள் வருவதைக் கண்டவுடன்" தனது மேலதிகாரியை கூப்பிடுகிறார். மேலதிகாரி இருவரையும் மேலும் கீழும் பார்த்து விட்டு: "இதற்கெல்லாம் அடையாள அட்டை வேண்டும்." என்கிறார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அரச அலுவலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்வார்களா? என்ற யோசனையே இல்லாமல் பேசுகிறார். தாம் இருவரும் ஜெர்மன் பிரஜைகள் என்றும், விண்ணப் பத்திரத்தை கொடுக்குமாறும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கூறுமாறும், வல்ராப் கேட்கிறார். உடனே பொறுமையிழந்த மேலதிகாரி சத்தம் போடுகின்றார்: " இடத்தைக் காலி பண்ணுங்கள். இல்லாவிட்டால் போலீசைக் கூப்பிடுவேன்."

ஜெர்மனியில் வாழும் கருநிற மேனியர்கள் தினசரி அனுபவிக்கும் நிறவாதம் இது போன்றது. அவர்களின் தோலின் நிறத்திற்காக அரசாங்கம் அவர்களை சந்தேகிக்கின்றது. பொது இடங்களில் போலிஸ் அவர்களிடம் மட்டும் தான் அடையாள அட்டை கேட்கின்றது. Charles Friedek ஒரு பிரபலமான கறுப்பின ஜெர்மன்காரர். உலகக் கிண்ணத்தை கைப்பற்றி ஜெர்மனிக்கு பெருமை தேடித்தந்த தடகள விளையாட்டு வீரர். அவர் ஒரு முறை பத்திரிகை பேட்டியில் அரச நிறவாதம் குறித்து முறைப்பாடு செய்தார். "நான் தற்போது ஒரு வயதான நபர். அண்மையில் கூட விமான நிலையத்தில் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டார்கள். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் பாஸ்போர்ட் சோதனை இன்றி செல்ல முடிந்தது. என்னை மட்டும் மறித்து வைத்திருந்தார்கள். ஏன்? நான் தான் ஒரேயொரு கருப்பன்!" (இந்த குற்றச் சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கும் வேறு பலருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் அத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.)

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரிந்திருந்த ஜெர்மன் ஜனநாயக குடியரசும் (கிழக்கு ஜெர்மனி), ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும் (மேற்கு ஜெர்மனி) "கருப்பர்களை" வெள்ளையின சமூகத்துடன் சேர விடாமல் தனிமைப் படுத்தி வைத்திருந்தன. கிழக்கு ஜெர்மனி ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஷலிச நாடுகளில் இருந்து மாணவர்களையும், தொழில் பயிலுனர்களையும் அழைத்து வைத்திருந்தது. ஆனால் விருந்தாளிகள் என்ற அந்தஸ்தில் ஜெர்மன் சமூகத்துடன் சேர விடாமல் முகாம்களில் வைத்திருந்தனர். மேற்கு ஜெர்மனி துருக்கியில் இருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளிகளை அவ்வாறு முகாம்களில் வைத்திருந்தது. பிற்காலத்தில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்கவே கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது.

இன்று கிழக்கு ஜெர்மனியில் நிறவாதம் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்கின்றது. ஆனால் மேற்கு ஜெர்மனியில் அது மறைபொருளாக வேறு வழிகளில் காண்பிக்கப் படுகின்றது. அது இன்று நவீன நிறவாதமாக பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. "நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர்கள் இங்கே இருக்க வேண்டியவர்கள் அல்ல!" புராதன நிறவாதம் வெள்ளயினத்தவர்களின் நாட்டினுள் வாழத் துணியும் அந்நியர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. ஆனால் நவீன நிறவாதம் அப்படியல்ல. அந்நியர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, அவர்களை எட்டத்தில் வைத்திருக்க விரும்புகிறது.

பெர்லினைச் சேர்ந்த "நிற வெறிக்கு எதிரான அமைப்பு" தொண்ணூறுகளின் பின்னர் இனவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஆவணப்படுத்தியுள்ளது. 1993 இல் இருந்து 761 அகதிகள் தாக்கப் பட்டுள்ளனர். முகாம்களுக்கு நெருப்பு வைத்த அசம்பாவிதத்தில் அகப்பட்டு மரணமுற்றவர்கள் 67 பேர். தெருவில் அகப்பட்டு கும்பல் வன்முறைக்கு இலக்காகி 15 அகதிகள் இறந்துள்ளனர்.

"மொட்டைத் தலையர்கள்"(ஸ்கின் ஹெட்ஸ்), ஹிட்லரையும், நாஜிசத்தையும் ஆராதிக்கும் நிறவெறிக் காடையர்களே வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சாதாரண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடக்கும் இடங்களில் அவர்களைக் காணலாம். 88 அல்லது 18 போன்ற இலக்கங்களைக் கொண்ட சட்டை போட்டிருப்பார்கள். அந்த இலக்கத்தில் என்ன இருக்கிறது? "Heil Hitler" - இந்த ஜெர்மன் சொற்களில் வரும் முதல் எழுத்தான "H" அரிச்சுவடியில் எட்டாவது இடத்தில் வருகின்றது! அதே போன்றது தான் Adolf Hitler (18). அதற்கடுத்ததாக ஒரு பிரிட்டிஷ் பாஷன் கம்பெனி தயாரிக்கும் "Lonsdale" பிராண்ட் ஆடைகளும் நாஜி ஆதரவாளர்களிடையே பிரபலம். நாஜிக் கட்சியின் பெயரின் சுருக்கமான NSDA அதற்குள் மறைந்துள்ளது! ஜெர்மனியில் மேற்குறிப்பிட்ட சொற்களை நேரடியாக பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனிக்குள் கருப்பனாக சுற்றிக் கொண்டிருந்த வல்ராப், ஒரே ஒரு இடத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டார். கிழக்கு ஜெர்மனியில் மாக்டபூர்க் என்ற நகரில் ஒரு வாகன வர்த்தகர் இவரை சரியாக இனங்கண்டு கொண்டார். ஆயினும் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை. இருந்தாலும் "பொதுவாகவே கிழக்கு ஜெர்மானியர்கள் நிறவெறியர்கள் என்பதைப் போல (மேற்கு) ஜெர்மன் ஊடகங்கள் ஒரு பக்க சார்பான கருத்துகளை பரப்பி வருவதாக" விசனமுற்றார். அதற்கு பதிலளித்த வல்ராப், தான் இரண்டு பக்க ஜெர்மனியிலும் நிலவும் நிறவாதம் பற்றியே ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். பின்னர் ஒரு நேரம் வல்ராபை நேர்காணல் செய்த மாக்டபூர்க் பத்திரிகையாளர், இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். "உங்களது அரிய செயல், எமது நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இல்லாதொழிப்பதில் பங்காற்றுமாகில், அதற்கு நான் துணை நிற்கிறேன்." என்று வாழ்த்தி அனுப்பினார்.

______________________________________________________

Günter Wallraff

Günter Wallraff
Aus der schönen neuen Welt
Expeditionen ins Landesinnere
ISBN: 978-3-462-04049-4

Erscheinungsdatum: 14. Oktober 2009
336 Seiten, Taschenbuch
KiWi 1069
Lieferbar
Euro (D) 13.95 sFr 25.20 Euro (A) 14.40