Showing posts with label முள்ளிவாய்க்கால். Show all posts
Showing posts with label முள்ளிவாய்க்கால். Show all posts

Friday, May 22, 2020

கிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல! இரண்டையும் ஒப்பிட முடியாது!!


முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு, முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதி ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் உரையின் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில் அவர் இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது தமிழீழம் சாத்தியம் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் பகைமை கொள்ளாமல் நட்புணர்வுடன் நடந்து கொள்வதே சிறுபான்மைத் தமிழருக்கும் பயன்தரத்தக்கது என்று கூறி இருக்கிறார்.(வீடியோ லிங்க் கீழே உள்ளது.)

இது பல தமிழீழவாதிகளின் கோபத்தை தூண்டி விட்டிருக்கிறது. கவனிக்கவும்: நான் இங்கே அவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்று குறிப்பிடவில்லை. காரணம், எல்லா தமிழ்த்தேசியவாதிகளும் தமிழீழம் கோருவதில்லை. ஈழப்போருக்கு முன்னரும் பின்னரும் சமஷ்டித் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ்த்தேசியவாதிகளும் இருந்து வருகின்றனர். ஆகவே இது இன்றைக்கும் தமிழீழம் சாத்தியம் என்று தீவிரமாக நம்பும் அரசியல் பிரிவினருக்கானது. அவர்களது பிடிவாதக் குணம், தமிழீழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளாது. "கிழக்கு தீமோர் தனிநாடு காணலாம், நாங்கள் தமிழீழம் கோரினால் தவறா?" என்று துள்ளிக் குதிக்கின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால், இதே தமிழீழவாதிகளும், நாடுகடந்த தமிழீழ அரசும் தான் முன்பு ஒரு காலத்தில் கிழக்கு தீமோர் சுதந்திர நாடானதை பற்றி சொல்லிப் புளுகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டி உள்ளது. இதில் எதுவும் தமிழீழத்திற்கு பொருந்தாது: 
  • 1. காலனிய நீக்கம் 
  • 2. கம்யூனிச எதிர்ப்பு 
  • 3. பன்மொழிக் கலாச்சாரம்

இவற்றை தனித்தனியாக பார்ப்போம்:

1. கிழக்கு தீமோர் ஏற்கனவே சுமார் ஒரு வருட காலம் (1975-1976) தனியான சுதந்திர நாடாக இருந்தது. அதற்குக் காரணம் அது ஒரு போர்த்துகேய காலனி. 1974 ம் ஆண்டு போர்த்துக்கலில் ஒரு கம்யூனிச புரட்சி நடந்ததன் விளைவாக, ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த போர்த்துக்கேய காலனிகள் சுதந்திரம் பெற்றன. கிழக்கு தீமோரும் அவற்றில் ஒன்று. மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐ.நா. சபை காலனிய நீக்கம் தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தது. அதுவரை காலமும் ஐரோப்பிய காலனிகளாக இருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விடுதலை பெற வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். அந்த நாடுகளின் பட்டியலில் கிழக்கு தீமோர் இருந்தது. ஆனால் தமிழீழம் இருக்கவில்லை.

2. இந்தோனேசியா கிழக்கு தீமோர் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன:

ஒன்று: காலனிய காலகட்டத்திற்கு பின்னர், அந்தப் பிரதேசத்தில் இருந்த தீவுகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என ஜகார்த்தா உரிமை கோரியது. காளிமந்தான் தீவின் வட பகுதி மலேசியாவாக உள்ளது. அது கூட தனக்கே சொந்தம் என்று இந்தோனேசியா உரிமை கோருகின்றது. ஆனால் அங்கு படையெடுப்பை நடத்தினால் மலேசியாவுடன் போர் மூளும் என்பதால் பேசாமல் இருக்கிறது.

இரண்டு: கிழக்கு தீமோரில் நிறைய எண்ணை வளம் உள்ளது. அவற்றை இந்தோனேசியா தானே கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பொருளாதாரக் காரணம். பிற்காலத்தில் அதே காரணத்திற்காக தான் சர்வதேச சமூகம் கிழக்கு தீமோர் சுதந்திரத்தை ஆதரித்தது என்பது வேடிக்கையானது. இன்று கிழக்கு தீமோர் எண்ணை வளத்தை அவுஸ்திரேலியா மேற்பார்வை செய்து வருகின்றது.

மூன்று: கிழக்கு தீமோர் போர்த்துகேய காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும் அங்கு அதிகாரப் போட்டி நடைபெற்றது. ஆயுதமேந்திய Fretilin (The Revolutionary Front for an Independent East Timor) இயக்கம் அரசைக் கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்காக இருந்தது. அதிலென்ன பிரச்சினை? Fretilin கிழக்கு தீமோரை ஒரு சோஷலிச நாடாக மாற்ற விரும்பியது. அது மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றியது. இதைக் காரணமாகக் காட்டி, அதாவது கம்யூனிச அபாயத்தை தடுப்பதாக சொல்லித் தான் இந்தோனேசியா படையெடுத்து ஆக்கிரமித்தது. அதற்கு அமெரிக்கா ஆசீர்வாதம் வழங்கியது. எங்கெல்லாம் கம்யூனிசம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் இராணுவத் தலையீடு செய்வது தானே அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை?

3. கிழக்கு தீமோர் தனியொரு மொழியை பேசும் மக்களின் தேசியம் அல்ல. அது ஒரு பன்மொழித் தேசியம். அங்கே பதினைந்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைப்பது போர்த்துக்கேய காலனிய வரலாறு மட்டும் தான். நாங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக அல்லது பொது மொழியாக பேசுவது மாதிரி, கிழக்கு தீமோர் பிரஜைகள் போர்த்துக்கேய மொழியை பொது மொழியாக கொண்டுள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், மேற்கு தீமோர் இன்றைக்கும் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக தொடர்கின்றது. அங்கேயும் கிழக்கு தீமோரில் உள்ள அதே மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

கிழக்கு தீமோர் சுதந்திரம் பெறக் காரணமாக இருந்ததாக இங்கு குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று தமிழீழத்திற்கு பொருந்துகிறதா? அது சரி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். என்ன தான் தமிழீழம், தமிழ்த் தேசியம் பேசினாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பது தான் அவர்களது பிரதானமான அரசியல் கொள்கை ஆகும்.

அதே தான் முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதியான, நோபல் பரிசு பெற்ற ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் கொள்கையும். அவர் முன்னொரு காலத்தில் மார்க்சிய Fretilin இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர். வெளிப்படையாகவே மேற்குலக நலன் சார்ந்த அரசியலுக்கு தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால் தான் நோபல் பரிசையும் வென்றார். ஆகவே, ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும் என்பதைப் போல, நாடுகடந்த தமிழீழ அரசும், ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=pk1yJxfJECg&fbclid=IwAR2DA1hfxh-yUHzvTOKJeiomYTNFulLLFgf1pswwwIgCDhl_dYjxDVZ3J_M

Thursday, May 21, 2020

முள்ளிவாய்க்காலில் மறைந்த தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்!


தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்! 
பதினோராவது ஆண்டு நினைவஞ்சலி!

2009, மே 17 முள்ளிவாய்க்கால் அருகில் சரணடைந்த ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமார் இராணுவத்தால் கொல்லப் பட்டாரா? அல்லது இன்னமும் உயிரோடு இருக்கிறாரா? எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து எனக்கும் எதுவும் தெரியாது. இருப்பினும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் நேரம், ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமாருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை எமக்குள்ளது.

பல்வேறு பட்ட இடங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், போரின் முடிவில் பாலகுமார் தனது மகன் சூரியதீபனுடன் இராணுவத்திடம் சரணடைந்த சில நாட்களில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே தெரிவிக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கு ஒரு காரணம், போரின் கடைசி நாளான மே 17 அன்று சரணடைந்த அத்தனை பேரும் புலிகள் இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் என்றே இலங்கை இராணுவம் கருதியது. துரதிர்ஷ்டவசமாக தோழர் பாலகுமாரும் அந்தப் பிரிவுக்குள் மாட்டிக் கொண்டமை ஒரு வருத்தத்திற்குரிய விடயம்.

1987 ம் ஆண்டு, நான் தோழர் பாலகுமாரை கடைசித் தடவையாக சந்தித்து உரையாடி இருக்கிறேன். அந்த சந்திப்பு முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான முல்லைத்தீவில் நடந்தது என்பது மனத்தைக் கனமாக்கும் நினைவு. அப்போது இந்திய - இலங்கை ஒப்பந்தம் முடிந்து வடக்கில் இந்திய இராணும் நிலைகொண்டிருந்தது. ஒப்பந்த நிபந்தனைகளின் படி, முதலாவதாக ஈரோஸ் தான் தன்னிடம் இருந்த ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தது. (அந்தக் காலகட்டத்தில் புலிகள், ஈரோஸ் மட்டும் தான் களத்தில் ஆயுதங்களோடு இருந்த இயக்கங்கள்.) அப்போது, "இந்தியா கொடுத்த ஆயுதங்களை இந்தியாவிடமே திருப்பிக் கொடுக்கிறோம்" என்று நகைச்சுவையாக குறிப்பிடுவதுண்டு.

ஈரோஸ் இயக்கம் இராணுவ பிரிவை விட அரசியல் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படியால், அதன் பல்வேறு வெகுஜன அமைப்புகள் வடக்கில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. "ஈரோஸ் இராணுவம்" என்றழைக்கப் பட்ட இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் மட்டுமே இரகசியமாக இயங்கி வந்தனர். அவர்களும் ஆயுத ஒப்படைப்புக்குப் பின்னர் தத்தமது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். அவ்வாறு முல்லைத்தீவில் பெற்றோரின் வீடுகளில் தங்கியிருந்த இரண்டு முன்னாள் போராளிகள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர்.

சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் முன்னாள் போராளிகளை கைது செய்ய வேண்டிய காரணம் என்னவென்று இந்திய இராணுவ தரப்பால் தெரிவிக்கப் படவில்லை. அந்த நேரம் சமாதானம் நிலவினாலும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் சில உரசல்கள் இருந்தன. அநேகமாக புலிகளை எச்சரிக்கும் வகையில் தான் அந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாம் என ஊகிக்கப் பட்டது.

அன்று அந்த முன்னாள் ஈரோஸ் போராளிகளின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தோழர் பாலகுமார் முல்லைத்தீவுக்கு வந்திருந்தார். தற்செயலாக அன்றைய தினம் நானும் தனிப்பட்ட காரணங்களுக்காக வன்னியில் இருந்த படியால், பேச்சுவார்த்தைக் குழுவில் என்னையும் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு தான் தோழர் பாலகுமாருடன் முல்லைத்தீவில் ஒரு நாள் முழுவதும் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் என்னை ஒரு நிகழ்வில் சந்தித்த தோழர் பாலகுமார், அப்போதும் நினைவில் வைத்திருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையிலேயே அது எனக்கு ஆச்சரியம் தான். தோழரின் நினைவாற்றல் பற்றிப் பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். என்னுடன் கதைத்த சந்தர்ப்பம் பற்றி மட்டுமல்லாது, ஒரு காலத்தில் அவரது செயலாளராக இருந்த எனது மைத்துனர் பற்றிய நினைவுகளையும் இரை மீட்டார்.

தோழர் பாலகுமார், ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற எந்த தலைக்கனமும் இல்லாத, சக தோழராக நட்புடன் பழகக் கூடிய எளிமையான மனிதர். எல்லா பிரச்சினைக்கும், பொதுவுடமைக் கண்ணோட்டத்தில் தர்க்க ரீதியாக பதிலளிப்பார். நாங்கள் குறுக்குக் கேள்வி கேட்டு, அவரையும் விமர்சிப்போம். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைக் கூறுவார். அது எமக்கு நியாயமாகத் தோன்றும். சில நேரம் இன்று நான் எழுதும் கட்டுரைகளிலும் தோழர் பாலகுமாரின் தர்க்கவாதம் பிரதிபலிக்கலாம். எனது சிந்தனையை மாற்றிய மிகப்பெரிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்.

அன்று முல்லைத்தீவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தோழரின் வீட்டில் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே, அரசியல், சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பல கதைகள் பேசிய நினைவுகள் இன்னமும் நெஞ்சை விட்டு அகலவில்லை. அப்படியான ஒரு மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகுந்த துயர் தரத் தக்கது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் கொழும்புக்கு சென்று தங்கி விட்டேன். சில வருடங்களில் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து விட்டேன். இருபதாண்டு காலப் போர் எங்களை பிரித்து வைத்தது. திரும்பவும் அவரை ஒரு போர்க்கால நிழற் படத்தில் மட்டுமே பார்ப்பேன் என நினைத்திருக்கவில்லை.

போரின் இறுதிக் காலத்தில் தோழர் பாலகுமார் மனமுடைந்து போயிருந்ததாக அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது எப்படி முடியப் போகிறது என்பதை அனுமானித்திருந்தார். எழுபதுகளில் அவர் நம்பிக்கையோடு தொடங்கிய ஈழப் புரட்சி இன்னும் வரவில்லை என்பது ஒரு சிலருக்கு ஏளனமாக இருக்கலாம். இது வரலாற்று இயங்கியலை மறுக்கும் பார்வை. ஈழப்புரட்சியின் வரலாற்றில் தோழர் பாலகுமாரின் பங்களிப்பு குறுகிய காலம் தான். ஆனால் அவர் விதைத்த கருத்துக்கள் இன்றும் உயிரோடு இருக்கின்றன. அவரால் வளர்க்கப் பட்ட தோழர்கள் இன்று பல்வேறு அரசியல் பாதைகளில் திசை மாறி சென்று விட்டார்கள். இருப்பினும் பாலகுமார் இப்போதும் எல்லோராலும் மதிக்கப்படும் மாமனிதர் தான்.

ஈழவர் தேசிய இனத்தின் ஈழப்புரட்சிக்கான பாதை அமைத்து வழிகாட்டிய தோழர் பாலகுமாருக்கு எனது செவ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கலையரசன்
21-05-2020

Tuesday, May 30, 2017

இயற்கை அழிவில் இன்பம் காணும் இனவாதத்தை விட்டொழிப்போம்


சிங்க‌ள‌ பேரின‌வாத‌ அர‌சின் நிக‌ழ்ச்சிநிர‌லில் இய‌ங்கும் ஈழ‌த்து த‌மிழின‌வாதிக‌ள், மீண்டும் ம‌க்க‌ளை பிரித்து வைக்கும் சூழ்ச்சியில் இற‌ங்கி உள்ள‌ன‌ர்.

அண்மையில் தென்னில‌ங்கையில் வெள்ள‌த்தால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளை, முள்ளிவாய்க்கால் போரினால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளுட‌ன் ஒப்பிட்டு, "எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌டும் போது பார்த்துக் கொண்டிருந்த‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும்..." என்று இன‌வாத‌ப் பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர்.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இல‌ங்கையின் இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றி அரைகுறையாக‌ அறிந்து கொண்ட‌, அல்ல‌து ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பும் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌ப் போரின் ப‌ல்வேறு ப‌ரிமாணங்க‌ளும் தெரியாது.

இறுதிப் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ரே, தென்னில‌ங்கையில் அர‌ச‌ அட‌க்குமுறை தொட‌ங்கி விட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ சிங்க‌ள‌ அர‌சியல் ஆர்வ‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டு சிறைக‌ளில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். "இன‌த் துரோகிக‌ள், புலிக‌ளின் ஒட்டுக் குழுக்க‌ள்" என்றெல்லாம் பிர‌ச்சார‌ம் செய்து ம‌க்க‌ள் ம‌த்தியில் அந்நிய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அதைத் த‌விர‌ ஊட‌க‌ங்க‌ள் க‌டுமையான‌ த‌ணிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌. பாதுகாப்பு கார‌ண‌ங்க‌ளை குறிப்பிட்டு க‌ருத்து சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. இத‌னால் ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தே தெரியாத‌ நிலை இருந்த‌து. அமெரிக்க‌ ம‌க்க‌ளைப் போன்று, சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் இது ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் என்று ந‌ம்ப‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ளில் இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

ஒரு நாட்டில் ம‌க்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைத்தால், ஆள்வ‌து இல‌குவாகி விடும். ஒவ்வொரு இன‌மும் த‌ங்க‌ள‌து பாதிப்புக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து சிந்திக்கும். த‌ங்க‌ள‌து த‌ர‌ப்பு இழ‌ப்புக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே திரும்ப‌த் திரும்ப‌ பேசி ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெறுப்பை விதைப்பார்க‌ள். சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள், த‌மிழ் இன‌வாதிக‌ள், முஸ்லிம் இன‌வாதிக‌ள் எல்லோரும் இதில் கைதேர்ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள‌து அர‌சிய‌ல், கொள்கை, ந‌டைமுறை எல்லாம் ஒன்று தான்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் இஸ்ரேலில் காட்டுத்தீ ப‌ர‌வி பெரும் நாச‌ம் விளைவித்த‌து. அப்போது ப‌ல‌ முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ள் "இது அல்லாவின் த‌ண்ட‌னை" என்றார்க‌ள். அதே மாதிரி, த‌மிழ் அடிப்ப‌டைவாதிக‌ளும் பேசுகின்ற‌ன‌ர். தென்னில‌ங்கை வெள்ள‌ அழிவுக‌ள் "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்கிறார்க‌ள்.

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளும் வெள்ள‌ அழிவுக‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனாலும் த‌மிழின‌வாதிக‌ளுக்கு அதைப் ப‌ற்றி எந்த‌க் க‌வ‌லையும் இல்லை. தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளையும் த‌ம‌து ச‌கோத‌ர‌ இன‌மாக‌ க‌ருதாத‌ குருட்டுத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல் பார்வை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர்.

வ‌ட‌க்கில் த‌மிழ‌ரும், தெற்கில் சிங்க‌ள‌வ‌ரும் இரு வேறு உல‌க‌ங்க‌ளில் வாழ்கின்ற‌ன‌ர். இந்த‌ வேறுபாட்டை அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிற‌து. 1971 ம் ஆண்டு தெற்கில் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் வ‌ட‌க்கில் இருந்த‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள்? எந்த‌ எதிர்ப்பும் காட்டாம‌ல் மௌன‌மாக‌ இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு பிற‌ இனங்க‌ளை ப‌ற்றி எந்த‌ அக்கறையும் இருக்க‌வில்லை.

அதே மாதிரித் தானே சிங்க‌ள‌த் தேசிய‌வாதிக‌ளும் ந‌ட‌ந்து கொள்வார்க‌ள்? இவ‌ர்க‌ள் பேசும் மொழிக‌ள் வேறாக‌ இருந்தாலும் தேசிய‌வாத‌ம் என்ற‌ சுய‌ந‌ல‌வாத‌க் கொள்கை ஒன்று தானே? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய‌ ம‌ட்டைக‌ள் தானே? ச‌ட்டியை பார்த்து அடுப்பு க‌றுப்பு என்று சொல்லிய‌தாம்.

வெள்ள‌ அன‌ர்த்த‌ங்க‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான். ஈழ‌ப்போரை நட‌த்தி ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌டுகொலைக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும், த‌ள‌ப‌திக‌ளும் எந்த‌ப் பாதிப்புக்கும் உட்ப‌ட‌வில்லை. இது உண்மையிலேயே "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்றால், உண்மையில் அவ‌ர்க‌ள் அல்ல‌வா பாதிக்க‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும்?

இன‌வாத‌ம் பேசுவ‌து ஒரு சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல். எந்த‌ அறிவும் அத‌ற்குத் தேவையில்லை. சாதாரண‌ மக்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைப்ப‌தன் மூல‌ம் விடுத‌லை பெற‌ முடியாது. அத‌ற்குப் பெய‌ர் சுய‌நிர்ண‌ய‌மும் அல்ல‌. எந்த‌ அர‌சிய‌ல் கோட்பாடும‌ற்ற‌ இன‌வாத‌க் கோஷ‌ங்க‌ள் இறுதியில் ஆள்வோருக்கே ந‌ன்மை உண்டாக்கும்.

இனக்குழுவாத சுயநல அரசியலுக்கு தமிழ்த் தேசியம் என்று பெயர் வைக்காதீர்கள். அது உங்களது அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. நீங்கள் தேசிய அரசியலில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், சர்வதேச அரசியலில் ஸீரோ தான்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் மரணமடைந்தும், இலட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தும் உள்ளனர். இது இலங்கையில் சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தம்.

தென்னிலங்கை என்றாலே அங்கே சிங்களவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்று தான் வடக்கு-கிழக்கு தமிழ்த் தேசிய "அறிஞர்கள்" நினைத்துக் கொள்கிறார்கள். ஆகையினால், "முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பழிவாங்கலாக, தற்போது கடவுள் சிங்களவர்களை தண்டிக்கிறார்..." என்று சொல்லிக் கொண்டனர்.

ஒருவர் கவிதையாக எழுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட "சிங்கள" மக்களுக்கு, சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொன்னார். இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டு, தமிழர்களை இருட்டறைக்குள் வைத்திருக்கவே உதவுகின்றன.

வெள்ள அழிவுகளை ஏற்படுத்திய "கடவுளின் தண்டனை" காரணமாக, சிங்கள மக்கள் விழிப்படைந்து தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக வருந்துவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. அது சிறுபிள்ளைத்தனமான மூட நம்பிக்கை என்பதை சிலர் பின்னர் உணர்ந்து கொண்டனர்.

இந்தியா, சீனா, ஜப்பான், மற்றும் பல உலக நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றன. உலக நாடுகளில் எல்லா ஊடகங்களிலும் இலங்கையில் நடந்த வெள்ள அனர்த்தம் முக்கிய செய்தியாக இடம்பெற்றது.

அதனால், "தமிழ்த் தேசியவாதிகளின்" கோபம் சர்வதேசம் மீது திரும்பியது. "முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்த நேரம் இந்த சர்வதேசம் எங்கே இருந்தது? தமிழ் மக்கள் அழிந்த நேரம், ஏன் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?" என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.

இவர்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில் ஏறாத சில விடயங்கள் உள்ளன. போரில் மனிதனால் உண்டாக்கப் படும் அழிவுகள், அவரவர் அரசியல் நலன் சார்ந்தே பார்க்கப் படும். உலக மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை ஏகாதிபத்திய நலன் சார்ந்த சர்வதேச ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.

கொங்கோவில் நடந்த போரில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட நேரம் சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை. அப்போது அந்த மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இன்று, யேமன், தெற்கு சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர்களினால் கொல்லப் படும் மக்கள் பற்றிய தகவல்கள், நமது "தமிழ்த் தேசிய அறிஞர்களுக்கு" கூடத் தெரியாது. ஏனென்றால், அதில் சர்வதேசம் கவனம் செலுத்தவில்லை.

அதே நேரம், வறட்சியால் பாதிக்கப் பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு, அங்கு பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப் படுகின்றன. அதற்கான நிதி சேகரிக்கும் விளம்பரங்கள் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி காண்பிக்கப் படுகின்றன. "போர் நடந்த காலத்தில் எமது இனம் அழிக்கப் பட்ட நேரம், ஏன் சர்வதேசம் பாராமுகமாக இருந்தது?" என்று அந்த ஆப்பிரிக்க நாடுகளின் மக்களும் கேட்கலாம்.

முன்னொரு காலத்தில் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த போர்கள், தற்போது இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு கடத்தப் படுகின்றன. அதாவது, முன்னர் ஐரோப்பியர்கள் பிரிந்து நின்று தமக்குள் யுத்தம் செய்தார்கள். தற்போது மூன்றாமுலக நாடுகளின் மக்களை இன, மத அடிப்படையில் பிரிந்து நின்று யுத்தம் செய்ய வைக்கிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் யுத்தங்களுக்கும், முதலாளித்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. யுத்தம் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். கடன் கொடுக்கும் வங்கிகளின் வட்டியால் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். "ஆதலினால் யுத்தம் செய்வீர்!" என்பது முதலாளித்துவ அடிப்படை தத்துவம்.

அதே மாதிரி, இயற்கைப் பேரழிவுகளுக்கும், முதலாளித்துவத்திற்கும் தொடர்பு இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெரும் நிறுவனங்களின் இலாபவெறி காரணமாக பூமியின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பல்வேறு தீய விளைவுகளை உண்டாக்குகிறது. வெள்ள அனர்த்தம் அதில் ஒன்று.

இயற்கைப் பேரழிவுகளால், முதலாம் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனால், மூன்றாமுலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெருந்தொகையில் மக்கள் கொல்லப் பாடவும், வீடுகளை இழக்கவும் காரணமாகி விடுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் நிகராகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் வந்த வெள்ளப் பெருக்கு, இலங்கையை விட அதிகமான அழிவுகளை உண்டாக்கி இருந்தது.

ஆகவே, போரினால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், இயற்கையால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், மேலைத்தேய முதலாளித்துவம் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டுள்ளது. போர் போன்ற செயற்கை அழிவுகள் மனிதனால் உண்டாக்கப் பட்டவை என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அது சிறு பிள்ளைக்கும் புரியும்.

ஆனால், இயற்கை அழிவுகளில் சர்வதேச முதலாளித்துவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக் கொள்வது இலகு. மெத்தப் படித்தவர்கள் கூட இயற்கை அழிவுக்கு காரணமான காலநிலை மாற்றம் என்ற காரணியை நம்ப மறுப்பார்கள். அதனால் தான் சர்வதேசம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

Wednesday, March 30, 2016

சர்வதேச புலி அழிப்பாளர்களும் இருபது உலக நாடுகளும்


சோவியத் யூனியனுக்கும் புலிகளின் தமிழீழத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியன் உருவான நேரம், இருபது உலக நாடுகள் சேர்ந்து அதனை அழிக்கப் பார்த்தன. ஆனால், அந்த அழித்தொழிப்பு போரில் தப்பிப் பிழைத்த சோவியத் யூனியன் எழுபதாண்டுகள் நிலைத்து நின்றது. முப்பதாண்டுகளாக இருந்த புலிகளின் de facto தமிழீழத்தை, இறுதிப் போரில் இருபது உலக நாடுகள் சேர்ந்து அழித்து விட்டதாக சொல்கிறார்கள்.

கம்யூனிசத்திற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் கம்யூனிசம் தோற்று விட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழர்கள், புலிகளின் தமிழீழத்தின் வீழ்ச்சியின் பின்னர் தமிழ் தேசியவாதம் தோற்று விட்டதாக இன்னமும் பேசத் துணியவில்லை.

சோவியத் யூனியன், தமிழீழம் இரண்டினதும் அழிவுக்கு காரணமாக இருந்த சர்வதேச சக்தியின் பெயர் என்ன? 
ஏகாதிபத்தியம்

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி. 9/11 என்று அழைக்கப் பட்ட நிகழ்வுக்குப் பின்னர், அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. அது ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபான், அல்கைதா இயக்கங்களை அழிப்பதற்கான போர் என்று அறிவிக்கப் பட்டது. உலகில் எல்லோரும் அப்படித் தான் நம்ப வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. அதே நேரம், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்றொரு பட்டியலை தயாரித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரும் அதில் இருந்தது.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமது பெயரை எடுப்பதற்கு, புலிகள் இயக்கம் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருந்தது. கோடிக்கணக்கான டாலர் பணம் செலவிடப் பட்டது. அமெரிக்காவின் பிரபலமான வழக்கறிஞர்கள் அமர்த்தப் பட்டு வழக்காடினார்கள். ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கினார்கள். ஆனால், அமெரிக்க அரசு பட்டியலில் இருந்து பெயரை எடுக்க மறுத்து விட்டது. 

உலகில் வேறெந்த இயக்கமாவது இந்தளவு பணத்தை தண்ணீராக செலவழித்திருக்குமா என்பது சந்தேகமே. உங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் தெரியாவிட்டால், அதன் கடந்த கால வரலாற்றில் இருந்து அதைக் கற்றுக் கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து படிப்பினை பெற விரும்பாத, அமெரிக்கா சார்பான தமிழ் வலதுசாரிகள், புலிகளையும், ஈழத் தமிழரையும் முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்றார்கள். இருந்த போதிலும், தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பது போல, தமக்கு "எதுவும் தெரியாது" என்று எங்களை நம்பச் சொல்கிறார்கள்.

புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் மாதிரி, 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் "புலி அழிப்பாளர்கள்" என்றதொரு அணியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அணியில் ராஜபக்சே சகோதரர்கள் முதல் நாடு கடந்த தமிழீழக்காரர்கள் வரை ஒன்று சேர்ந்திருந்தார்கள். "சிங்கள இனப்படுகொலையாளிகளுடன் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளை ஒப்பிடலாமா?" என்று கேட்கும் அப்பாவிகள் யாராவது இருந்தால், அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவே அதைப் பற்றிய விரிவான அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கு விரோதமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதே இந்தக் கூட்டமைப்பின் ஒரேயொரு இலட்சியமாக இருந்தது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் பதுக்கப் பட்ட பில்லியன் டாலர்களை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டு, தமிழ் மக்களின் நெற்றிகளில் நாமம் போட்டார்கள். போர் முடிவதற்கும், அமெரிக்காவில் புலிகளின் பிரதானமான நிதி வழங்குனர் கைது செய்யப் படவும் நேரம் சரியாகவிருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தை வணிகர் ராஜா ராஜட்னம், அவரது நிறுவனமான Galleon Group hedge fund பெயரில் நடந்த முறைகேடுகளுக்காக கைது செய்யப் பட்டு, பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ராஜா ராஜரட்ணம் கொழும்பில் பிறந்தவர். யாழ்ப்பாண மேட்டுக்குடியை சேர்ந்தவர். ஹெட்ஜ் பண்ட்ஸ் முதலீட்டு நிறுவனங்கள், 2007 ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்துள்ளன. அதன் விளைவாக, ஹெட்ஜ் பண்ட்ஸ் முகாமையாளர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

ராஜா ராஜரட்னமும் பங்குச்சந்தை சூதாட்டம் காரணமாக FBI புலனாய்வின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவர் தான். பிற்காலத்தில், அவருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் தெரிய வந்தததால் தண்டனைக்காலம் நீடிக்கப் பட்டது. அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO வுக்கு, மில்லியன் டாலர் நிதி வழங்கியதும் நிரூபிக்கப் பட்டிருந்தது. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே CIA க்கு வேலை செய்த கேபி, ராஜா ராஜரட்ணம் தொடர்பான தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப் படுகின்றது. (Convicted Galleon Group Trader Raj Rajaratnam Now Faces Tamil Terror Finance Lawsuithttp://www.ibtimes.com/convicted-galleon-group-trader-raj-rajaratnam-now-faces-tamil-terror-finance-lawsuit-1698732

மேற்குறிப்பிட்ட தகவலை, பல தமிழர்கள் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுவார்கள். அதற்குக் காரணம், இந்தத் தகவல் ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் வெளியான போதிலும், தமிழ் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதை மட்டுமா மறைத்தார்கள்? 

2006 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கச் சென்ற சிலரை, ஆயுதத் தரகர்கள் போன்று நடித்த FBI அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கனடாவிலும், அமெரிக்காவிலும், இருநாட்டு புலனாய்வுத் துறைகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக பன்னிரண்டு புலி ஆதரவு தமிழர்கள் கைது செய்யப் பட்டனர். அவர்கள் இஸ்ரேலிய கிபீர் விமானங்களை தாக்குவதற்கு வேண்டிய ஏவுகணை வாங்க முயன்றதாக FBI அறிவித்தது. ஈழப் போர் நடந்த காலத்தில், இஸ்ரேலிய கிபீர் விமானங்கள் புலிகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வந்தன.

புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்ல. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர், இந்தோனேசியாவில் ஹாஜி சுபாண்டி (Hadji Subandi) என்ற இந்தோனேசிய - முஸ்லிம் வணிகர் கைது செய்யப் பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டு FBI இனால் விசாரிக்கப் பட்டார். சிங்கப்பூரில் பால்ராஜ் நாயுடு (Balraj Naidu) சிங்கப்பூர் - தெலுங்கு வணிகர் கைது செய்யப் பட்டு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

இந்தோனேசியா முதல் அமெரிக்கா வரையில் நடந்த, ஆயுதத் தரகர்கள் கைது சம்பவங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன? அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் போட்ட இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப் பட்டனர். உதாரணத்திற்கு, FBI வெளியிட்ட இந்தத் தகவல் அறிக்கையை பாருங்கள்: Singapore Man Sentenced to More Than Four Years in Prison for Conspiracy to Provide Material Support to a Foreign Terrorist Organization; https://www.fbi.gov/baltimore/press-releases/2010/ba121610.htm 

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மேற்குறிப்பிட்ட தகவல் எதுவும், புலிகளின் வெளிநாட்டு முகவர்களுக்கு அல்லது ஆதரவாளர்களுக்கு தெரியாதா? தெரியும்!

"இருபது உலக நாடுகள் சேர்ந்து நடத்திய அழித்தொழிப்பு போர்", உலக வரலாற்றில் இது தானா முதல் தடவையாக ஈழத்தில் மட்டும் நடந்துள்ளது? 
இல்லவே இல்லை! 
  • 1917 - 1922 : சோவியத் யூனியன் என்ற உழைக்கும் மக்களுக்கான சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உட்பட இருபது உலக நாடுகள் பங்குபற்றின. மேற்கத்திய ஆக்கிரமிப்புப் படைகளினால் இலட்சக் கணக்கான ரஷ்ய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

  • 1950 – 1953 : கொரிய மக்களின் சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், அமெரிக்கா தலைமையின் கீழ் இருபது உலக நாடுகள் பங்குபற்றின. ஐ.நா. கொடியின் கீழ் இந்தியாவும் தனது படைகளை அனுப்பி இருந்தது. அந்தப் போரிலும், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ஆக்கிரமிப்புப் படைகளினால், இலட்சக் கணக்கான கொரிய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.


நம்பினால் நம்புங்கள். பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன் என்று, உலகம் இரண்டாகப் பிரிந்த பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கை" பெருமளவு குறைந்தது. பனிப்போர் காலத்தில் நடந்த எந்தப் போரிலும், இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலைமை எப்போது மாறியது? மிகச் சரியாக, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதாவது "கம்யூனிசத்தின் தோல்விக்குப்" பிறகு உருவான மாற்றங்கள் இவை. தொண்ணூறுகளுக்குப் பிறகு தான், உலகில் அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் உருவானது. 
மறுக்க முடியுமா?

பனிப்போரின் முடிவில் தோன்றிய அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்குப் பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கைகள்" மீண்டும் உலகை பயமுறுத்தத் தொடங்கின. 
  • 1990 – 1991: குவைத் பிரச்சினையில் நடந்த வளைகுடா யுத்தம். ஈராக்கிற்கு எதிராக இருபதுக்கும் பேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து போர் தொடுத்தன. ரஷ்யாவும், சீனாவும் கூட அந்தப் போரை ஆதரித்தன.
  • 1999 : யூகோஸ்லேவியா நாட்டை துண்டாடி, காலனிய அடிமைப் படுத்துவதற்காக நடந்த, நேட்டோ தலைமையிலான கூட்டு இராணுவ நடவடிக்கை. ரஷ்யா, சீனா, கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன. 
  • 2001 - 2014 : அமெரிக்கா தலைமையின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. அந்தப் போர் இன்னும் முடியவில்லை. பத்து வருடங்களுக்குள் இலட்சக் கணக்கான ஆப்கானிய மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். 
  • 2003 : ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு. இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரவில் நடந்தது. ஒரு சில வருடங்களுக்குள், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் இலட்சக் கணக்கான ஈராக் மக்களை இனப்படுகொலை செய்தனர்.


இந்த உதாரணங்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

புலிகளை ஆதரிப்பதாக நடித்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்த வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளே! ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரியா விட்டால், அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசலாம். தமிழீழம் கேட்கலாம். ஆனால், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல், "இருபது நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்தார்கள்" என்று சொல்வதால் யாருக்கு இலாபம்? அது மீண்டும் அப்பாவி தமிழ் மக்களை ஏகாதிபத்திய நுகத் தடியின் கீழ் இன்னலுற வைக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், அதை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

புலிகளின் அழிவுக்கு நீங்கள் அடிக்கடி காரணம் காட்டும் "இருபது உலக நாடுகளின் கூட்டணிக்கு" ஒரு பொதுவான பெயர் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தான் மூலதன ஏகாதிபத்தியம்! அமெரிக்கா உலகம் முழுவதையும் தனது அதிகாரத்தின் கீழ் ஆள நினைக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் கூட முதலாளித்துவ நாடுகள் என்பதால் மூலதன ஏகாதிபத்தியத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். 

இந்த உண்மையை மட்டும் மறந்து விடாதீர்கள். இன்றைக்கும் உலகில் சோவியத் யூனியனும், கம்யூனிசமும் நிலைத்து நின்றிருந்தால், இருபது உலக நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்திருக்கவே முடியாது! பனிப்போர் கால இரு துருவ அரசியல் சதுரங்கத்தை பயன்படுத்தி, புலிகள் தப்பிப் பிழைத்திருப்பார்கள். பாமர மக்களுக்கு தெரிந்த இந்த உண்மை கூட, மெத்தப் படித்த அறிவாளிகளுக்கு தெரியவில்லை.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, March 15, 2016

தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்


விடுதலைப் புலிகளின் அழிவில், தமிழ் இனப்படுகொலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி, தமிழ் தேசிய ஊடகங்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான, அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று, புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான இஸ்ரேலிய கிபீர் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டார். 2 நவம்பர் 2007 அன்று, கிளிநொச்சிக்கு அருகில் இருந்த இரகசிய பங்கருக்கு, துல்லியமாக குறிபார்த்து போடப்பட்ட குண்டுவீச்சில் இறந்துள்ளார். 

தமிழ்ச்செல்வன் மீதான விமானத் தாக்குதலானது, அப்போதே பல கேள்விகளை எழுப்பி இருந்தது. அமெரிக்க இராணுவம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் பயன்படுத்திய, பங்கர் துளைக்கும் குண்டுகள், சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைத்தது எப்படி? தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கர் இது தானென துல்லியமான உளவுத் தகவல் வழங்கியது யார்?

2014 ம் ஆண்டு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட CIA இன் இரகசிய ஆவணம் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு பதில் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை ஒழித்துக் கட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கையின் ஓரங்கமாகவே, தமிழ்ச்செல்வன் கொலையையும் கருத வேண்டியுள்ளது. முப்பதாண்டு கால ஈழப்போர் வரலாற்றில், புலிகள் இயக்கத்தின் மேல் மட்டத் தலைவர்களில் ஒருவர் கொல்லப் பட்டமை அதுவே முதல் தடவை ஆகும்.

தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கரை காட்டிக் கொடுத்த உளவுத் தகவல், தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் இருந்து கிடைத்ததாக CIA அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் இயக்கத்திற்குள், ஏற்கனவே தமிழ்ச்செல்வனுக்கும், நடேசனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாக, அப்போதே புலிப் போராளிகள் மத்தியில் பேசப் பட்டது. 

தமிழ்ச்செல்வனின் அகால மரணத்தின் பின்னர், காவல் துறை பொறுப்பாளராக இருந்த நடேசன், அரசியல் துறை பொறுப்பாளர் ஆனார். அப்போதே புலிகளின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விட்டது என்று புலிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தமிழ்ச்செல்வன், நடேசனுக்கு இடையிலான தகராறுக்கு, சாதிய முரண்பாடும் ஒரு காரணம்.

"உச்ச கட்ட பெறுமதி வாய்ந்த இலக்குகள் (HVT) - படுகொலைத் திட்டம்" (“High Value Target” Assassination Program) என்று பெயரிடப் பட்ட CIA இரகசிய ஆவணம், SECRET (இரகசியம்) NOFORN (வெளிநாட்டவர் பார்வைக்கு அல்ல) என்று வகைப் படுத்தப் பட்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை இலக்கு வைத்துக் கொல்வதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் அறிக்கை அது. 

புலிகள் மட்டுமல்ல, அல்கைதா, தாலிபான், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே போன்று கொலம்பிய FARC, பெருவின் ஒளிரும் பாதை, வட அயர்லாந்து IRA, போன்ற இயக்கங்களின் தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் ஆராய்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில், இவை எல்லாம் ஒரே மாதிரியான கிளர்ச்சிக் குழுக்கள் என்ற உண்மையையும், மேற்படி அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.

கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தின் நோக்கம் என்ன? அதற்கான விடையும் அறிக்கையில் உள்ளது. தலைவர்களை சிறைப்பிடிப்பதிலும் பார்க்க, கொலை செய்து விடுவது சிறந்தது என்று CIA கருதுகின்றது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும், சிறிலங்கா இராணுவத்தால் தீர்த்துக் கட்டப் பட்டனர். இது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவின் நேரடி உத்தரவின் பேரில் நடந்தது. இருப்பினும், அதுவே அமெரிக்காவின் நோக்கமும் என்று தெரிய வருகின்றது. பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவம், CIA அறிக்கையில் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

தலைவர்களை சிறைப் பிடித்து பின்னர் விடுதலை செய்வதால் இயக்கம் அழியப் போவதில்லை என்பது CIA முன்வைக்கும் வாதம். ANC தலைவர் நெல்சன் மண்டேலா சிறை சென்று மீண்டதை அதற்கு உதாரணமாக காட்டுகின்றது. இஸ்ரேலிய வான்படைத் தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள், HVT தாக்குதல்களால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்க முடியும் என்பதை நிரூபித்தது. தலைமையை குறிவைத்து தாக்குவதன் மூலம், இயக்க உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க முடியும். அதிக பட்ச உளவியல் தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், ஹமாஸ், தாலிபான் விடயத்தில் HVT தாக்குதல்கள் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை என்பதையும் தெரிவிக்கின்றது. குறிப்பாக, ஹமாஸ் ஒரு கட்டுகோப்பான இயக்கம் என்பதாலும், மக்களை கவரும் சமூக நலத் திட்டங்களாலும், தன்னை மீளக் கட்டியமைக்க முடிந்தது. தாலிபான், அல்கைதா தலைவர்கள் நவீன தொலைத்தொடர்பு கருவிகளை பாவிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மேல் மட்ட தலைவர்களை தவிர யாரையும் சந்திக்காமல் பங்கருக்குள் முடங்கிக் கொண்டனர். மறுபக்கம், இந்தக் காரணத்தால், இயக்கத்தின் கீழ்மட்ட போராளிகளுக்கும், தலைமைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

விக்கிலீக்ஸ் இந்த CIA ஆவணத்தை, 2014 ம் ஆண்டே வெளியிட்டு இருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் எதுவும் அதைப் பற்றிப் பேசாதது ஆச்சரியத்திற்குரியது. குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள், இணையத் தளங்கள் எதுவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்பதல்ல. புலிகளுக்கு ஆதரவான ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ஏற்கனவே இந்தத் தகவலை பிரசுரித்தது. 

இருப்பினும், பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேரவில்லை. என்ன காரணம்? அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ்தேசியவாதிகள், ஏகாதிபத்திய நலன்களுக்காக சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்து வருபவர்கள். அவர்கள் இது போன்ற பல தகவல்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வார்கள்.

தமிழ்ச்செல்வனின் கொலைக்குப் பின்னர் பங்கருக்குள் இருப்பது தனக்கு பாதுகாப்பானதல்ல என்று தலைவர் பிரபாகரன் உணர்ந்திருந்தார். இறுதி யுத்தத்தில், பிரபாகரனின் பங்கர் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை சிறிலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. அதே நேரத்தில், புலிகள் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கூட்டிக் கொண்டு புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நகர்ந்தனர். அது முல்லைத்தீவு கடற்கரையோரம் இருந்த, எந்தவித பாதுகாப்புமற்ற வெட்ட வெளிப் பிரதேசம்.

முள்ளிவாய்க்கால் செல்லுமாறு யார் அறிவுரை கூறினார்கள்? வேறு யார்? சந்தேகத்திற்கிடமின்றி மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி அமெரிக்க அடிவருடிகள் தான். அதற்கு அவர்கள் கூறிய காரணம்? "அமெரிக்க மரைன் படைகளின் கப்பல் ஒன்று முலைத்தீவு கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது... அது புலிகளின் தலைவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடும்..." இப்படிப் பொய் சொல்லி நம்ப வைத்தார்கள். 

கடைசியில், அமெரிக்கக் கப்பலும் வரவில்லை, அமெரிக்கா காப்பாற்றவும் இல்லை. புலிகளின் தலைவர்கள் உட்பட, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், சிறிலங்கா படையினரால் இனப் படுகொலை செய்யப் பட்டனர். CIA அப்போதே அந்த முடிவை வரவேற்று அறிக்கை எழுதியுள்ளது. அதனால் தான், இந்தத் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிய விடாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



CIA அறிக்கை முழுவதையும் வாசிப்பதற்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Wednesday, January 13, 2016

முள்ளிவாய்க்காலில் காணாமல்போனவர் சனல் 4 வீடியோவில் கண்டுபிடிக்கப் பட்டார்


ஈழப்போர் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில், குண்டுகளுக்கு பலியாகாமல் உயிர் தப்பிய இளைஞர்கள் பலர், சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டனர். நீண்ட காலமாக அவர்களைப் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்தன. அந்த சம்பவத்தில் காணாமல்போன தன் மகன் திரும்பி வருவானா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய் ஒருவரின் உருக்கமான கடிதம் எனக்குக் கிடைத்தது. அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது காணாமல்போன புதல்வன் பற்றிய தகவல்களை இங்கே பிரசுரிக்கிறேன்.


(இடது பக்க மூலையில் இருப்பவர்) 

அண்மையில் யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்களை பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றன. அதில் சமூகமளித்த பல பெற்றோர், தமது பிள்ளைகள் எத்தகைய சந்தர்ப்பத்தில் எவ்வாறு காணாமல்போனார்கள் என்ற விபரங்களை தெரிவித்தார்கள். எனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிய தாய், குறிப்பிட்ட விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியவில்லை. அவரது மகனின் கதை, இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. 

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில், பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஒரு காட்சி வாரும். அரை நிர்வாணமாக்கப் பட்ட நிலையில், சில இளைஞர்கள் மணலில் இருத்தி வைக்கப் பட்டிருப்பார்கள். அவர்களது கைகள் முதுகுப் புறமாக கட்டப் பட்டிருக்கும். அவர்களது பார்வைகள் வெறிச்சோடிப் போயிருக்கும். அருகில் இருந்த இராணுவத்தினர் பிற கைதிகளை சுட்டுக் கொல்லும் கொடிய நிகழ்வை கண்முன்னால் பார்ப்பது போன்றிருக்கும். இலங்கையின் இறுதிப்போரில் நடந்த போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் ஆதாரமாக அது உள்ளது.

சனல் 4 ஆவணப்படத்தில், உயிருடன் இருப்பதாக காட்டிய காட்சியில், தனது மகனைக் கண்டதாக இந்தத் தாய் என்னிடம் தெரிவித்தார். (இங்கேயுள்ள படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் அமர்ந்திருப்பவர்.) அந்த வீடியோவில் தனது மகனை இனம் காட்டும் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். 

சனல் 4 காட்டிய படியால் சிலநேரம் தனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என்ற நப்பாசையில் இந்தத் தகவல் வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றார். மேற்கொண்டு தேவையான விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான விசாரணைக்குழு முன்பு சாட்சியமளிக்க தயாராக உள்ளார்.

மல்லாவி மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த தம் மகன், இறுதி யுத்த காலகட்டத்தில் புலிகளால் கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்லப் பட்டதை பெற்றோர் கண்டுள்ளனர். இராணுவம் புதுமாத்தளன் வரை முன்னேறி வந்த போது, பெற்றோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றார்கள். ஆனால் காணமல்போன புதல்வனும் இன்னும் பல இளைஞர்களும் அவர்களோடு செல்ல முடியாத நிர்ப்பந்தத்தில் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர்.

முள்ளிவாய்க்காலில் காணாமல்போன மகன் பற்றிய விபரங்களை அவரது தாய் அனுப்பிய கடிதத்தில் உள்ள படியே இங்கே தருகின்றேன்:


"எனது மகன் புஸ்பராசா அஜிந்தன் இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் காணாமல்போயுள்ளார். இவரை 20.04.2009 கடைசியாகக் கண்டேன். எனது பிள்ளை மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தார். இவரது கையில் பட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், கடைசியில் மகன் விலங்கிடப் பட்ட நிலையில் உள்ள படத்தை தான் காண முடிந்தது.
இடது பக்க மூலையில் இருப்பவர் 

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் சில காட்சிகளை, 15.03.2013 யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அப்போது தான் எனது மகனும் அந்தப் படங்களில் இருப்பதை கண்டுபிடித்தேன். அப்போது பாதுகாப்பின்மை காரணமாக அடையாளம் காட்ட முன்வரவில்லை. அந்த வீடியோக் காட்சிகளின் படி, எனது மகன் இன்னமும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறேன். எனது மகனைத் தேடித் தருமாறு உரியவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்."

Sunday, July 05, 2015

IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!


ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும் போலித் தமிழ் தேசியவாதிகள், அப்படி ஒரு கருதுகோளை கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை. 

தமது அமெரிக்க அடிவருடித்தனத்தை மறைப்பதற்காக, தமிழ் மக்களுக்கு உண்மையை மறைக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இன்றைக்கும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எப்படியாவது புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, IMF ம், உலகவங்கியும் மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத அரசுக்கு பக்கபலமாக நின்று உதவின. அதற்கான ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது.

உலக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான IMF, உலகவங்கி ஆகியன, மிக நீண்ட காலமாகவே இலங்கைக்கு கடன் வழங்கி வந்துள்ளன. ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களிலும், சிறிலங்கா படையினரால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்ட போதிலும், IMF, உலகவங்கி கடன்கள் குறையாமல் வந்து கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், அந்தக் கடனை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தன. ஆனால், அவர்களது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது.

IMF, உலகவங்கி மட்டுமல்ல, எந்தவொரு மேற்கத்திய நாடும், இலங்கை அரசுக்கு வழங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட குறைக்க முன்வரவில்லை. விதிவிலக்காக சில நாடுகள் நடந்து கொண்டாலும், அது வர்த்தக நோக்கில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. அதாவது, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை காரணமாகக் காட்டி, கடன் "உதவியை" நிறுத்தப் போவதாக பயமுறுத்தின. அதன் மூலம், அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்காக திரை மறைவில் பேரம் பேசப் பட்டது. அதைத் தவிர, எந்த நடவடிக்கையும் தமிழ் மக்கள் சார்பாக அமையவில்லை.

2009 ம் ஆண்டு, இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கைக்கான IMF கடனை நிறுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது வன்னியில் நடந்து கொண்டிருந்த, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட போரின் கொடுமைகளை கண்டதால், ஹிலாரி அப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கலாம். அன்றைய அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் Timothy Franz Geithner உடனான உரையாடலில் அது தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹிலாரியின் யோசனையை, IMF மிகக் கடுமையாக கண்டித்திருக்கும் என்பது, IMF வரலாறு தெரிந்தவர்களுக்கு வியப்புக்குரிய விடயம் அல்ல. உலக நாடுகளில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், பல உள்நாட்டுப் போர்களிலும், இனப்படுகொலைகளிலும் IMF நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பங்களித்துள்ளது. ஹிலாரி கிளிண்டனின் மூத்த ஆலோசகர் Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் அதைத் தான் நிரூபிக்கின்றது. அண்மையில் அமெரிக்க அரசினால் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களில் அது கண்டுபிடிக்கப் பட்டது.

ஹிலாரி கிளிண்டனுக்கான மின்னஞ்சலில், அவரது ஆலோசகர் Burns Strider பின்வருமாறு எழுதியுள்ளார்: "புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப் பட வேண்டும் என்றே IMF, உலகவங்கியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அதற்கான நடவடிக்கையில், மகிந்த ராஜபக்ச அரசினால் ஏற்படுத்தப்படும் மனித அழிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை தான்!"

இதற்குப் பிறகும், "அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும், தமிழ் மக்களுக்கு ஐ.நா.வில் தமிழீழம் வாங்கித் தரப் போகின்றன..." என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க விசுவாசிகள், உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்கள், தம்மை "தமிழ் இன உணர்வாளர்கள்" என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் உண்மையில் "டாலர் பண உணர்வாளர்கள்".

அதனால் தான், அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் அவர்களை "போலித் தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் தமிழ் தேசியம் பேசிக் கொண்டே, மறுபக்கம் தமிழினப் படுகொலையில் பங்களித்த அமெரிக்காவையும், IMF யும் ஆதரிப்பவர்களை வேறெப்படி அழைக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டனுக்கு Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் இது:

From: Bums Strider
To: H
Sent: Mon May 04 09:36:17 2009
Subject: Some intel for you...

This is about Sri Lankan Govt and the Tigers... I have a good source. This was shared to me at my and Karen's Derby Party yesterday (can you believe the 50 to 1 odds winner?).

There was a meeting held with Geitner asked for and led by IMF... They told him you were intruding into his domain by ordering/telling IMF to suspend funding to Sri Lakan Govt.

UNCLASSIFIED
U.S. Department of State Case No. F-2014-20439
Doc No. C05761169
Date: 06/30/2015

My take is that the people on the ground both with World Bank and IMF believe the Tigers need to be completely defeated and any collateral damage inflicted on private people by SL govt in process is ok... They also believe Tigers are better at propaganda than SL govt...

I have no idea what reality is... I know all about the conflict because there's been so much written over time but no idea of reality on ground.

My point is that IMF/World Bank is hoping to get Geitner to intervene and they recently played to his sense of who is US point person on IMF... So, that's what I know. I'll keep my ears open.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, October 09, 2014

கொபானி : சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்"


சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படக் கூடிய, கொபானி பிரதேசம் ISIS படையினரிடம் வீழ்ந்துள்ளது. துருக்கி எல்லையில் உள்ள கொபானி, கடந்த சில வாரங்களாக ISIS படையினரின் முற்றுகைக்குள் இருந்தது. அங்கிருந்து குர்து மக்கள் வெளியேறுவதை, துருக்கி படையினர் தடுத்து வந்தனர். அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள், ISIS எதிர்ப்புப் போரைத் தொடங்கிய பின்னர் தான், கொபானி மீதான தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய நாடுகளின் ISIS எதிர்ப்புப் போர், குர்து சிறுபான்மை மக்களை பாதுகாக்கத் தவறி விட்டது, ISIS முன்னேற்றத்தை தடுக்கத் தவறி விட்டது. "சிரிய முள்ளிவாய்க்காலில்" அகப்பட்டுக் கொண்ட மக்களுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நகரங்கள் எங்கும் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. திடீரென ஆயிரக் கணக்கான குர்தியர்கள், நெதர்லாந்து பாராளுமன்றத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்திலும் இதே மாதிரி பாராளுமன்றங்களை ஆக்கிரமிக்கும் போராட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. பெல்ஜியம், சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

நமது தமிழ் தேசியவாதிகளுடன் ஒப்பிடும் பொழுது, குர்திய தேசியவாதிகளை இடதுசாரிகள் என்று சொல்லலாம். ஆனாலும், அவர்கள் மனதிலும் தேசியவாதத்தின் குறைபாடுகள் காணப்படுகின்றன.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் குர்து தேசியவாதிகள், அந்தந்த நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் தேசியவாதிகளும் அப்படித் தான். ஆயினும், தமிழர்கள் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளையே அதிகம் ஆதரிக்கிறார்கள். அதற்கு மாறாக, குர்தியர்கள் தீவிர இடதுசாரிக் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.

நெதர்லாந்தின் சோஷலிசக் கட்சி (SP), அந்த நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சி ஆகும். அதிலே பெருந்தொகையான குர்து அரசியல் ஆர்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். "சிரிய குர்தியரின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படும் கொபானி பிரச்சினையில், கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் உருவாகின.

பெரும்பாலான குர்து அரசியல் ஆர்வலர்கள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் "ISIS பயங்கரவாத எதிர்ப்பு போரை" ஆதரிக்கின்றனர். நெதர்லாந்து அரசு அந்தப் போரில் பங்கெடுப்பதையும் ஆதரிக்கிறார்கள். அதற்கான காரணம் தெளிவானது. மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்பு போரை நடத்தினால், சிரியாவில் குர்து மக்களின் தாயகம் பாதுகாக்கப் படும் என்று நம்பினார்கள்.

அமெரிக்காவின் ISIS பயங்கரவாத எதிர்ப்புப் போரில், நெதர்லாந்து அரசும் பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விட்ட பொழுது, முதலாளித்துவ சார்புக் கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. சோஷலிசக் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. "2001 ஆம் ஆண்டு நடந்த அல்கைதா பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இன்னொரு வடிவம்" என்று கூறி, சோஷலிசக் கட்சி எதிர்த்து வாக்களித்தது.

முன்னாள் மாவோயிசக் கட்சியான சோஷலிசக் கட்சி, இன்று மார்க்சியம் பேசாத இடதுசாரிக் கட்சியாக உள்ளது. ஆயினும் அது, முதலாளியக் கட்சிகளுக்கு மாற்றீடான, மிகவும் கட்டுக்கோப்பான, கொள்கையில் உறுதியான கட்சி என்று, எதிராளிகளினாலும் பாராட்டப் படுகின்றது. அப்படியான ஒரு கட்சியில் முரண்பாடு தோன்றுவது எதிர்பாராத ஒரு விடயம்.

முன்பொரு தடவை, கொசோவோ பிரச்சினையில் யூகோஸ்லேவியா மீதான நேட்டோ இராணுவ நடவடிக்கையையும் SP எதிர்த்து வந்தது. ஆனால், புலம்பெயர்ந்த கொசோவோ அல்பேனியர்கள் பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள். அதனால், அது கட்சிக்கு எந்த நெருக்கடியையும் உண்டாக்கவில்லை.

நெதர்லாந்து சோஷலிசக் கட்சி, ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றது. அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி பொம்மல், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களுக்கு நன்றாகப் பரிச்சயமான ஒருவர். பல தடவைகள், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளார்.

ஆயினும், ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் குறித்து, உறுதியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் SP உள்ளது. கொசோவா என்றாலும், கொபானி என்றாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு, அந்த மக்களுக்கு சாதகமானதல்ல என்பது SP இன் நிலைப்பாடு. ஆயினும் இதைப் புரிந்து கொள்ளும் நிலையில், குர்து தேசியவாதிகள் இல்லை. அவர்கள், கொபானி பிரச்சினையில், அமெரிக்கா குர்து மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக நம்பினார்கள்.

கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்புப் போரை நடத்தி வருகின்றன. விமானக் குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும், ISIS படையினர் கொபானி பிரதேசத்தை முற்றுகையிட்டு கைப்பற்றி உள்ளனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் தான், ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் வேறு என்ற விடயம் குர்து தேசியவாதிகளுக்கு உறைத்தது. அதன் எதிரொலியாக, மேற்கு ஐரோப்பிய நகரங்களில் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. துருக்கியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், கலவரத்தில் முடிந்துள்ளன.

கொபானி நெருக்கடியை, ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நெருக்கடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டிலும் சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், இலங்கையை விட சிரியா சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியமான நாடு என்பது குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பான ஒரு விவாதம், தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் அவசியமானது. அத்தகைய விவாதங்கள் மூலம் தான் ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

Monday, July 28, 2014

அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!



"எதற்காக பாலஸ்தீனத்திற்காக அழுகிறீர்கள்?""தமிழர்கள் அழ வேண்டியது முள்ளிவாய்காலுக்காக மட்டுமே!"
தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சிலர் சமூக வலைத் தளங்களில் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம்.

வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள், ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கினார்கள்.

வன்னியில் மக்கள் செறிவாக கூடுமிடங்களை செய்மதிப் படங்கள் மூலம் காட்டிக் கொடுத்து, தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்க உதவிய ஒபாமாவுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் ஓர் தமிழர் அமைப்பு இயங்கியது. இந்தியாவில் அதே காலகட்டத்தில், சோனியா அல்லது கருணாநிதி பெயரில் ஒரு தமிழ் இன உணர்வாளர்களின் அமைப்பு இயங்கினால், அது எந்தளவு எதிர்ப்பை சம்பாதித்திருக்கும்? ஆனால், தமிழ் இனப்படுகொலையில் பங்காளியான ஒபாமாவுக்கு ஆதரவான தமிழர் அமைப்பு, யாருடைய கண்களையும் உறுத்தவில்லை.

அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களையும், பண வசதி படைத்தவர்களையும் கேள்வி கேட்கும் அளவிற்கு முதுகெலும்பில்லாத "மாற்றுக்" கருத்தாளர்கள் சிலர், முள்ளிவாய்க்கால் - காஸா படுகொலைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்து நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலையும், காஸாவையும் ஒப்பிட்டால் ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும், போலித் "தமிழ் இன உணர்வாளர்களுக்கும்" பிடிப்பதில்லை. முள்ளிவாய்க்கால் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு, தம்மிடம் மட்டுமே காப்புரிமை இருப்பது போன்று நடந்து கொள்கின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசினால், "எமக்கு தமிழீழம் மட்டுமே முக்கியம்" என்று விதண்டாவாதம் செய்வார்கள். ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்கள் குறுக்கே புகுந்து, "உலகில் எவனும் தமிழன் சாகும் போது கண்டு கொள்ளவில்லை. அதனால் பாலஸ்தீனர்கள் பற்றி எமக்கு அக்கறை இல்லை..." என்று ஒரு சாட்டு சொல்வார்கள். "இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை, ஒரு சர்வதேச பிரச்சினை" என்பது இந்த "மாற்றுக்" கருத்து அறிவுஜீவிகளுக்கு தெரியாமல் போனது அதிசயமல்ல. ஏனென்றால், அமெரிக்கா உதவியின்றி அவர்களது அரசியல் நடக்காது.

இஸ்ரேலில் ஒரு கொலை நடந்தால் அது உலகச் செய்தி. அதே நேரத்தில் இன்னொரு நாட்டில் ஆயிரம் பேர் இறந்தாலும், அந்தத் தகவல் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. இன்று நேற்றல்ல, கடந்த எழுபது வருடங்களாக சர்வதேச சமூகம் இஸ்ரேல் மீது அளவுக்கு அதிகமான கரிசனை காட்டி வருகின்றது. மேற்கத்திய ஊடகங்கள் எந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அதே தான் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப் படும்.

காஸா போர் தொடங்கி நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இன்னொரு அரபு நாடான லிபியாவில் ஒரு போர் நடந்து கொண்டிருந்த தகவலை எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? அதுவும் சாதாரணமான யுத்தம் அல்ல. கிளர்ச்சிக் குழுக்கள் திரிப்பொலி சர்வதேச விமான நிலையத்தை தாக்கி உள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங்களை தகர்த்துள்ளன.

திரிபோலி விமான நிலைய தாக்குதல் 

லிபியா வான் பரப்பின் மேல் விமானங்கள் பறப்பதற்கு, சர்வதேச தடையுத்தரவு போடப் பட்டுள்ளது. அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். பிரெஞ்சுப் பிரஜைகளை வெளியேறுமாறு பணிக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் எல்லாம் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள். எதற்காக எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? அதற்கு விடை ஒன்று தான். இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சர்வதேச கவனம் முழுவதும் அங்கே தான் குவிந்திருக்கும்.

2008 இறுதியிலும், 2009 தொடக்கத்திலும், வன்னியிலும், காஸாவிலும் ஒரே நேரத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சர்வதேச நாடுகள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும்? இந்த உண்மைகளை மறைக்கும் போலித் தமிழ் இன உணர்வாளர்கள் சிலர், தமது இஸ்ரேலிய சார்பு அரசியலை மறைப்பதற்காக பல தகிடுதத்தங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை. ஆனால், இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்.


********


பிற்குறிப்பு:
"ஈழத் தமிழர்கள் இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" (?) என்று, இஸ்ரேல் கொடுத்த ஆயுதங்களை பாவித்து நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஓய்ந்த பின்னர், நிராஜ் டேவிட் என்ற ஊடகவியலாளர் கூறி வந்தார். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர், லங்காஸ்ரீ (தமிழ்வின்) என்ற தமிழர்கள் மத்தியில் பிரபலமான இணையத்தளத்தில், இஸ்ரேலை புகழ்ந்து தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.
ஈழத் தமிழர்கள் இஸ்ரேலுக்கு விசுவாசமானவர்களாக இருந்தால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது வாதம். GTV எனும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சியில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். GTV, லங்காஸ்ரீ என்பன மிகத் தீவிரமான தமிழ்தேசிய ஊடகங்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். நிராஜ் டேவிட் கூட தன்னை தீவிரமான தமிழ் தேசியவாதியாக காட்டிக் கொள்ளும் ஒருவர் தான்.
லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் IBC வானொலியும், மிகத் தீவிரமான தமிழ் தேசிய ஊடகம் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்த யூதர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, "இஸ்ரேலில் சந்திப்போம்" என்று விடை பெறுவார்களாம். அதே மாதிரி, தமிழர்கள் எல்லோரும் "தமிழீழத்தில் சந்திப்போம்" என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தி வந்தது.
ஸ்ரீதரன், இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். கட்சிக்குள்ளேயே மிகவும் தீவிரமான தமிழ் தேசியவாதி என்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயரெடுத்தவர். அவர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது: "உலகிலேயே மூன்று புத்திசாலித்தனமான இனங்களின் பெயர்கள் J என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது. அவை முறையே Jews, Japanese, Jaffna Tamils!" என்று கூறினார்.
மே 17 இயக்கம், அனைத்து தமிழ் தேசியவாதிகள் சார்பாக, தமிழ்நாட்டில் பாலஸ்தீன ஆதரவுக் கூட்டம் போடுகின்றதாம். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மே 17 இயக்கத்தினர் "அசல் தமிழ் தேசியவாதிகள்" என்றால், மேலே குறிப்பிடப் பட்டவர்கள் "போலித் தமிழ் தேசியவாதிகளா?" இவர்களில் யார் உண்மையான தமிழ் தேசியவாதி? இந்தக் குழப்பத்திற்கு காரணம், உலகில் "பொதுவான தமிழ் தேசியம்" என்ற ஒன்று கிடையாது. ஏற்கனவே, தமிழ் தேசியவாதிகள் மத்தியிலும் வலதுசாரி, இடதுசாரி பிரிவினை காலம் காலமாக இருந்து வந்துள்ளது.
பெரும்பான்மை ஆதரவாளர்களைக் கொண்ட, வலதுசாரித் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலும் ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. ஈழத்து தமிழ் தேசியத்திற்கும், தமிழகத் தமிழ் தேசியத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள், கொள்கை முரண்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் எதிரொலிக்கிறது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர் இஸ்ரேலை ஆதரிக்கையில், இன்னொரு பிரிவினர் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர். எது எப்படியோ, இஸ்ரேலுக்கு தலையையும், பாலஸ்தீனர்களுக்கு வாலையும் காட்டுவதற்கு விசேட திறமை வேண்டும்.

Friday, May 22, 2009

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். 


தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். 


இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 


9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் "சிங்கள ஏகாதிபத்தியம்" மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். 


எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். 


புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. 


இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். 


மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, "புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்" என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. "தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்" என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. 


புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.