Showing posts with label மகிந்த ராஜபக்ச. Show all posts
Showing posts with label மகிந்த ராஜபக்ச. Show all posts

Saturday, October 27, 2018

இலங்கையில் திடீர் சதிப்புரட்சி! மைத்திரி- மகிந்த அரசின் "பொல்லாட்சி" ஆரம்பம்!!


26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், நாட்டிலும் பெரும் குழப்பங்களை உண்டாக்கி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரையில், தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல நாடுகளின் அரசுகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் தற்போது இலங்கையில் இரண்டு பிரதமர்கள் உள்ளனர். விரைவில் பன்முக அழுத்தம் காரணமாக ரணில் பதவியை விட்டு விலகிச் செல்லலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2) கீழ், ஜனாதிபதி திடீரென பிரதமரை பதவி விலக்குவதற்கான காரணம் எதுவுமில்லை. பிரதமர் தானாக பதவியை துறந்தால், அல்லது அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது போனால் மட்டுமே, ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரியின் செயலானது அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதானது, இலங்கையில் ஒரு சதிப்புரட்சி நடப்பதை சுட்டிக் காட்டுகின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களை வைத்து, ரணிலுக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைகீழாக நின்றாலும் மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்காது என்று தமிழர் தரப்பில் சொல்லப் படுகின்றது.

இந்த விடயம், மைத்திரி, மகிந்தவுக்கும் தெரியாமல் இருக்காது. ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்பார்க்காமல், மகிந்த பிரதமராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்கப் படவில்லை. ஒரு வேளை, பாராளுமன்ற பெரும்பான்மை மகிந்தவுக்கு கிடைக்காவிட்டால், பெரும் நெருக்கடி ஏற்படும். அதற்குப் பிறகு நாட்டில் ஏற்படப் போகும் குழப்பங்கள் பாராளுமன்றத்தை கலைக்கும் அளவுக்கும் போகலாம். அதனால், நவம்பர் பதினாறு வரையில் பாராளுமன்றம் கூடுவது ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை இரவு வெளியானதையும் அவதானிக்க வேண்டும். எவராவது அரசியமைப்பு சட்டத்தை காரணம் காட்டி, நீதிமன்றத்தை நாடுவதென்றாலும், திங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும். அதற்குள் வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி, மைத்திரியும், மகிந்தவும் கூட்டுச் சேர்ந்து தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி விடுவார்கள். ரணிலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஏற்கனவே இருபது பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள். 

காவல்துறையில் பணியாற்றுவோரின் லீவுகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டுள்ளன. இலங்கையில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது. இராணுவம், காவல்துறையில் மகிந்த ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். ஏற்கனவே, அரச ஊடகம் உட்பட, பெரும்பாலான சிங்கள/ஆங்கில வெகுஜன ஊடகங்கள் அவர்களது கைகளுக்குள் விழுந்து விட்டன.

இதற்குள் சிலர் இந்தியா, சீனாவை இழுத்து முடிச்சுப் போடுவது வேடிக்கையானது. இலங்கையில் வர்த்தகம் தவிர்ந்த, அரசியல் நிலவரம் தொடர்பாக, சீனா, இந்தியாவுக்கு இடையில் எந்த பகை முரண்பாடும் இல்லை. 

சில தினங்களுக்கு முன்னர், RAW தன்னைக் கொல்ல சதிசெய்வதாக ஜனாதிபதி அறிவித்து இருந்தார். அந்தக் காரணத்தை காட்டி ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப் பட்டார். இருப்பினும் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த விடயத்தை யாரும் பெரிது படுத்தவில்லை.

அனேகமாக, தற்போது நடக்கும் சதிப்புரட்சி திட்டங்களை மறைப்பதற்காக, "இந்தியா - சீனா முரண்பாடு" எனும் கதையை மைத்திரியே உருவாக்கி பரப்பி விட்டிருக்கலாம். மகிந்த ராஜபக்சே பிரதமராக வருவதால், அல்லது மீண்டும் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

மைத்திரி - மகிந்த சதிப்புரட்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகர் சுப்பிரமணியன் சுவாமி, மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசி உள்ளார். ஆகவே, இதற்கு மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்ப இடமுண்டு. 

இதற்கிடையே, வட இலங்கையில், இந்துத்துவா சார்பான, தமிழ்த்தேசிய பழமைவாதியான விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்ததற்கு பின்னணியிலும் இந்தியாவின் கை இருக்கலாம். இந்திய தூதுவராலயத்தின் அனுசரணையில் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இந்து மத அடிப்படைவாத சக்திகளின் ஊடுருவலும் நடந்துள்ளது. இதுவரை காலமும் போலியாக  தமிழ்த்தேசியம் பேசியவர்களை, அசல் இந்து மத அடிப்படைவாதிகளாக மாற்றி உள்ளமை இந்தியாவின் வெற்றி எனலாம். 

இந்தியாவில் அரச இயந்திரம் பாசிச மயப்பட்டு வருவதைப் போன்ற அதே பாணியில் இலங்கை அரசியலும் பாசிசமயமாக்கப் படுகின்றது. மகிந்தவின் பிரதமர் பதவியேற்பு குறித்து, அவரது சகோதரர் கோத்தபாய வரவேற்றுப் பேசிய நேரம், பக்கத்தில் 'ராவண பலய' தலைவரும் இருந்தார். சிங்கள-பௌத்த பாசிச இயக்கமான 'ராவண பலய', கடந்த காலங்களில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்சே பிரதமரான விடயம், "அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு உவப்பானதல்ல" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. இதற்குப் பின்னணியில் இந்தியாவின் ஆசீர்வாதம் இருந்தது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்திருக்க வேண்டும்.

பத்தாண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே சர்வாதிகார ஆட்சி நடத்தியதால், 2015 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, மைத்திரி - ரணில் தலைமையிலான "நல்லாட்சி" அரசாங்கம் வந்தது. ஆனால், காலப்போக்கில் "நல்லாட்சி" அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

மைத்திரி- ரணிலின் நல்லாட்சி அரசு, தம்மால் ஜனநாயகம் மீட்கப்பட்டதாக சொல்லிக் கொண்டாலும், பழைய பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப் படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும், எதிர்ப்புணர்வும் அதிகரித்தது. இதற்கிடையே, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரம் காரணமாக, முஸ்லிம் மக்களின் ஆதரவும் வெகுவாக குறைந்தது.

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு இருப்பதால், சிங்கள மக்கள் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. சிங்கள மக்கள் மத்தியிலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவு குறைந்து வருகின்றது. 

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் புதிய கட்சிக்கு பெருமளவு வாக்குகள் விழுந்ததில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம். மகிந்த ராஜபகச்வுக்கு ஆதரவான வாக்குகள் எல்லாம் இனவாத ஓட்டுகள் அல்ல. பல வாக்காளர்கள் ஆளும் கட்சி மீதான அதிருப்தி காரணமாகவும் மகிந்தவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

எரிபொருள், உணவுப்பொருட்களின் விலையேற்றம், இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் இன வேறுபாடின்றி பாதித்து வருகின்றது. இலங்கையில் பொருட்களின் விலைகள் ஐரோப்பிய தரத்திலும், தனிநபர் வருமானம் ஆப்பிரிக்கத் தரத்திலும் உள்ளன. இதனால் மைத்திரியின் "நல்லாட்சி" அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழமையானது. இது மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.

இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தின் படி, ரணில் ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களில் இறங்கலாம் என்று சர்வதேச சமூகம் (அதாவது: மேற்குலம்) எதிர்பார்க்கின்றது. மகிந்த ஆதரவாளர்கள், ரணில் ஆதரவாளர்கள் என்ற பிரிவினை, இலங்கையின் தற்கால அரசியலில் பிரதானமான முரண்பாடாக காட்டப்படுகின்றது.

இருப்பினும், நாட்டில் ஏற்படும் குழப்பகரமான சூழ்நிலை விரைவில் பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறலாம். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு மகிந்த ராஜபக்சே சரியானவர் என்பதை கணித்து வைத்துள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. அதனால் தான் இதை சதிப்புரட்சி என்று அழைக்க வேண்டியுள்ளது.

இது போன்ற நிலைமைகளில், அதாவது சதிப்புரட்சிகளில் எப்போதும் இராணுவம் சம்பந்தப் பட வேண்டிய அவசியம் இல்லை. பல நாடுகளில் அரச மாளிகைக்குள் சதிப்புரட்சி நடந்து ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளன. இதற்கு முன்னர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில், அல்லது லத்தீன் அமெரிக்க நாட்டில் இப்படியான சதிப்புரட்சி நடந்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம்.

அப்படியான நாடுகளை "வாழைப்பழக் குடியரசு" என்று அழைப்பார்கள். அதாவது, ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் நேரத்தில், திடீரென ஆட்சி மாற்றம் நடக்கும். மக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒரு பாசிச நிர்வாகக் கட்டமைப்பு நிலைநிறுத்தப் பட்டிருக்கும். மனித உரிமை பற்றிப் பேசினால் சிறையில் அடைத்து விட்டு மறுவேலை பார்ப்பார்கள். தேர்தல் ஜனநாயகம் மூலம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாவிட்டால், பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுப்பது, உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுக்களின் வாடிக்கை. இலங்கை அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

Wednesday, December 31, 2014

தமிழ் தேசிய தொலைக்காட்சியில் முதல் தடவையாக ராஜபக்சேவின் பேட்டி!


தமிழ்நாட்டில் "ஈழ ஆதரவு அரசியல்" செய்யும், "தமிழ் தேசியவாதிகள்" பலருக்கு, இலங்கை அரசியல் நிலவரம் சுத்தமாகப் புரிவதில்லை. பிள்ளையார் பிடிப்பதாக நினைத்து, குரங்குப் பொம்மைகள் செய்து கொண்டிருப்பார்கள். "தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் தடவையாக..." என்று முன்பெல்லாம் சினிமாப் படத்திற்கு விளம்பரம் செய்வார்கள். "தமிழ் தேசியவாத தொலைக்காட்சியான" தந்தி டி.வி., முதல் தடவையாக மகிந்த ராஜபக்சவின் பேட்டியை ஒளிபரப்பி உள்ளது.

அது ஒன்றும் ஊடக தர்மத்திற்கு முரணான விடயம் அல்ல. தந்தி டி.வி. கூட விளம்பரதாரர்களின் வருமானத்தை நம்பி இருக்கும் வணிக ஊடகம் தான். (வணிக நலன் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிரானதும் அல்ல.) ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில், இப்படி ஒரு நேர்காணல் ஒளிபரப்பப் பட்டது தான் எங்கோ உதைக்கிறது.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆசீர்வாதம் வாங்குவதற்காக திருப்பதி சென்றிருந்தார். அப்போது அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வைகோ குழுவினர், தற்போதும் தந்தி டி.வி.க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பல "தமிழ் உணர்வாளர்கள்" கொந்தளித்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதைத் தான்... இதையே தான் ராஜபக்சவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. அதே மாதிரி, சிங்களப் பெரும்பான்மை கட்சிகள், புலிகள் இருந்த காலத்தில் அதைக் காட்டி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தன. தற்போது புலிகள் அழிந்த பின்னாலும், தமது பிழைப்பு அரசியலை தொடர்கின்றன.

ராஜபக்ச அரசு புலிகளை வளர்த்து வருகின்றது என்று, மைத்திரிக்கு ஆதரவான எதிர்க்கட்சி அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கேபி, கருணா, நகுலன் போன்ற முன்னாள் புலித் தலைவர்கள் ராஜபக்ச அரசில் இருக்கிறார்கள். மைத்திரி ஆட்சி வந்த பின்னர் எல்லாப் புலிகளும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறி வருகின்றனர். 

நாடுகடந்த தமிழீழ அரசும் ராஜபக்ச ஆதரவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறதாம். மேலும் வெளிநாடுகளில் இருக்கும் புலிகளுக்கு நிதி வழங்குவது புலம்பெயர்ந்த தமிழர்கள் இல்லையாம். அவர்களுக்கும் ராஜபக்ச அரசு தான் நிதி வழங்கி வருகின்றதாம். மேற்படி தகவல்களை, எதிரணியில் இருக்கும் ஜாதிக சிஹல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

"ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிக்கிறார்கள்." என்று தமிழகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அதே மாதிரி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்வதாகவும், அவர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிப்பவர்கள்..." என்றும் பெரும்பாலான சிங்களவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

மைத்திரியை ஆதரிக்கும் எதிரணியினரின் ஊடகங்களில், ராஜபக்ச திருப்பதி சென்ற படம் அடிக்கடி பிரசுரமாகின்றது. தற்போது தந்தி டி.வி. நேர்காணலையும் எதிரணியினரே அதிகளவில் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், ராஜபக்ச, புலிகள் கூட்டணி பற்றிய கதைகளுக்கு "ஆதாரம்" காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விபரம் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியுமா?


மேலதிக தகவல்களுக்கு:
Sirisena to arrest all LTTEers; http://www.ceylontoday.lk/51-81040-news-detail-sirisena-to-arrest-all-ltteers.html
I’ll get more votes from North at this election - Mahinda Rajapaksa in an interview with Tamil Nadu TV station Thanthi TV; http://www.dailymirror.lk/60015/video-i-ll-get-more-votes-from-north-at-this-election-mr
Last days of the Raj?; http://www.economist.com/news/leaders/21637389-encouragingly-mahinda-rajapaksa-faces-real-battle-win-re-election-president-better

Friday, October 17, 2014

அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்!


அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்! உங்களது பொது எதிரிகளான உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாது, மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரித்து வைத்திருப்பீராக! இனவாதிகளும், தேசியவாதிகளும் ஆண்டவரால் இரட்சிக்கப் படுவீர்கள். ஆமென்!

போப்பாண்டவர் பிரான்சிஸ், ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச அதே மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. "தேர்தலில் உதவுபவனே உண்மையான நண்பன்!"

வத்திக்கான் திருச்சபையின் வரலாறு நெடுகிலும், போப்பாண்டவர்கள் சர்வாதிகாரிகளுடன் ஒத்துழைத்து வந்துள்ளனர். ராஜபக்சவுக்கு வத்திகானின் ஆசீர்வாதம் கிடைப்பதை எதிர்த்து, எந்தவொரு போலித் தமிழ் உணர்வாளரும் முணுமுணுக்கக் கூட இல்லை. "ஆண்டவரின் மண்ணுலக பிரதிநிதியை" பகைத்துக் கொள்ள விரும்பவில்லை போலும்.

போப்பாண்டவரின் இடத்தில், காஸ்ட்ரோ, ஏவோ மொராலேஸ், அப்பாஸ் இருந்திருந்தால், இந்நேரம் அதைப் பற்றி ஊரெல்லாம் தண்டோரா போட்டு சொல்லித் திரிந்திருப்பார்கள். என்னதான் தமிழ் தேசியவாதி வேடம் போட்டாலும், முதலாளிய வர்க்க பாசம் அவர்களை அறியாமல் தலை காட்டி விடுகின்றது.

கம்யூனிஸ்டுகளை கண்டியுங்கள் என்று சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கேட்கின்றனர். அப்படியே செய்யலாங்க... ஆனால் ஒரு பிரச்சினைங்க... "தொண்ணூறுகளில் கம்யூனிசம் இறுதி மூச்சை விட்டது. புதைகுழிக்குள் சென்று விட்டது..." என்று மெத்தப் படித்த அறிவாளிங்க சொன்னாங்க... அதை எல்லோரும் நம்பிட்டோமுங்க... இப்போது "கம்யூனிச ஆவிகள் நடமாடுகின்றன" என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க... அது எப்படி என்று அறிவுஜீவிகள் மக்களுக்கு விளக்கி சொன்னா நல்லதுங்க...

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி இவற்றைப் பற்றி யாரும் பேசக் காணோம். முழு இலங்கையிலும், வட-கிழக்கு மாகாணங்கள் தான் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையும் அங்கே அதிகம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு தமிழ் உணர்வாளரும் பேசுவதில்லை. போலி சிங்களதேசியவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அதிகாரத்தை பங்கு போடுவதை பற்றிப் பேசும் பல மணி நேரத்தில், ஒரு துளியாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு செலவளிப்பதில்லை.

தனது நலன்களை மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கும், மத்தியதர வர்க்கத்தின் பூர்ஷுவா அரசியலால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு எந்தப் பிரயோசனமுமற்ற வெற்று அரசியல் கோஷங்கள், காலப்போக்கில் அதே மக்களால் நிராகரிக்கப் படும்.

அனைத்து வகை அதிகாரங்களையும், தமிழ் உழைக்கும் மக்கள் கைக‌ளில் குவிப்பதற்காக போராடுவதே உண்மையான தமிழ் தேசியம். அதற்கு மாறாக, தமிழ் முதலாளிகளின் ஆட்சியை கொண்டுவர விரும்புவது போலித் தமிழ்தேசியம் ஆகும்.

Sunday, May 18, 2014

நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்


ஒரு இனப்படுகொலையாளி பிரதமராகிறார்! நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பலர் துள்ளிக் குதிக்கின்றனர். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வென்ற பொழுது கூட, இலங்கையில் பலர் இவ்வாறு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். மோடி ஆதரவாளர்களில், கணிசமான அளவு தமிழர்களும் அடங்குவார்கள். அவர்கள் யாரும் ஈழப் போரின் துயர முடிவில் இருந்து, எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகின்றது.


முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஐந்தாண்டு நினைவு தினமும், நரேந்திர மோடி இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தினமும் அடுத்தடுத்து வந்தது, ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் வரப்போகும் பேரழிவை அது கட்டியம் கூறுகின்றது. 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது, அவர் தமிழ்த் தீவிரவாதத்தை, அல்லது புலிகளை அழித்தொழிப்பார் என்ற என்ற எதிர்பார்ப்பில் பலர் அவருக்கு ஓட்டுப் போட்டிருந்தனர். அதன் விளைவு தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள். 

நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களின் மனநிலையும், அதற்கு சற்றேனும் குறைந்தது அல்ல. இஸ்லாமிய தீவிரவாதத்தை, காஷ்மீர் இயக்கங்களை, நக்சலைட்டுகளை அழித்தொழிப்பார் என்று எதிர்பார்த்து, மோடிக்கு ஓட்டுப் போட்டதாக பலர் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச முதல்தடைவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நேரம், "அவர் ஒரு மிகத் தீவிரமான சிங்களப் பேரினவாதி, இதற்கு முன்னர் இருந்த எல்லா சிங்களத் தலைவர்களையும் விட கடும்போக்காளர், அவர் ஜனாதிபதியாக தெரிவானால், தமிழர்களுக்கு அழிவுகாலம் நிச்சயம்...." என்றெல்லாம் கூறி, புலிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அன்று, புலிகளின் ராஜபக்ச எதிர்ப்புப் பிரச்சாரங்களை யாரும் பொருட் படுத்தவில்லை. நல்லாட்சி தருவார் என்ற எதிர்பார்ப்பில், பெரும்பாலான மக்கள் ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தார்கள். 

2005 ம் ஆண்டு, புலிகள் விடுத்த ராஜபக்ச அபாயம் பற்றிய எச்சரிக்கைகள் யாவும், 2009 ம் ஆண்டு உண்மையென மெய்ப்பிக்கப் பட்டது. இலங்கையில் நல்லாட்சி தருவார் என நம்பப் பட்ட கடும்போக்காளர், புலிகளையும், அவர்களோடு ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் படுகொலை செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஒரு பெரும் மனிதப் பேரவலம் நடந்த அந்த நாட்களை, உலகெங்கும் வாழும் புலி ஆதரவாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், மே 18 இனப்படுகொலை தினமாக நினைவுகூர்கின்றனர். 

இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிடும் நரேந்திர மோடி பிரதமராக தெரிவானால் ஏற்படப் போகும் ஆபத்துகள் குறித்து, ஏற்கனவே பலர் எச்சரித்திருந்தனர். ஆனாலும், பெரும்பான்மை இந்திய மக்கள், அவரையே பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு காலத்தில், இஸ்லாமிய தீவிரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் மட்டுமல்ல, தன்னை எதிர்த்தவர்களையும் கூட, நரேந்திர மோடி ராஜபக்சவின் பாதையை பின்பற்றி அழித்தொழிக்கலாம். 

இந்தியாவிலும், ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்க விட மாட்டோம் என்று, மே 18 நினைவுநாளில் உறுதி பூணுவோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து, ஐந்தாண்டுகளுக்கு பின்னரும், ராஜபக்ச எதிர்ப்பு போராட்டம், அயல்நாடான இந்தியாவிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், உயிர்ப்புடன் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. அதே மாதிரி, மோடி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப் படும்.

Tuesday, September 18, 2012

இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்

[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!]
(இரண்டாம் பாகம்)

"சீமான், வைகோ ஆகிய தமிழினக் காவலர்கள், ராஜபக்சவின் தீவிர எதிரிகள். இவர்களுக்கு இடையில் தொடர்பு ஏற்பட வாய்ப்பேயில்லை. அதனை நாங்கள் நம்ப மாட்டோம்." என்று பலர் பிடிவாதமாக மறுக்கலாம். இப்படி மறுப்பவர்கள், பாஸிசத்தின் தனித் தன்மையை தவறாக மதிப்பிட்டுள்ளார்கள். உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டினதும் பாஸிச சக்திகள், ஒன்றை மற்றது எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும். ஏனெனில் இது அடிப்படையில் தேசியவாதங்களுக்கு இடையிலான முரண்பாடு ஆகும். ஆனால், சந்தர்ப்பம் வாய்த்தால், அனைத்து நாடுகளிலும் உள்ள பாஸிச சக்திகள் ஒன்று சேர்ந்து விடும். இதற்கு சிறந்த உதாரணம், இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஐரோப்பா. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையில் நடந்த நூறாண்டு கால போரின் விளைவாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் வெறுப்புணர்வு உச்சத்தில் இருந்தது. இருப்பினும், பிரான்ஸ் நாசிகளினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர், தென் பிரான்ஸில் "வீஷி அரசு", நாஜிச நட்பு நாடாக இயங்கவில்லையா? 

இன்று சில தீவிர வலதுசாரி தமிழர்கள், ஹிட்லரை ஆராதிப்பதுடன், நாஜி கொள்கைகளை நியாயப் படுத்தி வருகின்றனர்.  அதே நேரம், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள வெள்ளையின நவ-நாஜி இயக்கங்கள், தமது நாடுகளில் வாழும் தமிழர்களை விரட்டியடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன. இந்த உண்மை நமது தமிழ் நாஜிகளுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டும், ஏன் நாஜிசத்தை ஆதரிக்கிறார்கள்? அங்கே தான் நாம் உணர மறுக்கும், பன்னாட்டு பாஸிச சக்திகளுக்கு இடையிலான தொடர்பு மறைந்திருக்கிறது. அதாவது, இந்த பாஸிச சக்திகள், தமது நாட்டில், தம்மின மக்களை  தாமே ஆள விரும்புகின்றன. தமது இனத்தை சேர்ந்தவர்கள், பிற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டு, அகதியாக அடித்து விரட்டப் பட்டால், அது அவர்களது தேசிய அரசு கொள்கைக்கு உரம் சேர்க்கும். 19 ம் நூற்றாண்டில், போலந்திலும், ரஷ்யாவிலும் வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மையினம் இனப்படுகொலைகளுக்காளாகி அடித்து விரட்டப் பட்டனர். ஜெர்மனியில் அந்தப் பேரவலம் பற்றி இடையறாது பிரச்சாரம் செய்து வந்த நாசிக் கட்சி, 20 ம் நூற்றாண்டில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா?  ஒவ்வொரு மொழி பேசும் இனத்தையும், அதற்கென்று ஒதுக்கப் பட்ட நாடுகளில் வாழ வைப்பது, தீவிர தேசியவாதிகளின்  அடிப்படை தத்துவம் என்பதை நாம் மறந்து விடலாகாது. 

சீமான், வைகோ போன்றவர்களைக் கண்டு, ராஜபக்ச அன் பிரதர்ஸ் லிமிட்டட் அஞ்சுவதாக, தமிழ் நாட்டில் ஒரு மாயையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ, சிங்கள ஊடகங்களோ, இவர்களை கண்டு கொள்வதில்லை என்பது தான் உண்மை. சீமான், வைகோ கோஷ்டியினரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதனை ஒரு அச்சுறுத்தலாக கணக்கெடுப்பதில்லை. ஆனால், முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, சிறிலங்காவுக்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தால், உடனே சிங்கள அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வரிந்து கட்டிக்  கொண்டு எதிர்க்கத் கிளம்பி விடுவார்கள். அவர்கள் சீமான், வைகோ வகையறாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணம் என்ன? இலங்கையில் ஆளும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும், தமிழகத்தின் பாஸிச சக்திகளுக்கும் இடையிலான நுண்ணரசியல், எமது கண்ணுக்குப் புலப்படாது.  தமக்கு உண்மையான நண்பர்கள் யார், உண்மையான எதிரிகள் யார் என்பதில், அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். 

தமிழ் நாட்டில் மட்டுமே அதிகளவு சினிமாக்காரர்கள் அரசியலில் குதிக்கின்றனர். இதனை உலகில் வேறெங்கும் காணமுடியாது. நாம் அடிக்கடி திட்டிக் கொண்டிருக்கும், "மொக்கு  சிங்களவர்கள்"  கூட, அரசியலில் நுழைந்த சினிமாக் காரர்களை, தேர்தலில்  வெல்ல வைக்கவில்லை.  தமிழகத்தில், சினிமாத் துறையை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து முதலமைச்சராக இருந்துள்ளனர். 21 ம் நூற்றாண்டு தமிழ் தேசிய இயக்கத்திற்கும், சினிமாத் துறையை சேர்ந்த ஒருவர் தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று யாராவது நினைத்திருக்கலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கு சீமான் கிடைத்தார். ஒரு காலத்தில் பெரியாரிசம், நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த சீமான், 180 பாகை கோணத்தில் திரும்பி தமிழ் தேசியத்திற்குள் குதித்தார்.  அப்போதெல்லாம் சீமானின் தலைகீழான கொள்கை மாற்றம் குறித்து, யாரும் கேள்வி எழுப்பவில்லை.

தமிழீழத் தேசியத்தில், "பெரியாரிசம் அல்லது நாஸ்திகம்  சிறிதளவு தாக்கத்தைக் கூட செலுத்தவில்லை," என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சீமான், பெரியாரிசத்தில் இருந்து தமிழ் தேசியத்தில் குதித்தவர். நாளைக்கே இந்துத்துவா இயக்கத்தில் குதிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? இறுதியில் அது தான் நடந்தது. மும்பை சென்று, இந்து மதவெறி பாசிஸ்டுகளான சிவ சேனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னால், "நாடு கடந்த தமிழீழ அரசு" க்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், அமெரிக்காவில் சி.ஐ.ஏ.யின்  கண்காணிப்பின் கீழ் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், தனக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தினார். மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியும், சிறிலங்கா அரசின் புனர்வாழ்வுத் திட்டத்தின் அறங்காவலருமான கே.பி. உருவாக்கியது தான், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்பதை பலர் மறந்து விட்டனர். புலிகள் இயக்கத்தில், தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்த, சர்வதேச தொடர்பாளரான கே.பி.,  2007 ம் ஆண்டளவில், தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.('KP arrested' in Thailand, http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070911_kp_arrested.shtml) ஆனால், பின்னர் கைது செய்யப்படவில்லை என்ற அறிவிப்பும் வந்தது. ஒன்றுக்குப் பின் முரணான தகவல்கள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன.  அன்றிலிருந்து சி.ஐ.ஏ., மற்றும் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் உளவாளியாக செயற்பட்டு வந்திருக்க வேண்டும். 

வைகோ, சீமான் ஆகியோருக்கும், சிறிலங்கா அரசுக்கும் தொடர்பிருப்பதாக, எந்தவொரு தமிழ் உணர்வாளரும் கற்பனை பண்ணக் கூட  மாட்டார். ஆனால், மேற்குறிப்பிட்ட தரவுகள், அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை தெரிவிக்கின்றன. தமிழகத்தில், ஈழத் தமிழர் பெயரால் அரசியல் நடத்தும் எந்தவொரு தலைவரும், இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்கவில்லை. மாறாக, இனவாதக்  கருத்துகளை பரப்புவதிலும்,  இனவெறி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றனர். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களவர்களை விரட்டி அடிப்பதை, இன மானம் காத்த வீரச் செயலாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். ஏற்கனவே, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள், தமிழர்களை கொன்ற கொடியவர்கள்." என்பன போன்ற கருத்துக்கள் வெகுஜன ஊடகங்களாலேயே பரப்பப் பட்டு வந்துள்ளன.

சிறிலங்கா இராணுவம், புலிகளையும், தமிழ் மக்களையும் வேறு படுத்தி பாராமல் கொன்று குவித்தது.  தமிழினவாதிகளும், "சிங்கள இராணுவத்தையும், சிங்கள மக்களையும் தம்மால் வேறு படுத்தி பார்க்க முடியாது," என்று வாதாடுகின்றனர்.   தனது வாழ்நாளில் ஒரு சிங்களவனைக் கூட கண்ணால் கண்டிராத தமிழக மக்களை, தம் பக்கம் இழுப்பது சுலபம் என்று தமிழினவாதிகள் நம்புகின்றனர். அந்த வகையில், சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக அவதானத்தைப் பெறுவதுடன், நிறைய ஆதரவாளர்களையும் தேடித் தரும் என்று கணக்குப் போட்டுள்ளனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், சிங்கள இனவாதிகளும் இதே மாதிரியான அரசியலை கடைப்பிடித்தனர். சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை தாக்கும் இனவாத அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணினார்கள். ஆனால், தமிழகத்தில் இனவாதிகள் ஆட்சிக்கு வருவது, இன்றைய நிலையில் நடக்க முடியாத ஒன்று. அதனால், பாஜக போன்ற இந்து பேரினவாதிகளுடன் கூட்டுச் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் அகில இந்திய பாஸிச அரசு அமைப்பதற்கு துணை போகலாம். 

ஏற்கனவே சிறிலங்காவில் பாஸிச ஆட்சி நடத்தும் ராஜபக்சவுக்கும், இந்தியாவில் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இடையில் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது. விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை ஒன்று, பல தசாப்தங்களாக கொழும்பு நகரில் இயங்கி வருகின்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் தூதுவர்கள், சிங்கள அரசையும், விடுதலைப் புலிகளையும், ஒரே இந்துத்துவா கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளனர். பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள், சைவ சமயத்தை பின்பற்றும் இந்துக்களாக இருப்பதால், புலிகளை ஒரு இந்து விடுதலை இயக்கமாக மாற்ற முயன்றுள்ளனர். மறு பக்கத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான புத்த பிக்குகளின் "புனிதப் போருக்கும்" ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பில் கிறிஸ்தவ சபை, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால், இந்துத்துவா வாதிகளின் கரங்களும் மறைந்திருக்க வாய்ப்புண்டு.
The VHP, an affiliate of the Rashtriya Swayamsewak Sangh (RSS), India's most influential Hindu group, has already opened about a dozen units across Sri Lanka in a bid to build up unity among the country's Tamil-speaking Hindu minority....  Vigyananand, 38, dressed in giveaway saffron robes like a wandering monk, attended the April 10 press conference of LTTE leader Velupillai Prabhakaran as an accredited representative of a VHP publication. Although he has been to Sri Lanka 10 times since 1999, this was the first time he went to LTTE-held areas....   Vigyananand, who knows only Hindi and English, seemed to have no objection to Buddhism and sought to emphasise that Buddhism was also facing threats from the clergy. "I advised Buddhist monks to go to villages to spread their religion and to counter Christianity like we have done in India," he said. "As a religion nobody is suppressing Hinduism in Sri Lanka. But with the exodus of Tamils and Christian influence growing, Hindus here face problems." He also accused the clergy of playing a major role in fuelling the Tamil separatist conflict that has claimed around 60,000 lives in Sri Lanka since 1983 and blamed it for causing a military showdown between the Tigers and India in 1987-90. 
(VHP now building up Hindu unity in Sri Lanka, http://india.indymedia.org/en/2002/04/1069.shtml)  

பத்து வருடங்களுக்கு முன்னர், இந்துத்துவா நிதியில், மலையகத்தில் ஒரு இராமர் கோயில் கட்டப்பட்டது. அங்கே பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும் கட்டப்பட்டது. சீதையை இராவணன் சிறை வைத்திருந்த  இடத்தை அனுமான் வந்து பார்த்த கதையை நினைவு கூறுகிறார்கள் போலும்.  அண்மைக் காலமாக, இலட்சக் கணக்கான வட இந்திய உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் எவரும், இராமாயணக் கதை நடந்த இடத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. அந்தளவுக்கு சுற்றுலா நிறுவனங்கள், இந்தியாவில் பிரச்சாரம் செய்கின்றன. வருங்காலத்தில், அகண்ட இந்து சாம்ராஜ்யம் உருவாவதற்கு, இந்த சுற்றுலாத் திட்டம் உதவலாம். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் நடந்தால், அதனால் இரண்டு தரப்பும் இலாபமடைய வேண்டாமா? இலங்கையும் தனது பிரஜைகளை இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது, இந்துத்துவா வாதிகளின் அன்பான வேண்டுகோள்.

முன்பெல்லாம் எண்ணிக்கையில் குறைந்த சிங்களவர்கள் தான் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களும், வட இந்தியாவில் புத்த மதம் சம்பந்தமான இடங்களைத் தான் பார்வையிட்டு திரும்புவது வழக்கம். தமிழ் நாட்டுக்கும் சிங்களவர்கள் வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும், மாணவர்களாக அல்லது வர்த்தக நோக்கோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு இது வரையில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.  புலிகளை இழிவுபடுத்தும், "பிரபாகரன்" என்ற சிங்களத் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளருக்கு அடித்த சம்பவத்தை தவிர, வேறெந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 2012, செப்டம்பர் மாதம், பூண்டி மாதா கோயிலுக்கு விஜயம் செய்த யாத்திரீர்கள் கூட, தாம் கடந்த 15 வருடங்களாக வந்து செல்வதாக கூறினார்கள். இந்த விபரம் எல்லாம், தமிழகத் தமிழினவாதிகளுக்கு தெரியாது என்று கூற முடியாது. கண்ணுக்குப் புலப்படாத சக்தி ஒன்று, "சிங்களவர்கள் எப்போது, எங்கே வருகிறார்கள்?"  என்பன போன்ற விபரங்களை கொடுக்கின்றது. சிங்கள யாத்திரீகர்கள் மேல் தாக்குதல் நடத்துமாறு தூண்டி விடுகிறது.

(இன்னும் வரும்)

மூன்றாம் பாகம்:
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

இந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 
1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!

Monday, September 17, 2012

தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

"வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத ஓரினம், அதே வரலாற்றை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளது." 

தமிழகத்திற்கு செல்லும் சிங்களவர்கள் தாக்கப்படுவது, கடந்த மூன்று வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் நாட்டில் தோற்றுவித்த எதிர்வினைகளின் பலனாக, தமிழ் தேசிய எழுச்சி அலை உருவாகி இருந்தது. வழமையான தமிழ் தேசியவாத கட்சிகள், குழுக்கள் மட்டுமல்லாது, இடதுசாரிக் கட்சிகளும் அந்த எழுச்சிக்கு ஆதரவளித்தன.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை ஆரம்பித்த அமைப்பில் இருந்தது. மார்க்சிச - லெனினிச இயக்கங்களும் முன்னிலையில் கலந்து கொண்டன.  இடது, வலது பேதமற்று அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு, சிறிலங்கா அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர்,  மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய ஆளும் கட்சியான திமுக கூட போராட்டத்தில் குதிக்க வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் புலி எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார். 

 ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், தமிழகத்தில் குறைந்திருந்த புலி ஆதரவும் அப்போது சூடு பிடித்தது. பொதுவாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்தில் பிறந்திருக்காத புதிய தலைமுறை காலத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகளை, தமது ஆதர்ச நாயகர்களாக வரித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. தமிழ் இன உணர்வு, தமிழகத்திற்குப் புதிதல்ல. ஐம்பதுகளில், அறுபதுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் உருவேற்றப் பட்ட அரசியல் அது. அன்றைய தமிழ் தேசியத் தலைவர் இன்று, இன்று தமிழ் தேசியத்தின் துரோகியாகியது தனிக் கதை. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது மாதிரி, திமுக தமிழ் உணர்வு ஊட்டி வளர்த்த குழந்தைகள், இன்று வளர்த்தவர்களையே எதிர்த்துக் கொண்டிருக்கிறனர். இது தமிழ் தேசிய சித்தாந்தத்தின் நச்சுச் சுழற்சியா என்பது தெரியவில்லை. 

ஏற்கனவே, ஈழத்திலும்  இதே மாதிரியான வரலாறு நிகழ்ந்துள்ளது. திமுக வின் சகோதரக் கட்சி என்று கருதப் படக் கூடிய, தமிழர் விடுதலைக் கூட்டணி ஊட்டி வளர்த்த குழந்தைகளான புலிகள், ஆயுத பலத்தில் வளர்ந்த பின்னர், கூட்டணிக்  கட்சியை தடை செய்து, அதன்  தலைவர்களையும் அழித்திருந்தார்கள். தீவிரவாதிகளான புதிய தலைமுறையினர், பழைய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப் படுத்தி வருகின்றனர். இது ஈழத்திலும், தமிழகத்திலும் பொதுவான வரலாறாக இருக்கிறது. எதிர்காலத்தில் மூன்றாந் தலைமுறை தமிழ் தேசியவாத இளைஞர்கள், இப்போதுள்ள வைகோ, சீமான், நெடுமாறன்  போன்றோரை இனத் துரோகிகளாக முத்திரை குத்தினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை. 

வன்னியில் நடந்து கொண்டிருந்த படுகொலைகள் பற்றிய செய்திகளும், அவை ஏற்படுத்திய அதிர்வலைகளும் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. 83 கலவரத்தின் போதும் இதே மாதிரியான எழுச்சி காணப்பட்டது. ஆனால், அன்றிருந்த உலகம் வேறு, இன்றுள்ள உலகம் வேறு. 83 கலவரச் செய்திகள் , வாய் வழித் தகவல்களாக மட்டுமே பத்திரிகைகள், வானொலிகளில் அறிவிக்கப் பட்டது. ஆனால், இன்று ஒரு தனிநபர் கூட காட்சிகளை பதிவு செய்து அனுப்பி, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றில் காண்பிக்க முடியும். இது பல இலட்சம் மக்களை நேரடியாக சென்றடைகின்றது. உலக தகவல் தொடர்பு புரட்சியினால் விளைந்த பயன் அது.

தமிழ் ஊடகத் துறை, முழுக்க முழுக்க புலிகளின் தகவல் தொடர்பில் தங்கியிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் செயற்பட்ட தமிழ் ஊடகங்கள், போரில் பலியாகும், காயமடையும் ஈழத் தமிழரின் அவலங்களை காட்சிப் படுத்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இன்றைய தகலவல் தொடர்பு சமுதாயத்தில் வாழும் தமிழர்களும், ஊடகங்களால் வழிநடத்தப் பட்டனர். ஊடகங்கள், மக்களை உணர்ச்சிவசப் படுத்திய அளவுக்கு, ஈழப் பிரச்சினை பற்றிய அறிவூட்டவில்லை. இதனால் யுத்தம் முடிந்த பின்னர், இனப்படுகொலைக்கு பழிவாங்கும் அரசியலாக பரிணமித்தது. 

முத்துக்குமார் தீக்குளித்த சம்பவம், தமிழக அரசியல்வாதிகளின் கையாலாகத் தனத்தை தோலுரித்துக் காட்டியது. மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கு பற்றிய எழுச்சியானது, வெகு விரைவில் தமிழக, இந்திய அரசியல் நிறுவனங்களுக்கு எதிராக திரும்பும் சூழல் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம், உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருந்தது. சில தீவிரவாத இளைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் குண்டுகள்  வைக்குமளவிற்கு சென்றமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் அப்படி எல்லாம் நடக்காது என்று, யார் உறுதிமொழி கொடுத்திருந்தாலும், மத்திய அரசு நம்பியிருக்கப் போவதில்லை.

புலிகளை அழிப்பதற்கும், ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்கும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவி வருகிறது என்ற தகவலும் தமிழகத்தில் இந்திய அரசுக்கு எதிரான எதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. ஒரு எல்லை தாண்டியிருந்தால், ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம், இந்திய அரச நிறுவனங்களை அடித்து நொறுக்கி இருக்கும். மக்கள் எழுச்சி அடக்கப் பட்டால்,  இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலும் குதித்திருப்பார்கள். அது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்துள்ளன.

உதாரணத்திற்கு, கொசோவோ அல்பேனியர்களுக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், மாசிடோனியா அல்பேனியர்கள் எழுச்சி அடைந்தனர். விரைவில் அங்கேயும் ஒரு ஆயுதப்போராட்டம் வெடித்தது. ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இன உணர்வு காரணமாக நெருக்கமானவர்கள். இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தமிழர்கள், இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ மாட்டார்களா? நாங்கள் நினைக்கிறோமோ இல்லையோ, இந்திய மத்திய அரசில் உள்ளவர்கள் அப்படித் தான் சிந்தித்து இருப்பார்கள். ஆனால், நிலைமை அந்தளவு தூரம் தீவிரமடைய விடாமல் தடுத்த சக்தி எது? 

இந்த தருணத்தில் தான், இந்திய மத்திய அரசு, தமிழக  மாநில அரசு, RAW  என்பன விழித்துக் கொண்டன. தமிழ் தேசிய எழுச்சிக்குள் உளவாளிகளை ஊடுருவ வைத்து, போராட்டத்தை திசை திருப்பி, நீர்த்துப் போக வைக்க திட்டம் தீட்டின.  யாராலும் ஊடுருவ முடியாத, மிகவும் இரகசியமான, கட்டுக்கோப்பான இயக்கம்  என்று பெயரெடுத்த புலிகள் அமைப்புக்குள்ளேயே அரச உளவாளிகள் ஊடுருவி இருந்தனர். தமிழ்ச்செல்வனின் மரணத்திற்குப் பின்னர், ஊடகத் தொடர்பாளராக இருந்த இளந்திரையன் ஒரு அரச உளவாளி என்ற உண்மை, கிளிநொச்சி வீழ்ந்த பின்னர் தான் தெரிய வந்தது. அப்படியாயின், அரசாங்கம்  ஒரு வெகுஜன அமைப்பிற்குள் உளவாளிகளை அனுப்புவது மிகவும்  இலகுவான விடயம். அதற்காக, நாங்கள்  ஆதாரமின்றி யாரையும் கை காட்ட முடியாது. அதே நேரம், அப்படி நடக்காது  என்று மறுக்கவும் முடியாது.

உளவாளிகளை வெளியில் இருந்து அனுப்பத் தேவையில்லை. உள்ளிருப்பவர்களை விலைக்கு வாங்கலாம். பேச்சுவார்த்தைக் காலங்களில், புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. அப்பொழுது விடுவிக்கப் பட்டு, வன்னிக்கு அனுப்பப் பட்ட புலி உறுப்பினர்கள் பலர், அரச உளவாளிகளாக மாறியிருந்ததை யாரும் சந்தேகிக்கவில்லை. இது எல்லா நாட்டுப் போர்களிலும் நடக்க முடியும். எதிரிகளினால் சிறையில் அடைக்கப் பட்டவர்கள், அங்கு வைத்து மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பார்கள். அதனால் தான், ஸ்டாலின் காலத்தில், நாஜிகளின் சிறைகளில் இருந்து விடுவிக்கப் பட்ட முன்னாள் செம்படை வீரர்களை புதிய சிறைகளில் அடைத்து வைத்தனர். 

வைகோ சட்டவிரோதமாக இலங்கை சென்று, பிரபாகரனை சந்தித்து விட்டு திரும்பி வந்தவர். (இந்தியாவில் தடை செய்யப்பட்ட) புலிகளோடு தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலேயே, தடா சட்டத்தில் கைது செய்யப் பட்டவர். அப்படிப் பட்ட ஒருவர், "ஐந்தாம் கட்ட ஈழப் போர்" அறிவித்த பின்னரும், எந்தப் பிரச்சினையுமின்றி சுதந்திரமாக உலாவ முடிகின்றது. இந்த குறுகிய காலத்திற்குள், இந்திய அரசு திருந்தி விடவில்லை. மாவோயிஸ்ட், ஜிகாத் போராட்டங்களுடன் தொடர்பான நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களில் பலருக்கு மீள முடியாத சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. விடுதலை செய்யப் பட்டாலும் பழைய அரசியலை தொடர முடியாது. அந்தளவு தூரம் போகத் தேவையில்லை. இறுதிப்போரில் தப்பி, தமிழ்நாட்டில் அகதியாக அடைக்கலம் கோரிய புலிகளையும், அவர்களது உறவினர்களையும் தனிமைச் சிறையில் போட்டு வருத்துகின்றது.

வைகோ மட்டும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" அறிவித்து விட்டு தைரியமாக உலாவ முடிகின்றது.  பாஜக, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் போன்ற, இந்து மதவெறி பாசிச  சக்திகளுடன் வைகோ கை கோர்த்துள்ள விடயம், ஒன்றும் இரகசியமானதல்ல.  குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த, நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இதை எல்லாம், அவரே பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இந்துத்துவ வாதிகளுடன் கூட்டுச் சேர்வதென்றால், அவர்களது அகண்ட பாரதக் கனவுக்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்து பாசிஸ்டுகளின் அகண்ட இந்து பாரதம், "சீதையை சிறை வைத்திருந்த சிங்களவர்களின் சிறிலங்காவையும்" உள்ளடக்கியது.

வைகோ நடத்தப் போகும் ஈழப் போர், தமிழர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அவரது இந்துக் கூட்டாளிகளை நோக்கத்திற்கு முரணானது ? அண்மையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநில அரசு, யாத்திரீகர்களுக்கு சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடம், மற்றும் பல இராமாயண ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் பயணக் கட்டணத்தில் அரைவாசியை அரசு கொடுக்கிறது. ('Hindutva behind subsidy to visit Hindu temples', http://zeenews.india.com/news/madhya-pradesh/hindutva-behind-subsidy-to-visit-hindu-temples_768557.html) ஏற்கனவே, இந்து மதம் புத்தரையும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறுகின்றது.  ஆகவே, "இந்துக்கள்" என்ற ஒரே குடையின் கீழ் சிங்களவர்களையும்  இணைத்துக் கொள்வதில், இந்து பாசிஸ்டுகளுக்கு தடையேதும் கிடையாது. இந்து பேரினவாதிகளின் எதிர்காலத் திட்டங்கள் எமக்குத் தெரிந்தளவுக்கு, வைகோ, சீமானுக்குத் தெரியுமா? எல்லாம் தெரிந்து கொண்டு தான் ஒத்துழைகிறார்களா? 

இலங்கைக்கு, இந்திய சுற்றுலாப்பயணிகள் செல்வதை ஊக்குவிக்கும் பாஜக, சிங்கள யாத்திரீகள் இந்தியா வருவதையும் ஊக்குவித்திருக்காதா? மகிந்த ராஜபக்ச பயணம் செய்யவிருக்கும் சாஞ்சியும், மத்திய பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. வைகோ இது தொடர்பாக, பாஜக விடம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். உண்மை தான். ஆனால், அதையும் மீறி ராஜபக்ச வந்தால், வைகோ, பாஜக வுடனான உறவை துண்டித்துக் கொள்வாரா? வைகோவின் பாஜகவுடனான உறவு, வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஈழத் தமிழருக்கு கொடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளை, சிங்கள இராணுவம் சுற்றி வளைத்திருந்தது. தமிழ் மக்களின் போராட்டம், சர்வதேச மட்டத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக, இந்திய அரசு இறங்கி வந்தது. யுத்த நிறுத்தம் ஒன்றிற்காக, சிறிலங்கா அரசுடனும் புலிகளுடனும் பேசியது.

யுத்தத்தை முடித்து விட்டு சரணடைய புலிகள் தயாராக இருந்தனர். அந்த நேரத்தில், தமது நம்பிக்கைக்கு உரிய வைகோவை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அன்று வைகோ கூறிய பதில், புலிகளின் அழிவுக்கு தேதி குறித்தது. "சரணடையும் முடிவெதையும் இப்போது எடுக்க வேண்டாம். இதெல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தந்திரம். தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். அடுத்த நாளே நிலைமை தலைகீழாக மாறிவிடும். பாஜகவினர் புலிகளை மீட்டெடுப்பார்கள்."   நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹைம் தெரிவித்த தகவல்.
“Indian Home Minister Chidambaram contacts Prabhakaran and suggests the LTTE agrees to a pre-drafted statement that they will lay down their weapons,” the report says, but without giving citations the report continues, “The document leaks to Vaiko, a radical but marginal Eelamist politician in Tamil Nadu, who rejects it as a Congress trick and assures the LTTE that BJP will win the ongoing Indian elections and come to the Tigers’ rescue.”...  I observed the change in Indian intelligence - Erik Solheim, (http://www.norwaynews.com/en/~view.php?72U7b54XOb4826z285Klk844SP3889S976HDp353P4d8)
வைகோவின் இன்றைய ஈழ ஆதரவு வாய்ச் சவடால்கள் எல்லாம், கடந்த கால துரோகத்தை மறைப்பதற்காகவே முன்னெடுக்கப் படுகின்றது. இதனை அவரது தொண்டர்களும், ஈழ ஆதரவாளர்களும் புரிந்து கொள்ளாத வரையில், வைகோவின் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கும். 

புலிகள் அழிவதற்கு காரணமான நாடுகளில் இந்தியா முக்கியமானது. உண்மை தான். அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் பதவியில் இருந்த, காங்கிரஸ் கட்சியும், திமுக வும் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று, உண்மையை திரித்து திசை திருப்புகின்றனர். புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம், 2000 ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக் காலத்தில், காங்கிரசின் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தீவிர புலி ஆதரவுக் கட்சிகளான, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அந்த அரசாங்கத்தில் இருந்தன. இலங்கையில் நடக்கும் இனப்போருக்கு தீர்வு காணும் விடயத்தில், தான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.  

Jaswant Singh indicated to the all-party meeting on Monday that the Clinton administration had informed New Delhi that the US would support “whatever India does”. The Hindu newspaper quoted the US official sources as saying: “Washington takes India's views on Sri Lanka very seriously and would not want to do anything that might go against India's interests.” (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

2000 ம் ஆண்டளவில், விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலத்தில், யாழ் குடாநாடு முற்றுகையிடப் பட்டிருந்தது. போரில் தோல்வியடைந்து கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் அவசர உதவி கோரியது. யாழ் குடாநாடும், அங்கிருந்த நாற்பதாயிரம் படையினரும் புலிகளின் கையில் வீழ்ந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். வட மாகாணம் முழுவதும், புலிகள் உரிமை கோரிய தமிழீழப் பிரதேசமாக இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்கும். ஆனால், இந்திய மத்திய அரசு அதனை அனுமதிக்க தயாராக இருக்கவில்லை. கேரளாவில், குறிப்பாக திருவனந்தபுரத்தை நோக்கி இந்தியப் படைகள் நகர்த்தப் பட்டன. யாழ் குடா நாடு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தால், படையெடுப்பதற்கு தயாரான நிலையில் இந்திய இராணும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தது. புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவின் பேரில் தான், இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து, தமிழீழம் என்ற  தனிநாட்டின் சாத்தியம் குறித்து,  ஓர் உண்மை தெளிவாகின்றது. ஒருவேளை, புலிகள் தமது ஆயுத பலத்தினால், முழு தமிழீழ பிரதேசத்தையும் விடுதலை செய்திருந்தாலும், இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். சர்வதேச சமூகமும் அந்த படையெடுப்பை ஆதரித்திருக்கும். சில நேரம், அது ஐ.நா. தலைமையின் கீழும் நடந்திருக்கும். 

The BJP government has committed itself only to “humanitarian assistance”. But according to Indian Defence Minister Fernandes, the country's armed forces have been prepared to meet any eventuality. Media reports indicate that substantial supplies have been moved to the Trivandrum in the southern state of Kerala. The Indian Air Force's Southern Air Command has been put on the alert to provide aid to Jaffna. Air Force helicopters and heavy transport aircraft have also been moved south. Communication links have been established with hot-line facilities to the Indian High Commission in Colombo, military headquarters in New Delhi and the air command in Trivandrum. (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

அதே நேரம், டெல்லியில் அவசரமான கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வைகோ, ராமதாஸ் ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்கள் என்பதும், அவர்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தனர் என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது. அந்தக் கூட்டத்தில், இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய பற்றி கலந்துரையாடப் பட்டது. பல சமரசங்களுக்குப் பின்னர், அதாவது வைகோவினதும் ஒப்புதலோடு தான், இராணுவ உதவி தவிர்ந்த, அனைத்து வகை உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்வதென்ற முடிவு எடுக்கப் பட்டது.

Last Saturday Karunanidhi moderated his stance after a 90-minute meeting with Vajpayee. “Seri (OK),” he said to the national government's request to keep out of the conflict in Sri Lanka. “Our party will not tie the hands of the central government... It is the centre's prerogative to take any approach in the interest of the nation... we do not want to interfere with that”.....
The MDMK leader Kopalaswamy also toned down his position after a meeting with NDA leaders. “I am happy about the government sending humanitarian aid to Jaffna,” he said. Significantly he appeared to have gained some assurances that India would do nothing to assist the Sri Lankan military....
(New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

 ஒரு வேளை, தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், இராணுவ உதவி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பை, இந்தியாவின் எதிரி நாடுகளான, பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஒப்படைப்பதற்கு, அரை மனதுடன் சம்மதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஈழ ஆதரவுப் பேச்சுக்காக கைதான வைகோ, வேலூர் சிறையில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அப்போது, "புலிகளை அழிக்கும்  நோக்குடன்  இராணுவத்தை அனுப்பத் துடித்த" பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்த வைகோவை சந்தித்துப் பேசினார். (Opposition blasts govt over Fernandes, Vaiko meet, http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota)

இதுவரை குறிப்பிடப் பட்ட எதுவும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாக தன்னை அரச கைக் கூலிகளாக காட்டிக் கொள்ளும், வைகோ போன்றவர்களை, தமிழ் உணர்வாளர்கள் நம்ப முடியுமா? இந்திய தேசியக் கட்டமைப்புக்கு பல முகங்கள் உண்டு. சோனியா மாதிரி, கருணாநிதி மாதிரி, வைகோ மாதிரி, சீமான் மாதிரி, என்று பல வகையான முகங்கள். இந்த நால்வரும், இந்திய தேசியப் பிரம்மாவின் நான்கு முகங்கள். அந்த நான்கு முகங்களும் ஒன்று சேர்ந்து தான், ஈழத் தமிழரின் தலைவிதியை எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதை, நாம் இன்றைக்கும் புரிந்து கொள்ளவில்லை. 

(இன்னும் வரும்)