Showing posts with label திராவிடர்கள். Show all posts
Showing posts with label திராவிடர்கள். Show all posts

Saturday, July 10, 2021

இலங்கை பாடநூலில் திராவிடர் என்ற சொல்

 


இலங்கையில் ஆண்டு பத்திற்கான (Grade 10) வரலாறு பாட நூலில் திராவிடம் என்ற சொல்: "இலங்கை பாடநூல்களில் திராவிடர் என்ற சொல் எங்கேயும் எழுதியிருக்கவில்லை..." என்று சில ஈழத்தமிழ் "சீமானிஸ்டுகள்" என்னுடன் கிளப் ஹவுசில் வாதிட்டனர். 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கையில் வாழும் "பல்கலைக்கழக பட்டதாரிகளும்" தாம் படித்த பாடநூல் எதிலும் திராவிடம் என்ற சொல் இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள். அவர்களுக்கு இந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கிறேன். 

 இந்தக் குழுவினர் திராவிடர் என்ற சொல்லை வெறுப்பதற்கான காரணங்கள்: 
  • 1) தமிழகத்து சீமானால் பரப்பப்பட்ட திராவிட எதிர்ப்பு அரசியலின் தாக்கம். சீமானை ஆதரிக்கவில்லை என்று சொல்லும் ஈழத்தமிழர்கள் கூட சீமானிச கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். 
  •  2) இவர்கள் தமது மனதில் உள்ள சாதிவெறியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். "ஈழத்தில் சாதிப்பிரச்சினை இல்லை" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பவர்கள். 
  •  3) சாதிவெறிக்கும், பெரியார் எதிர்ப்புக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. பெரியாரின் திராவிட இயக்கத்தை ஒரு சமூகநீதி இயக்கமாக பார்க்கிறார்கள். ஈழத்திலும் சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகளை கட்டிக் காக்க விரும்புகிறார்கள். தமது மேலாதிக்க கட்டுமானத்தை திராவிடக் கருத்தியல் தகர்த்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.

Sunday, October 06, 2019

ஏன் "திராவிட மொழிகள்" என்று சொல்ல வேண்டும்?


அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.

ஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை! அவர்களது மொழியில் "டொய்ச்" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் "டொய்ச் லாந்து" (Deutschland).

ஆகவே "ஜெர்மனிய மொழிகள்" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

இருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே "பிரஷிய டொய்ச்" (Preußisch), மேற்கே "நீடர் (தாழ்ந்த) டொய்ச்" (Niederdeutsch), தெற்கே "ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் "நெடர்லான்ட்ஸ்" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் "ஆபிரிக்கான்ஸ்" (Afrikaans) மொழி.

இன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.

தமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.

பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.

அதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.

வரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.

Friday, February 07, 2014

சிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்


  • "அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகங்கள் வர்க்கங்களாகப் பிளவுறுதலுடன் இது அவசியமாகப் பிணைக்கப் பட்டிருந்தது. இப் பிளவின் காரணமாக அரசு அவசியமாயிற்று."    

  • - எங்கெல்ஸ் (குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், ப. 282)
​​​​​​​​​​​​​​​​​​​​​ ______________________________________
                 

இந்திய உப கண்டத்தில் தோன்றிய முதலாவது நாகரிகமான, சிந்துவெளி நாகரிகம், இன்றைக்கும் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் படாத மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1902 ம் ஆண்டு), இன்றைய பாகிஸ்தானில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

பிரிட்டிஷ் காலனிய அரசு, அது வரையும், இந்தியர்களின் புராதன நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு தொடங்குவதற்குள், பெரும் பகுதி பிரிட்டிஷ் இராணுவத்தின் ரயில் பாதை செப்பனிடும் வேலைக்காக அழிக்கப் பட்டது. மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக தாக்குப் பிடித்த, புராதன நகர இடிபாடுகளில் இருந்த செங்கல்களை பெயர்த்தெடுத்து கொண்டு சென்று விட்டார்கள்.

இன்றும் கூட, சிந்துவெளி நாகரிகம் பற்றி, பத்து சதவீதம் மட்டுமே அறிந்து வைத்திருப்பதாக, தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு தடவையும், புதிது புதிதாக அறிந்து கொள்ளும் பொழுது, பழைய கருதுகோள்கள் பொய்யாகிப் போகின்றன. ஐரோப்பியர்கள், தமது நாகரிகத்தின் தோற்றுவாயாக கிரேக்கத்தை கருதுகின்றனர். அதே போன்று, இந்தியர்கள் சிந்து சமவெளியை தமது நாகரிகம் தோன்றிய இடமாகக் கருதுவதில் தவறில்லை. ஆனால், ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப் பட்ட சில இலச்சினைகளை மட்டும் வைத்துக் கொண்டு, பல தவறான முடிவுகளுக்கு வருகின்றனர்.

உண்மை என்னவென்றால், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் பின்பற்றிய மதம், பேசிய மொழி குறித்து, இன்று வரையில் யாருக்கும் எதுவும் தெரியாது. சுமேரியர்கள், பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் என்று பண்டைய நாகரிங்களை சேர்ந்த மக்கள் எழுதிய மொழிகளை எல்லாம் படித்து அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால், சிந்துவெளி எழுத்துக்களின் வரி வடிவங்களை மட்டும் இன்னமும் யாராலும் படிக்க முடியவில்லை. சிந்துவெளி மக்களின் மொழி, அரபி மொழி போன்று, வலமிருந்து இடமாக எழுதப் பட்டது என்று மட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தியானம் செய்யும் நிலையில் உள்ள மனிதனின் உருவம் ஒன்றும், காளை ஒன்றின் உருவமும் பொறித்த  இலச்சினைகள், பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன. அதை மட்டுமே வைத்துக் கொண்டு, அது பசுபதி (ஆநிரைகளின் தலைவன்)  தெய்வம் என்றும், அது சிவனின் மறுபெயர் என்பதால், சிந்துவெளி மக்கள் சைவ சமயத்தவர் என்று சிலர் நினைக்கின்றனர். தமிழர்கள் மட்டுமே சைவர்கள் என்று நம்பும் சிலர், சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்றும் நிறுவ முனைகின்றனர். யானை பார்த்த குருடர்களின் கதை போன்று, அவையெல்லாம் வெறும் அனுமானங்கள் மட்டுமே. 

பசுபதி என்ற தெய்வம், சிவனைக் குறிக்குமா என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விடயம் தான். எருது மாட்டை, அல்லது பசுபதி போன்ற ஆநிரைகளின் தலைவனை தெய்வமாக வழிபடும் மதம், வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் இருந்துள்ளது. பாஹ்ரைன், ஈராக்கில் எருதுக்கு கோயில்கள் இருந்தன. (பார்க்க: சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?)

சுமேரியர்கள் அல்லது பாபிலோனியர்களின் நிம்ரூத் என்ற தெய்வம், சிவன் பற்றிய வர்ணனைகளுடன் ஒத்துப் போகின்றது. ஆகவே, பல நாடுகளில், பல பெயர்களில் அழைக்கப் பட்ட ஒரே மாதிரியான தெய்வத்தின் வழிபாடு, சிந்துவெளியிலும் இருந்திருந்தால், அதில் வியப்பில்லை. ஆனால், அது சிவன் தான், என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் கண்டெடுத்த, காளை மாடு, தியானம் செய்யும் பசுபதி இலச்சினைகள் மட்டும் தான் நமக்குத் தெரியும். (பல தமிழ் நூல்களில், திரும்பத் திரும்ப அதை மட்டும் தான் எழுதுகிறார்கள்.) அவற்றை விட வேறு பல இலச்சினைகளில், வேறு மிருகங்களின் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. யானை, புலி என்று ஈர நிலக் காடுகளில் வாழும் மிருகங்களின் படங்களும் உள்ளன. சிங்கம் போன்ற வெப்ப வலையக் காடுகளில் உறையும் மிருகங்களை, சிந்துவெளி மக்கள் அறிந்திருக்கவில்லை.

வர்த்தகம் தொடர்பான பத்திரங்களில்  "சீல்"  வைக்க 
பயன்படுத்தப் பட்ட யானை இலச்சினை. 

எருது மாடு, யானை ஆகிய மிருகங்களின் படங்கள் பொறித்த இலச்சினைகளின் மேலே, அவர்களது மொழியில் ஏதோ எழுதப் பட்டுள்ளது. அது என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த இலச்சினைகளின் வடிவமைப்பைப் பார்க்கும் பொழுது, அவை வழிபாட்டுக்கு பயன்பட்ட தெய்வச் சிற்பங்களாக தெரியவில்லை. மாறாக, அரச இலச்சினைகளாக, பத்திரங்களில் சீல் வைக்க பயன்படுத்தப் பட்டுள்ளதாக தெரிகின்றது. அதாவது, வர்த்தக ஒப்பந்தங்கள், அனுமதிப் பத்திரங்களை செல்லுபடியாக்குவதற்காக பயன்பட்டுள்ளது. அன்றைய காலத்தில், சிந்துவெளி மக்கள் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது, செல்வச் செழிப்புக்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், தம்மைத் தாமே எப்படி அழைத்துக் கொண்டார்கள், தமது நாட்டுக்கு என்ன பெயர் வைத்திருந்தார்கள், என்பது யாருக்கும் தெரியாது. பாகிஸ்தானில் அரப்பா என்ற கிராமத்தின் அருகில் இருந்ததால், “ஹரப்பா நாகரிகம்” என்றும், சிந்தி மொழியில் இறந்தவர்கள் நகரம் என்ற அர்த்தத்தில், “மொஹஞ்சதாரோ” என்றும் அழைக்கப் படுகின்றது. சிந்து, இந்து இரண்டும் அந்தப் பிரதேசத்தில் ஓடும் நதியின் வெவ்வேறு பெயர்கள். அதனால், சிந்துவெளி நாகரிகம் என்றாலும், இந்து நாகரிகம் என்றாலும், இரண்டும் ஒன்று தான்.

அதிர்ஷ்டவசமாக, சுமேரியர்களின் வரலாற்றுக் குறிப்புகளில், சிந்து வெளி மக்கள் பற்றிய குறிப்பு ஒன்று வருகின்றது. சிந்து வெளி வணிகர்கள், இன்றைய ஈராக்கில் இருந்த சுமேரியா வரையில் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். “மிலேக்கா” நாட்டு வணிகர், மொழிபெயர்ப்பாளர் பற்றிய சுமேரியர்களின் குறிப்புகள், சிந்துவெளிக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அப்படியானால், சிந்துவெளியில் இருந்த நாட்டிற்கு, மிலேக்கா அல்லது அது மாதிரியான பெயர் இருந்திருக்க வேண்டும். 

இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், ஆரியர்களின் ரிக் வேதம், “மிலேச்சர்கள்” என்று ஒரு இன மக்களை பெயர் சொல்லி அழைக்கின்றது. பிற்காலத்தில் ஒரு சாதியாக மாறி விட்ட மிலேச்சர்கள், வேத காலத்தில் ஆரிய தேசத்திற்கு வெளியே இருந்த அந்நியர்களைக் குறித்தது. இது, கிரேக்கர்கள் தமது தேசத்திற்கு வெளியே இருந்த அந்நிய இனங்களை, “பார்பாரியர்கள்” (Barbarian) என்று அழைத்ததைப் போன்றது.

மேற்குறிப்பிட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. (திராவிடர்கள் எந்த மொழியை பேசுவோராகவும் இருக்கலாம். தமிழர்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.) சிந்து வெளியில் வாழ்ந்த திராவிட இன மக்கள், அன்று உலகிற் சிறந்த நாகரிக வளர்ச்சி கண்டிருந்தார்கள். அவர்களது காலத்தில், சுமேரியா, எகிப்தில் நாகரிக சமுதாயங்கள் தோன்றி இருந்தன. ஆனால், அவர்களால் கூட, சிந்து வெளி மக்களின் நாகரிக வளர்ச்சியை எட்ட முடியவில்லை.

பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்றைய சிந்து வெளி நாகரிகம், இன்றைய பாகிஸ்தானில் மட்டும் இருக்கவில்லை. ஈரானின் கிழக்கு எல்லைப் பகுதி, ஆப்கானிஸ்தானின் மலைகள், குஜராத், டெல்லி வரையில், சிந்துவெளி நாகரிகம் பரவி இருந்துள்ளது. அங்கெல்லாம் நடந்த அகழ்வாராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. அநேகமாக, மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் நகரங்கள் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியாவில், குஜராத்தில் டொலாவிரா (Dholavira) எனுமிடத்திலும், அதே மாதிரியான ஒரு பெரிய நகரத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

 தண்ணீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட பிரமாண்டமான தொட்டி. (Dholavira , குஜராத்)
ஹரப்பா, மொஹஞ்சதாரோவை விட, டொலாவிராவில் பல கட்டுமானங்கள் அழியாமல் அப்படியே உள்ளன. உதாரணத்திற்கு, நீரைத் தேக்கி வைக்கப் பயன்பட்ட பிரமாண்டமான தொட்டியை கூறலாம். அது ஒரு நவீன நீர்த் தேக்கம் போன்று கட்டப் பட்டுள்ளது. தொட்டியை பராமரிப்பதற்காக கட்டப்பட்ட படிகள் கீழ் நோக்கிச் செல்கின்றன. இது போன்று, நீரைத் தேக்கி வைப்பதற்காக, சிறிதும் பெரிதுமாக, பத்து, பதினைந்து தண்ணீர்த் தொட்டிகள் உள்ளன. ஹரப்பா, மொஹஞ்சதாரோவிலும் ஒரே மாதிரியான தண்ணீர்த் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன. மேலும், அது இன்றைய கோயில் தீர்த்தக் கேணி மாதிரி, பொது மக்கள் நீராடுவதற்கும் பயன்பட்டிருக்கலாம்.

சிந்துவெளி நாகரிக கால பொறியியலாளர்களின் நீர் முகாமைத்துவம், நவீன விஞ்ஞான யுகத்திற்கு ஏற்றது போல அமைந்துள்ளமை வியக்க வைக்கின்றது. சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள், உடற்தூய்மை பேணுவதில் அதிக அக்கறை காட்டி வந்துள்ளனர். செங்கற்களால் கட்டப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும், ஒரு குளியலறை இருந்துள்ளது. குளியறையில் இருந்து வடிந்து செல்லும் நீர், தெருவோர சாக்கடையில் போய்ச் சேருமாறு கட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவிலும், கழிவு நீரை எடுத்துச் செல்லும் சாக்கடைகள் கட்டப் பட்டிருந்தன. ஐரோப்பிய நகரங்களில் கூட, 17 ம், 18 ம் நூற்றாண்டில் தான், சாக்கடை வசதி கொண்டு வரப் பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், பாக்தாத் நகரில் சாக்கடை வசதி இருந்தது. ஆனால், சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள், ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இடது : ஆழமான கிணறு. வலது : நவீன மலசல கூடம். 

சிந்துவெளி நாகரிக காலத்தில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனியான மலசல கூடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. நவீன காலத்தில் கட்டபடும் கழிப்பறை போன்று, சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டுள்ளது. குடி நீருக்காக, பல கிணறுகள் தோண்டப் பட்டுள்ளன. சில கிணறுகள் 55 அடி ஆழத்தில் கூட தோண்டி இருக்கிறார்கள். இவற்றை விட, முழுக்க முழுக்க சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், தெருக்கள் என்பன, ஒரு நவீன கால நகரம் போன்ற தோற்றத்தை தருகின்றன.

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே, உன்னத நாகரிக வளர்ச்சி கண்ட மக்கள், தமக்கென்று பொதுவான மதம், அல்லது அரசு என்று எதையும் கொண்டிருக்கவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது! அரச மதம் என்ற ஒன்று இருந்ததற்கான சான்று எதுவும் கிடையாது. கோயில்கள் அல்லது வழிபாட்டு ஸ்தலங்கள் இருந்ததற்கான எந்தத் தடயமும் கிடையாது. பண்டைய நாகரிகங்களில் இருந்ததைப் போன்ற, தெய்வச் சிலைகள், சிற்பங்கள் எதுவும் கண்டெடுக்கப் படவில்லை. சிந்துவெளி மக்கள் சிவனை அல்லது சக்தியை வழிபட்டிருக்கலாம். ஆனால், அது நகரில் வாழ்ந்த குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட மத நம்பிக்கை போன்று தெரிகின்றது.

மொஹஞ்சதாரோ நகரமும்,
அதன் அருகில் உள்ள குன்றின் மேல் கட்டப் பட்ட
புத்த ஸ்தூபி அல்லது பிரமிட்டும்.
பொதுவாக, சிந்து வெளி நாகரிகம் மதச் சார்பற்றதாக இருந்துள்ளது. ஆட்சியாளர்கள் மதம் குறித்து அக்கறைப் படவில்லை போலத் தெரிகின்றது. மொஹஞ்சதாரோவில், ஒரு குன்றின் மேல் புத்த ஸ்தூபி போன்ற தோற்றத்துடன் இடிந்த கட்டிடம் ஒன்று இருக்கிறது. சில அகழ்வாராய்ச்சியாளர்கள், அதை வைத்துக் கொண்டு, சிந்துவெளி நாகரிகத்தில் பௌத்த மதம் இருந்திருக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், சமீபத்திய ஆய்வுகள், அந்த இடிபாடு ஒரு புத்த ஸ்தூபி அல்ல என்று கூறுகின்றன. அனேகமாக, அது ஒரு பிரமிட் அல்லது அது போன்ற ஏதாவது கட்டிடமாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, நாகரிகத்தில் சிறந்து விளங்கிய சிந்து வெளியில் வாழ்ந்த மக்களை ஆள்வதற்கு ஓர் அரசு இருக்கவில்லை! என்னது! அரசு இருக்கவில்லையா? அது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். இன்றைக்கு நாங்கள் அதி உன்னத நாகரிகமடைந்த உலகில் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மெத்தப் படித்த அறிவுஜீவிகள் கூட, அரசு இல்லாத தேசத்தை கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அரசு என்பது மக்களை ஒடுக்குவதற்கான கருவி என்பது பலருக்கு தெரிவதில்லை. 


  • "அரசைப் பற்றிய  முட்டாள்தனமான நம்பிக்கை, தத்துவஞானத்தில் இருந்து, முதலாளி வர்க்கத்தினருடைய உணர்வில், பல தொழிலாளர்களின் உணர்வில் கூடக் கலந்து விட்டது." 
  • "யதார்த்தத்தில் அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குகின்ற இயந்திரம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இது முடியாட்சியைப் போன்று ஜனநாயகக் குடியரசுக்கும் உண்மையானதே." 
             - கார்ல் மார்க்ஸ் (மார்க்ஸ், எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்)

சிந்துவெளி நாகரிகத்தில், அரசு என்ற கட்டமைப்பு இருந்ததற்கான எந்த தடயமும் கிடையாது. அரண்மனை, அல்லது மாளிகை ஏதாவது கண்டுபிடிக்கப் பட்டால், அங்கே மன்னராட்சி நிலவியதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அங்கே ஒரு மன்னனின் ஆட்சி, அல்லது அரச வம்சம் இருந்ததற்கான எந்தச் சான்றும் கிடையாது. நகரம் முழுவதும் ஒரே மாதிரியான வீடுகள் கட்டப் பட்டிருந்தாலும், இடையிடையே பல பெரிய வீடுகளும் காணப் படுகின்றன. ஆனால், அவை செல்வச் செழிப்பை காட்டுவதற்காக கட்டப் பட்டதாக தெரியவில்லை. 


  • "அரசு என்பது உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனம். உடைமையற்ற வர்க்கத்திடமிருந்து அந்த வர்க்கத்தை பாதுகாப்பதற்கே அது இருக்கிறது."  

         - எங்கெல்ஸ் (குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்)

அனேகமாக, சிந்துவெளியில் ஒவ்வொரு நகரமும் சுதந்திரமான நாடு போன்று செயற்பட்டு வந்துள்ளது. பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் சனத்தொகை கொண்ட நகரங்களை, மக்கள் பிரதிநிதிகளின் குழு ஒன்று ஆட்சி செய்திருக்க வேண்டும். அவர்கள் வணிகர்களாக, அல்லது கைவினைஞர்களாக இருந்திருக்கலாம். அப்படியான ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், தமக்கென பெரிய வீடுகளை கட்டி இருக்கலாம்.

சிந்து வெளி நாகரிகம் பற்றி, நாம் மென்மேலும் அறியும் பொழுது, அது நவீன கால பொதுவுடைமை சித்தாந்தத்துடன் ஒத்துப் போவது துலக்கமாக தெரிகின்றது. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, பகுனின், புருடொன் போன்ற அனார்க்கிச சிந்தனையாளர்களும், ஆதி காலத்தில் பொதுவுடைமை சமுதாயம் இருந்ததை வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு பொதுவுடைமை சமுதாயத்தில் அரசு இருக்காது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டிருக்கும். குடிமக்களுக்கு இடையில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்காது. நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்காது.

நவீன காலத்தில் மட்டுமல்ல, பண்டைய நாகரிகங்களிலும் ஒரு சிலரிடம் மட்டுமே செல்வம் குவிந்திருந்தது. அவர்களுக்கு மட்டுமே, தங்கத்தால் செய்த அணிகலங்களும், ஆடம்பர நுகர்வுப் பொருட்களும் கிடைத்து வந்தன. ஆனால், சிந்து சமவெளியில் அவ்வாறு, ஆடம்பர வாழ்வை அனுபவித்த செல்வந்தர்கள் இருந்ததாக தெரியவில்லை. அனேகமாக எல்லா வகையான பொருட்களும், அனைவருக்கும் கிடைத்து வந்துள்ளன. பெரிய நகரங்களில் கிடைத்த தரமான பாவனைப் பொருட்கள், தொலை தூரத்தில் இருந்த சிறிய நகரங்களிலும் கிடைத்து வந்தன. சிந்து வெளியில் இலட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், எல்லோருக்கும் வீட்டு வசதி கிடைத்திருந்தது. முன்னாள் சோஷலிச நாடுகளைப் போன்று, அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியிருப்புகள் கட்டப் பட்டிருந்தன.

சிந்துவெளி நாகரிகம், அனைத்து குடிமக்களும் சமத்துவமாக நடத்தப் பட்ட, சமதர்ம சமுதாயமாக இருந்தது. அது ஒரு ஆதிப் பொதுவுடைமை சமுதாயம். அங்கே ஒரு அரசு இருக்கவில்லை. அரச மதம் என்று எதுவும் இருக்கவில்லை.  கோயில்கள் இருக்கவில்லை. அரசன் என்று யாரும் இருக்கவில்லை. அரச வம்சம் என்ற ஆண்ட பரம்பரை எதுவும் இருக்கவில்லை. ஆனால், குடி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கான நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. இராணுவம், ஆயுதங்கள் கூட, தற்பாதுகாப்புக்காக மட்டுமே இருந்துள்ளன. சிந்துவெளி மக்கள் அமைதியான வாழ்க்கையை விரும்பினார்கள். அவர்கள் அயலில் உள்ள எந்த நாட்டின் மீதும் படையெடுத்து சென்று, அங்கிருந்த மக்களை அடிமைப் படுத்தவில்லை. உலகில் இது போன்று, ஆயிரம் வருட கால சமாதானம் நிலவிய, வேறெந்த நாகரிகமாவது இருந்திருக்குமா என்பது சந்தேகமே. 


  • "கம்யூனிஸ்ட் சமூகத்தில் தனிநபர்களுடைய நலன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதில்லை. அதற்கு மாறாக அவை இணைந்திருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் போட்டி என்பது அகற்றப் பட்டு விடுகின்றது. இன்றுள்ள பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்கங்கள் நீடிப்பதும் அங்கே இருக்காது.....  
  • இன்றைய சமூகம் தனிப்பட்ட மனிதருக்கும் மற்ற ஒவ்வொருவருக்கும் இடையே பகைமையை ஏற்படுத்துவதால், எல்லோருக்கும் எதிராக எல்லோரும் என்ற சமூக யுத்தத்தை உற்பத்தி செய்கின்றது.... 
  • குற்றங்கள், நேரடியான பலாத்கார நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து சமூகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, மிக விரிவான, மிகவும் சிக்கலான நிர்வாக அமைப்பும் தேவைப் படுகின்றன. இந்த அமைப்புகளுக்கு அதிகமான எண்ணிக்கையுள்ள உழைக்கும் அணி தேவைப் படுகின்றது. 
  • கம்யூனிஸ்ட் சமூகத்தில் இந்த நிர்வாக அமைப்பு சமூகத்தின் தனிப்பட்ட அம்சங்களை ஒழுங்குபடுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், அதன் எல்லா நடவடிக்கைகளையும், அதன் எல்லா அம்சங்களிலும் நிர்வகிப்பதால், இந்தக் காரணத்திற்காகவே நிர்வாக அமைப்பு எளிமையாக்கப் பட்டு விடும். தனிப்பட்ட மனிதனுக்கும், மற்றவர்களுக்கும் இடையியே ஏற்படும் முரண்பாடுகளை நாம் அகற்றி விடுகிறோம். சமூகயுத்ததிற்கு பதிலாக சமூக அமைதியை நாம் ஏற்படுத்துகிறோம். குற்றத்தின் மூலவேரை நாம் வெட்டி விடுகிறோம். இவற்றின் மூலமாக நிர்வாக, நீதி இயல் அமைப்புகளின் பெரும் பகுதியை மிகையானதாகச் செய்து விடுகிறோம்."    
          - எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் சமூகம், பக்கம் 11, 15-16) 

பொதுவுடைமை என்ற சொல்லைக் கேட்டாலே வெறுப்பவர்கள், அல்லது பொதுவுடைமை சித்தாந்தம் ஒரு மேலைத்தேய இறக்குமதி என்று நினைப்பவர்கள்,  சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிந்து கொள்வது நன்று. சிந்துவெளி நாகரிகம் தமிழர்களுக்கு உரியது என்று உரிமை கோர விரும்புவோர், ஆதித் தமிழர்கள் பொதுவுடைமைவாதிகளாக இருந்தார்கள் என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உசாத்துணை :
1. Archaeology, January - February 2013
2. The Indus Civilization: A Contemporary Perspective, by Gregory L. Possehl
3. குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
4. இந்து நாகரிகம், கலாநிதி க. சொக்கலிங்கம் 
5. விக்கிபீடியா: சிந்துவெளி நாகரிகம்


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, March 04, 2013

ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள் - ஓர் ஆய்வு

அசோக சக்கரவர்த்தியின்  கண்டஹார் 
கல்வெட்டு (கி.மு. 250  )

ஆப்கானிஸ்தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் : கண்டஹார்! ஆமாம், ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹார் நகரம் தான். இறுதியாக, கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது. 

ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரஜைகளின் நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன.  இதிலே நாம் கவனிக்க வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராஜ்யத்தில், அந்தந்த மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன. ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டஹார் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது. 

அப்படியானால் அராமி மொழி? ஹீபுரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு கிறிஸ்து பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக இருந்தது. பாலஸ்தீனம் முதல், பாகிஸ்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிஸ்தானில், பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும், ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.

"அந்த மக்கள் இடுப்பில் ஒரு துண்டு  மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப் பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில் மாட்டி இருப்பார்கள்..."  என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang  ஆப்கானிஸ்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது. ஆப்கானிஸ்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.

இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிஸ்தானில் யாரும், கிரேக்க அல்லது அராமிய மொழி பேசுவதில்லை.  (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.) பெரும்பான்மை இன மக்கள் பேசும் பஷ்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின் இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. பஷ்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான். அப்படியானால், பஷ்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!

ஆப்கானிஸ்தான் தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா".  அதன் அர்த்தம், "ஆரியர்கள்" என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு, பண்டைய ஆப்கானிஸ்தான் தான். மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டஹார் நகரின் பழைய பெயர், காந்தாரம்! 

கண்டஹார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால்  ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும்.  இன்று பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது. காந்தர்வ மக்கள், இன்றைய பஷ்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிஸ்தானில் தான் தோன்றியது. 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் இனக்கலப்பு நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு  மண உறவுகளின் விளைவாக  உருவான புதிய இனம். இரண்டாவது, தாய்மொழியை மறந்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது. 

தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பஷ்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஒரு பஷ்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பஷ்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப் பட மாட்டான். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பஷ்டூன் இனத்தை சேர்ந்த ஷா மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது.  அதன் பிறகு தான், ஆப்கானிஸ்தான் தலைநகரம், கண்டஹாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது. 

ஆப்கானிஸ்தானில் இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராஹுய்" (Brahui)  என்ற, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். அவர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பல இடங்களில் சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில் பிராஹுய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன. பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராஹுய் மக்கள் இன்று இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இஸ்லாம் என்பது, 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில்  தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை விட, "பாஷை" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாஷை மக்கள் தம்மை பஷ்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள். பாஷை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.) 

வடக்கு ஆப்கானிஸ்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிஸ்தான் எல்லையோரம், "நூரிஸ்தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிஸ்தானி" மொழி பேசுகின்றனர். பார்சி, பஷ்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன் சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை இனத்தவர்  போன்று தோற்றமளிக்கின்றனர்.  அந்த மக்களுக்கு, நூரிஸ்தானி என்ற பெயர் வரக் காரணம் ஒரு தனிக்கதை. 

19 ம் நூற்றாண்டு வரையில், நூரிஸ்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். ரஷ்ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.) வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர். 19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்ஸ்தான்" என்ற பெயரில் அழைக்கப் பட்டது.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிஸ்தான் என்று மாற்றப் பட்டது. 

ஒரு காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்"  (Elam)  என்ற, திராவிடர்களின் ராஜ்யத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டன. அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது.  உண்மையில், ஆரியர், திராவிடர் என்று, மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது. 

"ஆரியர்கள் என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற, கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது. "ஆரிய கலாச்சாரம், திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.  சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை பின்பற்றி வந்தனர். 

தெற்காசியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.  "யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக் கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம். ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான், அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு  முன்னர், ஹீபுரூ  மக்கள் யூத மதத்தை பின்பற்றவில்லை. ஆனால், யூதர்களின் புனித மொழியான ஹீபுருவுக்கு நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற (ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக உருவெடுத்திருந்தது. 

ஒரு காலத்தில், பாகிஸ்தானில் இருந்து பாலஸ்தீனம் வரையில், அராமி  மொழி பேசப் பட்டு வந்தது.  அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை. ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர். ஹீபுரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, ஹீபுரு மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில், ஆப்கானிஸ்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள். 

1836 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை ஆண்ட மன்னர் தோஸ்த் மொஹமட் கான், இஸ்லாமிய மதத்தை அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை செய்யப் பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள் வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலஸ்தீனா செல்லவில்லை. அருகில் இருந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இஸ்ரேல் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி விட்டார்கள். 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை. மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹீபுருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான  சொற்கள், தமிழிலும், ஹீபுருவிலும் காணப் படுகின்றன. 

மேலதிக விபரங்களுக்கு, நான் எழுதிய "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!" கட்டுரைத் தொடரை வாசிக்கவும். 


உசாத்துணை:
1.An inscription of Asoka discovered in Afghanistan, http://www.jstor.org/discover/10.2307/29753969?uid=3738736&uid=2&uid=4&sid=21101901312507 
2.The Nuristani people, http://en.wikipedia.org/wiki/Nuristani_people
3.The Pashayi people, http://en.wikipedia.org/wiki/Pashai_people
4.Aramaic language, http://en.wikipedia.org/wiki/Aramaic_languages
5.Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang
6.Lost Cities of China, Central Asia & India, by David Hatcher Childress