Showing posts with label முதலாளிகள். Show all posts
Showing posts with label முதலாளிகள். Show all posts

Thursday, April 21, 2022

சிங்கள ராஜபக்சேக்களும் தமிழ் முதலாளிகளும்- திருடர்களின் கூட்டணி

 
ராஜபக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு இரண்டு தமிழ் கோடீஸ்வர தொழிலதிபர்கள் உதவி இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன். மற்றவர் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை கணநாதன்.

இறுதிப்போர் முடிவில், தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் வைத்திருந்த ஏராளமான நகைகள், மில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள், மற்றும் பல்லாயிரம் டாலர்கள் அனைத்தையும் அரசுடமையாக்காமல் ராஜபக்சே குடும்பத்தினரே சொந்தமாக்கிக் கொண்டார்கள். இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராஜபக்சேவிடம் ஒப்படைத்த பைலட் பின்னர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளார். 
 
அத்துடன் மகிந்த ராஜபக்சேயின் பதவிக்காலத்தில் லஞ்சமாகவும், வேறு முறைகேடான வழிகளிலும் பெற்றுக் கொண்ட பணம் ஏராளம் இருக்கும். இந்தப் பணம் யாவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. அங்கு பல அசையும், அசையா சொத்துக்களில் முதலிட்டுள்ளனர். போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இதற்கு நிருபமாவும் அவர் கணவர் திருக்குமரனும் உதவி இருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய உறவினரான நிருபமா, யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தமது அரசாங்க பொறுப்புகளை துஸ்பிரயோகம் செய்து தான், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.  
 
திருக்குமரன், நிருபமா தம்பதியினர் லண்டன் நகர மத்தியில் ஆடம்பர வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் ரியல் எஸ்டேட்டில் முதலிட்டு உள்ளனர். இவற்றின் பெறுமதி பல மில்லியன் டாலர்கள். அதை விட பல மில்லியன் டாலர்கள் பணமாக துபாய், சீஷெல்ஸ், மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப் பட்டுள்ளன.
 
உலகில் எந்த முதலாளிக்கும் தேசப்பற்று, இனப்பற்று அறவே கிடையாது. இலங்கையில் ஒரு பிரதி அமைச்சராக பதவி வகித்தவரே தனது தனது நாட்டு மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று பணக்கார நாடுகளில் முதலிட்டிருக்கிறார். குறைந்த பட்சம் அவற்றை தாய்நாட்டில் முதலிட்டிருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 
நிருபமாவின் கணவர் திருக்குமரன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இவர் தனது வணிகத் தொடர்புகளை பயன்படுத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கி மேற்கத்திய பணக்கார நாடுகளில் முதலிட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையில் ஒரு தனி மனிதனின் சராசரி வருட வருமானம் நாலாயிரம் டாலர்கள்.

திருக்குமரன் நடேசன் ஆரம்பத்தில் இருந்தே "அரசியலில் ஈடுபடாத" வணிகத்தை மட்டுமே கவனித்து வந்த தொழிலதிபராக தன்னைக் காட்டி வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல இந்துக் கோயில்களுக்கு வாரி வழங்கி தன்னை ஒரு கொடை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஈழப்போர் தீவிரமடைந்த தொண்ணூறுகளில் தான் இவரது வணிகமும் கொடிகட்டிப் பறந்துள்ளது. 
 
திருக்குமரன் நடேசன், இலங்கையில் முதலிடுவோருக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லி Pacific Commodities Ltd என்ற பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். Pacific Commodities Ltd, வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் மற்றும் ஜெர்சி தீவுகளில் பதிவுசெய்யப் பட்டது. அதனால் எவ்வளவு பணம் இலங்கையை விட்டு வெளியே சென்றுள்ளது என்ற விபரம் தெரிய வராது.

அத்துடன் நடேசன் அப்போதே கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹில்டன் ஹோட்டலின் உரிமையாளராகி விட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹோட்டல் நிர்வாகக் குழுவின் (board of directors, Hotel Developers Ltd) தலைவராக இருந்து வருகிறார். இவரது மாதச் சம்பளம் அப்போதே நான்கு இலட்சம் (Rs 400,000) இலங்கை ரூபாய்கள். அவரது மனைவி நிருபமா அப்போது அரசியலில் ஈடுபடவில்லை.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள யு.என்.பி. ஆட்சியில் இருந்தது. ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் இலங்கையில் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பதை அவர்களும் தடுக்கவில்லை. அதுவும் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு தமிழ் தொழிலதிபரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
 
இலங்கையில் அப்போதும் இப்போதும் இன உணர்வை விட பண உணர்வே பிரதானமானது. இனப்பற்று, தேசப் பற்று எல்லாம் அப்பாவி உழைக்கும் வர்க்க மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை ஜாலங்கள். ராஜபக்சே குடும்பத்தினர் பூர்வீகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு நிலவுடைமைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கிலான வயல் காணிகளும், தென்னந் தோப்புகளும் இவர்களுக்கு சொந்தமாக இருந்துள்ளன. 

*****

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணச் செலவை பொறுப்பெடுத்து, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்தவர் கணநாதன் என்ற ஒரு தமிழ் தொழிலதிபர். மகிந்த திருப்பதிக்கு சென்ற காரணம் சாமி கும்பிடுவதற்காக அல்ல. அனேகமாக வெளிநாடுகளில் உள்ள வணிக முதலீடுகளை மேற்பார்வை செய்வதற்கான பயணங்களாக அவை இருக்க வேண்டும்.

யார் இந்த கணநாதன்? இவரைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. பெரும்பாலும் முன்பு புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்த பினாமியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர் முடிந்த பின்னர் பல முன்னாள் பினாமிகள் புலிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்களில் பலர் தற்போது ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். கணநாதனும் அவர்களில் ஒருவராக இருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வேலுப்பிள்ளை கணநாதன் ஏற்கனவே உகண்டாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சிக் காலத்தில் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த வருடம், அதாவது 2021 ம் ஆண்டில் இருந்து தான், உகண்டாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் முதலிடத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் யாவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள் என்றே கருதப் படுகின்றன. இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியான கணநாதனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பெரும்பான்மை தமிழர்களிடம் ராஜபக்சே சகோதரர்கள் பற்றிக் கருத்துக் கேட்டால் "அவர்கள் சிங்கள இனவாதிகள் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகள்" என்று பதில் கூறுவார்கள். அதே மாதிரி பெரும்பான்மை சிங்களவர்களிடம் கேட்டால் "அவர்கள் சிங்களத் தேசியவாதிகள் அல்லது இலங்கை தேசப் பற்றாளர்கள்" என்று பதில் கூறுவார்கள். (பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு முன்னரான நிலைமை.) இரண்டு பக்கமும் உள்ள "தேசியவாதிகள்" (அல்லது இனவாதிகள், ஏதோ ஒன்று) இப்படியான அரசியலை தான் கட்டமைத்துள்ளனர். இனப்பிரச்சினை நிலவும் நாட்டில், குறிப்பிட்ட ஒரு இனத்தவர் தாம் பேசுவது தேசியவாதம் என்றும், எதிரி இனத்தவர் பேசுவது இனவாதம் என்றும் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.

அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாமே சிறந்த தேசியவாதிகள் என்பது மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆகவே, ராஜபக்சே சகோதரர்களும் தாமே தலைசிறந்த தேசியவாதிகள், இனப்பற்றாளர்கள், தேசப் பற்றாளர்கள் என்பது மாதிரியான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைத்து வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த விம்பத்தை உடைத்தெறிந்து விட்டது. 
 
ஒரு காலத்தில் தேசியத் தலைவர்கள் என்று போற்றிய அதே மக்கள் இன்று தேசத் திருடர்கள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சே சகோதரர்கள், இனிமேலும் தேசியவாதம், இனவாதத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாத நையறு நிலையில் உள்ளனர். இது தேசியவாதம் பேசும் அத்தனை பேருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்.

Thursday, October 15, 2020

நிலக்கரி வல்லரசு - பிரிட்டனின் உலக மேலாதிக்கம்

முதலாளித்துவம் தோற்றமும் வரலாறும் 

முதலாளித்துவ தத்துவ அறிஞர்களான அடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிறோர் மட்டுமல்ல, கம்யூனிச தத்துவ அறிஞரான கார்ல் மார்க்ஸ் கூட, நீராவி இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, இரும்புத் தொழிற்துறை தான் முதலாளித்துவத்தின் அடிப்படை என்று கூறியிருக்கின்றனர்.

இயந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி அத்தியாவசியமானது. அது அன்றைய காலத்தில் எண்ணை, அல்லது மின்சாரம் போன்று மதிப்பு வாய்ந்த எரிபொருளாக இருந்தது. அதற்கு முன்னர் காற்றாடி மற்றும் நீரில் சுழலும் சக்கரம் மூலம் இயந்திரங்கள் இயங்குவதற்கான சக்தி பெறப்பட்டது. இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தன.

நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், அது ஆடைத் தொழிற்சாலை உட்பட பல தொழிலகங்களில் பாவனைக்கு வந்தது. அத்துடன் தரமான இரும்பு, உருக்கு கிடைத்த படியால், குதிரை வலுவால் கணிப்படப் படும் இயந்திரங்களின் செயல்திறனும் அதிகரித்தது.

இங்கிலாந்தில் நீராவி இயந்திரங்களின் எரிபொருளாக பயன்படுத்தப் பட்டு வந்த நிலக்கரியின் கேள்வி அதிகரித்த படியால் பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் உருவாகின. இந்த சுரங்கங்கள் பணக்கார முதலாளிகளின் சொந்தமாக இருந்தன. சிலநேரம் ஒரு பெரும் நிலவுடமையாளருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் தோண்டப் பட்டிருக்கலாம்.

சுரங்கத் தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான, வசதிகள் குறைந்த நிலையில் வேலை செய்தனர். சில நேரம் சுரங்கம் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இருப்பினும் இங்கிலாந்து முழுவதும் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப் பட்டது. அதனால் அப்போதே அவர்கள் “தொழிலாளர்களில் ஒரு மேட்டுக்குடி” என்று அழைக்கப் பட்டனர். இதில் ஒரு நன்மையையும் உண்டானது. சுரங்கத் தொழிலாளர்கள் தான் முதன்முதலாக ஒன்று திரண்டு தமக்கென தொழிற்சங்கம் அமைத்தனர். மிகக் கடினமான உடல் உழைப்பைக் கோரும் சுரங்கத் தொழில் காரணமாக அவர்களுக்குள் தோழமை உறவு ஏற்பட்டிருந்தது.

அந்தக் காலத்தில் இங்கிலாந்து நிலக்கரி மிகவும் மலிவாக கிடைத்து வந்தது. அதனால் அதை எரிபொருளாக பயன்படுத்துவதும் மலிவாக இருந்தது. தொழில்நுட்ப தேர்ச்சி காரணமாக ஒவ்வொரு தொழிற்துறைக்கும் தனியான நீராவி இயந்திரங்கள் தயாரிக்கப் பட்டன. இதனால் நிலக்கரி எனும் எரிபொருளின் தேவையும் அதிகரித்தது.

ரயில், கப்பல்களில் நீராவி இயந்திரங்களின் பயன்பாடு காரணமாக போக்குவரத்து செலவு பெருமளவு குறைந்தது. தரையிலும் கடலிலும் விரைவான போக்குவரத்து நடந்தது. இதனால் புதிய பாதைகள் உருவாகின. இவற்றை பயன்படுத்தி பெருமளவு உற்பத்திப் பொருட்களை எல்லா இடங்களுக்கும் அனுப்ப முடிந்தது.

இங்கிலாந்தில் மட்டுமல்லாது, பெல்ஜியம், ஜெர்மனியிலும் நிலக்கரி சுரங்கங்கள் உருவாகின. அதனால் அவையும் இங்கிலாந்துக்குப் போட்டியாக தொழிற்துறை வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள் ஆகின. இந்த போட்டி, முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் முற்றி வெடித்து முதலாம் உலகப்போருக்கு இட்டுச் சென்றது. அது வேறு கதை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து தான் உலகம் முழுவதும் நிலக்கரி ஏற்றுமதி செய்து வந்தது. அன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டு வந்த நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு இங்கிலாந்தில் இருந்து வந்தது. இதனால் பிரித்தானியா என்ற பெயரில் இருந்த இங்கிலாந்தின் உலக மேலாண்மை நிலை உறுதிப் படுத்தப் பட்டது. இது மேலும் சர்வதேச சமூக பொருளாதார மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. கார்ல் மார்க்ஸ், முதலளைத்துவத்தில் இங்கிலாந்தின் பங்களிப்பு குறித்து அதிகமாக ஆய்வு செய்ததில் எந்த அதிசயமும் இல்லை.

நீராவி இயந்திரங்களின் பயன்பாடு இங்கிலாந்தில் தொடங்கிய படியால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக மாறியது. இது பிற்காலத்தில் ஜெர்மனி, அமெரிக்காவால் பின்பற்றப் பட்டது. அன்றைய இங்கிலாந்து நிலக்கரி, பருத்தி ஆடைகள் போன்ற தொழிற்துறைப் பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தது. அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களையும், மூலப் பொருட்களையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. இன்றும் பெரும்பாலான பணக்கார நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

இங்கிலாந்தில் அந்தக் காலத்திலேயே பிரெஞ்சு மொழியில் “செய்ய விடு” என்று அர்த்தம் தரும் Laissez faire எனும் “சுதந்திர முதலாளித்துவம்” நடைமுறைக்கு வந்து விட்டது. அதாவது அரசு முதலாளிகளின் விடயத்தில் தலையிடாக் கொள்கையை பின்பற்றியது. இதனை முதன்முதலாக முதலாளித்துவத்தை ஆய்வு செய்த பொருளியல் அறிஞரான அடம் ஸ்மித் வலியுறுத்தி வந்தார். அவரது சிந்தனைகள் முதலாளித்துவ கோட்பாடுகளாக பின்பற்றப் பட்டன. சுதந்திர வர்த்தகம் ஊக்குவிக்கப் பட்டது. விவசாயத்தை பாதுகாப்பது தடுக்கப் பட்டது. அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப் பட்டன. சுருக்கமாக, எல்லா இடங்களிலும் முதலாளித்துவ- லிபரல் சித்தாந்தம் கட்டாயமாக்கப் பட்டது.

முதலாளித்துவத்தின் பக்க விளைவாக உருவான ஏழைகள் ஏறக்குறைய அடிமைகள் போன்று நடத்தப் பட்டனர். அவர்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமான செலவை அரசு பொறுப்பேற்றது. “வேலை இல்லம்” என்ற பெயரில் கட்டாய வேலை வாங்கும் முகாம்கள் உருவாக்கப் பட்டன. நீண்ட காலமாக சமூகத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள் ஏழைகள் குறித்து எந்த அக்கறையும் அற்று இருந்தனர். மார்க் ட்வைன் ஒலிவர் டிவிஸ்ட் என்ற உலகப் புகழ் பெற்ற நாவல் எழுதி வெளியிட்ட பின்னர் தான் ஏழைகளின் அவலம் வெளியில் தெரிய வந்தது.

ஏழைகள் வாழ்ந்த சேரிப் பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருந்தது. அதனால் அன்றைய இங்கிலாந்தில் இருந்த மக்கட்தொகையில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. இங்கிலாந்தில் லண்டன் மட்டுமல்லாது, மான்செஸ்டர், பேர்மிங்ஹாம், லிவர்பூல் போன்ற தொழிற்துறை நகரங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக கிராமப் புறங்களில் இருந்தும், அயர்லாந்தில் இருந்தும் பெருமளவு மக்கள் படையெடுத்து வந்தனர். நகரங்களில் அவர்களது வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருந்தது. இதனை பிரெடெரிக் எங்கெல்ஸ் தனது உழைக்கும் மக்களின் நிலைமை என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

Thursday, May 11, 2017

முதலாளிகளை அகற்றி விட்டு தொழிலாளர்களே நிர்வகிக்க முடியமா?


தொழிலாளர்களே நிறுவனங்களை நிர்வகிக்க முடியமா? இந்தக் கேள்வியை பிரபல வலதுசாரி  எழுத்தாளர் ஜெயமோகனும் எழுப்பி இருக்கிறார். அரசிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைக் கட்ட மறுத்து, நாட்டை விட்டோடிய கிரிமினல் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரையில் இதைக் கேட்டுள்ளார்.

அவரது கூற்றின் படி, அவர்கள் முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர். அதுவும் ஒரு கலை தான். அதற்கென்று தனித் திறமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகிறார். இடதுசாரிகள், அல்லது மார்க்சிஸ்டுகள் எதிர்பார்ப்பது போல தொழிலாளர்கள் நிர்வாகத்தை பொறுப்பெடுப்பது சாத்தியமில்லை என்று வாதாடுகிறார்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:
//மார்க்சியச் செவ்வியல் பார்வையில் மூலப்பொருட்கள், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் என்பதில் நிர்வாகத்திற்கான இடம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல. அதை உழைப்பாளிகள் தாங்களே செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திலிருந்துதான் மார்க்சியம் தொடங்குகிறது. நிர்வாகிகளான முதலாளிகளை முழுமையாக அகற்றி மூலப்பொருட்களையும் முதலீட்டையும் கைப்பற்றி தொழிலாளர்சமூகம் தாங்களே நிர்வாகத்தை நடத்தி உற்பத்தி வினியோகம் அரசமைப்பு ஆகியவற்றை ஆற்றுவவதற்குப்பெயர்தான் மார்க்ஸியப்பொருளியல்.
ஆனால் நடைமுறை அப்படி அல்ல. எப்படி அறிவியலாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தன்னியல்பான திறமைகளால் உருவாகி எழுந்து வருகிறார்களோ அதே போல உருவாகிவருபவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் குன்றாத தன்னம்பிக்கையும் புதுப்புது வாய்ப்புகளாகத் தேடும் கற்பனைவளமும் ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன்தான் மூலப்பொருட்களையும் உழைப்பையும் மூலதனத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி சக்தியாக மாற்றுகிறது. ஓர் அறிவியலாளரும் சிந்தனையாளரும் எப்படி மாற்றீடு செய்யப்பட முடியாதவர்களோ அப்படித்தான் முதலாளிகளும். அவர்களைத் தொழில்முனைவோர், பெருநிர்வாகிகள் என்ற சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன்.//

மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமா என்று சந்தேகம் எழுப்புவோர் முதலில் முதலாளித்துவம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். வருங்கால சோஷலிச சமுதாயத்திற்கான மையக்கரு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து தான் தோன்றுகிறது.

முதலாளிகளைப் பற்றிப் பேசினால், சினிமாவில் வருவது போன்று, தனி ஒரு நபர் முதல் போட்டு கம்பனி நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணத்தில் தான், ஜெயமோகனும் விஜய் மல்லையாவை "தொழில் முனைவோர்" என்று எழுதி இருக்கிறார். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே, பெரிய நிறுவனங்களின் கட்டமைப்பு மாறி விட்டது. ஒரு தொழிலதிபர் நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

குறிப்பாக, கார்பரேட் நிறுவனங்களில், பெரிய வரையறுக்கப் பட்ட வர்த்தக நிறுவனத்தில் கூட, தனி ஒருவரை முதலாளியாகக் காண முடியாது. அதை ஒரு நிர்வாகிகள் குழு தான் நடத்துகின்றது. அந்த நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வைத்திருப்போர் ஒரு குழுவாக ஒன்று கூடி நிர்வகிப்பார்கள்.

அது பெரும்பாலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரர் கூட்டமாக இருக்கும். அவர்களில் பலர் முதல் போட்டு விட்டு, இலாபத்தை எதிர்பார்க்கும் உரிமையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். சிலர் தமக்கு இலாபத்தில் பங்கான டிவிடன்ட் பணம் கிடைத்தால் போதும் என்று வீட்டில் இருப்பதுமுண்டு.

அதே நேரம், சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் கற்பனை செய்வது போன்று, பங்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, ஒரு சில பங்குகளை வாங்குவதால் மட்டும் ஒரு சாமானியன் முதலாளியாக முடியாது. ஒரு பங்கு வாங்கி வைத்திருப்பவரை விட, ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்கு மட்டுமே பங்குதாரர் கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பெருமளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே கம்பனியில் உரிமை உண்டு. அவர்களைத் தான் முதலாளிகள் என்று அழைக்கிறோம். 

உண்மையில் பெரும் மூலதனத்தை செலுத்தியோர், அதாவது முதலாளிகள், கம்பனியை நிர்வகிக்கும் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை.  சிலநேரம், தலைமை நிர்வாகிக்கு பங்குகளில் ஒரு பகுதியை கொடுத்து, அவரையும் பங்குதாரர் ஆக்கி இருப்பார்கள். (அதை விட போனஸ் தனியாகக் கிடைக்கும்.) ஏனையோர் சம்பளம் வாங்கிக் கொண்டு நிர்வாக வேலை செய்கிறார்கள். அதாவது, அதிகம் சம்பாதிக்கும் மூளை உழைப்பாளிகள். அவர்கள் வணிக முகாமைத்துவம், அல்லது அது போன்ற ஏதாவதொரு துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிவுஜீவிக் குழுவாக இருப்பார்கள்.

ஆகவே, வணிகம் பற்றியோ, நிர்வாகம் பற்றியோ எந்த அறிவுமற்ற, சிலநேரம் கல்வியறிவு எதுவுமற்றவர்கள் கூட, பங்குதாரர் என்ற பெயரில் கம்பனியின் நிர்வாகக் குழுவில் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், ஏன் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது? அதாவது, பணம் படைத்த முதலாளிகளை மட்டுமே கொண்ட, பங்குதாரர்களின் நிர்வாகக் குழுவிற்குப் பதிலாக, தொழிலாளர்களின் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக் குழு அமைக்க முடியாதா? எது எப்படியோ, அவர்களுக்கு கீழே நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றவர்கள் சம்பளத்திற்கு தானே வேலை செய்கிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்களில், தலைமை நிர்வாகிக்கு சில பங்குகள் கொடுப்பதன் மூலம், அவரையும் பங்குதாரர் குழுவில் உறுப்பினர் ஆக்குகிறார்கள். அது ஏன் ஒரு சோஷலிச பொருளாதார நிர்வாகத்தில் சாத்தியப் படாது? அதாவது, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் ஒரு நிர்வாகி முதலாளிகளில் ஒருவர் ஆகிறார். ஆனால், சோஷலிச நிறுவனத்தில் ஒரு நிர்வாகி தொழிலாளிகளில் ஒருவர் ஆகிறார். அது மட்டும் தானே வித்தியாசம்? அவரது கடமையும், வேலையும் ஒன்று தானே?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை, பலர் தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. உண்மை நிலவரம் வேறு. இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது, இங்கே ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பங்குதாரர் எனப்படும் முதலாளிகள் குழுவிடம் உள்ளது. அதற்கு மாறாக, அதே நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் தொழிலாளர் குழுவிடம் இருந்தால் அது தவறா?

மேலும், பங்குதாரர்களான முதலாளிகளுக்கு, அந்தத் தொழில்துறை சார்ந்த அடிப்படை அறிவிருக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக, தொழிற்சாலையும், அதன் உற்பத்தி பற்றியும் அனுபவ அறிவு கைவரப் பெற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தை மேற்பார்வை செய்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அடிப்படையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. ஏனென்றால், ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களால், ஒரு பொதுத் தேர்தலில் வாக்களித்து தெரிவான பிரதிநிதிகள் தான் தொழிலாளர் நிர்வாகத்தில் இடம்பெறுகிறார்கள்.  இன்றைய நிறுவனங்களின் முதலாளிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா? இல்லையே! நாம் அன்றாடம் சந்திக்கும் சர்வாதிகாரத்தை, சாதாரணமாக எடுத்துக் கொள்வது எப்படி?  

இன்றைய காலத்தில், "ஜனநாயகம்" இருப்பதாக சொல்லப்படும் நாடுகளில், தனியார் நிறுவனங்கள் வளர்ந்து, பொருளாதாரத்தில் பெரும் பகுதியை கட்டுப்படுத்துகின்றன. அது எப்படி ஜனநாயகம் ஆகும்? அதிகாரமற்ற அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிந்தெடுப்பதால் மட்டுமே, அந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக சொல்ல முடியுமா?

மேலதிக விபரங்களுக்கு,
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Tuesday, March 28, 2017

தமிழன்டா! லைக்கா முதலாளிக்கு விசுவாசமான அடிமைடா!!


யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ர‌ஜ‌னி ஆத‌ர‌வு போராட்ட‌ம் தொட‌ர்பாக‌ இந்தப் பதிவு. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அப்பாவி மக்கள் மீது அறச்சீற்றம் கொள்ளும் தமிழின எழுச்சியாளர்கள், அந்த அப்பாவி பின்னால் நின்று மக்களை ஆட்டுவித்த லைக்கா முதலாளியை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். இப்போதும் நாங்கள் இதற்கெல்லாம் மூலகாரணமான லைக்காவின் பெயரை தப்பித் தவறியும் உச்சரிக்க மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழன்டா, லைக்காவின் அடிமைடா!

 ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், ர‌ஜ‌னிகாந்த் என்ற‌ ந‌டிக‌னுக்கான‌ போராட்ட‌ம் "நியாய‌ம‌ற்ற‌து" என‌க் கூறுகிறார்க‌ள். ஈய‌த்தை பார்த்து பித்த‌ளை இளித்த‌தாம் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. எது நியாயம்? எது நியாயமற்றது? அதை தீர்மானிப்பது யார்?

இத‌ற்குப் பின்னால் உள்ள‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லைப் புரிந்து கொள்ளுங்க‌ள். ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விக்கும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ள். ஏற்க‌ன‌வே சொந்த‌ வீடு, உய‌ர் க‌ல்வி, உத்தியோக‌ம் எல்லாம் கிடைக்க‌ப் பெற்ற‌வ‌ர்க‌ள். ஆயிர‌ம் வ‌ச‌திக‌ள் இருந்தும் த‌மிழீழ‌ம் இல்லையே என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள‌து க‌வ‌லை.

ர‌ஜ‌னி என்ற‌ ந‌டிக‌னுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கையில் எந்த‌ வ‌ச‌தியும‌ற்ற‌ அடித்த‌ட்டு உழைக்கும் ம‌க்க‌ள். போரினால் பாதிக்க‌ப் ப‌ட்டு, இட‌ம்பெய‌ர்ந்து குடிசைக‌ளில் வாழும் ஏழைக‌ள். அவ‌ர்களுக்கு லைக்காவோ, அல்ல‌து‌ தொண்டு நிறுவ‌ன‌மோ இல‌வ‌ச‌மாக‌ க‌ட்டிக் கொடுக்கும் வீடுக‌ளை ம‌ன‌முவ‌ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள்.

லைக்கா க‌ட்டிய‌ வீடுக‌ளின் சாவிக‌ளை கொடுப்ப‌த‌ற்கு ர‌ஜ‌னிகாந்தை வரச் சொன்ன‌தும் கார‌ண‌த்தோடு தான். அது த‌யாரிக்கும் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌மும் இத‌ற்குள் அட‌ங்கியுள்ள‌து. லைக்கா த‌ன‌க்கு ஆதாய‌ம் கிடைக்கும் என்ப‌தால் தான், 150 வீடுக‌ளை ஏழைக‌ளுக்கு க‌ட்டிக் கொடுத்த‌து. இதைத் தான் கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் கொடுக்கும் "வ‌ள்ள‌ல்க‌ளும்" செய்கிறார்க‌ள். எல்லாம் விள‌ம்ப‌ர‌ம் தேடும் ம‌லின‌ உத்தி தான் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

ஆனால் இங்கே ப‌ல‌ர் முக்கிய‌மான‌தொரு உண்மையை ம‌ற‌ந்து விடுகிறார்க‌ள். இவ்வ‌ள‌வு கால‌மும், வீட‌ற்ற‌ ஏழைக‌ள் குர‌ல‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ புற‌க்க‌ணிக்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். கூட்ட‌மைப்புக்கும், சைக்கிள் க‌ட்சிக்கும் இடையிலான‌ குடுமிப் பிடி ச‌ண்டையில் அந்த‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் பேச‌ப் ப‌டுவ‌தில்லை.

ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தை லைக்கா பின் நின்று ந‌ட‌த்தி இருந்தாலும், அந்த‌ ம‌க்க‌ளை கூட்டி வ‌ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னுக்கு நிறுத்திய‌த‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறைத்து ம‌திப்பிட‌ முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌மாக‌த் தான் தெரியும். அது ஸ்பொன்ச‌ர் ப‌ண்ணிய‌ லைக்காவின் உத்த‌ர‌வு. ஆனால், போராட்ட‌த்திற்கு செல்லாவிட்டால் வீடு கிடைக்காது என்ற‌ ப‌ய‌மும் அந்த‌ அப்பாவி ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருந்திருக்கும்.

இந்த‌ நாட‌க‌த்தை பின்னுக்கு நின்று இய‌க்கிய‌ லைக்காவை குற்ற‌ம் சாட்டாமல், முன்னால் நின்ற‌ அப்பாவி ம‌க்களை தூற்றுவ‌து ஏன்? அவ‌ர்க‌ளை "முட்டாள்க‌ள், ஒரு பிய‌ருக்கு விலை போன‌வ‌ர்க‌ள்" என்றெல்லாம் இழிவு ப‌டுத்துவ‌து ஏன்? எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து ஏன்?

எய்தவன் யாரென்று தெரிந்த போதிலும், அம்புகளை குறை கூறுவோர் தானும் ஓர் அம்பு என்பதை அறியாமல் இருக்கிறார். முகநூலில் ஒருவர் கருத்திட்டார்: //சுவரொட்டி ஒட்டிய அந்த அக்னிக்குஞ்சுகளை பிடித்து வாருங்கள், *** எடுத்து விடுவோம்.// சுவரொட்டி அடித்துக் கொடுத்த லைக்கா முதலாளியின் பெயர் அல்லிராஜா சுபாஸ்கரன். எங்கே உங்களால் முடிந்ததை செய்யுங்கள் பார்ப்போம்?

இது தான் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின், குட்டி பூர்ஷுவா குணாம்ச‌ம். அவ‌ர்க‌ள் லைக்காவை விம‌ர்சிக்க‌ மாட்டார்க‌ள். ஏனென்றால் முத‌லாளிக‌ளை ப‌கைக்க‌க் கூடாது என்பார்க‌ள். அதே நேர‌ம், அடித்த‌ட்டு ம‌க்க‌ளை இழிவு ப‌டுத்துவார்க‌ள். அதை த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு ஆளில்லை என்ற‌ தைரிய‌ம்.

ஒரு விட‌ய‌த்தை க‌வ‌னித்தீர்க‌ளா? ர‌ஜ‌னியின் இல‌ங்கை வ‌ருகைக்கு எதிராக‌ க‌ம்பு சுற்றிய‌ ஈழ‌த் "த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள்", லைக்காவுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

ஏனென்றால் "லைக்கா அதிப‌ர் ந‌ம்ம‌வ‌ர்(ஈழ‌த் த‌மிழ‌ர்)" என்று பெருமைப் ப‌ட‌ வேண்டுமாம். "பிரிட்டிஷ் ம‌காராணியை விட‌ப் ப‌ண‌க்கார‌ன்." என்று புளுகுக‌ள் வேறு. லைக்காவின் புக‌ழ் பாடும் ப‌ர‌ப்புரையாள‌ர்க‌ள், அநேக‌மாக‌ க‌ஜேந்திர‌குமாரின் த‌.தே.ம‌.மு. க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்ப‌து இர‌க‌சிய‌ம் அல்ல‌.

இதே நேர‌த்தில், யாழ்ப்பாண‌த்தில் ம‌கிந்த‌ விசுவாசியாக‌ அர‌சிய‌லில் அடியெடுத்து வைத்த‌ சுத‌ந்திர‌க் க‌ட்சி நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அங்க‌ஜ‌ன் ராம‌நாத‌ன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவ‌ர் "ர‌ஜ‌னியின் வ‌ருகை த‌டைப் ப‌ட்ட‌தால் லைக்காவின் திட்ட‌ம் பாழாகி விட்ட‌தாக‌வும், ஏழை ம‌க்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌வும்..." நீலிக் க‌ண்ணீர் வ‌டித்துள்ளார்.

அங்க‌ஜ‌ன் ஒரு நாடாளுமன்ற உறுப்பின‌ர் தானே? ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌து அவ‌ர‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா? எத‌ற்காக‌ ஒரு த‌னியார் நிறுவ‌ன‌த்தின் உத‌வியை எதிர்பார்க்க‌ வேண்டும்?

லைக்காவுக்கும் ராஜ‌ப‌க்சேக்கும் இடையிலான‌ வ‌ர்த்த‌க‌ உற‌வு ஏற்க‌ன‌வே அம்ப‌ல‌மான‌ விட‌ய‌ம். அது ஒன்றும் இர‌க‌சிய‌ம் அல்ல‌. ஆனால் வெளியே ம‌க்க‌ளுக்கு தெரியாத‌ ஒரு இர‌க‌சிய‌ம் உள்ள‌து.

தெற்கில் ராஜ‌ப‌க்சே விசுவாசிக‌ளுக்கும், வ‌ட‌க்கில் க‌ஜேந்திர‌குமார் விசுவாசிக‌ளுக்கும் இடையிலான‌ ந‌ட்புற‌வுப் பால‌மாக‌ லைக்கா செய‌ற்ப‌டுகின்ற‌து. முத‌லாளிக‌ளின் ப‌ண‌த்திற்கு முன்னால் இன‌ முர‌ண்பாடு மாய‌மாக‌ ம‌றைந்து விடும்.

ஒருவ‌ர் அடிப்ப‌து மாதிரி அடிப்பார். ம‌ற்ற‌வ‌ர் அழுவ‌து மாதிரி அழுவார். அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் ஐயா. இத‌ற்குப் பெய‌ர் #மேட்டுக்குடி அர‌சிய‌ல். 

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:

Monday, November 14, 2016

ஈழத்தில் தமிழரை பேரழிவுக்குள் சுரண்டிக் கொழுத்த தமிழ் முதலாளிகள்


ஈழ‌ப்போர் ந‌ட‌ந்த‌ கால‌ம், யாழ்ப்பாணத் த‌மிழ் முத‌லாளிக‌ளின் பொற்கால‌ம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேர‌ழிவுக‌ளுக்கு ம‌த்தியிலும் கோடி கோடியாக‌ பணம் ச‌ம்பாதித்தார்க‌ள். ஒரு ப‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ள் செத்து ம‌டிந்து கொண்டிருக்கையில், ம‌றுப‌க்க‌ம் முத‌லாளிக‌ளின் க‌ஜானாவில் ப‌ண‌ம் குவிந்து கொண்டிருந்த‌து. அதற்காக அவர்கள் ஒரு நிமிடம் கூட வருத்தப் படவில்லை.

பெரும்பாலானோருக்கு ந‌ன்கு தெரிந்த‌ வ‌ர்த்த‌க‌ப் பிர‌ப‌ல‌ம், காலஞ்சென்ற ம‌கேஸ்வ‌ர‌னை உதார‌ண‌மாக‌ எடுக்க‌லாம். இவ‌ர் ஒன்றுமில்லாத ஓட்டாண்டியாக‌ தனது வ‌ர்த்த‌க‌ வாழ்வை ஆர‌ம்பித்த‌வ‌ர். போர்க் காலத்தில் ம‌ண்ணெண்ணை (கெரசின் ஆயில்) க‌ட‌த்த‌ல் மூல‌ம் கோடீஸ்வ‌ர‌னாக‌ மாறினார். சட்டவிரோதமான கடத்தல் வேலை செய்து முதலாளி ஆகலாம் என்று நிரூபித்தார்.

அந்த‌க் கால‌த்தில் பொருளாதாரத் தடை இருந்தது. புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு கொண்டு செல்ல‌க் கூடாது என்று, அர‌சு ப‌ல‌ பொருட்க‌ளை த‌டை செய்திருந்த‌து. அத‌னால், ம‌ண்ணெண்ணை போன்ற‌ அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளுக்கும் த‌ட்டுப்பாடு ஏற்ப‌ட்ட‌து. வீடுகளில் சமைப்பதற்கும், வெளிச்சத்திற்கும் மண்ணெண்ணெய் தேவைப் பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக ஓடாமல் நின்ற வாகனங்களையும் மண்ணெண்ணெய்யில் ஓட வைத்தார்கள்.

கடத்தல் பேர்வழி ம‌கேஸ்வ‌ர‌ன் அர‌ச‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் ம‌ண்ணெண்ணை வாங்கி, புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு க‌ட‌த்திச் சென்றார். அத‌ற்காக‌ காவ‌லர‌ணில் இருந்த‌ இராணுவ‌த்தின‌ருக்கும் இல‌ஞ்ச‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

அன்று ஒரு லீட்ட‌ர் ம‌ண்ணெண்ணையின் விலை 13 ரூபாய்க‌ள் ம‌ட்டுமே. ஆனால், புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் 300 ரூபாய்க்கு விற்க‌ப் ப‌ட்ட‌து! அதாவது முப்பது மடங்கு இலாபம் வைத்து விற்றார். இந்த‌ப் ப‌க‌ல் கொள்ளை கார‌ண‌மாக‌, அவர் தமிழ் மக்களால் "ம‌ண்ணெண்ணை ம‌கேஸ்வ‌ர‌ன்" என்ற பட்டப் பெயரால் அழைக்கப் ப‌ட்டார். மகேஸ்வரனின் பணம் பாதாளம் மட்டும் பாய்ந்தது.

யாழ் குடாநாட்டு பத்திரிகையான உதயன், "மண்ணெண்ணெய் விலை குறைத்த வள்ளல்" என்று அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. அதாவது, சிறு வியாபாரிகள் மண்ணெண்ணெய்யை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில், மகேஸ்வரன் ஒரு மொத்த வியாபாரியாக கப்பல் மூலம் "இறக்குமதி" செய்தாராம். அதனால் மண்ணெண்ணெய் விலை குறைந்ததாம். கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

மகேஸ்வரனின் த‌ம்பி துவார‌கேஸ்வ‌ர‌னும் ம‌ண்ணெண்ணை க‌ட‌த்தி விற்று கோடீஸ்வ‌ர‌ன் ஆன‌வ‌ர் தான். இன்று யாழ் ந‌கரில் ஒரு பெரிய‌ ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதிக்கு சொந்த‌க்கார‌ன். புலிக‌ளின் கால‌த்தில் உத‌ய‌ன் ப‌த்திரிகை யாழ் குடாநாட்டில் ஏக‌ போக‌ உரிமை கொண்டிருந்த‌து. இன்றைக்கும் அது தான் அதிக‌ள‌வில் விற்ப‌னையாகின்றது. உத‌ய‌ன் நிறுவ‌ன‌ முத‌லாளி ச‌ர‌வ‌ண‌ப‌வ‌னும், யாழ் ந‌க‌ரில் ஒரு ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதி வைத்திருக்கிறார்.

அர‌சிய‌லில் விடுத‌லைப் புலிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளின் ஏக‌ பிர‌திநிதித்துவ‌ம் கோரிய‌ மாதிரித் தான், த‌மிழ் முத‌லாளிக‌ளும் ந‌ட‌ந்து கொண்டார்க‌ள். போர் ந‌ட‌ந்த‌ கால‌ம் முழுவ‌தும், அவ‌ர்க‌ள் சொன்ன‌ விலைக்கு ம‌க்க‌ள் வாங்க‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் இருந்த‌து.

"ஐயோ பாவ‌ம், ந‌ம‌து சொந்த‌ இன‌ ம‌க்க‌ள் தானே," என்று ஒரு முத‌லாளி கூட‌ ப‌ரிதாப‌ப் ப‌ட‌வில்லை. உட‌மைக‌ளை இழ‌ந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த‌ ம‌க்க‌ளிட‌ம் இர‌க்க‌மின்றி சுர‌ண்டிக் கொழுத்த‌ன‌ர். ம‌னித‌னின் இர‌த்த‌த்தை உறிஞ்சி வாழும் அட்டைக்கும், இந்தத் "த‌மிழ்"(?) முத‌லாளிக‌ளுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

முத‌லாளித்துவ‌த்தில் போட்டி இருக்க‌ வேண்டும் என்று பொருளிய‌ல் அறிஞ‌ர்க‌ள் சொல்வார்க‌ள். யாழ்ப்பாண‌ த‌மிழ் வ‌ணிக‌ர்க‌ள், எந்த‌ப் போட்டியாள‌ரும் இல்லாம‌ல் த‌னிக்காட்டு ராஜாவாக‌ வ‌ர்த்த‌க‌ம் செய்த‌ன‌ர்.

1983 ம் ஆண்டு போர் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து சிங்க‌ள‌ வ‌ணிக‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ப் ப‌க்க‌ம் த‌லை வைத்தும் ப‌டுக்க‌வில்லை. 1991 ம் ஆண்டு முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். யாழ் குடாநாட்டு வ‌ர்த்த‌க‌த்தில் முஸ்லிம்க‌ளின் ஆதிக்க‌ம் ச‌ற்று அதிக‌மாக‌ இருந்த‌து. அந்த‌த் த‌டை அக‌ற்ற‌ப் ப‌ட்ட‌தும் த‌மிழ் வ‌ர்த்த‌க‌ர்க‌ள் காட்டில் ஒரே ம‌ழை தான்.

அப்பாவித் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இந்த‌ உண்மையெல்லாம் எப்ப‌டித் தெரியும்? "சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எங்க‌ளை அழிக்க‌த் துடிக்கும் எதிரிக‌ள்." "முஸ்லிம்க‌ள் எங்க‌ளை காட்டிக் கொடுக்கும் துரோகிக‌ள்." இப்ப‌டி சொல்லிக் கொடுத்தால் போதும். உட‌னே ந‌ம்பி விடுவார்க‌ள். அத‌ற்குப் பிற‌கு த‌மிழ‌ர்க‌ளை வேண்டிய‌ ம‌ட்டும் சுரண்டி, கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். எதிர்த்துப் பேசினால் அவ‌னுக்கும் துரோகிப் ப‌ட்ட‌ம் சூட்டி விட‌லாம்.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்குப் பின்ன‌ரும் பேச‌ப் ப‌டும் தீவிர‌ த‌மிழ்த்தேசிய‌ம் அல்ல‌து த‌மிழ் இன‌வாத‌த்தின் பின்ன‌ணியில் த‌மிழ் முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ளும் அட‌ங்கியுள்ள‌ன‌. த‌மிழ்த்தேசிய‌ அர‌சிய‌லும் முத‌லாளித்துவ‌மும் ஒன்றில் இருந்து ம‌ற்ற‌து பிரிக்க‌ முடியாம‌ல் உள்ள‌ன‌.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ பொற்கால‌த்தில் கோடி கோடியாக‌ ச‌ம்பாதித்துக் கொண்டிருந்த‌ த‌மிழ் முத‌லாளிக‌ள், சில‌நேர‌ம் புலிக‌ளையும் திட்டித் தீர்த்த‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம் புலிக‌ள் 5% வ‌ரி அற‌விட்ட‌து தான்.

உண்மையில் 5% வ‌ரி, முத‌லாளிக‌ளின் கோடிக் க‌ண‌க்கான‌ நிக‌ர‌ இலாப‌த்துட‌ன் ஒப்பிட்டால், இந்த‌த் தொகை மிக‌ மிக‌க் குறைவு. மேற்கு ஐரோப்பாவில் 20% அல்ல‌து 30% வ‌ரியாக‌ க‌ட்ட‌ வேண்டும். போர் முடிந்த‌ பின்ன‌ர் முத‌லாளித்துவ‌ ஆத‌ர‌வு த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளால் எழுப்ப‌ப் ப‌ட்ட‌ கோஷ‌ங்க‌ளுக்கான‌ விள‌க்க‌ம்:

- "எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் வேண்டும்!" (விள‌க்க‌ம்: த‌மிழ் ம‌க்க‌ளை சுர‌ண்டுவ‌தற்கு த‌மிழ் முத‌லாளிக‌ளுக்கே ஏக‌போக‌ உரிமை வேண்டும்.)

- "இருப்ப‌வ‌ர்க‌ள் இருந்திருந்தால் இப்போது இப்ப‌டி ந‌ட‌ந்திருக்குமா?" (விள‌க்க‌ம்: சிங்க‌ள‌, முஸ்லிம் முத‌லாளிக‌ள், த‌மிழ் முத‌லாளிக‌ளுட‌ன் போட்டிக்கு வ‌ந்திருப்பார்க‌ளா?)

தமிழ்த் தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பது வியப்புக்குரியதல்ல. பலர் பரம்பரை பரம்பரையாக நிலவுடைமையாளர் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அந்த சொத்துக்களை இன்றளவும் ஆண்டு அனுபவிப்பவர்கள். 

இன்று தீவிர புலி ஆதரவு, தீவிர தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட ஒரு பெருந்தோட்ட முதலாளி தான். அவரது பெயரில் மலையகத் தேயிலைத் தோட்டம் மட்டுமல்லாது, மலேசியாவிலும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

1947 இல், அன்றைய‌ இல‌ங்கை பிர‌த‌ம‌ர் டி.எஸ். சேன‌நாய‌க்க‌ த‌லைமையிலான‌ குழுவின‌ர் பெருந்தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் பிர‌ஜாவுரிமையை ப‌றித்த‌ன‌ர். பெருந்தோட்ட‌த் த‌மிழ‌ர்க‌ள் பெரும் அர‌சிய‌ல் ச‌க்தியாகி, க‌ண்டிச் சிங்க‌ளவ‌ரின் பிர‌திநிதித்துவ‌த்தில் பிர‌ச்சினை கொடுப்பார்க‌ள் என்ப‌து ஒரு கார‌ண‌ம். அதேவேளை, சோஷ‌லிச‌ சித்தாந்த‌ங்கள், ம‌லைய‌க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆழ‌மாக‌ நிலைகொண்டு விடும் என‌ப் ப‌ய‌ந்த‌மை இன்னொரு கார‌ண‌ம்.

ம‌லைய‌க‌த் த‌மிழ‌ரின் பிர‌ஜாவுரிமை ப‌றிக்கும் ச‌ட்ட‌த்திற்கு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரான‌ ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌ம் (கஜேந்திரகுமாரின் தாத்தா) ஆத‌ர‌வாக‌ இருந்தார். அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ரும் ஒரு பெருந்தோட்ட‌ முத‌லாளியாக‌ இருந்தார்.

அண்மையில் தேயிலைத் தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌ உய‌ர்வுக் கோரிக்கையை ஆத‌ரித்து, யாழ் ந‌க‌ரிலும் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. அப்போது ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌த்தின் பேர‌ன் க‌ஜேந்திர‌குமாரும் ப‌ங்குப‌ற்றி இருந்தார்.

பெருந்தோட்ட‌ உரிமையாள‌ர் பொன்ன‌ம்ப‌ல‌த்தின் வாரிசான‌ க‌ஜேந்திர‌குமார், த‌ன‌க்கு சொந்த‌மான‌ தேயிலைத் தோட்ட‌த்தில் வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கூட்டிக் கொடுத்து முன்னுதார‌ண‌மாக‌ திக‌ழ்ந்திருக்க‌லாம்.

இப்ப‌டியான த‌க‌வ‌ல்க‌ளை இருட்ட‌டிப்பு செய்யும் த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள், முத‌லாளி க‌ஜேந்திர‌குமாரை தொழிலாள‌ரின் ந‌ண்ப‌னாக காட்டும் பித்த‌லாட்ட‌மும் ந‌ட‌க்கிற‌து. க‌ஜேந்திர‌குமாருக்கு (யாழ் குடாநாட்டில்) ப‌ளைப் பிர‌தேச‌த்திலும் ப‌ல‌ ஏக்க‌ர் காணி சொந்த‌மாக‌ இருக்கிற‌தாம். ஒரு த‌ட‌வை வைத்திய‌சாலை விஸ்த‌ரிப்புக்காக‌ இர‌ண்டு ப‌ர‌ப்பு காணி கேட்ட‌ நேர‌ம் கொடுக்க ம‌றுத்து விட்டாராம். இவ‌ர்க‌ள் தான் த‌மிழ‌ர்க‌ளின் தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ்த் தேசிய‌ம்!


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, June 21, 2016

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இனம் இனத்தோடு தான் சேரும். ஈழத் தமிழ் முதலாளி, சிங்கள பேரினவாத அரசுடன் கைகோர்ப்பான். யாழ்ப்பாண தமிழ் கோடீஸ்வரர், வெற்றிகரமான தொழிலதிபர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இவர் சிங்கள பேரினவாத அரசு இயந்திரத்துடன் கைகோர்த்துள்ளதை நிரூபிக்கும் படங்கள், சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

யாழ்நகரில் இருந்து வெளியாகும் தமிழ்த் தேசிய, புலி ஆதரவு தினசரி உதயன் பத்திரிகை முதலாளி சரவணபவன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரி, மற்றும் சிங்கள இராணுவத் தளபதியும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த பல தசாப்த காலமாக யாழ்நகரில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையை மற்றைய பத்திரிகைகளுடன் ஒப்பிட முடியாது. யுத்த காலத்தில், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புலிகளுக்கு ஆதரவான செய்திகளை தெரிவித்து வந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும், உதயன் பத்திரிகைக்கு யாழ்ப்பாண தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு இருந்தது.

உதயன் பத்திரிகை வரலாற்றில் அது பல தடவைகள் தடங்கலுக்கு உள்ளாகியது. அதன் நிர்வாகம் பல தடவைகள் கைமாறியுள்ளது. இன்றைய உதயன் பத்திரிகை, புலிகளின் முதலீட்டில் உருவானதாக சந்தேகிக்கப் பட்டது. தலைமை நிர்வாகி சரவணபவன் ஒரு பினாமி முதலாளி என்றும் நம்பப் பட்டது. இராணுவப் புலனாய்வுத்துறை அது தொடர்பாக மோப்பம் பிடித்த படியால், சரவனபவனை கைது செய்து விசாரித்துள்ளது.

ஒரு தடவை, உதயன் பத்திரிகையாளர் நிமலராஜன் ஈபிடிபி ஆயுதபாணிகளால் படுகொலை செய்யப் பட்டார். இறுதிப்போர் நடந்த காலத்தில், உதயன் பத்திரிகை அலுவலகம் அடிக்கடி தாக்குதலுக்குள்ளானது. ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் செயல்பட்டனர். இத்தனை பிரச்சினைகள் இருந்த போதிலும், உதயன் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

சிங்கள பேரினவாதிகளின் கோட்டையான கொழும்பு நகரில் இருந்து வெளியான, உதயனின் சகோதர பத்திரிகையான சுடரொளி வெளிப்படையாகவே புலிகளின் புகழ் பாடி வந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது? உதயன் முதலாளி சரவணபவன், திரைமறைவில் சிங்கள அரசுடன் தொடர்புகளை பேணி வந்தார். ஒரு காலத்தில் இரகசியமாக இருந்த உறவு, இன்று பரகசியமாக வெளிப்பட்டுள்ளது. இதிலென்ன அதிசயம்?

விடுதலைப் புலிகள் வலதுசாரிப் பாதையை தேர்ந்தெடுத்ததும், தமிழ் முதலாளிகளை ஊக்குவித்து வளர்த்ததும் கடந்த கால வரலாறு. சிலநேரம் புலிகளே உருவாக்கி வளர்த்து விட்ட தமிழ் முதலாளிகள், புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தனர். (பார்க்க: இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!) சரவணபவன் போன்ற பல முதலாளிகள், இன்று சிங்களப் பேரினவாத அரசை பகிரங்கமாகவே ஆதரிக்கிறார்கள். எல்லாம் வணிக நலன்தான் காரணம்.

இன உணர்வை விட வர்க்க உணர்வு மிகவும் உறுதியானது. தமிழீழ தேசிய போராட்டமும், முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று விரோதமான விடயங்கள். அந்த உண்மையை காலங் கடந்தாவது உணர வேண்டும். இன்றைக்கும் முதலாளித்துவத்தை ஆதரித்துக் கொண்டே, புலிகளையும் ஆதரிப்பதாக பாசாங்கு செய்யும் வலதுசாரிகளையிட்டு தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, May 14, 2016

எல்லோரும் முதலாளிகள் ஆகலாம் என்பது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல்


"எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்" என்பது ஒரு பித்தலாட்டம். மிகப் பெரிய பொய். அது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல். சிலநேரம், தொழிலாளர்களை விட, சிறு "முதலாளிகள்" தான் அதிகமாக சுரண்டப் படுகின்றனர். தொழிலாளர் நலச் சட்டத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

"முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர் என்று சொல்லுங்கள்! ஏனென்றால் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்!" இவ்வாறு பிதற்றிக் கொண்டு திரியும், முதலாளித்துவத்தை ஆதரிக்கும் தற்குறிகளுக்கு இந்த ஆவணப்படம் சரியான பதிலடி கொடுக்கிறது. 

நெதர்லாந்து நாட்டில், எல்லோரையும் தொழில் முனைவோர் ஆகுமாறு அரசு ஊக்குவித்து வருகின்றது. ஆனால், நடைமுறையில் பெரிய நிறுவனங்கள் அவர்களை தொழிலாளர்களை விட மிகவும் மோசமாக சுரண்டி வருகின்றன. இதனால் பல "சுதந்திரமான" "தொழில் முனைவோர்", தம்மை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று கோரிப் போராடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது! 

தபால் துறையை தனியார்மயமாக்கியதால் ஏற்படும் அவலங்களை பற்றிய ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. "Baas in eigen bus" (சொந்த வாகனம் வைத்திருக்கும் முதலாளி) என்ற தலைப்பிலான ஆவணப் படம், எவ்வாறு சிறுதொழில் முனைவோர்கூட பெரும் முதலாளிகளால் சுரண்டப் படுகின்றனர் என்பதை விளக்குகின்றது.

தொண்ணூறுகள் வரையில் அரச நிறுவனமாக இருந்த PTT Post (தந்தி, தொலைபேசி, தொலைத்தொடர்பு நிறுவனம்) அவ்வளவு காலமும் ஊழியர்களுக்கு முழுநேர வேலை கொடுத்து வந்தது. தனியார்மயமாக்கிய பின்னர், பெருந்தொகை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர் அல்லது பகுதி நேர வேலையில் வைத்திருந்தனர். மின்னஞ்சல் வந்த பின்னர் கடிதப் போக்குவரத்து குறைந்துள்ளமையை அதற்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது.

தற்போது, தபால் தொழில்துறையை PostNL என்ற தனியார் நிறுவனம் நடத்துகின்றது. (அதன் பெயரில் "மன்னருக்குரிய" என்ற அடைமொழியும் இருப்பதால், அரச குடும்பத்தின் பங்குகளும் இருக்க வேண்டும்.) இன்றைய நவீன யுகத்தில், கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டாலும், மறுபக்கத்தில் பார்சல்கள் அனுப்பவது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம், இன்றைக்கு நிறையப் பேர் இணையக் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர்.

அதனால் PostNL நிறுவனத்திற்கு நிறைய பார்சல் விநியோகஸ்தர்கள் தேவைப் பட்டனர். அதற்காக யாரையும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, "தனியார் தொழில்முனைவோர்களுடன்" ஒப்பந்தம் செய்து கொள்கின்றது.

யார் இந்த "தனியார் தொழில் முனைவோர்"? ஒரு தனி நபர் தன்னை ஒரு நிறுவனமாக பதிவு செய்து கொள்கிறார். அவர் குறிப்பிட்ட சேவையை செய்து கொடுப்பதற்கு பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். இது தான் "சுதந்திரமான", தனியார்", "தொழில்முனைவோர்" என்பதன் அர்த்தம்.

ஆனால், PostNL நிறுவனத்தை பொறுத்த வரையில், அவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. சாதாரண தொழிலாளர்கள் போன்று PostNL க்கு மட்டுமே வேலை செய்ய முடியும். இது சட்டப்படி தவறாகும். விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த கமிஷன் காரணமாக, அவர்கள் PostNL க்கு மட்டும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஒரு பக்கம் அனுப்பப் படும் பார்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், மறு பக்கம் கமிஷன் தொகை குறைக்கப் பட்டுள்ளது.

PostNL க்கு வேலை செய்யும் தனியார் தொழில் முனைவோர் சொந்தமாக வாகனம் வைத்திருக்க வேண்டும். அதாவது பார்சல்கள் எடுத்துச் செல்வதற்கான சிறிய வேன் இருந்தால் தான் ஒப்பந்தம் செய்வார்கள். பெரும்பாலான தொழில் முனைவோரிடம் கையில் பணம் இருப்பதில்லை. அவர்கள் குறைந்தது இருபதாயிரம் யூரோ பெறுமதியான வாகனத்தை, லீசிங் கடனில் வாங்குகிறார்கள். 

அதனால், வருமானத்தில் ஒரு தொகை கடனுக்கான மாதாந்த தவணைப்பணம் கட்டுவதற்கு செலவாகின்றது. நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்தாலும், கையில் சிறு தொகையே மிஞ்சுவதால் தமது ஓய்வூதிய கட்டுப்பணத்தை கூட செலுத்த முடியாமல் கஷ்டப் படுகிறார்கள்.

அது மட்டுமல்லாது, பார்சல் விநியோகஸ்தர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றும் கண்காணிக்கப் படுகின்றனர். "லைசன்ஸ் இருக்கிறதா? சீருடை அணிந்துள்ளனரா? பேட்ஜ் குத்தி இருக்கிறதா? வாகனத்தின் கதவு மூடப் பட்டுள்ளதா?" என்றெல்லாம் கண்காணிக்கிறார்கள். பத்து தடவைக்கு மேல் குற்றம் கண்டுபிடிக்கப் பட்டால் ஒப்பந்தம் இரத்து செய்யப் படும். ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டுமே இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். ஆகவே, "தனியார் தொழில் முனைவோர்", உண்மையில் பதிவு செய்யப் படாத தொழிலாளர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகும்.

கடந்த வருடம் (2015ல்) கொடுமைகளை தாங்க முடியாத தொழில் முனைவோர் பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அமைச்சரிடம் மனுக் கொடுத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்தனர். இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர். அதற்குப் பிறகு தான் PostNL இறங்கி வந்தது. 12% தொழில் முனைவோரை, நிரந்தர தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ள முன்வந்தது. அதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

ஆயினும், தமக்கு எந்த அறிவித்தலும் வரவில்லை என்று, பார்சல் விநியோகஸ்தர்கள் குறைப் படுகின்றனர். அது மட்டுமல்லாது, வேலை நிறுத்தத்தை ஒழுங்கு படுத்தியவர்களின் ஒப்பந்தமும் முறித்துக் கொள்ளப் பட்டது. "விரும்பத் தகாத நடவடிக்கை காரணமாக" ஒப்பந்தத்தை முறிப்பதாக, PostNL அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

"சேவை வழங்குனர்" தன்னுடன் ஒப்பந்தம் செய்யும் "தொழில் முனைவோருடனான" உறவை எந்நேரமும் துண்டித்துக் கொள்ளலாம் என்பது ஒரு பாதகமான அம்சம். இதனால் சாதாரண தொழிலாளிக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை. ஒப்பந்தம் இழந்தவர்கள், PostNL நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால், நீதிபதி அவர்களை தொழிலாளர்களாக கருதாமல், "முதலாளி அல்லது தொழில் முனைவோர்" என்று குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.


ஆவணப் படத்தை பார்வையிடுவதற்கு:

Saturday, June 27, 2015

இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!

இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல் அமைப்புகளிலும் இடதுசாரியம், வலதுசாரியம் இருக்கும். வலதுசாரிக் கட்சிகளுக்குள் இடதுசாரியம் இருக்கும். இடதுசாரிக் கட்சிகளுக்குள் வலதுசாரியம் இருக்கும். (அரசியல்) விஞ்ஞானமும் அப்படித்தான் வரையறுக்கிறது.

"வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவனுக்கு வீர வணக்கம்..." என்று, புலிகளின் தீவிர விசுவாசி ஒருவர் தனது தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வந்தார். அதில் உண்மையும் இருக்கிறது. ஆரம்பத்தில் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாகக் காட்டிக் கொண்ட புலிகள், பிற்காலத்தில் வலதுசாரிகளாகி, சிறு முதலாளிகளையும் வளர்த்து விட்டதன் விளைவு அவர்களது அழிவுக்கு வித்திட்டது.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்கம் ஒன்றை கட்டி வளர்ப்பது அதிகச் செலவு பிடிக்கும் விடயம். உலகத் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கைகளை படித்தால் ஓர் உண்மை புலனாகும். அந்த இயக்கங்கள் எவ்வாறு தமது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன என்று விபரமாக ஆராய்ந்திருப்பார்கள்.

புலிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது, அது எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பன போன்ற முழு விபரங்களையும் சி.ஐ.ஏ. போன்ற மேற்கத்திய உளவு நிறுவனங்கள் கணித்து வைத்திருந்தன. அது அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை. பெருமளவு நிதி வழங்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தனர். வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட புலிகளின் முகவர்கள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வலைப்பின்னலை பயன்படுத்திக் கொண்டார்கள்.

கொழும்பிலும் புலிகளின் நிதியில் உருவாக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இயங்கின. சில தனியார் நிறுவனங்களிலும், கொழும்பு பங்குச் சந்தையிலும் புலிகளின் முதலீடு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. இதிலே முக்கியமான விடயம், சர்வதேச மூலதனத்திற்குள் அகப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டுபிடிப்பதும் தடை செய்வதும் மிகவும் இலகு.

அது மட்டுமல்ல, புலிகள் உருவாக்கிய முதலாளிகள், என்ன தான் தீவிர புலி விசுவாசிகளாக வேஷம் போட்டாலும், பணத்தின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டிருந்தனர். இறுதியில், சந்தர்ப்பம் பார்த்து, தம்மை வளர்த்து விட்ட புலிகளை காட்டிக் கொடுக்கவும், கைவிடவும் தயங்கவில்லை. என்ன இருந்தாலும், முதலாளிகளின் பிறவிக் குணம் மாறுமா?

எது எப்படி இருந்த போதிலும், புலிகளால் இடதுசாரியத்தை முற்றாக கழற்றி விட முடியவில்லை. "துப்பாக்கி முனையில் இருந்து அதிகாரம் பிறக்கிறது....", "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை விடுவதில்லை..." போன்ற மாவோவின் மேற்கோள்கள், தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளில் எதிரொலித்தன.

"முதலில் கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகரங்களை சுற்றி வளைக்கும்" மாவோயிச போர்த்தந்திரம் புலிகள் நடத்திய போர்களின் அடிநாதமாக இருந்தது. சர்வதேச கம்யூனிசப் புரட்சியாளர்களினால் குறிவைக்கப் படும், பெற்றோலிய குதங்கள், மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், விமான நிலையம் போன்ற பல பொருளாதார இலக்குகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின.

வன்னியில் இரண்டு தசாப்த காலமாக இருந்த, புலிகளின் "de facto தமிழீழம்" சர்வதேச மூலதனம் ஊடுருவ முடியாத பகுதியாக இருந்தது. நிச்சயமாக, தமது இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டில் இருந்து புலிகள் அதை தடுக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மீது செயற்கையான வரி விதிப்பதன் மூலம் தான் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும், இரகசியங்கள் தெரிந்து விடும், பொருளாதாரம் தமது கைகளை விட்டு சென்று விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருந்தது. அந்நிய மூலதனத்தை நிர்வகித்த முதலாளிகள், புலிகள் அளவுக்கு அதிகமான வரி அறவிடுவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

கொக்கோ கோலா(அல்லது பெப்சி கோலா) நிறுவனம் மட்டும், சில வருட காலம் புலிகள் கேட்ட வரியை கொடுத்து விட்டு வன்னிக்குள் கடை விரித்திருந்தது. ஆயினும், இறுதிப்போர் தொடங்குவதற்குள் அவர்களும் பின்வாங்கி விட்டிருந்தனர். கொக்கோ/பெப்சி கோலாக்களின் தாயகமான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையின் கீழ், பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் நடந்தது.

போர் முடிந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டு, பெப்சி கோலா மீண்டும் அதே பிரதேசத்தில் விற்பனையை தொடர்ந்து செய்கிறது. புலிகளுக்கு கொடுத்த பணத்தை விட, இராணுவத்திற்கு கொடுக்கும் பணம் பல மடங்கு குறைவானது. இதனால் சந்தைப் படுத்தும் செலவினமும் குறைகிறது. எந்த முதலாளியும் எப்படி செலவைக் குறைக்கலாம் என்று தான் யோசிப்பான். அதற்குப் பெயர் தான் முதலாளித்துவம்.

புலிகள் ஒரு தடவை, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "தமிழீழ நாணயம்" அறிமுகப் படுத்தவிருப்பதாக கூறி வந்தனர். சிலநேரம், தமிழீழ ரூபாய் நோட்டுகள் அச்சிடப் பட்டிருந்தாலும், எந்தத் தருணத்திலும் புழக்கத்திற்கு விடப் படவில்லை. அதற்குக் காரணம், தமிழ் மேட்டுக்குடி மற்றும் முதலாளிகளின் எதிர்ப்பு என்று நம்பப் படுகின்றது. தமது சொத்துக்கள் ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்று அவர்கள் அஞ்சி இருக்கலாம். "100 தமிழீழ ரூபாய் = 120 சிறிலங்கா ரூபாய்" என்று செயற்கையான பெறுமதி நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில், நாணயத்தின் பெறுமதியையும் சந்தை தான் தீர்மானிக்கிறது. வட கொரியா போன்ற, "ஸ்டாலினிச - சர்வாதிகார நாடுகள்" தான், நாணயப் பரிமாற்றத்தை தாம் நினைத்தவாறு தீர்மானிக்கின்றன. (அமெரிக்க டாலருடனான, வட கொரிய வொன்னின் பெறுமதி, செயற்கையாக கூட்டி வைக்கப் பட்டுள்ளது. சந்தையில் அது பல மடங்கு குறைவானது. கருப்புச் சந்தையில் மட்டும் உண்மையான பெறுமதி தெரிய வரும்.) ஆகவே, தீவிர வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகள் சிலர், வட கொரியாவை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இடதுசாரிகளின் கனவான "தமிழீழ வைப்பகம்" என்ற தனியான வங்கித் துறை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பாக இயங்கி வந்தது. இருப்பினும், சிறிலங்கா அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி, மக்கள் வங்கிக் கிளைகளும் அப்படியே இருந்தன. மக்கள் தமது பணத்தை தமிழீழ வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப் பட்டது. ஈழத்திற்கு வெளியே "தமிழ் தேசிய இன மான உணர்வு" உறுதியாக இருப்பது போன்று தெரிந்தாலும், தமிழீழ வங்கிகளில் தமது பணத்தை இட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. தவிர்க்க முடியாத காரணங்களினால் "சிங்கள வங்கிகளின்" சேவைகளை தான் அதிகமாக பயன்படுத்தினார்கள்.

ஏன் என்ற கேள்விக்கான விடை மிகவும் எளிது. வெளிநாட்டில் வாழும் உறவினர் அனுப்பும் பணத்தை எந்த வங்கியில் பெற்றுக் கொள்வது? உலகில் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப் படாத தமிழீழ வங்கிக்கு, யாரும் பணம் அனுப்ப முடியாது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் உறவினர்கள், மேற்கத்திய நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. போர் நடந்த காலங்களில், வெளிநாட்டுப் பணம் தான் உள்ளூர் மக்கள் பலரின் வயிற்றை நிரப்பப் பயன்பட்டது.

அந்நிய செலாவணி தான், உள்ளூர் பொருளாதாரத்தின் உந்துசக்தியாகவும் இருந்தது. தமிழ் மக்களுக்கு வந்த வெளிநாட்டுப் பணத்தை மாற்றிக் கொடுத்த சிறிலங்கா வங்கிகள் தான், மறுபக்கத்தில் அரசின் போர்ச் செலவினங்களுக்கு கடன் வழங்கின. மூலதனத்தின் தன்மைகளில் அதுவும் ஒன்று. நாய் விற்ற காசு குரைக்காது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதுவராலயம் அனுப்பிய இரகசிய கேபிள்களில் தமிழீழ வைப்பகம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது. (பார்க்க: விக்கிலீக்ஸ்) அமெரிக்கா, வெளிப்படையாக சிறிலங்காவின் வங்கிகளை ஆதரித்ததை கேபிளில் வாசிக்கக் கூடியதாக உள்ளது. 

அதற்கு, "ஊடுருவும் தன்மை கொண்ட பொருளாதாரம்" (Transparency) என்று, மேற்கத்திய நாடுகளால் அடிக்கடி சொல்லப் படும் காரணத்தை தான் அமெரிக்காவும் சுட்டிக் காட்டியது. அதாவது, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட, சிறிலங்கா வங்கிகளை, சர்வதேச மூலதனம் நினைத்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். தமிழீழ வங்கிக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாது. இதனை அமெரிக்க தூதுவராலயம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்ப காலங்களில், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும், சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும் சொல்லிக் கொண்ட புலிகள், தமது இடதுசாரி பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வந்திருந்தால், இன்று வரைக்கும் நிலைத்து நின்றிருக்கலாம். ஆனால், கொள்கையை விட நிதி மூலதனம் முக்கியம் என்று கருதி, "தமிழ் தேசிய" முதலாளிகளை உருவாக்கி விட்ட பலனை உணர்ந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது. 

தமிழீழக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பப் பட்ட தமிழ் தேசிய முதலாளிகள், இறுதிப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள். அதன் விளைவு, இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறாகி விட்டது. சர்வதேச மூலதனத்தின் பாதையில் தடைக்கல்லாக நின்ற "இடதுசாரி புலிகள்" அழிக்கப் பட்டனர். "வலதுசாரி தமிழ் தேசிய முதலாளிகள்", சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வதேச மூலதனத்தில் ஐக்கியமாகி விட்டனர்.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, April 24, 2015

சம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் அடைத்த தொழிலாளர்கள்


இது தான் முதலாளித்துவத்தின் கெட்ட கனவு. உண்மையில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், முதலாளிகளுக்கு தமது பாதுகாப்பு குறித்து அச்சமேற்படுவது இயல்பு.

2013 ம் ஆண்டு, சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழிலதிபரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், சில நாட்களாக தமது முதலாளியை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப் படாததால், கொதிப்புற்ற தொழிலாளர்கள் கம்பனி நிர்வாகியை பிடித்து அடைத்து வைத்தார்கள். பலர் பணி நீக்கம் செய்யப் படலாம் என்ற அச்சமும், அவர்களை இந்த நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது.

ஒரு கூண்டுக்குள் அடைக்கப் பட்ட விலங்கு போன்ற நிலையில் உள்ள முதலாளிக்கு, படுப்பதற்கு ஒரு படுக்கை மட்டுமே கொடுத்திருந்தார்கள். அணைக்கப் படாத மின்குமிழ் வெளிச்சம், சுற்றியுள்ள தொழிலாளரின் கூச்சல் காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என்று அந்த நிர்வாகி குறைப் பட்டார்.

அவர் தப்பியோட முடியாதவாறு, வெளியே 60 அல்லது 70 தொழிலாளர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆறு நாட்களாக, உடுத்த உடுப்புடன் காலம் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் அவருக்கு மூன்று வேளை உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்த முதலாளியை விடுவிப்பதற்கு, அமெரிக்க தூதுவராலயம் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டார். 

உலகம் முழுவதும் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும், இரக்கமற்ற முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும்  அமையும்.


மேலதிக விபரங்களுக்கு:
American boss held hostage by Chinese workers in Beijing - video