Wednesday, December 08, 2021

திருமுருகன் காந்தியின் திருகோணமலை கோளாறு பதிகம்

திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து திருமுருகன் காந்தி சில மாணவர்களுக்கு பாடம் நடத்தும் காணொளி பார்க்கக் கிடைத்தது. (https://twitter.com/i/status/1466347425136791561) அதில் அவர் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாறு, புவியியல், சமூகக் கட்டமைப்பு குறித்து அரைகுறை அறிவுடன் பகிரப் படும் இது போன்ற தகவல்களால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. அத்துடன் ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும்.


முதலில் திருகோணமலை இனப்பரம்பல் தொடர்பாக சில சுருக்கமான குறிப்புகள்:

- திருமுருகன் காந்தி குறிப்பிடும் தமிழீழம் அல்லது தமிழர் பிரதேசம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை குறிக்கும். குறிப்பாக திருகோணமலை பட்டினமும், அதை அண்டிய பகுதிகளும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தனித் தன்மை கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது. குறிப்பாக திருகோணமலைத் தமிழர்கள், யாழ்ப்பாண, மட்டக்களப்பு தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாகவும் மாறுபட்டவர்கள். உதாரணத்திற்கு, அங்கே சாதிப் பாகுபாடுகள் பார்ப்பது மிக மிகக் குறைவு. அதற்கு பல நூறாண்டுகளாக திருகோணமலையில் வசித்து வந்த ஐரோப்பிய குடியேறிகளின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம்.

- கிழக்கு மாகாணத்திற்குள் அடங்கும் திருகோணமலை "தமிழர் பிரதேசம்" என்று சொன்னாலும், அந்த மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பகுதிகளில் முஸ்லிம்கள் (அல்லது இலங்கைச் சோனகர்கள்) எண்ணிக்கை மிக அதிகம். அந்தப் பகுதிகள் நேரடியாக துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ளன.

- தொண்ணூறுகளில் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்ற, இன முரண்பாடுகளில் விரிசலை உண்டாக்கிய புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள் காரணமாக, கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கத் தலைப்பட்டனர். ஒரு தனியான தேசிய இனமாக பிரிந்து நின்றனர்.

- அது போதாதென்று, ஆகஸ்ட் 2006ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் மூதூரை கைப்பற்றிய புலிகள் அங்கிருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றினார்கள். ஆகவே, 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, 2006 ஆம் ஆண்டு மூதூரிலுமாக, இரண்டு தடவைகள் முஸ்லிகள் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். இன்னொருவிதமாக சொன்னால், புலிகளின் பார்வையில் தமிழீழம் என்பது "தூய" தமிழர்களின் பிரதேசம். அங்கிருந்து சிங்களவர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவார்கள். இதுபோன்ற புலிகளின் இனவாத நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களுக்கு தமிழீழப் போராட்டத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருமுருகன் காந்தி இதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், திருகோணமலையை சேர்த்து ஈழம் அமைத்து விடுவோம் என்று கனவு காண்கிறார்.

- திருகோணமலை மாவட்டத்தை, வடக்கில் உள்ள முல்லைத்தீவுடன் இணைக்கும் பதவியா பகுதியில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதைத் தவிர துறைமுகத்தை அண்டிய கந்தளாய், சேருவில பகுதிகளிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக குடியேறியவர்கள் என்பது உண்மை தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சிங்களவர்களை ஈழம் கிடைத்த பின்னர் இனச்சுத்திகரிப்பு செய்ய முடியாது.

இனி திருமுருகன் காந்தி கூறிய வரலாற்றுத் திரிபுகளுக்கு வருவோம்: 

- இரண்டாம் உலகப்போர் காலத்தில் மலேசியா, பர்மா வரை வந்து விட்ட ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக திருகோணமலையில் இருந்து தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டு சென்றதாக திருமுருகன் காந்தி கூறுகின்றார்.

- உண்மையில் அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சுருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தன. திருகோணமலை துறைமுகமும், அங்கிருந்த படைத்தளமும் ஜப்பானிய வான்படை விமானங்களால் தாக்கப்பட்டது. அப்போது நடந்த தாக்குதல்களில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. பல விமானங்கள், கப்பல்கள் அழிக்கப் பட்டன.

- இந்தியாவை இந்திரா காந்தி ஆண்ட காலத்தில், திருகோணமலைக்கு அமெரிக்க இராணுவம் வந்திறங்கவிருந்ததாகவும் அதனால் தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப் படதாகவும் திருமுருகன் காந்தி கூறுகின்றார். இது எந்த ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல்.

- அந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்க இராணுவம் வருவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இருக்கவில்லை. ஆனால், புத்தளத்தில் வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவைக்கான ஒலிபரப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. புத்தளம் இந்தியாவுக்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து அமெரிக்கா உளவறிய முயற்சிக்கலாம் என்று இந்திய அரசு விசனம் தெரிவித்திருந்தது.

- ஆனால், இந்தியா ஈழப் போராட்டத்திற்கு உதவியதன் காரணம் அதுவல்ல. பனிப்போர் காலத்தில் ஒரு நாடு எந்த முகாமில் இருக்கிறது என்பதைப் பொறுத்து, எதிரி முகாமின் பதிலிப் போராக உள்நாட்டு குழப்பங்கள் தூண்டி விடப்பட்டன. 1977 ம் ஆண்டிலிருந்து இலங்கை அமெரிக்காவுக்கு நெருக்கமாக சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னர் இலங்கையும் சோவியத் முகாமில் இருந்த படியால், இந்திரா காலத்து இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இது ஒரு மிகப்பெரிய பண்பியல் மாற்றம். ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு, சோவியத் யூனியன் விழுந்த பின்னர் எல்லா நாடுகளும் ஒரே அமெரிக்க குடையின் கீழ் வந்து விட்டன.

- மேலதிகமாக திருமுருகன் காந்தி சொல்லாத ஒரு தகவலையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். (நிச்சயமாக அவர் இதை உங்களுக்கு சொல்ல மாட்டார்.) திருகோணமலையில் 1956 ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அந்த வருடம் தான் தன்னை ஒரு இடதுசாரி சமூக ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்ட பண்டாரநாயக்க பிரதமரானார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, மிகப்பெரிய பிரிட்டிஷ் கம்பனிகளை அரசுடமையாக்கியது. அத்துடன் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் இராணுவ முகாமையும் விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிரகாரம் "முடிக்குரிய" பிரிட்டிஷ் படைகள் வெளியேற, அந்த இடத்தில் "முடிக்குரிய" சிலோன் படைகள் நிலைகொண்டன.

- இலங்கையின் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான அரசியல், இராணுவ, பொருளாதார மாற்றங்களின் பின்னர், 1958 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதைத் தூண்டி விட்டவர்கள், அன்று எதிர்க்கட்சியாக இருந்த, பிரிட்டிஷ் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி. அன்றிலிருந்து வளர்ந்து வந்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினை முள்ளிவாய்க்காலில் ஒரு துயர முடிவை சந்தித்தது. ஈழப்போர் முடிந்து பத்து வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியா மீண்டும் திருகோணமலையில் படைத்தளம் அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசும் அதற்கு சம்மதித்துள்ளது. 

திருகோணமலை கோளாறு பதிகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.


No comments: