Showing posts with label ஸ்பெயின். Show all posts
Showing posts with label ஸ்பெயின். Show all posts

Tuesday, April 14, 2015

நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்


ஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune)

மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.

கனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது. 

பெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

பிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார். 

அன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.

பார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின. 

நடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது. 

ஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார். 

பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.

பெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune

Thursday, November 06, 2014

மொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொருளாதார அதிசயம்


கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயம், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய, தனித்துவமான இலட்சியம் அல்ல. 19 ம் நூற்றாண்டில், தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட முதலாளித்துவத்தின் தீமைகள், பலரை மாற்று வழி குறித்து சிந்திக்கத் தூண்டியது. 

 பல ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ மத நம்பிக்கையையும், தனியுடைமை உரிமையையும் கைவிட விரும்பாத சோஷலிஸ்ட் சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த கிறிஸ்தவ - சோஷலிஸ்டுகள், கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் முதலாளித்துவத்தின் தீமைகளை வெறுத்தாலும், தனியுடைமையை ஆதரித்தார்கள். அதே நேரம், தொழிலாளர்கள், நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில், முதலாளிகள் அற்ற பொருள் உற்பத்தியை தெரிவு செய்தனர். அதுவே கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம். 

ஸ்பெயினில், பாஸ்க் மொழி பேசும் மக்கள் வாழும் மாகாணத்தில், மொன்ட்ராகொன் (Mondragon) எனும் இடத்தில், ஒரு கத்தோலிக்க பாதிரியார் உள்ளூர் மக்களின் உதவியுடன் கூட்டுறவு தொழிற்சாலைகளை அமைத்தார். அவற்றின் தொழிலாளர்கள் தான், நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தனர். மொன்ட்ராகொன் கூட்டுறவு தொழிற்சாலைகள் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு தொழிற்சாலையாக ஆரம்பித்த மொன்ட்ராகொன் கூட்டுறவு இயக்கம், இன்று பல தொழிற்சாலைகளை கட்டி, நிர்வகித்து வருகின்றது. அவற்றில் முதலாளிகள் யாரும் கிடையாது. தொழிலாளர்களே நிர்வாகிகளாகவும் உள்ளனர். இலாபத்தை தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். கூட்டுறவு இயக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததுடன் நில்லாது, தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் நலன்களையும் கவனித்து வருகின்றது. 

 மொன்றாகன் கூட்டுறவு இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்த ஆவணப் படத்தை பார்க்கவும்:

 

Tuesday, March 25, 2014

ஏழைகளுக்கு உணவில்லையெனில் வணிக மையங்களை கொள்ளையடிப்போம்!


"ஏழை மக்களே! உங்களுக்குப் பசிக்கிறதா? உணவு வாங்குவதற்கு கையில் பணம் இல்லையா? வாருங்கள், சூப்பர் மார்க்கட் அங்காடிகளை சூறையாடுவோம். காசு கொடுக்க தேவையில்லை. விரும்பியதை எடுத்துச் செல்லுங்கள். இது அநீதிக்கு எதிரான ஏழைகளின் எழுச்சி!" 
சேகுவரா மாதிரி தாடி வைத்த, கழுத்தில் பாலஸ்தீன சால்வை அணிந்த ஒருவர் ஒலிபெருக்கியில் கூற, கூடியிருந்த ஜனத்திரள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றது. நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்றாக சென்று, சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து, விரும்பியதை எடுத்து கூடைகளில் நிரப்பிக் கொண்டு வெளியே வருகின்றனர். "கொள்ளையடிக்கப் பட்ட" உணவுப் பொருட்களில் பெரும் பகுதி, ஏழைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கு அன்பளிப்பு செய்யப் படுகின்றது.

இந்த சம்பவம், 2012 ம் ஆண்டு, தெற்கு ஸ்பெயினில் நடந்தது. சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டம், அந்த நாட்டில் பல தடவைகள் நடந்து விட்டன. பொருளாதார நெருக்கடியால், கடுமையாக பாதிக்கபப்ட்ட ஸ்பெயின் நாட்டில், நாற்பது சதவீதமானோருக்கு வேலை இல்லை. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஏழைகள் கிளர்ச்சி செய்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என்று, சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டத்தை அறிமுகப் படுத்தியவரின் பெயர்: ஹுவான் மனுவேல் சஞ்செஸ் (Juan Manuel Sanchez). அவர் கடந்த முப்பது வருடங்களாக Marinaleda என்ற சிறிய நகரம் ஒன்றின் மேயராக பதவி வகித்து வருகின்றார்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவர் நிர்வகிக்கும் மரினலேடா நகரத்தில், அனைத்தும் கம்யூனிச பொருளாதார அடிப்படை கொண்டவை. கடந்த சில வருடங்களாக, ஸ்பெயின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. ஆனால், மரினலேடா பொருளாதாரம் உயர்ந்து வருகின்றது. அங்கே வேலையற்றோர் யாரும் இல்லை. அயல் கிராமங்களில் இருந்து பலர் வேலை தேடி வருகின்றனர். அங்கு வேலை செய்யும் ஒரு விவசாயக் கூலி, ஒரு நாளைக்கு $65 (3,928 இந்திய ரூபாய்கள், 8,496 இலங்கை ரூபாய்கள்) சம்பாதிக்க முடியும். இது ஸ்பெயினில் பிற பகுதிகளில் கிடைக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஸ்பெயினின் பிற பகுதிகளில் வாழும் மக்கள், வீட்டு வாடகை கட்ட முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். வாடகை பாக்கி வைத்த பலர், வசித்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டு, தெருக்களில் வசிக்கிறார்கள். மரினலேடா நகரில் வாழும் எல்லோரும் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்கள். நகர சபை வீடு கட்ட கடன் வழங்குகின்றது. வீடு கட்டி முடிந்ததும், கடனை அடைப்பதற்காக மாதாந்த தவணைத் தொகை $ 20 மட்டுமே திருப்பிக் கட்ட வேண்டும். பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்குவதால், அது மரினலேடாவில் வாழும் மக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. அதனால், பல பெற்றோரின் சுமை குறைகின்றது. ஸ்பெயினின் பிற பகுதிகளில், அதற்காகவே சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இரண்டு, மூன்று பிள்ளைகளை வைத்திருப்போரின் பாடு திண்டாட்டம் தான்.

மரினலேடா நகரில் நிர்வாகம் முழுவதும் ஜனநாயக முறைப் படி நடக்கிறது. அனைத்து முடிவுகளும் அங்கு வசிக்கும் மக்களை கலந்தாலோசித்து, அவர்களின் சம்மதத்துடன் எடுக்கப் படுகின்றன. மேயர் ஹுவான் மனுவேல் சஞ்செஸ், மரினலேடா வாழ் மக்களின் ஏகோபித்த தெரிவாக உள்ளார். கடந்த முப்பது வருடங்களாக, மேயர் பதவிக்கு வேறு யாரும் வர முடியவில்லை. ஹுவான் மனுவேல் சஞ்செஸ், ஐக்கிய இடது முன்னணி கட்சியின் பிரதிநிதி. அங்கே ஸ்பெயினின் பிற கட்சிகளும் இயங்குகின்றன. ஐக்கிய இடது முன்னணி கட்சி, மாகாண அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால்,அது மரினலேடாவுக்கு பெரும் தொகை ஒதுக்குவதாக, எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ், தானுண்டு தன வேலையுண்டு என்று, மேயர் பதவியுடன் திருப்தியடைந்து விடவில்லை. அயலில் உள்ள கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழை மக்களை எழுச்சி கொள்ள வைக்கிறார். அதனால், ஆட்சியாளர்களின், முதலாளிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறார். ஏற்கனவே பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்டவர். இப்போதும் பல வழக்குகள் அவர் மேல் போடப் பட்டுள்ளன. 

ஹுவான் மனுவேல் சஞ்செஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும், ஒரு சூப்பர் மார்க்கட்டில் சூறையாடி, பணம் கொடுக்காமல் வெளியே வந்த பொழுது, பொலிஸ் அவரைக் கைது செய்தது. அந்த தகவல், ஸ்பெயின் நாட்டு ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் யாரென்று தெரியாத ஸ்பானிஷ் மக்களுக்கும், அவரைப் பற்றி அறியத் தந்தன. என்ன ஆச்சரியம்! சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த ஹுவான் மனுவேல் சஞ்செஸ், பெரும்பான்மையான ஸ்பானிஷ் மக்களுக்கு ஒரு நாயகனாக தென்பட்டார். பலர் அவரை "நவீன ரொபின் ஹூட்" என்று அழைத்தார்கள். ஸ்பெயின் முழுவதும் "சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த வீர நாயகனின்" புகழ் பரவியது.

சூப்பர் மார்க்கட் சூறையாடுவதால் ஏழைகளின் உணவுத் தேவை தீர்ந்து விடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணக்காரர் யாரும் தாமாகவே முன்வந்து, தங்களது செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதனால், ஏழைகளுக்கு முன்னிருக்கும் ஒரே தெரிவு அடித்துப் பறிப்பது தான். இந்தப் பொருளாதார பால பாடத்தை மக்களுக்கு உணர்த்துவதே, சூப்பர் மார்க்கட் சூறையாடலின் நோக்கம். சில நிறுவனங்கள், ஹுவான் மனுவேல் சஞ்செஸ் மீது கிரிமினல் வழக்குப் போட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பதால், வழக்கு இழுபட்டுக் கொண்டு செல்கின்றது. 

இதே நேரம், யாருமே எதிர்பார்க்காத அதிசயம் ஒன்றும் நடந்துள்ளது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் கொள்ளையடித்த சூப்பர் மார்க்கட்டினை நடத்தும் இன்னொரு நிறுவனம், கொள்ளையடிக்கப் பட்ட பொருட்களின் செலவை தனது கணக்கில் சேர்த்துக் கொள்ள முன்வந்துள்ளது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்டளவு உணவுப் பொருட்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. "உலகில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சில நேரம் அதற்கு கிளர்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்று ஹுவான் மனுவேல் சஞ்செஸ் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:


ஸ்பானிஷ் தொலைக்காட்சியில், ஏழைகள் சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த செய்தி:

Thursday, August 15, 2013

ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள்

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நகரங்களில் அடிமைகளாக விற்பனை செய்யப் பட்டனர் என்பது யாருக்காவது தெரியுமா?

இன்று வரையில் எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் எழுதியிராத, அல்லது எழுதத் துணியாத தகவல்கள் இவை. உலகில் நீண்ட காலமாக கட்டிக் காக்கப் படும், "மிகப் பெரிய இரகசியம்" இதுவாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த வெள்ளையர்கள், பிற்காலத்தில் விடுதலையாகி தமது தாய்நாட்டுக்கு திரும்பி வந்து வாழ்ந்த போதிலும், தமது கடந்த காலம் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை. யாரும் தனது நினைவுக் குறிப்புகளை எழுதி வைக்கவில்லை.

மூன்று காரணங்களுக்காக, இந்த வரலாற்றுத் தகவல்கள் மறைக்கப் படலாம். 

  1.  ஐரோப்பியர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள். உலகில் வேறெந்த இனத்திடமும் அடிமையாக இருந்திராதவர்கள் என்ற இனவாத மேலாண்மை குறித்த அரசியல். அது எப்போதும் ஆண்ட பரம்பரைக் கதைகளை மட்டுமே விரும்புகின்றது. அடிமையாக இருந்த கதைகளை மறைக்கின்றது.
  2.  ஒரு காலத்தில் வெள்ளையின-ஐரோப்பிய அடிமைகளை வைத்திருந்த வட ஆப்பிரிக்க பிரதேசம், பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாகியது. அதனால், வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். தமது அவமானகரமான கடந்த காலத்தை மறைத்து விட்டார்கள்.
  3.  அது ஒரு முற்றிலும் மாறுபட்ட காலகட்டம். கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரண்டு மதங்களுக்கு இடையிலான, மதப் போர் நடந்து கொண்டிருந்த காலம். 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், மதப் போர்களின் காலம் முடிந்து விட்டிருந்தது.

மூன்றாவதாக குறிப்பிட்ட காரணத்தில் இருந்து தான், இந்த மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவலை தேடத்  தொடங்க வேண்டும். சிலுவைப்போர் என்றதும், எல்லோரும் ஜெருசலேமை கைப்பற்றச் சென்ற படைகளை பற்றி மட்டுமே நினைக்கின்றனர். சிலுவைப்போர் ஒரே திசையில் மட்டுமே நடக்கவில்லை. ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளிலும் இன்னொரு சிலுவைப்போர் நடந்தது. அன்று அந்த நாடுகள், "முஸ்லிம் நாடுகளாக" அரேபிய சக்கரவர்த்தியினால் ஆளப்பட்டன. மொரோக்கோ நாட்டில் இருந்து படையெடுத்த மூர்கள் 500 வருடங்களுக்கு மேலாக அந்தப் பிரதேசத்தை ஆண்டு வந்தனர். உள்நாட்டு ஸ்பானிஷ், போர்த்துக்கேய மக்கள் பலர், முஸ்லிம்களாக மாறி இருந்தனர்.

மூர்களுடனான போரில் வென்று, ஸ்பெயின், போர்த்துக்கல்லினை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிறிஸ்தவ அரசர்கள், அந்தப் பிரதேசத்தை நூறு சதவீத கிறிஸ்தவ நாடாக மாற்ற விரும்பினர். அதற்கு முன்னரே, மூர்-அரேபிய ஆளும் வர்க்கத்தினரும், அவர்களின் நாட்டவரும்,பூர்வீகத் தாயகமான  மொரோக்கோவுக்கு பின்வாங்கிச் சென்று விட்டனர். ஸ்பானிஷ் முஸ்லிம்களும், யூதர்களும் மட்டுமே எஞ்சி இருந்தனர். (அவர்களது பூர்வீகம் ஸ்பெயின் ஆகும்.) ஆனால், கிறிஸ்தவ மன்னனும், கத்தோலிக்க திருச் சபையும் அவர்களின் மதச் சுதந்திரத்தை பறித்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்தினார்கள். பல்லாயிரக் கணக்கான யூதர்களும், முஸ்லிம்களும் அவர்களது மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளாத குற்றத்திற்காக, சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப் பட்டனர். மரண தண்டனை விதித்து கொலை செய்யப் பட்டனர். 

கத்தோலிக்க சமயத்தை தழுவிக் கொண்ட, முன்னாள் யூதர்களும், முஸ்லிம்களும், அரசு அதிகாரிகளினால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் பட்டனர். அவர்களும் துன்புறுத்தப் பட்டனர். உண்மையில், அன்றைய ஸ்பெயினில் ஒரு இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்தவ அரசின் கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, இனிமேல் அங்கே வாழ முடியாது என்று தீர்மானித்த ஆயிரக் கணக்கான ஸ்பானிஷ்-முஸ்லிம் குடும்பங்கள், அகதிகளாக மொரோக்கோவுக்கு தப்பி ஓடின. அவர்கள் வட மொரோக்கோ, மற்றும் அல்ஜியர்ஸ், துனிஸ், திரிப்பொலி போன்ற நகரங்களிலும் சென்று குடியேறினார்கள். ஸ்பெயினில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகள், தமது தாயகத்தை ஆளும் கிறிஸ்தவ அரசுக்கு எதிராக, பழிவாங்கும் போர் ஒன்றை தொடங்கினார்கள். அது ஒரு சாதாரண போராக இருக்கவில்லை. 

ஸ்பானிஷ்-முஸ்லிம் அகதிகளுடன், சில மூர் கடற் கொள்ளையரும் சேர்ந்து, கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு எதிரான "ஜிகாத்" ஒன்றை நடத்தினார்கள். வெளியுலகிற்கு மட்டுமே, அது "கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் மதப் போர்". உண்மையில், அது ஸ்பானிஷ் முஸ்லிம் அகதிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தொடங்கியது. ஆனால், பின்னர் அது மதப் போராக மாறியது. இதனை முன் நின்று நடத்தியவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் கடற்கொள்ளையர் ஆவர். அன்றைய மொரோக்கோ மன்னராட்சி, மறைமுகமான ஆதரவு வழங்கினாலும், நேரடியாக படைகளை அனுப்பவில்லை. 

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள், மத்தியதரைக் கடலில் கிறிஸ்தவ கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தார்கள். கப்பலில் வந்த ஐரோப்பியர்களை பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார்கள். துனிஸ், அல்ஜியர்ஸ், மற்றும் சில நகரங்களில், ஐரோப்பிய அடிமைகள் நல்ல விலைக்கு விற்கப் பட்டனர். அடிமை வணிகம் சூடு பிடிக்கவே, கடற்கொள்ளையர்கள் நாட்டுக்குள் புகுந்தும் அடிமைகளை பிடித்தார்கள். ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், என்றைக்கு அடிமைகளாவோமோ என்ற பயத்துடன் வாழ வேண்டியிருந்தது. அந்தளவுக்கு அந்தப் பகுதிகள், அடிக்கடி கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு உள்ளாகின.  


வட ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப்பட்ட, குறிப்பிட்டளவு அடிமைகளை, தனியார் வாங்கிச் சென்றனர். எஞ்சியவர்களை அரசு வாங்கிக் கொண்டது. அந்தக் காலத்தில் இருந்த பாரிய கப்பல்களில் துடுப்பு வலிக்கும் வேலையில் இந்த அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். மேலும், பெரிய கட்டுமானப் பணி, துறைமுகங்கள் கட்டுவது போன்ற கடுமையான வேலைகளும் கொடுக்கப் பட்டன. தனியாரினால் வாங்கிச் செல்லப்பட்ட அடிமைகள், வீட்டுப் பணியாளர்களாகவும், வயலில் வேலை செய்யவும் ஈடுபடுத்தப் பட்டனர். ஒப்பீட்டளவில், இந்த வேலைகள் கட்டுமானப் பணி, கப்பல் வேலை போன்று கஷ்டமாக இருக்கவில்லை.

கிறிஸ்தவ அடிமைகள் மதம் மாறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டது. ஏராளமான ஐரோப்பிய அடிமைகள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள். இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் அவர்கள் அடிமைகாகவே இருந்தனர். ஆனால், கடினமான வேலைகளை செய்யப் பணிக்கப் படவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஆயினும், பெரும்பாலான அடிமைகள் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்தனர். அவர்கள் மத்தியில் மதச் சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியார்களும் அதற்கு ஒரு காரணம். செத்தாலும் பரவாயில்லை, முஸ்லிமாக மதம் மாறக் கூடாது என்று தடுத்து விட்டனர். அதனால், பல்லாயிரம் அடிமைகள் கடினமான வேலை காரணமாக உடல் சோர்வுற்று, மூப்படையும் முன்னமே மாண்டு போயினர். 

வட ஆப்பிரிக்காவில் எத்தனை இலட்சம் கிறிஸ்தவ அடிமைகள் இருந்தனர் என்பதற்கான சரியான புள்ளிவிபரம் கிடைக்கவில்லை. யாரும் அவற்றை பதிவு செய்து வைக்கவில்லை என்று தெரிகின்றது. அண்ணளவாக பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய அடிமைகள், வட ஆப்பிரிக்காவில் இருந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கறுப்பின அடிமைகளின் தலைமுறையினர் போன்று, வட ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய தலைமுறையினர் யாரும் இல்லை. வெள்ளையின அடிமைகளின் எண்ணிக்கை குறைந்து சென்று, காலப்போக்கில் இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.    

அடிமைகளில் 90% மானோர் ஆண்கள். அவர்கள் குடும்பம் அமைப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் தடுக்கப் பட்டிருந்தது. பலர் கடுமையான வேலை காரணமாக சோர்வடைந்து மரணமடைந்து விட்டனர். அதை விட, பெருந்தொகையான புதிய அடிமைகள், கொண்டு செல்லப் பட்ட பின்னர் பேரம் பேசி, பணம் கிடைத்தவுடன் விடுவிக்கப் பட்டனர். பணம் வைத்திருந்த உறவினர்கள், கேட்ட தொகையை கொடுத்து விடுதலை வாங்கி அழைத்துச் சென்றனர். அதே நேரம், வட்டிக்கு கடன் கொடுக்கும் ஐரோப்பியர்களுக்கு விற்கப் பட்டு, அவர்களால் ஐரோப்பிய நாடுகளில் ஒப்பந்த அடிமைகளாக வேலை வாங்கப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

வரலாறு முழுவதும், எல்லா சம்பவங்களையும் முன் அனுமானங்களுடன் ஒரே மாதிரி கணித்து விட முடியாது. எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ஐரோப்பிய அடிமைகள் எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப் படவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவர்கள், அரபு சமூகத்துடன் இரண்டறக் கலந்து விட்டனர். அது மட்டுமல்ல, பிற்காலத்தில் அவர்களில் சிலர், கடற்கொள்ளையர்களாக மாறி இருந்தனர். அதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். இத்தாலியை சேர்ந்த முன்னாள் அடிமை ஒருவரின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

இத்தாலியில் நிலவுடமையாளர்களுக்கு கீழே வேலை செய்யும் பண்ணையடிமைகள், அங்கே ஏற்கனவே அடிமை வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தமது (கிறிஸ்தவ) நிலவுடமையாளரை வெகுவாக வெறுத்தார்கள். அப்படியான ஒருவர், முஸ்லிம் கடற்கொள்ளையரினால் அடிமையாக அல்ஜீரியாவுக்கு பிடித்துச் செல்லப் பட்டார். அந்த இத்தாலியர் அல்ஜீரியா சென்ற பின்னர் , இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டார். அது மட்டுமல்லாது, கடற்கொள்ளையரின் கப்பலிலேயே ஒரு  வேலை தேடிக் கொண்டார். 

குறுகிய காலத்திற்குள் மிகவும் விசுவாசமான கடற்கொள்ளைக்காரராக மாறி, ஒரு கப்பலின் தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அவர் கடற்கொள்ளையரின் கப்பலில், இத்தாலியில் தனது பிறந்த இடத்திற்கே திரும்பிச் சென்றார். அங்கிருந்த தனது குடும்பத்தினரை கப்பலில் ஏற்றுக் கொண்டு அல்ஜீரியாவுக்கு தப்பி ஓடி விட்டார். குடும்ப உறுப்பினர்களும், தாமாகவே விரும்பித் தான் கப்பலில் ஏறினார்கள். ஏனெனில், நிலப்பிரபுவினால் சுரண்டப்பட்ட அவர்களுக்கு, இது விடுதலையாகப் பட்டது. அல்ஜீரியா சென்றதும், எல்லோரும் முஸ்லிமாக மாறி அந்த நாட்டிலேயே தங்கி விட்டனர். 

மேற்குறிப்பிட்ட இத்தாலியரின் கதையில் இருந்து, வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் எல்லோரும் அடிமைகள் அல்ல, என்பதை புரிந்து கொள்ளலாம். ஐரோப்பாவில், இராணுவத்தை விட்டு தப்பியோடிய போர்வீரர்கள், நிலமற்ற விவசாயிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்ட பண்ணையடிமைகள் ஆகியோர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இஸ்லாமிய வட ஆப்பிரிக்காவில் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். கிறிஸ்தவ அடிமைகளை விட, அத்தகைய "கிறிஸ்தவ குடியேறிகளுக்கு" அதிக வரவேற்புக் கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அடிமைகளாகவும் இல்லாமல், முஸ்லிமாகவும் மாறாமல், வியாபாரக் கூட்டணி காரணமாக வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஒரு சிறு பிரிவினரும் உள்ளனர். அந்தக் காலத்தில், நெதர்லாந்தும், பெல்ஜியமும், ஸ்பெயின் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன. ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைவதற்காக போராடியவர்கள், முஸ்லிம் கடற்கொள்ளைக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். டச்சுக் கடற்கொள்ளையரும், முஸ்லிம் கடற்கொள்ளையரும் இணைந்து, ஸ்பானிஷ் கப்பல்களை கொள்ளையடித்தார்கள். டச்சுக் கடற்கொள்ளையரும் மொரோக்கோவை தளமாக கொண்டு தான் செயற்பட்டனர்.

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள் ஸ்பெயினுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்து, ஐஸ்லாந்து வரை சென்று, அங்கேயும் நூற்றுக் கணக்கானோரை அடிமைகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இங்கே குறிப்பிடப் பட்டுள்ள சம்பவங்கள் யாவும், 16 ம் நூற்றாண்டுக்கும், 18 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடந்தவை. 19 ம் நூற்றாண்டில், இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. ஐரோப்பாவில் புதிய வல்லரசுகளாக உருவான பிரிட்டனும், பிரான்சும் வலிமையான கடற்படைகளை அனுப்பி, கடற்கொள்ளையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தன.

ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சுப் படைகள், அல்ஜீரியா, துனீசியாவை ஆக்கிரமித்தன. அன்றிலிருந்து அந்த நாடுகள் பிரெஞ்சுக் காலனிகளாகின. ஸ்பெயின் வட மொரோக்கோவின் சில பகுதிகளை கைப்பற்றியது. வட ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த இலட்சக் கணக்கான ஐரோப்பியர்களும், ஸ்பெயினுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை நடத்திய ஸ்பானிஷ்-முஸ்லிம்களும், வரலாற்றில் இருந்து எந்த சுவடும் இன்றி மறைந்து போனார்கள். யாருக்குத் தெரியும்? இன்று அந்த நாடுகளில் வாழும் பல அரேபியர்களின் உடலில் ஐரோப்பிய இரத்தம் ஓடலாம். 

*************

உசாத்துணை :

1.Rijstpap, tulpen & jihad (Lucas Catherine)
2.Morisco's (Lucas Catherine)
3. Christian Slaves, Muslim Masters: White Slavery in the Mediterranean, the Barbary Coast and Italy, 1500-1800 (Robert C. Davis)

Wednesday, August 29, 2012

ஸ்பெயினில் ஒரு பொருளாதார அதிசயம்: வளமான கம்யூனிச சமுதாயம்


கம்யூனிச அமைப்பு என்றால், "எல்லோரும் சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டும்." என்று நையாண்டி செய்யும் மேதாவிகளைக் கண்டிருப்பீர்கள்.  இன்று வரையிலான உலக வரலாற்றில், கம்யூனிச நாடுகள் என்றுமே தோன்றியதில்லை. ஆனால், கம்யூனிச சமுதாயங்கள் தோன்றியுள்ளன. அவை இன்றைக்கும் எந்தப் பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலக பொருளாதார கட்டமைப்பில் நடக்கும் மாற்றம் எதுவும், அவற்றைப் பாதிப்பதில்லை.

அந்த சமூகங்களை சேர்ந்த யாருமே கடனாளியாகி தெருவுக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. அதற்காக, கம்யூனிச அமைப்பில் எல்லோரும் ஏரில் மாடு பூட்டி, வயலில் உழுது கொண்டிருப்பார்கள், என்று கற்பனை செய்யக் கூடாது. உழவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், நிர்வாகிகள்... ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில் நீங்கள் சந்திக்கும் அத்தனை வகையான நபர்களும் அங்கே இருப்பார்கள்.

இன்றைக்கும் இருக்கும் கம்யூனிச நகரங்கள் எல்லாம், செல்வம் கொழிக்கும் "பணக்கார சமுதாயங்களாக" உள்ளன. வேறு இடங்களை சேர்ந்த, வேலையற்ற மக்கள் அங்கே வேலை தேடி வருவார்கள். ஆனால், கம்யூனிச சமுதாயத்தினுள் வாழும் எவரும் வேலை தேடி வெளி நகரங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்வதில்லை. அப்படிப் போக வேண்டிய அவசியமும் கிடையாது. நான் ஏதோ பைத்தியம் பிடித்து பிதற்றுவதாக நினைக்கும் நண்பர்களை, ஸ்பெயினுக்கு வருமாறு அழைக்கிறேன். பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப் பட்ட மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், ஒரு வெற்றிகரமான கம்யூனிச சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

அந்த நகரத்தில், மொத்தம் 2700 பேர் மட்டுமே வாழ்கின்றனர். வயல்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் அனைத்தும், பொதுவுடமைப் பொருளாதார அடிப்படையில் இயங்குகின்றன.  அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஊதியத்தில் பெருமளவு ஏற்றத்தாழ்வு கிடையாது. வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி கூட மாதம் 1200 யூரோ சம்பாதிக்கின்றார். 

மாதாமாதம் 20 யூரோ தவணை முறையில் செலுத்தி, ஒவ்வொரு குடும்பமும் தனக்கான சொந்த வீடு கட்டிக் கொள்ளலாம். குழந்தைகள் பராமரிப்பகத்தின் மாதக் கட்டணம் 16 யூரோ. பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவு மாதம் 17 யூரோ மட்டுமே. அந்தக் காசுக்கு கேன்டீனில் மதிய உணவு, புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் எல்லாம் கிடைக்கின்றன. கோடை காலம் முழுவதும் நீச்சல் குளம் பாவிப்பதற்கான கட்டணம் வெறும் 4 யூரோ மட்டுமே! 

நம்பினால் நம்புங்கள். அந்த நகரத்தில் பொலிஸ் நிலையம் கிடையாது! நீதிமன்றம் கிடையாது! குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை! அதனால், காவல்துறை, நீதிமன்றங்களை பராமரிப்பதற்கான அரசு நிதி மிச்சப் படுத்தப் படுகின்றது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது? ஒரு சோஷலிச சமுதாயமே அனைத்து மக்களினதும் தேவையை பூர்த்தி செய்யும். ஸ்பெயின் நாட்டில், முப்பது வருடங்களாக ஒரு கம்யூனிச நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தான், உலகின் கவனம் அதன் மீது திரும்பியது. 

தெற்கு ஸ்பெயினில், செவியா (Sevilla) நகரத்தில் இருந்து 60 கி.மி. தூரத்தில் உள்ளது, மரினலேடா (Marinaleda) என்ற சிறு கிராமம். அந்தக் கிராமத்தை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம், ஒரு நிலவுடமையாளருக்கு சொந்தமானது. முப்பது வருடங்களுக்கு முன்னர், நிலமற்ற விவசாயிகள் ஒன்று திரண்டு அந்த நிலங்களை ஆக்கிரமித்தார்கள். ஆரம்பத்தில் அது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. அவர்களது எழுச்சி அதிகார வர்க்கத்தினரால் அடக்கப் பட்டது. ஒவ்வொரு தடவையும் நடந்த நில ஆக்கிரமிப்பு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தது. ஹுவான் சஞ்செஸ் கொர்டியோ (Juan Manuel Sanches Gordillo) போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு நிலைமை மாறியது. 

போராடிக் களைத்திருந்த மக்கள், புதிய உத்வேகத்துடன் கிளம்பினார்கள். செவியா நகரின் விமான நிலையம், ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு போக்குவரத்தை முடக்கினார்கள். அரச காரியாலயங்களை ஆக்கிரமித்தார்கள். மரினலேடா நிலங்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ளும் வரையில், போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. வாழ்க்கையில் எதுவும் போராடாமல் கிடைக்காது என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டனர்.  1991 ம் ஆண்டு,  இறுதியில் அரசு, நிலப்பிரபுவின் நிலங்களுக்கான உரிமைப் பத்திரத்தை, போராடிய  மக்களிடம் கையளித்தது. அன்றிலிருந்து, மரினலேடா நகரம் "உத்தோபியா" (Utopia) என்று பெயர் மாற்றப் பட்டது. அது கவிஞர்கள் கனவு கண்ட, "பாலும் தேனும் ஆறாக ஓடும் பூலோக சொர்க்கமாக" கருதப் பட்டது.

ஒரு பொதுவுடைமை சமுதாயத்தின் மூலமே, மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்பதை, மரினலேடா வாசிகள் நிரூபித்துக் காட்டினார்கள். கூட்டுறவுப் பண்ணைகள் அமைத்தார்கள். வயல்கள், தோட்டங்கள், பண்ணைகள் எங்கும் அனைவரும் சரி சமமாக சேர்ந்து உழைத்தார்கள். முதலாளிகள் யாரும் இல்லாததால், விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த இலாபமும் மக்களிடமே திரும்பி வந்தது. அவர்கள் அதனை தொழிற்சாலைகளில் முதலிட்டார்கள். பொதுவுடைமை சமுதாயம் என்றால், ஒரு வசதியற்ற கிராமத்தில் எல்லோரும்  விவசாயிகளாக வயல் உழுது கொண்டிருப்பார்கள் என்று நினைக்கலாம். இன்றோடு அந்த என்ணத்தை  மாற்றிக் கொள்ளுங்கள். 

சனத்தொகை அடர்த்தி குறைவென்பதால், அதனை நீங்கள் கிராமம் என்று கூறலாம். ஆனால், நகர வாசிகள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும் ஒரு சராசரி பொதுவுடைமை கிராமத்தில் கிடைக்கும். மேலும் பொதுவுடமைப் பொருளாதாரம் விவசாய உற்பத்தியில் மட்டும் தங்கியிருக்கவில்லை.  உயர் தொழில்நுட்ப இயந்திரங்களால் இயக்கப்படும் தொழிற்சாலைகள் கூட அங்கே உண்டு. பாடசாலைகள், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள், மற்றும் பொழுது போக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கே கிடைக்கும். சுருக்கமாக அது ஒரு கிராமம், ஆனால் சிறு நகரம் போன்று காட்சியளிக்கும். இன்றைக்கும் ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியிலும், சீனாவில் சில இடங்களிலும் இவ்வாறான தன்னிறைவு பெற்ற சமுதாயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. 

மரினலேடா விவசாயிகள் திட்டமிடலுடன் பயிர் செய்கின்றனர். உதாரணத்திற்கு கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், கடுகு போன்ற பயிர்களை வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் பயிரிடுவார்கள். அவற்றை அறுவடை செய்யும் மாதம் மாறுபடும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பயிரின் விளைச்சலை அறுவடை செய்யலாம். எல்லோரும் ஒரே நேரத்தில் அறுவடை வேலைக்கு ஒன்று கூடுவார்கள். மரினலேடா வயல்களில் உற்பத்தியாகும் மரக்கறிகள், ஒலிவ் பழங்கள், கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஸ்பெயின் நாட்டின் பிற இடங்களுக்கு ஏற்றுமதியாகின்றது. ஹை-டெக் தொழிற்சாலைகள், அவற்றை பதப்படுத்தி டின்னில், அல்லது போத்தலில் அடைத்து வைக்கின்றன. அவ்வாறு டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், ஒலிவ் எண்ணை போன்ற முடிவுப் பொருட்கள் ஸ்பெயின் முழுவதும் விநியோகிக்கப் படும்.

வருடாவருடம் உற்பத்தி அதிகரிப்பதால், அயல் கிராம மக்களையும் வேலைக்கு அமர்த்துகின்றனர். ஸ்பெயின் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு அங்கே அடைக்கலமும், தொழில் வாய்ப்பும் கிடைக்கிறது. மரினலேடா வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய வரும் பருவ கால வேலையாட்களுக்கும் சமமான சம்பளம் கிடைக்கின்றது. ஒரு கூலித் தொழிலாளி கூட, மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1200 - 1300 யூரோக்கள் சம்பாதிக்கின்றார். இன்றைய பொருளாதார நெருக்கடிக் காலத்தில், ஸ்பெயின் பிற பகுதிகளில், பட்டதாரிகள் கூட 300 யூரோ சம்பளத்திற்கு வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். ஸ்பெயின் முழுவதும் வேலையற்றோர் எண்ணிக்கை 25 %. அதே நேரத்தில், மரினலேடா நகரில் வேலையில்லாமல் யாரும் இல்லை. 

ஸ்பெயினில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வீட்டு மனை சந்தை வீழ்ச்சியடைந்ததால், சொந்தமாக வீடு வாங்குவது கனவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், மரினலேடா நகரில் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். அதற்காக எந்த வங்கியிடமும் வீட்டை அடமானம் வைத்து கடனாளியாகவில்லை. ஒருவர் சொந்த வீடு கட்ட விரும்பினால், அவருக்கு நகர சபை எல்லா வித உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. வீடு கட்டுவதற்கான மொத்த செலவை நீங்கள் தவணை முறையில் கட்டலாம். ஒவ்வொரு மாதமும் 20 யூரோ கட்டினால், சீமெந்து, மண், கல், மரம் எல்லாவற்றையும் நகர சபை கொண்டு வந்து தரும். வீட்டை நீங்களாகவே கட்டிக் கொள்ள வேண்டும். எப்படிக் கட்டுவதென்ற ஆலோசனையும் இலவசமாக கிடைக்கும். 

அப்படியும் யாருக்காவது, வீட்டை தாமாகவே கட்டிக் கொள்ளும் வசதி இல்லையென்றால், மற்றவர்களை பிடித்து கட்டுவிக்கலாம். அதற்காக, நீங்கள் மாதா மாதம் 530 யூரோக்கள் செலுத்த வேண்டும். உங்களது வீட்டை நகர சபையே கட்டிக் கொடுக்கும். சொந்த வீடு கட்டிக் கொள்வதற்கு ஆகும் மொத்த செலவு, ஸ்பெயினின் பிற பகுதிகளை விட குறைவு. வெறும் முப்பதாயிரம் யூரோவுடன் வீடு உங்களுக்கு சொந்தமாகும். மாதா மாதம் கட்டும் தொகை மிக மிகக் குறைவு என்பதால், மொத்த தொகையை கட்டி முடிக்க எழுபது வருடங்கள் ஆகலாம். உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகள் அந்த தொகையை கட்டி முடித்து சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. வீட்டை வேறு யாருக்கும் விற்க முடியாது. எந்த இடைத் தரகருடனும் பேரம் பேச முடியாது. இதனால், அமெரிக்காவில் நடந்தது மாதிரியான, வீட்டு மனை சூதாட்டம், நிதி நெருக்கடி போன்ற குளறுபடிகளுக்கு அங்கே இடமில்லை. 

மரினலேடா நகரில், பிள்ளை வளர்ப்பது பெரும் செலவு பிடிக்கும் விடயமல்ல. வேலை செய்யும் பெற்றோர், குழந்தைகள் காப்பகத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, மாதம் 16 யூரோக்கள் மட்டுமே. பாடசாலை செல்லும் பிள்ளை என்றால், மாதம் 17 யூரோக்கள் செலவாகும். ஆனால், பாடசாலை உணவு விடுதியில் மதிய உணவு கிடைக்கிறது. பாட நூல்கள் இலவசமாக வழங்கப் படுகின்றன. ஜிம்னாஸ்டிக், விளையாட்டு, மற்றும் நீச்சல்குளம் பாவிப்பதற்கு ஒரு சிறிய தொகை மட்டுமே கட்டணமாக அறவிடுகிறார்கள்.

ஆரம்ப பாடசாலை மட்டுமே அங்கே இருப்பதால், உயர் கல்வி கற்பதற்கு பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும். அப்பொழுதும், மாணவர்களுக்கு தேவையான படிப்புச் செலவுகளை நகர சபை பொறுப்பெடுக்கும். அதே போன்று, மருத்துவர், கிளினிக், எல்லாம் அங்கே இலவசமாக கிடைத்தாலும், வெளியிடங்களில் உள்ள வைத்திய சாலைகளுக்கு அனுப்பப் படும் நோயாளிகளுக்கான செலவையும் நகரசபை ஏற்றுக் கொள்கின்றது. முன்பெல்லாம் மரினலேடாவில் இயங்கும் பொதுவுடைமை சமுதாயம் பற்றி, ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்தன. இப்பொழுது பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினை காரணமாக, ஊடகவியலாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. நியூ யார்க் டைம்ஸ் கூட, ஒரு செய்திக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. 

சோஷலிசம் சமூகத்தை முன்னோக்கித் தள்ளும் உந்துசக்தியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும், சேகுவேரா படங்களும், புரட்சிகர கோஷங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன. பாடசாலைக் கல்வியில், சோஷலிசம், மனிதாபிமானம், சமாதானம் போன்ற பண்புகளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். மரினலேடா நகரில் வாழும் மக்கள் அனைவரும், சோஷலிசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால், யாரும் தமது தலைக்குள் திணிக்கப் படுவதாக உணரவில்லை.  மக்கள் எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ளும், நகர சபைக் கூட்டங்களே அதற்கு சாட்சியம்.

மரினலேடா நகரின் ஒவ்வொரு முடிவும், வெகுஜன வாக்கெடுப்பினால் தீர்மானிக்கப் படுகின்றது. புதிதாக தெரு போட வேண்டுமா? பாடசாலை கட்ட வேண்டுமா? அல்லது பற்றாக்குறையான ஒரு பொருளை வெளியில் இருந்து வாங்க வேண்டுமா? சிறு விடயமாக இருந்தாலும், அதனை மக்களே முடிவு செய்கின்றனர். நகர சபை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.

கடந்த முப்பதாண்டுகளாக, ஹுவான் மனுவேல் சஞ்செஸ் மேயராக பதவி வகிக்கின்றார். அவர் ஐக்கிய இடது முன்னணி கட்சியை சேர்ந்தவர். அண்மையில், அந்தக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அந்த நகரில் ஒரு எதிர்க்கட்சியும் இருக்கின்றது. ஸ்பெயினில் மிகப் பெரிய (வலதுசாரி) சமூக-ஜனநாயக கட்சியான சோஷலிசக் கட்சி, சில ஆதரவாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால், அவர்களின் உறுப்பினர்கள் நகர சபையில் மிகக் குறைவு. இருந்தாலும், சஞ்செஸ் நடத்தும் அரசியலை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.

மரினலேடா நகர மக்கள், வெளியுலகம் தெரியாமல் மூடுண்ட சமுதாயமாக வாழ்வதாக யாரும் நினைத்து விடாதீர்கள். அந்த சமூகத்தில் நடக்கும் புதினங்களையும், உலக நடப்புகளையும் மக்களுக்கு அறிவிப்பதற்காக ஒரு தொலைக்காட்சி சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது.  "மரினலேடா டி.வி." (Marinaleda TV, http://www.youtube.com/user/MarinaledaTV), பாலஸ்தீன பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, மற்றும் உலகெங்கும் நடக்கும் மக்கள் எழுச்சிகள் பற்றிய செய்திகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு செய்திகளுக்காக, அது ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க தொலைக்காட்சிகளான கூபா விசியோன், டெலேசூர் போன்ற ஊடகங்களை நம்பியுள்ளது.  Cuba Vision, கியூபாவின் தேசிய தொலைக்காட்சி சேவை. Telesur, வெனிசுவேலாவில் இருந்து ஒளிபரப்பாகின்றது. அதனை "ஸ்பானிய மொழி பேசும், சோஷலிச CNN " என்றும் அழைக்கலாம். 

1700 யூரோக்கள் மாத வருமானம் பெறும் மேயர் சஞ்செஸ், தனது குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு ஒதுங்கி வாழும் அரசியல்வாதியல்ல. இன்றைக்கும் சமூக விடுதலைப் போராட்டங்களில் முன்னுக்கு நிற்கின்றார். அண்மையில், ஸ்பெயினின் இரண்டு வெவ்வேறு நகரங்களில், ஏழைப் பட்டாளத்தை அழைத்துச் சென்று, பல்பொருள் அங்காடிகளை (சூப்பர் மார்க்கட்) சூறையாடினார். அங்கிருந்த பொருட்களை அயலில் வாழும் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பெயர் ஸ்பெயின் முழுவதும் பிரபலமானது. ஊடகங்கள் அவரை "ராபின் ஹூட்" என்று அழைத்தன. சஞ்செஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாகையினால் அவரை பொலிஸ் கைது செய்ய முடியவில்லை. 
  


மேலதிக தகவல்களுக்கு:
1. A Job and No Mortgage for All in a Spanish Town, http://www.nytimes.com/2009/05/26/world/europe/26spain.html?_r=3&pagewanted=all SIGN OF
2.THE TIMES: SPANISH ‘ROBIN HOOD’ ACTIVISTS LOOT SUPERMARKETS, http://www.theblaze.com/stories/sign-of-the-times-spanish-robin-hood-activists-loot-supermarkets/# 
3. Marinaleda: 30 años de lucha (Spanish),  http://www.youtube.com/watch?v=qKTjMocijZQ
4. Marinaleda: La otra España, http://www.redglobe.org/europa/espana/20/2952-marinaleda-la-otra-espana

Spanish "Robin Hood" Mayor Loots Supermark
et 

Monday, May 21, 2012

ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்!

உலகில் இரண்டு இனங்கள், முற்றாக அழித்தொழிக்கப் பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு கீழே உள்ள தாஸ்மானியா தீவில் வாழ்ந்த பழங்குடி இனம், ஆங்கிலேயரால் ஒருவர் விடாமல் இனவழிப்பு செய்யப் பட்டது. இது நடந்தது 19 ம் நூற்றாண்டில். அது ஒரு கருப்பினம். ஆனால், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களைக் கொண்ட, வெள்ளையினம் ஒன்றும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் இனவழிப்பு செய்யப் பட்டது. யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இன்னுமொரு அதிசயம் காத்திருக்கின்றது. அந்த வெள்ளையினம் ஆபிரிக்காவில் வாழ்ந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் பேசிய மொழி திராவிட குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.

காலனிய காலகட்ட வரலாற்றின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. 16 ம் நூற்றாண்டில், ஆபிரிக்க கண்டத்திற்கு அருகில் உள்ள தீவொன்றில் வாழ்ந்த தனித்துவமான இனம் ஒன்றும் முற்றாக அழிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், அதுவே "ஐரோப்பியரின் முதலாவது காலனியப் படையெடுப்பும், முதலாவது காலனிய இனப்படுகொலையும் ஆகும். அங்கிருந்து தான், அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களை காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரும் பயணம் தொடங்கியது. "கிரான் கனாரியா" என்று அழைக்கப்படும் அந்த தீவுக் கூட்டம், இன்று ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் மனத்தைக் கவர்ந்த உல்லாச விடுதிகளால் நிரம்பியுள்ளது. அங்கு உல்லாசமாக பொழுதைக் களிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த மண்ணில் நடந்த இனவழிப்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Tenerife, Fuerto Ventura , இந்தப் பெயர்களை அறிந்திராத இளந் தலைமுறையை சேர்ந்த ஐரோப்பியர்கள் மிகக் குறைவு. வெதுவெதுப்பான காலநிலை, வெள்ளை மணல் கடற்கரை, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவுகள். காதல் ஜோடிகள், இளம் தம்பதிகள் தேனிலவை இன்பமாக கழிப்பதற்கு அங்கே தான் அடிக்கடி செல்வார்கள். இன்று அந்த தீவுகள் ஸ்பெயினுக்கு சொந்தமானவை. ஆனால், ஸ்பெயின் பெருநிலப் பரப்பில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன! அதே நேரம், ஆப்பிரிக்க கண்டத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன. மொரோக்கோ கரையில் இருந்து, வெறும் நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே! அதன் பூகோள அமைவிடம் காரணமாக, ஸ்பெயின் ஆபிரிக்காவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோரி வருகின்றது. இன்று அந்த தீவின் சனத்தொகையில் பெரும் பகுதி, ஸ்பெயினில் இருந்து வந்து குடியேறியவர்களின் வம்சாவளியினர் ஆவர். ஸ்பெயின் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்திரா விட்டால், அதுவும் தென் ஆப்பிரிக்கா போன்று ஒரு "வெள்ளையர் குடியேறிய நாடாக" கணிக்கப் பட்டிருக்கும்.

15 ம் நூற்றாண்டில், அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடிக்க கிளம்பிய கொலம்பஸின் கப்பல்கள், முதலில் கிரான் கனாரியா தீவுகளுக்கு சென்று தான் பயணத்தை தொடர்ந்தன. அந்த தீவுகளுக்கு அருகில் ஓடும் கடல் நீரோட்டம், தென் அமெரிக்கா வரையில் கொண்டு சென்று விடும். அதற்கு முன்னரே, போர்த்துகீசிய அல்லது ஸ்பானிய மாலுமிகள், அந்த தீவை கண்டு பிடித்திருந்தனர். அப்போதிருந்தே, ஸ்பானிய குடியேற்றவாசிகள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வருகையின் போது, அந்த தீவுகள் வெறுமையாக இருக்கவில்லை. அங்கு "குவாஞ்சே" (Guanche) என்றழைக்கப்படும் இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த நூறாண்டுகள், பூர்வீக மக்களும், ஸ்பானிய குடியேற்றவாசிகளும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். ஆயுதபலம் மிக்க ஐரோப்பியர்கள், கண்ணில் பட்ட குவாஞ்சே மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். நூறாண்டுகளாக தொடர்ந்த இனவழிப்புப் போரின் இறுதியில், மோசமான தொற்று நோய் ஒன்று பரவியது. வெட்ட வெளியில் கொன்று போடப்பட்ட சடலங்களில் இருந்தே, அந்த நோய்கிருமிகள் தோன்றி இருக்க வேண்டும். 16 ம் நூற்றாண்டின் இறுதியில், அந்த தீவுகளில் ஒருவர் கூட மிஞ்சாமல், பூர்வகுடி மக்கள் முற்றாக துடைத்தழிக்கப் பட்டனர்.

கிரான் கனாரியாவின் பூர்வ குடிகள் பற்றிய தகவல்கள், மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. அதனால் இன்றளவும், அவர்களை "மர்மமான பழங்குடி இனம்" என்றே குறிப்பிடுகின்றனர். பெருமளவு தகவல்கள், ஸ்பானிய குடியேற்றவாசிகளிடம் இருந்தே கிடைக்கப் பெற்றாலும், ரோமர் காலத்தில் மொரிட்டானியாவை (அல்லது மொரோக்கோ) ஆட்சி செய்த மன்னன் ஜூபா, சில குறிப்புகளை எழுதியுள்ளான். அதிலும், அந்த தீவுகளின் அமைவிடம் பற்றியே குறிப்பிடப் படுகின்றது. பூர்வகுடிகளான குவாஞ்சே மக்கள், முன்பு ஆப்பிரிக்க பெருநிலத்தில் வாழ்ந்து வந்ததாகவும், ஜூபா மன்னனால் சிறைப் படுத்தப் பட்டு நாடு கடத்தப் பட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர். முன்பு வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடிகள், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக ஒடுக்கப் பட்டு, கிரான் கனாரியா தீவுகளுக்கு தப்பியோடி, அவற்றை தமது புகலிடமாக்கி இருப்பார்கள், என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கின்றது. எது எப்படி இருப்பினும், கிரான் கனாரியாவின் பூர்வீக மக்களுக்கும், ஆபிரிக்காவுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனை உறுதிப் படுத்தும் தரவுகளை பின்னர் பார்ப்போம்.

கிரான் கனாரியா பூர்வகுடி மக்கள், கற்கால மனிதர்களைப் போல குகைகளில் வாழ்ந்தார்கள். ஆனால், சில தீவுகளில் கற்களைக் கொண்டு வீடுகள் கட்டப் பட்டிருந்தன. அனேகமாக, எல்லா தீவுகளிலும் பரவலாக காணப்பட்ட விசாலமான குகைகள், வீடு கட்டி வாழ வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்க மாட்டாது. அந்த மக்கள் குகைகளில் வாழ்ந்தாலும், ஆட்டுத் தோல் உடுத்தினாலும், "நாகரீகம் அடைந்திருக்கவில்லை" என்று கூற முடியாது. குடிமக்களை ஆட்சி செய்ய அரசர்களும், சட்டவிதிகளும் இருந்துள்ளன. அரசர்களும் குகைகளில் தான் வாழ்ந்தனர். பொதுவுடமைப் பொருளாதாரம் நிலவியது. குவாஞ்சே மக்கள், சிறந்த போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். சுமார் பத்தடி நீளமான தடியொன்றை ஊன்றிய படி, மலைப் பாறைகளை தாண்டி பாய்வதில் வல்லவர்கள். குவாஞ்சே மக்கள், தமது இறந்த உறவினர்களின் உடல்களை, எகிப்திய 'மம்மி' போன்று பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவக் கலை அறிந்திருந்தனர். பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், ஏராளமான மம்மிகளை அழித்து விட்டனர். இருந்தாலும், இன்றைக்கும் சில அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. எகிப்தில் இருப்பதைப் போன்று, கனாரி தீவுகளிலும் "பிரமிட்" கட்டிடங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் அழியாமல் பேணிப் பாதுகாக்கப் படும், பிரமிட்களை கட்டியவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கின்றது.
குவாஞ்சே மக்கள், பல தீவுகளில் தனித்து வாழ்ந்தாலும், ஒரே மொழி பேசினார்கள். அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்பது ஒரு சிறப்பம்சம்! கிட்டத்தட்ட அதே மாதிரியான மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். எழுத்து கூட ஒற்றுமையைக் கொண்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வாழும், துவாரக் இன மக்கள், பெர்பர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்களது அமாசிக் மொழியும், எழுத்தும் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. (துவாரக் இனமக்களைப் பற்றி அறிவதற்கு, நான் முன்பு எழுதிய சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை என்ற கட்டுரையை வாசிக்கவும்.) இன்றைய மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியாவில் வாழும் "பெர்பர்கள்" என்ற இனம், ஒடுக்கப்படும் சிறுபான்மையினமாக உள்ளது. "பெர்பர்கள்" என்ற சொல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் சூட்டிய இழிவுப் பெயராகும். இன்று, அவர்கள் பேசும் மொழியின் பேரில், "அமாசிக்" இனம் என்று அழைக்கப் படுகின்றனர். அமாசிக் மொழிக்கும், அந்த பிராந்தியத்தில் பேசப்படும் அரபி மொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு சொல் கூட ஒற்றுமையில்லை! எழுத்து வடிவத்தில் கூட, ஆங்கிலமும், சீன மொழியும் போன்று, மிகப் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம், அமாசிக் மொழிக்கும், கிரான் கனாரியா பூர்வகுடிகளின் மொழிக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.

மொழியியல் அறிஞர்கள் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார்கள். கனாரி தீவுகளில் பேசப்பட்ட மொழிக்கும், திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டுகின்றனர். பல சொற்களுக்கு இடையில் ஒற்றுமை இருப்பது, ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. குவாஞ்சே மக்கள் பேசிய மொழியின் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது. அநேகமான சொற்கள், பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரரால், அவர்களின் உச்சரிப்புக்கேற்ப தொகுக்கப் பட்டன. பொதுவாகவே, ஐரோப்பிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல சொற்களின் ஒற்றுமை மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கின்றன. Ere (குவாஞ்சே) - ஏரி(தமிழ்), Atidamane (அரசி) - ஆதி அம்மன், Xerco (காலணி) - செருப்பு, Irrichen (தானியம்) - அரிசி.... இப்படிப் பல. (மேலதிக தகவல்களுக்கு: குவாஞ்சே மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள்) இந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, "முன் தோன்றிய மூத்த குடி தமிழினம்" என இனப் பெருமிதம் பேசுவது எமது அறியாமையைக் காட்டுகின்றது. மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். அது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஒரு மொழியானது பல்வேறு இனங்களுக்குள்ளும் பரவக் கூடியது.

வட ஆப்பிரிக்காவின் அமாசிக் மக்களுக்கும், கிரான் கனாரியாவின் குவாஞ்சே மக்களுக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமை, அவர்களது தோற்றம். இன்றைக்கும் அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியாவில் வாழும், அமாசிக் (பேர்பர்) மக்கள், ஐரோப்பிய வெள்ளயினத்தின் உடற்கூறுகளை கொண்டுள்ளனர்! வெள்ளயினத்திற்கே உரிய சிறப்பம்சம் என்று கருதப்படும், வெளுப்பான தோல் நிறம், நீலக் கண்கள், செந்நிறத் தலைமுடி, போன்ற உடற்கூறுகளை கொண்ட மக்களை நீங்கள் இன்றைக்கும் அங்கே பார்க்கலாம். கிரான் கனாரியா தீவுக் கூட்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி இனமும், வெள்ளையரைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை பிற்காலத்தில் வந்த ஸ்பானிய குடியேற்றவாசிகளும் குறித்து வைத்துள்ளனர். பெரும்பாலும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் கொண்ட ஆபிரிக்க கண்டத்தில், பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் வெள்ளையினம் எப்படித் தோன்றியது? இந்தக் கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. உலகில் இன்னமும் துலங்காத மர்மங்களில் அதுவும் ஒன்று.

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். மனிதர்களை கருப்பு, வெள்ளை என்று இனம் பிரித்துப் பார்க்கும் வழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. அண்ணளவாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு, தோல் நிறம் முக்கியமானதாகத் தெரியவில்லை. அதனால், "வெள்ளையர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? கருப்பர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?" என்றெல்லாம் அன்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. இயற்கை வளங்களுக்கான போட்டியே, மனித இன வரலாற்றில் முக்கியமானதாக இருந்துள்ளது. இனத் தூய்மை பற்றி பேசும் கடும்போக்காளர்கள் கூட, இறுதியில் பொருளாதாரத்தில் குறியாக இருப்பார்கள். வரலாறு அதனைத் தான் எமக்கு கற்பித்துள்ளது.

காலனித்துவ காலம் முழுவதும், வெள்ளையின நிறவெறியை நிலைநிறுத்த பாடுபட்ட காலனியாதிக்கவாதிகள், எதற்காக ஒரு வெள்ளயினத்தை பூண்டோடு அழித்தார்கள்? அது மட்டுமா? வட ஆப்பிரிக்காவில் இலட்சக் கணக்கில் வாழ்ந்த வெள்ளையின மக்களையும், காலனிய அடிமைகளாகத் தானே வைத்திருந்தார்கள்? அவர்களை "சகோதரர்களாக" நடத்தும் எண்ணம் ஏன் தோன்றவில்லை? பூமியில் அரிதாகக் கிடைக்கும் நிலம், உணவு போன்ற வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டி, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்கின்றது. "இனவுணர்வு","மொழியுணர்வு", "தேசிய உணர்வு", "மத உணர்வு"..... இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட குழுவின் பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக போடப்படும் திரைகள் ஆகும்.





Friday, April 27, 2012

ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா


இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு, சில வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. ஸ்பெயின் ஆட்சியைப் பிடிக்க விரும்பிய பாசிச படைகளை எதிர்த்து பல்வேறு இடதுசாரிக் குழுக்கள் போராடின. ஸ்பெயினின் சில பகுதிகள் பாசிச இராணுவக் கட்டுப்பாட்டின் கீழும், சில பகுதிகள் இடதுசாரிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்துள்ளன. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், சித்தாந்த அடிப்படையில் பிரிந்திருந்தனர். ஸ்டாலினிசவாதிகள், ட்ராஸ்கிசவாதிகள், அனார்கிசவாதிகள், மிதவாத சமூக-ஜனநாயக வாதிகள்,  ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள், விவசாயிகள் என்று அனைத்து பாட்டாளி வர்க்க மக்கள் கைகளிலும் ஆயுதங்களை வழங்கினார்கள். கிராமங்கள், நகரங்கள் தோறும், பாட்டாளிவர்க்க அதிகார சபைகள் ஏற்படுத்தப் பட்டன. பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகம்  மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

ஸ்பானிய புரட்சியில் இணைந்து கொள்வதற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சென்ற வெளிநாட்டு தொண்டர்களின் அனுபவத்தை கூறும் திரைப்படம் Land and Freedom.
பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட, இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட படங்களை தயாரித்த, Ken Loach    இயக்கிய சிறந்த திரைப்படங்களில் ஒன்று. ஸ்பெயின் புரட்சியாளர்களுக்கு ஸ்டாலின் ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருந்த போதிலும், ஸ்டாலினிசம் போராட்டத்தின் தோல்விக்கு காரணம் என்பது இயக்குனரின் வாதம். இருப்பினும், தோல்வியடைந்த புரட்சிக்கு காரணம் என்று, ஒவ்வொரு இடதுசாரி இயக்கமும் ஒன்றை மற்றொன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை ஸ்பானிய மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், இடதுசாரி இயக்கத்தினுள்  நிலவிய ஒற்றுமையின்மை காரணமாக, இறுதியில் பாசிச சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றின. எதிர்காலப் புரட்சியாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் சில, இந்த சினிமாவில் இருக்கலாம். 

Saturday, May 21, 2011

மூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி

மே 15 , ஞாயிற்றுக் கிழமை, ஸ்பெயின் நாட்டில் மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது. பெரியதும், சிறியதுமான ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். "எமக்குத் தேவை நிஜமான ஜனநாயகம்", "நாங்கள், அரசியல்வாதிகளினதும், வங்கியாளர்களினதும் வியாபாரப் பண்டங்கள் அல்ல." என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. தற்போது இந்த மக்கள் எழுச்சி நிரந்தர வடிவம் பெற்று வருகின்றது. எகிப்து, கெய்ரோ தஹீர் சதுக்கத்தில் நடனத்தைப் போல, ஸ்பானிய நகர சதுக்கங்களில் கூடாரங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.

துனிசியாவில், எகிப்தில் நடந்த அதே பாணியில், ஸ்பானிய மக்கள் போராட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. "Democracia Real Ya" என்ற அமைப்பு, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டியது. பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த அரச செலவினைக் குறைப்புகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். போராட்ட இயக்கம், அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றது. "மக்கள் ஜனநாயகம்" மலர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. ஸ்பெயின் ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை சந்தித்த நாடென்பதால், ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்ட செலவுகளை சில மர்மமான நிறுவனங்கள் கொடுக்கின்றனவா? போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா? கைது செய்யப்பட்ட நபர்களை, "இயக்கம்" கைவிட்டு விடுமா?

மாட்ரிட் நகரைத் தவிர, பிற இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. மாட்ரிட் நகரில், கலகத் தடுப்பு போலிஸ் ஆர்ப்பாட்டக் காரரை அகற்றுவதற்கு பெரு முயற்சி எடுத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். மே 17 அன்று, கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக போலிஸ் தலைமையாக வாசலில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மே 17, வெள்ளிக்கிழமை, கல்வி தனியார் கைகளில் வணிக மயப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரங்களில் வருமானம் குறைந்தோருக்கு ஏற்ற வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருகின்றது. வீட்டுப் பிரச்சினை குறித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்தினார்கள். வங்கிகளுக்கு முன்னால், சிறு சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கியாளர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.







Manifesto (English)

We are ordinary people. We are like you: people, who get up every morning to study, work or find a job, people who have family and friends. People, who work hard every day to provide a better future for those around us.

Some of us consider ourselves progressive, others conservative. Some of us are believers, some not. Some of us have clearly defined ideologies, others are apolitical, but we are all concerned and angry about the political, economic, and social outlook which we see around us: corruption among politicians, businessmen, bankers, leaving us helpless, without a voice.

This situation has become normal, a daily suffering, without hope. But if we join forces, we can change it. It’s time to change things, time to build a better society together.

Therefore, we strongly argue that:
The priorities of any advanced society must be equality, progress, solidarity, freedom of culture, sustainability and development, welfare and people’s happiness.
These are inalienable truths that we should abide by in our society: the right to housing, employment, culture, health, education, political participation, free personal development, and consumer rights for a healthy and happy life.
The current status of our government and economic system does not take care of these rights, and in many ways is an obstacle to human progress.

Democracy belongs to the people (demos = people, krátos = government) which means that government is made of every one of us. However, in Spain most of the political class does not even listen to us. Politicians should be bringing our voice to the institutions, facilitating the political participation of citizens through direct channels that provide the greatest benefit to the wider society, not to get rich and prosper at our expense, attending only to the dictatorship of major economic powers and holding them in power through a bipartidism headed by the immovable acronym PP & PSOE.

Lust for power and its accumulation in only a few; create inequality, tension and injustice, which leads to violence, which we reject. The obsolete and unnatural economic model fuels the social machinery in a growing spiral that consumes itself by enriching a few and sends into poverty the rest. Until the collapse.
The will and purpose of the current system is the accumulation of money, not regarding efficiency and the welfare of society. Wasting resources, destroying the planet, creating unemployment and unhappy consumers.
Citizens are the gears of a machine designed to enrich a minority which does not regard our needs. We are anonymous, but without us none of this would exist, because we move the world.

If as a society we learn to not trust our future to an abstract economy, which never returns benefits for the most, we can eliminate the abuse that we are all suffering.
We need an ethical revolution. Instead of placing money above human beings, we shall put it back to our service. We are people, not products. I am not a product of what I buy, why I buy and who I buy from.

For all of the above, I am outraged.
I think I can change it.
I think I can help.
I know that together we can.I think I can help.
I know that together we can.

Wednesday, April 28, 2010

ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்

"அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் சூடுபிடித்திருந்தது. வரவிருக்கும் ஆண்டுகளில் தமது திட்டங்களை ஆளும் கட்சி அறிவித்துக்கொண்டிருந்தது. திடீரென பாராளுமன்றத்தினுள் சில இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் உள் நுழைந்தனர். அவர்களில் அதிகாரி போலிருந்தவர் சபாநாயகரின் ஒலிவாங்கியைப் பறித்து அரசாங்கத்தை திட்டித்தீர்த்தார். தொடர்ந்து பல கூக்குரல்கள், அதைத் தொடர்ந்து சடசடவென வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் கதிரைகளின் கீழ் ஒழிந்து கொண்டனர்.

வானொலியில் பாராளுமன்ற நடப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வதந்திகள் காட்டுத்தீபோல் நாடு முழுவதும் பரவின. தலைநகரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இராணுவமும் பொலிஸ{ம் ஆக்கிரமித்துக்கொண்டன. ஆழும் கட்சியான சோஷலிசக் கட்சியின் தலைமையலுவலகத்திற்கு முன்பு கவச வாகனத்தின் பீரங்கி குறிபார்த்தது . பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குள் பதுங்கினர். "

மேற்படி சம்பவம் நடந்தது எங்கோ ஒரு "அபிவிருத்தியடையாத" மூன்றாம் உலக நாட்டில்அல்ல. "அபிவிருத்தியடைந்த" மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 1981 ம் ஆண்டு பெப்ரவரி 23 ம்திகதி இது நடைபெற்றது. ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி, கிறீஸ் போன்று ஸ்பெயினிலும் உண்மையான ஆட்சியதிகாரம் திரைமறைவில் இராணுவத்தின் கைகளில்தான் இருக்கிறது. என்னதான் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் இராணுவத்தை பகைக்காத வகையில் ஆட்சியில் நிலைக்கலாம். 1981 ம்ஆண்டு ஸ்பெயினில் இராணுவச் சதிப்புரட்சிக்கான சந்தர்ப்பம் இருந்த போதும் அது வெறும் எச்சரிக்கையுடன் நின்று விட்டது.

ஸபெயினில் இராணுவத்தின் ஆதிக்கம் உள்நாட்டுப் போரில் இருந்தே நிலைத்து வருகின்றது. ஸ்பெயின் உள்நாட்டுப்போர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்றும், பல சரித்திரவாசிரியர்களால் கூறப்படுகின்றது. ஒருபுறம் வலதுசாரிப் பாஸிச இராணுவமும், மறுபுறம் இடதுசாரி ஆயுதக் குழுக்களும் கோடிக்கணக்கான மக்களைப் பலி கொண்ட போரில் ஈடுபட்டிருந்தன. 1936 ம் ஆண்டு யூலையில் ஆரம்பமாகியது இப் போர். நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மன்னர் அல்போன்சோ, அந்த வருடம் பொதுத் தேர்தலை அறிவித்தார். அந்தத் தேர்தலில் லிபரல்களும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் மாபெரும் வெற்றியீட்டினர். வெற்றியீட்டிய கடசிகள் "மக்கள் முன்ணணி" அல்லது "குடியரசுவாதிகள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முடியாட்சியை ரத்ததுச் செய்துவிட்டு குடியரைப் பிரகடனம் செய்தனர். கத்தோலிக்க மதத்தின் பிடியில், நிலவுடைமைச் சமுதாயம் நிலவிய ஸ்பெயினில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அறிவித்தனர். வரவிருக்கும்ஆபத்தையுணர்ந்துகொண்ட மன்னர் குடும்பத்தோடு நாட்டை விட்டோடினார்.

புதிய இடதுசாரி அரசாங்கத்தின் முடிவுகளில் அதிருப்தியுற்ற கத்தோலிக்கத் தேவாலயங்கள், முடியாட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் ஸ்பானியப் பாசிசக்கட்சியான ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையில் ஒன்று திரண்டனர். வலது சாரிப் பிற்போக்குவாதிகள் நிறைந்திருந்த ஸ்பானிய இராணுவம் அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்ததது. ஃபலாங்கிஸ்டுக்கள் இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தினர். ஜெனரல் பிராங்கோவின் தலைமையில் ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் தெற்கு ஸ்பெயினிலும், மொறோக்கோவிலும் (ஸ்பெயின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள்) இராணுவ முகாம்களை தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஸ்பெயினின் (மறக்கப்பட்ட) உள்நாட்டுப்போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது. அதே காலத்தில் இத்தாலியில் முசோலினியின் பாஸிசக்கட்சியும், ஜேர்மனியில் ஹிட்லரின் நாஸிக்கட்சியும் ஆட்சி நடாத்தின. இவர்கள் ஸபெயினில் தமது தோழர்களான ஃபலாங்கிஸ்டுக்களுக்கு மனமுவந்து உதவி செய்தனர். இத்தாலியின் காலாட்படையினரினதும், ஜேர்மன் விமானப் படையினரினதும் உதவியோடு ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையிலான இராணுவம் விரைவிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஸ்பெயினின் பல இடங்களைக் கைப்பற்றினர். தலைநகரமான மட்றிட் இரண்டாவது பெரிய நகரமான பார்சலோனா உட்பட கிழக்கு ஸ்பெயினில் குடியரசுவாதிகளும், இடதுசாரிக்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தினர். லிபரல்கள் தலைமை தாங்கிய குடியரசுவாதிகளின் அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்து வந்தது. ஆனால், "நடுநிலைமை" வகித்த இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் வற்புறுத்தலால் பிரான்ஸ் தனது ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. "சர்வதேச சமூகத்தால்" கைவிடப்பட்ட நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கினாலும் அரசாங்கம் சோவியத் யூனியனின் உதவியை நாடவேண்டியேற்பட்டது.

இதேவேளை மொஸ்கோவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பான "கொமின்தேர்ன்" ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் தலையிடுவதென முடிவு செய்தது. அன்றைய சோவியத் யூனியன் அதிபரான ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ஆயுதத் தளபாடங்கள் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன. உள்நாட்டுப் போரின் வரலாற்றில் ஸ்பெயின் குடியரசு அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரேயொரு வெளிநாட்டு உதவி சோவியத் யூனியனிலிருந்துதான் வந்தது.

இதைவிட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் இருந்த கம்யூனிஸ்ட்கட்சிகள் தத்தமது நாடுகளில் தொண்டர்படைக்கு ஆட்களைத் திரட்டினர். குறிப்பாக அமெரிக்காவிலிருந்து "ஆபிரகாம் லிங்கன் படைப்பிரிவு" ஒரு கறுப்பினக் கொமாண்டரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். பன்னாட்டுத்தொண்டர் படைகள் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் போரிட்டனர். இதே நேரம் காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட குடியரசு அரசாங்கம் மக்கள் ஆயுதக் குழுக்களை அமைக்க அனுமதி வழங்கியது. அரசாங்கத்திற்கு ஆதரவான இராணுத்தினர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அரச ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அப்போதிருந்த பிற இடதுசாரிச் சக்திகளான அனார்கிஸ்டுகளும், ட்ரொட்கிஸ்டுகளும் தத்தமது மக்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கினார்கள்.

ஆரம்பத்தில் சகல இடதுசாரிக் குழுக்களும் குடியரசு அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கின. இருப்பினும் தத்தமது ஆதிக்கத்திற்குட்பட்ட இடங்களில் "கொம்யூன்" என அழைக்கப்படும் மக்களாட்சியை நிறுவினர். கிராமிய நகர மட்டங்களில் சாதாரண மக்கள் நேரடியாகப் பங்குபற்றும் நிர்வாகங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு ஸ்பானிய உள்நாட்டுப் போர் பாஸிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாகவும் கலாச்சாரப் புரட்சியாகவும் அமைந்தது. மறுபக்கத்தில் பாஸிஸ்டுகள் தம்மைத் தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள இந்தச் சம்பவங்கள் வழிசமைத்தன. "கம்யூனிச அபாயத்திலிருந்து தாய் நாட்டைக் காக்க போராடுவதாக அவர்கள் கூறிக்கொண்டார்கள். மேலும் அரசியல் அதிகாரத்தை இழந்த கத்தோலிக்கத் திருச்சபை அவர்களின் பக்கம் நின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் பிரஞ்சு எல்லையோரமாக பாஸ்க் மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாகவே ஸ்பெயினின் ஒற்றையாட்சிக்கெதிராக சுதந்திரம் கோரிப் போராடி வருகின்றனர். ஸ்பானிய உள்நாட்டுப்போர் அவர்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கவே "எயுஸ்கடி" என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்தனர். ஸ்பெயின் குடியரசு அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் இந்தத் தனியரசு ஓரிரு வருடங்களே நிலைத்து நிற்க முடிந்தது. ஃபலாங்கிஸ்டுக்களின் உதவிக்கு வந்த ஜேர்மனியப் போர் விமானங்கள் பாஸ்க் மக்களின் பிரதான நகரமான குவேர்னிக்கா மீது குண்டு மழை பொழிந்தன. இந்நகரின் அழிவைப்பற்றிக் கேள்வியுற்ற பிரபல ஓவியரான பிக்காஸோ உலகப்பிரசித்தி பெற்ற குவேர்னிக்கா ஓவியத்தை வரைந்தார்.

அதிக ஆயுத பலமற்ற, மேலும் வெளியிடத்திலிருந்து ஆதரவு கிடைக்காத ("அவர்களுக்குத் தனி நாடு வேண்டமானால், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்" என்பது குடியரசுப்படைகளின் கருத்தாக இருந்தது) பாஸ்க் தனியரசு முன்னேறிய வலது சாரிப்படைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அகப்பட விரும்பாத பாஸ்க் மக்கள் துறைமுகத்தில் புறப்படவிருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டனர். இவ்வாறு கப்பலொன்றில் அளவுக்கதிகமான ஆட்கள் தப்பினால் போதுமென்ற நோக்கில் ஏறிக்கொள்ளவே, பாரந்தாங்காமல் நடுக்கடலில் போன கப்பல் அப்படியே தாழ்ந்து போனது. கப்பலில் போன அனைவரும் ஜலசமாதியாகினர். உலகப்பிரசித்தி பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையை விடத் துயரமான இந்தச் சம்பவத்தை இதுவரை யாரும் திரைப்படமாக்க முன்வரவில்லை. டைட்டானிக்கில் பயணித்தவர்கள் பணக்கார உல்லாசப் பயணிகள், பாஸ்க் கப்பலில் போனவர்கள் சபிக்கப்பட்ட சாதாரண அகதிகள் என்ற பாகுபாடுதான் காரணமா ?

1939 ல் முடிவுக்கு வந்த ஸ்பானிய உள்நாட்டுப்போரின் இறுதியில் பாஸிச இராணுவம் வெற்றிவாகை சூடியது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. இடதுசாரிக் குழுக்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மை ஒரு முக்கிய காரணம். (சோவியத் சார்பு) கம்யூனிஸ்டுகள், ஸ்ரொட்கிஸ்டகள், அனார்கிஸ்டுகள் எனப்பிரிந்திருந்த இவர்களால் ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்தை கொண்டவர முடியவில்லை. சில இடங்களில் முரண்பாடுகள் காரணமாக இந்தக் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டன. பாஸிச இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்ததாக ஒருவரையொரவர் இவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வாக்குவாதம் இன்றுவரை தொடர்கிறது. இன்னொரு காரணம் ஃபலாங்கிஸ்டுக்களுக்கு நாஸி ஜேர்மனியும், பாஸிச இத்தாலியும் பகிரங்கமாக உதவி செய்தமை தெரிந்த போதும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் "நடுநிலைமை" என்ற பெயரில் பாராமுகமாக இருந்தனர். மேலும் அதேகாலகட்டத்தில் ஜேர்மனிக்கு எதிரான நேச நாடுகளின் அணி உருவாகியது. இதில் அங்கம் வதித்த சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசு அரசாங்கத்திற்கான உதவியை நிறுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இதைவிட சர்வதேசத் தொண்டர் படையை திருப்பியனுப்புமாறு குடியரசு அரசாங்கத்தை இணங்க வைத்தனர்.

எது எப்படியிருப்பினும், மூன்றுவருடப்போரின் முடிவில் ஃபலாங்கிஸ்டுக்களின் இராணுவம் ஸ்பெயினின் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. குடியரசு அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் பிரான்ஸிற்கும் பிற நாடுகளுக்கும் அகதிகளாகத் தப்பியோடினர். 7 ம்திகதி ஏப்பிரல் மாதம் 1939 ம் ஆண்டு ஜெனரல் ஃபிராங்கோவினால் போரின் முடிவு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பாஸிஸ இராணுவ சர்வாதிகார ஆட்சி ஆரம்பமாகியது. ஸ்பானிய சமூகத்தை இரண்டாகப் பிளவு படுத்திய உள்நாட்டு யுத்தத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரெதிர் முகாங்களில் நின்று போரிட்டனர். அன்று பிரிந்த சகோதரர்களில் பலர் இன்று ஜனநாயகச் சூழல் வந்த நிலையிலும் ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசாத நிலையிலுள்ளனர்.

1939 லிருந்து 1975 வரை சமார் நாற்பது ஆண்டு காலம் நீடித்த பாஸிசச் சர்வாதிகார ஆட்சியின்போது குடியரசு ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல்போனார்கள். இவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடக்கம். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டு இரகசியப் புதைகுழிகளினுள் புதைக்கப்பட்டனர். நாடுமுழுவதும் இவ்வாறு நூற்றுக்கணக்கான இரகசியப் புதைகுழிகள் உள்ளன. சில இடங்களில் 5000 த்திற்கும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அண்மையில் ஓரிடத்தில் அணைக்கட்டு நிர்மாணப் பணிகள் நடந்தபோது அங்கே மனிதப் புதைகுழி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நாடளாவிய சர்ச்சையைக் கிளப்பியது.

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீரகள். இவற்றிற்குக் கிடைக்கும் சர்வதேச முக்கியத்துவம் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகளைப் பற்றி மட்டுமே உலக மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், 1975 ம் ஆண்டு ஃபிராங்கோவின் மரணத்திற்குப்பின்பு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் ஸ்பெயினில் இடம்பெற்ற மனித உரிமைகள் பற்றி யாருமே அக்கறை காட்டவில்லை. ஒரு சில மனித உரிமை நிறுவனங்கள் இரகசிய மனிதப்புதைகுழிகளை தோண்ட உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்போட்டும், எந்தவொரு நீதிபதியும் அதைப்போய்ப் பார்க்கவில்லை.

இந்த அக்கறையின்மைக்கு என்ன காரணம் ? ஃபிராங்கோ காலத்தில் கொலை, சித்திரவதைகளில் சம்பந்தப்பட்ட எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரியும் இதுவரை ஏன் கைதுசெய்யப்படவில்லை ? பலமான இராணுவத்திற்கு எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவதுதான் அதற்குரிய காரணம். மன்னர் ஹுவான் கார்லோஸ் கூட இன்றும் ஃபிராங்கோ பற்றி உயர்வாகப் பேசுவார். ஸ்பெயினை ஜனநாயகப்படுத்தியதில் மன்னரின் பங்கு பிரதானமானது. கடந்தகால சர்வாதிகார ஆட்சியை மன்னித்து மறந்து விடுமாறு சத்தியம் வாங்கிய பின்னர்தான் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன. மீண்டும் ஒரு இராணுவச் சதிப்புரட்சி ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. அதனால்தான் பழசையெல்லாம் மறந்து விடுவோம் என்று பெருந்தன்மையோடு இருக்கிறார்கள்.

ஸ்பானிய இராணுவத்தில் இன்றும் கூட பாஸிஸ பிற்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சோஷலிச அல்லது குடியரசுக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிலவிய காலத்தில், அமெரிக்கா ஸ்பெயினை நேட்டோ அமைப்பில் சேர்த்து அங்கீகரித்தது. ஸ்பானிய இராணுவம் நீண்ட காலமாகவே தன்னை நவீனமயப்படுத்திக் கொள்ள ஆதரவாகவிருந்தது. அதற்கு நேட்டோ உறுப்புரிமை வழிவகுத்துக் கொடுத்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இராணுவத் தளபாடங்கள் வாங்குவதற்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கித் தருகிறது. ஈராக் போரின் போது காரணமில்லாமல் ஸ்பெயின் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கவில்லை.