Showing posts with label புரட்சி. Show all posts
Showing posts with label புரட்சி. Show all posts

Tuesday, May 19, 2020

பிரித்தானியாவில் நடந்த "கேப்டன் ஸ்விங் புரட்சி"!


மார்க்சியத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் விமர்சிப்பவர்கள் பலருண்டு. "கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டு நூற்றைம்பது ஆண்டுகள் ஆகியும் ஐரோப்பாவில் புரட்சி நடக்கவில்லை தானே?" என்று ஒரு சிலர் தங்களை புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு கேள்வி கேட்பார்கள். இது அவர்களது அறியாமை காரணமாக உருவான தப்பெண்ணம்.


 இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில் 1830 ம் ஆண்டு ஆங்கிலேய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒரு வன்முறைப் புரட்சியில் ஈடுபட்டனர். இது கேப்டன் ஸ்விங் புரட்சி (Captain Swing Riots) என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் பெயர் வரக் காரணம் உள்ளது. தென் இங்கிலாந்தில் முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கைக் கடிதங்கள் யாவும் கேப்டன் ஸ்விங் என்ற பெயரால் ஒப்பமிடப் பட்டிருந்தன. அது புரட்சியாளர்கள் உருவாக்கிய ஒரு கற்பனைப் பாத்திரம். சொத்துடமை வர்க்கத்தினரின் இயந்திரங்கள், வீடுகளை எரிக்கப் போவதாக அந்தக் கடிதங்களில் குறிப்பிடப் பட்டிருந்தன. அதே மாதிரி பல இடங்களில் எரித்து சேதப் படுத்தப் பட்டன.

கேப்டன் ஸ்விங் புரட்சியானது பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சியின் எதிர்விளைவு எனலாம். தொழிற்புரட்சிக் காலத்தில் முதலாளிகள் புதிய இயந்திரங்களை உருவாக்கி தொழிற்துறைகளில் ஈடுபடுத்தி வந்தனர். அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். குறிப்பாக வயல்களில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலிகள் செய்து வந்த அதே வேலையை ஒரு இயந்திரம் செய்தது. இதனால் நாட்டுப்புறங்களில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வேலையிழந்தவர்கள் மட்டுமல்லாது, வேலை செய்தவர்கள் கூட வறுமையில் வாடினார்கள். காரணம், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலி மிகவும் குறைவு.

இதனால் வெகுண்டெழுந்த உழைக்கும் மக்கள் நவீன கண்டுபிடிப்புகளான விவசாய இயந்திரங்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அது மட்டுமல்ல பண்ணையார்கள், நிலவுடமையாளர்களின் வீடுகளும், சொத்துக்களும் எரிக்கப் பட்டன. அந்த நேரத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், என்று அயலில் இருந்த ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகள் நடந்து விட்டிருந்தன. பிரித்தானியாவிலும் அதே பாணியில் புரட்சி நடக்கப் போகிறது என்று ஆட்சியாளர்கள் அஞ்சினார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டனில் பாராளுமன்றம் இருந்தாலும், தேர்தல்கள் நடப்பதில்லை. அது மக்களுக்கு கடமைப்படாத ஒரு சர்வாதிகார அரசு. அப்போது ஆட்சியில் இருந்த டொரி கட்சியினர் (தற்கால கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னோடி) வெளிப்படையாகவே முதலாளிகளுக்கு சார்பாக நடந்து கொண்டனர். அவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கிளர்ச்சியை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஆயிரக் கணக்கான புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். குறைந்தது இருபது பேருக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அன்றைய புரட்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஏழைகள், அன்று சிறைக் காலனியாக இருந்த அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப் பட்டனர்.

இருப்பினும் கேப்டன் ஸ்விங் புரட்சி சில வெற்றிகளையும் பெற்றுத் தந்தது. விவசாய கூலித் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப் பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இயந்திரங்களின் பாவனை தடுக்கப் பட்டது. மேலும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தடைச்சட்டம் நீக்கப் பட்டது. போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை. அன்று பிரிட்டிஷ் கூலித் தொழிலாளர்கள் போராடி வாங்கித் தந்த உரிமைகளை தான் நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோம். இங்கிலாந்தில் நடந்த கேப்டன் ஸ்விங் புரட்சி குறித்து கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

Monday, April 06, 2020

கொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா?


அன்றைய கொள்ளை நோயையும், இன்றைய கொரோனா தொற்று நோயையும் ஒப்பிட்டால் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் தெரிய வருகின்றன. அன்று இத்தாலி வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேச வாணிபம் தான் பிளேக் நோய் ஐரோப்பாவில் பரவுவதற்கு காரணமாக இருந்தது. கிரீமியாவில் நடந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட இத்தாலி வணிகர்களின் கப்பல்கள், அங்கு நடந்த உயிரியல் யுத்ததின் விளைவாக பெற்ற பிளேக் நோய் கிருமிகளை காவிக் கொண்டு இத்தாலிக்கு வந்து சேர்ந்தன.

தற்போது ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடி விட்டதைப் போன்று தான், அன்றைய ஐரோப்பிய நாடுகளும் நடந்து கொண்டன. அப்போது இத்தாலி ஒரே நாடாக இருக்கவில்லை. பல்வேறு தனித் தனி இராச்சியங்களாக பிரிந்திருந்தது. வணிகக் கப்பல்களால் தான் நோய் பரவுகிறது என்பதை கண்டு கொண்ட தெற்கு இத்தாலியில் இருந்த அரசுகள் கிரீமியாவில் இருந்து வந்த கப்பல்களை தரையிறங்க விடவில்லை. இருப்பினும் தெற்கு இத்தாலியில் ஏற்கனவே நோய் தொற்றி விட்டிருந்தது. சிசிலித் தீவு சனத்தொகையில் அரைவாசிப் பேர் பிளேக் நோயால் மரணமுற்றனர்.

இத்தாலியில் தரையிறங்க மறுக்கப்பட்ட வணிகக் கப்பல்கள் பிரான்சுக்கு சென்றன. மார்செய் துறைமுகத்தில் வணிகப் பொருட்களுடன் பிளேக் நோய்க் கிருமிகளும் இறக்குமதி செய்யப்பட்டன. அங்கிருந்து நோய் பாரிஸ் நகருக்கு பரவியது. பின்னர் பிரெஞ்சு வணிகர்களால் இங்கிலாந்தில் பரவியது. அதற்குப் பிறகு ஆங்கிலேய வணிகர்களால் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு பரப்பப் பட்டது. இவ்வாறு வணிகர்கள் தான் பிளேக் நோய்க் கிருமிகளை காவிச் சென்று பரப்பி இருந்தனர்.

இருப்பினும் பிளேக் நோய் உள்நாட்டில் பெருமளவில் பரவத் தொடங்கியதும், இது ஆரம்பத்தில் வணிகர்களால் பரப்பப் பட்டது என்ற உண்மை மறந்து விட்டது. அதே போன்றதொரு நிலைமை தான் இன்றைய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்தது. அதாவது "உலகின் தொழிற்சாலை" என்று கருதப்பட்ட சீனாவில் வணிகத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்ற நேரம் கொரோனா வைரஸை பரப்பி விட்டனர்.

முதலாளித்துவ உலகமயமாக்கல் காரணமாகத் தான் கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஒன்றிரண்டு தடவைகள் குறிப்பிடப் பட்டாலும் பின்னர் மறக்கப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக யார் மீதாவது பழி போடும் படலம் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் முழுப் பழியையும் சீனாவின் தலையில் போட்டன. மத்திய கால ஐரோப்பாவிலும் அது தான் நடந்தது. அன்றைய ஐரோப்பியர்கள் யூதர்கள் மீது பழி போட்டனர். யூதர்கள் கிறிஸ்தவப் பிள்ளைகளை கடத்திச் சென்று கொலை செய்வதாகவும், நீர் நிலைகளில் நஞ்சு கலப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டனர். அதாவது யூதர்களே திட்டமிட்டு இந்த தொற்று நோயை பரப்பியதாக பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நம்பினார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு யூத வைத்தியர் கிணற்றில் நஞ்சு கலந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் தான் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதை தமது குற்றச்சாட்டுகளுக்கான நிரூபணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. ஆத்திரமுற்ற மக்கள் யூதர்களின் வீடுகளை தாக்கினார்கள். சுவிஸ் பாசல் நகரில் மட்டும் ஆறாயிரம் யூதர்களை ஒரு மரக் கட்டிடத்திற்குள் பூட்டி வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும் பல நகரங்களில் யூத இனப்படுகொலை நடந்ததுள்ளது.

உலக வரலாற்றில் பரவிய பெருந்தொற்று நோய்களை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பேரிடரின் முடிவிலும் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோய் எனும் பிளேக் தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. ஆனால், தொற்று நோய்க் காலம் முடிந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் ஏகபோக அதிகாரம் ஆட்டம் கண்டது. புரட்டஸ்தாந்து மத எழுச்சி ஏற்பட்டது. அதைத்தவிர இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் விவசாயிகளின், விவசாயக் கூலித்தொழிலாளர்களின் புரட்சிகள் நடந்தன. துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் முற்போக்கானதாக கருதப்பட்ட புரட்டஸ்தாந்து மதம், மன்னர்களுடன் ஒத்துழைத்து புரட்சியை ஒடுக்க உதவியது.

அதே போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பானிஷ் புளு எனும் வைரஸ் தொற்று பரவியது. அதன் பெயர் "ஸ்பானிஷ்" என்றாலும், ஸ்பெயினில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய வைரஸ் பல இலட்சம் மக்களை காவு கொண்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக எண்ணிக்கையில் இந்த தொற்று நோய்க்கு பலியானார்கள். இருப்பினும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. ஜெர்மனியிலும், ஹங்கேரியிலும் சோஷலிச மாற்றுக்கான பாட்டாளிவர்க்க புரட்சிகள் நடந்தன.

Wednesday, January 22, 2020

ஓமான் க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியை ஒடுக்கிய ச‌ர்வாதிகாரி க‌பூஸ் ம‌ரணம்


ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் 50 வ‌ருட‌ங்க‌ள் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌பூஸ் ம‌றைவு (10 January 2020) குறித்து ஊட‌க‌ங்க‌ள் இர‌ங்க‌ல்பா பாடி ஓய்ந்து விட்ட‌ன‌. அநேக‌மாக‌ எல்லா ஊட‌க‌ங்க‌ளும் அவ‌ரைப் ப‌ற்றி ந‌ல்ல‌தாக‌வே சொல்லி புக‌ழார‌ம் சூட்டின‌. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் ச‌ர்வாதிகாரி என்ற‌ சொல்லை பாவிக்க‌வில்லை. ஏனென்றால் க‌பூஸ் மேற்க‌த்திய‌ நாடுகளுக்கு விசுவாச‌மான‌ அரசிய‌ல் த‌லைவ‌ர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார்.

ஈராக்கை 24 வ‌ருட‌ங்க‌ள் ஆண்ட‌ ச‌தாம் ஹுசைன் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ நேர‌த்திலும், லிபியாவை 42 வ‌ருட‌ங்க‌ள் க‌டாபி கொல்ல‌ப் ப‌ட்ட‌ நேர‌த்திலும், இதே ஊட‌க‌ங்க‌ள் மூச்சுக்கு முன்னூறு த‌டவை ச‌ர்வாதிகாரி என்று கூறின‌. அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, இறந்த பின்னரும் இரக்கமில்லாது தூற்றப் பட்டனர். ஆனால் ஓமானில் 50 வ‌ருட‌ங்க‌ள் கொடுங்கோல் ஆட்சி நடத்திய க‌பூஸ் அவ‌ர்க‌ள் க‌ண்க‌ளுக்கு ச‌ர்வாதிகாரியாக‌ தெரியாத‌து அதிச‌ய‌மே.

எழுப‌துக‌ளின் தொட‌க்க‌த்தில் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சியில் பின்த‌ங்கியிருந்த‌ ஓமானை ஆண்ட‌ சுல்த்தான் தைமூர், அர‌ச‌ மாளிகையில் ந‌ட‌ந்த‌ ஒரு திடீர் ச‌திப்புர‌ட்சியின் மூல‌ம் ப‌த‌வியிற‌க்க‌ப் ப‌ட்டார். அந்த‌ ச‌திப்புர‌ட்சிக்கு கார‌ண‌ம் வேறு யாரும் அல்ல‌. சுல்த்தானின் சொந்த‌ ம‌க‌ன் க‌பூஸ், மற்றும் பிரிட்டிஷ் ப‌டையின‌ர் தான். த‌ன‌து த‌ந்தையை த‌னய‌னே கைது செய்து சிறையில் அடைக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌? பொதுவாக சொல்லப் படும் காரணம் அவரது தந்தை ஒரு விடாப்பிடியான பழமைவாதியாக இருந்தார் என்பதே. ஆனால், உண்மையான கார‌ண‌த்தை எந்த‌ ஊட‌க‌மும் தெரிவிக்க‌ப் போவ‌தில்லை.

எழுப‌துக‌ளின் தொட‌க்கத்தில் ஓமான் ஒரு க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியின் விளிம்பில் நின்ற‌து. புரட்சி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய தென்பட்டன. குறிப்பாக‌ நாட்டின் தெற்குப் பிராந்தியத்தின் பெரும் பகுதி ஆயுத‌மேந்திய‌ க‌ம்யூனிச‌ப் போராளிக‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌து. அவ‌ர்க‌ளுக்கு அய‌ல் நாடான‌ சோஷ‌லிச தெற்கு யேம‌னில் இருந்து உத‌வி கிடைத்துக் கொண்டிருந்த‌து.

முன்பிருந்த சுல்த்தான் ஆட்சிக் கால‌த்தில் நாடு அபிவிருத்தி அடைய‌வில்லை. சாலைக‌ள் இருக்க‌வில்லை. பாட‌சாலைக‌ள் க‌ட்ட‌ப் ப‌ட‌வில்லை. கால‌ஞ்சென்ற‌ சுல்த்தான் க‌பூஸ் தான் அந்த‌ நிலைமையை மாற்றியமைத்தார் என்று ஊட‌க‌ங்க‌ள் உங்க‌ளுக்கு சொல்லி இருக்க‌லாம். உண்மை தான். ஆனால் ஊட‌க‌ங்க‌ள் சொல்லாம‌ல் ம‌றைத்த‌ இன்னொரு விட‌ய‌ம் உள்ள‌து.

உண்மையில் ஓமான் அபிவிருத்தி அடையாம‌ல் பொருளாதார‌த்தில் பின்த‌ங்கி இருந்த‌ ப‌டியால் தான் அந்நாட்டு ம‌க்க‌ள் க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியாள‌ர்க‌ளை ஆத‌ரித்தார்க‌ள். க‌பூஸ் சுல்த்தானாக பதவியேற்பதற்கு ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ரே, கம்யூனிஸ்டுக‌ள் சமூக அபிவிருத்தியில் அக்கறை செலுத்தி வந்தனர். கம்யூனிச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பாட‌சாலைக‌ளை அமைத்து பெண் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்த‌ன‌ர். இய‌க்க‌த்தில் க‌ணிச‌மான‌ அள‌வு பெண் போராளிக‌ள் இருந்த‌ன‌ர்.

சுருக்க‌மாக‌ சொன்னால், ஓமான் தொட‌ர்ந்தும் அபிவிருத்தியில் பின்த‌ங்கி இருந்தால் அது விரைவில் க‌ம்யூனிச‌ நாடாக‌ மாறி விடும் என்று பிரிட்ட‌ன் அஞ்சிய‌து. அத‌ன் விளைவு தான், மாளிகையில் ந‌ட‌ந்த‌ ச‌திப்புர‌ட்சியும், க‌பூஸ் சுல்த்தானாக‌ ப‌த‌வியேற்ற‌மையும். எல்லாம் ஒன்றுக்கொன்று தொட‌ர்புள்ள‌ விட‌ய‌ங்க‌ள் தான்.

உண்மையிலேயே க‌பூஸ் ப‌த‌வியேற்று அபிவிருத்தி திட்ட‌ங்க‌ளை தொட‌ங்கிய‌தும் க‌ம்யூனிஸ்டுக‌ளின் போராட்ட‌த்தில் பின்ன‌டைவு ஏற்ப‌ட்ட‌து. சில‌ போராளிகள் ச‌ர‌ண‌டைந்த‌ன‌ர். இருப்பினும் க‌ம்யூனிச‌ இய‌க்க‌ம் அழிக்க‌ப் ப‌டவில்லை. தென் ப‌குதிக‌ளில் இன்ன‌மும் செல்வாக்குட‌ன் இருந்த‌ன‌ர். அத‌னை த‌னி நாடாக‌ பிரிக்க‌ விரும்பின‌ர். சுல்த்தான் க‌பூஸ் உத்த‌ரவின் பேரில் பிரிட்டிஷ் கூலிப்ப‌டையான‌ SAS ஒரு "ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்புப் போர்" ஆர‌ம்பித்த‌து. அப்போது ஈரானை ஆண்ட‌ மேற்க‌த்திய‌ சார்பான‌ ஷா ம‌ன்ன‌ரும் ப‌டைக‌ளை அனுப்பி உத‌வினார். சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ஓமானில் க‌ம்யூனிச‌ இய‌க்க‌ம் முற்றாக‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌து. எஞ்சிய‌வ‌ர்க‌ள் ச‌ர‌ண‌டைந்து விட்ட‌ன‌ர்.

ஓமானில் க‌ம்யூனிச‌ அபாய‌ம் நீங்கி விட்டாலும், க‌பூஸ் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை நீடித்த‌து. இன்று வ‌ரை ஓமானில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌டைசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கு ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் கிடையாது. சுல்த்தானை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் சிறையில் அடைக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். அங்கு ந‌ட‌க்கும் ம‌னித உரிமை மீற‌ல் கொடுமைகள் ப‌ற்றி ஏற்க‌ன‌வே ப‌ல‌ ம‌னித உரிமை அமைப்புக‌ள் அறிக்கைக‌ள் வெளியிட்டுள்ளன‌.

இருப்பினும் என்ன‌? மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் "ஜன‌நாய‌க‌" அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் ஓமான் ச‌ர்வாதிகாரியின் இர‌த்த‌ம் தோய்ந்த‌ கையைப் பிடித்து குலுக்க‌த் த‌ய‌ங்க‌வில்லை. எண்ணை நிறுவன‌ ஒப்ப‌ந்த‌ம், ஆயுத‌ விற்ப‌னை வ‌ருமான‌ம் என்று த‌ம‌து ந‌லனில் ம‌ட்டும் குறியாக‌ இருந்த‌னர். அந்த‌ ந‌ன்றிக்க‌ட‌னுக்காக‌ த‌ம‌து அபிமான‌த்திற்குரிய‌ ச‌ர்வாதிகாரி க‌பூஸ் இற‌ந்த‌வுட‌ன் க‌ண்ணீர் வ‌டித்த‌ன‌ர். நாம் யாரை விரும்ப வேண்டும், யாரை வெறுக்க வேண்டும் என்பதை மேற்கத்திய நாடுகளும் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும் தீர்மானிக்கின்றன.

Wednesday, January 01, 2020

இந்தியா இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா?


இந்தியாவில் இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி வ‌ரும் என்ப‌தை முப்ப‌டைக‌ளின் த‌ள‌ப‌தி ம‌றைமுக‌மாக‌த் தெரிவிக்கிறார். இல்லாவிட்டால், சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள், எத‌ற்காக‌ எல்லைக‌ளை பாதுகாக்கும் இராணுவ‌த்தைக் க‌ண்டு அஞ்ச‌ வேண்டும்? இந்திய முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ள் பாதுகாக்கப் ப‌ட‌ வேண்டுமானால், பாஜக அர‌சு இராணுவ‌த்தை ஏவி விட்டு சொந்த‌ ம‌க்க‌ளையே கொல்ல‌த் த‌ய‌ங்காது.

 "இராணுவத்தை கண்டால் மக்கள் அஞ்ச வேண்டும்" என்று பிபின் ராவத் சொன்னது ஏன்? இந்தியாவில் புரட்சி நடந்தால், அதை ஒடுக்கக் காத்திருக்கும் இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்....

இருபது வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, நான் பெல்ஜிய‌ க‌ம்யூனிஸ்ட் தொழிலாள‌ர் க‌ட்சி ஒழுங்கு ப‌டுத்திய‌ கோடை கால‌ முகாமில் ப‌ங்குப‌ற்றி இருந்தேன். அப்போது எம‌க்கு வ‌குப்பெடுத்த‌ க‌ட்சியின் பிர‌தான‌ உறுப்பின‌ர் ஒருவர் பின்வ‌ரும் த‌க‌வ‌லை தெரிவித்தார்:

//பெல்ஜிய‌த்தில் உள்ள‌ இராணுவ‌ முகாம்கள் பெரும்பாலும் ஏழை உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் நெருக்க‌மாக வாழும் ப‌குதிக‌ளை அண்டியே உள்ள‌ன‌. இது ஒன்றும் த‌ற்செய‌ல் அல்ல‌. நாளை இங்கு ஒரு புரட்சி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு இராணுவம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. உள்நாட்டில் புரட்சி நடப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென்ற‌ கால‌ங்க‌ளில் தான் எதிரி நாடுக‌ளுட‌ன் யுத்த‌ம் செய்வார்க‌ள்...//

உண்மையில் இந்த‌த் த‌க‌வ‌ல் அன்று என‌க்கு ம‌ட்டும‌ல்லாது, பல பெல்ஜிய‌ தோழ‌ர்க‌ளுக்கும் நம்புவ‌த‌ற்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. எம‌து ச‌ந்தேக‌த்தை நேரடியாகக் கேட்டோம். அத‌ற்கு அவ‌ர் பின்வ‌ரும் ப‌திலைக் கூறினார்:

//உதார‌ண‌த்திற்கு 19 ம் நூற்றாண்டின் இறுதிப் ப‌குதியில் ந‌ட‌ந்த‌ பாரிஸ் கம்யூன் புர‌ட்சியை எடுத்துப் பாருங்க‌ள். அந்த‌ நேர‌த்தில் "ஜென்ம‌ விரோதிக‌ளான‌" பிரெஞ்சு இராணுவ‌மும், ஜேர்ம‌ன் இராணுவ‌மும் விட்டுக்கொடாமல் கடும் போரில் ஈடுப‌ட்டுக் கொண்டிருந்த‌ன‌.

பாரிஸ் க‌ம்யூன் புர‌ட்சி வெடித்த அடுத்த நாளே அதுவரை ஒன்றையொன்று கொன்று குவித்துக் கொண்டிருந்த ஜேர்ம‌ன் இராணுவ‌மும், பிரெஞ்சு இராணுவ‌மும் தமது "ஆயிர‌ம் வ‌ருட‌ கால‌" ப‌கைமையை ம‌ற‌ந்து ஒன்று சேர்ந்து விட்ட‌ன‌.

அன்று "எதிரி" நாட்டுப் ப‌டைக‌ளின் ஒத்துழைப்பு இருந்த‌ ப‌டியால் தான், பிரெஞ்சு இராணுவ‌ம் இல‌குவாக‌ பாரிஸ் புர‌ட்சியை ந‌சுக்க‌ முடிந்த‌து. அது முடிந்த‌ பின்ன‌ர் இர‌ண்டு நாட்டுப் ப‌டைக‌ளும் வ‌ழ‌மை போல‌ மீண்டும் யுத்த‌திற்கு திரும்பிச் சென்று விட்டன.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள‌ வேண்டிய‌ பாட‌ம் ஒன்றுள்ள‌து. இந்த முத‌லாளித்துவ‌ தேச‌ங்க‌ள் ஒன்றையொன்று விழுங்கும் அள‌வு ப‌கைமை பாராட்டினாலும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சி ந‌ட‌க்கும் போது ஒன்று சேர்ந்து விடுவார்க‌ள்.//

இந்தியாவில் புதிதாக‌ முப்ப‌டைத் த‌லைமைத் த‌ள‌ப‌தியாக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ பிபின் ராவ‌த் "இராணுவ‌த்தைக் க‌ண்டு ம‌க்க‌ள் அஞ்ச‌ வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இத‌ன் மூல‌ம், எதிரி நாடான‌ பாகிஸ்தானுட‌ன் யுத்த‌ம் செய்வ‌தை விட‌, சொந்த‌ நாட்டில் புர‌ட்சி ஏற்ப‌ட‌ விடாம‌ல் த‌டுப்ப‌து தான் இந்திய‌ இராணுவ‌த்தின் த‌லையாய‌ ப‌ணி என்ப‌தை சொல்லாம‌ல் சொல்லி இருக்கிறார்.


Wednesday, October 23, 2019

சிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0


தென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாத‌வாறு க‌ல‌வ‌ர‌ பூமியாக காட்சிய‌ளிக்கிற‌து. ஒரு மெட்ரோ ர‌யில், 16 பேருந்து வ‌ண்டிக‌ள் கொழுந்து விட்டு எரிந்த‌ன‌. ப‌த்துக்கும் குறையாத‌ சூப்ப‌ர் மார்க்கெட்க‌ள், ம‌ருந்துக் க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. க‌ல‌வ‌ர‌த்திற்குள் அக‌ப்ப‌ட்டு ப‌தினொரு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

சிலி ஜ‌னாதிப‌தி செப‌ஸ்டியான் பிஞேரா "நாம் ஒரு யுத்த‌த்தில் ஈடுப‌ட்டிருக்கிறோம்" என‌ அறிவித்துள்ளார். "ஒரு ப‌ல‌மான‌, இண‌க்க‌மாக‌ போக‌ முடியாத‌, எவ‌ரையும் மதிக்காத‌, வ‌ன்முறை பிர‌யோகிக்க‌த் த‌ய‌ங்காத‌ எதிரியுட‌ன்" இந்த‌ யுத்த‌ம் நட‌ப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.

சிலியில் ந‌ட‌ந்த இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்திற்குப் (1973 - 1990) பின்ன‌ர், முத‌ல் த‌ட‌வையாக‌ இராணுவ‌ம் வீதிக‌ளில் ரோந்து சுற்றுகிற‌து. த‌லைந‌க‌ர் சான்டியாகோ உட்ப‌ட‌ எட்டு ந‌க‌ர‌ங்க‌ளில் ஊர‌ட‌ங்கு ச‌ட்ட‌ம் பிற‌ப்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இது வ‌ரை 1500 பேர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

யார் இந்த‌ பிஞேரா? எழுப‌துக‌ளில், ச‌ர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் கால‌த்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுக‌ப் ப‌டுத்திய‌த‌ன் மூல‌ம் கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதித்த‌வ‌ர். அதாவ‌து, பினோச்சே கால‌த்தில் வ‌ந்த‌ ந‌வ‌- தாராள‌வாத‌ பொருளாதார‌க் கொள்கையால் ப‌ல‌ன‌டைந்த‌ கோடீஸ்வ‌ர‌ன். அப்ப‌டியான‌ ஒருவ‌ர் சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதே யுத்தப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இருக்கிற‌து? ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும், பாசிச‌ சர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும் ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்தின் ந‌ல‌னுக்காக‌வே அர‌சு இய‌ங்குகிற‌து.

இந்த‌ ம‌க்க‌ள் எழுச்சிக்கு நேர‌டிக் கார‌ண‌ம், அரசு கொண்டு வ‌ந்த‌ மெட்ரோ ர‌யில் டிக்க‌ட் விலை அதிக‌ரிப்பு. பிற‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம். ஆனால் மாத‌ வ‌ருமான‌த்தில் ஐந்தில் ஒரு ப‌ங்கு போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளுக்கு சென்று விடுகிற‌து.

குறிப்பாக‌ பொதுப் போக்குவ‌ர‌த்தை ந‌ம்பியிருக்கும் மாண‌வ‌ர்க‌ள் வெகுண்டெழுந்து இல‌வ‌ச‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்ய‌த் தொட‌ங்கினார்க‌ள். மெட்ரோ நிலைய‌ டிக்க‌ட் மெஷின், த‌டைக் க‌ம்ப‌ங்க‌ளை அடித்து நொறுக்கினார்க‌ள்.

மெட்ரோ டிக்க‌ட் விலை உய‌ர்வை மீள‌ப் பெறுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி பிஞேரா அறிவித்தும் க‌ல‌வ‌ர‌ம் அட‌ங்க‌வில்லை. அத‌ற்குக் கார‌ண‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் ஏழைக‌ளுக்கும் இடையிலான‌ ஏற்ற‌த்தாழ்வு ம‌ட்டும‌ல்ல‌. மிகப் ப‌ல‌மான‌ இட‌துசாரி க‌ட்சிக‌ளால், ந‌ன்றாக‌ அர‌சிய‌ல்ம‌ய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ இள‌ம் த‌லைமுறையின‌ர் எந்த‌ வித‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாராக‌ இல்லை.

நிச்ச‌ய‌மாக‌, சிலி அர‌சுக்கு இது ஒரு இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம். அடுத்த‌ மாத‌ம் Apec நாடுக‌ளின் உச்சி ம‌காநாடு ந‌ட‌க்க‌வுள்ள‌து. அமெரிக்க‌ அதிப‌ர் டிர‌ம்ப், சீன‌ அதிப‌ர் ஸிஜின்பிங் உட்ப‌ட‌ ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் சிலிக்கு வ‌ர‌ இருக்கிறார்க‌ள். அத‌ற்குள் நிலைமையை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ருவ‌து முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம். 

எத‌ற்காக‌ இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ஏழைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ஓர‌ள‌வு வச‌தியான‌ ம‌த்திய‌த‌ர‌வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ளும் வ‌ன்முறைப் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள்?

1973 ல் நட‌ந்த‌ இராணுவ‌ ச‌திப்புர‌ட்சிக்குப் பின்ன‌ர் சிலி ந‌வ‌- தாராள‌வாத பொருளாதார‌க் கொள்கையின் ப‌ரிசோத‌னைச் சாலையாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து. பொருளாதார‌ம் நூறு ச‌த‌வீத‌ம் த‌னியார்ம‌ய‌ப் படுத்த‌ப் ப‌ட்ட‌து. பொருட்க‌ளின் விலைக‌ள் மிக‌ அதிக‌ம். ஆனால் செல‌விடுவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளின் கையிருப்பில் ப‌ண‌ம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. க‌ல்வி, ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் ஏழைக‌ளால் நினைத்துப் பார்க்க‌ முடியாத‌ அள‌வு அதிக‌ம். வ‌ச‌தி இல்லாத‌வ‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.

ந‌வ‌- தாராள‌வாத‌ ப‌ரிசோத‌னைச் சாலையில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் இன்று முத‌லாளித்துவ‌த்திற்கு எதிராக‌ திரும்பி உள்ள‌ன‌ர். இந்த‌ இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌வ‌- தாராள‌வாத‌ம் என்ற‌ சொல் ஒரு கெட்ட‌ வார்த்தை போன்று க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து.

முன்பு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலையில், க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உறுப்பினர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருவ‌ர் விடாம‌ல் தேடி அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். பாசிச‌ ஆட்சியாள‌ர்க‌ள் கம்யூனிச‌த்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்ட‌தாக‌ இறுமாப்புட‌ன் இருந்த‌ன‌ர்.

ப‌னிப்போர் முடிவில், "க‌ம்யூனிச‌ம் இற‌ந்து விட்ட‌து" என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌ பின்ன‌ர், 1990 ம் ஆண்டு ஜ‌ன‌நாய‌க‌ம் மீட்க‌ப் ப‌ட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் இய‌ங்க‌ அனும‌திக்க‌ப் ப‌ட்ட‌து. பொதுத் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌ன‌. அதே நேர‌ம், சாம்ப‌லில் இருந்து உயிர்த்தெழுந்த‌ பீனிக்ஸ் ப‌ற‌வை போல‌ புதிய‌ த‌லைமுறை க‌ம்யூனிஸ்டுக‌ள் தோன்றினார்க‌ள்.

புதிய‌ சிலி க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உருவாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் பாராளும‌ன்ற‌த்தில் ஒரு ப‌ல‌மான‌ எதிர்க்க‌ட்சியாகிய‌து. அத்துட‌ன், அனார்க்கிஸ்டுக‌ள், ட்ராக்கிஸ்டுக‌ள், இன்னும் ப‌ல‌ சோஷ‌லிச‌ அமைப்புக‌ளும் உருவாகின‌. குறிப்பாக‌ அனார்க்கிஸ்டுக‌ள் முத‌லாளித்துவ‌த்தை ம‌ட்டும‌ல்லாது, அர‌சு என்ற‌ க‌ட்ட‌மைப்பையே எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்.
க‌ம்யூனிச‌, இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல செல்வாக்கு இருந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடிய‌ மாண‌வ‌ர்க‌ள், கூட‌வே நியோ லிப‌ர‌ல் சிஸ்ட‌த்தையும் எதிர்க்க‌க் க‌ற்றுக் கொண்டனர். த‌ற்போது முத‌லாளித்துவ‌த்தை வீழ்த்தி விட்டுத் தான் ம‌று வேலை பார்ப்ப‌து என்று கிள‌ம்பி விட்டார்க‌ள்.

க‌ம்யூனிஸ்டுக‌ள் வேறு யாரும் அல்ல‌. அவ‌ர்க‌ளும் முத‌லாளித்துவ‌ம் வ‌ள‌ர்த்து விட்ட‌ பிள்ளைக‌ள் தான். சிலியில் முத‌லாளித்துவ‌ம் த‌ன‌து ச‌வ‌க்குழியையை தானே தோண்டி விட்டுள்ள‌து. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!

Sunday, March 10, 2019

ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்

9 நவம்பர் 1918, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மன் தேசியக் கொடி இறக்கப்பட்டு, செங்கொடி ஏற்றப் பட்டது. அந்த நகரங்களில் "Räte" எனும் தொழிலாளர் மன்றங்கள் (ரஷ்யாவில் சோவியத் மாதிரி) உருவாகி இருந்தன.

நீங்கள் இந்த வரலாற்றுத் தகவல்களை இதற்கு முன்னர் கேள்விப் பட்டிரா விட்டால் ஆச்சரியப் படாதீர்கள். புதிய தலைமுறை ஜெர்மனியர்களுக்கு கூடத் தெரியவிடாமல் மூடி மறைக்கப் படுகிறது. ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

நவம்பர் 1918, முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த காரணத்தால், ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வந்த ஜெர்மன் இராணுவம், அப்போது தேசத்தின் எல்லையை பாதுகாப்பதற்கான தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடிக் கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை ஜெர்மன் மக்கள் போரை விரும்பவில்லை. பசி, பட்டினியால் வாடிய மக்களிடம் தேசியப் பெருமிதம், இனவுணர்வு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால், அன்றைய ஜெர்மனி முழுவதும் போருக்கு எதிரான குரல்களே அதிகமாக கேட்டன.

4.11.1918, வட ஜெர்மனியின் துறைமுக நகரமான 'கீல்" (Kiel) பதற்றமாக காட்சியளித்தது. சுமார் ஐயாயிரம் பேர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களின் கைகளில் செங்கொடிகள் பறந்தன. "சமாதானமும் உணவும் வேண்டும்!", "அப்பாவிகளை விடுதலை செய்!" போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன. அவர்கள் கீல் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வடக்கே உள்ள கீல் நகரை அண்டிய சர்வதேச கடல் பகுதியில், பிரிட்டிஷ் கடற்படையும், ஜெர்மன் கடற்படையும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்தப் போரில் ஜெர்மனிக்கு தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும், பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஜெர்மன் தளபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மாலுமிகள் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர். ஊரில் தமது உறவுகள் பசியால் வாடிக் கொண்டிருக்கையில், தாம் இங்கே போரிடுவது யாருக்காக என்று குமுறினார்கள்.

தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்பட மறுத்த மாலுமிகள், இயந்திரங்களை நிறுத்தி, கப்பல்களை கரைக்கு கொண்டு வந்தனர். கலகம் செய்த குற்றச்சாட்டில், 47 மாலுமிகள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப் பட்ட மாலுமிகளின் விடுதலையை வலியுறுத்தி, சக மாலுமிகள் மட்டுமல்லாது கப்பல் கட்டும் தளத்தில் இருந்த தொழிலாளர்களும் சேர்ந்து போராடினார்கள்.

தெருக்களில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சோஷலிச அரசியல் ஆர்வலர்கள் அனல் பறக்கப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான USPD உறுப்பினர்களாக இருந்தனர். சிறையில் இருந்த 47 மாலுமிகளை விடுதலை செய்வதற்காக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்கரார்கள் கடற்படை முகாமை நோக்கி அணிவகுத்து சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கடற்படை அதிகாரி, கூட்டத்தை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

புரட்சியில் முதல் களப்பலியான தோழர்களின் மரணத்தைக் கண்டு புரட்சியாளர்கள் பின்வாங்கவில்லை. மாலுமிகள் இன்னும் பல போர்க் கப்பல்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிறு ஆயுதங்களை கைப்பற்றினார்கள். அந்த ஆயுதங்களை கொண்டு கீல் நகரில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் கொள்ளையிடப் பட்டன. ஒரு சில மணிநேரங்களில் கீல் நகரம் முழுவதும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. முன்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்து தடுத்த கடற்படை முகாம் அதிகாரி, வேறு வழியின்றி சிறை வைத்திருந்த மாலுமிகளை விடுதலை செய்தார்.

அப்போது சமூக ஜனநாயகக் கட்சி தான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோஷலிச குறிக்கோள் கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சியாக ஆரம்பிக்கப் பட்ட சமூக ஜனநாயகக் கட்சி (SPD), புரட்சி நடந்த நேரத்தில் கொள்கையற்ற முதலாளித்துவ அரசியல் கட்சியாக சீரழிந்து போயிருந்தது. லெனின் அவர்களை "திருத்தல்வாதிகள்" என்று குறிப்பிட்டு பேசினார்.

SPD எப்போதோ தனது கொள்கையை கைவிட்டு விட்டு, சாதாரண அரசியல் கட்சியாகி ஜெர்மன் தேசியத்தை ஆதரித்தது. "தாய்நாட்டை பாதுகாக்கும் போருக்கு" முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. "ஏகாதிபத்திய போரை ஆதரிப்பது சோஷலிசக் கொள்கைக்கு முரணானது" என்று கூறி போரை எதிர்த்த கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டனர். "நான் இங்கே ஜெர்மானியர்களை மட்டுமே பார்க்கிறேன், கட்சிகளை அல்ல." என்று சக்கரவர்த்தியால் புகழப் படும் அளவிற்கு, சமூக ஜனநாயக் கட்சி ஆளும் வர்க்கத்திற்கு முண்டு கொடுத்து வந்தது.

ஜெர்மன் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடிய சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நொஸ்கே, கீல் நகர புரட்சியை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப் பட்டார். நொஸ்கே ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்க கைக்கூலி என்ற உண்மையை அறியாத தொழிலாளர்கள், அவரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதே நொஸ்கே தான் புரட்சியை காட்டிக் கொடுத்து, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடப் போகிறார் என்ற உண்மையை, அன்றைய தினம் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பதைப் போன்று நடித்த நொஸ்கே, புரட்சியை நீர்த்துப் போக வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். "பிரிட்டன் படையெடுக்கும் அபாயம்" இருப்பதாக பயமுறுத்தி, மாலுமிகளை மீண்டும் போர்முனைக்கு அனுப்பும் வகையில் உரையாற்றினார். நொஸ்கேயின் துரோகம் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால், அது கீல் நகரில் மட்டுமே சாத்தியமானது. யாரும் எதிர்பாராதவாறு அடுத்த சில நாட்களில் கடலை அண்டிய பிற நகரங்களுக்கும் புரட்சி பரவி விட்டது.

5 நவம்பர், லுய்பேக் (Lübeck) நகரம் புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 6 நவம்பர், குக்ஸ்ஹாவன் (Cuxhaven), பிறேமன்(Bremen), அத்துடன் ஜெர்மனியின் மிகப் பெரிய துறைமுக நகரமான ஹம்பேர்க்(Hamburg) ஆகிய நகரங்கள் தொழிலாளர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டன. ஹம்பேர்க் நகரத்தின் பிராந்திய பத்திரிகை "செங்கொடி" என பெயர் மாற்றப் பட்டு வெளியிடப் பட்டது.

அடுத்து வந்த சில நாட்களில் இன்னும் பல வட- மத்திய ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்களும், படையினரும் கிளர்ந்தெழுந்து அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றினார்கள். தொழிற்சாலைகளும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அங்கெல்லாம் தொழிலாளர் மன்றங்கள் (சோவியத்) ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டின. 8 நவம்பர், மேற்கு ஜெர்மன் நகரமான கெல்ன் (ஆங்கிலத்தில்: Cologne) வரை புரட்சி பரவி விட்டது. அதையடுத்து பிராங்க்பெர்ட், மியூனிச், லைப்சிக், மக்டபூர்க் ஆகிய பிற நகரங்களும் புரட்சியாளர்களின் வசமாகின. 9 நவம்பர், ரயில் வண்டிகளில் செங்கொடி ஏந்திய தொழிலாளர்கள் தலைநகர் பெர்லினை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

9.11.1918, பெர்லின் நகரம். ஜெர்மன் புரட்சிக்கு தலைமை தாங்கிய நாயகனை காண்பதற்காக மக்கள் வெள்ளம் கூடி இருந்தது. நகர மத்தியில் இருந்த பெருந் தெரு ஒன்றில், கனரக வாகனம் ஒன்றின் பின்பகுதி பெட்டி மேடை போன்று மாற்றப் பட்டிருந்தது. அதில் தாவி ஏறிய மனிதர் "புதிய ஜெர்மனி உருவாகி விட்டது" என்று முழங்கினார். அவர் பெயர் கார்ல் லீப்னெக்ட். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர். "சோஷலிசம் வாழ்க, சர்வதேச பாட்டாளிவர்க்கம் வாழ்க!" கார்ல் லீப்னெக்ட் முழக்கமிட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

கார்ல் லீப்னெக்ட், இரண்டரை வருடங்களுக்கு முன்னர் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர். அன்று அவர் உறுப்பினராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி தான் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. லீப்னெக்ட் மட்டுமல்ல, ரோசா லக்சம்பேர்க், இன்னும் பல கட்சி உறுப்பினர்களும் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் சிறைக் கைதிகளாக இருந்த காலத்தில், "சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி"(USPD) பெயரில் இயங்கினார்கள்.

9 நவம்பர் 1918 ம் ஆண்டு, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கார்ல் லீப்னெக்ட், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். உண்மையிலேயே அன்று ஜெர்மனியில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசு இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பகரமான சூழ்நிலையில் இரண்டு அறிவிப்புகள் வந்தன. ஒன்று, கம்யூனிஸ்டுகளின் "சோஷலிச ஜெர்மன் குடியரசு". மற்றது, சமூக ஜனநாயகவாதிகளின் "சுதந்திர ஜெர்மன் குடியரசு".

சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரீட்ரிஷ் எபேர்ட்(Friedrich Ebert), பிலிப் ஷைடேமன்(Philipp Scheidemann) இருவரும் சேர்ந்து இடைக்கால அரசை பொறுப்பேற்பதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் அறிவித்தனர். ஜெர்மனியில் "போல்ஷெவிக் தீவிரவாதம்" வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்தனர். அந்த நேரம், கார்ல் லீப்னெக்ட் போன்ற கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் "ஸ்பார்ட்டசிஸ்ட் குழு" என்ற பெயரில் இயங்கி வந்தனர். அவர்களுக்கு ரஷ்யாவிலிருந்து லெனினின் போல்ஷெவிக் கட்சியினர் ஆதரவளித்து வந்தனர்.

அடுத்து வந்த இரண்டு மாதங்களும் பெர்லின் நகரில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. வன்முறையும், கலவரமும் நாளாந்த நிகழ்வுகளாகின. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டன. வீதிகளில் தடையரண்கள் போட்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாக்கப் பட்டன. அங்கு ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் காவல் கடமையில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் உள்நாட்டுப் போர், அதாவது வர்க்கப் போர் நிதர்சனமானது.

புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஸ்பார்ட்டசிஸ்ட் குழுவை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் நடைமுறையில் உள்ள அரசை தூக்கியெறிந்து விட்டு பாட்டாளிவர்க்க அரசை கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். ஆனால், அது ரஷ்யாவில் நடந்ததைப் போன்று இருக்காது என்றனர். (அதாவது, இடைக்கால அரசை ஆயுதமுனையில் தூக்கியெறிய விரும்பவில்லை.) அவர்களுடன் முரண்பட்ட மாற்றுக் கருத்தாளர்களும் இருந்தனர். அனேகமாக, போரை முடிவுக்கு கொண்டு வருதல், பஞ்சத்தை போக்குதல் போன்ற உடனடி கோரிக்கைகளின் அடிப்படையில் தான் அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர்.

இதே நேரத்தில், பாராளுமன்றத்திற்குள்ளும் முரண்பாடுகள் வெடித்தன. சமூக ஜனநாயகக் கட்சியினர் "போல்ஷெவிக் தீவிரவாதத்தை" ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடாப்பிடியாக நின்றனர். டிசம்பர் மாதக் கடைசியில், பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியேறிய கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் போன்றோர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) ஸ்தாபித்தனர். அவர்கள் அடி மட்ட மக்கள் திரளில் இருந்து சோஷலிசப் புரட்சி முன்னெடுக்கப் பட வேண்டும் என்று அறிவித்தனர். "சோஷலிசத்திற்கான போராட்டம் மக்களால் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் முதலாளிக்கு எதிரான பாட்டாளிவர்க்கத்தின் போராட்டமாக நடக்க வேண்டும்." என்ற அறைகூவலுக்கு மக்கள் அணிதிரண்டனர். நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. பெர்லின் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச் சமர்கள் நடந்தன.

1919 ம் ஆண்டு தொடக்கத்தில், ஜெர்மனியிலும் புரட்சி வெடித்து அது விரைவில் சோஷலிச நாடாகும் வாய்ப்புகள் தென்பட்டன. சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்ற அரசாங்கத்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. சமூக ஜனநாயகத் தலைவர்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடினார்கள். மேல்தட்டு மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்த தீவிர தேசியவாதிகளான இராணுவ அதிகாரிகள் தமது இருப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர். புரட்சி வென்றால் அவர்களது தலைகளும் உருளும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

பிரைகொர்ப்ஸ் (Freikorps) எனப்படும் தேசியவெறி கொண்ட கூலிப்படை இராணுவம் பெர்லினுக்கு வரவழைக்கப் பட்டது. அவர்கள் ஆயுதமேந்திய புரட்சியாளர்களுடன் மோதினார்கள். கடுமையான துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் தொழிற்சாலைகள், அரச கட்டிடங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். செங்கொடிகள் கிழித்தெறியப் பட்டன. இருப்பினும், பல கட்டிடங்களில் மறைந்திருந்த புரட்சியாளர்கள் சினைப்பர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால், பெர்லின் நகரம் முழுவதும் யுத்தகளமாக காட்சியளித்தது.

10-13 மார்ச், புரட்சியாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட கிழக்கு பெர்லின் பகுதியை பிரைகொர்ப்ஸ் படையினர் சுற்றி வளைத்தனர். சில அற்பக் காரணங்களுக்காகக் கூட பொது மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஒரு அரசாங்க அலுவலகத்தில் மாதக் கணக்காக கிடைக்காத சம்பளப் பணத்தை கேட்டு தகராறு செய்த முப்பது மாலுமிகள், சுவரில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப் பட்டனர். பெர்லின் நகரில் மட்டும் ஒரு வாரத்திற்குள் குறைந்தது பத்தாயிரம் பேரளவில் படுகொலை செய்யப் பட்டனர். புரட்சியாளர்கள் மட்டுமல்லாது, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், ஆதரவு தெரிவித்த மக்களும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

ஏற்கனவே, 15 ஜனவரி 1919 அன்று, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் பிரைகொர்ப்ஸ் படையினரால் கடத்தப் பட்டு, சில மணிநேரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டதும் கம்யூனிஸ்ட் கட்சி சிதறிப் போனது. தொழிலாளர்களின் புரட்சிக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுத்த சக்தி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. இதனால், பெர்லினில் மட்டுமல்லாது ஜெர்மனி முழுவதும் புரட்சி நசுக்கப் பட்டு விட்டதாக அரசாங்கம் பெருமூச்சு விட்டது. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் ஓயவில்லை. அவர்கள் தோற்கடிக்கப் படவுமில்லை. தலைநகரை தவிர்த்து, ஜெர்மனியின் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது.

மிக விரைவில், சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் தனது முட்டாள்தனமான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு விலை கொடுக்க வேண்டிய காலம் வந்தது. 1920 ம் ஆண்டு, பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரின் ஆயுதங்களை களையப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரைகொர்ப்ஸ் படையினர் பெர்லின் நகரில் ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்கள். இதனால், ஜெர்மன் அரசாங்கம் தெற்கே உள்ள ஸ்டுட்கார்ட் நகருக்கு இடம்பெயர்ந்தது.

சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வீழ்ந்ததும், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலையெடுத்தனர். அவர்களது அறைகூவலை ஏற்று, பன்னிரண்டு மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யுமளவிற்கு, அப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருந்தது. அதே நேரம், ரோசா லக்சம்பேர்க் போன்ற லெனினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வேறுவழியின்றி ரஷ்ய போல்ஷெவிக் கட்சியின் தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ் வந்தது. லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தோற்கடிக்கப் படவில்லை என்ற உண்மை வலதுசாரி அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நிலைமை இப்படியே நீடித்தால், இன்னும் சில வருடங்களில் ரஷ்ய போல்ஷேவிக்குகளின் உதவியுடன், ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அன்று கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவர் தான் அடோல்ப் ஹிட்லர். இராணுவத்திற்குள் இருந்த வலதுசாரிகளும், முன்பு புரட்சியை நசுக்கிய பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரும் ஹிட்லரை ஆதரித்தார்கள்.

இதற்குப் பிறகு நடந்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மர்மமான முறையில் பாராளுமன்ற கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அந்த சம்பவத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று பழிபோடப் பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆதரவாளர்களும் வேட்டையாடப் பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் பிற்காலத்தில் தடுப்பு முகாம்களில் நச்சுப் புகை அடித்துக் கொல்லப் பட்டனர்.

நாஸி சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, பல்லாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சோவியத் யூனியன், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா,அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள். குறிப்பாக, சோவியத் யூனியனுக்கு அகதிகளாக சென்றவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் திரும்பி வந்தனர். பலர் ஏற்கனவே சோவியத் செம்படையில் சேர்ந்து நாஸிப் படையினருக்கு எதிராக போரிட்டிருந்தனர். அந்த ஜெர்மன் அகதிகள் தான் சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு (DDR) அடித்தளம் இட்டனர்.


Sunday, May 08, 2016

அரசியல் பழகு, அபத்தங்களுக்கு பதிலளி: எது புரட்சி? எது ஜனநாயகம்?

"புர‌ட்சி செய்யாதே! பூப் ப‌றித்து பூஜை செய்!" - இது க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ஸ் போதிக்கும் ஜ‌ன‌நாய‌க‌ பாட‌ம். முத‌லில், இந்தியாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லில் ஒரு "இந்திய‌ சாவேஸ்" தேர்ந்தெடுக்க‌ப் ப‌டும் நிலைமை வ‌ர‌ட்டும். அப்போது தெரியும் இந்தப் போலி ஜ‌ன‌நாய‌க‌ம் என்ன‌ பாடுப‌ட‌ப் போகிற‌தென்று.

தி இந்து பத்திரிகையில், புரட்சிகர அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், சமஸ் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல் பழகு: எது நவயுக புரட்சி? என்ற அந்தக் கட்டுரையில், அரசியல் மயப்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான புத்திமதிகள் கூறுகின்றார்.

"ஆயுதப்புரட்சி இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல. ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்கும் வயதில் புரட்சியை பற்றி நினைக்காதீர்கள். படித்து உத்தியோகம் பார்த்து சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்..." இவ்வாறு அறிவுரை கூறுகின்றார்.

புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, இதுவும் காலம் காலமாக "பெரியவர்களினால்" சொல்லப் பட்டு வரும் அறிவுரை தான். நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்த காலத்தில் தான் ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அப்போதும் நமது பெற்றோர்கள், நம்மூர் பெரியவர்கள் சமஸ் மாதிரி அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "அந்த இளைஞர்களைப் பாருங்கள்... எந்தவித அரசியல் நாட்டமும் இன்றி படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்..." என்று சிலரை உதாரண புருஷர்களாக சுட்டிக் காட்டினார்கள்.

அன்று ஈழப்போராட்டம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், கவனமாகப் படித்து பட்டம் பெற்று, உத்தியோகம் பார்த்தவர்கள் பலருண்டு. அதே நேரம், படிப்பை பாதியில் விட்டு விட்டு முழுநேர ஈழ அரசியலில் ஈடுபட்ட இளைஞர்களும் உண்டு. தமது உயிர், உடைமைகளை பணயம் வைத்து, அத்தகைய இளைஞர்கள் செய்த தியாகத்தினால் நன்மை அடைந்தவர்கள் சிலருண்டு. அவர்கள் தான், சமஸ் கூறும் "சமர்த்துப் பிள்ளைகள்"! தமது உத்தியோகத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, ஜனநாயக வழியில் கட்சி அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமஸ் கூறும் அறிவுரைகள், எவ்வாறு ஈழப் போராட்டத்தில் "பரீட்சித்துப்" பார்க்கப் பட்டன என்பதற்கு இதுபோன்ற ஆயிரம் உதாரணங்களைக் காட்டலாம். தற்போது சமஸ் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய காரணம் என்ன? கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை கொண்டாடியவர்கள், "கம்யூனிசம் கல்லறைக்குள் போய்விட்டது" என்று புளுகித் திரிந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும் கம்யூனிச புரட்சிகர அரசியல் சக்திகள் நலிவடைந்த நிலையில் இருந்தன. ஏற்கனவே இருந்த ஆதரவாளர்களே காணாமல் போய்க் கொண்டிருந்த நிலையில், இனிவரும் புதிய தலைமுறை அதில் நாட்டம் கொள்ளாது என்று நம்பினார்கள்.

ஆனால், காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கலின் தாக்கமும், தீர்க்கப் படாத மனித அவலங்களும், மீண்டும் ஒரு புரட்சிகர அரசியலின் தேவையை உணர்த்தின. இன்று உலகம் முழுவதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புரட்சிகர கம்யூனிச அரசியல் பேசுமளவிற்கு காலம் மாறி விட்டது. சமஸ் அதையெல்லாம் கண் முன்னால் கண்டு வந்துள்ளார். ஒருவகையில், சமஸ் எழுதியுள்ள கட்டுரையானது ஒரு நிகழ்கால யதார்த்தத்தை உணர்த்தி நிற்கின்றது.

இந்த உண்மையை சமஸ் தனது கட்டுரையில் பிரதிபலிக்கிறார்: 
//சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.//

குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, தமிழ் இளைஞர்கள் அரசியல் நீக்கப் பட்ட சமூகமாக இருந்தனர். மத்தியதர வர்க்கத்தினர் மேற்கத்திய கலாச்சாரத்தை போட்டி போட்டுக் கொண்டு பின்பற்றினார்கள். "எனக்கு அரசியல் தெரியாது... அதில் நாட்டமும் இல்லை." என்று சொல்வதே நாகரிகம் என்று கருதப் பட்டது. அரசியல் நீக்கம் செய்யப் பட்ட இளைஞர் சமுதாயத்தில், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசும் இளைஞர்களும் இருப்பார்கள் என்பதை சமஸ் போன்றவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவர்கள் பயந்து கொண்டிருந்த கெட்ட கனவு பலித்து விட்டது. அரசியல்மயப் பட்ட இளைஞர்களுக்கு, ஜனநாயக விழுமியங்களை கற்றுக் கொடுப்பதால், எதிர்காலத்தில் புரட்சியை தவிர்க்கலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

சமஸ்: //நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது?//

முதலில் புரட்சி என்பதை "ஆயுதக் கிளர்ச்சி" என்று புரிந்து கொள்வதே அபத்தமானது. "முதலாளிய வர்க்கம் அமைதியான வழியில் அதிகாரத்தை மாற்றித் தந்தால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், அப்படி நடக்குமா என்பதே கேள்விக்குறி." இது 150 வருடங்களுக்கு முன்னர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதிய வாசகம்.

சமஸ் கூறுவது போல, "ஜனநாயக யுகத்தில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை" தவிர்க்க முடியாதா? இந்திய முதலாளித்துவ அரசியல்வாதிகளும், இந்திய முதலாளிகளும், அமைதியான முறையில் நாட்டின் அரசியல் - பொருளாதார அதிகாரம் முழுவதையும், கம்யூனிசப் புரட்சிகர இயக்கங்களிடம் ஒப்படைத்து விட்டு, ஏதாவதொரு கரீபியன் தீவுக்கு சென்று ஓய்வெடுக்கட்டுமே? யார் வேண்டாம் என்றார்கள். அப்படி நடக்குமா என்பது தான் கேள்வி. அந்த இடத்தில் தான் புரட்சியின் தேவை எழுகின்றது. 

அது சரி, கடந்த நூற்றாண்டில் உலகில் எந்த நாட்டிலும் அமைதி வழிப் புரட்சி நடக்கவில்லையா? 1974 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் நடந்த சோஷலிசப் புரட்சியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. 1918 ம் ஆண்டு, ஹங்கேரி சோவியத் அரசு ஜனநாயக வழியில் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தப் புரட்சி ஆயுதக் கிளர்ச்சியாக நடக்கவில்லை.

சிலி நாட்டில் ஜனநாயக தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் தான் புரட்சியைக் கொண்டு வந்தார்கள். இறுதியில் சிலியின் அமைதியான ஜனநாயகப் புரட்சி நசுக்கப் பட்டது ஏன்? சமஸ் பெருமையுடன் குறிப்பிடும் அதே ஜனநாயக தேர்தலில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு, சதிப்புரட்சியாளர்களினால் ஆயுதமுனையில் நசுக்கப் பட்டது. 

சிலியில் நடந்த சதிப்புரட்சிக்கும், அதைத் தொடர்ந்த இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்கா உதவியது எல்லோருக்கும் தெரியும். சமஸ் பயமுறுத்தும் புரட்சிகர கம்யூனிச/சோஷலிச சக்திகளின் ஆட்சிக் காலத்தில் சிலியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. ஆனால், சமஸ் போற்றும் ஜனநாயக சக்திகளின் ஆட்சிக் காலத்தில் இருபதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் (இனப்)படுகொலை செய்யப் பட்டனர்.

சமஸ்: //இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக் கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.//

லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த மேற்குலகம் ஆதரித்த "புரட்சிப் படைகள்", அஹிம்சைப் போராட்டமா நடத்தின? லிபிய ஜிகாதியக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதை மேற்கத்திய நாடுகள் பெருமையோடு சொல்லிக் கொண்டன. சிரியாவிலும் சுதந்திர சிரிய இராணுவம் என்ற புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தன. சமஸ் அதற்கு ஒரு பதில் வைத்திருப்பார்: "மேற்குலக எதிரி நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது நல்லது. மேற்குலக நட்பு நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது கூடாது."

சமஸ்: //ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.... பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது.//

மேற்குறிப்பிட்ட மூன்று புரட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நோக்கங்களுக்காக நடந்தவை. அவற்றை, ஒரே தட்டில் வைத்து ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அபத்தமானது. "ரஜனிகாந்த், விஜயகாந்த் அண்ணன் தம்பி" என்பது போன்ற பாமரத்தனமான கூற்று. 

பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சிக்கு எதிராகத் தான் நடந்தது. ஆனால், அதற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த நெப்போலியன் போர்களினால் மன்னர்களின் அதிகாரம் கணிசமான அளவு குறைந்து போனது. வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியுற்றாலும், அவன் கொண்டு சென்று பரப்பிய "லிபரலிசம், தேசியம், முதலாளித்துவம்" போன்ற புதிய அரசியல்-பொருளாதார சித்தாந்தங்கள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவி விட்டன. 

பல ஐரோப்பிய நாடுகளில், பூர்ஷுவா வர்க்கம் (அல்லது முதலாளித்துவவாதிகள்) அதிகாரத்திற்கு வந்தது. லிபரல்வாதிகள் என்று அழைத்துக் கொண்ட பூர்ஷுவா வர்க்கம், அரச பரம்பரையுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டது. பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளில் அந்த அமைப்பை "பாராளுமன்ற சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சி" (Constitutional Monarchy)  என்று அறிவித்துக் கொண்டனர்.

அந்தக் கால ரஷ்யா இரண்டு புரட்சிகளை கண்டிருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த புரட்சியில், சார் மன்னனின் அதிகாரம் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. அது லிபரல்வாதிகளின் புரட்சி. அதற்குப் பிறகு தான் ரஷ்யாவில் பல கட்சிகள் பங்குபற்றும் பாராளுமன்ற அமைப்பு வந்தது. முதலாளித்துவமும் கணிசமான அளவு வளர்ச்சியைக் கண்டிருந்தது. உண்மையில் போல்ஷெவிக்குகள் நடத்திய புரட்சி, லிபரல் அரசுக்கு எதிராகவே நடந்தது.

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு போல்ஷெவிக் புரட்சியாளர்களினால் கவிழ்க்கப் பட்ட லிபரல் அரசு தான், இன்றைக்கு இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் உள்ளது. அதைத் தான் சமஸ் "ஜனநாயக அரசு" என்று சொல்கிறார். அனேகமாக, முதலாம் உலகப்போர் வரையில், உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல்கள் நடக்கவில்லை. அதனால் ஜனநாயக நாடுகளும் இருக்கவில்லை. ஏனென்றால், அன்று அனைத்து குடி மக்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப் படவில்லை. பெருமளவு சொத்து வைத்திருந்த மேட்டுக்குடியினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.

1949 ம் ஆண்டு நடந்த சீனப் புரட்சி காலனித்துவத்திற்கு எதிரானது. அப்போது சீனாவில் மன்னராட்சி இருக்கவில்லை. சீனப் புரட்சி நடப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே, சீனா பிரிட்டனின் அரைக் காலனியாக மாறிவிட்டது. சீன சக்கரவர்த்தி பொம்மையாக வைக்கப் பட்டிருந்தார்.

சன்யாட்சன் தலைமையில் லிபரல்களான சீன தேசியவாதிகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சீனா ஜப்பானின் காலனி நாடாகி விட்டிருந்தது. மாவோவின் கம்யூனிசப் படைகள், ஒரு புறம் ஜப்பானிய காலனியாதிக்கப் படைகளையும், மறுபுறம் சீனத் தேசியவாத படைகளையும் எதிர்த்துப் போராடினார்கள்.

சமஸ்: //2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக் கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!//

பனிப்போர் காலத்தில் உலகம் இரு துருவங்களாக பிரிந்திருந்தது. ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உலகம் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்கு கட்டுப்பட்டது. 2001-க்குப் பிறகு, அது மென்மேலும் உறுதியாக்கப் பட்டது. 

2001-க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றமானது, ஆயுதக் குழுக்களுக்கு மட்டும் எதிரானது என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பெரிய நாடுகள் கூட எதிரிகளாக்கப் பட்டன. லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தமும், 2001 நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடந்தது.

ஆகவே, ஒரு சிறிய ஆயுதக் குழு அரசை எதிர்க்கிறதா இல்லையா என்பதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக, ஒரு சிறிய இயக்கம் அல்ல, ஒரு பெரிய அரசு இருந்தாலும் அகற்றப் பட்டு விடும் என்பது தான் யதார்த்தம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் கூட அவ்வாறு தான் "சமநிலைப்" படுத்தப் பட்டனர்.

சமஸ்: //பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.//

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? "ஜனநாயகம்" என்றால் என்ன?

முதலில் ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இது தான் ஜனநாயகம் என்ற வரையறை இருக்கிறதா? பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஜனநாயக  அமைப்பில் எந்தக் கட்சியும் இருக்கவில்லை. அதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். வாக்குரிமை பெற்ற மக்கள் தமக்குப் பிடித்த ஒருவரை தெரிவு செய்வார்கள். ஆயினும், அடிமைகளுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 

இன்றைக்கு நாம் காணும் முதலாளித்துவ - ஜனநாயகத்திற்கும், கிரேக்க ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் உருவான நவீன ஜனநாயகம் இது. இதற்குப் பெயர் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்".  பாராளுமன்ற ஜனநாயகம் என்றும் அழைக்கலாம். ஆனால் அது மட்டும் தான் ஜனநாயகம் அல்ல. 

பாராளுமன்றத் தொகுதிகளுக்கு, ஐந்து வருடங்களுக்கொரு தடவை நடக்கும் தேர்தலில், மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அதுவும் பெரும்பாலான நாடுகளில் கட்சிகளுக்கு மட்டும் தான் ஓட்டுப் போடலாம். அதிலும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, எப்போதும் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன, அல்லது ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. 

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்த போதிலும், இந்தியா இன்னமும் ஒரு வறிய நாடாகவே இருப்பது எதைக் காட்டுகின்றது? எந்தக் கட்சியிடமும் மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான திட்டம் கிடையாது. அப்படி ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியாது. அப்படி இருந்திருந்தால் இந்தியா இன்றைக்கு மேலைத்தேய நாடுகளின் தரத்திற்கு நிகராக வந்திருக்குமே? இந்தியாவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பது சாதாரண பாமர மக்களுக்கும் தெரியும்.

பல கட்சி ஜனநாயகம் நிலவும் நாடுகளில், கட்சிகள் பணத்தை அள்ளியெறிந்து தான் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. அமெரிக்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. பணபலம் இல்லாத கட்சி, குறைந்தது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. அது மட்டுமல்ல, மக்களை இனம், மதம், சாதி அடிப்படையில் பிரித்து அரசியல் செய்வதால் தான், பெரும்பான்மைக் கட்சிகள் தேர்தல் களத்தில் நின்று பிடிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கட்சி மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபட்டிருக்கிறது? அப்படியே முயற்சித்தாலும் அது நடக்கிற காரியமா?

சோஷலிச புரட்சி நடந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை என்று சமஸ் எங்கே படித்தார்? அந்த நாடுகளில் அரசு அதிகார நிறுவனங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. பாடசாலைகள், தொழிற்சாலைகள், சமூக அமைப்புகள் எல்லாவற்றிலும் தேர்தல்கள் நடந்தன. வேட்பாளராக நிற்பவர் ஆளும் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏராளமான பணம் செலவளித்து பரப்புரை செய்வதில்லை. அவர்கள் தங்களது கொள்கைகள், திட்டங்களை பற்றி மட்டுமே தெரிவிப்பார்கள். 

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் அனைத்து ஜனங்களும் சமமாக நடத்தப் படுகின்றனரா? பணக்காரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஏழைகளுக்கு கிடைக்கின்றதா? உயர் சாதியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கிடைக்கின்றதா?

"ஜனங்களுக்குள்" ஏனிந்த பிரிவினை? இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் ஒடுக்கப் பட்ட நேரம், ஒரு "ஜனநாயக" அரசு அவர்களை ஜனங்களாக கருதவில்லையா? அதே மாதிரி, இந்தியாவில் உள்ள "ஜனநாயக" அரசு, காஷ்மீர், அசாம் மக்களை ஒடுக்கிய நேரம், அவர்கள் "ஜனங்கள்" என்ற பிரிவுக்குள் அடங்கவில்லையா?

ஒரு முதலாளித்துவ நாட்டில், சிறுபான்மை மேட்டுக்குடியினர் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அடித்தட்டு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். மத்தியதர வர்க்க மக்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். அதன் அர்த்தம் அந்த நாடுகளில் வர்க்கப் பாகுபாடு உள்ளது என்பது தானே?

சோஷலிசப் புரட்சி நடந்த நாடுகளில் அந்த நிலைமை தலைகீழாக மாற்றப் பட்டது. அதாவது ஏழைகள், அடித்தட்டு ம‌க்க‌ள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி இருந்தனர். காலங்காலமாக ஆண்டு அனுபவித்து வந்த நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள், மேட்டுக்குடியினர் சமூகத்தில் கீழ் நிலைக்கு வந்தனர். அதாவது, "தாழ்த்தப் பட்டவன் உயர்த்தப் பட்டான். உயர்த்தப் பட்டவன் தாழ்த்தப் பட்டான்." இதைத் தான் "ஜனங்களை காலில் போட்டு நசுக்கினார்கள்" என்று சமஸ் குறைப் படுகின்றார்.

அரசியல் பழகுவோம்....

Monday, December 29, 2014

பிரான்ஸ் இனப்படுகொலை : "சுதந்திரம் - சர்வாதிகாரம் - சகோதரப் படுகொலை"

பிரெஞ்சுப் புரட்சியின்
இரத்த சரித்திரம்  (பகுதி - 2)
பிரெஞ்சுப் புரட்சியின் தலைநகரான பாரிசில் இருந்து கிளம்பிய படைகள், எதிர்ப் புரட்சியாளர்களை அடக்கச் சென்றன. புரட்சிக்கு முன்னர், மன்னருக்கு விசுவாசமாக இருந்த படையினரும், படையதிகாரிகளும், தற்போதும் மனம் மாறாமல் இருக்கலாம். ஆகையினால், புரட்சிக்கு விசுவாசமான தளபதிகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டி இருந்தது.
பாரிஸ் புரட்சிகர அரசு நியமித்த புதிய அதிகாரிகள் எல்லோரும், சித்தாந்த ரீதியாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிசப் புரட்சியிலும் அதே தான் நடந்தது. எந்த மாற்றமும் இல்லை. சித்தாந்தம் மட்டுமே வேறு வேறு. ஆனால், இரண்டு புரட்சிகளும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப் பட்டன.

சோவியத் ஒன்றியத்தில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக் கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். அதைக் "களையெடுப்பு" என்று கூறினார்கள். எதற்காக அவர்கள் கொல்லப் பட்டார்கள்? வர்க்கப் புரட்சியின் எதிரிகள், அல்லது அதற்கு விசுவாசமாக இல்லாதவர்கள். மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, மேல்தட்டு வர்க்க பழக்க வழக்கங்களை பின்பற்றியவர்கள். நிலப்பிரபுத்துவ, முதலாளிய பெருமை பாராட்டியவர்கள்....

இப்படிப் பல காரணங்களுக்காக கொல்லப் பட்டனர். அன்றைய சமூகத்தில், எல்லோரும் சந்தேகத்திற்கு உள்ளானார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டில், ஆயிரக் கணக்கானோருக்கு மரண தண்டனை வழங்கிய உளவுத்துறை அதிகாரிகள் கூட, பின்னர் ஒரு நேரம் அதே குற்றச்சாட்டில் கொல்லப் பட்டனர்.

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக எழுச்சி கொள்வது தான் புரட்சி ஆகும். சாதாரண பொது மக்களே, தங்கள் மத்தியில் இருந்த வர்க்க விரோதிகளை காட்டிக் கொடுத்தார்கள். தண்டனை கொடுத்தார்கள். பிரான்சில் என்ன நடந்ததோ, அதே தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது. எந்த வித்தியாசமும் கிடையாது.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன். ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் நீதிபதியாக வீற்றிருந்தவர், சர்வாதிகாரி ரொபெஸ்பியரின் உற்ற நண்பர். புரட்சிக்கு விசுவாசமானவர், சித்தாந்த தெளிவு பெற்றவர் என்றெல்லாம் நம்பப் பட்டவர். அந்த நகரில், அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களைக் கூட விட்டு வைக்காமல் களையெடுத்தார்கள். புரட்சியின் எதிரிகள் 30 பேருக்கு, கில்லெட்டின் எனும் கத்தியால் கழுத்து வெட்டி தண்டனை வழங்கப் பட்டது.

ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் மரண தண்டனைகளை நிறைவேற்றிய நீதிபதிக்கும், பின்னர் அதே மரண தண்டனை கிடைத்தது. அவர் செய்த குற்றம் என்ன? நகரத் தெருக்களில், ஆறு குதிரைகள் பூட்டப் பட்ட வண்டியில், படையினர் புடைசூழ பவனி வந்தார். அதிலென்ன தவறு? அந்தக் காலத்தில் அப்படிச் செல்வது, அரச வம்சத்தினரும், பிரபுக்களும் தான்!

ஆகவே தன்னை ஒரு பிரபு மாதிரி பாவனை செய்து கொண்ட நீதிபதிக்கும், புரட்சியின் எதிரி (அல்லது வர்க்க எதிரி) குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை கிடைத்தது. தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? வேறு யாருமல்ல, அவரது உற்ற நண்பன் ரொபெஸ்பியர் தான்.

பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில், நண்பர்கள், குடும்ப உறவுகள் எதுவுமே, அன்றைய புரட்சியாளர்களுக்கு முக்கியமாக இருக்கவில்லை. ஒருவர் புரட்சிக்கு ஆதரவானவரா அல்லது எதிரானவரா? பிரபுத்துவ வர்க்க சிந்தனை கொண்டவரா அல்லது குடி மக்கள் (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவரா? அது மட்டுமே முக்கியமாகக் கருதப் பட்டது. 

ரஷ்யப் புரட்சியிலும், சீனப் புரட்சியிலும் அதே தான் நிலைமை. அந்த நாடுகளில், பூர்ஷுவா (முதலாளிய) வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அது மட்டுமே வித்தியாசம்.

புரட்சி நடக்கும் காலத்தில், ஒரே வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், வர்க்க சிந்தனை கொண்டிருப்பார்கள் என்றும்  எதிர்பார்க்க முடியாது. ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள், கொள்கை வேறுபாடு காரணமாக எதிரெதிர் அணியில் இருக்கலாம்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் நடந்த உள்நாட்டுப் போரில், சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படையில், சாதாரண போர்வீரர்களாக இருந்தவர்களும் விவசாயிகள் அல்லது பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசம், மதப் பற்று போன்றன முக்கியமாகப் பட்டன. அவர்களை ஆதரித்த மக்கள் பிரிவினரும் இருந்தார்கள். செம் படையினரும், வெண் படையினரும் கொள்கை வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும், இரண்டு தரப்பிலும் சாதாரண மக்கள் பெருமளவில் பலியானார்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த  படுகொலைகளை வெறுமனே படையினரின் மிலேச்சத் தனம் என்று ஒதுக்கி விட முடியாது. பலவற்றை திட்டமிட்ட இனப் படுகொலைக்குள் அடக்கலாம். அது தான் ஒரு பூர்ஷுவா புரட்சிக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான வித்தியாசம். அதாவது, பூர்ஷுவா புரட்சி அடிப்படையில் பேரினவாத தன்மை கொண்டது. பிற இன மக்களின் சுதந்திரத்தை  மட்டுமல்ல, உயிர் வாழும் உரிமையையும் மதிப்பதில்லை. அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கப் புரட்சியானது, எந்த இனமாக இருந்தாலும், குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டுமே எதிரிகளாக கருதியது. போர் முடிந்த பின்னர், எஞ்சிய வர்க்க எதிரிகளை கைது செய்து மனம் மாற்றும் முயற்சியில் இறங்கியது. 

பிரான்சின் மேற்குப் பகுதியில் வண்டே (Vendée) எனும் பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அங்கிருந்த மக்களில் பெரும்பான்மையானோர் சாதாரண விவசாயிகள் தான். உண்மையில் புரட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய வர்க்கத்தினர். ஆனால், அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசமும், மத நம்பிக்கையும் முக்கியமாகப் பட்டது. கத்தோலிக்க மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் ஒரு பெரும் படையை தயார் படுத்தி வைத்திருந்தார்கள். குறைந்தது 65000 போர்வீரர்களை கொண்ட பலமான இராணுவமாக இருந்தது. அவர்கள் செய்த முதல் வேலை, வண்டே பகுதியில் புரட்சிக்கு விசுவாசமான 200 பேரைப் பிடித்துக் கொன்றது தான்.

வண்டே கிளர்ச்சியை அடக்குவதற்காக, பாரிஸ் ஒரு பெரும் படையை அனுப்பியது. புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட, போர்க்கள அனுபவம் அற்ற வீரர்கள், சென்றவுடனே தோல்வியை தழுவிக் கொண்டனர். மேலும், அந்தப் பிரதேசத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள், காடுகளில் மறைந்திருந்து போரிட்டார்கள். அதனால் குடியரசுப் படையினர் முன்னேற முடியாமல் பின்வாங்க வேண்டி இருந்தது.

நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, பாரிசில் இருந்து ஒரு புதிய தளபதி வந்தார். அவரும் ரொபெஸ்பியர் மாதிரி, தொழில்முறை வழக்கறிஞர். மன்னரின் மரண சாசனத்தில் கையொப்பம் இட்டவர். அவர் பெயர் ஜான் பாப்டிஸ்ட் கரியேர் (Jean Baptiste Carrier). காடுகளை துப்பரவாக்குவது. கால்நடைகளை கவர்ந்து செல்வது, அறுவடை செய்யப் பட்ட தானியங்களை கொள்ளையடிப்பது. இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.

கரியேரின் வழிகாட்டலினால் உற்சாகமடைந்த குடியரசு படையினர், லெ மொன் எனும் இடத்தில் நடந்த போரில் 15000 கிளர்ச்சியாளர்களை கொன்றார்கள். அந்த வெற்றிக்குப் பின்னர், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை சுற்றி வளைத்து, கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பெண்கள், குழந்தைகள் கூட குடியரசு படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

ஆயினும், நிலைமை அத்துடன் சீரடையவில்லை. கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால், வண்டே பிரதேசத்தில் இருந்த அனைவரையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது. சொத்துக்களை கொள்ளையடிக்கவும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், படையினருக்கு அனுமதி வழங்கப் பட்டது.

போரில் அழியாமல் எஞ்சிருந்த கிராமங்களுக்குள் புகுந்து கிராமவாசிகளை படுகொலை செய்தார்கள். கால்நடைகளும் அழிக்கப் பட்டன. வீடுகளை எரித்தார்கள். வயல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. ஒரு கிராமத்தில் ஆண்களைப் பிடித்து வெட்டிக் கொன்று விட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து சிதையில் நெருப்பு மூட்டி எரித்தார்கள். அந்தக் கிராமங்களில் வாழ்ந்த சிலர், புரட்சிக்கு ஆதரவானவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களும் குடியரசுப் படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

கிளர்ச்சி நடந்த இடத்திற்கு அண்மையில் உள்ள நான்த் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில், கைது செய்யப் பட்டோர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அங்கிருந்த கைதிகள் பலதரப் பட்டவர்கள். பிரபுக்கள், மேட்டுக்குடி மக்கள், அவர்களுக்கு வேலை செய்த பணியாளர்கள், கத்தோலிக்க மதகுருக்கள் போன்ற "வர்க்க எதிரிகள்" மட்டுமல்லாது, படையினருக்கு உணவு கொடுக்க மறுத்த சாதாரண விவசாயிகள் கூட சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.

இட நெருக்கடி காரணமாக சிறைச்சாலைக்குள் கைதிகள் நிரம்பி வழிந்தனர். அதனால் தொற்று நோய்களும் பரவின. சிறைச்சாலைக்கு பொறுப்பான நீதிபதியாக கரியேர் இருந்தார். ஒவ்வொரு கைதியாக கொண்டு வந்து விசாரிப்பதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை. ஆகவே ஒரு யோசனை சொன்னார். கைதிகளை கொண்டு சென்று, அருகில் உள்ள ஆற்றில் தூக்கிப் போட்டு மூச்சுத் திணறி சாக வைக்க வேண்டும். 


பிரெஞ்சுப் புரட்சியானது மதத்திற்கு எதிராக இருந்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப் பட்டன. கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். கத்தோலிக்க மத விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நான்த் நகரில், கத்தோலிக்க மதகுருக்கள், மிக மோசமாக சித்திரவதை செய்யப் பட்டனர். பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் நிர்வாணமாக்கி, சோடி சோடியாக கட்டி, ஆற்றுக்குள் தூக்கி வீசினார்கள். படையினர் அதனை "குடியரசுத் திருமணம்" என்று கூறி பரிகசித்தார்கள்.

பிரான்சின் கிழக்கே உள்ள லியோன் நகரில் இன்னொரு கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. முன்னர் புரட்சியை ஆதரித்தவர்கள், தமது பிரதேசத்திற்கு கூடுதலான சமஷ்டி அதிகாரங்களை கோரி கிளர்ச்சி செய்தார்கள். பாரிஸ் அரசுக்கு விசுவாசமானவர்களை பிடித்துக் கொன்று விட்டு, தன்னாட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பாரிஸில் இருந்த பொதுநல கமிட்டி பழிவாங்கப் புறப்பட்டது.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்கு விசுவாசமான கொல்லோத் து புவா (Collot d'Herbois) "துரோகிகளின் பிணங்களை கிழங்குகள் மாதிரி அடுக்கி வைக்கப் போவதாக..." சூளுரைத்தார். "அப்பாவிகளை பாதுகாத்துக் கொண்டிருந்தால், குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்" என்று இனப் படுகொலைக்கு நியாயம் கற்பித்தார்.

கொல்லோத் து புவாவுடன் பூஷே (Fouché) எனும் இன்னொரு அதிகாரியும் சேர்ந்து கொண்டார். இருவருமாக சேர்ந்து. கிளர்ச்சியை முறியடித்தார்கள். லியோனில் அகப்பட்டவர்கள் எல்லோரையும் பிடித்துக் கொண்டு வந்து, பீரங்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

"அங்கே இரத்தம் ஆறாக ஓடியது. ஆனால் மனித குல விடுதலைக்காக அதைச் செய்தோம்...குற்றவாளிகளின் இரத்தம் எமது சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது." என்று பூஷே தனது செயலை நியாயப் படுத்தினார்.

பாரிஸ் நகரில் இருந்த ரொபெஸ்பியருக்கு, தனது தோழர்கள் அதிக தூரம் செல்வதாகப் பட்டது. ஆகவே, கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய அதிகாரிகளையும், மற்றவர்களையும் பாரிசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தாங்கள் பாரிஸ் சென்றால் என்ன நடக்கும் என்று அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது. ரொபெஸ்பியர் கருணை காட்டாமல் கொன்று விடுவான் என்று அஞ்சினார்கள். அதனால் அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள்.

பாரிஸ் நகரில் ஒரு சதிப்புரட்சி நடந்தது. பொதுநல கமிட்டி அங்கத்தவர்களும், ரொபெஸ்பியரும் கைது செய்யப் பட்டனர். புரட்சியின் ஒப்பற்ற தலைவனாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ரொபெஸ்பியர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். 28 ஜூலை, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் ரொபெஸ்பியரின் தலை துண்டிக்கப் பட்டது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்களை புரிந்த கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய மூன்று அதிகாரிகளும், எல்லாவற்றிற்கும் ரொபெஸ்பியர் மீது பழி சுமத்தினார்கள். தாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்று கூறிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் நிம்மதி நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1794 செப்டம்பர், கரியேர் கைது செய்யப் பட்டு, சில மாதங்களுக்குப் பின்னர் சிரச்சேதம் செய்யப் பட்டார். அடுத்த வருடம், கொல்லோத் கயானாவுக்கு நாடுகடத்தப் பட்டார். பூஷே பதவியிறக்கப் பட்டு, சாமானிய மனிதனாக வாழ்ந்து மடிந்தார்.

ரொபெஸ்பியரின் மரணத்திற்குப் பின்னர், பிரான்சில் கொலைகள் பெருமளவு குறைந்து விட்டன. அடுத்து சில வருடங்களில், புரட்சிக்கு தலைமை தாங்க வந்த நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் சமாதானம் நிலவியது. ஆயினும், புரட்சியின் ஆரம்ப காலகட்டமான, 1793, 1794 ஆகிய இரு வருடங்களில் மட்டும், பிரான்சில் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர்.

(முற்றும்)

(பிற்குறிப்பு: பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த இனப்படுகொலை பற்றிய விபரங்கள், Historia (Nr.1/2015) சஞ்சிகையில் பிரசுரமான "Beulen van de revolutie" எனும் கட்டுரையில் இருந்து எடுக்கப் பட்டன.)

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை வாசிப்பதற்கு:

Friday, December 26, 2014

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?

அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை "இனப்படுகொலை" என்ற வரையறைக்குள் அடக்கலாம். எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.

பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ - லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் "ஜனநாயகம்" என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.

பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.

ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.

பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, "கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்" என்று நியாயப் படுத்தினார்கள்.

சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய "சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்" அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

அது என்ன "சுதந்திரத்தின் சர்வாதிகாரம்"? இதைக் கேள்விப்படும் நீங்கள், "சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது" என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 

அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.

நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.

பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக "பொதுநல கமிட்டி" ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே "ஆளும் கட்சியாக" இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.

ஸ்டாலின் காலத்தில், "மக்கள் விரோதிகள்" என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் "துரோகிகள்" அல்லது "மக்கள் விரோதிகள்" என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.

"ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்..." என்பது ரொபெஸ்பியரின் வாதம். "நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்...." இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட "மக்களின் நண்பன்" (L' Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: "துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!"

(தொடரும்)

Saturday, November 08, 2014

கருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புரட்சி


பத்சா (Fatsa), கருங்கடலுக்கு அருகில் உள்ள துருக்கியின் ஒர்டு மாகாணத்தில் ஒரு நகரம். எழுபதுகளில், இருபதாயிரம் பத்சா வாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். உணவுக்கான சாக்லேட் களி செய்ய பயன்படும் மூலப் பொருளான hazel nut உற்பத்தியாகும் அரிதான இடங்களில் அதுவும் ஒன்று. விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் மீனவர்கள்.

1965 ஆம் ஆண்டு, பத்சா நகரில், துருக்கி உழைப்பாளர் கட்சி (TIP) உருவாக்கப் பட்டது. உழைப்பாளர் கட்சியானது, மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கம், விவாத அரங்கம் போன்றவற்றின் ஊடாக இயங்கத் தொடங்கியது. குறிப்பாக விவசாயிகள் சுரண்டப் படுத்தல், கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத் தரகர்களின் மோசடி  போன்றவற்றை விவாதப் பொருளாக்கியது.

TIP கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, மஹிர் ஜயான் (Mahir Çayan)  தலைமையில், "மக்கள் விடுதலை இயக்கம் - துருக்கி முன்னணி" (THKP-C) ஸ்தாபிக்கப் பட்டது. துருக்கி, கோடீஸ்வர தொழிலதிபர்களினால் ஆளப்படுகின்றது என்றும், நவ- தாராளவாத பிடியின் கீழ் இருக்கிறது என்பதும் அவர்களது கொள்கையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தை அடக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் அவசியம் என்பது அவர்களது பாதை. பத்சா நகரில் அந்த இயக்கத்திற்கு ஆதரவுத் தளம் இருந்தது.

12-5-1971 அன்று, துருக்கியில் ஒரு சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியாளர்கள் புரட்சிகர இடதுசாரி சக்திகளை அடக்க முனைந்தனர். அதனால் THKP-C ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது. இதே நேரம், இராணுவத்தினர் மூன்று இடதுசாரி மாணவர் தலைவர்களை (Deniz Gezmis, Hüseyin Inan, Yusuf Aslan) கைது செய்து தூக்கில் போட இருந்தனர்.

மாணவர் தலைவர்களின் மரண தண்டனையை தடுக்கும் நோக்கில், THKP-C கெரில்லாக்கள், நேட்டோ வில் வேலை செய்த மூன்று ரேடார் தொழில் நுட்ப நிபுணர்களை கடத்திச் சென்றனர். அவர்கள் கிசில்டேரே(Kizildere) எனும் கிராமத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். 30-3-1972 அன்று, அந்தக் கிராமத்தை படையினர் சுற்றி வளைத்தனர். இராணுவத்தினருடன் நடந்த மோதலில், ஜயான் உட்பட பத்து போராளிகளும், மூன்று நேட்டோ பயணக்கைதிகளும் கொல்லப் பட்டனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சி, கிசில்டேரே தாக்குதல் காரணமாக, பத்சா கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஏனெனில், கொல்லப் பட்ட போராளிகளில் பலர் அந்த நகரத்தை சேர்ந்தவர்கள். எழுபதுகளின் மத்தியில், பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப் பட்டு, அங்காராவில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது இராணுவ அடக்குமுறை ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட, இடதுசாரி ஆர்வலர்கள் பலர் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "பிக்ரி சென்மெஸ்" (Fikri Sönmez). அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், பத்சா நகரில் ஒரு தையல்காரராக தொழில் புரிந்து வந்தவர்.

பிக்ரி சென்மெஸ் (Fikri Sönmez)

பிக்ரி சென்மெஸ், ஜோர்ஜிய மொழி பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அதனால் இன வேற்றுமைகளை கடந்து மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது. விடுதலையாகி வரும் பொழுது, அவரின் வயது 36 மட்டுமே. அதனால், இரண்டு தலைமுறைகளை சேர்ந்தவர்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தார். பத்சா உதைபந்தாட்ட கழகத்தின் நிறுவனராக இருந்தார். மேலும் மக்களைக் கவரும் பேச்சு வன்மை கொண்டவர்.  பிக்ரி சென்மெஸ், அடுத்து வரப் போகும் பத்சா நகர புரட்சியில் முக்கிய பாத்திரம் வகிக்க இருந்தார்.  

பிக்ரி சென்மெஸ், THKP-C இயக்கத்தின் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார். பத்சா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தல், அரிதாகக் கிடைத்த பாவனைப் பொருட்களின் பதுக்கலை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தார்.

அந்தக் காலத்தில், துருக்கி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. சீனி, மார்ஜரீன், சலவைத் தூள், சீமென்ட், சிகரட் போன்ற பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. வர்த்தகர்கள் அவற்றை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்று வந்தனர்.

இடதுசாரி ஆர்வலர்கள், பதுக்கப் பட்ட களஞ்சிய அறைகளை உடைத்து, அந்தப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்தனர். விற்பனையில் கிடைத்த இலாபத்தை, சம்பந்தப் பட்ட வர்த்தகர்களிடம் கொடுத்தனர். இடதுசாரி இளைஞர்களின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, உள்ளூர் மக்கள் மத்தியில் சோஷலிசவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது.

எழுபதுகளின் மத்தியில், நாடு முழுவதும் இடதுசாரி அலை வீசியது. பத்சாவில் மட்டுமல்லாது, வேறு பல இடங்களிலும் பல்வேறு சோஷலிச, கம்யூனிச இயக்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. 

1971 ஆம் நடந்த இராணுவ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, மக்கள் இடதுசாரி கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். துருக்கியின் "ஜனநாயக அரசாங்கத்திற்கும்" அது ஒரு பெரும் தலையிடியாக இருந்தது. அன்று உலகம் முழுவதும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலமாகையினால், அதன் தாக்கம் துருக்கியிலும் உணரப் பட்டது. 

இடதுசாரிகளை அடக்குவதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு இன்னொரு இராணுவ சதிப்புரட்சி தேவைப் படவில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படைகளுக்கும், பாசிஸ இயக்கங்களுக்கும் இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டது. சாம்பல் ஓநாய்கள், தேசிய செயற்பாட்டுக் கட்சி (MHP) என்பன, அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக இயங்க முன் வந்தன. 

இடதுசாரிகளின் கோட்டைகள் எனக் கருதப் படும் இடங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் திரியும் பாசிஸ காடையர்கள், இலக்கின்றி சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். புரட்சிகர சோஷலிச இயக்கங்களின் உறுப்பினர்களை தேடிச் சென்று தாக்கினார்கள். தெருக்கள், பாடசாலைகள் போன்ற எந்தப் பொது இடத்திலும், இடதுசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால், இடதுசாரி ஆர்வலர்கள், தற் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் குறைவான பகுதிகளில், தலைமறைவாக வாழ வேண்டி இருந்தது. அங்கெல்லாம் பாசிஸ இயக்கங்களின் கை ஓங்கியது. 

1977 ஆம் ஆண்டு, பத்சா நகரில் இயங்கிய மக்கள் குழுத் தலைவரும், சென்மெஸ்ஸின் கூட்டாளியுமான கெமல் கரா (Kemel Kara) படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை மூலம், மக்கள் மனதில் பீதியை உண்டாக்கலாம் என்று பாசிஸ்டுகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், விளைவு அதற்கு மாறாக அமைந்தது. மக்கள் மத்தியில் பாசிஸ எதிர்ப்புணர்வு அதிகரித்தது. அதனால், பத்சாவை சேர்ந்த சாம்பல் ஓநாய்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

மேலும் 1977 ஆம் ஆண்டு படுகொலைச் சம்பவம், புதியதொரு புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. டெவ்ரிம்சி யொல் (Devrimci Yol: புரட்சிகர பாதை) எனும் பெயரிலான இயக்கத்தில், முன்னாள் THKP-C உறுப்பினர்கள் சிலருடன், மக்கள் குழுக்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க வாதிகளும் அங்கம் வகித்தனர். 

டெவ்ரிம்சி யொல் துருக்கி முழுவதுக்குமான இயக்கமாக இயங்கியது. பத்சா நகரில் சென்மெஸ்ஸும், அவரின் தோழர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அது ஒரு மார்க்சிய இயக்கம் தான். ஆனால், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வேறு பட்டிருந்தது. அதாவது, டெவ்ரிம்சி யொல் சோவியத் யூனியனையோ, அல்லது சீனாவையோ பின்பற்றவில்லை. 

துருக்கி பற்றிய டெவ்ரிம்சி யொல்லின் அரசியல் நிலைப்பாடு இது: "துருக்கியில் முதலாளித்துவம் மேலிருந்து திணிக்கப் பட்டது. பிற்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் நிலைநாட்டப் பட்டது. அந்தக் காரணத்தினால், துருக்கி முதலாளித்துவம் பலவீனமானதாகவும், நிலப்பிரபுத்துவ பிரச்சினைகளுடன் போராட வேண்டிய நிலையிலும் உள்ளது. ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தியங்கும், தொழிலதிபர்கள், நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர், துருக்கியில் முதலாளித்துவத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அந்த ஆளும் வர்க்கம், பாசிஸ்டுகளை அடியாட்படையாக வைத்துக் கொண்டுள்ளது. அதனால், பாசிஸ்டுகளை தோற்கடிப்பது சோஷலிச புரட்சிக்கு முன் நிபந்தனையாக உள்ளது."  

முந்திய THKP-C இயக்கத்திற்கும், பிந்திய டெவ்ரிம்சி யொல் இயக்கத்திற்கும் இடையில் ஒரு பிரதானமான கொள்கை வேறுபாடு இருந்தது. முன்னையது ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தது. பிந்தியது மக்கள் விழிப்புக் குழுக்கள் அமைத்து, மக்கள் போராட்டமாக மாற்ற விரும்பியது. முதலில் மக்கள் புரட்சிக் கமிட்டிகள் உருவாக்கி, பின்னர் தேவைப் பட்டால் அவற்றை ஆயுதபாணிகளாக்கலாம் என்றது. 

மக்கள் கமிட்டிகள், எதிர்கால சோஷலிச மாற்று சமூகத்திற்கான வித்துகள் என்று சொல்லப் பட்டது. மக்கள் தமது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு பயிற்சிக் களமாக மக்கள் கமிட்டிகள் இருக்கும். குறிப்பாக, பத்சா நகரில், மக்கள் கமிட்டிகள் செயற்பட ஆரம்பித்தன. அங்கே பாசிஸ்டுகள் விரட்டப் பட்ட பின்னர், பெருமளவு மக்கள் ஆதரவு கிடைத்தது. 

1979 ஆம் ஆண்டு, பத்சா நகர சபையை நிர்வகித்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மேயர் காலமானார். அதனால் அங்கே இடைத் தேர்தல் வந்தது. டெவ்ரிம்சி யொல் இடைத்தேர்தலில் பங்கெடுப்பதா, அல்லது பகிஷ்கரிப்பதா என்று விவாதம் நடந்தது. அரச அடக்குமுறைக்குள் சுதந்திரமான தேர்தல் நடக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, கட்சித் தலைமை முடிவு செய்தது. இருப்பினும், பத்சா நகரில் கணிசமான அளவு மக்கள் ஆதரவு இருந்த படியால், டெவ்ரிம்சி யொல் தேர்தலில் போட்டியிட்டது. 

டெவ்ரிம்சி யொல் ஒரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாக இருக்கவில்லை. அதனால், சென்மெஸ் ஒரு சுயேச்சை உறுப்பினராக நிறுத்தப் பட்டார். பிற கட்சிகளின் வேட்பாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விட வித்தியாசமாக, சென்மெஸ் நேரடி ஜனநாயகத்தை கொண்டு வரப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். 

நகர சபை நிர்வாகத்தில் ஊழல், அணைவு அரசியல், போன்ற தீமைகளை இல்லாதொழிப்பதற்கு மக்கள் கமிட்டிகள் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். 14-10-1979 அன்று நடந்த தேர்தலில், சென்மெஸ்  61சதவீத வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அவருடன் போட்டியிட்ட சமூக ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 22 சதவீத ஓட்டுக்கள் விழுந்தன. 

உள்ளூராட்சி சபைக்கான இடைத் தேர்தல் முடிந்தவுடனே, 11 மக்கள் கமிட்டிகள் உருவாக்கப் பட்டன. அவற்றின் பொறுப்பாளர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப் பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கமிட்டிக் கூட்டங்கள், வெளிப்படையாக நடத்தப் பட்டன. 

மக்கள் கமிட்டிக் கூட்டங்களில் நடக்கும் விவாதங்கள், நகரின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம், மக்கள் அனைவருக்கும் கேட்கும் வசதி செய்யப் பட்டது. மக்களின் பல்வேறு பிரச்சினைகள், தேவைகளுக்காக, தனித் தனி கமிட்டிகள் நியமிக்கப் பட்டன.    

மக்களின் பிரதான பிரச்சினைகளான, பாதைகளை செப்பனிடுவது, கால்வாய் அமைத்தல், குடி நீர் மற்றும் மின்சார விநியோகம், போன்றவற்றை கவனிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில், மக்கள் கமிட்டிகள் பரித்துரைக்கும் திட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு, "சட்ட பூர்வமான" நகர சபையின் அங்கீகாரம் தேவைப் பட்டது. 

அன்று நடைபெற்ற தேர்தல் மேயர் பதவிக்கானது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நகரசபை உறுப்பினர்களாக இருந்தனர். சமூக ஜனநாயகக் கட்சி பெருமளவு ஆசனங்களில் அமர்ந்திருந்தது. இருந்த போதிலும், மக்கள் கமிட்டிகள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். 

மேயர் சென்மெஸ், மாதத்திற்கு இரண்டு தடவைகள் மக்கள் கமிட்டிக்கு முன்னால் சமூகமளித்தார். நகர சபை நிர்வாகத்தில் நடக்கும் விடயங்கள் தொடர்பாக, கமிட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ஏற்றிருந்தார். 

நகர சபையின் கீழ் வேலை செய்த அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஒரு பொது ஒப்பந்தம் போடப் பட்டது. புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) முன்மொழிந்த ஊழியர் சம்பளத் திட்டம், துருக்கி முழுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கியது. உதாரணத்திற்கு, அரசியல் ஈடுபாடு தொடர்பாக ஓர் அரச ஊழியர் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டாலும், அவரது சம்பளம் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வழங்கப் படும். அதற்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு 25% கிடைத்துக் கொண்டிருக்கும். 

துருக்கியில் முன்னெப்போதும் கேள்விப் பட்டிராத நேரடி ஜனநாயகம், மக்களுக்கு புதுமையாக இருந்தது. உண்மையில், பத்சா நகரில் இரண்டு அதிகார மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. வழமையான அரச இயந்திரமான பொலிஸ், நீதிமன்றம் போன்றன அப்படியே இருந்தன. ஆனால், மக்கள் அவற்றின் உதவியை நாடுவது குறைந்து கொண்டே சென்றது. அதற்குப் பதிலாக, மக்கள் கமிட்டிகள் மக்களின் குறை, நிறைகளை கேட்டு நிவர்த்தி செய்தன. 

மக்கள் கமிட்டிகள் உள்ளூர் பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. முன்னர் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருந்த நிறுவனங்களை, மீண்டும் அரசுடமையாக்கியது. உதாரணத்திற்கு, குடிநீர், தானிய விநியோகம், பொதுப் போக்குவரத்து, துறைமுக மேற்பார்வை போன்றவற்றை குறிப்பிடலாம். அதனால், நகர சபைக்கு நிறைய வருமானம் கிடைத்தது. 

நீண்ட காலமாக, சட்டவிரோதமாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் தடை செய்யப் பட்டது. கந்துவட்டிக் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டது. பத்சா நகரவாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் என்பதால், வருடத்திற்கு ஒரு தடவை தான் பணத்தை கண்ணால் காண்பார்கள். அதாவது, அறுவடைக் காலத்தில் விளைச்சலை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதனால், இடைப்பட்ட காலத்தில் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி கட்டிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கமிட்டிகள் உத்தரவு பிறப்பித்தன. 

புரட்சியின் இன்னொரு முக்கியமான சாதனையாக, தெருக்கள் அமைத்ததை குறிப்பிடலாம். பத்சா நகரில் பெரும்பாலான தெருக்கள் செப்பனிடப் படாமல் இருந்தன. மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால், அவற்றை தார் போட்டு நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின. தெருக்களை புனரமைப்பதற்கு, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் தாமாகவே முன்வந்து வேலை செய்தனர். 

துருக்கியின் பல பாகங்களில் இருந்தும், புரட்சியாளர்கள் திரண்டு வந்தார்கள். அயலில் இருந்த நகரங்களில் இருந்தும், வாகன, உபகரண உதவி கிடைத்தது. அதனால், தொடங்கப் பட்டு சில வாரங்களிலேயே அனைத்து தெருக்களும் செப்பனிட்டு முடிக்கப் பட்டன. 

1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பத்சா நகரில் "மக்கள் பண்டிகை" அறிவிக்கப் பட்டது. நகர மத்தியில் மேடைகள் அமைக்கப் பட்டு, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம் நடைபெற்றது. துருக்கி முழுவதிலும் இருந்து பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட வெகுஜன கலாச்சாரத்திற்கு மாற்றாக, இடதுசாரி கலாச்சார விழுமியங்களை வெற்றிகரமாக மேடையேற்றினார்கள். 

நிச்சயமாக, துருக்கி அரசாங்கம் பத்சா புரட்சியை கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. தலைநகர் அங்காராவில் இருந்து, வெறும் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பத்சா இருந்தது. 1978 ம் ஆண்டு. ஜோரும், மாராஸ், ஆகிய இடங்களில், சாம்பல் ஓநாய் பாசிஸ்டுகள், அலாவி சிறுபான்மையின மக்களை படுகொலை செய்திருந்தனர். அந்த இனப்படுகொலை துருக்கியை உலுக்கி இருந்தது.

பிரதமர் டெமிரேல், அந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தி, பாசிஸ்டுகளை தூண்டி விடும் வகையில் உரையாற்றினார்: "ஜோருமை மறந்து விடுங்கள்... பத்சாவை பாருங்கள்... இப்போதே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், எதிர்காலத்தில் நூறு பத்சாக்கள் உருவாகும்."

அரசு நிறுவனங்கள், பத்சா நகர சபை நிர்வாகத்தின் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. பெட்ரோல் போன்ற பொருட்களின் விநியோகம் தடுக்கப் பட்டது. ஆடிட்டர் பரிசோதகர்களை அனுப்பி, நகர சபை கணக்குகளை ஆராய்ந்தது.

இதற்கிடையே, முதலாளிய ஊடகங்கள் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. பத்சாவில் "ஒரு குட்டி மொஸ்கோ" உருவாகி விட்டது என்று பதறின. அது ஒரு தனியான குடியரசாக பிரிந்து சென்று விட்டதாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் அங்கே செல்ல முடியாதென்றும், கட்டுக்கதைகளை பரப்பின. 

நகர சபை கட்டிடம், காவல்துறையினரால் அடிக்கடி காரணமின்றி சோதனையிடப் பட்டது. அங்கு வேலை செய்த ஊழியர்கள் துன்புறுத்தப் பட்டனர். பத்சா நகரவாசிகள், அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்லும் போதெல்லாம் தாக்கப் பட்டனர். அவர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள் வழிப்பறி செய்யப் பட்டன. பாசிஸ்டுகள் அவர்களைக் கண்டால் குண்டாந்தடிகளால் தாக்கினார்கள். 

பத்சா நகரம் அமைந்துள்ள, ஒர்டு மாகாணத்தின் ஆளுநராக, பாசிஸ MHP கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப் பட்டார். அவர் "பத்சாவை மீட்டெடுக்கப் போவதாக" சூளுரைத்தார். பாதுகாப்புப் படைகளையும், பாசிஸ குண்டர்களையும், பத்சாவை நோக்கி நகர்த்தினார். 

11-7-1980 அன்று, பத்சா மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அயல் நாட்டின் மீது படையெடுப்பது போன்று, பாதுகாப்புப் படைகள் கவச வாகனங்கள், தாங்கிகள் சகிதம் முன்னேறிச் சென்றன. கடலில் இரண்டு போர்க் கப்பல்கள் ரோந்து சுற்றின. இவை யாவும் அங்கே ஒரு யுத்தம் நடப்பது போன்ற பிரமையை உண்டாக்கின. 

இராணுவ நடவடிக்கையின் போது, சென்மெஸ் உட்பட, 600 பேரளவில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டனர். தப்பி ஓடக் கூடியவர்கள், காடுகளுக்குள்ளும், மலைகளிலும் மறைந்து கொண்டார்கள். பெரும் படையை எதிர்த்து நிற்பது தற்கொலைக்கொப்பானது என்பதால், யாரும் ஆயுதமேந்திப் போராடவில்லை. அவ்வாறு போராடி இருந்தாலும், ஆயுத வன்முறையை துருக்கி அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைத்தனர். 

கைது செய்யப் பட்டவர்கள், முகமூடி அணிந்த தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப் பட்டனர். முன்னர் பத்சாவில் வாழ்ந்த, இடதுசாரிகளினால் விரட்டப்பட்ட பாசிஸ இளைஞர்களே, படையினருடன் கூட வந்து காட்டிக் கொடுத்தனர். இராணுவ நடவடிக்கையின் பின்னர், பாசிஸ்டுகள் பத்சா நகரில் சுதந்திரமாக தங்க முடிந்தது. பத்சா இராணுவ நடவடிக்கையானது, துருக்கியில் வரப் போகும் இராணுவ ஆட்சிக்கு ஒத்திகையாக அமைந்திருந்தது. 12-9-1980 அன்று, துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி நடந்தது. 

சென்மெஸ்ஸுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப் பட்டது. அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தமை ஒரு குற்றமாக தீர்ப்புக் கூரப் பட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த சென்மெஸ், தனது 47 வது வயதில், 4-5-1985 அன்று மாரடைப்பினால் காலமானார். 

பத்சா புரட்சி பத்து மாதங்கள் நீடித்தது. அதற்கு காரணமான புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். மார்க்சிஸ்டுகள் ஆனால் லெனினிஸ்டுகள் அல்லர். இடதுசாரி சோஷலிஸ்டுகள் என்று கூறலாம். அவர்களால் பூரணமான சோஷலிச சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை. அரசு இயந்திரத்தின் மேல் கை வைக்கவில்லை. அரசு நிறுவனங்கள் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. தனியுடைமை, சொத்துரிமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. மேலும் சில கலாச்சார மரபுகள், இடதுசாரி ஒழுக்கக் கோட்பாட்டின் பெயரில் நீடித்தன. 

பத்து மாத பத்சா புரட்சியானது, ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை உண்டாக்கி விட்டிருந்தது. அடக்குமுறை இல்லாதிருந்தால், அது இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும். ஆயினும், கோட்பாடுகளில் காலம் கழிக்காமல், மக்கள் கமிட்டிகள் மூலம் மாற்று உலகை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. மக்கள் சுதந்திரமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். 

(நன்றி: Doorbraak, oktober 2012, Mehmet Kirmaci எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.)