Showing posts with label உள்நாட்டுப் போர். Show all posts
Showing posts with label உள்நாட்டுப் போர். Show all posts

Tuesday, April 15, 2014

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது! 

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த, கிரமாட்டோர்ஸ்க் (Kramatorsk) விமான நிலையத்தின் மீது, உக்ரைனிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. விமான நிலையம், உக்ரைனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வலது அணி என்ற பாசிசக் கட்சி உறுப்பினர்கள் பலர், உக்ரைனிய இராணுவ சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சில வெளிநாட்டு பாசிஸ்டுகளும் தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. அதனை உறுதிப் படுத்த முடியவில்லை.  


டானியேஸ்க் (Donetsk) நகரில், சோவியத் ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்கள், பல பொலிஸ் நிலையங்களை கைப்பற்றி உள்ளனர். கடமையில் இருந்த உக்ரைனிய பொலிஸ்காரர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்லாது, நேற்று ஒரு சிறிய விமானத் தளமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அதைத் தான், தற்போது உக்ரைனிய படைகள் கைப்பற்றியுள்ளன. 

கிழக்கு உக்ரைனிய கிளர்ச்சியாளர்கள், "ரஷ்ய ஆதரவாளர்கள், பிரிவினைவாதிகள்" என்று உக்ரைனிய அரசும், மேற்கத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில், கிளர்ச்சியாளர்கள் தம்மை உக்ரைனியர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் ரஷ்ய மொழி பேசுவோர் அல்ல. ரஷ்யா மொழிக்கும், உக்ரைனிய மொழிக்கும் இடைப்பட்ட வட்டார வழக்கு மொழியை பேசும் மக்களும் அடங்குவார்கள். அவர்கள் தம்மை ரஷ்ய இனத்தவராக அடையாளம் காட்டவில்லை. உக்ரைனியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

ரஷ்யர்களையும், உக்ரைனியர்களையும் இணைக்கும் வகையில், "சோவியத் பிரஜை" என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் சோவியத் யூனியனின் கொடிகள் பறப்பதில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். பாசிச எதிர்ப்புணர்வு, பல்லின கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைக்கிறது.

முன்பு ஆப்கானிஸ்தானில் போரிட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகின்றனர். பொலிஸ் நிலையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, அவர்களே முன்னின்று தாக்கி உள்ளனர். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைக்கும் நோக்குடன், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர்.

கிளர்ச்சியை அடக்குவதற்காக, கீவ் அனுப்பிய இராணுவ-பொலிஸ் படையினரும், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். கீவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி உள்ள பாசிஸ்டுகள், இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கின்றனர். ஆக்கிரமிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களை விட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற வேண்டும் என்று, அவர்கள் விதித்த காலக்கெடு காலாவதியாகி விட்டது.

உக்ரைன் அரசு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றது. அதனால், ஐ.நா. சமாதானப் படை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகம் செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் தேசியவாதிகள், இன்னொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவது ஒரு முரண்நகை. உலக நாடுகள் முழுவதும் உள்ள தேசியவாதிகள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். 

உக்ரைன், கீவ் நகரில் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடியவர்களின் அரசாங்கம், இன்று கிழக்கு உக்ரைனில் ஸ்லாவியான்ஸ்க் நகரில் சுயநிர்ணய உரிமை கோருவோரின் போராட்டத்தை நசுக்குவதற்காக ஹெலிகாப்டர்களையும், படையினரையும் அனுப்பியுள்ளது. 


********


உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாக தெரிய வருகின்றது. ஐ.நா.மன்றத்தில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்ட பொழுது, இஸ்ரேல் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தது. அதிலிருந்தே, ஒபாமா நிர்வாகத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. 

பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் உக்ரைனில், யூதர்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தாக்கப் படுவது அதிகரித்துள்ளது. யூதர்களின் சமாதிகள் மீது, நாஸி சின்னம் கீறி களங்கப் படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக்குப் பின்னர், ஆயிரக் கணக்கான யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களுக்கு, இஸ்ரேலிய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இஸ்ரேல், அமெரிக்காவின் "உக்ரைனிய கொள்கையை" ஆதரிக்காமைக்கான காரணம் இது தான் என்று தெரிய வருகின்றது. ஆயினும், "உக்ரைனிய நாஸிகளின் யூத வெறுப்பு ஒரு கட்டுக்கதை(?)" என்று, ஒபாமா நிர்வாகம் மறுத்து வருகின்றது.

********

ஸ்லாவியான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களையும், பொலிஸ் தலைமையகத்தையும் கைப்பற்றிய மக்கள், அவற்றை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். உள்ளூர் பொலிஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஸ்லாவியான்ஸ்க் நகரில் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து வருகின்றனர். 


ஸ்லோவியான்ஸ்க், உக்ரைனிய படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக காத்திருக்கும் மக்கள்.

வீடியோ: ஸ்லோவியான்ஸ்க் நகருக்குள் நிலை கொண்டிருந்த உக்ரைனிய அரச படையினர், மக்களிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்த காட்சி.

 

*******


இவை, மேற்குலக ஊடகங்கள் மக்களுக்கு காட்டாமல் மறைக்கும் காட்சிகள். உக்ரைன், லுகான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மத்தியில், மேற்குலக எதிர்ப்பு தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. லுகான்ஸ்க் நகர ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சில காட்சிகள்.


உக்ரைனை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ், லுகான்ஸ்க் (Luhansk) நகரமும் வந்துள்ளது. அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒன்றில், முன்னாள் சோவியத் யூனியனின் கொடி பறக்கிறது.



*********

ஒடேசா (Odessa) நகரில் (10-4-2014), செம்படை வீரர்களின் சீருடை அணிந்த இளைஞர்கள், சோவியத் கொடிகளை ஏந்தியவாறு அணிவகுத்துச் செல்கின்றனர். 2 ம் உலகப் போரில், ஜெர்மன் நாஸிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஒடேசா நகரம், சோவியத் செம் படையினரால் விடுதலை செய்யப்பட்ட எழுபதாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, இந்த அணிவகுப்பு நடந்தது. 70 வருடங்களுக்கு முன்னர், வெற்றி விழாக் கொண்டாடிய செம்படை வீரர்கள், இதே தெருக்களில், இதே மாதிரித் தான் அணிவகுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


ஒடேசா நகரில் நடந்த, பாசிச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்து ஒரு காட்சி. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, உக்ரைனில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இருவரை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படமும், ஊர்வலம் பற்றிய தகவலும், "ஜனநாயகம் காக்கும்" மேலைத்தேய ஊடகம் எதிலும் வரவில்லை. அது தான் அவர்களது நடுநிலை தவறாத ஊடகத் தர்மம்.



உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். முன்பு கீவ் நகரில் இடம்பெற்ற, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களின் Euro Maidan ஆர்ப்பாட்டத்தில், ஒரு வெளிநாட்டவர் கூட தலை காட்டவில்லை. "வெளிநாட்டவர்களை வெறுக்கும் நவ நாஸிகளை ஆதரிக்கும் அளவிற்கு," அவர்கள் யாருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழும், ஒரு சில மேட்டுக்குடித் தமிழர்கள் மட்டும், இன்னமும் உக்ரைனிய நாஸிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.



 *******


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, April 28, 2010

ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்

"அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் சூடுபிடித்திருந்தது. வரவிருக்கும் ஆண்டுகளில் தமது திட்டங்களை ஆளும் கட்சி அறிவித்துக்கொண்டிருந்தது. திடீரென பாராளுமன்றத்தினுள் சில இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் உள் நுழைந்தனர். அவர்களில் அதிகாரி போலிருந்தவர் சபாநாயகரின் ஒலிவாங்கியைப் பறித்து அரசாங்கத்தை திட்டித்தீர்த்தார். தொடர்ந்து பல கூக்குரல்கள், அதைத் தொடர்ந்து சடசடவென வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் கதிரைகளின் கீழ் ஒழிந்து கொண்டனர்.

வானொலியில் பாராளுமன்ற நடப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வதந்திகள் காட்டுத்தீபோல் நாடு முழுவதும் பரவின. தலைநகரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இராணுவமும் பொலிஸ{ம் ஆக்கிரமித்துக்கொண்டன. ஆழும் கட்சியான சோஷலிசக் கட்சியின் தலைமையலுவலகத்திற்கு முன்பு கவச வாகனத்தின் பீரங்கி குறிபார்த்தது . பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குள் பதுங்கினர். "

மேற்படி சம்பவம் நடந்தது எங்கோ ஒரு "அபிவிருத்தியடையாத" மூன்றாம் உலக நாட்டில்அல்ல. "அபிவிருத்தியடைந்த" மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 1981 ம் ஆண்டு பெப்ரவரி 23 ம்திகதி இது நடைபெற்றது. ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி, கிறீஸ் போன்று ஸ்பெயினிலும் உண்மையான ஆட்சியதிகாரம் திரைமறைவில் இராணுவத்தின் கைகளில்தான் இருக்கிறது. என்னதான் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் இராணுவத்தை பகைக்காத வகையில் ஆட்சியில் நிலைக்கலாம். 1981 ம்ஆண்டு ஸ்பெயினில் இராணுவச் சதிப்புரட்சிக்கான சந்தர்ப்பம் இருந்த போதும் அது வெறும் எச்சரிக்கையுடன் நின்று விட்டது.

ஸபெயினில் இராணுவத்தின் ஆதிக்கம் உள்நாட்டுப் போரில் இருந்தே நிலைத்து வருகின்றது. ஸ்பெயின் உள்நாட்டுப்போர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்றும், பல சரித்திரவாசிரியர்களால் கூறப்படுகின்றது. ஒருபுறம் வலதுசாரிப் பாஸிச இராணுவமும், மறுபுறம் இடதுசாரி ஆயுதக் குழுக்களும் கோடிக்கணக்கான மக்களைப் பலி கொண்ட போரில் ஈடுபட்டிருந்தன. 1936 ம் ஆண்டு யூலையில் ஆரம்பமாகியது இப் போர். நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மன்னர் அல்போன்சோ, அந்த வருடம் பொதுத் தேர்தலை அறிவித்தார். அந்தத் தேர்தலில் லிபரல்களும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் மாபெரும் வெற்றியீட்டினர். வெற்றியீட்டிய கடசிகள் "மக்கள் முன்ணணி" அல்லது "குடியரசுவாதிகள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முடியாட்சியை ரத்ததுச் செய்துவிட்டு குடியரைப் பிரகடனம் செய்தனர். கத்தோலிக்க மதத்தின் பிடியில், நிலவுடைமைச் சமுதாயம் நிலவிய ஸ்பெயினில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அறிவித்தனர். வரவிருக்கும்ஆபத்தையுணர்ந்துகொண்ட மன்னர் குடும்பத்தோடு நாட்டை விட்டோடினார்.

புதிய இடதுசாரி அரசாங்கத்தின் முடிவுகளில் அதிருப்தியுற்ற கத்தோலிக்கத் தேவாலயங்கள், முடியாட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் ஸ்பானியப் பாசிசக்கட்சியான ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையில் ஒன்று திரண்டனர். வலது சாரிப் பிற்போக்குவாதிகள் நிறைந்திருந்த ஸ்பானிய இராணுவம் அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்ததது. ஃபலாங்கிஸ்டுக்கள் இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தினர். ஜெனரல் பிராங்கோவின் தலைமையில் ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் தெற்கு ஸ்பெயினிலும், மொறோக்கோவிலும் (ஸ்பெயின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள்) இராணுவ முகாம்களை தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஸ்பெயினின் (மறக்கப்பட்ட) உள்நாட்டுப்போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது. அதே காலத்தில் இத்தாலியில் முசோலினியின் பாஸிசக்கட்சியும், ஜேர்மனியில் ஹிட்லரின் நாஸிக்கட்சியும் ஆட்சி நடாத்தின. இவர்கள் ஸபெயினில் தமது தோழர்களான ஃபலாங்கிஸ்டுக்களுக்கு மனமுவந்து உதவி செய்தனர். இத்தாலியின் காலாட்படையினரினதும், ஜேர்மன் விமானப் படையினரினதும் உதவியோடு ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையிலான இராணுவம் விரைவிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஸ்பெயினின் பல இடங்களைக் கைப்பற்றினர். தலைநகரமான மட்றிட் இரண்டாவது பெரிய நகரமான பார்சலோனா உட்பட கிழக்கு ஸ்பெயினில் குடியரசுவாதிகளும், இடதுசாரிக்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தினர். லிபரல்கள் தலைமை தாங்கிய குடியரசுவாதிகளின் அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்து வந்தது. ஆனால், "நடுநிலைமை" வகித்த இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் வற்புறுத்தலால் பிரான்ஸ் தனது ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. "சர்வதேச சமூகத்தால்" கைவிடப்பட்ட நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கினாலும் அரசாங்கம் சோவியத் யூனியனின் உதவியை நாடவேண்டியேற்பட்டது.

இதேவேளை மொஸ்கோவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பான "கொமின்தேர்ன்" ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் தலையிடுவதென முடிவு செய்தது. அன்றைய சோவியத் யூனியன் அதிபரான ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ஆயுதத் தளபாடங்கள் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன. உள்நாட்டுப் போரின் வரலாற்றில் ஸ்பெயின் குடியரசு அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரேயொரு வெளிநாட்டு உதவி சோவியத் யூனியனிலிருந்துதான் வந்தது.

இதைவிட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் இருந்த கம்யூனிஸ்ட்கட்சிகள் தத்தமது நாடுகளில் தொண்டர்படைக்கு ஆட்களைத் திரட்டினர். குறிப்பாக அமெரிக்காவிலிருந்து "ஆபிரகாம் லிங்கன் படைப்பிரிவு" ஒரு கறுப்பினக் கொமாண்டரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். பன்னாட்டுத்தொண்டர் படைகள் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் போரிட்டனர். இதே நேரம் காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட குடியரசு அரசாங்கம் மக்கள் ஆயுதக் குழுக்களை அமைக்க அனுமதி வழங்கியது. அரசாங்கத்திற்கு ஆதரவான இராணுத்தினர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அரச ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அப்போதிருந்த பிற இடதுசாரிச் சக்திகளான அனார்கிஸ்டுகளும், ட்ரொட்கிஸ்டுகளும் தத்தமது மக்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கினார்கள்.

ஆரம்பத்தில் சகல இடதுசாரிக் குழுக்களும் குடியரசு அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கின. இருப்பினும் தத்தமது ஆதிக்கத்திற்குட்பட்ட இடங்களில் "கொம்யூன்" என அழைக்கப்படும் மக்களாட்சியை நிறுவினர். கிராமிய நகர மட்டங்களில் சாதாரண மக்கள் நேரடியாகப் பங்குபற்றும் நிர்வாகங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு ஸ்பானிய உள்நாட்டுப் போர் பாஸிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாகவும் கலாச்சாரப் புரட்சியாகவும் அமைந்தது. மறுபக்கத்தில் பாஸிஸ்டுகள் தம்மைத் தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள இந்தச் சம்பவங்கள் வழிசமைத்தன. "கம்யூனிச அபாயத்திலிருந்து தாய் நாட்டைக் காக்க போராடுவதாக அவர்கள் கூறிக்கொண்டார்கள். மேலும் அரசியல் அதிகாரத்தை இழந்த கத்தோலிக்கத் திருச்சபை அவர்களின் பக்கம் நின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் பிரஞ்சு எல்லையோரமாக பாஸ்க் மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாகவே ஸ்பெயினின் ஒற்றையாட்சிக்கெதிராக சுதந்திரம் கோரிப் போராடி வருகின்றனர். ஸ்பானிய உள்நாட்டுப்போர் அவர்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கவே "எயுஸ்கடி" என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்தனர். ஸ்பெயின் குடியரசு அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் இந்தத் தனியரசு ஓரிரு வருடங்களே நிலைத்து நிற்க முடிந்தது. ஃபலாங்கிஸ்டுக்களின் உதவிக்கு வந்த ஜேர்மனியப் போர் விமானங்கள் பாஸ்க் மக்களின் பிரதான நகரமான குவேர்னிக்கா மீது குண்டு மழை பொழிந்தன. இந்நகரின் அழிவைப்பற்றிக் கேள்வியுற்ற பிரபல ஓவியரான பிக்காஸோ உலகப்பிரசித்தி பெற்ற குவேர்னிக்கா ஓவியத்தை வரைந்தார்.

அதிக ஆயுத பலமற்ற, மேலும் வெளியிடத்திலிருந்து ஆதரவு கிடைக்காத ("அவர்களுக்குத் தனி நாடு வேண்டமானால், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்" என்பது குடியரசுப்படைகளின் கருத்தாக இருந்தது) பாஸ்க் தனியரசு முன்னேறிய வலது சாரிப்படைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அகப்பட விரும்பாத பாஸ்க் மக்கள் துறைமுகத்தில் புறப்படவிருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டனர். இவ்வாறு கப்பலொன்றில் அளவுக்கதிகமான ஆட்கள் தப்பினால் போதுமென்ற நோக்கில் ஏறிக்கொள்ளவே, பாரந்தாங்காமல் நடுக்கடலில் போன கப்பல் அப்படியே தாழ்ந்து போனது. கப்பலில் போன அனைவரும் ஜலசமாதியாகினர். உலகப்பிரசித்தி பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையை விடத் துயரமான இந்தச் சம்பவத்தை இதுவரை யாரும் திரைப்படமாக்க முன்வரவில்லை. டைட்டானிக்கில் பயணித்தவர்கள் பணக்கார உல்லாசப் பயணிகள், பாஸ்க் கப்பலில் போனவர்கள் சபிக்கப்பட்ட சாதாரண அகதிகள் என்ற பாகுபாடுதான் காரணமா ?

1939 ல் முடிவுக்கு வந்த ஸ்பானிய உள்நாட்டுப்போரின் இறுதியில் பாஸிச இராணுவம் வெற்றிவாகை சூடியது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. இடதுசாரிக் குழுக்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மை ஒரு முக்கிய காரணம். (சோவியத் சார்பு) கம்யூனிஸ்டுகள், ஸ்ரொட்கிஸ்டகள், அனார்கிஸ்டுகள் எனப்பிரிந்திருந்த இவர்களால் ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்தை கொண்டவர முடியவில்லை. சில இடங்களில் முரண்பாடுகள் காரணமாக இந்தக் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டன. பாஸிச இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்ததாக ஒருவரையொரவர் இவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வாக்குவாதம் இன்றுவரை தொடர்கிறது. இன்னொரு காரணம் ஃபலாங்கிஸ்டுக்களுக்கு நாஸி ஜேர்மனியும், பாஸிச இத்தாலியும் பகிரங்கமாக உதவி செய்தமை தெரிந்த போதும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் "நடுநிலைமை" என்ற பெயரில் பாராமுகமாக இருந்தனர். மேலும் அதேகாலகட்டத்தில் ஜேர்மனிக்கு எதிரான நேச நாடுகளின் அணி உருவாகியது. இதில் அங்கம் வதித்த சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசு அரசாங்கத்திற்கான உதவியை நிறுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இதைவிட சர்வதேசத் தொண்டர் படையை திருப்பியனுப்புமாறு குடியரசு அரசாங்கத்தை இணங்க வைத்தனர்.

எது எப்படியிருப்பினும், மூன்றுவருடப்போரின் முடிவில் ஃபலாங்கிஸ்டுக்களின் இராணுவம் ஸ்பெயினின் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. குடியரசு அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் பிரான்ஸிற்கும் பிற நாடுகளுக்கும் அகதிகளாகத் தப்பியோடினர். 7 ம்திகதி ஏப்பிரல் மாதம் 1939 ம் ஆண்டு ஜெனரல் ஃபிராங்கோவினால் போரின் முடிவு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பாஸிஸ இராணுவ சர்வாதிகார ஆட்சி ஆரம்பமாகியது. ஸ்பானிய சமூகத்தை இரண்டாகப் பிளவு படுத்திய உள்நாட்டு யுத்தத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரெதிர் முகாங்களில் நின்று போரிட்டனர். அன்று பிரிந்த சகோதரர்களில் பலர் இன்று ஜனநாயகச் சூழல் வந்த நிலையிலும் ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசாத நிலையிலுள்ளனர்.

1939 லிருந்து 1975 வரை சமார் நாற்பது ஆண்டு காலம் நீடித்த பாஸிசச் சர்வாதிகார ஆட்சியின்போது குடியரசு ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல்போனார்கள். இவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடக்கம். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டு இரகசியப் புதைகுழிகளினுள் புதைக்கப்பட்டனர். நாடுமுழுவதும் இவ்வாறு நூற்றுக்கணக்கான இரகசியப் புதைகுழிகள் உள்ளன. சில இடங்களில் 5000 த்திற்கும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அண்மையில் ஓரிடத்தில் அணைக்கட்டு நிர்மாணப் பணிகள் நடந்தபோது அங்கே மனிதப் புதைகுழி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நாடளாவிய சர்ச்சையைக் கிளப்பியது.

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீரகள். இவற்றிற்குக் கிடைக்கும் சர்வதேச முக்கியத்துவம் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகளைப் பற்றி மட்டுமே உலக மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், 1975 ம் ஆண்டு ஃபிராங்கோவின் மரணத்திற்குப்பின்பு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் ஸ்பெயினில் இடம்பெற்ற மனித உரிமைகள் பற்றி யாருமே அக்கறை காட்டவில்லை. ஒரு சில மனித உரிமை நிறுவனங்கள் இரகசிய மனிதப்புதைகுழிகளை தோண்ட உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்போட்டும், எந்தவொரு நீதிபதியும் அதைப்போய்ப் பார்க்கவில்லை.

இந்த அக்கறையின்மைக்கு என்ன காரணம் ? ஃபிராங்கோ காலத்தில் கொலை, சித்திரவதைகளில் சம்பந்தப்பட்ட எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரியும் இதுவரை ஏன் கைதுசெய்யப்படவில்லை ? பலமான இராணுவத்திற்கு எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவதுதான் அதற்குரிய காரணம். மன்னர் ஹுவான் கார்லோஸ் கூட இன்றும் ஃபிராங்கோ பற்றி உயர்வாகப் பேசுவார். ஸ்பெயினை ஜனநாயகப்படுத்தியதில் மன்னரின் பங்கு பிரதானமானது. கடந்தகால சர்வாதிகார ஆட்சியை மன்னித்து மறந்து விடுமாறு சத்தியம் வாங்கிய பின்னர்தான் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன. மீண்டும் ஒரு இராணுவச் சதிப்புரட்சி ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. அதனால்தான் பழசையெல்லாம் மறந்து விடுவோம் என்று பெருந்தன்மையோடு இருக்கிறார்கள்.

ஸ்பானிய இராணுவத்தில் இன்றும் கூட பாஸிஸ பிற்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சோஷலிச அல்லது குடியரசுக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிலவிய காலத்தில், அமெரிக்கா ஸ்பெயினை நேட்டோ அமைப்பில் சேர்த்து அங்கீகரித்தது. ஸ்பானிய இராணுவம் நீண்ட காலமாகவே தன்னை நவீனமயப்படுத்திக் கொள்ள ஆதரவாகவிருந்தது. அதற்கு நேட்டோ உறுப்புரிமை வழிவகுத்துக் கொடுத்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இராணுவத் தளபாடங்கள் வாங்குவதற்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கித் தருகிறது. ஈராக் போரின் போது காரணமில்லாமல் ஸ்பெயின் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கவில்லை.