Showing posts with label தமிழ் தேசியவாதிகள். Show all posts
Showing posts with label தமிழ் தேசியவாதிகள். Show all posts

Saturday, August 29, 2020

ஆங்கிலம் பெரிதென்பர் போலித் தமிழ்த் தேசியவாதிகள்!

ஆங்கிலம் பேசினால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்பது கஜன், விக்கி போன்ற போலித் தமிழ்தேசியவாதிகளின் தப்பெண்ணம். அதை தமிழில் பேசியே சாதிக்கலாம். உண்மையான தேசியவாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதை, துருக்கியின் முதலாவது குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர் லைலா ஜானாவின் வாழ்க்கைக் கதை மூலம் விளக்கி உள்ளேன். 

Thursday, August 25, 2016

அரசியல் சித்தாந்த தெளிவில்லாத தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு


ஈழத்தில் தமிழ் தேசியம் பேசும் இன்றைய இளைஞர்களின், அரசியல் அறிவிலித்தனத்திற்கு இது ஓர் உதாரணம். "செந்தூர் தமிழ்" என்பவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) முகநூல் செயற்பாட்டாளர். யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அவர், அநேகமாக கட்சியின் முழுநேரப் பணியாளராக இருக்கலாம். TNA தகவல்களை உடனுக்குடன் முகநூலில் பதிவு செய்து வருகின்றார்.

முகநூலில் நானிட்ட பின்வரும் பதிவுக்கு எதிர்வினையாற்றியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்துத்தனம் தெரிய வந்தது. விவாதத்தை தொடக்கி வைத்த முகநூல் பதிவு: 
//த‌மிழ் நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌த்திலும் ஆர‌ம்ப‌ கால‌ சாதி ஒழிப்புப் போராளிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளே!//

அதற்கு செந்தூரின் எதிர்வினை: //உழுத்து போன தத்துவங்களெல்லாம் இனி இங்க சரிவராது.//

ஆனால், அதே நபர் அதே நேரத்தில் பின்வரும் தகவலை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்: //இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள்! ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.//


சிலருக்கு தாம் என்ன பேசுகின்றோம் என்பதே தெரிவதில்லை. அந்தளவுக்கு அறியாமை மேலோங்கிக் காணப் படுகின்றது. இலங்கை அன்றும் இன்றும் வறிய நாடாகத் தான் கணிக்கப் படுகின்றது. வடக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்களும், காலங்காலமாக வறுமையில் அல்லலுறுகின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில் வறுமை பல மடங்கு அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. இதை ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தான் வந்து சொல்ல வேண்டுமா?

தமிழ் மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்வதற்கு வழி சொன்ன கம்யூனிசத் தத்துவம் "உழுத்துப் போனது" என்றால், வேறெந்த தத்துவம் அவர்களுக்கு உதவியுள்ளது? இதுவரை காலமும் உழுத்துப் போகாமல் இருக்கும், தமிழ் தேசியம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்பன, எந்தளவுக்கு தமிழ் மக்களின் வறுமையை போக்கியுள்ளன? இந்த விடயத்தில் நடைமுறையில் இருக்கும் எல்லாத் தத்துவங்களும் தோற்றுப் போய் விட்டன. அதைத் தான் ஐரோப்பிய ஒன்றிய தூதுவரின் வாக்குமூலம் நிரூபிக்கின்றது.

அதெல்லாம் போகட்டும். வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் திட்டங்கள் எவை? நானறிந்த வரையில் தமிழர்களின் வறுமை பற்றி மட்டுமல்ல, குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தவொரு தமிழ் தேசியவாதியும் பேசுவதில்லை. அந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பார்கள். நாமாக கேட்டாலும் பதில் வராது.

ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்னமும் அகலாத வறுமை பற்றிய கேள்வி எழுந்தது, அதற்கு செந்தூர் கூறிய பதில் இது:

//தமிழன் பட்டினியால் இறக்க வேண்டிய அவசியம் இல்லை நயினாதீவுக்கும் சன்னதிக்கும் போனா ஒவ்வொருநாளும் சாப்பாடு கிடைக்கும்// இதை அவர் நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் என்று நினைக்கலாம். உண்மையில், வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவொரு திட்டமும் கிடையாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

வறுமை என்றால் என்னவென்பதற்கு அவரது வரைவிலக்கணம் இது: //எமது மிகக்குறைந்த அளவுகோல் உணவு பட்டினி அற்று இருத்தல் தான். தமிழ்த்தேசியவாதம் முழுமையாக வலிமைபெற்றிருந்த வன்னி மண்ணில் புலிகளின் காலத்தில் யாராவது பட்டினியால் இறந்தார்களா இவ்வளவு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இதுவே நேரடிச் சான்று சாட்சி.//

புலிகளின் கட்டுப்பாடு இருந்த காலத்தில், போர் நடந்து கொண்டிருந்தது. இறுதிப்போர் வரையில், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் WFP, மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு NGO க்கள், நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தன. குறிப்பிட்ட சிலருக்கு, வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களின் பணம் கிடைத்து வந்தது. அதனால் தான் அங்கு யாரும் பட்டினியால் சாகவில்லை. அப்படி இருந்தும் ஆயிரக் கணக்கான பிள்ளைகள் போஷாக்கின்மையால் வாடியதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்தன.

வறுமை என்பது பட்டினி அற்ற நிலைமை அல்ல. இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15% வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். யுத்தம் நடந்த காலத்தில், வட மாகாணத்தில் புள்ளிவிபரம் எடுக்கப் படவில்லை. இருப்பினும் அங்கேயும் சனத்தொகையில் 15% ஏழைகளாக இருக்கலாம். இலங்கையில் பல தசாப்த காலமாகவே சமுர்த்தி என்ற பெயரில் அரச கொடுப்பனவு வழங்கப் பட்டு வருகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அனைவரும் அந்த நிவாரணத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் நடத்தும் லங்காஸ்ரீ (தமிழ்வின்) இணையத் தளத்தில் வந்த தகவல் இது: 
//வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அரைவாசி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். வறுமைக்கு உட்பட்டோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்து 500 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் உடைய குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று, சமூர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.// (http://www.tamilwin.com/show-RUmuyBQVSWhw1F.html)

இதற்கு மேலே நான் மேலும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. இன்றைக்கும் நடைமுறையில் உள்ள தமிழ் தேசியம் "உழுத்துப் போகாத" சித்தாந்தம் ஏதாவது, இன்று வரையில் தமிழ் மக்களின் வறுமையை ஒழித்து விட்டனவா? அதற்கு பதில் தெரியாமல் முழித்த TNA ஆர்வலர் செந்தூர், எங்கேயோ தேடிப் பிடித்து வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்றை கொண்டு வந்து காட்டினார்.


சித்தாந்த‌ம் ப‌ற்றிய வ‌ட‌ மாகாண‌ முத‌லமைச்ச‌ர் விக்கினேஸ்வ‌ர‌னின் பித்த‌லாட்ட‌ம் இது. விக்கினேஸ்வரனின் கூற்றில் இருந்து:
//சித்தாந்தம் என்ற சொல் ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். அரசியலில் வேறு அர்த்தம். மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்துரைகளை தான், சித்தாந்தம் என்கின்றார்கள்.//

சித்தாந்த‌ம் என்றால் முடிந்த‌ முடிவான‌ பூர‌ண‌மான‌ கொள்கை. (பார்க்க: சித்தாந்தம் - விக்சனரி) அது ஆன்மீக‌த்திலும், அர‌சிய‌லிலும் வேறு வேறு அர்த்த‌ம் த‌ரும் என்ப‌து உண்மைய‌ல்ல‌. இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். (சித்தாந்தம் பற்றி ஆங்கில அகராதி தரும் விளக்கம்: doctrine - A principle or body of principles presented for acceptance or belief, as by a religious, political, scientific, or philosophic group; dogma.)

ஆன்மீக‌ம் என்ப‌து க‌ட‌வுளின் பெய‌ரால் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல். அதே மாதிரி, அரசியல் என்பதும் கடவுள் இல்லாத ஆன்மீகம் தான். உல‌க‌ வ‌ர‌லாற்றில் ஆயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌, ஆன்மீக‌மும், அர‌சிய‌லும் ஒன்றில் இருந்து ம‌ற்றொன்றை பிரிக்க‌ முடியாம‌ல் இருந்த‌து. பிரெஞ்சுப் புர‌ட்சிக்குப் பின்ன‌ர் தான், ஆன்மீக‌த்தில் இருந்து அர‌சிய‌ல் த‌னியாக‌ப் பிரிந்த‌து. இன்றைக்கு பல நாடுகளில் உள்ள "மதச்சார்பற்ற கொள்கை" யின் மூலம் அது தான்.

//ஒரு காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்திற்கு பலத்த ஆதரவு இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவு இருந்தது.// (விக்கினேஸ்வரன்)

"ஒரு காலத்தில்" அல்ல, இப்போதும் எப்போதும் ஆதரவு இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2008 ம் ஆண்டில் இடம்பெற்ற நிதிநெருக்கடிக்கு பின்னர், மார்க்சியத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. மறுபக்கத்தில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு கூடி வருகின்றது. ஏனென்றால், உலகம் முழுவதும் இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இந்த உண்மை முதலமைச்சருக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்.

மேலும், முத‌லாளித்துவ‌ம் என்ப‌து ஒரு சித்தாந்தம் அல்ல, அது பொருளாதார‌ம்! அது அவர்  நினைப்பது மாதிரி "மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்து" அல்ல. வரலாற்றுப் போக்கில் இயல்பாக தோன்றிய பொருளாதார அமைப்பு வடிவம்.

முதலாளித்துவத்தை பாமரத்தனமாக "சித்தாந்த‌ம்" என்று நினைத்துக் கொண்டிருப்பது முத‌ல‌மைச்ச‌ரின் அறியாமை. ஒரு முன்னாள் நீதியரசரின் அறிவே இவ்வளவு தானென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் அறிவைப் பற்றி பேசத் தேவையில்லை.

முதலாளித்துவ பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது லிப‌ர‌லிச‌ம் என்ப‌து சித்தாந்த‌ம். அந்த‌ வார்த்தை அவ‌ர் வாயில் இருந்து வ‌ர‌ ம‌றுக்கிற‌து.

//இப்போது சித்தாந்தங்களின் அடிப்படையில் செல்வதை தவிர்த்து யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவே பல தலைவர்கள் முன்வந்துள்ளனர். கஸ்ரோ போய் சில வருடங்களில் கியூபாவும் சீனாவைப் போல் மார்க்சியத்தில் இருந்து விடுபட்டுச் செல்லவே தலைப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.// (விக்கினேஸ்வரன்)

அது என்ன "யதார்த்தம்"? வெளிப்படையாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? என்ன தயக்கம்? அமெரிக்கா தலைமையிலான நியோ - லிபரலிச சித்தாந்தவாதிகள் சொல்லிக் கொடுத்த பாடம் அது. உலக மக்களை அரசியல் நீக்கம் செய்யப் பட்டவர்களாக வைத்திருப்பது அதன் நோக்கம். நடைமுறையில் உள்ள அரசியல் பொருளாதாரம் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கக் கூடாது. அப்போது தான் தீவிரமான முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்ள முடியும். முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இந்த மறைமுகமான சுரண்டலுக்கு, தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்.

பிடல் காஸ்ட்ரோ போய் பல வருடங்களாகியும் கியூபா மார்க்சியத்தில் இருந்து விடுபடவில்லை. இப்போதும் அங்கே சோஷலிச கட்டுமானம் உள்ளது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். மேலும் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இன்றைக்கும் மார்க்சிய - லெனினிசம் படித்திருக்க வேண்டும். சீனாவிலும் மார்க்சியத்தை யாரும் மறந்து விடவில்லை. பல்கலைக் கழகங்களில் மார்க்சிய- லெனினிசம் கற்பிக்கப் பட வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது.

நான் முன்னர் கூறிய படி, அரசியல் மட்டுமல்ல, மதம், விஞ்ஞானம் போன்றன கூட சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றன. உலகில் எந்த நாட்டு அரசும் சித்தாந்தம் இல்லாமல் இயங்கவில்லை. சீனா சந்தை - சோஷலிசம் என்ற புதிய‌தொரு சித்தாந்தத்தை உருவாக்கி அதை பின்பற்றி வருகின்றது. அது பெரும்பாலும் முதலாளித்துவம் போன்றிருக்கும். ஆனால், "சந்தை - சோஷலிசம்" என்ற பெயரில் அவர்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே, விக்கினேஸ்வரன் சொல்வது மாதிரி, கியூபாவும் சீனா மாதிரி மாறுமாக இருந்தால், அதுவும் "சந்தை - சோஷலிசம்" சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தப் படும்.

//ஆகவே எனது அரசியல் சித்தாந்தம் யதார்த்தமே. நடைமுறையில் இருக்கும் உண்மை நிலையே அது.// (விக்கினேஸ்வரன்)

எதற்காக ஐயா, "யதார்த்தம்" என்று   குழப்புகின்றீர்கள்? நேரடியாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? அது தான் "யதார்த்தம்", "நடைமுறையில் இருக்கும் உண்மை நிலை" என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே?

இன்றைய‌ கால‌த்தில், இல‌ங்கை உட்ப‌ட‌ பெரும்பாலான‌ உல‌க‌ நாடுக‌ள் ந‌வ‌ தாராள‌வாத‌(லிப‌ர‌லிச‌ம்) சித்தாந்த‌த்தை பின்ப‌ற்றுகின்ற‌ன‌. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி கூட, நவ தாராளவாத கொள்கைகளை பின்பற்றுமாறு வற்புறுத்தி வருகின்றன. இதை அறிந்து கொள்ள அதிகம் சிரமப் பட வேண்டாம். அன்றாட தினசரித் தாளை புரட்டிப் பாருங்கள்.

இல‌ங்கையில், 1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெய‌வ‌ர்த்த‌ன‌ அறிமுகப் ப‌டுத்திய‌ நியோ லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை தான் விக்கினேஸ்வ‌ர‌ன் "ய‌தார்த்த‌ம்" என்று குறிப்பிடுகின்றார். 

முதலைமைச்சர் விக்கினேஸ்வரன்,  சிறுபிள்ளைத்தனமாக சுற்றி வ‌ளைத்து பேசாம‌ல், நேர‌டியாக‌ முதலாளித்துவத்தை அல்லது லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை ஏற்றுக் கொள்வ‌தாக‌ சொல்ல‌லாமே? அதெப்ப‌டி முடியும்? இல‌ங்கை அர‌சும், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் ஒரே சித்தாந்த‌த்தை தான் பின்ப‌ற்றுகிறார்க‌ள் என்ப‌து எல்லோருக்கும் தெரிந்து விடாதா? ம‌ண்டையில் இருக்கும் கொண்டையை ம‌றைக்க‌ ப‌டாத‌ பாடுப‌டுகிறார்க‌ள். கட்சியின் பெயரை "தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அது தான் மிகவும் பொருத்தமான பெயர்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Tuesday, March 15, 2016

தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்


விடுதலைப் புலிகளின் அழிவில், தமிழ் இனப்படுகொலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி, தமிழ் தேசிய ஊடகங்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான, அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று, புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான இஸ்ரேலிய கிபீர் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டார். 2 நவம்பர் 2007 அன்று, கிளிநொச்சிக்கு அருகில் இருந்த இரகசிய பங்கருக்கு, துல்லியமாக குறிபார்த்து போடப்பட்ட குண்டுவீச்சில் இறந்துள்ளார். 

தமிழ்ச்செல்வன் மீதான விமானத் தாக்குதலானது, அப்போதே பல கேள்விகளை எழுப்பி இருந்தது. அமெரிக்க இராணுவம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் பயன்படுத்திய, பங்கர் துளைக்கும் குண்டுகள், சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைத்தது எப்படி? தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கர் இது தானென துல்லியமான உளவுத் தகவல் வழங்கியது யார்?

2014 ம் ஆண்டு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட CIA இன் இரகசிய ஆவணம் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு பதில் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை ஒழித்துக் கட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கையின் ஓரங்கமாகவே, தமிழ்ச்செல்வன் கொலையையும் கருத வேண்டியுள்ளது. முப்பதாண்டு கால ஈழப்போர் வரலாற்றில், புலிகள் இயக்கத்தின் மேல் மட்டத் தலைவர்களில் ஒருவர் கொல்லப் பட்டமை அதுவே முதல் தடவை ஆகும்.

தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கரை காட்டிக் கொடுத்த உளவுத் தகவல், தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் இருந்து கிடைத்ததாக CIA அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் இயக்கத்திற்குள், ஏற்கனவே தமிழ்ச்செல்வனுக்கும், நடேசனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாக, அப்போதே புலிப் போராளிகள் மத்தியில் பேசப் பட்டது. 

தமிழ்ச்செல்வனின் அகால மரணத்தின் பின்னர், காவல் துறை பொறுப்பாளராக இருந்த நடேசன், அரசியல் துறை பொறுப்பாளர் ஆனார். அப்போதே புலிகளின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விட்டது என்று புலிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தமிழ்ச்செல்வன், நடேசனுக்கு இடையிலான தகராறுக்கு, சாதிய முரண்பாடும் ஒரு காரணம்.

"உச்ச கட்ட பெறுமதி வாய்ந்த இலக்குகள் (HVT) - படுகொலைத் திட்டம்" (“High Value Target” Assassination Program) என்று பெயரிடப் பட்ட CIA இரகசிய ஆவணம், SECRET (இரகசியம்) NOFORN (வெளிநாட்டவர் பார்வைக்கு அல்ல) என்று வகைப் படுத்தப் பட்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை இலக்கு வைத்துக் கொல்வதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் அறிக்கை அது. 

புலிகள் மட்டுமல்ல, அல்கைதா, தாலிபான், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே போன்று கொலம்பிய FARC, பெருவின் ஒளிரும் பாதை, வட அயர்லாந்து IRA, போன்ற இயக்கங்களின் தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் ஆராய்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில், இவை எல்லாம் ஒரே மாதிரியான கிளர்ச்சிக் குழுக்கள் என்ற உண்மையையும், மேற்படி அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.

கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தின் நோக்கம் என்ன? அதற்கான விடையும் அறிக்கையில் உள்ளது. தலைவர்களை சிறைப்பிடிப்பதிலும் பார்க்க, கொலை செய்து விடுவது சிறந்தது என்று CIA கருதுகின்றது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும், சிறிலங்கா இராணுவத்தால் தீர்த்துக் கட்டப் பட்டனர். இது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவின் நேரடி உத்தரவின் பேரில் நடந்தது. இருப்பினும், அதுவே அமெரிக்காவின் நோக்கமும் என்று தெரிய வருகின்றது. பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவம், CIA அறிக்கையில் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

தலைவர்களை சிறைப் பிடித்து பின்னர் விடுதலை செய்வதால் இயக்கம் அழியப் போவதில்லை என்பது CIA முன்வைக்கும் வாதம். ANC தலைவர் நெல்சன் மண்டேலா சிறை சென்று மீண்டதை அதற்கு உதாரணமாக காட்டுகின்றது. இஸ்ரேலிய வான்படைத் தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள், HVT தாக்குதல்களால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்க முடியும் என்பதை நிரூபித்தது. தலைமையை குறிவைத்து தாக்குவதன் மூலம், இயக்க உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க முடியும். அதிக பட்ச உளவியல் தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், ஹமாஸ், தாலிபான் விடயத்தில் HVT தாக்குதல்கள் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை என்பதையும் தெரிவிக்கின்றது. குறிப்பாக, ஹமாஸ் ஒரு கட்டுகோப்பான இயக்கம் என்பதாலும், மக்களை கவரும் சமூக நலத் திட்டங்களாலும், தன்னை மீளக் கட்டியமைக்க முடிந்தது. தாலிபான், அல்கைதா தலைவர்கள் நவீன தொலைத்தொடர்பு கருவிகளை பாவிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மேல் மட்ட தலைவர்களை தவிர யாரையும் சந்திக்காமல் பங்கருக்குள் முடங்கிக் கொண்டனர். மறுபக்கம், இந்தக் காரணத்தால், இயக்கத்தின் கீழ்மட்ட போராளிகளுக்கும், தலைமைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

விக்கிலீக்ஸ் இந்த CIA ஆவணத்தை, 2014 ம் ஆண்டே வெளியிட்டு இருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் எதுவும் அதைப் பற்றிப் பேசாதது ஆச்சரியத்திற்குரியது. குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள், இணையத் தளங்கள் எதுவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்பதல்ல. புலிகளுக்கு ஆதரவான ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ஏற்கனவே இந்தத் தகவலை பிரசுரித்தது. 

இருப்பினும், பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேரவில்லை. என்ன காரணம்? அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ்தேசியவாதிகள், ஏகாதிபத்திய நலன்களுக்காக சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்து வருபவர்கள். அவர்கள் இது போன்ற பல தகவல்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வார்கள்.

தமிழ்ச்செல்வனின் கொலைக்குப் பின்னர் பங்கருக்குள் இருப்பது தனக்கு பாதுகாப்பானதல்ல என்று தலைவர் பிரபாகரன் உணர்ந்திருந்தார். இறுதி யுத்தத்தில், பிரபாகரனின் பங்கர் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை சிறிலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. அதே நேரத்தில், புலிகள் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கூட்டிக் கொண்டு புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நகர்ந்தனர். அது முல்லைத்தீவு கடற்கரையோரம் இருந்த, எந்தவித பாதுகாப்புமற்ற வெட்ட வெளிப் பிரதேசம்.

முள்ளிவாய்க்கால் செல்லுமாறு யார் அறிவுரை கூறினார்கள்? வேறு யார்? சந்தேகத்திற்கிடமின்றி மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி அமெரிக்க அடிவருடிகள் தான். அதற்கு அவர்கள் கூறிய காரணம்? "அமெரிக்க மரைன் படைகளின் கப்பல் ஒன்று முலைத்தீவு கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது... அது புலிகளின் தலைவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடும்..." இப்படிப் பொய் சொல்லி நம்ப வைத்தார்கள். 

கடைசியில், அமெரிக்கக் கப்பலும் வரவில்லை, அமெரிக்கா காப்பாற்றவும் இல்லை. புலிகளின் தலைவர்கள் உட்பட, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், சிறிலங்கா படையினரால் இனப் படுகொலை செய்யப் பட்டனர். CIA அப்போதே அந்த முடிவை வரவேற்று அறிக்கை எழுதியுள்ளது. அதனால் தான், இந்தத் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிய விடாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



CIA அறிக்கை முழுவதையும் வாசிப்பதற்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Sunday, July 05, 2015

IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!


ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும் போலித் தமிழ் தேசியவாதிகள், அப்படி ஒரு கருதுகோளை கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை. 

தமது அமெரிக்க அடிவருடித்தனத்தை மறைப்பதற்காக, தமிழ் மக்களுக்கு உண்மையை மறைக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இன்றைக்கும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எப்படியாவது புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, IMF ம், உலகவங்கியும் மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத அரசுக்கு பக்கபலமாக நின்று உதவின. அதற்கான ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது.

உலக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான IMF, உலகவங்கி ஆகியன, மிக நீண்ட காலமாகவே இலங்கைக்கு கடன் வழங்கி வந்துள்ளன. ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களிலும், சிறிலங்கா படையினரால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்ட போதிலும், IMF, உலகவங்கி கடன்கள் குறையாமல் வந்து கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், அந்தக் கடனை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தன. ஆனால், அவர்களது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது.

IMF, உலகவங்கி மட்டுமல்ல, எந்தவொரு மேற்கத்திய நாடும், இலங்கை அரசுக்கு வழங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட குறைக்க முன்வரவில்லை. விதிவிலக்காக சில நாடுகள் நடந்து கொண்டாலும், அது வர்த்தக நோக்கில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. அதாவது, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை காரணமாகக் காட்டி, கடன் "உதவியை" நிறுத்தப் போவதாக பயமுறுத்தின. அதன் மூலம், அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்காக திரை மறைவில் பேரம் பேசப் பட்டது. அதைத் தவிர, எந்த நடவடிக்கையும் தமிழ் மக்கள் சார்பாக அமையவில்லை.

2009 ம் ஆண்டு, இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கைக்கான IMF கடனை நிறுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது வன்னியில் நடந்து கொண்டிருந்த, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட போரின் கொடுமைகளை கண்டதால், ஹிலாரி அப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கலாம். அன்றைய அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் Timothy Franz Geithner உடனான உரையாடலில் அது தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹிலாரியின் யோசனையை, IMF மிகக் கடுமையாக கண்டித்திருக்கும் என்பது, IMF வரலாறு தெரிந்தவர்களுக்கு வியப்புக்குரிய விடயம் அல்ல. உலக நாடுகளில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், பல உள்நாட்டுப் போர்களிலும், இனப்படுகொலைகளிலும் IMF நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பங்களித்துள்ளது. ஹிலாரி கிளிண்டனின் மூத்த ஆலோசகர் Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் அதைத் தான் நிரூபிக்கின்றது. அண்மையில் அமெரிக்க அரசினால் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களில் அது கண்டுபிடிக்கப் பட்டது.

ஹிலாரி கிளிண்டனுக்கான மின்னஞ்சலில், அவரது ஆலோசகர் Burns Strider பின்வருமாறு எழுதியுள்ளார்: "புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப் பட வேண்டும் என்றே IMF, உலகவங்கியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அதற்கான நடவடிக்கையில், மகிந்த ராஜபக்ச அரசினால் ஏற்படுத்தப்படும் மனித அழிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை தான்!"

இதற்குப் பிறகும், "அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும், தமிழ் மக்களுக்கு ஐ.நா.வில் தமிழீழம் வாங்கித் தரப் போகின்றன..." என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க விசுவாசிகள், உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்கள், தம்மை "தமிழ் இன உணர்வாளர்கள்" என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் உண்மையில் "டாலர் பண உணர்வாளர்கள்".

அதனால் தான், அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் அவர்களை "போலித் தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் தமிழ் தேசியம் பேசிக் கொண்டே, மறுபக்கம் தமிழினப் படுகொலையில் பங்களித்த அமெரிக்காவையும், IMF யும் ஆதரிப்பவர்களை வேறெப்படி அழைக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டனுக்கு Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் இது:

From: Bums Strider
To: H
Sent: Mon May 04 09:36:17 2009
Subject: Some intel for you...

This is about Sri Lankan Govt and the Tigers... I have a good source. This was shared to me at my and Karen's Derby Party yesterday (can you believe the 50 to 1 odds winner?).

There was a meeting held with Geitner asked for and led by IMF... They told him you were intruding into his domain by ordering/telling IMF to suspend funding to Sri Lakan Govt.

UNCLASSIFIED
U.S. Department of State Case No. F-2014-20439
Doc No. C05761169
Date: 06/30/2015

My take is that the people on the ground both with World Bank and IMF believe the Tigers need to be completely defeated and any collateral damage inflicted on private people by SL govt in process is ok... They also believe Tigers are better at propaganda than SL govt...

I have no idea what reality is... I know all about the conflict because there's been so much written over time but no idea of reality on ground.

My point is that IMF/World Bank is hoping to get Geitner to intervene and they recently played to his sense of who is US point person on IMF... So, that's what I know. I'll keep my ears open.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, June 23, 2015

இந்தியாவுக்கு எதிரான வியூகத்தில் சீனா தமிழ் தேசியவாதிகளுக்கு உதவுமா?

சீனாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு, பூகோள அரசியல் தந்திரோபாயம் குறித்த ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு நிபுணர்கள் குழு இயங்குகின்றது. China Institute of International Studies (CIIS) (http://www.ciis.org.cn/english/index.htm ) என்ற அந்த அமைப்பில், இந்தியா தொடர்பான கட்டுரை ஒன்று சீன மொழியில் பிரசுரமானது. 

Zhan Lue என்ற புனைபெயரில் ஒரு நிபுணர் எழுதிய கட்டுரை, இன்று வரையில் யாருடைய கவனத்தையும் பெறவில்லை. ஆனால், அதில் தமிழ் தேசியவாதிகள் பற்றியும் குறிப்பிட்டிருப்பது எம்மைப் பொருத்தவரையில் முக்கியமான விடயம் தான்!

அந்தக் கட்டுரையின் சாராம்சம் இது: 
சீனா தனது நட்பு நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவற்றுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவில் பத்து அல்லது இருபது தனி நாடுகளை உருவாக்குவதற்கு முன் வர வேண்டும். சீனா சிறிதளவு முயற்சி எடுத்தாலே, இந்திய மாநிலங்களை உடைத்து விடலாம். அதற்காக, சீனா பல வேறுபட்ட தேசிய இனங்களுடன் கூட்டுச் சேர வேண்டும். அசாமியர்கள், காஷ்மீரிகள், தமிழர்கள் போன்ற தேசியவாதிகள் தமக்கான தனி நாட்டை அமைத்துக் கொள்வதற்கு உதவ வேண்டும்.
(ஆதாரம்: Where China Meets India, Burma and the New Crossroads of Asia, by Thant Myint-U) 

சீனாவிலும், இந்தியாவிலும் இந்த அறிக்கையை பலர் அபத்தம் என்று புறக்கணித்திருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நடைமுறைச் சாத்தியமற்றது என்று சொல்ல முடியாது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நட்புறவு அறுந்து, மோதல் நிலைக்கு செல்லும் காலகட்டத்தில் அந்த அறிக்கை தூசு தட்டி எடுக்கப் பட்டு, அதில் கூறப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப் படுத்த முனையலாம்.

அனேகமாக, இந்திய அரசு ஏற்கனவே இப்படியான அபாயம் இருப்பதைப் பற்றி யோசித்து இருக்கலாம். அதனால், தானே முந்திக் கொண்டு, இந்திய நலன் சார்ந்த தமிழ் தேசிய சக்திகளை உருவாக்கி விட்டிருக்கலாம். அதை நாம் அனுபவத்தில் கண்டறியலாம். 

தங்களைத் தாங்களே தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் பலர், சீனாவை கடுமையான தொனியில் எதிர்ப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். அதே நேரம் இந்தியா தொடர்பான மென்மையான போக்கை கடைப் பிடிக்கின்றனர். 

"கருணாநிதி - சோனியா" அல்லது "திமுக - காங்கிரஸ்" போன்ற தனி நபர்களையும், கட்சிகளையும் மட்டும் எதிர்த்தால் போதும், அதுவே இந்திய எதிர்ப்புவாதம் ஆகிவிடும் என்று சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இன்னொரு கட்டத்தில், மோடியையும், பாஜகவையும் ஆதரித்தார்கள். அப்படி இல்லா விடினும், இந்தியாவில் இருந்து பிரிவது பற்றி பேசாமல், இந்திய இறையாண்மைக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.

ஈழப்போரின் இறுதியில், சீனா சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்தது. கன ரக ஆயுதங்களை விற்றது என்று சிலர் காரணங்களை அடுக்கலாம். அதெல்லாம் உண்மை தான். ஆனால், சர்வதேச விவகாரங்களில், சீனாவும் ஒரு மேற்கத்திய வல்லரசு போன்றே நடந்து கொள்கின்றது. 

ஒரு நாட்டுக்குள் நிலவும் தேசிய இனப் பிரச்சினையில், அது இரண்டு பக்கத்தையும் ஆதரிக்கும். ஒன்றை நேரடியாகவும், மற்றதை மறைமுகமாகவும் ஆதரிக்கும். சீனாவின் இந்த தந்திரோபாயம், ஏற்கனவே மியான்மரில் வெற்றிகரமாக பாவிக்கப் பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்திடம் மட்டுமல்ல, புலிகளிடமும் சீன ஆயுதங்கள் தான் இருந்தன என்பது இரகசியமல்ல. புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் தங்கியிருந்து ஆயுதங்களை கடத்தி வந்ததும் தெரிந்த விடயம். அவர் எங்கே, யாரிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினார் என்பதை ஆராய்ந்தாலே போதும். மியான்மரிலும், கம்போடியாவிலும் சீன ஆயுதங்களை விற்பனை செய்யும் தரகர்கள் உள்ளனர்.

மியான்மரில் சீன எல்லையோரம் "வா" சிறுபான்மை இன மக்களின் தனி நாட்டுக்காக போராடிய கிளர்ச்சிப் படை (United Wa State Army), தசாப்த காலமாக ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்துள்ளது. அதற்கு சீனா மறைமுகமான ஆதரவு வழங்குவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்தப் பிரதேசத்தில் சீன நாணயம் புழக்கத்தில் உள்ளது. சீனாவில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப் படுகின்றது. பெரும்பாலான முதலீடுகள் சீனர்களுடையவை.

நவீன ஆயுதங்களை கொண்டுள்ள United Wa State Army (UWSA), தனது "de facto வா தேசத்திற்கு" வருமானம் தேடுவதற்காக ஆயுத விற்பனையில் இறங்கியுள்ளது. சீனா தனது இராணுவத்தை நவீனப் படுத்தும் பொருட்டு, பழைய AK-47, T-56 ரக துப்பாக்கிகளை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலைக்கோ விற்று விட்டது. சீனாவுடன் தொடர்புடைய ஆயுதத் தரகர்கள் அவற்றை வாங்கி விற்கின்றனர். UWSA , அவற்றை மணிப்பூர் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் இயங்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு விற்றுள்ளன. 

அண்மையில் மியான்மர் எல்லைக்குள் நுளைந்த இந்திய இராணுவம், அங்கு முகாமிட்டிருந்த இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கு மியான்மர் அரசு மறைமுகமான ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. வெளியில் தெரியா விட்டாலும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாக ஏற்படும் பதிலிப் போர்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தானிருக்கின்றன.

Saturday, October 12, 2013

தமிழரிடம் உள்ள ஒற்றுமை உணர்வு, தமிழ் தேசியவாதிகளிடம் கிடையாது!


"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்...." 


தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும், தமிழ் இன ஒற்றுமையே தீர்வு என்று வலியுறுத்தும் தமிழ் தேசியவாதிகள், தமக்குள் ஒற்றுமையாக இருக்கின்றனரா? தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தை தவிர, வேறெந்த அரசியல் கொள்கையையும் பின்பற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தமிழர்களில் சிலர் இடதுசாரிகளாக இருப்பது கூட அவர்களுக்கு பிடிப்பதில்லை. (இதன் மூலம், தமிழ் தேசியவாதிகள் தம்மை வலதுசாரிகளாக காட்டிக் கொள்கின்றனர்.) கம்யூனிசம், சோஷலிசம், தலித்தியம், பெண்ணியம் என்பன எல்லாம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விடும் என்று பதறித் துடிப்பார்கள். உண்மையில் ஒற்றுமையாக ஒன்று சேர வேண்டியவர்கள் தமிழ் தேசியவாதிகள் தான். அவர்கள் தமது தவறை மறைப்பதற்காகவே, தமிழ் மக்கள் மேல் பழியைப் போடுகின்றனர்.

தமிழ் தேசியம் என்றைக்காவது தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்திருக்கிறதா? உண்மையில், தமிழ் மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நின்ற சந்தர்ப்பங்கள் வரலாற்றில் நிறைய உண்டு. ஆனால், அப்போதெல்லாம் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் மோதிக் கொண்டதன் மூலம், எதிரிக்கு தமது ஒற்றுமையின்மையை பறைசாற்றிக் கொண்டார்கள். ஈழப்போர் தொடங்கிய காலத்தில், நகைச்சுவைத் துணுக்கு ஒன்று ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. "ஸ்ரீலங்கா அரசு போராளிக் குழுக்களை அழிப்பதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. அவர்கள் கையில் தமிழீழத்தை கொடுத்து விட்டால் போதும். அதற்குப் பின்னர் தமக்குள் அடிபட்டு அழிந்து, தமிழீழத்தை மீண்டும் சிங்களவனிடம் கொடுத்து விடுவார்கள்."

தமிழ் நாட்டில், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமே தமிழ் தேசியக் கொள்கையை முதன் முதலாக வெகுஜன மயப்படுத்தியது. அவர்கள் தான் முதன்முதலாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால், திமுக கூட, திராவிடர் கழகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து வெளியே வந்த கட்சி தான். அதற்கு அவர்கள் பல கொள்கை முரண்பாடுகளை கூறிக் கொண்டார்கள். பிற்காலத்தில், கருணாநிதி, எம்ஜிஆருக்கு இடையிலான பிணக்கு காரணமாக, அதிமுக உருவானது. தமிழர்களின் ஒற்றுமை மேலும் சிதைந்தது. அதற்குப் பின்னர், வைகோ பிரிந்து சென்றார். இந்தப் பிரிவினைகளுக்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல.

ஈழத்திலும் அது தான் நிலைமை. ஆரம்பத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அன்றைய தமிழ்க் காங்கிரசின் அரசியலுக்கும், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்கும் இடையில் எந்த ஒற்றுமையும் கிடையாது. அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக் கொள்வதும், தமிழ் மேட்டுக்குடி வர்க்க நலன்களை பராமரிப்பதுமே அன்றைய தமிழ்க் காங்கிரசின் பிரதானமான செயற்பாடுகளாக இருந்துள்ளன.

செல்வநாயகம் தலைமையில் ஒரு குழுவினர், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி உருவாக்கினார்கள். அப்போது சில கொள்கை முரண்பாடுகள் பற்றி பேசிக் கொண்டார்கள். செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியே, இன்றைய தமிழ் தேசியக் கோட்பாட்டுக்கு அஸ்திவாரம் போட்டது எனலாம். அந்தக் கட்சியே, முதன் முதலாக தமிழ் மொழி பேசும் மக்கள் எல்லோரையும் ஒரே அரசியலின் கீழ் ஒன்று சேர்த்தது. சாதிய முரண்பாடுகள் கூர்மை அடைந்திருந்த அந்தக் காலங்களில், தாழ்த்தப்பட சாதியினர் பெருமளவில் இடதுசாரிக் கட்சிகளையே ஆதரித்து வந்தனர். இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்வதை தடுப்பதும், தமிழரசுக் கட்சியின் முக்கியமான நோக்கமாக இருந்துள்ளது.

குறைந்தது ஒரு தசாப்த காலமாகவேனும், தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் ஒற்றுமை இல்லாமல், ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள். தேர்தல் காலங்களில் ஒருவரை மற்றவர் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், காலப்போக்கில் ஒருமையின் அவசியத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். எழுபதுகளில் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அப்போது ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டணியை ஆதரித்தார்கள். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பெரும்பான்மை தமிழ் வாக்காளர்களின் பலத்தில் வென்றார்கள். சிங்களவர்களே பொறாமைப் படும் அளவிற்கு, வடக்கு கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக அமர்ந்தார்கள்.

அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த சக்திகளினால், தமிழ் தேசியத்தின் ஒற்றுமை குலைக்கப் பட்டது. கொள்கை முரண்பாடு காரணமாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினர் தீவிரவாதிகளாக மாறினார்கள். தமிழ் மாணவர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை விரும்பின. மிதவாத தமிழ் தேசியவாதிகளுக்கும், தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி, இரண்டு தரப்பினரும் பகைவர்கள் ஆனார்கள். இரண்டு தரப்பினரும், தாமே உண்மையான தமிழ் தேசியவாதிகள் என்று அறிவித்துக் கொண்டனர்.

தீவிர தமிழ் தேசியவாதிகள் கைகளில் ஆயுதங்கள் இருந்ததால், மிதவாத தமிழ் தேசிய தலைவர்களை துரோகிகள் என்றழைத்து சுட்டுக் கொன்றனர். அதனால், மிதவாத தமிழ் தேசியவாதிகள் தமது பாதுகாப்பிற்காக சிங்கள அரசை சார்ந்து வாழ நிர்ப்பந்திக்க்கப் பட்டனர். சில இடங்களில், கூட்டணித் தலைவர்கள், பிரமுகர்கள், தீவிரவாத இளைஞர்களை பொலிசிற்கு காட்டிக் கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. மெல்ல மெல்ல ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியதால், தமிழ் மக்களும் கூட்டணியை விட்டு விலகி, ஆயுதபாணிக் குழுக்களை ஆதரித்தனர்.

தமிழ் தேசிய ஆயுதபாணிக் குழுக்களுக்கு இடையில் கூட ஒற்றுமை இருக்கவில்லை. பிரபாகரன் சில வருட காலம் டெலோ வில் இருந்தார். பின்னர் பிரிந்து சென்று புலிகள் அமைப்பை ஸ்தாபித்தார். பதினைந்து வருடங்களுக்குப் பின்னர், பிரபாகரன் தலைமையிலான புலிகள், டெலோ இயக்கத்தை அழித்து விட்டனர். ஆரம்ப காலத்தில், புலிகள் இயக்க தலைவராக பதவி வகித்த உமா மகேஸ்வரன், பின்னர் பிரிந்து சென்று புளொட் என்ற இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல. ஊர்மிளா என்ற பெண் போராளியின் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாகவே, உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது.

புளொட் இயக்கமும் ஒற்றுமையாக இயங்கவில்லை. உமா மகேஸ்வரனின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த தீப்பொறி குழுவினர் பிரிந்து சென்றனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட காலத்தில், புளொட்டில் இருந்து இன்னொரு குழுவினர் பிரிந்து சென்று, ஈ.என்.டி.எல்.எப். என்ற பெயரில், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக இயங்கினார்கள். நீண்ட காலமாக, புலிகள் கட்டுக்கோப்பான அமைப்பாக, ஒற்றுமைக்கு பெயர் பெற்று விளங்கியது. ஆனால், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர், புலிகளின் இரண்டாம் மட்ட தலைவர் மாத்தையா, RAW உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டார். அது ஒரு தனி மனிதனுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கவில்லை. மாத்தையாவுக்கு விசுவாசமான போராளிகளும் கைது செய்யப் பட்டனர். சில நூறு பேரைக் கொண்ட மாத்தையா குழுவினர் தப்பிச் சென்று, சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள்.

நோர்வே அனுசரணையாளராக செயற்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், கிழக்கு மாகாண தளபதியான கருணா தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது. இரண்டு பிரிவுகளுக்கு இடையில் நடந்த ஆயுத மோதல்கள் காரணமாக, தோல்வியடைந்து பின்வாங்கிய கருணா குழுவினர் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர். தீவிர தமிழ் தேசியவாதிகள் அரசாங்கத்துடன் சேர்வது என்பதுகளிலேயே தொடங்கி விட்டது. வடக்கு, கிழக்கில் புலிகளினால் தடை செய்யப் பட்ட, டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் ஆகிய இயக்கங்கள், தமது பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா இராணுவம், புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை கூலிப் படைகளாக பயன்படுத்தியது.

ஈழத் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த காலத்தில், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் "தமிழ் மக்களின் ஒற்றுமையின்மை" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், அவர்களை ஒற்றுமையாக ஆதரித்த தமிழ் மக்கள் தான், பின்னர் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தார்கள். 1995 ஆம் ஆண்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டை சிறிலங்காப் படைகள் கைப்பற்றின. "யாழ்ப்பாண தமிழரின் சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதமானோரே புலி இயக்கப் போராளிகளாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால், சிங்களப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும்" புலிகளின் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

2009 ல் நடந்த இறுதிப்போரில் வன்னியில் இருந்த அனைத்து தமிழ் மக்களும், ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து போராடினார்கள். இறுதி யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, வீட்டுக்கொரு பிள்ளை போராளியாக வேண்டும் என்று உத்தரவிட்ட புலிகள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். பல குடும்பங்களில், பிள்ளைகள் பலவந்தமாக பிடித்துச் சென்று போராளிகளாக்கப் பட்டதை, இன்றைக்கும் புலி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். "வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள், உணர்வுபூர்வமாக, தாமாகவே விரும்பிச் சென்றனர்." என்றே சொல்லி வருகினறனர். அப்படியானால், தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து தான் போராடி இருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து போராடிய போதிலும், போரில் ஏற்பட்ட தோல்வி எங்கிருந்து வந்தது? அதற்கு, கருணா குழு, ஈபிடிபி போன்ற அரச அடிவருடிகளான தமிழ் கூலிப் படையினரை குற்றஞ் சாட்டுகின்றனர். அவர்கள் எல்லோரும், முன்னொரு காலத்தில் தமிழ் தேசியவாதிகளாக இருந்தவர்கள். அதாவது, தமிழ் மக்கள் என்றைக்கும் ஒற்றுமையாகத் தான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைகள் இருக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்கு இடையில் தான் ஒற்றுமை இல்லை. அது தான் முக்கியமான பிரச்சினை.

புலிகளுக்குப் பின்னர், தமிழ் தேசியவாதிகளின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லை என்பதை, இங்கே சொல்லத் தேவை இல்லை. கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் சேர்க்கை. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர் ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி பேசி வாக்குக் கேட்டார்கள். அறுதிப் பெரும்பான்மை தருமாறு கெஞ்சினார்கள். தமிழ் மக்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கூட்டமைப்புக்கு தமது ஓட்டுக்களை அள்ளிக் கொடுத்தார்கள். அனால், தேர்தல் முடிந்த பின்னர், மாகாண சபை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இழுபறிப் படுகிறார்கள். அமைச்சர் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். உண்மையில், தமிழ் தேசியவாதிகள் எமக்கு போதிப்பதற்கு மாறாகவே யதார்த்த நிலைமை உள்ளது. தமிழ் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்குள் தான் ஒற்றுமை இல்லை.

புலிகளின் அழிவுக்குப் பின்னர், அதே அரசியலை வேறொரு தளத்தில் முன்னெடுத்து வரும் தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகளும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நிற்கின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில், தமிழ் தேசியம் தமது உயிர்மூச்சு என்று பேசிக் கொண்டிருந்த, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர், ஆளுக்கொரு கட்சிகளாக பிரிந்து நிற்கின்றனர். "அவர்கள் ஏன் இன்று வரையில் ஒரே கட்சிக் கொடியின் கீழ் ஒன்று சேரக் கூடாது?" என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை.

தேர்தலில் போட்டியிடாத, தீவிர தமிழ் தேசிய அமைப்புக்களான, நாம் தமிழர், மே 17 போன்றன கூட, ஒரே பெயரில், ஒரே அமைப்பாக இயங்குவது பற்றி இன்று வரையில் ஆலோசிக்கவில்லை. ஆனால், எல்லோரும் ஒரே குரலில், ஒரே கோஷத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதுவே பிரச்சினைகளுக்கு காரணம்." தமிழ் மக்களை குற்றம், குறை கூறுபவர்கள், ஒரு தடவை தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வது நல்லது. 

Wednesday, June 01, 2011

இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு


ஐரோப்பிய நாடொன்றில் இருந்து, இலங்கை சென்று திரும்பிய மனித உரிமை உரிமை ஆர்வலர் ஒருவர் பின்வருமாறு கூறினார். "இலங்கையில் இன முரண்பாடுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. சிங்களவர்கள், தமிழர்கள் என்பது மொழி அடிப்படையில் பிரிந்த ஒரே இனம். ஆனால் இரண்டு தரப்பிலும் படித்தவர்கள் கூட இனவாதம் பேசுவது கவலைக்குரியது. பக்கச்சாற்பற்றவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட, இன அடிப்படையில் பிரிந்திருக்கின்றனர்." (இதைக் கூறியவர், நெதர்லாந்தை சேர்ந்த Srilanka Werkgroup என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் உறுப்பினர். அவர் தான் சார்ந்த நாட்டின் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத தூய சமதர்மவாதி.) 


இலங்கையின் இன முரண்பாடுகள் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதல்ல. சுதந்திரத்திற்கு பின்னர் வளர்ச்சியடைந்த சிங்கள தேசியத்திற்கு எதிர்வினையாற்றவே தமிழ் தேசியம் பிறந்தது. இரண்டு தேசியங்களும் தமது அரசியல் இருப்பிற்கு ஒருவரை ஒருவர் தங்கியுள்ளனர். பண்டைய கால இந்து - பௌத்த மத முரண்பாடுகளை, இரு தரப்பு தேசியவாதிகளும் மொழி அடிப்படையிலான இன முரண்பாடுகளாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். இவ்விரு மொழித் தேசியவாதிகளும், தம்மை இனவாதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. நியாயமான கோரிக்கையை முன் வைத்து, இன விடுதலைக்காக போராடுவதாக கூறிக் கொள்வார்கள். 

சிங்கள தேசியவாதி என்றாலும், தமிழ் தேசியவாதி என்றாலும், ஒரு விடயத்தில் மட்டும் அவர்களுக்கு இடையில் பொதுத்தன்மை காணப்படும். மார்க்ஸியம், சோஷலிசம், கம்யூனிசம் என்று எத்தகைய இடதுசாரி கோட்பாடுகளையும் ஆக்ரோஷமாக எதிர்ப்பார்கள். இடதுசாரிகளின் வர்க்கக் கோட்பாடு, புனிதமான தேசியத்தை சிதைத்து விடும் என்ற அச்சம் மனதில் குடி கொண்டிருக்கும். சிங்களவர்கள், தமிழர்கள் மட்டுமே அவர்களுக்கு தெரிந்த வர்க்கப் பிரிவினை.

சிங்கள-தமிழ் தேசியவாதிகள், தமது இனத்திற்கு அப்பால் வேறு உலகம் இருப்பதாக சிந்திப்பதில்லை. உலகில் பிற நாடுகளில் ஒடுக்கப் படும் மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதுமில்லை. மாறாக அப்படிப் பேசுபவர்களை நையாண்டி செய்வார்கள். எழுபதுகளில் வியட்நாமில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தன. யாழ்ப்பாணத்தில் அத்தகைய போராட்டங்களை கிண்டலடித்த தமிழ் தேசியவாதிகள் பின்வருமாறு கூறினார்கள். "மாஸ்கோவில் மழை பெய்தால், மானிப்பாயில் குடை பிடிக்கிறார்கள்." 

வியட்நாமியர்கள் வேற்றினத்தவர்கள் என்பதால் மட்டும் தமிழ் தேசியவாதிகள் அவ்வாறு கூறவில்லை. சொந்த தமிழினத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடும் போதும் அப்படித் தான் கிண்டலடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் சங்கானை என்ற ஊரில் சாதியொழிப்பு போராட்டம் நடந்த காலத்தில், தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் பேசிய வாசகம் குறிப்பிடத் தக்கது. "சங்கானை ஷாங்காய் ஆக மாறுகின்றது." என்று கம்யூனிச வெறுப்புக் கொண்ட சிங்களவர்களையும் கவரும் வண்ணம் பேசினார். 

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், நவீன தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாதது மட்டுமல்ல, தேவைப்படாததும் கூட. தற்போது ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை சாட்டாக வைத்து, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சார நெடி வீசும் கட்டுரையை எழுதியுள்ள யமுனா ராஜேந்திரனுக்கும் அது குறித்த அக்கறை இல்லை.

புலம்பெயர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட தமிழர்களுக்கு, யமுனா ராஜேந்திரன் என்ற "தூய மார்க்சியவாதியை" நன்றாகத் தெரியும். இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து செலவை பங்கிட்டு இலக்கியக் கூட்டம் நடத்துவார்கள். அதிலே கலந்து கொள்பவர்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமது சொந்தக் காசில் பிரயாணம் செய்து வருவார்கள். ஜமுனா ராஜேந்திரன் மட்டும் பயணச் செலவுக்கு பணம் கொடுக்கா விட்டால் கலந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பார். 

விரல்விட்டு எண்ணக் கூடிய இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே வாசிக்கப்படும் சிறு பத்திரிகைகள், கடினமான பொருளாதார நெருக்கடிக்குள் வெளிவரும். அவற்றில் பிரசுரமாகும் கட்டுரைகளுக்கும் ஜமுனா ராஜேந்திரன் கறாராக பணம் வாங்கி விடுவார். விளம்பரப் பணத்தில் வெளியாகும், இலாப நோக்கில் நடத்தப்படும் வணிக சஞ்சிகைகளில் எழுதுவதற்கு பணம் கேட்பதில் எந்த தவறும் இல்லை. கொடுக்க வேண்டியதும் அவர்களது கடமை தான். ஆனால், விளம்பரமே கூடாது என்ற பிடிவாதத்துடன் வெளிவரும் சிறு சஞ்சிகைகள் நஷ்டத்தில் நடத்தப்படுகின்றன. யமுனா ராஜேந்திரனுக்கு அது குறித்த சமூகப் பார்வை எதுவும் கிடையாது. காசு கொடுத்தால் கட்டுரை கிடைக்கும்.

கடந்த இரு தசாப்தங்களாக தன்னை தூய மார்க்சியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் யமுனா, தமிழ் இனவாத சேற்றுக்குள் நின்று கொண்டு, இடதுசாரிகள் மீது சேறள்ளிப் பூசுகிறார். அவர் குளோபல் தமிழ் நெட்வேர்க் இணையத்தளத்திற்கு எழுதிய, "இந்திய இலங்கை இடதுசாரிகளும், நிபுணர் குழு அறிக்கையும்" என்ற கட்டுரை கீற்று இணையத் தளத்திலும் மறுபிரசுரமானது. 

அந்தக் கட்டுரையில் அவர் என்ன சொல்ல வருகிறார்? "இந்திய, இலங்கை இடதுசாரிக் கட்சிகள் தமிழர் விரோத நிலைப்பாட்டில் இருந்து, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை எதிர்க்கின்றன. இலங்கை, இந்திய அரசுகளுக்கு ஆதரவளிக்கும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல், புரட்சிகர பாதையை கைவிடாத கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வரை, நிபுணர் குழு அறிக்கையை ஏகாதிபத்திய சதியாக பார்க்கின்றனர். அவர்கள் தமிழர்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கிறார்கள்?" இது போன்ற விமர்சனங்களுடன் எழுதப் பட்டுள்ளது. 

அது சரி, இந்தியாவில், இலங்கையில் இருக்கும் அத்தனை இடதுசாரிக் கட்சிகளையும் விமர்சிக்கும் யமுனா ராஜேந்திரன் முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழர்கள் அனைவரும் இனவாத சக்திகளுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க வேண்டும், என்பதைத் தானே? தமிழகத்தில் வினவு போன்றவர்கள், "தமிழினவாதக் கட்சிகள்" என்று கூறுவதையிட்டு விசனப் படுகிறார். "தமிழினவாதக் கட்சிகள்" இனவாதம் பேசவில்லை என்று, யமுனா ராஜேந்திரன் எங்காவது நிரூபித்திருக்கிறா என்று தேடிப் பார்த்தேன். "ஐயோ, எங்களை இனவாதிகள் என்கிறார்களே!" என்ற ஆதங்கத்தை தவிர வேறெதையும் காணவில்லை.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் காலத்தில், "பெரும்பான்மையினர் விருப்பத்தை ஆதரிப்பது" என்ற சாட்டில், இடதுசாரிக் கட்சிகளும் "தேசிய நீரோட்டத்தில்" இழுபட்டுச் செல்லும். இந்தப் போக்கு, சிங்கள இடதுசாரிகள் மத்தியில் மட்டும் காணப்படும் குறைபாடல்ல. சிங்கள இனவாதிகள், பெரும்பான்மை சிங்கள மக்களை கவர்ந்த காலத்தில், மக்களின் ஆதரவை தக்க வைப்பதற்காக சிங்கள இடதுசாரிகளும் அவர்களைப் போல பேசக் கற்றுக் கொண்டனர். ஆனால், அது இறுதியில் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது மட்டுமல்ல, இடதுசாரிக் கட்சிகள் பலவீனமடையவும் காரணமாக அமைந்தது. தமிழ் இடதுசாரிகள் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. 

ஈழத்தில் தமிழ் இனவாதக் கருத்துக்கள் மேலோங்கியிருந்த கடந்த முப்பதாண்டு காலத்தில், ஈழத் தமிழ் இடதுசாரிகளில் பலர் அதற்குள் உள்வாங்கப் பட்டனர். தற்போது ஈழத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய இடதுசாரிகளே எஞ்சியுள்ளனர். தற்போது இதே மாதிரியான போக்கு தமிழகத்தில் காணப் படுகின்றது. தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களைப் போல பேசுவதால் மக்கள் ஆதரவை திரட்ட முடியும் என்று நம்பும் தமிழக இடதுசாரிகள் பெருகி வருகின்றனர். அவர்களை முற்று முழுதாக, இனவாதத்தினுள் இரண்டறக் கலக்க வைக்கும் இரசாயண மாற்றத்தை, யமுனாவின் கட்டுரை வேண்டி நிற்கின்றது.

சர்வதேச நிலைமைகளை அலசி ஆராய்ந்து, தமிழ் தேசியத்திற்கு சரியான வழியைக் காட்டும் வேலையை யமுனாவின் கட்டுரை செய்யவில்லை. ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக நடந்து கொண்டால், தமிழ் தேசியம் தப்பிப் பிழைக்கும் என்ற முன் அனுமானத்துடன் எழுதப் பட்டுள்ளது. ஏகாதிபத்திய நாடொன்றினால் மேற்கொள்ளப்படும் "மனிதாபிமானத் தலையீடு", தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும், என்று நம்பச் சொல்கிறார். 

இதற்கு முன்னர், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மனிதாபிமானத் தலையீடுகளை கண்டித்து கட்டுரைகள் எழுதித் தள்ளிய யமுனா ராஜேந்திரன் தான் இப்படி எழுதுகிறார். கடந்த அறுபதாண்டுகளாக, இஸ்ரேலை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமும், பாதுகாப்புச் சபையும் கொண்டு வந்த கண்டனத் தீர்மானங்கள், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நீதி வழங்கவில்லை. 

அதையும் யமுனா ராஜேந்திரன் தான், ஒரு காலத்தில் எழுதினார்! தற்போது, ஐ.நா. மீது ஒட்டு மொத்த தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும், அப்போது தான் ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைக்கும் என்று உடுக்கடிக்கிறார். "ஐ.நா. தீர்மானங்களால் பாலஸ்தீனர்களுக்கு கிடைக்காத நீதி, தமிழர்களுக்கு எப்படிக் கிடைக்கும்?" என்பதை யமுனா ராஜேந்திரன் விளக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானத் தலையீட்டுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், மக்கள் எந்தளவு சுபீட்சமாக வாழ்கின்றனர் என்பதையும் யமுனா விளக்குவாரா? ஒரு வேளை, அந்த மக்களுக்கு நேர்ந்த அவலம், தமிழ் மக்களுக்கும் நேரிட வேண்டும் என்பது யமுனாவின் உள்நோக்கமாக இருக்கலாம்.

மார்க்சியர்கள் மனித உரிமை மீறல்களை, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர் என்பது, யமுனா முன் வைக்கும் குற்றச்சாட்டு. எப்போதும் தமக்கு சாதகமான பதில்களை பெற விரும்புவோர், உண்மைகளை ஆராய்வதில்லை. இலங்கையில் மனித உரிமைகள் நிறுவனங்களை ஸ்தாபித்ததும், அதனை அரசியல் நடவடிக்கையாக முன்னெடுத்ததும் மார்க்சியர்கள் தான். 

தென்னிலங்கையில் 1971 ஜேவிபி கிளர்ச்சி நடந்த காலத்தில் இருந்தே அந்த அமைப்புகள் இயங்கி வருகின்றன. வட இலங்கையில் சாதியொழிப்பு போராட்டம் நடந்த காலத்தில், முதல் தமிழ் மனித உரிமைகள் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. பரவலாக தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட எண்பதுகளில், அந்த வலைப்பின்னல் விரிவடைந்தது. சிங்கள இடதுசாரிகளும், தமிழ் இடதுசாரிகளும் ஆற்றிய பங்கை இங்கே குறிப்பிட இடம் போதாது.

புலம்பெயர்ந்த நாடுகளிலும், அந்தந்த நாடுகளின் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திய அமைப்புகளால், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கண்டிக்கப் பட்டன. இந்தக் காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? ஆரம்பத்தில் மனித உரிமை மீறல்கள் பிரச்சினை குறித்து அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள், போரில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் குற்றம் சாட்டி வந்தன. 

அவற்றை மேற்கோள் காட்டும் சர்வதேச சமூகம், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. இதனால், மனித உரிமைகள் விவகாரம் என்றால் தமிழ் தேசியவாதிகளுக்கு வேப்பங்காயாக கசத்தது. பிற்காலத்தில், அமெரிக்காவில் உள்ள "லாபி குரூப்" பாணியில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை ஆவணப் படுத்தி சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள். இந்த அறிக்கைகளை பெற்றுக் கொள்ளும் ஐ.நா. மனித உரிமை ஆணையகமும், மேற்கத்திய அரசுகளும், அந்த அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட அரசியல் அல்லது சமூகம் சார்ந்ததாக மட்டுமே கருதி வந்தன.

தமிழர்கள் மனதில், சர்வதேச சமூகம் பற்றிய மாயையை உருவாக்கும் வேலையை ஜமுனா கச்சிதமாக செய்திருக்கிறார். குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா என்று எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ, அங்கெல்லாம் "மனிதாபிமான ஏகாதிபத்தியம்" தலையிட்டு வருகின்றது. ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் தமிழர்களுக்கும் நன்மையே செய்யும் என்பது முன்னாள் மார்க்சியரான யமுனாவின் வாதம். இன்னலுற்ற ஈழத் தமிழர்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் யமுனா ராஜேந்திரன், அதற்காக முன் வைக்கும் வாதங்களையும் அடுத்துப் பார்ப்போம்.

Part 2:"சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக!" - யமுனா

(தொடரும்)