Showing posts with label சர்வதேச சமூகம். Show all posts
Showing posts with label சர்வதேச சமூகம். Show all posts

Sunday, October 06, 2013

போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் "சர்வதேச சமூகம்" பற்றிய திரைப்படம்


அண்மையில், தொலைக்காட்சியில் "The Hunting Party" என்ற திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்குற்றவாளிகளை பிடிப்பதில் மேற்கத்திய நாடுகள் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களை தோலுரித்துக் காட்டும் படம். பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, கற்பனையான திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் சொல்ல வரும் செய்தி தான் முக்கியமானது. "போர்குற்ற விசாரணைகள் என்பன எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நாடகங்கள். உண்மையில், ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், அமெரிக்கா போன்றவற்றிற்கு, போர்க்குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் எந்த நோக்கமும் கிடையாது. சில நேரங்களில், இந்த "மரியாதைக்குரியவர்கள்" போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் கடமையையும் செய்து வருகின்றனர்." 

Simon Hunt, Duck இருவரும் நண்பர்கள். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்காக, போர் நடக்கும் நாடுகளுக்கு சென்று செய்தி சேகரிப்பது அவர்களது பணி. எல் சல்வடோர், பொஸ்னியா என்று கடுமையான யுத்தம் நடக்கும் பிரதேசங்களில் உயிரை துச்சமாக மதித்து வேலை செய்கின்றனர். பொஸ்னிய யுத்த களத்தில் இருந்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு நேர்முக வர்ணனை செய்யும் சைமன், ஐ.நா. மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார். இதனால் சங்கடத்திற்குள்ளாகும் தொலைக்காட்சி நிலையம் தொடர்பை துண்டித்து விடுகின்றது. அதற்குப் பிறகு, பிரபல செய்தியாளர் சைமனுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவர் போர்க்களத்தில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே எல்லோரும் நினைக்கின்றனர்.  

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், டக் இன்னொரு இளம் ஊடகவியலாளருடன் பொஸ்னியா திரும்புகின்றார். தற்போது பொஸ்னியாவில் யுத்தம் முடிந்து, சமாதானம் நிலவுகின்றது. ஆனால், "போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதே தனது கடமை" என்று, சர்வதேச சமூகம் புளுகிக் கொண்டு திரிகின்றது. பொஸ்னியா திரும்பும் ஊடகவியலாளர்கள், நேட்டோப் படைகளால் தேடப்படும் "நரி" என்ற பட்டப் பெயர் கொண்ட, Radoslav Bogdanović என்ற செர்பிய போர்க்குற்றவாளியை கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். எதிர்பாராத விதமாக, காணாமல்போன பழைய நண்பன் சைமனை சந்திக்கின்றனர். நரி இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று கூறும் சைமன், அவர்களை தன்னுடன் வருமாறு கூறுகின்றான். சைமன் போகும் வழியில், அந்தப் போர்க்குற்றவாளியை பிடித்துக் கொடுத்து சன்மானம் பெற விரும்புவதாக நண்பர்களிடம் தெரிவிக்கின்றான். இதனால் வழியில் பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். 

Radoslav Bogdanović  போர் நடந்த காலத்தில், பல்லாயிரம் பொஸ்னிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த, பெண்களை வல்லுறவு செய்த குற்றங்களுக்கு காரணமானவன். (கராச்சிச் என்ற செர்பிய படைத் தலைவனை மனதில் வைத்து பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.) சைமன் "நரி" யை கண்டுபிடிப்பதற்கு, ஒரு தனிப்பட்ட காரணம் உள்ளது. அவனது பொஸ்னிய முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலி, அவளது ஊருக்கு சென்றிருந்த நேரம், நரியின் படையினரால் சுட்டுக் கொல்லப் படுகின்றாள். அப்போது அவள் நிறைமாதக் கர்ப்பிணி. அந்தத் தருணத்தில் கோபத்தை அடக்கும் சைமன், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நரியை பிடித்துக் கொடுக்க நினைக்கிறான். 

பொஸ்னியாவில் நிலை கொண்டுள்ள சர்வதேச பொலிஸ், நேட்டோ படையணி போன்றவற்றிடம், போர்க்குற்றவாளிகள் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சர்வதேச படைகளிடம் போர்க்குற்றவாளிகள் சம்பந்தமான எந்த ஆவணமும் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். அது மட்டுமல்ல, போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை. பொஸ்னிய போரின் பின்னர் சமாதானத்தை நிலைநாட்டும் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச படையினர், ஊடகவியலாளருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

சைமனும் நண்பர்களும், தமக்குத் தெரிந்த வழியில் போர்க் குற்றவாளிகளை பிடிக்கக் கிளம்புகின்றனர். வழியில் அவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. செர்பிய பொதுமக்கள் தமது நாயகனை காட்டிக் கொடுக்க மறுக்கின்றனர். இறுதியில், இரகசியமாக தகவல் கொடுப்போரிடம், சி.ஐ.ஏ. என்று பொய் சொல்லி, "நரி" யின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், சி.ஐ.ஏ. என்ற அடையாளம், அவர்களை ஆபத்தில் மாட்டி விடுகின்றது. அதற்காகவே, நரியின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்கின்றனர்.  

 "நரி" யின் மறைவிடத்தில் கட்டி வைக்கப் பட்டிருந்த, ஊடகவியலாளர்களின் உயிர் ஊசலாடும் தருணத்தில், அங்கு திடீரென வந்திறங்கும் அமெரிக்க-நேட்டோப் படையினர், அவர்களை விடுவித்து அழைத்துச் செல்கின்றனர். நேட்டோ கமாண்டோக்களின் அதிகாரி, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் கைக்கெட்டிய தூரத்தில் நின்ற போர்க்குற்றவாளியை, படையினர் (வேண்டுமென்றே) பிடிக்காமல் வாயைப் பிளந்து கொண்டு நிற்கின்றனர். அதை சைமன் நேரடியாகவே கேட்டு விடுகின்றான். "நீங்கள் ஐந்து வருடங்களாக தேடியும் கிடைக்காத போர்க்குற்றவாளியை, நாங்கள் இரண்டே நாட்களில் கண்டுபிடித்தது எப்படி? எதற்காக இத்தனை படைபலம் இருந்தும் போர்க்குற்றவாளியை தப்ப விட்டீர்கள்?"  ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல், "சி.ஐ.ஏ. போன்று நடித்ததற்காக உங்கள் மேல் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவேன்" என்று மிரட்டும் அமெரிக்க படையதிகாரி, அவர்கள் உடனடியாக ஊர் திரும்புவதே புத்திசாலித்தனம் என்று எச்சரிக்கிறான். 

மூன்று ஊடகவியலாளர்களும், நேட்டோ படை அதிகாரியின் உத்தரவுக்கிணங்க நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. தாங்கள் மூவரும் நினைத்தால், போர்க்குற்றவாளியை சுலபமாக பிடித்து விடலாம் என்று எண்ணுகின்றனர். "நரி" காட்டுக்குள் வேட்டையாடச் செல்லும் பொழுது, கூடவே நிறைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. அதனால் தனியாக நிற்கும் போர்க்குற்றவாளியை பிடிப்பது இலகு என்று திட்டம் போடுகின்றனர். போட்ட திட்டம் நிறைவேறி, மூன்று நண்பர்களும் சேர்ந்து போர்க்குற்றவாளியை பிடிக்கின்றனர். அந்தத் தருணத்திலும் கலங்காமல், "சர்வதேச சமூகம்" தன்னை காப்பாற்றும் என்று நரி கூறுகின்றான். "என்னை பிடித்துக் கொடுத்ததற்காக, உங்களுக்கு சன்மானம் கிடைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு சர்வதேச சமூகம் எப்படி நடந்து கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர்கள் தான் எனக்காக அஞ்சுகின்றார்கள்." ஏற்கனவே அந்தப் பதிலை எதிர்பார்த்த சைமன் கூறுகின்றான்: "அது தெரிந்து தான் நாங்கள் சட்டத்தை மாற்றி விட்டோம்..." 

அதாவது, ஒரு போர்க்குற்றவாளியை ஐ.நா.விடமோ, அமெரிக்காவிடமோ ஒப்படைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதற்குப் பதிலாக, "நரி" யின் கொலைவெறியாட்டத்திற்கு பலியான பொஸ்னிய முஸ்லிம்கள், அவனுக்கு தகுந்த தண்டனை கொடுப்பார்கள் என்று முடிவெடுக்கின்றனர். கைகள் கட்டப்பட்ட "நரி"யை, சைமனின் காதலியின் ஊருக்குள் கொண்டு சென்று இறக்கி விடுகின்றனர். இனி, ஒரு போர்க்குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது, அவனால் பாதிக்கப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களின் பொறுப்பு. 

படத்தின் முடிவில், பார்வையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி தெரிவிக்கப் படுகின்றது. "ஒருநாளும், மேற்கத்திய நாடுகள் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதில்லை. அந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களே அந்தக் கடமையை செய்ய வேண்டும்," என்ற உண்மையை திரைப்படம் வலியுறுத்துகின்றது. இதையே நாங்கள் "மேற்கத்திய நாடுகளிடம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும்" தமிழ் மக்களுக்கும் கூறி வருகின்றோம். 

அமெரிக்கா, மற்றும் ஐ.நா. பொஸ்னிய போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய காரணம் என்ன? பொஸ்னிய யுத்தம் நடந்த காலங்களில், கிறிஸ்தவ செர்பிய படைகள், பெருமளவு பொஸ்னிய முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்தன. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் முஸ்லிம்கள் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஐரோப்பிய, அதாவது பொஸ்னிய முஸ்லிகள் இனவழிப்பு செய்யப்படுவது அவர்களுக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், ஊடகங்களில் பொஸ்னிய முஸ்லிம் மக்களை எண்ணி இரக்கப் படுவதாக முதலைக் கண்ணீர் வடித்தார்கள். அமெரிக்கா, செர்பிய படைத் தலைவர்களுடன் எட்டப் பட்ட உடன்பாட்டின் பின்னர் தான், பொஸ்னிய போர் முடிவுக்கு வந்தது. செர்பிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட மாட்டார்கள் என்பதும், உடன்படிக்கையில் இருந்திருக்கலாம்.  

அமெரிக்கா "செர்பிய போர்க்குற்றவாளிகளை தேடுவதாக", ஒரு முழுப் பக்க விளம்பரம் செர்பிய பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பிரசுரமானது. அமெரிக்கா அதனை படமெடுத்து ஊடகங்களுக்கு கொடுத்தது. அதாவது, அமெரிக்கர்கள் மிகத் தீவிரமாக போர்க் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதனை உலகம் நம்ப வேண்டுமாம். அன்றைய வருடத்தின் சிறந்த நகைச்சுவை அதுவாகத் தான் இருக்கும். பொஸ்னிய பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில், போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த தொலைபேசி இலக்கம் அமெரிக்க நாட்டு எல்லைக்குள் மட்டுமே செயற்படும்!

பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவு:
பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்

Sunday, May 29, 2011

சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும் (அஸ்வத்தாமா)

சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள்
(எழுதியவர் : அஸ்வத்தாமா)
---------------------------------------------

இன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:

“மேற்குலகுக்கும் ஐ.நாவிற்கும் ருவாண்டாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று படுகொலைகள் தொடங்கிய போதே தெரியும். ஆனால் யாருக்கும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் உள்ள நாடு பற்றி அக்கறை இல்லை. மூலோபாய ரீதியில் தேவைப்படாத கறுப்பர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ருவாண்டாவில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் நாகரீகமற்ற பழங்குடி இனக் குழுமங்களுக்கிடையிலான சண்டை மட்டுமே”.

இது ருவாண்டாவிற்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட்ட பல நாடுகளிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது, இனியும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேசச் சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கிறோம். தங்களின் அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் கேள்விக்கு உட்படுத்தாத வரை, சர்வதேசச் சமூகம் பற்றி மகிழ்ச்சி உடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையாளர்களும் இருப்பர்.

அடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டு மொத்த வடிவமாக இருக்கும் சர்வதேசச் சமூகம் எனப்படுகின்ற ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை அரசு யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்பக் கட்டி வளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரிச் சக்திகளும் சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.

அதேபோல, முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதிற் பாதிக்கப்படுவர்களுக்கும், அதே வேளை, அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபிமான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்றுகின்றன. மேலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் எனவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எனவும் மேலாதிக்கச் சக்திகள் நாடுகளில் தலையிடு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சமூகம் என்ற போர்வைக்கு உள்ளிருக்கும் ஏகாதிபத்தியத்தை வரவேற்று உபசரிக்கும் நிலையில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர்.

இதன் பின்ணணியிலேயே விடுதலை பற்றியும் விடுதலைக்கான போராட்டம் பற்றியும் பேச முடிகிறது. விடுதலைப் போராட்டம் தேசிய வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சர்வதேசச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறது. அந்நியத் தலையீட்டைக் கூவி அழைக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு குழி பறிக்கிறது. இவை வரலாற்று நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

ஏனெனில் தேசியத்தின் திசைவழியானது வரலாறு பற்றிய புனைவுகளாலும் நம்பிக்கைகளாலுமே கட்டியமைக்கப் படுகிறது. நம்மிடம் வந்து நாம் பழங்காலத்தில் நாகரீகச் சிகரங்களை தொட்டுக் கொண்டு இருந்தோம் என்று யாராவது சொல்லிவிட்டால், நாம் புளகாங்கிதம் அடைகிறோம். நாம் தற்போது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முன்னேறாமல் பின் தங்கி இருந்திருந்தால் உடனே அதற்கான காரணத்தை குறிப்பிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சதிகாரர்களிடம் நாம் தேட ஆரம்பித்து விடுகிறோம். பெனடிக்ற் அன்டர்சனின் (Benedict Anderson) கற்பனையான சமூகங்கள் (Imagined Communities) என்ற நூல், தற்போதைய நவீன யுகத்தில் புதிதாக நாம் சுவீகரித்த தேசிய விருப்பின் அடிப்படையில் நமது கடந்த காலத்தை கற்பனையில் மீளக் கட்டமைப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறது. உண்மையில் இந்த குறுகிய வாதம் வெறுமனே திரிந்து போன தேசியவாதம் மட்டும் அல்ல. சொல்லப்போனால், மதம், இனம், சாதி என்பது போன்ற ஒரு கற்பனை விசித்திரம் தான். இதுபோன்ற பல்வேறு அடையாளங்கள் கலந்தும் முரண்பட்டும் உள்ளார்ந்து வினை புரிந்தும் இருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க சமூகங்களில் நீண்ட நெடுங்காலமாகத் தமது சார்புநிலைக்கு தகுந்தாற் போல் வரலாற்றை மீளக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

வரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (Irfan Habib) பின்வருமாறு சொல்கிறார்:

“கடந்த கால மோகம் என்பது ஒரு தனிமனிருக்கு எப்படியோ அது போலத் தான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை நான் உணர்ந்து கொள்வது தவறிவிட்டது’ என எனது மனதுக்குள் முடிவு செய்தால் அது என்னை எங்கு கொண்டுபோய் விடும்? இந்த மாதிரியான தவறான எண்ணங்கள் நான் எனது சக மனிதர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பதைப் பாதிப்பதோடு மட்டுமன்றிக் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனி யொருவருக்கு நடப்பதே, கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும், அது, மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, முன்னேறுவதற்கான அவர்களுடைய திறனை அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது”.

வரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச் சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகொலனித்துவ உலக ஒழுங்கில், தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம். ஆனால் எம் நினைவுகளையும் பூர்வீக வீரப்பிரதாபங்களையுஞ் சுமந்தபடி தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். உரிமைகட்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் விடுதலைக்கான போராட்டங்களும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறது. இனிவரும் வரலாற்றிலும் அவ்வாறே இருக்கும். அதனடிப்படையில் விடுதலைக்கான போராட்டங்களில் சர்வதேசச் சமூகம் எவ்வாறு நடந்துகொண் டிருக்கிறது என்பதையும் வரலாற்று நோக்கிலும் போக்கிலும் பார்க்கும் முயற்சியே இக் கட்டுரை.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், எல்லா மனிதர்களும் சமமானோராகப் படைக்கப்பட்டவர்கள் என்ற அமெரிக்கக் குடியரசின் கம்பீரமான பிரகடனம், அடுத்து வந்த எண்பது ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான கறுப்பு அமெரிக்கர்களை அடிமைகளாக இருக்கும் படி அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் அனுமதித்ததனாற், பொருளற்றதாகியது. அமெரிக்கப் புரட்சியிலிருந்தும், பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தும் துவங்கிய பூர்ஷ்வா ஜனநாயகத்திற்கான திட்டம் மூன்று முக்கிய தன்மைகளை உள்ளடக்கியிருந்தது.

1. அரிஸ்டாட்டில் துவங்கி ரூஸோ வரையானவர்களின் மிக முற்போக்குத் தன்மை வாய்ந்த அரசியற் சிந்தனைகளை விட ஜனநாயகம் குறித்த கொள்கை அளவில் மிகக் குறைவான சுருங்கிய பார்வையே அது கொண்டிருந்தது.
2. துவக்க காலத்திலிருந்தே அது பொருளாதாரம் என்பதை ஜனநாயகத்திலிருந்து தனிமைப்படுத்திச், சமத்துவம் என்பதற்கு வெறும் சட்டபூர்வமான விளக்கமளித்துப் மக்களிற் பெரும் பகுதியினரை வாக்களிப்பதிலிருந்து எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்தது. (“மக்களாகிய நாம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனச் சொற்றொடர் ஒரு வெற்றுச் சொற்றொடராகும். அது பெண்களையோ வெள்ளையரல்லாத பூர்வ குடியினரையோ ஆபிரிக்காவை மூலமாகக் கொண்ட அடிமைகளையோ குறிப்பதல்ல).
3. பூர்ஷ்வா அமைப்பு எப்போதுமே தன் சாதனைகளைப் பெருமளவுக்கு மிகைப்படுத்திக் கூறியுள்ளது.

எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும், முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலம் வரையிலும், பூர்ஷ்வா ஜனநாயகம் முழுமை அடையவில்லை. முடியாட்சி என்பதே அன்றைய நாட்களின் சட்டமாக இருந்தது. ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும் ஒஸ்ற்ரியாவிலும் ஏகாதிபத்திய முடியாட்சிகள், பிரிட்டனில் அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சி, ஸ்பெயினிலும் போர்த்துக்கலிலும் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி அமைப்பபைவிடத் தாழ்ந்த முடியாட்சி அமைப்புக்கள் என வேறுவேறு வகைப்பட்ட, ஆனால் முடியாட்சியை மையப்படுத்திய, அரசுகளே இருந்தன. முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய சூழலில் பொல்ஷ்விக் புரட்சி ரஷ்ய முடியாட்சியை அகற்றியது. ஆனால், ஜேர்மனி, இத்தாலி, ஒஸ்ற்ரியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பாரம்பரிய அரசுகள், நிலையான ஜனநாயக அமைப்புகளுக்கு வழிவிடுவதற்கு மாறாக, ஃபாசிசத்திற்கும் ராணுவ சர்வாதிகாரத்துக்கும் வழிவகுத்தன.

மன்னர்களும் ஃபாசிஸவாதிகளும் ராணுவ சர்வாதிகாரிகளும் தராளவாத ஜனநாயகவாதிகளும் மிகத் தீவிரமாக தங்களுக்கிடையே கணக்குத் தீர்த்துக் கொண்டிருந்தபோது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின. அதுவும் அவர்களின் முதுகுக்கு பின்னாலேயே ஆளும் அமைப்புகளுக்கு எதிராக எழுந்தவற்றில் நான்கு வகையான சவால்கள் மட்டும் நீண்ட காலத்திற்கு தீர்மானகரமானவையாக விளங்கின.

1. சொத்துடமையாளர்களின் ஆட்சிக்கெதிரான தொழிலாளர், விவசாய இயக்கங்கள்.

2.உலகின் பிற பகுதிகளில் ஐரோப்பிய கொலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள்.

3.ஆணாதிக்க சக்திக்கும் முன்னுரிமைக்கும் எதிராகப் பெண்களின் சமத்துவத்திற்கும் முன்னேற்றத்திற்குமான போராட்டங்கள்.

4.அடிமைத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிராக வெள்ளை இனத்தவர்களின் குடியேற்ற நாடுகளான வட அமெரிக்காவிலும் கரிபியன் பகுதியிலும் மையம் கொண்ட உலக அளவிலான போராட்டங்கள்.

ரஷ்யாவின் பொல்ஷ்விக் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அலையலையாக உருவான புரட்சிகள் குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி மற்றும் ஜேர்மனியில் மிகத் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப் பட்ட பிறகு, நாஜிகளின் மூன்றாம் ரைஹ் (Third Reich) உருவான எல்லையற்ற வெற்றிக் களிப்பில் அதுவே “வரலாற்றின் முடிவு” என் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1990இல் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா வெற்றிவாகை சூடிய பின்னணியில், மீண்டுமொரு முறை, “வரலாற்றின் முடிவு” என்பது அறிவிக்கப்பட்டது. [மேலதிக தகவல்களுக்கு ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் (Francis Fukuyama) “வரலாற்றின் முடிவு” (The End of History and the Last Man) என்ற நூலை வாசிக்கவும். சீனப் புரட்சிக்குப் பிறகு, 1950களிலும் அல்ஜீரியா முதல் இந்தோசீனம் வரை பல்வேறு இடங்களில் புரட்சிகரமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும் அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்களின் “மூலதனத்தின் பொற்காலம்” துவங்கிவிட்டது என்ற கூற்றும் புகழ்மிக்க அமெரிக்க சமூகவியலாளர்களின் “தத்துவத்தின் முடிவு” என்கிற ஆய்வும் சேர்ந்து மூலதனத்தின் முன்னால் எல்லாத் தத்துவங்களும் பின்வாங்கிவிட்டன என்ற பொருளில் உறுதியான எதிர்ப் புரட்சிப் போக்குக்களாக இருந்ததைக் காணமுடிந்தது. இதனடிப்படையில் மூலதனம் பிரதானமாக்கப்பட்டு அதனடிப்படையிலே அனைத்தும் வியாக்கியானம் செய்யப்பட்டன.

சர்வதேசச் சமூகம், சோவியத் யூனியனின் சிதைவை 1990கள் நினைவுபடுத்துவது போல, அதே காலகட்டத்தில் தென் ஆபிரிக்காவின் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்துவதில்லை. வெற்றியடைந்த புரட்சிகளைப் பற்றி அதற்கு நினைவில் நிற்பது அவற்றின் வெற்றிகளல்ல, மாறாக அவை சந்தித்த தோல்விகளே. திறந்த ஒரு புண்ணைப் போல, அவற்றை நினைவில் வைத்திருக்கச் செய்வதில் ஆதிக்கச் சக்திகள் சோர்வதில்லை. எனினும், ஒருவர் வெற்றிகளிடமிருந்தல்லாமல் தோல்விகளிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறார் என்பது முக்கியமானதாகும். முதலில் பொல்ஷ்விக் புரட்சியின் வடிவத்தைப் பின்பற்ற முயன்ற சீனா பிறகு தன்னுடைய சொந்த வழியின் மூலமே வெற்றியடைந்தது. கியூபா சீனாவைப் பின்பற்றாதது போக, லத்தீன் அமெரிக்காவின் கணக்கற்ற புரட்சிக்கான முயற்சிகளில் கியூபா பின்பற்றப்படவில்லை. வெற்றிகரமான புரட்சிகளில் கஷ்டமான ஒரு விஷயம் ஏதெனில் அவற்றைத் திரும்பவும் அதேபோல் நடத்த முடியாது என்பதுதான்.

“புரட்சிகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் திடீரென வெளிப்படுகின்றன. 1917ன் அக்டோபர் புரட்சியை ஏப்ரலில் கணித்த லெனினின் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. எங்கிருந்து வந்தன என்பது தெரியாமல் கஸ்ட்ரோவின் கெரில்லாப்படை கியூபாவின் கடற்கரைக்கு வந்து பிறகு ஹவானா நகருக்குள் நுழைந்தன. சீனா அல்லது வியட்நாமைப் போல பல பத்தாண்டுகளில் நிகழ்ந்த புரட்சிகளிலும் இதே விதி பொருந்துகிறது. ஒரு நீண்ட அடைகாக்கும் காலத்திற்குப்பின் அளவுநிலை மாற்றம் குணரிதியாக மாற்றமடையும் போது, ஆளும் வர்க்கங்களின் கோட்டைகள் மிக வேகமாகச் சரிகின்றன என்பதே அந்த விதி. புரட்சிகளாக நடைபெறாத அதே சமயம், மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கங்களாக அவை நடைபெறும் போதும் அவற்றைக் கணிக்க முடிவதில்லை 1950களில் தத்துவத்தின் முடிவு என்ற கோட்பாட்டை உரத்துக் கூவிய அமெரிக்க அறிவுஜீவிகளாகல் ஒரு பத்து வருடக் காலத்திற்குள்ளாகவே, எந்த ஒரு ஏகாதிபத்திய நாடும் சந்தித்திராத வகையில் மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தால் தங்கள் நாடு சூழப்படப் போகிறது என்பதை அறிய முடியவில்லை” எனப் புரட்சிகளின் வரலாற்றுப் போக்கை விளக்குகிறார் அய்ஜாஸ் அஹமட் (Aijaz Ahamad).

இவ்வாறு மாற்றமடைந்த புரட்சிகள் பற்றிய படிப்பினைகளைப் எதிர்ப்புரட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களுமே புரட்சியாளர்களை விடச் சரியாக உள்வாங்கிக்கொண்டனர். மூலதனத்தை அதிலும் குறிப்பாக நிதி மூலதனத்தை மையப்படுத்தியதாக உலக ஒழுங்கு மாறியதோடு சுரண்டலின் வடிவங்களும் ஒடுக்குமுறையின் தோற்றப்பாடுகளும் மாறத் தொடங்கின.

அரசு முற்றிலும் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாகிற போது, சமுதாயத்திற்கு அப்பாற்பட்டதாக உயரே நின்று கொண்டு சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிற கட்டமைப்புதான் அரசு என்ற அதன் தோற்றம் கலைகிறது. நிதி மூலதன ஆதிக்கக் காலகட்டத்திற்கே உரிய ஆட்சிகளின் எதேச்சாதிகாரத் தன்மையைக் காணுகிறபோது அரசுக்கு எவ்வித சமுதாய அங்கீகாரமும் தேவைப்படவில்லை என்று சிலர் கருதக்கூடும் சமுதாய அங்கீகாரம் என்பதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசு செயல்படுகிறது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மிகமிக மோசமான ஒரு எதேச்சாதிகார அரசுக்குக் கூட ―ஒரு பாசிச ஆட்சிக்குக் கூட― என்ன தான் அது பயங்கர அடக்குமுறைகளைப் பரவலாகப் பயன்படுத்தினாலும், அதற்குப் பிறகும் சமுதாய அங்கீகாரம் தேவைப்படுகிறது.

எதேச்சாதிகாரமும் அடக்குமுறைகளும் ஒருபோதும் சமுதாய அங்கீகாரத்துக்கு மாற்றாக முடியாது. அந்த அங்கீராத்தைப் பெற இப்படிப்பட்ட ஆட்சிகள் வேறு வழியைப் பயன்படுத்த முயல்கின்றன. சமுதாய மொத்தத்திற்கும் ஒரு பொது எதிரியை உருவாக்குவதுதான் அந்த வழி. அந்தப் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஈடுபட்டிருப்பதாகக் கதை கிளப்பி விடப்படும். பெருமை அல்லது தேச கவுரவம் நிலைநாட்டப்படுதல் எனும் ஏகாதிபத்தியத் திட்டத்தின் பின்னே ஒரு பொது நோக்கத்திற்காகச் சமுதாயம் ஒன்று திரட்டப்படும். அல்லது தேசத்திற்குக் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதி ஒன்றைச் சரிப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியத் திட்டம் ஒன்று துவக்கப்படும். வேறு சொற்களிற் கூறுவதென்றால், பொருளாதார ஆளுமைக்களத்தில் இழந்த சமுதாய அங்கீகாரத்தை வேறு வகையில் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யப்படுகிறது.

அதற்காக, அடிப்படையில் ஏகாதிபத்தியத்தன்மை வாய்ந்த, இனவாத, அந்நியப் பகைமை கொண்ட ஒரு தேசம் என்பது கட்டப்படுகிறது. அந்தத் தேசம் என்ற கட்டுமானத்தைச் சுற்றி ஒரு பொதுக்கருத்து உருவாக்கப் படுகிறது. அதற்கு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதே நிதி ஆதாய நோக்கங்கள் தாம் சமுதாயத்தின் பொது எதிரியை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அல்லது அந்தப்பொது நோக்கத்தை எட்டுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாக அரசு இருப்பதும் பரவலாக பயங்கர அடக்குமுறைகள் கட்டவிழ்ந்து விடப்படுவதும் நியாயப் படுத்தப்படுகின்றன. அந்தப் பொதுத் திட்டத்தின் பெயரால் யுத்தம், ஆக்கிரமிப்பு, நாடுகளை வளைத்து இணைத்துக் கொள்வது ஆகிய அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றன. எனினும், இவை யாவும் உருவகப்படுத்துவது அரசின் சமுதாய அங்கீகாரத்துக்கான ஒரு மாற்றுத் தேடலைத்தான். இந்த மாற்றுத் தேடல் நிதி மூலதனத்தோடு பின்ணிப்பிணைந்த அரசைத் தக்கவைக்கவும் சுரண்டலைத் தொடரும் வழியாகவும் இருந்தது.

நவீன (முதலாளித்துவக்) காலத்திற்கு முந்தைய அனைத்துச் சமுதாயங்களும் விவசாயச் சமூகங்களாகவே இருந்தன. அவற்றின் உற்பத்தி குறிப்பான பல்வேறு முறைகளதும் நியாயங்களினதும் அடிப்படையில் அமைந்திருந்தது. மாறாக, முதலாளித்துவச் சந்தைச் சமுதாயத்தில் மூலதனத்திலிருந்து அதிகப்படியான லாபம் பெறுவதே பிரதான விதியாக அமைந்துவிட்டது. நவீன முதலாளித்துவ விவசாயம் பெரிய அளவிலான பணக்காரக் குடும்ப விவசாயமாயிருப்பினும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்தேசிய நிறுவனங்களும் மூன்றாம் உலக விவசாயிகளின் உற்பத்தியின் மீது வலுவான தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. 2001ஆம் ஆண்டு கட்டார் நாட்டின் டோஹா நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் அதற்கான பச்சை விளக்குக் காட்டப்பட்டது. அத் தாக்குதலுக்குப் பலர் பலியாகின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர், மனிதக் குலத்தின் அரைவாசியான மூன்றாம் உலகின் விவசாயிகளே ஆவர்.
உலக வர்த்தக அமைப்பின் சந்தைப் போட்டிக் கோட்பாட்டை நியாயப்படுத்த ஒரு பெரிய வாதம் முன்வைக்கப்படுகிறது. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட வளர்ச்சி, நவீனமான வளமிக்க நகர் சார்ந்த தொழிலமைப்புகளின் துணையோடு நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது. அவ்வாறே, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் அத்தகைய வளர்ச்சி ஏற்படாமல் போகுமா என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாகும்.

மேற்கூறிய முன்மாதிரியை மூன்றாம் உலக நாடுகளில் மீள ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதற்கான இரண்டு முக்கிய காரணிகளை இவ் வாதம் கணக்கில் எடுக்கத் தவறுகிறது. முதலாவதாக, நூற்றைம்பது ஆண்டுகளாக விருத்திபெற்ற ஐரோப்பிய மாதிரி என்பது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வல்ல தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை உருவாக்கியது. இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தின் கீழ், மிகவும் குறைவான வாய்ப்புடைய சந்தைகளில், தங்களின் தொழில் உற்பத்திகள் போட்டியிட, மூன்றாம் உலகின் புதிய தொழில் அமைப்புகள் இந்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்றாக வேண்டும். இரண்டாவதாக இந்த நூற்றைம்பதாண்டுக் கால இடைவெளியில் ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைந்தது. வளர்முக நாடுகளில் அப்படி எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

உலக வர்த்தக அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பரிந்துரைக்கும் ‘முதலாளித்துவ சந்தையைத் தாராளமயமாக்குவதன் மூலம் நடைபெறும் நவீனமயமாக்கம்’ என்ற ஆலோசனை இரண்டு கூறுகளைக் கொண்டது. இனி, வளர்ந்த நாடுகளைச் சார்ந்த, போட்டியிடும் திறமுடைய நவீன விவசாயிகள் உலக அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவார்கள். எதிர்காலத்தில், வளரும் நாடுகளின் சில பகுதிகளில் இத்தகையோர் சிலர் உருவாகும் வாய்ப்பு இருக்கலாம். அதே வேளை, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளின் முன்னூறு கோடி விவசாயிகளிற் பெரும் பகுதியினர் ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு ஏழ்மைக்குட் தள்ளப்படுவர். இறுதியாக அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவர். அவ்வாறு பலியாவோரைச், சுற்றுச் சூழல் உள்ளிட்டுப், பொருளாதாரரீதியாக ஏழ்மையில் உழற்றுவதே தாராளமயக் கொள்கைகளின் நோக்கமாக உள்ளது. மேற்சொன்ன இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் இணைந்து செல்கின்றன.

அடிப்படையில் அரசுக்கும் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குத் தேவையானது ஒரு பொது எதிரி. அது அண்டை நாடொன்றாக இருக்கலாம். ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருக்கலாம். அடையாளங் காட்டிப் பெரும்பான்மையினரை அச்சத்திற்குட்படுத்தக்கூடிய ஏதாகவும் இருக்கலாம். அதன் மேற் பழியைப் போட்டுவிட்டுத் தங்கள் மூலதனக் கொள்ளையையும் சுரண்டலையும் எவ்விதத் தடைகளுமற்றுத் தொடர அவர்கட்கு முடிகிறது. கொலனித்துவமும், நவகொலனித்துவமும் அன்று இலகுவாகக் கண்டுகொள்ளப் பட்டன, எதிர்க்கப் பட்டன. ஆனால், இன்று, உலகமயமாதல் நிகழச்சிநிரலின் கீழ், தேசிய அரசுகளினதும் அரசாங்கங்களினதும் வரவேற்புடனும் மக்களின் ஆதரவுடனும், ‘மனிதாபிமான ஏகாதிபத்தியம்’ தன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறது. ஜனநாயகத் தன்மையோடு கூடிய சுதந்திரம் பூர்ஷ்வாக்கள் கூறும் சந்தையின் கற்பனையான சுதந்திரம் அல்ல: மாறாகத் தீவிரமான உண்மையான, சமத்துவத்திற்கான ஒடுக்கப் பட்டவர்களின் போராட்டத்தைப் பற்றியதாகும். இது சோசலிசம், தேச விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டங்களோடு இணையாமல் நீடிக்க முடியாது.
(நன்றி: செம்பதாகை)

Friday, May 22, 2009

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். 


தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். 


இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 


9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் "சிங்கள ஏகாதிபத்தியம்" மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். 


எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். 


புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. 


இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். 


மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, "புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்" என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. "தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்" என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. 


புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.