Showing posts with label கிழக்கு தீமோர். Show all posts
Showing posts with label கிழக்கு தீமோர். Show all posts

Friday, May 22, 2020

கிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல! இரண்டையும் ஒப்பிட முடியாது!!


முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு, முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதி ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் உரையின் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில் அவர் இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது தமிழீழம் சாத்தியம் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் பகைமை கொள்ளாமல் நட்புணர்வுடன் நடந்து கொள்வதே சிறுபான்மைத் தமிழருக்கும் பயன்தரத்தக்கது என்று கூறி இருக்கிறார்.(வீடியோ லிங்க் கீழே உள்ளது.)

இது பல தமிழீழவாதிகளின் கோபத்தை தூண்டி விட்டிருக்கிறது. கவனிக்கவும்: நான் இங்கே அவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்று குறிப்பிடவில்லை. காரணம், எல்லா தமிழ்த்தேசியவாதிகளும் தமிழீழம் கோருவதில்லை. ஈழப்போருக்கு முன்னரும் பின்னரும் சமஷ்டித் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ்த்தேசியவாதிகளும் இருந்து வருகின்றனர். ஆகவே இது இன்றைக்கும் தமிழீழம் சாத்தியம் என்று தீவிரமாக நம்பும் அரசியல் பிரிவினருக்கானது. அவர்களது பிடிவாதக் குணம், தமிழீழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளாது. "கிழக்கு தீமோர் தனிநாடு காணலாம், நாங்கள் தமிழீழம் கோரினால் தவறா?" என்று துள்ளிக் குதிக்கின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால், இதே தமிழீழவாதிகளும், நாடுகடந்த தமிழீழ அரசும் தான் முன்பு ஒரு காலத்தில் கிழக்கு தீமோர் சுதந்திர நாடானதை பற்றி சொல்லிப் புளுகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டி உள்ளது. இதில் எதுவும் தமிழீழத்திற்கு பொருந்தாது: 
  • 1. காலனிய நீக்கம் 
  • 2. கம்யூனிச எதிர்ப்பு 
  • 3. பன்மொழிக் கலாச்சாரம்

இவற்றை தனித்தனியாக பார்ப்போம்:

1. கிழக்கு தீமோர் ஏற்கனவே சுமார் ஒரு வருட காலம் (1975-1976) தனியான சுதந்திர நாடாக இருந்தது. அதற்குக் காரணம் அது ஒரு போர்த்துகேய காலனி. 1974 ம் ஆண்டு போர்த்துக்கலில் ஒரு கம்யூனிச புரட்சி நடந்ததன் விளைவாக, ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த போர்த்துக்கேய காலனிகள் சுதந்திரம் பெற்றன. கிழக்கு தீமோரும் அவற்றில் ஒன்று. மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐ.நா. சபை காலனிய நீக்கம் தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தது. அதுவரை காலமும் ஐரோப்பிய காலனிகளாக இருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விடுதலை பெற வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். அந்த நாடுகளின் பட்டியலில் கிழக்கு தீமோர் இருந்தது. ஆனால் தமிழீழம் இருக்கவில்லை.

2. இந்தோனேசியா கிழக்கு தீமோர் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன:

ஒன்று: காலனிய காலகட்டத்திற்கு பின்னர், அந்தப் பிரதேசத்தில் இருந்த தீவுகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என ஜகார்த்தா உரிமை கோரியது. காளிமந்தான் தீவின் வட பகுதி மலேசியாவாக உள்ளது. அது கூட தனக்கே சொந்தம் என்று இந்தோனேசியா உரிமை கோருகின்றது. ஆனால் அங்கு படையெடுப்பை நடத்தினால் மலேசியாவுடன் போர் மூளும் என்பதால் பேசாமல் இருக்கிறது.

இரண்டு: கிழக்கு தீமோரில் நிறைய எண்ணை வளம் உள்ளது. அவற்றை இந்தோனேசியா தானே கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பொருளாதாரக் காரணம். பிற்காலத்தில் அதே காரணத்திற்காக தான் சர்வதேச சமூகம் கிழக்கு தீமோர் சுதந்திரத்தை ஆதரித்தது என்பது வேடிக்கையானது. இன்று கிழக்கு தீமோர் எண்ணை வளத்தை அவுஸ்திரேலியா மேற்பார்வை செய்து வருகின்றது.

மூன்று: கிழக்கு தீமோர் போர்த்துகேய காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும் அங்கு அதிகாரப் போட்டி நடைபெற்றது. ஆயுதமேந்திய Fretilin (The Revolutionary Front for an Independent East Timor) இயக்கம் அரசைக் கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்காக இருந்தது. அதிலென்ன பிரச்சினை? Fretilin கிழக்கு தீமோரை ஒரு சோஷலிச நாடாக மாற்ற விரும்பியது. அது மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றியது. இதைக் காரணமாகக் காட்டி, அதாவது கம்யூனிச அபாயத்தை தடுப்பதாக சொல்லித் தான் இந்தோனேசியா படையெடுத்து ஆக்கிரமித்தது. அதற்கு அமெரிக்கா ஆசீர்வாதம் வழங்கியது. எங்கெல்லாம் கம்யூனிசம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் இராணுவத் தலையீடு செய்வது தானே அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை?

3. கிழக்கு தீமோர் தனியொரு மொழியை பேசும் மக்களின் தேசியம் அல்ல. அது ஒரு பன்மொழித் தேசியம். அங்கே பதினைந்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைப்பது போர்த்துக்கேய காலனிய வரலாறு மட்டும் தான். நாங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக அல்லது பொது மொழியாக பேசுவது மாதிரி, கிழக்கு தீமோர் பிரஜைகள் போர்த்துக்கேய மொழியை பொது மொழியாக கொண்டுள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், மேற்கு தீமோர் இன்றைக்கும் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக தொடர்கின்றது. அங்கேயும் கிழக்கு தீமோரில் உள்ள அதே மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

கிழக்கு தீமோர் சுதந்திரம் பெறக் காரணமாக இருந்ததாக இங்கு குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று தமிழீழத்திற்கு பொருந்துகிறதா? அது சரி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். என்ன தான் தமிழீழம், தமிழ்த் தேசியம் பேசினாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பது தான் அவர்களது பிரதானமான அரசியல் கொள்கை ஆகும்.

அதே தான் முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதியான, நோபல் பரிசு பெற்ற ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் கொள்கையும். அவர் முன்னொரு காலத்தில் மார்க்சிய Fretilin இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர். வெளிப்படையாகவே மேற்குலக நலன் சார்ந்த அரசியலுக்கு தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால் தான் நோபல் பரிசையும் வென்றார். ஆகவே, ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும் என்பதைப் போல, நாடுகடந்த தமிழீழ அரசும், ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=pk1yJxfJECg&fbclid=IwAR2DA1hfxh-yUHzvTOKJeiomYTNFulLLFgf1pswwwIgCDhl_dYjxDVZ3J_M

Thursday, April 29, 2010

கிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை!

20 ம் நூற்றாண்டின் இறுதியில் உருவான புதிய சுதந்திர நாடு கிழக்குத் திமோர். முன்னாள் போரத்துக்கீச காலனியான இந்தத் தீவு 1975 ல் இந்தோனேசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. இந்தோனேசியாவின் முன்னாள் சர்வாதிகாரி சுஹார்த்தோவின் பதவி விலகலுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்குப் பின்னாலிருந்த அந்நிய நாடுகளின் தலையீடு மே 2002 ல் கிழக்குத் திமோரக்கான சுதந்திரத்தில் போய் முடிவடைந்தது. சுதந்திர விழாக் கொண்டாடி ஆறு மாதங்களான நிலையில் டிசம்பர் மாதம் தலைநகர் டிலியில் ஏற்பட்ட கலவரம் அந்த தேசத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டிலி பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற சகமாணவனை சுதந்திரத் திமோர் போலிஸ் கைது செய்ததையெதிர்த்து நடந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆத்திரமுற்ற மாணவர்கள் நகரின் வியாபார ஸ்தாபனங்கள், ஹோட்டல்கள், ஆகியவற்றைத் தாக்கிக் தீயிட்டனர். சுதந்தித்தின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இந்தக் கலவரத்திற்கு நாட்டின் வறுமை நிலையும் , வேலையில்லாப் பிரச்சினையும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இக்கலவரத்தில் சில முக்கிய இடங்கள் தேர்ந்தெடுத்துத் தாக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவிற்குச் சொந்தமான சுப்பர் மாக்கட், கிழக்குத் திமோர் பிரதமரின் இல்லம் என்பன கலவரத்தில் பாதிக்கப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை.

கிழக்குத் திமோர் ஆசியாவின் மிகவறுமையான நாடாகத் திகழ்கிறது. 40 வீதத்திறகுமதிகமான சனத்தொகை வேலையற்றிருக்கின்றனர். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வேலைதேடும், வறுமைநிலையைப் போக்கும் ஏக்கம் தெரிகிறது. மதப்பிரச்சாரம் செய்யப்போகும் கிறிஸ்தவப் பிரச்சார அமைப்புகள் எதிர் கொள்ளும் முதற் கேள்வி உணவைப் பற்றியதாகவே இருக்கின்றது.

கிழக்குத் திமோர் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்வகிக்கப்பட்ட காலத்திலேயே இந்தப் பிரச்சினைகள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன. அப்போது ஒரு நாள் நம்பிக்கையிழந்த வேலையற்ற மக்கள் ஐ.நா உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஐ.நா சபையில் தொழில் புரிந்த உத்தியோகத்தர்கள் வேறு உள்ளூர் மக்கள் மத்தியில் பொறாமையை கிளப்பியிருந்தனர். சராசரித் திமோர் தொழிலாளியின் மாத வருமானம் சில பத்து டொலர்களாக இருக்கும் பட்சத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐ.நா உத்தியோகத்தர்கள் ஆடம்பரம் காட்டி எரிச்சலைக் கிளப்பிவிட்டிருந்தனர். இதற்கிடையே அந்நிய நாட்டு அவுஸ்ரேலிய இராணுவம் நாட்டாண்மை காட்டிக்கொண்டிருந்தது.

தற்போது பொதுத்தேர்தல்கள் நடாத்தப்பட்டு திமோரியர்கள் கையில் ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலையியக்க வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மந்திரிகளாகப் பவனிவருகின்றனர். நாட்டில் நிலவும் குழப்ப நிலைக்கு ஜனநாயகத்தில் அனுபவமற்ற அரசியல்வாதிகள், கஜானாவிலான நிதிப்பற்றாக்குறை கொண்ட அரசாங்கம் என்பன காரணமாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் வர்த்தகத்திற்கு எதிர்காலம் இல்லையென்று அவுஸ்திரேலிய சூப்பர் மாக்கட் முதலாளியொருவர் அவநம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

திமோர் தீவில் வாழும் மக்கள் பல்வேறு மொழிகள் பேசும் பழங்குடியினர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமக்குரிய ஊர்களில், பண்டைய சம்பிரதாயங்களுடன் வாழ்ந்து வந்தவர்கள். காலனியக் காலகட்டத்தில் அந்த நிலை மாறியது. மேற்குத் திமோரை ஒல்லாந்து கைப்பற்ற கிழக்குத் திமோரைப் போர்த்துக்கல் கைப்பற்றி தமது காலனி ஆட்சியை நிறுவினர். அதனால், போர்த்துக்கேயர் விடடுச்சென்ற பின்பு, போரத்துக்கீச மொழி பேசிய கிழக்குத் திமோரிப் படித்த வர்க்கம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தற்போது புதிய அரசாங்கத்தில் இருப்பவர்களும் இதே பிரிவினர்தான். ஆயினும் இந்தோனிஷிய ஆட்சியின் கீழ் இருந்த இடைப்பட்ட காலத்தில் பாடசாலைகளில் இந்தோனிசிய மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. இதனால், இந்தோனிஷிய மொழிபேசும் இளஞ் சமூகம் போர்துக்கீச மொழி பேசும் ஆளும் வர்க்கத்துடன் பல விடயங்களில் முரண்படுகின்றது. போர்த்துக்கீச மொழி பேசுபவர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற அரசாங்க அறிவிப்பும் , இதனால் பின்தங்கி நிற்கும் இளைஞர்களும் இதற்கு ஒரு எடுத்தக்காட்டு.

பெரும்பான்மைத் திமோரிய மக்கள் தெட்டுன் என்ற மொழி பேசுபவர்கள். போர்த்துக்கிச மொழிக்குப் பதிலாக, உள்ளூர் மக்களின் தெட்டுன் மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கினால், பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு மாறாக போர்த்துக்கீச மொழியைத் தமது தொண்டைக்குள் திணிப்பதாக பலர் வெறுப்புற்றுள்ளனர். அதிகமானோர் வேலையற்றிருப்பதற்கு மொழிப்பிரச்சினையும் ஒரு காரணமாகும். உலகின் மிகவறிய நாடுகளில் ஒன்றாக கிழக்குத் திமோர் கணிக்கப்பட்டாலும் அந்நாட்டில் இயற்கை வளத்திற்குக் குறைவில்லை. மிக முக்கியமாக அபரிதமான எண்ணைவளம் திமோரைச் சுற்றியுள்ள கடலில் இருப்பதால் தான், திமோரின் சுதந்திரத்தை அந்நிய நாடுகள் தலையிட்டுப் பெற்றுக் கொடுத்தனர்.

ஐ.நா சபையின் பெயரில் வந்திறங்கிய "பன்னாட்டுப்" படைகளுக்கு அவுஸ்ரேலியா காரணமில்லாமல் தலைதாங்கவில்லை. அவுஸ்திரேலியாவிற்கும், திமோரிற்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் இருக்கும் எண்ணையை அன்றுமுதல் இன்றுவரை அவுஸ்திரேலியப் பெற்றோலிய நிறுவனங்கள்தான் அகழ்ந்தெடுத்து வருகின்றன. ஏற்கெனவே முன்னாள் இந்தோனேசிய சர்வாதிகாரி சுகார்த்தோவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியா இந்த உரிமையைப் பெற்றது. சர்வதேசச் சட்டத்தின் படி இரு நாடுகளுக்குமிடையிலான கடலெல்லை சம தூரத்தில் பிரிக்கப்படவேண்டும். ஆனால், இதற்கு மாறாக அவுஸ்திரேலியா தனது பக்க எல்லையை விரிவாக்கி 85 வீதக் கடற்பரப்பை பெற்றுக்கொண்டது.

தற்போது சுதந்திரத் திமோர் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் 80 கோடி டொலர்கள் உரிமைத் தொகையாகவும், எண்ணை உற்பத்தியில் 90 வீத பங்கையும் கொடுக்க அவுஸ்திரேலியா சம்மதித்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான எண்ணை வயல்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்காத கடற்பரப்பில் இருக்கின்றன, என்பது பலரறியாத விடயம். சில இடங்களில் அவுஸ்ரேலியா நூறுவீத உரிமையைக் கொண்டுள்ளது. ஆகவே சுதந்திரம் கிடைத்த பின்பும் அவுஸ்திரேலியாவின் எண்ணைக் களவு தொடர் கதை தான். எல்லையைச் சரியாக வரையறுக்குமாறு திமோர் அரசு கேட்டபோதும் அவுஸ்திரேலியா ஏதாவது சாட்டுச்சொல்லி 30 வருடங்களுக்கு அதைப்பின்போடும் உள்நோக்கோடு செயற்பட்டுவருகிறது. அதற்குள் இருக்கும் எண்ணை முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிடும் திட்டமிருக்கலாம். கிழக்குத் திமோர் ஒரு வறியநாடு. அந்நிய நாடுகள் தமது பொருளாதார நலன்களைக் கருதாமல், வறிய மக்களின் வாழ்க்கைத்தரமுயற்றும் முயற்சிகளை முன்னெடுக்காவிடில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.