Showing posts with label சிரியா. Show all posts
Showing posts with label சிரியா. Show all posts

Sunday, August 30, 2020

சிரியாவில் அமெரிக்க - ரஷ்ய படையினர் மோதல்!

அமெரிக்க - ரஷ்ய பனிப்போரின் விளைவாக அண்மைக் காலத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் நிஜப் போருக்கு வழி வகுக்குமா? இது தொடர்பாக ஒரு சிறிய ஆய்வு.

 

 

Tuesday, May 15, 2018

ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்!

ஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இந்த அறிவிப்பு, ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் மீதும் தாக்கத்தை உண்டாக்க வல்லது. அத்துடன் மத்திய கிழக்கில் வரப்போகும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அதிக அக்கறை செலுத்தாத சர்வதேச அரசியல் நிலவரம், எந்தளவு தூரம் நமது தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

டிரம்பின் திடீர் அறிவிப்புக்கு முதலில் எதிர்வினையாற்றியது பங்குச்சந்தை வர்த்தகம் தான். இதனால் எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் விளைவாக பெட்ரோல் மட்டுமல்லாது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப் படவுள்ளன. ஏனெனில், 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன.

இலங்கையில் இரவோடிரவாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் மங்கள சமரவீர, டெய்லி மிரர் பத்திரிகை பெட்டியில், விலை உயர்வுக்கு ஈரான் பிரச்சினையை காரணமாகக் காட்டி இருந்தார். இருப்பினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வதேச பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில், முதலாளிய "அரசியல் ஆய்வாளர்கள்" மிகவும் அவதானமாக உள்ளனர். அவர்கள் "மைத்திரி அரசா, மகிந்த அரசா சிறந்தது?" என்று பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்கள்.

உண்மையில், ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் தனியே அமெரிக்காவுடன் மட்டும் கைச்சாத்திடப் படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து அணுவாயுத வல்லரசு நாடுகளுடன், ஜெர்மனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருந்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்,ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தன. அன்றிருந்த ஒபாமா நிர்வாகம், கடும்போக்காளர்களை ஓரங் கட்டி விட்டு ஒப்பந்தம் போட்டது.

டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பதற்கு காரணம், அந்நாடுகளின் வர்த்தக நலன்கள் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் வாதாடலாம். உண்மை தான். யாருக்கு தான் நலன்கள் இல்லை? அமெரிக்கா பொதுநலன் கருதி, உலகை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவதாக சொன்னால், அது நகைப்புக்குரியது.

முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.

ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் படுவதாக அறிவித்துள்ள டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத தவணை கொடுத்துள்ளது. இதனால், எண்ணை ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப் படும். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் தவணை கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானுடனான அமெரிக்க வர்த்தகம் மிகவும் அரிது என்பதால், டிரம்பின் முடிவால் அமெரிக்க வர்த்தகர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை பேணி வருகின்றன. அதனால், அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் ஐரோப்பாவும் பாதிக்கப் படுகின்றது என்பது நிச்சயம். உலக சந்தையில் அமெரிக்காவுடன் போட்டி போடுவது எந்தளவு கடினமானது என்பது ஐரோப்பிய முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்காவின் நிழல் கூடப் படாத ஈரானில், ஏராளமான வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன. ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இது அவர்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம். அதை இலகுவில் இழக்க விரும்ப மாட்டார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா ஈராக் போரைத் தொடர்ந்து, ஈரான் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானை சுற்றி வளைத்திருந்தன. இருப்பினும், அமெரிக்கா ஆழமறியாமல் காலை விட விரும்பவில்லை. அதனால், அரை மனதுடன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதன் விளைவு தான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம். இதனால் ஈரான் மீண்டும் சுதந்திரமாக சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடிந்தது.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் நெருக்குவாரம் உள்ளது. சிரியாப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈரான் இரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அறிவித்து வந்தார். அந்த நேரத்தில், அதை வெறும் இஸ்ரேலிய பிரச்சாரமாகக் கருதி, யாரும் பொருட்படுத்தவில்லை.

ஈரானில் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதை கண்காணித்துக் கொண்டிருக்கும் IAEA என்ற சர்வதேச அணு சக்தி முகாமைத்துவ நிறுவனம் அதை மறுத்துள்ளது. ஏற்கனவே ஈரானிய அணு உலைகளில் இருந்த யுரேனியம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. ஐ.நா. மன்றம் வரை சென்று படம் காட்டி பயமுறுத்திய, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் குற்றச்சாட்டு எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறுப் பிரச்சாரம்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை உலகில் யாரும் நம்பாவிட்டாலும், தான் அதை நம்புவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, ஈரான் இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்ற ஒரேயொரு காரணத்தை சொல்லித் தான், ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இது முன்பு சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய் கூறி ஈராக் மீது படையெடுத்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இது மீண்டும் மத்திய கிழக்கின் மீது போர் மேகங்கள் சூளுகின்றன என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு ஈரானிய படையினர் வசமிருந்த ஆயுதக் கிடங்கு தாக்கப் பட்டதாகவும், சில ஈரானியரும் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய அரசு அதை மறுத்திருந்தது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவை அல்ல. ஆகையினால், இந்தத் தடவையாவது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானிய அரசியல் களத்தில் விவாதிக்கப் பட்டது.

கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த சிரியாவின் உள்நாட்டுப் போர் தற்போது பிராந்தியப் போராக மாறியுள்ளது. ஒருவேளை இது மூன்றாம் உலகப் போராகவும் இருக்கலாம். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அது ஈரானுக்கு வைக்கப் பட்டுள்ள குறி என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக, ஈரானிய இராணுவ ஆலோசகர்களும், லெபனானிய ஹிஸ்புல்லா தொண்டர்களும், சிரியாப் போரில் தலையிடுவதற்கு அதுவே காரணமாக இருந்தது.

போரின் முடிவில் சிரியாவை ஆளும் ஆசாத் அரசு கவிழும் என்றும், ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்றும், இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடந்தேறின. ரஷ்யாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கிளர்ச்சிக் குழுக்கள் தோற்கடிக்கப் பட்டு, இறுதியில் ஆசாத் அரசு வெற்றி வாகை சூடியது.

இஸ்ரேலின் அயல்நாடுகளில் சிரியா மட்டுமே இதுவரையில் எந்தவித சமரசமும் செய்யாமல் எதிரி நாடாக உள்ளது. அத்துடன், அது லெபனான் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்தது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதும் சிரியா மட்டும் தான். இதனால், சிரியாப் பிரச்சினையை ஒரு வழியாக முடித்து விட்டால், ஈரானை தாக்குவது இலகுவாகி விடும் என்று இஸ்ரேல் கணக்குப் போட்டிருந்தது.

அமெரிக்காவால் எதிரி நாடுகளாக நடத்தப் படும் ஈரான் போன்ற நாடுகள், கடந்த கால உலக வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெற்றுள்ளன. ஈராக், லிபியா என்று ஒவ்வொன்றாக தீர்த்துக் கட்டிய அமெரிக்கா, சிரியாவையும் பிடித்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. ஆகையினால், தனது சொந்த நலன் கருதியாவது, ஈரான் சிரியாப் போரில் தலையிட வேண்டி இருந்தது. ஆசாத் அரசை வெல்ல வைப்பதன் மூலம், சிரியாவை தொடர்ந்தும் ஈரானின் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கலாம்.

அதே நேரம், சிரியாவின் உள்நாட்டுப் போரானது, "ஜென்ம விரோதிகளான" இஸ்ரேலையும், ஈரானையும் அருகருகே கொண்டு வந்து விட்டுள்ளது. தனது வடக்கு எல்லையில் ஈரானியப் படைகள் நிலை கொண்டிருப்பதால், இஸ்ரேலுக்கு எந்நேரமும் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும். சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தனது பலமடைந்துள்ள சிரியாவின் அரச இராணுவம், எதிர்காலத்தில் கோலான் குன்றுப் பகுதியை மீட்கும் யுத்தத்தை தொடங்கலாம். அதை ஈரானும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு எல்லைப்போர் மூண்டால், வடக்கே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, "கடைசி ஐரோப்பிய காலனியான" இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி- இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்கு மாறாக, ஷியா- இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப் படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் சக்தி படைத்த நாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐரோப்பா மட்டுமல்லாது, ரஷ்யா, சீனா கூட, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அனுசரித்து போன காலம் ஒன்றிருந்தது. அத்தகைய காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு ஈரானை ஒடுக்குவது இலகுவாக இருந்திருக்கும். எதிர்பாராத விதமாக, சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யா தலையிட்ட பின்னர் நிலைமை சிக்கலாகியுள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டால், ரஷ்யா எந்தப் பக்கத்தை ஆதரிக்கும்? உண்மையில், இது ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்கடியான நிலைமை. இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன ஜார் மன்னன் என அழைக்கப் படும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் கோஷத்தின் கீழ் தான் சிரியாப் போரில் ஈடுபட்டார். இது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வெளிவிவகார கொள்கையாக இருந்தது.

இருப்பினும், இஸ்ரேலில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ரஷ்யர்களை புட்டின் புறக்கணிக்க முடியாது. இலட்சக்கணக்கான ரஷ்ய யூதர்கள் மட்டுமல்லாது, பொருளாதார காரணங்களுக்காக குடியேறிய ரஷ்யர்களும் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலிய தேர்தல்களில் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கியாக உள்ளனர். பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேலிய ரஷ்யர்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றார். அதாவது, ரஷ்யா சென்று புட்டினை சந்தித்து பேசிய பொழுது, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை சுட்டிக் காட்ட மறக்கவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கை, ஈரானை ஆளும் ஆயத்துலாக்களின் கரங்களை பலப்படுத்தும். அமெரிக்காவுக்கு ஆதரவான லிபரல் முகாமை பலவீனப் படுத்தும். அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறி வரும் கடும்போக்காளர்களின் கரம் உயரும். "அமெரிக்கர்கள் அயோக்கியர்கள் என்றால், ஐரோப்பியர்கள் கோழைகள்" என்று ஈரானில் பேசிக் கொள்கின்றனர்.

ஈரான் இன்று வரையில், ஷியா இஸ்லாமிய மத அடிப்படைவாத கருத்தியலை அரச கொள்கையாக கொண்டுள்ள போதிலும், சவூதி அரேபியா போன்ற "இஸ்லாமிய" நாடுகளே அதன் பிரதானமான எதிரிகளாக உள்ளன. அதனால், ஈரான் தவிர்க்கவியலாது, "கிறிஸ்தவ" ரஷ்யாவுடனும், "நாஸ்திக" சீனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டியுள்ளது. அரசியல்- பொருளாதாரக் காரணங்களுக்காக உருவான இந்தக் கூட்டணி, மதத்திற்கு அப்பாலும் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது.

- கலையரசன் 14-05-2018 ******

Wednesday, February 28, 2018

சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்


ம‌ன்னிக்க‌வும், சிரியா யுத்த‌ம் ப‌ற்றிய‌ பின்வ‌ரும் தக‌வ‌ல்க‌ளை உங்க‌ளுக்கு எந்த‌ ஊட‌க‌மும் சொல்ல‌ப் போவ‌தில்லை:

- த‌ற்போது யுத்த‌ம் ந‌ட‌க்கும், த‌லைந‌க‌ர் ட‌மாஸ்க‌ஸ் ந‌க‌ருக்கு கிழ‌க்கே உள்ள‌ புற‌ந‌க‌ர்ப் ப‌குதியான‌ கூத்தா (Ghouta) க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளாக‌ இர‌ண்டு கிள‌ர்ச்சிக்குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வ‌ருகின்ற‌து.

- இத‌ற்கு முன்ன‌ர் இடிலிப் பிர‌தேச‌த்தை நோக்கி சிரிய‌ப் ப‌டைக‌ள் முன்னேறிய‌ நேர‌ம், அங்கிருந்த‌ கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் துருக்கி ம‌த்திய‌ஸ்த்த‌த்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்ற‌ன‌.

- ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர், கூத்தா மீது யுத்த‌ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌ சிரிய‌ அர‌சு இடிலிப் பாணி ச‌ம‌ர‌ச‌த்திற்கு முன்வ‌ந்திருந்த‌து. ஆனால், இம்முறை கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் வெளியேற‌ ம‌றுத்த‌ன‌. அத்துட‌ன் ம‌க்க‌ளையும் வெளியேற‌ விடாம‌ல் ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌ பிடித்து வைத்துக் கொண்ட‌ன‌ர்.

- கூத்தா பிர‌தேச‌த்தை மீட்ப‌த‌ற்கான‌ சிரிய‌, ஈரானிய‌ கூட்டுப்ப‌டை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌து. சிரிய‌ இராணுவ‌ப் பிரிவான‌ "புலிப் ப‌டை" தரைவ‌ழித் தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌து. ர‌ஷ்ய‌ விமான‌ங்க‌ளும் குண்டு வீசிய‌தாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

- அமெரிக்கா ம‌ற்றும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் நெருக்குத‌லால் ஐ.நா. பாதுகாப்பு ச‌பை கூடி தீர்மான‌ம் எடுத்த‌து. அத‌ற்கு ர‌ஷ்யாவும் ஒத்துழைத்த‌து. உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும் என‌த் தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

- சிரிய‌ அர‌சு ம‌ட்டுமே ஒரு த‌லைப்ப‌ட்ச‌மாக‌ போர் நிறுத்த‌ம் அறிவித்த‌து. இத‌ற்கு கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளை பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. சிரிய‌ அர‌சு அந்த‌ சாட்டை ப‌ய‌ன்ப‌டுத்தி மீண்டும் போரைத் தொட‌ங்கிய‌து.

- ஐ.நா., சிரிய‌ அர‌சின் மீது போர்நிறுத்த‌ மீற‌ல் குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. ஏனெனில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌ யுத்த‌த்தில் போர்நிறுத்த‌ம் க‌டைப்பிடிக்க‌ப் பட‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

- கூத்தா பிர‌தேச‌ம் இர‌ண்டாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டு நான்கு பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ இய‌க்க‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌து. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய‌ நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, த‌னித் த‌னியாக‌வோ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

- இவ‌ற்றில் மிக‌ப்பெரிய‌ இய‌க்க‌மான‌ அல் நுஸ்ராவின் முந்திய‌ பெய‌ர் அல் கைதா. மிக‌த் தீவிர‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என்ப‌து சொல்லாம‌லே புரியும். ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளும் அப்ப‌டித் தான்.

- சிரிய‌ப் ப‌டைக‌ளின் எறிக‌ணை வீச்சுக்கும், விமான‌க் குண்டுக‌ளுக்கும் இதுவ‌ரை ஐநூறு பொதும‌க்க‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர். அதில் நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் அட‌ங்குவார்க‌ள்.

- அங்குள்ள‌ ம‌க்க‌ள் விருப்பத்திற்கு மாறாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தடுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ட‌மாஸ்க‌ஸ் சென்று வ‌ர‌ அனும‌தித்திருந்த‌ன‌ர். ஆனால், "பாதுகாப்புக் கார‌ண‌ங்க‌ளை முன்னிட்டு" பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் வெளியேற‌ அனும‌திக்க‌வில்லை.

- சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஐ.எஸ். க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீது அமெரிக்க‌ விமான‌ங்க‌ள் குண்டு போட்ட‌ன‌.ஒரு க‌ட்டிட‌ம் கூட‌ மிச்ச‌மில்லாம‌ல் த‌ரைம‌ட்ட‌மாகின‌. அன்று ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள், பொது ம‌க்க‌ளின் ச‌ரியான‌ எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது ப‌ற்றி உல‌கில் யாருக்கும் அக்க‌றை இருக்க‌வில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்.

கூத்தா (Ghouta) பிரதேசம்
******

சிரியா போர் தொடங்கிய காலத்தில் இருந்து மறைக்கப் பட்டு வரும் சில உண்மைகள்: 

1. மேற்குலகம், சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது தெரிந்த விடயம். ஆனால், பெரும்பான்மை சிரிய மக்களின் ஆதரவைப் பெறாத பிழையான சக்திகளை தெரிவு செய்ததுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. " சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சிக்கு பெரும்பான்மையான சிரிய மக்களின் ஆதரவு கிட்டவில்லை. சிரிய அரசுக்கான மக்கள் ஆதரவை, மேற்குலகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது! ஊடகங்கள் அங்கு நடக்கும் சம்பவங்களை மிகைப் படுத்திக் கூறுகின்றன." - இதைக் கூறியது சிரியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் Eric Chevalier. (http://blog.lefigaro.fr/malbrunot/2012/03/syrie-un-diplomate-francais-me.html

2. "இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் வழிநடாத்தப்படும் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள், சிரிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை." அமெரிக்காவின் உளவுத் துறை ஒத்துக் கொண்டுள்ளது. (https://www.jungewelt.de/loginFailed.php?ref=/artikel/179801.im-blindflug.html)

3. சிரியாவினுள் அதிகரித்து வரும் ஜிகாத் போராளிகளின் பிரசன்னம் காரணமாக, சிரியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆயினும், சிரியாவின் ஆதரவின்றி ஹிஸ்புல்லா பலவீனமடையும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு குறையும் என்ற காரணங்களால், இஸ்ரேல் ஆட்சி மாற்றத்திற்கு சம்மதித்தது. (http://www.jpost.com/Opinion/Op-Ed-Contributors/The-case-of-Syria-could-prove-different )

4. சிரிய அரச படையினர் மனித உரிமைகளை மீறும் விடயம் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், கிளர்ச்சிக் குழுக்களும் குற்றங்களை இழைத்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிக்கு புறம்பான கொலைகள், இவற்றோடு சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையணிகளில் சேர்த்தல்... இது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. (https://www.hrw.org/news/2012/03/20/syria-armed-opposition-groups-committing-abuses

*******

சிரியாவில் நடப்பது என்ன? நாம் யாருடைய அரசியலைப் பேசுகின்றோம்?

எதிரும் புதிருமாக‌ காண‌ப்ப‌டும் முத‌லாளிய‌- த‌மிழ் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளும், சுன்னி- இஸ்லாமிய‌ அடிப்படைவாதிக‌ளும், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் ஓர‌ணியில் நின்று சிரியாவுக்காக‌ அழுகிறார்க‌ள் என்றால், பின்ன‌ணியில் ஏதோ ஒரு அர‌சிய‌ல் ச‌க்தி அவ‌ர்க‌ளை ஒன்றிணைக்கிற‌து என்று அர்த்த‌ம்.

ஒரு மாத‌த்திற்கு முன்ன‌ர் வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) பிர‌தேச‌ம் துருக்கி ப‌டையின‌ரால் தாக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போதும் பொது ம‌க்க‌ளின் உயிரிழ‌ப்புக‌ள், சொத்த‌ழிவுக‌ள் அதிக‌மாக‌ இருந்த‌ன‌. விமான‌க் குண்டுத் தாக்குத‌லில் ப‌லியான‌ குழந்தைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வெளியாகின‌. அது குறித்து ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எந்த‌ எதிர்வினையும் எழ‌வில்லை. எங்கும் க‌ள்ள‌ மௌன‌ம் நில‌விய‌து.

அப்ரின் பிர‌தேச‌த்தில் ப‌லியான‌ ம‌க்க‌ளின் அவ‌ல‌க் குர‌ல் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளின் காதுக‌ளை எட்ட‌வில்லை. அங்கு கொல்ல‌ப் ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்காக‌ யாரும் அழ‌வில்லை. அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை யாரும் பார்க்க‌வில்லை. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் செய‌ற்ப‌டும் ஒருவ‌ர் கூட‌ கொந்த‌ளிக்க‌வில்லை. ஏன்? ஏன்? ஏன்?

குர்திய‌ர்க‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தானே? அது த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம் ம‌த‌வாதிக‌ளின் உண‌ர்வுக‌ளை த‌ட்டி எழுப்பாத‌து ஏன்? சிரியாவில் குர்திய‌ரும் த‌னி நாடு கேட்டு போராடிய‌ தேசிய‌ விடுத‌லை இய‌க்க‌த்த‌வ‌ர் தானே? அது த‌மிழீழ‌த்தை த‌லையில் வைத்திருக்கும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்தாது ஏனோ? அப்போது ம‌ட்டும் க‌ண்க‌ளையும், காதுக‌ளையும் மூடிக் கொண்டிருந்த‌து ஏனோ?

என‌க்கு இந்த‌ லாஜிக் என்ன‌வென்று புரிய‌வில்லை. உல‌க நாடுக‌ளை விட்டு விடுவோம். சிரியாவில் ந‌ட‌க்கும் சிக்க‌லான‌ யுத்த‌த்தில் எந்த‌ப் ப‌க்க‌த்தில் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டாலும் க‌ண்டிப்ப‌தை விட்டு விட்டு, குறிப்பிட்ட‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து அழுவ‌து ஏனோ?

ட‌மாஸ்க‌ஸ் ந‌கருக்கு அருகில் உள்ள‌ கூத்தா பிர‌தேச‌ம், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌து. அங்குள்ள‌ இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக‌ள் அமெரிக்கா, சவூதி அரேபிய நிதியில் இய‌ங்குவ‌தால், அவ‌ர்க‌ள் வெளியிடும் த‌க‌வ‌ல்க‌ளும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் பெறுகின்ற‌ன‌. அத‌னால், போரில் வெல்ல முடியா விட்டாலும் பிர‌ச்சார‌ப் போரில் வெல்ல‌ வேண்டும் என்ற‌ வெறியுட‌ன் செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

க‌ட‌ந்த‌ ஐந்தாண்டு கால‌மாக‌ ந‌ட‌க்கும் சிரியா போரில் அடிக்க‌டி காணும் காட்சிக‌ள் இவை. அர‌சும், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளும் மாறி மாறி பிர‌ச்சார‌ம் செய்வ‌து வ‌ழ‌மை. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ர் போர்க்குற்ற‌ச்சாட்டு, இன‌ப்படுகொலைக் குற்ற‌ச்சாட்டு சும‌த்தி, த‌ம‌க்கு சார்பான‌வ‌ர்க‌ளின் அனுதாப‌த்தை பெற்றுக் கொள்ள‌ விரும்புகின்ற‌ன‌ர்.

இத‌னால் க‌ளைப்ப‌டைந்த‌ மேற்கைரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள், த‌ற்போது ந‌ட‌க்கும் கூத்தா யுத்த‌ம் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அன்றாட‌ம் செய்தி தெரிவிக்கும் போதும், "கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் பிர‌ச்சார‌ மைய‌த்தால் வெளியிட‌ப் ப‌ட்ட‌ உறுதிப் ப‌டுத்த‌ப் ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள்" என்று சேர்த்தே சொல்கின்ற‌ன‌.

சிரியா இராணுவ‌ம் ஒன்றும் சிற‌ந்த‌து அல்ல‌. அர‌ச‌ ப‌டைக‌ளின் க‌ண்மூடித்த‌ன‌மான‌ எறிக‌ணைத் தாக்குத‌ல்க‌ளில் ஏராள‌ம் பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அவை போர்க்குற்ற‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும் என்பதில் ம‌றுப்பில்லை. இருப்பினும், கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளும் புனித‌ர்க‌ள் அல்ல‌. ஐ.எஸ். வான‌த்தில் இருந்து குதிக்க‌வில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக‌ வித்தியாச‌ம் இல்லை.

ஐ.எஸ்.க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீதான‌ போரின் போதும், ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ளும் ப‌லியாகின‌. ஐ.எஸ். அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளைக் காட்டி பிர‌ச்சார‌ம் செய்து அனுதாப‌ம் தேடிய‌து. "உல‌க‌மே பார்த்துக் கொண்டிருக்க எம்மின‌ ம‌க்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்கிறார்க‌ள்" என்று ஓல‌மிட்ட‌ன‌ர். கொத்துக் குண்டுக‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக‌வும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிட‌ப் போவ‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

இந்த‌ விட‌ய‌த்தில் சுன்னி- முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ளுக்கும், வ‌ல‌துசாரி- த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ந‌ல்ல‌ ஒற்றுமை உள்ள‌து. ச‌ரி, அது உங்க‌ளுக்கிடையிலான‌ இர‌க‌சிய‌மான‌ கொள்கை உட‌ன்பாடு. இத‌ற்குள் எத‌ற்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை இழுக்கிறீர்க‌ள்?

சிரியாக் குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீலிக்க‌ண்ணீர் வ‌டிக்கும் போலி மனிதநேய‌வாதிக‌ள், யேம‌ன் குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் எங்கிருந்தார்க‌ள்? அங்கு ந‌ட‌க்கும் போர் ப‌ற்றி, ப‌லியான‌ ம‌க்க‌ள் ப‌ற்றி ஒரு நாளாவ‌து பேசி இருப்பார்க‌ளா?

சிரியாவுக்கும், யேம‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்? இர‌ண்டுமே அரேபிய‌ தீப‌க‌ற்ப‌த்தில் தான் உள்ள‌ன‌. இர‌ண்டு நாடுக‌ளிலும் கொல்ப‌வ‌ர்க‌ளும், கொல்ல‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளும் அரேபிய‌ர்க‌ள், அல்ல‌து முஸ்லிம்க‌ள் தான்.

யேம‌னில் குண்டு போட்டு குழ‌ந்தைக‌ளைக் கொல்வ‌து ச‌வூதி அரேபிய‌ விமான‌ங்க‌ள் என்ப‌தால், யாருக்கும் அதைப் ப‌ற்றி அக்க‌றை இல்லை. ச‌வூதி அரேபியாவுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்ப‌தால் ச‌ர்வ‌தேச‌மும் க‌ண்ணை மூடிக் கொண்டிருக்கிற‌து. அது ப‌ற்றி விவாதிக்க‌ ஐ.நா. பாதுகாப்புச் ச‌பை கூட்ட‌ப் ப‌டுவ‌தில்லை.

யேம‌னில் ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள் ஷியா முஸ்லிம்க‌ள் என்ற‌ ஒரேயொரு கார‌ணத்திற்காக‌, த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணிக்கிறார்க‌ள். ஆனால், சிரியாவில் சுன்னி முஸ்லிம்க‌ள் ப‌லியாகும் போது ம‌ட்டுமே கொந்த‌ளிக்கிறார்க‌ள். இதுவா ம‌னித‌ நேய‌ம்? இதுவா ம‌த‌ உண‌ர்வு?

ம‌னிதாபிமான‌ உண‌ர்வு கூட‌ தான் சார்ந்த‌ ம‌த‌ப் பிரிவு பார்த்து தான் வ‌ருகின்ற‌து. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் இத‌ற்கு விதிவில‌க்க‌ல்ல‌. த‌மிழ‌ர் கொல்ல‌ப் ப‌ட்டால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கும் ம‌னித‌நேய‌ உண‌ர்வு பொங்கி எழும். ம‌ற்றும் ப‌டி மேற்க‌த்திய‌ ந‌ல‌ன் சார்ந்த‌வ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டுமே தாமும் சேர்ந்து அழுவார்க‌ள்.

சிரியாப் போரின் ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் அந் நாட்டின் பெரும் ப‌குதி கிள‌ர்ச்சிப் ப‌டைக‌ளின் க‌ட்டுப்பாட்டின் கீழ் வ‌ந்திருந்த‌து. அப்போது, ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ அங்கு வாழ்ந்து வ‌ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ளும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இன‌ச்சுத்திக‌ரிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ ந‌ட‌வ‌டிக்கையின் போது ப‌ல‌ர் க‌ழுத்து வெட்டிக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெண்க‌ள், குழ‌ந்தைக‌ள் என்றும் பாராம‌ல் ப‌ல‌ர் குடும்ப‌த்தோடு கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ISIS ம‌ட்டும‌ல்ல, அல் நுஸ்ரா, FSA ம‌ற்றும் சிரியாவில் போராடும் ஒரு ட‌சின் கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள், ஷியா, கிறிஸ்த‌வ‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்துள்ள‌ன‌. பொதுவாக‌ எல்லா கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் போராளிக‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தான். தீவிர‌ இஸ்லாமிய அடிப்ப‌டைவாதிக‌ள் தான்.

"சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோம்ஸ் நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். சிரிய அரசுக்கெதிரான சிரிய சுதந்திர இராணுவம், அல்கைதா குழுக்கள் கிறிஸ்தவ மக்களை இனச்சுத்திகரிப்பு செய்கின்றனர். மேற்குலகம் இதைக் கண்டும் காணாதது போல கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது." - சிரிய ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவ திருச்சபை வத்திகானுக்கு எழுதிய கடிதத்தில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. (http://www.politique-actu.com/osons/syrie-eglises-accusent-france-vouloir-vider-syrie-chretiens/383926/

அப்போது யாரும் சிரிய‌க் குழ‌ந்தைக‌ளுக்காக‌ அழ‌வில்லை. கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ போதிலும், ஒரு "கிறிஸ்த‌வ‌ நாடு" கூட‌ க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌வில்லை. இஸ்லாமிய‌ அடிப்ப‌டைவாத‌ ஆயுத‌பாணிக‌ள், இர‌ண்டாயிர‌ம் ஆண்டு ப‌ழ‌மை வாய்ந்த‌ கிறிஸ்த‌வ‌ கிராம‌ங்க‌ளை தாக்கி அழித்து, அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். எத்த‌னை கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ விப‌ர‌ம் தெரியும்? எத்த‌னை பேர் அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார்க‌ள்? பூஜ்ஜிய‌ம்.

அந்நேர‌ம் மேற்குறிப்பிட்ட‌ இன‌ப்ப‌டுகொலைக‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சுன்னி முஸ்லிம் தீவிர‌வாதிக‌ள். அமெரிக்கா, ச‌வூதி அரேபியாவால் நிதி, ஆயுத‌ம் கொடுத்து வ‌ள‌ர்க்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள். ஆக‌வே எல்லோரும் பேசாம‌ட‌ந்தைக‌ளாக‌ வாயை மூடிக் கொண்டிருந்தார்க‌ள்.

பார‌ப‌ட்ச‌மின்றி அனைத்துக் கொலைக‌ளையும் க‌ண்டியுங்க‌ள். அது நேர்மையான‌து. ச‌ந்த‌ர்ப்ப‌ம் பார்த்து, "ந‌ண்ப‌ர்க‌ள்" பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டும் பொங்கி எழுவ‌து, குறுகிய‌ அர‌சிய‌ல் ஆதாய‌ம் க‌ருதி செய்ய‌ப் ப‌டும் பிர‌ச்சார‌ம். அத‌ற்குப் பெய‌ர் இர‌க்க‌ம் அல்ல‌, பிண‌த்தை காட்டி காசு வாங்கும் ஈன‌த்த‌ன‌ம்.

ஏனிந்த‌ பார‌ப‌ட்ச‌ம்?

அப்போது குழ‌ந்தைக‌ளை கொன்ற‌வ‌ர்க‌ள் தாம் சார்ந்த‌ சுன்னி இஸ்லாமிய‌ ம‌த‌ப் பிரிவின‌ர் என்ப‌தால், த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ள‌வில்லை. அதே மாதிரி, தாம் ஆராதிக்கும் அமெரிக்காவின் ஆசீர்வாத‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌தால், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் க‌ண்டுகொள்ள‌வில்லை. இது தான் உண்மை.

ராக்காவில் அமெரிக்க விமானங்கள் குண்டு போட்ட நேரம், "ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்று கூறி கைத‌ட்டி வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் தான் இன்று "குழ‌ந்தைக‌ளுக்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் எப்போது யாரை ஆத‌ரிப்பார்க‌ள், யாரை எதிர்ப்பார்க‌ள், யாரின் காலை வாரி விடுவார்க‌ள் என்று தெரியாம‌ல் உள்ள‌து. ஒரு கால‌த்தில் ஐ.எஸ். விடுத‌லைப் போராளிக‌ள் என்றார்க‌ள். பிற‌கு ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று சொல்லி காலை வாரினார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் நிச்சய‌ம். நாம் என்ன‌ அர‌சிய‌லைப் பேச‌ வேண்டும் என்ப‌து வாஷிங்ட‌னில் தீர்மானிக்க‌ப் ப‌டுகிற‌து. அங்கிருந்து வ‌ரும் அறிவுறுத்த‌ல்க‌ளை எல்லோரும் பின்ப‌ற்ற‌ வேண்டும். அவ‌ர்க‌ள் எதிர்க்க‌ சொன்னால் எதிர்க்க‌ வேண்டும். ஆத‌ரிக்க‌ சொன்னால் ஆத‌ரிக்க‌ வேண்டும்.


சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?
அலெப்போவின் முள்ளிவாய்க்கால்
இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!
இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?

Friday, December 16, 2016

அலெப்போவின் முள்ளிவாய்க்கால்


சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அது ரஷ்ய விமானக் குண்டுவீச்சுகளின் பின்னர், சிரிய அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது. சிரியாவின் ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போரில் இது ஒரு பெரிய திருப்புமுனை என்று கருதப் படுகின்றது. அதாவது, உள்நாட்டுப் போரின் இறுதியில் வெல்லப் போவது யார், தோற்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அலெப்போ யுத்தம் இருந்துள்ளது.

சிரியாவில், குறைந்தது ஒரு டசின் இயக்கங்கள் சிரிய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகின்றன. அவற்றிற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. அனேகமாக எல்லா "விடுதலை" இயக்கங்களும், அல்கைதா அல்லது ஐ.எஸ். பாணியில் அமைந்த, இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் தான். சுன்னி முஸ்லிம் சமூகத்தினரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய அந்த இயக்கங்கள், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும், ஷியா முஸ்லிம்களையும் இனச் சுத்திகரிப்பு செய்து விட்டன. (சிரியா அடிப்படையில் ஒரு பல்லின கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் குழுமங்களின் தேசம்.)

உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில், சிரிய இராணுவம் ஆட்பலம், ஆயுதபலம் குறைந்திருந்த படியால், அலெப்போ போன்று பல பிரதேசங்களை கைவிட்டு விட்டு ஓடிக் கொண்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களினால் கைது செய்யப் பட்ட, அல்லது அவர்களிடம் சரணடைந்த சில நூற்றுக் கணக்கான படையினர் பொது இடங்களில் கழுத்து வெட்டிக் கொல்லப் பட்டனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருந்தன.

சரணடைந்த சிரியப் படையினர் மட்டுமல்ல, ஷியா, கிறிஸ்தவ மற்றும் பல சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களும், "தவறான இனத்தில் பிறந்த காரணத்தால்" படுகொலை செய்யப் பட்டனர். வாழ்வா, சாவா போராட்டத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, சிரிய இராணுவத்தினரும், சிறுபான்மை சமூகத்தினரும் அதிபர் ஆசாத் தலைமையின் கீழ் அணிதிரண்டனர். அப்படியானவர்களுக்கு ஆசாத் மீதான விசுவாசத்தை விட, தாம் சார்ந்த சமூகங்களின் பாதுகாப்பு முக்கியமாகப் பட்டதால் போர் தீவிரமடைந்தது. கிறிஸ்தவ, ஷியா, அலாவி போன்ற சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த வீரர்களை கொண்ட National Defence Force (NDF) என்ற ஊர்காவல் படைகள் சிரிய இராணுவத்தின் பக்கம் நின்று போரிட்டன.

இதற்கிடையே லெபனான் ஹிஸ்புல்லாவும் ஆசாத்திற்கு உதவியாக வந்தது. லெபனானில் எண்பதுகளில் நடந்த தசாப்த கால உள்நாட்டுப் போரில், சிரிய அரசு ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தை ஆதரித்திருந்தது. அந்த செஞ் சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக, ஆயிரக் கணக்கான ஹிஸ்புல்லா போராளிகள் தொண்டர் படையணியாக சிரியா போர்க்களத்தில் குதித்தனர். அவர்களுடன் ஷியா முஸ்லிம்களின் வல்லரசாக கருதப் படும் ஈரானும், தன பங்கிற்கு இராணுவ ஆலோசகர்களை அனுப்பி இருந்தது. இவர்கள் எல்லோரும் அலெப்போ யுத்தத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்கள் எவை? 
மேற்குலகால் ஆதரிக்கப் பட்ட அந்தக் கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம் சமூகத்தினர். சிரியாவில் மதத்தால் முஸ்லிமாக இருந்தாலும், சுன்னி, ஷியா, அலாவி என்று ஒவ்வொரு முஸ்லிம் மதப் பிரிவினரும் தம்மை தனித் தனியான இனமாக கருதிக் கொள்கிறார்கள். ஆகையினால், இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்கள் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை சுன்னி- முஸ்லிம் பிரிவினர் மீது திணித்து வந்தன. மது பாவனை தடை செய்யப் பட்டது. இசைத்தட்டில் பாடல்கள் கேட்பது கூட தடை செய்யப் பட்டது. பெண்கள் முகத்தை மூடும் கருநிற அங்கி அணிய கட்டாயப் படுத்தப் பட்டனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்திற்கும் இடையில் பெரிய கொள்கை வேறு பாடு எதுவும் கிடையாது. ஐ.எஸ். இயக்கம், சுன்னி- முஸ்லிம் சமூகத்தவரின் ஏக பிரதிநிதி தான் மட்டுமே என்று உரிமை கோருகின்றது. ஏனைய இயக்கங்களை "துரோகக் குழுக்கள்", "ஒட்டுக் குழுக்கள்" என்று குற்றஞ் சாட்டி தடை செய்துள்ளது. இதனால் அடிக்கடி சகோதர யுத்தங்கள் நடந்துள்ளன.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இயக்கங்கள் பற்றிய விபரம்:

1. சுதந்திர சிரிய இராணுவம்
சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய சுன்னி- முஸ்லிம் அதிகாரிகள், படையினர் உருவாக்கிய இயக்கம். அவர்களை "நல்ல போராளிகள்" என்று முத்திரை குத்தி, அமெரிக்கா நேரடியாக உதவி செய்து வந்தது. மேற்கத்திய ஊடகங்களில் அவர்கள் "மிதவாதிகளாக" காட்டப் பட்டனர். ஆனால், நடைமுறையில் சுதந்திர சிரிய இராணுவம் கூட இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் தான். மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் இருக்கலாம். ஆனால், அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். உண்மையில் சுதந்திர சிரிய இராணுவம் என்பது பல குழுக்களின் ஐக்கிய முன்னணி. அதற்கென பொதுவான தலைவர் எவரும் இல்லை.

2. நூர் அல் டின் அல் சென்கி (Nour al-Din al-Zenki)
மிகச் சிறிய இயக்கம். போராளிகளின் மொத்த எண்ணிக்கை 1500 இருக்கலாம். மத அடிப்படைவாத ஜிகாத்திற்காக போராடும் இந்த இயக்கத்திற்கு சி.ஐ.ஏ. நேரடியாக ஆயுதங்களை கொடுத்துதவி வந்தது! நிச்சயமாக, தாம் ஒரு ஜிகாதி இயக்கத்திற்கு உதவினோம் என்ற உண்மையை அமெரிக்கா வெளியில் சொல்லப் போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர், சிரிய அரசுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக ஒரு 12 வயது சிறுவனை கழுத்து வெட்டி கொலை செய்த கோரக் காட்சி வீடியோ பதிவாக வெளியாகி உலகம் முழுவதையும் உலுக்கி இருந்தது. அந்தக் குரூரச் செயலை செய்த பெருமை இந்த இயக்கத்தை சேரும்.

3. அஹ்ரர் அல் ஷாம் (Ahrar al-Sham)
ஆப்கானிஸ்தனில் தாலிபான் செய்தது போல, சிரியா முழுவதையும் இஸ்லாமிய மயமாக்க விரும்பும் கடும்போக்கு இயக்கம். 2014 ம் ஆண்டு வரையில் ஐ.எஸ்.சுடன் சேர்ந்து இயங்கி வந்தது. ஆனால், ஐ.எஸ். காரர்கள் இந்த இயக்கத்தின் போராளிகள் சிலரை சுட்டுக் கொன்ற படியால் பிரிந்து சென்று தனியாக இயங்கியது. ஐ.எஸ். சிரியாவுக்கும் அப்பால், உலகம் முழுவதும் இஸ்லாமியப் புரட்சியை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. அதற்கு மாறாக அஹ்ரர் அல் ஷாம் சிரியாவுக்குள் நின்று கொள்கிறது. மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை இருபதாயிரம் இருக்கலாம்.

4. பதே அல் ஷாம் (Fateh al-Sham)
மிக முக்கியமாக, அல்கைதாவுடன் தொடர்புடைய இயக்கம் இது தான். அல் நுஸ்ரா என்றால் எல்லோருக்கும் தெரியும். அண்மைக் காலத்தில் தான் பதே அல் ஷாம் என்று பெயர் மாற்றியது. தீவிரவாதம் இல்லாத, மிதவாத இயக்கமாக காட்டுவது அதன் நோக்கம். இதன் மூலம் சர்வதேச ஆயுத, நிதி உதவி கிடைக்கும் என்று கணக்குப் போட்டது. நீண்ட காலமாக, அல்நுஸ்ராவுக்கும், ஐ.எஸ். இற்கும் அடிக்கடி சகோதர யுத்தம் இடம்பெற்று வந்தது. இத்தனைக்கும் இரண்டுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் கிடையாது. அல்நுஸ்ராவும் இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் ஜிகாத் போராட்டம் நடத்துவதை குறிக்கோளாக கொண்ட இயக்கம் தான். அதனால் சர்வதேச தொண்டர்களின் உதவியும் கிடைத்திருந்தது. பல உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமிய இளைஞ்ர்கள், சிரியாவுக்கு போராடச் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அல் நுஸ்ராவிலும், இன்னொரு பகுதியினர் ஐ.எஸ். இலும் சேர்ந்தனர். எதிர்பாராத விதமாக அவ்விரண்டு இயக்கங்களின் சகோதர யுத்தத்டிற்குள்ளும் அகப்பட்டுக் கொண்டனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர், சிரிய அரச படையினரின் அடுத்த கட்ட படை நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. தற்போது அதற்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன. வட மேற்கில், அலெப்போவில் இருந்து வெளியேறிய கிளர்ச்சிக் குழுக்கள் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இடிலிப் பிரதேசம். மற்றது, வட கிழக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ராக்கா பிரதேசம்.

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதி நாலாபுறமும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. அந்நிய நாடுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டு விட்டன. அதனால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், துருக்கி எல்லையோரம் உள்ள இடிலிப் என்ற நாட்டுப்புறப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே சனத்தொகை குறைவு. ஆனால், துருக்கி ஊடாக கிடைக்கும் உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு அந்தப் பகுதியையும் கைப்பற்றுவது அவசியம்.

போருக்குள் அகப்பட்ட பொது மக்களின் நிலை என்ன? நிச்சயமாக பொது மக்களில் கணிசமான அளவு பிரிவினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக போராளிகளின் குடும்பத்தினர் இறுதி வரையில் இயக்கங்களோடு இருந்தனர். அலெப்போ நகரின் பகுதிகளை அரச படைகள் சிறிது சிறிதாக கைப்பற்றிக் கொண்டிருந்த நேரம், இயக்கப் போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். மக்களும் அவர்களோடு இழுபட்டுச் சென்றனர். தற்போது அனைவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து விட்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் சரணடைந்துள்ளனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர் நடந்ததாக சொல்லப் படும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் பற்றிய தகவல்கள் உண்மையா? போரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் அந்தத் தகவல்கள் யாவும் கிளர்ச்சி இயக்கங்களின் ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன. அவை எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது கேள்விக்குறி தான். அவை சுதந்திரமான ஊடகவியலாளரால் உறுதிப் படுத்தப் படவில்லை. (இது மேற்குலக அணுகுமுறை)

உண்மையில் போர் நடந்த இடத்தில் எந்தவொரு மேற்கத்திய ஊடகவியலாளரும் இருக்கவில்லை. இருப்பினும், பிரித்தானியாவிலும், துருக்கியிலும் உள்ள சிரிய கிளர்ச்சியாளரின் ஊடக மையங்கள் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அவை வெளியிடும், ஒரு பக்கச் சார்பான தகவல்களுக்கு மேற்குலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. மறுபக்கத்தில், சிரிய அரச ஊடகங்களும், ரஷ்ய ஊடகங்களும் கூட ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. அவற்றில் உண்மை எது, பொய் எதுவென்பது யாருக்கும் தெரியாது.

கிளர்ச்சிக் குழுக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் எதிர்பார்த்திராத அலெப்போவின் வீழ்ச்சி ஒரு பெரிய அதிர்ச்சி. இறுதி நேரத்தில் முற்றுகையை விலக்கிக் கொள்ளுமாறு ரஷ்யா ஊடாக அழுத்தம் கொடுத்தும் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆகையினால், இனி வருங்காலத்தில் ஆசாத் அரசு மீது போர்க்குற்ற விசாரணை கொண்டு வருவதற்காக தற்போதே படுகொலைகள் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.

உண்மையில் சில சரணடைந்த போராளிகளும், இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கிய மக்களில் சிலரும், அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப் படலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால், இவ்வளவு காலமும், மேற்குலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்த, மத அடிப்படைவாத வன்முறைக் கும்பல்களின் ஆட்சி நடந்த நேரம், அங்கு நடந்த குற்றங்கள் பற்றி யாரும் கவலைப் படவில்லை. மேற்குலகின் முக்கியமான பிரச்சினை "இஸ்லாமியப் பயங்கரவாதம்" அல்ல!

சிரிய அரச படைகளினால் அலெப்போ முற்றுகைப் போர் ஆரம்பமான போதே, கிளர்ச்சிக் குழுக்களை காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்தன. ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம் என்று காலம் கடத்தி வந்தன. ஆனால், அந்தத் தந்திரம் பலிக்கவில்லை.

தோல்வியின் விளிம்பில் நிற்கும், கிளர்ச்சிக் குழுக்களில் உள்ள போராளிகள் அலெப்போ வீழ்ச்சியின் பின்னர் மனமுடைந்து காணப்படுகின்றனர். உண்மையில், இறுதியாக நடந்த போரில் அவர்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டது. அரச படைகளும் அதற்கு உடன்பட்டன. அல்கைதாவுடன் தொடர்புடைய எண்ணாயிரம் போராளிகளும் மேற்குலக உதவியுடன் வெளியேற்றப் பட்டதாக அரச படைகள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தான், மேற்குலக ஊடகங்கள் "பதே போராளிகள்" என்று குறிப்பிடுகின்றன. அது அல்நுஸ்ரா இயக்கம் என்பதை மறைக்கின்றன.

மேற்குலக நாடுகள் மற்றும் செஞ் சிலுவைச் சங்கம் போன்றவற்றின் தலையீடு காரணமாக, கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேறும் பொது மக்களையும், போராளிகளையும் கொண்டு செல்வதற்கு பேருந்து வண்டிகள் அனுப்பப் பட்டன. அவர்களை இடிலிப் பிரதேசத்தில் கொண்டு சென்று விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கிளர்ச்சிக் குழுக்கள் பொது மக்களை தம்மோடு பணயக் கைதிகளாக பிடித்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அதை உறுதிப் படுத்த முடியவில்லை. போராளிக் குடும்பங்கள், இயக்க ஆதரவாளர்கள் ஆகிய பொது மக்களும் அவர்களுடன் செல்லக் கூடும். அவர்களைத் தவிர ஏனைய மக்கள் பலவந்தமாக கொண்டு செல்லப் படுவதையும் தவிர்க்க முடியாது.

இறுதிப் போர் இடிலிப் பகுதியில் நடைபெறவுள்ளது என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து விட்டது. அதாவது, அலெப்போவில் இருந்து வெளியேறிய இயக்கங்கள் அங்கு தமது பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் போரினால் இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான மக்களும் தங்கியிருப்பார்கள். அதனால், இடிலிப் பிரதேசத்தை கைப்பற்றும் போரில் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெருமளவு பொது மக்களும் கொல்லப் படலாம். அதை இப்போதே மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எதிர்வு கூறி விட்டனர்.

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, July 08, 2016

இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசமான "நடைமுறை இஸ்லாமிய தேசம்" சுருங்கிக் கொண்டிருக்கிறது. அது தற்போது இறுதிப்போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 

ஒரு காலத்தில் ஐ.எஸ். இயக்கத்தை வளர்த்து விட்ட அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் அதைக் கைவிட்டு விட்டன. மேற்கத்திய நாடுகள், அரபு நாடுகள், துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய எதிரும் புதிருமான நாடுகள் ஒன்று திரண்டு ஐ.எஸ். அழிப்புப் போரை ஆரம்பித்துள்ளன.

இறுதிப்போரின் முடிவில் முள்ளிவாய்க்கால் பாணியிலான படுகொலைகள் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, ஐ.எஸ். இயக்கத் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தினுள் சுற்றி வளைக்கப் படலாம். கனரக ஆயுதங்களை பயன்படுத்தி அவர்கள் கொன்றொழிக்கப் படலாம். வரலாறு திரும்புகிறது. ஈழப்போரில் ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் முடிவு இம்முறை சிரியாவில் ஏற்படவுள்ளது.

ஐ.எஸ். தற்போது நாலாபுறமும் எதிரிப் படைகளால் தாக்கப் பட்டு வருகின்றது. ஈராக்கிய படைகள் முன்பு ஐ.எஸ். வசமிருந்த பல இடங்களை விடுவித்துள்ளது. மொசுல் மட்டும் தான் எஞ்சியுள்ள பெரிய நகரம் ஆகும். சிரியாவில் "இஸ்லாமிய தேசத்தின் தலைநகரம்" என்று கருதப்படும் ராக்கா நகரம் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றது. வடக்கே YPG எனும் குர்திய விடுதலைப் படையினர் பல கிராமங்களை கைப்பற்றி விட்டனர். தற்போது அவர்கள் ராக்கா நகரில் இருந்து ஐம்பது கி.மீ. தூரத்தில் நிற்கின்றனர்.

இதற்கிடையே, ரஷ்ய போர்விமானங்கள் ராக்கா நகர் மீது குண்டு வீசி வருகின்றன. சிரியா இராணுவம் தெற்குப் பக்கமாக படைநகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. சிரியா இராணுவம் முன்னேறி வந்து ராக்காவை கைப்பற்றி விட்டால், குர்தியரின் பிரதேசத்தையும் கைப்பற்ற நினைக்கலாம். ஏற்கனவே சிரிய அரசு தேசத்தை ஒன்றிணைப்பது பற்றிப் பேசி வருகின்றது. அதனால், சிரியா இராணுவம் வருவதற்கு முன்னர், YPG படைகள் கைப்பற்றி விடத் துடிக்கின்றன.

ஆசாத் அரசுக்கு எதிரான அரபு மொழி பேசும் சிறிய கிளர்ச்சிக் குழுக்கள், குர்தியர்களுடன் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன. "சிரிய ஜனநாயகக் கூட்டணி" என்று அதற்குப் பெயரிட்டு, அமெரிக்காவும் உதவி வருகின்றது. அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவரும், இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஜனநாயகக் கூட்டணியினரை சந்தித்துப் பேசியுள்ளனர். சிரியா வான் பரப்பில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் அவர்களுக்கு ஆயுதப் பொதிகளை போட்டுள்ளன.

புலிகளுக்கு கிளிநொச்சி நகரம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே மாதிரி ஐ.எஸ்.சிற்கு ராக்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ராக்காவை இழந்தால் அது ஐ.எஸ். போராளிகள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். "இனி எல்லாம் முடிந்து விட்டது" என்ற சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். அதானால், என்ன விலை கொடுத்தாவது ராக்கா நகரை பாதுகாப்பதற்கு ஐ.எஸ். முயன்று வருகின்றது.

இதற்கிடையே, எதிர்காலத்தில் சிரியா மீது படையெடுப்பதற்கு, துருக்கியும், சவூதி அரேபியாவும் தயாராகி வருகின்றன. அதற்கு முன்னேற்பாடாக சவூதி அரேபியா, சிரியா எல்லைக்கு அருகில் உள்ள துருக்கியின் Incirlik இராணுவ தளத்திற்கு, நான்கு F-16 போர் விமானங்களை அனுப்பவுள்ளது. துருக்கி-சவூதி படையெடுப்புக்கு தடையாக ரஷ்யா உள்ளது. ஒரு தடவை சிரியாவுக்குள் சென்று விட்டால், ரஷ்யாவுடன் மோதல் நிலைமை தோன்றுவதை தவிர்க்க முடியாது.

ஒரு காலத்தில், துருக்கியும், சவூதி அரேபியாவும் தான், ISIS இயக்கத்திற்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி வளர்த்து விட்டன. அவை எதற்காக ஐ.எஸ். அழிப்புப் போரில் இறங்க வேண்டும்? "அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நிலையான நலன்கள் மட்டுமே உள்ளன." எண்பதுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி உதவிய இந்தியா, 2009 ம் ஆண்டு புலிகளை அழிக்கும் போரில் இறங்கவில்லையா? அதே கதை தான் சிரியாவிலும் நடக்கிறது.

சர்வதேச அரசியல் சூழ்நிலை தமக்கு எதிராகத் திரும்பி இருப்பதும், முன்னாள் நண்பர்கள் பகைவர்களானதும் ஐ.எஸ். உணராமல் இல்லை. அதனால் தான் ஐ.எஸ். தற்போது துருக்கி, சவூதி அரேபியாவிலும் வெடி குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

துருக்கியில் அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று துருக்கி அரசு அறிவித்துள்ளது. அதே மாதிரி, சவூதி அரேபியாவில் மெதீனா, ஜெத்தாவில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.

துருக்கியில் பொருளாதார இலக்கான விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் நூறு பேரளவில் கொல்லப் பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி முஸ்லிம்கள். சவூதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தவரின் புனித ஸ்தலமான மெதீனாவில் குண்டு வைத்ததன் மூலம், ஐ.எஸ். உலக இஸ்லாமியரின் வெறுப்புக்கு ஆளானது.

ஐ.எஸ். இஸ்லாமிய புனித ஸ்தலங்களை தாக்குவது இதுவே முதல் தடவையல்ல. சிரியா, ஈராக்கில் இருந்த ஆயிரம் வருட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகளை குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். அப்போது அதனை ஆதரித்து வந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மெதீனா தாக்குதலின் பின்னர் தான் விழித்துக் கொண்டனர்.

"ஐ.எஸ். எதற்காக இஸ்லாமிய‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" இந்த‌க் கேள்வியே அறியாமை கார‌ண‌மாக‌ எழுகின்ற‌து. "புலிக‌ள் எத‌ற்காக த‌மிழ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" "ஜேவிபி எத‌ற்காக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" ஏனெனில் இது அர‌சிய‌ல் அதிகார‌த்திற்கான‌ போர்.

ISIS தொட‌ங்கிய‌ ஆர‌ம்ப‌ கால‌த்தில் ஒரே குறிக்கோளுட‌ன் போரிட்ட‌ ச‌க‌ இய‌க்க‌ங்க‌ளை அழித்து அதிகார‌த்தை கைப்ப‌ற்றிய‌து. அப்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ள் ச‌கோத‌ர‌ யுத்த‌த்தில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அது ம‌ட்டும‌ல்லாது அவ‌ர்க‌ளது "de facto இஸ்லாமிய‌ தேச‌ம்" என்ற‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தினுள் வாழ்ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதை விட‌ "துரோகிக‌ள்" என்றும் ப‌ல‌ இஸ்லாமிய‌ர்க‌ள், சில‌ நேர‌ம் இய‌க்க‌ உறுப்பின‌ர்க‌ளும் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒரு கால‌த்தில், ஐ.எஸ். இய‌க்க‌ம் சிரியா, ஈராக்கில் ஷியா, குர்து முஸ்லிம்க‌ளை கொன்று குவித்துக் கொண்டிருந்த‌து. அது ப‌ற்றி நான் ப‌ல‌ த‌ட‌வைக‌ள் எழுதி இருக்கிறேன். அப்போதெல்லாம், சில‌ இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ள், ச‌வூதி- வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாளர்க‌ள், என்னை க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள். "விடுத‌லைப் போராட்ட‌த்தின்" பெய‌ரால் நியாய‌ப் ப‌டுத்தி, ஐ.எஸ். ஸுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கினார்க‌ள்.

த‌ற்போது வ‌ள‌ர்த்த‌ க‌டா மார்பில் பாய்ந்த‌ மாதிரி, ஐ.எஸ். த‌ன‌து எஜ‌மானின் நாடான‌ ச‌வூதி அரேபியாவில் தாக்குத‌ல் ந‌ட‌த்தியுள்ள‌து. ஒரு கால‌த்தில் தார்மீக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ளுக்கு திடீரென‌ ஞான‌ம் பிற‌ந்து "ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம்" என்கிறார்க‌ள். அந்த‌ உண்மை இப்போது தானா தெரிந்த‌து?

சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். பெரும‌ள‌வு இட‌ங்க‌ளை இழ‌ந்து வ‌ருகின்ற‌து. தோல்விய‌டைந்து வ‌ரும் இய‌க்க‌த்தால் இனிப் பிர‌யோச‌ன‌ம் இல்லையென்று கொடையாளிக‌ள் கைவிட்டு விட்டார்க‌ள். புலிக‌ள் ராஜீவ் காந்திக்கு குண்டு வைத்த‌ மாதிரி, ஐ.எஸ். மெதீனாவில் குண்டு வைத்துள்ள‌து.

ப‌ல‌ வ‌ருட‌ கால‌மாக‌ புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ந்த‌ இந்திய‌ மேலாதிக்க‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள், ராஜீவ் கொலைக்கு பின்ன‌ர், "புலிக‌ள் ஒரு த‌மிழ‌ர் விரோத‌ இய‌க்க‌ம்" என்றார்க‌ள். அதே நிலைமை தான் இன்று ச‌வூதி அரேபியா - ஐ. எஸ். விட‌ய‌த்திலும் ஏற்ப‌ட்டுள்ள‌து. வ‌ல்ல‌ர‌சுக‌ள் ஆடும் ஆட்ட‌த்தில் அப்பாவி ம‌க்க‌ள் ப‌லியாகிறார்க‌ள்.

அது ச‌ரி. ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம் என்ப‌தை ஒத்துக் கொள்ளும் ச‌வூதி வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சுய‌ விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌த் த‌யாராக‌ இருக்கிறார்க‌ளா? இப்போதாவ‌து ஷியாக்க‌ளையும், சோஷ‌லிச‌ குர்திய‌ர்க‌ளையும் முஸ்லிம்க‌ளாக‌ ஏற்றுக் கொள்கிறார்க‌ளா?

இஸ்லாமிய‌ ச‌மூக‌ங்க‌ளுக்கு இடையிலான‌ ப‌கை முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ப் ப‌ட்டு, ப‌ர‌ஸ்பர‌ புரிந்துண‌ர்வு ஏற்ப‌ட வேண்டும். ‌ இல்லாவிட்டால், எதிர்கால‌த்தில் இன்னொரு ஐ.எஸ். உருவாவ‌தை யாராலும் த‌டுக்க‌ முடியாது.

Thursday, January 14, 2016

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?


De Telegraaf, 13-01-2016

சிரியாவில், "இஸ்லாமிய தேசம்" என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேரவேண்டுமென்ற அவாவுடன் செல்லும் இளைஞர்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்லி, அவர்களை சேர விடாமல் தடுப்பதே அந்த அறிக்கையின் நோக்கம்.

அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:


- ஐ.எஸ். பிரதேசத்தில் புதிதாக வரும் ஒவ்வொருவரும், தேசியத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

- ஐரோப்பாவில் இருந்து செல்பவர்கள் தமக்கு அங்கே வசதியான வீடுகள் கிடைக்கும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஐ.எஸ். பரப்புரைகளுக்கு மாறாக, எந்த வசதியும் இல்லாத வீடு தான் கிடைக்கிறது. அங்கிருக்கும் குப்பை, கூளங்களை அவர்களே அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். மேலும், சில மணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது.

- ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், உளவாளிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் பரவலாக உள்ளது. எல்லோரும் சந்தேகிக்கப் படுகின்றனர், கண்காணிக்கப் படுகின்றனர். உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல அங்கிருந்து யாரும் தப்ப முடியாது. ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் என்றாலும் மரணதண்டனையில் இருந்து விதிவிலக்கு கிடையாது.

- ஐ.எஸ். படையினர் யுத்தத்தில் ஒரு கிராமத்தை கைப்பற்றினால், அங்கு கொலைகள், சித்திரவதைகள்,பாலியல் வன்புணர்ச்சிகள் நடத்துவது சாதாரணமாக நடக்கிறது.

- ஐரோப்பாவில் இருந்து புதிதாக சேரும் ஒருவர், ஏற்கனவே ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஒருவரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நபர் பொறுப்பு நிற்க வேண்டும். புதிதாக சேருவோர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

- கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு உடனடியாகவே வேலை கிடைக்கிறது. உதாரணத்திற்கு, தொழில்நுட்ப பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பல்வேறு மொழிகளில் புலமை கொண்டவர்களுக்கு வேலை நிச்சயம். ஏனையோர் படைகளில் சேர்க்கப் படுகின்றனர்.

- குடும்பமாக பிள்ளைகளோடு செல்பவர்கள் கூட, ஆண்கள் வேறு, பெண்கள் வேறு என்று பிரித்து வைக்கப் படுகின்றனர். ஆண்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

- பெண்கள் இராணுவ சேவையில் ஈடுபடுத்தப் படுவதில்லை. ஆனால், கலாச்சாரப் பொலிஸ் (அல் கண்சா படையணி) வேலைக்கு சேர்க்கிறார்கள். தெருக்களில், பொது இடங்களில், பெண்கள் ஐ.எஸ். கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணி அவர்களுடையது.

- பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப் பட்டாலும், அங்கு அவர்களுக்கு ஐ.எஸ். கொள்கைகளை கற்பிக்கிறார்கள். ஆயுதங்களை கையாள்வது எப்படி என்று சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். வருங்கால கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

- பெண் பிள்ளைகள் ஒன்பது வயதானால் உடலை மூடும் ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். ஆண் பிள்ளைகள் ஒன்பது வயதானால், இலகுவான இராணுவ பயிற்சிக்கு அழைக்கப் படுகின்றனர். மேலும் பொது இடங்களில் நடக்கும் மரண தண்டனைக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

- பெண்கள் அதிகமான பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.

- தனியாக வாழும் இளம் பெண்களும், விதவைகளும் பெண்கள் விடுதி ஒன்றுக்கு அனுப்பப் படுகின்றனர். அங்கு நிலவும் வசதிக் குறைபாடுகள் வாழ்க்கையை கடினமாக்குகின்றன. ஊத்தை, குப்பை, கரப்பான் பூச்சிகள் ஊரும் இடங்களில் தங்க வைக்கப் படுகின்றனர். இந்தக் கஷ்டம் காரணமாக, பல பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். போராளிக் கணவனை போரில் பலி கொடுத்த விதவைகள் கூட, இன்னொரு போராளியை மறுமணம் செய்கின்றனர். தமது குழந்தைகளின் தகப்பனை நினைத்துக் கவலைப் பட்டாலும் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்.

- குறைந்த தொகையாக இருந்தாலும், போராளிகளுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ஐ.எஸ். நடத்தி வந்த எண்ணைக் கடத்தல் வியாபாரம் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக, சம்பளம் ஒழுங்காக கொடுக்க முடிவதில்லை.

- ஐ.எஸ். பிரதேசத்தினுள் எந்த நேரமும் விமானக் குண்டு வீச்சு நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பொது மக்கள் அடிக்கடி குண்டுவீச்சுகளுக்கு பலியானாலும், யாரும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது. இரகசியமாக தப்பியோடி பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.

- மருத்துவ மனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்தியர்களும் குறைவு. குறிப்பாக பெண் மருத்துவர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். பிரசவம் பாரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்களோ, தாதியரோ இல்லாத நிலையில் சிசு மரணவீதம் அதிகமாக உள்ளது.

Wednesday, November 25, 2015

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) பாதுகாவலன் அமெரிக்கா : சில ஆதாரங்கள்

ரஷ்ய Su24 போர் விமானம், துருக்கி F16 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. துருக்கி, சிரியா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு ரஷ்ய விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினாலும் அவர்கள் பின்னர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய விமானம், சிரியா வான் பரப்பின் மீது பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயினும், அது தனது நாட்டுக்குள் பிரவேசித்ததாக துருக்கி கூறுகின்றது. அதை நிரூபிப்பதற்கு காட்டிய வரை படத்தில், இரண்டு கி.மீ. தூரமுள்ள பிரதேசம் உள்ளது. ரஷ்ய விமானம் அதைக் கடக்க வெறும் 17 செக்கண்டுகள் மட்டுமே எடுத்தது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தக் காரணம் என்ன? அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி, நீண்ட காலமாகவே ISIS உடன் தொடர்புகளை பேணி வந்தது. அதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. சிரியா யுத்ததில் காயமடைந்த ISIS போராளிகளுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை அழிக்கப் பட்டது. கொபானியில் குர்திஷ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்திய ISIS படையணிகள், துருக்கியில் இருந்து சென்றுள்ளன.

ISIS தொடர்புகள் மூலம், துருக்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைத்து வந்தன. சிரியாவின் ஒரேயொரு எண்ணை வளமுள்ள பகுதி, வருடக் கணக்காக ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எண்ணை, பார ஊர்திகள் (Oil tanker) மூலம் துருக்கிக்கு கொண்டு செல்லப் படுகின்றது. சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு, துருக்கி சிரியா எண்ணையை வாங்கி வருகின்றது. (Turkey buying oil from Isis? Syrian army releases photos of captured tanker; http://www.ibtimes.co.in/turkey-buying-oil-isis-syrian-army-releases-photos-captured-tanker-656183 )

சிரியா போரில் ரஷ்யாவும் பங்கெடுக்கத் தொடங்கியதால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும், இதுவரை காலமும் பாலைவனத்தில் குண்டு போட்டு விட்டு, "ISIS அழிப்பு போர் நடத்துவதாக" பம்மாத்து காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், ரஷ்ய விமானங்கள் ISIS நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தின. 

ISIS எண்ணை கடத்தி வந்த வாகனங்கள் மீதும் குண்டு போட்டதால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டது. தனக்கு கிடைத்து வந்த மலிவு விலை எண்ணை தடைப் பட்டதால் கோபமுற்ற துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தி பழி தீர்த்திருக்கலாம். ஆனால், இதனால் ரஷ்யா சிரியா போரில் இருந்து பின்வாங்கி விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ISIS இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அமெரிக்காவே பாதுகாப்பு வழங்குகின்றது. சிரியாவில் ஆசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் மேற்குலகினால் உருவாக்கப் பட்ட ISIS, துருக்கி போன்ற அயல்நாடுகளால் நேரடியாகவும், அமெரிக்காவினால் மறைமுகமாகவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. அமெரிக்காவும், ISIS உம் இணைபிரியாத நண்பர்கள் என்பதற்கு எத்தனை ஆதாரங்களை காட்டினாலும், சில மரமண்டைகளுக்கு உறைப்பதில்லை.

இதோ சமீபத்தில் கிடைத்த ஆதாரம் ஒன்று: 

ISIS, சிரியாவின் எண்ணையை திருடி, அதை பார ஊர்திகள் மூலம் கொண்டு சென்று துருக்கியில் விற்று வருவது தெரிந்த விடயம். கடந்த சில நாட்களாக, ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ISIS கொண்டு சென்ற எண்ணைத் தாங்கி வாகனங்கள் எரிந்து நாசமாகின. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தன் பங்கிற்கு, எண்ணை வாகனங்களை தாக்கி அழித்ததாக ஊடகங்களில் பீற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில் அங்கே நடந்ததோ வேறு கதை.

இந்த தடவை, தாக்குதல் நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை, அமெரிக்க விமானம் ஒன்று ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வீசியுள்ளது. விமானத் தாக்குதல் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் போடப் பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. (Pentagon Confirms: Warning Pamphlets Dropped on Islamic State ‘to Minimize the Risks to Civilians’ http://freebeacon.com/national-security/pentagon-confirms-warning-pamphlets-dropped-on-islamic-state-to-minimize-the-risks-to-civilians/)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ISIS படையணிகளுக்கு அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்குகிறது. ஈராக்கில் இருந்து ISIS படையணிகள், சிரியாவில் உள்ள ராக்கா போர்முனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், பட்டப் பகலில், ஏராளமான டொயாட்டா பிக்கப் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போதிலும், அவை அமெரிக்க செய்மதிகளின் கண்களுக்குத் தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

Saturday, November 14, 2015

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

"இந்த தடவை, இது ஒரு யுத்தம்!" பிரெஞ்சு தினசரி Le Parisien  தலையங்கம் 

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.

உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்" என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்" என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.

சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...." பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.

"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்" என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)

இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்" மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!" என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.

தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்" என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.

சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.

பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. (http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx#

"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..." என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajolet கூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்." என்று தெரிவித்தார்.

அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை" தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி" அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.


பிரான்சில் அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரம், பிரெஞ்சு தேசியக் கொடியை புரபைலில் மாற்றுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை. நூற்றுக் கணக்கான வருடங்களாக, ஏகாதிபத்திய வடிவில், காலனித்துவ எஜமானாக, பல உலக நாடுகளின் மக்களை ஒடுக்கிய சின்னமாக பிரெஞ்சுக் கொடி உள்ளது. முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடுகள், இன்றைக்கும் பிரான்சுக்கு காலனிய வரி கட்டிக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சுக் கொடியை உயர்த்துவற்கும், உலகம் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய கொடியை உயர்த்துவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வியட்நாமிய யுத்தத்தில், பிரான்சின் இடத்தை தான் அமெரிக்கா பிடித்துக் கொண்டது. கடந்த பல தசாப்த காலமாக, பிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளது.

யாராவது சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்தும் பொழுது, அது பெரும்பான்மை தமிழ் மக்களால், ஒரு அவமானச் சின்னமாக கருதப்படுகின்றது. அதே மாதிரி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொடிகளும், ஒடுக்கப் பட்ட மக்களை அவமதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரெஞ்சுக் கொடியால் புரபைல் படத்தை போர்த்திக் கொள்வதை தவிர்ப்பதற்கும் அது தான் காரணம். பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் செயல்களை பற்றி எதுவும் அறியாமல், தமது உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களின் தியாகம் மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக தவிர்த்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவோர், பிரெஞ்சு அரச பயங்கரவாதிகளின் கொடியை உயர்த்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

இந்த இடத்தில், பிரான்சின் கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத காரணத்தால், தமது புரபைலில் பிரெஞ்சுக் கொடியை போட்டுக் கொண்ட அப்பாவி மக்களை குற்றஞ் சாட்டவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பிரான்ஸில் கொல்லப் பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, பிரெஞ்சு அரசினால் கொல்லப் பட்ட ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

Sunday, September 13, 2015

தமிழ் அகதிகளை வெறுக்கும் நாஸிகளை போற்றும் தமிழ் வலதுசாரிகள்!


ஐரோப்பிய நாடுகளில், தமிழராகிய எம்மைப் போன்ற, வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக இனவெறியை கக்குவோர், "தீவிர வலதுசாரிகள்" அல்லது "நவ நாஸிகள்" என்று அழைக்கப் படுகின்றனர். 

வெள்ளையின மேலாண்மைக் கொள்கை கொண்ட நிறவெறியர்கள். தமிழர், முஸ்லிம், ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளுக்கு எதிராக இனத்துவேஷ கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஐரோப்பாவுக்கு மட்டுமே உரிய தனித்துவமான பிரச்சினை அல்ல. தமிழர்களில் சிலரும் அதே கருத்துக்களை எதிரொலிக்கிறார்கள்!

பெரும்பாலும் ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட, இஸ்லாமியரை வெறுக்கும் தமிழர்கள், ஐரோப்பிய நாஸிகளின் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றைப் பகிர்ந்து கொள்வதில், அவர்களுக்கு எந்தவிதமான வெட்கமும் கிடையாது. நவ நாஸிகளின் இனத்துவேஷ கருத்துக்களை, அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கூறி வருகின்றனர்.

சிலநேரம், தமது இனவாத சுயரூபத்தை மறைப்பதற்காக, ஈழத் தமிழர் மேல் கரிசனை கொண்டவர்கள் போன்றும் நடிப்பார்கள். ஆகையினால், தமிழ் மக்கள் இப்படியானவர்கள் குறித்து விழிப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை எழுதுகிறேன். நாஸிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மீண்டும் ஒரு உலகப் போருக்கே இட்டுச் செல்லும்.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயரும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இது தான் சந்தர்ப்பம் என்று, ஐரோப்பிய நவ நாஸிகள் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். "சிரிய அகதிகள் மத்தியில், ஏராளமான ISIS போராளிகள் மறைந்திருப்பதாகவும், ஐரோப்பாவில் குழப்பங்களை உண்டாக்கப் போவதாகவும்" பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

இது தொடர்பாக, பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட தகவல் ஒன்று, உலகம் முழுவதும் உள்ள நாஸிகளால் (தமிழ் நாஸிகள் உட்பட) பகிர்ந்து கொள்ளப் பட்டது. (பார்க்க : Riot breaks out at overcrowded refugee camp in Germany after resident tore pages out of the Koran and threw them in the toilet: http://www.dailymail.co.uk/news/article-3204828/Riot-breaks-overcrowded-refugee-camp-Germany-resident-tore-pages-Koran.html)

ஜெர்மனியில் ஓர் அகதி முகாமில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான விளக்கத்தை பின்னர் எழுதுகிறேன். தற்போது, அந்தத் தகவலை வெளியிட்ட டெய்லி மெயிலின் யோக்கியதை என்னவென்று பார்ப்போம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், ஹிட்லரை ஆதரித்து வந்த பத்திரிகை அது! 

ஹிட்லரை சந்தித்துப் பேசிய டெய்லி மெயில் பத்திரிகை உரிமையாளர் Lord Rothermere

டெய்லி மெயில் ஸ்தாபகரான Lord Rothermere, ஹிட்லரை நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கும் ஹிட்லருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது. அது மட்டுமல்ல, அந்தக் காலத்தில் பிரிட்டனில் இயங்கிய பாசிசக் கட்சியை ஆதரித்தார். அது கடந்த கால வரலாறு என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அண்மையில் கூட, டெய்லி மெயில் பத்திரிகை பிரெஞ்சு பாசிசக் கட்சியான Front National ஐ ஆதரித்தது! (பார்க்க: http://www.dailymail.co.uk/debate/article-2132611/French-elections-2012-Marine-Le-Pen-responsible-vote-France.html)

பிரிட்டனில் வந்து குவிந்த யூத அகதிகளுக்கு எதிராக,
இனவாதம் கக்கிய டெய்லி மெயில் பத்திரிகை 

ஜெர்மனியில் நாஸி ஆட்சி ஏற்பட்ட ஆரம்ப காலங்களில், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் யூதர்கள், ஐரோப்பிய நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். பிரிட்டனிலும் யூத அகதிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது இதே டெய்லி மெயில் பத்திரிகை, யூத அகதிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. அதே நேரம், நாஸி கட்சியையும், பிரிட்டிஷ் பாசிஸ்ட் கட்சியையும் பாராட்டி எழுதிக் கொண்டிருந்தது!  

தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள், அடிக்கடி மேற்கோள் காட்டும் பிரிட்டிஷ் டெய்லி மெயில் பத்திரிகை, முன்பு யூத அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்கியது. தற்போது அதே பத்திரிகை, முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்குவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? இந்த உண்மை தெரியாமல், ஒரு வலதுசாரி இனவாதப் பத்திரிகையான டெய்லி மெயில் தகவலுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? அதில் வரும் செய்திகளை நம்ப முடியுமா? 

டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட, ஜெர்மன் அகதி முகாமில் நடந்த "கலவரத்தின்" பின்னணி என்னவென்று பார்ப்போம். ஜெர்மனியில் சூல் (Suhl) எனும் இடத்தில், அகதி முகாம் ஒன்றில் நடந்த அசம்பாவிதம் பற்றிய தகவலை, வலதுசாரிகள் தமது இனவெறிப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு நடந்த சம்பவம் இது தான். பெருந்தொகையான முஸ்லிம் அகதிகளை கொண்ட அகதி முகாம் ஒன்றில், ஓர் ஆப்கான் அகதி (அவரும் முஸ்லிம் தான்) பொது இடத்தில் குரானின் பக்கங்களை கிழித்து வீசியுள்ளார்.

அதன் விளைவாக, அங்கு திரண்ட இருபது பேர் கொண்ட அகதிகள் கும்பல், ஆப்கான் அகதியை விரட்டிச் சென்றது. அவனுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அடைக்கலம் கொடுத்த படியால், சீற்றமுற்ற கும்பல் முகாம் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளது. இந்தத் சம்பவத்தை பெரிது படுத்தியுள்ள வலதுசாரி ஊடகங்கள், ஐரோப்பிய வெள்ளை - இனவாதிகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்திற்கு தீனி போட்டுள்ளன.

உண்மையில் கலாச்சார அதிர்ச்சி காரணமாக, இது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதுண்டு. எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி முகாம்களில் வசித்து வந்த தமிழ் அகதிகளும், சிங்கள அகதிகளும், சிறு சச்சரவு காரணமாக கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டனர். சுவிட்சர்லாந்தில், பொது தொலைபேசி கூண்டுக்குள் ஆடு வெட்டிய தமிழர்கள் பற்றிய தகவல், சுவிஸ் ஊடகங்களில் பிரபலமாக அடிபட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ் அகதிகளே இரண்டாகப் பிரிந்து, புங்குடுதீவு- யாழ்ப்பாணம் கோஷ்டி மோதல் நடந்தது.

பத்து வருடங்களுக்கு முன்னர், எனக்குத் தெரிந்த தமிழ் அகதி ஒருவர், நெதர்லாந்தில் நடந்த, தமிழ் விளையாட்டுக் கழகங்களின் நாடளாவிய விளையாட்டுப் போட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார். அந்தப் போட்டிகளை புலிகள் அல்லது புலி ஆதரவு அமைப்புகள் நடத்தினார்கள். பெருமளவு பார்வையாளர்களும் புலி ஆதரவாளர்கள் தான்.

அப்போது முகாமில் வசித்து வந்த குறிப்பிட்ட தமிழ் அகதி, விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த நேரம், சிங்கக்கொடி போட்ட டி-சேர்ட் அணிந்து சென்றார். அதைக் கண்டு கிளர்ந்தெழுந்த புலி ஆதரவாளர்கள் கும்பலாக சேர்ந்து, அந்த இளைஞனை அடித்து உதைத்து சட்டையைக் கிழித்துள்ளனர். இத்தனைக்கும் அடி வாங்கிய இளைஞன் ஒரு முன்னாள் புலிப் போராளி!

இந்தச் சம்பவம் நடந்து, ஒரு வருடத்திற்குப் பின்னர், அடி வாங்கிய அகதிக்கு நிரந்தர வதிவிட அனுமதி கிடைத்தது. ஆகவே, ஜெர்மனியில் நடந்த அசம்பாவிதத்திற்கு காரணமான ஆப்கான் அகதியும், தனது சுயநலத்திற்காகவே அதைச் செய்திருக்க வாய்ப்புண்டு. தற்போது ஜெர்மனியில் தனக்கு அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியாகி விட்டது என்று, அந்த ஆப்கான் அகதி உள்ளூர மகிழ்ந்திருப்பான்.

ஆகவே, அகதி முகாம்களில் நடக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் மதச் சாயம் அல்லது இனச் சாயம் பூசுவது அபத்தமானது. ஒன்றில் அகதிகளின் சுயநலம் காரணமாக, அல்லது கலாச்சார அதிர்ச்சி காரணமாக நடக்கும் கலவரங்கள் தொடரப் போவதில்லை. அகதிகள் ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு கொஞ்சக் காலம் எடுக்கும்.

ஐரோப்பிய நவ நாஸிகளும், தமிழ் நாஸிகளும் ஒரு கார்ட்டூன் படத்தை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், துருக்கியில் இருந்து கிரீசுக்கு படகில் சென்ற அகதிகள், விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அனவைரும் அறிந்ததே. ஒரு தடவை, அயிலான் என்ற மூன்று வயது குழந்தையும் பரிதாபகரமாக மரணமடைந்த படியால் அது உலகின் மனச்சாட்சியை உலுக்கி இருந்தது.

உண்மையில் ஐரோப்பாவை பிடித்தாட்டிய அகதிகளின் நெருக்கடியின் மத்தியில் அந்த மரணம் சம்பவித்த படியால் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான ஐரோப்பிய மக்கள், அகதிகள் வருவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈழத் தமிழ் அகதிகள் உட்பட, பொதுவாக எந்த நாட்டு அகதியும், ஐரோப்பா வருவதை   விரும்பாத, நவ நாஸிகளுக்கு அது உவப்பானதாக இருக்குமா? ஐரோப்பாவுக்குள் பெருந்தொகை அகதிகள் வருகிறார்களே என்ற காழ்ப்புணர்வின் காரணமாக, ஒரு கார்ட்டூன் வெளியிட்டார்கள்.


"நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் அயிலான். நாங்களும் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளே. ஆனால் உலகம் எங்களைக் கண்டுகொள்ளவேயில்லை." என்று மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவக் குழந்தைகள், ஆயிலானைப் பார்த்து சொல்வதைப் போன்று அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்கள்.

சிரியா மற்றும் ஈராக்கில் நடந்த போர்களில், கொல்லப் பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களும் அல்ல. ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்பவர்கள் எல்லாம் முஸ்லிம்களும் அல்ல. இந்த உண்மையை புரிந்து கொள்ளாத தமிழ் நாஸிகள், அதே கார்ட்டூனில் சிறு மாற்றம் செய்து, கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பதிலாக "ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள்" என்று மாற்றி எழுதினார்கள்.

இங்கேயும் அதே லாஜிக் உதைக்கிறது. அந்தச் சம்பவத்தில் இறந்தது ஒரு "ஈழத் தமிழ் அயிலான்" என்றால், இவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்? முதலில் அயிலான் என்ற அந்தக் குழந்தை போரில் மரணமடையவில்லை. சட்டவிரோதமாக விசா இல்லாமல், கள்ளத் தோணியில் கிரீஸ் சென்ற நேரம் தான் மரணம் சம்பவித்தது. இவ்வாறு ஏற்கனவே பல ஈழத் தமிழ்க் குழந்தைகளும் ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் நேரம் மரணமடைந்துள்ளன.

இந்த உண்மையை மறைத்து, திடீரென ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள் மீதும், சிரியா- ஈராக் போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகள் மீதும், பரிவு காட்டும் நாஸிகளின் "கழிவிரக்கம்" மெய்சிலிர்க்க வருகின்றது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.

மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக ஐரோப்பிய நவ நாஸிகள் அழுகிறார்கள். அதே மாதிரி, ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக தமிழ்நாட்டு நாஸிகள் அழுகிறார்கள். ஜெர்மன் மொழி பேசினாலும், தமிழ் மொழி பேசினாலும் நாஸிகள் நாஸிகள் தான். ஒரே கொள்கை கொண்டவர்கள் தான். 

Norwegian Defence League (http://norwegiandefenceleague.com/என்ற சிறியதொரு நவ நாஸி அமைப்பு, தமது பேஸ்புக் பக்கத்தில் அந்தக் கார்ட்டூனை வெளியிட்டு இருந்தது. இங்கிலாந்தில் பல வருட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இனவெறி அமைப்பான, English Defence League (EDL https://en.wikipedia.org/wiki/English_Defence_League) இன் சகோதர அமைப்பு. வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நவ நாஸி அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

EDL உறுப்பினர்கள், ஒஸ்லோ நகரில் 90 பேரை படுகொலை செய்த வெள்ளை நிறவெறி பயங்கரவாதி Breivik உடன் தொடர்பு வைத்திருந்தனர். ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாஸிகளின் ஆதரவும், அனுதாபமும் தேவையில்லை. அவர்கள் தமது இனவெறி அரசியலுக்கு, ஈழத் தமிழரை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 

ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடியை திசை திருப்பும் நோக்கில், அகதிகளை கேலி செய்யும் வகையில் சிலர் தொடர்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில தமிழ் தீவிர வலதுசாரிகள், ஈழப் போரில் பலியான தமிழரின் பேரில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை அவர்கள் தெரிந்து கொண்டு செய்கிறார்களா? அல்லது தெரியாமல் செய்கிறார்களா?

இந்தத் தீவிர வலதுசாரிகள் யாரிடமும் அகதிகளாக ஐரோப்பாவுக்கு சென்ற அனுபவம் இல்லை என்பது, அவர்களுடனான உரையாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் பொழுது கொல்லப் பட்ட குழந்தைகளை பற்றி கவலைப் படாமல், உள்நாட்டுப் போர்களில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இது ஐரோப்பிய எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்கான நடவடிக்கையாகவே எனக்குத் தெரிகின்றது.


மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் ஈழப் போராகினும், சிரியாப் போராகினும், ஐரோப்பிய மேலாதிக்க வல்லரசுகளின் ஆயுத விற்பனையை பெருக்குவதற்கும், பொருளாதார சுரண்டலுக்கு வழி திறந்து விடுவதற்காகவும் நடந்து வருகின்றன. போர்களின் விளைவாக உருவாகும் அகதிகள் ஐரோப்பாவை சென்றடையும் பொழுது, அவர்களை நிராகரித்து திருப்பி அனுப்புகின்றன.

இந்த உண்மையை மக்களுக்கு தெரிய விடாமல் தடுக்கும் நோக்கில் சிலர் இயங்கி வருகின்றனர். ஐரோப்பாவுக்கு செல்லும் வழியில் இறந்த படியால் பிரபலம் அடைந்த அயிலான் என்ற குழந்தையை வைத்து இந்த "அகதி எதிர்ப்புப் பிரச்சாரம்" நடக்கிறது.

ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள், சிரியாப் போரில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதே நேரம், தீவிர தமிழ் வலதுசாரிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட தமிழ் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஈழக் குழந்தைகள், சிரியாக் குழந்தை அயிலானிடம், "நாங்களும் உன்னைப் போல போரில் கொல்லப் பட்டவர்கள்" என்று கூறுவது போன்று ஒரு கார்ட்டூன் தயாரித்து, தவறான தகவலை பரப்புகிறார்கள். உண்மையில், அயிலான் போரில் கொல்லப் படவில்லை! 

ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, விசா கிடைக்காமல், சட்டவிரோதமாக எல்லை கடக்கும் நேரத்தில் விபத்தில் கொல்லப் பட்டான். போரில் கொல்லப் படுவதற்கும், கடலில் நடந்த படகு விபத்தில் கொல்லப் படுவதற்கும் இடையிலான வித்தியாசம் இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

இவர்களது உண்மையான நோக்கம் என்ன? ஈழம், சிரியாவில் நடக்கும் போரில் சிக்கி, எத்தனை இலட்சம் பேர் மாண்டாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், ஒருவர் கூட ஐரோப்பாவுக்கு அகதியாக செல்லக் கூடாது. ஐரோப்பிய எஜமான் அவர்களுக்கு காலால் இட்ட பணியை, தலையால் செய்து முடித்துள்ளனர்.

ஐரோப்பிய கைக்கூலிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது போதும். அவர்கள் உண்மையிலேயே ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்றால், ஐரோப்பிய நாடுகளின் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லிக் கேட்கலாமே? ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், குறிப்பிட்ட அளவு தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே?

இன்றைக்கும் எத்தனை இலட்சம் ஈழத் தமிழ் அகதிகள் தமிழ் நாட்டு முகாம்களில் இருக்கின்றனர் என்று தெரியுமா? அவர்களுக்கு எப்படி அகதி அந்தஸ்து, வதிவிட உரிமை, பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள். அதை விட்டு விட்டு, ஐரோப்பாவுக்கு தமிழ் அகதிகள் செல்வதை தடுக்கும் நோக்கில், அகதிகளுக்கு எதிரான பதிவுகளை இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: