Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Sunday, December 27, 2020

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்

அவுஸ்திரேலிய அரசு, தனது நாட்டில் வந்து தஞ்சம் கோரும் அகதிகளை, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து வருடக் கணக்காக கொடுமைப் படுத்துவதை Stateless என்ற பெயரில் படமாக்கி உள்ளார்கள். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தை Netflix இல் பார்க்கலாம். 


இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் வரும் அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைத்துக் வைக்கப் படுகின்றனர். அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாக அகதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கூரையின் மேலே நின்று ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டுகின்றனர்.

அந்த தடுப்பு முகாமில் அவுஸ்திரேலிய பிரஜையான மனநலம் பாதிக்கப் பட்ட பெண் ஒருவரும் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் உண்மையாக நடந்ததாக படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் முரண்பட்டதாலும், ஒரு cult அமைப்பில் நடந்த அத்துமீறல்களாலும் மனநலம் பாதிக்கப்பட்டு தப்பியோடுகையில் போலீசிடம் பிடிபடும் பொழுது தான் ஒரு ஜெர்மன் பிரஜை என்று பொய் சொல்லி விடுகிறாள். அதனால் அவளை விசா இல்லாத விரும்பத்தகாத வெளிநாட்டவரை தங்க வைக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் கடைசி வரையில் யாரும் அவளது அவுஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு (accent) குறித்து சந்தேகப் படாதது ஆச்சரியத்திற்குரியது. அன்றைய காலத்தில், இந்த தவறானது ஊடகங்களில் வெளியாகி, அவுஸ்திரேலிய அரசுக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது.

அரசு ஒரு தனியார் நிறுவனத்திடம் முகாமை காவல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் காவலாளிகளில் சிலர் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதுடன், ஒரு கேள்வி கேட்ட அகதியை அடித்து நொறுக்குகின்றனர். அதற்காக சம்பந்தப் பட்ட காவலாளிகள் இடைநிறுத்தம் செய்யப் படவில்லை. அரசும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை.

காவலாளிகள் ஒரு அகதியை அடித்து காயப்படுத்திய புகைப்படம் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து யார் கமெரா வைத்திருந்தார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். அகதிகளை பார்வையிட வரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கொண்டு வந்த உணவுப் பொருளை சோதித்து அதற்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து பார்வையாளர்கள் வருவதையும், முகாம் தொலைபேசி பாவனையும் தடுக்கின்றனர். உணவுச்சாலையும் மூடப் படுகிறது. அகதிகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தான் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரமான ஆப்கான் அகதி அமீரின் கதை படத்தில் தெளிவாக சொல்லப் படவில்லை. அமீர் முதலில் தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு, பின்னர் இன்னொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறான். அங்கு வந்த பின்னர் தனது ஒரு மகள் மட்டுமே தப்பி வந்ததை அறிந்து கொள்கிறான். மனைவியும் இன்னொரு மகளும் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விட்டனர். அமீர், இந்தோனேசியாவில் படகில் ஏறும் பொழுது தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு அவன் மட்டும் ஏன் திரும்பிச் சென்று கடத்தல்காரர்களிடம் அடி வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. படத்தில் கூறப்படும் அமீரின் கதையானது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பார்வைக் கோணத்தில் இருந்து சொல்லப் படுவதாக நான் கருதுகிறேன். விசாரணை அதிகாரி அவனை ஒரு கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டி தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கிறாள். அதற்கு காட்டப் படும் ஆதாரங்களிலும், சொல்லப் படும் கதைகளிலும் பல ஓட்டைகள் உள்ளன.

குடிவரவு அமைச்சு "நம்பத் தகுந்தது" எனக் காட்டும் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல. இதை படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் இன்னொரு குடியேற்ற அதிகாரியே கூறுகிறார். உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானில் அப்போதிருந்த தாலிபான் அரசுடன் தொடர்பு கொண்டு அமீரின் சகோதரனின் மரணச் சான்றிதழ் எடுத்த விடயம் நம்பத் தகுந்ததாக இல்லை. அத்துடன் Smart phone வந்திராத காலத்தில், இந்தோனேசியாவில் அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த கிரிமினலுடனான சந்திப்பை, யாரோ ஒருவர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரி காட்டும் வீடியோ நம்பும் படியாக இல்லை. அநேகமாக அமீரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு காரணம் தேடி, அவுஸ்திரேலிய அரசு தானாகவே ஒரு கற்பனைக் கதையை புனைந்துள்ளதாக தெரிகின்றது.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், மொத்ததில் படம் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி விடுகின்றது. அதாவது அவுஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை மனதில் பதியும் வண்ணம் படமாக்கி உள்ளனர். அத்துடன், இப்படியான சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. அவர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்ளாமல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Saturday, February 22, 2020

பாரசைட் vs மின்சார கண்ணா: முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!


Parasite vs Minsara kanna : Fuck the Capitalism! Don't worship it!! 
பாரசைட் vs மின்சார கண்ணா : முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!

ஆஸ்கார் விருதுகள் வென்ற தென் கொரிய திரைப்படமான Parasite, முன்பு தமிழகத்தில் வெளியான மின்சார கண்ணா திரைப் படக் கதையை தழுவி எடுக்கப் பட்டதாக, அதன் தயாரிப்பாளர் தேனப்பன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ல் வெளியான மின்சார கண்ணா திரைப்படமும், Bong Joon Ho இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான Parasite திரைப்படமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத மாறுபட்ட கதைகளை கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு சிறிய அலசல்.

- Parasite, மின்சார கண்ணா இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கதையமைப்பை கொண்ட திரைப்படங்கள். இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளை விட வேற்றுமைகளே அதிகம். இரண்டும் எதிரெதிரான வர்க்கப் பார்வை கொண்டவை.

- பாரசைட் படக்கதை முழுக்க முழுக்க ஓர் ஏழைக் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் நகர்கிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா திரைக்கதை ஒரு பணக்காரக் குடும்பத்தின் பார்வையில் இருந்து சொல்லப் படுகிறது. இரண்டும் முற்றிலும் முரண்பாடான வர்க்க அரசியல் கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்கள்.

- தமிழகத்திலும், தென் கொரியாவிலும் வர்க்க நிலைப்பாடு ஒன்று தான். பணக்கார வீட்டில் பிறந்த பிள்ளை பணத்தில் புரளுவதும், ஏழை வீட்டில் பிறந்த பிறந்த பிள்ளை வறுமையில் வாடுவதும் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான சமூக யதார்த்தம். அது என்றும் மாறாத முதலாளித்துவ பொருளாதார நியதி. பாரசைட் திரைப்படம் இந்த உண்மையை உள்ளபடியே காட்டுகிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் காட்டுகிறது. "ஏழைகள் கஷ்டப் பட்டு உழைத்தால் பணக்காரர் ஆகலாம்..." என்ற பொய்யை நம்ப வைக்க முயல்கிறது.

- பாரசைட் படத்தில் வரும் ஏழைக் குடும்பத்தினர் அடித்தட்டு வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களது வர்க்கக் குணாம்சம் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டிக் கொழுத்த பணக்காரர்களை நம்மால் முடிந்த அளவு சுரண்டுவதில் தவறில்லை என நினைக்கிறார்கள். அவர்கள் பணக்கார குடும்பத்தில் வேலைக்கு சேர்வதற்கு பின்னணியில் உழைக்கும் வர்க்கம் சார்ந்த பழிவாங்கும் குணாம்சம் உள்ளது. இந்த வர்க்கப் போராட்டம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளிக்கு போலி விசுவாசம் காட்டுவது, வேலை செய்யாமல் இழுத்தடிப்பது, கம்பனி பொருட்களை திருடுவது... இப்படிப் பலவுண்டு.

- அதற்கு மாறாக மின்சாரக் கண்ணாவில் காட்டப் படுவது உண்மையில் ஓர் ஏழைக் குடும்பம் அல்ல! ஏற்கனவே மேல்தட்டில் இருந்த பணக்காரக் குடும்பம்! படத்தின் கதாநாயகன் விஜய்யின் காதலுக்காக அவனது குடும்பத்தினர் "ஏழைகளாக நடிக்கிறார்கள்"! ஜெர்மனியில் வசதியாக வாழ்ந்த மல்ட்டி மில்லியனர் குடும்ப உறுப்பினர்கள், இந்தியா வந்து கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்கிறார்களாம்! மகனின்/சகோதரனின் காதலுக்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக் கொள்கிறார்களாம்! இதன் மூலம் "பணக்காரர்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் பார்த்தீர்களா?" என்று கதாசிரியர் நமது காதுகளில் முழம் முழமாக பூச்சுற்றுகிறார். படத்தில் ஆண்களை வெறுக்கும் பணக்காரியாக வரும் வரும் குஷ்பு ஆரம்பத்தில் ஏழைத் தொழிலாளியாக இருந்து "உழைப்பால் உயர்ந்து" பணக்காரியாக வந்தவர் என்பது அடுத்த பூச்சுற்றல்.

- பாரசைட் திரைப்படத்தின் நோக்கம் இன்றைக்கும் சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுவது. காலங்காலமாக முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்டு வரும் அடித்தட்டு வர்க்கம் திருப்பித் தாக்க வேண்டும் என்பது தான் பாரசைட் படக் கதை. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஆண்- பெண் எனும் பாலின முரண்பாட்டை முன்வைக்கிறது. படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஆண்களை வெறுக்கும் ஒரு பணக்காரியின் விசித்திரமான நடத்தை தான் காட்டப் படுகிறது. சமூகத்தில் நிலவும் பிரதானமான வர்க்க முரண்பாடு பற்றிப் பேசாமல், "ஆண்-பெண் பாலின முரண்பாடு" என்று திரிப்பது ஒருவகையில் முதலாளித்துவ அடிவருடி அரசியல்.

- பாரசைட் படத்தின் நோக்கம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அடித்தட்டு ஏழை மக்கள் மீது அனுதாபத்தை உண்டாக்குவது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா பணக்கார வர்க்கத்தினர் மீது அனுதாபத்தை உண்டாக்கும் நோக்கில் எடுக்கப் பட்டுள்ளது. இது முற்றிலும் முரண்பாடான வர்க்கக் கண்ணோட்டம். இரண்டு திரைப்படங்களையும் எடுத்த டைரக்டர்கள் எதிரெதிரான வர்க்க நிலைப்பாட்டில் உள்ளவர்கள். பாரசைட் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho "முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவோம்!" (Fuck the capitalism!) என்று ஆஸ்கார் விழா மேடையில் முழங்கியவர். மின்சாரக் கண்ணா திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் வாயில் இருந்து முதலாளித்துவம் என்ற சொல் கூட வராது. அவருக்கு அந்தளவு தைரியம் இல்லை. தற்போதும் அவர் இயக்கும் தமிழ்ப் படங்கள் நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களை கொண்டுள்ளன. இப்படியானவர்கள் ஆஸ்கார் விருது குறித்து கனவு கூட காணமுடியாது.

- பாரசைட் திரைப்படம் மின்சாரக் கண்ணா திரைப்படத்தின் தழுவல் என்பது சுத்த அபத்தமானது. அது ஒரு மலினமான விளம்பர உத்தி. வர்க்க அரசியல் பற்றி தெளிவில்லாத தற்குறிகள் மத்தியில் மட்டுமே இந்த மலினப் பிரச்சாரம் எடுபடும். ஆஸ்கார் விருதுக்கேற்ற தமிழ்ப் படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சமூகப் பிரச்சினைகள் குறித்த அரசியல் அறிவு இருக்க வேண்டும். மின்சாரக் கண்ணா எடுத்தவர்களிடம் அது துளி கூட இருக்கவில்லை. வழக்குப் போடுவதற்கு முன்னர் வர்க்க அரசியல் படியுங்கள்!

Wednesday, March 28, 2018

அரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்


Secret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது Netflix இணைய வீடியோ சேவையில் வெளியாகியுள்ள டிவி நாடகம். ஒரு துப்பறியும் மர்மக் கதையாக விறுவிறுப்பாக செல்லும் இந்தத் தொடர், எகிப்திய சமூகத்தில் ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகளை மிக எளிமையாக விளக்குகிறது. படக் கதை ஐம்பதுகளில் நடக்கிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடை, உடை, பாவனைகள் தத்ரூபமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

 எகிப்தின் தென் பகுதியில், நைல் நதியோரம் அமைந்துள்ள அஸ்வான் நகரில் உள்ள Grand Hotel தான் கதைக் களம். அங்கு பணிப்பெண்ணாக வேலை செய்யும் தங்கை டோஹாவை தேடி ரயிலில் வரும் கதாநாயகன் அண்ணன் அலியுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒழுங்காக கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்த தங்கையிடம் இருந்து மாதக் கணக்காக எந்தப் பதிலும் இல்லாத படியால் தேடி வருகிறான்.

அஸ்வான் நகரை வந்தடைந்த பின்னர், ஹோட்டல் நிர்வாகம் நகை திருடிய குற்றச்சாட்டில் தங்கையை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக அறிகிறான். தனது சகோதரி திருடி இருக்க மாட்டாள் என்று நம்பும் அண்ணன் அலி, ஹோட்டலில் வேலை செய்யும் அமீனின் நட்பைப் பெற்று, உணவு பரிமாறுபவர் வேலையில் சேர்ந்து கொள்கிறான்.

டோஹா எதையும் திருடவில்லை என்பதும், அவள் காணாமல் போனதிற்கு வேறு காரணம் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. அது பற்றி ஆராயும் அலி, ஹோட்டல் மனேஜருக்கும் டோஹாவுக்கும் இடையிலான காதல் உறவை கண்டறிகிறான். கதாநாயகியான நஸ்லி என்ற மைத்துனியை திருமணம் செய்யவிருக்கும், மனேஜர் மூராட், ஏற்கனவே ஹோட்டலில் வேலை செய்யும் இன்னொரு பணிப்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறான்.

படத்தின் தொடக்கத்தில் காணாமல் போன டோஹா அப்போது கொலை செய்யப் படவில்லை. அவள் பின்னர் ஒரு கட்டத்தில் திரும்பி வந்து ஹோட்டேல் உரிமையாளர் பற்றிய இரகசியக் கடிதத்தை பகிரங்கப் படுத்த நினைக்கையில் தான் கொல்லப் படுகிறாள். இதற்கிடையே கதாநாயகன் அலியுடன் நட்பாகப் பழகும் கதாநாயகி நஸ்லியுடன் காதல் உண்டாகிறது. ஆனால், ஆழமான வர்க்க வேறுபாடு இருவரும் ஒன்று சேரத் தடுக்கிறது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது போன்ற கதை பல தமிழ் சினிமாக்களில் வந்துள்ளன. ஆனால், பணக்கார வீட்டுப் பெண்ணை ஏழைக் கதாநாயகன் காதலிப்பதாக வரும் தமிழ்ப் படங்களில், அதை "அதிர்ஷ்டமாக", அல்லது "காதலின் மகத்துவமாக" காட்டி திசைதிருப்புவார்கள். தப்பித் தவறிக் கூட வர்க்கம் என்ற சொல் படத்தில் இடம்பெறாது.

ஆனால், இந்த அரபி மொழி பேசும் படத்தில் வர்க்கப் பிரச்சினை பற்றிய உரையாடல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கதாபாத்திரங்கள், சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் வர்க்க முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார்கள். உதாரணத்திற்கு சீமாட்டி நஸ்லியை காதலிக்கும் ஏழை அண்ணனுக்கு தங்கை அறிவுறுத்துகிறாள். "இந்த மேட்டுக்குடி வர்க்கத்தில் அவள் ஒருத்தி மட்டும் நல்லவளாக இருக்கலாம்... ஆனால் அவள் பிறந்து வளர்ந்த வர்க்கம் எதுவென்பதையும், அதன் குணங்குறிகளையும் மறந்து விடாதே!"

ஆடம்பரமாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினுள், ஹோட்டேல் உரிமை சம்பந்தமாக நடக்கும் சூழ்ச்சிகள், கழுத்தறுப்புகள், காழ்ப்புணர்வுகள் வெளிப்படும் தருணங்களில் அவர்களது நாகரிக முகமூடி கிழிகிறது. மேட்டுக்குடியினர் தமது கௌரவத்தை காப்பாற்ற கொலை செய்வதற்கும் அஞ்சாதவர்கள். போலிஸ் சட்டப் படி கைது செய்தாலும் பணத்தை வீசியெறிந்து வழக்காடி வெல்கிறார்கள். அரசாங்கத்தை வளைத்துப் போடும் செல்வாக்கும் இருக்கிறது.

அதே நேரம், அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களிடையே நிலவும் தூய்மையான அன்பும், பாசமும், காதலும் அவர்களை உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்துகிறது. உதாரணத்திற்கு மனேஜருடனான உறவால் கர்ப்பம் உண்டாகி வஞ்சிக்கப் பட்ட பணிப்பெண்ணை, தனது மனைவியாக ஏற்றுக் கொள்ளும் சக தொழிலாளி அமீன். அதே மாதிரி, மனேஜர் அனுப்பிய கொலையாளியால் கத்தியால் குத்தப் பட்ட பணிப்பெண் டோஹாவை காப்பாற்றி, தனது வீட்டில் மறைத்து வைக்கும் சக தொழிலாளி மஹேர். இத்தகைய கதாபாத்திரங்கள், பணமில்லாத இடத்தில் தான் அன்பிருக்கும் என்பதை நிரூபிக்கின்றன.

வர்க்கப் போராட்டம் என்பது சமூக யதார்த்தம். அது ஒன்றும் "நடைமுறைக்கு உதவாத", "மார்க்சியத் தத்துவம்" அல்ல. வர்க்கப் போராட்டம், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் காண மறுக்கிறோம். உணர மறுக்கிறோம்.

தமிழ் சினிமாக்கள், தமிழ் சீரியல்கள் வேண்டுமென்றே வர்க்க முரண்பாடுகளை மூடி மறைத்து அல்லது திரிபுபடுத்தி தயாரிக்கப் படுகின்றன. அந்த வகையில், வர்க்க முரண்பாட்டு உண்மையை நேரடியாகக் கூறும் இந்த அரபிப் படம் யதார்த்தத்தை தொட்டு நிற்கிறது.

Secret of the Nile என்ற அரபி மொழி டிவி சீரியல் மிக நீளமாக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும் அவிழும் மர்ம முடிச்சுகளால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல், ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் படம். அனைவரும் அவசியம் பாருங்கள். தமிழ் சமூகத்திற்கும், அரபு சமூகத்திற்கும் இடையில் அடிப்படையில் எந்த வித்தியாசம் இல்லை என்பதை கண்டுகொள்வீர்கள். உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதர்களின் குணம் மாறுவதில்லை. வர்க்கக் குணாம்சமும் மாறுவதில்லை.

- கலையரசன்

Sunday, November 29, 2015

IDFA : ஆம்ஸ்டர்டாம் ஆவணப் பட விழாவில் ஆர்வத்தை தூண்டும் படங்கள்


நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் நகரில், நவம்பர் 2015, சர்வதேச ஆவணப் படங்களின் திரைப்பட விழா (IDFA) நடைபெற்றது. அதில் நான் கண்டுகளித்த, மூன்று திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.




The Black Panthers: Vanguard of the Revolution

அமெரிக்காவில் அறுபதுகளில் இயங்கிய கருப்பின மக்களின் விடுதலை இயக்கமான கருஞ் சிறுத்தைகள் (Black Panthers) பற்றிய ஆவணப் படம்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் சம உரிமைகள் கொடுக்கப்படாமல் ஒடுக்கப் பட்ட காலத்தில் தோன்றிய மாவோயிச - கம்யூனிச இயக்கம் அது. அமெரிக்க உழைக்கும் மக்களின் விடுதலையையும், முக்கியமாக கருப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாக அதன் அரசியல் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. அதனால், கருப்பின மக்கள் மட்டுமல்லாது, வெள்ளையின ஏழை மக்களும் அந்த இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக இருந்த போதிலும், அதன் புரட்சிகர அரசியல் கோட்பாடுகள் அமெரிக்க அரசை அச்சுறுத்தின. ஆரம்பத்தில் அதன் உறுப்பினர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை. ஆனால், அரசியல் நிர்ணய சட்டம் வழங்கிய உரிமையை பயன்படுத்தி துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.

அமெரிக்க அரசு, கருஞ் சிறுத்தைகள் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்றும், கிரிமினல் கும்பல் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது. தலைவர் ஹூவி நியூட்டன் கைது செய்யப் பட்டார். அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு, கருப்பின- வெள்ளையின மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தினால் ஊடகங்களின் கவனம் குவிந்தது. அமெரிக்கா முழுவதும் கருஞ் சிறுத்தைகள் பிரபலமடையத் தொடங்கினார்கள். அவர்களும் ஊடகங்களின் கவனத்தைக் கவரும் வகையில் நடந்து கொண்டனர். கருஞ் சிறுத்தை உறுப்பினர் போன்று லெதர் ஜாக்கட் அணிவதும், இராணுவத் தொப்பி அணிவதும், சாதாரண இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

மக்கள் ஆதரவு பெற்ற இயக்கத்தை அழிப்பது மிகவும் கடினமானது. அதனால், கருஞ் சிறுத்தைகள் உறுப்பினர்களை மக்களிடம் இருந்து தனிமைப் படுத்தும் சதி மேற்கொள்ளப் பட்டது. வெள்ளை இனவெறியூட்டப் பட்ட பொலிஸ், வேண்டுமென்றே சில உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது.

பொலிசாரின் சீண்டுதல் காரணமாக, பதிலுக்கு கருஞ் சிறுத்தைகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினால், அந்த இயக்கத்தை அழித்து விடுவது அரசின் நோக்கம். நிலைமை ஆபத்தான கட்டத்தை அடைந்த படியால், பொது மக்கள் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைக்க அஞ்சினார்கள்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கத்தின் சர்வதேச கிளை, அல்ஜீரியாவில் இயங்கியது. அமெரிக்காவுடன் எந்த வித இராஜதந்திர உறவுமற்றிருந்த அல்ஜீரியாவில் சர்வதேச செயலகம் அமைப்பது மிகவும் இலகுவாக இருந்தது. அங்கிருந்த படியே, சீனா, வியட்நாம், வட கொரியா போன்ற மூன்றாமுலக கம்யூனிச நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Stanley Nelson உடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்காவின் சமூக வரலாற்றில், கருஞ் சிறுத்தைகள் ஏற்படுத்திய மாற்றம் முக்கியமானது என்று தெரிவித்தார். "இன்றைக்கு, இந்தத் திரைப் படத்தை பார்வையிடுவதற்காக, ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மழையையும், குளிரையும் பொருட்படுத்தாது இந்த அரங்கத்தில் கூடி இருக்கிறார்கள். கருஞ் சிறுத்தைகள் கொண்டு வந்த புரட்சி இன்னமும் மக்கள் மனதில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை அது நிரூபிக்கின்றது." என்றார்.

Driving with Selvi

தமிழ்நாட்டில் வசிக்கும், முதன்முதலாக டாக்சி ஓட்டி பிரபலமான பெண் சாரதி செல்வி பற்றி, சிலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். அவரது வாழ்க்கைக் கதை "Driving with Selvi" என்ற பெயரில் ஆவணப் படமாக வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடந்த IDFA திரைப்பட விழாவில் அது திரையிடப் பட்ட பொழுது, பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில், செல்வியும் தனது குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த ஆவணப் படத்தை ஒரு NGO தயாரித்திருப்பதால், இடையிடையே NGO பிரச்சார வாடையும் வீசுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மற்றும் படி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக செல்வி படம் முழுவதும் பிரகாசிக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்த கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட செல்வி, சரளமாக தமிழும் பேசக் கூடியவர். அவர் தற்போது ஒரு தமிழ் வாலிபரை மறுமணம் செய்து கொண்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்.

குடும்பத்தினரால் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட செல்வி, தனது கதையை சொல்லத் தொடங்குகின்றார். சிறுவயதில் தந்தையை இழந்த செல்வி, ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், தாயால் கட்டாயப் படுத்தப் பட்டு திருமணம் செய்து வைக்கப் பட்டார். அதற்குப் பிறகு கணவனாக வந்தவன் தாங்க முடியாத அளவுக்கு துன்புறுத்திய படியால், கொடுமைகளை தாங்க முடியாமல் வீட்டை விட்டோடி, (இந்தப் படத்தை தயாரித்த) NGO விடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

கொடுமைக்கார கணவனுடன் வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட தன்னை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முன்வரவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். வழமையான கொடுமைகள் போதாதென்று, வீட்டுக்கு வரும் ஆண்களுடன் படுக்குமாறு சித்திரவதை செய்ததாக சொல்லி அழுகின்றார். திருமணத்திற்கு முன்னர் தன்னைப் புரிந்து கொண்ட அண்ணனும், தன்னை நடத்தை கெட்டவள் என்று சொன்னதைக் கேட்டு, இரத்த உறவுகள் மீதான நம்பிக்கை தகர்ந்து போனதை குறிப்பிடுகின்றார். அதனால் இன்று வரையில் தனது குடும்ப உறவுகளுடன் தொடர்பில்லாமல் வாழ்வதாகவும் கூறுகின்றார்.

கடந்த கால வாழ்க்கையில் கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாக, எல்லா ஆண்களும் இப்படித் தான் என்ற விரக்தியில் இருந்திருக்கிறார். 15 வயதில் தனது வாழ்க்கை முடிந்து விட்டது, அதற்குப் பிறகு துரதிர்ஷ்டம் தொடங்கியது என்றிருந்தவருக்கு புதியதொரு துணை கிடைக்கிறது. விஜி என்ற தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபரின் காதல் கிடைத்த பின்னர், வாழ்க்கையில் தனது அதிர்ஷ்டம் ஆரம்பமானதாக கூறுகின்றார். இருவரும் மனமொத்து காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட பின்னர், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்.

சிறு வயதிலேயே சொல்லொணா துன்பங்களை அனுபவித்து, தற்கொலைக்கு கூட முயற்சித்து உயிர் தப்பி விட்டார். அதற்குப் பிறகு, உலகிற்கு வாழ்ந்து காட்டுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்திருக்கிறார். அவரைப் போன்ற பல அபலைப் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

ஒரு காலத்தில் விரக்தியின் விளிம்பில் நின்ற செல்வி, தொழில் தகைமை கொண்ட சாரதியாக சாதித்துக் காட்டியதுடன், மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வது எப்படி என்பது வியப்பிற்குரிய விடயம். அதனை படத் தயாரிப்பாளரே நேரில் கேட்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் செல்வி: "வாகனம் ஓட்டும் பொழுது ஒரு பாதை கரடுமுரடானதாக இருக்கும். இன்னொரு பாதை மிருதுவாக இருக்கும். வாழ்க்கையும் அது போலத் தான். மனம் தளராமல் புதியதொரு வாழ்க்கையை அமைத்து புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்வது தான் மகிழ்ச்சியின் அடிப்படை." படம் முழுவதும் செல்வியுடன் கூடவே பயணம் செய்த பார்வையாளர்கள், படம் முடிந்த பின்னர் பலத்த கரகோஷம் செய்து ஆதரவைத் தெரிவித்தனர்.

Under the Sun

வட கொரியாவை பார்க்கும் கோணத்தில், அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, வட கொரியா "தலையில் கொம்பு முளைத்த அசுரர்களின் தேசம்". ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு "சர்க்கஸ் கூடாரம்"!

தயாரிப்பாளர் Vitaly Mansky நெறிப்படுத்தலின் கீழ், Under the Sun ஆவணப் படமானது, செக் (அல்லது ரஷ்யா) நாட்டை சேர்ந்த குழுவினரால், சுமார் ஒரு வருட காலம் வட கொரியாவில் தங்கி இருந்து படமாக்கப் பட்டுள்ளது.

பியாங்கியாங் நகரில் வாழும் Zin-mi குடும்பத்தை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் படம் எடுக்கப் பட்டுள்ளது. அந்தக் குடும்பத்து சிறுமி தான் கதாநாயகி. அவள் பாடசாலையில் மாணவர் ஒன்றியத்தில் சேர்வது முதல் பிரமாண்டமான நடனக் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றுவது வரையில் படமாக்கியுள்ளனர். அதே மாதிரி, அவளின் பெற்றோர் வேலை செய்யும் தொழிலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.

இது ஒரு ஆவணப்படமாக இருந்தாலும், கொரிய அரசின் மேற்பார்வையின் கீழ் நடந்தாலும், சில காட்சிகள் டைரக்டர் சொன்ன படி அமைந்துள்ளது போன்று தெரிகின்றது. பல இடங்களில் டைரக்டர் முத்திரை பதித்துள்ளார். எடிட்டிங் கூட கலைநயத்துடன் பேணப் பட்டுள்ளது. அதனால் படத்தின் கதாநாயகியான கொரிய சிறுமி கூட, சில இடங்களில் டைரக்டர் சொற்படி நடித்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

குறிப்பாக சிறுமி முதன் முதலில் நடனம் பழகும் பொழுது அழுவது. பாடசாலையில் முன்னாள் போர்வீரர் உரையாற்றும் நேரம் தூங்கி விழுவது போன்றவற்றை சொல்லாம். பாடசாலைக்கு சமூகமளிக்கும் முன்னாள் போர்வீரர், மணிக்கணக்காக உரையாற்றும் நேரம், அதைக் கேட்கும் பொறுமை பிள்ளைகளுக்கு இருக்காது. அந்த முன்னாள் போர்வீரர், கொரியப் போரில் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய கதையை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமிக்கு தூக்கக் கலக்கத்தில் கண்கள் செருகுகின்றன. பின்னர் சுதாகரித்துக் கொண்டு கண்களை திறக்கிறாள். இப்படி குறைந்தது பத்து நிமிடங்கள் தூக்கத்துடன் போராட்டம் நடக்கிறது. டைரக்டர் அதைப் படமாக்கியுள்ள விதம், அரங்கில் இருந்த பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது.

ஐரோப்பிய மக்களின் பார்வையில் வட கொரியா ஒரு கிளுகிளுப்பூட்டும் மியூசியம் நாடு. அங்கு நடப்பன எல்லாம் நாடகத் தனமானவை. இயல்பான வாழ்க்கை அங்கே கிடையாது. படத் தயாரிப்பாளரும், அவ்வாறான ஒரு தலைப் பட்சமான ஐரோப்பிய கோணத்தில் இருந்தே படமாக்கியுள்ளார். அதனால் தான் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் கண்டதற்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு தொழிலகத்தில் பணி புரியும் தொழிலாளர்கள், உற்பத்தி தொடர்பாக உரையாற்றும் காட்சி ஒன்று வருகின்றது. மிகச் சிறப்பாக வேலை செய்து, அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த பெண்மணிக்கு பாராட்டுத் தெரிவித்து பூச்செண்டு வழங்குகிறார்கள். சக தொழிலாளி எப்படிப் பேச வேண்டும் என்று முகாமையாளர் முன்கூட்டியே பயிற்சி அளிக்கிறார். இந்தக் காட்சிகளுக்கும் அரங்கில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி சிரிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

அது மட்டுமல்ல, இறுதிக் காட்சியில் மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து, கொரியப் போரில் மரணமடைந்த போர்வீரர்களின் நினைவுச் சின்னத்தில் பூச் செண்டுகளை அடுக்கி வைத்து வணங்கி விட்டு செல்கின்றனர். ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு அதுவும் நகைச்சுவைக் காட்சி தான்! எது எதற்கு சிரிப்பது என்ற விவஸ்தையே இல்லையா? சிலநேரம், தமிழர்களின் கார்த்திகை மாத மாவீரர் நினைவுதினத்தை படமெடுத்துக் காட்டினாலும், ஐரோப்பியர்கள் இப்படித் தானே கேலி செய்து சிரிப்பார்கள்?

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Vitaly Mansky கேள்விகளுக்கு பதிலளித்தார். வட கொரியாவில் தங்கியிருந்த காலம் முழுவதும், அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டதாக கூறினார். படமெடுத்து முடிந்த பின்னர், தனியான எடிட்டிங் அறை ஒன்றில் வீடியோ முழுவதையும் போட்டுப் பார்த்தார்களாம். இருப்பினும், தந்திரமாக கமெராவில் இரண்டு டிஸ்க் வைத்து, சில காட்சிகளை மறைத்தது பற்றி பிரஸ்தாபித்தார்.

இது போன்ற "வட கொரியாக் கதைகள்" ஒன்றும் ஐரோப்பாவுக்கு புதியன அல்ல. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வட கொரியா சென்று படமெடுப்பவர்கள் எல்லோரும், ஸ்காட்லான்ட் யார்ட் பயிற்சி பெற்ற துப்பறியும் சாம்பு மாதிரி நினைத்துக் கொள்வார்கள். "நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஒன்பதாம் மாடி இல்லை... டட்ட டாய்ங்... அங்கே என்ன நடக்கிறது.... வாருங்கள் துப்புத் துலக்குவோம்..." "நாங்கள் சென்ற பஸ் வண்டி வழி தவறிச் சென்றது... அங்கே நாம் கண்ட காட்சிகள்...." இப்படித் தான் ஜூனியர் விகடன் பாணியில், வட கொரியா பற்றிய ஆவணப்படம் தயாரித்திருப்பார்கள்.

அதே மாதிரித் தான், இந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் Vitaly Mansky உம், வட கொரிய அதிகாரிகளை ஏமாற்றிய வீரப் பிரதாபங்களை பற்றி நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அனேகமாக, ரஷ்ய அரசின் உதவி பெற்று, வட கொரியா சென்று படமாக்கியுள்ளனர். அதனால் படம் தயாரித்து முடிந்த பின்னர், தங்களது "குளறுபடிகள்" பற்றி, வட கொரிய அரசு ரஷ்ய அரசிடம் முறைப்பாடு செய்ததாம். ஆகவே, படத்தின் முடிவில் நன்றி தெரிவிக்கும் பட்டியலில் ரஷ்யாவின் பெயரை எடுத்து விட்டு, ரஷ்யாவுக்கு வந்த சங்கடத்தை தவிர்த்தார்களாம்.

வட கொரியாவுக்குள் சென்று, அங்கிருந்த அரசு அதிகாரிகள் அறியாமலே உண்மை நிலவரத்தை படமாக்கி வந்ததாக கதையளந்த தயாரிப்பாளர் இறுதியாக ஒன்று சொன்னார். வட கொரியாவில் இன்டர்நெட் இல்லாத காரணத்தால், அவர்கள் தனது பெயரை கூகிளில் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாதாம். ஸ்ஸப்பா.... தாங்க முடியல....

Sunday, March 08, 2015

நிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்


அங்கோலாவின் கடைசி அரசியான நிசிங்காவின் வரலாற்றைக் கூறும் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலும் நாகரிகமடைந்த நாடுகளும், அங்கே மன்னராட்சிகளும் இருந்துள்ளன. ஐரோப்பிய காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பெரும் போர்கள் நடந்துள்ளன. ஐரோப்பியரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆப்பிரிக்க வரலாறு, தற்போது மெல்ல மெல்ல வெளிவருகின்றது.

17 ம் நூற்றாண்டில் அங்கோலாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர்கள், அங்கிருந்த மன்னன் நின்கோலா வின் பெயரே, அந்த நாட்டின் பெயர் என்று தவறாக நினைத்துக் கொண்டார்கள். அதனால், முபுண்டு மொழி பேசும் மக்கள் வாழ்ந்த இராச்சியத்தின் பெயர், அன்றிலிருந்து அங்கோலா என்று அழைக்கப் படலாயிற்று.

1583 ம் ஆண்டு, கிளுவாஞ்சி மன்னருக்கு மகளாக பிறந்த நிசிங்கா, வருங்காலத்தில் இராணியாக வருவாள் என்பதை, ஒரு அப்போதே ஒரு பெண் சோதிடர் அறிவித்திருந்தார். கிளுவாஞ்சி மன்னர், போருக்கு செல்லும் போதெல்லாம், இளவரசி நிசிங்காவை தன்னோடு அழைத்துச் செல்வார்.

அங்கோலா மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஒன்றை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள், அங்கே கோட்டை கட்டி, மன்னருக்கு கீழ்ப்படிவான குடிமக்களையும் பிடித்து வைத்திருந்தனர். அப்போது நடந்த போரின் முடிவில், அங்கோலா மன்னருக்கும், போர்த்துகேய ஆளுநருக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

போர்த்துக்கேயருடனான சமாதான ஒப்பந்தத்தில் இளவரசி நிசிங்கா கையொப்பம் இட்டிருந்தார். சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக, கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறி ஞானஸ்நானம் எடுத்து, Dona Anna de Sousa எனும் போர்த்துகேய பெயரை சூட்டிக் கொண்டார். ஆயினும், போர்த்துகேய காலனியாதிக்கவாதிகள் ஒப்பந்தத்தை மீறியதுடன், மீண்டும் போருக்குள் இழுத்து விட்டனர். பல வருடங்களாக தொடர்ந்த போரில், நிசிங்காவின் சகோதர்கள் கொல்லப் பட்டனர். இறுதியாக, மீண்டும் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப் பட்டது.

இதற்கிடையில், அங்கோலாவின் இன்றைய தலைநகர் லுவாண்டா உட்பட பல கரையோர பிரதேசங்கள், போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் வந்து விட்டிருந்தன. ஏனைய உள்நாட்டுப் பிரதேசங்களில், நிசிங்கா தனது இராசதானியை கட்டியெழுப்ப விரும்பினார். ஆயினும், நீண்ட காலமாக நீடித்த போர் ஏற்படுத்திய அழிவுகள், விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை.

நிசிங்கா தனது 80 வது வயதில், 17 டிசம்பர் 1663, மதங்கா எனுமிடத்தில் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் காலனிய ஆட்சியதிகாரம் விரிவடைந்தது. பல்லாயிரக் கணக்கான அங்கோலா குடிமக்கள், அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அங்கோலா முழுவதும் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அங்கோலா இராணி நிசிங்காவின் வரலாறு முழுவதும் ஏற்கனவே எழுத்தில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. தற்போது அது சினிமாப் படமாக தயாரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேய மொழி பேசும் இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Njinga - Rainha de Angola trailer english

Sunday, October 19, 2014

அனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா "கம்யூனிச சர்வாதிகாரம்"!


ஜெர்மன் மொழிப் படமான "Barbara", முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், எண்பதுகளில் நடக்கும் கதை ஒன்றை சொல்கின்றது. பெர்லின் நகரில் கடமையாற்றிய இளம் பெண் மருத்துவரான பார்பரா, விசாவுக்கு விண்ணப்பித்த காரணத்தால், புலனாய்வுத்துறையின் (Stasi)  சந்தேகத்திற்கு ஆளாகின்றார். அதனால், தொலைதூரத்தில் உள்ள பால்ட்டிக் கடலோரம், ஒரு நாட்டுப்புற மருத்துவமனைக்கு இடம் மாற்றப் படுகின்றார்.

 "சோஷலிச சர்வாதிகாரத்தை" வெறுக்கும் பார்பரா, மேற்கு ஜெர்மனியில் இருந்து வர்த்தக நோக்குடன் வந்து செல்லும் ஒருவனைக் காதலிக்கிறாள். காட்டிலும், ஹோட்டலிலும் இரகசியமாக சந்தித்து, விலை உயர்ந்த மேற்கத்திய பாவனைப் பொருட்களை பரிசாகப் பெற்றுக் கொள்கிறாள். எப்படியாவது அவனுடன் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லத் திட்டமிடுகிறாள். இரகசியமாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக பயணம் செய்யத் தயாராகும் நேரத்தில், ஓர் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.

பார்பரா வேலை செய்யும் மருத்துவமனையில், சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட பெண் கைதி ஒருவரை அனுமதிக்கிறார்கள். பார்பரா அந்தக் கைதியின் நன்மதிப்பை பெற்ற வைத்தியர் ஆகிறார். வருத்தம் குணமானவுடன் மீண்டும் சிறை முகாமுக்கு கொண்டு செல்லப்படும் அந்தப் பெண் கைதி, எதிர்பாராத விதமாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடுகிறாள். பார்பராவின் வீட்டிற்கு வரும் அவளை, இரகசியமாக கொண்டு சென்று தன்னை கூட்டிச் செல்ல வரும் பயண முகவரிடம் ஒப்படைக்கிறாள். பார்பரா இறுதியில் மனம் மாறி, கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுவது தான் கதை.

மருத்துவமனையில் தலைமை மருத்துவரான அன்ட்ரே ரைசர், பார்பராவின் கடமை உணர்ச்சி மீது நன்மதிப்பு வைத்திருக்கிறார். காலப்போக்கில் அவரை விரும்புகிறார். ஆனால், பார்பரா நாகரிகமாக ஒதுங்கிக் கொள்கிறார். இதற்கிடையே, அன்ட்ரே ரைசர் புலனாய்வுத்துறைக்கு தகவல் அனுப்பும் உளவாளி என்ற உண்மை தெரிய வருகின்றது. அதற்காக அன்ட்ரே கூறும் காரணத்தை நம்ப மறுக்கிறாள். 

சோஷலிச அமைப்பிற்கு விசுவாசமான அன்ட்ரே, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மருத்துவரின் கடமை உணர்ச்சி பற்றி, அடிக்கடி பார்பராவுக்கு அறிவுறுத்துகிறார். அவரது கருத்துக்கள் மட்டுமல்லாது, நோயாளிகளுக்கு சேவை செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும், பார்பராவின் மனதை மெல்ல மெல்ல மாற்றுகின்றது. அதனால், இறுதியில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடாமல், அன்ட்ரேயுடன் கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுகிறார்.

பார்பரா, கிழக்கு ஜெர்மன் அரசையும், வாழ்க்கையையும் வெறுப்பதை, படம் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார். ஓரிடத்தில், சோஷலிச அரசாங்கம் தனது இட மாற்றத்திற்கு தெரிவித்த காரணத்தை விரக்தியுடன் கூறுகின்றார்: "உனது மருத்துவப் படிப்புக்கு தொழிலாளர்களும், விவசாயிகளும் செலவு செய்துள்ளனர். நீ அந்தக் கடனை அடைக்க வேண்டும்..." அதைக் கேட்கும், தலைமை மருத்துவர், "அந்தக் காரணம் தவறானது அல்லவே!" என்று பதிலளிக்கிறார்.

இந்தத் திரைப்படம் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு சார்பானது அல்ல. (2012 ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டு வெளியானது.) மேலைத்தேய பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில், "கம்யூனிச சர்வாதிகாரத்தைக்" காட்டும், பல எதிர்மறையான காட்சிகள் உள்ளன. இருப்பினும், ஒரு நகரத்தில் பணியாற்றிய மருத்துவரை, நாட்டுப்புற மருத்துவ மனைக்கு இடம் மாற்றிய காரணம், படத்தில் அப்படியே பதிவு செய்யப் பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது.

குறிப்பாக, இலங்கையில் பல மருத்துவர்கள் மக்களின் வரிப் பணத்தில் படித்து முடித்தவுடன், நகர்ப்புறங்களில் தங்கி வேலை செய்கின்றனர். இந்தியாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எத்தனை மருத்துவர்கள், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்கின்றனர்?

ஒரு சோஷலிச நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு கடமைப் பட்டுள்ளதை உணர்த்துகின்றனர். அவர்களை வசதியான நகரங்களில் தங்க விடாது, வசதி குறைந்த கிராமங்கள், நாட்டுப்புற மருத்துவ மனைகளுக்கு அனுப்புகின்றனர்.

முன்னாள் சோஷலிச நாடுகளின் "சர்வாதிகாரம்" பற்றி, மேட்டுக்குடியினர் அழுது புலம்புவது இதனால் தான். இந்தியா, இலங்கை போன்ற வறிய நாட்டு மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு சேவை செய்யாமல், அமெரிக்கா சென்று டாலர்களுக்காக வேலை செய்கின்றனர். அப்படிப் பட்ட அயோக்கியர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?


திரைப்படத்திற்கான இணைப்புகள்:

Thursday, July 03, 2014

"பாபிலோனின் புதல்வன்" : ஈழத்தின் துயரத்தை நினைவுபடுத்தும் ஈராக் திரைப்படம்


ஹாலிவூட்டில் செட் போட்டு, ஈராக் பற்றி செயற்கையான காட்சிப் படுத்தல்களுடன் தயாரிக்கப் படும் அமெரிக்கத் திரைப் படங்களுக்கு மத்தியில், ஓர் உண்மையான ஈராக் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நெதர்லாந்தில் வாழும் ஈராக்கிய இயக்குனர் Mohamed Al Daradji தயாரித்து, 2009 ம் ஆண்டு வெளியான "பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon) திரைப்படம், பல சர்வதேச பரிசுகளை வென்றுள்ளது. 

"பாபிலோனின் புதல்வன்", ஈராக்கில் நடந்த சம்பவங்களை வைத்து பின்னப் பட்ட கதை என்றாலும், ஈழப் போரில் நடந்த சம்பவங்களுடனும் அது பொருந்துகின்றது.

நாம் வாழும் நாடுகளும், பேசும் மொழிகளும் மட்டுமே வேறு வேறு. உலகம் முழுவதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளும், அனுபவங்களும் ஒன்று தான். 

தமிழகத்தில், ஏராளமான ஹாலிவூட் குப்பைகளை டப் பண்ணி வெளியிடும் நேரத்தில், இது போன்ற நல்ல படங்களை தமிழில் டப் பண்ணி வெளியிட்டால், தமிழ் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும். ஒரு சினிமாவினால் சமூக விழிப்புணர்வை உண்டாக்கிய திருப்தியும் கிடைத்திருக்கும். கோடம்பாக்கம் சினிமாத் துறையினருக்கு இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

Son of Babylon படத்தின் கதை இது தான்:

2003 ம் ஆண்டு, ஈராக்கில் சதாமின் ஆட்சி கவிழ்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கிய சில வாரங்களில் இந்தக் கதை நடக்கிறது. அஹ்மத் என்ற 12 வயது சிறுவன், தனது பாட்டியுடன் காணாமல் போன தந்தையை தேடிப் பயணத்தை தொடங்குகிறான். பயணத்தின் நடுவில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகின்றனர்.

ஈராக்கின் வடக்கே உள்ள குர்திஸ்தானில் இருந்து, தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஸ்ரியாவை நோக்கி, அவர்களதுஆரம்பமாகின்றது.  அஹ்மத்தின் தாய் இறந்து விட்டாள். பாட்டியின் மகன் தான், அவனது தந்தை. மகனைத் தேடும் தாயினதும், தந்தையைத் தேடும் மகனினதும் உணர்வுகளுடன் நாங்களும் ஒன்று கலக்க முடிகின்றது.

1991 ம் ஆண்டு, குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்திய சதாமின் ஈராக் இராணுவம், அஹ்மத்தின் தந்தையை கைது செய்து கொண்டு சென்றுள்ளது. அதற்குப் பிறகு அவர் காணாமல்போயுள்ளார். வட இலங்கையில் நடந்ததைப் போன்று, வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் நடத்திய காலகட்டம் அது. அன்றைய ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் இராணுவம், அரபு மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த படையினரைக் கொண்டிருந்தது. 

ஈராக் இராணுவத்தின் அடக்குமுறை காரணமாக, பெண்களும், குழந்தைகளுமாக பல ஆயிரம் குர்திஷ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதைவிட பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப் பட்டு, தெற்கு ஈராக்கிய சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் காணாமல்போயினர். அதாவது, இரகசியப் புதைகுழிகளுக்குள் கொன்று புதைக்கப் பட்டனர்.

ஈழப் போரிலும், அதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை, நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. வட இலங்கையில் கைது செய்யப் பட்டு கொண்டு செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள், தென்னிலங்கையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டனர். சிறி லங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல்போய், பின்னர் புதைகுழிகளுக்குள் கண்டெடுக்கப் பட்ட இளைஞர்கள் ஏராளம்.

இப்போது மீண்டும் படத்திற்கு வருவோம். அஹ்மத்தின் பாட்டி, நஸ்ரியாவில் உள்ள சிறையில் தனது மகன் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக கேள்விப் பட்டு, பேரனையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறாள். அவர்கள் வடக்கே குர்திஸ்தானில் வாழும், குர்திய சிறுபான்மை இனத்தவர்கள். பாட்டிக்கு குர்து மொழி மட்டுமே தெரியும். பெரும்பான்மை அரபி மொழி பேசும் பிரதேசத்தில் மொழி தெரியாது தவிக்கிறாள். அந்த நேரத்தில், அரபி பேசத் தெரிந்த சிறுவன் அஹ்மட் உதவுகிறான். 

அந்தக் காட்சிகள், வட இலங்கையில் வாழும் தமிழர்கள், தென்னிலங்கைக்கு சிறைப் பிடித்து கொண்டு செல்லப்பட்ட உறவுகளை தேடிச் செல்வதை நினைவு படுத்துகின்றன. அவர்களும் சிங்களம் மட்டும் பேசும் பிரதேசங்களில் மொழி தெரியாமல் தவிப்பதுண்டு. ஈராக்கில் அரேபியருக்கு குர்து மொழி தெரியாத மாதிரி, இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு திரைப்படக் காட்சிகள் முழுவதும், ஈழத் தமிழரின் இன்னல்களையும் நமது மனக் கண் முன்னால் கொண்டு வருகின்றது.

அஹ்மத்தும் பாட்டியும் பாக்தாத் செல்லும் வழியில், அமெரிக்கப் படையினரின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வழி நெடுகிலும் புகை மண்டலமும், இடிந்த கட்டிடங்களும் போர் இன்னும் ஓயவில்லை என்பதைக் காட்டுகின்றது. பாக்தாத் நகரில், ஒரு தனியார் பஸ் வண்டியை பிடித்து, நஸ்ரியா நோக்கிச் செல்கின்றனர். 

நீண்ட பயணத்திற்குப் பின்னர், நஸ்ரியா நகரை வந்தடையும் அஹ்மட்டும், பாட்டியும், அங்கேயிருந்த சிறைச்சாலை வெறுமையாக இருப்பதைக் காண்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் மட்டும் காணாமல்போனவர்களின் பட்டியலுடன் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் அவர்களைப் போன்று, இன்னும் பல பெண்கள் தமது காணாமல்போன உறவுகளைத் தேடி வந்திருப்பதைக் காண்கின்றனர்.

காணாமல்போனவர்களை தேடி வரும் உறவினர்களுக்கு, அதிகாரிகள் தமது பட்டியலில் இல்லாத பெயர்கள், மனிதப் புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டிருக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். சதாம் ஆட்சிக் காலத்தில் கொன்று புதைக்கப் பட்டவர்களின் புதைகுழிகள் தற்போது தோண்டப் பட்டு வருகின்றன. 

அஹ்மத்தும், பாட்டியும், வழியில் கண்ட மற்றவர்களுடன், மனிதப் புதைகுழிகளை தேடிச் செல்கின்றனர். தமது கணவன் மாரை இழந்த பெண்கள், மகன் மாரை  இழந்த பெண்கள், இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு துயரக் கதை ஒளிந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சிலர் தமது உறவுகளின் சடலங்களை கண்டெடுக்கிறார்கள். மற்றவர்கள் அடுத்த புதைகுழியை தேடிச் செல்கிறார்கள்.

இதற்கிடையே பயணத்தின் போது சந்திக்கும் ஓர் அந்நிய வாலிபன், வழியில் அஹ்மட்டுடன் நட்பு கொள்கிறான். அவனது தந்தையை கண்டுபிடிப்பதற்கு, புதைகுழிகள் இருக்குமிடத்தை கூட்டிக் கொண்டு சென்று காட்டுவதற்கு, தானாகவே உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பருக்கு கொஞ்சம் குர்து மொழி பேசத் தெரிந்திருக்கிறது. அவனுக்கு எப்படி குர்து தெரியும் என்று பாட்டி கேட்கிறாள்.

அதற்கு அவன், குர்திஸ்தானில் நடந்த போரில், சதாமின் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை சொல்கிறான். உடனே துணுக்குற்ற பாட்டி, அவன் குர்திஷ் மக்களை கொன்று குவித்த முன்னாள் போர்வீரன் என்பதை அறிந்து கொண்டு வெறுக்கிறாள். அஹ்மத்தையும் அவனோடு பேச வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால், அரசியலை விட அந்த அந்நிய ஆடவனின் தன்னலம் கருதாத உதவி, 12 வயது சிறுவனான அஹ்மத்தை பெரிதும் கவர்ந்து விடுகின்றது.

கடந்த கால இனக் குரோத போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அடக்குமுறைக் கருவியாக செயற்பட்ட ஒருவரும், சந்திக்க நேரும் சந்தர்ப்பம், ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் நடக்கலாம். ஒரு காலத்தில், தன்னால் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனையை, தற்போது சாதாரண மனிதனாக மாறியிருக்கும் முன்னாள் போர்வீரன் உணர்ந்து கொள்கிறான். "உண்மையில் குர்து மக்களை கொல்வதற்கு தான் மேலிடத்தால் நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும், போரில் நடந்த குற்றங்களுக்காக வருந்துவதாகவும்," அந்த முன்னாள் போர்வீரன் நடந்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருகிறான். ஆரம்பத்தில், அவனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள அஹ்மத்தின் பாட்டி மறுக்கிறாள். 

ஆயினும், எதிர்பாராமல் சந்தித்த அரபி நண்பனின் உதவியால் தான், அவர்களால் புதைகுழிகள் இருக்குமிடத்திற்கு செல்ல முடிகின்றது. படத்தின் முடிவில் அவன் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பாட்டி, போர் நடந்த காலத்தில் கட்டாயப் படுத்தப் பட்டதன் காரணமாக தவறிழைத்த முன்னாள் போர்வீரனை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவதாக கூறுகின்றாள். அந்த முன்னாள் அரபுப் படைவீரனின் இடத்தில், ஒரு சிங்கள படையினனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த குர்து மூதாட்டியின் இடத்தில், ஒரு ஈழத் தமிழ் மூதாட்டியை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கே குர்திஸ்தான், இங்கே ஈழம். நாடுகள் தான் வேறு, கதை ஒன்று தான்.

காணாமல்போன உறவு தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட அஹ்மத்தும், பாட்டியும் ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். அத்துடன் படம் முடிகின்றது. ஈராக்கில் கடந்த நாற்பது வருடங்களில் ஒரு மில்லியன் பேரளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. நாடு முழுவதும் சுமார் 250 மனிதப் புதைகுழிகள் உள்ளன. பலரது சடலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இன்னமும் பலர் காணாமல் போனவர்களாக உள்ளனர்.

"பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon)படத்தின் வீடியோ:

Saturday, November 07, 2009

அக்டோபர் 1917 - காலத்தால் அழியாத உலக சினிமா

இணையத்தில், ரஷ்ய திரையுலக மேதை செர்கெய் ஐசன்ஸ்டைனின் மகத்தான திரைக் காவியம். ஒக்டோபர் புரட்சியின் நினைவாக பதிவிடப்படுகின்றது.

Part 1



Part 2


Part 3



Part 4


Part 5


Part 6


Part 7


Part 8


Part 9


Part 10


Part 11


Part