Showing posts with label ரஷ்யா. Show all posts
Showing posts with label ரஷ்யா. Show all posts

Thursday, January 27, 2022

ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவதை தடுத்தது எப்படி?

ARTE டிவியில் ரஷ்யாவின் அதிபராக போரிஸ் எல்ட்சின் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் காலம் பற்றிய ஆவணப்படம் காண்பித்தார்கள். (Crime in the Kremlin I ARTE.tv Documentary) அதில் அவர்கள் சொல்ல வரும் சேதி முக்கியமானது. எல்ட்சின் ஜனாதிபதியாக வந்திரா விட்டால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள்! அதை தடுப்பதற்காக முதலாளித்துவ சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேலை செய்துள்ளன.

சோவியத் யூனியன் வீழ்ந்து சில வருடங்களின் பின்னர் 1996 ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபாதித் தேர்தல் நடைபெறவிருந்தது. ஏற்கனவே ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அரசு அதிகாரத்தை கையில் எடுக்க முனைந்த பொழுது, எல்சினின் உத்தரவின் பேரில் பாராளுமன்றக் கட்டிடம் பீரங்கிக் குண்டுகளால் தகர்க்கப் பட்டது. 1993 ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

அதற்குப் பிறகு, 1996 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஆனால் இம்முறை போரிஸ் எல்சின் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவராக இருக்கவில்லை. முதுமை, கடும் சுகயீனம் காரணமாக தளர்வடைந்து இருந்தார். அப்படியான ஒருவர் நிலையான ஆட்சி நடத்துவார் என்று யாருமே நம்பவில்லை.

இதற்கிடையே ஒரே நாளில் சோஷலிச பொருளாதாரத்தை இல்லாதொழித்து முதலாளித்துவத்தை கொண்டு வந்த படியால் நாடு மிக மோசமான நிலையில் இருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. எங்கு பார்த்தாலும் பொருளாதாரப் பிரச்சினை. வேலையில்லாதவர்களின் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே சென்றது. வேலை செய்தவர்களின் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் கொடுக்கப் படவில்லை.

இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, ஒரு பக்கம் செச்னிய யுத்தம் வேறு நடந்து கொண்டிருந்தது. ஒரு வெல்ல முடியாத, பெருஞ்செலவு பிடித்த, யுத்தத்திற்குள் சிக்கிக் கொண்ட ரஷ்ய இராணுவம் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அது ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்த பொருளாதாரத்தையும் பாதித்தது. அத்தகைய சூழலில் பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை (CPRF) ஆதரித்ததில் வியப்பில்லை. ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுகானோவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. பெரும்பான்மை மக்கள் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை விரும்பினார்கள்.

நடைபெறவிருந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் வென்று விட்டால், ரஷ்ய தேசம் மீண்டும் சோவியத் காலத்திற்கு சென்று விடும் என்று முதலாளித்துவவாதிகள் அஞ்சினார்கள். அவ்வாறு நடந்தால் உள்நாட்டுப் போர் மூளலாம் என்ற அச்சம் எழுந்தது. (அதாவது, கம்யூனிஸ்டுகள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால், அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதலாளித்துவவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்த தயாராக இருந்தனர்.) ஆகவே, முதலாளித்துவத்தை ஆதரித்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள், எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வர விடாமல் தடுக்க விரும்பினார்கள்.

அதுவரை காலமும் ஒருவரோடொருவர் போட்டியும், பொறாமையும் கொண்டிருந்த வங்கியாளர்கள் ஒன்று சேர்ந்தனர். அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை கொடுப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்கவும் கடன் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரசு கடன்பத்திரங்கள் பெறுமதி குறைத்து கொடுக்க வேண்டும். தனியார்மயமாக்கலை விரைவுபடுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு எல்சின் அரசு சம்மதித்தது.

அத்துடன் அமெரிக்காவும் தலையிட்டு எல்சினின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவர்வதற்காக பிரபல பாடகர்கள், இசைக் கலைஞர்களை வருவித்து எல்சினுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தினார்கள். எல்சின் தோல்வியடைந்தால், அனைத்து மக்களினதும் தோல்வியாகும் என்று பிரச்சாரம் செய்தனர். கம்யூனிஸ்ட் கடந்த காலத்திற்கு திரும்பினால், மக்கள் சிறைகளில் வாட வேண்டியிருக்கும் என்றும் பரப்புரை செய்யப் பட்டது.

அப்படி இருந்தும், முதலாளித்துவ எல்சினுக்கும், கம்யூனிச சுகானோவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. தேர்தலில் வென்ற எல்சின் செய்த முதல் வேலை பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தது மட்டும் தான். அதற்குப் பிறகு நிரந்தர மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் சென்று ஒரேயடியாக படுத்து விட்டார். 

1999 ம் ஆண்டு, அரசு அதிகாரம் எல்சினிடம் இருந்து, புட்டினிடம் கைமாறப் பட்டது. அதற்குப் பிறகு நடந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. எல்சினுக்கு பிறகு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்ட புட்டின், ரஷ்யாவை உலகில் பெரிய முதலாளித்துவ வல்லரசுகளில் ஒன்றாக இன்றைக்கும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

Sunday, August 30, 2020

சிரியாவில் அமெரிக்க - ரஷ்ய படையினர் மோதல்!

அமெரிக்க - ரஷ்ய பனிப்போரின் விளைவாக அண்மைக் காலத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் நிஜப் போருக்கு வழி வகுக்குமா? இது தொடர்பாக ஒரு சிறிய ஆய்வு.

 

 

Wednesday, April 04, 2018

கட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன?

இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இது பற்றி ஏற்கனவே ஒரு பக்கச்சார்பான ஹாலிவூட் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

வழமையாக, ஸ்டாலினின் படுகொலைக் கணக்கில் வரவு வைக்கப் படும் கதைகளில் இதுவும் ஒன்று. தமிழர்களிலும் சிலர், குறிப்பாக, நவ- நாஸிகள், தமது மேற்கத்திய எஜமானர்களின் பணிப்புரைக்கு ஏற்றவாறு திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆகவே, கட்டினில் (Katyn: சரியான போலிஷ் மொழி உச்சரிப்பு "கட்டின்", கேய்டின் அல்ல.) நடந்தது என்ன என்பதை, தமிழ் பேசும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. அதற்காக, வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது.

1939 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி அயல்நாடான போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர், செக்கோஸ்லாவாக்கியா ஜெர்மனியின் வசமாகி இருந்தது. அப்போது மேற்கைரோப்பிய வல்லரசு நாடுகளான பிரித்தானியாவும், பிரான்ஸும் செக்கோஸ்லாவாக்கியா மீதான படையெடுப்பை கண்டுகொள்ளவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி எடுவார்ட் டலாடியே ஆகியோர் ஏற்கனவே ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டிருந்த படியால் ஹிட்லரின் ஆக்கிரமிப்புப் பசிக்கு மௌனமான அங்கீகாரம் வழங்கி இருந்தனர்.

ஆனால், போலந்து மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது. போலந்து அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையில் இராணுவ ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது. அதன் அர்த்தம் போலந்து தாக்கப் பட்டால் பிரான்ஸ் உதவிக்கு வர வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாஸி இராணுவம் போலந்து மீது படையெடுத்த நேரம், பிரான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்தது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஆகவே, பிரான்ஸ், பிரித்தானியாவின் துரோகத்தை மூடி மறைக்கும் நோக்கில், இன்று மீண்டும் கட்டின் படுகொலை விவகாரம் பரப்புரை செய்யப் படுவதாக எண்ண இடமுண்டு.

இதிலே இன்னொரு துரோகமும் இடம்பெற்றிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் பகுதியாகவிருந்த டான்சிக் (தற்போது: Gdansk,கிடான்ஸ்க்)போலந்தின் பெயரில் ஐ.நா. சபையால் நிர்வகிக்கப் பட்டது. (அப்போது அதற்கு வேறு பெயர். இலகுவான புரிதலுக்காக "ஐ.நா." என்ற சொற்பதம் பயன்படுத்தி உள்ளேன்.) பால்டிக் கடல் துறைமுக நகரமான டான்சிக்/கிடான்ஸ்க் தனியான பிரதேசமாக சர்வதேச நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஹிட்லரின் படைகள் தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை கைப்பற்றும் வரையில் ஐ.நா. பேசாமல் இருந்தது.

முதலாம் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப் படுவதையும், மேற்கத்திய வல்லரசுகள் பாராமுகமாக இருப்பதையும், சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அத்துடன் பிரித்தானியாவும், பிரான்ஸும் நாஸி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர், எஞ்சியுள்ள ஒரேயொரு எதிரி சோவியத் யூனியன் மட்டும் தான். போலந்து மீது படையெடுத்த ஜெர்மன் படைகள், அடுத்ததாக சோவியத் யூனியனுக்கும் வராதென்பதற்கு என்ன நிச்சயம்?

அன்றைய சூழ்நிலையில், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்வது தவிர்க்க முடியாதது. அத்துடன் ஜெர்மனியின் எதிர்கால படையெடுப்பை தடுப்பதற்காக, போலந்தை ஒரு பாதுகாப்பு அரணாக மாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. உலக வரலாற்றில் இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 19 ம் நூற்றாண்டில், சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவும், பிரித்தானியாவும் ஆப்கானிஸ்தானை எல்லையாக பயன்படுத்திக் கொள்ள இணக்கம் கண்டன.

அந்த வகையில், முந்திய ஜார் மன்னனின் சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த, முதலாம் உலகப்போர் முடிவில் பறிகொடுத்த போலந்துப் பிரதேசத்தின் மீது படையெடுத்த சோவியத் யூனியன் அதை இணைத்துக் கொண்டது. அன்றிருந்த போலந்தின் ஆட்சியாளர்கள் தீவிர தேசியவாதிகள். கத்தோலிக்க மதவாதிகள். அந்நாட்டு தேசிய இராணுவமும் போலிஷ் இனவெறியூட்டப் பட்டிருந்தது. ஆகையினால், சோவியத் படைகள் கைப்பற்றிய போலந்துப் பிரதேசத்தில் இருந்த போலிஷ் இராணுவத்தினர் ஒருவர் விடாமல் கைது செய்யப் பட்டனர். ஆயிரக் கணக்கான போலிஷ் இராணுவ அதிகாரிகள், போர்வீரர்கள் பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப் பட்டனர்.

அந்தப் பிரதேசம் மிகக் குறுகிய காலமே சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு வருடத்திற்குள் நாஸி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது போர்ப் பிரகடனம் செய்தது. திடீரென நடந்த அதிரடித் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோவியத் செம்படை பின்வாங்கிக் கொண்டிருக்க, அந்த இடங்களை ஜெர்மன் நாஸிப் படை கைப்பற்றியது. பிளிட்ஸ் கிரீக் (Blitz krieg) எனப்படும் மின்னலடிப் போரில் ஜெர்மன் படைகள் போலந்தையும் தாண்டி சோவியத் யூனியனுக்குள் பிரவேசித்திருந்தன.

நிலைமை மோசமடைவதை உணர்ந்து கொண்ட சோவியத் செம்படையினர், தாம் ஏற்கனவே பிடித்து அடைத்து வைத்திருந்த போலிஷ் இராணுவ வீரர்களை விடுதலை செய்தனர். அவர்களை தம்முடன் சேர்ந்து போராட வருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக போலிஷ் துணைப் படை ஒன்றும் அமைக்கப் பட்டது.

இதற்கிடையில், லண்டனில் இருந்த "நாடு கடந்த போலிஷ் அரசு" மாறிவரும் போர்ச் சூழல் கருதி சோவியத் யூனியனை நட்பு நாடாகக் கருத வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. அப்படியானதொரு நிலைமையில், சோவியத் செம்படையினர் தம்மிடமிருந்த இருபதாயிரம் போலிஷ் இராணுவவீரர்களை கட்டின் காட்டுக்குள் கொண்டு சென்று ஆறுதலாக சுட்டுக் கொன்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அதுவும் இதற்காக இரண்டு நாட்கள் ரயிலில் கொண்டு சென்று, ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகருக்கு அருகில் இருந்த காட்டுக்குள் சுட்டுக் கொன்று புதைத்தனர் என்கிறார்கள்.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. 13-4-1943 அன்று, நாஸி ஜெர்மனி சர்வதேச ஊடகங்களை அழைத்து பின்வரும் தகவலை தெரிவித்தது. தமது படையினர் கைப்பற்றிய கட்டின் காட்டுப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு புதைக்கப் பட்டவர்கள் போலிஷ் வீரர்கள் என்றும் அறிவித்தனர். அதற்கு ஆதாரமாக போலிஷ் இராணுவ சீருடைகளையும் காட்டினார்கள். அன்று, "ரஷ்யப் படைகளால் நிகழ்த்தப் பட்ட போர்க்குற்றம்" என்று நாஸி ஜெர்மனி வழங்கிய தகவலைத் தான் இன்று வரையில் பலர் காவித் திரிகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில், நாஸிகள் தெரிவித்த "கட்டின் மனிதப் புதைகுழிகள்" என்ற அறிவிப்பு எதிர்பார்த்த பலனைத் தந்தது. அதாவது, சர்வதேச ஊடகங்கள் இதை பரபரப்பு செய்தியாக்கியதன் மூலம், நாஸிகள் எதிர்பார்த்த பிரச்சார வெற்றி கிடைத்தது. அதிலும், தீய வழியில் புகழ்பெற்ற நாஸி ஜெர்மனியின் அமைச்சர் கெபெல்ஸ் (சிலர் அதை கோயபல்ஸ் என்று தமிழில் உச்சரிக்கிறார்கள்.) பொய் சொல்வதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர்.

நாஸிகளின் அழைப்பை ஏற்று கட்டின் மனிதப் புதைகுழிகளுக்கு சென்று ஆராய்ந்த மேற்கத்திய தடயவியல் அறிஞர்கள், அந்தக் குற்றத்தை இழைத்தவர்கள் ரஷ்யர்களா அல்லது ஜெர்மனியர்களா என்பதை தம்மால் உறுதிப் படுத்த முடியாதுள்ளது என்றனர். மேலும், அது சமீபத்தில் தோண்டப்பட்ட புதைகுழிகளாக காணப் பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் அர்த்தம், நாஸிப் படைகளே போலிஷ் இராணுவ வீரர்களை கொன்று புதைத்து விட்டு சோவியத் யூனியன் மீது பழி போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது. அதற்கான காரணங்களும் வெள்ளிடை மலையாக தெரிகின்றன.

ஹிட்லரின் இனவாதக் கோட்பாட்டின் படி, போலிஷ் இனத்தவர்கள் "உன்ட்டர் மென்ஷன்"(Untermenschen- தாழ்ந்த மக்கள்) என இழிவாகக் கருதப் பட்டனர். போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் இனவெறிப் படையினர் கண்ணில் கண்ட போலிஷ் காரர்களை வகை தொகையின்றி கொன்று குவித்தனர். அதற்காக அவர்கள் வருந்தவில்லை. மேலும் போலந்தை ஜெர்மனியர்களின் காலனி ஆக்குவதும் ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. அதை "லேபென்ஸ் ரவும்"(Lebensraum- வாழிடம்) என்று நாஸிகள் நியாயப் படுத்தினார்கள்.

வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த  செவ்விந்திய மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்த இடங்களில், குடியேறிய ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி, போலந்தில் வாழும் போலிஷ் மக்களை படுகொலை செய்து ஒழித்துக் கட்டி விட்டு, அந்தப் பிரதேசங்களை ஜெர்மனியுடன் இணைப்பதே ஹிட்லரின் குறிக்கோளாக இருந்தது. கட்டின் படுகொலைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலி மனிதாபிமானவாதிகள், நாஸிகளால் கொல்லப் பட்ட கோடிக்கணக்கான போலிஷ் மக்களை கண்டுகொள்ளாத மர்மம் என்ன? அதைச் சொல்வதால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாலா?

பனிப்போர் காலம் முழுவதும் கட்டின் படுகொலைகளுக்கு காரணம் நாஸி ஜெர்மன் படைகள் என்றே வெளியுலகில் நம்பப் பட்டது. பலர் அதை யார் செய்தது என்று நிரூபிக்க முடியாது என்ற நிலையெடுத்தனர். தொண்ணூறுகளுக்கு பிறகு தான் கட்டின் படுகொலை விவகாரம் மறுபடியும் சூடு பிடித்தது. போலந்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய போலிஷ் தேசியவாத சக்திகள், ரஷ்யாவை பகை நாடாக காட்டத் தொடங்கின. இந்திய-பாகிஸ்தான் பகைமை மாதிரி, போலந்து - ரஷ்யாவுக்கிடையிலான பகைமைக்கும் நீண்ட வரலாறுண்டு. அந்த வகையில், போலிஷ் மக்கள் மனதில் இன வெறுப்பை உண்டாக்கும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் கட்டின் படுகொலை நினைவுகூரப்படுகின்றது.

Wednesday, November 25, 2015

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) பாதுகாவலன் அமெரிக்கா : சில ஆதாரங்கள்

ரஷ்ய Su24 போர் விமானம், துருக்கி F16 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. துருக்கி, சிரியா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு ரஷ்ய விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினாலும் அவர்கள் பின்னர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய விமானம், சிரியா வான் பரப்பின் மீது பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயினும், அது தனது நாட்டுக்குள் பிரவேசித்ததாக துருக்கி கூறுகின்றது. அதை நிரூபிப்பதற்கு காட்டிய வரை படத்தில், இரண்டு கி.மீ. தூரமுள்ள பிரதேசம் உள்ளது. ரஷ்ய விமானம் அதைக் கடக்க வெறும் 17 செக்கண்டுகள் மட்டுமே எடுத்தது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தக் காரணம் என்ன? அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி, நீண்ட காலமாகவே ISIS உடன் தொடர்புகளை பேணி வந்தது. அதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. சிரியா யுத்ததில் காயமடைந்த ISIS போராளிகளுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை அழிக்கப் பட்டது. கொபானியில் குர்திஷ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்திய ISIS படையணிகள், துருக்கியில் இருந்து சென்றுள்ளன.

ISIS தொடர்புகள் மூலம், துருக்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைத்து வந்தன. சிரியாவின் ஒரேயொரு எண்ணை வளமுள்ள பகுதி, வருடக் கணக்காக ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எண்ணை, பார ஊர்திகள் (Oil tanker) மூலம் துருக்கிக்கு கொண்டு செல்லப் படுகின்றது. சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு, துருக்கி சிரியா எண்ணையை வாங்கி வருகின்றது. (Turkey buying oil from Isis? Syrian army releases photos of captured tanker; http://www.ibtimes.co.in/turkey-buying-oil-isis-syrian-army-releases-photos-captured-tanker-656183 )

சிரியா போரில் ரஷ்யாவும் பங்கெடுக்கத் தொடங்கியதால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும், இதுவரை காலமும் பாலைவனத்தில் குண்டு போட்டு விட்டு, "ISIS அழிப்பு போர் நடத்துவதாக" பம்மாத்து காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், ரஷ்ய விமானங்கள் ISIS நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தின. 

ISIS எண்ணை கடத்தி வந்த வாகனங்கள் மீதும் குண்டு போட்டதால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டது. தனக்கு கிடைத்து வந்த மலிவு விலை எண்ணை தடைப் பட்டதால் கோபமுற்ற துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தி பழி தீர்த்திருக்கலாம். ஆனால், இதனால் ரஷ்யா சிரியா போரில் இருந்து பின்வாங்கி விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ISIS இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அமெரிக்காவே பாதுகாப்பு வழங்குகின்றது. சிரியாவில் ஆசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் மேற்குலகினால் உருவாக்கப் பட்ட ISIS, துருக்கி போன்ற அயல்நாடுகளால் நேரடியாகவும், அமெரிக்காவினால் மறைமுகமாகவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. அமெரிக்காவும், ISIS உம் இணைபிரியாத நண்பர்கள் என்பதற்கு எத்தனை ஆதாரங்களை காட்டினாலும், சில மரமண்டைகளுக்கு உறைப்பதில்லை.

இதோ சமீபத்தில் கிடைத்த ஆதாரம் ஒன்று: 

ISIS, சிரியாவின் எண்ணையை திருடி, அதை பார ஊர்திகள் மூலம் கொண்டு சென்று துருக்கியில் விற்று வருவது தெரிந்த விடயம். கடந்த சில நாட்களாக, ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ISIS கொண்டு சென்ற எண்ணைத் தாங்கி வாகனங்கள் எரிந்து நாசமாகின. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தன் பங்கிற்கு, எண்ணை வாகனங்களை தாக்கி அழித்ததாக ஊடகங்களில் பீற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில் அங்கே நடந்ததோ வேறு கதை.

இந்த தடவை, தாக்குதல் நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை, அமெரிக்க விமானம் ஒன்று ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வீசியுள்ளது. விமானத் தாக்குதல் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் போடப் பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. (Pentagon Confirms: Warning Pamphlets Dropped on Islamic State ‘to Minimize the Risks to Civilians’ http://freebeacon.com/national-security/pentagon-confirms-warning-pamphlets-dropped-on-islamic-state-to-minimize-the-risks-to-civilians/)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ISIS படையணிகளுக்கு அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்குகிறது. ஈராக்கில் இருந்து ISIS படையணிகள், சிரியாவில் உள்ள ராக்கா போர்முனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், பட்டப் பகலில், ஏராளமான டொயாட்டா பிக்கப் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போதிலும், அவை அமெரிக்க செய்மதிகளின் கண்களுக்குத் தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

Friday, May 15, 2015

USSR 2.0 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒரு பேரழிவு! - மக்கள் நீதிமன்றத் தீர்ப்பு


2010 - 2011 ம் ஆண்டு, ரஷ்யத் தொலைக்காட்சியில், கோடிக் கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சோவியத் யூனியன் காலத்தில் "குற்றங்களை" புரிந்த கம்யூனிசத் தலைவர்கள் தண்டிக்கப் படவில்லை என்ற ஆதங்கத்தில், தற்கால முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினர் அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தி இருந்தனர்.

பெரும்பான்மையான ரஷ்ய மக்கள், "கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள்... ஸ்டாலினிச கொடுங்கோன்மையை வெறுக்கிறார்கள்..." என்ற எண்ணத்தில் அந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டிருக்கலாம். சோவியத் கால கம்யூனிஸ்ட் தலைவர்களின் "குற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு" வழக்கறிஞர்கள் குழு ஒன்று தயாராக இருந்தது. பழைய KGB ஆவணங்களை எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார்கள். 

"சூட் விரேமேனி" (Sud Vremeni : நீதிபதியின் நேரம்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தான் நீதிபதிகளாக தீர்ப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். அதாவது, ஜூரிகள் மாதிரி பார்வையாளர்கள் பெரும்பான்மை வாக்குகளைப் போட்டு, ஒரு குறிப்பிட்ட தலைவரை குற்றவாளி என்று தீர்ப்புக் கூற முடியும்.

நீதிபதிகளுக்கு(மக்களுக்கு) தேவைப்படும் அனைத்து ஆதாரங்களையும், பழைய சோவியத் ஆவணங்களில் இருந்து எடுத்துக் காட்டினார்கள். வழக்கறிஞர்கள் தமது திறமையை எல்லாம் திரட்டி, ஸ்டாலின் போன்றவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னர், மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா?

"கூலாக் எனும் பணக்கார விவசாயிகளுக்கு எதிரான ஸ்டாலினின் போர், பேரழிவுகளை உண்டாக்கியது", என்பன போன்ற ஆதாரங்களை எல்லாம் பார்த்த பின்னரும், பெரும்பான்மையான (78%) மக்கள் ஸ்டாலின் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம்:
ஸ்டாலினின் கூட்டுத்துவ பண்ணை (Collective Farming) அமைப்பு, விவசாயிகள் மேல் பலவந்தமாக திணிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அது தான் சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது என்ற உண்மையை மறுக்க முடியாது. அது மோசமானதாக இருந்தாலும், சமுதாயத்திற்கு அத்தியாவசியமானது. அதனால், நியாயமானது. 
அதற்கு மாறாக, வெறும் 22% பார்வையாளர்கள் மட்டுமே அவையெல்லாம் குற்றங்கள் என்று தீர்ப்பளித்தனர்.

2 ம் உலகப்போர் காலத்தில், ஸ்டாலின் - ஹிட்லர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் பற்றி, எதிர்மறையான தகவல்கள் தான் மேற்கத்திய நாடுகளினால் பரப்பப் பட்டு வந்தன. அதாவது, "ஸ்டாலினும், ஹிட்லரும் கூட்டாளிகள் என்பதை ஓர் ஒப்பந்தம் மூலம் நிரூபித்து விட்டார்கள்" என்று, மேற்குலகில் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் பட்டது. அதையே, இன்றைய ரஷ்ய முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் எதிரொலிக்கின்றது. ஆகவே, அதுவும் மக்கள் தீர்ப்புக்கு விடப் பட்டது. 

அது ஒரு போர் தவிர்ப்பு ஒப்பந்தம் என்ற உண்மை தெரியாத அளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். அந்த ஒப்பந்தம், அந்தக் காலகட்டத்தில் அவசியமாக இருந்தது என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள். வெறும் 9% மட்டும், அது 2 ம் உலகப்போருக்கு காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேற்கத்திய சரித்திர நூல்களும், ஊடகங்களும், "ஸ்டாலினிசத்தை அம்பலப் படுத்திய" குருஷேவ்வின் ஆட்சிக் காலத்தை, ஆஹா...ஓஹோ... என்று புகழ்கின்றன. அதே நேரம், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த, பிரெஷ்னேவ் காலகட்டத்தை குறை கூறுகின்றனர். அதாவது, "சீர்திருத்தவாதி" குருஷேவுக்கு மாறாக, பிரெஷ்னேவ் ஒரு கடும்போக்காளர், "ஸ்டாலினிச சர்வாதிகாரி" என்று விமர்சிக்கின்றனர். 

ஆனால், பிரெஷ்னேவ் பற்றி, ரஷ்ய மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா? பிரெஷ்னேவ் காலகட்டம், மக்களுக்கு பல வசதி வாய்ப்புகளை உருவாக்கிய பொற்காலம் என்று, 91% பார்வையாளர்கள் தீர்ப்பளித்தனர்.

இறுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றிய வாக்கெடுப்பு வந்தது. "சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர், ரஷ்ய மக்கள் சுத்ரந்திரக் காற்றை சுவாசித்தார்கள். கம்யூனிச சர்வாதிகாரத்தை நிராகரித்து, மேற்கத்திய ஜனநாயகத்தை தழுவிக் கொண்டார்கள்...." இவ்வாறு தான் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. 

சோவியத் கால "கம்யூனிச சர்வாதிகாரத்தின் கீழ் அவலங்களை அனுபவித்த" ரஷ்ய மக்கள் என்ன சொல்கிறார்கள்? சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது ஒரு மாபெரும் இழப்பு. அது எமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரவலம் என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள்!


வீடியோ: ரஷ்ய மக்கள் நீதிமன்றமான Sud vremeni தொலைக்காட்சி நிகழ்ச்சி. 
இந்த வீடியோவின் தலைப்பு ரஷ்ய மொழியில்: 
Сталинская система и 1941 год (1941 ம் வருடத்திய ஸ்டாலினிச அமைப்பு): 

Thursday, May 07, 2015

என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...


கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், "புத்தகம் புத்தகமாக வாசிக்க எமக்கு நேரமில்லை" என்றும், "எங்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை, சாதாரண மக்களுக்கு எதுவுமே புரியப் போவதில்லை" என்றும், மூலதனம் நூல் பற்றி அறிவுஜீவித் தனமாக நையாண்டி செய்வோர் பலருண்டு.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில், மூலதனத்தின் மூலப்பிரதி ஜெர்மன் மொழியில் வெளியான காலத்திலும், அதிகார வர்க்கத்தினர் அப்படித் தான் கருதி வந்தனர். 1872 ம் ஆண்டு, அதன் முதலாவது மொழிபெயர்ப்பு ரஷ்ய மொழியில் வெளியானது.

மூலதனம் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், சார் மன்னனின் தணிக்கை சபையினர் பார்வைக்கு சென்றது. அவர்கள் அந்த நூலை தடை செய்யாமல் விற்க அனுமதித்தார்கள். அதற்குக் காரணம், "அன்றைய ரஷ்யாவில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் சிறிய எண்ணிக்கையிலான படித்தோர் மட்டுமே மூலதனம் நூலை வாசிக்கப் போகிறார்கள். அப்படியே வாசித்தாலும், அது ஒரு சிலருக்கு மட்டுமே புரியப் போகின்றது."

அப்படி வாசித்துப் புரிந்து கொண்ட "ஒரு சிலர்" மிகப் பெரிய புரட்சியை நடத்துவார்கள் என்று, அன்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது ஒரு பழமொழி.

"தொழிலாளர்கள், கடின உழைப்பின் மூலம், தமது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிலேயே வாய்ப்புகள் உள்ளன. அதனால், புரட்சி அவசியமானது அல்ல!" இவ்வாறு கூறும் பலரை நமது சுற்றாடலில் கண்டிருப்போம். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவிலும் அப்படியானோர் இருந்தனர். சில மார்க்சியவாதிகளும், குறிப்பாக சமூக- ஜனநாயகவாதிகள், அத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். அன்று அவர்கள் "பொருளாதாரவாதிகள்" (Economists) என்று அழைக்கப் பட்டனர்.

அன்று லெனின் கூட ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியில் தான் இருந்தார். அதுவே அன்று சார் மன்னராட்சிக்கு எதிரான, பிரதானமான மார்க்சியக் கட்சியாக இருந்தது. அதன் தலைவர்கள் பலர், பிற ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர்.1903 ம் ஆண்டு, லண்டனில் நடந்த இரண்டாவது கட்சி மகாநாட்டில், ஒரு முக்கியமான பிளவு ஏற்பட்டது.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற அரசமைப்பை விரும்பிய பிரிவினர், மிகத் தெளிவான சமூக- ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மென்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். ஏற்கனவே, பொருளாதாரவாதிகளும் மேற்கத்திய ஜனநாயகப் பாதை சிறந்தது என்று நம்பினார்கள். மேற்கத்திய ஜனநாயக அமைப்பே சிறந்தது. அதற்குள், தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களது கொள்கை.

லெனின் தலைமையில் பிரிந்தவர்கள் போல்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் தொழிலாளர் வர்க்கம் அரசியல் தலைமைத்துவத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியம் என்று நம்பினார்கள். இது தொடர்பாக நடந்த விவாதங்களை, லெனின் "என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"என்ன செய்ய வேண்டும்?" இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ற நூலாகும். "தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள், தேர்தல் ஜனநாயகம் மூலம் சில சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியாதா?" "மேற்கத்திய நாடுகளில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் சிறந்தது அல்லவா?" இது போன்ற சந்தேகங்களை எழுப்புவோருக்கான பதில்கள் அந்த நூலில் உள்ளன. மின் நூலை இணையத்தில் தரவிறக்கிக் கொள்வதற்கு: http://www.padippakam.com/document/M_Books/m000016.pdf

ரஷ்யாவில் 1917 அக்டோபரில் நடந்த போல்ஷெவிக் கட்சியினரின் புரட்சி, ஒரு சதிப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு என்றே மேற்கத்திய பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அதே ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்தது தான், உண்மையான புரட்சி என்றும் கூறுகின்றன. பாடசாலைகளில் சரித்திர பாடம் படிக்கும் மாணவர்கள், பரீட்சையில் கேட்கப் படும் கேள்விகளுக்கு அப்படித் தான் விடை எழுத வேண்டும். மேற்குலக நாடுகள், அக்டோபர் புரட்சியை நிராகரித்து விட்டு, பெப்ரவரி புரட்சியை வரவேற்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

ஜனநாயகம் மாதிரி, புரட்சி என்ற சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு நாட்டில் நடக்கும் மக்கள் எழுச்சி மட்டுமே பலரால் புரட்சி என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அவ்வாறாயின், அண்மைக் காலத்தில் துனீசியாவிலும், எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சிகளும் புரட்சிகள் தான். ஆனால், அதற்குப் பின்னர், அந்த நாடுகளில் ஆட்சியாளர் மாறியதைத் தவிர, பெரியளவு சமூக மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ரஷ்யாவில் 1917 பெப்ரவரியில் நடந்த புரட்சியில், சார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்த்தப் பட்டது. (எகிப்து, துனீசியா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) அப்போதே சோவியத் அமைப்புகள் தோன்றி விட்டன. தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து, கணிசமான அளவு வெற்றிகளையும் பெற்றிருந்தார்கள். 

அது மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் கணிசமான அளவு மார்க்சியர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆயினும், அந்த மார்க்சியர்கள் மேற்கு ஐரோப்பிய சமூக- ஜனநாயகக் கட்சியினர் ஆவர். மென்ஷேவிக்குகள், சோஷலிச புரட்சியாளர்கள் போன்ற கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிவுஜீவிகளாக இருந்தனர். அதனால், அவர்கள் இன்றுள்ள பல முற்போக்கு பூர்ஷுவாக்கள் போன்றே காணப் பட்டனர்.

சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்றம், சார் மன்னனை பெயரளவில் பாதுகாத்து வைத்திருந்தது. சோஷலிசம் தோன்றுவதற்கு முன்னர், முதலாளித்துவ வளர்ச்சி அவசியம் என்று கருதியதால், ஏற்கனவே இருந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அது மட்டுமல்ல, தொழிலாளர்களின் சோவியத் என்ற அமைப்பு தனியாக இயங்கிய போதிலும், அதற்கு எந்த அதிகாரங்களையும் கொடுக்கவில்லை.

அத்தகைய நிலைமையில் தான், அக்டோபர் மாதம் போல்ஷெவிக் கட்சியினர் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அன்றைய தலைநகரான பெட்ரோகிராட்டில் (சென் பீட்டர்ஸ்பேர்க் என்பது ஜெர்மன் மொழிப் பெயர் என்தால், ரஷ்ய தேசியவாதிகளினால் அந்தப் பெயர் மாற்றப் பட்டிருந்தது.), அந்த ஆட்சிமாற்றம் நடைபெற்ற நேரம், பெரும்பான்மை மக்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது என்று சொல்லப் படுகின்றது. சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள குளிர்கால அரண்மனை மீதான தாக்குதலில், பெரியளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த அரண்மனையில் இருந்தது, கெரன்ஸ்கி தலைமையிலான சமூக- ஜனநாயக அரசாங்கம் தான்.

உண்மையில், அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் புரட்சி ஆரம்பமானது. செம்படையின் முன்னோடி அமைப்பான செம் பாதுகாவலர் படையில் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். பாராளுமன்றத்தினுள் நுளைந்த செம் பாதுகாவலர்கள், அறிவுஜீவி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியே விரட்டினார்கள். அதன் மூலம், அன்று வரையில் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்திடம் இருந்த அரசு அதிகாரம், தொழிலாளர்களின் அமைப்பான சோவியத்திற்கு மாற்றப் பட்டது.

அக்டோபர் புரட்சியின் பின்னர் என்ன நடந்தது? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மேட்டுக்குடியினர் ஒன்றுமில்லாதவர் ஆக்கப் பட்டனர். கொள்ளைக்காரரக்ளிடம் கொள்ளையடிப்பது தவறில்லை என்று உணர்ந்த மக்கள், பணக்காரர்களின் வீடுகளை சூறையாடினார்கள். காலங்காலமாக செல்வத்தில் வாழ்ந்து வந்த பிரபுக்கள், நிலவுடைமையாளர்கள், தங்களது மாளிகை போன்ற வீடுகளில் ஏழை, எளிய மக்களை குடியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த மேட்டுக்குடியினர், தம்மிடம் இருந்த சொத்துக்களை விற்று வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உழைக்காமல் சொகுசாக வாழ்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர் கடினமான வேலைகளை செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சில இடங்களில், அவர்களைப் பிடித்து மலசல கூடம் கழுவ வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. செல்வந்தர்கள் தம்மிடம் இருந்த வைரங்களை விற்று குடும்பத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு கஷ்டம் ஏற்பட்டது. பல பணக்காரர்கள், சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு வெளிநாடுகளுக்கு ஓடினார்கள்.

அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தான், கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய ஸ்தாபனம் அரசு நிர்வாகத்தை பொறுப்பேற்றது. வழமையான அரசியல் கட்சிகளுக்கு மாறாக, அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி உறுப்புரிமை வழங்கப் பட்டது. அது வரை காலமும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த, ஆலைத் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், போன்றவர்களுக்கு உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. மேட்டுக்குடியினரால் "தோட்டக் காட்டான்கள்" என்று இழிவு படுத்தப் பட்டவர்கள், பாராளுமன்ற ஆசனங்களில் சென்றமர்ந்து கொண்டார்கள்.

இது போன்றதொரு வர்க்கப் போராட்டத்தை தான் லெனின் கனவு கண்டார். அதைச் செயற்படுத்துவதற்கு பல கோட்பாடுகளை எழுதினார். அதனால் தான், அது இன்றைக்கும் மார்க்சிய- லெனினிச சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றது. லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சியினர், வர்க்கப் போராட்டம் தற்போது தேவையில்லை என்று நினைத்திருந்தால், இன்றைக்கும் ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒரு கட்சியாக அமர்ந்திருப்பார்கள். ரஷ்யாவும் இத்தாலி, ஸ்பெயின் மாதிரி, ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடாக இருந்திருக்கும்.

Saturday, October 04, 2014

3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி

3 அக்டோபர் 1993, இந்தத் தினத்தில் என்ன நடந்தது என்ற தகவலை, உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதில்லை. "சோவியத் யூனியன் "வீழ்ந்து" விட்டது. ரஷ்ய மக்களே கம்யூனிசத்தை வெறுத்து, முதலாளித்துவத்தை தேர்ந்தெடுத்தார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் சதிகாரக் கும்பல், உண்மை பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியுமா?

உண்மையில், சோவியத் யூனியன் "விழவில்லை" அல்லது "உடைந்து நொறுங்கவில்லை." எல்சின் எனும் அமெரிக்க கைக்கூலியின் சதித் திட்டத்தினால் கலைக்கப் பட்டது. அதைப் பற்றி அங்கிருந்த மக்களுக்கு எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், எல்சினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக, மொஸ்கோ நகரில் மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது.

மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென்றும், சோஷலிசம் தேவை என்றும் போராடினார்கள். ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இறுதியில், எல்சினின் கூலிப் படைகள், ஆயிரக் கணக்கானோரை படுகொலை செய்து, மக்கள் எழுச்சியை நசுக்கின. ரஷ்யாவில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக, ஜனநாயகக் காவலர்களான மேற்கத்திய நாடுகள் முணுமுணுக்கக் கூட இல்லை.

  "சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், கம்யூனிசம் செத்து விட்டது. முன்னாள் கம்யூனிச நாடுகளில் வாழ்ந்த மக்கள், முதலாளித்துவத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக உளறிக் கொண்டிருக்கும் பலர் இன்றைக்கும் உள்ளனர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மேற்குலக ஊடகங்கள் செய்யும் பிரச்சாரங்களை, உண்மை என்று நம்பும் தற்குறிகள் அப்படித் தான் பிதற்றிக் கொண்டிருப்பார்கள்.


26 டிசம்பர் 1991 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் கலைக்கப் பட்டது. அதற்கு முன்னர், கிரெம்ளினில் கோர்பசேவுக்கு எதிரான கடும்போக்காளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி எடுத்திருந்தனர். அந்த சதி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், மேற்கத்திய ஆதரவு லிபரல் தலைவர்களின் சதிப்புரட்சி மிகவும் கவனமாக முன்னெடுக்கப் பட்டது.

"ரஷ்யாவும், உக்ரைனும் சேர்ந்திருந்தால் அது ஐரோப்பிய - ஆசிய கண்டங்களில் மிகவும் பலமான வல்லரசாக இருக்கும்..." என்று, அமெரிக்க வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் பிரெசென்ஸ்கி ஒரு தடவை தெரிவித்திருந்தார். அதனால், முதலில் உக்ரைனை பிரிக்கும் சதித்திட்டம் திரைமறைவில் அரங்கேறியது. உக்ரைனில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டது. 1 டிசம்பர் 1991, உக்ரைன் தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

உக்ரைன் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளை துரிதப் படுத்தியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், வெள்ளை ரஷ்யாவின் Brest நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பங்களா ஒன்றில், மூன்று சோவியத் குடியரசுத் தலைவர்களின் இரகசிய சந்திப்பு இடம்பெற்றது. ரஷ்ய பிரதமர் எல்சின், உக்ரைனிய பிரதமர் கிராவ்ஷுக், வெள்ளை ரஷ்யா பிரதமர் ஸ்டானிஸ்லாவ் சுஸ்கேவிச் ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் அந்த முடிவு எடுக்கப் பட்டது. கவனிக்கவும்: சோவியத் யூனியனை "வீழ்த்த" வேண்டுமென்று, சோவியத் மக்கள் நினைக்கவில்லை. மூன்று தலைவர்களின் இரகசியமான சதித் திட்டம் அது.


எல்சின் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிய உடனேயே, தனது அமெரிக்க எஜமான் ஜோர்ஜ் புஷ்ஷிடம், அந்த முடிவை அறிவித்தார். மேற்கத்திய ஊடகங்களில் தகவல் வெளியான பின்னர் தான், சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட விடயம், அங்கு வாழ்ந்த மக்களுக்கு தெரிய வந்தது.


ரஷ்யாவின் அதிகாரத்தை எல்சின் கைப்பற்றியிருந்த போதிலும், ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தனர். அவர்கள் ஜனநாயக வழியில், எல்சினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். கிளர்ச்சியில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வெளியில் மக்கள் ஆதரவும் இருந்தது. மக்கள் எழுச்சி ஒன்றின் மூலம், மீண்டும் சோவியத் யூனியனை கட்டமைப்பதும், சோஷலிசத்தை மீட்பதும் அவர்களின் தொலை தூர இலக்காக இருந்தது.


 3 அக்டோபர் 1993, மொஸ்கோ நகரில் ஒரு மக்கள் எழுச்சி ஏற்பட்டது. பலர் செங்கொடிகள், சோவியத் கொடிகள் ஏந்திய வண்ணம், வீதிகளில் இறங்கினார்கள். மொஸ்கோவாசிகள் நகர மத்தியில் தடையரண்கள்  போட்டு, பாதுகாப்பு வலையங்களை  உருவாக்கினார்கள். அவர்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள், ரஷ்யப் பாராளுமன்றத்தினுள்  உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்றத்தை சுற்றிவளைத்த எல்சினின் கூலிப்படைகள், மின்சாரத்தையும், தண்ணீரையும் துண்டித்தன. முற்றுகைக்குள், பல இன்னல்களுக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், எல்சினின் உத்தரவின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தின் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அன்றைய தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் மூடி மறைக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான உயிரிழப்புகள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டதாக, ரஷ்ய மக்கள் பேசிக் கொண்டனர். உலகம் முழுவதும் ஜனநாயக பஜனை பாடும் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், ரஷ்ய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை.

நடுநிலை தவறாத மேற்கத்திய ஊடகங்களும், அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதை ஒரு ஜனநாயகப் படுகொலையாக சித்தரித்து, உலக மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பவில்லை. அதே  நேரம், அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகில் யாராவது பட்டாசு கொளுத்திப் போட்டிருந்தால், இதே ஊடகங்கள் பயங்கரவாதம் என்று அலறித் துடித்திருக்கும். உலக நாடுகள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருக்கும்.

3 அக்டோபர் 1993 மக்கள் எழுச்சியை நினைவு கூரும் படங்களையும், வீடியோவையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:


1993 October uprising in Moscow. 






Tuesday, August 12, 2014

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் பொருளாதாரத் தடை


இவ்வளவு காலமும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகள் விதித்து வந்தன. இன்று, ரஷ்யா ஐரோப்பாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை ஒன்றை அறிவித்துள்ளது. இன்று முதல், ஐரோப்பிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. இந்தத் தடை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இதனால், பல ஐரோப்பிய நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன.

அதை விட, ஏற்கனவே, உக்ரைனுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், 5 மில்லியன் மக்கள் வாழும் கீவ் நகரில், சுடு தண்ணீர் கிடைப்பதில்லை. வசதியான கீவ் நகரவாசிகள், மின்சார கொதிகலன் வாங்கி தண்ணீர் கொதிக்க வைத்து குளிக்கிறார்கள். எல்லோரும் அதைப் பாவிக்கத் தொடங்கினால், குளிர்காலத்தில் மின்சாரத் தடை எற்படும். இந்த வருடம் வரப் போகும் குளிர்காலத்தில், எரிவாயு, மின்சாரம் இன்றி வாழ வேண்டிய நிலைமை வரலாம்.

"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது!" பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப் படப் போகும் ரஷ்ய மக்களுக்காக, மேற்கு ஐரோப்பியர்கள் கவலைப் படுகிறார்கள். அதற்கு காரணம் இது தான். மேற்கத்திய நாடுகளின் விவசாயப் விளைபொருட்கள், உணவுப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் பிரச்சினை காரணமாக, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வந்ததற்கு, பதிலடியாக இது நடந்துள்ளது.

இதனால், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப் படவுள்ளன. நெதர்லாந்தில் இருந்து பாலாடைக் கட்டி (சீஸ்), கறிமிளகாய், தக்காளி போன்ற உணவுப் பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகின்றன. சுமார் ஒன்றரை பில்லியன் பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப் படவுள்ளது. அவை பழுதடையக் கூடிய பொருட்கள் என்பதால் களஞ்சியப் படுத்தி வைக்கவும் முடியாது.

"தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்" என்று வாதாடி வரும், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" இந்தப் பிரச்சினையிலும் ரஷ்யா தான் அதிகளவு பாதிக்கப் படப் போகின்றது என்று ஆரூடம் கூறி வருகின்றனர். ரஷ்யா ஏற்கனவே ஈரானுடனும், லத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், மேற்கு ஐரோப்பியர்கள் தான் தமது பொருட்களை விற்பதற்கு புதிய சந்தைகளை தேட வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு, உலகில் எத்தனை நாடுகள் தயாராக இருக்கின்றன என்பதும் கேள்விக் குறி தான்.

ரஷ்யர்களும், எமது மக்களைப் போன்றவர்கள் தான். வெளிநாட்டுப் பொருட்கள், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். எமது நாட்டில் நடப்பதைப் போன்று, ரஷ்யாவிலும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே, மேற்கத்திய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் பாவிக்கிறார்கள். ஏழைகளும், கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், மலிவாகக் கிடைக்கும் உள்நாட்டுப் பொருட்களுடன் திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். ஆகவே, மேற்கத்திய உணவுப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப் பட்டால், சிறுபான்மையினரான மேட்டுக்குடி மக்கள் மட்டும் தான் பாதிக்கப் படுவார்கள்.

அதே நேரம், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும். ரஷ்யாவுக்கான ஏற்றுமதி தடைப் பட்டால், உள்நாட்டில் அந்தப் பொருட்களின் விலை சரியும். இதனால், மேற்கத்திய நாடுகளில் வாழும் பண வசதியற்ற, ஏழை மக்கள், குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்கக் கூடியதாக இருக்கும். தீமையிலும் ஒரு நன்மை என்று இதனைக் குறிப்பிடலாம்.

மேற்கத்திய நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை குறையும் "அபாயத்தை" தடுப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்கிறார்கள். அதாவது, "ஏற்றுமதியாகாமல் தேங்கிக் கிடக்கும் உணவுப் பொருட்களை கடலில் கொட்டினாலும் கொட்டுவார்களே தவிர," உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வர மாட்டார்களாம். ஏனென்றால், ஒரு பொருள் சந்தையில் தாராளமாக கிடைத்தால், அதன் விலை குறைந்து விடும் என்பது அடிப்படை முதலாளித்துவ நியதி. "மலிந்தால் சந்தைக்கு வரும்" என்பது ஒரு தமிழ்ப் பழமொழி.

பாலாடைக் கட்டி (சீஸ்) ஏற்றுமதியில் நெதர்லாந்து முன்னணி வகிக்கின்றது. அது உலகம் முழுவதும் ஏற்றுமதியாகின்றது. சீஸ் உற்பத்தி செய்யும் நாடென்பதால், நெதர்லாந்தில் அதன் விலை மலிவாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். (அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பலர் அவ்வாறு நினைத்து ஏமாந்து போகிறார்கள்.) உண்மையில், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் சீஸ், சந்தையில் தாராளமாகக் கிடைத்தாலும் அதன் விலை மிக அதிகம். ஆனால், அதே டச்சு சீஸ் கட்டியை, உதாரணத்திற்கு, அயல் நாடான ஜெர்மனியில் உள்ள ஒரு கடையில் மலிவாக வாங்கலாம்.

அதே மாதிரித் தான், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் கறிமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளின் விலைகளும் மிகவும் அதிகம். இலங்கையில், இந்தியாவில் தக்காளியை, "ஏழைகளின் ஆப்பிள்" என்று சொல்வார்கள். ஆனால், நெதர்லாந்தில் அந்த நிலைமை மாறி உள்ளது. இங்கே ஆப்பிளின் விலை குறைவு, தக்காளியின் விலை அதிகம். ஏன் இந்த நிலைமை என்று கேட்டால், அந்நிய நாடுகளுக்கான ஏற்றுமதி தான் முக்கிய காரணம்.

இங்கே நான் நெதர்லாந்தை ஓர் உதாரணமாகத் தான் குறிப்பிட்டுள்ளேன். மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களும், இதே கதைகளை தான் கூறுகின்றனர். அதாவது, எந்தப் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றதோ, அதன் விலை உள்நாட்டில் அதிகமாக உள்ளது. உள்நாட்டு நுகர்வை கட்டுப்படுத்தி, அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக, வர்த்தகர்கள் செயற்கையாக விலையை தீர்மானிக்கிறார்கள்.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதித்த நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ரஷ்யா ஊடாக பறப்பதற்கு தடை கொண்டு வரப் படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. அமெரிக்க, ஐரோப்பிய விமான சேவைகள், இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப் படும். ஏனென்றால், ஜப்பான, சீனாவுக்கு செல்லும் மேற்கத்திய விமானங்கள் யாவும் ரஷ்யாவின் சைபீரியா வான் பரப்பில் பயணம் செய்கின்றன. இதனால், பயண நேரம் குறைகின்றது.

சைபீரியா வான் பரப்பில் பறப்பதற்கு, ரஷ்யா தடை விதித்தால், மாற்று வழிகளை தேட வேண்டும். ரஷ்யாவுக்கு மேலே வட துருவத்திற்கு அண்மையாக பறப்பது ஒரு வழி. மேற்கு ஐரோப்பாவில் இருந்து, அலாஸ்காவில் சிறிது நேரம் தரித்து நின்று விட்டு, மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டும். மற்றது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலாக பறப்பது. இந்த இரண்டு வழிகளில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பயண நேரம் அதிகமாகும். மேலதிக எரிபொருள் செலவாகும். அதனால் பயணச் செலவும் அதிகரிக்கும்.

மேற்கத்திய விமான சேவைகள், அதிகரிக்கப் போகும் செலவை, விமானப் பயணிகளின் தலைகளில் கட்டி விட முடியாத அளவிற்கு, இன்னொரு பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரத் தடையானது, மேற்கத்திய நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆசிய நாடுகளில் இருந்து, மேற்கு ஐரோப்பாவுக்கு பறக்கும் ஆசிய விமான நிறுவனங்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குறைந்த செலவில் பயணம் செய்யலாம் என்று கூறி, மேற்கத்திய பயணிகளை தம் பக்கம் இழுக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட விமானத் தடை விவகாரம், ஏற்கனவே சோவியத் யூனியன் காலத்தில் வழமையாக இருந்து வந்தது. ஆயினும் அந்தக் காலகட்டம் வேறு. அன்று குறைந்தளவு வசதி படைத்த பயணிகள் மட்டுமே தூரப் பிரயாணம் செய்வதுண்டு. இன்று விமான டிக்கட் விலைகள் குறைந்து விட்டதால், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், எமிரேட்ஸ், எதிஹாட் போன்ற மத்திய கிழக்கை சேர்ந்த விமானங்கள், ஏற்கனவே குறைந்த விலையில் டிக்கட் விற்று பயணிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு, மேற்கத்திய விமானக் கம்பனிகள் தமது நாடுகளின் அரசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. நிலைமை அந்தளவு மோசமடையாது என்று, மேற்குலகில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யார் கண்டது? எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? 

Monday, May 12, 2014

கிழக்கு உக்ரைனில் உயிர்த்தெழும் சோவியத் பூதம்!

  • டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், "கிழக்கு உக்ரைன் ரஷ்யர்களும், இலங்கைத் (ஈழத்) தமிழர்களும் அவர்களுக்கு ஒன்று தான்" என்பதை பல தடவைகள் வலியுறுத்திக் கூறி வந்துள்ளேன். ஒடெஸ்ஸாவில் ரஷ்ய இனத்தவர் இனப்படுகொலை செய்யப் பட்டதாக, ரஷ்ய சிறுபான்மை இனத்தவரின் அனுதாபத்தை திரட்டிய ரஷ்ய பிரிவினைவாதிகள், அதனை பொது வாக்கெடுப்பு ஒன்றில் அறுவடை செய்துள்ளதாக, ஜெர்மனியின் வலதுசாரி- பழமைவாத பத்திரிகை ஒன்று (Die Welt) அழுது வடித்துள்ளது. "ரஷ்ய பிரிவினைவாதிகள்" வரும் இடத்தில் தமிழ் தேசியவாதிகளையும், ரஷ்யர்கள் என்று வரும் இடத்தில் ஈழத் தமிழர்கள் என்றும் போட்டு வாசித்துப் பாருங்கள். எல்லாம் கச்சிதமாகப் பொருந்துகின்றது.

கிழக்கு உக்ரைனில் நடந்து முடிந்துள்ள டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசுக்கான பொது வாக்கெடுப்பு, முழு ஐரோப்பிய கண்டத்திற்கும் அச்சுறுத்தல் என்று, கட்டுரை ஒன்றை (Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa) பிரசுரித்துள்ளது. அந்த சம்பவங்களை "சோவியத் யூனியனின் மீள் வருகையாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் எழுச்சியாகவும்," அந்த நாளேடு கருதுகின்றது. தற்போது ஜாடியை விட்டு வெளியே வந்துள்ள இந்தப் பூதம், விரைவில் முழு ஐரோப்பாவையும் பிடித்தாட்டும் என்று அது எச்சரித்துள்ளது.

அந்தக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்:

கிழக்கு உக்ரைனில் நடந்துள்ள சம்பவங்களை, வரலாற்றின் பரிசோதனைக் கூடமாக கருத வேண்டும். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் நடந்ததைப் போன்ற, அல்லது முப்பதுகளில் ஜெர்மனியில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகள் இவை. ஒரு சிறிய தீவிரமான வன்மைவாதிகளின் குழு அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமிக்கும். பத்து நாட்களுக்கு முன்னர், ஒடெஸ்ஸா நகர தீயில் 38 பேர் பலியானது போன்ற துயரச் சம்பவங்கள், நிலைமையை தீவிரமைடைய உதவுகின்றது. ஊடகங்கள் இது போன்ற காட்சிகளை மனதில் பதிய வைக்கும்.

"ரஷ்ய மக்களின் இனப்படுகொலை" நடந்த ஒடெஸ்ஸாவில், எப்படி தீப்பிடித்தது என்பது சரியாகத் தெரியவில்லை. பலியானவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக, தீவிர பிரிவினைவாதிகள், டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளின் சுதந்திரத்திற்காக நடந்த பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர்.

கிழக்கு உக்ரைனில் நடக்கும் சம்பவங்களினால், ஐரோப்பா முழுவதும் வாழும் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். ஜெர்மன் சமஷ்டி அரசாங்கமும், உக்ரைன் விடயத்தில் குற்றம் இழைத்துள்ளதாக கீசி (ஜெர்மன் இடதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்) கூறுகின்றார். உண்மை தான், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பல தவறுகளை இழைத்துள்ளன. ஆனால், ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரைன் நாடக மேடையில் அரங்கேறும் வெறுக்கத்தக்க நாடகத்தை புறக்கணிப்பது வெகுளித்தனமானது.

ஐரோப்பாவை இரண்டாக பிளக்கக் கூடிய இயக்கம் ஒன்றை, ரஷ்ய அரசு வளர்த்துக் கொண்டிருக்கிறது. "இரண்டாம் உலகப் போரை வெற்றி கொண்டோம், ஆனால் பனிப் போரில் தோற்றோம்" என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து எழும் இயக்கமானது, எதிர்ப்பவர்களை எல்லாம் பாசிஸ்டுகளாக கருதிக் கொண்டே, பெருந் தேசியவாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. "நோவோ ருசியா" (புதிய ரஷ்யா) பொது வாக்கெடுப்பின் பின்னர் ஐரோப்பா விழித்தெழுகின்றது. அங்கே ஜனநாயக அல்லது லிபரல் மனப்பான்மை கொண்டவர்களுக்கு இடமில்லை.

கிழக்கு ஐரோப்பாவின் மற்றைய பகுதிகளிலும் ஆபத்து காத்திருக்கின்றது. புட்டின் எழுப்பியுள்ள ஆவிகளை மீண்டும் சீசாவுக்குள் அடைப்பது கடினமானது. உக்ரைனில் இதே பாணியிலான பிரிவினைவாத இயக்கம், தொழிற்துறை மையமான டினியேபுரோபெட்ரோவ்ஸ்க் (Dnepropetrovsk) பிராந்தியத்தையும் கையகப் படுத்தும். அதன் அர்த்தம் கலகங்கள், சமர்கள், மரணங்கள். கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக பால்கன் நாடுகளிலும், இந்த உதாரணம் பின்பற்றப் படும்.

ரஷ்ய பிரிவினைவாதிகள் தமது டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

(Die Welt, 12-05-2014) 

Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa
*******

அன்பான தமிழ் பேசும் வலதுசாரிகளே!

ரஷ்யா பற்றிய மேலைத்தேய பிரச்சாரம் எதையும் நம்பாதீர்கள். மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள், இரட்டை வேடம் போடுகின்றன. ரஷ்யாவை வில்லனாக காட்டி, உங்களை ஏமாற்றிக் கொண்டே, ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி வருகின்றன. எல்லாவற்றிற்கும் காரணம், பொருளாதாரம். உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, அவர்களது பிரச்சாரத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவுகின்றது. "புதிய பனிப்போர்" என்பது கூட ஒரு கற்பனை தான்.

உக்ரைன் பிரச்சினை தீவிரமடைந்த பின்னர் தான், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஷிரேடர், புத்தினை நேரில் சந்தித்துப் பேசினார். ஷெல் தொழிலதிபர், தூர கிழக்கு ரஷ்யப் பகுதிகளில் எரிவாயு எடுக்கும் ஒப்பந்தம் போட்டார். இப்படிப் பல உதாரணங்களை குறிப்பிடலாம். உண்மையில், மேற்கு ஐரோப்பா முழுவதும், எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அவை என்றைக்கும் ரஷ்யாவை பகைத்துக் கொள்ளப் போவதில்லை.

ஜெர்மனி நுகரும் எரிவாயுவில் 30% ரஷ்யாவில் இருந்து வருகின்றது. அதனை விநியோகிக்கும் ஏகபோக உரிமை பெற்ற ரஷ்ய Gazprom, ஜெர்மனியில் பெட்ரோல் நிலையங்கள் உட்பட பல தொழிற்துறைகளில் கணிசமான அளவு முதலீட்டை செய்துள்ளது. நெதர்லாந்து நிறுவனமான Gasunie, ரஷ்ய Gazprom உடன் இணைந்து, "Northern stream" குழாய் பாதை அமைத்து வருகின்றனர். ரஷ்யாவில் இருந்து நேரடியாக கடல் வழி வரும் குழாய்கள், ஜெர்மனிக்கான மேலதிக எரிவாயுவை வழங்க உள்ளன.

"புதிய பனிப்போர்" அல்லது உக்ரைன் பிரச்சினைக்கு பின்னர், அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு வாங்கும் திட்டத்தை சிலர் பரிந்துரைத்தனர். அது நடைமுறைச் சாத்தியமில்லாத, அதிக செலவு பிடிக்கும் திட்டம் ஆகும். அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதென்றால், அது LNG எனப்படும் திரவமாக்கப் பட்ட எரிவாயுவாக, கப்பல்களில் ஏற்றித் தான் கொண்டு வரலாம்.

LNG ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களை அமெரிக்காவிலும், இறக்குமதி செய்யும் துறைமுகங்களை ஐரோப்பாவிலும் புதிதாக கட்ட வேண்டும். அதெல்லாம் நடந்து முடிய குறைந்தது 2 வருடங்கள் ஆகும். LNG ஆக மாற்றும் செலவு, துறைமுகம் அமைக்கும் செலவு, போக்குவரத்து செலவு இவற்றை எல்லாம் கூட்டிப் பார்த்தால், அமெரிக்க எரிவாயுவின் விலை பல மடங்கு உயர்ந்து விடும். செலவைக் குறைப்பதற்கு பதிலாக, கூட்டிக் கொள்வது மடத்தனமானது.

மேற்கு ஐரோப்பாவில், உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் அரசியல்வாதிகள், திரைமறைவில் ரஷ்யாவுடன் தொடர்ந்தும் நட்புப் பேண விரும்புகின்றனர். ஆச்சரியப் படத் தக்கவாறு, ரஷ்யா கிரீமியாவை இணைத்த நியாயத்தை புரிந்து கொள்ளுமளவிற்கு மனப் பக்குவம் பெற்றிருக்கின்றனர்.

"கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஷ்யா நேட்டோ விஸ்தரிப்பு குறித்து அஞ்சுவது தெளிவாகும். கிரீமியாவில் நேட்டோ இராணுவத் தளம் அமைத்து விடும் என்ற அச்சத்தில், ரஷ்யா அதனை தன்னோடு சேர்த்துக் கொண்டது." இவ்வாறு நெதர்லாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Ben Bot தெரிவித்தார்.

********

உக்ரைன் பிரச்சினை தொடர்பாக வந்த ஒரு தமிழ் பேசும் வலதுசாரியின் எதிர்வினை :

 //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! ரஷ்யாவும் ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும், கிழக்கு உக்ரேனில் இப்போது ஓங்கியிருப்பது, ரஷ்ய தேசியவாதமே என்பதையும் உணர வேண்டும்.//

அந்தக் கூற்றை, நாங்கள் ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! தமிழ்நாடும் (அல்லது இந்தியாவும்) ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும் வட-கிழக்கு இலங்கையில் இப்போது ஓங்கியிருப்பது, தமிழ் தேசியவாதமே என்பதையும் உணரவேண்டும்.//

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, தமிழ் தேசியவாதிகளின் போராட்டத்தை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால், அதே தமிழ் தேசியவாதிகள் உக்ரைன் விடயத்தில் மட்டும் தடம்புரள்வதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் உள்ள தேசியவாதிகள் மத்தியில், அந்தளவுக்கு பகை முரண்பாடுகள் நிலவுகின்றன. தேசியவாதிகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது. ஒரு தேசியவாதிக்கு இன்னொரு தேசியவாதியை பிடிப்பதில்லை.

நாசிஸத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்காத, உக்ரைனிய பேரினவாதத்திற்கு எதிரான, ரஷ்ய தேசியவாதிகளின் போராட்டத்தை, ஏன் இவர்கள் ஆதரிப்பதில்லை? உக்ரைனில் ரஷ்ய சிறுபான்மையினரின் மொழிப் பிரச்சினையை இவர்கள் ஏன் அங்கீகரிப்பதில்லை? இவர்களை தமிழ் தேசியவாதிகள் என்று அழைப்பதை விட, "அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவான வலதுசாரிகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.

ரஷ்யாவும், உக்ரைனும் முதலாளித்துவ நாடுகள் என்பதையும், இரண்டிலும் தேசியவாதிகள் பலமாக இருப்பதையும், எந்த தமிழ் பேசும் இடதுசாரியும் உணராமல் இருப்பதாக நான் கேள்விப் படவில்லை. கடந்த இருபது வருடங்களாக அதை சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் பேசும் வலதுசாரிகள் அப்படி அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில், அமெரிக்கா என்ன சொன்னாலும் அது வேத வாக்கு. அமெரிக்கா ஒரு நாட்டை ஆதரித்தால் இவர்களும் ஆதரிப்பார்கள், அதே நாட்டை அமெரிக்கா எதிர்த்தால் இவர்களும் எதிர்ப்பார்கள்.

தொண்ணூறுகளில், ரஷ்யாவில் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவம் நிலவிய போது, ரஷ்யாவை ஆதரித்தார்கள். ஆனால், அதே ரஷ்ய முதலாளித்துவம், அசுர வளர்ச்சி அடைந்து, அமெரிக்காவை எதிர்க்கும் அளவிற்கு வல்லரசு ஆனதும், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யாவை எதிர்க்கிறார்கள். எந்த வலதுசாரியும் சுயமாக சிந்திக்கத் தெரிந்து வைத்திருப்பதாக, நான் அறியவில்லை.

உலகில், முதலாளித்துவ நாடுகள் எல்லாம் நட்பாக இருப்பதில்லை. அவற்றிற்குள் முரண்பாடுகள் இருக்கும். அது சில நேரம் போராக வெடிக்கும். முதலாளித்துவம் எப்போதும், தனது நலன்களுக்கு பாதுகாப்பான தேசியவாதத்தை ஆதரிக்கும். முரண்பாடுகள் வளர்ந்து போர் வெடிக்கும் காலத்தில், மக்கள் ஆதரவை பெறுவதற்கு தேசியவாதம் உதவும்.

முதலாம் உலகப் போர் வெடித்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் இருந்ததெல்லாம் முதலாளித்துவ நாடுகள் தான். அது மட்டுமல்ல. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், தேசியவாதிகளின் ஆதிக்கம் நிலவிய‌து. லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலை வாசித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு எல்லாம் புரியும்.

********

டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு



உக்ரைனின் கிழக்கு மாநிலமான டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் மாநிலங்கள், "டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள், வாக்களிக்கும் நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் வாக்களித்தமையை, மேற்கத்திய தொலைக்காட்சி ஊடகங்கள் கூட காட்டின.

மாரியுபோல் நகரம், உக்ரைனிய இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. வாக்கெடுப்புக்கு முதல் நாள் கூட கடுமையான யுத்தம் நடந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். அத்தகைய மோசமான சூழ்நிலையிலும், மாரியுபோல் மக்கள் பெருமளவில் திரண்டு சென்று வாக்களிப்பில் கலந்து கொண்டார்கள். இதுவே, ஜனநாயகத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். மேலைத்தேய "ஜனநாயக" நாடுகள், டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பை ஜனநாயக விரோதமாகக் கருதுவது வேடிக்கையானது.

பொது வாக்கெடுப்பு தொடர்பாக, நெதர்லாந்தில் வெளிவரும் தினசரிப் பத்திரிகையில் இருந்து ஒரு தகவல்:
"டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு விரைவில் பிரகடனப் படுத்தப் படவுள்ளது. இனிமேல், உக்ரைனிய ஹிர்வியானா நாணயத்திற்கு பதிலாக ரஷ்ய ரூபிள் பயன்படுத்தப் படும். தனியரசு உருவான பின்னர், உக்ரைனிய இராணுவம் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக கருதப் படும். உக்ரைனிய இராணுவத்தை வெளியேற்றுவது, டொனியேட்ஸ்க் விடுதலைப் படையின் கடமையாக மாறும். அது சாத்தியமில்லாத பட்சத்தில் மட்டுமே, ரஷ்ய இராணுவ உதவி கோரப்படும்.
இந்த பொது வாக்கெடுப்பானது பிரிவினைவாதிகளைப் பொறுத்தவரையில், வெறுமனே மேற்குக்கு எதிரானதும், ரஷ்யாவுக்கு ஆதரவுமான கொள்கைப் போராட்டம் அல்ல. அவர்களுடைய வர்க்கப் போராட்டத்தில் அதுவும் ஒரு ஆயுதம். தொழிற்துறை நகரங்களின் கோடீஸ்வர தொழிலதிபர்கள் "நடுநிலைமை" வகிக்கின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனியார்மயமாக்கப் பட்ட நிறுவனங்களை, மீண்டும் நாட்டுடைமை ஆக்கும் திட்டம் வகுக்கப் படுகின்றது. இடைத்தர, கீழ்த்தர முதலாளிகளும் கூட, பொது வாக்கெடுப்புக்கு எதிராக இருந்தமை தற்செயல் அல்ல."
(Oost-Oekraïne vereffent de rekeningen, NRC Handelsblad, 12-05-2014)

இந்த நேரத்தில், "தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு" கோரிய தமிழ் தேசியவாதிகள் கள்ளமௌனம் சாதிக்கின்றனர். சீமான், வைகோ, போன்ற தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமார் கூட, எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் தமிழீழத்திற்காக பேசிக் கொண்டிருந்த இணைய ஆர்வலர்களும், அது பற்றி வாயே திறக்கவில்லை. இவர்கள், உண்மையிலேயே தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஆதரிக்கிறார்களா? அல்லது, சும்மா பொழுதுபோக்கிற்காக, தமிழீழ ஆதரவு அரசியல் செய்கிறார்களா?


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:





Saturday, April 19, 2014

நொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலகத் திமிர்



மீண்டும் எழுந்து வரும் உக்ரைனிய கம்யூனிஸ்ட் கட்சி.
"விழ விழ எழுவோம், ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்"
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை" மாதிரி, உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக் கும்பலுக்கு உதவச் சென்ற மேற்குலகிற்கு, அடி மேல் அடி விழுவதால் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை வைத்து மணல் கோட்டை கட்டிய ஏகாதிபத்திய கனவுகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. தனது தோல்வி கண்டு பொறுக்க முடியாத மேற்குலகம், பொய்களையும், கட்டுக்கதைகளையும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சி காரணமாக, அந்த மாநிலம் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" என்ற பெயரில் தனி நாடாக இயங்கப் போவதாக அறிவித்தது. அங்குள்ள அரசாங்க கட்டிடங்கள், தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு, மக்கள் மத்தியில் அதிகரிப்பதைக் கண்டு பொறுக்க முடியாத மேற்குலகமும், கீவில் உள்ள பாசிச அரசும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டின. தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசின் பெயரில், யூதர்களுக்கு எதிராக, போலியான துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசில் வாழும் யூதர்கள் அனைவரும், உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவுத் தொகையாக முப்பது டாலர் கட்ட வேண்டும்..." என்று அதிலே எழுதப் பட்டிருந்தது. 

ஒரு யூத ஆலயத்தில் ஒட்டப் பட்டிருந்த துண்டுப்பிரசுரம், டிவிட்டர் இணையம் மூலம் பரவலாக்கப் பட்டது. குறிப்பாக, உக்ரைனிய பாசிச அரசை ஆதரிக்கும் அரசியல் ஆர்வலர்கள், அதனை பரப்புவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். மேற்கத்திய ஊடகங்களிலும் அந்தத் தகவல் வெளியானது. ஜெனீவாவில் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் லவ்ரோவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கெரி, "யூத விரோத துண்டுப்பிரசுரம்" குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாள், யூதர்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் போலியானது என்ற உண்மை, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. கிழக்கு உக்ரைனிய மாநிலமான தொனியேட்ஸ்க்கில் வாழும் யூதர்களின் கருத்தும் அதுவாக உள்ளது. இது அநேகமாக, உக்ரைனிய அரச கைக்கூலிகளின் வேலையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். (பார்க்க: Antisemitic flyer 'by Donetsk People's Republic' in Ukraine a hoax)

மேற்குலக கைக்கூலிகள் தாமாகவே ஒரு போலியான துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு விட்டு, உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதாவது, தோல்விக்கு மேலே தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் உக்ரைனிய பாசிஸ்டுகளும், அவர்களுக்கு முண்டு கொடுக்கும் மேற்குலகமும் செய்வதறியாது நிற்கின்றனர். அவர்களது தான்தோன்றித்தனமான செயல்கள் எல்லாம், கடைசியில் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகின்றன.

ஜெனீவாவில் நடந்த, ரஷ்ய, அமெரிக்க, உக்ரைனிய, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப் பட்ட தீர்மானம், உக்ரைன் நெருக்கடியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கிழக்கு உக்ரைனில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவற்றைக் காலி செய்து விட்டு, ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெனீவாத் தீர்மானம் கூறுகின்றது.

ஆனால், கிழக்கு உக்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு அடி கூட நகரவில்லை. அவர்களைக் காரணம் கேட்டால், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லாவ்ரோவ், ரஷ்யாவுக்கு மட்டுமே வெளிநாட்டு அமைச்சர். நாங்கள் உக்ரைனியர்கள்." என்று சொல்கின்றனர். அதே நேரம், "உக்ரைனிய தலைநகர் கீவில், அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள Euromaidan ஆர்ப்பாட்டக் காரர்கள் முதலில் வெளியேற வேண்டும்" என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைனிய அரசாங்கத்தை, சட்டபூர்வமான அரசாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அவர்களை சதிப்புரட்சியாளர்கள் என்று கூறி, அனைத்துத் தொடர்புகளையும் முறித்துக் கொண்டுள்ளது. உக்ரைனிய ஆட்சியாளர்களும், ஆர்ப்பாட்டங்கள் செய்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து தான், ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் மறுத்து வருகின்றன. அதனால், கிழக்கு உக்ரைனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் செல்வாக்குப் பிரயோகிக்கும் அளவிற்கு, ரஷ்யாவும் நடந்து கொள்ளவில்லை. அது தன்னை ஒரு சர்வதேச சமூகத்தின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது.

இதற்கிடையே, ரஷ்யா மீது மென்மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகின்றது. அதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்ய அரசு, "அமெரிக்கா தன்னை வீட்டு வேலை செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்று நடத்துவதாகவும், அது இராஜதந்திர பொறிமுறை ஆகாது" என்று கூறியுள்ளது.

அமெரிக்கா பயமுறுத்துவது போன்று, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறி. ஏனென்றால், அமெரிக்க கார் கம்பனிகள், ரஷ்ய சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டச்சு- ஆங்கிலேயே ஷெல் நிறுவனம், ரஷ்ய எரிவாயு துறையில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இவர்கள் யாரும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அண்மைக் காலமாக, ரஷ்ய பொருளாதாரம் வளர்ந்து வருகின்றமை, இங்கே கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம். மேற்கத்திய முதலீட்டாளர்கள் ரஷ்யாவை புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் நிறையப் பேசும் அளவிற்கு, உக்ரைனிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே பலவீனமான உக்ரைனிய பொருளாதாரம், நெருக்கடி காரணமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனிய நாணயமான ஹிர்வினியாவின்(hryvnya) பெறுமதி பாதியளவு குறைந்துள்ளது. கிழக்கு உக்ரைனிய தொழில்துறை, பெருமளவு ரஷ்ய சந்தையை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், அங்கு நடக்கும் "ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு" பின்னணியில், பொருளாதாரக் காரணங்களும் உள்ளன. ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு, பொருளாதாரப் பிரச்சினை உக்ரைனிய அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது.


உக்ரைனில், பாஸிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஜீரணிக்க மூடியாத மேற்கத்திய ஊடகங்கள், உண்மையை மறைத்து, பிரச்சார யுத்தம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காக, பாசிச ஆட்சியாளர்கள் அனுப்பிய படையினர், மக்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். போராடும் மக்களை நோக்கி சுட விரும்பாத படையினர், தாம் கொண்டு சென்ற ஆயுத தளபாடங்களை மக்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இது வரையில், எட்டு அல்லது ஒன்பது யுத்த தாங்கிகள், பாசிச எதிர்ப்பு புரட்சியாளர்கள் வசம் வந்துள்ளன.

உக்ரைனிய படையினர் கீவில் இருந்து புறப்பட்ட பொழுது, தாங்கிகளில் பறந்து கொண்டிருந்த உக்ரைனிய தேசியக் கொடிகளை தாமே அகற்றி விட்டு, அவற்றில் ரஷ்யக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அதனை பொறுக்க முடியாத மேற்கத்திய ஊடகங்கள், "ரஷ்யா படையெடுத்து வந்து விட்டதாக" தமது மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில், கடந்த சில வாரங்களாக, தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்குலகம் ஆதரிக்கும் உக்ரைனிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம், "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும்" எதிர்த்து சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சி. கிழக்கு உக்ரைனில் "உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருப்பதால்," நேட்டோ இராணுவ உதவி கோரப் படுள்ளது.


முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய கிரேக்க ஆவணப் படம்: 


FASCISM INC MULTILINGUAL from infowar on Vimeo.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, April 15, 2014

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது! 

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த, கிரமாட்டோர்ஸ்க் (Kramatorsk) விமான நிலையத்தின் மீது, உக்ரைனிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. விமான நிலையம், உக்ரைனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வலது அணி என்ற பாசிசக் கட்சி உறுப்பினர்கள் பலர், உக்ரைனிய இராணுவ சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சில வெளிநாட்டு பாசிஸ்டுகளும் தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. அதனை உறுதிப் படுத்த முடியவில்லை.  


டானியேஸ்க் (Donetsk) நகரில், சோவியத் ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்கள், பல பொலிஸ் நிலையங்களை கைப்பற்றி உள்ளனர். கடமையில் இருந்த உக்ரைனிய பொலிஸ்காரர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்லாது, நேற்று ஒரு சிறிய விமானத் தளமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அதைத் தான், தற்போது உக்ரைனிய படைகள் கைப்பற்றியுள்ளன. 

கிழக்கு உக்ரைனிய கிளர்ச்சியாளர்கள், "ரஷ்ய ஆதரவாளர்கள், பிரிவினைவாதிகள்" என்று உக்ரைனிய அரசும், மேற்கத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில், கிளர்ச்சியாளர்கள் தம்மை உக்ரைனியர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் ரஷ்ய மொழி பேசுவோர் அல்ல. ரஷ்யா மொழிக்கும், உக்ரைனிய மொழிக்கும் இடைப்பட்ட வட்டார வழக்கு மொழியை பேசும் மக்களும் அடங்குவார்கள். அவர்கள் தம்மை ரஷ்ய இனத்தவராக அடையாளம் காட்டவில்லை. உக்ரைனியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

ரஷ்யர்களையும், உக்ரைனியர்களையும் இணைக்கும் வகையில், "சோவியத் பிரஜை" என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் சோவியத் யூனியனின் கொடிகள் பறப்பதில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். பாசிச எதிர்ப்புணர்வு, பல்லின கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைக்கிறது.

முன்பு ஆப்கானிஸ்தானில் போரிட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகின்றனர். பொலிஸ் நிலையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, அவர்களே முன்னின்று தாக்கி உள்ளனர். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைக்கும் நோக்குடன், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர்.

கிளர்ச்சியை அடக்குவதற்காக, கீவ் அனுப்பிய இராணுவ-பொலிஸ் படையினரும், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். கீவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி உள்ள பாசிஸ்டுகள், இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கின்றனர். ஆக்கிரமிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களை விட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற வேண்டும் என்று, அவர்கள் விதித்த காலக்கெடு காலாவதியாகி விட்டது.

உக்ரைன் அரசு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றது. அதனால், ஐ.நா. சமாதானப் படை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகம் செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் தேசியவாதிகள், இன்னொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவது ஒரு முரண்நகை. உலக நாடுகள் முழுவதும் உள்ள தேசியவாதிகள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். 

உக்ரைன், கீவ் நகரில் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடியவர்களின் அரசாங்கம், இன்று கிழக்கு உக்ரைனில் ஸ்லாவியான்ஸ்க் நகரில் சுயநிர்ணய உரிமை கோருவோரின் போராட்டத்தை நசுக்குவதற்காக ஹெலிகாப்டர்களையும், படையினரையும் அனுப்பியுள்ளது. 


********


உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாக தெரிய வருகின்றது. ஐ.நா.மன்றத்தில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்ட பொழுது, இஸ்ரேல் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தது. அதிலிருந்தே, ஒபாமா நிர்வாகத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. 

பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் உக்ரைனில், யூதர்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தாக்கப் படுவது அதிகரித்துள்ளது. யூதர்களின் சமாதிகள் மீது, நாஸி சின்னம் கீறி களங்கப் படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக்குப் பின்னர், ஆயிரக் கணக்கான யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களுக்கு, இஸ்ரேலிய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இஸ்ரேல், அமெரிக்காவின் "உக்ரைனிய கொள்கையை" ஆதரிக்காமைக்கான காரணம் இது தான் என்று தெரிய வருகின்றது. ஆயினும், "உக்ரைனிய நாஸிகளின் யூத வெறுப்பு ஒரு கட்டுக்கதை(?)" என்று, ஒபாமா நிர்வாகம் மறுத்து வருகின்றது.

********

ஸ்லாவியான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களையும், பொலிஸ் தலைமையகத்தையும் கைப்பற்றிய மக்கள், அவற்றை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். உள்ளூர் பொலிஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஸ்லாவியான்ஸ்க் நகரில் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து வருகின்றனர். 


ஸ்லோவியான்ஸ்க், உக்ரைனிய படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக காத்திருக்கும் மக்கள்.

வீடியோ: ஸ்லோவியான்ஸ்க் நகருக்குள் நிலை கொண்டிருந்த உக்ரைனிய அரச படையினர், மக்களிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்த காட்சி.

 

*******


இவை, மேற்குலக ஊடகங்கள் மக்களுக்கு காட்டாமல் மறைக்கும் காட்சிகள். உக்ரைன், லுகான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மத்தியில், மேற்குலக எதிர்ப்பு தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. லுகான்ஸ்க் நகர ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சில காட்சிகள்.


உக்ரைனை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ், லுகான்ஸ்க் (Luhansk) நகரமும் வந்துள்ளது. அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒன்றில், முன்னாள் சோவியத் யூனியனின் கொடி பறக்கிறது.



*********

ஒடேசா (Odessa) நகரில் (10-4-2014), செம்படை வீரர்களின் சீருடை அணிந்த இளைஞர்கள், சோவியத் கொடிகளை ஏந்தியவாறு அணிவகுத்துச் செல்கின்றனர். 2 ம் உலகப் போரில், ஜெர்மன் நாஸிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஒடேசா நகரம், சோவியத் செம் படையினரால் விடுதலை செய்யப்பட்ட எழுபதாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, இந்த அணிவகுப்பு நடந்தது. 70 வருடங்களுக்கு முன்னர், வெற்றி விழாக் கொண்டாடிய செம்படை வீரர்கள், இதே தெருக்களில், இதே மாதிரித் தான் அணிவகுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


ஒடேசா நகரில் நடந்த, பாசிச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்து ஒரு காட்சி. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, உக்ரைனில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இருவரை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படமும், ஊர்வலம் பற்றிய தகவலும், "ஜனநாயகம் காக்கும்" மேலைத்தேய ஊடகம் எதிலும் வரவில்லை. அது தான் அவர்களது நடுநிலை தவறாத ஊடகத் தர்மம்.



உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். முன்பு கீவ் நகரில் இடம்பெற்ற, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களின் Euro Maidan ஆர்ப்பாட்டத்தில், ஒரு வெளிநாட்டவர் கூட தலை காட்டவில்லை. "வெளிநாட்டவர்களை வெறுக்கும் நவ நாஸிகளை ஆதரிக்கும் அளவிற்கு," அவர்கள் யாருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழும், ஒரு சில மேட்டுக்குடித் தமிழர்கள் மட்டும், இன்னமும் உக்ரைனிய நாஸிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.



 *******


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்: