Wednesday, October 30, 2013

ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆப்பிரிக்க இளவரசன் - அறியாத வரலாறு

ஆப்பிரிக்காவில் இருந்து, அடிமைகளாக கொண்டு செல்லப் பட்டு, அமெரிக்க கண்டத்தில் குடியமர்த்தப் பட்ட கறுப்பின மக்கள், இருபதாம் நூற்றாண்டிலும் சம உரிமைக்காக போராட வேண்டி இருந்தது. அதே நேரம், பதினெட்டாம் நூற்றாண்டில், ஒரு ஆப்பிரிக்க -கறுப்பின அடிமை, ரஷ்யப் பேரரசில் ஒரு இளவரசனாக வர முடிந்துள்ளது! அவர் அன்று ஐரோப்பாவிலேயே சிறந்த கல்விமானாக போற்றப் பட்டார். ரஷ்ய சாம்ராஜ்யத்தின் புத்திசாதுர்யம் மிக்க இராணுவ நிபுணராக மதிக்கப் பட்டார். இது ஒன்றும் கற்பனைக் கதை அல்ல. உண்மை வரலாறு.

முதலில் நாம், பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்யாவின் சமூக-அரசியல் பின்புலத்தை ஆராய வேண்டும்.ரஷ்ய சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விஸ்தரிக்கப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், துருக்கி ஓட்டோமான்களின் ஆட்சிக்குள் இருந்த பகுதிகளையும் கைப்பற்றியது. அனேகமாக, தெற்கு ரஷ்ய பகுதிகள் எல்லாம், ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தவை. ஆயிரம் வருட காலத்திற்கு முன்பிருந்தே, அரபு வணிகர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சில கறுப்பின அடிமைகள், துருக்கியரின் சாம்ராஜ்யத்தினுள், பல பகுதிகளிலும் இருந்துள்ளனர். அங்கிருந்து, ரஷ்ய தலைநகரான சென். பீட்டர்ஸ்பெர்க் வரையில், ஆப்பிரிக்க அடிமைகள் விற்பனை செய்யப் பட்டனர். மிக மிகக் குறைந்தளவு என்றாலும், ரஷ்யாவில் ஏற்கனவே சில கறுப்பின அடிமைகள் இருந்துள்ளனர்.

அமெரிக்க கண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளுக்கும், அரேபிய வணிகர்கள் கொண்டு சென்ற அடிமைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முதலில், அரேபியர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை நடத்திய விதமும், மேற்கு ஐரோப்பியர்கள் நடத்திய விதமும் நேர் எதிரானவை.  மேற்கு ஐரோப்பியர்கள், அடிமைகளை பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தும் நோக்குடன் கொண்டு சென்றனர். அதனால், மிகக் கொடூரமாக நடத்தினார்கள். பொருளாதார காரணங்களுக்காக நிறவாதம் ஒரு கொள்கையாக வளர்க்கப் பட்டது. கறுப்பின அடிமைகளையும், வெள்ளையின குடியேறிகளையும் ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்தார்கள்.

அரேபியர்கள், ஆப்பிரிக்க அடிமைகளை, வீட்டு வேலைக்காரர்கள் போன்று வைத்திருந்தார்கள். அரண்மனைகளில், மாளிகைகளில் சேவகர்களாக வைத்திருந்தார்கள். அரேபியர்கள், தாம் தேர்ந்தெடுத்த சிறந்த அடிமைகளை, துருக்கி சுல்த்தானின் அரண்மனைக்கு பரிசாக கொடுத்தார்கள். சுல்த்தானின் அடிமைகளில் சிலர்  அதிர்ஷ்டசாலிகள். திறமைசாலிகள் படித்து முன்னேற முடிந்தது. அரேபியர்கள் வைத்திருந்த அடிமைகள், குறிப்பிட்ட கால கடின உழைப்பிற்குப் பின்னர், "சுதந்திரம் வாங்கி" சமுதாயத்தில் ஒன்று கலக்க முடிந்தது. இது பண்டைய கிரேக்க, ரோமர் காலத்தில் இருந்த அடிமை முறையின் தொடர்ச்சி ஆகும். ஆகவே, ரஷ்யர்களும் அரேபியர்கள் போன்று தான், தமது அடிமைகளையும் நடத்தி வந்தனர். அவர்களை ஒரு தனியான சமுதாயமாக, இனவாத நோக்கில் பார்க்கப் படாததால் தான், இன்றைக்கும் அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கிடைப்பதில்லை. மேலும், ரோமர்கள் ஆண்ட காலத்திலும், அதற்குப் பின்னரும், பல்வேறு வெள்ளையின மக்களும் அடிமைகளாக விற்கப் பட்டனர். அதனால், கறுப்பினத்தவர்களை மட்டுமே அடிமைகளாக கருதும் எண்ணம் தோன்றவில்லை.

கறுப்பினத்தவரை கீழ்த்தரமாக பேசுவதற்காக, மேற்கு ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் "நீக்ரோ" என்ற சொல், ரஷ்ய மொழியில் இருக்கவில்லை. அது பிற்காலத்தில், மேற்குலக கலாச்சார தாக்கத்தால் உள்வாங்கப் பட்டது. ரஷ்யர்கள் "மூர்கள்" என்று வட ஆப்பிரிக்க இஸ்லாமியர் எல்லோரையும் அழைத்தனர். அது ஒரு மதவாத அர்த்தம் கொண்ட சொல் ஆகும். அதைவிட, கிரேக்க மொழியில் இருந்து கடன்வாங்கிய "மவுர்" என்ற சொல் கருப்பர்களை குறிப்பிட பயன்படுத்தினார்கள். இலக்கியவாதிகள் "அரப்"(Arap)என்ற சொல்லையும் பயன்படுத்தினார்கள். எது எப்படி இருப்பினும், அன்றைய அமெரிக்காவில் நிலவிய இனவெறிக் கொள்கை எதுவும் ரஷ்யாவில் பரவி இருக்கவில்லை. சிலர் தனிப்பட்ட முறையில், கருப்பர்கள் மீது வெறுப்பைக் காட்டியிருக்க வாய்ப்புண்டு.

ரஷ்யாவில் பிறந்த உலகப் புகழ் பெற்ற கவிஞர் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) பற்றி அறியாதவர் எவருமில்லை. ஆனால், புஷ்கினின் கொள்ளுப் பாட்டன் ஒரு கறுப்பின அடிமை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் பெயர்: ஆப்ராம் பெட்ரோவிச் கன்னிபல் (Abram Petrovich Gannibal). அது ஆப்ராம் பெட்ரோவிச் ஞானஸ்நானம் எடுத்த பின்னர் சூட்டப்பட்ட பெயர். இயற்பெயர் தெரியவில்லை. கன்னிபல் என்பது, ஹனிபல் என்ற பெயரின் திரிபு. பண்டைய காலத்தில், ரோமர்களை எதிர்த்துப் போராடிய, வட ஆப்பிரிக்க மன்னன் ஒருவனின் பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தார்.

புஷ்கினால் எழுதி, முடிக்கப் படாத Peter the Great's Negro என்ற நாவலில் இருந்தே, அவரைப் பற்றிய தகவல் கிடைத்தது. சென். பீட்டர்ஸ்பெர்க் அரண்மனையில், இன்றைக்கும் அவரது ஓவியம் ஒன்றுள்ளது. ஆப்ராம் பெட்ரோவிச் பிறந்த வருடம் 1781. அவர் பிறந்த இடம் எதுவென  ஆய்வாளர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்த சர்ச்சை அண்மையில் தான் தீர்க்கப் பட்டது. புஷ்கின் தனது நாவலில் "லகோன்" என்று குறிப்பிட்டார். அந்த இடம் சாட் ஏரிக்கு அருகில் உள்ளது. தற்போது கமெரூன் நாட்டுக்கு சொந்தமானது. இந்த தகவல் வெளிவந்த பின்னர், கமெரூன் நாட்டில், புஷ்கினும், கன்னிபலும் தேசிய நாயகர்களாக போற்றப் படுகின்றனர்.

கன்னிபல் சார் மன்னனின் அரசவையில் அதிகாரம் படைத்த இளவரசராக வீற்றிருந்தவர். அதனால் அவருக்கென்று ஒரு அரச இலச்சினை இருந்தது. அதில் யானையின் படமும், யானையின் முதுகுக்கு மேலே கிரீடமும் காணப் பட்டது. கன்னிபலின் பூர்வீகத்தை நினைவுபடுத்தும் இலச்சினை அது. கன்னிபல் ஒரு ஆப்பிரிக்க அரச வம்சத்தில் பிறந்த இளவரசர் ஆவார். அவரது முன்னோர்கள் ஆண்ட ஆப்பிரிக்க தேசம் எதுவென தெரியவில்லை. எத்தியோப்பியாவில் இருந்த தேசம் என்று கருதப் பட்டது. (ஏனெனில், அன்று எத்தியோப்பியா தான், ஐரோப்பாவுக்கு வெளியில் இருந்த ஒரேயொரு கிறிஸ்தவ நாடு.)

அந்நிய தேச மன்னர் ஒருவருக்கு, யானை ஒன்றில் அனுப்பப்பட்ட பரிசுப் பொதிகளுடன், சிறுவனாக இருந்த கன்னிபல் பயணம் செய்து கொண்டிருந்தார். இடையில் தொடரணியை வழிமறித்த அரேபியர்கள், பரிசுப் பொருட்களை கொள்ளையடித்து, பயணம் செய்தவர்களை சிறைப் பிடித்தார்கள். அப்போது ஏழு வயது சிறுவனாக இருந்த கன்னிபல், அரேபிய கொள்ளையர்களினால் அடிமையாக்கப் பட்டான். அரேபியர்கள் அந்த சிறுவனை, துருக்கி சுல்த்தானுக்கு பரிசளித்தார்கள். (அந்தக் காலத்தில், பெரியவர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதற்காக, பிள்ளைகளை துருக்கி சுல்த்தான் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கும் வழக்கம் இருந்தது.)

இஸ்தான்புல் நகரில் உள்ள சுல்த்தானின் அரண்மனையில் அடிமையாக வைத்திருந்த ஏழு வயதுச் சிறுவனை, ரஷ்ய தூதுவர் ஒருவர் கண்டார். அவர் அந்த அடிமைச் சிறுவனை வாங்கி, ரஷ்ய சக்கரவர்த்தி பீட்டருக்கு பரிசாக கொடுத்தார். ரஷ்ய சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய மாபெரும் பீட்டர் சக்கரவர்த்தி, ஆப்பிரிக்க சிறுவனின் புத்திக் கூர்மையை கண்டு வியந்தார். அவனை தனது வளர்ப்பு மகனாக தத்தெடுத்துக் கொண்டார்.

ரஷ்யப் பேரரசில், ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக மட்டும் கொண்டு வரப் படவில்லை. ஆப்பிரிக்க குழந்தைகளை, ரஷ்ய பிரபுக்கள் தத்தெடுக்கும் வழக்கம் ஏற்கனவே இருந்தது. அதனால், "ஒரு ஆப்பிரிக்க கருப்பன் ரஷ்ய இளவரசனாக தத்தெடுக்கப்பட்டமை, யார் கண்ணையும் உறுத்தவில்லை. சிறுவனான கன்னிபல், வளர்ப்புத் தந்தையான சக்கரவர்த்தியின் விருப்பத்திற்குரிய பிள்ளையானார். பீட்டர் சக்கரவர்த்தி, அவரை சிறுவயதிலேயே போர் முனைக்கு கொண்டு சென்றதனால், பிற்காலத்தில் சிறந்த இராணுவ நிபுணராக வந்தார். முன்னரங்க நிலைகளில், எண்கோண கணித முறைப்படி கோட்டைகள் கட்டுவது பற்றிய வரைபடங்கள், இன்றைக்கும் கன்னிபலின் நிபுணத்துவத்திற்கு சான்று பகர்கின்றன.

இன்று நமது நாட்டு மேட்டுக்குடியினர், வீட்டிலும் ஆங்கிலம் பேசி, அமெரிக்கா சென்று படித்து விட்டு வருவார்கள். அது போன்று, ரஷ்யப் பேரரசின் மேட்டுக் குடியினருக்கு, பிரான்ஸ் இருந்தது. அவர்கள் உயர்கல்வி கற்பதற்காக, பாரிஸ் சென்று படித்து விட்டு வருவார்கள். ரஷ்ய மேட்டுக்குடியினர், வீட்டிலும் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடுவார்கள். அது அன்று கௌரமாகக் கருதப் பட்டது. ஆதலினால், கன்னிபல் சில வருட காலம் பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்றார். கணிதம், விஞ்ஞானம், தத்துவ இயல், போன்ற பல பாடங்களில் திறமை பெற்று விளங்கினார். பிரெஞ்சு தத்துவஞானி வோல்தேயர் சம காலத்தவர் தான். வோல்தேயர் கன்னிபலின் நண்பனாக இருந்தவர். கன்னிபலின் புத்திக் கூர்மையை பாராட்டி எழுதி உள்ளார். வோல்தேயர், ஆப்பிரிக்கர்களை காலனிய அடிமைகளாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர. அவர் சந்தித்த கன்னிபல் என்ற அறிவாளி, ஒரு கறுப்பர் என்பது ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கும்.

வளர்ப்புத் தந்தையான மாபெரும் பீட்டரின் மரணத்தின் பின்னர், கன்னிபலின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. புதிய சார் மன்னனாக முடி சூட்டிக் கொண்ட இளவரசன் மென்ஷிகோவ், கன்னிபலின் பதவியை பறித்து, சைபீரியாவுக்கு நாடு கடத்தினார். ஆயினும், அன்று சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்காக இடையறாது யுத்தம் செய்து கொண்டிருந்த ரஷ்யாவில்,கன்னிபலின் இராணுவ நிபுணத்துவம் பெரிதும் தேவைப் பட்டது. அதற்காக மன்னித்து விடுதலை செய்யப் பட்டார்.

சில வருடங்களின் பின்னர், மறைந்த பீட்டரின் புதல்வி எலிசபெத் மகா ராணியானார். அவரது ஆணையின் பேரில், கன்னிபல் ரஷ்ய இராணுவத்தில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப் பட்டார். அத்துடன், தலினின் (இன்று எஸ்தோனியாவின் தலைநகரம்) நகரின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்தார். இன்றும் கன்னிபல் வாழ்ந்த அரண்மனையும், அவர் கைப்பட எழுதிய ஆவணங்களும் தலினின் நகரில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு: 
Gannibal, The Moor of Petersburg by Hugh Barnes

No comments: