Showing posts with label வெனிசுவேலா. Show all posts
Showing posts with label வெனிசுவேலா. Show all posts

Sunday, February 17, 2019

"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை


தி இந்து தமிழ் பத்திரிகையில், "வாழும் போதே நரகமாகும் வெனிசுலா" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் பல உண்மைக்கு புறம்பான தகவல்களை கற்பனையாக புனைந்து எழுதி உள்ளார். அரசியல் பிரச்சார நோக்கில் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகள் எந்த லாஜிக்கும் இல்லாமல், புனைவுகளையும், அரைவாசி உண்மைகளையும் கலந்து எழுதப் படுகின்றன. இவற்றை தி இந்து போன்ற தரமான பத்திரிகைகள் கூட பிரசுரிப்பதன் மூலம் அவற்றின் நன்மதிப்பை குறைத்துக் கொள்கின்றன.

ஜெ.சரவணன்: //ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு.//

எண்ணை வளம் மிக்க நாடுகள் எல்லாம் "பணம் கொழிக்கும் நாடு" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. வெனிசுவேலா மட்டுமல்ல, அங்கோலா, நைஜீரியா, இந்தோனேசியா, என்று பல எண்ணெய் வளம் மிக்க நாடுகள் இன்னமும் ஏழை நாடுகளாக இருக்கின்றன.

எண்ணெய் விற்பனையால் கிடைக்கும் வருமானம் ஒரு சில பணக்காரர்களின் பைகளை மட்டுமே நிரப்புகின்றது. பெரும்பான்மை மக்களுக்கு அதனால் எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி உள்ளதா? குறைந்த பட்சம், அம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளையாவது பூர்த்தி செய்துள்ளதா? இதுவே நாம் கேட்க வேண்டிய கேள்வி.

ஒரு காலத்தில் வெனிசுவெலாவிலும் அந்த நிலைமை தான் இருந்தது. அதாவது, எண்ணை ஏற்றுமதியால் கிடைத்த வருமானம் ஒரு சில பணக்காரக் குடும்பங்களின் சொத்துக்களாக முடங்கிக் கிடந்தது. பெரும்பான்மை மக்கள் எண்ணையால் எந்த நன்மையையும் கிட்டாதவர்களாக வறுமையில் வாடினார்கள். அதனால் தான், எண்ணெய் வருமானம் மக்களுக்கு கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸை பெரும்பான்மை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நேர்மையாக நிறைவேற்றினார். எண்ணெய் விற்பனையால் அரசுக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதி, அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டது. அப்போது தான் பிரச்சினை ஆரம்பமானது.

உண்மையில், வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதியானது. அதே நேரம், அந்தக் கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை மிக அதிகமாக இருந்தது. இதனால் அரச கஜானா நிரம்பியதால், சாவேசின் மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினத்திற்கும் இலகுவாக பணம் கிடைத்தது.

இதில் உள்ள ஆபத்துகளை உணராமல், சாவேஸ் உட்பட, வெனிசுவேலா ஆட்சியாளர்கள், அன்றைய பொருளாதார நிலைமையை குறைவாக மதிப்பிட்டமை தான் தவறு. பல தசாப்த காலமாக வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதியை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, ஒரு காலத்தில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் என்ன நடக்கும்? திடீரென வேறு வாடிக்கையாளரை பிடிக்க முடியுமா?

அதே மாதிரி, சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்தால் என்ன நடக்கும்? அதை மட்டுமே நம்பியிருந்த பொருளாதாரம் வீழ்ச்சி அடையாதா? இது தான் நடந்தது. இந்த உண்மைகளை மறைத்து விட்டு, எல்லாவற்றையும் சாவேஸ், மடூரோ தலையில் தூக்கிப் போடுவது ஒரு பக்கச் சார்பான அரசியல் பிரச்சாரம் அன்றி வேறென்ன?

//2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். அதாவது, அனைத்தையும் அரசு மயமாக்குவது.//

ஒரு சில பணக்காரர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருந்த எண்ணை வருமானத்தை கொண்டு, பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவினத்தை ஈடுகட்டும் அரசின் திட்டம் எப்படி "இருண்ட காலம்" ஆகும்? மக்களைப் பொறுத்தவரையில் அது தான் பொற்காலம். ஆனால், தமது பண வருவாய் குறைவதை பொறுக்க முடியாத பணக்காரர்களுக்கு மட்டுமே அது இருண்ட காலம்.

மேலும், "அனைத்தையும் அரசு மயமாக்கியதாக" குறிப்பிடுவது ஒரு தவறான தகவல். இன்று வரையில், வெனிசுவேலா பொருளாதாரத்தின் பெரும் பகுதி தனியார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறது. நாட்டிற்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தரும் பெற்றோலிய நிறுவனம் சாவேஸ் காலத்திலேயே அரசு மயமாக்கப் பட்டது. அதைக் கூட செய்யா விட்டால், பெட்ரோல் முதலாளிகள் எப்போதோ வெனிசுவேலா பொருளாதாரத்தை முடக்கி இருப்பார்கள். அவர்கள் தக்க தருணத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

//உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. சாவேஸ் திட்டமிட்ட கொள்கைகள் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.//

இந்தக் கட்டுரையாளர், எது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்று அழுகிறார்? எத்தனயோ நட்டத்தில் இயங்கிய தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் பொறுப்பேற்று நடத்தினார்கள். அதற்கு அரசும் ஊக்கமளித்தது. இது ஜனநாயகம் இல்லையா?

தனியார் வீட்டுமனை நிறுவனங்கள் வாடகைக்கு விடும் வீடுகளில், குடியிருப்பாளர்கள் மாதக் கணக்காக வாடகை கட்டா விட்டாலும், அவர்களை வெளியேற்றி தெருவில் விட முடியாது. இந்தச் சட்டம் சாவேஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்டது. இது ஜனநாயகம் இல்லையா?

அது சரி, உலகில் எந்த நாட்டில் தனியார் நிறுவனங்கள் ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன? எந்த நிறுவனத்தில் ஒரு நிர்வாகி அல்லது மானேஜர்கள், ஊழியர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? ஆனால், வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு கையகப் படுத்திய நிறுவனங்கள் யாவற்றிலும் ஜனநாயக ரீதியான பொது வாக்கெடுப்பு நடந்துள்ளது.

உற்பத்தி நிறுவனங்கள், உணவு உற்பத்தி எல்லாம் இன்றைக்கும் தனியாரிடம் தான் உள்ளன. அதனால் தான், தனியார் துறை முதலாளிகள் உற்பத்தியை குறைத்தும், பொருட்களைப் பதுக்கியும் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்க முடிந்தது. இது தனியார் துறையினர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கிய பொருளாதார நெருக்கடி.

தி ஹிந்து கட்டுரையாளர் குறிப்பிட்ட மாதிரி, சாவேஸ் அனைத்தையும் அரசு மயமாக்கி இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. அதைச் செய்யாமல் விட்டது தான் தவறு. எல்லோருக்கும், குறிப்பாக உற்பத்தியை கட்டுப்படுத்தும் சக்தி படைத்த தனியார் துறையினருக்கு சுதந்திரம் கொடுத்ததன் பலனை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

அரசு நிறுவனங்கள் எதுவும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கின்றன. ஒரு சிலவற்றை இராணுவ அதிகாரிகள் நிர்வகிப்பதும் உண்மை தான். ஆனால், வெனிசுவேலாவின் மொத்த பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிட்டால் அந்த அரசு நிறுவனங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. பத்து சதவீதம் கூட இருக்காது.

//அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.//

இது ஓர் உண்மைக்குப் புறம்பான கூற்று. வெனிசுவேலா நாட்டில் இன்று வரைக்கும் அந்நிய நிறுவனங்கள் முதலிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிரச்சினை அதுவல்ல. பணவீக்கம் அதிகரிப்பதாலும், நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு வர்த்தகம் செய்வதற்கு தயங்குகின்றன. இருப்பினும் தவித்த முயல் அடிப்பது போன்று, இந்த நேரத்திலும் முதலிடும் காரியவாதிகள் இருக்கிறார்கள். அண்மையில் நெதர்லாந்தில் இருந்து சென்ற இளம் வணிகர் ஒருவர், அங்கு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, மிகக் குறைந்த விலைக்கு வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ளார். ஒரு காலத்தில் நிலைமை சீரடைந்தால் அவற்றை நல்ல விலைக்கு விற்று விடுவது தான் திட்டம். (de Volkskrant, 30.01.2019)

தனியார் துறைக்கு சுதந்திரம் இருந்தாலும், வெளிநாட்டு மூலதனத்தை தாராளமாக அனுமதித்தாலும், தேசப் பாதுகாப்பு அல்லது பொது மக்களின் நன்மை கருதி சில அத்தியாவசிய துறைகளில் முதலிட அனுமதிக்கப் படுவதில்லை. உதாரணத்திற்கு, பெற்றோலிய நிறுவனம், துறைமுகம், விமானநிலையம் போன்ற துறைகளில் தனியார் முதலீடு அனுமதிக்கப் படுவதில்லை. மற்றும் படி, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் முதலிடலாம், வணிகம் செய்யலாம். 

அதிகம் பேசுவானேன். எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு எங்கிருந்து கிடைக்கிறது? தனியார் நிறுவனங்கள் நூறு சதவீத ஆதரவு வழங்குகின்றன. ஊடகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள் தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும் தடைசெய்யப் படவில்லை. சுதந்திரமாக இயங்க விடப் பட்டுள்ளன.

//வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.// 

பல வருட காலமாக பொருளாதாரத் தடைகளை விதித்து வந்த அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதியாக அங்கீகரித்ததுடன் நில்லாது, எண்ணை வாங்கியதற்காக கொடுக்க வேண்டிய பணத்தையும் தர மாட்டேன் என அடம் பிடித்தது. அத்துடன் நில்லாது அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலா நாட்டின் அந்நிய செலாவணியும் பறிமுதல் செய்யப் பட்டது. பிரித்தானியாவில், Bank of England இல் வெனிசுவேலா வைத்திருந்த பில்லியன் டாலர் பெறுமதியான தங்கத்தை திருப்பித் தர முடியாது என்று அறிவித்தது.

நீங்கள் உங்களிடமிருந்த பணத்தையும், நகைகளையும் பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைக்க, அவர் அதையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணுவது அநீதி இல்லையா? இந்த அடாவடித்தனங்களை கண்டிக்காமல், "வெனிசுவேலாவின் கையில் இருப்பது வெறும் பத்து பில்லியன் டாலர்" என்று நையாண்டி செய்வது நியாயமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போலுள்ளது இந்தக் கட்டுரையாளரின் வன்மம் நிறைந்த எழுத்துக்கள்.

//நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.//

ஐயா! அவர்கள் பொருளாதார அகதிகள். பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாட்டில் யுத்தம் நடந்தால் மட்டும் தான் அகதிகள் வெளியேற வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகவும் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லலாம். அதிகம் பேசுவானேன். இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாடுகளில் இருந்து வந்தவர்களையும், "பொருளாதார அகதிகள்" என்று தான் மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள்.

வெனிசுவேலாவில் ஏன் பொருளாதார நெருக்கடி வந்தது? சாவேஸ் கொண்டு வந்த சோஷலிச திட்டங்கள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை அடியொற்றி கொண்டு வரப் பட்டன! அதாவது, மேற்கு ஐரோப்பாவில் தனியார் துறை இயங்குவதற்கு தாராளமாக அனுமதிக்கிறார்கள். அதே நேரம், அரசுக்கு கிடைக்கும் வரிப் பணம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் படுகின்றது. அது வீட்டு வாடகை செலவை ஈடுகட்டுதல், உணவுப் பொருட்களுக்கு கொடுக்கும் மானியம் என்று பல வகைப் படும். அதே திட்டங்களை தான் வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு நடைமுறைப் படுத்தியது. அது தான் இங்கே பிரச்சினை.

தனியார் நிறுவனங்கள் வீட்டு வாடகையை உயர்த்த விடாமல் அரசு சட்டம் போட்டு தடுத்தது. அதனால், புதிய வீடுகள் கட்டப் படுவது நின்று விட்டன. குழந்தைகளுக்கான பால்மா போன்ற பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் கொடுத்தது. அதனால், உணவு உற்பத்தியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தனியார் நிறுவனங்கள் பொருட்களை பதுக்க ஆரம்பித்தன. இதற்குள் கடத்தல்காரர்களும் புகுந்து தமது கைவரிசையை காட்டினார்கள். வெனிசுவேலாவில் அரசு மானிய உதவியால் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பால்மா, அயல் நாடான கொலம்பியாவில் அதிக விலைக்கு விற்கப் பட்டது. இது ஓர் உதாரணம் மட்டுமே.

அதன் விளைவு தான் லட்சக்கணக்கானோரின் வெளியேற்றம். தனியார் துறையினரின் திட்டமிட்ட புறக்கணிப்பால், நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக, பிரதானமான ஏற்றுமதிப் பொருளான பெற்றோல் விற்பனையும் வீழ்ச்சி கண்டது. ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்சினையை உண்டாக்க இவ்வளவும் போதாதா?

ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் முழுவதும் ஒரு மனதாக அரசை ஆதரித்தார்கள். இன்று அவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இருப்பினும், மடூரோ அரசு அம்மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்று கூற முடியாது. இன்றைக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அரச எதிர்ப்பாளர்களாக உள்ளனர். இது ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரின் உளவியல். அது ஒரு வகை சுயநல அரசியல். அவர்கள் தமது சொந்த நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

//குற்றங்கள் அதிகரிக்கின்றன. திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்துவருகின்றனர்.//

ஐயா, பெரியவரே! லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகளவு குற்றங்கள் நடப்பது ஒன்றும் புதினம் அல்ல. வெனிசுவேலாவில் சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதிகளவு குற்றங்கள் நடப்பதால் தலைநகர் கராகஸ் ஒரு பாதுகாப்பற்ற தலைநகரம் என்ற கெட்ட பெயரைப் பெற்றிருந்தது. அயல்நாடான கொலம்பியாவில் குற்றங்கள், திருடர்கள், தீவிரவாதிகள் மட்டுமல்லாது உலகளவில் போதைவஸ்து கடத்தும் மாபியா கும்பல்களாலும் பாதிக்கப் பட்டுள்ளது. அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தென்படுவதில்லையா?

//அதிபர் சாவேஸ் மறைந்த பிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். அவர் மீது மக்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். கிட்டதட்ட வெனிசுலாவை மீட்பது என்பது, மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். ஆனால், தீவிர இடதுசாரி எனத் தன்னை முன்னிறுத்தும் மதுரோ ஆறு ஆண்டுகளாகியும் வெனிசுலாவை மீட்க எந்த முயற்சியையும் செய்யவில்லை.//

மடூரோ அதிபரான காலத்தில் தான், சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்திருந்தது. அத்துடன், பெருமளவு எண்ணெயை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா பல்வேறு வகையான பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது. வெனிசுவேலாவில் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறின. தனியார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.

முன்பு சாவேஸ், பின்னர் மடூரோ ஆகியோர் தம்மை "தீவிர இடதுசாரிகள்" என்று அறிவித்துக் கொண்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திருந்தனர். அந்நிய மூலதனத்தையும் தடுக்கவில்லை. இது ஒரு காலத்தில் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. "எந்த முயற்சியும் செய்யவில்லை." ஆம், பொருளாதாரத்தில் தனியார் துறையினரின் ஆதிக்கத்தை குறைத்து, நிறுவனங்களை அரசுமயமாக்கவில்லை. இது தவறு தான்.

//எதிர்கட்சிகள் இவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றன. மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.// 

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காலத்தில் நடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அதனால் ஜனாதிபதி மடூரோ கொண்டு வந்த பல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முடக்கி உள்ளனர். மேலும், அண்மையில் தான், கடந்த இரண்டு வருடங்களுக்குள் பொதுத் தேர்தல் நடந்தது. மடூரோ கூட கடும் போட்டிக்கு பின்னர் தான் ஜனாதிபதியாக தெரிவானார். அப்படி இருக்கையில் குறுகிய காலத்திற்குள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தக் கோருவது ஜனநாயக விரோதம் அல்லவா?

"மக்கள் புரட்சியில் ஈடுபடுகின்றனர்" என்று, இந்தக் கட்டுரையாளர் எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றார்? எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு சேரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்தா? இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், அல்லது தமிழகத்தில் திமுக கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் சேரும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்து, "இந்திய மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்." என்று கூற முடியுமா?

//அதிபர் மதுரோ இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார். வெனிசுலாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து ரத்தக்கறையோடுதான் வெளியே வருவார் என்கிறார்.//

ஐயனே! அமெரிக்கா வெனிசுவேலா மீது படையெடுக்கக் காத்திருப்பது தான் இன்றைய பிரச்சினை. உள்விவகாரங்களில் தலையிடுவது காலங்காலமாக நடக்கிறது. ஆனால், ஒரு நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டுவதை சாதாரணமான விடயமாக கடந்து போக முடியாது. அமெரிக்க இராணுவம் படையெடுத்து வந்தால், வெனிசுவேலா இராணுவம் புளியம்பழம் பறித்துக் கொண்டிருக்க வேண்டுமா? தகுந்த பதிலடி கொடுக்க வேண்டாமா?

//ரஷ்யாவும், சீனாவும் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் பாவ்லா காட்டுகின்றன. ஆனால், உண்மையில் வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை.//

அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னர் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் எண்ணெய் விற்பதற்கு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ஆமாம், இந்தியாவும் தான்! அமெரிக்க பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்தியா வெனிசுவேலா எண்ணையை வாங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு எண்ணை விநியோகம் செய்யும் நாடுகளில் வெனிசுவேலா மூன்றாம் இடத்தில் உள்ளது.

ரஷ்யாவுடனான உறவு வித்தியாசமானது. ரஷ்யாவின் பன்னாட்டு எண்ணை நிறுவனமான Rosneft, வெனிசுவேலாவின் பல்வேறு அந்நிய கடன்களை அடைப்பதற்கு பணம் கொடுத்துள்ளது. அதற்குப் பதிலாக அரச எண்ணை நிறுவனமான PDVSA, ரஷ்யாவுக்கு, அதாவது Rosneft கம்பனிக்கு எண்ணெய் விற்க வேண்டும். இதுவும் நவகாலனித்துவம் தான். ஆனால், இன்றைய நிலையில், வெனிசுவேலாவுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

//வெனிசுலாவின் இன்றைய நிலை என்பது எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியதுதான். இன்றைய பணமய பொருளாதாரத்தில் போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம்.//

கட்டுரையாளரே! நீங்கள் குறிப்பிடும் "பணமய பொருளாதாரம்" என்பதன் உண்மையான பெயர் நவ- லிபரலிச பொருளாதாரம். "போட்டி நாடுகள்" என்பதன் அர்த்தம் (மேற்கத்திய) ஏகாதிபத்திய நாடுகள். இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு எப்படி எல்லாம் மாய்மாலம் செய்கிறீர்கள்?

//இந்தியாவில் தற்போது நுகர்வு என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். இதனால் வேகமான பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.//

இதை நுகர்பொருள் கலாச்சாரம் என்று சொல்வார்கள். இன்றைய நவ- லிபரலிச முதலாளித்துவ அமைப்பு அதன் மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய விடயம் அல்ல. உலகம் முழுவதும், ஏன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கூட ஏற்கனவே பல தசாப்த காலமாக நடைமுறையில் உள்ளது. இதை இன்னொரு விதமாக கிரெடிட் கார்ட் பொருளாதாரம் என்றும் அழைக்கலாம். மக்கள் நுகர்வோர்களாக மட்டுமல்லாது, நிரந்தரக் கடன்காரர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இந்தக் கடன்களில் தான் பொருளாதாரம் வளர்கிறது.

//இந்தியா - வெனிசுலா: இந்தியா, தனியார் மய கொள்கையை தீவிரமாக்கி வருகிறது. இது நிறுவனங்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும். இதனால் நாட்டின் வளங்கள் மீதும், மக்களின் மீதும் பெரும் சுரண்டலை நிகழ்த்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் எப்போது எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு கடையை காலி செய்வார்கள் என்று தெரியாது. அப்போது இந்தியாவின் கஜானா காலியாவதும் உறுதி.//

தனியார்மயத்தை தீவிரப் படுத்தும் பொழுதே இந்தியாவின் கஜானா காலியாகி விடும். ஏனெனில், அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை தவிர்ந்த அனைத்தையும் தனியார்மயமாக்குவது தான் நியோ லிபரலிச சித்தாந்தம். அதைத்தான் இந்தியாவுக்கு கடன் கொடுக்கும் நாடுகள், IMF, உலகவங்கி என்பன வலியுறுத்துகின்றன. அத்துடன் வரிகளையும் குறைக்குமாறு வற்புறுத்துகின்றன. 

உதாரணத்திற்கு, இந்தியாவில் முதலிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டப்படி மிகக்குறைந்த வரி கட்டுகின்றன. (அதைக் கூட ஒழுங்காக கட்டுவதில்லை.) இந்திய அரசு அந்த வரித் தொகையை கூட்டுவதற்கு தயங்குகிறது. அப்படி செய்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வராமல் வேறு நாடுகளை தேடி ஓடி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அப்படியானால் எப்படி இந்திய கஜானா நிரம்பும்?

மேற்கு ஐரோப்பாவில் கார்ப்பரேட் வரித் தொகை மிக அதிகம். அதனால் தான் அந்த நாடுகளில் கஜானா நிரம்புகிறது. அரசு அந்தப் பணத்தை எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றது. வெனிசுவேலாவும் அதைத் தான் பின்பற்ற விரும்பியது. மேற்கு ஐரோப்பிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால், நடந்தது என்ன? 

அமெரிக்கப் பொருளாதார தடை. தனியார் துறையினரின் பதுக்கல்கள், உற்பத்திக் குறைப்புகள். அதனால் எழுந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு. அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள், லட்சக்கணக்கான அகதிகளின் வெளியேற்றம்....

இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்கள், வெனிசுவேலாவின் உதாரணத்தை பின்பற்றி தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கனவு கூடக் காணக் கூடாது. மீறினால் வெனிசுவேலா நிலைமை தான் உங்களுக்கும் உண்டாகும். இது அந் நாடுகளுக்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை.

Saturday, March 07, 2015

உலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்


வெனிசுவேலாவில், உழைக்கும் மக்களுக்காக கட்டப்பட்டு வரும் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட "சோஷலிச நகரம்". இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கக் கூடியதாக, திட்டமிட்டு உருவாக்கப் படுகின்றது. இப்படியான நகரம், தென் அமெரிக்காவிலேயே மிகப் பெரியது.

2.600 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 3456 மாடிக் கட்டிடங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இன்னும் 40 000 மாடிக் கட்டிடங்கள் கட்டப் படவுள்ளன. ஒவ்வொரு தொகுதியும், நான்கு சிறுவர் பாடசாலைகள், நான்கு இடைத்தர பாடசாலைகள், ஒரு நூலகம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு விளையாட்டு மைதானம் என்பனவற்றை கொண்டதாக இருக்கும்.

இந்த மிகப்பெரிய வீட்டுத் திட்டம், Valencia நகரில், US $ 590.000.000 செலவில் ஈரானின் உதவியுடன் கட்டப் படுகின்றது. வெனிசுவேலாவில் இதுவே முதலாவது சோஷலிச வீட்டுத் திட்டம் அல்ல. 2006 ம் ஆண்டு, தலைநகர் கராகசில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இது போன்ற நவீன குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன.

 *******

 உலகவங்கியின் அறிக்கையில் இருந்து: "லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும், மிகவும் சிறந்த கல்வியை வழங்கும் நாடாக கியூபா உள்ளது. கியூப மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி கற்கும் வசதி கிடைக்கிறது."



உலகிலேயே அதிகளவு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முதல் பத்து நாடுகளில் கியூபாவும் அடங்குகின்றது. அமெரிக்கக் கண்டத்தில் இரண்டாம் இடம், உலகளவில் நான்காம் இடத்தில் கியூபா உள்ளது. Inter-Parliamentary Union (IPU) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.


இவை கியூபாவில் தேசியப் பேரவை எனும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுவரொட்டிகள்.

கியூபாவில், 612 பாராளுமன்ற உறுப்பினர்களையும், அத்துடன் மேலதிக மாகாண அதிகார சபைகளுக்கான 15 பிரதிநிதிகளையும், 8.6 மில்லியன் வாக்காளர்கள், தேர்தல் மூலம் தெரிவு செய்வார்கள்.

தேர்தலில் கட்சிகள் போட்டியிடுவதில்லை. ஆனால், வேட்பாளர்கள் தனித் தனியாக போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒவ்வொரு தேர்தலிலும், பெருமளவு கட்சி சார்பற்ற சுயேச்சை உறுப்பினர்களும், மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படுகின்றனர்.

ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், பொது இடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அந்த சுவரொட்டிகளில், வேட்பாளர்கள் தமது வழமையான உறுதிமொழிகளையும், திட்டங்களையும் குறிப்பிட்டு எழுதலாம். அவற்றை பார்வையிடும் வாக்காளர்கள், தேர்தலில் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகளை போட்டு தெரிவு செய்வார்கள்.

*******

சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசம் எட்டிய சாதனைகள். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

Monday, October 08, 2012

சாவேசின் சாதனைகள் : மறைக்கப்பட்ட உண்மைகள்


வெனிசுவேலாவின் சோஷலிச ஜனாதிபதியான சாவேஸ், மூன்றாவது தடவையாக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவேசின் வெற்றியின் இரகசியம் என்ன? அவரது கடந்த கால சாதனைகள் என்ன?



1. எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடான வெனிசுவேலாவில், எண்ணை  விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் செலவிட்ட அளவை விட, சாவேசின் பதவிக் காலத்தில் நானூறு மடங்கு அதிகமாக, அதாவது அரசாங்க பட்ஜெட்டில் 43 % சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது.
(ஆதாரம்: Financial Timeshttp://www.ft.com/)

2.  வெனிசுவேலாவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. நானூறுக்கும் அதிகமான நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நடத்தப் படுகின்றன.
(Venezuela's economy Towards state socialism, http://www.economist.com/node/17527250)  

3. சாவேசின் சோஷலிச அரசியலுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. அவரது பதவிக் காலமான 1996 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், வறுமை பெருமளவு ஒழிக்கப் பட்டுள்ளது. 71 % இலிருந்து 27 % மாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாவேசின் ஆட்சிக் காலத்தில், குழந்தைகளின் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்துள்ளது. எழுத்தறிவின்மை விகிதாசாரம் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.
(POBREZA Y DESARROLLO SOCIAL EN VENEZUELA: Balance 2011 y perspectivas para el 2012 por Jesse Chacón (GISXXI), http://www.gisxxi.org/noticias/pobreza-y-desarrollo-social-en-venezuela-balance-2011-y-perspectivas-para-el-2012-por-jesse-chacon-gisxxi/#.UHNeV5hg8fU)
( Pourquoi Chavez ?, http://www.legrandsoir.info/pourquoi-chavez.html)

4. உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே திருப்திகரமான வாழ்க்கை வாழும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா தெரிவு செய்யப் பட்டுள்ளது. பணக்கார நாடுகளான கனடா, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு அடுத்ததாக, வெனிசுவேலா ஆறாவது இடத்தில் இருக்கிறது. (High Wellbeing Eludes the Masses in Most Countries Worldwide, http://www.gallup.com/poll/147167/High-Wellbeing-Eludes-Masses-Countries-Worldwide.aspx#2)

5. மேற்கத்திய ஊடகங்கள் சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில் ஜனநாயகத் தன்மை கிடையாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், 13 வருட ஆட்சிக் காலத்தில், 14 தேர்தல்கள் அல்லது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள்  நடைபெற்றுள்ளன. அனைத்திலும் சாவேசும், அவரது கட்சியும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து தேர்தல்களையும் கண்காணித்து வந்த  Carter Centrum   ஐ  சேர்ந்த  Jennifer McCoy , தேர்தல்கள் யாவும் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Venezuelan Electoral System one of the Most Automated in the World, http://venezuelanalysis.com/analysis/7177)

6. வெனிசுவேலா நாட்டு ஊடகங்கள் எல்லாம் சாவேசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஆதரவான பிரச்சாரம் மூலம் மக்களை மூளைச் சலவை செய்வதாக, மேற்கத்திய நாடுகள் குற்றஞ் சாட்டுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? வெனிசுவேலாவின் 116 தொலைக்காட்சி நிறுவனங்களில், 61 தனியார் நிறுவனங்கள். தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் சாவேசுக்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் 13 தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டுமே அரசு நடத்துகின்றது. மீதியுள்ள 37 ம், ஒன்றில் பிரதேச அரசாங்கத்தினால், அல்லது மக்களின் கூட்டுறவு நிறுவனமாக  நடத்தப் படுகின்றன. ஆனால்.... ஆனால்... தனியார் தொலைக்காட்சி சேவைகள், மொத்த சனத்தொகையில் 61 % மான பார்வையாளர்களை சென்றடைகின்றன. தினசரி பத்திரிகைகளில் 80 % தனியார் கைகளில் இருக்கின்றன. நாட்டில் அதிகமாக விற்பனையாகும், பிரபலமான முன்னணி பத்திரிகைகள் எப்போதும் சாவேசுக்கு எதிராகவே எழுதிக் கொண்டிருக்கின்றன.
(Television in Venezuela: Who Dominates the Media?, http://www.cepr.net/documents/publications/2010_12_venezuela_media.pdf)

7. உலக நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளை கணிப்பிட்டு வரும் கனடிய நிறுவனமான   Foundation for Democratic Advancement (http://www.slideshare.net/FDAdvancement/2011-fda-electoral-fairness-report-on-venezuela)(FDA), நேர்மையான முறையில் ஜனநாயக தேர்வு நடக்கும் நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலாவை தெரிவு செய்துள்ளது.  அவர்களின் கணிப்பின் படி, வெனிசுவேலாவில்  83 % நேர்மையான ஜனநாயக தெரிவு இடம்பெறுகின்றது. மற்ற நாடுகளையும் ஒரு தடவை பார்ப்போமா? பின்லாந்து 30 %, அமெரிக்க 30 %, எகிப்து 0 %. 

8. இந்த தடவை, சாவேசை எதிர்த்து தேர்தலில் குதித்த வேட்பாளர்  Henrique Capriles பற்றி மேற்கத்திய ஊடகங்கள் புகழ்ந்து பேசின. மாபெரும் ஜனநாயகவாதி என்றெல்லாம் பாராட்டின. அந்த வேட்பாளரின் கடந்த கால ஜனநாயக சாதனைகளை பார்ப்போமா? 2002 ம் ஆண்டு, வெனிசுவேலாவில் சதிப்புரட்சி நடந்தது. மியாமியில் (அமெரிக்கா) இருந்து வந்த ஆயுதக் குழுவொன்று கியூப தூதுவராலயத்தை முற்றுகையிட்டது. அப்பொழுது அந்தப் பிரதேச ஆளுநராக இருந்த  Henrique Capriles அந்த ஆயுதக் குழுவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, தூதுவராலயத்திற்கு சென்று கொண்டிருந்த மின்சார, நீர் விநியோகத்தையும் துண்டித்திருந்தார். 
(Ex embajador de Cuba en Venezuela: Capriles violó leyes internacionales, http://www.telesurtv.net/articulos/2012/04/12/ex-embajador-de-cuba-en-venezuela-capriles-violo-leyes-internacionales)  

இந்த தேர்தலில் ஊகோ சாவேஸ் 54 % வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  Henrique Capriles 45 % வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

வெனிசுவேலா பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை
2.வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
3.அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா
4.வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)
5."சோஷலிசம் இன்றேல் காட்டுமிராண்டியிசம்" - 5 வது சர்வதேசியம்

Thursday, November 12, 2009

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா


"தவறு செய்யாதீர்கள், ஒபாமா! வெனிசுவேலா மீதான படையெடுப்பு நூறாண்டு கால போருக்கு அடிகோலும். முழு லத்தீன் அமெரிக்க நாடுகளையும் இழுத்து விடும்." அமெரிக்காவுடனான போருக்கு தயாராக இருப்பதாக, வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் அறிவித்தார். அன் நாட்டு அரச தொலைக்காட்சியில் வாராந்த "அலோ பிரேசிடேண்டே" நிகழ்ச்சியிலேயே மேற்குறிப்பிட்ட வீராவேசப் பேச்சு வெளிப்பட்டது. சாவேசின் போர்ப் பிரகடனத்திற்கு காரணம் இல்லாமலில்லை. அயல் நாடான கொலம்பியா கடந்த மாதம் 30 ம் திகதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், ஏழு கொலம்பிய இராணுவ தளங்கள் அமெரிக்காவுக்கு என ஒதுக்கப்படும். கொலம்பிய தளங்களில் நிலை கொள்ளும் அமெரிக்க படைகள் போதைவஸ்து கடத்தலுக்கு எதிராகவும், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் எதிராக போரிடுவர். அவ்வாறு கொலம்பிய அரசு கூறுகின்றது. ஆனால் சாவேஸ் இந்த ஒப்பந்தம், வெனிசுவேலா மீதான படையெடுப்புக்கான முகாந்திரமாக கருதுகின்றார். (வலதுசாரி அரசால் நிர்வகிக்கப்படும்) கொலம்பியா அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றார்.

கொலம்பியாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படைகள், சாவேஸ் அரசை தூக்கியெறியும் சதிகார எண்ணத்துடன் வந்திருப்பதாக வெனிசுவேலா அரசு நம்புகின்றது. இதனால் கொலம்பிய எல்லையோரமாக வெனிசுவேலா துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. வெனிசுவேலா எல்லையோர கிராமமான "பாரினாஸ்"ல் காணப்பட்ட நூற்றுக்காக்கான கொலம்பிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அடையாள பத்திரம் எதுவும் இன்றி தங்கி இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சாவேசின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கொலம்பிய அரசு, வெனிசுவேலா FARC இடதுசாரி தீவிரவாதிகளுக்கு உதவுவதாக தன் பங்கிற்கு குற்றம் சுமத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதால், போர் மூளுவது சாத்தியமாகலாம். எனினும் இரு வருடங்களுக்கு முன்னரும் இது போன்றதொரு கொந்தளிப்பான சூழ்நிலையில், பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்தன. இதற்கிடையே வெனிசுவேலா, ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருவதுடன், ரஷ்ய ஆயுதங்களையும் இறக்குமதி செய்கின்றது.


U.S. Military Documents Show Colombia Base Agreement Poses Threat to Region

Monday, March 16, 2009

வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)

வெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி சாதனங்களை கையகப்படுத்தும் தொழிலாளர்கள், மனேஜர்களையும் விரட்டி விட்டு தாமே நடத்துகின்றனர். விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்கள் சமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்.

வெளிநாட்டுக் குழுவொன்று தொழிலாளரால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது எடுத்த வீடியோ இது:

[VIDEO] Sanitarios Maracay under workers' control
Hands Off Venezuela delegation tours Sanitarios Maracay, a factory in Venezuela under workers control, to learn more about the revolutionary process taking place there, and to offer solidarity to the workers.


[Video] Venezuela Sanitarios Maracay Workers' Assembly

Saturday, September 06, 2008

ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை

வெனிசுவேலா, தென் அமெரிக்க கண்டத்தில் எண்ணை வளம் மிக்க நாடு. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் லாபம், மொத்த அரச வருமானத்தின் அரைவாசியாக உள்ளது. அந்நாட்டில் இன்னும் 74 மில்லியன் பரல்கள் எண்ணை கையிருப்பில் உள்ளது. அமெரிக்காவின் பெட்ரோலிய தேவையின் 14 %, வெனிசுவேலாவில் இருந்து ஏற்றுமதியாகின்றது. இருப்பினும் அதன் பலன்களை மொத்த சனத்தொகையில் 20 % ஆன பணக்கார அல்லது உயர் மத்தியதர வர்க்கமே அனுபவித்து வந்தது. மிகுதி 80% மக்கள் வறுமையில் வாடினர். அங்கே நடந்த பொதுத்தேர்தலில், ஏழை மக்களின் சார்பில் போட்டியிட்ட சாவேஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த சமூக அநீதிக்கு முடிவு வந்தது. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம், ஏழை மக்களுக்கும் போய்ச் சேர வேண்டுமென்பதே சாவேஸ் முன்மொழிந்த "பொலிவாரிய புரட்சி" யின் நோக்கம்.

பொலிவாரிய புரட்சியின் முதற்கட்டமாக, மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் புதிய அரசியல் நிர்ணய சட்டம் அமுலுக்கு வந்தது. ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம், கல்வி, கடனுதவிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதால், அவர்களும் முன்னேற வழியேற்பட்டது. மேலும் முதன்முறையாக ஒரு தேசத்தின் அதிபர், பொது மக்களின் பிரச்சினையை நேரடியாக கேட்கும் "Alo Presidente" (ஹலோ ஜனாதிபதி) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, சாவேசை "மக்களின் ஜனாதிபதி"யாக காட்டியது. அரச யாப்பு பற்றி சாதாரண மக்களுக்கும் எடுத்து சொல்லப்பட்டதால், அரசியல் அறிவு பெற்ற மக்கள், தாமும் ஜனநாயகத்தில் பங்குபற்றுவதன் மூலம், தமது தலைஎழுத்தை மாற்றலாம் என கண்டு கொண்டனர்.

ஆனால் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான செலவை பணக்கார வர்க்கம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அதாவது அவர்களது ஆடம்பர வாழ்க்கை, ஏழைகளுக்கு பங்கிட மறுத்த செல்வத்தின் மூலமே ஏற்பட்டதால், அதனை விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவைகள் யாவும் சாவேசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஜனநாயக தேர்தல் மூலம் பதவியில் அமர்ந்துள்ள சாவேஸ், தனக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் தடை செய்ய நினைக்கவில்லை. வசதியான சிறுபான்மையினரே எதிர்ப்புரட்சி சக்திகளின் ஆதரவு தளமாக இருப்பதாலும், அதற்கு மாறாக பெரும்பான்மை மக்கள் சாவேசை ஆதரிப்பதாலும், சாவேஸ் எதிரிகள் தமது ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வருகின்றனர்.

12 April 2002 ம் ஆண்டு, பெரிய தொழிலதிபர்களின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஜனாதிபதி மாளிகை நோக்கி நகர்த்தப்பட்டது. சாவேஸ் ஆதரவாளர்கள் எதிரணியில் திரண்டனர். திடீரென்று இனம்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சிலர் கொல்லப்பட, துப்பாக்கி சன்னங்கள் வந்த திசை நோக்கி சாவேஸ் ஆதரவாளர்கள் சுடுவதை படம்பிடித்த தொலைக்காட்சி கமெராக்கள், அதனை சாவேஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஊர்வலம் மீது சுட்டதாக காட்டி செய்தியை திரித்தன. சர்வதேச ஊடகங்களும் அப்படியே நம்பின.

ஏற்கனவே திட்டமிட்டபடி, குழப்பநிலையை பயன்படுத்தி இராணுவத்தில் ஒரு படைப்பிரிவு, சாவேசின் எதிரிகளுடன் சேர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியது. சாவேசை பதவி விலக சொல்லி வற்புறுத்தியும், அவர் மறுத்ததால் தொலைதூர தீவொன்றுக்கு கொண்டு சென்று தடுத்து வைக்கப்பட்டார். (சி.ஐ.ஏ. மறைமுகமாக ஆதரவளித்த) சதிப்புரட்சி தலைவர்கள், அரச பதவிகளை பொறுப்பு எடுப்பதாக அறிவித்தனர். முதலாளிகள், பணக்காரர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் மத்தியதர வர்க்கத்தினர், தமது இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். அதுவரை வெனிசுவேலாவில் நடந்த அரசியல் மாற்றங்களை கண்டுகொள்ளாத சர்வதேச ஊடகங்கள், அப்போது மட்டும் திடீரென விழித்துக் கொண்டு சதிப்புரட்சி பற்றிய செய்தியை வெளியிட்டன.

சதிப்புரட்சி பற்றி கேள்விப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போது, பொலிஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இருப்பினும் சாவேஸ் பதவி விலகவில்லை என்றும், சதிகாரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் வந்த செய்தி, மக்களை கிளர்ந்தெழப் பண்ணியது. அடக்குமுறைக்கு அஞ்சாத லட்சக்கணக்கான மக்கள் சாவேசை திருப்பி கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். பெருந்திரளாக அதிபர் மாளிகையை, அங்கிருந்த புதிய அரசாங்கத்தை, முற்றுகையிட்டனர். இது தான் தருணம் என்று, சாவேசுக்கு விசுவாசமான படைகள் ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மக்கள் சக்தியை கண்டு அஞ்சிய சதிப்புரட்சியாளர்கள், வேறு வழியின்றி சாவேசை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சதிப்புரட்சி நடந்த வேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் தற்செயலாக சிக்கிக் கொண்ட ஆவணப்படங்கள் தயாரிக்கும் குழுவொன்று, நடந்த சம்பவங்களை தமது கமெராவில் பதிவு செய்து கொண்டனர். வெனிசுவேலாவில் (அமெரிக்க சார்பு) ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன சர்வதேச ஊடகங்கள் காண்பிக்காத அரிய படங்களை தொகுத்து "The Revolution will not be Televised" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டது. அந்தப்படத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
The Revolution will not be Televised


_________________________________________________________________________

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
_____________________________________________________________________________________

Thursday, May 22, 2008

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்

"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.


பெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்காலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன? பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.

வெனிசுவேலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் "சர்வதேச பயங்கராவாதி" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.

இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.

தற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, "ஒரு புதிய மனிதனை உருவாக்கும்" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், "வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.

நிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. "அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்." என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. "உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.

புதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், "எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே!" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.

ஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். "ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்." என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.

__________________________________________________________
வெனிசுவேலா சம்பந்தமான பிற பதிவுகள்:
ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை


_________________________________________________