Showing posts with label சோவியத் யூனியன். Show all posts
Showing posts with label சோவியத் யூனியன். Show all posts

Monday, June 22, 2020

ஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்!

அமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம்  செக்கோஸ்லாவாக்கியாவில் வாழ்ந்து வந்தார். முப்பது வருடங்களுக்கு முன்பு கம்யூனிசத்தில் வெறுப்புற்று அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இளம் தலைமுறையை சேர்ந்தவர். மேற்கத்திய முதலாளித்துவ சொர்க்கபுரியாக கருதப்பட்ட அமெரிக்காவுக்கு வந்த பின்னர், தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன் என்று வருந்தி இருக்கிறார். 

அவர் தனது செக் நாட்டு வாழ்க்கை அனுபவங்களை இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு உலக நாடுகளை நாசமாக்கி வருகிறது என்பதை இன்றைய ஹாங்காங் மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக இதை எழுதி இருக்கிறார். முன்னாள் சோஷலிச நாடுகளுக்குள் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை நான் இங்கே தமிழில் சுருக்கி தருகிறேன்.

அன்றைய வாழ்க்கை நன்றாக அர்த்தமுள்ளதாக இருந்தது. செல்வச் செழிப்புள்ளதாக இருந்தது. செல்வம் என்பது பணத்தின் அடிப்படையில் அல்லாது, பண்பாட்டு ரீதியாக, அறிவுபூர்வமானதாக, ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால், அது பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம்.

நாங்கள் கிளர்ந்தெழும் இளைஞர்களாக, அத்துடன் இலகுவில் ஏமாறக் கூடியவர்களாக இருந்தோம். எங்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் திருப்திப் படவில்லை. எல்லாம் தானாகக் கிடைத்ததாக எண்ணிக் கொண்டோம். இரவு நேரங்களில் BBC, Voice of America, Radio Free Europe ஆகிய வானொலிகளில் சொல்வதை செவிமடுத்தோம். அவை சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாடுகளையும் பற்றி அவதூறாகசொன்ன எல்லாவற்றையும் நம்பினோம்.

செக் நாட்டு சோஷலிச தொழிற்துறை நிறுவனங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நட்பு ரீதியாக பல தொழிற்சாலைகளை கட்டிக் கொடுத்தன. அவை உருக்காலை, சீனி ஆளை என்று பலதரப் பட்டன. ஆனால் நாங்கள் அவற்றை பெருமையாகக் கருதவில்லை ஏனென்றால் மேற்கத்திய ஊடகங்கள் அந்த திட்டங்களை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தன.

எங்களுடைய சினிமா தியேட்டர்கள் இத்தாலி, பிரெஞ்சு, சோவியத், ஜப்பானிய ஆகிய நாடுகளில் இருந்து மிகச் சிறந்த திரைப்படங்களை காண்பித்துக் கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் அமெரிக்க குப்பைப் படங்களை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தோம்.

மேடைக் கச்சேரி ஆனாலும், பதிவுசெய்யப் பட்டதானாலும், எமக்குக் கிடைத்த இசை மிக உயர்ந்த தரத்தில் இருந்தது. சிறிது தாமதமானாலும் நாம் விரும்பிக் கேட்ட இசை உள்ளூர் கடைகளில் கிடைத்தது. அன்று எமது கடைகளில் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் விற்கப் படவில்லை. ஆனால், நாங்கள் அதைத் தான் விரும்பிக் கேட்டோம். அதையெல்லாம் மத அனுஷ்டானம் மாதிரி விரும்பிக் கேட்டதுடன், கேசட் வடிவிலும் பதிவு செய்து வைத்திருந்தோம். ஏதாவது கிடைக்கவில்லை என்றால், சுதந்திர பேச்சுரிமை பறிப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் அலறின.

இளம் மூளைகளை ஏமாற்றுவது எப்படி என்று அன்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஒரு கட்டத்தில் நாம் விரக்தி அடைந்தவர்களாக இருந்தோம். எங்கள் நாடுகளில் இருந்த எல்லாவற்றையும் விமர்சித்தோம். எதனோடும் ஒப்பிட்டுப் பாராமல், சிறிதளவு கூட நடுநிலைமை இல்லாமல் நடந்து கொண்டோம்.

(மேற்குலகு) எங்களுக்கு சொன்னதை எல்லாம் திருப்பிச் சொன்னோம்: சோவியத் யூனியன், செக்கோஸ்லாவாக்கியாவில் இருந்த எதுவுமே கூடாது. மேற்குலகில் இருந்த ஒவ்வொன்றும் சிறந்தது. ஆம், அன்றிருந்த நிலைமை மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம், அல்லது மத அடிப்படைவாதம் போன்ற நம்பிக்கை. உண்மையில் அன்று நாம் ஒரு தொற்று நோயால் பீடிக்கப் பட்டிருந்தோம். அது எங்களை முட்டாள்களாக மாற்றி விட்டது.

சோஷலிச மானியங்கள் மூலம் எமக்குக் கிடைத்த வசதிகளான நூலகம், அரங்கம், தேநீர் விடுதி ஆகிய பொது இடங்களை பயன்படுத்தி எமது தேசத்தின் மீது சேறு பூசிக் கொண்டே, மேற்குலகை மகிமைப் படுத்தினோம். மேற்குலக வானொலி, தொலைக்காட்சி, அங்கிருந்து கடத்தப்பட்டு வந்த சஞ்சிகைகள் என்பன இவ்வாறு தான் எம்மை மூளைச்சலவை செய்து வைத்திருந்தன.

அந்தக் காலங்களில் மேற்குலகில் இருந்து வந்த பொலித்தீன் பைகள் எமது அந்தஸ்தாக மாறின! உங்களுக்கு தெரியுமா? இன்றைக்கு பெட்டிக் கடைகளில், சில மலிவான சூப்பர் மார்க்கெட்டுகளில் கொடுக்கும் அதே பொலித்தீன் பைகள் (shopping bags) தான். அவற்றை நாம் நிறையப் பணம் கொடுத்து வாங்கினோம். ஏனென்றால் அது நுகர்வுக் கலாச்சாரத்தை அடையாள படுத்தியது! நுகர்வுக் கலாச்சாரம் தான் நல்லது என்று நாங்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தோம்.

சுதந்திரத்தை விரும்ப வேண்டும் என்று எமக்கு சொல்லப் பட்டது. அதாவது, மேற்கத்திய பாணி சுதந்திரத்தை. "சுதந்திரத்திற்காக போராட வேண்டும்" என்று கற்பிக்கப் பட்டோம். உண்மையில் நாம் பல வகைகளில் மேற்குலக நாடுகளை விட அதிக சுதந்திரத்தை அனுபவித்து வந்தோம். இதை நான் முதல் தடவையாக அமெரிக்கா வந்த பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். நியூ யோர்க் நகரில் என்னுடைய வயதையொத்த பிள்ளைகள் உலக அறிவு குறைந்தவர்களாக, மோசமான கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர்.

எமது உணவுகள் சுவையானவையாக, இயற்கையாக உற்பத்தி செய்யப் பட்டவையாக இருந்தன. ஆனால், நாம் வர்ணமயமான பைகளில் அடைக்கப்பட்ட மேற்கத்திய பொருட்களுக்காக ஆசைப்பட்டோம். நாம் இரசாயன பொருட்களை உண்ண விரும்பினோம்.

நாம் எப்போதும் ஆத்திரத்தோடு எதிர்க்கத் தயாராக இருந்தோம். எமது குடும்பங்களை பகைத்துக் கொண்டோம். நாம் மிக இளமையாக இருந்தாலும் பெரியவர்களாக நினைத்துக் கொண்டோம். நான் எனது முதலாவது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டு விட்டு,கதவை இழுத்து சாத்தி விட்டு, நியூ யோர்க்கிற்கு சென்று விட்டேன். நான் ஒரு முட்டாளாக்கப் பட்டு விட்டேன் என்பதை வெகு விரைவில் உணர்ந்து கொண்டேன்.


முழுமையான கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:

Thursday, March 19, 2020

சோவியத் யூனியனில் Sex இருக்கவில்லை!

There was no "sex" in USSR!
It was called "love"! 
"சோவியத் யூனியனில் Sex இருக்கவில்லை!" - எண்பதுகளில் அமெரிக்க- சோவியத் கூட்டுத்தயாரிப்பிலான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் கலந்து கொண்ட ஒரு பெண் செக்ஸ் தொடர்பாக நடந்த விவாதத்தில் இவ்வாறு கூறியிருந்தார். அன்று அந்தக் கூற்று மேற்கத்திய நாடுகளில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டது. பலர் இதை கேலிக்குரிய விடயமாக எடுத்தனர்.

இந்த சம்பவமானது அன்றிருந்த முதலாளித்துவ நாடுகளுக்கும், சோஷலிச நாடுகளுக்கும் இடையிலான மாறுபட்ட கலாச்சாரங்களுக்கு ஓர் உதாரணம். நிச்சயமாக அன்று சோவியத் யூனியனில் செக்ஸ் இருந்தது. அது சாதாரணமான விடயம். ஆனால் "செக்ஸ்" என்ற சொல் அங்கு வாழ்ந்த மக்களால் எவ்வாறு புரிந்து கொள்ளப் பட்டது என்பது தான் முக்கியம்.

சோவியத் யூனியனில் மட்டுமல்ல, அனேகமாக எல்லா சோஷலிச நாடுகளிலும், "செக்ஸ்" என்ற வார்த்தையை பாவிப்பது ஒரு பண்பாடற்ற செயலாகக் கருதப் பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் பாலுறவை "காதல் செய்வது" (ஆங்கிலத்தில்: making love) என்று அழைத்தனர். அதை "செக்ஸ் செய்வது" என்று கூறுவது அருவருப்பான, அநாகரீகமன விடயமாகக் கருதப் பட்டது. அரசியல் மொழியில் சொன்னால் "செக்ஸ் என்பது ஒரு சீரழிந்த முதலாளித்துவ கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது."

சோஷலிச நாடுகளில் "செக்ஸ்" என்பது ஏறக்குறைய ஒரு கெட்ட வார்த்தை போன்று கருதப் பட்டது. ஆபாசப் படங்களில் நடிப்பவர்களும், பாலியல் தொழிலாளிகளும் மட்டுமே "செக்ஸ்" என்ற வார்த்தையை பாவிப்பார்கள். மணம் முடித்த தம்பதிகள், காதலர்கள் தமக்கிடையிலான பாலியல் உறவை செக்ஸ் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக "காதல்" என்பார்கள். அவர்கள் காதல் வேறு, காமம் வேறு என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தொண்ணூருகளில் முதலாளித்துவம் வந்த பின்னர் அந்த நாடுகளை சேர்ந்த மக்களும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கி விட்டனர். தற்கால இளைஞர்கள் செக்ஸ் என்ற சொல்லை சர்வசாதாரணமாக பாவிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் "காதல் செய்வது" என்று தான் சொல்கிறார்கள்.

Friday, January 03, 2020

ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதைகள்


ப‌வ்லோவின் வீடு - ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை


இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் முன்னேறிக் கொண்டிருந்த‌ ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டைக‌ள் ர‌ஷ்யாவின் உள்ளே ஸ்டாலின்கிராட் நக‌ர‌ம் வ‌ரை வ‌ந்து விட்டிருந்த‌ன‌. சோவியத் அதிபர் ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்டதால் மட்டும் அந்த நகரம் முக்கியத்துவம் பெறவில்லை. தெற்கே க‌வ்காஸ் பிராந்திய‌த்தில் இருந்து, வடக்கே ர‌ஷ்ய நகரங்களுக்கான எண்ணை விநியோக‌ம் ஸ்டாலின்கிராட் ஊடாக‌ ந‌ட‌ந்த‌ ப‌டியால் அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாக‌வும் இருந்த‌து.

நாஸிகள் இதனை "எலிகளின் போர்" என்று அழைத்தனர். ஏனெனில் எதிரி எங்கே இருக்கிறான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த எல்லாக் கட்டிடங்களும் குண்டுவீச்சுகளால் அழிக்கப் பட்டு விட்டன. இருந்தாலும் ஒரு சதுரங்க ஆட்டம் போன்று எல்லா இடங்களிலும் எதிரிகள் இருந்தனர். நாஸிப் படையினர் ஒரு வீட்டின் சமையலறையை கைப்பற்றி இருந்தால், அதே வீட்டில் உள்ள படுக்கையறையை கைப்பற்றுவதற்கு நாட்கணக்கில் சண்டை நடந்தது. செம்படை வீரர்கள் ஒவ்வொரு வீடு வீடாக, சுவர்களுக்கு பின்னால் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் மூன்றாம் நாடியிலும் கீழேயும் நாஸிப் படையினரும், இரண்டாம் மாடியில் செம்படையினரும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஸ்டாலின்கிராட் போரின் ஆரம்ப நாட்களில், நாஸிப் ப‌டைக‌ளுட‌னான‌ யுத்த‌த்தில் ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த‌ செம்ப‌டைக‌ள் பெரும்பாலும் வெளியேற்ற‌ப் ப‌ட்டு விட்ட‌ போதிலும், இருபது அல்லது முப்பது வீரர்களைக் கொண்ட 62 ம் ப‌டைப்பிரிவு ம‌ட்டும் உள்ளே சிக்கிக் கொண்ட‌து.

முற்றுகைக்குள் சிக்கிக் கொண்ட படையினர் "பின்வாங்காம‌ல் க‌டைசி ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும் வ‌ரை போரிட‌ வேண்டும்" என்ற‌ ஸ்டாலினின் க‌ட்ட‌ளைப் ப‌டி இறுதி மூச்சு உள்ள வ‌ரை போராடுவ‌து என்று முடிவெடுத்த‌ன‌ர். அவர்கள் ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ நான்கு மாடிக் க‌ட்டிட‌ம் ஒன்றை த‌ம‌து க‌ட்டுப்பாட்டில் வைத்திருந்த‌ன‌ர். சுற்றிலும் பாதுகாப்பு அர‌ண்க‌ளை அமைத்து த‌ற்காப்பு யுத்த‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌ன‌ர். அந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் நீடித்தது. இறுதியில் மேலதிக படைகள் வந்து ஸ்டாலின்கிராட்டை விடுதலை செய்யும் வரையில் தாக்குப் பிடித்தனர்.

அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62 ம் ப‌டைப்பிரிவுத் த‌ள‌ப‌தி யாகோவ் ப‌வ்லோவின் பெய‌ரால் "ப‌வ்லோவின் வீடு" என்று அழைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னை நாஸிப் ப‌டைக‌ள் கைப்ப‌ற்ற‌ முடியாம‌ல் போன‌த‌ற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள் இருந்த‌ன‌. ஆர்ட்டில‌ரி போன்ற‌ க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ளை பாவித்தால் ம‌றுப‌க்க‌ம் இருந்த‌ ஜேர்ம‌ன் ப‌டையின‌ர் மீதும் குண்டு விழ‌லாம்.

அந்த வீட்டை நாஸிப் ப‌டைக‌ள் மூன்று ப‌க்க‌ங்க‌ளில் சுற்றிவ‌ளைத்திருந்த‌ன‌. ஒரு ப‌க்க‌ம் வோல்கா ஆறு ஓடியது. அத‌ன் ம‌று க‌ரையில் நின்ற‌ செம்ப‌டையின‌ர் தாக்குத‌ல் ந‌ட‌த்திக் கொண்டிருந்தார்க‌ள். அத்துட‌ன் ம‌று க‌ரையில் இருந்து ப‌வ்லோவின் வீட்டுக்கு உண‌வு, ம‌ருந்து, ஆயுத‌ங்க‌ள் விநியோக‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. அதுவும் ஜேர்ம‌ன் விமான‌ங்க‌ளின் குண்டு வீச்சுக்கு த‌ப்பிச் செல்ல‌ வேண்டும்.

ப‌வ்லோவின் வீட்டினுள் ஆயுத‌ங்க‌ள், தோட்டாக்க‌ள், உண‌வு, த‌ண்ணீர் எல்லாவ‌ற்றுக்கும் த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ப‌டைவீர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, உரிய‌ நேர‌த்தில் வெளியேற‌ முடியாம‌ல் மாட்டிக் கொண்ட‌ பொது ம‌க்க‌ளும் அத‌ற்குள் இருந்த‌ன‌ர்.

அங்கிருந்த‌ ஒரு நிறைமாத‌க் க‌ர்ப்பிணி ஒரு பெண் குழ‌ந்தையை பிர‌ச‌வித்தாள். குழ‌ந்தையின் த‌ந்தை ஏற்க‌ன‌வே ந‌ட‌ந்த‌ போரில் கொல்ல‌ப் ப‌ட்டு விட்டார். அநேக‌மாக‌ அப்போதிருந்த‌ நிலைமையில் குழ‌ந்தையும் உயிர் பிழைப்ப‌து க‌டின‌ம் என்றே ந‌ம்ப‌ப் ப‌ட்ட‌து. ஆனால் செம்ப‌டை வீர‌ர்க‌ள் த‌ம‌து உயிரைத் துச்ச‌மாக‌ ம‌தித்து அத்தியாவ‌சிய‌ பொருட்களை கொண்டு வ‌ந்து சேர்த்து குழ‌ந்தையை காப்பாற்றி விட்ட‌ன‌ர்.

ப‌வ்லோவின் வீடு புக‌ழ் பெற்ற‌மைக்கு அன்று சோவிய‌த் அர‌சு ஊட‌க‌ங்க‌ளில் செய்ய‌ப் ப‌ட்ட‌ பிர‌ச்சார‌மும் ஒரு கார‌ண‌ம். ஸ்டாலின்கிராட் முற்றுகைக்குள் அக‌ப்ப‌ட்ட‌ செம்ப‌டைப் பிரிவின் வீர‌ஞ்செறிந்த‌ போராட்ட‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உட‌னுக்குட‌ன் தெரிவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. பிற்கால‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்டாலின்கிராட் யுத்த‌ம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ளிலும் இந்த‌ ப‌வ்லோவின் வீடு த‌வ‌றாம‌ல் இட‌ம்பெற்ற‌து.

*********

ஸ்டாலின்கிராட் டைரிக் குறிப்புக‌ள்: "60 வ‌ய‌து பெண் போராளி"!

இது ஸ்டாலின்கிராட் யுத்த‌த்தில் ப‌ங்கெடுத்த‌ ஒரு நாஸிப் ப‌டைவீர‌ர் எழுதிய டைரிக் குறிப்புக‌ளில் இருந்து ஒரு ப‌குதி.

//அனேகமாக ஒவ்வொரு நாளும் தவறாமல் எங்க‌ள‌து வாக‌ன‌ங்க‌ள் க‌ண்ணி வெடிக்கு அக‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தன. யாரோ இரவில் புதைத்து வைத்த கண்ணிவெடிகளுக்குள் சிக்கிய வாகனங்கள் வெடித்து எமக்கு பெருமளவு பொருட்சேதம் உண்டானது. அதனால் இந்த நாசவேலைகளுக்கு காரணமான முரட்டு ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டு திரிந்தோம்.

இந்த‌க் க‌ண்ணிவெடிக‌ளை புதைப்ப‌து யாரென‌க் க‌ண்டுபிடிக்க‌த் திட்ட‌மிட்டோம். ஒரு நாள் இரவு காத்திருந்து ஆளைப் பிடித்து விட்டோம். அது ஒரு 60 வ‌ய‌து மதிக்க‌த்த‌க்க‌ முதிய‌ பெண். ஒரு ப‌ட்டியில் க‌ண்ணி வெடியும், ம‌ண்வெட்டியும் கொண்டு வ‌ந்திருந்தார். அவ‌ரை கையும் மெய்யுமாக பிடித்து விட்ட ப‌டியால் எமக்கு விசாரிக்க‌ எதுவும் இருக்க‌வில்லை.

அடுத்த‌ நாள் காலை அவ‌ரைத் தூக்கில் போடுவ‌த‌ற்கு த‌யார்செய்ய‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ப் பெண்ணின் இறுதி ஆசை என்ன‌வென‌க் கேட்டோம். தான் சிறுவ‌ய‌தில் வாழ்ந்த‌ வோல்கா ந‌தியை பார்க்க‌ வேண்டும் என்றார். ஒரு கொண்டாட்ட‌த்திற்கு செல்வ‌து போல‌ ந‌தியில் இற‌ங்கிக் குளித்து விட்டு வ‌ந்தார்.

அந்த இடத்தில் ஒரு தூக்கு மரம் ந‌தியை நோக்கிய ப‌டி அமைக்கப் ப‌ட்ட‌து. ஒரு துளி கூட அச்சமின்றி தூக்குக் கயிறை நோக்கிச் சென்றார். அந்த‌ப் பெண்ணை ஒரு தோட்டாக்கள் வைக்கும் மர‌ப் பெட்டியின் மேல் ஏறி நிற்க சொன்ன அவ‌ர‌து காவலாளி, க‌ழுத்தில் தூக்குக் க‌யிறு மாட்டி விட‌ நெருங்கினார். அது தேவையில்லை என்று சைகையால் காட்டிய‌ மூதாட்டி, தானாக‌வே தூக்குக் க‌யிறை பிடித்து தனது கழுத்தில் மாட்டிக் கொண்டார்.

அங்கே சில‌ நிமிட‌ நேர‌ம் நிச‌ப்த‌ம் நில‌விய‌து. ஒரு க‌ண‌ம் வோல்கா ந‌தியை பார்த்த‌ அந்த‌ப் பெண் பின்ன‌ர் த‌லையை குனிந்து எங்க‌ளைப் பார்த்தார். எங்க‌ளை நோக்கி காறித் துப்பி விட்டு கோஷ‌ம் எழுப்பினார்: "ஊத்தை நாஸிக‌ள்... நீங்க‌ள் மனநோயாளிகள்... இந்த‌ பூமியில் கொள்ளை நோய் ப‌ர‌ப்ப‌ வ‌ந்த‌ கிருமிக‌ள்... புர‌ட்சி நீடூழி வாழ்க‌! லெனின் நீடூழி வாழ்க‌!" அத்துடன் காவ‌லாளி காலுக்கு கீழே இருந்த‌ பெட்டியை த‌ட்டி விட்டார். அந்த 60 வ‌ய‌து பெண் போராளியின் உயிரற்ற உட‌ல் தூக்கும‌ர‌த்தில் தொங்கிய‌து.//

(ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டையில் டாங்கி ஓட்டுன‌ராக‌ ப‌ணியாற்றிய‌ Henry Metelman எழுதிய‌ அனுப‌வ‌க் குறிப்புக‌ள். Through Hell for Hitler என்ற‌ பெயரில் நூலாக‌ வந்துள்ள‌து.)


ஸ்டாலின்கிராட் போரில் தான் புதிய சோவியத் கண்டுபிடிப்பான கத்யூஷா ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட பதினாறு குழாய்களில் இருந்து ஒரே நேரத்தில் ஷெல் வீச்சு நடந்தது. நாஸிகள் இதனை "ஸ்டாலின் ஓர்கன்" (ஓர்கன் எனும் குழாய் இசைக்கருவி போன்றிருந்த படியால்) என்று அழைத்தனர். 1943 ம் ஆண்டு தொடக்கத்தில் கடும் குளிர்காலத்தில் ஸ்டாலின்கிராட் நகரை மீட்பதற்கான செம்படையினரின் இறுதி யுத்தம் இடம்பெற்றது. அதற்குள் பட்டினியாலும், கடும் குளிராலும் செத்து மடிந்து கொண்டிருந்த நாஸிப் படையினர் இறுதியில் சரணடைந்தனர். ஸ்டாலின்கிராட் வெற்றியானது இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இன்றைக்கும் ஸ்டாலின்கிராட் யுத்தத்தை விவரிக்கும் பல நூல்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகின்றன.

Tuesday, December 31, 2019

சோவியத் செம்படையில் சேர்ந்து வரலாறு படைத்த பெண்கள்

ந‌வீன‌ போரிய‌ல் வ‌ர‌லாற்றில் முத‌ல் த‌ட‌வையாக‌, இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட சோவிய‌த் செம்ப‌டையில் ம‌ட்டும் தான் பெண்க‌ள் பெருமளவில் (சுமார் 800.000 பேர்.) போரிட்ட‌ன‌ர். 

போர் உக்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ 1943 ம் ஆண்டு, செம்ப‌டை வீர‌ர்க‌ளில் ப‌த்தில் ஒருவ‌ர் பெண். அதாவது மொத்த படையினரில் 10%. அதை விட‌ நாஸிக‌ள் ஆக்கிர‌மித்த‌ பிர‌தேச‌ங்க‌ளில் இய‌ங்கிய‌ கெரில்லா குழுக்க‌ளில் ஏராள‌மான‌ பெண் போராளிக‌ள் இருந்த‌ன‌ர். அன்று அவ‌ர்க‌ள் செம்ப‌டை வீர‌ர்க‌ளாக‌ க‌ண‌க்கெடுக்க‌ப் ப‌ட‌வில்லை. அதையும் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். 

செம்ப‌டையில் ப‌ல‌ பெண்க‌ள் லெப்டின‌ன்ட் போன்ற‌ உய‌ர் ப‌த‌விக‌ளிலும் இருந்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ர்க‌ளாக‌ அல்ல‌து தாதிக‌ளாக‌ ப‌ணியாற்றிய‌ பெண்க‌ள் கூட‌ இராணுவ‌ப் ப‌யிற்சி பெற்றிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் வைத்திருந்த‌ன‌ர். 

சோவிய‌த் வான் ப‌டையின் மூன்று ப‌டைய‌ணிக‌ள் முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளை ம‌ட்டுமே கொண்டிய‌ங்கின. பெண் விமானிக‌ள் செலுத்திய‌ குண்டு போடும் விமான‌ங்க‌ள் போர் முனையில் நாஸிப் ப‌டையின‌ரை துவ‌ம்ச‌ம் செய்த‌ன‌. 

சினைப்ப‌ர் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவ‌தில் பெண்க‌ளே வ‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ள‌வுக்கு சினைப்ப‌ர் ப‌டைப்பிரிவில் பெண்க‌ள் தான் பெரும்பான்மையாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் லியூட்மிலா ப‌விஷென்கோ. 309 நாஸிப் ப‌டையின‌ரை கொன்று உலக சாத‌னை ப‌டைத்தவர்.

Wednesday, September 11, 2019

செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி

செனோத்டெல் (Zhenotdel): சோவிய‌த் யூனிய‌னில் இய‌ங்கிய‌ ஒரு க‌ம்யூனிஸ்ட் - பெண்ணிய‌க் க‌ட்சி. அது பற்றிய சில குறிப்புகள்.


1917 அக்டோப‌ர் சோஷலிச‌ப் புர‌ட்சியின் நோக்க‌ங்க‌ளில் ஒன்றாக‌ பெண்க‌ளின் விடுத‌லையும் அட‌ங்கி இருந்த‌து. சார் ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில் பெரும்பால‌ன‌ பெண்க‌ள் எழுத்த‌றிவ‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மேல் த‌ட்டு வ‌ர்க்க‌ப் பெண்க‌ள் ம‌ட்டுமே க‌ல்விய‌றிவு பெற்றிருந்த‌ன‌ர். ஆக‌வே பெண்க‌ளை வீட்டு வேலைக‌ளில் இருந்து விடுத‌லையாக்கி, க‌ல்வி க‌ற்க‌ வைத்து, வேலைக்கும் அனுப்புவ‌தே புர‌ட்சியை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருந்த‌து.

இத‌ற்காக‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைமைப் பொறுப்புக‌ளில் இருந்த‌ (லெனினின் ம‌னைவி) ந‌டாஷா குருப்ஸ்க‌யா, இனேசா ஆர்ம‌ன்ட், ம‌ற்றும் அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை ஆகியோர் இணைந்து பெண்க‌ளுக்கான‌ க‌ட்சியை உருவாக்கினார்க‌ள். செனோத்டெல் என்ற‌ அந்த‌ இய‌க்க‌ம் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் அமைப்பு வ‌டிவ‌ம் கொண்டிருந்த‌து. ஆனால், கட்சிக்கு வெளியே சுத‌ந்திர‌மாக‌ இய‌ங்கிய‌து. சுருக்க‌மாக‌, அது முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளுக்காக‌ பெண்க‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்சி.

சோவிய‌த் யூனிய‌ன் முழுவ‌வதும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌. அது ம‌ட்டும‌ல்லாது அர‌ச‌ செல‌வில் பிள்ளை ப‌ராம‌ரிப்பு, க‌ர்ப்பிணிப் பெண் தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த்துட‌ன் கூடிய‌ விடுமுறை போன்ற‌ ப‌ல‌ உரிமைக‌ளையும் பெற்றுக் கொடுத்த‌து.

அன்றைய‌ மேற்கைரோப்பாவில் வாழ்ந்த‌ பெண்க‌ள் இதையெல்லாம் நினைத்துக் கூட‌ பார்க்க‌ முடியாத நிலைமை இருந்த‌து. அந்த‌ வ‌கையில் பெண்ணிய‌ வ‌ர‌லாற்றில் செனோத்டெல் இய‌க்க‌ம் வ‌கித்த‌ ப‌ங்க‌ளிப்பு (க‌ம்யூனிச‌) எதிரிக‌ளாலும் இன்று வ‌ரை போற்ற‌ப் ப‌டுகின்ற‌து.

ப‌தினொரு வ‌ருட‌ங்க‌ளாக‌ இய‌ங்கிய‌ செனோத்டெல் அமைப்பு, 1930 ம் ஆண்டு ஸ்டாலினால் க‌லைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌ன் நோக்க‌ங்க‌ள் பூர்த்திய‌டைந்து விட்ட‌ன‌ என‌ அப்போது அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து. ஆனால் ஏற்க‌ன‌வே அமைப்பின் உள்ளே விரிச‌ல்க‌ள் ஆர‌ம்பித்து விட்ட‌ன‌.

அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை முன்மொழிந்த‌ குடும்ப‌ங்க‌ளை ம‌றுசீரமைக்கும் கொள்கைக்கு பெரும‌ள‌வு ஆத‌ர‌வு கிடைக்க‌வில்லை. பெரும்பாலான‌ பெண்க‌ள் க‌ல்வி க‌ற்ப‌தையும், வேலைக்கு போவ‌தையும் த‌ம‌து உரிமைக‌ளாக‌ க‌ருதினாலும் பார‌ம்ப‌ரிய‌ குடும்ப‌க் க‌ட‌மைக‌ளை மாற்றிக் கொள்ள‌ ம‌றுத்த‌னர்.

அதாவ‌து புரட்சியின் விளைவாக அளவுகடந்த சுத‌ந்திர‌ம் கிடைத்தாலும் பெண்களால் சில‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை ஒரே நாளில் மாற்ற‌ முடியாமல் இருந்தது. உதாரணத்திற்கு, சமைப்பது, பிள்ளை பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளை பல பெண்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை. இத‌ற்கு க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌. மேலும் மதப் ப‌ழ‌மைவாத‌த்தில் ஊறிய‌ ம‌த்திய‌ ஆசியப் பகுதிகளில் ப‌ல‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. குறிப்பாக‌, பொது இட‌ங்க‌ளில் பூர்காவை க‌ழ‌ற்றி வீசிய‌ முஸ்லிம் பெண்க‌ளுக்கு ப‌ழ‌மைவாதிக‌ளால் உயிர‌ச்சுறுத்த‌ல் விடுக்க‌ப் ப‌ட்ட‌து. சில‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

செனோத்டெல் பெண்ணிய‌த்தை ம‌ட்டும‌ல்லாது, க‌ம்யூனிச‌த்தையும் உய‌ர்த்திப் பிடித்த‌து. பெண்க‌ளே மாற்ற‌த்திற்கான‌ உந்து ச‌க்தி என்ற‌து. பெண்க‌ளின் விடுத‌லை மூல‌மே உண்மையான‌ சோஷ‌லிச‌ ச‌முதாய‌த்தை க‌ட்டியெழுப்ப‌ முடியும் என‌ ந‌ம்பிய‌து. சோவிய‌த் யூனிய‌ன் மீது ஆயிர‌ம் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இருந்தாலும் அது அனைத்துல‌க‌ பெண்க‌ளின் விடுத‌லைக்கு முன்னோடியாக‌ இருந்த‌து என்ற‌ உண்மையை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.

Wednesday, July 31, 2019

சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள்!

ஒரு காலத்தில் அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்து சென்று சோவியத் யூனியனில் குடியேறி இருந்தனர்! இன்று இதைச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் முப்பதுகளில் இருந்த உலகம் வேறு. அமெரிக்காவின் பங்குச் சந்தை நெருக்கடி காரணமாக, முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சோவியத் சோஷலிச பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அதைக் குறிப்பிடத் தவறவில்லை. உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கையில், சோவியத் யூனியனில் நாளுக்கொரு தொழிற்சாலை திறக்கப் படுவதாக தெரிவித்துக் கொண்டிருந்தன. இனிமேல் உலகம் முழுவதும் சோவியத்தின் சோஷலிச பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தான் ஒரே வழி என்பது பொதுவான வெகுஜன கருத்தாக இருந்தது.

இருபதுகளின் பிற்பகுதியில் ஸ்டாலின் கொண்டு வந்த ஐந்தாண்டுத் திட்டம் காரணமாக சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. இது அன்று உலகம் முழுவதும் தெரிந்த உண்மை. சோவியத் பொருளாதாரம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், ஒரு கட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கூட இல்லாத பற்றாக்குறை நிலவியது. சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டிருந்தனர். ஏற்கனவே ஏராளமான ஜெர்மன் பொறியியலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.

அன்றைய சோவியத் யூனியனில் பொறியியலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில், பொறியியலாளர் போன்ற அதிக சம்பளம் கிடைக்கும் மத்தியதர வர்க்க வேலைகள் உயர்வாகக் கருதப் படவில்லை. சோவியத் யூனியன் தொழிலாளர்களின் நாடு என்பதால், உடல் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் குறைவான சம்பளம் பெறுவதும், தொழிலாளி கூடுதலான சம்பளம் பெறுவதும் சாதாரணமான விடயம்.

அது மட்டுமல்ல, பொறியியலாளர், மருத்துவர் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளை செய்பவர்கள் குட்டி முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக கருதப் பட்டனர். அதாவது, அவர்கள் உடல் உழைப்பாளிகளை விட அதிகம் சம்பாதிப்பதால் பாட்டாளி வர்க்கத்தை அவமதிப்பார்கள் என்பதும் பொதுப் புத்தியில் உறைந்திருந்தது. இது ஜார் மன்னன் காலத்தில் இருந்த வர்க்க ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், புரட்சி நடந்து பதின்மூன்று வருடங்களே நிறைவடைந்த நிலையில் வர்க்க முரண்பாடுகள் முற்றாக மறைந்திருக்கவில்லை.

இதனால் ஒரு தொழிற்சாலையில் பெரும் சேதம் விளைவிக்கும் விபத்து நடந்தால் முதலில் குற்றம் சாட்டப் படுபவர் ஒரு பொறியியலாளராக அல்லது முகாமையாளராக இருப்பார். அவர் வேண்டுமென்றே நாசகார வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் படவும் இடமுண்டு. இது போன்ற காரணங்களினாலும் பலர் பொறியியலாளர் வேலை செய்ய முன்வராமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், உள்நாட்டில் இல்லாத மனித வளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய சோவியத் யூனியனில் ஏற்பட்டிருந்தது. 

ஏராளமான இலங்கையர்கள், இந்தியர்கள், வளைகுடா அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது போன்று தான், அன்றைய காலத்தில் அமெரிக்கர்கள் சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்றனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோவியத் யூனியன் பொன் விளையும் பூமியாகத் தெரிந்தது. 

அன்றைய காலகட்டத்தில் முழு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியன் மட்டுமே பணக்கார நாடு என்று சொல்லும் தரத்தில் இருந்தது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப் பட்டிருந்தன.  ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், நோர்வே, பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருந்து பொறியியலாளர்கள் வேலை தேடி சோவியத் யூனியனுக்கு சென்றனர்.

இருப்பினும், அமெரிக்க தொழில்நுட்ப அறிவுக்கு சோவியத் யூனியனில் அதிக மதிப்பு இருந்தது. ஆகையினால், சோவியத் யூனியன் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  அமெரிக்கர்களின் சோவியத் நோக்கிய புலம்பெயர்வு, மூன்று வகையாக நடந்தது. ஒன்று, தாமாகவே வேலை தேடிச் சென்றவர்கள். இரண்டு, வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தக் கூலிகளாக அனுப்பப் பட்டவர்கள். மூன்று, அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் உருவான தொழிற்துறை கட்டுமானங்களில் பணியாற்ற அனுப்பப் பட்டவர்கள். 

அன்றைய அமெரிக்காவில் நிலவிய கொடூரமான இனவெறிக் கொள்கை காரணமாக, ஏராளமான கறுப்பின மக்களும் சோவியத் யூனியனில் குடியேற விரும்பினார்கள். அங்கு அவர்கள் சம உரிமை பெற்ற மனிதர்களாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப் பட்டனர். அந்த வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. மேலும் சர்வதேச மட்டத்தில், "இனப்பாகுபாடு பாராட்டும் முதலாளித்துவ அமெரிக்காவை விட, சகல இனத்தவரையும் சமமாக நடத்தும் சோஷலிச சோவியத் நாடு சிறந்தது" என்று சோவியத் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

கறுப்பர், வெள்ளையர் பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில்  தொழிற் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், பொறியியலாளர்களுக்கு சோவியத் யூனியனில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதிக சம்பளமும் கிடைத்தது. சம்பளத்தில் ஒரு பகுதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலப் படும். அதை விட, மாதம் 200-300 ரூபிள்கள் கையில் கிடைக்கும். 

புலம்பெயர்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், சராசரி சோவியத் சம்பளத்தை விட இரண்டு அல்லது மூன்று  மடங்கு அதிகம். இது வெளிநாட்டு தொழில் முகவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது.  மேலும், சோவியத் நாட்டில் உணவுப் பொருட்கள் மிகவும் மலிவு. மருத்துவ வசதி இலவசம். பிள்ளைகளுக்கான கல்வியும் இலவசம். இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்தால் யார் தான் மறுக்கப் போகிறார்கள்? ஒப்பந்தப் படி, ஓர் அமெரிக்க வேலையாள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று வரலாம். 

சோவியத் யூனியனுக்கு புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கர்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில்  சென்றவர்கள் தான் பெரும்பான்மை. குறிப்பிட்ட அளவினர் கம்யூனிச சித்தாந்தம் மீதான ஈடுபாடு காரணமாக சென்றனர். இவ்விரண்டு பிரிவினரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தாமுண்டு வேலையுண்டு என இருந்து விட்டனர். அதே நேரம்,மலிவு விலையில் மது கிடைக்கிறது என்ற ஆசையில் சென்று, குடித்து விட்டு தகாராறுகளில் ஈடுபட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் எந்த மன்னிப்பும் இன்றி திருப்பி அனுப்பப் பட்டனர்.

அன்றைய உலகப் பொருளாதார நிலைமையில், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் கூட சோவியத் யூனியனில் முதலிடுவதற்கு தாமாக விரும்பி முன்வந்தன. இது இரண்டு தரப்பிற்கும் ஆதாயம் கிடைக்கும் விடயம். சோவியத் அரசுக்கு அந்நிய தொழில்நுட்ப அறிவு ஆதாயமாகக் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான  பொருளாதாரத்தை கொண்ட நாட்டில் முதலிட்டு இலாபம் சம்பாதிக்க முடிகிறது. 

இந்த முதலீடுகள் அனைத்தும் Joint Venture பாணியிலான கூட்டு முயற்சியாக அமைந்திருந்தன. அதாவது, புதிதாக உருவாக்கப்படும் தொழிலகம் ஒன்றில் சோவியத் அரசும், வெளிநாட்டு நிறுவனமும் சரிசமமான பங்குகளில் முதலீடு செய்யும். தொழிலகத்தில் உற்பத்தி அதிகரிக்கும் நேரம் விற்பனையால் கிடைக்கும் இலாபப் பணம் சரிசமமாக பங்கிடப்படும். ஒப்பந்த காலம் வரையில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் தனது பங்குகளுக்கான இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் தொழிலகம் முழுவதும் சோவியத் அரசுடமையாகி விடும்.

1929 ம் ஆண்டு சோவிய‌த் அர‌சுக்கும் அமெரிக்க‌ Ford நிறுவ‌ன‌த்திற்கும் இடையில் ஓர் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப் ப‌ட்ட‌து. இத‌ன் விளைவாக‌, நிஸ்னி நொவ்கொரொத் (Nizhny Novgorod) ந‌க‌ரில் ஒரு பிர‌மாண்ட‌மான‌ கார் த‌யாரிக்கும் தொழிற்சாலை க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ அமெரிக்க‌ பொறியிய‌லாள‌ர்க‌ள், தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ள் சோவிய‌த் யூனிய‌னில் த‌ங்கி இருந்து வேலை செய்த‌ன‌ர். இதற்காக புதியதொரு நகரம் நிர்மாணிக்கப் பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்வோர் தங்குவதற்கான வீடுகள் மட்டுமல்லாது, மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றனவும் புதிதாக கட்டப் பட்டன.

ஒப்ப‌ந்த‌ப் ப‌டி, சோவிய‌த் அர‌சு முத‌லாவ‌து வ‌ருட‌ம் குறிப்பிட்ட‌ள‌வு போர்ட் கார்க‌ளை வாங்குவ‌தாக‌ தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து. இரண்டாவது வ‌ருட‌ம் அமெரிக்காவில் இருந்து த‌ருவிக்க‌ப் ப‌ட்ட‌ வாக‌ன‌ உதிரிப் பாக‌ங்க‌ள் சோவியத் யூனியனில் பொருத்த‌ப் ப‌டும். மூன்றாவது வருடம் சோவியத் உதிரிப் பாகங்களை கொண்டு அமெரிக்கக் கார் தயாரிக்கப் படும். நான்காவது வருடம் கார் முழுவ‌தும் சோவியத் தயாரிப்பாகவே இருக்கும்.

ஒப்பந்தப் படி, ப‌த்தாண்டுக‌ளுக்குள் போர்ட் நிறுவ‌ன‌ம் த‌ன‌து பேட்ட‌ன்ட் உரிமையையும், தொழில்நுட்ப‌ அறிவையும் சோவிய‌த் அர‌சிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். திட்ட‌மிட்ட‌ ப‌டி ப‌த்தாண்டுக‌ளுக்குள் தொழிற்சாலை முழுவ‌தும் சோவிய‌த் வ‌ச‌மாகிய‌து. அன்று அமெரிக்க‌ர்க‌ள் க‌ட்டிய‌ கார் தொழிற்சாலை GAZ என்ற‌ பெய‌ரில் இப்போதும் இய‌ங்கிக் கொண்டிருக்கிற‌து. இடையில் முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப் பட்டிருந்தாலும், அது அமெரிக்கர்கள் கட்டிய தொழிற்சாலை என்ற வரலாற்று உண்மையை மறைக்க முடியாது.

ஸ்டாலின்கிராட் நகரில் டிராக்டர்கள் உற்பத்தி செய்வதற்காக கட்டப் பட்ட தொழிற்சாலை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியால் உருவானது தான். இன்று அது Volgograd Tractor Plant என்று அழைக்கப் படுகின்றது. அமெரிக்காவில் தொழிற்துறை வளாகம் கட்டுவதில் சிறந்து விளங்கிய, பிரபலமான Albert Kahn Associates Inc நிறுவனம் தான் அந்த டிராக்டர் தொழிற்சாலையை கட்டிக் கொடுத்தது. இதற்காக ஆயிரக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள் தருவிக்கப் பட்டனர். முப்பதுகளில் உற்பத்தியை தொடங்கிய காலத்திலேயே மில்லியன் கணக்கான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு, சோவியத் நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் பாதிக்கப் பட்ட கட்டிடங்களில் டிராக்டர் தொழிற்சாலையும் ஒன்று. யுத்தம் முடிந்த பின்னர் மீளக் கட்டியெழுப்ப பட்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அமெரிக்கர்கள் ஆற்றிய பங்களிப்பு மறைக்கப் பட்ட காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் உருவான பனிப்போர், அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் எதிரிகளாக்கி விட்டது. அதற்குப் பின்னர் எதிரி நாட்டுப் பிரஜைகள் தனது நாட்டில் இருப்பதை சோவியத் அரசு வெளிப்படுத்த விரும்பவில்லை. மறுபக்கத்தில், அமெரிக்க அரசு தனது நாட்டுப் பிரஜைகள் சோவியத் யூனியனின் இருந்தனர் என்ற தகவல்கள் முழுவதையும் இருட்டடிப்பு செய்தது. போரினால் பாதிக்கப் பட்ட அமெரிக்கப் பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரி தூதுவராலயத்திற்கு அனுப்பிய கடிதங்கள் கூட உதாசீனம் செய்யப் பட்டன.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர்ந்த குடியேறிகளின் நிலைமை மிக மோசமாகி விட்டது. நாடு முழுவதும் நிலவிய போர்ச் சூழல் காரணமாக எல்லோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தேசப் பாதுகாப்பை காரணமாகக் காட்டி நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டவரும் தப்பவில்லை. ஒரு சில அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டதும், ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே போர் முடிந்த பின்னரும் சோவியத் யூனியனில் தங்கி இருந்தனர்.


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரைக்கான பல ஆதாரங்கள் அமெரிக்க ஊடகவியலாளர் H.R. Knickkerbocker எழுதிய De Roode Handel dreigt எனும் நூலில் இருந்து எடுத்திருக்கிறேன். நெதர்லாந்தில், டச்சு மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பாக A.W. Sijthoff's uitgeversmij n.v. பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலை வாங்கினேன்.)

Sunday, February 03, 2019

"என் முதல் ஆசிரியர்" - பெண்களை படிக்க வைத்த கம்யூனிச "கொடுங்கோன்மை(?)"


"என் முதல் ஆசிரியர்"- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)" பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.

 சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப் பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாள அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப் பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப் பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப் பட்டது தான் "என் முதல் ஆசிரியர்" எனும் குறுநாவல்.

இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.

இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விபரிக்கிறது.

அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கலியாணம் செய்து வைக்கப் படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப் படுகிறார்.

துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.

நகரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் அல்டினாய் மறக்காமல் தூய்ஷனுக்கு கடிதங்கள் எழுதுகிறாள். அவற்றில் தனது காதலை மென்மையாக வெளிப்படுத்துகிறாள். இருப்பினும் ஆசிரியர் தூய்ஷனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சில வருடங்களுக்கு பின்னர் குக்கிரி கிராமத்திற்கு திரும்பும் அல்டினாய் அங்கு தூய்ஷனை காண முடியாமல் ஏமாற்றம் அடைகிறாள். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டதால் தூய்ஷன் போர்முனைக்கு சென்று விட்டதாக அறிந்து கொள்கிறாள்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுக்களைப் போன்று "உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து" ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப் பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, "பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!" என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
நூலில் இருந்து ஒரு பகுதி:  
//குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு போக வேண்டும் என்று கூறும் இந்த அறிவிப்புக்கு விரோதமாக நீங்கள் நிற்கிறீர்களா? இதில் சோவியத் அரசாங்க முத்திரை குத்தப் பட்டுள்ளது. உங்களுக்கு வயலும் தண்ணீரும் கொடுத்தது யார்? உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?.... நாமனைவரும் ஏழை விவசாயிகள். நம் வாழ்க்கை முழுவதும் நம்மை இழிவுபடுத்தி உதைத்துத் தள்ளினார்கள். நாம் கும்மிருட்டில் இதுவரை வாழ்ந்து விட்டோம். சோவியத் அரசாங்கம் நாம் ஒளியைப் பார்க்க வேண்டும் என்கிறது. இதற்காகவே நம்முடைய பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிறேன்.// 

பிற்குறிப்பு:
இந்த நாவல் சிங்களத்தில் "குரு கீதய" என்ற பெயரில் ஒரு திரைப்படமாக வந்துள்ளது.

Friday, March 16, 2018

நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்"

சோவியத் யூனியனுக்குள் நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்".

ஒரு நோர்வே நாட்டு உளவாளியின் வாக்குமூலம்.

பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்திற்குள் உளவு பார்ப்பதற்கும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், நேட்டோ நாடுகளை சேர்ந்த உளவாளிகள் ஈடுபடுத்தப் பட்டனர். 

ஊடுருவல் குறித்து, பல தடவைகள் சோவியத் ஒன்றியம் முறையிட்டு வந்த போதிலும், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும், அந்தக் குற்றச்சாட்டுகளை "கம்யூனிச பிரச்சாரம்" என்று நிராகரித்து வந்தன. தற்போது, நோர்வே நாட்டு சி.ஐ.ஏ. உளவாளி ஒருவர், மரணப் படுக்கையில் இருக்கையில் அந்த இரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

வடக்கு நோர்வேயில் வாழ்ந்த, ஒரு சாதாரண பாடசாலை ஆசிரியரான Arne Lund, தான் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற தகவலை, தனது ஆறு மகள் மாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இறுதியாக, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்கு அந்த இரகசியத்தை தெரிவித்தார். இவரைப் போன்ற நேட்டோ உளவாளிகள் பலர் இருந்த போதிலும், முன்னாள் உளவாளி ஒருவர் தனது செயல்கள் பற்றிய வாக்குமூலம் கொடுத்துள்ளமை, இதுவே முதல் தடவை.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த Arne Lund, தனது நடவடிக்கைகள் பற்றி, மனைவியிடம் கூட கூறாமல் மறைத்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருப்பதைக் கண்ட மனைவி, விஷயம் தெரியாமல், அவர் மேல் சந்தேகப் பட்டிருக்கிறார். 

சி.ஐ.ஏ. இவரை ஊடுருவல் பணியில் ஈடுபடுத்திய காலத்தில் எல்லாம், வேறு இடத்திற்கு படிக்கச் செல்வதாக கூறியுள்ளார். Arne Lund, வட நோர்வேயில் உள்ள Hammerfest எனுமிடத்திற்கு கப்பலில் சென்று, சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்திப்பார்.

அவர்கள் பின்லாந்து எல்லையோரம் உள்ள, Karasjok எனும் நகரத்திற்கு செல்வார்கள். அங்கிருந்து சாதாரண பேரூந்து வண்டியில் ஏறி, பின்லாந்தில் உள்ள Ivalo என்ற இடத்தை சென்றடைவார்கள். 

இவாலோ நகரில் இருந்து தான், சோவியத் யூனியனுக்குள் ஊடுருவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். சோவியத் நாட்டு எல்லையோரம் உள்ள Virtaniemi, மற்றும் Raja-Jooseppi ஆகிய பின்னிஷ் நகரங்கள், நேட்டோவின் ஊடுருவல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப் பட்டு வந்தன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லை கடந்து செல்வதற்கு, பின்லாந்து நாட்டு உளவாளி ஒருவர் உதவுவார். தான் சி.ஐ.ஏ. இடம் இருந்து எவ்வளவு சம்பாதித்தேன் என்று சொல்லாத ஆர்னே லுண்ட், பின்னிஷ் உளவாளிக்கு ஒரு வருட, அல்லது இரு வருட சம்பளப் பணம் கொடுக்கப் பட்டதாக தெரிவித்தார். ஆயுதங்களுடனும், தொலைத்தொடர்புக் கருவிகளுடனும், சோவியத் யூனியன் பிரதேசத்திற்குள் ஊடுருவும் நேட்டோ அணியினர், உளவறிந்த பின்னர் திரும்பி வருவது வழக்கம்.

குறைந்தது ஏழு தடவைகள், அவ்வாறு சோவியத் நாட்டுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாக, ஆர்னே லுண்ட் தெரிவித்தார். ஆனால், கடைசித் தடவையாக நடந்த ஊடுருவலில் தவறு நேர்ந்து விட்டது. தற்செயலாக சோவியத் பாதுகாப்புப் படையினரின் கண்களில் சிக்கியுள்ளனர். 

அதனால், நேட்டோ ஊடுருவல் அணியினர், எதிரில் வந்த மூன்று சோவியத் படையினரை சுட்டுக் கொன்று விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். ஆர்னே லுண்ட், தன்னிடம் இருந்த சைலன்சர் பூட்டிய துப்பாக்கியால், அவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆர்னே லுண்ட் விவரித்த இரகசிய ஊடுருவல்கள் யாவும், ஐம்பதுக்களில், அறுபதுகளில் இடம்பெற்றவை. எண்பதுகளில் ஒரு தடவை, நேட்டோ ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்ததாக சோவியத் அரசு அறிவித்திருந்தது. அப்போது அதனை யாரும் பொருட் படுத்தவில்லை. அமெரிக்க ஆதரவாளர்கள், அந்த செய்தியை "வழமையான சோவியத் பிரச்சாரம்" என்று புறக்கணித்து வந்தனர்.

பனிப்போர் காலத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, ஆர்னே லுண்ட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், "Agentens skriftemål" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வீஜிய NRK1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆவணப் படத்திற்கான இணைப்பு:
Brennpunkt , Agentens skriftemål
https://tv.nrk.no/serie/brennpunkt/mdup11001913/29-10-2013

Monday, February 19, 2018

ஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்


எதற்காக எல்லோரும் ஸ்டாலினை "சர்வாதிகாரி" என்று சொல்கிறார்கள்? ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட உண்மைக் கதை இது:

ஸ்டாலினின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், பொது மக்களின் பணத்தை சுருட்டி வந்தார். அந்தப் பணத்தில், மாஸ்கோ நகருக்கு வெளியே ஆடம்பரமான பங்களா வீடொன்றை கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்ததும், ஸ்டாலின் அவரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

"அமைச்சரே! உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பமா?"
"ஆமாம், எனக்குப் பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது." என்றார் அமைச்சர் ஆர்வத்துடன்.
"நல்லது. அப்படி என்றால் நீங்கள் புதிதாக கட்டிய அந்தப் பெரிய வீட்டை, சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு தானமாக கொடுத்து விடுங்களேன்?" என்றார் ஸ்டாலின் அமைதியாக. 
(நன்றி: The Red Executive, by David Granick (1960))

ஸ்டாலின் கால சோவியத் யூனியன், இன்றைய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பல மடங்கு முற்போக்கானதாக இருந்துள்ளது. தனி நபர் சுதந்திரத்தை மதிப்பதில் சிறந்து விளங்கியது. இந்த 21 ம் நூற்றாண்டிலும், மேற்குலகம் அதை எட்டிப் பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

1920 ம் ஆண்டில், ரஷ்யாவின் முஸ்லிம் பிரஜைகள் விரும்பினால் ஷரியா சட்டம் வைத்திருப்பதற்கு, ஸ்டாலின் அனுமதி வழங்கி இருந்தார். இன்று மேற்குலக "ஜனநாயக நாடுகள்" செய்வதைப் போன்று, ஷரியா நடைமுறைப் படுத்தக் கேட்டவர்கள் மீது குண்டு போடவில்லை. தாராள மனதுடன் நடந்து கொண்டார்.

அதன் அர்த்தம், ஷரியா சட்டத்தின் பிற்போக்குத் தனங்களை எல்லாம், ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. ஸ்டாலின் ஒரு பக்கம், பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுத்த போதிலும், மறுபக்கம் நவீன கல்வி புகட்டுவதன் மூலம் அந்த மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க திட்டமிட்டார்.

அதனால், காலப்போக்கில் சோவியத் முஸ்லிம்கள் தாமாகவே ஷரியாவை கைவிட்டு விட்டு, நவீன உலகிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டார்கள். கல்வியறிவு பெற்ற மக்கள் பழமைவாதத்தில் இருந்து தம்மைதாமே விடுவித்துக் கொண்டார்கள். மேலும், பெண்களுக்கும் சம உரிமை கிடைத்த படியால், கணவனின் வன்முறைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும், உடலை மூடும் மேலங்கியை எடுப்பதற்கான உரிமை கோரவும் முடிந்தது.

இன்றைக்கும் "சுதந்திரம், ஜனநாயகம்" பேசும் மேற்கத்திய நாடுகளில், ஷரியா சட்டம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயமாக கருதப் படுகின்றது. பல இலட்சக் கணக்கில் முஸ்லிம் பிரஜைகளை கொண்டுள்ள நாடுகள் கூட, "ஷரியா என்றாலே தீவிரவாதம்" என்று, தமது மக்களுக்கு தவறான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், சோவியத் யூனியன் தோன்றிய காலத்தில், அங்கே ஷரியா சட்டம் தடை செய்யப் பட்டதாக மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது. ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்:

"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை. ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."

ஸ்டாலினின் முழுமையான உரையை வாசிப்பதற்கு: 
Congress of the Peoples of Daghestan
https://www.marxists.org/reference/archive/stalin/works/1920/11/13.ht

"நான் இறந்த பிறகு, எனது சமாதியின் மேல் குப்பைகளை வாரிக் கொட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், வரலாறு எனும் காற்று அவற்றையெல்லாம் கூட்டித் தள்ளி விடும்." - ஸ்டாலின்


Tuesday, May 09, 2017

சுயநிர்ணயம் என்பதன் அர்த்தம் அமெரிக்காவின் அடிமை நாடாவதல்ல!


சுய‌நிர்ண‌ய‌ம் என்ப‌து பிரிந்து த‌னி நாடாகி, பின்ன‌ர் அமெரிக்காவுக்கு அடிமை சாச‌ன‌ம் எழுதிக் கொடுப்ப‌த‌ல்ல‌. லெனின் கூறிய‌ பிரிந்து செல்வ‌த‌ற்கான‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை என்ப‌தன் அர்த்த‌ம், புதிய‌ முத‌லாளித்துவ‌ குடிய‌ர‌சுக‌ளை உருவாக்குவ‌த‌ல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில் ப‌ல‌ர், தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்லாது, சில தமிழ் இடதுசாரிகளும் த‌வ‌றாக‌ நினைத்துக் கொள்கிறார்க‌ள்.

சார் மன்னன் காலத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக உள்நாட்டுப் போர் மூண்டது. ஆரம்பத்தில் தலைநகரும் அதை அண்டிய பகுதிகளும் தான் போல்ஷெவிக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள் ரஷ்யாவின் பிறபகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின.

அந்த நிலையில், முதலாம் உலகப்போரை முடித்து வைக்கும் வகையில், 1918 ம் ஆண்டு, ஜெர்மனியுடன் Brest - Litovsk எனும் இடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப் படி, ரஷ்யாவின் மேற்கே இருந்த நாடுகள் ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் விடப் பட்டன. எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜெர்மனியுடன் பொருளாதாரத் தொடர்புகளை கொண்டிருந்தன. அதனால், ஜெர்மனி அவற்றை தனது செல்வாக்கு மண்டலமாக கருதியது.

1919 ம் ஆண்டு, ஜெர்மனி முற்றாகத் தோற்கடிக்கப் பட்ட பின்னரும், அவை தனி நாடுகளாக தொடர்ந்திருந்தன. இரண்டாம் உலகப்போரில் தான், அந்த நாடுகள் மீண்டும் சோவியத் யூனியனின் பகுதிகளாக ஒன்று சேர்க்கப் பட்டன. அந்தக் காலகட்டத்தில் தனி நாடுகளான பின்லாந்து, போலந்து ஆகிய இரண்டும் தொடர்ந்து சுதந்திரத்தை பேணுவதற்கு அனுமதிக்கப் பட்டன.

அதே நேரம், ஆர்மேனியா, ஜோர்ஜியா, அஸ‌ர்பைஜான் ஆகிய‌ நாடுக‌ள் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்துட‌ன் உட‌ன்ப‌டிக்கை செய்து கொண்டு த‌னி நாடுக‌ளாக‌ மாறின. அந்த‌க் கால‌த்திலும் "ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌ம்" என்ப‌த‌ன் அர்த்த‌ம் முத‌லாளித்துவ‌- ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ள் தான்.

ஜோர்ஜியாவில், தேசியவாதிகள் தலைமையில் ஒரு   மேற்கத்திய பாணி பாராளுமன்றம் உருவானது. அந்த அரசில் ஜோர்ஜிய சமூக ஜனநாயகக் கட்சி பங்குபற்றியது. அதே நேரம், ஜோர்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷெவிக் புரட்சியாளர்களை ஆதரித்தது.

மேற்படி தனி நாடுகள், குறைந்தது ஒரு வருடமாவது சுதந்திரமாக இருந்துள்ளன.  மேற்கத்திய முதலாளித்துவ வல்லரசுகள், அவற்றின் சுதந்திரத்தை பாதுகாத்தன. ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் உருவான கம்யூனிஸ்ட் அரசை ஒடுக்குவதற்கு, அந்த நாடுகளின் பூகோள அமைவிடம் பெரிதும் உதவியது.

அதாவது, அன்று ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரில், கம்யூனிசப் புரட்சிகர அரசை எதிர்த்துப் போரிட்டவர்கள், சார் மன்னனுக்கு விசுவாசமான படையினர் மட்டுமல்ல. பிரித்தானியா, பிரான்ஸ், செக்கோஸ்லோவாக்கியா என்று பன்னாட்டுப் படைகள் களமிறங்கி இருந்தன. ஒவ்வொருவரும் தமக்கென சில பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர். அத்தகைய குழப்பமான நிலையில் தான், மேற்படி நாடுகள் சுதந்திரமாக இருக்க முடிந்தது. அது மட்டுமல்ல, செச்னியா போன்ற ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் தனிநாட்டு விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தன.

லெனின் த‌லைமையிலான‌ போல்ஷேவிக்- கம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர், அந்த‌ நாடுக‌ளில் ஏற்க‌ன‌வே இருந்த உள்நாட்டு க‌ம்யூனிஸ்டுக‌ளுட‌ன் தொட‌ர்புக‌ளை எற்ப‌டுத்திக் கொண்ட‌ன‌ர். துருக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய மத்திய ஆசிய பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் யாரும் இருக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில் பழமைவாத மதவாதிகளுக்கு எதிரான, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இனங்கண்டு ஊக்குவிக்கப் பட்டன. தமக்கு ஆதரவளித்தால், அவர்களை பதவியில் அமர்த்துவதாக கம்யூனிஸ்ட் செம்படை உறுதியளித்தது.

ரஷ்யாவில் நூற்றுக் கணக்கான வேறுபட்ட தேசிய இனங்கள் இருந்தன. மன்னராட்சிக் காலத்தில் அவை யாவும் ரஷ்யக் காலனிய நாடுகளாக இருந்தன. ஆர்மேனியா, ஜோர்ஜியா போன்ற வளர்ச்சி அடைந்த தேசிய இனங்களை கொண்ட நாடுகள் தாமாகவே தேசிய அரசுக்களை அறிவித்துக் கொண்டன. அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், சுல்த்தான் அரசாட்சியை கொண்டு வர முயன்றனர்.

அந்த நாடுகளில் எல்லாம், போல்ஷெவிக் கட்சிக்கு ஆதரவான அரசியல் சக்திகள் ஊக்குவிக்கப் பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற தேசியவாதிகள், மற்றும் மதவாதிகளுக்கு எதிராக அவர்களை கிள‌ர்ச்சி செய்ய‌ ஊக்குவித்தனர். ச‌ரியான த‌ருண‌த்தில் செம்படையை அனுப்பி ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள். பின்ன‌ர் அவை ஒவ்வொன்றாக இணைக்க‌ப் ப‌ட்டு, 1922 ம் ஆண்டு, தனித்தனி சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

செம்படையின் இராணுவ வெற்றி மட்டும் அதற்குக் காரணம் அல்ல. போரில் வென்ற பின்னர், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப் படும் என்று லெனின் வாக்குறுதி அளித்தமையும் ஒரு முக்கிய காரணம். சுயநிர்ணய உரிமை தொடர்பாக கட்சிக்குள் ஒருமித்த கருத்து நிலவவில்லை. அது அளவு கடந்தால் மார்க்சிய சர்வதேசியத்தை பாதிக்கும் என்று பலர் வாதாடினார்கள். 

சுயநிர்ணய உரிமையானது பல்லின மக்களுக்கானது மட்டுமே. அதன் அர்த்தம், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட தேசியவாத இயக்கங்கள் சுதந்திரமாக இயங்கலாம் என்பதல்ல. மக்கள் விரோதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டவர்களில் பல்வேறுபட்ட  தேசியவாதிகளும் அடங்கி இருந்தனர். ரஷ்ய பேரினவாதியாக இருந்தாலும், ஏதாவதொரு சிறுபான்மையினத்தை சேர்ந்த குறுந் தேசியவாதியாக இருந்தாலும் தண்டனை ஒன்று தான்.

சோவியத் யூனியனை கட்டியெழுப்பும் பணியில், Narkomnats என்ற சுருக்கப் பெயரிலான தேசிய விவகாரங்களுக்கான மக்கள் அதிகார சபை குறிப்பிடத் தக்க பங்காற்றியது. முன்பு சார் மன்னனின் கீழ் பணியாற்றிய மானிடவியல் அறிஞர்கள், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை ஏற்று வேலை செய்தனர். ரஷ்யாவில் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதற்கு அவர்களது உதவி தேவைப் பட்டது.

துறை சார்ந்த அறிஞர்கள், சோவியத் யூனியன் முழுவதும் பயணம் செய்து, பல்லின மக்களிடம் கேள்விக் கொத்துக்களை கொடுத்து நிரப்பிக் கொண்டனர். இனத்தின் பெயர், மொழியின் பெயர், நிரந்தரமான வாழிடம், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டனர். அதன் அடிப்படையில் எல்லைகள் பிரிக்கப் பட்டன.

தேசிய‌ங்க‌ளை பிரித்து, தேசிய‌ எல்லைக‌ளை தீர்மானித்து, சுய‌நிர்ண‌ய‌மும் வ‌ழ‌ங்கி விட்டால், அத‌ற்குப் பிற‌கு அந்த‌ நாடுக‌ள் என்ன‌ வேண்டுமானாலும் செய்து கொள்ள‌லாம் என்று அர்த்த‌ம் அல்ல‌. Gosplan என்ற‌ அர‌ச‌ திட்டமிடல் அதிகார சபை, சோவியத் நாடு முழுவதற்குமான பொருளாதார‌க் க‌ட்ட‌மைப்பை வ‌குத்த‌து. அது சந்தேகத்திற்கிடமின்றி சோஷ‌லிச பொருள் உற்ப‌த்தி முறையை கொண்டிருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ங்க‌ளின் தாயகங்களில் இருந்த சிறு கிராம‌ங்க‌ள் கூட‌, பொதுவுடைமைக் கூட்டுற‌வுப் ப‌ண்ணைத் திட்ட‌த்திற்கு த‌ப்ப‌வில்லை. ஏனெனில், சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்திற்குள், இன்னொரு சிறுபான்மை தேசிய இன‌ம் இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட‌க் கூடாது. எந்த‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்தாலும், ச‌ம‌ உரிமை கொண்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

குறிப்பிட்ட‌ ஒரு தேச‌ம் விரும்பிய‌வாறு பொருளாதார‌ முடிவெடுக்க‌ விட்டிருந்தால், அது முத‌லாளித்துவ‌த்தை நாடிச் சென்றிருக்கும். அத‌ற்குப் பின்ன‌ர் அந்த‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்தில், இன்னொரு இன‌ம் ஒடுக்க‌ப் ப‌டும். இப்ப‌டியான‌ விரும்ப‌த் த‌காத‌ விளைவுக‌ள் த‌டுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பாட்டாளிவ‌ர்க்க‌ ச‌ர்வ‌தேசிய‌மே அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு த‌ரும்.

//அக்டோப‌ர் புர‌ட்சியான‌து முத‌லாளிகளையும், நில‌வுட‌மையாள‌ர்க‌ளையும் வீழ்த்திய‌தால், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ ம‌க்க‌ளின் தேசிய‌, கால‌னிய‌ அடிமைச் ச‌ங்கிலி உடைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னால், அனைத்து ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் ஒருவ‌ர் த‌வ‌றாது விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை விடுத‌லை செய்யாம‌ல் பாட்டாளிவ‌ர்க்க‌ம் த‌னது விடுத‌லையை பெற்றுக் கொள்ள‌ முடியாது. அக்டோப‌ர் புர‌ட்சியின் குண‌விய‌ல்பு பின்வ‌ருமாறு அமைந்திருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லையான‌து, தேசிய‌ங்க‌ளுக்கு இடையிலான‌ வெறுப்புண‌ர்வு, இன‌ மோத‌ல்க‌ளை கொண்டிருக்க‌வில்லை. அத‌ற்கு மாறாக, ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளை சேர்ந்த‌ தொழிலாள‌ர்க‌ள், விவ‌சாயிக‌ளின்‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கை, ப‌ர‌ஸ்ப‌ர‌ ச‌கோத‌ர‌த்துவ‌ம் மூல‌ம் விடுத‌லை பெற்றுக்கொள்ள‌ப் ப‌ட்ட‌து.

தேசிய‌வாத‌த்தின் பெய‌ரால் அல்ல‌, ச‌ர்வ‌தேசிய‌த்தின் பெய‌ரால் தான் ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லை சாத்தியமாகிய‌து.//

- ஸ்டாலின் (அக்டோப‌ர் புர‌ட்சி நூலில் இருந்து.)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, October 08, 2016

70 ஆண்டு கால சோவியத் யூனியனின் தோல்விக்கு காரணம் என்ன? - ஒரு விவாதம்


கனடாவில் வாழும் பிரபலமான அரசியல் ஆர்வலரும், இலக்கிய விமர்சகருமான நடராஜா முரளிதரனுக்கும் எனக்கும் இடையில் பேஸ்புக்கில் நடந்த விவாதத்தை இங்கே தொகுத்துத் தருகின்றேன். பொதுவுடைமை மற்றும் சோஷலிச நாடுகள் குறித்து மேற்குலக ஊடகங்களினால் செய்யப்படும் பரப்புரைகளை உண்மையென்று நம்புவோருக்கு பதிலடி கொடுக்க இது உதவும். பலரது சந்தேகங்களை தீர்க்க உதவும்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடராஜா முரளிதரன், முன்னொருகாலத்தில் சுவிட்சர்லாந்திற்கான விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் எழுந்த முரண்பாடுகளால் விலகி, கனடாவில் அகதித் தஞ்சம் கோரி, தற்போதும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார். திரு.முரளிதரன் இன்றைக்கும் ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் அதிக அக்கறை கொண்டவராகவும், சமகால இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராகவும் காணப் படுகின்றார்.

கேள்வி: (Nadarajah Muralitharan) இதை எழுதியுள்ள "கலை" முன்னாள் சோவியத் யூனியனுக்குச் சென்று அங்குள்ள புத்திஜீவிகள், தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் பொதுவுடமைக்கட்சி அங்கத்தவர்கள் என்று சிலரையாவது சந்தித்துப் பேசி இது குறித்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை குறிப்பிடக் கூடியதாக இருந்திருக்கும். இதற்கான வசதி அவருக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் அப்படி எழுதுவதில்லை. அவர் சில புத்தகங்களையே நம்பி வாதங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்த அரசுகள் தங்களுக்கான தத்துவத்தை ஊட்ட முனைந்திருக்கிறார்கள் என்பதே எனது தரப்பு. அது உலகம் எங்கணும் நடந்திருக்கிறது. ஆயினும் வீழ்ச்சியடைந்த... அல்லது தங்களது பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா? என்பதையே நான் உரையாட விரும்புகின்றேன்.

பதில்: நான் அப்படி யாரையும் சந்திக்கவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? தொண்ணூறுகளுக்கு பிறகு, ஏராளமான ரஷ்யர்கள் நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அவர்களில் சிலர் எனது நண்பர்களாக இருந்தனர். முன்பு சோவியத் யூனியனில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல, நானே வெள்ளை ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள நண்பர்களுடன் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களை சந்தித்து பேசி இருக்கிறேன்.

//அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது// எதையும் ஆராயாமல் எழுந்தமானமாக பேசுவது தவறு. இது பற்றி நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனது வலைப்பூவில் ஏராளமான தகவல்கள் உள்ளன. பெரும்பான்மை மக்கள் நிராகரித்ததாக கூறுவது ஒரு மோசடி. ஏற்கனவே மேற்குலக ஊடுருவல்கள் இருந்தன. கோர்பசேவ் ஆட்சிக்கு வந்ததும் சமாதானம் என்ற பெயரில் வெளிப்படையாக நடந்து கொண்டார். அது ஊடுருவலுக்கு மேலும் வழிவகுத்தது. எல்சின் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டார். அங்கு நடந்ததும் ஒரு சதிப்புரட்சி. முதலாளித்துவ ஆதரவாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். மக்கள் அங்கீகாரத்துடன் அது நடக்கவில்லை. அப்படியானால் அக்டோபர் கிளர்ச்சி ஏன் நடந்தது? (பார்க்க: 3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி)

கேள்வி: ஏறத்தாள 70 வருடங்கள் நன்னெறிப் பாடம் புகட்டப்பட்ட ரஷியாவில் இன்று நடைபெறுகின்ற உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்தீர்களானால் விளையாடுகின்ற கறுப்பின வீரர்களைப் பார்த்து நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும் , கிண்டலடிப்பதையும் காணலாம். இது மற்றைய முதலாளித்துவ நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வெட்கக் கேடாக இருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் மதவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.

பதில்: //நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும்// சோவியத் யூனியன் இருந்த காலத்தில் நடந்திருந்தால் அவர்கள் ஜெயிலுக்கு போயிருப்பார்கள். நீங்கள் அதை மனித உரிமை மீறல் என்று கண்டித்து இருப்பீர்கள். முதலாளித்துவம் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுக்கிறது. நிறவெறிக்கும் சுதந்திரம். இப்போ உங்களுக்கு திருப்தி தானே? அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம்... நிறவெறிக்கும் சுதந்திரம்... இதைத் தானே எதிர்பார்த்தீர்கள்?

//பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.// இது முதலாளித்துவவாதிகளின் செயல். நீங்க என்ன சேம் சைட் கோல் போடுறீங்க? போலந்தும் அண்மையில் கத்தோலிக்க சபையுடன் சேர்ந்து கருக்கலைப்பு தடைச் சட்டம் கொண்டு வந்தது. அயர்லாந்தில் எப்போதுமே இருந்து வருகின்றது. என்ன ஸார் குழம்பிப் போனீங்களா?

கேள்வி: முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம். இன்று நடைபெறுகின்ற தேர்தல் அமைப்பிற்கு ஊடாகக் கொம்யூனிஸ்ட் கட்சியினால் ஏன் அங்கு தேர்தலில் வெல்ல முடியாமல் உள்ளது ? அங்குள்ள மக்கள் அங்கு நடைமுறையில் இருந்த பொதுவுடமை ஆட்சியாளர்களை வெறுத்தார்கள். நிராகரித்தார்கள். அது கொர்பச்சோவின் வழியாக நிகழ்த்தப்பட்டது. சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பதில்: நீங்கள் தான் முழுப் பூசணிக்காயை மறைக்கிறீர்கள். எதையும் ஆராயாமல் பேசுகின்றீர்கள். முதலாளித்துவவாதிகள் ஆளும் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். பண பலத்தால் அடக்கப் பார்ப்பார்கள். அவர்கள் புட்டின் மாதிரி ஒருவரை பதவியில் அமர்த்துவார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு விட மாட்டார்கள். வெளிப்படையாக நடக்கும் தேர்தல்கள் மட்டுமே உங்களது கண்களுக்கு தெரிகின்றன. அதற்குப் பின்னால் திரைமறைவில் நடக்கும் சங்கதிகள் வெளியே வருவதில்லை. முதலாளிகளும் அரசும் சேர்ந்து நடத்தும் ஆட்சி இது.

//சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.// சதிப்புரட்சியில் ஈடுபட்ட கும்பல்கள் ஒரு சில இடங்களில் சிலைகளை உடைத்தன. அதை சதிப்புரட்சி ஆதரவாளர்கள் தான் கொண்டாடினார்கள். ஆனால், பெரும்பாலான சிலைகள் இன்னமும் உள்ளன. நம்பாவிட்டால் நீங்களாகவே நேரில் சென்று பாருங்கள். உக்ரைனில் இருந்த லெனின் சிலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரின் போது உடைக்கப் பட்டன. அது செய்தியிலும் வந்தது.

கேள்வி: வரலாற்றுப் பெருமை வாய்ந்த சோசலிசப் பாரம்பரியத்தில் வந்த ரஷியாவில்..... சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ? இது குறித்த ஆச்சரியத்தின் வெளிப்பாடே எனது குறிப்பு!

பதில்: //சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ?// எதற்காக ருவாண்டாவிலும், இலங்கையிலும் இனவாதம் கூடுதலாக இருக்கிறது? பொருளாதாரப் பிரச்சினைகள் வரும் பொழுது அவை கூடவே வரும். மேற்குலக நாடுகளில் அவை வெளித்தெரியாமல் இருப்பதற்கு காரணம் அங்குள்ள செல்வந்த நிலைமை. வேலைவாய்ப்புகள். மேற்குலகிலும் எந்தவொரு நாட்டிலாவது பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட்டல், வேலைவாய்ப்புகள் குறைந்தால், நிறவாதமும், இனவாதமும் அதிகரிப்பதை காணலாம். உதரணத்திற்கு, கிரீஸ். அமெரிக்காவில் பொலிசாரால் கறுப்பின மக்கள் அடிக்கடி சுட்டுக் கொல்லப் படுகின்றனர். அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் வெளிப்படையாகவே இனவாதம், நிறவாதம் பேசுகின்றார். அதை எல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் மறைக்கும் காரணம் என்னவோ?

கேள்வி: சோவியத் யூனியனிலும் மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் பொதுவுடமை அரசுகள் தோல்வியுற்றதற்கு அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடி முக்கிய அம்சமாகும். இந்த நாடுகளில் மைய்யப்படுத்தப்பட்ட அரசிடமே அதிகாரங்கள் குவிந்திருந்தது. சோவியத்தில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நிலமைகள் அமையவில்லை. இந்த மைய்ய அரசுகள் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுப்பதில் பெருங்கவனம் செலுத்தாமல் தொழிற்சாலைகளைக் கட்டமைக்கும் திட்டங்களையே அமுல்படுத்தின. மேற்கத்தேய அரசுகளுடனான பனிப்போரினால் மொத்த தேசிய வருவாயின் பெரும்பகுதி ஆயுத உற்பத்திக்கும் அணு ஆராய்ச்சிக்கும் விண்வெளி ஆய்வுக்கும் போய் சேர்ந்தது. இது மிகப்பெரிய பிழையான அணுகுமுறையாகும். இந்தத் தவறினால் சோவியத் யூனியன் மிகப்பெரிய உணவுத்தட்டுப்பாடுகளைச் சந்திக்கலாயிற்று. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பணவீக்கம் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது. வறுமை உருவாகியது. உணவுப் பொருட்களை முதலாளித்துவ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்களுக்கு பொதுவுடமை ஆட்சி முறைமையில் அதிருப்தி ஏற்பட்டு ஆட்சியை மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

பதில்: பனிப்போர் காரணமாக ஏற்பட்ட ஆயுதப் போட்டி பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது உண்மை தான். ஆப்கானிஸ்தான் போரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அது சோவியத் யூனியனையும், பிற சோஷலிச நாடுகளையும் மட்டும் பாதித்தது என்று சொல்வது பொய். மேற்குலக நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. எண்பதுகளில் மேற்குலகில் வேலையில்லாப் பிரச்சினை அதிகமாக இருந்தது. உண்மையில், அரசியல் சூழ்ச்சிகளை விரைவு படுத்தி சோஷலிச நாடுகளை உடைத்தும் அதற்காகத் தான். ஐரோப்பிய ஒன்றியம் முன்னாள் சோஷலிச நாடுகளை காலனிகளாக சேர்த்துக் கொண்டது. நேட்டோவும் அவர்களை சேர்த்துக் கொண்டது. அதனால் அமெரிக்க ஆயுதங்களுக்கு புதிய சந்தை கிடைத்தது. அதனால் தான், மேற்குலகம் தனது பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிந்தது. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அதனால் உங்களுக்கும் தெரியாது.

கேள்வி: முதலாளித்துவ நாடுகளை ஒப்பிட்டு உதாரணம் காட்டாதீர்கள். அது பிழையானது. மோசடியானது. உதவாக்கரையானது என்று கூறி நிராகரித்துக் கொண்டு மனித சமூகத்தை மீட்கப் புறப்பட்ட நாடுகளின் அணுகுமுறையும் அது போன்றதே என்று பல இடங்களில் ஒப்புநோக்கி எழுதிக் கொண்டிருப்பதை என்னால் உள்வாங்க முடியாதுள்ளது.

பதில்: நீங்கள் குறிப்பிடும் "சோஷலிச" நாடுகள் கூட உண்மையில் முதலாளித்துவ நாடுகள் தான். இனவாதம் வளர்வதற்கு 25 வருட கால முதலாளித்துவம் போதாதா? இது ஒப்பீடு அல்ல. பொருளாதாரம். ஒரு நாட்டில் முதலாளித்துவ பொருளாதாரம் இருந்தால், அங்கு இனவாதமும், நிறவாதமும் தலைவிரித்தாடும். அது எதிர்பார்க்க வேண்டிய விடயம். அமெரிக்காவில் நிறவாதம் இன்னமும் மறையாமல் இருக்கிறது. ஏனைய நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகளில் முன்னொரு காலத்தில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அந்தக் காலத்தில் நிறவாதம், இனவாதம் இருக்கவில்லை. ஆனால், கடந்த தசாப்த காலமாக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகின்றது. வறுமை அதிகரிக்கிறது. கூடவே இனவாதம், நிறவாதமும் அதிகரிக்கிறது. முன்னாள் சோஷலிச நாடுகளும் கடந்த 25 வருடங்களாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றன. அங்கு வறுமை, வேலையில்லாப் பிரச்சினை மேற்குலகை விட அதிகமாக உள்ளது. அதனால் நிறவாதம், இனவாதம் வளரும் தானே? இதற்காக நீங்கள் முதலாளித்துவத்தை அல்லவா குறை கூற வேண்டும்?

கேள்வி: அப்படியாயின் 25 வருடங்களுக்கு முன் வேறு நிலை இருந்தது என்கிறீர்களா ?

பதில்: ஆமாம். நிச்ச‌ய‌மாக‌. பொருளாத‌ர‌ங்க‌ளை ஒப்பிடுங்க‌ள். நாடுக‌ளை அல்ல‌.

கேள்வி: சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் வெறுமனே பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல காரணம்! அந்த நாடுகளில் நிகழ்த்தப்பட்ட கடுமையான சர்வாதிகார ஆட்சி அமைப்பு முறைமைகளினால் பொதுமக்களுக்கு நிறைய அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தன. ரூமேனியாவில் சசெஸ்குவும் மனைவியும் அரசனும் அரசியுமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஸ்ராலினின் ஆட்சிக் காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என எண்ணிறைந்தோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சைபீரியச் சிறை நிறைந்து வழிந்தது. ஸ்ராலினின் ஆட்சி கொடூரமான சர்வாதிகார ஆட்சியாக அமைந்தது. வட கொரியாவில் பரம்பரை மன்னர் ஆட்சி தொடருகிறது.

பதில்: இவையெல்லாம் வழமையான எதிர்ப் பிரச்சாரங்கள். பொதுவாக எல்லா நாடுகளிலும் மக்கள் தமது பொருளாதார நலன்களை மட்டுமே சிந்திப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் பற்றி அதிக அக்கறை கொள்வதில்லை. அமெரிக்காவில் ஒபாமா ஆண்டாலும், புஷ் ஆண்டாலும் ஒன்று தான். அவர்கள் தமக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத் தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மேலும் அந்த நாட்டில் இரு கட்சி சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் போட்டி போடும். ஏனைய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது.

முன்னாள் சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை, சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பது ஒரு பொய்ப் பிரச்சாரம். ஜனநாயகம் என்பது நீங்கள் நினைப்பது போல பொதுத் தேர்தல்கள், பல கட்சி ஆட்சி முறை மட்டுமல்ல. அது ஒரு வகை ஜனநாயகம். முதலாளித்துவம், பாராளுமன்ற முறைமை நிலவிய ஆரம்ப காலங்களில் மேற்குறிப்பிட்ட ஜனநாயகம் இருக்கவில்லை. கடுமையான சர்வாதிகார ஆட்சி நடந்தது. ஜனநாயகம் வந்த போதும், பணக்காரர்களுக்கு மட்டுமே வாக்குரிமை கொடுக்கப் பட்டது.

சோஷலிச நாடுகள் இன்னொரு வகையான ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன. ஒரு தேசத்திற்குள், தாம் விரும்பியவாறு ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. கிராமிய மட்டத்தில், மாவட்டங்களில், மாகாணங்களில் நடக்கும் தேர்தல்களில் தனி நபர்கள் போட்டியிடுவார்கள். கட்சி சார்பாக மட்டுமல்லாது, சுயேச்சையாகவும் போட்டியிடலாம். ஆனால், பணபலம் காட்டி வெல்ல முடியாது.(அமெரிக்காவில் நிலைமை வேறு. மில்லியன் கணக்கான டாலர்கள் செலவளித்தால் தான் ஜெயிக்க முடியும்.) 

ஒரு சோஷலிச நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்ந்தெடுக்கப் படுவார். நீங்கள் குறிப்பிட்ட ஸ்டாலின், ஸௌசெஸ்கு எல்லோரும் ஜனநாயக வழியில் பதவியைப் பிடித்தவர்கள் தான். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை கூடும் பாராளுமன்றம் அவர்களது பதவிக் காலத்தை நீடிப்பதுண்டு. சிலநேரம், பிரித்தானியா போன்ற பாராளுமன்ற - மன்னராட்சி நாடுகளில், மகாராணி அல்லது மன்னர் இருப்பதைப் போன்ற சம்பிரதாயத் தலைவராகவும் இருப்பார். பிரித்தானியா மன்னருக்கு அதிகாரம் இல்லையென்று ஒரு சாட்டு சொல்லாதீர்கள். மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. அவரது ஒப்புதல் இன்றி எந்த சட்டமும் நிறைவேற்ற முடியாது. மேலும் அந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தில் மன்னர் குடும்பமும் ஒன்று.

கேள்வி: சோசலிச ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் அங்கு சமத்துவத்தை ஏற்படுத்துவதில் நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்தன. தனி மனித விருப்புகள் நசுக்கப்பட்டதாக மக்கள் உணர்ந்தனர். மக்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது உழைப்புக்கும் திறமைக்கும் ஆற்றலுக்கும் அமைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் இயல்பாக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். தேவையின் அடியில் வருமானத்தைக் குறைத்து திணிக்கப்படுகிற சமத்துவம் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அடுத்தவர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதை மக்கள் விரும்பவில்லை. தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தாங்களே வாழ விரும்பினர். பொது உடமை...கூட்டுறவு வாழ்க்கை.... தேவைக்கு ஏற்ற சம்பளம் ஆகியவற்றை அடிப்படைகளாக கொண்டு உருவாக்கப்படும் சமத்துவத்தை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்திர மனிதர்களாக வாழ அந்த மக்கள் விரும்பினார்கள். இதுதான் மனிதர்களின் அடிப்படை இயல்பு! அங்கு நிகழ்ந்த பொதுவுடமை ஆட்சி முறைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதுவும் அங்கு நடைபெற்ற பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

பதில்: இத‌ற்கும் ஏற்க‌ன‌வே ப‌தில் அளித்து விட்டேன். நீங்க‌ள் குறிப்பிடும் அந்த‌ "ம‌க்க‌ள்" யார்? சுய‌ந‌ல‌வாதிக‌ள், ப‌ண‌த்தாசை பிடித்த‌வ‌ர்கள், த‌ன்ன‌ல‌ம் க‌ருதுவோர், செல்வ‌ந்த‌ர்க‌ள், முத‌லாளிக‌ள்.... இவ‌ர்க‌ளைப் பற்றிய‌து தான் உங்க‌ள‌து க‌வ‌லை முழுவ‌தும். இதைத் தான் வ‌ர்க்க‌ப் பாச‌ம் என்று அழைப்பார்க‌ள். அதாவ‌து, மேட்டுக்குடி, ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் மீது உங்க‌ளுக்கு இய‌ல்பாக‌வே அனுதாப‌ம் எழுகிற‌து. அவ‌ர்க‌ள‌து ந‌ல‌ன்க‌ளை பற்றி ம‌ட்டுமே க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள்.

ஏற்க‌ன‌வே சொன்னேன். ம‌க்க‌ள் ம‌க்க‌ள் தான். சோவிய‌த் ம‌க்க‌ளும், ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் கொள்கையை நம்புகிறார்க‌ள். அதில் ஒரு பிரிவின‌ரை ப‌ற்றி தான் நீங்க‌ள் சொன்ன‌து. ஆனால் பெரும்பான்மை உழைக்கும் ம‌க்க‌ள் ப‌ற்றி நீங்க‌ள் அக்க‌றைப் ப‌ட‌வில்லை. ஏற்ற‌த்தாழ்வான‌ முத‌லாளித்துவ‌ ச‌முதாய‌த்தில் அவ‌ர்க‌ள் வ‌றுமையில் வாழ்கிறார்க‌ள். அதைப் ப‌ற்றி உங்க‌ளுக்கென்ன‌ க‌வ‌லை? ஒரு இட‌த்தில் மேடு இருந்தால் அதுக்கு அருகில் ப‌ள்ள‌ம் இருக்கும். அதே மாதிரி ப‌ண‌க்கார‌ன் மென்மேலும் ப‌ண‌க்கார‌ன் ஆவான். ஏழை மென்மேலும் ஏழை ஆவான். ஐயோ பாவ‌ம் பண‌க்காரன் க‌ஷ்ட‌ப் ப‌டுகிறானே என்று நீங்க‌ள் ப‌ரிதாப‌ப் ப‌டுகிறீர்க‌ள்.

கேள்வி: கலை.... அப்படி நான் பணக்கார வர்க்கத்துக்காகப் பரிதாபப்படுகிறேன் என்ற மாயையைத் தயவுசெய்து ஏற்படுத்த வேண்டாம். நான் அங்கு நடைபெற்ற உண்மைகளையே பேச விரும்புகிறேன். வரலாற்றைத் திரிபுபடுத்திப் பேசுவதால் இங்கு ஏதும் நிகழப் போவதில்லை.

பதில்: உங்க‌ள‌து க‌வ‌லை முழுவ‌தும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் ப‌ற்றிய‌து தான். அது மாயை அல்ல‌, உண்மை. க‌ன‌டா மாதிரியான‌ மேற்க‌த்திய‌ முத‌லாளித்துவ‌ நாடுகளில் த‌னிந‌ப‌ர்வாத‌ த‌த்துவ‌த்தை ஊட்டி வ‌ள‌ர்க்கிறார்க‌ள். அத‌ற்குக் கார‌ண‌ம், அப்போது தான் ப‌ண‌க்கார‌ர்க‌ளிட‌ம் எவ்வாறு செல்வ‌ம் சேர்கிற‌து ஆராய‌ மாட்டீர்க‌ள். அவ‌ர்க‌ள் தீய‌ வ‌ழியில் சேர்த்திருப்பார்க‌ள்... பேராசை பிற‌ப்புரிமை அல்ல‌வா? செல்வ‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்பாத‌ சுய‌ந‌ல‌ம் பெரித‌ல்ல‌வா? நாங்க‌ளும் அப்ப‌டியே இருக்க‌ வேண்டாமா? எல்லோருக்கும் வேலை வாய்ப்பிருந்த‌தால் அது த‌ப்பில்லையா? எல்லோரும் க‌ல்வி க‌ற்ப‌து கூடாது அல்ல‌வா? எல்லோருக்கும் ம‌ருத்துவ‌ வ‌ச‌தி கிடைப்ப‌து அநியாய‌ம் அல்ல‌வா? எல்லோரும் மூன்று வேளையும் சாப்பிடுவ‌து கூடாது அல்ல‌வா? அந்த‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கிய சோவிய‌த் யூனிய‌னும், சோஷ‌லிச‌ நாடுக‌ளும் நாச‌மாக‌ப் போக‌ட்டும். இப்போது இல‌ட்ச‌க் க‌ண‌க்கானோருக்கு வேலை இல்லை, செல‌வுக்கு ப‌ண‌ம் இல்லை, பிள்ளைக‌ளுக்கு ப‌டிப்பு இல்லை, ம‌ருத்துவ‌ வ‌ச‌தி இல்லை, சாப்பாட்டுக்கு வ‌ழியில்லை. இப்போது உங்க‌ளுக்கு ரொம்ப ச‌ந்தோஷ‌மாக‌ இருக்குமே? ஊர் உல‌கில் எவ‌ன் எக்கேடு கெட்டால் என‌க்கென்ன‌ என்று க‌ல்நெஞ்ச‌க்கார‌ர்க‌ளாக‌ வாழ‌ வேண்டும். அது தானே உங்க‌ள் கொள்கை? ந‌ல்ல‌ த‌த்துவ‌ம்!

இன்று நாம் அனுப‌விக்கும் உரிமைக‌ள் சும்மா வ‌ர‌வில்லை. சோவிய‌த் யூனிய‌ன் உருவான பின்ன‌ர் தான், உல‌க‌ம் முழுவ‌தும் நாங்க‌ள் இன்று அனுப‌விக்கும் ச‌லுகைக‌ள் கிடைத்த‌ன‌. சோவிய‌த் சாத‌னைக‌ள்: 
1. இல‌வ‌ச‌க் க‌ல்வி 
2. இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ம் 
3. அனைவ‌ருக்கும், பெண்க‌ளுக்கும் வேலைவாய்ப்பு 
4. இல‌வ‌ச‌ குழந்தை ப‌ராம‌ரிப்பு 
5. (வெளிநாடுக‌ளுக்கும்) இல‌வ‌ச‌ சுற்றுலாப் ப‌ய‌ண‌ம் 
6. வீட்டு வ‌ச‌தி, வாட‌கை மிக‌ மிக‌க் குறைவு, மின்சார‌ம், எரிவாயு செல‌வு மிக‌வும் குறைவு. 
 7. மிக‌க் குறைந்த‌ செல‌வில் பொதுப் போக்குவ‌ர‌த்து சேவை.

சோவிய‌த் யூனிய‌னால் உல‌க‌ம் முழுவ‌தும் கிடைத்த‌ ந‌ன்மைக‌ள்: 
1. எட்டு ம‌ணி நேர‌ வேலை 
2. வ‌ருட‌த்திற்கு ஒரு மாத‌ம் விடுமுறை. 
3. ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை பெண்க‌ளுக்கும்


கேள்வி: சோவியத் யூனியனுக்கு நாம் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை. அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள்தான் வேறு வகையான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஆகவே எங்களைக் குற்றம் சாட்டுவது அடாத்து.உலக வரலாறு நிலப்பிரபுத்துவத்தில் இருந்து இருந்து முதலாளித்துவத்துக்குள் நுழைந்த போது சில சீர்திருத்தங்களும் சில மாற்றங்களும் ஏற்பட்டன. உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் சீர்திருத்தவாதிகளும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் போராடிக் கொண்டிருந்தார்கள். பொதுவுடமைக் கொள்கைகள் உலகில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தின என்பதில் எனக்கு எவ்வித மறுப்பும் கிடையாது. இங்கு உங்களோடு நான் கதைப்பது சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பாவையும் பற்றியே!

பதில்: // சோவிய‌த் யூனிய‌னுக்கு நாம் எந்த‌ அழிவையும் ஏற்ப‌டுத்த‌வில்லை// இங்கே "நாம்" என்ப‌து யார்? முத‌லாளிய‌ வ‌ர்க்க‌த்தை குறிக்கிற‌தா? CIA நிதியில் இய‌ங்கிய‌ Radio Free Europe எப்ப‌டியான‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து தெரியுமா? உங்க‌ளுக்குத் தெரியுமா? மேற்கு ஐரோப்பாவில் அக‌தி த‌ஞ்ச‌ம் கோருவோருக்கு வேலையும், இருப்பிட‌மும் கொடுக்கும் முறை ஏன் எப்போது வ‌ந்த‌து? மேற்கு ஐரோப்பாவுக்கு சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஐரோப்பிய‌ அக‌திக‌ளை க‌வ‌ர்ந்திழுக்க‌ கொண்டு வ‌ந்த‌ திட்ட‌ம் அது. உண்மையில் மேற்கில் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம் தான். இல‌குவாக‌க் கிடைக்கும் கார் போன்ற‌ ஆட‌ம்ப‌ர‌ப் பாவ‌னைப் பொருட்க‌ளும் உண்டு. 

அதிக‌ம் போக‌த் தேவையில்லை. நீங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளைப் பாருங்க‌ள். எத்த‌னை பேர் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் க‌வ‌ர்ச்சியில் ம‌ய‌ங்கி வ‌ருகிறார்க‌ள்? ஐரோப்பா வ‌ந்த‌வுட‌ன் சொந்த‌ வீடு, கார், என்று பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்? அதே நிலைமையில் தான் கிழ‌க்கு ஐரோப்பாவில் இருந்து வ‌ந்த‌ அக‌திக‌ளும் இருந்த‌ன‌ர். 

RFE வானொலியும் "மேற்கு ஐரோப்பாவுக்கு வாருங்க‌ள்... தேனும் பாலும் ஆறாக‌ ஓடுகிறது..." என்று ஆசை காட்டிய‌து. இதை விட‌ BBC, VOA வானொலிகளும் அந்த‌ ம‌க்க‌ளை குறி வைத்து பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌. ந‌ம‌து ம‌க்க‌ளில் எத்த‌னை பேர் அமெரிக்க‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்து விட்டு மேற்குல‌கில் எல்லோரும் ப‌ண‌க்கார‌ வாழ்க்கை வாழ்வ‌தாக‌ நினைக்கிறார்க‌ள் தெரியுமா? அதே தான் இங்கேயும்...

சோவிய‌த் யூனிய‌ன் வீழ்ச்சி அடையும் என்று ம‌க்க‌ள் எதிர்பார்க்க‌வுமில்லை, விரும்ப‌வுமில்லை. மேற்க‌த்திய‌ கைக்கூலிக‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ ஆட்சிக் க‌விழ்ப்புக்கும் ம‌க்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை. போல‌ந்தில் ம‌ட்டும் விதிவில‌க்கு. ஆனால் போலிஷ் ம‌க்க‌ள் க‌த்தோலிக்க‌ அடிப்ப‌டைவாதிக‌ளாக‌வும், தேசிய‌வாதிக‌ளாக‌வும் இருந்த‌ன‌ர். அர‌சிய‌லில்‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ நிறுவ‌ன‌த்தின் த‌லையீட்டை த‌டுக்க‌ முடிய‌வில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் க‌ட்சிக்குள் இருந்த‌ முத‌லாளிய‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள்.

பெரும்பாலான‌ ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்ப‌து தெரியாது. ப‌ல‌ர‌து நினைப்பு என்ன‌வென்றால், சோஷ‌லிச‌ கால‌த்தில் அனுப‌வித்த‌ ச‌லுகைக‌ள் அப்ப‌டியே இருக்கும் என்ப‌து தான். ஆனால் முத‌லாளித்துவ‌ம் நாட்டைக் கைப்ப‌ற்ற‌ இட‌ம் கொடுத்த‌து எவ்வளவு பெரிய‌ த‌வ‌று என்று பிற‌கு தான் தெரிந்த‌து. அர‌பிக் கார‌னின் கூடார‌த்திற்குள் ஒட்ட‌க‌த்திற்கு இட‌ம் கொடுத்த‌ க‌தை தெரியும் தானே?

கேள்வி: நாம் என்பதில் நான் என்பவன் இன்றைக்கும் கனடாவில் எவ்வித அடிப்படை உரிமைகளும் அற்று வாழ்பவன். எப்பவும் என்னைக் கனடிய அரசு நாடு கடத்த முடியும். மற்றும் எவ்வகையான அதிகார அமைப்புகளையும் சார்ந்து இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஒரு சாமானியனாகவே எனது கருத்துகளை இங்கு முன் வைக்கின்றேன். 18 ஆம் நூற்றாண்டில் உரிமைகளுக்காக பிரிட்டனிலும் பிரான்சிலும் நிகழ்ந்த போராட்டங்கள்! பிரிட்டனின் "சாட்டிஸ்ட்" இயக்கம்! Chartism, British working-class movement for parliamentary reform named after the People’s Charter, a bill drafted by the London radical William Lovett in May 1838...

பதில்: நீங்கள் இப்போ தான் சார்ட்டிஸ்ட் இயக்கம் பற்றிப் படிக்கிறீர்கள். உலகம் எங்கேயோ சென்று விட்டது நண்பரே! விஞ்ஞான சோஷலிசம் உருவாகி 150 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் குறிப்பிட்ட சோஷலிச நாடுகள் எல்லாம் அதை நடைமுறைப் படுத்தி ஓய்ந்து விட்டன...

கேள்வி: நல்லது.... உங்களது உலகம் அனைத்தையும் கற்றுக்கொண்ட மேதமைக்காக! வெறும் சோவியத்தில் மட்டும் அனைத்துமே நிகழ்ந்தது என்று நீங்கள் போர்த்த முனையும் போர்வைக்கு அப்பால் பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன என்பதை சுட்டுவதற்காகவும்... ஞாபகப்படுத்துவதற்காகவுமே "சாடிஸ்ட்" பற்றிக் கொணர்ந்தேன்! இவ்வகையான எண்ணிறைந்த போராட்டங்கள் வழியாகத்தான் மனித வரலாறு நகர்ந்திருந்திருக்கின்றது. மற்றும் நான் வரலாற்றைக் கற்றுக்கொண்டிருக்கும் "எளிய மாணவன்" தான்! இதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை.

பதில்: அதைத் தான் நானும் சொல்கிறேன்: //பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன // ஏற்கனவே உலகில் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி பிரான்ஸ் நாட்டில் தோன்றியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை நீங்கள் வாசித்தும் இருக்கிறீர்கள். பொதுவுடைமை எதிர்ப்பாளர்கள் தான் எடுத்ததற்கு எல்லாம் ரஷ்யா... ரஷ்யா... என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் விளங்கப் படுத்தி இருக்கிறேன். (அதையும் வாசித்து இருக்கிறீர்கள்.) நீங்கள் இங்கு குறிப்பிட்ட சாட்டிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, உத்தோப்பியா சிந்தனையும் 18 ம் நூற்றாண்டில் இருந்தது. உலகில் ஏற்றத் தாழ்வை ஒழிப்பதற்கும் அனைவருக்கும் செல்வம் பகிர்ந்தளிக்கப் படுவதற்கும், 19 ம் நூற்றாண்டில் விஞ்ஞான ரீதியான சோஷலிச கோட்பாடுகள் உருவாக்கப் பட்டன. அதை நீங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பணக்காரருக்கு ஆதரவாகப் பேசுவது ஒரு மாயை என்றீர்கள். அதுவே உங்களது மனச்சாட்சி. அதாவது உங்களால் பணக்காரர்களை நியாயப் படுத்த முடியவில்லை.

கேள்வி: பிரான்ஸ் பற்றி நீங்கள் குறிப்பிட்டது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் எல்லையைத் தாண்டி அதீதமாக எதனையும் ஆகா...ஓகோ...என்று மெச்சுகிற பொழுது அதன் நம்பகத்தன்மை தகர்ந்து விடுகிறது. நடுநிலையோடு வரலாறுகள் அனைத்தையும் ஆராய வேண்டியுள்ளளது. அதன் மூலமே தவறுகளையும், பிழைகளையும் களைய முடியும். "சுயவிமர்சனம்" என்பதன் அர்த்தம் என்ன ? சுயவிமர்சனம் இல்லாமல் வரலாற்றை முன்னோக்கி நகர்த்த முடியுமா ? விஞ்ஞானம் என்கிறீர்கள். அது என்ன ? அணு குறித்த இரசாயனவியலின் ஆரம்பகர்த்தா டோல்ரன். அவர் வகுத்தளித்த அடிப்படைகளில் இருந்துதான் அணு விஞ்ஞானம் முன்னேறியது. ஆனால் இன்று "டோல்ரனின் அணுக் கொள்கை" தவறானவை என நிரூபிக்கப்பட்டு முற்றிலும் புதிய கொள்கைகளும் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறுதான் நாம் பௌதீகவியலில் படித்த "ஒளி நேர் கோட்டில் செல்லும்" என்ற விதியும். இன்று அது அலை வடிவமாகி அதற்கு மேலாக வரையறுக்கப்பட்டுச் செல்கிறது. நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் படித்த "திணிவுக் காப்பு விதி"க்கு நிகழ்ந்ததும் அதுதான். ஐன்ஸ்டைன் திணிவு சக்தியாக மாற்றம் பெறுகிறது என்றார். இவ்வாறுதான் விஞ்ஞானம் முன்னேறிச் செல்கிறது. விஞ்ஞானத்தில் முடிந்த முடிபாக எதுவுமில்லை. அது புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கூடாக பழையவற்றைக் களைந்து புதியவற்றைக் கண்டு அடைகிறது. இது முடிவிலி காலம் வரை நீண்டு செல்லலாம். ஆனால் நாமெல்லோரும் "விஞ்ஞான சோசலிசம்" என்ற பத விளக்கத்துக்கூடாக சமூகத்தைத் தேக்கத்தில் வைத்திருக்க அசையாக் கட்டுமானத்துக்குள் உறைய வைத்திருக்க விரும்புகிறோமா என அச்சப்படுகிறேன்.

பதில்: 19 ம் நூற்றாண்டில் உருவான பாரிஸ் க‌ம்யூன் தான் உல‌கில் முத‌லாவ‌து சோஷ‌லிச‌ப் புர‌ட்சி. அத்ற்கு த‌லைமை தாங்கிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌த‌ர‌ப் ப‌ட்ட‌ கொள்கைக‌ளை பின்ப‌ற்றின‌ர். அனார்க்கிஸ்டுக‌ள், சோஷ‌லிஸ்டுக‌ள் போன்ற‌வ‌ர்க‌ள். பிரெஞ்சு பாட்டாளி வ‌ர்க்க‌ம் ந‌ட‌த்திய‌ புர‌ட்சி என்ப‌து தான் முக்கிய‌ம். மார்க்ஸ் அத‌ன் தோல்வியை ஆய்வு செய்து "பிரான்ஸின் உள்நாட்டுப் போர்" என்ற‌ நூல் எழுதினார். அதில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் உள்ள‌ன‌. அதில் முக்கிய‌மான‌ இர‌ண்டு (சுய‌)விம‌ர்ச‌ன‌ங்க‌ள். 1. தொழிலாள‌ர், விவ‌சாயிக‌ளின் இராணுவ‌ம் உருவாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். 2. த‌ற்போதுள்ள‌ அமைப்பில் முத‌லாளித்துவ‌ ச‌ர்வாதிகார‌த்திற்கு மாற்றாக‌ பாட்டாளி வ‌ர்க்க‌ ச‌ர்வாதிகார‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும்.

விஞ்ஞான‌ம் ப‌ற்றி நீங்க‌ள் கூறிய‌து மிக‌ச் ச‌ரி. அதைத் தான் மார்க்சிய‌மும் சொல்கிற‌து. அத‌னால் தான் அது விஞ்ஞான‌ சோஷ‌லிச‌ம் என்று அழைக்க‌ப் ப‌டுகின்ற‌து. நீங்க‌ள் உதார‌ண‌ம் காட்டிய‌ சார்ட்டிஸ்ட் இய‌க்க‌ம், உத்தோப்பிய‌ன் இய‌க்க‌ம் என்ப‌ன‌வும் சோஷலிச‌ சிந்த‌னை தான். ஆனால், விஞ்ஞான‌பூர்வ‌மான‌வை அல்ல‌. அவை கோட்பாடுக‌ள் ஆனால் விஞ்ஞான‌ம் அல்ல‌. அத‌னால் தான் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் விஞ்ஞான‌ சோஷ‌லிச‌த்திற்கான‌ ஆய்வுக‌ளை செய்த‌ன‌ர். இந்த‌ விப‌ர‌ங்களை எங்கெல்ஸ் எழுதிய‌ "க‌ற்ப‌னாவாத‌ சோஷ‌லிச‌மா? விஞ்ஞான‌ சோஷ‌லிச‌மா?" என்ற‌ நூலில் வாசிக்க‌லாம்.

மார்க்சிய‌ம் என்ப‌து சித்த‌ந்த‌ம் அல்ல‌. அது விஞ்ஞான‌ம். தாராள‌மாக‌ விஞ்ஞான‌ முடிவுக‌ளை திருத்தி எழுத‌லாம். மார்க்சிய‌த்தை விஞ்ஞான‌பூர்வ‌மாக‌ ஆய்வு செய்து குறைக‌ளை திருத்தி எழுதிய‌து தான் லெனினிச‌ம். பிற்கால‌த்தில் மாவோ அதிலும் திருத்த‌ங்க‌ள் செய்தார். ஆக‌வே, நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌. ஆனால், முத‌லாளித்துவ‌ பாதைக்கு திரும்புவ‌து திரிபுவாத‌ம்.

விஞ்ஞானத்தில் முடிந்த முடிவு இல்லை. மார்க்சியமும் அப்படித் தான். அது முதலாளித்துவ காலகட்டத்தில் இருந்து சோஷலிச காலகட்டத்திற்கு மாறுவதற்கான விஞ்ஞானம். ஆனால், கம்யூனிச காலகட்டத்திற்கான விஞ்ஞான ஆய்வுகள் பூரணமடையவில்லை. நீங்கள் விரும்பினால் அதற்கான ஆய்வுகளை செய்யலாம். ஆனால், சோஷலிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்திற்கு திரும்புவதற்குப் பெயர் விஞ்ஞானம் அல்ல. அது முன்னேற்றம் அல்ல, பின்னேற்றம். பிற்போக்குவாதம். இன்றைக்கும் டார்வினின் கூர்ப்பு கோட்பாட்டை பிழையென்று சொல்வோர் இருக்கிறனர். குறிப்பாக, மத அடிப்படைவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளே எல்லாவற்றையும் படைத்தார் என்று சொல்கிறார்கள். அதே மாதிரி, இன்றைய உலகில் யாரும் மன்னராட்சியை கொண்டு வர விரும்ப மாட்டார்கள். அது மாதிரித் தான் இதுவும்.

கேள்வி : பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா ?

(பிற்குறிப்பு: இது மேலே உள்ள கேள்வியில் இருந்து எடுத்த ஒரு பகுதி. மேலதிக விளக்கம் கொடுப்பதற்காக தனியாக எடுத்திருக்கிறேன்.)

பதில்: உலக வரலாற்றுக் காலகட்டத்தில், பாராளுமன்ற ஆட்சியும் இதே மாதிரியான நெருக்கடிகளை சந்தித்து இருந்தது. மன்னராட்சிக்குப் பதிலாக பாராளுமன்ற குடியரசு முறை வந்தது. ஆனால், அதற்காக பல போர்கள் நடந்துள்ளன. பெரும்பான்மை மக்களும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை.

கவனிக்கவும்: அன்றைய பாராளுமன்ற ஆட்சி ஒரு சர்வாதிகாரம், ஜனநாயகம் இருக்கவில்லை, தேர்தல்கள் நடக்கவில்லை. இருப்பினும், அது நிலைத்து நிற்பதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. சுற்றியுள்ள மன்னராட்சி நாடுகளின் சதிகளை முறியடிக்க வேண்டியிருந்தது.

பிரித்தானியாவில், 1649 ம் ஆண்டு மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பாராளுமன்ற ஆட்சிமுறை வந்தது. அது வெறும் பத்து வருடங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குப் பிறகு, பெரும்பான்மை ஆங்கிலேய மக்கள் பாராளுமன்ற ஆட்சியை நிராகரித்து, மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வந்தார்கள்.

நெதர்லாந்தில், 1795 ம் ஆண்டு, மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பதாவியாக் குடியரசு உருவானது. அதுவும் பத்தாண்டுகள் மட்டுமே நீடித்தது. பதவியிறக்கப் பட்ட நெதர்லாந்து இளவரசன், இங்கிலாந்து மன்னரின் உறவினன். அதனால், இங்கிலாந்து பல வழிகளிலும் டச்சு பதாவியாக் குடியரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன் விளைவுகளில் ஒன்று தான், டச்சுக்காரர் வசமிருந்த இலங்கைத் தீவு ஆங்கிலேயக் காலனியானது.

இறுதியில், நெதர்லாந்து மக்களில் ஒரு பகுதியினரும் பதாவியா குடியரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். பிரதமரும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், கலகக் கும்பலால் அடித்துக் கொல்லப் பட்டனர். பாராளுமன்றக் குடியரசு பெரும்பான்மை டச்சு மக்களால் நிராகரிக்கப் பட்ட பின்னர், அங்கு மீண்டும் மன்னராட்சி அமைக்கப் பட்டது.

நிலப்பிரபுத்துவத்திற்கு 1000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. முதலாளித்துவத்திற்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. அவற்றுடன் ஒப்பிடும் போது சோஷலிசத்தின் 70 வருட வரலாறு ஒரு பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை
கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை