Showing posts with label கிறிஸ்தவம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவம். Show all posts

Sunday, February 03, 2019

பிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்

அந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro), 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்கிய கிறிஸ்தவ மதகுரு.

"கம்யூனிசமும், மதமும் வேறு வேறான சித்தாந்தங்கள்" என்ற தவறான எண்ணத்தை, பிரேசில் நாட்டு முன்னாள் அடிமைகளும், ஏழை விவசாயிகளும் உடைத்தெறிந்தனர். Bahia மாநிலத்தில், Canudos எனுமிடத்தில், பிரேசிலின் முதலாவது கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கினார்கள். 

சுமார் 25000 பேரளவில், அந்தோனியோ என்ற கிறிஸ்தவ மதகுருவின் தலைமையில் அந்த புதிய நகரத்தை தாமே உருவாக்கிக் கொண்டனர். ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஒரே வழியாக, அந்தோனியோ "கம்யூனிச கிறிஸ்தவத்தை" போதித்து வந்தார். அவரின் போதனைகளால் கவரப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஏழை விவசாயிகளும், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமைகளும், வெறுந் தரையில் கனுடோஸ் என்ற புதிய நகரத்தை உருவாக்கி சாதித்துக் காட்டினார்கள். 

அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், அவரவர் வாழ்க்கைக்கு தேவையான அளவு வேலை செய்தார்கள். வருமானத்தை தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட கனுடோஸ் கம்யூன் நகரத்தை மேற்பார்வையிட பொலிஸ் இருக்கவில்லை. குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை. அதனால் நீதிமன்றமும் இருக்கவில்லை. 

சுமார் 25000 க்கும் அதிகமான மக்கள், பிரேசில் அரசிடம் தங்கியிராமல், தாமாகவே தமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். மக்கள் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்ய கற்றுக் கொண்டால், பேராசைக்கார முதலாளிகள் மூலதனத்தை திரட்ட முடியுமா? முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் பிரேசில் அரசு, இராணுவத்தை அனுப்பியது. 

அரச படைகள், கனுடோஸ் நகரை சுற்றி வளைத்தன. துருப் பிடித்த துப்பாக்கிகளை வைத்திருந்த மக்களால், நவீன ஆயுதமேந்திய இராணுவத்தை எதிர்த்து போராட முடியவில்லை. அந்தப் போரில், ஆயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். கம்யூனிச மதகுரு அந்தோனியோ கொன்செஹெரோ பிடிபட்டு சிரச்சேதம் செய்யப் பட்டார். 

"மனிதர்கள் இயற்கையாகவே சுயநலவாதிகள்" என்ற பொய்யை பரப்பி வரும், ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும், இது போன்ற தகவல்களை மக்களுக்கு வேண்டுமென்றே மறைக்கப் பார்ப்பார்கள். 

மேலதிக விபரங்களுக்கு இந்த திரைப் படத்தை பார்க்கவும்: 
The Battle of canudos (Portuguese) 
https://www.youtube.com/watch?v=HJWn9ySyqEc

Tuesday, November 19, 2013

மனித மாமிசம் உண்ட சிலுவைப் படை வீரர்கள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] (பாகம் : 6)


மனித மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள்

அந்தியோக்கியாவை அடுத்திருந்த மாறா என்ற ஊரில் இடம்பெற்ற சம்பவம் எமது இரத்தத்தை உறைய வைக்கும். நீண்ட கால முற்றுகைப் போராட்டத்தினால், பட்டினி நிலைக்கு தள்ளப்பட்ட சிலுவைப் படையினருக்கு உணவு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கைப்பற்றிய இடங்களிலும் உணவுப் பற்றாக்குறை. அப்படியான தருணத்தில் மாறா மீது படையெடுத்த சிலுவைப் படையினர், "சரசேனர்களின் (முஸ்லிம்கள்) இறைச்சியை புசிக்க வேண்டும்..." என்று வெறியோடு வந்தார்கள். படுகொலைக்கு ஆளாகி இறந்தவர்களின் உடல்களை ஆளுயர பானைகளுக்குள் போட்டு கொதிக்க வைத்து உண்டார்கள்! குழந்தைகளை ஈட்டியில் செருகி நெருப்பில் வாட்டி ருசித்து ருசித்து சாப்பிட்டார்கள்!! நரமாமிசம் உண்ட ஐரோப்பிய காட்டுமிராண்டிகளின் கதை உண்மையா?

சிலுவைப்படையினரின் கொடூரத்தை, அந்தப் பிரதேச மக்கள் இப்போதும் நினைவு கூறுகின்றார்கள். அரபு சரித்திர ஆசிரியர்கள் மட்டும் இதனை பதிவு செய்யவில்லை. அன்று சிலுவைப் படையினரின் முன்னேற்றத்தை பாப்பரசருக்கு அறிவித்துக் கொண்டிருந்தவர்களும் எழுதியுள்ளனர். சிலுவைப் படையினர் பட்டினி கிடக்கும் தருவாயில் "வேறு வழியின்றி" மனித இறைச்சி உண்டதாக, பாப்பரசருக்கு வந்த ஓலையில் எழுதப் பட்டிருந்தது.
(These events were also chronicled by Fulcher of Chartres, who wrote: "I shudder to tell that many of our people, harassed by the madness of excessive hunger, cut pieces from the buttocks of the Saracens already dead there, which they cooked, but when it was not yet roasted enough by the fire, they devoured it with savage mouth." )

ஜெருசலேம் நோக்கி புறப்பட்ட சிலுவைப்படையினரை எதிர்க்க அன்று யாரும் இருக்கவில்லை. இன்று லெபனான் இருக்கும் இடத்தில் இருந்த குட்டி தேசங்களின் எமிர்கள் எல்லோரும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதற்காக நிறைய பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார்கள். சிலுவைப் படைகள் ஜெருசலேம் மதில் சுவரை வந்தடைந்தனர். தற்போது இன்னொரு ராஜதந்திர நெருக்கடி உருவானது. அன்று ஜெருசலேம் எகிப்தை ஆண்ட கலீபாவின் கீழ் இருந்தது.

"பாத்திமி" என்று அழைக்கப் பட்ட அரசவம்சம் ஷியா முஸ்லிம்களின் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தது. சுன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் ஒருவரை மற்றவர் பார்க்க விரும்பாத பகைவர்களாக இருந்தனர். வடக்கே சுன்னி-முஸ்லிம் சாம்ராஜ்ய அதிபதிகளான செல்ஜுக் துருக்கியரை பாத்திமி வம்சத்தினர் எதிரிகளாக கருதினார்கள். அதனால் கிரேக்க-கிறிஸ்தவ சக்கரவர்த்தியுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தனர். சிலுவை படையின் முன்னேற்றத்தையும், அவர்கள் அன்று தமக்கு சார்பான அரசியல் மாற்றமாக கருதியிருப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்தவர்களுக்கு, பிராந்திய நல்லுறவு பற்றிய அக்கறை இருக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஜெருசலேமில் ஒரு ஐரோப்பிய காலனியை நிறுவுவது.

ஜெருசலேம் ஐரோப்பியரின் காலனியாகிறது

ஜெருசலேமை இஸ்லாமியப் படைகள் கைப்பற்றிய போது நடந்த சம்பவம் ஒன்றினை இவ்விடத்தில் நினைவுகூருவது பொருத்தமானது. அன்றைய இஸ்லாமியப் படைகளின் தளபதி உமார், ஜெருசலேமில் உள்ள இயேசுவின் தேவாலயத்திற்கு (இயேசு மரித்த, உயிர்த்தெழுந்த இடமாக கருதப்படுகின்றது) விஜயம் செய்தார். அப்போது தொழுகைக்கான நேரமாகி விட்டதால் தனது பாயை விரிக்க ஒரு இடம் கேட்டார். அப்போது தலைமை பாதிரியார் தேவாலயத்தின் உள்ளே ஒரு இடத்தில் தொழுகை நடத்துமாறு கூறினார். உமார் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து தேவாலயத்தின் வெளியே ஓரிடத்தை தெரிவு செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம்: "பின்னர் ஒரு காலத்தில், இது தான் உமார் தொழுத இடம் என்று முஸ்லிம்கள் உரிமை கோரக்கூடாது." அவ்வாறு பிற மதத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பக்குவம் சிலுவைப் படைகளுக்கு இருக்கவில்லை. ஜெருசலேமை கைப்பற்றிய சிலுவைப் படைகள் முதலில் அங்கிருந்த யூதர்களை அவர்களது ஆலயத்தோடு சேர்த்து கொளுத்தினார்கள். பின்னர் அல் அக்சா மசூதியில் தஞ்சமடைந்த முஸ்லிம்களை வெட்டிக் கொன்றார்கள்.

வழிபாட்டுத்தலத்தில் இனப்படுகொலை செய்ததற்காக சிலுவைப் படையினர் யாரும் வருந்தவில்லை. மாறாக இரத்தக் கறை படிந்த கைகளோடு நேராக இயேசுவின் தேவாலயம் சென்று, அமைதியாக பிரார்த்தனை செய்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை (கிறிஸ்தவர்கள் அல்லாத) மனிதர்களைக் கொல்வது ஒரு மதக்கடமை. அங்கு நடந்த சம்பவங்களை எழுதி வைத்த Fulcher இன் வார்த்தைகள் இவை: "இந்த நாளுக்காக எம்மவர்கள் ஏங்கிக் கிடந்தனர். நாட்களிலேயே மகிமை பொருந்திய நாள் இதுவே. செயல்களிலே அரும் பெறும் செயல் இதுவே!"
(Fulcher of Chartres, A History of the Expedition to Jerusalem, 1095-1127) 

அவர்கள் ஜெருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும் சும்மா விட்டு வைகக்கவில்லை. ஜகொபிய, மறோனிய, ஆர்மேனிய, எகிப்திய கிறிஸ்தவ பிரிவுகளை சேர்ந்த அனைவரையும் வெளியேற்றினார்கள். இயேசுவை அறைந்த சிலுவையின் துண்டு ஒன்று ஜெருசலேமில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது. அதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு சிலுவைப் படையினர் நெருக்கினார்கள். ஜெருசலேம் கிறிஸ்தவர்கள் யாரும் அந்த இடத்தை காட்டிக் கொடுக்காததால் சித்திரவதைக்கு உள்ளானார்கள். இதனால் ஜெருசலேம் கிறிஸ்தவர்கள், ஐரோப்பிய கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தனர்.

ஜெருசலேம் மண்ணின் மக்கள் அனைவரும், ஒன்றில் கொல்லப்பட்டனர், அல்லது விரட்டியடிக்கப் பட்டனர். அதன் பிறகு அங்கே "புனித ஜெருசலேம் ராஜ்ஜியம்" என்ற பெயரில் ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலை நாட்டப்பட்டது. அதனோடு சேர்த்து தற்போது மத்திய கிழக்கில் மூன்று ஐரோப்பிய காலனிகள் உருவாக்கி விட்டன. எடேசா, அந்தியோகியா, ஜெருசலேம் ஆகிய புதிதாக உருவான தேசங்களில் தற்போது வெள்ளையின ஐரோப்பியர்கள் குடும்பங்களோடு வந்து குடியேறி இருந்தனர். அடுத்த நூறாண்டுகளாவது நிலைத்து நிற்கப் போகும் நாடுகளில், அங்கேயே பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையும் உருவாகியது. அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் மத்திய கிழக்கை தமது தாயகமாக கருதினார்கள். ஆனால்... இன்னும் எத்தனை காலத்திற்கு அந்த ஐரோப்பிய காலனிகள் நிலைத்து நிற்கப் போகின்றன?

தம்மை மீள ஒருங்கமைத்துக் கொண்ட இஸ்லாமியப் படைகள், ஐரோப்பியரிடம் பறிகொடுத்த மண்ணை மீட்டெடுக்க புனிதப்போரை அறிவித்தனர். கொள்கைப்பற்றுள்ள தளபதிகள் தலைமையில் ஜிகாத் என்று அழைக்கப்பட்ட மண்மீட்புப் போர் ஆரம்பமாகியது. ஐரோப்பியர்களை போஸ்னியா வரை விரட்டிச் சென்றார்கள். அன்று ஓடிய ஐரோப்பியர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் தான் மீண்டும் காலடி எடுத்து வைத்தார்கள்.

(முற்றும்)

(இந்தத் தொடரை நூலுருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் " கருப்பு பிரதிகள்"  பதிப்பகத்தினால் வெளியிடப்படும்.)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி
5.கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

Friday, November 12, 2010

மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து


கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய "மாண்டிய மதம்" இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான யோவான் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. 

மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.

அரமிய கிளை மொழியான, "மாண்டா" என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. "அறிவு" என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய "ஞோடிக்" (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. 


பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை "சபியர்கள்" என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு "சபிய மதம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். 


இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகின்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.

Ginza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை - தீமை, பொருள் - ஆன்மா, ஒளி - இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. 


அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், "ஞோடிக் கிறிஸ்தவ" பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது. 

மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய நாடான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. 

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.

மேலதிக தகவல்களுக்கு:
Mandaeism
Ginza Rba


பின்னிணைப்பு: 

ஈரானில் வாழும் மாண்டிய மதத்தவர் பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தில் பார்க்கக் கிடைத்த தகவல்கள்:

மாண்டிய மதத்தை பின்பற்றுவோர் இன்றைக்கும் உள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஈரானில், ஈராக் எல்லையோரம் உள்ள அரபு மொழி பேசும் பகுதியில், இன்றைக்கும் சில நூறு மாண்டியர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கென்று தனியான புனித நூல் உள்ளது. அவர்கள் அரபு போன்றதொரு மொழியை பேசுகின்றார்கள். மாண்டி - அரைமைக் என்று அதனை அழைக்கலாம். படித்தவர்கள் மட்டும் அரபு அல்லது பார்சி பேசுகின்றார்கள். ஆனால், மாண்டியர்கள் பேசும் மொழியை அரேபியர்கள் புரிந்து கொள்வது கடினம்.

ஈரானிய அரசு, மாண்டிய மதத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவர்கள் தமது மதச் சடங்குகளை பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை பின்பற்றலாம். ஆனாலும், அரசு அங்கீகாரம் கிடைக்காத படியால், ஈரானில் அவர்களது எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பலர் அமெரிக்கா, ஐரோப்பா என்று புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.

ஈரானில் அரசுத் துறையில் வேலை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் தொழிற்துறையிலும் பாரபட்சம் காட்டப் படுகின்றது. மாண்டேயர்கள் எல்லா தொழில் முயற்சிகளிலும் ஈடுபட முடியாது. அவர்களை நகைக்கடைகள் வைத்திருப்பதற்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேசத்தில் தங்க நகைகள் விற்கும் கடைகள் எல்லாம் மாண்டியர்களுக்கு சொந்தமானவை. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான இணைப்பு:

Sunday, April 12, 2009

கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றி எழுதி வைத்துப் போன தத்துவக் குறிப்புகள் இவை. அவர் மேலும் குறிப்பிடுகையில், "கிறிஸ்தவ போதனைகளை நம்புபவர்கள் ஆளுபவர்களின் அதிகாரத்திற்கெதிராக கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஆனால் (மத)நம்பிக்கை தமக்கு இரட்சிப்பை வழங்கும் என்று காத்திருப்பார்கள்." என்று ரோம ஆட்சியாளருக்கு ஆலோசனை கூறுகின்றார்.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசுவின் ("கிறிஸ்து" என்பது இரட்சகர் என்பதைக் குறிக்கும் கிரேக்க சொல்லாகும்) வரலாறு பற்றி எந்தவொரு ரோம சரித்திர ஆசிரியர்களும் எழுதி வைக்கவில்லை. இயேசுவின் சீடர்களும், நம்பிக்கையாளரும் பிற்காலத்தில் பரப்பிய சுவிசேஷ செய்திகளின் மூலமே இயேசுவின் கதை வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. நவீன உலகின் காலக் கணிப்பீடு தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் இயேசு வாழ்ந்திருக்கலாம். "கிறிஸ்துவுக்கு முன்/பின்" என்ற சொற்பதங்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை நிலை நாட்டும் யுக்தியாகவே கொண்டுவரப்பட்டன. ஐரோப்பிய மொழிகளில் கிறிஸ்துவுக்கு பின் என்பதைக் குறிக்க "Anno Domini (AD)" என்று சொல்வதன் அர்த்தம் "எமது கிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் வாழ்கிறோம்" என்பது தான்.

இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பால் யூதரான இயேசு வாழ்ந்த சுற்றாடலிலும், யூதர்களே காணப்பட்டனர். அவரது போதனைகள் அவரது சமூகத்தை சேர்ந்த யூதர்களுக்கானதாகவே இருந்தன. அந்தக் காலத்தில் பல யூத மதப் பிரிவுகள் இருந்தன. அதனால் இயேசுவை பின்பற்றியவர்களும் அப்படி ஒரு பிரிவை சேர்ந்தவர்களாகவே கருதப்பட்டனர். இது பின்னர் மாற்றமடைந்தது. அது பற்றி பிறகு பார்ப்போம். "யூதேயா இராச்சியம்" வீழ்ச்சியடைந்த பின்னர், பர்சியர்கள் (ஈரான்), கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோர் நிர்மாணித்த சாம்ராஜ்யத்தின் பகுதியாக மாறி மாறி இருந்து வந்துள்ளது. எந்த சக்கரவர்த்த்யின் கீழ் வாழ்ந்தாலும் யூதர்கள் தமக்கென குறிப்பிட்ட சுயாட்சிப் பிரதேசத்தை (பாலஸ்தீன மாகாணத்தில் ஜெருசலேமை அண்டிய பகுதிகள்) கேட்டுப் பெற்று வந்துள்ளனர்.

கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேமிய மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் பண்டைய சிரியர்கள், (ஹீப்ரு, அரபு மொழிகளை ஒத்த௦) அரேமிய மொழி பேசி வந்துள்ளனர். இருப்பினும் வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல், அரேமிய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியை பயன்படுத்தினார். இதனால் தான் பைபிளின் மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பாலஸ்தீன யூதரான பவுல், கிரேக்க நகரமொன்றில் பிறந்து வளர்ந்தவர். அத்தோடு ரோம குடியுரிமை பெற்றிருந்தார். இதனால் பவுலின் வருகைக்கு பிறகு கிறிஸ்தவ கருத்துகள் பிற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து கிறிஸ்தவம், யூத மதத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டது.

ஆரம்பத்தில் துருக்கியில் வாழ்ந்த யூதர்கள் பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டனர். அன்று துருக்கி முழுவதும் கிரேக்க மொழி பேசப்பட்டது. "Helenized Jews" என அழைக்கப்பட்ட கிரேக்கர்களைப் போல வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது வியப்பிற்குரியதல்ல. அவர்களின் செல்வாக்கு கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்தியையும் மதம் மாற்றும் வல்லமை பெற்றிருந்தது. அப்போது கிழக்கு ரோம சாம்ராஜ்யம், மேற்கு ரோம சாம்ராஜ்யத்துடன் போரில் ஈடுபட்டிருந்தது. இதனால் கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு, போரில் வீரர்களை ஒருநிலைப் படுத்த புதிய மதம் பேருதவியாக இருந்தது. அதே நேரம் பல கடவுள் வழிபாட்டை கொண்டிருந்த ரோம மதத்தை விட, ஒரு கடவுட் கொள்கை கொண்ட கிறிஸ்தவ மதம் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த உதவும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் கொன்ஸ்டான்டின் வெற்றி கொண்ட மேற்கு ரோம சாம்ராஜ்யத்தில் (இத்தாலி) புதிய மதம் கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளானது. இதனால் கிரேக்க வழிபாட்டு முறைகளுக்குள் மட்டுப்படுத்திக் கொண்ட கிறிஸ்தவம் இன்றும் "பழமைவாத கிறிஸ்தவம்" என அழைக்கப்படுகின்றது. பின்னாளில் ரோம கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் அதனை "பழமைவாத..." என்ற அடைமொழியுடன் அழைத்தனர். மற்றும்படி கிரேக்கத்தில் இன்றும் அது தான் "உண்மையான கிறிஸ்தவ மதம்."

நமது வருடக் கணிப்பீடு ஆரம்பித்த காலத்தில் இருந்து (கிறிஸ்துவுக்குப் பின்), இத்தாலியில் கிறிஸ்தவ மதம் மெல்ல மெல்ல பரவியது. ஆரம்பத்தில் அடிமைகளும், அடித்தட்டு மக்களும் கிறிஸ்தவ இரட்சிப்பில் நம்பிக்கை வைத்தனர். கிறிஸ்தவ மதம் அடிமை முறையை நிராகரித்து அந்தக் காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பிற்காலத்தில் கிறிஸ்தவ அரசர் காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தில் நிலவிய அடிமை முறை ஒழிக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ சமூகம் வந்தமை குறிப்பிடத்தக்கது. சில சரித்திர ஆசிரியர்கள் கிறிஸ்தவம் ஆரம்பத்தில் அடிமைகளின் மதமாக இருந்தது என குறிப்பிட்டாலும், வசதிபடைத்த குடும்பங்களை சேர்ந்த சிலரும் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். இருப்பினும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதற்காக தண்டனை வழங்கப் பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அடிமைகளாக இருந்தனர். இது அன்றைக்கும் நிலவிய வர்க்க நீதியை எடுத்துக் காட்டுகின்றது.

"ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்." என்ற கதையை பின்னாளில் பரப்பியவர்கள் கிறிஸ்தவர்கள். அதற்கு காரணம் நீரோ மன்னன் ஆட்சிக் காலத்தில் தான் அதிகளவான கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பில் இருந்த நீரோ மன்னன், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தததற்கு கிறிஸ்தவர்கள் மீது பழி சுமத்தினான். தமக்கு நடந்த கொடுமைக்கு பழிவாங்கும் பிரச்சாரமாகவே, நீரோ மன்னன் ரோமை கொளுத்தி விட்டு பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக கதை கட்டினர். நீரோ மட்டுமல்ல, பிற ரோம ஆட்சியாளர்களும் கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து கொலை செய்து வந்தனர். ரோம் நகரில் இருக்கும் கொலேசயும் என்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து கிறிஸ்தவர்களை சிங்கத்திற்கு இரையாக்கி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ ஆட்சி ஏற்பட்ட போது அந்த விளையாட்டு அரங்கத்தில் பெரியதொரு சிலுவை நாட்டப்பட்டது. அதனை இப்போதும் அங்கே செல்வபவர்கள் காணலாம்.

ஆரம்பத்தில் சிலுவை அடையாளம், ரோமர்கள் மத்தியில் அவமானப் படுத்தும் சின்னமாக கருதப்பட்டது. ரோமர்கள் தமது எதிரிகளை சிலுவையில் அறைந்து தண்டனை வழங்குவது வழக்கம். அந்தக் காலத்தில் யாராவது , கையால் சிலுவை அடையாளத்தை சைகை காட்டுவது, மற்றவர்களுக்கு கோபத்தை கிளறுவது போலாகும். ஏனெனில் "உன்னை சிலுவையில் அறைவேன்" என்று திட்டுவதாக பண்டைய ரோமர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். ஒரு முறை ரோம இராணுவ முகாமில், கிறிஸ்தவ வீரர்கள் பிரார்த்தனை செய்யும் போது சிலுவை அடையாளம் இட்டமை, கைகலப்பில் முடிந்தது. ரோம மத அனுஷ்டானங்களில் கிறிஸ்தவர்கள் பங்குபற்றாமையும், கலவரங்களை ஏற்படுத்தியது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரத்தில் ரோம கடவுளருக்கு வழிபாடு நடந்த வேளை, கிறிஸ்தவர்கள் புறக்கணித்தமை மக்கள் மத்தியில் ஆட்சேபத்தை கிளப்பியது. அடுத்து நிகழ்ந்த மதக் கலவரத்தில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவில் நடந்த "பாலி குண்டுவெடிப்பில்" குற்றவாளியாக காணப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிக்கு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிய போது, அதனை அந்த குற்றவாளி அளவுகடந்த மகிழ்ச்சியோடு வரவேற்ற காட்சியை தொலைக்காட்சிகள் காட்டின. அந்த சம்பவம் மட்டுமல்ல, தியாக மரணத்தை விரும்பி ஏற்கும் இஸ்லாமிய தற்கொலைக் குண்டுதாரிகளை பற்றி விபரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், இந்த மனப்பான்மை (பின்தங்கிய) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சொந்தமானது என்பது போல சித்தரிக்கின்றன. மேலைத்தேய மக்களும் தம்மால் அந்த மன நிலையை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக கூறுகின்றனர். இது போன்ற "தியாக மரணங்கள்" ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்பட்டது. மரணத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் இறந்த இயேசுவின் வழியை பின்பற்றி வாழ விரும்பிய கிறிஸ்தவர்கள் பலர். அதனால் ரோம ஆட்சியாளர்கள் தண்டனை கொடுப்பதற்கு முன்னரே தாம் தியாகியாக மரணிக்க விரும்புவதாக ஒப்புக் கொடுத்தனர். "அவர்களாகவே முன்வந்து சாகிறார்கள்", என்று ரோம அதிகாரிகள் ஆரம்பத்தில் திருப்திப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் தற்கொடையின் மூலம் ரோம ஆட்சியாளர் மேல் குற்ற உணர்வை ஏற்படுத்த பார்க்கின்றனர் என அறிந்து கொண்டனர். (அனேகமாக ரோமர்களின் வற்புறுத்தலால்) இரண்டு கிறிஸ்தவ மத போதகர்ககள் தியாக மரணத்தை நிராகரித்தனர். "முதற்பரிசுக்காக போட்டி போட்டு செத்து தியாகியாவது, பிற கிறிஸ்தவர்களையும் தீவிரவாதிகளாக்கும்" என்று இவர்கள் கண்டித்தார்கள்.

ரோம அதிகாரிகள் கிறிஸ்தவர்களை பிடித்து சித்திரவதை செய்யும் போது, "அவர்களது பெயர், பிறப்பிடம், அடிமையா? சுதந்திரப் பிரசையா?" போன்ற விபரங்களை பதிவு செய்ய எத்தனித்தார்கள். அப்போதெல்லாம் சித்திரவதைக்கு உள்ளாகுபவர்கள் "நான் ஒரு கிறிஸ்தவன்" என்று மட்டுமே பதில் சொல்வார்கள். எந்தக் கேள்விக்கும் அது ஒன்றே பதிலாக வரும். இன்றைய காலத்தில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகும் புரட்சியாளரின் நிலையிலேயே அன்றைய கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை "கிறிஸ்தவன் ஒரு புது மனிதன். இன, தேசிய, சமூக அடையாளங்களைக் கடந்தவன்." "புது மனிதனை உருவாக்குவோம்" என்று சேகுவேரா முன் வைத்த சோஷலிச கோஷம் இங்கே நினைவுகூரத்தக்கது. ரோம சாம்ராஜ்யத்தில் அடிமை சமுதாயம் நிலவிய அன்றைய காலத்தில், கிறிஸ்தவ மதம் பல முற்போக்கான கூறுகளை கொண்டிருந்தது. இதனை கார்ல் மார்க்ஸும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மார்க்ஸியம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து சில கருத்துகளை உள்வாங்கியுள்ளது என கூறப்படுவதையும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு இன சமூகமும் தனக்கென சொந்தமான மதத்தை கொண்டிருந்த பண்டைய ரோம சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் மட்டும் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களை கொண்டிருந்தமை ஆட்சியாளருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

உண்மையில் கொன்ஸ்டான்டின் ஆட்சிக் காலத்தில், பிற ரோம மதங்களுடன் கிறிஸ்தவ மதத்திற்கும் சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கிறிஸ்தவ வழிக் கல்வி கற்ற கொன்ஸ்டாண்டினின் புதல்வனின் ஆட்சியில் கிறிஸ்தவ மதம் மட்டுமே அரச மதமாகியது. பிற மத வழிபாடுகள் அடக்குமுறைக்கு உள்ளாகின. கிறிஸ்தவம் அரசமதமாக அரியணை ஏறியதும் அதற்குள்ளே பல பிரிவுகள் தோன்றவாரம்பித்தன. உதாரணத்திற்கு பிதாவான கர்த்தரின் கீழ்ப்படிவான மகன் இயேசு என்று எகிப்தில் இருந்த குழுவும், இருவருமே சமமானவர்கள் என்று கிரேக்கத்தில் இருந்த குழுவும் வாதாடின. இறுதியில் (பழமைவாத)கிரேக்க மதப்பிரிவு சக்கரவர்த்தியை தமக்கு சாதகமாக இணங்க வைத்தது. தத்துவ விசாரங்கள், அதற்கான விளக்கங்கள் என்பன போட்டிக் குழுக்களை உருவாக்கின. இவை பின்னர் அதிகாரத்திற்காக வன்முறையையும் நாடத் தயங்கவில்லை. மன்னனின் காவலர்களும் மாற்றுக் குழுக்களை அடக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆட்பலமற்ற மாற்றுக் குழுக்கள் அரசுக்கெதிராக தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டும் தமது எதிர்ப்பைக் காட்டின. தம்மை கைது செய்யவரும் காவலர்களை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்துகொண்டனர்.

கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்திருந்த ஜூலியானுஸ் (கி.பி.360) காலத்தில் ரோம மதம் மறுபடியும் அரசமதமாகியது. இதனால் தாம் மீண்டும் அடக்கி ஒடுக்கப் படுவோம் என்று கிறிஸ்தவர்கள் அஞ்சினர். ஆனால் ஜூலியனுஸ் முன்பு போல கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து மரண தண்டனை வழங்கவில்லை. அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்து மறைமுகமாக நெருக்குவாரங்கள் செய்தான். அரசால் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தீவிரவாதத்தை நாடினர். இரவு வேளைகளில் ரோம ஆலயங்களினுள் நுழைந்து கடவுட்சிலைகளை அடித்துடைத்த சம்பவத்துடன் அது ஆரம்பாகியது. கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்த சேதி கேள்விப்பட்டு, மேலும் பல கிறிஸ்தவ இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் இறங்கினர்.

மேற்கு ரோம சாம்ராஜ்ய பகுதியில், குறிப்பாக இத்தாலியில் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் தலைமறைவாகவே இயங்கி வர வேண்டி இருந்தது. தனி நபர்களின் வீடுகளில் மட்டுமே வழிபாடு செய்யப்பட்டது. அதேநேரம் இரகசியமாக "கதகொம்ப்"(Catacombe) என அழைக்கப்படும் நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி வழிபாடு செய்யும் இடமாகவும், அதே நேரம் இறந்தவர்களை புதைக்கும் இடுகாடாகவும் இந்த கதகொம்ப் சுரங்கங்கள் திகழ்ந்தன. அன்று ரோமர்கள் இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச அங்கீகாரம் கிடைத்த பின்னர் அந்த தேவை மறைந்து விட்டது. அரச அங்கீகாரம் கிடைத்தாலும், கிறிஸ்தவ சபைகள் ஜெர்மனி, பிரான்ஸ் என்று பரவி இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் பிற மதங்களை பின்பற்றி வந்தனர். பிற மதத்தவர் வாழும் இடங்களுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள், அவர்களை பகிரங்க வாதத்திற்கு அழைப்பார்கள். நிலைமை மோசமாகி கைகலப்பில் முடியும் தருவாயில் அரச படைகளின் உதவியுடன் கிறிஸ்தவ ஆதிக்கம் நிலைநாட்டப்படும்.

ஒரு காலத்தில் அடக்கப்பட்டவர்கள், அதிகாரத்திற்கு வந்த பின்னர் அடக்குமுறையாளர்களாக மாறிய வரலாற்று முரண்நகை கிறிஸ்தவ மதத்திலும் காணக்கிடைக்கின்றது. "கடவுளருக்கு எதிரான கடவுளின் போர்" என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை குறிப்பிடுகின்றனர். ஒரு காலத்தில் ரோமர்கள், தமது ரோம மதத்தை மட்டுமே "மதம்" (Religio) என்று அழைத்தனர். மற்றைய மதங்களை மூட நம்பிக்கைகள் (Superstitio) என அழைத்தனர். அதன்படி அன்று கிறிஸ்தவமும் ரோமர்களால் "மூட நம்பிக்கை"யாக பார்க்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் கிரேக்கர்கள், கிறிஸ்தவர்களை கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் என்றும் அழைத்தனர். ஆனால் ஒரு முறை அதிகாரம் கிறிஸ்தவர்களின் கைகளில் வந்த பின்னர், எல்லாம் தலை கீழாக மாறியது. கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான ஒரேயொரு மதம் என்றாகியது. பிற மதங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக தடை செய்யப்பட்டன. அப்படி தடைசெய்யும் கடமையை அரச ஆதரவுடன் தீவிரவாத கிறிஸ்தவ ஆயுதக்குழுக்கள் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் இந்த ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் எல்லை மீறியது. அங்கே கிடைத்தற்கரிய நூல்களை சேகரித்து வைத்திருந்த நூலகம் ஒன்று காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. கிறிஸ்தவத்திற்கு முந்திய இலக்கியங்கள் யாவும் அழிக்கப்பட வேண்டும் என்பது அந்த மத அடிப்படைவாதிகளின் கொள்கை. ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை தகர்த்த தாலிபானின் செயலுடன் கொஞ்சமும் குறைந்ததல்ல, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாத வன்முறை.

பாலைவனம், காடு ஆகிய மனித நடமாட்டமற்ற பகுதிகளுக்கு சென்று தவம் செய்த கிறிஸ்தவ துறவிகளும், நகரங்களுக்கு திரும்பி வந்து மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். லெபனானில் ரபுல்லா என்ற துறவியின் கதை பிரசித்தம். ரபுல்லாவும் இன்னொரு துறவியும் பால்பக் நகரில் உள்ள பிற மதத்தவரின் கோயிலினுள் புகுந்து, மூலஸ்தானத்தில் இருந்த கடவுள் சிலையை அடித்து நொறுக்கி விட்டு காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே அங்கே குழுமிய மத நம்பிக்கையாளர்கள், துறவிகள் இருவரையும் நையப்புடைத்தனர். மதத்திற்காக மரிப்பதை அந்த கிறிஸ்தவ துறவிகள் மேலானதாக கருதினர். இவர் போன்ற தற்கொலைப் போராளிகளைத் தவிர, சில துறவிகளின் ஸ்தாபித்த ஆயுதக்குழுக்கள், மாற்றுக் கருத்தாளரை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

கிரேக்க நாகரீகம் நிலவிய காலத்தில் இருந்து, பல்வேறு துறைகளை சேர்ந்த புத்திஜீவிகள், தமது ஆராய்ச்சியின் பெறுபேறுகளை சுதந்திரமாக வெளியிட முடிந்தது. ஆனால் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை கிறிஸ்தவமதம் சொல்வது தான் மெய்யான தத்துவம், விஞ்ஞானம் எல்லாம். மற்றவை எல்லாம் அழிக்கப்பட வேண்டும். பிற்காலத்தில் அவ்வாறான பாரம்பரியத்தில் வந்த கத்தோலிக்க திருச்சபை உலகம் உருண்டை என சொன்ன கலீலியோவை சிறையில் அடைத்து துன்புருத்தியமை எதிர்பார்க்கத்தக்கதே. ஐரோப்பியர்கள் ஆயிரம் வருட இருண்ட மதவாத ஆட்சியின் பின்னர், அரேபியரின் உதவியினால் தான் தொலைந்து போன கிரேக்க விஞ்ஞானக் குறிப்புகளை மீளக் கண்டுபிடித்தார்கள். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்தாளரை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கினார்கள் என்பதை பின்வரும் சரித்திரக்கதை விளக்கும்.

எகிப்தில் அலெக்சாண்டிரியா நகர கிறிஸ்தவ தலைமை மதகுரு சிரிலுஸ் (கி.பி. 412) ஒரு காலத்தில் பாலைவனத்தில் ஏகாந்தியாக அலைந்து திரிந்த துறவி. நகரத்திற்கு திரும்பி வந்து தன்னைப் போல மதவெறி கொண்ட பிற துறவிகளையும் சேர்த்துக் கொண்டு "பரபலாணி" என்ற ஆயுதக் குழுவை அமைத்தார். பிற மதத்தை சேர்ந்தவர்களை கண்ட இடத்தில் அடித்து துன்புறுத்தி, சில சமயம் கொலையும் செய்து வந்த சிரிலுஸ் குழுவினரின் அடாவத்தனம், ஒரு கட்டத்தில் நகரபிதாவால் கூட பொறுக்க முடியாத அளவிற்கு எல்லை மீறியது. ஆயுதபாணிகள் 500 பேராக குறைக்கப்பட வேண்டும் என நகரபிதா உத்தரவு போட்டதால், பரபலாணிகள் அவரையும் தாக்கினர். அதிலிருந்து சிரிலுஸ் குழுவினர் அரச மட்டத்தில் இருந்த "துரோகிகளை" தீர்த்துக் கட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

கொலைக் கலாச்சாரத்திற்கு பலியான ஹிபாதியா என்ற பெண் தத்துவ அறிஞரின் கதை பிரபலமானது. தனது மாணவர்களுக்கு தத்துவமும், கணிதமும் போதித்து வந்த அந்த ஆசிரியை, கிறிஸ்தவம் சொல்வது தான் முடிந்த முடிபு என்பதை எதிர்த்து வந்தார். "கண்ணை மூடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் குருட்டு நம்பிக்கை வைப்பதை, சுயமரியாதை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என அவர் கூறி வந்தார். சிரிலுசிற்கு அந்தக் கருத்துகள் எரிச்சலை ஊட்டின. சிரிலுசின் கண்களுக்கு அழகும், அறிவும் இணைந்த ஹிபாதியா பிசாசின் உருவமாக தோன்றினார். ஒரு நாள் ஹிபாதியா வேலைக்குப் போகும் வழியில், ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார். உயிரற்ற அவரது சடலம் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டு தீயில் இடப்பட்டது. அந்த சம்பவத்துடன் சுதந்திரமான கருத்துக் கூறும் காலகட்டம் முடிவுக்கு வந்தது. கிறிஸ்தவ மதம் சொல்வதை மட்டுமே உண்மையென நம்பும் புதிய தலைமுறை உருவாகியது.

இதற்கிடையே, தலைநகர் ரோமில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த செனட் சபையில் இருந்த செனட்டர்கள்(பிரபுக்கள்) பலர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தனர். தமது மதமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக பழைய ரோம கோவில்களை பூட்டினார்கள். அங்கிருந்த தெய்வச் சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். ரோம சாம்ராஜ்யம் முழுவதும் ரோம கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்றப்பட்டன. (பண்டைய ரோம ஆலயம் எப்படி இருந்தது என்று பார்க்க விரும்புபவர்கள், மால்ட்டா தீவிலும், இத்தாலியின் சில இடங்களிலும் இப்போதும் சென்று பார்வையிடலாம்.) பல செனட்டர்கள் புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினர். இருப்பினும் பெரும்பான்மையான ரோம பிரசைகள் பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும், நடைமுறையில் ரோம மத சடங்குகளை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். பிற்காலத்தில் கத்தோலிக்க மதம் பல ரோம கலாச்சாரக் கூறுகளை, சடங்குகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது. சில கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமரின் சடங்குகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன. டிசம்பர் 25 ம திகதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினம் முதல், ஈஸ்டர் பண்டிகையில் வைக்கப்படும் முயல்,முட்டை வடிவ இனிப்புப் பண்டங்கள் வரை பல உதாரணங்களை கூறலாம்.

ரோம சாம்ராஜ்யம் அழிந்து, அதன் பிறகு கிறிஸ்தவ மத ராஜ்யம் தோன்றியதாக சொல்லப்படுவது உண்மையல்ல. ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் அழியவில்லை. அதை கிறிஸ்தவ மத நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது. ரோமா புரியில் இருந்த அதிகார மையம், அதிலிருந்து சில மைல் தூரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாட்டிக்கான் நகருக்கு மாறியது. புதிதாக உருவாக்கப்பட்ட "பாப்பரசர்" என்ற பதவியில் இருத்தப்பட்டவர், (கத்தோலிக்க கிறிஸ்தவ) மதத்திற்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் தலைவராக வீற்றிருந்தார். பிராந்திய அரசர்கள் யாவரும் பாப்பரசரின் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்திற்கு அடிபணிந்து ஆட்சி செய்தனர். ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியானது, பாப்பரசரின் உலகளாவிய அரசியல் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது.

Wednesday, March 05, 2008

சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்

உலகில் மிகவும் சுதந்திரமான (லிபரல்) நாடு, சகிப்புதன்மைக்கு பேர் போன நாடு, எந்த புதினமும் இல்லாத அமைதிபூங்கா, என்றெல்லாம் கருதப்படும் நெதர்லாந்திற்கு தற்போது என்ன நடந்து விட்டது? ஒரு காலத்தில் தாராள மனதுடன் நடந்து கொண்ட அரசாங்கம் தற்போது வலதுசாரி தீவிர பாதையை நோக்கி செல்கின்றது. தொன்னூருகலில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்கள், சோஷலிஸ்ட்கள் , கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, லிபரல் கட்சி எல்லாமே கூட்டரசாங்கம் அமைத்து கொண்டு, முதலில் அகதிகள் வருவதை முடிந்தளவு தடை செய்தார்கள். பின்னர் வெளிநாட்டு குடியேறிகள் தங்கள் நாட்டில் இருந்து துணையை தேடிக் கொள்வதை கண்மூடித்தனமான சட்டங்கள் போட்டு குறைத்தார்கள். தற்போது முஸ்லிம்களுக்கெதிரான "லிபரல்களின் ஜிஹாத்" நடக்கிறது. அதற்கு தலைமை தாங்குவது தான் முன்பிருந்த லிபரல் கட்சியில், வலதுசாரி தீவிரவாத கொள்கைகளுக்கு இடமில்லாததால் பிரிந்து சென்று, தனிக்கட்சி (PVV) கண்ட "கெர்ட் வில்டர்ஸ் ". அந்தகட்சியின் ஸ்தாபகர், சித்தாந்தம், நிர்வாகம் எல்லாமே வில்டர்ஸ் மட்டுமே. ஒரு முறை குர் ஆனின் அரைவாசி பக்கங்களை கிழித்தெறிய வேண்டுமென்றார். மறுமுறை அதனை ஹிட்லரின் "மைன் கம்ப்" ஐ போன்ற பாசிச நூலாக தடை செய்ய வேண்டுமென்றார். அரசியல் நிர்ணய சட்டம் மாற்றப்பட்டு, குறிப்பாக இஸ்லாமியர்களின் குடியேற்றம் தடை செய்ய பட வேண்டுமென்றார். இது போன்ற பைதியகாரதனமான பேச்சுகளால் உள்நாட்டு முஸ்லிம்களின் வெறுப்பையும், மிதவாத ஒல்லாந்து காரரின் எரிச்சலையும் ஒரு பக்கம் சம்பாதித்து இருந்தாலும், மறு பக்கம் வில்டர்சிற்கு பல சாதாரண (வெள்ளை டச்சு)மக்களின் ஆதரவும் பெருகியது.

முன்பொரு தடவை "தேயோ வந்கோக்" என்ற பத்தி எழுத்தாளரும் , சினிமா கலைஞருமான, ஆனால் தீவிர வலதுசாரி கருத்தியல்களை கொண்டவரும், இஸ்லாமிற்கு எதிரான படம் எடுத்து, அதன் காரணமாக முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாக கருதப்பட்டு, ஒரு மொரோக்கோ குடியேறி யின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார். அன்றிலிருந்து ஒல்லாந்து பொதுமக்களில் பலர் வெளிப்படையாகவே இனவாதம் கதைக்க தொடங்கி விட்டனர். அதனை தேசியவாதம் என்று சிலர் சொன்னாலும், பேரினவாதம் என்று சிலர் சொன்னாலும் , சம்பந்தப் பட்டவர்கள் அப்படி கதைப்பது தமது பிறப்புரிமை என்று சட்டம் பேசுகின்றனர். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், அப்படியனவர்களை விமர்சிக்கும் போது, அதனை இனவாதம் என்று குற்றம் சாட்டுகின்றனர். (கவனிக்கவும்: இனவாதம் என்ற சொல்லை ஒவ்வொரு இனமும் தனக்கெதிராக மற்றவர்கள் கதைக்கும் போது பயன்படுத்துகின்றனர்.) வருங்காலத்தில் வெள்ளையின ஒல்லந்துகாரருகும், முஸ்லீம் அல்லது கறுப்பின சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் பெரும் யுத்தம் மூள இருப்பதாக ஆருடம் கூறுகின்றனர். இரண்டாவது தலைமுறை மொரோக்கோ இளைஞர்கள் அல்கைதவுடன் சேர்ந்து பயங்கரவாத திட்டங்கள் தீட்டியதாக ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடும். அதே நேரம் வெள்ளையின தீவிர வலதுசாரி இளைஞர்கள் இரகசியமாக ஆயுத பயிற்சி எடுப்பது பற்றி சொல்வதில்லை. தேயோ வந்கோக் கொலையின் போது பல மசூதிகள், இஸ்லாமிய பாடசாலைகள் தீக்கிரையாகின. சூத்திரதாரிகள் கைது செய்யபட்டு சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். ஏனெனில் அவர்கள் பதினெட்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளாம். எந்த குற்றமும் நிரூபிக்க படாமல், (சில சம்பவங்கள் உளவுபிரிவின் ஆட்காட்டிகளின் தூண்டுதலால் நடந்தவை) வருடக்கணக்கில் சிறையில் போடப்பட்ட "அல்கைதா உறுப்பினர்கள்" கூட பருவமடையாத பிள்ளைகள் தான்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, வில்டர்ஸ் போன்றவர்கள் முதல் தேர்தலிலேலேயே கணிசமான வாக்குகள் எடுத்து வியப்புகுரியதல்ல. தேயோ வந்கொகுடனும், வில்டர்சுடனும் சேர்ந்து வேலை செய்தவர் அயன் ஹிசி அலி என்ற சோமாலிய புத்திஜீவி. யார் இந்த ஹிர்சி அலி? சோமாலிய மத்தியதர வர்க்க பெண். அந்த நாட்டில் உள்நாட்டு போர் மூண்ட போது, தம்மை பாதுகாத்து கொள்ள கென்யாவிற்கு தப்பியோடிய குடும்பத்தை சேர்ந்தவர். நெதர்லாந்து வந்து, நேரே சோமாலியாவில் இருந்து வந்ததாக அரசியல் தஞ்சம் கோரினார். டச்சு அதிகாரிகள் விரும்பி கேட்குமளவிற்கு, தன்னை இஸ்லாமிய மதகுருக்கள் துன்புறுத்தியதாக கதை சொல்லி அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்கலைக் கழக கல்வி பெற்று, ஒல்லாந்து அரசியலில் புகுந்தார். ஊடகங்களின் ஆர்வத்தை தூண்டி பேர் எடுக்கும் விதத்தில், இஸ்லாமிய மதத்தை காட்டுமிராண்டிகளின் மதமாக சித்தரித்தார். "இறை தூதர் முகமது ஒரு பயங்கரவாதி." என்று அவர் கூறிய கருத்துக்கள், முஸ்லீம் அல்லாதவர்களினதும் கண்டனங்களை பெற்றுத்தந்தது. அத்தகைய ஒருவரின் "புகழ்" தேசங் கடந்து அமெரிக்கா வரை பரவியதில் வியப்பில்லை. ஹிர்சி அலி அரசியல் தஞ்சம் கோரிய போது கூறிய பொய்கள் பின்னர் அம்பலமாகி, அவமானத்தால் டட்ச் பாரளுமன்ற பதவியை விட்டு விலகி , அமெரிக்காவில் புஷ் நிர்வாக ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டார். அதற்கு முன்னர் "லிபரல் ஜிஹாத்" தலைவர் வில்டர்சிற்கு, இஸ்லாமிய மதத்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று சொல்லிகொடுத்தார்.

இப்போது வில்டர்ஸ் "குர்ஆன்" பற்றி ஒரு படம் தயாரித்திருக்கிறார். அதில் காட்டுமிரண்டிதனமான சட்டங்கள், இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தூக்கிலிடப் பட்டமை, கல்லெறிந்து கொல்தல், கை வெட்டுதல்...இவ்வாறு இஸ்லாமிய விரோத கருத்துக்களை கொண்ட "பித்னா" என்ற படம் வெளிவர முன்னரே சர்ச்சைகள் தலை தூக்கி விட்டன. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நெதர்லாந்திற்கு எதிராக கண்டன பேரணிகள் நடந்தன. தாலிபான் அங்கே முகாமிட்டுள்ள ஒல்லாந்து படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். ஒல்லாந்து பொருட்களை பகிஷ்கரிக்குமாறு பல இஸ்லாமிய நாடுகளில் அழைப்பு விடப் பட்டுள்ளது. இதனால் கலவரமடைந்த வர்த்தக சமூகம் கூட வில்டர்ஸ் எதுவுமே செய்யாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரதமர் பால்கநேண்டே "நெதர்லாந்து ஒரு சர்வதேச நெருக்கடியை எதிர்நோக்குகிறது. எமது பிரசைகள் இஸ்லாமிய நாடுகளுக்கு போக அஞ்சுகின்றனர். ஆகவே வில்டர்ஸ் தனது முயற்சியை கைவிட வேண்டும். " என்று கூறியுள்ளார். அதற்கு வில்டர்ஸ் "பிரதமர் ஒரு கோழை. நான் இஸ்லாமிய வெருட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன்." என்று பதில் கூறியுள்ளார்.

மேற்கத்தைய வரலாற்றில் என்றுமில்லாத படி, ஒல்லாந்தின் தொலைக்காட்சி நிறுவனங்கள் எதுவும் வில்டர்சின் படத்தை ஒளி பரப்ப மறுத்து விட்டன. சினிமா தியேட்டர்களை பற்றி சொல்லத் தேவையில்லை. இதனால் வில்டர்ஸ் தனது படத்தை இன்டெர்நெட்டில் மட்டுமே வெளியிட வேண்டிய நிலையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனமொன்றின் வலயத்த்தளத்தில் பதிவு செய்திருந்தார். அமெரிக்கா அரச நிர்ணய சட்டத்தின் படி, கருத்து சுதந்திரத்திற்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுவதால், பல நவநாஜி அமைப்புகளின் இணையத்தளங்கள் கூட அமெரிக்காவில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. வில்டர்ஸ் இந்த சட்டத்தை பயன்படுத்த நினைத்தார். அந்தோ பரிதாபம், ஒல்லாந்து அரசின் நெருக்குதல் காரணமாக "நெட்வொர்க் சொலுஷன்ஸ்" என்ற இன்டர்நெட் நிறுவனம், வில்தேர்சின் வலயத்தளத்தை தடை செய்து விட்டது. "பித்தன" படம் வெறுப்பை விதைத்து இனவெறியை தூண்டுவதாக அந்த நிறுவனம் காரணம் கூறியுள்ளது. கடைசியில் வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்கள் வெளியிடும் இணையத்தளமொன்று அனுமதி வழங்கியது. படத்தை பார்த்தவர்கள், அதில் புதிதாக ஒன்றும் இல்லை, ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த காட்சிகளை வெட்டி ஒட்டி இந்த விவரணப் படத்தை தயாரித்திருப்பதாக கூறுகின்றனர். உண்மையில் அது, தீவிர வலதுசாரி மொழியில், வன்முறையில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள் ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்த போவதாக பயம் காட்டுகின்றது. படம் நெடுகிலும், முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இருப்பதால், இது வில்டர்ஸ் அரசியலில் பிரபலமாக கையாண்ட தந்திரம் எனலாம்.

வில்டர்சின் செயல் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது, அதனால் படத்தை தடை செய்ய முடியாது என்று அரசாங்கம் சொல்கின்றது. ஆபத்தை தவிர்பதற்காக படத்தை தடை செய்யுமாறு பலர் கோரி வருகின்றனர். உண்மையில் வில்டர்ஸ் மாதிரி வெறுப்பை விதைக்கும் வலதுசாரி தீவிரவாதிகளை பிடித்து சிறையில் போட்டால் எல்லாம் சரி வரும். இஸ்லாமிய மதத்தை நவீனப் படுத்த வேண்டும் என்று வில்டர்ஸ் போன்றவர்கள் விரும்பினால் அதற்கு இது ஏற்ற வழியல்ல. இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யலாம். இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது பகை வளர்க்கவே உதவும். வில்டர்ஸ் போன்றவர்கள் தன் நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றவே பாடுபடுகின்றனரே தவிர, வேறு எந்த பொதுநல நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

இந்த ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, மத அடிப்படைவாதம் பேசுவோரும் தீவிரவாதிகள் தான். சாதாரண மக்கள் மனதில் இருக்கும் மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்லவர்கள் இந்த காரியவாத பைத்தியங்கள். அவர்களின் நோக்கமும் மதத்தை பாதுகாப்பதல்ல, மாறாக அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பது தான். இப்படியானவர்கள் இஸ்லாமில் மட்டமல்ல. அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்து மத வெறியர்கள், சிறிலங்காவில் புத்த மத வெறியர்கள், இஸ்ரேலில் யூத மத வெறியர்கள், அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வெறியர்கள்.... இப்படி எல்லா மதங்களிலும் இருக்கும் தீவிரவாதிகள் ஒரே மொழியை தான் பேசுகின்றனர். அது மதவெறி என்ற பொதுமொழி. குர் ஆனில் மனிதாபிமான விரோத கருத்துக்கள் இருப்பதாக பிரச்சாரம் செய்யும் வில்டர்ஸ் போன்றவர்கள், பைபிளை வாசித்து பார்க்கவில்லையா? அதே மனிதாபிமான விரோத கருத்துக்கள் பைபிளில் இருப்பது தெரியாதா? குர் ஆன்இற்கும் , பைபிளுக்கும் அடிப்படை ஒன்றே என்பதும் , ஒரே கதைகளை கொண்டவை என்பதும் தெரியாதா? இயேசு கிறிஸ்து போன வழியில் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட பெண்ணொருவர் ஊர் மக்களால் கல்லெறிந்து தண்டனை வழங்கப் பட்ட கதை தெரியாத கிறிஸ்தவர்கள் கிடையாது. அவ்வாறான தண்டனை முறை பண்டைய காலத்தில் இருந்ததை தானே அந்தக் கதை எடுத்து காடுகின்றது? பைபிளின் பழைய ஏற்பாடு (அல்லது யூதர்களின் தோரா) பல இனப்படுகொலைகள் பற்றி கதை கதையாக சொல்கின்றன. எல்லாமே கடவுளின் பெயரால் நடந்த பயங்கரவாதம். இதையே குர் ஆனில் எழுதி இருந்தால் மட்டும் வில்டர்ஸ் போன்ற "மேன்மை மிகு கலாச்சார பாரம்பரியம் " கொண்டவர்கள் கூச்சல் போடுவதேன்? இவர்கள் தம்மை கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக காட்டிக் கொள்ளா விட்டாலும், கிறிஸ்தவ மதம் உலகிலேயே சிறந்தது, அதி உன்னதமான நாகரீங்கம் கொண்டது, என்று ஒரு பக்க சார்பான கதைகளை கூறி வருகின்றனர்.

கிறிஸ்துவுக்கு பின் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவை, வத்திகானை தலைநகராக கொண்டு கத்தோலிக்க மதம் ஆட்சி செய்தது. அந்த காலகட்டத்தை ஐரோப்பிய சரித்திர நூல்கள் "இருண்ட காலம்" என்று வர்ணிக்கின்றன. மதத்திற்கு எதிரான இயக்கம் ஐரோப்பாவில் தான் முதன் முதல் உருவானது. கத்தோலிக்க தேவாலயங்கள் மக்களை சுரண்டி சொத்து சேர்கின்றன என்று சொல்லி லூதர் தலைமையில் எதிர்பியக்கம் ஆரம்பித்தது. அது பின்னர் புரட்டஸ்தாந்து மதமாக மாறியது. பிரெஞ்சு புரட்சி தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி மதகுருக்களை சிரச் சேதம் செய்தது. அப்போதிருந்து உருவான மதச்சார்பற்ற இயக்கம் இன்று அரச சித்தந்தமாகி, இன்று ஐம்பது வீதத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் மத நம்பிக்கயற்றவர்களாக வாழ்கின்றனர். அதற்கு இந்நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றமும் முக்கிய காரணம். இந்த வாழ்கை நெறியை தான் வில்டர்ஸ் போன்றவர்கள் "மேன்மைமிகு கலாச்சாரம்" என்று சொல்கின்றனர்.

இதே போன்ற சமூக வளர்ச்சி இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட வாய்ப்பில்லையா? அதை தடுப்பது யார்? அது அந்நாடுகளின் பொருளாதார பின்னடைவு (உதாரணம் : எகிப்து) அல்லது மக்களை மந்தைகளாக மேய்க்க நினைக்கும் ஆட்சியாளர்கள் (வளைகுடா நாடுகள்) தான் காரணம். மதம் என்பது வறிய மக்களின் ஊன்றுகோல். தமது கஷ்டங்களுக்கு முடிவு வராத என்று ஏங்கும் மக்கள் வேறு வழி தெரியாமல் மதத்தை நம்புகின்றனர். வறிய நாடுகளின் பின்தங்கிய நிலை காலனித்துவ காலத்தின் பாதிப்புகளில் ஒன்று. அதோடு பணக்கார நாடுகளில் தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அபிவிருத்திக்காக அவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை. இந்த பொருளாதார பின்னணியை பற்றி கதைக்காத மதவாதிகள், தமது மதம் ஆட்சியில் இருந்த காலத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடியதாக கதையளக்கின்றனர். இஸ்லாமிய கலீபாக்கள் ஆடம்பர அரண்மனைகளில் உயர்தர வாழ்கை தரத்தை கொண்டிருந்த காலத்தில் அடித்தட்டு மக்கள் கஷ்டபட்டு உழைத்து வாழ வேண்டியிருந்தது. உழைப்பிற்கும் உல்லாசதிற்கும் இடையிலான தொடர்பு மதம் என்ற சீமேந்தால் பூசி மெழுகப் பட்டது. மற்றும்படி அன்றைய காலத்தில் பொது மக்கள் வசதியாக வாழ்ந்ததற்கான தரவுகள் இல்லை. ஷரியா தண்டனை சட்டம் கூட வர்க்க நீதியின் பாற்பட்டது. ஒருவேளை உணவுக்காக திருடுபவனின் கையை வெட்டுமாறு கூறும் சட்டம், தினசரி மக்களை கொள்ளையடித்து வாழும் ஷேக்குகளையோ அல்லது சுல்தான் களையோ எதுவுமே செய்வதில்லை. ஷரியா சட்டம் கடுமையாக அமுல் படுத்தப்படும் சவூதி அரேபியாவில் இன்றைக்கும் இது கண்கூடாக பார்க்கக்கூடிய யதார்த்தம். இந்த வர்க்க பாரபட்சம் வில்டர்ஸ் போன்றவர்களின் கண்களுக்கு மட்டும் தெரிவதில்லை.

பிற்போக்கு தனமாக சிந்திக்காமல் ஐரோப்பாவில் இருப்பது போலே, மதத்தை தனி நபருடைய தனிப்பட்ட விஷயமாக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடு பட்ட எத்தனையோ அமைப்புகள் இஸ்லாமிய நாடுகளில் இருந்திருக்கின்றன. அப்படிபட்ட மதச் சார்பற்றவர்களின் கை ஓங்கி ஆட்சி நிலைத்திருந்தால், இன்று மதவாதிகள் பெட்டிப் பாம்பாக அடங்கி போய் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், அடக்கி அழித்ததில் மேற்கத்திய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால், அன்று இந்த ஜனநாயக வாதிகள், இஸ்லாமியவாதிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி ஊக்குவித்தனர். மதச் சார்பற்ற சக்திகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில் தான் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்கள் தோன்றின. இப்போது வெளிக் கிளம்பிய பூதத்தை சீசாவுக்குள் திரும்ப வைத்து பூட்டி விடலாம் என்று நினைகின்றனர். காலம் கடந்து வந்த ஞானம் இது.


  • Fitna the Movie: Geert Wilders' film about the Quran (English)

  • Travel Blogs - Blog Catalog Blog Directory


    __________________________________________________________

    கலையகம்