Showing posts with label இலவசக் கல்வி. Show all posts
Showing posts with label இலவசக் கல்வி. Show all posts

Sunday, February 03, 2019

"என் முதல் ஆசிரியர்" - பெண்களை படிக்க வைத்த கம்யூனிச "கொடுங்கோன்மை(?)"


"என் முதல் ஆசிரியர்"- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)" பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.

 சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப் பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாள அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப் பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப் பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப் பட்டது தான் "என் முதல் ஆசிரியர்" எனும் குறுநாவல்.

இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.

இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விபரிக்கிறது.

அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கலியாணம் செய்து வைக்கப் படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப் படுகிறார்.

துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.

நகரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் அல்டினாய் மறக்காமல் தூய்ஷனுக்கு கடிதங்கள் எழுதுகிறாள். அவற்றில் தனது காதலை மென்மையாக வெளிப்படுத்துகிறாள். இருப்பினும் ஆசிரியர் தூய்ஷனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சில வருடங்களுக்கு பின்னர் குக்கிரி கிராமத்திற்கு திரும்பும் அல்டினாய் அங்கு தூய்ஷனை காண முடியாமல் ஏமாற்றம் அடைகிறாள். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டதால் தூய்ஷன் போர்முனைக்கு சென்று விட்டதாக அறிந்து கொள்கிறாள்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுக்களைப் போன்று "உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து" ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப் பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, "பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!" என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
நூலில் இருந்து ஒரு பகுதி:  
//குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு போக வேண்டும் என்று கூறும் இந்த அறிவிப்புக்கு விரோதமாக நீங்கள் நிற்கிறீர்களா? இதில் சோவியத் அரசாங்க முத்திரை குத்தப் பட்டுள்ளது. உங்களுக்கு வயலும் தண்ணீரும் கொடுத்தது யார்? உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?.... நாமனைவரும் ஏழை விவசாயிகள். நம் வாழ்க்கை முழுவதும் நம்மை இழிவுபடுத்தி உதைத்துத் தள்ளினார்கள். நாம் கும்மிருட்டில் இதுவரை வாழ்ந்து விட்டோம். சோவியத் அரசாங்கம் நாம் ஒளியைப் பார்க்க வேண்டும் என்கிறது. இதற்காகவே நம்முடைய பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிறேன்.// 

பிற்குறிப்பு:
இந்த நாவல் சிங்களத்தில் "குரு கீதய" என்ற பெயரில் ஒரு திரைப்படமாக வந்துள்ளது.

Thursday, May 15, 2014

ஐரோப்பாவில் கல்வி : முற்றிலும் இலவசம் அல்ல

"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

கல்வி கற்க விரும்புவதும், அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க வசதி செய்து கொடுப்பதும், ஒரு சிலரின் பார்வையில் "கம்யூனிசம்" என்றால், சாதாரண பாமர மக்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே விரும்புவார்கள். தமது சொந்தக் காசை செலவு செய்து வெளிநாட்டில் படிப்பவர்கள், தமது மூளை உழைப்பை பணக்கார நாடுகளின் அபிவிருத்திக்கு காணிக்கை ஆக்குபவர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதைப் போன்ற அறிவிலித்தனம் வேறு இருக்க முடியாது.

நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை உயர்கல்வி வரையில், கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு மாணவர்களும் இலவசமாக கல்வி கற்கலாம். ஆனால், "முற்றிலும் எல்லாம் இலவசம்" என்று கருதி விட முடியாது. நான் நோர்வேயில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். அந்த நாட்டில், இடைத்தர தொழிற்கல்வி இலவசமாக கிடைப்பதில்லை.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், பல்கலைக்கழக கல்வி கற்பவர்களை விட, தொழிற்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். நோர்வேயும் அதற்கு விதிவிலக்கல்ல. குடும்பக் கஷ்டம் காரணமாக, உடனடியாக வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள், ஏதாவதொரு தொழிற்கல்வியை தான் தேர்ந்தெடுப்பார்கள். கஷ்டப் பட்டவனிடம் பணம் பறிப்பது, என்ன வகை நியாயம் என்று தெரியவில்லை.

உயர்கல்விக்கு கட்டணம் எதுவும் அறவிடுவதில்லை. ஆனால், மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக, அரசு கல்விக் கடன் கொடுக்கிறது. இந்தக் கடனை, வேலை செய்யும் காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ், தற்போது பல தனியார் பாடசாலைகளும், தனியார் கல்லூரிகளும் வந்து விட்டன. அவர்கள் நிர்ணயிக்கும் விலையை கொடுத்து படிப்பது, பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே முடிந்த காரியம்.

முன்னொரு காலத்தில், ஜெர்மனியில் கல்வி இலவசமாக கிடைத்தது. அனால், இப்போது நிறைய கட்டணம் வசூலிக்கிறார்கள். முன்பு, கிழக்கு ஐரோப்பாவில் பல சோஷலிச நாடுகள் இருந்த படியால், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இலவசக் கல்வி வழங்கி வந்தார்கள். பெர்லின் மதில் விழுந்து, சோவியத் யூனியனும் உடைந்த பின்னர் அந்த தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கல்விக் கட்டணத்தை கூட்டி வருகின்றனர். இன்னொருவிதமாக கூறினால், இதுவரை காலமும் கல்விக்கு அரசு கொடுத்து வந்த மானியத்தை குறைத்துக் கொண்டு வருகின்றது.

சோஷலிச நாடுகளில் கல்வி முற்றிலும் இலவசம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்கள் சிலரை சந்தித்துப் பேசினேன். ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, கியூபா ஆகிய பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், புலமைப்பரிசில் (Scholarship) கிடைத்து, மொஸ்கோவில் படித்து விட்டு வந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்பதற்கு, குறிப்பிட்டளவு அதி புத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே புலமைப் பரிசு கொடுக்கிறார்கள். ஆனால், அது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே நன்மை பயக்கின்றது.

தங்களது சொந்தக் காசில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களானாலும், ஸ்காலர்ஷிப் கிடைத்து செல்லும் ஏழை மாணவர்கள் ஆனாலும், பெரும்பாலானோர் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்து தங்கி விடுகின்றனர். இதன் மூலம், மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த புத்திசாலி மாணவர்களின் மூளை உழைப்பை பயன்படுத்திக் கொள்ளும் பணக்கார நாடுகள், காலப்போக்கில் அந்த "சொத்தை" தமதாக்கிக் கொள்கின்றன. வறிய நாடுகளில் இதனை மூளை வெளியேற்றம் (brain drain) என்று அழைப்பார்கள். அதாவது, வறிய நாடுகளை சேர்ந்த அறிவுஜீவிகளின் திறமை, அந்த நாட்டு மக்களுக்கு பயன்படுவதில்லை. பணம் உள்ள நாடுகள் அதனை பயன்படுத்திக் கொள்கின்றன.

முன்னாள் சோஷலிச நாடுகளில் அப்படி அல்ல. அந்த நாடுகளை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், சோவியத் யூனியனில் உயர்கல்வியை முடித்து விட்டு, தமது சொந்த நாடுகளில் வேலை செய்து வந்தனர். சோவியத் யூனியனில் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒரு சில "அதி புத்திசாலி மாணவர்களுக்கு" மாத்திரம் கிடைக்கும் சலுகையா? அப்படி அல்ல. இது குறித்து, சோவியத் யூனியலில் கல்வி கற்ற எனது ஆப்கானிய நண்பர்களிடம் வினாவினேன். 

எண்பதுகளில், ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தக் காலங்களில், "சோவியத் ஒன்றியத்தில் உயர்கல்வி கற்க விரும்புவோர் பதிவு செய்யுமாறு" இடைத்தர, உயர்தர வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் வகுப்பாசிரியர் வந்து கேட்பார். வெளிநாட்டில் படிக்கும் ஆர்வமுள்ள எல்லா மாணவர்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும். இறுதித் தேர்வில் அதி கூடிய புள்ளிகள் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. 

ஒரு காலத்தில், சோவியத் யூனியனுடன் நட்புறவு பேணிய, முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த பிரஜைகள் எல்லோருக்கும், மேற்படிப்புக்காக சோவியத் யூனியனுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவை சோஷலிச நாடுகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. பிரேசில், இந்தியா, இலங்கை போன்ற சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பேணிய பன்னாட்டு மாணவர்களுக்கு அந்தச் சலுகை கிடைத்து வந்தது. 

சோவியத் யூனியனில், கல்விக் கட்டணம் கிடையாது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் வாழ்க்கைச் செலவையும் அரசே கொடுத்து வந்தது. மேலும் அது கடன் அல்ல. வெளிநாட்டு மாணவர்களாக இருந்தாலும், திருப்பிக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதனால், பண வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும், வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியது.

அது மட்டுமல்ல, கோடை கால விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அல்லது விரும்பாதவர்கள், ஏதாவதொரு வேலை செய்து சம்பாதிக்க முடிந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு படிக்கச் சென்றால் தான் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் தகவல் நம்ப முடியாமல் இருக்கலாம். சோவியத் யூனியனில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு தொழிலாளிக்கு கிடைத்த குறைந்த பட்ச சம்பளம் கூட, அண்ணளவாக மாதமொன்றுக்கு 1000 டாலர்கள்.

சோவியத் யூனியனில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வேலை செய்வதற்கு விசேட அனுமதி பெற்றிருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதே நேரம், கஷ்டப் பட்டு தேட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. வேலை செய்ய விரும்பியவர்கள், சும்மா ஒரு தொழிற்சாலைக்கு நேரில் சென்று கேட்டால் போதும். அங்கே எப்போதும் ஏதாவதொரு வேலை இருக்கும். ஒரு மாத கோடை கால விடுமுறையில், வேலை செய்து சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பி விட்டு படித்தவர்கள் நிறையைப் பேர். இந்தத் தகவல்கள் யாவும், அங்கு கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து பெறப் பட்டவை.


"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்