Showing posts with label மே தினம். Show all posts
Showing posts with label மே தினம். Show all posts

Monday, April 30, 2018

சிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு


May 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள். அவர்களுடன் சோஷலிஸ்டுகள், அனார்க்கிஸ்ட்கள் போன்ற பல இடதுசாரி அமைப்புகளும் சேர்ந்து கொண்டன.

 1886 ம் ஆண்டு, மே 1 அன்று தடைசெய்யப் பட்ட பேரணியை நடத்தியதால், கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்ததுடன், துப்பாக்கிப் சூடும் நடத்தியது. அன்றிலிருந்து இன்று வரையில், எட்டு மணி நேர வேலை உரிமைக்காக மரித்த தியாகிகளின் நினைவாக, உலகம் முழுவதும் மேதினம் நினைவுக்கூரப் படுகின்றது.

1969 ம் ஆண்டு, மே 1, இலங்கை அரசு பௌத்த மதப் பண்டிகையை காரணமாகக் கூறி. மேதினத்தை தடை செய்தது. அந்தத் தடையால் துவண்டு விடாத கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள், யாழ் நகரில் ஒன்று கூடி மேதினப் பேரணியை நடத்த திட்டமிட்டன.

தடைசெய்யப் பட்ட பேரணி என்பதால், இரகசியமாக சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க செல்வது போல ஒன்று கூடினார்கள். செங்கொடிகளை சிறிதாக மடித்து சட்டைக்குள் மறைத்துக் கொண்டு சென்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பேரணி ஆரம்பமானது. (தகவலுக்கு நன்றி: Valliammai வள்ளியம்மை சுப்பிரமணியம் Subramaniam)

அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் நடக்கலாம் என எதிர்பார்த்திருந்த படியால், யாழ் நகரில் பொலிஸ் கெடுபிடி அதிகரிக்கப் பட்டிருந்தது. மேதின ஊர்வலத்தை நகர விடாமல் பொலிஸ் தடுத்து தடியடிப் பிரயோகம் செய்து, பலரைக் கைது செய்து இழுத்துச் சென்றனர்.

1886 ம் ஆண்டு சிக்காகோவில் அமெரிக்கத் தொழிலாளர்களும், 1969 ம் ஆண்டு யாழ் நகரில் இலங்கைத் தொழிலாளர்களும், ஒரே குறிக்கோளுக்காக தான் போராடினார்கள். அதற்குப் பெயர், பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடு. அமெரிக்காவிலும், இலங்கையிலும், அவர்களை ஒடுக்கிய அதிகார வர்க்கமும் ஒன்று தான். அதற்குப் பெயர், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம். பேசும் மொழிகள் வேறாக இருந்தாலும் வர்க்க உணர்வுகள் மாறுவதில்லை.

*****

யாழ் நகரில் நடந்த மேதினப் பேரணியை ஒழுங்கு படுத்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் கே.சுப்பிரமணியத்தின் நினைவாக அவரது மனைவி வள்ளியம்மை சுப்பிரமணியம் முகநூலில் எழுதிய பதிவு:

மீண்டும் 1969 மே நாள் மனசைக் கனக்க வைக்கிறது.

“அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு, 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து, தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. (அத்தோடு உலகின் பல நாடுகளும் தொழிலாளர் உரிமைக்காய் போராடிக்கொண்டிருந்தனர். )

மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் 8மணித்தியால வேலையே வேண்டுமென வெண்கொடி ஏந்திய தொழிலாளர்மேல் , அதிகாரவர்கத்தின் ஆணவம் இரத்தம் சிந்தவைத்து , செங்கொடியாக்கியது . ஆனால் இன்றைய அமெரிக்காவில், புரட்டாசி மாத முதல் திங்களே தொழிலாளர் தினம்! நிற்க, பௌத்தவாத அரசியலமைப்புக் கொண்ட இலங்கையில் , 1969 ஆம் ஆண்டு ‘மே’ தினத்தன்றும் இதே போல ‘வெசாக் ‘தினத்தைக் காரணமாக்கி, அம்மேதினத்தைக் கொண்டாடுவதை ஜே ஆர் இன் யூ.என்.பி அரசு தடைசெய்தது. அந்த தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி யாழ்பாணத்தில் தடையைமீறி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியது. இக்கதையை நான் , பல தடவைகள் தோழர் மணியம் வாயிலிருந்தும் ,சக தோழர்கள் மூலமும் கேட்டிருக்கிறேன். மீண்டும் அதைப் பகிர நினைக்கிறேன்.

கூட்டத்திற்கும்,ஊர்வலத்திற்குமான வியூகத்தை - தலைமை ஏற்றிருந்த தோழர் கே ஏ சுப்பிரமணியம் வகுத்தார். யாழ் நகரில் , மூன்று திரையரங்குகளும் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன் தியேட்டர் சந்தியில் ( இன்றைய லிங்கம் கூல்பார்) இருந்து ஆரம்பிப்பதாகத் தீர்மானம். முதல் நாளிரவே கொடி பிடிப்பதற்கான கம்புகள் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டது. தேவையான கொடிகள் கைக்குட்டைகள் போல மடித்து சேர்ட், டவுசர்களினுள் மறைத்து வைத்துவிட்டு, தியேட்டரில் படம் முடிந்து வெளிவருவது போலவும் , படத்திற்காய் காத்திருப்போர் போலவும் ஊர்வலத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. பத்திரிகை நண்பர்களுக்கும். புகைப்படம் எடுப்போருக்கும் நிச்சயம் ஊர்வலம் நடைபெறும் என்ற செய்தி சொல்லப்பட்டது. இதை பொலிசாரும் அறிந்து கொள்வர் என்பது அவர்கள் அறிந்ததே. ஆனால் மேலதிக தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டது. வழமைபோல அன்று, மூன்று சிறு குழந்தைகளுக்கும் முத்தமிட்டு , எனக்கு நம்பிக்கை சொல்லி அவர் கிளம்பி விட்டார். அரசு -மேதினத்திற்கு அனுமதி அளிக்காத்தால் , சந்திப்பு மட்டுமே நிகழும் என நினைத்தேன். அது யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலமாக நடைபெற்றது. .

குறித்த நேரத்தில் எழுச்சியுடன் ஆரம்பித்த அவ்வூர்வலம், எங்கு ஆரம்பித்தது என்பதைப் பொலீசார் கண்டறிவதற்கு முன்னரே , ஊர்வலம் பிரதான பஸ் நிலையத்தை அடைந்து விட்டது. அதனால் கிலேசமும்,கோபமும் அடைந்த போலீசார் மூர்கத்துடன் கண்ணீர்க்குண்டுகளை வீசித் தாக்கினர் பொலிசாரும் ஊர்வலத்தினரும் .தாக்குதலில் ஈடுபட்டனர். சிலர் காயங்களுக்கு ஆளாகினர். தோழர் மணியம் மிகவும் தடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். ஆஸ்பத்திரியில் பொலிஸ் காவலுடன் வைத்தியம் செய்யப்பட்டு , பின்பு அவர்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர்.

66இல் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில் உடல் நொருங்கி மாறிவந்த வேளையில் , மீண்டும் அவர் நொருக்கப்பட்டது ,என்னை நிறையவே பாதித்தது. தலைமைத் தோழர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். மற்றைய தோழர்களின் உணர்வும், அன்புமே அன்று ஆறுதலாக இருந்தது. ஒரு மாதங்கள் கடந்தும் காயங்கள் மாறாத நிலையில் , ஊர்திரும்பிய தோழர் சண் வீட்டில், தோழர் கன்சூர் அவர்களால் பராமரிக்கப்பட்டார். நித்திரையின்றித் தவித்தார்.

அந்நேரங்களின் நினைவுகள், இன்றும் எனக்கு வலிக்கிறது. அவர் வாழ்வு ஐம்பது வருடங்களாக சுருங்கியதற்கு இவையெல்லாம் காரணமோ? போராட்டங்களுக்கும், தாக்குத ல்களுக்கும் ஒளித்து, எந்த உடல் வலிகளும் அற்று அரசியல் பேசியோர் மத்தியில் , நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், அஞ்சேல் என்ற சொல்லுடன் -தோழர் இறுதிவரை வாழ்ந்தார்.

அக்காலத்தில் பாராளுமன்றத்திற்கு உண்மையான அதிகாரம் இருக்கவில்லை. அதிகாரம் -ஆயுதப்படை, பொலிஸ்டை, விமானப்டை, கடற்படை, நீதிமன்றம், சிறைச்சாலைகள், உயர் அரச உத்தியோகத்தர்கள் இவர்களிடமே இருந்தது. இவற்றை அடித்து நொருக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஐனநாயக அரசு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்ற மாக்ஸ், லெனினஸ வகுப்புகளில் கூறி, பின் புதிய தோழர்களுடன் இணைந்து, இன்றுவரை தளராது, தயங்காது தொடர இத் தியாகங்களே காரணம். 74% இற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் உள்ள எம்நாட்டில் 70% க்கு மேற்பட்டோர் பௌத்தர்கள்.

அவர்களின் மத உணர்வையும், தொன்றுதொட்டு நடந்துவரும் எழுச்சியையும் சரியாக எப்படிப்ப கையாள்வது என்பது கூடத் தெரியாத, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ், மீண்டும் மக்களுருமைக்கான எழுச்சிக்கு தடைவிதிப்பது எவ்வகையில் நியாயம்? அவரை,இடது சாரிய கொள்கையுடையவர் என பெருமைபேசியோரும் உண்டு. சனாதிபதி தனது பதவிக் காலத்தில் தன்னால் செய்யப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்தும் செய்யாமல் விட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக அவர்மீது விதிக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தும்...... 

ஹம் என்ன சொல்ல?

*****

Tuesday, May 02, 2017

2017 மேதினம் - மொன்றியல் முதல் மாத்தளை வரை


இவ் வருட மேதினமும் உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்திருந்தது. பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு இம்முறை நடந்த மேதின ஊர்வலத்தில் வன்முறைகள் வெடித்தன. பாரிஸ் மட்டுமல்ல ரோன் போன்ற பிற நகரங்களிலும் கடந்த சில நாட்களாக இனவாதக் கட்சியான FN தலைவி மாரின் லே பென் இன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்துள்ளன.

பாரிஸ் மேதின‌க் க‌ல‌வ‌ர‌த்தில் பொலிசாரும், ஆர்ப்பாட்ட‌க்கார‌ரும் மோதிக் கொண்ட‌னர். பொலிஸ் க‌ண்ணீர்ப்புகை குண்டுக‌ளை வீசி பேர‌ணியை க‌லைக்க‌ முய‌ன்ற‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் பெட்ரோல் குண்டுக‌ளை வீசின‌ர். ஒரு பொலிஸ்கார‌ர் எரிகாய‌ங்க‌ளுக்கு உள்ளானார்.

பிரான்ஸில் முன்பு ந‌ட‌ந்த, தொழிலாள‌ர் ந‌ல உரிமைக்கான‌ தொழிற்ச‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கையின் தோல்வி, பொதுத்தேர்த‌லில் வென்ற‌ இன‌வாத‌க் க‌ட்சிக்கு எதிரான‌ எதிர்ப்புண‌ர்வு போன்ற‌ன‌வே மேதின‌ வ‌ன்முறைக்கு கார‌ண‌ம். மேதின‌ பேர‌ணியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் த‌னித்து நின்ற‌ இட‌துசாரி இளைஞ‌ர்க‌ள் தான் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.


கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலத் தலைநகர் மொன்றியலில் நடந்த மேதினப் பேரணியில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், குறைந்த பட்ச கூலியை அதிகரிக்க வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. பல்வேறு கம்யூனிச, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. (http://montrealgazette.com/news/local-news/montreal-may-day-rallies-call-for-a-minimum-wage-of-15-end-to-capitalism)

கனடாவில் தற்போது வழங்கும் சம்பளம் வறுமையில் இருந்து மீளப் போதுமானது அல்ல. பல உழைப்பாளிகள் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழ்கிறார்கள். நாம் சம்பள உயர்வைக் கோராமல் பேசாமல் இருந்தால், அவர்களாக கூட்டப் போவதில்லை என்று பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். 


துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலங்கள், அடானா, அங்காரா, இஸ்தான்புல், இஸ்மிர் ஆகிய துருக்கியின் பல நகரங்களிலும் இடம்பெற்றன. துருக்கியில் மனிதஉரிமைகளை நசுக்கி வரும், ஜனாதிபதி ஏர்டோகனின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால் காவல்துறையினரின் விசேட கவனத்தைப் பெற்றிருந்தது. 

படத்திற்கு நன்றி: David Suren

இலங்கையில், புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியினர் யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை ஆகிய நகரங்களில் நடத்திய மேதின ஊர்வலங்களில் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மாத்தளை நகரில் நடந்த பேரணியில் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னனி,பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளும் பங்கு பற்றின. தென்னிலங்கையில் கூட ஜேவிபி, முன்னிலை சோஷலிசக் கட்சி, மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள் நடத்திய மேதினப் பேரணிகளில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

படத்திற்கு நன்றி: Seelan Saththiyaseelan

இருப்பினும், வழமை போல முதலாளித்துவ ஊடகங்கள், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மறைத்தன. அதற்குப் பதிலாக காலிமுகத் திடலில் மகிந்த ராஜபக்சே நடத்திய மேதினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தை காட்டி, அதை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. சிங்கள ஊடகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஊடகங்கள் கூட ராஜபக்சவின் கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன. இலங்கையிலும் உழைக்கும் வர்க்க மக்கள் மேதினத்தில் தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கையில், முதலாளித்துவ கட்சிகள் அந்த உணர்வை மடைமாற்றும் வேலையில் ஈடுபட்டன.

தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/vigneswaran.kajee/videos/1876412175950974/?hc_location=ufi) மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.

சிலருக்கு எங்காவது மேடை கிடைத்தால் போதும் போலிருக்கிறது. மேதினக் கூட்டத்திலும் "சம்பந்தன் ஐயா என்ன செய்தார்? யாருடைய வீட்டைக் கட்டினார்?" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நின்று கொண்டு அதற்கு கைதட்டி இரசிக்கும் தொழிலாளர்கள் எந்தளவு தூரம் அரசியலற்ற சமூகமாக மாறி உள்ளனர் என்பதைக் காட்டுகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூட ஒரு முதலாளி தான். அவரது குடும்பத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் தென்னிலங்கையிலும், இரப்பர் தோட்டங்கள் மலேசியாவிலும் உள்ளன. அங்கெல்லாம் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. குறைந்த பட்சம் கூலி உயர்வு கூட வழங்குவதில்லை.

இந்த உண்மைகள் யாவும், கஜேந்திரகுமாரை பின்தொடரும் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களுக்கும் தெரியாமல் இல்லை. அதனால் தான் மேதினத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள். "தமிழ்த் தேச தொழிலாளர்கள்" என்று சொல்லித் தான் மேதினக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.

கஜேந்திரகுமாரின் மலையகத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமிழ்த் தொழிலாளர்கள் இல்லையா? குறைந்த பட்சம், அவர்களில் ஒருவரை மேடையில் ஏற்றிப் பேச வைத்திருக்கலாமே? சும்மா பாசாங்குக்காவது தொழிலாளர் தினம் கொண்டாடுவதாகக் காட்ட வேண்டாமா? இது போன்ற முதலாளியக் கட்சிகள் அம்மணமாகத் திரிகின்றன. அந்த அம்மணம் தான் அழகு என்று மக்களை நம்ப வைத்திருகிறார்கள். 


Wednesday, May 06, 2015

யாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்

யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி 


யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்தப் படத்தை "இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். அதற்கு ஒரு "அறிவு(?)ஜீவி" பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார்:

//இளம் கம்யூனிஸ்ட்டுகள்! ஹ... ஹா... நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு கம்யூனிசம் விளங்கி அதில பற்று வந்து வீதியில் இறங்கிவிட்டார்கள்! வாவ்// 

அறம் செய்ய விரும்பு, இயல்வது கரவேல், ஐயம் இட்டு உண், மண் பறித்து உண்ணேல், கொள்ளை விரும்பேல், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதெல்லாம் நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு, பாடசாலைகளில் படிப்பிக்கிற கம்யூனிச தத்துவங்கள் என்பது, அந்த "அறிவு(?)ஜீவிக்கு" புரியாமல் போனது ஏனோ?


"யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில் இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பிலான இந்தப் படத்தை பார்த்து விட்டு "சிறுவர் துஷ்பிரயோகம்" என்று அலறித் துடிக்கும் போலி மனிதாபிமானவாதிகளுக்கு:

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இலவசமாக வகுப்பெடுக்கும் ஆசிரியப் பெருந்தகைகள், அதனை முதலில் கோயில்கள், தேவாலயங்களில் இருந்து தொடங்குவது நல்லது. குறைந்த பட்சம் தங்களது குடும்பத்தையாவது சீர்திருத்திக் காட்ட வேண்டும்.

இதிலே எத்தனை சிறுவர்கள், தேநீர்க்கடைகள், உணவகங்களில் முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பார்கள்? நெல் வயல்களில், தோட்டங்களில், பண்ணைகளில், நிலவுடமையாளர்களினால் துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருப்பார்கள்? அப்போதெல்லாம் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள், அந்தசிறுவர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டும் பொங்கி எழுந்து எதிர்ப்பது ஏனோ? சிறுவர்களின் ஜனநாயக உரிமைகளை, அவர்களது அரசியல் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது, சர்வாதிகாரம் என்பது அவர்களுக்கு தெரியாதோ?

முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் நாய்கள், குரைப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது.

******

ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரை பயமுறுத்தும் கம்யூனிச ஆவி!

ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் பலரை, அண்மைக் காலமாக ஓர் ஆவி மிரட்டி வருவதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. "கம்யூனிச ஆவி" என்று அழைக்கப்படும் ஓர் அமானுஷ்ய சக்தி, குறிப்பாக படித்த, வசதியான மேட்டுக்குடி வர்க்கத்தினரை மட்டுமே குறி வைத்து தாக்கி வருகின்றதாம். 

கம்யூனிச ஆவியால் பாதிக்கப் பட்டவர்கள், சிவப்பு நிறத்தை எங்கே கண்டாலும் அலறுகின்றனராம். அதனால், அவர்கள் சிவப்பு வர்ண ஆடைகள், சிவப்பு நிறப் உணவுப் பதார்த்தங்கள், ஆகியனவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் சிவப்பு விழுந்ததும், அலறியடித்துக் கொண்டு வண்டி ஓட்டி விபத்துக்குள்ளான நபர்கள் பலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதற்கென அமெரிக்காவில் இருந்து விசேடமாக அழைத்து வரப் பட்ட, உலகிலேயே அதிக பீஸ் வாங்கும் மருத்துவர் ஒருவர் நோயாளிகளை பார்வையிட்டுள்ளார். 25 வருடங்களுக்கு முன்னர், இதே கம்யூனிச ஆவி ஐரோப்பிய மக்களை பிடித்தாட்டியதாகவும், அதனை நேட்டோ படையினர் பிடித்து சீசாவில் அடைத்து, அட்லாண்டிக் சமுத்திரத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். 

25 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ள கம்யூனிச ஆவி, முன்தோன்றிய மூத்தகுடி தமிழினத்திற்குள் புகுந்தது எப்படி என்பதை பலரும் ஆராய்ந்து வருகின்றனர். பல அரசியல் கருத்து முரண்பாடு கொண்டவர்களும், கம்யூனிச ஆவியை விரட்டுவதற்காக வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளனர். நேற்று வரையிலும், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, தீவிர புலி ஆதரவாளர்களும், தீவிர ராஜபக்சே ஆதரவாளர்களும், தமது தசாப்த கால பகைமையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

கம்யூனிச ஒழிப்புப் போரில், சிறிலங்கா பேரினவாத அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக, வலதுசாரி- தமிழ் தேசியவாதிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க தலைமைப் பூசாரி ஜோன் கேரியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள், தாம் இந்த விடயத்தில் இணக்க அரசியல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சிங்களவன், தமிழன் என்று இனப் பகை கொண்டு போரிட்டாலும், மேட்டுக்குடி வர்க்கம் என்ற அடிப்படையில் தாம் ஒரே இனம் என்று, சிங்கள- தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் கூறினார்கள்.

******

டைனோசர் பார்த்த குருடர்கள் 

மெத்தப் படித்த நண்பர் ஒருவர், "கம்யூனிசம் ஒரு டைனோசர் காலத்து சமாச்சாரம்" என்ற பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார். அவருக்கு நான் "யானை பார்த்த குருடர்கள்" கதை சொல்லி விட்டு, ஒருவேளை அவர் பார்த்த கம்யூனிச யானை டைனோசராக தெரிந்திருக்கும் என்று பதில் கூறினேன்.

அவரது கேள்விகள் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் கூறி விட்டு, இப்போது நான், நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் முதலாளித்துவம் பற்றிய சில கேள்விகளை, உங்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு இன்னமும் ஆளைக் காணோம். 

 ஒரு வேளை, ஜூராசிக் பார்க்கில் டைனோசர் சம்பந்தமான ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் போலும்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

Saturday, May 02, 2015

2015 உலக மே தினக் காட்சிகளும், கலவரங்களும்


இது தான் இன்றைய அமெரிக்கா! இன்று அமெரிக்க நகரங்களில் நடப்பது (இனக்) கலவரம் அல்ல, மக்கள் எழுச்சி!

******

நெதர்லாந்தின் மிகப் பெரிய தொழிற்சங்கமான FNV ஆம்ஸ்டர்டாம் நகரில் நடத்திய மேதினம்:

******

யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலமும், அதில் கலந்து கொண்ட இளம் கம்யூனிஸ்ட்டுகளும். புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி, இந்த ஊர்வலத்தை ஒழுங்கு படுத்தி இருந்தது. சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை போன்ற பல மக்களின் பிரச்சனைகளை காட்டும், அலங்கார ஊர்திகள் எடுத்துச் செல்லப் பட்டன. 
(படத்திற்கு நன்றி: Kiri Shanth)



இந்த வருடம், ஜேவிபி கொழும்பில் நடத்திய மாபெரும் மேதின ஊர்வலத்தில், யாழ் மாவட்ட கிளையை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டமை ஒரு சிறப்பம்சம்.
(படத்திற்கு நன்றி :Ramalingam Chandrasegar)


******

துருக்கி, இஸ்தான்புல் நகரில், பொலிஸ் தடையையும் மீறி மேதின ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதச்சங்கிலி அமைத்துக் கொண்டு நின்றனர். சிவில் உடையில் நின்ற பொலிசார், பலரைக் கைது கொண்டு சென்றனர். இது வரையில் இருநூறு பேரளவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.






Friday, May 02, 2014

உலகம் முழுவதும் ஓயாத மே தின உரிமைப் போராட்டம்


1 மே 2014, உலகம் முழுவதும் நடந்த மே தின ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு:

********

துருக்கி, இஸ்தான்புல் நகரில், இன்று நடந்த மே தின ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. இடதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸ்காரர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டுள்ளது. வழமையாக துருக்கி இடதுசாரிகள் கூடும் தாக்சிம் சதுக்கத்தில், இன்று மே தின கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. பொலிஸ் தடையையும் மீறி, இன்று அங்கே மே தினக் கூட்டங்கள் நடைபெற்றன. 

 பொலிஸ் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசி, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றது. அதனால் அங்கே கலவரம் வெடித்தது. தாக்சிம் சதுக்கத்தை சுற்றிலும் நாற்பதாயிரம் பொலிஸ் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். 1977 ம் ஆண்டு, இதே தாக்சிம் சதுக்கத்தில் நடந்த, தடை செய்யப்பட்ட மே தினக் கூட்டத்தில், பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் நாற்பது பேர் கொல்லப் பட்டனர். துருக்கியில் பல தசாப்த காலமாக மே தின ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன.

துருக்கி:


இஸ்தான்புல் மேதின கலவரம். பொலிஸ் படைகளுக்கும், மக்களுக்கும் இடையிலான மோதல். 

மே தின ஊர்வலத்தை குழப்பிய, பாசிசப் பொலிஸ் படைகளை எதிர்த்துப் போராடும், துருக்கி கம்யூனிஸ்ட் இளைஞர்கள்.

இது ஹோலி பண்டிகை அல்ல. இஸ்தான்புல் நகர காவல் துறையினர், இவ்வாறு பல வர்ணங்களில் தண்ணீரை விசிறியடித்து, மே தினம் கொண்டாடினார்கள்.
**********

ஜெர்மனி:

ஹம்பேர்க் நகரில், மே தின ஊர்வலத்தை மேற்கொண்டு நகர விடாமல், பொலிஸ் படையினர் தடுத்து நிறுத்தினார்கள். அதனால், சில மணிநேரம் அங்கே பதற்றம் நிலவியது. ஹம்பேர்க் நகரம் முழுவதும் பொலிஸ் கவச வாகனங்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன.



*******
உக்ரைன்:

உக்ரைனில், டொனியேட்ஸ்க் நகரில் நடந்த மாபெரும் மே தின ஊர்வலம். எண்ணிலடங்காத மக்கள் திரள் ஊர்வலத்தில் பங்குபற்றியதை படத்தில் காணலாம்.

*******
நெதர்லாந்து:
நெதர்லாந்தின் அரசியல் தலைநகரமான டென் ஹாக் (The Hague) நகரில் நடந்த, முதலாளித்துவ எதிர்ப்பு மே தின ஊர்வலம்.
********
பெல்ஜியம்:

அன்த்வேர்ப் நகரில் பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியான "தொழிலாளர் கட்சியின்" (pvda) மே தின ஊர்வலம்.


அமெரிக்கா:

டெட்ரொய்ட் நகரத்தில், நூற்றுக் கணக்கான இளைஞர்கள், Chase வங்கி வளாகத்தினுள் ஆர்ப்பாட்டம் செய்தனர். "பொருளாதார நெருக்கடிக்கான விலையை வங்கிகள் கொடுக்கட்டும்" என்று கோஷம் எழுப்பினார்கள்.


வாஷிங்டன் நகரில் நடந்த மே தின ஊர்வலம்.


******* 

உங்களுக்கோர் உண்மை தெரியுமா? 
"ஒரு முதலாளிக்கு தான் தொழிலாளர்கள் தேவை. 
 தொழிலாளர்களுக்கு ஒரு முதலாளி தேவை இல்லை."



*******



இலங்கையில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும், இளைய தலைமுறையை சேர்ந்த இளைஞர் ஒருவரின் கேள்வி:

//இன்னமும் 90% மான கம்பனிகளில் 8 மணி நேரத்துக்கு அதிகமாகத்தான் வேலை தரப்படுகிறது. தொழிலாளர்களும் 8மணி நேரத்துக்கு அதிகமாகத் தான் வேலை செய்கின்றனர். செங்கொடிகள் தூங்கி விட்டனவா என்ன?//

அலுவலகத்தில் மாடாய் உழைத்துக் களைத்த போதிலும், ஓய்வு நேரத்தில் சமீபத்திய திரைப்படங்கள் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிராமல், தான் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினையை பேச முன்வந்தமைக்கு முதற்கண் பாராட்டுக்கள். ஒரு முதலாளியின் சுரண்டலால் பாதிக்கப் பட்ட ஒருவரின் தன்னிலை விளக்கமாகவே, இந்தக் கேள்வியை கருதுகிறேன்.

இன்றைக்கும், மேற்கத்திய நாடுகளில் ஒருவர், எட்டு மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்வது ஊக்குவிக்கப் படுவதில்லை. அவராகவே விரும்பி, "ஓவர் டைம்" செய்தாலும், 50% வருமான வரி கட்ட வேண்டும். எந்த நிறுவனமும், ஒரு தொழிலாளியை எட்டு மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்ய வேண்டுமென்று கட்டாயப் படுத்துவதோ, அவ்வாறான ஒப்பந்தம் போடுவதோ சட்டப் படி குற்றமாகும். இதையெல்லாம், மேற்கத்திய முதலாளித்துவ வர்க்கம் தானாக விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை.

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஒரு காலத்தில் பலமாக இருந்த தொழிற்சங்கங்கள், சோஷலிச/கம்யூனிச கட்சிகள், இரத்தம் சிந்திப் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமை தான், எட்டு மணிநேர வேலை. அங்கிருந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தெருவுக்கு வந்து போராடினார்கள்.

எட்டு மணி நேர கோரிக்கைக்காக, தமது விலை மதிக்க முடியாத உயிர்களை பலி கொடுத்தார்கள். மேற்குலக தொழிலாளர்களின் இடையறாத போராட்டம் காரணமாக, அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட முதலாளிகளும், அரசுகளும், வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைப்பதற்கு சம்மதித்தன.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின் கீழ், பன்னாட்டுக் கம்பனிகள், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முதலிட்டன. ஏற்கனவே, அந்த நாடுகளில் இருந்த தரகு முதலாளியக் கம்பனிகளும் ஒத்துழைத்தன. இந்த தனியார் நிறுவனங்களில், 8மணி நேரத்துக்கு அதிகமாகத் தான் வேலை தரப் படுகின்றது.

அதற்கு காரணம், இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில், 8மணி நேரத்துக்கு அதிகமாக ஒப்பந்தம் போடுவதை தடுக்கும் சட்டம் கிடையாது. அதே நேரம், வேலை செய்பவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு கிடையாது. தொழிலாளர்களிடம் ஒற்றுமை இல்லை. அவர்களின் உரிமைகளுக்காக போராட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. இவையெல்லாம் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்கள்.

ஒரு மேற்கத்திய நாட்டில், முதலாளிகளால் நினைத்தும் பார்க்க முடியாத "சலுகைகளை", ஒரு மூன்றாமுலக நாட்டில் பயன்படுத்திக் கொள்கின்றனர். "முதலாளிக்கு தொழிலாளர்கள் தேவை. ஆனால், தொழிலாளர்களுக்கு ஒரு முதலாளி தேவை இல்லை." இந்த உண்மையை அறிந்திராத, அல்லது தனது சக்தியை உணர்ந்திராத தொழிலாளர்கள் சமூகம் இருக்கும் ஒரு நாட்டில், முதலாளிகள் வேண்டிய மட்டும் சுரண்ட முடியும்.

மேற்கத்திய நாடுகளில், தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடினார்கள். அவற்றை மூன்று தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர். இலங்கையில், இந்தியாவில் வாழும் தொழிலாளர்கள், தங்களது உரிமைகளுக்காக அவர்கள் தான் போராட வேண்டும். எமக்காக இன்னொருவன் வந்து போராட மாட்டான்.

நீங்களும் ஒரு உழைப்பாளி என்றால், உங்கள் முதலாளி எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்கி, உங்களை சுரண்டுவதை உணர்ந்திருந்தால், நீங்கள் தூக்க வேண்டிய கொடி தான் செங்கொடி. அது உங்களுடைய தேசியக் கொடி. செங்கொடிகள் உறங்கவில்லை. நீங்கள் தான் அவற்றை தூக்கிப் பிடிக்க வேண்டும்.

மேற்கத்திய நாட்டு உழைப்பாளர்கள் போராடிப் பெற்றுக் கொண்ட உரிமைகளைப் பற்றி, உங்களது சக தொழிலாளர்களுடன் பேசுங்கள். அவர்களது போராட்ட அனுபவங்கள் பற்றி விவாதியுங்கள். மே தினத்தை உங்களது போராட்ட நாளாக்குங்கள். தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை உண்டாக்குங்கள். உங்களது உரிமைகளுக்கான கோரிக்கைகளை முன் வையுங்கள். தொழிலாளர் சக்தி எனும் உறங்கிக் கிடந்த பூதம் விழித்து எழுந்தால், எந்த முதலாளியாலும் எதிர்த்து நிற்க முடியாது.

****** 

மே தினம் குறித்த முன்னைய பதிவுகள்: 
1. மே தினம்: செங்கொடியை தூற்றும் "அறிவுஜீவிகளின்" அறியாமை
2. உலக மக்களின் மே தின எழுச்சியும், பொலிஸ் அடக்குமுறையும்
3. மே தினம் இராணியின் தினமாக மாறிய கதை
4. யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!
5. மே தினமும், குழந்தைகளின் அரசியலும் - எனது சாட்சியம்

Thursday, May 01, 2014

மே தினம்: செங்கொடியை தூற்றும் "அறிவுஜீவிகளின்" அறியாமை


இன்று நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளான எட்டு மணிநேரம் வேலை, ஓய்வு, விடுமுறை போன்றன, நூறு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகள் என்பது பலருக்குத் தெரியாது. சிக்காகோ நகரில், இரத்தம் சிந்திப் போராடிய தொழிலாளர்கள் உரிமைகள் பெற்ற நாள் தான் மே தினம். அன்று அவர்கள் ஏந்தியிருந்தது தான் செங் கொடி. இந்த வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள், செங் கொடியையும், மே தினத்தையும் பரிகசிப்பதன் மூலம் தமது அறியாமையை வெளிப் படுத்துகின்றனர்.

 // தேசியக்கொடிக்கும், செங் கொடிக்கும் இடையில் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு..! // 

 நிச்சயமாக. மறுக்க முடியாத உண்மை. தேசம் என்பது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. அது ஒரு விலங்குப் பண்ணை மாதிரி. மனிதர்கள் மாடு மாதிரி உழைக்கத் தயாராக இருக்க வேண்டும், அல்லது பட்டினி கிடந்து சாக வேண்டும்.

ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியாக தேசம் என்ற கூண்டைக் கட்டி, மனிதர்களை அதில் அடைத்து வைத்திருக்கிறார்கள். பிறப்பில் இருந்து இறப்பு வரை எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்கள். எல்லோரையும் கண்காணிக்கிறார்கள். தேசம் என்ற கூண்டை சுற்றிலும் எல்லைக்காவல் உண்டு. வெளியே போக வேண்டுமானால் பாஸ்போர்ட் வேண்டும். சிறை மதில்கள் எமது கண்களுக்கு புலனாகாமல் தடுப்பதற்காக, "தேசியக் கொடி" என்ற திரை போட்டு மறைத்திருக்கிறார்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான கொடி ஒன்று இருக்குமானால், அது செங்கொடியாகத் தான் இருக்கும். செங்கொடியானது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும், உழைக்கும் மக்களாக ஒன்றிணைக்கின்றது. அவர்களுக்கு தனித்தனியான தேசங்கள் கிடையாது. எல்லைக் கோடுகள் கிடையாது. உலகம் முழுவதும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தம்.

ஐ. நா. மன்றத்தின் நீலக் கொடி தோன்றுவதற்கு, பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, செங்கொடி உலக மக்களின் கொடியாக இருந்து வருகின்றது. சிக்காக்கோ முதல் பெய்ஜிங் வரை, வட துருவம் முதல் தென் துருவம் வரை, ஐந்து கண்டங்க‌ளிலும் வாழும் பல்லின மக்களின் கைகளில் பறந்து கொண்டிருக்கிறது.

*********

ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மீதான மத, அரசியல், பொருளாதார துஸ்பிரயோகங்களை கண்டுகொள்ளாத அறிவுஜீவிகள், செங்கொடியை கண்டால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு, புத்திமதிகள் கூறத் தொடங்கி விடுகின்றனர். தங்களை புனிதர்களாக கருதிக் கொண்டு, பெற்றோரின் கடமைகள் என்னவென்று போதிக்கக் கிளம்பி விடுகின்றனர். மற்றவர்களின் அரசியல் கொள்கைகளை மதிக்க வேண்டும் என்ற நாகரீகம் சிறிதும் இன்றி, துவேஷத்தை கக்கத் தொடங்கி விடுகின்றனர். இது அவர்களது அரசியல் கொள்கையை மட்டுமே குழந்தைகள் மேல் திணிக்க வேண்டுமென்ற சர்வாதிகார மனோபாவமே அன்றி வேறில்லை.



செங் கொடியை கண்டால் மிரளும் காளை மாடு போல, பல மேட்டுக்குடி அறிவுஜீவிகள்(?), செங்கொடிக்கு எதிராக, அநாகரீகமான அவதூறுகளை பொழிவதை கண்கூடாகக் காணலாம். செங்கொடி தோன்றிய வரலாறு பற்றி எதுவும் தெரியாத அறியாமை காரணமாக அப்படி நடந்து கொள்கின்றனர். இதே செங்கொடி தான், அறிவுஜீவிகளின் மானத்தையும் மறைக்க உதவுகின்றது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் சிக்காகோ நகரில் நடந்த படுகொலைகளின் விளைவாக தோன்றியது தான் செங்கொடி. சிக்காக்கோ நகரில், ஹே மார்க்கட் சதுக்கத்தில் கூடிய (May 4, 1886) அமெரிக்க தொழிலாளர்கள், வேலை நேரத்தை எட்டு மணித்தியாலங்களாக குறைக்க வேண்டுமென போராடினார்கள். அன்றைய நாட்களில், தொழிலாளர்கள் தினசரி பதினைந்து மணிநேரம் வேலை செய்வது சர்வசாதாரணமானது.

எட்டு மணிநேரம் வேலை செய்யும் உரிமை கோரிப், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சமாதானக் கொடியான வெள்ளைக் கொடி ஏந்திச் சென்றார்கள். அன்று நடந்த குண்டு வெடிப்பு ஒன்றைத் தொடர்ந்து, பொலிஸ்காரர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பல தொழிலாளர்கள் கொல்லப் பட்டனர். குண்டடி பட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது. அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது. மே 1 தொழிலாளர்களின் தினமாக பிரகடனம் செய்யப் பட்டது.




முதலாளித்துவ உலகில் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப் படுவதில்லை. அதிகமாக சம்பாதிப்பவர் குறைவாக வேலை செய்கிறார். அதிகமாக வேலை செய்பவர் குறைவாக சம்பாதிக்கிறார். உலகம் முழுவதும் உள்ள மேட்டுக்குடியினர், "உடலை வருத்தி கடுமையான வேலை செய்வதால் அதிகமாக சம்பாதிப்பதாக", தமது அதி கூடிய வருமானத்தை நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.



மே தினம் என்பது கொண்டாட்டம் அல்ல, அது ஒரு விடுதலைப் போராட்டம். உலகம் முழுவதும் 21 மில்லியன் பேர் இன்னமும் அடிமைத் தளைகளில் இருந்து விடுபடவில்லை. வளைகுடா நாடுகளில், நவீன அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கும், தெற்காசிய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக, மே தினத்தை போராட்டமாக முன்னெடுப்போம்.

Saturday, May 04, 2013

மே தினமும், குழந்தைகளின் அரசியலும் - எனது சாட்சியம்

இந்த வருடம் (2013), நெதர்லாந்து, ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தினப் பேரணியில், ஆயிரத்திற்கும் குறையாத பன்னாட்டு தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

1. வில்லம் அலெக்சாண்டரை நெதர்லாந்து மன்னராக முடிசூட்டும்
விழா 30-04-2013

2. உழைப்பாளர் தினம், மே 1, 2013.


முதலாவது படத்தில்: இலங்கை, இந்தோனேசியா போன்ற காலனிகளை சுரண்டிக் கொழுத்த, உலகில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசும், ஆப்பிரிக்க நாடுகளில் மனித உரிமைகளை மீறிய ஷெல் எண்ணை நிறுவன முதலாளியுமான வில்லெம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொள்கிறார். 21 ம் நூற்றாண்டுக்கு பொருந்தாத, புராதன கால சம்பிரதாயமான மன்னராட்சியை கொண்டாடும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் அனைவருக்கும் விடுமுறை தினமாகும்.) 

இரண்டாவது படத்தில்: தொழிலாளர்களின் மே தினத்தில், இழந்த உரிமைகளுக்காக போராடும் உழைக்கும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் விடுமுறை கிடையாது. வழமையான வேலை நாள்.) 

முதலாவது படத்தை பார்த்து "ஆஹா... அற்புதம்" என்று புகழ்கிறவர்கள், இரண்டாவது படத்தை பார்த்து விட்டு "அய்யய்யோ... சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அலறுகின்றனர். ஆண்டானின் பிறந்தநாளை அடிமைகள் கொண்டாடுவதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்கிறவர்கள், அடிமைகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை "அசாதாரணமான அரசியல் திணிப்பாக" கருதி எதிர்க்கிறார்கள். எது அரசியல் திணிப்பு? எது துஸ்பிரயோகம்? இதை தீர்மானிப்பது யார்? 




மே தினத்தில் செங்கொடி ஏந்தினால், முஷ்டியை உயர்த்தினால் "அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்றெல்லாம் அறநெறி போதிக்கும் நண்பர்களே! 

நான் இன்றைக்கும், தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் தான். நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால், பத்து வருடங்களாக செய்து வந்த நிரந்தர வேலையும் பறிபோனது. அதற்குப் பிறகு கிடைக்கும் எந்த விதமான வேலையையும் மனம் கோணாமல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். "வாயில் நுழையாத பெயரை கொண்டிருப்பதாலும், இருட்டான தோற்றத்தை உடையவன் என்பதாலும், ஆசிய நாடொன்றில் பிறந்த படியாலும்", தொழிலாளர் சந்தையில் எனது உழைப்பிற்கான கேள்வி குறைந்து கொண்டே செல்கின்றது. சிரமப் பட்டு வேலை தேடும் பொழுது, முதலாளிகளால் பாகுபாடு காட்டப் படுகிறேன். 

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நாட்டில், உதிரித் தொழிலாளர்கள் வேண்டாத பண்டமாகி வருகின்றனர். இதை விட உயர்ந்து வரும் வாழ்க்கை செலவை ஈடுகட்டுமளவு போதாத வருமானம். என்னிடம் காரும் இல்லை, சொந்த வீடும் இல்லை, சொத்துக்களும் இல்லை. வங்கியில் பல இலட்சம் சேமிப்புப் பணமும் கிடையாது. வாழ்க்கை முழுவதும் எனது உரிமைகளை போராடித் தான் பெற வேண்டியுள்ளது. 

என்னைப் போன்ற பாதிக்கப் பட்ட மற்ற தொழிலாளர்களும் இணைந்து போராடுவதற்கு வருடத்தில் ஒரு தடவையாவது மே தினம் வருகின்றது. அதனை "வேற்றுக் கிரகவாசிகளின் அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்று மிரளுகிறவர்கள், எந்தளவு தூரம் உழைக்கும் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கிறார்கள் என்பது புரிகின்றது. 


அரசியலும், போராட்டமும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால், அது எனக்கு தவறாகத் தெரியவில்லை. என்னை ஒரு அரசியலற்ற மனிதனாக அறிவித்துக் கொள்ளும் மேட்டுக்குடி பண்பாடோ அல்லது பின்நவீனத்துவ சிந்தனையோ என்னிடம் கிடையாது. நாங்கள் அரசியலை வலிந்து திணித்துக் கொள்ளவில்லை. அரசியல் எங்களை தேடி வந்து பற்றிக் கொள்கின்றது. 

வீட்டுக்கு அருகில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் மகனை சேர்த்து விட்டு, வேலைக்கு போய் வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். அரசாங்கம் மானியத்தை நிறுத்தியதால், குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, ஒன்றரை வயது குழந்தையான அகரனை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை உருவானது. அந்த நேரத்தில், வேலையிழந்த குழந்தைகள் காப்பக ஊழியர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அதுவே எனது ஒரு வயது மகன் கற்ற முதலாவது அரசியல் பாடம். 

ஐரோப்பியர்கள் கோடை கால விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியே சென்று கூடாரமடித்து, அல்லது ஒரு ரிசோர்ட்டில் தங்கி உல்லாசமாக பொழுது போக்குவது வழக்கம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் ஒரு வார கோடை விடுமுறை முகாம், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். (அரசு மானியம் கொடுப்பதால் தங்குமிட செலவு மிகக் குறைவு.

கிறிஸ்தவ சபைகளும் கோடை விடுமுறை முகாம்களை நடத்துகின்றன. மத நம்பிக்கையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.) ஒரு தடவை நோர்வே மாவோயிஸ்ட் கட்சி நடத்திய கோடை கால விடுமுறை முகாமில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். அங்கே பெரியவர்களுக்கு அரசியல் வகுப்புகள், கலந்துரையாடல்கள் ஒரு பக்கம் நடக்கும். மறு பக்கம், சிறுவர்களுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கும். 

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால், நாங்களும் பொருளாதார பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் நேரம், எம்மால் முடிந்ததெல்லாம் சமூக மாற்றத்திற்காக, நான்கு பேர் கூடிக் கதைப்பது தான். அதனை சில மெத்தப் படித்த அறிவாளிகள் "அரசியல் சித்தாந்தம்" என்று வரையறுக்கின்றனர். எங்களது சமூகப் பிரச்சினைக்காக ஒன்று கூடுவது அரசியல் சித்தாந்தம் என்றால், அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தான், எமது அரசியல் சித்தாந்தம் என்னவென்பதை தீர்மானிக்கின்றது.

******

 வீடியோ: ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தின ஊர்வலம்.

Saturday, May 05, 2012

உலக மக்களின் மே தின எழுச்சியும், பொலிஸ் அடக்குமுறையும்

இந்த வருடமும், பல உலக நாடுகளின் நகரங்களில், பல்லாயிரக் கணக்கான  உழைக்கும் மக்கள் பங்குபற்றிய மே தின பேரணிகள் இடம்பெற்றன. சில நகரங்களில், பொலிஸ் அடக்குமுறை, தீவிர வலதுசாரிகளின் சீண்டுதல்கள் காரணமாக வன்முறைக் கலவரம் ஏற்பட்டது. 

சுவீடன் 
பல தசாப்தங்களாக, சமூக ஜனநாயக கட்சியின்  "சமதர்ம" ஆட்சி நடக்கும் சுவீடனில், மே தினம் விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக, தீவிர வலதுசாரிக் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இம்முறை மே தின ஊர்வலத்தை, பாசிஸ்டுகள் குழப்ப  முயன்ற வேளை, கைகலப்பு ஏற்பட்டது.



துருக்கி
இஸ்தான்புல் நகரில் மே தின ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது. பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், வங்கிகள் அடித்து நொறுக்கப் பட்டன.


கனடா
 மொன்றியல் நகரில், கடந்த சில நாட்களாகவே, அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மே தினத்தன்று,கனடிய மாணவர்களும், தொழிலாளர்களும் இணைந்து பேரணி ஒழுங்கு படுத்தி இருந்தனர். பொலிஸ் ஊர்வலத்தை கலைக்க முயற்சித்ததால், அங்கு கலவரம் மூண்டது.

Friday, May 04, 2012

யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!


வடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தமது தமிழ் மேட்டுக்குடிச் சகாவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டு மேதினம் கொண்டாடியது. தெற்கிலிருந்து பெருந்தொகையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணிக்கும் கூட்டத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதனை வேறொரு கட்சியினர் செய்திருந்தால் யாழ்ப்பாண ஊடகங்கள் எகிறிக்குதித்து இனவாதத்தையும் இனவெறியையும் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் இது மேட்டுக்குடிக் கூட்டு என்பதால் அதனை அடக்கி வாசித்துக்கொண்டனர். இது தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மமாகும். அத்துடன் சிங்கக்கொடி பிடித்த ரணில் சம்பந்தன் கூட்டுக்கரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைத்தானும் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (NDMLP) யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடத்திய சைக்கிள் பேரணிக்கும் கூட்டத்திற்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
மேற்படிப் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சியின் மேதினப் பேரணியும் கூட்டமும் செஞ்சட்டைகளுடனும் செங்கொடிகளுடனும் மிகவும் எழுச்சிகரமாக சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை நடாத்தப்பட்டது.
அரசாங்க எதிர்ப்பு முழக்கங்கள் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. பொருட்கள் மீதான விலையேற்றத்தை எதிர்த்தும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பைக் கண்டித்தும் அரசியல் தீர்வை வலியுறுத்தியும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி வழங்கக்கோரியும் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தியும் தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்தும் உழைக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளக்கோரியும் ‘ரணில் சம்பந்தன் கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு’ என்றும் இந்திய அமெரிக்க தலையீட்டை எதிர்த்தும் பேரணியில் முழக்கங்கள் முழங்கப்பட்டன.
இவற்றைப் பார்த்த மக்கள் மிகவும் வியப்புடனும் அவதானத்துடனும் பேரணிக்கு ஆதரவு கொடுத்தனர். அவ்வாறே மேதினப் பொதுக்கூட்டமும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்ட கூட்டமாக அமைந்திருந்தது. கட்சியின் வடபிரதேசச் செயலாளர் தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி. கா செந்திவேல் பிரதான உரையை ஆற்றினார். தொழிற்சங்க, வெகுஜன, பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். கட்சியின் கலைக்குழுவினரால் புரட்சிகரப் பாடல்கள் இடையிடையே பாடப்பட்டன. பெருந்தொகையான பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் பேரணியையும் கூட்டத்தினையும் நோட்டமிட்டவாறே இருந்தனர். ஆனால் மக்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாழ்ப்பாண வீதிகளில் செங்கொடிகளும் செஞ்சட்டைகளும் அணிவகுத்து வந்த காட்சிகளும் உணர்ச்சிகர முழங்களும் புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளுவதற்கான அடையாளமாகக் கண்டனர்.
இவ்வாறான புரட்சிகர மேதினப் பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் பற்றி  யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளிவரும் நான்கு நாளிதழ்களான உதயன், யாழ் தினக்குரல், வலம்புரி, தினமுரசு ஆகியவற்றில் ஒரு வரி கூட எழுதப்படவில்லை. நான்கு நாட்களாகியும் இந்த நான்கு நாளிதழ்களும் தமது வக்கிரமான மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. இது ஏன்?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் பெரும் சத்தத்துடன் வாயுபறிந்தால் அதில் தமிழ்த்தேசிய மணம் வீசுவதாக இப்பத்திரிகைகள் தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உழைக்கும் தமிழ்மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தனியார் துறை ஊழியர்கள், போன்றவர்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் அவற்றுக்கான தீர்வை வற்புறுத்தியும் இடம்பெற்ற உணர்வு பூர்வமான இவ்விடதுசாரி மேதினம் பற்றி இருட்டடிப்புச் செய்தமையானது இந்த யாழ்ப்பணாத்துத் தமிழ் ஊடகங்களின் நடுநிலை, சுதந்திரக்குரல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு போன்ற போலித்தனங்களை அம்பலமாக்கியுள்ளது.
தமிழ்மக்கள் மத்தியில் ஊடக வியாபாரத்தை நடாத்தும் ஊடக முதலாளிகளின் பைகளை நிரப்புகின்ற அதேவேளை மக்கள் மத்தியில் மாற்று அரசியற் கருத்தும் மாற்றுச் சிந்தனையும் வரக்கூடாது என்பதில் அவை மிக அக்கறையாக இருக்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இதனை ஊடக அயோக்கியத்தனம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது?  இவ்வூடக இருட்டடிப்புப் பற்றி வடபுலத்து இளம் தலைமுறையினர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
துலா 
thulaa.net
04-05-2012

Saturday, June 04, 2011

நீங்கள் இதுவரை காணாத மே தின வீடியோக்கள்

இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் யாவும் 1 மே 2011 ல், பல நாடுகளில் இடம்பெற்ற மே தின ஊர்வலங்களின் தொகுப்பு. ஜனநாயகப் புரட்சி நடந்த எகிப்தில், முதல் தடவையாக கம்யூனிஸ்ட் கட்சியினரின் மே தின ஆர்ப்பாட்டம் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Cairo, Egypt


Istanbul, Turkey


Bulgaria


Hamburg, Germany


Rotterdam, The Netherlands


Moscow, Russia


Kiev, Ukraine

Sunday, May 01, 2011

மே தினம் இராணியின் தினமாக மாறிய கதை


உலகம் முழுவதும் மே தினத்திற்கு விடுமுறை விடப்படுகின்றது. ஒரு சில நாடுகள் மட்டும் விதி விலக்கு. சுவிட்சர்லாந்தில் சில மாகாணங்களில் மட்டுமே விடுமுறை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்னர், நெதர்லாந்தில் மே தின விடுமுறை இரத்து செய்யப்பட்டது. அதற்கு தெரிவிக்கபப்டும் காரணம், மே தினத்திற்கு முதல் நாள், அதாவது ஏப்ரல் 30 அன்று, இராணியின் பிறந்த தினம் கொண்டாடப்படுகின்றது. அதுவும் தற்போது இராணியாக முடி சூட்டிக் கொண்ட பெயாற்றிக்ஸ்சின் பிறந்த தினமல்ல. ஏற்கனவே முடி துறந்த அவரது தாயார், யூலியானாவின் பிறந்த தினம்.

இது குறித்து பல வெள்ளையின நெதர்லாந்து பிரஜைகளிடம் கருத்துக் கேட்ட பொழுது, அவர்களின் அரசியல் பாமரத்தனம் வெளிப்பட்டது. முன்னை நாள் இராணியின் பிறந்த தினம், கோடை கால தொடக்கத்தில் வருவதால், வெளிப்புறக் கொண்டாட்டத்திற்கு ஏற்ற தினம், என்று தெரிவித்தனர். ஆனால், "இராணியின் தினத்திற்கு" அடுத்த நாள், உழைப்பாளர்களின் மே தினம் என்ற உண்மை பலருக்கு தெரியாது.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், பெரும்பான்மை உழைப்பாளர்களினால் கொண்டாடப்பட்ட மே தினத்தை, இன்றைய உழைக்கும் வர்க்கம் மறந்து பல தசாப்தங்களாகி விட்டன. இன்றைய உழைப்பாளிகள், இராணியின் தினத்தை மது அருந்தி, மகிழ்வுடன் ஆடிப்பாடிக் களிக்கின்றனர். முதல் நாள் மது அருந்திய மயக்கத்தில், அடுத்த நாள் உழைப்பாளர்களின் தினம் என்ற உண்மையை மறந்து போகின்றனர். நெதர்லாந்தில் கம்யூனிசம் போன்ற "தீமைகளை" கருவறுக்க அரசு கொண்டு வந்த திட்டம், சிறப்பாக செயற்படுகின்றது. "இராணி வாழ்க!"

இராணியின் தினத்தன்று, வர்த்தக விடுமுறை தினமாகும். அனைத்து வர்த்தகர்களும் கடைகளை மூடி விட வேண்டும். ஏனெனில், அன்றைய தினம் மட்டும் விற்பனை வரி அறவிடப் படுவதில்லை. இதனால், உழைத்துக் களைத்த சாமானிய மக்கள், ஒரு நாள் வியாபாரிகளாக முதலாளித்துவத்தின் சுவையை நுகர முடிகின்றது. இராணியின் தினத்தன்று, நடைபாதையில் கடை விரித்து எந்தப் பொருளையும் விற்கலாம். பலர், தமது வீடுகளில் கழித்து விடப்பட்ட பாவனைப் பொருட்களையும் கொண்டு வந்து போட்டு விற்பார்கள்.

பாவித்த பொருட்களையும், கடைகளில் விற்கப் படாமல் தேங்கி விட்ட சரக்குகளையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்ல வாடிக்கையாளர்கள் ஈயாக மொய்ப்பார்கள். பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் ஏதாவது விற்று நாலு காசு சேர்க்கும் படி அறிவுறுத்தப் படுவார்கள். வயலின் வாசித்துக் காட்டி, அல்லது வீட்டில் தயாரித்த தின்பண்டங்கள் விற்று, சிறுவர்கள் "வருங்கால முதலாளிகளாக" வருவதற்கான திறமைகளை வெளிப்படுத்துவார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டதாக பாட நூல்களும் போதிக்கின்றன. ஆனால், முதலாளித்துவ நாடுகளிலும் சித்தாந்தத்தை சிறு வயதிலேயே மூளைக்குள் திணிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நான் நெதர்லாந்துக்கு வந்த ஆரம்ப காலம், ஒரு வருடம் ஒரு கிராமத்தில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. கிராமத்து மக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், வெளிநாட்டவர்களை கண்டிராத மக்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அரசின் ஏற்பாடு. அப்போது சந்தித்த மக்களிடம், உலகில் பல நாடுகளில் அரசாட்சி ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், நெதர்லாந்து ஒரு இரானிய அரசுத் தலைவராக கொண்டிருப்பது குறித்து கருத்துக் கேட்போம். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், வறுமையில் வாடிய மக்கள், இன்று செல்வந்த வாழ்க்கை வாழ்வதற்கு, தமது இராணியின் தாராள குணமே காரணம் என்று கூறியது வியப்பை அளித்தது.

"இராணி தனது நகைகளை விற்று குடி மக்களின் வறுமையை போக்கியதாக..." அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். நெதர்லாந்து அரச வம்சம், காலனிய நாடுகளை சுரண்டி செல்வம் சேர்த்த உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த நாட்டின் பாட நூல்களும் அந்த விடயத்தில் மௌனம் சாதிக்கின்றன.

கிழக்கிந்தியக் கம்பனி என்ற பெயரில் கடல் கடந்து வாணிபம் செய்த, ஒல்லாந்து காலனியாதிக்கவாதிகள் கொள்ளையடித்த செல்வத்தில் பெரும் பகுதி அரச குடும்பத்தை சென்றடைந்தது. காட்டிலே வேட்டையாடிய மிருகத்தின் பெரும்பகுதி சிங்கத்திற்கே சேரும். எஞ்சிய இறைச்சியை தான் நரி போன்ற மிருகங்கள் உணவாகக் கொள்ளும். அதனால் தானோ என்னவோ, நெதர்லாந்தின் "ஒரான்யெ" அரச வம்சம், சிங்கத்தை அரச இலச்சினையாக கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது பணக்காரப் பெண்மணியான இராணியின் மாளிகையில், இன்றைக்கும் சிங்கக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.

நெதர்லாந்து அரச வம்சத்தினர் கம்யூனிஸ்டுகளை வெறுப்பதற்கு தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. சார் மன்னனின் ரஷ்யாவில் அவர்கள் பெருமளவு பணத்தை முதலீடு செய்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக, 1917 ல் இடம்பெற்ற போஷேவிக் கம்யூனிசப் புரட்சி இடியென இறங்கியது "சார் மன்னன் வாங்கிய அந்நிய நாட்டுக் கடன்களுக்கு, போல்ஷெவிக் புரட்சியாளர்கள் பொறுப்பேற்க முடியாது," என்று அறிவித்து விட்டனர். இதனால் போட்ட முதலையும் இழந்து, வட்டியையும் பறி கொடுத்த ஆத்திரத்தில் இருந்தனர், நெதர்லாந்து அரச வம்சத்தினர்.

போல்ஷெவிக் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட வெள்ளைப் படையினருக்கு, நிதியுதவி வழங்கினார்கள். ஆயினும், அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் திரும்பவில்லை. உள்நாட்டுப் போரில், எதிர்ப்புரட்சியாளர்களை தோற்கடித்த போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகள், இறுதி வரை வெளிநாட்டுக் கடன்களை திருப்பிக் கொடுக்கவேயில்லை. "இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பெர்லின் வரை வந்த செம்படை நெதர்லாந்தையும் பிடித்து விடுவார்கள்." என்று வதந்தியை கிளப்பி விட்டார்கள்.

"கம்யூனிசப் பூதம் பிடித்துச் சாப்பிட்டு விடும்", என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்கள். அரச வம்சம் உழைப்பாளர்களின் மே தினத்தை அபகரித்து, இராணியின் தினமாக மாற்றி விடுவதற்கு இவ்வளவு காரணங்கள் போதாதா?

Tuesday, May 25, 2010

நெதர்லாந்து மே தின ஊர்வலத்தில் போலிஸ் அடக்குமுறை!


(Rotterdam, 1 மே 2010) மே தின ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து கலைத்தது. 16 பேர் கைது செய்யப்பட்டனர். எந்தவொரு வெகுஜன ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை. ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலன், தனிமனித சுதந்திரங்களின் சொர்க்கபுரி, என்றெல்லாம் புகழப்படும் நெதர்லாந்தில் போலிஸ் அடக்குமுறை என்பது நம்புவதற்கு கஷ்டமாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடி காரணமாக உலகெங்கும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு வரும் காலத்தில், மே தின ஊர்வலம் போன்ற சிறு பொறியை கூட அணைக்க விரும்புகின்றது அதிகார வர்க்கம்.

நெதர்லாந்தின் தொழிற்துறை நகரமான ரொட்டர்டாமில் மட்டுமே மே தின அணிவகுப்பை காணலாம். கடந்த 30 வருடங்களாக "மே தினக் கமிட்டி" என்ற அமைப்பினரே ஊர்வலங்களை ஒழுங்கு செய்து வந்தனர். ரொட்டர்டாம் துறைமுகத்தில் வேலை செய்யும் துருக்கி தொழிலாளர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய அமைப்பு அது. சிறிய துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பு. நெதர்லாந்தில் நலிவடைந்த இடதுசாரி அமைப்புகளும் அதில் பங்குபற்றின. இவர்களின் கூட்டு உழைப்பில் வருடாவருடம் மே தின ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த வருடமும் அவ்வாறு செய்வதற்கு ஏற்கனவே போலிஸ் அனுமதி வாங்கி இருந்தனர்.

ரொட்டர்டாம் மாநகர சபை கட்டிடத்திற்கு முன்னால் ஒன்று கூடிய ஆர்வலர்களை போலிஸ் சுற்றி வளைத்தது. பங்கேற்பாளர்களின் கைகளில் இருந்த செங்கொடிகளையும், சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஒப்படைக்கும் படி கேட்டது. அப்படி ஒப்படைக்கா விட்டால் ஊர்வலத்தை நகர அனுமதிக்க மாட்டோம், என போலிஸ் மிரட்டியது. ஆனால் அதற்குப் பின்னரும் மே தின ஊர்வலம் முன்னோக்கி செல்ல போலிஸ் அனுமதிக்கவில்லை. போலிஸ் நாய்களைக் கொண்டு சுற்றி வளைத்த படியே, கூட்டத்தின் மீது தடியடிப் பிரயோகம் செய்தது. எந்தவித தூண்டுதலும் இன்றி போலிஸ் தானாகவே இந்த அடக்குமுறையை ஏவி விட்டது. குறைந்தது 16 பேர் கைது செய்து இழுத்து செல்லப்பட்டனர். கண்மூடித் தனமான தடியடிப் பிரயோகம் காரணமாக ஊர்வலத்திற்கு வந்தவர்கள் கலைந்து செல்ல வேண்டி நேரிட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட அன்று, மே தினக் கமிட்டி நீதி மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது. அப்போது எடுத்த புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.) அதே நேரம் மே தினக் கமிட்டியினர், போலிஸ் அத்துமீறலுக்கு எதிராக ரொட்டர்டாம் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

(மே தின துண்டுப் பிரசுரத்திலும், நீதிமன்ற ஆர்ப்பாட்ட பதாகையிலும் காணப்படும் சுலோகம்: "WE ARE'T GOING TO PAY THEIR CRISIS! FOR THE SOLIDARITY AND SOCIALISM!")

கீழே Rotterdam மே தின ஊர்வலத்தைக் கலைக்க பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்யும் வீடியோ காட்சி.




நெதர்லாந்தில் நைமேஹன் (Nijmegen) என்ற இடத்தில் நடைபெற்ற, சிறிய அளவிலான மே தின ஊர்வலத்தையும் பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீழே உள்ளது "நைமேஹன் கலவரம்" குறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ.