ஆங்கிலம் பேசினால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்பது கஜன், விக்கி போன்ற போலித் தமிழ்தேசியவாதிகளின் தப்பெண்ணம். அதை தமிழில் பேசியே சாதிக்கலாம். உண்மையான தேசியவாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதை, துருக்கியின் முதலாவது குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர் லைலா ஜானாவின் வாழ்க்கைக் கதை மூலம் விளக்கி உள்ளேன்.
Showing posts with label தமிழ் தேசியவாதம். Show all posts
Showing posts with label தமிழ் தேசியவாதம். Show all posts
Saturday, August 29, 2020
ஆங்கிலம் பெரிதென்பர் போலித் தமிழ்த் தேசியவாதிகள்!
Labels:
தமிழ் தேசியம்,
தமிழ் தேசியவாதம்,
தமிழ் தேசியவாதிகள்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, August 26, 2020
இராவணன் தமிழனா, சிங்களவனா அல்லது திபெத்தியனா?
இராவணன் யாருக்கு சொந்தம்? தமிழருக்கா அல்லது சிங்களவருக்கா? இராவணன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? பல புதிய தகவல்களுடன் மாறுபட்ட கோணத்தில் ஓர் ஆய்வு.
Labels:
தமிழ் தேசியவாதம்,
தேசியவாதம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, December 29, 2018
வலதுசாரி தேசியவாதம் ஓர் இளம்பருவக் கோளாறு - ஜான் மாஸ்டருடன் ஒரு விவாதம்
தோழர் சி.க. செந்தில்வேல் எழுதிய "வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை" நூல் வெளியீடு, கனடாவில் தேடகம் அமைப்பினரால் நடத்தப் பட்டது. அங்கே கலந்து கொண்டு பேசிய ஜான் மாஸ்டர், தனது உரையில் கூடுதலான நேரம் மார்க்சிய லெனினிச மாவோவாத சித்தாந்தம் மீது சேறடிப்பதற்கு ஒதுக்கினார். தன்னையும் ஒரு மார்க்சியவாதி என அறிமுகப் படுத்திக் கொண்டே, இலங்கையில் உள்ள தமிழ் இடதுசாரிகள் "வறட்டுவாத சூத்திரத்தை" பிடித்துக் கொண்டு தொங்குவதாக சாடினார்.
(பார்க்க வீடியோ: சி.கா.செந்திவேல் நூல் வெளியீடு) அவரது உரை முழுவதும் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தன.
"தமிழ் இடதுசாரிகள் வறட்டு சூத்திரத்தை பிடித்து தொங்குவதாக..." ஜான் மாஸ்டர் குற்றம் சாட்டினார். தமிழ்த்தேசியம் என்றால் அதற்குள் தமிழ் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? அதற்கு அவரே ஓர் உதாரணம். அவரது உரை முழுவதும் தமிழ்த்தேசியத்தை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளத் தயக்கம் ஏன் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதே நேரம் தன்னை ஒரு மார்க்சியவாதி என்றும் அறிமுகப் படுத்தி இருந்தார்.
"தமிழ் இடதுசாரிகள் வறட்டு சூத்திரத்தை பிடித்து தொங்குவதாக..." ஜான் மாஸ்டர் குற்றம் சாட்டினார். தமிழ்த்தேசியம் என்றால் அதற்குள் தமிழ் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? அதற்கு அவரே ஓர் உதாரணம். அவரது உரை முழுவதும் தமிழ்த்தேசியத்தை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளத் தயக்கம் ஏன் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதே நேரம் தன்னை ஒரு மார்க்சியவாதி என்றும் அறிமுகப் படுத்தி இருந்தார்.
ஜான் மாஸ்டர் மார்க்சியத்தை தான் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறார் என்றால், முதலாளித்துவம் பற்றியும் அவ்வாறே தவறான தகவல்களை வழங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழர்கள் முதலாளிகளாக இருந்தனர் என்றார். அதற்கு உதாரணமாக, கேரளா சந்தைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து புகையிலை ஏற்றுமதி செய்யப் பட்ட வரலாறை சுட்டிக் காட்டினார். அவரது உரையின் இன்னொரு இடத்தில், இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசு தான் முதலாளித்துவத்தை உருவாக்கியது என்கிறார். ஏனிந்த முரண்பாடு ஐயா?
இலங்கை ஆங்கிலேய காலனியாக இருந்த காலத்தில் தான், முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்ற உண்மையை இவர் வசதியாக மறந்து விடுகிறார். அல்லது மறைத்து விடுகிறார். அதற்கு ஒரு காரணம் உள்ளது. இவர் "வரட்டுச் சூத்திரவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டும் தமிழ் இடதுசாரிகள் அடிக்கடி தரகு முதலாளித்துவம் பற்றிப் பேசுகின்றனராம். அப்படியெதுவும் இல்லை என்று சாதிக்கிறார்.
ஜான் மாஸ்டர் சொல்ல விரும்புவது போன்று, யாழ்ப்பாணத்தில் தமிழ் முதலாளித்துவம் தானாக தோன்றவில்லை. அது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நிழலில் தோன்றியது. அந்தக் காலத்தில் இந்தியாவும் இலங்கையும் அகண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாகாணங்கள் போன்று ஆளப் பட்டன. இன்றுள்ள இலங்கை அரச நிர்வாக கட்டமைப்பும், ஏன் இராணுவம் கூட ஆங்கிலேயர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற காலனிய எச்சங்கள் தான்.
ஆங்கிலேய காலனிய காலத்தில் நடந்த வர்த்தகம் லண்டன் சந்தையை நோக்கியதாக இருந்தது. அது ஒன்றும் சர்வதேச வர்த்தகம் அல்ல. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற "ஒரே நாட்டுக்குள்" நடந்த வர்த்தகம். அன்று ஆங்கிலேயர்கள் பெரும் நிறுவனங்களின் அதிபதிகளாக இருந்தாலும், உள்ளூர் முதலாளிகளையும் ஊக்குவித்து வளர்த்தனர். அதனால் தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அவர்கள் தரகு முதலாளிகளாக கருதப்பட்டனர்.
மூலதனம், பிரித்தானியா போன்ற மேற்கத்திய நாடுகளில் குவிக்கப் பட்டிருப்பதால் தான், நவகாலனிய சுரண்டல் எந்தத் தடங்கலும் இன்றி தொடர முடிகிறது. அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் தான் தரகு முதலாளிகள். அவர்கள் ஒரு வர்க்கமாக உள்ளனர். அவர்கள் ஒரு பக்கம் சிங்களத் தேசியத்திற்கும், மறுபக்கம் தமிழ்த்தேசியத்திற்கும் ஆதரவளிப்பார்கள்.
தரகு முதலாளிகளின் இறுதி இலக்கு இலங்கையை மறுபடியும் மேற்கத்திய காலனியாக்குவதாக இருக்கும். இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்களக் கட்சிகளில் எவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும், அவை தனியார்மயத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் முதலிடுவதை ஊக்குவிக்கின்றன. IMF, உலகவங்கி போன்ற நிதி மூலதன ஏகாதிபத்தியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகின்றன. இவை எல்லாம் தரகு முதலாளித்துவத்தின் தோற்றப்பாடுகள் இல்லையா?
ஜான் மாஸ்டர், "மார்க்சியத்தின் பேரால் விமர்சிக்கிறேன்" என்று கூறிக் கொண்டே, அதைக் கொச்சைப் படுத்தும் வேலைகளை செவ்வனே செய்கிறார். அறிவுஜீவி மனப்பான்மையுடன் மார்க்சியத்தை திரிக்கத் தொடங்கி விடுகிறார். அதற்கு ஆதாரமாக "அல்தூசர் படித்தீர்களா? கிராம்சி படித்தீர்களா?" என்று கேட்கிறார். ஒரு நீதிக் கதையில் வரும் படகுக்காரனிடம் "வேதங்கள் படித்தாயா?" என்று கேட்ட பிராமணனை நினைவுபடுத்துகிறது.
மார்க்ஸ் "முதலாளித்துவத்தின் இயங்கு விதிகள்" பற்றிய தன்னுடைய கருத்துக்களை முன்வைத்ததாகவும், அது அந்தக் காலத்தில் "மிக முன்னேறிய கோட்பாடாக" இருந்ததாகவும் ஜான் மாஸ்டர் கூறுகிறார். உண்மையில், முதலாளித்துவத்தின் இயங்குவிதிகள் பற்றி ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற அறிஞர்கள் ஏற்கனவே எழுதி விட்டனர்.
முதலாளித்துவத்தில் மூலதனம் எவ்வாறு குவிக்கப் படுகிறது என்பது பற்றித் தான் மார்க்ஸ் ஆராய்ந்தார். உழைப்பில் உபரிமதிப்பு இருப்பதை கண்டுணர்ந்து கூறினார். ஆனால், மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே அதைப் பலர் கண்டுகொள்ளவில்லை. இன்று ஜான் மாஸ்டர் மாதிரி, அன்றும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் மார்க்ஸ் "ஒரு வரட்டு சூத்திரவாதி" என்று பரிகசித்தனர்.
இனி, ஜான் மாஸ்டர் லெனின் பற்றி அவிழ்த்து விடும் கட்டுக் கதைகளை பார்ப்போம். ஏகாதிபத்தியம் லெனினின் காலத்தில் தானாம் வந்தது. (அதற்கு முன்னர் அப்படி ஒன்றே இருக்கவில்லை?) ஜெர்மனி போன்ற வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் தான் புரட்சி வெடிக்கும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தார் என்றும் அதை லெனின் "ஏற்றுக் கொள்ளவில்லை" என்றும் கூறுகின்றார். அதனால் தான், லெனின் "ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கும்" என்று கூறி அதற்கான தயார்படுத்தல்களை செய்தாராம். அடேங்கப்பா! ஜான் மாஸ்டர் நமது காதுகளில் முழம் முழமாக பூச் சுற்றுகிறார்.
ஏகாதிபத்தியம் லெனின் காலத்தில் தான் வந்ததா? மார்க்ஸ் காலத்தில் இருக்கவில்லையா? மார்க்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த, கிழக்கிந்திய கம்பனி, மேற்கிந்தியக் கம்பனி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இவையெல்லாம் ஏகாதிபத்தியம் இல்லையா? அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் காலனி பிடிப்பதற்காக போரிட்டுக் கொள்ளவில்லையா? ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், மார்க்ஸ் காலத்தில் தொழிற்துறை சார்ந்ததாகவும், லெனின் காலத்தில் நிதிமூலதனம் சார்ந்ததாகவும் இருந்தது. அது மட்டுமே வித்தியாசம்.
ஜெர்மனி போன்ற வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தது உண்மை தான். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், மார்க்ஸ் தவறு செய்து விட்டார் என்று வாதிடுவது உள்நோக்கம் கொண்டது. முதலாம் உலகப்போர் முடிந்தவுடன் ஜெர்மனியின் பல நகரங்களில் புரட்சி வெடித்தது.
பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய இடங்களில் தோன்றிய சோவியத் அமைப்புகள் ஒரு மாதம் அளவில் நின்று பிடித்தன. ஆனால், பலமான ஜெர்மன் இராணுவத்தின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக புரட்சி தோற்கடிக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், புரட்சியில் ஈடுபட்ட மக்களும் நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப் பட்டனர்.
அன்றிருந்த ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி பாட்டாளிவர்க்க புரட்சிக்கு தலைமையேற்க வேண்டிய தனது பொறுப்பில் இருந்து நழுவியது. புரட்சியை காட்டிக் கொடுத்தது. அது பல வருடங்களுக்கு முன்னரே முதலாளித்துவத்துடன் சமரசவாத போக்கில் சென்று கொண்டிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மன் தேசியத்தை பாதுகாத்தது. இது தான் லெனின், ரோசா லக்சம்பேர்க் போன்ற பலர் முரண்படக் காரணம்.
சமூக ஜனநாயகக் கட்சியின் திரிபுவாதப் போக்கையும், தேர்தல் பாதையையும் நிராகரித்து உருவானவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர். லெனின் தலைமையிலான போல்ஷெவிக் பிரிவினரும் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியுடன் முரண்பட்டு விலகிச் சென்றவர்கள் தான். முதலாம் உலகப்போரில் தோற்கடிக்கப் பட்டு நட்டமடைந்த சார் மன்னன் பதவி விலகியதால், ரஷ்யாவில் பாராளுமன்ற ஆட்சி வந்தது.
சார் மன்னனிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய முதலாளித்துவ பாராளுமன்ற அரசு பலவீனமாக இருந்த படியால், போல்ஷெவிக் கட்சி அக்டோபர் புரட்சியில் அதிக இழப்புகள் இன்றி ஆட்சியை கைப்பற்ற முடிந்தது. அதைவிட பாரிஸ் கம்யூன் தோற்கடிக்கப் பட்ட வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்ட பாடமும் புரட்சியின் வெற்றிக்கு காரணம். அதாவது, போல்ஷெவிக்குகள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக நீண்ட கால போருக்கு தயாராக இருந்தனர். புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்தல்ல என்று மாவோ சொன்னதையும் இங்கே நினைவு படுத்த வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ் இடதுசாரிகள் பொருளியலை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் என்று ஜான் மாஸ்டர் குற்றஞ்சாட்டுகிறார். இது ஒரு விடயத்தை எளிமைப் படுத்தப் படுத்தி புரிந்து கொள்வதால் ஏற்படும் தவறு. அக்டோபர் புரட்சிக்கு முன்னர், ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியில் பொருளியல்வாதிகள் என்று ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்களை நிராகரித்து உருவானது தான் லெனினிசம். இது போல்ஷெவிக் கட்சியின் வரலாறு எனும் நூலில் பதிவுசெய்யப் பட்டுள்ளது.
மார்க்சிய லெனினிசம் என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடு அல்ல. அது மிக முக்கியமாக வர்க்க அடிப்படை கொண்டது. மனித குல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறு தான் என்று மார்க்ஸ் சொன்னார். அதாவது எதையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அதையே தான் லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரும் முன்னெடுத்தனர். அதனால் தான் இன்றைக்கும் சில கட்சிகள் தம்மை மார்க்சிய லெனினிச அல்லது மாவோயிச கோட்பாட்டின் படி நடப்பதாக அறிவித்துக் கொள்கின்றன.
ஜான் மாஸ்டர் கிண்டல் அடிப்பது போன்று, இது "மாவோவின் மேற்கோள்கள் நூலில் எல்லாம் இருக்கிறது" என நினைக்கும் வரட்டுச் சூத்திரம் அல்ல. அதிலும் வர்க்கப் போராட்டம் பற்றித் தான் விலாவாரியாக எழுதி இருக்கிறது.
ஜான் மாஸ்டரின் உரையில் எந்த இடத்திலும் வர்க்கப் போராட்டம் பற்றி பேசப் படவில்லை. இது ஒன்றும் கவனிக்காமல் விடும் தவறு அல்ல. வர்க்க முரண்பாடுகளை பேசாமல் விடுவதன் மூலம் முதலாளித்துவ ஒடுக்குமுறை மூடி மறைக்கப் படுகின்றது.
அவரது உரையில் பேசப்பட்ட எந்த ஒரு விடயத்திலும் வர்க்கக் கண்ணோட்டம் கிடையாது. வர்க்கம் என்ற சொல்லை உச்சரிக்கவே தயங்குகிறார். அப்படியான ஒருவர் எவ்வாறு ஒரு மார்க்சிய லெனினிச மாவோயிச கட்சி மீது விமர்சனம் வைக்க முடியும்? அதையும் மார்க்சியத்தின் பேரால் செய்வதைப் போன்ற கயமைத்தனம் வேறெதுவும் கிடையாது. அதை விட நேரடியாகவே முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் நேர்மையாளர்கள்.
********
கனடாவில் நடந்த நூல் விமர்சனக் கூட்டம் ஒன்றை பயன்படுத்தி, ஜான் மாஸ்டர் எனும் ரகுமான் ஜான் மார்க்சியத்தை திரிபுபடுத்தி பேசியதை விமர்சித்து முகநூலில் எதிர்வினையாற்றி இருந்தேன். மேற்கொண்டு நிறைய எழுத வேண்டி இருந்த படியால், நேரமின்மை காரணமாக தொடரும் என்று போட்டிருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் ஜான் மாஸ்டர் எனக்கு நீண்டதொரு எதிர்வினையாற்றி உள்ளார். அதில் நான் "ஸ்டாலின் தேசியவாதம் பேசியது குறித்து" எதுவும் எழுதவில்லை என்றும், இதனால் கருத்தாடலில் அர்த்தம் இல்லை என்றும் தொடங்கி உள்ளார். (பார்க்க:கலையரசனுடைய விமர்சனங்களுக்கான எதிர்வினை...)
மன்னிக்கவும், கிழமைக்கு நாற்பது மணிநேரம் உடல் உழைப்பை செலவிட வேண்டியுள்ள சாதாரண தொழிலாளியான எனக்கு, "அறிவுஜீவிகள்" போன்று புத்தகங்களை தேடி வாசிக்கவும், அவற்றை மேற்கோள் காட்டி எழுதவும் நேரம் கிடைப்பதில்லை. இப்போதும் முன்பு கற்ற அறிவை வைத்து தான் பதில் எழுதுகிறேன். ஆதாரம் தேடுவதற்கு எனக்கு நேரமில்லை. அதற்காக எனது எதிர்வினையை அவர் "பொதுப்புத்தி" என்று புறக்கணிக்கலாம். அது அவரது அறிவுஜீவித்தனத்தை (Intellectualism) காட்டுகின்றது.
மார்க்சியம் என்பது ஒரு பாட்டாளி வர்க்க கோட்பாடு. அதைப் புரிந்து கொள்வதற்கு பாட்டாளிவர்க்க உணர்வும் அவசியம். அதை அறிவுஜீவி மேட்டிமைத்தனத்துடன் புரிந்து கொள்ள முடியாது. கோட்பாடுகளை எமது வார்த்தைகளில் விளக்குவதற்கு முன்னர், நாம் அதை உள்வாங்கி புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்பாடுகளையும், பார்முலாக்களையும் இரைமீட்பதால் தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. அது போன்ற தவறுகளை தான் ரகுமான் ஜானின் எதிர்வினையில் நான் காண்கிறேன்.
ஜான் மாஸ்டர் எழுப்பிய கேள்விகளுக்கான எனது பதில்கள்:
ஸ்டாலின் ஒரு தேசியவாதியா?
//ஸ்டாலினே சில குறிப்பான சந்தர்ப்பங்களில், பழம்பெருமை பேசி, தேசியவாதத்தை துணைக்கு அழைக்கிறார் என்பதை நிறுவும் வகையில் எனது ஆதாரத்தை வழங்கியிருந்தேன்// - ரகுமான் ஜான்
1941 ம் ஆண்டில் செஞ்சேனை படை வீரர்கள் தமது பயிற்சி முடித்து வெளியேறும் ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஸ்டாலின், சார் மன்னர் காலத்து (தேசிய)வீரர்களை பற்றிக் குறிப்பிட்டு "தேசியவாதத்தை" உயர்த்திப் பிடித்தார் என்பது அவர் தரும் முதலாவது "ஆதாரம்".
1931 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4ம் திகதி, ஸ்டாலின் சோவியத் யூனியனது முதன்மையான தொழிற்சாலை நிர்வாகிகளுடன் உரையாடிய போது,மொங்கோலியர்கள், துருக்கியர்கள், லிதுவேனியர்கள் ஆகிய அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்பை குறிப்பிட்டுப் பேசி, தற்போது எமக்கொரு சோஷலிச தந்தையர் நாடு இருக்கிறது என்று ஸ்டாலின் "தேசியவாத" அறைகூவல் விடுத்தார் என்பது அவர் தரும் இரண்டாவது "ஆதாரம்".
ஜான் மாஸ்டர் உண்மையில் தேசியத்தையும், தேசியவாதத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார். உலகில் முதல் தடவையாக ஐரோப்பாவில், குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசிய அரசுகள் தோன்றின. அதற்கு முன்னர் மன்னராட்சி இருந்த இடத்தில் குடியரசுகள் உருவாகின. அவை முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றின. அவற்றின் வளர்ச்சிக் கட்டத்தில் தான் சோஷலிச அரசுகள் தோன்றுகின்றன. ஒரு முதலாளித்துவ அமைப்பினுள் சோஷலிசத்திற்கான கரு அடங்கியுள்ளது.
அன்றைய காலங்களில், தேசிய அரசுக்களை அமைத்தவர்களின் அரசியல் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது. அதற்காக ஒரு குறிப்பிட்ட தேசியத்திற்குள் அடங்குவோர் எல்லோரும், அங்குள்ள தேசியவாத அரசியலை ஏற்றுக்கொண்டனர் என்று அர்த்தம் அல்ல. அங்கு தேசியவாதத்தை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதே மாதிரி, தேசங்களின் எல்லைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும் (உதாரணம்: அனார்க்கிஸ்ட்) இருப்பார்கள்.
மேலும், ஸ்டாலின் போன்ற ஆட்சியாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கும், பிற நிகழ்வுகளில் பேசுவதற்கும் இடையிலான வித்தியாசத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதன் தத்துவார்த்த அடிப்படையை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால், வெளி இடங்களில் நடக்கும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. அரசியல் ஆர்வமில்லாதவர்களும் இருப்பார்கள்.
ஜான் மாஸ்டர் இங்கே குறிப்பிட்ட இரண்டு "ஆதாரங்களும்" பொது நிகழ்வுகளில் ஆற்றிய உரைகள் தான். அங்கு சமூகமளித்த அனைவரும் மார்க்சிய லெனினிசவாதிகள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களில் பலர் தேசப் பற்றாளர்களாக, தேசியவாதிகளாக கூட இருக்கலாம். ஏன் மத நம்பிக்கையாளர்களும் இருப்பார்கள். சுருக்கமாக சொன்னால், பெரியளவு அரசியல் ஈடுபாடற்ற சாதாரண மக்கள். அதனால் அவர்களுக்கு புரியும் மொழியில் பேசுவதும் அவசியமாகிறது.
அதே நேரம், மொங்கோலியர்கள், பிரெஞ்சியர்கள், ஜப்பானியர்கள், லிதுவேனியர்கள் ரஷ்யா மீது படையெடுத்தனர் என்று கூறி விட்டால் அது ஒரு "தேசியவாத அறைகூவல்" ஆகி விடுமா? இவை எல்லாம் யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள். எல்லா நாடுகளிலும் வாழும் மக்களின் நினைவுகளில் இது போன்ற வரலாற்றுக் கதைகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்டு பேசுவதில் என்ன தவறு? இலங்கையை, இந்தியாவை எந்தவொரு அந்நிய நாடும் ஆக்கிரமிக்கவில்லையா? அதைப் பற்றிக் கேட்டால் அங்குள்ள மக்கள் கதை கதையாக சொல்வார்களே?
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் இருந்தன. அப்போது அமெரிக்காவில் "ரஷ்யா ஏன் போரிடுகிறது?" என்று ஒரு ஆவணப் படம் தயாரித்து வெளியிட்டனர். அதிலும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டது போன்ற வரலாற்று சம்பவங்கள் குறிப்பிடப் படுகின்றன. "கடந்த காலங்களில், பிரெஞ்சியர், ஜப்பானியர் போன்ற அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ரஷ்யாவின் வளங்களை அபகரிக்கப் பார்த்தனர். தற்போது (நாஸி) ஜெர்மனி அந்த நோக்கத்தில் படையெடுக்கிறது..." என்று அமெரிக்க ஆவணப் படத்திலும் கூறுகின்றனர். அந்த வரலாறு உண்மை தானே? அது எப்படி "தேசியவாத அறைகூவல்" ஆகும்? நான் நினைக்கிறேன், ஜான் மாஸ்டர் எப்போதும் தேசியவாதக் கண்ணாடி அணிந்து கொண்டு தான் எல்லாவற்றையும் பார்க்கிறார். அதனால் காண்பதெல்லாம் தேசியவாதமாகத் தெரிகின்றது.
ரகுமான் ஜான் இங்கே ஒரு முரண்நகையை கவனிக்கத் தவறி விடுகிறார். ஒரு ஜார்ஜியரான ஸ்டாலின் ரஷ்ய தேசியவாதம் பேசுவது வேடிக்கையானது. அதை எந்தவொரு ரஷ்ய தேசியவாதியும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆகையினால், இது அனைத்து மக்களையும் கவர்வதற்கான அலங்காரப் பேச்சு என்பது எடுத்தவுடனே புரிந்து விடும். மேலும், செம்படையில் போர்வீரர்களாக சேர்ந்த எல்லோரும் ஸ்டாலினுக்காக அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்காக போருக்கு செல்லவில்லை. நிறையப் பேர் தாய் நாட்டுப்பற்றுக் காரணமாகவும் யுத்தமுனைக்கு சென்றனர்.
ரஷ்யப் புரட்சிக்குப் பின்னரான காலங்களில் தேவாலயங்கள் மூடப் பட்டமை உண்மை தான். ஆனால், இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் அவை மீண்டும் திறக்கப் பட்டன. மத வழிபாடுகள், சடங்குகள் தாராளமாக அனுமதிக்கப் பட்டன. பைபிள் படிப்பதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. தேவாலயங்கள் சொத்து வைத்திருக்கவும் அனுமதிக்கப் பட்டது.
இதெல்லாம் அன்று சோவியத் யூனியனில் இருந்த மத நம்பிக்கையாளர்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள். அதனால் நன்மையே உண்டானது. கிறிஸ்தவ தேவாலயங்கள் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த இலட்சக்கணக்கான ரூபிள்களை யுத்த நிதியாக வழங்கின. மதகுருக்கள் யுத்தமுனைக்கு சென்று பூசை செய்தனர். இந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி, ஸ்டாலின் "கிறிஸ்தவ மத போதனை செய்தார்" என்று கூறுவது எத்தனை அபத்தமானது?
ஸ்டாலின், மத்திய ஆசிய நாடுகளில் இருந்த இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களை கவரும் வகையிலும் நடந்து கொண்டார் என்பது தெரியுமா? டாகெஸ்தான் மாநிலத்தில் ஷரியா சட்டம் கொண்டு வருவதற்கு ஸ்டாலின் ஆதரவு வழங்கினார். அதற்கான ஆதாரம் இதோ:
ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்:
//"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை.
ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."//
இதைக் கண்டால் ஜான் மாஸ்டர் என்ன சொல்வார்? "ஸ்டாலின் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசினார்" என்று சொல்வாரா? யானை பார்த்த குருடர்கள் கதை மாதிரித் தான் ஜான் மாஸ்டரின் "ஸ்டாலின் தேசியவாதம் பேசினார்" என்ற வாதமும் அமைந்துள்ளது.
ஜான் மாஸ்டர் (ரகுமான் ஜான்) தனது உரையில் ஏகாதிபத்திய காலகட்டம் பற்றி கூறிய தகவல் தான் பிழை என்று எனது எதிர்வினையில் எழுதி இருந்தேன். அதாவது ஏகாதிபத்தியம் லெனின் காலத்தில் வந்தது என்று நினைத்துக் கொள்வது தவறு என்றும், அது காலனிய காலகட்டத்தில் இருந்து தொடர்கிறது என்று எழுதினேன். அதற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், கிழக்கிந்திய/ மேற்கிந்தியக் கம்பனிகளை உதாரணம் காட்டினேன்.
அதற்குப் பதிலளித்த ரகுமான் ஜான் பின்வருமாறு எழுதி உள்ளார்:
//பேரரசுகளை குறிப்பிடுவதற்கு ஏகாதிபத்தியம் எனும் பதம் பொதுப்புத்தியில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஏன் தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஏகாதிபத்தியம் என்றுகூட குறிப்பிட்ட காலம் வரையில் பேசி வந்துள்ளார்கள் அப்போது இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்தியதை கடுமையாக கேலி செய்தவர்கள் இதே இடதுசாரிகள்தான். ஆனால் வரலாற்று முரண்நகை என்னவென்றால் கலையரசனும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான்.
ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், கோட்பாட்டுரீதியாக அது எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதுதான்//
"கோட்பாடு" என்று பொதுவாக ஒன்றும் இல்லை. அது ஒவ்வொருவருடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்து மாறுபடுகிறது. ஏகாதிபத்தியம் குறித்த மார்க்சிய கோட்பாட்டுக்கும், லிபரல் கோட்பாட்டுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. மார்க்சியம் சர்வதேச மூலதன திரட்சியை கவனத்தில் எடுக்கிறது. அந்தக் கோட்பாட்டை புறக்கணிக்கும் லிபரலிசம், பிற நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகளை மட்டும் கவனத்தில் எடுக்கிறது.
இரண்டுமே சந்தைகளின் விரிவாக்கம் குறித்து பேசுகின்றன. ஆனால், லிபரல் ஏகாதிபத்திய கோட்பாடானது, ஏகாதிபத்தியத்தால் காலனிப் படுத்தப் பட்ட மக்களுக்கும் நன்மை உண்டாகிறது என்று வாதிடுகின்றது. அதற்கு மாறாக, மார்க்சிய ஏகாதிபத்திய கோட்பாடு வளங்களின் சுரண்டல் காரணமாக காலனிப் படுத்தப் பட்ட மக்கள் வறுமைக்குள் தள்ளப் பட்டதை கவனிக்கிறது. அதற்குக் காரணம் காலனிகளில் சுரண்டி சேர்க்கப் பட்ட மூலதனம் காலனியாதிக்க அரசின் தாயகத்திற்கு கொண்டு செல்லப் படுவது தான் என்று வாதிடுகிறது.
அந்த வகையில் கிழக்கிந்திய/மேற்கிந்திய கம்பனிகளை ஏகாதிபத்தியம் என்று அழைப்பதில் தவறில்லை. அவை இன்றைய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பனிகளின் முன்னோடிகள் எனலாம். அன்று அந்தக் கம்பனிகள் உலகம் முழுவதும் வைத்திருந்த காலனிகளை சுரண்டி கிடைத்த இலாபப் பணம் கம்பனி பங்குதாரர்களிடையே பங்கிடப் பட்டது. இதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வறட்டுத்தனமான வாதம். நாம் மார்க்ஸ் எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு உலக நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்தியம் பற்றிய லிபரலிசக் கோட்பாடு, ஜான் மாஸ்டரால் "பொதுப் புத்தி" என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அதற்கு உதாரணமாக, "தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஏகாதிபத்தியம் என்று குறிப்பிட்டனர்" என்கிறார். மன்னிக்கவும், அவர்கள் "தமிழ் அரசியல்வாதிகள்" அல்ல, லிபரலிச கோட்பாட்டை பின்பற்றும் தமிழ் (தேசிய) வலதுசாரிகள். அவர்களுக்கு சிங்கள- தமிழ் இன முரண்பாட்டுக்கு அப்பால் உலகில் வேறெந்த விடயமும் தெரியாது. அவற்றில் அக்கறை இல்லை என்று கூறலாம்.
இதே மாதிரி, காஷ்மீர் அல்லது அசாம் தேசியவாதிகள் இந்திய ஏகாதிபத்தியம் பற்றி குறிப்பிடுவார்கள். உக்ரைனிய தேசியவாதிகள் ரஷ்ய ஏகாதிபத்தியம் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். //பேரரசுகளை குறிப்பிடுவதற்கு ஏகாதிபத்தியம் எனும் பதம் பொதுப்புத்தியில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.// என்று ஜான் மாஸ்டர் கூறுகிறார். இங்கே அவர் தமிழ்த்தேசியவாதிகளையும் சேர்த்துத் தான் பொதுப் புத்தியில் பேசுவதாக சாடுகிறார். மன்னிக்கவும், தேசியவாதம் எப்போதும் குறுகிய மனப்பான்மை கொண்டது. அது தனது இனம் சார்ந்து மட்டுமே சிந்திக்கிறது.
அந்த அடிப்படையில், தமிழ் வலதுசாரிகளின் குறுந் தேசியவாதக் கோட்பாட்டின் படி, "தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு தான் ஏகாதிபத்தியம்" என்று புரிந்து கொள்கிறார்கள். தமிழ் வலதுசாரிகளால், பெரும்பாலான அரசியல் கலைச் சொற்கள் இவ்வாறு மாறுபட்ட அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் படுவதற்கு பல உதாரணங்களை காட்டலாம். உதாரணத்திற்கு வர்க்கம் என்ற சொல் முற்றிலும் பிழையான அர்த்தத்துடன் பயன்படுத்தப் படுகின்றது. தமிழ்த்தேசியவாதிகள் சிங்களவர்களை ஒடுக்கும் வர்க்கம் என்றும், தமிழர்களை ஒடுக்கப்படும் வர்க்கம் என்றும் சொல்வார்கள். அதே மாதிரி, சுயநிர்ணயம் என்றால் அது தனிநாடு மட்டுமே என்று புரிந்து கொள்வார்கள். இது தமிழ்த் தேசிய அரசியலின் கோட்பாடு பற்றிய விளக்கம் இன்மையை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பாக தமிழ் வலதுசாரிகள் எதையும் ஆழமாக பார்ப்பதில்லை.
ரகுமான் ஜான்:
//ஐரோப்பாவில் தோன்றிய முதலாளித்தவமானது, 1870 வரையில் சுதந்திரமான போட்டியை அடிப்படையாகக்கொண்ட முறைமையாக இருந்தது. இதன் பின்பே முதலாளித்துவமானது ஏகபோகமாக மாறி ஏகாதிபத்தியமாகிறது.
கலையரசன் கூறுவதுபோல ஏகாதிபத்தியம் என்பது பழையது என்றால் மார்க்சின் மூலதனம் நூலில் ஏகாதிபத்தியம் பற்றிய குறிப்புகள் நிறைந்து இருந்திருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம்.//
ஐரோப்பாவில் தோன்றிய முதலாளித்துவம் ஆரம்பத்தில் சுதந்திரமான போட்டியை கொண்டிருந்ததையும், பின்னர் ஏகபோகமாக மாறியதையும் நான் மறுக்கவில்லை. அதற்காக, ஏகபோக முதலாளித்துவம் தான் ஏகாதிபத்தியமாக மாறுகிறது என்பது ஒரு மேம்போக்கான வாதம். காலனிய சுரண்டல் ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்ததை லெனின் தனது ஏகாதிபத்தியம் பற்றிய நூலில் குறிப்பிடுகிறார்.
//காலனிய கொள்கையில் இருந்து ஏகபோகம் வளர்ந்தது. காலனிய கொள்கையின் "பழைய" நோக்கங்களுடன், நிதி மூலதனமானது இயற்கை வளங்களுக்கான போட்டியை சேர்த்துக் கொண்டது.// - லெனின்
"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனும் நூலில் லெனின் பழைய எகாதிபத்தியத்திற்கும் (ஜான் மாஸ்டர் இதைத் தான் "பொதுப்புத்தி" என்றார்) புதிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை சில உதராணங்கள் மூலம் விளக்குகிறார். போர்த்துக்கல் ஸ்பெயினுடன் போரிட்டு தனி நாடான பின்னர் போர்த்துக்கல்லின் காலனிகளும் பிரித்தானியாவால் பாதுகாக்கப் பட்டன. அதற்குக் காரணம், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியன பிரித்தானியாவின் எதிரி நாடுகள் என்பதே. பெரிய நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் இடையிலான இத்தகைய உறவு எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆனால், முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டத்தில் இது பொதுவான அமைப்பு வடிவம் பெறுகிறது. அவர்கள் உலகத்தை தமக்குள் பங்கிடுவதன் மூலம் நிதி மூலதன சங்கிலியில் பிணைக்கின்றனர்.
ரகுமான் ஜான்:
//மூலதனத்தின் மூன்று அத்தியாயங்களினதும் Index ஐ பரிசீலித்தால் அவற்றில் Imperialism என்ற வார்த்தையே காணப்படவில்லை என்பது தெரியவரும்.//
கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்ற ஒரு புத்தகம் மட்டும் தானா எழுதினார்? ஜான் மாஸ்டர் அந்த நூலை வாசிக்காமல் அதன் "Index ஐ மட்டும் பரிசீலித்து" விட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்!
ஆங்கில மொழியில் ஏகாதிபத்தியத்தை குறிக்கும் "இம்பீரியலிசம்" ( Imperialism) என்பது உண்மையில் ஒரு பிரெஞ்சு சொல். 1852- 1870 வரையிலான நெப்போலியனின் பிரெஞ்சு சாம்ராஜ்யத்தில் இருந்து அந்தச் சொல் பயன்பாட்டில் வந்தது. அன்றைய காலத்தில் அதைப் பலர் நெப்போலியனின் பெயரில் "போனபார்ட்டிட்சம்" என்றும் குறிப்பிட்டு வந்தனர். இம்பீரியலிசம், போனபார்ட்டிசம் இரண்டு சொற்களும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டன. "லூயிஸ் போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமியர்" என்ற நூலில் மார்க்ஸ் இவ்விரண்டு சொற்களையும் பயன்படுத்தி உள்ளார்.
மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் ஏகாதிபத்தியம் பற்றி எதுவும் எழுதவில்லை என்பது உண்மை தான். அதே நேரம், பிரிட்டனின் இந்தியா காலனி மீதான சுரண்டல் பற்றியும், அங்கிருந்து உபரிமதிப்பு ஏற்றுமதியாவது பற்றியும் எழுதியுள்ளார். மார்க்ஸ் எழுதிய நூல்களில் மிகவும் பிரபலமான "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும்" ஏகாதிபத்திய நடைமுறை பற்றிய குறிப்புகள் உள்ளன. "நகரமயமாக்கப் பட்ட மூலதனம் உலகம் முழுவதும் சந்தைகளை தேடுகிறது. அதற்காக இவ்வளவு காலமும் இருந்த சமுதாயங்களின் "சீன மதில்கள்" உடைக்கப் படுகின்றன." என்று மார்க்ஸ் எழுதினார். அதாவது, ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் சந்தைகளை தேடுகின்றது எனும் விடயம் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே பேசப் பட்டு வந்துள்ளது.
ஜான் மாஸ்டர் ஏகாதிபத்தியம் என்ற தோற்றப்பாட்டின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆராயாமால், அந்தச் சொல் எப்படி வந்தது என்று கேட்டு தலையைப் போட்டு உடைக்கிறார். இந்தக் காலத்தில், ஏகாதிபத்தியம் சொல்லை எதிர்மறையான அர்த்தத்துடன் புரிந்து கொள்கிறோம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அப்படி இருந்ததில்லை. பிரித்தானியாவை விக்டோரியா மகாராணி ஆண்ட காலத்தில் ஏகாதிபத்தியம் என்பது பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளும், ஏற்கனவே பிரான்ஸில் இருந்த நெப்போலியனின் ஏகாதிபத்தியத்தை பார்த்துக் கற்றுக் கொண்டவர்கள் தான்.
பிற்காலத்தில் தெற்கு ஆப்பிரிக்காவை காலனிப் படுத்திய சிசில் ரோட்ஸ் "சமூக- ஏகாதிபத்தியம்" என்ற கொள்கையை முன்னெடுத்தார். அதாவது, பிரிட்டிஷ் வெள்ளையின ஏழைகளை ஆப்பிரிக்காவில் குடியேற்றி வளங்களை அபகரிப்பதன் மூலம் பிரித்தானியாவின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்றார். இருபதாம் நூற்றாண்டு, ஸ்பானிஷ் - அமெரிக்க யுத்தத்துடன் தொடங்கியது. அந்தக் காலத்தில், அமெரிக்க நிதி ஆலோசகரும், வங்கியாளருமான சார்ல்ஸ் ஆர்தர், "North American Review" எனும் சஞ்சிகையில், அமெரிக்காவின் வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக, "ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படைகள்" என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் சந்தைகளை விரிவுபடுத்துவது பற்றியும், மூலதனத்தை ஏற்றுமதி செய்வது பற்றியும் விரிவாக எழுதி இருந்தார்.
உண்மையில், அமெரிக்க, ஐரோப்பிய இடதுசாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தான், ஏகாதிபத்தியம் என்ற சொல்லிற்கு எதிர்மறையான அர்த்தம் கொடுத்தது. முன்பு ஸ்பெயின் வசமிருந்த பிலிப்பைன்ஸ் அமெரிக்க காலனியாக மாறிய பொழுது, அமெரிக்க இடதுசாரிகள் அதை "கொடூரமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சித்தாந்தம்" என்று கூறி கண்டித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி, பிரான்ஸ் தொழிலாளர் கட்சி ஆகியன தத்தமது நாட்டு அரசுக்களின் காலனிய விரிவாக்க கொள்கையை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.
கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்தாரா?
மார்க்சியத்தை பற்றி மட்டுமல்லாது முதலாளித்துவத்தை பற்றிக் கூட தவறாகப் புரிந்து கொண்டுள்ள ஜான் மாஸ்டர், "மார்க்ஸ் தான் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்ததாக" திரிபுபடுத்துகிறார்.
அவரது விளக்கம் பின்வருமாறு:
// அடம் ஸ்மித் உம், டேவிட் ரெக்கார்டோ உம் அடிப்படையில் முதலாளித்துவத்தை நியாயப்படுத்தியே எழுதினார்கள்.... இந்த வகையில் இந்த இருவரதும் படைப்புகளில் வெளிப்படுவது ‘முதலாளித்துவ சித்தாந்தம்’ ஆகுமேயன்றி, எந்த வகையிலும் ஒரு விஞ்ஞானபூர்வமான - கோட்பாட்டுரீதியான கருத்தல்ல. கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலாக ‘உபரி மதிப்பு’ பற்றிய கண்டுபிடிப்பின் மூலமாக முதலாளித்துவம் பற்றிய விஞ்ஞானபூர்வமான, கோட்பாட்டுரீதியான புரிதலை முன்வைக்கிறார்//
அடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்றோர் முதலாளிதத்துவத்தை நியாயப் படுத்தி எழுதினார்கள்... இருவரது படைப்புகளிலும் வெளிப்படுவது முதலாளித்துவ சித்தாந்தம்" என்ற உண்மையை நான் மறுக்கவில்லை. பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டளவில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தன. அப்போது ஐரோப்பிய அரசுக்களால் முதலாளித்துவம் மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட பொருளாதாரமாக இருந்தது. அன்று அது முற்போக்கானதாகவும், மனித குலத்திற்கு நன்மை பயப்பதாகவும் கருதப்பட்டது.
அந்தக் காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாக, முதலாளித்துவமானது "அரசியல் பொருளாதாரம்" என்று அழைக்கப் பட்டது. பின்னர் அதுவே ஒரேயொரு பொருளாதாரமாக இன்று வரை கருதப் பட்டு வருகின்றது. முதலாளித்துவமானது கேள்வி, வழங்கல் எனும் சந்தை விதிகளுக்கு அமைய இயற்கையாக தோன்றிய பொருளாதாரம் ஆகும்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அரசு தலையிட்டு சந்தையை ஒழுங்கமைக்கும் வரையில், முதலாளித்துவம் எப்படி இயங்க வேண்டும் என்ற விதிகளை கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவத்தின் இயற்கையான தோற்றத்தை "காட்டு முதலாளித்துவம்" என்று குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு காட்டுக்குள் சட்டமோ ஒழுங்கோ கிடையாது. யாரும் என்னவும் செய்யலாம். கேட்பதற்கு ஆளில்லை. உதாரணமாக, சோமாலியாவில் குறிப்பிட்ட காலம் அரசு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் அங்கு காட்டு முதலாளித்துவமே இருந்தது.
பெரும்பாலான உலக நாடுகளில் பொருளியல், வணிகத் துறைகளில் முதலாளித்துவப் பொருளாதாரமே பாடமாக கற்பிக்கப் படுகின்றது. அதில் தவறாமல் அடம் ஸ்மித்தின் கோட்பாடுகள் குறிப்பிடப்படும். சுருக்கமாக சொன்னால், அடம் ஸ்மித் ஒரு முதலாளித்துவ கோட்பாட்டாளராக தான் இன்று வரை அறியப் படுகின்றார். ஆகவே, "அடம் ஸ்மித் தான் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்தார்" என பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டால், அதில் எந்தத் தவறும் இல்லை.
இதில் கார்ல் மார்க்ஸின் பாத்திரம் என்ன? அவர் முதலாளித்துவத்தின் சிறந்த விமர்சகராக இருந்தார். அவர் தனது விமர்சனக் கட்டுரைகளால் முதலாளித்துவத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தார். அவருக்கு முன்னர், முதலாளித்துவத்தால் விளையும் தீமைகள் பற்றி யாரும் எழுதி இருக்கவில்லை. ஒரு பொருளின் பெறுமதி குறித்து மார்க்ஸ் வேறொரு கோணத்தில் சிந்தித்தார். மனித உழைப்பு தான் ஒரு பொருளின் பெறுமதியை அல்லது விலையை தீர்மானிக்கிறது என்றார். இதை, மார்க்சுக்கு முன்னரும் பின்னரும், எந்தவொரு முதலாளித்துவ பொருளாதார அறிஞரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பொருளில் மறைந்துள்ள உழைப்பின் பெறுமதியை புறக்கணித்து வந்துள்ளனர். இதைவிட மார்க்ஸ் கண்டுபிடித்த உபரிமதிப்பு கோட்பாடும் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களால் நிராகரிக்கப் பட்டு வந்துள்ளது.
ஆகவே, ஜான் மாஸ்டர் தவறாகக் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் முன்வைத்தது "முதலாளித்துவம் பற்றிய விஞ்ஞானபூர்வமான, கோட்பாட்டுரீதியான புரிதல்" அல்ல. அது முதலாளித்துவத்தால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் பற்றிய விமர்சனம். அவருக்கு முந்திய (முதலாளித்துவ) பொருளாதார அறிஞர்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த மனித உழைப்பின் பெறுமதி பற்றிய விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டு விளக்கங்களை மார்க்ஸ் கண்டுபிடித்து எழுதினார் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
தேசியவாதம் எப்போதும் முற்போக்கானதா?
முன்னொருகாலத்தில் இடதுசாரி தமிழ்த்தேசியவாதியாக இருந்த ஜான் மாஸ்டர் (ரகுமான் ஜான்), பின்னர் ஒரு வலதுசாரி தமிழ்த்தேசியவாதியாக மாறினார். அதிலிருந்தே என் மீதான எதிர்வினையை வைக்கிறார். அதில் அவர் தேசியவாதம் என்ற அரசியல் கொள்கையையும், சுயநிர்ணயம் என்ற அரசமைப்புச் சட்டத்தையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்கிறார். இது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரகுமான் ஜான்:
//தேசியவாதம் பற்றி அடுத்த குழறுபடியை கலையரசன் மேற்கொள்கிறார். அதாவது, ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் சுயநிர்ணய உரிமையை, அதன் விடுதலைப் போராட்டத்தை அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியின் பண்பை கொண்டே ஒருவர் அந்த போராட்டத்தை ஆதரிப்பதா, இல்லையா என்ற தீர்மானிக்லாமாம்..... பலஸ்தீன போராட்டத்தின் தலைமை PFLP ஆக இருந்தால் ஆதரிப்பாராம். ஹமாஸ் தலைமை ஏற்றால் ஆதரிக்க முடியாதாம்.//
இது முழுக்க முழுக்க திரிபுபடுத்தப் பட்ட வாதம். கனடாவில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் ஜான் மாஸ்டர் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். //பாலஸ்தீனம், குர்திஸ்தான், காஷ்மீரை ஆதரிக்கும் தமிழ் இடதுசாரிகள் ஈழம் என்றால் மட்டும் இடறுகிறார்கள்...//
அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்தேன்:
//இது தமிழ் வலதுசாரிகளால் விஷமத்தனமாக பரப்புரை செய்யப்படும், உண்மைக்கு முரணான, திரிபுபடுத்தப் பட்ட வாதம்.
இடதுசாரிகள் எங்காவது வலதுசாரிகளை ஆதரித்தால் மட்டுமே அது தவறாகும். அப்படி நடந்திருந்தால் நிரூபிக்கட்டும். உதாரணத்திற்கு பாலஸ்தீன இடதுசாரி இயக்கமான PLFP இருக்கையில், தமிழ் இடதுசாரிகள் அதை விட்டு விட்டு வலதுசாரி இயக்கமான ஹமாசை ஆதரித்தாக இந்த அறிவுஜீவியால் நிரூபிக்க முடியுமா?
அது தான் போகட்டும். ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இடதுசாரிகள் ஏராளம் இருந்தார்களே? அது இந்த அறிஞருக்கு தெரியாதா? இவரே அப்படியான வரலாற்றுப் பின்னணியை கொண்டவர் தான். ஏனோ அதை வசதியாக மறந்து விட்டார்.//
எனது பதிலில் குறிப்பிட்ட " ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இடதுசாரிகள் ஏராளம் இருந்தார்களே? இவரே அப்படியான வரலாற்றுப் பின்னணியை கொண்டவர் தான்." என்ற வாதத்தை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார்.அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்து வீசி விட்டு, மிகுதிப் பகுதியை திரித்து அவதூறு செய்கிறார்.
"ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும்" என்பது ஒரு பழமொழி மட்டுமல்ல, உலக வழமையும் அப்படித் தான் உள்ளது. ஒரு நாட்டின் இடதுசாரிகள் பிற உலக நாடுகளில் இருக்கும் இடதுசாரி அமைப்புகளை ஆதரிப்பார்கள். அதே மாதிரித் தான் வலதுசாரிகளும் நடந்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழ் வலதுசாரிகளின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசின் பாரபட்சமான நிலைப்பாட்டை குறிப்பிடலாம்.
தெற்கு சூடான் சுதந்திரத் தனிநாடான நேரம் அதை விழுந்து விழுந்து ஆதரித்தார்கள். ஆனால், அதே காலகட்டத்தில் தான் அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகியனவும் சுதந்திரத் தனிநாடுகளாக அறிவித்துக் கொண்டன. ஆனால், அவர்கள் அவற்றை ஆதரிக்கவில்லை! தெற்கு சூடானை ஆதரித்த நாடுகடந்த தமிழீழ அரசு, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா விவகாரத்தில் கள்ள மௌனம் சாதித்தது. அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருந்தது. தெற்கு சூடானின் எண்ணை வளம் காரணமாக அமெரிக்காவின் அல்லது மேற்குலகின் ஆதரவுடன் தனிநாடாகியது. மேற்குலக ஆதரவு அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசு அதை முன்மொழிய வேண்டாமா?
இது எப்போதும் நடப்பது தான். மேற்குலக தலையீட்டால் சுதந்திரம் அடைந்த கொசோவோ, கிழக்கு தீமோர் ஆகியவற்றையும் தமிழ் வலதுசாரிகள் ஆதரித்தார்கள். ஆனால் நீண்ட காலமாக விடுதலை கோரி ஆயுதப்போராட்டம் நடத்தும் பாஸ்க், கோர்சிகா, வட அயர்லாந்து ஆதரவு பற்றிக் கேட்டால் நழுவி ஓடுவார்கள். அதிகம் பேசுவானேன். கனடாவில் கியூபெக் மாநிலம் பிரிந்து தனிநாடாவதற்காக நடந்த பொது வாக்கெடுப்பில், அங்கு வாழ்ந்த வாக்குரிமை பெற்ற தமிழர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆமாம், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் கியூபெக் விடுதலையை எதிர்த்தார்கள்! இதற்குக் காரணம் மேற்கத்திய எஜமான விசுவாசம் அன்றி வேறென்ன?
சொன்னால் வெட்கக் கேடு. ஒரு காலத்தில் சிரியாவில் இஸ்லாமிய தேசம் அமைத்த ஐ.எஸ். இயக்கத்தையும் தமிழ் வலதுசாரிகள் ஆதரித்தார்கள்! ஆரம்ப காலகட்டத்தில் அதற்கு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் தாராளமாக உதவின. அப்போது ஐ.எஸ். இயக்கத்தினர் விடுதலைப் போராளிகள் என்று அழைக்கப் பட்டனர். குறிப்பிட்ட காலத்தின் பின்னர், அவர்களது கொடூரச் செயல்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்ற பின்னர் தான் பயங்கரவாதிகள் என அழைக்கப் பட்டனர்.
ஜான் மாஸ்டரின் வாதப்படி, சிரியாவிலும், ஈராக்கிலும் உருவான ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம் அரேபியரின் தாயகமான இஸ்லாமிய தேசத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கக் கூடாதா என்றும் வாதாடலாம். தாராளமாக. சிரியாவிலும், ஈராக்கிலும் ஷியா முஸ்லிம் சமூகம் ஒடுக்கும் இனமாகவும், சன்னி முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படும் இனமாகவும் உள்ளது. சன்னி முஸ்லிம் அரேபியரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்கான இஸ்லாமிய தேசம் ஒன்றுக்காக போராடும் ஐ.எஸ். தலைமையை ஜான் மாஸ்டர் தாராளமாக ஆதரிக்கலாம்.
//குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் தலைமை யாரென்பதை தீர்மானிப்பது அந்த சமூகமேயன்றி வேறு யாருமல்லர். இது அக்கள் மக்கள்திரளின் அந்நியப்படுத்த முடியாத உரிமையாகும்.// - ரகுமான் ஜான்
ஆமாம், யார் இல்லையென்றார்கள்? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்திற்கு அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திரளின் ஆதரவு இருந்தது. அதாவது ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம் அரேபிய சமூகம் தனது தலைமையை தீர்மானித்து இருந்தது. அது அவர்களது அந்நியப்படுத்த முடியாத உரிமை தானே?
ரகுமான் ஜான்:
//பலஸ்தீன மக்கள் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டட ஒரு தேசம் என்ற வகையில் அவர்களை ஆதரிப்பது உலகெங்கும் உள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகளதும் கடமையாகம். அந்த வகையில்தான் இன்று உலகெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் ஆதரிக்கின்றனர்//
ஜான் மாஸ்டர் ஒரு தமிழ்த்தேசியவாதி என்பதால் அவரது பார்வையில் பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு தேசியவாதப் பிரச்சினை. அதனால் அவர் "ஒடுக்கப்பட்ட தேசம்" என்று குறிப்பிடுகிறார். அதே நேரம் ஒரு இஸ்லாமிய மதவாதியின் பார்வையில் இது ஒரு இஸ்லாமிய மதப் பிரச்சினை. அவர் இதை "ஒடுக்கப்பட்ட மதம்" என்று கூறுவார். நீங்கள் எந்த நிறக் கண்ணாடி அணிகிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும்.
உண்மையில், பாலஸ்தீன விவகாரம் ஒரு தனித்துவமான சர்வதேச பிரச்சினை. அதனை உலகின் பிற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது. மேற்கத்திய காலனியாதிக்கத்தின் கருவியாகவும், மேற்கத்திய நலன்களை பாதுகாக்கும் மதிலாகவும் இஸ்ரேல் உள்ளது. ஐ.நா. சபையும் யூதர்கள், அரேபியர்களுக்கு தனித்தனி சுயாட்சிப் பிரதேசங்களை கொண்ட தீர்வை பிரேரித்த போதிலும், அதை நடைமுறைப் படுத்த தவறி விட்டது. பாலஸ்தீன அரேபியரின் போராட்டம் மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிரானதே. அந்த வகையில் உலகெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதும் புரிந்து கொள்ளத் தக்கதே. பாலஸ்தீனம் விடுதலையானால் அது மேற்கத்திய காலனியாதிக்கத்தின் முடிவாகவும் கருதப்படும்.
ரகுமான் ஜான்:
//இவரது நிபந்தனையின்படி பார்த்தால் உலகிலுள்ள எந்தவொரு தேசத்தின் விடுதலையையும் ஆதரிக்காமல் இருப்பதற்கு பல சாக்குபோக்குகளை நாம் கண்டறியலாம். பலஸ்தீனம் மட்டுமல்ல, கட்டலான், ஸகொட்லாணட், கஷ்மீர், குர்திஷ் … போன்ற எந்தவொரு தேசிய விடுதலை போராட்டத்திலும் நாம் இது போன்ற குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியும்.//
ஐயா, உலகம் முழுவதும் அப்படித் தான். நீங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உங்களால் இஸ்லாமிய தேசத்தின் விடுதலையை ஆதரிக்க முடியுமா? சரி, அது மதப் பிரச்சினை என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள். நான் முன்னர் குறிப்பிட்ட அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகியன தேசிய இனப் பிரச்சினைகள் தானே? அவற்றை ஏன் ஆதரிக்கவில்லை என்று தமிழ் வலதுசாரிகளை பார்த்து கேட்டால் ஏதாவது குறைபாடுகளை கண்டுபிடித்துக் கூறுவார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் ஆதரிப்பதில்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை.
ரகுமான் ஜான்:
//இவை மாத்திரமன்றி கடந்த காலத்தில் பல்வேறு முற்போக்கு, புரட்சிகர சக்திகளினால் ஆதரிக்கப்பட்டு, வெற்றி பெற்ற பல சுதந்திர போராட்டங்கள் தொடர்பான ஆதரவும் கேள்விக்குள்ளாகும். ஜேர்மனி, இத்தாலியின் இணைப்பு, அயர்லாந்து விடுதலை போராட்டம், இந்திய சுதந்திர போராட்டம் உட்பட, உலகலாவியரீதியில் பல்வேறு மக்கள் தரப்பினராலும், முற்போக்கு புரட்சிகர சக்திகளினாலும் ஆதரிக்கப்பட்ட பல்வேறு தேசிய இயக்கங்கள் தொடர்பாக ஆதரவு நிலைப்பாட்டை இவர் நிராகரிப்பதில் போய் முடியும்.//
உலகில் யாரும் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதில்லை. இது தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, போலந்து சுதந்திரம் தொடர்பான பிரச்சினையில் லெனினுக்கும், ரோசா லக்சம்பெர்க்கிற்கும் இடையில் நடந்த விவாதங்களை குறிப்பிடலாம். ரோசா லக்சம்பேர்க் ஒரு போலிஷ் இனத்தவராக இருந்த போதிலும், பிற்போக்கான தேசியவாத தலைமையின் கீழ் போலந்து சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார். அதற்கு மாறாக, சுதந்திர போலந்தில் தேசியவாத பிற்போக்காளர்கள் அரசமைப்பது பற்றி லெனின் கவலையடையவில்லை. அதே நேரம், போலிஷ் தேசியவாதிகள் யூத சிறுபான்மையினரை ஒடுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
ஆகவே, போலந்து சுதந்திரம் தொடர்பாக லெனின் வழங்கியதும் நிபந்தனையுடனான ஆதரவு தான். அப்போதும் ஸ்டாலின் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். போலிஷ் தேசியவாதிகள் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளாக இருப்பது மட்டுமல்லாது, பாட்டாளிவர்க்க புரட்சிக்கும் எதிரானவர்கள் என்று எச்சரித்தார். அன்று ஸ்டாலின் எச்சரித்த மாதிரியே நடந்தது. மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க புரட்சியை கொண்டு வரும் நோக்குடன் லெனின் அனுப்பிய செம்படை, போலந்து தேசிய இராணுவத்தால் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டது.
அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தை கார்ல் மார்க்ஸ் ஆதரித்தார். அதுவும் நிபந்தனையற்ற ஆதரவு அல்ல. அன்று மார்க்ஸ் கூறிய விளக்கத்தை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அயர்லாந்தில் நிலவுடமையாளர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்தனர். ஐரிஷ் மக்கள் விவசாயக் கூலிகளாக, பாட்டாளி வர்க்கமாக இருந்தனர். ஆரம்ப காலங்களில் ஐரிஷ் விடுதலைப் போராட்டம் சோஷலிசவாதிகளால் முன்னெடுக்கப் பட்டது. அயர்லாந்தின் விடுதலை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பலவீனப் படுத்தும் என்று மார்க்ஸ் நம்பினார். அதே மாதிரி, இந்தியா போன்ற காலனிகளின் விடுதலையை ஆதரிப்பதன் மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கம் முடிவுக்கு வரும் என்று லெனின் நம்பினார்.
இங்கே ஜான் மாஸ்டர் குறிப்பிடும், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒன்றிணைவு எந்த வகையிலும் முற்போக்கான தேசியவாதம் அல்ல. அவை அப்போதே பேரினவாத சிந்தனையுடன் முன்னெடுக்கப் பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பிரஷிய ராஜ்ஜியம், மேற்கு ஜெர்மன் பிரதேசங்களை சேர்த்துக் கொண்டு அகண்ட ஜெர்மனி ஆகியது. (அன்றிருந்த ஜெர்மனி ரஷ்ய எல்லையில் இருந்து பிரெஞ்சு எல்லை வரை விரிந்திருந்தது.) இதுவே பிற்காலத்தில் ஹிட்லரின் நாஸிச கொள்கைக்கு அடிப்படையானது.
கரிபால்டி தலைமையிலான இத்தாலியின் ஒன்றிணைவு, இத்தாலி பேரினவாத வெறியுடன் அங்கிருந்த பல்லின சமூகங்களை அடக்கி ஒடுக்கியது. அதற்கு முன்னர் ரோமை அண்டிய பகுதிகளை தவிர, ஒவ்வொரு மாகாணமும் தனக்கென தனித்துவமான மொழியை கொண்டிருந்தது. இன்றைக்கும் வெனிஸ், சார்டினியா, சிசிலி ஆகிய பிரதேசங்களில் தனியான மொழிகள் பேசப் படுகின்றன. தெற்கில் கிரேக்கர்களும், வடக்கில் ஜெர்மனியர்களும் சிறுபான்மையினர்.
சுருக்கமாக சொன்னால், இத்தாலி பேரினவாத அரசு அங்கிருந்த சிறுபான்மையின மொழிகள் பலவற்றை ஒடுக்கி அழித்து விட்டது. எஞ்சியவர்கள் தமது மொழியை புறக்கணித்து விட்டு, இத்தாலி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவலம். அத்தகைய ஒரு கொடூரமான பேரினவாத இத்தாலியை ஆதரிக்க வேண்டும் என்று ஜான் மாஸ்டர் எதிர்பார்க்கிறார். இதைத் தான் அவர் "மக்களது சுயநிர்ணய உரிமை" என்கிறார். ஆமாம், பேரினவாத வெறியுடன் ஒடுக்கும் பெருந்தேசிய இனத்திற்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது தான். அவற்றை ஜான் மாஸ்டர் போன்றவர்கள் ஆதரிக்கலாம். தாராளமாக.
தேசியவாதம் எப்போதும் முற்போக்கானது அல்ல. அது பல இடங்களில் தனது பிற்போக்குத்தனங்களையும் காட்டியுள்ளது. ஒரு நாட்டில் தோன்றும் தேசியவாதம் குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் பேரினவாதமாக உருமாறுவதையும் கண்கூடாகக் காணலாம். அது மட்டுமல்லாது தேசியவாதம் உலகம் முழுவதும் போர்களுக்கும், பேரழிவுகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. சிலநேரம் கிட்டத்தட்ட ஒரே மொழி பேசுவோரும் (உதாரணம்: செர்பியர், குரோவாசியர்), தனித்தனி தேசியங்களாக பிரிந்து போரிட்டு மாண்டு போயிருக்கிறார்கள்.
யார் மார்க்சியவாதி?
ரகுமான் ஜான்:
// கிராம்சி, அல்தூசர்… பற்றி பேசும்போது யூரோ கொம்யூனிச பயப்பிராந்தி எழுப்பும் கலையரசன், மூன்றாம் உலகைச் சேர்ந்த முக்கியமான கோட்பாட்டாளர்களான பெனான், அமில்கார் கப்ரால், சமீர் அமின், அந்தர் குந்தர் பிராங், சேகுவேரா போன்றவர்களையும் நிராகரிப்பது ஏன்//
ஒரு நீதிக்கதையில் வரும் பிராமணன் பரிசலில் ஆற்றைக் கடக்கும் போது ஒடக்காரனிடம் கேட்டானாம் "நீ வேதங்கள், இதிகாசங்கள் படித்திருக்கிறாயா?" அதே மாதிரி ஜான் மாஸ்டர் என்னிடம் கேட்கிறார். "அல்தூசர், கிராம்சி, பேனான், அமில் கப்ரால் எழுதிய கோட்பாட்டு நூல்களை படித்திருக்கிறாயா?" கனடாவில் நடந்த கூட்டத்தில் "ஆங்கிலத்தில் இருபதுக்கும் மேலான மார்க்சிய சஞ்சிகைகள் வெளிவருகின்றன... அவற்றை எல்லாம் படித்தீர்களா?" என்று கேட்டிருந்தார்.
இதற்குப் பெயர் அறிவுஜீவித்தனம். மேலைத்தேய கதிரை மார்க்சிஸ்டுகள் பலரிடம் இத்தகைய போக்கு உள்ளது. கல்லூரியில் பேராசிரியர் வேலை அல்லது வேறெதாவது உத்தியோகம் பார்ப்பவர்கள், வீட்டுக்கு வந்து கட்டுக்கட்டான புத்தகங்களை படித்து விட்டு மேதைமைத்தனத்துடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவர்களும் வழமையான முதலாளித்துவ அறிவுஜீவிகள் போன்று தான் நடந்து கொள்வார்கள்.
நான் யாரையும் நிராகரிக்கவில்லை. கிராம்சி முதல் சேகுவேரா வரை யார் எழுதிய புத்தகத்தையும் யாரும் வாசிக்கலாம். அதில் தவறில்லை. அவற்றை எல்லாம் நானும் வாசித்து இருக்கிறேன். அதைத் தவிர, ஜான் மாஸ்டர் இங்கே குறிப்பிடாமல் விட்ட, பகுனின், புருதோன், போன்ற அனார்க்கிச கோட்பாட்டாளர்களின் நூல்களையும் வாசித்து இருக்கிறேன். இங்கே கவனத்தில் எடுக்க வேண்டியது வெறும் நூல்களோ, அவற்றை எழுதியவர்களோ அல்ல. அதற்கு மாறாக, பாட்டாளிவர்க்க புரட்சிக்கு, வர்க்கப் போராட்டத்திற்கு யார் சரியான பாதையை காட்டுகிறார்கள் என்பதே முக்கியம். இது ஒரு நடைமுறை சார்ந்த விடயம்.
கிராம்சி, அல்தூசர் போன்றவர்களது எழுத்துக்கள் யூரோ கம்யூனிசத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்த படியால் நிராகரிக்கப் படுவதை மறுக்கவில்லை. அவர்களது நூல்களை வாசிப்பது தவறல்ல. ஆனால், யூரோ கம்யூனிசம் பேசிய ஐரோப்பியக் கட்சிகள், அவற்றை தத்துவார்த்த வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது போன்று, நாமும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் தவறென்கிறேன்.
யூரோ கம்யூனிசம் என்றால் என்ன? நாம் முதலில் இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஐம்பதுகளில் ஐரோப்பாவில் பனிப்போர் தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடந்தன. "ஸ்டாலினின் கொடுங்கோன்மை, குலாக் சிறைகள், இலட்சக் கணக்கான கொலைகள்..." இவ்வாறு எதிர்மறையான பிரச்சாரங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து வைத்திருந்தனர்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினிசம் அடக்கப் பட்ட காரணத்தால், பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்க விடாமல் முடக்கப் பட்டன. அந்த தருணத்தில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் யூனியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்தன. அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கிய திருத்தல்வாதக் கோட்பாடு தான் "யூரோ கம்யூனிசம்".
இரண்டாம் உலகப்போர் முடிவில், இத்தாலியின் பெரும் பகுதி கம்யூனிஸ்ட் கெரில்லாக்களால் விடுதலை செய்யப் பட்டது. போர்க்குணாம்சம் கொண்ட கட்சி உறுப்பினர்கள் ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயாராக இருந்தனர். இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி சரியாக நடந்து கொண்டிருந்தால், அன்றே இத்தாலி ஒரு சோஷலிச நாடாக வந்திருக்கும். ஆனால், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிப் பாதையை நிராகரித்தது. அமெரிக்கப் படைகளுடன் ஒத்துழைத்தது. முதலாளித்துவ ஜனநாயகத்தை விரும்பி ஏற்றுக் கொண்டது.
யூரோ கம்யூனிசம் என்பது ஒரு திரிபுவாதக் கொள்கை. வர்க்கப்போராட்டத்தை ஒதுக்கி விட்டு, முதலாளித்துவ அதிகார வர்க்கத்துடன் ஒத்துழைக்கும் அரசியல். முதலாளித்துவ சக்திகளுடனான பாட்டாளிவர்க்க பகை முரண்பாட்டை மறுதலித்து விட்டு, அதனோடு ஒத்தோடும் அரசியலுக்கு என்ன பெயர்? அதை "புலிகளின் மொழியில் சொன்னால் ஒட்டுக்குழு அரசியல்" என்று குறிப்பிட்டு இருந்தேன்.
ரகுமான் ஜான்:
//தம் கைவசமுள்ள சில வறட்டுச்சூத்திரங்களில் மூழ்கி, அவற்றிற்கு வெளியில் ஒரு பிரமாண்டமான அறிவுலகமும், அதில் நடைபெறும் தீவிரமான விவாதங்களும் பற்றி அறியாதவர்களாக, தமது வறட்டுச்சூத்திர தூக்கத்தில் (Dogmatic Slumber) சுகம் காண்பவர்களாக உள்ளார்கள். வறட்டுச்சூத்திரத்தில் சிக்கியுள்ள இவர்கள் அதற்கு வௌியில் வர மறுப்பதுதான் காரணமாக இருக்க முடியும் அல்லவா//
இது ஏற்கனவே முதலாளித்துவவாதிகளால் செய்யப்பட்டு வந்த கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம். மேற்குலகம் நீண்ட காலமாகவே ட்ராஸ்கிசம், யூரோ கம்யூனிசம், பின் நவீனத்துவம் போன்ற திரிபுவாத போக்குகளை ஆதரித்து வந்துள்ளது. இத்தகைய திரிபுவாத, திருத்தல்வாதக் கொள்கைகளால் முதலாளித்துவ அதிகார வர்க்கத்திற்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை. இவற்றை விரும்பியவாறு கையாள முடியும். எக்காலத்திலும் வன்முறைப் பாதையை நிராகரிக்கும், மகாத்மா காந்தி போன்ற அஹிம்சாவாதிகளை அரசுகள் அங்கீகரிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அதனால் தான் இதனை "ஒட்டுக்குழு அரசியல்" என்றேன். சரியாகத் தானே சொல்லி இருக்கிறேன்?
அத்துடன், ஜான் மாஸ்டரின் எதிர்வினையில் தொனிக்கும் அறிவுஜீவி மேட்டிமைத்தனத்தை கவனிக்கவும். "ஒரு பிரமாண்டமான அறிவுலகம்", "தீவிரமான விவாதங்கள்", "வறட்டு சூத்திர தூக்கம்".... ஆஹா! சான்றோரின் சபைகளில் நடக்கும் விவாதங்களை புரிந்து கொள்ள முடியாத பாமரர்கள் கூனிக்குறுகி கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டும். நான் பல தடவைகள் ஜான் மாஸ்டரின் அறிவுஜீவி மனப்பான்மையை எதிர்மறையான அர்த்தத்தில் குற்றம் சாட்டி வந்துள்ளேன். அவரோ திரும்பத் திரும்ப நான் சொன்னது சரியென நிரூபித்த வண்ணமே உள்ளார்.
ஐயா, பெரியவரே! மார்க்சியம் என்பது தங்களைப் போன்ற மெத்தப் படித்த அறிவுஜீவிகளின் விளையாட்டுப் பொருள் அல்ல. அது அதிகம் படிக்காத பாட்டாளி வர்க்க மக்களின் விடுதலைக் கோட்பாடு. தொழிற்சாலையில் நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்து விட்டு வரும் தொழிலாளிகளிடம், அல்தூசர், கிராம்சி, பெனான், அமில்கார் கப்ரல் எல்லாம் கொடுத்து படிக்க சொல்லிக் கட்டாயப் படுத்த முடியாது. இன்று பல பல்கலைக்கழக பட்டதாரிகளே இந்தப் பெயர்களை கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள்.
எமது பிரதானமான குறிக்கோள் வர்க்கப்போராட்டம். மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான புதிய ஜனநாயகப் பாதையில் பாட்டாளிவர்க்க்கத்தை வழிநடத்த வேண்டும். படிப்பறிவில்லாத பாமர மக்களையும் வர்க்கப் புரட்சிக்கு தயார் படுத்துவதற்கு சில தத்துவார்த்த நூல்கள் இருக்க வேண்டியது அவசியம். அவற்றை நீங்கள் "வறட்டு சூத்திரம்" என்று புறக்கணிக்கலாம். ஆனால், உழைக்கும் மக்கள் அவற்றை தமது தத்துவார்த்த வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
கனடாவில் ஆற்றிய உரையில், மாவோவின் மேற்கோள்கள் என்ற சிறு கைநூலை கிண்டல் அடித்து தங்களது அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தினீர்கள். வயலில் சேற்றுக்குள் நாற்று நடும் விவசாயிகளும், தொழிற்சாலையில் இயந்திரங்களுடன் மாரடிக்கும் தொழிலாளிகளும், உங்கள் அளவிற்கு படிக்கவில்லை என்பது உண்மை தான். அதற்காக அவர்களுக்கு சமூக- அரசியல் அறிவு தெரியக் கூடாது என்பதில்லையே? அவர்கள் அரசியல் கற்றுக் கொள்ளும் உரிமையை மறுப்பதற்கு நீங்கள் யார்?
"மக்களிடம் செல்லுங்கள், மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார் மாவோ. அவர் எழுதிய பல்வேறு கோட்பாட்டு நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மேற்கோள்கள் கொண்ட சிறு கைநூல், பாட்டாளிவர்க்க கல்வியை நோக்கமாக கொண்டு தயாரிக்கப் பட்டது. பாடசாலை, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளுடன் சேர்ந்து பகல் முழுவதும் வயலில் வேலை செய்தனர். மாலை நேரங்களில் மாவோவின் மேற்கோள்கள் நூலில் இருந்து சிலவற்றை கற்று தெளிவு படுத்திக் கொண்டனர்.
ஜான் மாஸ்டர் என்ற மெத்தப் படித்த அறிவுஜீவி கிண்டல் அடிக்கும் "மாசேதுங் மேற்கோள்கள்" நூலில் அப்படி என்ன எழுதி இருக்கிறது? ஒருவர் மேலோட்டாமாக உள்ளடக்கத்தை பார்த்தாலே புரியும். கம்யூனிஸ்ட் கட்சி ஏன் அவசியம்? வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? முரண்பாடுகளை கையாள்வது எப்படி? மக்கள் யுத்தம் எப்படி நடத்தப் பட வேண்டும்? இவற்றைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தல், படிப்பு, வேலை முறைகள், ஜனநாயகம், கலை, கலாச்சாரம் என்று பல்வேறு விடயங்ளை பற்றி எழுதப் பட்டுள்ளது. ஜான் மாஸ்டர் இவை எதையும் படிக்காமலே "வறட்டு சூத்திரம்" என்று நிராகரித்து விடுகிறார்.
ரகுமான் ஜான்:
//கலையரசன் என்னை ஒரு மார்க்சியவாதி இல்லை என்கிறார். ஒட்டுக்குழு மார்க்சியவாதி என்கிறார். சரி, ஒருவர் மார்க்சியவாதியா, இல்லையா என்பதை யார், எந்த அடிப்படையில் தீர்மானிப்பதாம்? இதற்கு ஏதாவது நிறுவனம், அல்லது நபர்கள் உரிமம் பெற்றவர்களா? இந்த அதிகாரத்தை கலையரசனுக்கு கொடுத்தது யார்?//
நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, மார்க்சியம் என்பது ஒரு பாட்டாளிவர்க்க விடுதலைக் கோட்பாடு. அதன் தத்துவார்த்த அடிப்படை வர்க்கம் போராட்டம். தற்காலத்தில் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ வர்க்க சர்வாதிகார அரசை ஒரு வர்க்கப் புரட்சி மூலம் தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவதை குறிக்கோளாகக் கொண்டது. இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளாத ஒருவர் மார்க்சியவாதியாக இருக்க முடியாது.
ஜான் மாஸ்டரின் எதிர்வினையில் எந்தவொரு இடத்திலாவது வர்க்கப்போராட்டம் பற்றிய சிறு குறிப்பு வருகிறதா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை. கனடாவில் அவர் நிகழ்த்திய உரையிலும் வர்க்கம் பற்றி எதுவும் பேசவில்லை. இதை ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். சரி, அது போகட்டும். எனக்கான எதிர்வினையிலாவது வர்க்கம், வர்க்கப் போராட்டம் பற்றி பெயருக்கு ஓரிரு வார்த்தைகள் எழுதி இருக்கலாம். அதுவும் இல்லை.
இதுவரையில் ஜான் மாஸ்டர் வர்க்கபோராட்டம் பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. அவர் இப்போது ஒரு முழுமையான வலதுசாரி- தேசியவாதி. வலதுசாரிகள் வர்க்கங்களுக்கு இடையிலான பகை முரண்பாட்டை புறக்கணித்து, தேசியத்தின் பெயரில் வர்க்க சமரசத்தை போதிப்பார்கள். குறிப்பாக, முதலாளிகளுடன் முரண்பட மாட்டார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத ஒட்டுக்குழு அரசியலுக்கு என்ன பெயர் வைக்கலாம்? இதைத் தீர்மானிப்பவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள். வர்க்கப் போராட்டம் கூர்மையடையும் காலத்தில் தங்கள் பக்கம் நிற்பவர்கள் யார், எதிரிகளின் பக்கம் நிற்பவர்கள் யார் என்பதை வைத்து தீர்மானிப்பார்கள்.
*******
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Friday, April 06, 2018
"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்!" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்
"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்!"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்
இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே! அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம்.
- - "இவர் யார்?"
- - "சிங்கள - பௌத்த பேரினவாதி."
- - "இவர் இங்கே என்ன செய்கிறார்?"
- - "தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்."
- - "இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?"
- - "இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ!"
இப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். "பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
"படம் பார், பாடம் படி!"
சிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.
உலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
இந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது?
சிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா? சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா?
சாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.
பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா? எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும்? எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.
இங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.
போராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.
ஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.
இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
- "இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே!"
- "இடதுசாரியம் சோறு போடாது, மக்களே! வலது பக்கம் திரும்புங்கள்."
- "இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்."
- "இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது! புரிந்ததா?"
இந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.
இந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான்? இதைக் காட்டி பிழைக்க முடியுமா? நாலு காசு சம்பாதிக்க முடியுமா? இல்லைத் தானே? கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.
இந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
புத்த பிக்குகள் எல்லோரும் ஒரே அரசியலை பின்பற்றுவதில்லை. முன்னிலை சோஷலிசக் கட்சி மற்றும் பல சிங்கள இடதுசாரி அமைப்புகளில் புத்த பிக்குகளும் செயற்படுவதுண்டு. அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் நடக்கும் போராட்டங்களில் தமிழ் மக்களோடு கலந்து கொள்வதில் என்ன தப்பு? கண்டதை எல்லாம் சந்தேகப் படுவதன் மூலம் நண்பர்களை ஒதுக்கி வைக்கிறோம். பகைவர்களை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்கிறோம்.
படத்திற்கு நன்றி: Newton Mariya Mainthan
பிக்கு பற்றிய விபரம் :
//வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.//
Labels:
இடதுசாரியம்,
இனவாதம்,
ஈழம்,
தமிழினவாதிகள்,
தமிழ் தேசியவாதம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Sunday, February 04, 2018
சோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு!
![]() | |
| சோழர்கள் கொள்ளையடித்த நாடுகளைக் காட்டும் வரைபடம். |
சோழர்களின் சர்ச்சைக்குரிய வரலாற்றை, ஐரோப்பாவில் வைக்கிங்(Viking) வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஸ்கண்டிநேவிய வைக்கிங் படைகள், கடல் கடந்து கப்பல்களில் சென்று, பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து, பெருமளவு செல்வத்தை கொள்ளையடித்து வந்தனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது படுகொலை செய்தனர். இருப்பினும், அதே வைக்கிங் கொள்ளையர்கள் பிற்காலத்தில் நிலையான அரசமைத்து சிறப்பாக ஆண்டு வந்தனர். சோழர்களை "ஆசியாவின் வைக்கிங்" என்றும் குறிப்பிடலாம்.
சோழர்களின் பூர்வீகம் என்ன, அந்தப் பெயர் வர என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாது. சோழர்கள் காலத்தில் தமிழகத்திற்கு பயணம் செய்த கிரேக்க நாட்டு தாலமி, தனது பயணக் குறிப்புகளில் "சோரை"(சோரர்) என்று எழுதியுள்ளார். பண்டைய கால தமிழ்க் கல்வெட்டுகளில் கூட "சோரர்கள்" என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் சோரர் என்ற சொல்லுக்கு திருடர், கொள்ளையர் என்ற பொருள் உண்டு. தற்காலத் தமிழில் "சோரம் போதல்" என்று பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, ஆதி கால சோழர்கள் தமிழராக இருந்திருக்க முடியாது.
சோழர்களை தெலுங்கு மொழியில் சோடர்கள் என்று அழைத்து வந்தனர். தெலுங்கில் "ர", "ட" ஆகி, அது பின்னர் சோழர்கள் என்று திரிபடைந்திருக்கலாம். மேலும், சோழர்களின் ஆட்சிப் பிரதேசம் இன்றைய வட தமிழ்நாட்டையும், தென் ஆந்திராவையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா என்ற மாநில எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் தான் பிரிக்கப் பட்டன. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஒரே பிரதேசமாக இருந்துள்ளது.
"தமிழ்ச் சோழர்கள்", "தெலுங்குச் சோழர்கள்" என்று இரண்டு சோழ அரச வம்சத்தினர் இருந்ததாக சிலர் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விளக்கம். இந்தக் குளறுபடிக்கு காரணம், இன்று நாங்கள் மொழி வழி தேசியத்தின் ஊடாகத் தான் உலகைப் பார்க்கிறோம். ஒரே பிரதேசத்தில் இரண்டு மொழிகளைப் பேசும், இரண்டு வெவ்வேறு அரச வம்சங்கள் அருகருகே இருந்திருக்க சாத்தியமே இல்லை. இது உலகில் வேறெந்த நாட்டிலும் இருந்திராத விசித்திரமான வரலாறு. மொழி மாறுபட்டாலும் அரச வம்சம் மாறுவதில்லை. உதாரணத்திற்கு, ஸ்பானிஷ் அரச வம்சத்தினர் பூர்வீகத்தில் ஜெர்மன் அரச வம்சமாக இருந்தனர். அதாவது இரத்த உறவினர்கள். ஆனால், வெவ்வேறு மொழிகளை (ஜெர்மன், ஸ்பானிஷ்) பேசினார்கள்.
பண்டைய காலங்களில் வாழ்ந்த யாருக்கும் இன/மொழி உணர்வு இருக்கவில்லை. மன்னர் குடும்பம் முதல், சாதாரண குடிமக்கள் வரையில், குறிப்பிட்ட பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திய மொழியை பயன்படுத்தி வந்தனர். ஆதனால் தான், சோழர்களின் கல்வெட்டுகள் ஒரு இடத்தில் தமிழிலும், இன்னொரு இடத்தில் தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளன. அது மட்டுமல்லாது, சோழர்கள் பற்றிய வரலாறு தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளது. அதே பெயர்கள், அதே சம்பவங்கள்... மொழி வேறு படுவதால் மனிதர்கள் மாறுவதில்லை.
ஆகவே சோழர்கள் தமிழராக மட்டுமல்லாது, தெலுங்கராகவும் இருந்திருக்கலாம்.சில நேரம், இரண்டும் இல்லாத வேறொரு மொழியை பூர்வீகமாக கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நடிகர் ரஜனிகாந்தை குறிப்பிடலாம். மராட்டிய பூர்வீகத்தை கொண்டவர், கர்நாடகாவில் கன்னடராக வாழ்ந்து, பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடிகரானதும் தமிழராகி விட்டார். இந்தக் காலத்திலும் மனிதர்கள் தாய்மொழியை மாற்றிக் கொள்வது சர்வ சாதாரணமான விடயம். மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திராத பண்டைய காலம் பற்றி சொல்லத் தேவையில்லை.
பெயர் பற்றிய ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட, சோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். ஆச்சரியப் படத் தக்கவாறு, ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய காலனியாதிக்க வாதிகள் உலகம் முழுவதும் கொள்ளையடித்து செல்வம் சேர்த்த மாதிரி தான், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழர்களும் நடந்து கொண்டுள்ளனர்! பண்டைய காலத்து தெற்காசிய ஏகாதிபத்தியவாதிகள் சோழர்களே என்றால் அது மிகையாகாது.
உண்மையிலேயே, சோழர்கள் அயலில் இருந்த நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர். முதலில் தமக்கு அயலில் இருந்த எதிரி நாடுகளை அடக்கி கொள்ளையடித்தனர். தெற்கில் இருந்த பாண்டிய நாட்டையும், வட- மேற்கில் இருந்த சாளுக்கிய நாட்டையும் ஆக்கிரமித்து சூறையாடினார்கள்.
அத்தோடு நின்று விடவில்லை. "கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்" என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் அளவிற்கு கண்ட இடமெல்லாம் சென்று கொள்ளையடித்து பொருள் திரட்டி வந்தார்கள். அந்த அருமை பெருமைகளை தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்தனர். வடக்கே ஒட்ட தேசம் (ஒடிசா), வங்கதேசம் என்று கங்கையாறு வரை சென்று இந்தியா முழுவதையும் கொள்ளையடித்து முடிந்ததும், கடல் கடந்து ஈழ மண்டலத்தின் (இலங்கை) மீது படையெடுத்தனர்.
இலங்கை, கடாரம் மீதான சோழப் படையெடுப்புகளை, "கொள்ளையடிக்கும் கொள்கை" என்றும், "திரவியங்களை அபகரித்து அள்ளிக் குவித்தல்" என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
//"G.W Spencer (1976) interprets the eleventh century Chola invasion of Sri Lanka as “Politics of Plunder”. The prasasti that speaks about the Kadaram expedition, mentions large “heaps of treasure” accumulated by Rajendra in his war with Kadaram.// - Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions
//The most spectacular Chola military campaigns in southern and eastern India during the late 10th century and early 11th centuries were, in fact, plundering raids. In 1025 Rajendra Chola launched naval attacks on the ports of Srivijaya in maritime Southeast Asia and conquered Kadaram (modern Kedah) and occupied it for some time. Historian George Spencer states that the Chola expedition into Ceylon and the Straits of Malacca -the attack upon Srivijaya -must be viewed not as a military campaign to expand the kingdom but as a continuation of the sustained plundering activity in India. The Chola-Chalukya wars -a series of battles fought from 992 CE to 1120 CE -resulted in the winning Cholas looting the Chalukaya kingdom. Spencer argues that the Cholas needed to engage in these plundering campaigns to let them maintain the flow of resources into their states and strengthen their hold over their local chieftains.// - M D Muthukumaraswamy
சோழர்கள் அயலில் இருந்த நாடுகளை மட்டும் சூறையாடவில்லை. பெரிய கப்பல்கள் கட்டி, இந்து சமுத்திரத்தை கடந்து தூர கிழக்காசிய நாடுகளுக்கு கடற் கொள்ளையராக சென்று வந்தனர். அந்தமான் தீவுகள், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை சென்று, நாடு நாடாக கொள்ளையடித்து திரவியம் சேர்த்தனர்.
சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத் தலைநகர் பலம்பங் சோழர்களால் தாக்கி அழிக்கப் பட்டது. அங்கு அரச மாளிகையில் இருந்த நவரத்தினக் கற்கள் பொறிக்கப் பட்ட கதவுகளை பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். சுமாத்ரா அந்தக் காலத்தில் "சுவர்ண துவீபம்"(தங்கத் தீவு) என்று அழைக்கப் பட்டது. மலாயா, சுமாத்ரா இரண்டும் வெளிநாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் வர்த்தம் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தன. அதற்காகவே, தங்கம் கொள்ளையடிப்பதற்காகவே சோழர்கள் படையெடுப்பு நடந்திருக்கலாம்.
இதனை நிரூபிக்க ஒரு வரலாற்று ஆதாரம் காட்டலாம். (இந்தோனேசிய) ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம், சோழர்களுடன் நட்புறவைப் பேணி வந்தது. சோழ நாட்டிற்குள், நாகபட்டினத்தில் இருந்த பௌத்த ஆலயம் ஸ்ரீவிஜய மன்னர் வழங்கிய நிதியில் தான் பராமரிக்கப் பட்டு வந்தது. ஸ்ரீவிஜய நாட்டின் தலைநகரான பலம்பங்கில் இருந்து நாகபட்டினத்திற்கு கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. பலம்பங்கில் இருந்து வந்த பௌத்த துறவிகள், முதலில் நாகபட்டினத்தில் வந்திறங்கித் தான் வட இந்தியாவில் இருந்த நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்.
ஆகவே, ஸ்ரீ விஜயமும், சோழ தேசமும் சிறந்த இராஜதந்திர உறவைப் பேணிக் கொண்டிருந்த காலத்தில், சோழர்கள் ஸ்ரீவிஜயம் மீது படையெடுப்பதற்கு எந்தவொரு அரசியல் காரணமும் இருந்திருக்க முடியாது. அனேகமாக, வணிகம் தொடர்பாக எழுந்த பிரச்சினை இராணுவ நடவடிக்கையில் முடிந்திருக்கலாம்.
பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவை காலனிப் படுத்திய ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தங்கம் தங்கமாக அள்ளிச் சென்றனர். அதே மாதிரித் தான் மலேயா, சுமாத்ரா மீது படையெடுத்த சோழர்களும் கப்பல் கப்பலாக தங்கத்தை அள்ளிச் சென்றுள்ளனர். ஒரேயொரு வித்தியாசம், சோழர்கள் கொள்ளையடிப்பதுடன் நின்று விட்டனர். அயலில் இருந்த ஈழ மண்டலம் தவிர வேறெங்கும் காலனி அமைக்கவில்லை.
இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சோழர்கள் படையெடுத்து சென்று வென்று வந்த நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்திருக்கவில்லை. அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. அவற்றை தமது காலனிகள் ஆக்கவில்லை. உண்மையில், அதற்கான தேவை இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.
தங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள் என்று, அந்த நாடுகளில் கிடைத்த திரவியங்களை எல்லாம் கொள்ளையடித்து முடிந்ததும் தாயகத்திற்கு திரும்பி வந்தனர். சோழ நாட்டு தலைநகரமான தஞ்சாவூரும் அதை அண்டிய பகுதிகளும் காவிரி ஆற்றின் கொடைகளால் வளம் மிக்க விவசாய பூமியாக இருந்தது. ஆகையினால், ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளில் பொருளாதாரக் காலனி அமைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.
இதனை ஐரோப்பிய காலனியாதிக்கத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும். பதினாறாம் நூற்றாண்டிலும் ஐரோப்பிய நாடுகள் எந்த வித இயற்கை வளமும் இல்லாத வறிய நாடுகளாக இருந்தன. உலகம் முழுவதும் பொருளாதாரக் காலனிகளை உருவாக்கி சுரண்டாமல் விட்டிருந்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் பணக்கார நாடுகளாக வந்திருக்க முடியாது.
சோழர்கள் எதற்காக கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர்? அதற்குக் காரணம், சோழ நாட்டுப் பொருளாதாரம் வரி அறவிடுவதில் தங்கியிருக்கவில்லை. சைவக் கோயில்கள் அரசியல் அதிகாரம் பெற்ற நிறுவனங்களாக இருந்தன. அவற்றிற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், பல கிராமங்களும் சொந்தமாக இருந்தன. அவற்றில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் கோயிலுக்கே சொந்தமாகும்.
அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த வணிகர் சங்கங்கள் இருந்தன. அந்த வணிகர்களும் தமக்கென நிலங்களை சொந்தமாக வைத்திருந்தனர். சோழ மன்னர்களுக்கு தேவைப் படும் போதெல்லாம் கடன் கொடுத்து வந்த வணிகர் சங்கங்கள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக சுயாதீனமாக இயங்கினார்கள். நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விடுவதுடன், அந்நிய நாணயங்களை மாற்றிக் கொடுப்பதும் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதனால், சோழ அரசர்கள் வேறு இடங்களில் வருமானம் தேட வேண்டி இருந்தது. பாண்டிய நாடு, ஈழ மண்டலம் என்று சோழநாட்டிற்கு அருகில் நிறைய "பணக்கார நாடுகள்" இருந்தன. அங்கெல்லாம் படையெடுத்து சென்று கொள்ளையடித்த செல்வங்களை கொண்டு வந்து கோயில்களுக்கு தானம் செய்தனர்.
ஒரு தடவை, கோயிலுக்கு முன்னூறு கிலோ தங்கம் கொடுத்ததாகவும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கோயில்களுக்கே அந்தளவு அள்ளிக் கொடுத்தனர் என்றால், சோழ மன்னர்கள் எந்தளவு செல்வம் சேர்த்திருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
ராஜராஜ சோழனும் அவனது வாரிசுகளும் இந்தியா முதல் இந்தோனேசியா வரையில் கொள்ளையடித்து செல்வம் சேர்த்தனர். அத்துடன், செல்லுமிடமெங்கும் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து, அந்நாட்டு மக்களிடம் கெட்ட பெயரையும் சம்பாதித்திருந்தனர். இந்தத் தகவல்கள், சோழப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்ட நாடுகளின் வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளன.
(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz)
"இந்தியா முதல் இந்தோனேசியா வரை விரிந்திருந்த சோழ சாம்ராஜ்யம்" பற்றிய கதைகள் உண்மைக்கு புறம்பானவை. அது இருபதாம் நூற்றாண்டில் தமிழ்த் தேசியர்களின் அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தப் பட்ட, ஒரு பக்கச் சார்பான வரலாறு. சோழர்கள் படையெடுத்து சென்ற நாடுகளில் எல்லாம், "கொள்ளையர்கள், படுகொலையாளர்கள்..." என்று உள்நாட்டு மக்களால் தூற்றப் பட்ட போதிலும், எதற்காக தமிழ்த் தேசியவாதிகள் சோழர்களை தூக்கிப் பிடிக்கிறார்கள்?
உலகம் முழுவதும் தேசியவாதக் கோட்பாடு ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. செங்கிஸ்கான் என்றால் பல ஆசிய நாடுகளில் வில்லன் என்று அர்த்தம். செங்கிஸ்கான் படையெடுத்து சென்ற நாடுகளை சேர்ந்த மக்கள், தமது அழகான நகரங்களை தரைமட்டமாக்கி, பெண்களையும், குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இனப்படுகொலை செய்த கொடியவன் என்று சொல்வார்கள். ஆனால், மொங்கோலியாவில் அதே செங்கிஸ்கான் ஒரு பெருமைக்குரிய சரித்திர நாயகன்!
மொங்கோலியா நாட்டில் எங்கு பார்த்தாலும் செங்கிஸ்கான் பெருமை கூறும் பெயர்ப் பலகைகளை காணலாம். தலைநகர் உலான் பட்டாரில் பெரியதொரு செங்கிஸ்கான் சிலை உள்ளது. அதற்குக் காரணம் மொங்கோலிய தேசியவாதம். உலகம் முழுக்க வில்லனாக தென்படும் ஒருவன், தேசியவாதிகளின் கண்களுக்கு நாயகனாகத் தெரிகிறான். இதே தான் தமிழ்த் தேசியவாதிகள் விடயத்திலும் நடக்கிறது. உலகம் முழுவதும் சோழர்களை கொள்ளையர்களாக கருதினாலும், அவர்களைப் பொறுத்தவரையில் சோழர்கள் நாயகர்கள் தான். அதற்குப் பெயர் தேசியவாதம். அது குறுகிய மனப்பான்மை கொண்டது.
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா?
சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா?
Labels:
கடற்கொள்ளையர்கள்,
சோழர்கள்,
தமிழ் தேசியவாதம்,
ராஜ ராஜ சோழன்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Friday, April 21, 2017
தமிழ்த் தேசியவாதிகளுக்கு, லெனின் தேசியம் பற்றி என்ன சொன்னார்?
"தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்?"
இப்படி ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் உண்மையான நோக்கம், "லெனின் கூட ஒரு தேசியவாதி" என்று குறுக்குவது தான். லெனின் ஒரு சர்வதேசியவாதி என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தேசியவாதம் என்பது உள்நோக்கிப் பார்க்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம். அதற்கு மாறாக, சர்வதேசியவாதம் என்பது உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதும் பரந்த மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம்.
பொதுவாக தேசியவாதிகளின் உலகம் தேசியங்களால் மட்டுமே ஆனது. இந்தப் பூமியில் எல்லோருக்கும் தனித் தனி தேசங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. "ஒவ்வொரு மொழி பேசும் இனத்திற்கும் தனித்தனியாக தேசங்கள் உள்ளன. தமிழருக்கு மட்டும் தான் இன்னும் ஒரு நாடு இல்லை. அதுவும் வந்து விட்டால், உலகில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது." இது தான் அவர்களது உலகப் பார்வை.
இதிலிருந்து தான் அவர்களது கருத்துக்களும், கேள்விகளும் பிறக்கின்றன. உலகில் உள்ள எல்லா தேசியவாதியும் தான் சார்ந்த இனத்திற்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக நினைத்துக் கொள்வான். தங்களது பிரச்சினை, உலகில் வேறெந்த மக்கள் குழுக்களுடனும் ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானது என்று கருதுவார்கள்.
உலகில் உள்ள ஒவ்வொரு தேசியவாதியும், தங்களது இனம், மொழி, இருப்பிடம் அழிக்கப் படுகின்றது என்று சொல்வார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் வாழும் தேசியவாதிகளும் அப்படித் தான் சொல்லிக் கொள்வார்கள். "தெற்காசிய, ஆப்பிரிக்க மக்கள் லண்டன் நகர் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டார்கள்... இஸ்லாம் வேகமாகப் பரவுகின்றது... ஆங்கிலம் அழிகிறது..." இவ்வாறு ஆங்கிலேய தேசியவாதிகள் முறையிடுவதைக் கேட்கலாம்.
தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்? லெனின் ஒரு தேசியவாதி அல்ல, மாறாக சர்வதேசியவாதி. பாட்டாளிவர்க்க சர்வதேசியம் அவரது குறிக்கோள். அதாவது, "பாட்டாளி வர்க்கத்திற்கு தேசம் கிடையாது" என்ற மார்க்ஸின் கூற்றை ஏற்றுக் கொண்ட ஒருவர் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இதை நாங்கள் லெனின் என்ற தனி மனிதனின் கருத்துக்களாக பார்ப்பதை விட, போல்ஷெவிக் (கம்யூனிஸ்ட்) கட்சியின் கொள்கையாக பார்ப்பது தான் சிறந்தது. ஒரு சிலர், போலந்து, நோர்வே தொடர்பாக லெனின் எழுதிய கடிதங்களை மேற்கோள் காட்டிப் பேசலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இருந்த ஐரோப்பாவில், அவை இரண்டும் சர்வதேச பிரச்சினையாக கருதப் பட்டவை.
உதாரணத்திற்கு போலந்து தேசத்தை அங்கீகரிப்பது தொடர்பான கருத்து முரண்பாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச மகாநாடுகளில் எதிரொலித்தன. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பெரியதொரு ராஜ்ஜியமாக இருந்த போலந்து, பிற்காலத்தில் ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களின் விஸ்தரிப்பால் மூன்று துண்டுகளாகப் பிளவு பட்டிருந்தது.
சுருக்கமாக, இன்றைக்கு இஸ்ரேல்/பாலஸ்தீனம் ஒரு சர்வதேசப் பிரச்சினையாக இருப்பது மாதிரித் தான், அன்றைக்கு போலந்து இருந்தது. அன்று ஐரோப்பாவில் கூடிய சர்வதேச மகாநாடுகளில், போலந்தை விடுதலை செய்யுமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டு வந்தது. ரஷ்யாவின் போர்வெறியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த ரஷ்யக் கம்யூனிஸ்டுகள், தமது வர்க்க எதிரிகளான ரஷ்யப் பேரினவாதிகளின் நிலைப்பாட்டுக்கு மாறாக போலந்து விடுதலையை ஆதரித்து வந்தனர்.
ஆகவே, போலந்து தொடர்பாக லெனின் தெரிவித்த கருத்துக்களை, தேசியம் தொடர்பான லெனினின் பொதுவான நிலைப்பாடாக ஏற்றுக் கொள்ள முடியாது. அன்று போல்ஷெவிக் கட்சிக்குள், தேசியம் தொடர்பான கொள்கை வகுக்கும் வேலை ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் பட்டது. எதற்காக ஸ்டாலினை தேர்ந்தெடுத்தார்கள்? அந்தக் காலகட்டத்தில், வியன்னாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஸ்டாலின், அந்நகரில் வாழ்ந்த பல்லின மக்களுடன் தொடர்பேற்படுத்தி தேசிய இனப் பிரச்சினை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார்.
அன்று ஆஸ்திரியாவில் மன்னராட்சி இருந்தது. அதன் கீழ் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்து வந்தன. அந்த நேரத்தில், ஆட்சியதிகாரத்தில் இல்லாத போதிலும், ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி மாத்திரம், தேசிய இனங்களின் கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பல்லின மக்கள் குடியேறி இருந்தனர். போஸ்னியா, குரோவாசியா போன்ற பெரும்பாலான யூகோஸ்லேவிய பகுதிகள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தன. அந்தப் பிரதேசத்தில் தேசியவாத இயக்கங்கள் எழுச்சி பெற்றிருந்தன. அன்று அது சர்வதேச (ஐரோப்பிய)பிரச்சினையாக விவாதிக்கப் பட்டது.
போல்ஷெவிக் கட்சியில், தேசியம் தொடர்பாக இரண்டு வகையான நிலைப்பாடு இருந்தது. அது அன்றைய காலகட்டத்து அரசியல் - வரலாற்று - பொருளாதார நிலைமைகள் காரணமாக உருவானது. எதையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதே சிறந்தது.
தேசியத்தை குறிக்க ரஷ்ய மொழியில் இரண்டு சொற்கள் உள்ளன.
1.நரோட்னிநொஸ்க்
2.நாட்சீ
நரோட்னிநொஸ்க் என்ற சொல், சார் மன்னன் காலத்தில் புவி இயல், மானிடவியல் அறிஞர்களால் பாவிக்கப் பட்டது. ரஷ்ய மொழியில் நரோட்னி என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே, இதை தமிழில் "மக்கள் குழுமம், இனக்குழு" என்று மொழிபெயர்க்கலாம்.
போல்ஷேவிக்குகளை பொறுத்தவரையில், நரோட்னிநொஸ்க் சைபீரியாவில் வாழ்ந்த பழங்குடி இன மக்களுக்கு பொருத்தமான சொல். ஆனால், போலந்து, ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளில் வாழ்ந்த மக்களை வேறுபடுத்திப் பார்த்தனர். அவர்களது அரசியல் மேற்கத்திய மயப் பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே தேசியவாத கட்சிகள் உருவாகி இயங்கத் தொடங்கி இருந்தன.
இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடலாகாது. தமிழில் தேசியம் என்ற கருத்தியல் மட்டுமல்ல, அதைக் குறிக்கும் எந்தச் சொல்லும் பாவனையில் இருக்கவில்லை. அது ஒரு சமஸ்கிருதச் சொல். 19 ம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த தமிழருக்கு தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது.
உண்மையில், தேசியவாதம் என்ற அரசியல் சித்தாந்தம் ஒரு மேலைத்தேய இறக்குமதி ஆகும்! (தமிழ்த் தேசியவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ள சங்கடப் படுவார்கள்.) ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் தான், முதன்முதலாக தேசியவாத சிந்தனைகள் தோன்றின. பிரெஞ்சுப் புரட்சியின் விளைபொருளாக வந்தது தான் தேசியம். பிரெஞ்சு மொழியில் nationalité என்று சொல்வார்கள்.
நெப்போலியன் நடத்திய போர்களின் விளைவாக ஐரோப்பா முழுவதும் தேசியவாதக் கருத்துக்கள் பரவின. அது பின்னர் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் உலகம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டது. ரஷ்யா, உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான் தேசியம் பற்றிய கருத்தியல் பரவியது.
தேசியம் என்பது, ஐரோப்பிய வரலாற்று கால கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து உருவானது. ஆகையினால், லெனின் மற்றும் போல்ஷெவிக் கட்சியினர், "நாஷியோநாலிட்டே" என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்த "நாட்சீ" என்ற சொல்லை தெரிவு செய்தனர். ஜெர்மன், டச்சு போன்ற பிற ஐரோப்பிய மொழிகளிலும் "நாட்சீ" என்றே அழைக்கப் படுகின்றது.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், அதற்குள் வாழ்ந்த பிற மொழி பேசும் இனங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. அதே காலகட்டத்தில், பிரித்தானியாவிலும், பிரான்ஸிலும் மானிடவியல் துறை வளர்ச்சி அடைந்திருந்தது. அங்கிருந்து வெளியான அறிவியல் நூல்களும் ரஷ்யாவில் விரும்பிப் படிக்கப் பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் இருந்த உலகப் பார்வை அந்தளவு விசாலமானதாக இருக்கவில்லை. நாகரிகம் தொடர்பாக ஒரு பக்கச் சார்பான கருத்துக்கள் நிலவின.
நாங்கள் இன்றைக்கு தமிழர், சிங்களவர், தெலுங்கர் என்றால் தனியான (தேசிய) இனங்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இந்தியாவும், இலங்கையும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், அன்று யாரிடமும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. காலனிய மக்களை ஆய்வு செய்ய சென்ற, ஆங்கிலேய மானிடவியல் அறிஞர்கள் பார்வையில், இந்தியா அல்லது இலங்கையில் வாழ்ந்த அனைத்து மக்களும் இனக்குழுக்களாக தெரிந்தனர். அதாவது, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் "அவர்கள் அனைவரையும் (ஐரோப்பிய) நாகரிகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய பழங்குடி இனமாக" கருதினார்கள். அவர்களை நாகரிக மயப் படுத்துவது, "வெள்ளையர்களின் கடமை" (White men's Burden) என்று சொல்லிக் கொண்டனர்.
ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் புவியியல், மானிடவியல் துறைகளில் படித்தவர்களுக்கும், மொத்தம் எத்தனை மொழி பேசும் இனங்கள் உள்ளன என்ற விபரம் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. சார் மன்னனின் தீவிரமான ரஷ்ய மயமாக்கல் கொள்கை காரணமாக, பல சைபீரிய பூர்வகுடி மக்கள் ரஷ்யர்களாக மாறி இருந்தனர். புள்ளிவிபரக் கணக்கு எடுத்தால், அவர்கள் தங்களை ரஷ்யர்கள் என்றே சொல்லிக் கொண்டனர். இதிலிருந்து தேசியம் தொடர்பாக ஒரு வளர்ச்சி அடைந்த கருத்தியல் உருவானது.
தேசியம் என்பது குறிப்பிட்ட மொழி சார்ந்தது அல்ல. தேசியம் தொடர்பாக கருத்துரைத்த மானிடவியல் அறிஞர்கள், ஐரிஷ் மக்களை உதாரணமாகக் காட்டினார்கள். நீண்ட காலமாக ஆங்கிலேய காலனியாக இருந்த படியால், ஐரிஷ் மக்கள் தமது மொழியை முற்றாக மறந்து விட்டனர். அவர்கள் (இன்றைக்கும் கூட) ஆங்கிலத்தை தாய்மொழியாகப் பேசி வந்தனர். இருப்பினும், அந்த மக்கள் மத்தியில் தாம் தனித்துவமான கலாச்சாரம் கொண்டவர்கள் என்ற உணர்வு இருந்தது. அதுவே ஐரிஷ் தேசியம் உருவாகக் காரணமாக இருந்தது.
தேசியம் என்பது ஒரே இனத்தைக் குறிப்பதில்லை. உண்மையில், தேசிய இனம் ஆயிரமாயிரம் வருடங்களாக மாறாத தன்மை கொண்டது என்ற கோட்பாடு ஒரு ஜெர்மன் கவிஞரின் சிந்தனையில் எழுந்தது. யோஹான் ஹெர்டர் (Johann Gottfried Herder, 1744 – 1803) கூறிய வரைவிலக்கணப் படி, "Volk" (உச்சரிப்பு: Folk) என்பது மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களில் வெளிப்படும் பொதுவான மக்கள் குழுமத்தின் ஆன்மாவைக் குறிக்கும். இன்றைக்கு அதைத் தான் இனவாதிகள் பின்பற்றி வருகின்றனர். (நாஸிகளும் Volk என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தனர்.) ஆகவே, தேசிய இனம் வேறு, இனம் வேறு. இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
1913 ம் ஆண்டு, ஸ்டாலின் எழுதிய தேசியக் கோட்பாடு ரஷ்ய போல்ஷெவிக் கட்சியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆரம்பத்தில் அது விவாதத்திற்கு விடுவதற்காக எழுதப் பட்டிருந்தாலும்,பிற்காலத்தில் அதுவே கட்சியின் சித்தாந்த நூலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ரஷ்யாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளும், தேசிய கொள்கை வகுப்பாளர்களும், தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஸ்டாலின் எழுதிய நூலை படிக்கத் தொடங்கினார்கள்.
அந்த நூலில் ஸ்டாலின், "தேசியம் என்பது ஓர் இனத்தை (race) அல்லது இனக்குழுவை (tribe) குறிப்பதல்ல" என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார். அதற்கு மாறாக, வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த, பல்வேறு இனங்களையும், இனக்குழுக்களையும் ஒன்று சேர்த்து உருவான சமூகம் தான் தேசியம். பொதுவான மொழி, பொதுவான கலாச்சாரம், பிரதேசத்தை கொண்ட மக்கள் சமூகத்தின் உறுப்பினர்கள், பொது மனப்பான்மை ஒன்றை பகிர்ந்து கொள்கின்றனர். அது அவர்களது கலாச்சாரத்தில் எதிரொலிக்கும்.
இருப்பினும், அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. பல்வேறு இனங்களை கொண்டது ஒரு தேசியம். அதற்கு ஸ்டாலின் பிரெஞ்சு தேசியத்தை உதாரணமாகக் காட்டுகின்றார். ரோமர்கள், கோலியர்கள், பிரித்தானியர்கள் (இன்றைய பிரிட்டன் அல்ல), டோயட்டானியர்கள் போன்ற பல்வேறு இனங்களின் கலவை அது. அதே மாதிரித் தான் இத்தாலிய தேசியத்தில் ரோமர்கள், எத்ருஸ்கன், கிரேக்கர்கள், அரேபியர்கள் என்று பல்வேறு இனங்கள் ஒன்று கலந்துள்ளன.
லெனினின் கண்ணோட்டத்தின் படி, தேசியம் என்பது முதலாளித்துவ அபிவிருத்திக் காலத்திற்கு உரியது. அதாவது, ஒரு தேசிய இனம் முதலாளித்துவ பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைந்திருக்கும். அது வர்க்க முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும். சுருக்கமாக, 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேசியங்களின் மாதிரியை பின்பற்றும்.
"லெனின் என்ன சொன்னார்?" என்று கேட்கும் தமிழ்த் தேசியவாதிகள், அதற்கு முதலில் லெனினின் தர்க்கீக வாதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்:
1. தமிழர் என்பது பல்வேறு இனங்கள் கலந்து உருவான தேசிய இனம்.
2. தமிழ்த் தேசிய இனத்தில் வர்க்க முரண்பாடுகள் இருக்கும்.
Labels:
தமிழ் தேசியவாதம்,
தேசியம்,
தேசியவாதம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, January 21, 2017
தமிழன்டா! தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர மாட்டான்டா!!
தமிழன்டா!
ஏறுதழுவ எதிரியும் வருவான்டா!!
ஜல்லிக்கட்டு போராட்டம்,
இந்திய அரசுக்கு கொண்டாட்டம்.
தமிழர் பாரம்பரியம் பாதுகாப்போம்,
தமிழ் விவசாயிகளை புறக்கணிப்போம்.
பீட்சா, பேர்கர் உண்போம்,
பீட்டா எமது எதிரி என்போம்.
தமிழன் என்று சொல்லடா,
தன் நலம் மட்டுமே நினையடா!
|
|---|
அன்பான தமிழ் இன உணர்வாளர்களே!
தயவுசெய்து, இந்த இடம் எத்தியோப்பியாவில் இருக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள். தஞ்சாவூரின் காவிரி நதியோர வயல்கள் காய்ந்து போய், அந்தப் பகுதிகள் வறண்ட பிரதேசமாக காணப் படுகின்றன. வரலாறு காணாத கடும் வரட்சி காரணமாக, தமிழ் நாட்டின் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அதனால், கடன்களை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.
தமிழ் நாட்டில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 144 விவசாயிகள் அகால மரணம் அடைந்துள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டும். (Tamil Nadu Farmer Suicide http://www.ndtv.com/topic/tamil-nadu-farmer-suicide)
பெரும்பாலான தமிழ் விவசாயிகள், எதிர்காலம் சூனியமான அதிர்ச்சி காரணமாக, மாரடைப்பு கண்டு, அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளனர். குறைந்தது 50 பேராவது தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வரட்சி, நிலத்தடி மற்றும் நதி நீர் குறைந்தமை போன்ற இயற்கை பேரிடர் இன்றும் தொடர்கின்றது. அதே நேரம், கடந்த வருட இறுதியில், தமிழ் நாட்டில் இடம்பெற்ற இரண்டு பெரிய அரசியல் மாற்றங்களும் விவசாயிகளின் தற்கொலை சாவுகளுக்கு காரணமாக இருந்துள்ளன.
முதலாவதாக, மோடி கொண்டு வந்த கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரிலான பண முடக்கம், விவசாயிகளை பெருமளவு பாதித்துள்ளது. வங்கியில் பணம் இருந்தாலும் அதை தேவைக்கு எடுக்க முடியாத நிலை இருந்தது. அதனால் முந்திய கடன்களை கட்டுவதற்கு, அல்லது அவசர செலவுகளுக்கு, விவசாயிகள் கந்துவட்டிக்காரரிடம் கடன் வாங்கினார்கள். இறுதியில், அதையும் கட்ட முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இரண்டாவதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும் விவசாயிகளை கடுமையாகப் பாதித்தது. அவர் சுகயீனமுற்று மாதக் கணக்கில் மருத்துவமனையில் கிடந்ததால், அரச நிதி ஒதுக்கீடுகளை யாரும் கவனிக்கவில்லை. அந்த வருட பட்ஜெட் கூட இயந்திரத் தனமாக நிறைவேற்றப் பட்டது. அதிகார மட்டத்தில் உள்ள மனிதர்கள் இழைத்த தவறுகளுடன், இயற்கையும் ஏமாற்றியதால் பாதிக்கப் பட்டவர்கள் விவசாயிகள் தான்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் தமிழர்களே! இந்த உண்மைகள் உங்கள் கண்களுக்கு தெரிய விடாமல் மறைப்பதற்குத் தான், அரசே திட்டமிட்டு உங்களுக்கு தமிழ் இன உணர்வை ஊட்டி வருகின்றது. "தமிழன்டா" என்று நீங்கள் பொங்கியெழும் ஒவ்வொரு தடவையும் அரசு வெற்றிப் பெருமிதத்தால் பூரித்துப் போகின்றது.
இதற்குப் பிறகும், இத்தனை இலட்சம் சனம் எப்படி சேர்ந்தார்கள் என்று கேட்கிறீர்கள். இப்போது இது மாதிரி வேறு கதை பேசினால், எதிரிக்கு வாய்ப்பாகி விடும் என்று தடுக்கிறீர்கள். தமிழர்களின் உணர்வை திசை திருப்புவதாக கொதிக்கிறீர்கள். உங்களை விமர்சிப்பவர்கள் நக்கல், நையாண்டி செய்வதாக குமுறுகிறீர்கள்.இந்தக் குற்றச்சாட்டுகள் உங்களுக்கு பொருந்தாதா?
அரசின் தவறுகளால் விவசாயிகள் தற்கொலை செய்த தகவல்கள் வெளியே வர விடாமல் தடுத்து, மறைமுகமாக அரசுக்கு உதவுகிறீர்கள். "தமிழராக ஒன்று சேரும் உணர்வு பூர்வ அரசியல்", உண்மையில் இலங்கை, இந்திய அரசுக்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கின்றது என்ற உண்மையை தாங்கள் அறியவில்லையா?
தமிழ்நாடு மட்டுமல்ல, இலங்கையும் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளது. அங்கும் மழை வீழ்ச்சி குறைவு காரணமாக, எரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதனால் இலட்சக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். (With drought looming, Sri Lanka tries something new: preparing)
ஜல்லிக்கட்டு என்ற பழந்தமிழ் பாரம்பரியத்தையும், மாடுகளையும் பாதுகாப்பது மட்டுமே தமிழர்களின் கடமையா? உங்களைப் போன்றே ஒரே மொழி பேசும், ஓரினத்தை சேர்ந்த, விவசாயிகளை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாப்பது தமிழரின் கடமை இல்லையா?
தமிழ் மரபை இழந்தால் தமிழ் இனமே அழிந்து விடும் என்று கவலைப் படுகிறீர்கள். தமிழ் விவசாயிகளை இழந்தால் ஒரு நேர உணவு கூடக் கிடைக்காது என்று நீங்கள் கவலைப் பட்டதுண்டா? இப்போது உணவு வாங்க எம்மிடம் பணம் இருக்கிறது தானே என்று மேட்டுக்குடித் திமிருடன் பேசலாம். நாளைக்கு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தால், அது உங்கள் மாத வருமானத்தை குறைக்கும். அதன் அர்த்தம், எதிர்காலத்தில் நீங்களும் ஏழைகளாகலாம் என்பதை எண்ணிப் பார்க்கவில்லையா?
பாலைவனமாகிப் போன தஞ்சாவூர் மண்ணில் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் உங்களுக்கு உறவுக் காரர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லையா? இதை கேட்டால் திசை திருப்பலாக படுகின்றதா? அப்படியானால், உங்களைப் பொருத்தவரையில் "யார் தமிழன்?" ஆங்கில வழிக் கல்வி கற்று, அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு சேவை செய்பவர்கள் மட்டுமே தமிழர்களா?
உங்கள் தமிழ் தேச மண்ணில், உங்கள் கண் முன்னால் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல், மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு அனுமதி கேட்டு போராடுவது எத்தனை பெரிய மோசடி? இதன் மூலம் நீங்கள் மனிதநேயத்தை நையாண்டி செய்கிறீர்கள் என்பதை உணரவில்லையா?
இப்போதும் இந்த உண்மைகள் மண்டையில் ஏறவில்லை என்றால் எதிர்காலம் சூனியமாகும். பட்டினிச் சாவுகள், எங்கேயோ இருக்கும் எத்தியோப்பாவின் அவலம் அல்ல. அது நாளை தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் நடக்கலாம். அப்போது இந்த தமிழ் இன உணர்வுவாதம் எதற்குமே உதவப் போவதில்லை.
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Subscribe to:
Posts (Atom)










