Showing posts with label தமிழ் இன உணர்வாளர்கள். Show all posts
Showing posts with label தமிழ் இன உணர்வாளர்கள். Show all posts

Tuesday, March 28, 2017

தமிழன்டா! லைக்கா முதலாளிக்கு விசுவாசமான அடிமைடா!!


யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ர‌ஜ‌னி ஆத‌ர‌வு போராட்ட‌ம் தொட‌ர்பாக‌ இந்தப் பதிவு. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அப்பாவி மக்கள் மீது அறச்சீற்றம் கொள்ளும் தமிழின எழுச்சியாளர்கள், அந்த அப்பாவி பின்னால் நின்று மக்களை ஆட்டுவித்த லைக்கா முதலாளியை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். இப்போதும் நாங்கள் இதற்கெல்லாம் மூலகாரணமான லைக்காவின் பெயரை தப்பித் தவறியும் உச்சரிக்க மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழன்டா, லைக்காவின் அடிமைடா!

 ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், ர‌ஜ‌னிகாந்த் என்ற‌ ந‌டிக‌னுக்கான‌ போராட்ட‌ம் "நியாய‌ம‌ற்ற‌து" என‌க் கூறுகிறார்க‌ள். ஈய‌த்தை பார்த்து பித்த‌ளை இளித்த‌தாம் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. எது நியாயம்? எது நியாயமற்றது? அதை தீர்மானிப்பது யார்?

இத‌ற்குப் பின்னால் உள்ள‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லைப் புரிந்து கொள்ளுங்க‌ள். ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விக்கும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ள். ஏற்க‌ன‌வே சொந்த‌ வீடு, உய‌ர் க‌ல்வி, உத்தியோக‌ம் எல்லாம் கிடைக்க‌ப் பெற்ற‌வ‌ர்க‌ள். ஆயிர‌ம் வ‌ச‌திக‌ள் இருந்தும் த‌மிழீழ‌ம் இல்லையே என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள‌து க‌வ‌லை.

ர‌ஜ‌னி என்ற‌ ந‌டிக‌னுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கையில் எந்த‌ வ‌ச‌தியும‌ற்ற‌ அடித்த‌ட்டு உழைக்கும் ம‌க்க‌ள். போரினால் பாதிக்க‌ப் ப‌ட்டு, இட‌ம்பெய‌ர்ந்து குடிசைக‌ளில் வாழும் ஏழைக‌ள். அவ‌ர்களுக்கு லைக்காவோ, அல்ல‌து‌ தொண்டு நிறுவ‌ன‌மோ இல‌வ‌ச‌மாக‌ க‌ட்டிக் கொடுக்கும் வீடுக‌ளை ம‌ன‌முவ‌ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள்.

லைக்கா க‌ட்டிய‌ வீடுக‌ளின் சாவிக‌ளை கொடுப்ப‌த‌ற்கு ர‌ஜ‌னிகாந்தை வரச் சொன்ன‌தும் கார‌ண‌த்தோடு தான். அது த‌யாரிக்கும் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌மும் இத‌ற்குள் அட‌ங்கியுள்ள‌து. லைக்கா த‌ன‌க்கு ஆதாய‌ம் கிடைக்கும் என்ப‌தால் தான், 150 வீடுக‌ளை ஏழைக‌ளுக்கு க‌ட்டிக் கொடுத்த‌து. இதைத் தான் கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் கொடுக்கும் "வ‌ள்ள‌ல்க‌ளும்" செய்கிறார்க‌ள். எல்லாம் விள‌ம்ப‌ர‌ம் தேடும் ம‌லின‌ உத்தி தான் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

ஆனால் இங்கே ப‌ல‌ர் முக்கிய‌மான‌தொரு உண்மையை ம‌ற‌ந்து விடுகிறார்க‌ள். இவ்வ‌ள‌வு கால‌மும், வீட‌ற்ற‌ ஏழைக‌ள் குர‌ல‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ புற‌க்க‌ணிக்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். கூட்ட‌மைப்புக்கும், சைக்கிள் க‌ட்சிக்கும் இடையிலான‌ குடுமிப் பிடி ச‌ண்டையில் அந்த‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் பேச‌ப் ப‌டுவ‌தில்லை.

ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தை லைக்கா பின் நின்று ந‌ட‌த்தி இருந்தாலும், அந்த‌ ம‌க்க‌ளை கூட்டி வ‌ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னுக்கு நிறுத்திய‌த‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறைத்து ம‌திப்பிட‌ முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌மாக‌த் தான் தெரியும். அது ஸ்பொன்ச‌ர் ப‌ண்ணிய‌ லைக்காவின் உத்த‌ர‌வு. ஆனால், போராட்ட‌த்திற்கு செல்லாவிட்டால் வீடு கிடைக்காது என்ற‌ ப‌ய‌மும் அந்த‌ அப்பாவி ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருந்திருக்கும்.

இந்த‌ நாட‌க‌த்தை பின்னுக்கு நின்று இய‌க்கிய‌ லைக்காவை குற்ற‌ம் சாட்டாமல், முன்னால் நின்ற‌ அப்பாவி ம‌க்களை தூற்றுவ‌து ஏன்? அவ‌ர்க‌ளை "முட்டாள்க‌ள், ஒரு பிய‌ருக்கு விலை போன‌வ‌ர்க‌ள்" என்றெல்லாம் இழிவு ப‌டுத்துவ‌து ஏன்? எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து ஏன்?

எய்தவன் யாரென்று தெரிந்த போதிலும், அம்புகளை குறை கூறுவோர் தானும் ஓர் அம்பு என்பதை அறியாமல் இருக்கிறார். முகநூலில் ஒருவர் கருத்திட்டார்: //சுவரொட்டி ஒட்டிய அந்த அக்னிக்குஞ்சுகளை பிடித்து வாருங்கள், *** எடுத்து விடுவோம்.// சுவரொட்டி அடித்துக் கொடுத்த லைக்கா முதலாளியின் பெயர் அல்லிராஜா சுபாஸ்கரன். எங்கே உங்களால் முடிந்ததை செய்யுங்கள் பார்ப்போம்?

இது தான் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின், குட்டி பூர்ஷுவா குணாம்ச‌ம். அவ‌ர்க‌ள் லைக்காவை விம‌ர்சிக்க‌ மாட்டார்க‌ள். ஏனென்றால் முத‌லாளிக‌ளை ப‌கைக்க‌க் கூடாது என்பார்க‌ள். அதே நேர‌ம், அடித்த‌ட்டு ம‌க்க‌ளை இழிவு ப‌டுத்துவார்க‌ள். அதை த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு ஆளில்லை என்ற‌ தைரிய‌ம்.

ஒரு விட‌ய‌த்தை க‌வ‌னித்தீர்க‌ளா? ர‌ஜ‌னியின் இல‌ங்கை வ‌ருகைக்கு எதிராக‌ க‌ம்பு சுற்றிய‌ ஈழ‌த் "த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள்", லைக்காவுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

ஏனென்றால் "லைக்கா அதிப‌ர் ந‌ம்ம‌வ‌ர்(ஈழ‌த் த‌மிழ‌ர்)" என்று பெருமைப் ப‌ட‌ வேண்டுமாம். "பிரிட்டிஷ் ம‌காராணியை விட‌ப் ப‌ண‌க்கார‌ன்." என்று புளுகுக‌ள் வேறு. லைக்காவின் புக‌ழ் பாடும் ப‌ர‌ப்புரையாள‌ர்க‌ள், அநேக‌மாக‌ க‌ஜேந்திர‌குமாரின் த‌.தே.ம‌.மு. க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்ப‌து இர‌க‌சிய‌ம் அல்ல‌.

இதே நேர‌த்தில், யாழ்ப்பாண‌த்தில் ம‌கிந்த‌ விசுவாசியாக‌ அர‌சிய‌லில் அடியெடுத்து வைத்த‌ சுத‌ந்திர‌க் க‌ட்சி நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அங்க‌ஜ‌ன் ராம‌நாத‌ன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவ‌ர் "ர‌ஜ‌னியின் வ‌ருகை த‌டைப் ப‌ட்ட‌தால் லைக்காவின் திட்ட‌ம் பாழாகி விட்ட‌தாக‌வும், ஏழை ம‌க்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌வும்..." நீலிக் க‌ண்ணீர் வ‌டித்துள்ளார்.

அங்க‌ஜ‌ன் ஒரு நாடாளுமன்ற உறுப்பின‌ர் தானே? ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌து அவ‌ர‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா? எத‌ற்காக‌ ஒரு த‌னியார் நிறுவ‌ன‌த்தின் உத‌வியை எதிர்பார்க்க‌ வேண்டும்?

லைக்காவுக்கும் ராஜ‌ப‌க்சேக்கும் இடையிலான‌ வ‌ர்த்த‌க‌ உற‌வு ஏற்க‌ன‌வே அம்ப‌ல‌மான‌ விட‌ய‌ம். அது ஒன்றும் இர‌க‌சிய‌ம் அல்ல‌. ஆனால் வெளியே ம‌க்க‌ளுக்கு தெரியாத‌ ஒரு இர‌க‌சிய‌ம் உள்ள‌து.

தெற்கில் ராஜ‌ப‌க்சே விசுவாசிக‌ளுக்கும், வ‌ட‌க்கில் க‌ஜேந்திர‌குமார் விசுவாசிக‌ளுக்கும் இடையிலான‌ ந‌ட்புற‌வுப் பால‌மாக‌ லைக்கா செய‌ற்ப‌டுகின்ற‌து. முத‌லாளிக‌ளின் ப‌ண‌த்திற்கு முன்னால் இன‌ முர‌ண்பாடு மாய‌மாக‌ ம‌றைந்து விடும்.

ஒருவ‌ர் அடிப்ப‌து மாதிரி அடிப்பார். ம‌ற்ற‌வ‌ர் அழுவ‌து மாதிரி அழுவார். அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் ஐயா. இத‌ற்குப் பெய‌ர் #மேட்டுக்குடி அர‌சிய‌ல். 

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:

Saturday, January 21, 2017

தமிழன்டா! தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர மாட்டான்டா!!



த‌மிழ‌ன்டா! 
ஏறுத‌ழுவ‌ எதிரியும் வ‌ருவான்டா!! 
ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ம், 
இந்திய‌ அர‌சுக்கு கொண்டாட்ட‌ம். 
த‌மிழ‌ர் பார‌ம்ப‌ரிய‌ம் பாதுகாப்போம், 
த‌மிழ் விவ‌சாயிகளை புற‌க்க‌ணிப்போம். 
பீட்சா, பேர்க‌ர் உண்போம், 
பீட்டா எம‌து எதிரி என்போம். 
த‌மிழ‌ன் என்று சொல்ல‌டா, 
த‌ன் ந‌ல‌ம் ம‌ட்டுமே நினைய‌டா!





அன்பான‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! 

த‌ய‌வுசெய்து, இந்த‌ இட‌ம் எத்தியோப்பியாவில் இருக்கிற‌தா என்று கேட்டு விடாதீர்க‌ள். தஞ்சாவூரின் காவிரி நதியோர வயல்கள் காய்ந்து போய், அந்தப் பகுதிகள் வறண்ட பிரதேசமாக காணப் படுகின்றன. வரலாறு காணாத கடும் வரட்சி காரணமாக, த‌மிழ் நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ள் கடுமையாக பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அத‌னால், கடன்களை கட்ட முடியாமல் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்வ‌தும் அதிக‌ரித்துள்ள‌து.

த‌மிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் ம‌ட்டும் 144 விவ‌சாயிக‌ள் அகால‌ ம‌ர‌ண‌ம் அடைந்துள்ள‌தாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டும். (Tamil Nadu Farmer Suicide http://www.ndtv.com/topic/tamil-nadu-farmer-suicide)

பெரும்பாலான தமிழ் விவசாயிகள், எதிர்காலம் சூனியமான அதிர்ச்சி காரணமாக, மார‌டைப்பு க‌ண்டு, அல்ல‌து நோய் வாய்ப்ப‌ட்டு இற‌ந்துள்ள‌ன‌ர். குறைந்த‌து 50 பேராவது த‌ற்கொலை செய்து கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ர‌ட்சி, நில‌த்த‌டி ம‌ற்றும் ந‌தி நீர் குறைந்த‌மை போன்ற‌ இயற்கை பேரிட‌ர் இன்றும் தொட‌ர்கின்ற‌து. அதே நேர‌ம், க‌ட‌ந்த‌ வ‌ருட‌ இறுதியில், த‌மிழ் நாட்டில் இடம்பெற்ற இர‌ண்டு பெரிய அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ளும் விவசாயிகளின்  த‌ற்கொலை சாவுக‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்துள்ள‌ன‌.

முதலாவதாக, மோடி கொண்டு வந்த க‌றுப்புப் ப‌ண‌ ஒழிப்பு என்ற பெயரிலான பண முடக்கம், விவ‌சாயிக‌ளை பெரும‌ள‌வு பாதித்துள்ள‌து. வங்கியில் பணம் இருந்தாலும் அதை தேவைக்கு எடுக்க முடியாத நிலை இருந்தது. அதனால் முந்திய கடன்களை கட்டுவதற்கு, அல்லது அவசர செலவுகளுக்கு, விவ‌சாயிக‌ள் க‌ந்துவ‌ட்டிக்கார‌ரிட‌ம் க‌ட‌ன் வாங்கினார்க‌ள். இறுதியில், அதையும் க‌ட்ட‌ முடியாம‌ல் உயிரை மாய்த்துக் கொண்ட‌ன‌ர்.

இரண்டாவதாக, முன்னாள் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவின் மரணமும் விவசாயிகளை கடுமையாகப் பாதித்தது. அவர் சுகயீனமுற்று மாத‌க் க‌ண‌க்கில் ம‌ருத்துவ‌ம‌னையில் கிட‌ந்த‌தால், அர‌ச‌ நிதி ஒதுக்கீடுக‌ளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை. அந்த வருட ப‌ட்ஜெட் கூட‌ இய‌ந்திர‌த் த‌ன‌மாக‌ நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து. அதிகார‌ ம‌ட்ட‌த்தில் உள்ள‌ ம‌னித‌ர்க‌ள் இழைத்த‌ த‌வ‌றுக‌ளுட‌ன், இய‌ற்கையும் ஏமாற்றிய‌தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விவ‌சாயிக‌ள் தான்.

ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ போராடும் த‌மிழ‌ர்க‌ளே! இந்த‌ உண்மைக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் ம‌றைப்ப‌த‌ற்குத் தான், அர‌சே திட்டமிட்டு உங்க‌ளுக்கு த‌மிழ் இன‌ உண‌ர்வை ஊட்டி வ‌ருகின்ற‌து. "த‌மிழ‌ன்டா" என்று நீங்க‌ள் பொங்கியெழும் ஒவ்வொரு த‌ட‌வையும் அர‌சு வெற்றிப் பெருமித‌த்தால் பூரித்துப் போகின்ற‌து.

இத‌ற்குப் பிற‌கும், இத்த‌னை இல‌ட்ச‌ம் ச‌ன‌ம் எப்ப‌டி சேர்ந்தார்க‌ள் என்று கேட்கிறீர்க‌ள். இப்போது இது மாதிரி வேறு க‌தை பேசினால், எதிரிக்கு வாய்ப்பாகி விடும் என்று த‌டுக்கிறீர்க‌ள். த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்வை திசை திருப்புவ‌தாக‌ கொதிக்கிறீர்க‌ள். உங்களை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் நக்க‌ல், நையாண்டி செய்வ‌தாக‌ குமுறுகிறீர்க‌ள்.இந்த‌க் குற்ற‌ச்சாட்டுக‌ள் உங்க‌ளுக்கு பொருந்தாதா? 

அர‌சின் த‌வ‌றுக‌ளால் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்த‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியே வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து, ம‌றைமுக‌மாக‌ அர‌சுக்கு உத‌வுகிறீர்க‌ள். "தமிழராக ஒன்று சேரும் உணர்வு பூர்வ அரசியல்", உண்மையில் இலங்கை, இந்திய அரசுக்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கின்றது என்ற உண்மையை தாங்கள் அறியவில்லையா?

த‌மிழ்நாடு ம‌ட்டும‌ல்ல‌, இல‌ங்கையும் வரலாறு காணாத வ‌ற‌ட்சியால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கும் மழை வீழ்ச்சி குறைவு காரணமாக, எரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதனால் இலட்சக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். (With drought looming, Sri Lanka tries something new: preparing)

ஜ‌ல்லிக்க‌ட்டு என்ற‌ ப‌ழ‌ந்த‌மிழ் பார‌ம்ப‌ரிய‌த்தையும், மாடுக‌ளையும் பாதுகாப்ப‌து ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளின் க‌ட‌மையா? உங்க‌ளைப் போன்றே ஒரே மொழி பேசும், ஓரினத்தை சேர்ந்த, விவ‌சாயிக‌ளை ம‌ர‌ண‌த்தின் பிடியில் இருந்து பாதுகாப்ப‌து த‌மிழ‌ரின் க‌ட‌மை இல்லையா?

த‌மிழ் ம‌ர‌பை இழ‌ந்தால் த‌மிழ் இன‌மே அழிந்து விடும் என்று க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள். த‌மிழ் விவ‌சாயிக‌ளை இழ‌ந்தால் ஒரு நேர‌ உண‌வு கூட‌க் கிடைக்காது என்று நீங்க‌ள் க‌வ‌லைப் பட்டதுண்டா? இப்போது உண‌வு வாங்க‌ எம்மிட‌ம் ப‌ண‌ம் இருக்கிற‌து தானே என்று மேட்டுக்குடித் திமிருட‌ன் பேச‌லாம்.  நாளைக்கு உண‌வுப் பொருட்க‌ளின் விலை உய‌ர்ந்தால், அது உங்க‌ள் மாத வ‌ருமான‌த்தை குறைக்கும். அதன் அர்த்தம், எதிர்காலத்தில் நீங்களும் ஏழைகளாகலாம் என்பதை எண்ணிப் பார்க்க‌வில்லையா?

பாலைவன‌மாகிப் போன‌ த‌ஞ்சாவூர் ம‌ண்ணில் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ள் உங்க‌ளுக்கு உற‌வுக் கார‌ர்க‌ளாக‌ இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவர்கள் த‌மிழ‌ர்கள் இல்லையா? இதை கேட்டால் திசை திருப்ப‌லாக‌ ப‌டுகின்ற‌தா? அப்ப‌டியானால், உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் "யார் த‌மிழ‌ன்?" ஆங்கில‌ வ‌ழிக் க‌ல்வி க‌ற்று, அந்நிய‌ நாட்டு நிறுவ‌ன‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளா?

உங்க‌ள் த‌மிழ் தேச‌ ம‌ண்ணில், உங்க‌ள் க‌ண் முன்னால் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல், மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு அனும‌தி கேட்டு போராடுவ‌து எத்த‌னை பெரிய‌ மோச‌டி? இத‌ன் மூல‌ம் நீங்க‌ள் ம‌னித‌நேய‌த்தை நையாண்டி செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வில்லையா?

இப்போதும் இந்த‌ உண்மைக‌ள் ம‌ண்டையில் ஏற‌வில்லை என்றால் எதிர்கால‌ம் சூனிய‌மாகும். ப‌ட்டினிச் சாவுக‌ள், எங்கேயோ இருக்கும் எத்தியோப்பாவின் அவ‌ல‌ம் அல்ல‌. அது நாளை த‌மிழ் நாட்டிலும், இல‌ங்கையிலும் ந‌ட‌க்க‌லாம். அப்போது இந்த‌ தமிழ் இன‌ உண‌ர்வுவாத‌ம் எத‌ற்குமே உத‌வ‌ப் போவ‌தில்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆந்திராவில் அனுமதி, தமிழ்நாட்டில் மட்டும் தடை ஏன்?


"த‌மிழ் நாட்டின் அர‌பு வ‌ச‌ந்த‌ம்" "TAMILS vs PETA" என்றெல்லாம் வ‌ட‌ இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ங்க‌ளை சித்த‌ரிக்கின்ற‌ன‌.

ச‌ந்தேக‌த்திற்கிட‌மின்றி பீட்டா ஒரு என்.ஜி.ஓ. தான். ஆனால், பெரும் முத‌லாளிக‌ளுக்கு த‌லையிடியாக‌ இருந்த‌ என்.ஜி.ஓ. மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் அத‌ன் ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் ப‌ல‌ பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

உதார‌ண‌த்திற்கு, முய‌ல், மான் போன்ற‌ வ‌ளர்ப்பு மிருக‌ங்க‌ளின் தோல்க‌ளில் இருந்து த‌யாரிக்க‌ப் ப‌டும் உடைக‌ளுக்கு எதிராக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து. அத‌னால், ப‌ண‌க்கார‌ வீட்டுப் பெண்க‌ள் அணியும் விலை உய‌ர்ந்த‌ உடைக‌ளின் விற்ப‌னை வீழ்ச்சி க‌ண்ட‌து.

இத‌ற்கு முன்ன‌ர் ஸ்பெயின் நாட்டில் ந‌ட‌க்கும் மாடு பிடிக்கும் விளையாட்டை த‌டை செய்ய‌ வேண்டுமென‌ பீட்டா போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌து. ஸ்பெயினில் விளையாட்டின் முடிவில் மாட்டை விர‌ட்டி ஈட்டி எறிந்து கொல்வார்க‌ள். அத‌னோடு ஒப்பிடும் பொழுது த‌மிழ‌க‌ ஜ‌ல்லிக்க‌ட்டு குரூர‌மான‌து அல்ல‌.

இந்திய‌ பீட்டா அமைப்பில் இந்துத்துவா - பிராம‌ண‌ர்க‌ள் இருப்ப‌து ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம். அதாவது, பிராம‌ண‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌மான‌ மாமிச‌ உண‌வின் மீதான‌ வெறுப்புண‌ர்வு, கோமாதா வ‌ழிபாடு போன்ற‌ன‌ பீட்டாவின் கொள்கையுட‌ன் ஒத்துப் போகின்ற‌ன‌. ஆனால், ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் பீட்டாவின் அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளுட‌னும் ஒத்துப் போவார்க‌ள் என்று சொல்ல‌ முடியாது.

யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தில், "பீட்டாவின் பெய‌ரில் ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌மிழின‌ ம‌ர‌புரிமையை அழிப்ப‌தாக‌" அறிக்கை வாசித்தார்க‌ள்.

ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில், பீட்டா ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெறுப்புக்கு ஆளாகி உள்ள‌து. இங்கே என்ன‌வென்றால் அதையே ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌மாக‌ காட்டும் அப‌த்த‌ம் ந‌ட‌க்கிற‌து.

இது அறியாமையில் நேர்ந்த‌ த‌வ‌றாக‌ தெரிய‌வில்லை. இந்துத்துவா பிராம‌ண‌ர்க‌ள் பீட்டாவுக்குள் ம‌றைந்து நிற்ப‌து அவ‌ர்க‌ள‌து சுய‌நல‌ம். அதே மாதிரி, பன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் பின்னால் ம‌றைந்து கொள்ள‌லாம்.

IT ஊழிய‌ர்க‌ள் போன்ற‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ரும் தெருவுக்கு வ‌ந்து போராடுகிறார்க‌ள் என்றால், அங்கே அவ‌ர்க‌ள‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளும் பாதுகாக்க‌ப் ப‌டுகின்ற‌து என்று அர்த்த‌ம். அவ‌ர்க‌ள‌து வேலைக்கு உத்த‌ர‌வாத‌ம் உண்டு என்று அர்த்த‌ம்.

த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை மர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ மான்சாண்டோ போன்ற‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளை எதிர்த்து இவ‌ர்க‌ள் போராட‌வில்லை. இனிமேலும் போராட‌ப் போவ‌தில்லை. "த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ மான்சாண்டோ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தை எதிர்ப்போம்" என்று வழ‌மையான‌ த‌மிழ்த் தேசிய‌ கோஷ‌த்தின் கீழ் போராட‌லாம். அதெல்லாம் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

இப்போதும் த‌மிழ் விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை ப‌ற்றி எதுவும் அறிய‌ விரும்பாத‌வ‌ர்க‌ள் தான், ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ "த‌ன்னெழுச்சியாக‌" வ‌ந்து போராடினார்க‌ள். பீட்டாவை த‌மிழின‌ எதிரியாக‌ சித்த‌ரிப்ப‌து, உண்மையான‌ எதிரியின் திசைதிருப்பும் உத்தி. ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ப் பொறிக்குள் விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்.

பீட்டா த‌மிழின‌ எதிரி என்றால், மான்சாண்டோ த‌மிழின‌ ந‌ண்ப‌னாக இருக்க‌ முடியாது. முள்ளிவாய்க்கால் த‌மிழ் இனப்‌ப‌டுகொலையை ஆத‌ரித்த‌ IMF த‌மிழரின் ந‌ண்ப‌னாக‌ இருக்க‌ முடியாது. ‌ த‌ன‌து எதிரியை ச‌ரியாக‌ இன‌ம் காண‌ முடியாத‌ கும்ப‌லுக்குள், எதிரி இல‌குவாக‌ ஒளிந்து கொள்ள‌ முடியும். அது தான் ந‌ட‌க்கிற‌து.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் வழமை போல இந்த வருடமும் ஜல்லிகட்டு நடத்தப் பட்டுள்ளது. (Jallikattu organised in Andhra Pradesh CM Chandrababu Naidu's home district Chittoor; Two bulls die in AP jallikattu)

ஆகவே, நீதிமன்றத் தடை தமிழ்நாட்டில் மட்டுமே, ஆந்திராவில் அல்ல!

தமிழ்த் தேசிய கருத்தியலை நம்புவோருக்கு இந்தத் தகவல் உவப்பானதாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அவர்கள் "இது தமிழருக்கு மட்டுமே உரிய வீர விளையாட்டு" என்று நம்புவதுடன், அதையே பரப்புரை செய்து வருகின்றனர். சிந்து வெளியில் வாழ்ந்த தமிழர்கள் ஜல்லிகட்டு விளையாடியதாக, இன வரலாறு பேசும் "மொழி ஆய்வாளர்கள்", வழமை போல இனத்தையும், மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

முதலில் ஜல்லிக்கட்டு என்ற பெயர்ச் சொல் எப்படி வந்தது என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. சல்லிக்கட்டு, அல்லது ஏறு தழுவுதல் என்று, தமிழினத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று காட்ட முனைகிறார்கள். தமிழரும், தெலுங்கரும் இனத்தால் ஒன்று தான். ஆனால், மொழியால் வேறு பட்டவர்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் விளையாடும் அதே ஜல்லிக்கட்டு, ஆந்திராவிலும் விளையாடப் படுகின்றது. 

ஜல்லிக்கட்டு என்ற சொல் கூட தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு எனும் மாட்டை துன்புறுத்தாத விளையாட்டு மட்டுமே இருந்திருக்கிறது. 500 வருடங்களுக்கு முன்னர், தெலுங்கு நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்தில் தான், ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு தமிழ்நாட்டில் புகுத்தப் பட்டிருக்க வேண்டும். இலங்கையில், ஈழத்தமிழரின் பூர்வீகமான வடக்கு கிழக்கில், எந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டு விளையாடப் பட்டிருக்கவில்லை.

தமிழருக்கும், தெலுங்கர்களுக்கும், பிற திராவிட மொழிப் பிரிவினருக்கும் இடையில், இது போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன. அப்படித் தான் சிந்துவெளி ஆதாரத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஆனால், நமது தமிழ்த் தேசியவாதிகள் அல்லது மொழி அடிப்படைவாதிகள் அவற்றை கண்டுகொள்ளப் போவதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதாடிக் கொண்டிருப்பார்கள்.

தமிழ்நாட்டிலும் ஜல்லிக்கட்டு எல்லா இடங்களிலும் விளையாடப் படுவதில்லை. மதுரை போன்ற தென் பகுதி மாவட்டங்களில் மட்டுமே உள்ள பாரம்பரிய விளையாட்டு. சில குறிப்பிட்ட ஆதிக்க சாதி நிலவுடமையாளர்களின் ஆணவத்தை காட்டவும் விளையாடப் பட்டது. 2006 ம் ஆண்டு வரையில், ஜல்லிக்கட்டு காரணமாக சாதிக் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால், அதற்காக அந்த விளையாட்டு தடைசெய்யப் படவில்லை.

மிருகவதைக்கு எதிராக போராடும் பீட்டா போட்ட வழக்கின் காரணமாக வந்த தடை என்றால், அது ஆந்திராவிலும் வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தடை போடக் காரணம் என்ன? இதற்குப் பின்னால் சில அரசியல் காய்நகர்த்தல்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் ஒரு குழப்பத்தை உண்டாக்கும் நோக்கம் இருக்கலாம்.

இந்திய பீட்டா அமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்கும் பிராமணர்கள். பீட்டா ஒரு NGO எனப்படும் அரசு சாரா நிறுவனம். அதே நேரம், பீட்டாவை எதிர்த்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடும் BiCCI கூட ஒரு NGO தான். தமிழக வணிக ஊடகங்கள் மட்டுமல்ல, சினிமா நடிகர்கள், கிரிக்கட் வீரர் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறது.

நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா என்றால், இளம் தலைமுறையினர் ஓடி வருவார்கள். இளங்கன்று பயமறியாது என்பது போல போராட்டத்திற்கு இளைஞர்கள் சேர்வது அதிசயமல்ல. ஆனால், அவர்களை வழிநடத்தும் அரசியல் சக்தி எதுவென்பது தான் பிரச்சினை.

போராட்டத்தில் கலந்து கொள்ளும் இந்து பாசிச சக்திகள், "ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள்" என்று பிரச்சாரம் செய்து தம் பக்கம் வென்றெடுக்க பார்க்கின்றன. அதற்கெதிராக இடதுசாரி சக்திகளும் களத்தில் நின்று போராடுகின்றன.

இந்து பாசிஸ்டுகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடும் மதக் கலவரங்களால் பாதிக்கப்படும். இடதுசாரிகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடு ஜனநாயக மயப் படும். தமிழ்நாட்டு மக்கள் இந்துமதவெறியர்களின் சூழ்ச்சிக்கு பலியாகினால், ஜனநாயகத்தை மீட்பதற்கு தசாப்த காலம் எடுக்கும்.

Saturday, January 07, 2017

முன்னாள் போராளிகளின் உரிமைகளுக்காக "எழுக தமிழ்" வேலை நிறுத்தம்!


கிளிநொச்சி - இரணைமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள் ஒன்று சேர்ந்து தமக்கு வேலை வாய்ப்பு வேணும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பலர், தங்கள் கைக்குழந்தையுடன் வந்து நின்றனர்.

2.1.2017 அன்று, காலை 10.30 மணியளவில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள், தாங்கள் புனா்வாழ்வுப் பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள். புனா்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறும் கேட்டனர்.

ஈழப் போர் முடிந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும், முன்னாள் புலிப் போராளிகள் வேலை வாய்ப்பில்லாமல் வறுமையில் வாடுவது தொடர்கதையாக உள்ளது. போர் நடந்த காலத்தில், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கோடி கோடியாக பணம் வந்து குவிந்து கொண்டிருந்தது. அதனால் அந்தக் காலத்தில் அங்கவீனர்களான முன்னாள் போராளிகளையும் பராமரிக்கும் பொறிமுறை இருந்தது. அவர்களுக்கான இலகுவான வேலை வாய்ப்புகளும் வழங்கப் பட்டன.

ஐந்து வருடங்கள் போராளியாக கடமையாற்றியவர்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்கப் பட்டிருந்தது. முன்னாள் போராளிகளாக கருதப் பட்ட அவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் இருந்தன. இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவெனில், விடுதலைப் புலிகள் இயக்கமே மிகப் பெரிய வேலை வழங்குனராக இருந்தது. அவர்களால் நடத்தப் பட்ட பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு வகைப் பட்ட தொழில் வாய்ப்புகள் இருந்தன.

சிறிலங்கா அரசின் முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் வேலை வாய்ப்புகளையும், சம்பளத்தையும் சந்தையே தீர்மானித்தது. அதே மாதிரியான பொறிமுறை புலிகளின் "நடைமுறை தமிழீழ அரசில்" இருக்கவில்லை. எல்லாவற்றையும் புலிகள் இயக்கத் தலைமையே தீர்மானித்தது. எந்த நிறுவனம் நடத்த வேண்டும்? எத்தனை தொழில் வாய்ப்புகள்? யாருக்கு வேலை கொடுக்க வேண்டும்? சம்பளம் எவ்வளவு? இது எல்லாவற்றையும் அவர்களே தீர்மானித்தார்கள்.

போர் முடிந்த பின்னர், பல்லாயிரக் கணக்கான முன்னாள் போராளிகளை பராமரிப்பதற்கான பொறிமுறை இல்லாமல் போனது. அதாவது அவர்கள் இப்போது போராளிகள் அல்ல. ஆகையினால் அவர்களை வைத்து பராமரித்து வந்த முகாம் என்ற அமைப்பு தற்போது இல்லை. அப்படியானால் அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக வேலை செய்ய வேண்டும். ஆனால், இலங்கையின் முதலாளித்துவப் பொருளாதார கட்டமைப்பில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதில்லை. புதிய தொழில்களை உருவாக்குவதற்கான பொறிமுறைகளும் இல்லை. அதை சந்தை தான் தீர்மானிக்க வேண்டும். இதன் மூலம் அரசு தனது கடமையை தட்டிக் கழிக்கிறது.

சிறிலங்கா அரசு முன்னாள் போராளிகளை இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு முகாம்களில் வைத்திருந்து, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தது. அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளும், அவற்றின் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வந்தன. அவர்கள் வெளியே வந்த பின்னர் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. அவர்கள் போராளியாவதற்கு முன்பிருந்த அதே சமுதாய அமைப்பு இப்போதும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. பெரும்பாலான முன்னாள் போராளிகள் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு உதவும் அளவிற்கு பெற்றோரிடம், அல்லது உறவினரிடம் வசதி இருக்கவில்லை. அவர்களும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழைகள் தானே?

புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுக்கும் கடமை தனக்கு இருப்பதாக அரசு கருதுவதாக தெரியவில்லை. நீங்களாகவே வேலை தேடிக் கொள்ளுங்கள் என்று கைவிட்டு விட்டது. அதே நேரம், தமிழர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த நிதி ஒரேயடியாக நின்று விட்டது. உள்ளூர் தமிழ் முதலாளிகள், அல்லது தொழில் முனைவோர் யாரும், முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த விரும்பவில்லை.

உள்ளூர் தமிழ் முதலாளிகள் முன்னாள் போராளிகளை புறக்கணிப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. புலிகளின் ஆட்சிக் காலத்தில் போராளிகளுக்கு பெரும் மதிப்பு இருந்தது. சிலர் பொது மக்களின் மீது அதிகாரத்தை பிரயோகிப்பவர்களாக இருந்தனர். அப்போது பலரின் மனதில் ஏற்பட்ட வெறுப்பை வைத்து இப்போது பழிவாங்குகிறார்கள். இரண்டாவது காரணம், முன்னாள் போராளிகளுடன் தொடர்பு கொள்ள பலர் அஞ்சுகின்றனர். தேவையில்லாமல், புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்புக்கு ஆளாக வேண்டி வரும் என நினைக்கிறார்கள். அது மட்டுமல்ல, தற்போது முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதாகவும் சந்தேகப் படுகிறார்கள்.

இது போன்ற காரணங்களினால், ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் முன்னாள் போராளிகள் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் அவலம் தொடர்கின்றது. இந்த இடத்தில் ஒரு நியாயமான கேள்வி எழலாம். வேலையில்லாதவர்கள் எவ்வாறு இவ்வளவு காலமும் உயிர் வாழ முடிந்தது? சிலநேரம் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்திருக்கலாம். ஆனால், போர் முடிந்த பின்னர் அவற்றின் உதவிகள் வர வர குறைந்து கொண்டே செல்கின்றன. அப்படியானால் வேறென்ன வழி இருந்தது?

இலங்கை மாதிரியான வறிய நாடுகளில் வேலை இல்லாமல் ஒருவர் உயிர் வாழ முடியாது. அவர் இல்லாவிட்டால் யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் அவருக்காக வேலை செய்வார். பெரும்பாலும் இவை தற்காலிகமான வேலைகளாக இருப்பதால், வறுமையில் இருந்து மீள முடியாத நச்சுச் சுழல் ஒன்றிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

"தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை பெற வேண்டும்" என்று இருபத்திநான்கு மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் யாரும், முன்னாள் போராளிகளின் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. சக தமிழனின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்தனர். கிளிநொச்சியில் நடந்த முன்னாள் போராளிகளின் வேலை தேடும் போராட்டம் பற்றிய தகவல், சமூக வலைத் தளங்களில் பரவலாக பலரை சென்றடைந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த தமிழ்த் தேசியவாதிகள் கன்னாபின்னாவென்று உளறத் தொடங்கினார்கள். இருப்பினும், ஆய்வு மனப்பான்மை கொண்ட தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் நிலைத்தகவலில் கொடுத்த விளக்கம் மட்டும் பிரச்சினைக்கான தீர்வு பற்றியதாக இருந்தது. தீவிர வலதுசாரி தமிழ்த் தேசிய இயக்கமான தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளராக அறியப்படும் அந்த ஊடகவியலாளர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:

//7 வருடங்களுக்கு முன்னர் எந்த இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதே இராணுவத்திடம் மீள்வாழ்வுக்கு கையேந்தி நிற்க வேண்டிய நிலையை முன்னாள் போராளிகள் எதிர்நோக்கியிருக்கின்றனர். வெளிச்சூழலில் அவர்களுக்குப் பொருத்தமான வேலைகள் இல்லாமயே இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவிடம் வேலை கேட்டுச் செல்லக் காரணம் எனச் சொல்லியிருக்கின்றனர். அப்படியாயின் சிவில் பாதுகாப்பு படையினரிடமே முன்னாள் போராளிகளுக்குப் பொருத்தமான வேலைகள் உண்டு. சிவில் பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் வேலைகள் என்னவெனில், விவசாய பண்ணைகள் செய்தல், கல்லறுத்தல், கட்டுமானப்பணிகளில் ஈடுபடல், உயர்தரம் வரை கல்வி கற்றிருந்தால் முன்பள்ளி ஆசிரியர் இவைகளைத் தான் முன்னாள் போராளிகள் தங்களுக்குப் பொருத்தமான வேலைகள் என்கின்றனர். இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா? தாராளமாகவே உண்டு. வன்னியில் பாரம்பரியமான விவசாய கிராமங்களில் விவசாய நடவடிக்கைகளைப் பலரும் கைவிட்டிருக்கின்றனர். அதற்குப் பிரதான காரணம் கூலியாட்கள் இன்மையே. நாளொன்றுக்கு 1500 ரூபா சம்பளம் கொடுத்தும் கூலியாட்களைப் பெறமுடியாத சூழல் இருக்கின்றது. தொழிலாளிகள் இன்மையால் உப உணவுப் பயிர்ச்செய்கை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதையும் அவதானிக்கின்றேன்.// (- Jera Thambi; https://www.facebook.com/JERA.jeyarajh/posts/1219723188111232?pnref=story)

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்களப் பேரினவாத அரசின் தமிழர் விரோதப் போக்கை அம்பலப் படுத்த தயங்காத கடும்போக்கு ஊடகவியலாளர், இந்த விடயத்தில் மட்டும் அரசைக் கண்டிக்காமல் மென்போக்குடன் நடந்து கொள்வது ஆச்சரியத்திற்குரியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேலை கொடுக்காத அரசை திட்டித் தீர்ப்பார் என்று எதிர்பார்த்தால், நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

"ஏய், சிங்கள அரசே! முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடு!" என்று சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அறச்சீற்றம் கொள்ள வேண்டிய கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள், மென்போக்காக அடக்கி வாசிக்கிறார்கள். "எழுக தமிழ்" என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்த் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தி வட மாகாணத்தை ஸ்தம்பிதமடைய வைத்திருக்கலாம். அவ்வாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், முன்னாள் போராளிகளை தனியார் துறையில் வேலை தேடுமாறு அறிவுறுத்துவதன் மூலம் ஒரு ஒடுக்குமுறை அரசை பாதுகாக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா?

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவு அரச இயந்திரத்தின் ஓர் அங்கம் என்பது அவர் அறியாதது அல்ல. முன்னாள் போராளிகள் இராணுவத்தில் போர்வீரர்களாக சேர்வதற்காக அங்கே வேலை கேட்டுச் செல்லவில்லை. அதை மேற்படி ஊடகவியலாளர் உறுதிப் படுத்துகின்றார். ஆனால், "எதற்காக அரசிடம் வேலை கேட்டு கையேந்துகிறீர்கள்?" என்பது தான் அவரது "ஆதங்கம்"! அதனால் தான் "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" என்று கேட்கிறார்.

சிங்கள அரசு நிறுவனத்தில் உத்தியோகம் பார்க்கும் பல தமிழ்த் தேசியவாதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளர்களாக உள்ளனர். அதற்கு ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும். தமிழ்த் தேசிய ஆர்வலர் ஒருவர், பாடசாலை ஆசிரியராக இருந்தாலும், வட மாகாணத்தின் கீழான நிறுவனம் ஒன்றில் வேலை செய்தாலும், அவர் அரசுக்குவேலை செய்கிறார். அதாவது சிங்கள அரசிடம் கைநீட்டி சம்பளம் வாங்குகிறார். பல்கலைக்கழக பட்டதாரிகளான இவர்களுக்கு, "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" சிங்கள அரசுக்கு கீழே அடிமையாக வேலை செய்வதை விட, ஒரு தமிழ் முதலாளியின் கீழ்  வேலை செய்வதை பெருமையாகக் கருதவில்லையா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் அரசுக்கு வரி கட்டுகிறார்கள். நேரடியான வரிகள், மறைமுகமான வரிகள் என்று பலவுண்டு. அரசு மக்களிடம் இருந்து அறவிடும் வரிப் பணத்தை என்ன செய்கிறது? அதை மீண்டும் மக்களுக்கே செலவிட வேண்டாமா? ஆசிரியராக அரசு உத்தியோகம் பார்க்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எங்கிருந்து சம்பளம் வருகின்றது? மக்களிடம் இருந்து எடுக்கும் வரிப்பணம் தானே சம்பளமாக மாறுகின்றது?

பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்கலாம் என்றால், பத்தாம் வகுப்பை முடிக்காத முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுப்பது எப்படி தவறாகும்? அரசிடம் வேலை கேட்டு போராடுவது எப்படித் தவறாகும்? தனது பிரஜைக்கு வேலை கொடுப்பது அரசின் கடமைகளில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக, அதன் சாத்தியப்பாடுகள் குறைவு என்பதால், தனிநபருக்கு வேலை கொடுக்காததற்காக அரசின் மீது வழக்குப் போட முடியாது. ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

ஒரு தொழிலை பெற்றுக் கொள்வதும், வறுமையில் இருந்து மீளுவதும் மனித உரிமைகள் இல்லையா? குறிப்பாக, அவை தமிழர்களின் உரிமைகள் இல்லையா? அதையெல்லாம் புறக்கணித்து விட்ட, எந்த உரிமைகளுக்காக போராடுகின்றீர்கள்? மனிதன் வாழ்வதற்கான உரிமை தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது.

வாழ்வாதாரத்திற்காக தான் முன்னாள் போராளிகள் போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு வேலை கொடு என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமா? அரசு இறங்கி வரவில்லை என்றால், "எழுக தமிழ்" கோஷத்துடன் வேலை நிறுத்தம் ஒன்றை அறிவியுங்கள். சிங்களப் பேரினவாத அரசை பணிய வைக்கக் கூடிய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது ஏன்?

Saturday, March 19, 2016

"தமிழ்நாட்டை ஹிட்லர் ஆள வேண்டும்!" - நாம் நாஜித் தமிழர் கட்சி

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - நான்கு] 

தெருவில் போகும் நாயைப் பார்த்துத் தான் இன்னொரு நாய் குரைக்கும். அதே நாய் மனிதர்களைக் கண்டு விட்டு பேசாமல் போகும். வெள்ளையின எஜமானர்களை பக்திப் பரவசத்துடன் வழிபடும் "நாம் போக்கிரித் தமிழர்" கட்சி ஆதரவாளர்கள், தம்மைப் போன்ற சகோதர இனமான கருப்பர்களிடம்  தான் வீரத்தைக் காட்டுகிறார்கள். 

"இதோ பாருங்கள்! வெள்ளையர்கள் தமிழ்ப் பாடல் பாடுகின்றார்கள்!" என்று ஒரு வீடியோவை இனையத்தில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்கள். (https://www.youtube.com/watch?v=sNHlOW5t5JI) "என்ன அதிசயம்! ஒரு ஜெர்மன் பெண் சரளமாகத் தமிழ் பேசுகின்றாள்...பாருங்கள்!" என்று இன்னொரு வீடியோவை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். (https://www.youtube.com/watch?v=UXbtqSB2MqE)

ஆனால்... ஆனால்... அதே தமிழ் இன உணர்வாளர்கள்(?), தமிழக தொலைக்காட்சியில் நடக்கும் சுப்பர் சிங்கர் போட்டியில், மலையாளிகளும், தெலுங்கர்களும் தமிழ்ப் பாடல் பாடி பரிசு பெற்றுக் கொண்டு செல்கிறார்கள்!" என்று அறச்(?) சீற்றம் கொள்கின்றனர்.

வெள்ளையன் தமிழ்ப் பாடல் பாடினால், "தமிழன்டா" என்று சொல்லிச் சொல்லி பெருமைப் படுகிறார்கள். ஆனால், ஒரு கன்னடன், தெலுங்கன், மலையாளி தமிழ்ப் பாடல் பாடினால் மட்டும் அது தமிழர்க்கு சிறுமையோ? இன்னொரு இனத்தவன் எமது தமிழ் மொழியை சரளமாகப் பேசி, பாடலும் பாடினால், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டுமல்லவா? இந்த இடத்தில் தான், நாயைப் பார்த்து குரைக்கும் நாய்களுடன், நாம் போக்கிரித் தமிழர்களை ஒப்பிட வேண்டியுள்ளது.

கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளை பேசும் மக்களும், தமிழர்களைப் போன்று கருப்பர்கள் தானே? அதனால் தான், வெள்ளையின எஜமான்கள் தமிழ்ப்பாட்டு பாடினால் பெருமைப் படுபவர்கள், கருப்பின சகோதரர்கள் தமிழ்ப் பாட்டு பாடினால் சிறுமைப் படுகிறார்கள்.

சீமானும் அவரது தம்பிகளும், 'தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருவதால், "யார் தமிழன்?" என்ற கேள்வி எழுகின்றது. தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்கள் தானே என்று யாராவது அப்பாவித்தனமாக கேட்டால் தொலைந்தீர்கள்? கன்னட ஜெயலலிதா, தெலுங்கு கருணாநிதி, மலையாள எம்ஜிஆர் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டார்கள் என்று வகுப்பெடுக்க வந்து விடுவார்கள். அப்படியா? சீமான் கூட ஒரு மலையாளி என்று சொல்கிறார்களே?

இன்றைய காலத்தில் யார் அசல் தமிழன்? ஒவ்வொருவருக்கும் மரபணு சோதனை செய்து பார்த்து சான்றிதழ் கொடுப்பார்களா? இது முப்பதுகளில் ஜெர்மனியில் ஹிட்லர் செய்த "தூய ஆரிய இன சோதனைகளை" நினைவுபடுத்துகின்றது.

முப்பதுகளில், ஹிட்லரும் சீமான் மாதிரித் தான் பேசி வந்தான். "வந்தேறுகுடிகளான யூதர்கள், இத்தாலியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போலிஷ்காரர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றுக் கொள்வதுடன், தூய ஜெர்மன் ஆரியர்களை ஆள்கிறார்கள் ... ஜெர்மனியை ஒரு ஆரியன் (தூய ஜெர்மனியன்) ஆள வேண்டும்..." என்று கூறினான். ஹிட்லர் எழுதிய மெய்ன் கம்ப் நூலில் நீங்கள் அதை வாசிக்கலாம்.

சீமான் போன்ற அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் வரலாறு தெரியாமல் உளறுவது மாத்திரம் அல்லாமல், தாம் நினைப்பதை வரலாறாக காட்ட முனைகின்றனர். ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், மொழி வேறுபாடு பெரிதாக கருதப் படவில்லை.

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதோ ஒரு காரணத்திற்காக குடியேறி வாழ நேர்ந்தவர்கள் அந்தந்த பிரதேச மொழியை தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். வட இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மொகலாயர்களுக்கு எதிராக, கர்நாடகாவில் விஜய நகரம் என்ற இந்து சாம்ராஜ்யம் உருவானது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு விஜயநகர அரசாட்சிக்கு உட்பட்டிருந்தது.

தெலுங்கும், கன்னடமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோன்றும் நெருங்கிய மொழிகள். விஜய நகர ஆட்சிக் காலத்தில் தான் இரண்டாகப் பிரிந்தது. தமிழ்நாடு முழுவதும் விஜய நகர அரசின் நிர்வாகப் பொறுப்புக்களில் அமர்த்தப் பட்டவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் தான். 19 ம் நூற்றாண்டளவில் அவர்கள் தமிழர்களாக காட்டிக் கொண்டாலும், நிலவுடைமையாளர்களாக தொடர்ந்தும் இருந்தனர்.

இலங்கையில் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கன் தெலுங்கு பூர்வீகத்தை கொண்டவன். ஆனால், அவனது குடும்பத்தினர் தமிழ் பேசினார்கள். பௌத்த மதத்தை பின்பற்றினார்கள். அன்றைய காலத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இனக் கலப்புக்குக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே.

சீமான் கோஷ்டியினர் இது போன்ற வரலாறுகளை ஆதாரமாக காட்டி, இன்றைக்கும் தமிழ்நாட்டை தெலுங்கர்கள் தான் ஆள்கிறார்கள் என்று வாதிடுவது சிறுபிள்ளைத் தனமானது. நாங்கள் இப்போது 18 ம் நூற்றாண்டில் வாழவில்லை. இது 21 ம் நூற்றாண்டு. இடையில் வந்த நூறாண்டு கால ஆங்கிலேய காலனிய ஆட்சி, தமிழ்நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் உண்டாக்கவில்லையா?

19 ம் நூற்றாண்டின் இறுதியில் கூட, தென்னிந்தியாவில் மொழி வேறுபாடு எழவில்லை. அதற்குக் காரணம், இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால், நிர்வாகப் பொறுப்புகளில் பிராமணர்கள் இருந்தார்கள்.

ஆங்கிலேய பிரபு மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழி பொதுக் கல்வியை சரியாக பயனபடுத்தி முன்னேறியவர்கள் பிராமணர்கள் என்றால் மிகையாகாது. அதே நேரம், பிராமணர் அல்லாத பிற சாதியினர் மத்தியில் இருந்தும் படித்தவர்கள் உருவானார்கள். அவர்கள் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாக்கிய அமைப்பு தான் திராவிடர் இயக்கம்.

ஆரம்ப கால திராவிடர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் தமிழர்,தெலுங்கர், மலையாளிகள் போன்ற மூவினத்து அறிவுஜீவிகளின் பங்களிப்பு இருந்துள்ளது. "பிற மாநிலத்தவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள்..." என்று கொந்தளிப்பவர்கள் அந்தக் காலத்து நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். காலங் காலமாக பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்கலாம் என்றிருந்த நிலைமையை, மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழிக் கல்வி மாற்றி அமைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில், அனைவரும் சாதி, மொழி வேறுபாடின்றி கல்வி கற்க முடிந்தது. அதனால், கற்றவர்கள் எல்லோரும் ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்திருந்தார்கள். உண்மையில், அவர்களது சொந்த மொழியை விட ஆங்கில மொழி அறிவு அதிகமாக இருந்தது.

இலங்கையிலும் அது தான் நிலைமை. சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் ஆங்கிலம் மட்டுமே பேசி வந்த படியால், அவர்களுக்கு இடையில் திருமண பந்தங்களும் ஏற்பட்டிருந்தன. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், மொழி அடிப்படையிலான இனப்பிரச்சினை பிற்காலத்தில் தான் தோன்றியது.

தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்தில் தான் சனத்தொகை அடர்த்தி அதிகம். "இங்கே தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று சென்னை வாசிகளை கேட்டால் சொல்வார்கள். அதற்கு காரணம் "ஆக்கிரமிப்பாளர்களான பிற மாநில வந்தேறுகுடிகள்" என்று சீமான் பாணியில் பதில் சொல்லித் தப்ப முடியாது.

வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் அது தவறாகும். உலகில் பல நாடுகளின் தலைநகரங்களில் பூர்வீக மக்களின் சனத்தொகை குறைந்து வருகின்றது. நாகரிக வளர்ச்சி காரணமாக ஏற்படும் நகரமயமாக்கலின் தவிர்க்க முடியாது விளைவு அது.

லண்டன் மாநகரில் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை குறைந்து, வெளிநாட்டு குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையானோர் காலனிய காலத்தில் சென்று குடியேறினார்கள். அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கென்யா, ஜமைக்கா எல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன.

ஆகவே, சென்னையில் பூர்வீக தமிழர்களை விட, வந்தேறுகுடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி என்ற கேள்விக்கான பதிலை காலனிய காலத்தில் தான் தேட வேண்டும். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் சென்னை என்ற நகரமே இருக்கவில்லை. அது ஒரு சாதாரணமான மீன்பிடிக் கிராமமாக இருந்தது.

பிற்காலத்தில் தென்னிந்தியாவில் நிரந்தரமாக கால் பதித்த ஆங்கிலேயர்கள் அதைத் தமது இந்திய காலனியின் தலைநகரம் ஆக்கிக் கொண்டனர். (தெற்கில் சென்னை, வடக்கில் கல்கத்தா) சென்னையில் தளம் அமைத்திருந்து தான் தென்னிந்தியாவின் பிற பகுதிகளை கைப்பற்றினார்கள்.

ஆங்கிலேய காலனிய கால இந்தியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, மெட்ராஸ் (சென்னை) மாகாணம் என்ற நிர்வாகப் பிரிவு இருந்தது. அது இன்றைய தமிழ்நாடு மாநிலத்தையும், ஆந்திரா மாநிலத்தையும் உள்ளடக்கி இருந்தது. கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளும் அதற்குள் அடங்கின. அந்த மாகாணத்தின் தலைநகரம் மெட்ராஸ்/ சென்னை.

ஆகையினால், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்கள் சென்னையில் சென்று குடியேறியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மேலும் அது ஆந்திராவை அண்மித்த பகுதி என்பதால், தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இப்போதும் தமிழ் நாட்டின் வடக்குப் பகுதி மாவட்டத்தில் நிறைய தெலுங்கு பேசும் கிராமங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் மீன்பிடிக் கிராமமாக இருந்த மெட்ராஸ் பட்டணத்தை, இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாக மாற்றியதற்கு தமிழர்கள் மட்டும் உரிமை கோர முடியாது. ஆங்கிலேய காலனிகளில் இருந்து அங்கு வந்து குடியேறிய, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் அனைத்து உழைக்கும் மக்களும் பெருமைப் பட வேண்டிய விடயம்.

மெட்ராஸ் தமிழர்களின் பிரதேசத்தில் அமைந்திருந்த படியால், அங்கு குடியேறிய பிறமொழிக் காரர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழை பேசி வந்தனர். பிறகாலத்தில் அவர்கள் தமிழராக மாறி விட்டனர். இதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும். ஆனால், நாம் போலித் தமிழர் கட்சியினருக்கு மட்டும் இது கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை கொடுப்பதற்கு முன் நிபந்தனையாக, அந்நாட்டு மொழியை எழுதப் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அங்கெல்லாம் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் அரசியலிலும் பிரகாசிக்கின்றனர்.

நோர்வீஜிய குடியுரிமை பெற்ற, அந்நிய வந்தேறுகுடி தமிழ்ப் பெண் ஒருவர், துணை மேயராக தெரிவு செய்யப் பட்டதை, நாம் தமிழர் பேர்வழிகள் பெருமையுடன் கொண்டாடினார்கள். அதே நேரம், தமிழர்களைப் போன்று சம காலத்தில் இந்திய குடியுரிமை பெற்ற தெலுங்கர்களும், மலையாளிகளும், அரசியல் தலைமைக்கு வந்தால் வெறுக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்திற்குப் பெயர் தமிழ் தேசியமாம்!

தகுதி, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம். அதைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? ஒருவர் பிறப்பால் எந்த இனம் என்று பார்த்து, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இனவாதம் ஆகாதா? இவர்கள் குறிப்பிடும் அரசியல் தலைவர்கள் தம்மை தமிழர்கள் என்று தான் காட்டிக் கொள்கிறார்கள். சரளமாக தமிழ் பேசுகிறார்கள். பொதுவாக தமிழர்கள் வைத்திருக்கும் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள். அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இதிலே இன்னொரு வேடிக்கையும் நடக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அந்தந்த மொழிக் காரர்கள் ஆட்சி செய்வதாக ஒரு பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள். அதில் உள்ள முதல் அமைச்சர்களின் பெயர்கள், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் அமைந்துள்ளன. அதை மட்டும் வைத்துக் கொண்டு, அதாவது பெயர்களை மட்டும் வைத்து, அவர்கள் அந்தந்த இனத்தவர்கள் என்று தீர்மானிக்க முடியுமா?

வந்தேறுகுடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சீமான் ஒரு பூர்வீகத் தமிழன் என்பதற்கான ஆதாரம் என்ன? சைமன், செபஸ்டியான் போன்ற பெயர்கள், மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புழங்கும் பெயர்கள் ஆகும். சர்மா, ஐயர் போன்ற பெயர்களைக் கொண்டு பிராமணர்கள் அடையாளம் காணப் படுவதைப் போன்று, கேரளாவில் கிறிஸ்தவர்கள் தமது அடையாளமாக குடும்பப் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் செபஸ்டியான் என்ற குடும்பப் பெயர் கேரள கிறிஸ்தவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது.

இலங்கையை ஆண்ட சிங்களப் பேரினவாத பிரதமர்களான பண்டாரநாயக்க, ஜெயவர்த்தனே போன்றோருக்கும் சீமானுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் எல்லோரும் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தாலும், பெரும்பான்மை இனத்தின் மத அடையாளங்களை வலிந்து சூட்டிக் கொண்டவர்கள். தமது பூர்வீகத்தை மறைப்பதற்காக தீவிரமான இனவாதிகளாக காட்டிக் கொண்டவர்கள்.

பிறக்கும் போது பெற்றோர் வைத்த கிறிஸ்தவப் பெயர்களை வாழ்நாள் முழுவதும் மறைத்து வந்தனர். எதற்காக, நாய் வேஷம் போட்டால் குரைக்கத் தானே வேண்டும்? தேர்தல் வெற்றிகளுக்காக இனவாத அரசியல் பேசினால், சொந்த இனத்தையும் மறைக்க வேண்டி இருக்கும்.

உலகம் முழுவதும், இனவாதத் தலைவர்கள் மத்தியில் ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கிறது. ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது. பண்டாரநாயக்கவும், ஜெயவர்த்தனேயும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள். ஆனால், மூன்றாவது தலைமுறையாக இலங்கையில் வாழ்வதால், சிங்களவர்களாக மாறி விட்டனர்.

தமது சொந்த இன அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் பலர் இனவாதம் பேசுகின்றார்கள். தமிழகத்தின் வந்தேறுகுடி சீமானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. திருடனே, “திருடன் ஓடுறான்… பிடி… பிடி…” என்று கத்திக் கொண்டே ஓடுவானாம். அது போன்றது தான் சீமானின் வந்தேறுகுடி கோஷமும்.


பெரும்பாலான ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு, சீமான் இன்னொரு பந்தயக் குதிரை. கருணாநிதி, வைகோ வரிசையில் தற்போது சீமான், இந்தியாவில் தமது அரசியல் வர்க்க நலன்களை பிரதிதித்துவப் படுத்துகிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சீமான் என்ற பந்தயக் குதிரை செய்யும் குரங்குச் சேஷ்டைகள் காரணமாக, பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றார். சீமான் மீது பந்தயப் பணம் கட்டியவர்களுக்கு, இந்தக் குதிரையும் தோற்றுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனால், "ஈழத் தமிழர்களின் கடமைகள் என்ன? அவர்கள் எதைப் பற்றி பேச வேண்டும்? எதைப் பற்றி பேசக் கூடாது?" என்று அதிகாரத் தொனியில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, "சீமான் சரிப் பட்டு வர மாட்டான்.... இப்போதைக்கு மக்களின் கவனத்தை வேறு திசைக்கு திருப்ப வேண்டும்..." என்பது அந்த "அறிவு"ஜீவிகளின் எண்ணம்.

ஒரு காலத்தில், ஜெர்மனியில் ஹிட்லர் சொன்னதைக் கேட்டும் எல்லோரும் சிரித்தார்கள். பல ஜெர்மனியர்கள் அவரை ஒரு கோமாளியாக சித்தரித்து, கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். ஆகவே, இது போன்ற கோமாளிகளிடம் தான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் சீமானின் நாம் தமிழர் இந்தத் தேர்தலில் அதிகளவு ஓட்டுக்களைப் பெறப் போவதில்லை. அந்த நிலைமை ஒரு காலத்தில் ஹிட்லரின் நாஸிக் கட்சிக்கும் இருந்தது. ஆனால், ஹிட்லர்களும், சீமான்களும், வருங்காலத்தில் பெரும் முதலாளிகளால் பயன்படுத்தப் படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீவிரமடையும் நேரத்தில், வட இந்திய பார்ப்பனிய பேரினவாதக் கைக்கூலியாக, தமிழ்நாட்டில் சீமான் செயற்படலாம். அந்த நேரத்தில், சீமான் ஈழத்தமிழ் தேசியவாதிகளின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பார். இது ஈழத் தமிழரின் பந்தயக் குதிரை அல்ல, பார்ப்பனியர்களின் வேட்டை நாய் என்பது அப்போது தெரியும். 

(முற்றும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்
3. பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

Sunday, March 13, 2016

பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - மூன்று] 


போலித் தமிழ் தேசியவாதிகள்: பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதற்காக, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றி இரட்டைவேடம் போடுவோர். இவர்களது செயற்பாடுகளும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

சீமான் மற்றும் நாம் தமிழரின் அரசியல் அபிலாஷைகள், இந்துத்துவா - பார்ப்பனீய பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதாக அமைந்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. மும்பை சென்று, இந்து- பாசிஸ சிவசேனா இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார். தமிழகத்தில் பார்ப்பனர்கள் ஆதரித்த ஜெயலலிதாவை அவரும் ஆதரித்தார்.  இலங்கையில் ஒரு தமிழ்க் கட்சியின் தலைவர் இப்படிப் நடந்து கொண்டால், அவருக்கு எப்போதோ துரோகிப் பட்டம் சூட்டி இருப்பார்கள்.

சீமான் இந்துத்துவா வாதிகளின் மதவெறிக் கொள்கையை ஏற்று, "இஸ்லாமியர்கள் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்" என்று சொன்னார். "தமிழ் பேசும் பார்ப்பனர்கள் அனைவரும் தமிழர்களே" என்று கூறி, வட இந்திய வந்தேறுகுடி பார்ப்பனர்களை தமிழர்களாக அங்கீகரித்தார். சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், இந்துத்துவா பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்?  (பார்க்க: சீமானின் பார்ப்பன பாசம்! https://www.facebook.com/tamizachi.Author/videos/926925790739311/ )

"தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும். தெலுங்கு நாட்டை தெலுங்கன் ஆள வேண்டும். கேரளாவை மலையாளி ஆள வேண்டும். கர்நாடகாவை கன்னடன் ஆள வேண்டும்." இதுவே தமது கொள்கை என்று சொல்லிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டிற்குள் வாழும் தெலுங்கு, மலையாள, கன்னட சிறுபான்மையின மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, அவர்களை வந்தேறுகுடிகள் என்று தூற்றவும் செய்கின்றனர்.

சீமானின் வந்தேறுகுடி கொள்கைக்கு முரணான விடயமாக, மலேசியாவின் வந்தேறுகுடி சீனர்கள் சிங்கப்பூர் தீவை பிரித்து எடுத்தார்கள். அதற்கு காரணமாக இருந்த லீகுவான் யூ மரணமடைந்த நேரம், சீமான் அஞ்சலி செலுத்தினார். இந்த இரட்டை வேடத்தை சுட்டிக் காட்டினால், நாம் தமிழர் விசுவாசிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ உளறிக் கொட்டுகிறார்கள்.

சிங்கப்பூரின் வரலாறு எதுவாக இருந்தாலும், சீமானின் கொள்கையின் அடிபப்டையில்,  சீனர்கள் மலேசியாவின் வந்தேறுகுடிகள் தான். மலேசியா மட்டுமல்லாது, மியான்மர் முதல் இந்தோனேசியா வரை வாழும் சீனர்கள், உள்ளூர் மக்களால் வந்தேறுகுடிகளாக கருதப் படுகின்றனர். பல நாடுகளில் நடந்த இனக் கலவரங்களால் சீனர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர்.

சீன வந்தேறுகுடி லீகுவான்யூவை ஆதரிப்பதற்கு நாம் போலித் தமிழர் சொல்லும் காரணங்கள் இவை தாம். ஒன்று, அவர் தமிழை ஆட்சி மொழியாக்கினார். நாம் போலித் தமிழர் பன்னாடைகளின் மனத்தைக் குளிர வைக்கும் வகையில், ராஜபக்சே சிங்களவர்களும் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அதற்காக நாம் போலித் தமிழர்கள் ராஜபக்சேவை கொண்டாடுவார்களா? (அதற்கு முன்னரே சிங்கப்பூர் மாதிரி சிறிலங்காவிலும் தமிழ் ஆட்சிமொழியாகி விட்டது.)

லீகுவான்யூ ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார். அதனால், அவர் நல்லவர் என்று நாம் போலித் தமிழர் கட்சியினர் சொல்லித் திரிகின்றனர். சொந்த நாட்டு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சி நடத்திய லீகுவான்யூ, தமிழர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் நல்லவராகி விட்டாராம். சிங்கப்பூரில் மலே தேசியவாதிகளையும், சீனக் கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து வருத்திய லீகுவான்யூ, நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராம்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய லீகுவான் யூ, அயலில் இருக்கும் அச்சே மக்களுக்கு ஆதரவாக பேசாத காரணம் என்ன? இந்தோனேசியாவின் அச்சே மாநிலம், சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கிறது. மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட அச்சே மக்கள், நீண்ட காலமாக தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அச்சே மாநிலத்தில், இந்தோனேசிய படையினர் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து, லீகுவான்யூ ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? 

ஒரு ஆட்சியாளர் நல்லவரா கெட்டவரா என்பதற்கு இவர் வைத்திருக்கும் அளவுகோல் "தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது" என்பது தான். ஒருவேளை ராஜபக்சே தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலும், இவர்கள் ராஜபக்சே நல்லவர் என்று சொல்லித் திரிவார்கள். ஏன் ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசவில்லையா? அதனால் சிறிலங்காவின் சர்வாதிகாரி நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராகி விட்டாரா?

ஈழப்போர் நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும்,சிங்கப்பூரில் லீகுவான்யூ புலிகளை தடை செய்திருந்தார். புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்களை, அல்லது ஆதரவாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தார். இந்தோனேசியாவில் இருந்து புலிகளுக்கு சென்று கொண்டிருந்த ஆயுதக்கப்பலை காட்டிக் கொடுத்தார். 

சிங்கப்பூரில் சில ஆர்வலர்கள், வன்னியில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்க கூட்டம் கூடினார்கள். அது தடைசெய்யப் பட்டது. அதை ஒழுங்கு படுத்திய சிங்கை வாசிகளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தார்கள். இவ்வளவும் செய்த லீகுவான்யூ, எல்லாம் முடிந்த பின்னர் தமிழர்களுக்கு ஆதரவானவராக நீலிக் கண்ணீர் வடித்தார். அதைக் கண்டு போலித் தமிழ் தேசியவாதிகள் பொருமுகிறார்கள்.

ஈழப்போர் முடிந்து ஐந்தாறு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இனி அதைப் பற்றி பேசி அரசியல் நடத்த முடியாது என்ற நிலைக்கு சீமானும், நாம் தமிழரும் வந்து விட்டனர். சிறிது காலம் "முப்பாட்டன் முருகன்" என்று கூறி, இந்துத்துவா அடிப்படைவாதிகளை குஷிப் படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள்.

நூறாண்டு காலமாக திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பிராமணர்களின் மனத்தைக் குளிர வைத்தார்கள். சோழர்கள் காலத்தில், வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சமஸ்கிருத பிராமணர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று பிரித்துப் பேச ஆரம்பித்தார்கள்.

சீமானும், நாம் போலித் தமிழரும், "தமிழ்நாட்டை பிற மாநில வந்தேறுகுடிகள் நாசமாக்கி விட்டதாகவும், தமிழன் ஆண்டால் எல்லாம் சரிவரும்" என்றும் கொக்கரித்துக் கொண்டு திரிகின்றார்கள். தெலுங்கு, கன்னட, மலையாள பூர்வீகத்தை கொண்ட தமிழர்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள். அதே நேரம், மராட்டிய பூர்வீகத்தை கொண்ட மார்வாடிகள், சம்ஸ்கிருத பூர்வீகத்தை கொண்ட பிராமணர்கள் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தை "உண்மையான தமிழ் இன உணர்வு" என்று பிதற்றித் திரிகின்றனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

Saturday, March 12, 2016

நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - இரண்டு] 



சீமான் தமிழ் தேசியம் பேசுவதாக பலர் பிழையாக நினைத்துக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழ் தேசியவாதிகளும் சீமான் வைத்த பொறிக்குள் வசமாக மாட்டிக் கொண்டு, மீள வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். உண்மையில் சீமான் பேசுவது, "தமிழ் நாட்டுக்கேற்றவாறு மாற்றியமைக்கப் பட்ட சிங்கள பேரினவாதக் கருத்தியல்" ஆகும். இதனை நாம் தமிழர் கட்சி ஆர்வலர்களுடனான உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்னர் இருந்தே சிங்கள தேசியவாதம் என்ற போர்வைக்குப் பின்னால் அபாயகரமான சிங்களப் பேரினவாதம் வளர்ந்து வந்தது. ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவும், இலங்கையும் ஒரே நாடாக இருந்தது. அதனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிக் கொண்டிருந்தார்கள்.

பொருளாதார வளர்ச்சி காரணமாக, தமிழ் நாட்டில் சென்னை மாநகரம் மாதிரி, இலங்கையில் கொழும்பு மாநகரம், பல்லினக் குடியேறிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. கொழும்பு துறைமுகத்திலும், நகர சுத்திகரிப்பு பணிகளிலும் பெரும்பாலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், சிங்கள இனவாதிகளின் ஆரம்ப கால அரசியல் பிரச்சாரங்களும் "வந்தேறுகுடிகளுக்கு" எதிராக அமைந்திருந்ததில் வியப்பில்லை.

இன்று சீமானும், நாம் தமிழரும் பேசுவது போலத் தான், அன்று சிங்கள இனவாதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். "தெலுங்கு, தமிழ், மலையாள வந்தேறுகுடிகள் தான் இலங்கையை ஆள்கிறார்கள். சிங்கள நாட்டை சிங்களவன் ஆள வேண்டும்." என்று நாம் தமிழர் பாணியில், நாம் சிங்களவர் கோஷம் போட்டனர். உண்மையில், அன்றைய ஆங்கிலேய நிர்வாகத்தில் பெருமளவு தமிழர்கள் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்கள், சிங்களப் பிரதேசங்களில் கூட அரசாங்க ஊழியர்களாக வேலை பார்த்தனர்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் கொண்டால், அன்றைய இலங்கையில் தமிழரின் விகிதாசாரம் சனத்தொகையில் 40% இருந்திருக்கும். தமிழ் தேசிய தலைவர்கள் மத்தியில், தமிழர்கள் சிறுபான்மை இனம் என்ற உணர்வு இருக்கவில்லை. பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில், ஜி.ஜி. பொன்னம்பலம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக "ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை" வைத்ததும் அதனால் தான். 

இலங்கையில் தமிழரின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில், சிங்கள இனவாதிகள் தந்திரமாக மலையக தோட்டத் தொழிலார்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். சாதி வேற்றுமை காரணமாக, யாழ் வேளாள மேட்டுக்குடியினரும் அதற்கு ஒத்துழைத்தனர். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், இலங்கையில் இன உணர்வை விட, சாதிய உணர்வு முக்கியமாகக் கருதப் பட்டது. 1911 ம் ஆண்டு, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கீழ் படித்த இலங்கையருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒரு தமிழரான சேர் பொன் இராமநாதனும், ஒரு சிங்களவரான சேர் மார்குஸ் பெர்னாண்டோவும் ஒரே தொகுதியில் போட்டியிட்டனர். பெரும்பான்மை சிங்கள வாக்காளர்கள், இராமநாதனுக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வைத்தார்கள். என்ன காரணம்? மார்குஸ் பெர்னாண்டோ பிற்படுத்தப் பட்ட கரவா (தமிழில்: கரையார்) சாதியை சேர்ந்தவர். இராமநாதன் உயர்த்தப் பட்ட வெள்ளாள (சிங்களத்தில்: கொவிகம) சாதியை சேர்ந்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சிங்கள இனவாதிகளுக்கும் "யார் சிங்களவர்கள்? யார் தமிழர்கள்?" என்று தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இன்று சீமானுக்கும், நாம் (போலித்) தமிழருக்கும் ஏற்பட்டிருக்கும் அதே குழப்பம் தான். ஏனென்றால், ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவில் இருந்து வந்த பல்லினக் குடியேறிகள், இலங்கையில் வாழ்ந்த சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆயிரக் கணக்கான தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், வடக்கே பருத்தித்துறை முதல், தெற்கே அம்பாந்தோட்டை வரை குடியேறி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் பேசப்பட்ட மொழி எதுவாகினும், அதை தமது தாய் மொழியாக்கிக் கொண்டனர். குறிப்பாக உயர் சாதியினர் இனக்கலப்பு செய்வதற்கு, சிங்களவர்களோ, தமிழர்களோ எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

ஏராளமான தென்னிந்திய செட்டியார்கள், முதலியார்கள், இரண்டு இனங்களிலும் சரி வரக் கலந்துள்ளனர். அதே மாதிரி, மலையாளிகளும் இன்று சிங்களவர்களாக, அல்லது தமிழர்களாக தம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். எழுபதுகள் வரையில், யாழ்ப்பாணத்தின் வந்தேறுகுடிகளான மலையாள வர்த்தகர்கள், யாழ் குடாநாட்டில் இருந்து கேரளாவுக்கு புகையிலை ஏற்றுமதி செய்து வந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பமும் கேரளாவில் இருந்து வந்து குடியேறிய மலையாள வம்சாவளியினர் தான்.

ஏராளமான தமிழ் பேசும் செட்டியார்களும், முதலியார்களும், சிங்கள இனத்திற்குள் கலந்து விட்ட நிலையில், "யார் சிங்களவர் அல்லாதவர்" என்று வரையறுக்க வேண்டிய தேவை, சிங்கள இனவாதிகளுக்கு ஏற்பட்டது. தமிழ் பேசிய உயர்சாதியினரை சிங்கள சமூகத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட சிங்கள இனவாதிகள், தமிழ் பேசிய தாழ்ந்த சாதியினரை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தனர்.  

கொழும்பு மாநகரில் வாழ்ந்த தீண்டாமை சாதியினரான பறையர்களும், சக்கிலியர்களும் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசி வந்தனர். இவர்களில் கணிசமான தொகையினர் தெலுங்கர்களாக இருந்த போதிலும் தமிழ் பேசினார்கள். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பதால், சிங்களப் பெரும்பான்மை இனம் அவர்களை தம்முடன் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தது.

உண்மையிலேயே சிங்களவர்கள் மத்தியில் பறையர் சாதி இருக்கிறது. சிங்களத்தில் அதை பெறவா என்று சொல்வார்கள். சிங்கள மொழியில் "பெற" என்பது பறை மேளத்தைத் குறிக்கும்.  சிங்கள பெறவா சாதியினரில் பெரும்பான்மையானோர் முன்னொருகாலத்தில் தமிழராக இருந்திருக்கலாம். குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி வந்த பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச ஒரு தமிழர். தமிழ்நாட்டில் இருந்து வந்தேறிய தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ! 

சிங்கள இனவாதிகளின் கூச்சலான "பறத் தெமளோ", "சக்கிலித் தெமளோ" என்பன மேற்குறிப்பிட்ட சாதிய மனோபாவத்தில் இருந்து வந்த சொற்கள் தான். இன முரண்பாடுகள் கூர்மையடைந்த பின்னர், சாதிப் பாகுபாடு காட்டாமல் அனைத்துத் தமிழர்களுக்கும்  "பறத் தெமளோ" பட்டம் சூட்டப் பட்டது. 

அது மட்டுமல்ல, யாராவது ஒரு சிங்களவர் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினால், அவரும் "பறத் தெமளோ" என்று தூற்றப் படுகின்றார். ஆகையினால், அது ஒரு சாதியை குறிப்பதாக கருத முடியாது. அது ஒரு வசைச் சொல்லாக தாராளமாக பாவிக்கப் படுகின்றது. எதற்காக இவ்வளவு வியாக்கியானம்? 

நாம் சிங்களர் பாவிக்கும் வசைச் சொல்லான "பறத் தெமளோ"போன்று, நாம் தமிழர் ஒரு வசைச் சொல் வைத்திருக்கிறார்கள். "வடுகர்" என்பது அந்தச் சொல்.  சிறுபான்மைத் தெலுங்கர்களுக்கு எதிரான வசைச் சொல்லான வடுகர் என்பது, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களுக்கு எதிராகவும் பாவிக்கப் படுகின்றது. 

சிங்கள இனவாதிகள் "பறத் தெமளோ" என்று திட்டினால், தமிழ் இனவாதிகள் "வடுக தெலுங்கர்கள்" என்று திட்டுகிறார்கள். என்ன வித்தியாசம்?  இதற்கு முன்னர் சீமானை விமர்சித்து நான் எழுதிய விமர்சனக் கட்டுரைக்கு நாம் தமிழர் ஆர்வலர் ஒருவர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார். "தமிழர்களிடையே நுழைந்துள்ள வடுக கூட்டம் பல வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றது." (கவனிக்கவும்: இனவாத வசைச் சொல்லான "வடுக கூட்டம்")

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மாதிரி, தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மை இனம் ஆகும். கணிசமான அளவு நகர சுத்தி தொழிலாளர்கள் தெலுங்கர்கள் தான். அதாவது தாழ்த்தப் பட்ட சாதியினர். நாம் தமிழர் இனவாதிகளின் வடுகர் எதிர்ப்பு பிரச்சாரம், தெலுங்கு பேசும் தாழ்த்தப் பட்ட சாதி மக்களையும் குறி வைத்து நடக்கிறது. சிங்கள இனவாதிகளின் "பறத் தெமளோ" வும், தமிழ் இனவாதிகளின் "வடுக தெலுங்கர்களும்"  சாதிய மேலாதிக்க கருத்து அடிப்படையில் இருந்து வருகின்றது. 

நாம் சிங்களர் இயக்கம், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்து வந்த இனவாத பிரச்சார பாணியை பின்பற்றித் தான், நாம் தமிழர் இயக்கம் நடந்து கொள்கின்றது. நாம் சிங்களர் இயக்கத்தினர், "சிங்கள நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தமிழர்கள் ஆள்கிறார்கள்" என்று சொன்னார்கள். நாம் தமிழர் இயக்கத்தினர், "தமிழ் நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தெலுங்கர்கள் ஆள்கிறார்கள்" என்று சொல்கிறார்கள். இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? 


(தொடரும்) 
 
இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி

Sunday, March 06, 2016

"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!


"தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்... அதே மாதிரி, நோர்வே நாட்டை நோர்வீஜியனே ஆள வேண்டும்!" என்ற சீமானின் கொள்கைக்கு விரோதமாக, நோர்வேயில் ஒரு வந்தேறுகுடி தமிழச்சி, ஒஸ்லோ நகர துணை மேயராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். சீமான் அபிமானிகளும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் இந்த "அக்கிரமத்தை" கண்டிக்க முன்வருவார்களா? அல்லது வழமை போல இரட்டைவேடம் போட்டு தமது மடமையை பறை சாற்றுவார்களா?

முகநூலில் இந்தக் கேள்வியை எழுப்பியதும், ஒரு சீமான் அபிமானி பின்வரும் காரணத்தைக் கூறினார்:
 //எதுக்காக தமிழர் ஆட்சி தான் வேனும்னு கேக்குறாங்கனு தெரியாம தமிழன் தான் ஆளனும்னு சொல்ரது தப்புனு பேசர்து யார நியாயப்படுத்த? இந்த தேவையை உருவாக்கியதே திராவிட ஆட்சியில் நடந்த அநியாயங்கள் தான். இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை? மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்? மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்? தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது அவருக்கு நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

மேற்படி அநியாயங்கள் யாவும், "தமிழ் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆள்வதால்" தான் நடக்கின்றது என்று நினைப்பவர்களின் அறியாமை தான் சீமானின் பலம். கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத அறிவிலிகளும், அப்பாவிகளான இளைய தலைமுறையினரும் தான் அவரது ஆதரவாளர்கள்.

//இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?// 

இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற பொய்ப் பிரச்சாரம். சீமான் சினிமாத் துறையில் இருந்த காலத்தில் தான் ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் அரசு, அதாவது சீமானின் மொழியில் "மலையாளியின் ஆட்சிக் காலத்தில்", அனைத்து ஈழத் தமிழ் போராளிக் குழுக்களும் சென்னையில் அலுவலகம் அமைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடவும் தடை இருக்கவில்லை. 

விடுதலை இயக்கங்கள், தமிழக அரசியல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். போராளிக் குழுக்கள் எப்போதும் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. உட்கட்சிப் படுகொலைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுடனான அத்துமீறல்களும் ஆங்காங்கே நடந்து வந்தன. அப்போது கூட, நிலைமை எல்லை மீறிய பின்னர் தான், தமிழ்நாட்டு பொலிஸ் தலையிட்டது.

மலையாளி எம்ஜிஆர் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்கள் இயங்கின. யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் வந்து சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு அங்கே இராணுவப் பயிற்சி வழங்கி போராளிகளாக்கி திருப்பி அனுப்பினார்கள். உண்மையில், இவை யாவும் இந்திய மத்திய அரசில் இருந்த, தமிழர் அல்லாத இந்திரா காந்தி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளன. புலிகளுக்கு எம்ஜிஆர் (மலையாளி) வழங்கிய நிதியும், டெலோவுக்கு கருணாநிதி (தெலுங்கர்) வழங்கிய நிதியும் மறக்கத் தக்கதல்ல.

எம்ஜிஆரின் மறைவுடன், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தக் காலங்களில் "இந்திய இறையாண்மையை" மீறி, திமுக தலைவர் கருணாநிதி புலிகளை ஆதரித்தார். அனேகமாக, புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் சந்தர்ப்பத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் நோக்கில், இந்திய மத்திய அரசு திமுகவின் புலி ஆதரவை கண்டுகொள்ளவில்லை. வன்னியில் கடுமையாக சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில், திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர் வைகோ (தெலுங்கர்), இரகசியமாக வன்னி சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.

//தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

ம‌ஞ்ச‌ள் க‌ண்னாடி அணிந்தால் காண்ப‌தெல்லாம் ம‌ஞ்ச‌ளாக‌ தெரியும். இன‌வாத‌ க‌ண்ணாடி அணிந்த‌வ‌ர்க‌ள் நிலையும் அது தான். இந்தியாவில் அர‌சு இய‌ந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை. தமிழ் நாட்டு அரசு நிர்வாகமும் அதற்கு சளைத்தது அல்ல. மாபியாக் கும்பல்களை வைத்துக் கொண்டு, அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை அடக்கியொடுக்கி ஆட்சி செய்வது எம்ஜிஆர் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. தற்போது தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மை கட்சிகளான திமுக, அதிமுக, இரண்டும் தமெக்கென ரவுடிக் கும்பல்கள் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் தெரிந்த உண்மை இது.

ஆந்திராவுக்கு அழைத்து செல்லப் பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், செம் மரம் வெட்டிய குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கொலைகள் நடந்த இடம் தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலம், தொழிலாளர்களை அழைத்துச் சென்றவர்களும் ஆந்திரா மாபியாக்கள். அதனால், தமிழினவாதக் கட்சிகள், அதனை தெலுங்கு வந்தேறுகுடிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அதிலே எழுந்த கேள்வி தான்: "தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக  நியாயம் கேட்டு பேசாதது ஏன்?"

மாநில அரசுக்களுக்கும் மாபியாக் குழுக்களுக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு ஊரறிந்த இரகசியம். மேலும் செம்மரக் கடத்தலால் இலாபமடையும் பொலிஸ், முதலாளிகளின் நன்மை கருதி, தமிழ்நாட்டு அரசு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹைதராபாத் நகரில், தெலுங்கு மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், கொலைகளை கண்டித்து, அரசுக்கும், பொலிசுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனை இந்த தமிழினவாதிகள் மூடி மறைக்கும் நோக்கம் என்ன? தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?

இது குறித்து மேலதிக தகவல்களை வினவு இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்:

//மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?//

ஆண்டவா! முதலாளித்துவ இலாபவெறி தான் இதற்குக் காரணம் என்று தெரியாத அளவுக்கு முட்டாள்களா இவர்கள்? மண்ணின் வளங்களை கொள்ளை அடிப்பதில் மாபியாக்கள், முதலாளிகளின் பங்கு பற்றி எதுவும் பேசமால், தமிழர் அல்லாத வந்தேறுகுடிகளால் தான் இது நடக்கிறது என்பது போலக் காட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத் தனம்? இந்தக் கொள்ளையில் தமிழ் முதலாளிகள்/மாபியாக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? இது பற்றியும் பல கட்டுரைகள் ஏற்கனவே வினவு தளத்தில் வந்து விட்டன. சீமானுக்கு ஜால்ரா தட்டும் நண்பர்கள் அவற்றை ஒரு தடவை வாசித்து விட்டு உரையாட வாருங்கள். 

//தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்?//

தமிழ்நாடு அரசு, IMF, உலக வங்கியிடம் இருந்து கடன் உதவி பெறுகின்றது. அதனால் அவை சொல்வது போன்று நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் பொருந்தும் உண்மை இது. ஏன், இலங்கை உட்பட பிற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இது பொருந்தும். கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியார் மயத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன. தமிழ் நாட்டின் தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள், தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப் பட வேண்டும். அரசுக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்து சம்மதிக்க வைக்கிறார்கள்.

"தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால்", உலகவங்கியும், IMF உம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்காமல் விட்டு விடுவார்களா? சீமான் முதல்வரானால் தனியார்மயத்திற்கு எதிராக நடந்து கொள்வாரா? தமிழகத்திற்கே இல்லாத தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் தடுப்பாரா? தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி அடிப்பாரா? இது எதுவும் நடக்காத பட்சத்தில், எதற்காக "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்ற வெற்றுக் கூச்சல்?

//மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்?//

அதற்கு உங்களைப் போன்ற இனவெறியர்கள் தான் காரணம் கயவர்களே! மற்றைய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் ஓரளவு பலமாக இருக்கின்றன. அவற்றால் கட்டப் பட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் இடையறாத போராட்டங்கள் காரணமாக, மாநில அரசுகள் பின்வாங்குகின்றன. தமிழ் நாட்டில் அப்படியானதொரு நிலைமை வரக் கூடாது என்பதற்காகத் தான், இந்திய புலனாய்வுத் துறையினர் நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளை ஊக்குவிக்கிறார்கள்.

மற்ற மாநிலங்கள் ஆபத்தானது என்று ஒதுக்கிய திட்டங்களை, நாம் தமிழர் ஆளும் தமிழ்நாட்டு மாநில அரசு அனுமதிக்காது என்று, நாங்கள் எப்படி நம்ப முடியும்? ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை கொள்ளையடித்த வேதாந்தா நிறுவனம், மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பாசிஸ மோடியின் குஜராத் அரசு, அதனை தனது மாநிலத்திற்கு வரவேற்றது. நாளைக்கு சீமான் முதல்வரானாலும் இது தான் நடக்கப் போகிறது. இது தான் "தமிழ் நாட்டை தமிழன் ஆளும்" இலட்சணம்!

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கோஷத்தை சீமான் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? வேறொன்றுமில்லை. ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் இன்று தோல்வியின் விளிம்பில் நிற்கின்றது. 

முன்னொரு காலத்தில் தமிழ் தேசியம் பேசிய கலைஞர் கருணாநிதி போன்ற "தமிழினத் தலைவர்கள்", இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக பணத்தில் புரள்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ் தேசியத்தை வெறுப்பதற்கு முன்னர் ஏதாவது செய்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், "தமிழ் சோறும் போடும், பணமும் கொடுக்கும்."


திராவிட‌க்க‌ட்சிக‌ள் கால‌த்தில் தான் மொழிவாரி மாநில‌ம் உருவான‌து. அப்போது திமுக‌ முன்வைத்த‌ நியாயம் பார்ப்ப‌னீய‌த்திற்கு எதிரான‌ தார்மீக‌ கோப‌ம்தான். அப்போது வ‌ட‌ இந்திய‌ர்க‌ளை குறை கூறினார்க‌ள். வ‌ட‌க்கு வாழ்கிற‌து தெற்கு தேய்கிற‌து. த‌னித் த‌மிழ் நாடு பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு என்றார்க‌ள்.ம‌த்திய‌ அர‌சு த‌மிழ் நாடு மாநில‌ ச‌ட்ட‌ ச‌பைக்கு கூடுத‌ல் அதிகார‌ம் கொடுத்து, த‌மிழ் நாடு எல்லை பிரித்துக் கொடுத்த‌து.

த‌மிழ‌ர்க‌ள் ஆளும் த‌மிழ் நாட்டில் எல்லாம் சிற‌ப்பாக‌ இல்லை. உண்மையில் இது ஒரு வ‌கையில் த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌லின் வ‌ங்குறோத்துத‌ன‌ம். அந்த‌ உண்மையை ம‌றைக்கும் சீமானும், அவ‌ர‌து துதிபாடிக‌ளும் இப்போது புதிய‌தொரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள். ம‌ர‌ப‌ணு சோத‌னை ந‌ட‌த்தி எவ‌ன் அச‌ல் த‌மிழ‌ன், எவ‌ன் போலித் த‌மிழ‌ன் என்று ஆராய்கிறார்க‌ள்.

அவ‌ர்க‌ள‌து ஆராய்ச்சியின்(?) முடிவு: "த‌மிழ் நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள், ஆள்ப‌வ‌ர்க‌ள் போலித் த‌மிழ‌ர்க‌ள். அச‌ல் த‌மிழ‌ர்க‌ள் ஆட்சி செய்தால் எந்த‌ப் பிர‌ச்சினையும் இல்லை. த‌மிழ் நாட்டில் தேனும் பாலும் ஆறாக‌ ஓடும்..." என்று குடுகுடுப்பைக் கார‌ன் மாதிரி ஜோஸ்ய‌ம் சொல்கிறார்க‌ள். ஐம்ப‌துக‌ளில் திமுக‌ அர‌ங்கேற்றிய‌ அதே நாட‌க‌ம் தான்.

ஆனால், ஒரு வித்தியாச‌ம் உள்ள‌து. திமுக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தினால் ம‌த்திய‌ அர‌சின் அதிகார‌ம், ஹிந்தி பேரின‌வாத‌ மேலாதிக்க‌ம் க‌ணிச‌மான‌ அள‌வில் குறைக்க‌ப் ப‌ட்ட‌து. நாம் த‌மிழ‌ர் முன்வைக்கும் கோரிக்கைக‌ள் அதிகார‌ப் ப‌ர‌வலாக்க‌ல் ப‌ற்றிய‌து அல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில், திமுக‌ த‌மிழ் தேசிய‌ இய‌க்க‌த்திற்கு வ‌ழ‌ங்கிய‌ ப‌ங்க‌ளிப்புக்கு எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ வ‌கையில் சீமானின் கோரிக்கைக‌ள் அமைந்துள்ள‌ன‌.

Saturday, February 27, 2016

உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்" விருது!


ஒரு முக்கிய அறிவித்தல்: வாழ்நாள் முழுவதும் சாதிவெறி, இனவெறி, மதவெறி பேசி சாதனை படைத்த நபர்கள், IBC தொலைக்காட்சியால் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள்! 

லண்டனில் மாநகரில், த‌மிழ் தேசிய‌த்தின் குர‌லாக‌, "அனைத்துல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின்" பெய‌ரில் வானொலி, தொலைக்காட்சி ந‌ட‌த்தும் ஐ.பி.சி. நிறுவ‌ன‌ம், ஒரு சாதி வெறிய‌னுக்கு (Ramasamy Thurairatnam) "வாழ் நாள் சாத‌னையாள‌ர்" விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌வுள்ள‌து. அடுத்த‌தாக‌, பௌத்த‌ ம‌த‌ வெறிய‌ன் ஞான‌சார‌ தேரோ, சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ன் ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேவுக்கும், ஐ.பி.சி. விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்கும் என‌ எதிர்பார்க்கிறோம்.

சுவிட்சர்லாந்தில் வாழும் ராமசாமி துரைரத்தினம் என்ற ஈழத் தமிழ் தேசிய "ஊடகவியலாளர்"(?), ஏற்கனவே தினக்கதிர் இணையத்தளத்தில், பழமைவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதி வருபவர். அவரது தீவிர வலதுசாரி குணாம்சமும், இடதுசாரி வெறுப்புணர்வும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். அப்படிப் பட்ட ஒருவர், சாதியவாதம் பேச மாட்டார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இரா. துரைரத்தினம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மட்டக்களப்பு பெண்ணை திருமணம் செய்தவர். முன்னர் ஒரு காலத்தில் மட்டக்களப்பு திருமலை வீதியில் இயங்கிய  "தினக்கதிர்" பத்திரிகையிலும், பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து வெளி வந்த "தமிழலை" பத்திரிகையிலும் வேலை செய்தார். கருணாவின் பிளவு நடந்த காலத்தில் சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்தார், அதன் பிற்பாடு தமிழ்த் தேசியவாதியான இரா.துரைரத்தினம், பின்னர் பிரபாகரனின் தலைமைக்கு விசுவாசியானார். தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு, தினக்கதிர் இணைய ஊடகத்தை நடத்துவதோடு GTV யிலும் வேலை செய்கிறார்.

கிழக்கு மாகாண பிரதேசவாதத்தை, வெறுமனே வட மாகாணத்திற்கு எதிரானது என்று பார்ப்பது தவறு. கிழக்கிலங்கையில் நிலவும் தமிழ் - முஸ்லிம் இனக்குரோதத்தை, அந்தளவு மோசமானதாக வேறெங்கும் காண முடியாது. சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு தினக்கதிர் இணையத்தளத்தில், துரைரத்தினம் எழுதி வரும் கட்டுரைகள் பலவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை காணலாம்.

தன் மீது இனவாதி என்ற குற்றச்சாட்டு இருக்கிறதென்பது ஏற்கனவே அவருக்கும் தெரியும். கிழக்கு மாகாண இனத்துவ விகிதாசார அரசியல் பற்றிய ஒரு கட்டுரையை இவ்வாறு ஆரம்பிக்கிறார்: //கிழக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும். இந்த தலைப்பை பார்த்ததும் உங்களில் சிலர் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்கலாம். நான் சார்ந்த இனத்தின் அழிவுகள் பற்றி எச்சரிப்பது இனவாதம் என்றால் நான் இனவாதி என்ற பட்டத்தை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது.// (http://www.thinakkathir.com/?p=62282)

தமிழகத்தின் பிரபல தலித் அரசியல் ஆர்வலரான ரவிக்குமாருடன், பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் அவரை "பற நாயே" என்று சாதிவெறியுடன் திட்டியுள்ளார். இந்த விவகாரம் முகநூல் முழுவதும் பரவி. பலரால் கண்டிக்கப் பட்டதும், தனது முகநூல் கணக்கை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.

துரைரத்தினம் ரவிக்குமாரை "பற நாயே" என்று மட்டும் திட்டவில்லை. ஒட்டுமொத்த இந்தியர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அழிய வேண்டும் என்று சாபம் போட்டுள்ளார். முகநூல் உரையாடல் முழுவதும், இந்தியத் தமிழர்களுக்கு எதிரான துவேஷம் எதிரொலிக்கிறது. (இலங்கையில் உள்ள சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகள் மத்தியில் கூட, இந்தியத் தமிழர்கள் குறித்து தாழ்வான அபிப்பிராயம் உள்ளது.) 

உடைக் கட்டுப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து, தமிழகத்து தலித் ஆர்வலர் ரவிக்குமார் கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய துரை ரத்தினம்:
//ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார் போன்ற நாய்களே பொத்தடா வாயை//, //என்னைப்பற்றி கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு. பற நாயே// என்று வசை பாடியிருக்கிறார். 

ஆனால் இப்போது, "தன்னை ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்" என்று, துரை ரத்தினம் தன்னிடம் கூறியதாக Gowripal Sathiri Sri முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

"ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்" என்று துரைரத்தினம் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை. அதற்கான ஆதாரமாக, முகநூலில் நடந்த முழுமையான உரையாடலை இங்கே தருகிறேன்: