Showing posts with label வாக்கெடுப்பு. Show all posts
Showing posts with label வாக்கெடுப்பு. Show all posts

Sunday, October 22, 2017

தனி நாடே மாயம்! தேசியம், தாயகம், வாக்கெடுப்பு எல்லாம் மாயம்!!

ஈராக்கில், அரேபிய‌ருக்கும், குர்திய‌ருக்கும் இடையில் சமீபத்தில் புதிய‌ போர் மூண்டுள்ள‌து. சுதந்திர குர்திஸ்தான் கோரி பொது வாக்கெடுப்பு நடந்து சில தினங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. தனி நாடு கோரும் குர்திஸ்தானின் எல்லைப் பகுதியான கிர்குக் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்திருந்தது.

தொடக்கத்தில் குர்திய பெஷ்மேர்கா படையினருக்கும், துருக்மேன் ஆயுதக்குழுவுக்கும் இடையில் மோதல் நடந்திருந்தது. கிர்குக் பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் துருக்மேன் சிறுபான்மை இனமும், அயல்நாடான துருக்கியும் குர்திஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தன.

அது மட்டுமல்லாது, குர்திஸ்தான் பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்ட மறுநாளே அது செல்லாது என்று ஈராக் அறிவித்திருந்தது. விமான நிலையங்களையும், சர்வதேச எல்லைகளையும் ஈராக் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அப்படி நடக்காவிட்டால் போர் மூளும் என்றும் பயமுறுத்தி இருந்தது.

குர்திஸ் ப‌டையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் ந‌க‌ரையும், அதை அண்டிய‌ பிர‌தேச‌ங்களையும் ஈராக்கிய‌ ப‌டைக‌ள் கைப்ப‌ற்றியுள்ள‌ன‌.

ஈராக் அர‌சின் ஆத‌ர‌வு பெற்ற‌ ஷியா துணைப் ப‌டையின‌ர், ஒரே ஒரு நாள் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில், கிர்குக் ப‌குதியை கைப்ப‌ற்றியுள்ள‌மை ப‌ல‌ரை விய‌ப்பில் ஆழ்த்தியுள்ள‌து.

ஈராக் எண்ணையில் க‌ணிச‌மான‌ அள‌வு ப‌ங்கு கிர்குக் ப‌குதியில் இருந்து கிடைக்கிற‌து. அத‌னாலேயே அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌தேச‌மாக‌ உள்ள‌து. அத‌னால் எல்லோரும் அத‌ற்கு உரிமை கோருகிறார்க‌ள்.

கிர்குக் ஒரு கால‌த்தில் துருக்மேன் (துருக்கி மொழி பேசும் ம‌க்க‌ள்) இன‌த்த‌வ‌ர் பெரும்பான்மையாக‌ வாழ்ந்த‌ சிறிய‌ ந‌க‌ர‌ம். 1927ம் ஆண்டு, அங்கு எண்ணை க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌க் கால‌த்தில் கிர்குக், துருக்கியின் மொசூல் மாகாணத்திற்குள்‌ இருந்த‌து. இந்த‌க் கார‌ண‌ங்க‌ளினால், துருக்கியும் கிர்குக் த‌ன‌க்கு சொந்த‌ம் என்று உரிமை கோருகின்ற‌து.

குர்திய‌ர்க‌ள் அத‌னை த‌ம‌து குர்திஸ்தான் தாய‌க‌ப் ப‌குதி என்று உரிமை கோருகின்ற‌ன‌ர். குர்திஸ் தேசிய‌வாத‌ இய‌க்க‌ம் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து, வ‌ருங்கால‌ குர்திஸ்தானின் த‌லைந‌க‌ராக‌ கிர்குக் இருக்கும் என்று அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து.

இது இல‌ங்கையில் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திருகோண‌ம‌லையை வ‌ருங்கால‌ த‌மிழீழ‌த் த‌லைந‌க‌ர‌மாக‌ உரிமை கோரிய‌து போன்ற‌து. கிர்குக், திருகோண‌ம‌லை இர‌ண்டும் பொருளாதார‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே த‌லைந‌க‌ர‌மாக‌ ஏற்றுக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌.

எண்ணை உற்ப‌த்தி கார‌ண‌மாக‌ கிர்குக் ந‌க‌ர‌ம் பெரிதாக‌ வ‌ள‌ர்ந்த‌து. வ‌ட‌க்கில் இருந்து குர்திய‌ரும், தெற்கில் இருந்து அரேபிய‌ரும் வேலை தேடி வ‌ந்து குடியேறினார்க‌ள். 1957 க‌ண‌க்கெடுப்பின் ப‌டி, கிர்குக் ந‌க‌ர‌ ச‌ன‌த்தொகையில் 38% துருக்மேன், 33% குர்திய‌ர், எஞ்சியோர் அரேபிய‌ர்க‌ள். (இதில் க‌ணிச‌மான‌ அள‌வு கிறிஸ்த‌வ‌ அஸிரிய‌ர்க‌ள்.)

ச‌தாம் ஹுசைன் ஆட்சிக் கால‌த்தில் கிர்குக் அரேபிய‌ம‌யமாக்க‌ப் ப‌ட்ட‌து. பெரும‌ள‌வு குர்திய‌ர்க‌ள் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதே நேர‌ம் அரேபிய‌ர்க‌ள் பெரும‌ள‌வில் குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். க‌ணிச‌மான‌ அள‌வு குர்திய‌ர்க‌ள், அர‌பு மொழியை தாய்மொழியாக்கி தாமும் அரேபிய‌ராகி விட்ட‌ன‌ர். ச‌தாம் ஆட்சி முடிவுக்கு வ‌ந்த‌ பின்ன‌ர், முன்பு வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ குர்திய‌ர்க‌ள் திரும்பி வ‌ந்த‌ன‌ர்.

இன்றைய‌ கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை 2014 ம் ஆண்டு தொட‌ங்கிய‌து. அது வ‌ரையும் கிர்குக் ஈராக் அர‌சின் நேர‌டி ஆட்சியின் கீழ் இருந்த‌து. ஆனால், மேற்கில் இருந்து வ‌ந்த‌ ஐ.எஸ். (ISIS) படையெடுப்பை ச‌மாளிக்க‌ முடியாம‌ல், ஈராக்கிய‌ இராணுவ‌ம் பின்வாங்கிய‌து. அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி குர்திய‌ ப‌டைக‌ள் கிர்குக்கை கைப்ப‌ற்றின‌. அப்போது பிர‌தான‌மான‌ எதிரி ஐ.எஸ். என்ப‌தால், ஈராக்கிய‌ அர‌சும் விட்டுக் கொடுத்த‌து.

ஐ.எஸ். தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர் கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை எழுந்த‌து. குர்திஸ்தான் அர‌சு கிர்குக் எண்ணையை திருடி விற்கிற‌து என்று ஈராக் அர‌சு குற்ற‌ம் சாட்டிய‌து. அதே நேரம், "எம‌து த‌லைந‌க‌ரான‌ கிர்குக்கை விட்டுக் கொடுக்க‌ மாட்டோம்..." என்ற‌ தேசிய‌வாத‌ கோரிக்கையை முன் வைத்து தான், குர்திஸ்தான் பிரிவினைக்கான‌ பொது வாக்கெடுப்பும் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

"த‌னிநாடு காண்ப‌து என்பது ஒரு ந‌டைமுறைச் சாத்திய‌ம‌ற்ற‌ க‌ற்ப‌னாவாத‌ம்!" ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிவினைக்காக‌ பொதுவாக்கெடுப்பின் பின்ன‌ர், பெரும்பான்மை குர்திய‌ர்க‌ள் இப்போது தான் ய‌தார்த்த‌ம் என்ன‌வென‌ உண‌ர்கிறார்க‌ள். இவ்வாறு, குர்திஸ்தான் போர்க்களத்தில் இருந்து செய்தியாளர்கள் அனுப்பிய தகவல்களை வைத்து, ட‌ச்சு செய்தி நிறுவ‌ன‌ம் NOS தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ('Het ziet er treurig uit voor de Koerden in Irak'; https://nos.nl/artikel/2199001-het-ziet-er-treurig-uit-voor-de-koerden-in-irak.html)

கடைசியாக நடந்த சண்டையில், குர்திஸ் க‌ட்டுப்பாட்டின் கீழ் இருந்த‌ கிர்குக் மாகாண‌த்தின் எஞ்சிய ப‌குதிக‌ளையும் ஈராக்கிய‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி விட்ட‌து. குர்திஸ் ப‌டைக‌ள் பின்வாங்கி ஒரு அவ‌மான‌க‌ர‌மான‌ தோல்வியை ச‌ந்தித்த‌தின் பின்ன‌ணியில் ஈரான் இருக்க‌லாம் என‌ ச‌ந்தேகிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

அதாவ‌து, ஈரானின் ம‌றைமுக‌ நெருக்குவார‌ம் கார‌ண‌மாக‌த் தான் குர்திஷ் ப‌டைய‌ணிக‌ள் பின்வாங்கியுள்ள‌ன‌. குர்திஸ்தானில் வ‌ட‌ ப‌குதி KDP இய‌க்க‌த்தின் க‌ட்டுப்பாட்டிலும், தென் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டிலும் உள்ள‌து. கிர்குக் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் அட‌ங்குகிற‌து.

PUK இத‌ற்கு முன்ன‌ரும் சுத‌ந்திர‌ குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை முழு ம‌ன‌துட‌ன் ஆத‌ரிக்க‌வில்லை. ஏனெனில் அதன‌து போட்டி இய‌க்க‌மான‌ KDP தான் பொது வாக்கெடுப்பை அறிவித்திருந்த‌து. இது அங்கு இரு தேசிய‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கு இடையில் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல் விளையாட்டு.

பொது வாக்கெடுப்புக்கு வ‌ரையும், KDP இன் பிர‌ச்சார‌ம் முழுவ‌தும் "ஹ‌லாப்ஜா இன‌ப்ப‌டுகொலை" ப‌ற்றியே இருந்த‌து. இந்த‌ உண‌ர்ச்சிக‌ர‌ அர‌சிய‌லுக்கு பின்னால் இர‌ண்டு க‌ட்சிக‌ளினதும் போட்டி அரசிய‌ல் ம‌றைந்து விட்ட‌து, அல்ல‌து ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து, ஹ‌லாப்ஜா என்ற‌ கிராம‌ம், ஈரான் எல்லைக்க‌ருகில், PUK க‌ட்டுப்பாட்டு பிர‌தேச‌த்தில் உள்ள‌து.

த‌ன‌து பிர‌தேச‌த்திற்குள் KDP பின்க‌த‌வால் நுழைய‌ப் பார்க்கிற‌து என‌ நினைத்து‌ PUK எச்ச‌ரிக்கையான‌து. ஆனால், சுத‌ந்திர‌ குர்திஸ்தான் கோரிக்கையை எதிர்த்தால் அதை சுட்டிக் காட்டியே தேசிய‌ அர‌சிய‌லில் இருந்து ஓர‌ங்க‌ட்ட‌ப் ப‌ட‌லாம். இந்த‌ப் ப‌ய‌த்தால் PUK உம் பொது வாக்கெடுப்பை ஆத‌ரித்த‌து.

இந்த இட‌த்தில் இன்னொரு உண்மையை ம‌ற‌ந்து விட‌க் கூடாது. PUK நீண்ட‌ கால‌மாக, ஆர‌ம்ப‌த்தில் இருந்தே ஈரானின் ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ந்த‌து. த‌ற்போது கிர்குக் பிர‌தேச‌த்தில் இருந்து பின்வாங்கிய‌தும் PUK ப‌டைய‌ணிக‌ள் தான். அத‌ற்கு ஈரானின் அழுத்த‌ம் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

"பார்த்தீர்க‌ளா, த‌மிழ‌ருக்குள் ஒற்றுமை இல்லாத‌து தான் எல்லாப் பிர‌ச்சினைக்கும் கார‌ணம்" என்று சொல்வ‌து மாதிரி கிள‌ம்பி வ‌ராதீர்க‌ள். புலிக‌ள் கிழ‌க்கு மாகாண‌த்தில் க‌ருணா குழுவை அக‌ற்றிய‌ மாதிரி, "PUK துரோகிக‌ள்" என்று சொல்லி விட்டு KDP அங்கு வ‌ர‌ முடியாது. குர்திஸ்தானில், வ‌ட‌க்கு, தெற்கு பிராந்திய‌ மொழிக‌ளுக்கு இடையிலான‌ க‌லாச்சார‌ வித்தியாச‌ம் மிக‌வும் அதிக‌ம்.

த‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இருந்து குர்திஸ் ம‌க்க‌ள் ஒரு ப‌டிப்பினையை பெற்றுள்ள‌ன‌ர். த‌னி நாடு கிடைக்கும் என்ப‌தெல்லாம் ப‌க‌ற் க‌ன‌வு. குர்திஸ் தேசிய‌வாதிக‌ள் சொல்வ‌து போல‌ எதுவும் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

பூகோள‌ அர‌சிய‌ல் எம‌க்கு சாத‌க‌மாக‌ அமைய‌ப் போவ‌தில்லை. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது, எந்த‌வொரு அய‌ல்நாடும், குர்திஸ்தான் என்ற‌ த‌னிநாடு உருவாக‌ ச‌ம்ம‌திக்க‌ப் போவ‌தில்லை. மொத்த‌த்தில் எல்லாம் ஒரு மாயை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Sunday, October 01, 2017

அமெரிக்காவின் கதவைத் தட்டினால் தமிழீழம் கிடைக்கும், அல்லேலூயா!


"அமெரிக்காவை நம்பு தமிழினமே!"

"குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்" என்ற தலைப்பில், லண்டனில் வெளிவரும் ஒரு பேப்பர் ஊடகவியலாளர் அ. மாயூரன் முகநூலில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். (https://www.facebook.com/majura.amb/posts/1539005206138165?pnref=story) அதன் சாராம்சம் இது தான்:"அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்தால் தமிழீழம் சாத்தியமே!"

அவர் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இவ்வாறு உள்ளது: 
//இனி தனக்கு விடுதலை சாத்தியமற்றது எனத் தெரிந்திருந்தும் தமது விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்கும் குர்தீஸ் மக்களைப்பார்த்து ஈழத்தமிழர்கள் பாடங்களை கற்கத்தவறினால் என்றோ விடுதலை அடையவேண்டிய ஈழத்தமிழினமான நாம் இனி நடை பிணங்களே அத்துடன் தனக்குத் துரோகமிளைத்த அமெரிக்காவின் கதவுகளைத் தொடர்ச்சியாகத் தட்டி தமது விடுதலைக்கனியை பறித்திருக்கிறார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு 100 வீதம் பொருந்தும். எமக்கு விடுதலை வேண்டுமானால் துரோகியிடமாவது கூட்டுச்சேர்ந்து எமது விடுதலையை சாத்தியப்படுத்தவேண்டியதன் அவசியத்தை குர்தீஸ் மக்கள் ஈழத்தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இவர்களின் பாடங்களிலிருந்து வேற்றுமைகளைக் களைந்து எமக்கான விடுதலையை சாத்தியப்படுத்துவோம்.// (அ.மாயூரன்)

இது தமிழர்களையும் அமெரிக்க அடிமைகளாக்கும் அடிவருடி அரசியல். ஒரு பேச்சுக்கு, ஈராக்கில் குர்திஸ்தான் சுதந்திரம் அடைய அமெரிக்கா தான் காரணம் என்று வைத்துக் கொள்வோம். அதே அமெரிக்கா துருக்கியில் குர்திஷ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு துணை நின்றதை எப்படி நியாயப் படுத்துவீர்கள்?

துருக்கி- குர்திஷ் விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானை, சிரியாவை விட்டு விரட்டியடித்து, உலகெல்லாம் சுற்ற வைத்து காட்டிக் கொடுத்த அமெரிக்கா, எப்படி குர்து மக்களின் நண்பன் ஆகியது? ஈராக் பொது வாக்கெடுப்பு விடயத்தில் அமெரிக்க நலன்களா அல்லது குர்து மக்களின் விடுதலையா முக்கியமாக இருந்திருக்கும்? இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மைகள் தெரிய வரும்.

அ. மாயூரனின் கட்டுரையில் இருந்து:

//குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Locked )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. எனவே ஒரு தேசம் நான்கு துண்டாடப்பட்ட நாடுகளிலிருந்தும் விடுதலை பெறுவது சாத்தியமின்மை என்பதாலேயே அரசியல் ஆய்வாளர்கள் அது சுதந்திர நாடாக விடுதலை அடைவது சாத்தியமில்லை என்றிருந்தனர்.// (அ.மாயூரன்)

யார் அந்த உலக வரைபடம் காணாத "அரசியல் ஆய்வாளர்கள்"? ஒரு சாதாரண பள்ளி மாணவன் உலக வரை படத்தை எடுத்துப் பார்த்தாலே, எத்தனை "நாலாபுறமும் மூடப் பட்ட தேசங்கள்" இருக்கின்றன என்பது தெரிந்து விடும். இவை எல்லாம் காலனிய காலத்தில் உருவாக்கப் பட்டு, காலனிய நீக்கம் என்ற பெயரில் சுதந்திரம் வழங்கப் பட்டவை. முன்னாள் காலனிய எஜமானும், அயல் நாடுகளும் அவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்த படியால் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன.

குர்திஸ் இன மக்களை "ஒரே தேசம்" என்று கருதினால், உலகில் நூற்றுக் கணக்கான தேசங்கள் துண்டாடப் பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் அனேகமாக எல்லா நாடுகளின் எல்லைக் கோடுகளும் ஏதோவொரு தேசிய இனத்தை பிரிப்பதாக இருக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைக் கோடு பஷ்டூன் இன மக்களின் தேசத்தை இரண்டு துண்டுகளாக்கியது. இப்படி நிறைய உதாரணங்களை காட்டலாம்.

//இருந்தும் குர்தீஸ் மக்கள் தமது விடுதலை நோக்கி நகர்ந்தனர். முதலில் ஈராக்கிடமிருந்தாவது விடுதலை பெற வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகள் செய்த போது தான்...// (அ.மாயூரன்)

இது ஒரு திரிபுபடுத்தல். குர்திய தேசியவாதம் ஒரு பிற்காலத்திய அரசியல் கோட்பாடு. இருபதாம் நூற்றாண்டில் தான் குர்திஸ் தேசிய இன அடையாளம் உருவானது. அதற்கு முன்பு பல சிற்றரசுக்கள் இருந்துள்ளன. ஆனால், அன்று யாரிடமும் நாம் குர்தியர் என்ற உணர்வு இருக்கவில்லை. 

மேலும், இனம் அல்ல, மொழி தான் அடையாளத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, கிர்குக், பாக்தாத் ஆகிய நகரங்களில் அரபி மொழியை தாய்மொழியாக பேசும் குர்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இனத்தால், பிறப்பால் குர்தியர்கள். இருந்தாலும், இன்றைய தேசிய இன அரசியல் அவர்களை அரேபியர்கள் என்று சொல்கிறது!

துருக்கி குர்தியருக்கும், ஈராக் குர்தியருக்கும் இடையில் வெளித்தெரியக் கூடிய முரண்பாடுகள் உள்ளன. துருக்கியில் வாழும் குர்தியர்கள் லத்தீன் வரி வடிவத்தையும், ஈராக்கில் வாழும் குர்தியர் அரபி வரி வடிவத்தையும் உபயோகிக்கிறார்கள்.அது மட்டுமல்லாது,குர்திய மக்கள் பேசும் பிராந்திய மொழிகளிலும் வித்தியாசம் இருக்கிறது. 

ஈராக்கி குர்திஸ்தானின் வட பகுதியில் குருமாஞ்சி கிளை மொழி பேசும் மக்களும், தெற்கில் சுராணி கிளைமொழி பேசும் மக்களும் வாழ்கிறார்கள். அந்த மொழிப் பிரிவினை நவீன கால அரசியலிலும் தாக்கம் செலுத்தியது. பர்சானி தலைமை தாங்கிய KDP இயக்கம், குருமாஞ்சி மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. தலபானி தலைமை தாங்கிய PUK இயக்கம், சுராணி மொழி பேசுவோரை பிரதிநிதித்துவப் படுத்தியது. 1994 - 1995 இரண்டு இயக்கங்களும் மோதிக் கொண்டன. அந்த சகோதர யுத்தத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள்.

ஈரான், ஈராக், துருக்கி ஆகிய மூன்று நாடுகளிலும், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற குர்திஸ் விடுதலை இயக்கங்கள், மூன்று மாறுபட்ட வரலாற்றுக் காலத்தில் தோன்றியுள்ளன. அவை எல்லாம் பொதுவாக குர்திஸ்தான் விடுதலை பற்றிப் பேசினாலும், ஒன்றுக்கொன்று அரசியல் கொள்கை முரண்பாடு கொண்டவை. இவர்கள் எப்படி ஒன்றாக விடுதலையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்?

//அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தபோது குர்தீஸ் மக்கள் அமெரிக்காவிடம் தாம் ஈராக்மீது போர் தொடுப்பதற்கு தங்களுடன் துணை புரிவதாகவும் தமக்கு ஈராக்கிடமிருந்து விடுதலையை பெற்றுத் தருமாறும் கேட்டிருந்தனர்... அமெரிக்கா ஈராக் மீதான போரை முடித்ததன் பின்னர் குர்தீஸ் மக்களுக்கான விடுதலையை குடுக்க மறுத்தது.// (அ.மாயூரன்)

ஈராக்- குர்து மக்களின் சந்தர்ப்பவாத அரசியல் தலைமையை புறக்கணித்து விட்டு, அப்போது அங்கு நடந்த சம்பவங்களை புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முதலில் குர்திஸ்தான் உள்நாட்டு அரசியல் பற்றித் தெரிய வேண்டும். அது தெரியாமல், "ஈழத் தமிழினம் ஈராக்கி குர்திஸ் இனத்தை பின்பற்ற வேண்டும்" என்று தமிழர்களை படுகுழியில் தள்ளிவிடக் கூடாது.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சி நடத்திய காலத்திலேயே, குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசம் உருவாகி, அதற்கான தேர்தல்களும் நடத்தப் பட்டன. அப்போதே ஈராக்கிய இராணுவம் விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது. அதற்கு காரணம், குவைத் போருக்குப் பின்னர் எழுந்த நெருக்கடி நிலைமை. ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஈராக் மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. அது மட்டுமல்லாது, வடக்கிலும், தெற்கிலும் ஈராக்கிய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப் பட்டது. அந்த வான் பரப்பில் மேற்கத்திய போர் விமானங்கள் ரோந்து சுற்றின.

இராணுவ ரீதியாக பலவீனமடைந்து, மத்திய ஈராக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பெரும்பாடு பட்ட சதாம் ஹுசைன் அரசு, குர்திஸ்தான் பகுதிகளை விட்டுக் கொடுத்ததில் வியப்பில்லை. அப்போது குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவர், சதாம் ஹுசைனுடன் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்து கொண்டார். "குர்திஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதாக" சதாம் அரசு பீற்றிக் கொண்டது.

வளைகுடா யுத்தம் நடந்த தொண்ணூறுகளில் தான், இன்றைய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்புக்கான அடித்தளம் போடப் பட்டது. அதாவது, ஈராக் எண்ணைக்காக சர்வதேச சமூகம் நடத்திய போரின் ஒரு பக்க விளைவு தான் அது. ஈராக்- குர்து மக்களைப் பொறுத்தவரையில், அது எதிர்பாராமல் கிடைத்த அரிய வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவு தான். அயல்நாடான துருக்கியில் வாழும் குர்து மக்களுக்கு கூட இன்று வரையில் அப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. இதிலே ஈழத் தமிழினத்திற்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று ஜோசியம் சொல்வது ஒரு சுத்துமாத்து!

ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு நடந்த நேரம், குர்திஸ்தான் விடுதலையை பெற்றுத் தருமாறு அமெரிக்காவை கேட்டது உண்மை தான். ஆனால், அதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மிகவும் தந்திரமாகப் பேசி போருக்கு சம்மதிக்க வைத்தார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலம் சில வருடம் நீடித்தது. அப்போதே நினைத்திருந்தால், பிரித்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அமெரிக்கர்கள் அப்படிச் செய்யவில்லை. குர்தியரிடம் நைச்சியமாகப் பேசி, புதிதாக உருவான ஈராக் அரசாங்கத்தில் பங்கெடுக்க வைத்தார்கள். "அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்த படியால் தான் இவ்வளவும் நடந்தது" என்பது ஒரு வெகுளித்தனமான பார்வை.

பாக்தாத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசு அதிகாரம் செலுத்திய நேரம் தட்டியும் திறக்காத கதவு இப்போது தான் திறந்து கொண்டதாம்! ஏற்கனவே, குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை எதிர்த்துள்ள அமெரிக்கா, தான் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இதற்குப் பிறகும், "ஈழத் தமிழினமே அமெரிக்காவின் கதவுகளை தொடர்ந்தும் தட்டிக் கொண்டிரு, தமிழீழம் கிடைக்கும்!" என்று அறிவுரை சொல்வது அயோக்கியத்தனம். "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று இயேசு சொன்னதாக, தமிழ்த்தேசிய- அல்லேலூயாகாரர் தினந்தோறும் பிரார்த்தனை செய்தாலும், அமெரிக்க ஆண்டவர் இறங்கி வரப்  போவதில்லை. 

இஸ்ரேல் மட்டும் தான் குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரித்துள்ள ஒரேயொரு நாடு ஆகும். அது தனி நாடாவதை ஆதரிக்குமா என்பது சந்தேகமே. ஆனால், இஸ்ரேலுக்கு ஒரு புதிய கூட்டாளி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அது தான் இங்கே முக்கியம். ஏற்கனவே, குர்திஷ் படையினருக்கு இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஈரானுடன் பொது எல்லையைக் கொண்டிருப்பதால், அங்கிருந்து ஈரானை வேவு பார்ப்பது இலகு. அது தான் நடக்கப் போகிறது. எதிர்காலத்தில் ஈரானுடன் யுத்தம் வெடிக்குமாக இருந்தால், குர்திஸ்தானில் இருந்து ஊடுருவ முடியும்.

இஸ்ரேல் மட்டுமல்லாது, அமெரிக்காவும் குர்திஸ்தானை தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், ஈராக் அவர்களது கையை விட்டுப் போய் விட்டது. இன்று ஈராக் அரசை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது ஈரான் தான். அது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சர்வதேச அரசியல் சூதாட்டத்தில் ஈராக்- குர்திஸ் மக்கள், வல்லரசுகளின் பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகின்றனர். பெஷ்மேர்கா என அழைக்கப் படும் குர்திஸ் இராணுவம், ஏகாதிபத்திய ஒட்டுக்குழுவாகி ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு: 
25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?

Sunday, September 24, 2017

25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?


25 செப்டம்பர், திங்கட்கிழமை நடக்கவுள்ள, சுதந்திர குர்திஸ்தானுக்கான பொது வாக்கெடுப்பு பற்றிய சில குறிப்புகள்.

ஈராக்கில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் "ஆம்" என்று வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது பல தசாப்த கால குர்திய தேசியவாதிகளின் கனவு. இன்று நனவாகப் போகிறது. உண்மையிலேயே குர்திஸ்தான் தனி நாடாக இருக்க முடியுமா? அது ஐ.நா. அங்கத்துவம் பெற முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.

கடந்த இருபதாண்டுகளாக குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்து வருகின்றது. சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்திருந்தது.

அமெரிக்க இராணுவமும் குர்திஸ்தானில் தரையிறங்கிய பின்னர் தான், சதாம் ஹுசைன் ஆண்ட ஈராக் மீது படையெடுத்தது. அதற்கான "நன்றிக் கடனாக", அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் பெஷ்மேர்கா படையணிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப் பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குர்திஸ்தான் பிராந்தியம் ஏறக்குறைய தனி நாடு போன்றே நிர்வகிக்கப் பட்டது. இருப்பினும், அது ஈராக்கின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருந்தது.

குர்திஸ்தான் பெயரில் தனிக்கொடி, தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாகி இருந்தன. அதற்கென தனியாக "குர்திஷ் தேசிய இராணுவம்" கூட இருந்தது. இருந்தாலும் அதை யாரும் தனிநாடாக கருதவில்லை, அல்லது அங்கீகரிக்கவில்லை. அங்கேயும் ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும். குர்திஷ் பாரளுமன்ற உறுப்பினர்கள் பாக்தாத்தில் இருந்தனர். வெளிவிவகார கொள்கை உட்பட பல விடயங்களில் பாக்தாத்தில் உள்ள மத்திய அரசு மேலாண்மை செலுத்தியது.

குர்திஸ்தான் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு தேசியவாதிகளின் இறுதி இலக்கு என்றே பரப்புரை செய்யப் படுகின்றது. இருப்பினும் அதற்குமப்பால் சில விடயங்கள் உள்ளன. கிர்குக் எண்ணைக் கிணறுகள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை நீண்ட காலமாக தீர்க்கப் படவில்லை. ஈராக்கில் பெருமளவு எண்ணை எடுக்கப் படும் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. அதில் கிடைக்கும் வருமானத்தை பங்கிடுவதில் பிரச்சினைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், குர்திஸ்தான் அரசு எண்ணை உற்பத்தியை தடை செய்தது. அதற்கு பதிலடியாக, ஈராக் அரசு குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எழுபது சதவீதமாக குறைத்தது. இந்த இழுபறிப் போட்டி தான், பொது வாக்கெடுப்பில் வந்து நிற்கிறது.

இன்று வரைக்கும், ஈராக் மத்திய அரசு குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் சுதந்திரத்திற்காக வாக்களித்தால், அடுத்ததாக என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி? வாக்கெடுப்பின் முடிவை வைத்து, குர்திஸ்தான் தனி நாடாவதாக பிரகடனப் படுத்தப் படுமா? ஈராக்குடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் படுமா? சுதந்திர குர்திஸ்தானை ஏனைய நாடுகள் அங்கீகரிக்குமா?

குர்திஸ்தான் தனி நாடாக பிரகடனப் படுத்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈராக் அரசு அறிவித்துள்ளது. அப்படியானால், அது மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய விடயம், ஈராக் தேசிய இராணுவம் எந்தளவு பலமானது என்பதே. இரண்டொரு வருடங்களுக்கு முன்பிருந்த ஈராக் இராணுவம் மிகவும் பலவீனமாக இருந்தது. 

2014 ம் ஆண்டுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருந்த, ஐ.எஸ்.(ISIS) என்ற இயக்கம், மிகக் குறுகிய காலத்திற்குள் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி பாக்தாத்தை நோக்கி முன்னேறி இருந்தது. குறிப்பாக, சுன்னி-முஸ்லிம் பிரிவை சேர்ந்த அரேபிய சமூகத்தவரின் "ஏக பிரதிநிதி" என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ்., ஈராக்கில் ஒரு தனிநாட்டை உருவாக்கி வைத்திருந்தது.

ஐ.எஸ். முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பின்வாங்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த ஈராக் இராணுவம் தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்தது. ஈரானின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற ஈராக் இராணுவம், தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுத்து இழந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டது. இதிலே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். போரில் ஈடுபட்டது ஈராக் இராணுவம் மட்டுமல்ல.

ஷியா முஸ்லிம் அரேபியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் துணைப்படைகளின் உதவியின்றி ஈராக் இராணுவம் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த துணைப்படைகள் ஈராக் அரசுக்கு கட்டுப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இலட்சிய வெறியுடன் போரிடுவார்கள். ஆகவே, குர்திஸ்தான் மீது படையெடுப்பு நடந்தால்,குர்தியர்கள் ஒரு பலமான எதிரியை சந்திக்க வேண்டி இருக்கும். அண்மைக்கால போரியல் அனுபவம் மிக்க ஈராக்கி இராணுவத்தை மட்டுமல்லாது, ஷியா துணைப் படைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்களுக்கு ஈரானின் ஆதரவு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அயல் நாடுகளான ஈரானும், துருக்கியும் அறிவித்து விட்டன. அந்த இரண்டு நாடுகளிலும் குர்திய மொழி பேசும் சிறுபான்மையினர் வாழ்வது மட்டுமல்லாது, அவர்களும் தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே ஈராக்கில் குர்திஸ்தான் தனிநாடானால், தமது நாட்டுக்குள்ளும் பிரச்சினை உண்டாகும் என்று அஞ்சுகின்றனர். அவற்றை விட "சர்வதேச சமூகம்" எனக் கருதப் படும் அமெரிக்காவும், பிரான்சும் கூட அங்கீகரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குர்திஸ்தானின் ஒரேயொரு நட்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் குர்திய படையணிகளுக்கு பயிற்சியளிப்பது இரகசியம் அல்ல. அது நீண்ட காலமாக நடக்கிறது. குர்திஸ்தான் தேசியவாதிகளும், குர்திஷ் மக்களையும், யூதர்களையும் ஒப்பிட்டுப் பேசுவதும் புதிய விடயம் அல்ல. 

"யூதர்களுக்கும், குர்தியருக்கும் பொது எதிரிகளாக அரேபியர் இருப்பதாக" அரசியல் பேசுவது சகஜமானது. குர்தியர்கள் மத்தியில் யூத மதத்தை பின்பற்றுவோரும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன தான் இருந்தாலும், இஸ்ரேலின் நட்புறவு குர்திஸ்தான் சுதந்திரத்திற்கு எந்தளவு உதவும் என்பது கேள்விக்குறி தான்.

அமெரிக்கா தனது வழமையான இரட்டை வேடத்தை இங்கும் அரங்கேற்றுகிறது. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மாதிரி நடந்து கொள்கிறது. ஒரு பக்கம் குர்திஸ்தான் தேசியத்தை ஆதரிப்பது போன்று நடந்து கொள்ளும். அதே நேரம், ஈராக் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும். இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பதிலீடு செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்போது ஏற்பட்ட காலனிய குடியரசுகளின் எல்லைகளை மாற்ற விரும்பவில்லை. இதை அமெரிக்க அரசு வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.

ஈராக்- குர்திஸ்தான் தனி நாடானால், அங்கு சிறுபான்மை மொழி பேசும் இனங்களாக உள்ள அரேபியரும், துருக்கியரும் எதிர்காலம் குறித்து அச்சப் படுவது இயல்பு. அதே நேரம், மொழியால் குர்தியர் ஆனாலும் மதத்தால் மாறுபட்ட யேசிடி மக்களும் சுதந்திரத்திற்கு எதிராகவுள்ளனர். அனேகமாக பொது வாக்கெடுப்பில் விழும் எதிர் வாக்குகள் அவர்களுடையவையாக இருக்கும். குர்திஸ்தான் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குர்தியர்களும் பொது வாக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆட்சியாளர்கள் தமது ஊழலை மறைப்பதற்காக தேசிய வெறியை தூண்டி விடுகிறார்கள் என்பதே.

ஏற்கனவே, குர்து மொழி பேசும் மக்களுக்குள் பல உள்ளக முரண்பாடுகள் உள்ளன. தேசியவாதப் போர்வை முரண்பாடுகளை மூடி மறைப்பதால், அவை வெளியே தெரிய வருவதில்லை. அங்கேயும் பிரதேசவாதம் இருக்கிறது. சமூகப் பிரிவுகள் உள்ளன. இனக்குழு அரசியலும் நடக்கிறது. குர்திஷ் அரச தலைவராக உள்ள மசூத் பர்சானி, செல்வாக்கு மிக்க பர்சானி குலப் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது "இனத்தவருக்கு" மட்டும் பதவிகள் கொடுப்பதாக முறைப்பாடுகள் உள்ளன. 

இருபது வருடங்களுக்கு முன்னர், பர்சானி KDP என்ற இயக்கத்தின் தலைவர். அப்போது, KDP க்கும் அதற்கு அடுத்த பலமான இயக்கமான PUK க்கும் இடையில் சகோதர யுத்தம் நடந்தது. பின்னர் ஒரு மாதிரியாக சமரசம் செய்து கொண்ட பின்னர் தான், இன்றுள்ள குர்திஸ்தான் அரசு உருவானது. அப்போதும் இப்போதும் KDP இன் ஆதரவுத் தளம் பெரியது. குறிப்பாக, பழமைவாதிகள் அதை ஆதரிக்கிறார்கள். சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், பர்சானி சில விட்டுக் கொடுப்புகள் செய்து, ஈராக் அரசுடன் ஒத்துழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.

தேசியவாதிகளின் உணர்ச்சி அரசியல் காரணமாக, அங்கு யாரும் குர்திஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ முடியாத நிலைமை உள்ளது. ஹலாப்ஜா இனப்படுகொலையை சொல்லியே பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு திரட்டப் படுகின்றது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், 1988 ம் ஆண்டு, ஹலாப்ஜா என்ற குர்திஷ் பிரதேசத்தில் ஈராக்கிய படைகள் நச்சு வாயுக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும் ஹலாப்ஜா படுகொலைகள் நினைவுகூரப் படுவதுண்டு. அன்று இனப்படுகொலையில் பலியான சொந்தங்களுக்கு இன்றைய பொது வாக்கெடுப்பு அர்ப்பணிக்கப் படுகின்றது. ஆனால், பொது வாக்கெடுப்பின் முடிவில் குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாகும் என்பது நிச்சயமில்லை. சிலநேரம், பாக்தாத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதாகவும் அமையலாம்.

Thursday, April 07, 2016

நெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு நடத்துவது எப்படி?

உக்ரைனுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக, 6-4-2016 அன்று நெதர்லாந்தில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது. ஏற்கனவே கிரீமியா பிரச்சினைக்கும் உக்ரைன் உள்நாட்டுப் போருக்கும் காரணமாக இருந்த, அதே வர்த்தக உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு தான் இது. அந்த ஒப்பந்தத்தில் இன்று வரையில் நெதர்லாந்து கையெழுத்திடவில்லை.

உக்ரைன் கருத்துக் கணிப்பில் கிடைக்கும் முடிவு உடன்படிக்கைக்கு எதிராக இருந்தால், அரசு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முப்பது சதவீத வாக்காளர்கள் ஓட்டுப் போட்டால் தான், அதன் முடிவுகள் செல்லுபடியாகும். அப்போதும் அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் ஓர் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இது மக்கள் பங்குபற்றும் நேரடி ஜனநாயகம் சம்பந்தமான விடயம்.

உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பில், அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகள் உடன்படிக்கையை ஆதரிக்கின்றன. அதனால், அதற்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறு அந்தக் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இடதுசாரி சோஷலிசக் கட்சி (SP) மட்டுமே எதிர்த்து வாக்களிக்கச் சொன்னது. பொதுவாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான தீவிர வலதுசாரிக் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் கூட எதிர்த்து வாக்களித்தனர்.

உக்ரைன் உடன்படிக்கைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்கள், இதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஓட்டுக்களாக கருதுகின்றனர். ஏனெனில், நிறையப் பேருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மீதான நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.

இந்த வர்த்தக உடன்படிக்கை, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக்கலாம் என்று நினைக்கிறார்கள். (அரசு அதை கடுமையாக மறுத்து வருகின்றது.) அப்படியானால், ஐரோப்பாவிலேயே ஊழலில் மலிந்த ஒரு நாட்டை சேர்த்துக் கொண்டு, தேவையில்லாத தலையிடிகளால் அவதிப் பட வேண்டும் என்று அஞ்சுகிறார்கள்.

உண்மையில், உக்ரைனை பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் காலனியாக்குவதே திட்டம். தரகுப் பணத்திற்கு ஆசைப்படும் உக்ரைனிய மேட்டுக்குடி வர்க்கமும் அதனை ஆதரிக்கின்றது. நெதர்லாந்து அரசு, தனது செலவிலேயே உக்ரைனிய மேட்டுக்குடி இளைஞர்கள் சிலரை வரவழைத்து ஆதரவுப் பிரச்சாரம் செய்ய வைத்தது. இருப்பினும் மக்கள் அதற்கு மயங்கி விடவில்லை.

இந்த வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், உக்ரைன் நிர்வாகங்களில் தலையிட்டு ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒப்பந்த ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை நம்பும் நிலையில் யாரும் இல்லை. பெரும்பாலும் ரஷ்யாவுடனான பூகோள அரசியல் மேலாதிக்க போட்டியின் ஓர் அங்கமே இந்த உடன்படிக்கை என்று பலர் கருதுகின்றனர்.

நெதர்லாந்தில் இடம்பெற்ற உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. 32,2% வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுள்ளதால், அதன் முடிவு செல்லுபடியாகும். பெரும்பான்மையான மக்கள் (61,1%) உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 38,1% ஆதரித்து வாக்களித்தனர். ஆகவே எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் கருத்துக்கு அரசு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் இருப்பதைப் போன்று, நேரடி ஜனநாயக முறையாக கருதப் படும், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு தற்போது நெதர்லாந்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? நெதர்லாந்தில் அண்மையில் திருத்தப் பட்ட தேர்தல் சட்டமூலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் தகவல், இந்தியா, இலங்கையில் உள்ள அரசியல் ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கலாம்.

30 செப்டம்பர் 2014 கொண்டு வரப் பட்ட திருத்தச் சட்டம், பொது மக்களும் கருத்துக் கணிப்பு ஆலோசனை வழங்க அனுமதித்துள்ளது. அரசு கொண்டு வந்த ஒரு சட்டம் தொடர்பாக அல்லது கைச்சாத்திடவிருக்கும் உடன்படிக்கை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

பொது வாக்கெடுப்பில் இரண்டு வகை உண்டு. 
1. ஆலோசனை கோரும் வாக்கெடுப்பு: அரசாங்கம் நேரடியாக மக்களின் சம்மதத்தை கோரும் நடைமுறை. 
2. ஆலோசனை வழங்கும் வாக்கெடுப்பு: குறிப்பிட்ட அளவு மக்கள் அமைப்பாகக் கூடி முடிவெடுத்து அரசுக்கு ஆலோசனை வழங்குவது.

உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு, இரண்டாவது வகையை சேர்ந்தது. ஆரம்பத்தில் உடன்படிக்கையை எதிர்க்கும் அமைப்புகள் வாக்கெடுப்பு கோரும் கையெழுத்து வேட்டை நடத்தின. ஒரு கோரிக்கை எழுப்புவதற்கு, நான்கு வாரங்களுக்குள் 10.000 கையெழுத்துக்களை சேர்த்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டால் அரசு வர்த்தமானிப் பத்திரிகை மூலம் அறிவித்தல் விடுக்கும்.

அப்போதும் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பின்னர், ஆறு வாரங்களுக்குள் 300.000 கையெழுத்துக்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் வாக்கெடுப்புக்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைக்குழு கையொப்பம் இட்டவர்களின் உண்மைத் தன்மையை ஆராயும். அதற்குப் பின்னர் பொது வாக்கெடுப்புக்கான திகதி குறிக்கப் படும்.

பொது வாக்கெடுப்பு தொடர்பான சட்ட விதிகள் மக்களுக்கு அறிவுறுத்தப் பட வேண்டும். அதற்கு ஆதரவாகவோ, எதிராகவோ பரப்புரை செய்யும் அமைப்புகள் அரசு மானியம் பெறலாம். பொது வாக்கெடுப்பில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அப்போது தான் அந்த முடிவு செல்லுபடியாகும். வாக்களித்தோர் எண்ணிக்கை முப்பது சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதிகமாக இருந்தால் அரசு மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

Tuesday, September 23, 2014

வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!


ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு, தமிழீழத்தில் சாத்தியமா?

ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில தமிழீழவாதிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் மே 17 இயக்கம் அதிக அக்கறை காட்டியுள்ளது. எனது பார்வைக்கு எட்டிய வரையில், மே 17 அனுதாபி ஒருவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. (https://www.facebook.com/photo.php?fbid=858459330831945&set=a.254018564609361.72820.100000036593373&type=1) அதில், பின்னடைவுக்கு காரணமாக சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றால், தமிழீழம் கிடைப்பது சாத்தியமே என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில், மே 17 இயக்கத்தின் "சுதந்திர வேட்கை" எந்தளவு நேர்மையானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அது தமிழ்நாடு பிரிவினையை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் கொள்கை கொண்டது.

முதலாளித்துவ நாகரிகம் நிலவும் ஒற்றைத் துருவ உலகில், இப்படியான வலதுசாரி தேசியவாதிகளின் வெகுளித்தனம் பல உண்மைகளை காண மறுக்கிறது. ஸ்காட்லாந்திலும் அது தான் நடந்தது. ஸ்காட்லாந்து பிரிவினைக்கான இயக்கம் எப்படி ஆரம்பமாகியது?

ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலம் ஆகும். வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்லாந்து பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பிரிட்டனில் எடுக்கப் படும் 90% எண்ணை, ஸ்காட்லாந்து கடல் எல்லைக்குள் உள்ளது. ஸ்காட்டிஷ் எண்ணையில் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு செல்கிறது. மேலும் உல்லாசப் பிரயாணத் தொழில் போன்ற சேவைத் துறையில் வேலை செய்வோர் தான் அங்கு அதிகம்.

இது போன்ற பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து தான் பிரிவினைக் கோரிக்கை தொடங்கியது. அதாவது, வசதியான ஸ்காட்டிஷ் மத்தியதர வர்க்கம், ஸ்காட்லாந்து சுதந்திர நாடனால், தாம் விரும்பிய படி அரசமைக்கலாம் என்று கனவு கண்டது. அது உண்மையில் ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம்.

வட அயர்லாந்து, தன்னை அயர்லாந்து குடியரசுடன் இணைக்குமாறு, அல்லது தனி நாடாக்குமாறு பல தசாப்த காலமாக போராடி வந்தது. வட அயர்லாந்து, மிக நீண்ட ஆயுதப்போராட்டம் நடந்த வரலாற்றைக் கொண்டது. அநீதியான முறையில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த பொபி சான்ட்ஸ், காந்தீய வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தியாக மரணத்தை தழுவிக் கொண்டார்.

ஆயிரக் கணக்கானோர் உயிர்ப்பலி கொடுத்து, பல இன்னல்களை அனுபவித்த போதிலும், வட அயர்லாந்தினால் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தனது தலைவிதியை தீர்மானிக்க முடியவில்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் அப்படி ஒரு யோசனை கூடக் கிடையாது.

வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஸ்காட்லாந்து ஒடுக்குமுறையாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்து வந்தது. இத்தனைக்கும், ஸ்காட்லாந்தின் கெயலிக் மொழியும், ஐரிஷ் மொழியும், ஒரே மாதிரியான கெல்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்ட அந்நிய மொழிகள். அப்படி இருந்தும், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்கு இடையில், மொழி அடிப்படையிலான சகோதரத்துவ உணர்வு எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. அதற்குக் காரணம், இனம் அல்ல, வர்க்கம் தான் அரசியலை தீர்மானிக்கிறது.

ஐரிஷ் மக்களுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்டிஷ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தனர். ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். ஸ்காட்லாந்து எப்போதும் தன்னை இங்கிலாந்தின் சம பங்காளியாக கருதி வந்தது. பல ஸ்காட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய கால போர்களில் பங்கெடுத்துள்ளனர். காலனிய நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தனர். "நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் பங்கெடுத்தோம்..." என்று, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான அரசியல்வாதிகள் புலம்பியமை இங்கே குறிப்பிடத் தக்கது.

அதற்காக, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை. குறிப்பாக, ஸ்காட்டிஷ் மேட்டுக்குடி / மத்திய தர வர்க்கம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று கூறலாம். தற்போது நடந்து முடிந்துள்ள பொது வாக்கெடுப்பில், எடின்பேர்க் போன்ற மத்தியதர வர்க்க பகுதிகளில் அதிகளவு பிரிவினைக்கு எதிரான ஓட்டுகள் விழுந்துள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது. கிளாஸ்கவ் போன்ற ஏழை உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில், பிரிவினைக்கு ஆதரவான ஓட்டுகள் விழுந்துள்ளன.

தமிழீழமும் ஆரம்பத்தில் ஈழத் தமிழ் மத்திய தர வர்க்கத்தின் கோரிக்கையாகத் தான் எழுந்தது. (அது தவிர்க்க முடியாதது. உலகில் பெரும்பாலான தேசிய இன எழுச்சிகள், குறிப்பிட்ட இனத்தின் மத்தியதர வர்க்க நலன் சார்ந்ததாகவே இருக்கும்.) ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், அரசியல் விழிப்புணர்வு பெற்ற பின்னர், ஆங்கிலேய அரசுடன் முரண்பட்டனர். தமது பகுதியில் தாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை பிறந்தவுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தனர். ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் முரண்பட்ட பின்னர் தான், தமிழீழம் கேட்கத் தொடங்கினார்கள். ஆயினும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு தேவை.

1976 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கிடைத்த 1977 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியும், உழைக்கும் வர்க்க தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வுகள் ஆகும். மேலும், அடுத்த முப்பதாண்டுகளாக நடந்த ஈழப் போர், கணிசமான அளவு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவை திரட்டிக் கொடுத்துள்ளது. (உண்மையில், அடித்தட்டு மக்கள் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர்.)

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர், அதன் அடிப்படையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாக இருந்துள்ளது. வடக்கு, கிழக்கில் ஒன்றைத் தவிர எல்லாத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அது வாக்கெடுப்பிற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி விட்டது.

உண்மையிலேயே, அன்று தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருந்தால், ஈழம் பிரிந்திருக்குமா? இந்த விஷயத்தில், கூட்டணியினரின் சந்தரப்பவாத அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம். அன்று, பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

சிங்கள குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் பிரிவினையை எதிர்த்திருக்கலாம். ஆயினும், தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தமிழீழ சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்கள். அந்தப் பொன்னான வாய்ப்பு, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பி வராது என்பது தான் யதார்த்தம். ஈழப்போரில் நடந்த ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், சொத்து அழிவுகள், இடப்பெயர்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், மூன்று திசைகளில் பிரிந்து சென்று விட்டனர். மேலும், தமிழ் மக்கள் மத்தியிலும், ஈழப் போரானது ஒற்றுமையை குலைத்துள்ளது. "புலி ஆதரவாளர்கள்", "புலி எதிர்ப்பாளர்கள்" என்று இரண்டு பிரிவுகள், போர்க் காலத்தில் நடந்த கொலைகள், பழிவாங்கல்களினால் இரண்டு துருவங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதாவது ஒரு சூழ்ச்சி பின்னப் பட்டிருக்கலாம்.

ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அதன் வாரிசான சிறிலங்கா அரசும் சிந்திக்கும் அளவிற்கு, நாங்கள் யாரும் சிந்திப்பது இல்லை என்பதும் உண்மை தான். முதலில், ஏகாதிபத்தியத்தின் தன்மை பற்றி அறிந்து கொண்டால் தானே, அதற்கு ஏற்றவாறு எமது அரசியலை தீர்மானிக்க முடியும்? "உலகில் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை" என்று சாதிப்பவர்களினால், என்றைக்குமே தமிழ் மக்களை வழிநடத்த முடியாது.

தமிழீழத்தையும், ஸ்காட்லாந்தையும் ஒப்பிட முடியுமா? நாங்கள் சில ஒற்றுமைகளை சுட்டிக் காட்டி, ஒப்பிட்டு மகிழலாம். ஆனால், "ஸ்காட்லாந்தில் சாத்தியமான ஒன்று, ஏன் தமிழீழத்திற்கு பொருந்தாது?" என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஸ்காட்லாந்து முதலாம் உலகத்தை சேர்ந்தது. அது காலனியாதிக்க நாடாக இருந்தது.

தமிழீழம் மூன்றாமுலகத்தை சேர்ந்தது. அது காலனிய அடிமை நாடாக இருந்தது. அது ஒரு முக்கியமான வேறுபாடு தான். இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடம் இருந்து விடுதலை பெற்ற நெதர்லாந்து, தனது ஆசியக் காலனியான இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்து வந்தது.

ஒரு பேச்சுக்கு, ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருந்தால், அது நாளைக்கு தமிழீழ சுதந்திரத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தருணத்தில், அது பிரிட்டனின் அதே நிலைப்பாட்டை எடுக்கலாம். இது ஒரு வகையில், தேசியவாதத்தின் குறுகிய மனப்பான்மை என்றும் கூறலாம். தேசியவாத சித்தாந்தம், எப்போதும் உள்நோக்கிப் பார்க்கும் தன்மை கொண்டது. தனது பிரதேசத்தை தவிர, உலகின் பிற பகுதிகளில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று அறிவதில் அக்கறை காட்டுவதுமில்லை.

"ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் பின்னடைவால், அதன் விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது..." என்பது மே 17 காரர்களின் வாதம். அதாவது, சில தவறுகளை திருத்திக் கொண்டால், அடுத்த தடவை நடக்கவிருக்கும் பொது வாக்கெடுப்பில் எப்படியும் விடுதலை கிடைத்து விடுமாம். மேற்குலக நாடொன்றில், தனி நாடு பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் தடவை அல்ல.

1995 ஆம் ஆண்டு, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கெபெக் (ஆங்கிலத்தில் : கியூபெக்) மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிலேயும், பிரிவினைக்கு எதிரான வாக்குகள் அதிகளவில் விழுந்தன. (மிகச் சிறிய வித்தியாசம் தான். ஆம் 49.42%, இல்லை 50.58%) தற்போது, 14 வருடங்களுக்குப் பின்னரும், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய கதையே இல்லை.

ஸ்காட்லாந்திலும், கெபெக்கிலும் பெருமளவு வெளிநாட்டுக் குடியேறிகள் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. மே 17 ஆய்வாளர், அந்தக் குறைபாட்டை தனது கட்டுரையில் குறிப்பிடாமல் விட்டது தற்செயலாக நடந்தது அல்ல. ஸ்காட்லாந்து, கெபெக் விடுதலைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்களில், கணிசமான அளவு தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களும் அடங்குவார்கள். அந்த உண்மையை ஒத்துக் கொண்டால், தனது பிழைப்பில் தானே மண்ணள்ளிப் போட்டதாக முடிந்து விடும்.

வளர்ச்சி அடைந்த முதலாம் உலக நாடென்பதால், பிரிட்டனுக்கு சென்ற வந்த பன்னாட்டுக் குடியேறிகளும் ஸ்காட்லாந்திலும் வசிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. பவுன் பவுனாக அள்ளலாம் என்ற கனவில், பிரிட்டனில் குடியேறுவதற்கு அல்லது வேலை செய்வதற்கு விரும்புவோர் பலருண்டு. டாலர், யூரோவை விட, பவுனின் பெறுமதி அதிகம் என்பதால், பிரிட்டனில் வேலை செய்து பணம் அனுப்புவருக்கு இந்தியாவில் அதிக மதிப்புக் கிடைக்கிறது. பவுனின் மகாத்மியம் பற்றி இங்கே விபரிக்கத் தேவையில்லை. சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது.

ஸ்காட்லாந்து தனி நாடானால், அது பவுனை நாணயமாக பயன்படுத்த முடியாது என்று, பிரிட்டிஷ் அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சுதந்திரம் அடைந்த பின்னரும் பவுனை தொடர்ந்தும் பயன்படுத்த விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி அறிவித்திருந்தது. ஆயினும், பவுனை பயன்படுத்துவதற்கு பிரிட்டன் மறுக்கும் பட்சத்தில் அடுத்த ஏற்பாடு என்ன? ஸ்காட்லாந்து தனக்கென தனியான நாணயத்தை அறிமுகப் படுத்துமா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? இதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

பவுனை இழந்து விடுவோம் என்ற பயத்தில், ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய நாட்டவர்கள், விடுதலையை எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பவுன் பற்றிய அச்சத்தை, பல தமிழ் மக்கள் நேரடியாகவே தெரிவித்து இருக்கிறார்கள். சாதாரண தமிழ் மக்களுக்கு தெரிந்த காரணம், மே 17 ஆய்வாளரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவர் ஸ்காட்லாந்தில் வாழும் "இங்கிலாந்துக்காரர்களை" பற்றி மட்டும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்துகாரர்களின் வாக்குரிமையை தடுத்திருந்தால், ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார். கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி சிந்திக்கக் கூடாதா? ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துக்காரர்கள் மட்டுமா குடியேறி இருப்பார்கள்? எத்தனை இலட்சம் வேல்ஸ் அல்லது ஐரிஷ்காரர்கள் வசிக்கிறார்கள்? வெறும் இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதப் படும் ஆய்வுக் கட்டுரைகளினால் தமிழீழத்திற்கு எந்தப் படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை.

அது சரி, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரிவினைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்களா? எத்தனை சதவீத ஸ்காட்டிஷ் வாக்காளர்கள் ஐக்கிய இராச்சியத்தோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்? பொது வாக்கெடுப்பினால், ஸ்காட்லாந்தில் எத்தனை குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார்கள் என்பது தெரியுமா? ஆமாம், அவர்கள் எல்லாம் ஸ்காட்டிஷ் இனத்தவர்கள் தான். ஆனால், ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான அரசியல் கருத்து முரண்பாடு அவர்களைப் பிரித்துள்ளது.

அது போகட்டும். எத்தனை ஸ்காட்டிஷ் முதலாளிகள் சுதந்திரத்தை ஆதரித்தார்கள்? எதற்காக ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டனர்? ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் பெரும்பான்மையாக வாழும், எடின்பேர்க் போன்ற நகரங்களில் தான் பெருமளவு "இல்லை" ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளிவிபரம் அதைக் காட்டுகின்றது.

ஸ்காட்டிஷ் ஊடகங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? அரச ஊடகமான, பிபிசி யை மறந்து விடுவோம். ஸ்காட்லாந்தில் வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளில், ஒன்று மட்டும் தான் சுதந்திரத்தை ஆதரித்திருந்தது. மற்ற எல்லா பத்திரிகைகளும், பிரிட்டனுடன் சேர்ந்திருக்க விரும்பி, "இல்லை" ஓட்டுப் போடுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்தின. மேற்குலக நாடுகளில், பத்திரிகைகள், வெகுஜன ஊடகங்கள் பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளன.

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால், அதன் தேசிய வங்கியாக வரும் வாய்ப்புப் பெற்ற Bank of Scotland, எதற்காக பிரிவினையை ஆதரிக்கவில்லை? உலகம் முழுவதும் ஸ்கொச் விஸ்கி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்த மர்மம் என்ன? விஸ்கி ஸ்காட்லாந்தின் பிரதானமான பொருளாதாரம் அல்லவா?

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். பெரும் மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு, ஸ்காட்லாந்தை விட பிரிட்டன் தான் சிறந்த நாடு. பிரிட்டன் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கிறது, ஸ்காட்லாந்து அல்ல. அதனால் தான் ஸ்காட்டிஷ் முதலாளிகளும், மேட்டுக்குடியினரும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.

இதை அப்படியே, தமிழீழத்திற்குப் பொருத்திப் பாருங்கள். ஸ்காட்லாந்து விடுதலைக்கு எதிராக நின்ற பெரும் மூலதனம், தமிழீழ விடுதலையை ஆதரிக்குமா? அதனால் அதற்கு என்ன இலாபம்? ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தி, கிழக்கு தீமோரை பிரித்தார்கள். எதற்காக? கிழக்கு தீமோர் மக்கள் மேல் பரிதாபப் பட்டு செய்தார்களா? இல்லை. அந்த நாட்டில் எண்ணை வளம் உள்ளது. அவற்றை மேற்குலக எண்ணை நிறுவனங்கள் ஆளுவது மட்டுமே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாக இருந்தது.

தமிழீழத்தில் எண்ணை வளம் இல்லை என்பதால், கிழக்கு தீமோரை பிரிக்க விரும்பிய பெரும் மூலதனம் தமிழீழ விடுதலையை ஆதரிக்காது. மே 17 ஆய்வாளரின் ஆலோசனைகளின் படி, தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடந்தால், முதலில் எதிர்ப்பவர்கள் மிகப் பெரிய தமிழ் முதலாளிகளாக இருப்பார்கள். ஏனென்றால், கொழும்பு தான் சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்ல. மேலும், ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில், பவுன் தொடர்பாக எழுந்த பிரச்சினை தமிழீழத்திலும் வரலாம். தமிழீழத்தின் நாணயம் எது? சிறிலங்கா ரூபாய் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுமா? அதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்குமா?

தமிழீழம் சுதந்திர நாடானால், தமிழீழ ரூபாய் என்ற புதிய நாணயம் கொண்டு வருவார்களா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? புலிகள் இருந்த காலத்திலேயே, தமிழீழ ரூபாய் நோட்டுகளை பாவனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கைவிடப் பட்டது. (100 சிறிலங்கா ரூபாய்கள்  = 120 தமிழீழ ரூபாய்கள் என்று பெறுமதி தீர்மானிக்கப் பட்டது. தமிழ்ப் பொது மக்கள், சந்தையினால் நிர்ணயிக்கப் படாத நாணயப் பெறுமதியை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.)

தமிழ் பேசும் பாமர மக்களுக்கும் ஓரளவு பொருளாதாரம் தெரியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய தமிழீழ வங்கிகளில் கூட, பெருமளவு மக்கள் தங்கள் பணத்தை வைப்பிலிடவில்லை. அதற்குப் பதிலாக சிறிலங்கா அரச வங்கிகளிலேயே தொடர்ந்தும் வைப்பிலிட்டு வந்தார்கள். (சிறிலங்கா வங்கி நிறுவனங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்களின் சம்பளங்களும், வர்த்தகத் தொடர்புகளும் சிறிலங்கா வங்கிகள் மூலமே பரிவர்த்தனை செய்யப் பட்டன.) 

உலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள், தமது பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். தமிழ் மக்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொது வாக்கெடுப்பு விஷயத்தில், ஏகாதிபத்தியமும், பெரும் மூலதனமும் எந்தப் பக்கம் நிற்கின்றதோ, அதற்கு சார்பாக முடிவுகள் எழுதப்படும்.

இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு தேசியவாத இயக்கம், அந்த இனத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்தின் வெகுளித்தனத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஏகாதிபத்தியத்தையும், பெரும் மூலதனத்தையும் எதிர்த்துப் போராடாத தேசியவாத இயக்கத்தினால், தனது மக்களின் விடுதலையை வாங்கித் தர முடியாது.


  • பொது வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!





ஸ்காட்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, September 20, 2014

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி! பிரிட்டனின் பித்தலாட்டம்!!


இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது.  ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்!

ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், "இல்லை" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, "இல்லை" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல "ஆம்" ஓட்டுகள், "இல்லை" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 


மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில் வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால், முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும் போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான் உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.




உலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம் மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத் தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "ஆம்" என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "இல்லை" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில், கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.

மேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன் முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம். அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. "இல்லை" என்று வாக்களித்தால், மாநில சுயாட்சியும், அதிகாரப் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.

சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம் இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். "தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக் காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன் மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்." புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்;
ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு

Thursday, September 11, 2014

ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு


ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும், என்பதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பின் பின்னர், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லுமா? அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? எதிர்காலம் குறித்து யாராலும் கணிப்பிட முடியாமல் உள்ளது.

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டுமே எண்ணை, எரிவாயு வளம் உள்ளது. ஸ்காட்லாந்து பிரிவினை, பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கலாம். அதனால், பங்குச் சந்தையில் பதற்றம் நிலவுகின்றது. நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிரிட்டிஷ் பவுனுடைய பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

அது சரி, ஸ்காட்லாந்து தனி நாடாவது குறித்து, "தமிழீழ ஆதரவாளர்கள்" என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், "What about Tamileelam?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், தற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன? "ஸ்காட்லாந்து மாதிரி தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து, அதை மாபெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கலாமே?

குறிப்பாக, பிரிட்டனில் வாழும் தமிழீழவாதிகளான தமிழர்கள் பலர், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்திற்குரியது. கியூபெக் தனி நாடாவதை, எத்தனை கனடாத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர், தங்களை தமிழீழவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும், மேற்குலக நாட்டு அரசுக்களுக்கு விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர்.

முதலில் இதனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவாக கருத முடியுமா? இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலகட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. முன்பு பிரிட்டன் வகித்திருந்த பாத்திரத்தை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது, கண்ணுக்கு புலனாகும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெளித் தோற்றம் ஆகும். ஸ்காட்லாந்தில் எண்ணை, எரிவாயுத் துறையில் முதலிட்டுள்ள BP, உலகப் புகழ் பெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதித் துறை ஜாம்பவான்களான ஸ்காட்டிஷ் வங்கிகள் போன்றவற்றில், இங்கிலாந்தின் செல்வாக்கு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

பெரும் வணிக நிறுவனங்களின் பங்குகள், ஸ்காட்லாந்து பிரிவினைக்குப் பிறகும் மாறப் போவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, அவை தமது தலைமையகங்களை லண்டனில் வைத்திருக்க சாத்தியம் உண்டு. ஸ்காட்லாந்து தனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கப் படும். பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரே பவுன் நாணயத்தை வைத்திருப்பதற்கு ஸ்காட்லாந்து தேசியவாதிகள் விரும்பினாலும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். 

இது போன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்து பிரிந்து சென்றாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறையப் போவதில்லை. மேலும், லண்டனில் இருந்து கிடைக்கும் நிதியுதவியை இழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மாநிலங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை நினைத்துப் பார்க்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்து பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள், அண்மைக் காலத்தில் அதிகரித்தமைக்கு, இடதுசாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (Scottish National party (SNP)) தான் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு பாடுபட்டு வந்தது. அது ஒரு தேசியவாதக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், பொது மக்களைக் கவர்வதற்காக இடதுசாரி அரசியல் பேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இடதுசாரி சக்திகளை அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது.

SNP இன் தோற்றம் கூட, மார்க்கிரட் தாட்சரின் நியோ லிபரல் கொள்கையின் எதிர்விளைவாக உருவானது தான். தாட்சர் அறிமுகப் படுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்கும் மக்களை வரி என்ற பெயரில் சுரண்டி வந்தது. பெரும்பான்மை மக்களால் வெறுக்கப் பட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்து பரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இன் அரசியல் கூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்கள் நினைவுபடுத்தப் பட்டன. 

மேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போரை தண்டிக்கும் நோக்கில் bedroom tax எனும் புதிய வரி கொண்டு வரப் பட்டது. அதாவது, ஏழைக் குடும்பங்கள் வாழும் வீடுகளில், தேவைக்கு அதிகமாக படுக்கையறைகள் இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் வரி கட்ட வேண்டும். பெரும்பான்மை ஸ்காட்டிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம்.

Glasgow போன்ற நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சினையும் அங்கே அதிகம். அதனால், "ஸ்காட்லாந்து தனி நாடானால், சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்தும் இருக்கும், எண்ணை விற்பனையில் வரும் வருமானம் அதற்கு செலவிடப் படும்" என்றெல்லாம், SNP பிரச்சாரம் செய்து வருகின்றது. 

SNP கட்சியினர், தங்களை இடதுசாரி தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்வது பாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைக் கட்சியினரும், ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியினரும், இடதுசாரி கொள்கைகளின் கீழ்த் தான், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்லாது, லேபர் கட்சியும் ஸ்காட்லாந்து பிரிவினையை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சிக்கு தான் இழப்புகள் அதிகம். அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்காட்டிஷ் லேபர் கட்சியினர், தற்போது பிரிவினையை ஆதரிக்கிறார்கள். 

மேலும் பிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் எல்லாம் ஸ்காட்லாந்து பிரிவினயை எதிர்த்து வருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்தில் இடதுசாரி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளின் சம்மதம் அதற்கு அவசியம். தங்களது நாடுகளுக்கு உள்ளே பிரிவினைவாத சக்திகளை கொண்டுள்ள, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டலாம். 

சுதந்திர ஸ்காட்லாந்து ஏற்படுத்தக் கூடிய முதலாவது சர்வதேச தொடர்பு, IMF அல்லது உலகவங்கியிடம் கடன் வாங்குவது தான். அது அயர்லாந்து குடியரசான காலகட்டத்திற்கு தான் ஸ்காட்லாந்தை இழுத்துச் செல்லும். இறுதியில் தேசியக் கொடிகள் மட்டுமே மாறி இருக்கும். மற்றவை எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்.