Showing posts with label மலையாளம். Show all posts
Showing posts with label மலையாளம். Show all posts

Friday, September 05, 2014

மலபார் தமிழ் : காலனிய காலத்தில் ஏற்பட்ட நவீன தமிழின் உருவாக்கம்


"தமிழர்" என்ற சொல், எந்தக் காலத்தில் இருந்து ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லானது? நிச்சயமாக, இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது, அந்நியர்கள் கூட "தமிழர்" என்ற வார்த்தையை பாவித்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஆனால், தென்னிந்தியாவில் தமிழர்கள், மலையாளிகளுக்கு பொதுவாக "மலபாரிகள்" என்ற பெயர் இருந்துள்ளது. அந்நிய நாட்டவர்கள், பல நூறு வருடங்களாக தமிழர்களையும் "மலபாரிகள்" என்று தான் அழைத்து வந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், அநதச் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.

ரொட்டர்டாம் நகரில் நடந்த
மலபாரிகளின் (தமிழர்) கண்காட்சி.
அந்தக் காலங்களில், காலனிய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களை கூட்டிக் கொண்டு வந்து, அவர்களை வேடிக்கையான காட்சிப் பொருளாக்குவது சர்வசாதாரணம். ஐரோப்பியர்கள் தமிழர்களையும், மிருகங்கள் போன்று மனிதக் காட்சிச் சாலையில் வைத்திருந்தார்கள். 

1902 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தமிழர்களின் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 50 பேர் கொண்ட தமிழ்க் குடும்பங்கள், "பாம்புக்கு மகுடி ஊதுவது, கயிற்றின் மேல் நடப்பது" போன்ற பாரம்பரிய கலைகளை, ஐரோப்பியர்களின் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும். ரொட்டர்டாம் நகரில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியை பார்க்க வருமாறு, டச்சு மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதற்காக ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப் பட்டுள்ளது. 
(ஆதாரம்: De exotische mens; Andere culturen als amusement)

ரொட்டர்டாம் நகரில் நடந்த கண்காட்சி பற்றிய துண்டுப்பிரசுரத்தில், "மலபாரிகள் (அதாவது இன்றைய தமிழ்நாட்டவர்கள்) தமது பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டுவதாகவும், அதனைக் கண்டுகளிக்க வருமாறும்" எழுதப் பட்டுள்ளது. ஓரிடத்தில் "மலபாரிகளின் பாடசாலை" கீறிக் காட்டி, அதிலே கரும்பலகையில் "கடவுள்" என்று தமிழ் எழுத்துக்கள் இருந்தன. வீணை வாசிப்பவர்கள், மிருதங்கம் அடிப்பவர்களும் வரையப் பட்டிருந்தனர்.

காலனிய காலத்தில், கிறிஸ்தவ மதத்தை தழுவிய மலபாரிகள் (இன்றைய தமிழர்கள்) பேசிய மொழி, ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களினால் "தமுள்" (தமிழ்) என்று அழைக்கப் பட்டது. அதுவே நாங்கள் இன்று பேசும், எழுதும் நவீன தமிழ் மொழி ஆகியது. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.

முதன்முதலாக அச்சிடப் பட்ட தமிழ் நூல் 
இந்தியாவில் முதன்முதலாக அச்சிடப் பட்ட நூல், ஒரு தமிழ் நூல். 1578 ஆம் ஆண்டு, கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அச்சிடப் பட்ட அந்த நூலின் பெயர் Doctrina Christam. இன்றைய கேரளாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக அது எழுதப் பட்டது.

இருபது வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அச்சிடப் பட்ட அதன் பெயர் "Doctrina Christam In Lingua Malabar Tamul" என்றிருந்தது. போர்த்துகேய எசுயிஸ்ட் பாதிரியார் ஹென்றிக், அதனை தொகுத்திருந்தார். ஆரம்பத்தில் லத்தீன் எழுத்துக்களைக் கொண்டும், பின்னர் மலையாள, தமிழ் எழுத்து வடிவங்களிலும் எழுதப்பட்டது. இந்தியாவில் இருந்த போர்த்துகேய காலனியான கோவாவில் அது அச்சிடப் பட்டது.

காலனிய காலத்தில், ஐரோப்பியர்கள் தென்னிந்தியர்கள் அனைவரையும் "மலபாரிகள்" என்று அழைத்து வந்தனர். வடக்கு கேரளாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பேசிய மொழி தனியாக "தமுள்" என்று அழைக்கப் பட்டது. வடக்கு கேரளாவில் ஏற்கனவே சிரிய கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் மூலமும் "தமுள்" என்ற சொல் வந்திருக்கலாம். தமுள் என்பது, இன்றைய சிரியா, ஈராக்கில் வாழ்ந்த புராதன மக்கள் இனமான அசிரியர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் ஆகும்.

1716 ஆம் ஆண்டு, Ziegenbalg எனும் டச்சு கத்தோலிக்க பாதிரியார் தமிழ் இலக்கண நூல் எழுதினார். அதிலும் அவர், தமிழை, "மலபாரி மொழி" என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கான நூல் என்பதால், மெட்ராஸ் பகுதியை ஆண்ட ஆங்கிலேயர்கள் "Ziegenbalg's Grammatica Damulica" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.

Philippus Baldaeus எனும் இன்னொரு டச்சு பாதிரியார், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து ஈழத் தமிழ் மக்களின் மொழியை கற்றுத் தேறினார். அவர் "ஈழத் தமிழ் மக்களை மலபாரிகள்" என்று தான் அழைத்துள்ளார். Philippus Baldaeus எழுதிய முக்கியமான நூலான "Nauwkeurige beschrijving Malabar en Choromandel" தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது.

ஐரோப்பிய பாதிரிகளால் எழுதப் பட்ட தமிழ் இலக்கண நூல்கள் யாவும், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் தான் எழுதப் பட்டுள்ளன. அனேகமாக, ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டவர்கள் தமிழ் பிராமணர்கள். அதனால், தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட கிறிஸ்தவ போதனைகளில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன.

எது எப்படி இருந்த போதிலும், காலனிய ஆட்சிக் காலமும், கிறிஸ்தவ மதப் பரப்புரைகளும், நவீன தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வாழ்ந்த கிறிஸ்தவ மலபாரிகள் பேசிய "தமுள்", இன்றைக்கு நாம் பாவிக்கும் தமிழாகி உள்ளது.

தமிழ் மொழி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தான். ஆனால், பண்டைய கால, மத்திய கால தமிழர்கள் பேசிய தமிழ் எமக்கு சுத்தமாகப் புரியாது. சிலநேரம் அது வேறொரு மொழியாகத் தோன்றும். நாங்கள் இன்றைக்குப் பேசும் நவீன தமிழ் மொழி, காலனிய காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய மக்களின் மொழியாக இருந்தது. அது ஆரம்பத்தில் மலபாரிகளின் மொழி என்று அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவர் அல்லாத மலபாரிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவை உணரப் பட்டது. அதனால், தமுள்-மலையாளம் என்றும், கடைசியில் தமிழ் என்றும் அழைக்கப் பட்டது.

கன்னடம் தெலுங்கு, மலையாளம் என்பவற்றிற்கு தாய் தமிழ் என்று மொழியாய்வாளர்கள் சொல்கிறார்கள். அது இன்றைக்கு நாங்கள் பேசும் நவீன தமிழ் என்று, நாமாகவே நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு பொது மொழி இருந்திருக்க வேண்டும். அதன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாம் இன்று பேசும் தமிழ் மொழி, சம்ஸ்கிருதம் அதிகளவில் கலக்காத மொழி. அதனால், அது புராதன கால பொது மொழியுடன் தொடர்புடையது என்று நம்ப இடமுண்டு.

இன்றைய தமிழுக்கும், மலையாளத்திற்கும் முந்திய மொழியை, மொழியியலாளர்கள் தமிழ் என்றே குறிப்பிட்டு வந்தனர். கல்வியாளர்கள் படிப்பதற்கு இலகுவாக ஒரு சொல்லை பாவித்தார்கள். உயிரியலில் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவான பெயர் சூட்டி படிப்பது மாதிரித் தான் இதுவும்.

 தென்னிந்தியர்களுக்கு இடையிலான பொதுவான தன்மையை குறிப்பிடுவதற்கு, சமூக விஞ்ஞானிகள் "திராவிடர்" என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். ஆனால், உண்மையில் திராவிடர் என்ற இனம் அல்லது மொழி இருக்கவில்லை. சமூக - விஞ்ஞானிகள் தாம் இலகுவாக கற்பதற்கு வசதியாக பாவித்த கலைச் சொற்களை, அரசியல்வாதிகள் தமது அரசியல் கொள்கைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தமிழில் இருந்து மலையாளம் பிறந்தது என்று, தமிழர்களான நாங்கள் மட்டும் தான் சொல்கிறோம். மலையாளிகள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெர்மன் மொழியில் இருந்து, டேனிஷ், டச்சு மொழிகள் உருவாகின என்று ஜெர்மன் காரர்கள் சொல்லலாம். ஆனால், டேனிஷ், டச்சு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இன்றைய ஜெர்மன், டேனிஷ், டச்சு மொழிகளுக்கு பொதுவான புராதன ஜெர்மன் மொழி ஒன்று இருந்தது என்று தெளிவாக கூற வேண்டியுள்ளது. அது தான் உண்மையும் கூட.

ஆங்கிலம் கூட ஒரு ஜெர்மானிய மொழி தான். ஆனால், அதன் அர்த்தம் இன்றைக்கு பேசப்படும் ஜெர்மன் மொழியில் இருந்து ஆங்கிலம் வந்தது என்பதல்ல. முற்கால ஜேர்மனிய இனமான ஆங்கிலோ - சாக்சன் மக்கள் பேசிய முற்கால ஜெர்மன், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ், கெல்டிக் மொழிகளுடன் கலந்து தான் நவீன ஆங்கிலம் உருவானது. அதே மாதிரி தமிழும் சமஸ்கிருதமும் கலந்து மலையாளம் உருவானது. ஆனால், அந்தத் தமிழ், இன்றைக்கு நாங்கள் பேசும் அதே தமிழ் அல்ல.

பண்டைய கால ஆங்கிலம் ஐஸ்லாந்து மொழி போல எழுதப் பட்டிருக்கும். அதனை இன்றுள்ள ஆங்கிலேயர்களினால் வாசித்தறிய முடியாது. தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளும் மாற்றங்களுக்கு உள்ளாகித் தான் வளர்ந்து வந்துள்ளன. அவற்றைப் பேசும் மக்களும் வெவ்வேறு இனங்களில் இருந்து கலந்து உருவாகினார்கள். இது உலக நியதி. அதை மாற்ற முடியாது. 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
2.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்

Friday, July 04, 2014

யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு


யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். 

யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக்கவில்லை. அதே நேரம், அவர்களுடன் கொள்கை உடன்பாடு கண்ட தமிழகத்து தமிழ் இன உணர்வாளர்கள், மலையாளிகளை பகைவர்களாக கருதுகிறார்கள். இந்த முரண்பாட்டை எப்படிக் களைவது என்ற பிரச்சினையை, நாங்கள் தமிழ் தேசியவாதிகளிடமே விட்டு விடுவோம்.

யாழ்ப்பாணத் தமிழரின் கேரளா உரிமை கோரல், முழுக்க முழுக்க கற்பனையானது என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும், தங்களை மலையாள வம்சாவளியினர் என்று அடையாள படுத்திக் கொள்ளும் குடும்பங்கள் இன்றைக்கும் வாழ்கின்றன. கொழும்பு, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மலையாள வம்சாவளியினர் சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.

காலனிய காலத்தில், மலையாளிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரையில், அரசு ஆவணங்களில் மலையாளிகள் என்று ஒரு இனம் தனியாக குறிப்பிடப் பட்டு வந்தது. பிற்காலத்தில் பல மலையாளிகள் தங்களை, சிங்களவர் என்றோ அல்லது, தமிழர் என்றோ, வாழும் இடத்தைப் பொறுத்து அடையாளப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தமது "தாய் மொழியையும்" பேச மறந்து விட்டார்கள்.

யாழ் குடாநாட்டில் வாழ்ந்த மலையாளிகள், டச்சு காலனிய காலத்தில் குடியேறியதாக சில வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அது குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். யாழ்ப்பாண, கேரளாவுக்கு இடையிலான தொடர்புக்கு ஆதாரமாக புகையிலை விவசாயம் உள்ளது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி வலிகாமம் என்று அழைக்கப் படுகின்றது. இருபாலை, கோப்பாய், அச்சுவேலி, மானிப்பாய், போன்ற வலிகாமப் பகுதி கிராமங்களில், இன்றைக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் புகையிலைத் தோட்டங்கள் தான் காணப்படும்.

வலிகாமம், யாழ் குடாநாடு முழுவதிலும் மக்கட்தொகை பெருக்கம் அதிகமாக உள்ள பிரதேசம் ஆகும். புகையிலை விவசாயம் காரணமாக பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. இலங்கை முழுவதும் வாழும் தமிழ் சமூகங்களில், செல்வந்தர்களின் விகிதாசாரம் வலிகாமம் பிரதேசத்தில் அதிகம். பெரும்பாலும் புகையிலைச் செய்கையினால் கிடைத்த வருமானம் தான், பலரின் செல்வச் செழிப்புக்கு காரணம்.

ஐம்பதுகளில், இலங்கை முழுவதும் கூட்டுறவு உற்பத்தி முறை ஊக்குவிக்கப் பட்டது. அப்போது, யாழ் புகையிலை செய்கையாளர்கள் தமக்குள் கூடி சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். அதன் பெயர் "யாழ்ப்பாணம் - மலையாள புகையிலை விற்பனைச் சங்கம்" (ஆதாரம்: கூட்டுறவு இயக்கத்தின் 1959 ம் ஆண்டு நிர்வாக அறிக்கை. P. E. வீரமன்) அந்த சங்கத்தினர் பல தசாப்தங்களாக, கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். 

அனேகமாக, அறுபதுகளில் இருந்த சிறிமாவோ அரசு, ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்த பின்னர் தான், யாழ்ப்பாண - கேரளா தொடர்பு அறுந்து விட்டிருக்க வேண்டும். ஆயினும், அந்தத் தடைகள் புகையிலை விவசாய உற்பத்தியை பாதிக்கவில்லை. யாழ் விவசாயிகள், தென்னிலங்கைக்கு புகையிலை ஏற்றுமதி செய்து பெருமளவு இலாபம் சம்பாதித்தார்கள்.

1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த தாராளவாத பொருளாதாரம், யாழ் குடாநாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளான புகையிலையின் உற்பத்தி வீழ்ச்சி அடைய வழிவகுத்தது. அதே காலகட்டத்தில் ஈழப்போரும் ஆரம்பித்ததால், தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. புகையிலை விவசாயிகளின் பிள்ளைகள், பெருமளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரவும், அந்த அரசியல் - பொருளாதார மாற்றங்கள் வழிவகுத்தன.

புகையிலை இலங்கை மண்ணுக்கு உரிய பயிர் அல்ல. அது ஐரோப்பிய காலனியாதிக்க காலத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. தேயிலை, கோப்பி, ரப்பர் போன்று ஐரோப்பியரால் கொண்டு வரப் பட்ட பிற பயிர்கள், பெருந்தோட்டங்களாக செய்யப் பட்ட அளவிற்கு புகையிலைச் செய்கை இருக்கவில்லை. இருப்பினும், யாழ் குடாநாட்டைப் பொறுத்த வரையில், ஏற்றுமதியை கருத்தில் கொண்டே புகையிலை பெருமளவில் பயிரிடப் பட்டு வந்தது. 

டச்சுக் காரர்கள் ஆட்சி செய்த காலத்தில், தென்னிந்திய வெள்ளாள சாதியை சேர்ந்த பெருமளவு விவசாயிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது குறித்து விரிவான ஆய்வு அவசியம். இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய காலத்தில், வரலாற்று ஆய்வுகள் திரிக்கப் படுவதற்கும், மறைக்கப் படுவதற்கும் இடமுண்டு. 

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: