Showing posts with label மறுகாலனியாதிக்கம். Show all posts
Showing posts with label மறுகாலனியாதிக்கம். Show all posts

Monday, September 15, 2014

தமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் மகிந்த அரசு


ஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2005 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிட, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் வந்திருந்தனர். அப்போது, வடக்கிலும், கிழக்கிலும், விடுதலைப் புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

புலிகளும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களும், அமெரிக்க ஜனாதிபதிகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட முல்லைத்தீவுக்கு வருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டனும், ஜோர்ஜ் புஷ்ஷும், மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களை பார்வையிட்டு விட்டு நாடு திரும்பினார்கள்.

சுனாமி அனர்த்த நிவாரணமாக, USAID மூலமாக, அமெரிக்க அரசு ஏராளமான நிதி வழங்கி இருந்தது. USAID, தனது நடவடிக்கைகளை சுனாமியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுற்றுலாத் துறைக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று ஆராய்ந்து, கள அறிக்கை ஒன்றை தயாரித்தது. திருகோணமலை முதல் அம்பாறை வரையிலான, தமிழ்ப் பிரதேசங்களில் எந்தெந்த இடங்கள் சுற்றுலாத் துறையை வளர்க்க உதவும் என்று ஆராய்ந்துள்ளனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மகிந்த ராஜபக்ச, "மகிந்த சிந்தனை" என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து வெளியிட்டார். அதிலும், USAID குறிப்பிட்ட கிழக்கு மாகாணப் பிரதேசங்களில், சுற்றுலாத் துறையை வளம் படுத்துவது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

அமெரிக்க பின்னணியில், நோர்வே அனுசரணையில், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப் படாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு, சுனாமி அனர்த்தம் நடப்பதற்கு முன்னர், இரண்டு தரப்பினரும் எந்த விதமான சமரச உடன்படிக்கைக்கும் வரவில்லை.

சுனாமி ஏற்படுத்திய பேரழிவுகள் காரணமாக, அரசினதும், புலிகளினதும் போரிடும் ஆற்றல் வெகுவாகக் குறைத்திருந்தது. அந்தத் தருணத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் P-TOMS எனும் உடன்படிக்கை எட்டப் பட்டது. சுனாமி நிவாரணத்தை நிர்வகிக்கும் பெயரில், சிறிலங்கா அரசும், புலிகளும் ஒரு சமரசத்திற்கு கொண்டு வரும் நோக்கிலான, அமெரிக்காவின் முயற்சியில் தான் அதுவும் சாத்தியமானது.

பேச்சுவார்த்தைகள் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா எதிர்பார்த்த சமாதானம் மட்டும் வரவில்லை. இதற்கிடையில், புலிகளும் போருக்கு தயாராவதற்காக, நான்கு ஆயுதக் கப்பல்களை தருவித்திருந்தனர். மட்டக்களப்பு கரையில் இருந்து, சுமார் ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படையினரால் அந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப் பட்டன. புலிகளின் கப்பல்கள் பற்றிய தகவல்களையும், செய்மதிப் படங்களையும் கொடுத்துதவியது வேறு யாருமல்ல. அமெரிக்காவே தான்.

தற்போது ஈழப் போர் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கிழக்கு மாகாண கரையோரத்தை சுற்றுலாத் துறைக்கு தாரை வார்க்கும் திட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. புலிகள் இருந்த காலத்தில், அவர்கள் அமெரிக்காவையோ, அந்நிய மூலதனத்தையோ எதிர்க்கவில்லை. சுற்றுலாத்துறையை ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு குண்டு கூட வெடிக்க வைக்கவில்லை. ஏனெனில், புலிகள் மேற்கத்திய நாடுகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 

நீண்ட காலமாக இழுபட்ட தமிழ் - சிங்கள இன முரண்பாடு, சுற்றுலா முதலாளிகளின் எண்ணம் ஈடேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அதாவது, ஒரு தமிழ்க் கிராமத்தின் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிலங்கள் அபகரிக்கப் பட்டாலும், அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குள் தஞ்சம் கோருவதும், பின்னர் அந்த மக்கள் மத்தியில் இருந்து போராளிகள் உருவாவதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது.

புலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழர்களின் நிலங்களை அபகரித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை. பாதிக்கப் பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த ஏழைத் தமிழர்கள் என்பதால், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா, அறுகம் குடா, அம்பாறை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில், தமிழருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன. 

அம்பாறையில் சில தமிழ்க் கிராமங்களில், சீருடை அணிந்த நபர்கள் குடிசை வீடுகளை கொளுத்தி, மக்களை வெளியேற்றி உள்ளனர். சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களும் கூட இந்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளன. ஏனெனில், வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமையை விட மிகவும் உறுதியானது. 

கிழக்கு மாகாணத்தில், சிறிலங்கா அரச படைகளின் நில அபகரிப்பினால் பாதிக்கப் பட்டவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல. வில்பத்து சரணாலயத்தை அண்டிய 900 ஏக்கர் நிலங்களை, கடற்படையினர் அடாத்தாக பறித்துள்ளனர். சில சிங்களக் கிராமங்களும் அதற்குள் அடங்குகின்றன. கிழக்கு மாகாணத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

முன்னொரு காலத்தில், சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமை இழைத்ததுவோ, அதையே தற்போது சிங்களவர்களுக்கும் செய்கின்றது. ஏனெனில், சிறிலங்காவில் இருப்பது வெறுமனே சிங்கள பேரினவாத இராணுவம் மட்டுமல்ல. பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் அதன் முக்கிய கடமை தான். 

ஈழப்போர் நடந்த காலங்களில், தமிழர்கள் மட்டுமே பாதிக்கப் பட்டனர். பல தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த மக்களை வெளியேற்றிய அரச படையினர், அவற்றை சிங்களக் கிராமங்களாக மாற்றினார்கள். பிற்காலத்தில் போர் நடந்த காலத்தில், புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்களக் கிராமங்களை தாக்கினார்கள். இதன் மூலம், அரசு சிங்களவர்களையும், தமிழர்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்க முடிந்தது. 

2014, மார்ச் மாதம், என்றுமில்லாத அதிசயமாக, நிலமிழந்த தமிழ், சிங்கள கிராமவாசிகளின் ஒன்று பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பாணமை, சாஸ்திரவெல, ராகம்வெல, உல்லா ஆகிய கிராமங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

போர் முடிந்த அடுத்த வருடம், 2010 ஆம் ஆண்டு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். நிலமிழந்த கிராம மக்கள், கொழும்பில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், அரசு சார்பான மனித உரிமைகள் ஆணைக்குழு, நிலமிழந்த மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும், காலங்காலமாக வசித்து வந்த கிராமங்களில் இருந்து விரட்டப் படும் காரணம் என்ன? இங்கே தான், சிங்கள பேரினவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாகின்றது. இலங்கையை, தாய்லாந்து போன்று உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக்குவது தான் அவர்களது குறிக்கோள்.

சுற்றுலா நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வளங்கள் அத்தனையும் இலங்கையில் உள்ளன. இலங்கையின் அழகான கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. மேலைத்தேய உல்லாசப் பிரயாணிகள் பலருக்கு, இலங்கை ஒரு சொர்க்கபுரி. "கிழக்கு மாகாணக் கடற்கரைகள், அலை மேல் சறுக்கும் விளையாட்டிற்கு (surf) ஏற்ற இடம். உலகத் தரம் வாய்ந்தது." என்று USAID கூறுகின்றது. உள்ளூர் இளைஞர்களுக்கு சிறிது ஆங்கில மொழி அறிவைக் கொடுத்து, ஹோட்டல் பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

அதாவது, நேரடியாகச் சொல்வதென்றால், சிறிலங்கா படையினரால் அபகரிக்கப் பட்ட நிலங்களில், சுற்றுலா விடுதிகள் கட்டப் படவுள்ளன. அவற்றில் வேலை செய்வதற்கு, நிலங்களை பறிகொடுத்த மக்களை பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். தாய்லாந்திலும், தென்னிலங்கையிலும் நடப்பதைப் போன்று, சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தால் பாலியல் தொழிலாளர்களும் பெருகி விடுவார்கள். முதலாளிகளின் இலாபவெறியை கருத்தில் கொண்டு, அது போன்ற தீய விளைவுகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்.

"மகிந்த ராஜபக்ச இனப் படுகொலையாளன். எப்படியும் அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் போட்டு தண்டித்து விடும்..." என்று நாங்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருந்தாலும், எதுவுமே நடக்காத காரணம் இது தான். மகிந்த சிந்தனையும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். 

"புலிகள் இப்போதும் இருக்கிறார்கள். மீண்டும் போரிட வருவார்கள்..." என்றொரு பொய்யைக் கூறித் தான், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய நில அபகரிப்புகளை நியாயப் படுத்துகிறார். ஆனால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப் படுகின்றன என்ற உண்மையை மட்டும் கூற மாட்டார். மரத்தால் விழுந்தனை, மாடேறி மிதித்தது போல, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு உலக வங்கியும் ஒத்துழைக்கிறது.

உலக வங்கி, அமெரிக்க அரசு, மகிந்த அரசு ஆகியன தமிழர்களை கூட்டாக சேர்ந்து ஒடுக்குகின்றன. இந்த நேரத்தில், நடுத்தர வர்க்க தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வலதுசாரி தமிழ்தேசியவாதிகள் சிலர், ஏகாதிபத்திய விசுவாசத்தை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றனர். அதாவது, "தமிழர்கள் நில உரிமைக்காக போராடவில்லையாம், தன்னைத் தானே ஆளும் அரசு அமைக்க போராடுகிறார்களாம்."

இதனால் அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி இது தான்: "எங்களிடம் தமிழீழம் தந்திருந்தால், நாங்களே அந்த நிலங்களை அபகரித்துக் கொடுத்திருப்போம்!" அப்படி இல்லையென்றால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்களை சுற்றுலா ஸ்தலமாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன? 

"தமிழீழத்தை ஆளப் போகும் தமிழர்களும்", உலக வங்கியிடம் தானே கடனுதவி கேட்டு கையேந்தப் போகிறார்கள்? அப்போது இதே அம்பாறை நிலங்களை பறித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, உலக வங்கி உத்தரவிட மாட்டாதா?

இங்கே கூறப்பட்டுள்ள விபரங்கள், மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி பெரு மக்களுக்கு மட்டும் தான் புதினமாகத் தோன்றும். அம்பாறையில் வாழும் ஏழை உழைக்கும் வர்க்க தமிழர்கள், தமது  எதிரிகளை சரியாகவே எடை போட அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள், நிலமிழந்த சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடினார்கள். 

அம்பாறையில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழ் மக்கள், தமது பொது எதிரியான, சிறிலங்கா தரகு முதலாளிய அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வளவு காலமும், இனவாத சக்திகளின் சொல்லைக் கேட்டு, சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்கள் இழந்தது அதிகம்.

இவ்வளவு காலமும் இனவாதக் குட்டையை கலக்கிக் கொண்டிருந்த முதலைகளான பன்னாட்டு முதலாளிகள், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் தைரியமாக திரிகின்றனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருமில்லை. எல்லோரும் தமிழனா, சிங்களவனா என்ற கயிறிழுப்புப் போட்டியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையை மறுகாலனியாக்குவதற்கு இதுவே சரியான தருணம்.


மேலதிக தகவல்களுக்கு:

  • USAID: Sri Lanka connecting regional economies, Assesment of Tourism in Eastern, Uva, and North Central provinces of Sri Lanka; http://www.bpa-srilanka.com/files/USAID-CORE-Tourism-Assessment_1_.pdf
  • Illegal Land Grabs By Sri Lanka Navy Destroys Wilpattu National Park; https://www.colombotelegraph.com/index.php/illegal-land-grabs-by-sri-lanka-navy-destroys-wilpattu-national-park/
  • Human Rights Commission Is Inactive: Villagers Of Panama Protest Land Grabbing; https://www.colombotelegraph.com/index.php/human-rights-commission-is-inactive-villagers-of-panama-protest-land-grabbing/

Thursday, November 13, 2008

சுதந்திர சுரண்டல் வலையம்


இலங்கையில் எழுபதுகளின் இறுதியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த மேற்குலகின் ஆசி பெற்ற யு.என்.பி. கட்சி தெற்கு ஆசிய வரலாற்றில் அதுவரை கேள்விப்பட்டிராத புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைத்தது. “சுதந்திர வர்த்தக வலையம்” என்ற ஒன்றை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களை தடையின்றி வந்து முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தது. குறைந்த விலையில் உழைப்பை சுரண்டுவதற்கு ஏற்ப, தனது தொழிலாளர்களை கொடுப்பதாக அறிவித்தது. ஒரு பக்கம் தனது நாட்டின் சிறுபான்மை தமிழ் இனத்தின் மீது இனவெறி தாக்குதல்களையும், மறு பக்கம் மொத்த ஏழை, எளிய மக்கள் மீதும் நவ -லிபரல் தாக்குதல்களையும் ஒரு சேர தொடுத்தது. உலகின் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் இனவாதத்திற்கும், பொருளாதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். இன்றைய “உலக ஒழுங்கின்” முன்னோடி நாடான அமெரிக்காவில் கடந்த எட்டு வருட புஷ் ஆட்சியில் தான், ஒரு பக்கம் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லீம் சிறுபான்மை மீதான அடக்குமுறையும், அதேநேரம் வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, அந்நிய கடன் என்பன அதிகரித்துக் கொண்டே போனது.

காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளை பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலியாக, அல்லது நவகாலனித்துவ தொடர்ச்சியாக வெளிநாட்டு கடன், பொதுத் தேர்தல்கள் அமைந்துள்ளன. என்றோ ஒரு நாள் இந்த நாடுகள் தமது ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும் என்ற முன்நோக்கோடு பிரிட்டன் போன்ற நாடுகள் அப்போதே திட்டம் தீட்டியுள்ளன. ஆகவே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் யாவும் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அதற்குமாறாக மேற்குலக தேசங்கடந்த வர்த்தக கழகங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக, இடைத்தரகர்களாக செயற்படும் வர்க்கத்தை மட்டுமே உருவாக்கியுள்ளது. இவர்களுக்கு எந்த விதமான தேசாபிமானமும் கிடையாது. தமது வருமானம் குறித்து மட்டுமே அக்கறைப்படுகின்றனர்.

இலங்கையில் யு.என்.பி. எழுபதுகளில் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்கள், இந்தியாவில் தொன்னூறுகளில் ராஜீவ் காங்கிரஸ் கொண்டு வந்த மாற்றங்கள், யாவும் அங்கே அந்நிய நாடுகளில் தங்கியிருக்கும் தரகு முதலாளிகளையும், அவர்களுக்கு சேவை செய்யும் அரசாங்கத்தையும் உருவாக்கி விட்டிருந்தன. இந்த நிலைமை, தற்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்கின்றது. இந்த பொருளாதாரம் எப்படி செயல்படுகின்றது என்பதற்கு சிறந்த உதாரணம், “வெளிநாட்டு வேலைவாய்ப்பு”. ஒரு காலத்தில் மத்தியதர வர்க்கம் தமது பிள்ளைகளை எஞ்சினியர், டாக்டர்களாக உருவாக்கி, அவர்களது சேவைகளை மலிவு விலைக்கு பிரிட்டிஷ், அமெரிக்க கம்பெனிகளுக்கு விற்பனை செய்து, அந்நிய செலாவணி சேர்த்தனர். இதே நோக்கத்திற்காக தொன்னூறுகளில் இந்தியா கணிப்பொறி வல்லுனர்களை உருவாக்கியது.

ஒரு தேசத்தை நிர்வகிக்கும் மத்தியதர வர்க்கமே அவ்வாறு நடந்து கொள்ளும் போது உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனையும் அதுவாகவே இருப்பதில் வியப்பில்லை. மத்திய கிழக்கு நாட்டு பாலைவனங்களில், புதிதாக கட்டப்பட்ட நவீன நகரங்களில், உடல் உழைப்பை வழங்க இலங்கை-இந்திய மலிவு விலை தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். கூலிக்கும், விற்பனை சரக்கிற்கும் இடையிலான உறவை அறியாத மக்கள், தொழில் சந்தையில் அதிக விலை கொடுக்கும் முதலாளிகளின் “காருண்யத்தை” கண்டு வியந்தனர். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வறுமையில் இருந்து தப்புவதற்கு இது ஒரு வழி என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டது. இந்த மாய மானை நம்பிய மக்கள் அந்நிய தேசம் சென்றால் பொருள் ஈட்டலாம் என்ற கனவுடன், பல்வேறு சிரமங்களையும் பொருட்படுத்தாது உலகம் முழுவதும் பணக்கார நாடுகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

பணக்கார நாடுகளை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு தொழிலாளரின் உழைப்பை சேவைத் தொழில்துறை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றது. அதிகம் படித்த வைத்திய கலாநிதி முதல், பாடசாலை பக்கம் போகாத துப்பரவுப் பணியாளர் வரை சேவைத்துறையில் தான் பணி புரிகின்றனர். தவிர்க்கவியலாமல் இவர்களது உழைப்பு அந்த நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. உதாரணத்திற்கு லண்டன் தெருக்களை கூட்டும் துப்பரவு பணியாளர் லண்டனில் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் சராசரியில் இருந்து சிறிதளவு மட்டுமே குறைகின்றது.

அதற்கு மாறாக உற்பத்தி தொழில்துறைக்கு சில அனுகூலங்கள் உள்ளன. அவை தமது தொழிற்சாலைகளையே குறைந்த வேதனம் கொடுக்கும் நாடுகளுக்கு மாற்றி, அதிக லாபம் சம்பாதிக்க முடியும். அமெரிக்க-ஐரோப்பிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து விட்டு பல நிறுவனங்கள் தமது தொழிலகங்களை வறிய நாடுகளில் நிறுவி வருகின்றன. இதற்கு தாம் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இருக்கும் “ஏழை மக்களுக்கு உதவுவதாக”(வேலை வாய்ப்பு கொடுப்பதாக) ஒரு காரணம் கூறுகின்றனர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் இதுவும்.

பணக்கார நாடுகளில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்றதென்றால், அதன் காரணம் அந்த நாடுகளில் தொழிலாளருக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகம் என்பதால் தான். உற்பத்தி செலவினங்களை குறைத்து லாபத்தை பெருக்க வேண்டுமானால், தொழிலாளியின் சம்பளத்தை குறைப்பது சிறந்த வழி. மூலப்பொருளின் விலை, போக்குவரத்து செலவு என்பனவற்றை குறைப்பது, அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டவை. மேற்குலக நாடுகளில் தொழிலாளியின் சம்பளம் குறைக்கப்படும் போது, அது பலவித சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஒருவேளை கிளர்ச்சிகளுக்கும் வழிவகுக்கலாம். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக, நீண்டகாலமாகவே மேற்குலக நாடுகள், தமது உழைக்கும் மக்களை, சேவைத்துறையில் வேலை தேடுமாறு நிர்ப்பந்திக்கின்றன. (தவிர்க்கவியலாது சேவைத்துறையை இடம்மாற்ற முடியாத நிர்ப்பந்தத்தை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

உலகமயமாக்கல் தொடர்பான பிரச்சினைகளை, மேற்குலக கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம், என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். இல்லாவிட்டால் “ஓநாய் தன்மீது சகோதர பாசத்துடன் நடந்து கொள்வதாக ஆடு நினைத்த” கதையாகி விடும். ஏனெனில் எமது மக்கள் பலர்(படித்தவர் முதல் பாமரர் வரை) உலகமயமாக்கல் வந்தது, தமது நன்மைக்கே என்று கருதிக்கொண்டிருக்கின்றனர். உலகமயமாக்கல் முழு வீரியத்துடன் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்பே, “சுதந்திர வர்த்தக வலையம்” என்ற பொருளாதாரக் கொள்கை முன்னோட்டமாக காட்டப்பட்டது. இந்த “வலையம்” என்ற சொல், ஒரு நாட்டின் சிறிய நிலப்பரப்பையே குறிக்கும். அதுவே ஒரு தேசம் முழுவதும் விஸ்தரிக்கப்படும் வேளை, “உலகமயமாக்கல்” என்ற புது அவதாரம் எடுத்திருக்கும்.

ஒரு தேசத்தின் இறைமை என்பது வெறும் அரசியல் சுதந்திரம் சார்ந்த விடயமல்ல. பொருளாதார சுதந்திரம் முக்கியமானது. உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக எழுதப்படும் சட்டங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகளை வழங்குவதில்லை. சில உற்பத்தி சாதனங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவையும், அதற்கென முதலிடும் பணபலத்தையும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இயங்க விடுவதில் தவறில்லை. இரண்டு பக்க நலன்களையும் முன்னிலைப்படுத்தும் “Joint Venture” நிறுவன முறை ஏற்கனவே உள்ளது. கியூபா போன்ற சோஷலிச நாடுகள் அந்த முறையை தான் பின்பற்றுகின்றன.

உலகமயமாக்கலின் அழுத்தங்களுக்கு தலை சாய்க்கும் நாடுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளூர் நிறுவனப் பங்குகளை வாங்கவும்(அதன் மூலம் அந்த நிறுவனம் வெளிநாட்டவர் சொத்தாகலாம்), அல்லது நேரடியாகவே முதலீடு செய்யவும்(இதனால் ஈட்டப்படும் லாபம் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு திரும்ப கிடைக்காது) சட்டங்களை திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு பலத்துடன் உள்ளூர் நிறுவனங்கள் போட்டி போட முடியாதாகையால், அவர்கள் தரகு முதலாளிகளாக மாறி விடுவர். சிறு முதலாளிகள் தான் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் ஓரளவிற்கேனும் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழே தான் நடக்கும். அதாவது வர்த்தகத்தில் ஈடுபடுவது வெளிநாட்டு நிறுவனமேயானாலும், உள்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும். வழமையான வரிகள் தவிர, லாபத்தில் ஒரு பங்கு கூட அரசுக்கு வரியாக போய்ச் சேரும். (இதனால் அரச பட்ஜெட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் விடயமாகவும் பார்க்கப்படலாம்.) மேலும் தொழிலாளர் நல சட்டங்களை மதிக்க வேண்டுமென்பதால், தொழிலாளர் சுரண்டப்படுவது குறையும். தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டால், சட்டப்பாதுகாப்பை கோரலாம். ஆனால் சுதந்திர வர்த்தக வலையங்கள் இவற்றில் இருந்து விதிவிலக்கானவை, அல்லது அந்நிய நிறுவனங்களை கவர்வதற்காக விதிவிலக்கு அளிக்கப்படுகின்றன.

தனது நாட்டில், குறிப்பிட்ட பிரதேசத்தை சுதந்திர வர்த்தக வலையமாக பிரகடனப்படுத்தும் அரசு, அங்கே தனது சட்டங்களை பிரயோகிக்காமல் தளர்த்திக் கொள்கின்றது. முதலீடு செய்யும் நிறுவனத்தை கவரும் இனிப்பான விடயங்கள் பல இதிலே உள்ளன. முதலில் தொழிற்சாலை கட்டும் செலவில் அரசாங்கமும் ஒரு பங்கை போடும். இரண்டாவதாக வேலைக்கு வரும் உள்ளூர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கவோ, அல்லது பிற தொழிலாளர் நல சட்டங்களின் துணை கொண்டு பாதுகாப்பு தேடவோ முடியாது. மூன்றாவதாக லாபமாக கிடைக்கும் தொகையை மறுமுதலீடு செய்யாமல் நாட்டை விட்டு எடுத்துச் செல்லலாம். குறிப்பிட்ட வருடங்களுக்கு லாபத்திற்கு வரியும் கட்டத்தேவையில்லை.(Tax Holiday)

இவ்வாறு கட்டுப்பாடற்ற, சுதந்திர வர்த்தக வலையம் அமைவதால் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு என்ன பிரயோசனம்? Off shore கம்பனிகள் அமைக்க இடம்கொடுக்கும் குட்டி நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற சட்டத்தை கொண்டுள்ளன. அதாவது வரிவிலக்கு அளிப்பதன் மூலம், தமது நாட்டிற்கு பெருமளவு முதலீட்டாளரை கவர்வது. இந்த நிறுவனங்கள் அமைப்பதற்கு தேவைப்படும் உள்நாட்டு சட்ட ஆலோசகர்கள், ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்காக பயன்படுத்தபோகும் துறைமுகம், இவற்றை விட மானேஜர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்தல். இப்படியான வழிகளில் தான் அந்த நாட்டிற்கு வருமானம் கிடைக்கின்றது. வரிகளால் அல்ல.

சுதந்திர வர்த்தக வலையத்தில், அனேகமாக உப-ஒப்பந்தக்காரர் தான் தொழிற்சாலை அமைக்கின்றனர். உதாரணத்திற்கு அமெரிக்காவின் பிரபல ஆயத்த ஆடை விற்பனை நிலையம் ஒன்று, தனக்கு தேவையான ஆடைகளை தயாரிப்பதற்கு பாகிஸ்தான் நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்தம் வழங்கும். இந்த பாகிஸ்தான் நிறுவனம் இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு தொழிலகத்தை நிறுவி, அங்கிருந்து ஆடை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும். இத்தகைய சிக்கலான வலைப்பின்னல் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகின்றது. ஏனெனில் சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிலாளரை கொடுமைப்படுத்தியதாக போடப்படும் வழக்குகள் யாவும், உப-ஒப்பந்தக்காரருக்கு எதிராகவே போடப்படுகின்றன. பெரிய நிறுவனம் தனக்கு “எதுவும் தெரியாது” எனக்கூறி ஒதுங்கிக்கொள்ளும்.


சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக உள்ளனர். சில இடங்களில் குழந்தை தொழிலாளரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பல ஏழைக்குடும்பங்களில் ஆண் பிள்ளைகளை மட்டுமே படிக்க வைப்பதால், பெண் பிள்ளைகள் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இலங்கையாகவிருந்தாலும், கம்போடியாகவாக இருந்தாலும் இது தான் நிலைமை. உலகெங்கும் சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால், இது ஒரு பெண்ணியம் சார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது. பாலியல் துன்புறுத்தல், மகப்பேறு விடுமுறையில் நிலவும் கட்டுப்பாடுகள் போன்றன, பெண்கள் என்பதால் மேலதிக சுரண்டலுக்கு ஆளாவதை எடுத்துக்காட்டுகின்றது.


சுதந்திர வர்த்தக வலையங்கள், பண்டைய கால உழைப்பு சுரண்டல் சமூகத்தையே உருவாக்கி வருகின்றதால், இவற்றை “சுதந்திர சுரண்டல் வலையம்” என அழைப்பதே பொருந்தும். எனினும் இவற்றை ஆதரிக்கும் Paul Krugman, Joan Norberg போன்ற பொருளாதார அறிஞர்களும் உள்ளனர். அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் ஒரு காலத்தில் அப்படியான நிலை இருந்ததை சுட்டிக் காட்டுகின்றனர். குறைந்த கூலி வழங்கி அதிக நேரம் வேலை வாங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகளற்ற தொழிலகம், தொழிலாளருக்கு உதவாத சட்டங்கள், தொழிற்சங்கம் அமைக்க தடை, ஆகிய நிகழ்கால சுதந்திர வர்த்தக வலைய குறைபாடுகள் யாவும், 19 ம் நூற்றாண்டிலும், 20 ம் நூற்றாண்டு தொடக்கத்திலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சர்வசாதாரணமாக காணக்கூடியதாக இருந்தவை தான். எனினும் இந்த நிலைமை தொழிலாளர் போராட்டங்களால் தான் மாறியதே தவிர எந்த முதலாளியும் ஒரே இரவில் மனிதாபிமானியாக மாறிவிடவில்லை.


இந்த பொருளாதார அறிஞர்கள் வாதிடும் “பாரம்பரிய முதலாளித்துவம்” மேற்குலகில் புரட்சிகர மாற்றங்களுக்குள்ளாகிய போது, அதனை தடுக்கக் கூடிய பலமான சக்தி எதுவும் அப்போது இருக்கவில்லை. ஆனால் இன்று மூன்றாம் உலக நாடுகளின் நிலை வேறு. அங்கே எந்த நாட்டில், எந்தவொரு போராட்டம் வெடித்தாலும், அதனை அடக்குவதற்கு மேற்குலக நாடுகள் உதவிக்கு ஓடோடி வரும். இந்த நெருங்கிய தொடர்பை விளக்குவதற்காக தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் வரலாற்றை இரைமீட்க வேண்டி ஏற்பட்டது. இல்லாவிட்டால் சுரண்டலை ஆதரிக்கும் அறிஞர்கள் நமது காதிலே முழம் முழமாக பூச்சுற்ற காத்திருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டும் இன்னொரு உதாரணம் “ஆசிய புலிப்பாய்ச்சல் பொருளாதார” சிங்கபூர், மற்றும் ஹொங்கொங். இந்த குட்டி நாடுகளில், ஒரு காலத்தில் நாடு முழுவதும் சுதந்திர வர்த்தக வலையமாக இருந்தது உண்மை தான். மேற்குலக வாழ்க்கைமுறைக்கு நிகராக தனிநபர் வசதிவாய்ப்புகள் அதிகரித்தது உண்மை. ஆனால் அதற்கு முக்கிய காரணம், அப்போது கம்யூனிச நாடுகளாக இருந்த சீனா, வியட்நாம் ஆகியவற்றுக்கு எதிராக போட்டி போடுவது தான்.


உலகமயமாக்கலுக்கும், சுதந்திர வர்த்தக வலையங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. பெரிய பெரிய நிறுவனங்கள் யாவும் உலகமயமாக்கல் காரணமாக சர்வதேச வர்த்தக சட்டங்கள் தளர்த்தப்பட்டதை பயன்படுத்தி, தமது பொருட்களை குறைந்த கூலிகொடுக்கும் நாடுகளில் உற்பத்தி செய்து, அவற்றை அதிக விலைக்கு பணக்கார நாடுகளில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றன. காலனிய கால வர்த்தகம் மீண்டும் “உலகமயமாக்கல்” என்ற புதிய பெயரில் நடைமுறைக்கு வருகின்றது.
அன்று “கிழக்கிந்திய வர்த்தக கழகம்” என்ற பன்னாட்டு நிறுவனம்,(ஒல்லாந்தர் தாமே உலகின் முதலாவது தேசங்கடந்த வர்த்தக நிறுவனத்தை உருவாக்கியதாக, இப்போதும் பழம்பெருமை பேசுவர்) இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய ஆசிய நாடுகளில் மலிவு விலைக்கு மிளகு, கறுவா, கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களை வாங்கி, அவற்றை ஐரோப்பா கொண்டு சென்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இன்று அதே நாடுகளில் நவீன தேசங்கடந்த நிறுவனங்கள் சுதந்திர வர்த்தக வலையம் அமைத்து, தொழிலாளரை சுரண்டி அதிக லாபம் ஈட்டுகின்றன. நைக் என்ற பாதணி தயாரிக்கும் நிறுவனம், வால்-மார்ட் என்ற பல்பொருள் அங்காடி என்பன இதனால் பயனடையும் குறிப்பிடத்தக்க பிரபல தேசங்கடந்த நிறுவனங்கள்.


ஆகவே சுதந்திர வர்த்தக வலையத்தை முற்போக்கான தொழில்துறை புரட்சியாகவோ, அல்லது முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகவோ காண்பது அறிவீனம். அவை சந்தேகத்திற்கிடமின்றி மறுகாலனியாதிக்கத்தின் மறுவடிவமாகும்.
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy