Showing posts with label பிரிட்டன். Show all posts
Showing posts with label பிரிட்டன். Show all posts

Tuesday, May 16, 2017

அடிமைச் சிறுவ‌ர்க‌ளின் உழைப்பை உறிஞ்சிய தொழிற்புர‌ட்சி


தொழிற்புர‌ட்சியின் இருண்ட‌ ப‌க்க‌ம். அடிமைச் சிறுவ‌ர்க‌ளின் உழைப்பை உறிஞ்சி வ‌ள‌ர்ந்த‌ நெச‌வாலைக‌ள். 19ம் நூற்றாண்டு வ‌ரையில் இங்கிலாந்தில், அனாதைச் சிறுவ‌ர்க‌ள் நெச‌வுத் தொழிற்சாலைக‌ளில் அடிமைக‌ளாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

கிறிஸ்த‌வ‌ ம‌டால‌ய‌ங்க‌ள் அனாதைக் குழ‌ந்தைக‌ளை பொறுப்பெடுத்தாலும், ப‌ராம‌ரிப்புச் செல‌வுக்காக‌ ஒரு நெச‌வாலை முத‌லாளிக்கு விற்ப‌து வ‌ழ‌மையாக இருந்தது. அவ‌ர்க‌ளுக்கு 7 வ‌ய‌தாகும் பொழுது வேலைக்கு செல்ல‌ வேண்டும். தொட‌ர்ந்து 14 வ‌ருட‌ங்க‌ள் அடிமையாக‌ வேலை செய்து வ‌ந்தன‌ர்.

அதாவ‌து அந்த‌ சிறார் தொழிலாள‌ருக்கு ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌தில்லை. இருப்பிட‌மும், உண‌வும் கொடுத்து இல‌வ‌ச‌மாக‌ வேலை வாங்கினார்க‌ள். ச‌த்துண‌வு கொடுப்ப‌தில்லை. சிறு துண்டு குர‌க்க‌ன் மா ரொட்டி, சூப், பிஸ்க‌ட் இவ்வ‌ள‌வு தான் ஆகார‌ம்.

வேலையும் க‌டின‌மான‌து. காதை செவிடாக்கும் இரைச்ச‌லுட‌ன் இய‌ங்கும் இய‌ந்திர‌ங்க‌ள். பாதுகாப்பு ஏற்பாடுக‌ள் எதுவுமில்லை. அடிக்க‌டி யாராவ‌து விப‌த்தில் சிக்கி ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்கும். அவ்வாறு இற‌க்கும் சிறுவ‌ர்க‌ளை தூர‌த்தில் இருக்கும் ம‌யான‌த்தில் கொண்டு சென்று புதைப்பார்க‌ள்.

மெதுவாக‌ வேலை செய்யும் சிறுவ‌ர்க‌ளுக்கு ச‌வுக்கால், அல்ல‌து பிர‌ம்பால் அடித்து த‌ண்ட‌னை கொடுப்ப‌து வ‌ழ‌மை. த‌ப்பியோடி பிடிப‌ட்டால் அடித்து துவைத்து விடுவார்க‌ள். விப‌த்தில் சிக்கி விர‌ல் துண்டிக்க‌ப் ப‌ட்டாலும், ம‌ருந்து க‌ட்டிக் கொண்டு திரும்ப‌ வேலைக்கு போக‌ வேண்டும்.

ஆடை உற்ப‌த்திக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌டும் ப‌ருத்திப் ப‌ஞ்சில் இருந்து வரும் துக‌ள்க‌ள் நுரையீர‌லைத் தாக்கும். நாசித் துவார‌ங்க‌ளை அடைக்கும். புற்றுநோயும் வ‌ர‌லாம். இத‌னால் க‌டும் நோய்வாய்ப் பட்ட‌ சிறுவ‌ர்க‌ள் மர‌ண‌ம‌டைவ‌து சாதார‌ண‌ விட‌ய‌ம்.

சிறுவ‌ர்க‌ள் தானே என்று முதலாளிக‌ள் அது குறித்து இர‌க்க‌ம் காட்ட‌வில்லை. இலாப‌த்தை பெருக்குவ‌த‌ற்காக‌ சொற்ப‌ உண‌வையும் குறைத்து ப‌ட்டினி போட்டார்க‌ள். சிறுவ‌ர்க‌ள் ப‌சிக் கொடுமையால் ப‌ன்றிக்கு கொடுத்த‌ உண‌வையும், இலை குழைக‌ளையும் சாப்பிட்டார்க‌ள்.

அந்த‌க் கால‌த்தில் பிரிட்ட‌னில் பொதுக் க‌ல்வி இருக்க‌வில்லை. 1870 இலிருந்து தான் பெரும்பாலான‌ பிரிட்டிஷ் பிள்ளைக‌ள் ப‌ள்ளிக்கூட‌ம் செல்ல‌த் தொட‌ங்கின‌ர்.

அனாதைக் குழ‌ந்தைக‌ள் அடிமைக‌ளாக‌ வேலை வாங்க‌ப் படுவ‌து பிரிட்டிஷ் அர‌சுக்கு தெரிந்தாலும் க‌ண்ணை மூடிக் கொண்டிருந்த‌து. ப‌ல‌ தொழில‌திப‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளாக‌, அல்ல‌து அர‌சிய‌ல் ப‌த‌விக‌ளில் இருந்த‌ன‌ர். அத‌னால் பொது ம‌க்க‌ளுக்கு த‌க‌வ‌ல் செல்ல‌ விடாம‌ல் அமுக்க‌ப் ப‌ட்ட‌து.

தொழிற்சாலை ந‌ட்ட‌த்தில் மூட‌ப் ப‌ட்டாலும், சிறுவ‌ர்க‌ளுக்கு விடுத‌லை கிடைக்காது. அவ‌ர்க‌ளுக்கு 21 வ‌ய‌தாகும் வ‌ரையில் இன்னொரு முத‌லாளிக்கு கீழே வேலை செய்ய வேண்டும்.

த‌ன‌து 21 வ‌து வ‌ய‌தில் விடுதலை அடைந்த‌ Robert Blincoe என்ற‌ இளைஞ‌ன் பிற்கால‌த்தில் உழைத்து சேமித்த‌ ப‌ண‌த்தில் தானே ஒரு தொழிற்சாலை ஆர‌ம்பித்தான். தொழிலாள‌ர்க‌ளை க‌ச‌க்கிப் பிழியாம‌ல் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்று நிரூபித்தான். அவ‌ன் த‌ன‌து அடிமை அனுப‌வ‌ங்க‌ளை நூலாக‌ எழுதி வெளியிட்டான். அதில் வ‌ந்த‌ த‌க‌வ‌ல்க‌ள் பிரிட்டிஷ் ச‌மூக‌த்தை அதிர்ச்சி அடைய‌ வைத்த‌ன‌.

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: Historia, 4/2017)


Saturday, June 25, 2016

பிரிந்தது பிரித்தானியா! தெரிந்தது வர்க்க எதிரிகளின் கோர முகம்!


அன்று உலகையே காலனிப் படுத்திய பிரித்தானியா, இன்று தனது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் காலனிப் படுத்தி விட்டதாக குமுறியதன் விளைவு தான் ‪#‎Brexit‬!

தேசங்கடந்த பெரும் வணிக நிறுவனங்களும், லிபரல் அரசியல்வாதிகளும் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பு ஒரு பேரரசு (Super State) ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் நாடுகள், தமது இறைமையில் ஒரு பகுதியை அடகு வைக்க வேண்டும். தேசிய சட்டங்களை விட ஐரோப்பிய (ஒன்றிய) சட்டங்கள் மேலானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் உறுப்புரிமை பெற்ற ஒரு தேசத்தின் உள்ளே நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஐரோப்பிய ஒன்றியம் மூக்கை நுழைக்க முடியும்.

பல தசாப்த காலமாகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தத்தமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்து வருகின்றனர். தேசிய முதலாளிகளின் நலன்கள் பாதிக்கப்படுதல், குடியேறிகளின் வருகையினால் வேலை வாய்ப்புகள் பறிபோதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பொது மக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

பிரிட்டனில் குடியேறிகளுக்கு எதிரான புதிய இனவாதக் கட்சியான UKIP, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தனியா பிரிய வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வந்தது. அது தேர்தலில் பெரிய வெற்றி எதையும் பெற்றிருக்கா விட்டாலும், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தது. அதன் தலைவர் நைஜல் பராஜ் என்ன பேசினாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அவர் கூறியவை பெரும்பாலும் வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அதே நேரம், ஆளும் கட்சியான வலதுசாரி கென்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளும் பலர் அந்தக் கொள்கையை ஆதரிக்கத் தொடங்கினார்கள். சிலர் கட்சி மாறினார்கள். அதன் மூலம் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அழுத்தம் அதிகரித்தது. போதாக்குறைக்கு லண்டன் மாநகரின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சனும், பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது குறி பிரதமர் பதவியாக இருந்தது.

தற்போது பதவி விலகியுள்ள பிரதமர் டேவிட் கமெரூன் இதை வைத்து அரசியல் லாபம் தேடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டார். அதாவது, வலதுசாரிகளின் கொள்கைகளை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஆதரிக்க வேண்டும். இந்த இரட்டை வேடம், இறுதியில் அவரது பிரதமர் பதவிக்கு ஆப்பு வைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிந்து சென்றுள்ளதை, "ஒரு மாநிலம் சுதந்திர நாடாகி விட்டது" என்பது போல சிலர் பேசி வருகின்றனர். பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு என்றைக்குமே சீரானதாக இருக்கவில்லை. தனது தனித்துவத்தை பேணுவதற்காக யூரோவை ஏற்றுக் கொள்ளாமல், ஸ்டேர்லிங் பவுன் நாணயத்தையே தொடர்ந்தும் வைத்திருக்கப் போவதாக அடம் பிடித்தது. அதே நேரம், குடியேறிகள், அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, செங்கண் ஒப்பந்தம் செய்ய மறுத்து வந்தது.

பிரித்தானியா ஒரு உலக அணுவாயுத வல்லரசு. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர். இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பாக் கண்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இது போன்ற காரணங்களினால், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கிப் போக முடியாமல், பிரித்தானியாவுக்கு தாழ்வுச் சிக்கல் இருந்து வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் ஒப்பந்தப் படி, உறுப்புரிமை பெற்ற எந்த நாடும் பிரிந்து செல்ல முடியும். ஆனால், வரலாற்றில் இதுவே முதல் தடவை. முன்பு கிரீஸ் பிரிந்து செல்ல விரும்பிய நேரம், கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அதற்குக் காரணம், கிரேக்கம் ஒரு கடன்பட்ட நாடு. அது மட்டுமல்ல, யூரோ பொது நாணயத்தை கொண்டுள்ளது. அது கடுமையான பொருளாதார விளைவுகளை உண்டாக்கி இருக்கும்.

பிரிட்டன் உலகிலேயே பெரிய மூலதனத்தை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று. அத்துடன், இராணுவ வல்லரசு. அது மட்டுமல்லாது, யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளாமல், தொடர்ந்தும் பவுன் வைத்திருந்தது. மேலும், ஜெர்மன், பிரான்சுடன், பிரிட்டனும் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இருந்தன. இத்தாலி தவிர்ந்த பிற சிறிய நாடுகளிடம் அந்தளவு பலம் கிடையாது. பிரிட்டன் பிரிவதை இலகுவாக்கிய காரணங்கள் இவை தாம்.

இருப்பினும், பிரிட்டனின் உதாரணத்தை பின்பற்றி பிற ஐரோப்பிய நாடுகளும் பிரிந்து செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. பிரித்தானியா கூட, அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாக தொடர்ந்தும் இருக்கும். அதற்குப் பிறகு, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மாதிரி, வேறொரு வர்த்தக உடன்படிக்கை (European Economic Area (EEA)) செய்து கொள்ளலாம்.

மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நோர்வே முக்கால்வாசி ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. அனேகமாக பெரிய வித்தியாசம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. சுவிட்சர்லாந்து குடியேறிகள் விடயத்தில் தான் விரும்பிய நிலைப்பாட்டை எடுக்கும் சுதந்திரத்தை கொண்டுள்ளது. அதே போன்ற ஒப்பத்தங்களை, எதிர்காலத்தில் பிரித்தானியாவும் செய்து கொள்ளலாம்.

பிரித்தானியா பிரிய வேண்டும் என்று ஓட்டுப் போட்டவர்களின் முக்கிய நோக்கம், குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது. அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது? போலந்து, ருமேனியா, பல்கேரியா போன்ற கிழக்கைரோப்பிய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பிரிட்டனில் அதிகம். அவர்களை வெளியேற்ற முடியுமா? அது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

பல்கேரியா, ஸ்பெயின், சைப்பிரஸ் போன்ற நாடுகளில், பிரிட்டிஷ் ஓய்வூதியக்காரர்கள் வீடுகளை வாங்கி, அங்கேயே வசித்து வருகின்றனர். அது மட்டுமல்ல, இலட்சக் கணக்கான பிரிட்டிஷ் குடியேறிகள், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். பிரிட்டன் ஐரோப்பிய குடியேறிகளை திருப்பி அனுப்பினால், பதிலடியாக ஐரோப்பிய நாடுகள் பிரிட்டிஷ் குடியேறிகளை திருப்பி அனுப்பலாம்.

அப்படியானால் என்ன செய்யப் போகிறார்கள்? அனேகமாக, புதிய குடியேறிகளை அனுமதிப்பதற்கு புதிய நடைமுறை அமுலுக்கு வரலாம். பிரித்தானியாவில் குறிப்பிட்ட வேலைக்கு ஆள் பற்றாக்குறை இருந்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களை தருவிக்கலாம். 

உதாரணத்திற்கு, மருத்துவமனைகளில் தாதியர் (நர்ஸ்) வேலைக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. போலந்துக்காரர்கள், பாகிஸ்தான்காரர்களுடன் அந்த வேலைக்கு போட்டி போட வேண்டி இருக்கும். சுருக்கமாக, பிரித்தானியாவில் குடியேறிகளின் தேவை எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

பிரித்தானியா பிரிவதை பல (வலதுசாரி) தமிழர்களும் ஆதரித்தார்கள். கிழக்கைரோப்பிய குடியேறிகளின் பிரச்சினையை அதற்குக் காரணமாகக் கூறினார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், பிரிந்த பிரித்தானியாவில் அவர்களின் இருப்புக்குத் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

ஐரோப்பிய குடியேறிகளின் வருகையை தடுக்க முடியாது. ஆனால், தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளின் குடியேறிகளை வர விடாமல் தடுக்க முடியும். புதிய சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம். என்ன இருந்தாலும், "தமிழர்கள் கருப்பர்கள். கிழக்கைரோப்பியர்கள் வெள்ளையர்கள்."

UKIP என்ற தீவிர வலதுசாரிக் கட்சி தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கியது. அந்தக் கட்சியின் பெயரே (UK Independence Party) அதை உறுதிப் படுத்துகின்றது.

NHS எனப்படும் அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் நிதியை அதற்கு செலவிடலாம் என்று சொல்லித் தான் UKIP கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது உறுதியாகி விட்டது. தற்போது, UKIP தலைவர் நைஜல் பராஜ் தனது முன்னைய கொள்கையை மாற்றிப் பேசி வருகின்றார். "EU நிதியை NHS க்கு பயன்படுத்துவது சாத்தியமில்லை." என்கிறார்.

அத்துடன், பத்து வருடங்களுக்குள் அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்க வேண்டும். ஐரோப்பாவில் இருப்பது மாதிரி எல்லோருக்கும் பொதுவான காப்புறுதித் திட்டம் வேண்டும் என்பதும் UKIP கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள் ஆகும்.

"சுதந்திரம், இறைமை" பற்றிப் பேசும், UKIP போன்ற தீவிர வலதுசாரிகள், தங்களது சொந்த இன மக்களையே அடக்கி ஆளும் சுதந்திரத்தையும், தேசிய முதலாளிகளின் இறைமையையும் பற்றித் தான் கவலைப் பட்டுள்ளனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதும், மக்களுக்கு ஒரு வகையில் படிப்பினை தான். ஏகாதிபத்திய கூட்டமைப்பில் ஒரு விரிசலை உண்டாக்க முடிந்துள்ளது. அதே நேரம், சொந்த இனத்திற்குள் இருக்கும் வர்க்க எதிரிகளையும் அடையாளம் காண உதவியுள்ளது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, June 23, 2016

பிரித்தானியாவின் Brexit ஆதரவு "தீக்கோழி" தமிழர்கள்


பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை (Brexit), தமிழ் வலதுசாரிகள் ஆதரிப்பது ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், லண்டனில் வாழும் "தமிழ் இடதுசாரியான" சேனன் என்ற ட்ராஸ்கிஸ்ட் கூட அதை ஆதரித்து வருகின்றார். இது தொடர்பாக எதிர் இணையத்தளத்தில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

சேனனின் வழிகாட்டலில் உருவான, "இடதுசாரி- தமிழ் தேசிய இளையோர்" அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரான  பாரதி என்ற பெண், லண்டன் தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். (ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி)

அதில் அவர் தெரிவித்த Brexit ஆதரவுக் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன.

முதலில் அந்தப் பெண், "வட்டுகோட்டை தீர்மானம்... தமிழ் தேசியப் போராட்டம்..." போன்றவற்றை சொல்லி தனது உரையை தொடங்கினார். ஐயர் சம்ஸ்கிருத மந்திரம் ஓதுவது போன்று, இப்போதெல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் தமிழ் தேசியம் பேசி விட்டு தொடர்வது ஒரு பேஷனாகி விட்டது. அது போகட்டும். விடயத்திற்கு வருவோம்.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால், அது அகதித் தஞ்சம் கோருவோருக்கு பாதிப்பாக அமையும் என்ற வாதம் ஒரு "கற்பனை" என்று வாதிடுகிறார். அனேகமாக, ஒரு ஈழத் தமிழ் அகதிக் குடும்பத்தில் இருந்து வந்தவர் இப்படிப் பேசுவது அதிர்ச்சி அளித்தது.

பிரிட்டனில் அகதி தஞ்சம் நிராகரிக்கப் பட்ட பலருக்கு, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, பிரிட்டனின் சட்டம் எதுவாக இருந்தாலும், ஐரோப்பிய சட்டம் தான் மேலானது. அது ஏதாவதொரு காரணத்தால், ஒருவரின் தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினால், பிரிட்டிஷ் நீதிபதி மறுப்புக் கூற முடியாது. பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து விலகினால் அந்த சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரிட்டிஷ் முதலாளிகள் (பெரும் நிறுவனங்கள்) ஐரோப்பிய முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து பலமாக இருப்பார்களாம். அவர்களை எதிர்த்துப் போரிடுவது கஷ்டமான காரியமாம். பிரிட்டன் பிரிந்தால், தனிமைப் படுத்தப் பட்ட முதலாளிகளை இலகுவாக எதிர்க்கலாமாம்!

பிரிட்டிஷ், அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவுக்கும் ஐரோப்பிய ஒன்றியமா காரணம்? நேட்டோ ஒரு இராணுவக் கூட்டமைப்பு. வர்த்தகக் கூட்டமைப்பு அல்ல. மேலும் பிரிட்டிஷ் - ஐரோப்பிய முதலாளிகள் ஒன்று சேர்ந்தால், தொழிலாளர்களும் ஒன்று சேர வேண்டியது தானே? பிறகெதற்கு சேனனின் இடதுசாரி ட்ராஸ்கிசக் கட்சி இயங்குகின்றது? இன்னமும் "நிரந்தரப் புரட்சி" பற்றிப் பேசுகின்றது?

"பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் தான், போலந்து, ருமேனியாவில் இருந்து குடியேறிகள் வருகிறார்கள். பிரிட்டிஷ் மக்களின் வேலை வாய்ப்புகளை, வீட்டு வசதிகளை பறிக்கிறார்கள்..." இவையெல்லாம் பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய தேசியவாதிகள்/இனவாதிகள் முன்வைக்கும் வாதங்கள். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் (வலதுசாரிகள்) அதை வழிமொழிகிறார்கள். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால் தமிழர்களின் குடியேற்றத்தையும் தடுப்பார்கள். இந்த உண்மை தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிப்பார்கள்.

தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் பாரதி, குடியேறிகளின் பிரச்சினைக்கு இடதுசாரி சாயம் பூசுகின்றார்: "ஐயோ பாவம்! போலந்து, ருமேனிய தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுகிறார்கள்....வாடகை கட்ட முடியாமல் ஒரே வீட்டுக்குள் பலர் இருந்து கஷ்டப் படுகிறார்கள்..." ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால், தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று சேனன் தனது எதிர் இணையத் தளத்தில் விளம்பரம் செய்கிறார். இது அவர் சார்ந்த ட்ராஸ்கிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று நினைக்கிறேன்.

போலந்து, ருமேனியாவில் இருந்து வந்து குடியேறும் மலிவு விலைத் தொழிலாளர்கள், பிரிட்டனில் நிறைய வேலைத் ஸ்தலங்களில் இருப்பது உண்மை தான். அவர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுவதால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் உண்மை தான். ஆனால், எல்லோரும் ஒரு பொருளாதார உண்மையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள்.

குறிப்பிட்ட சில வேலைகளுக்கு வழங்கப் படும் சம்பளத்தின் அளவு குறைவு. அந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் வர மாட்டார்கள். ஏனென்றால் பிரிட்டனில் வாழ்க்கைச் செலவும் அதிகம். ஒரு பிரிட்டிஷ் தொழிலாளி தனது குடும்பத்தை பராமரிக்கும் அளவு சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அதைக் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் முதலாளிகள் தயாராக இல்லை.

பிரிட்டிஷ் பிரஜைகள் பலர் "வேலையில்லாமல் சும்மா வீட்டில் இருந்தாலும்" அரசு அவர்களுக்கு மாதாந்தம் பணம் கொடுக்கிறது. (அது வாழ்க்கைச் செலவுக்கு போதாது என்பது வேறு விடயம்.) அந்தப் பணம் எங்கிருந்து வருகின்றது? புதிய குடியேறிகளான போலந்து, ருமேனிய தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப் படும் பணத்தில் ஒரு சிறிய பகுதி தான் அது.

இப்படி யோசித்துப் பார்ப்போம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து வெளியேறிய பிறகு, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து விடும். ஒரேயடியாக நின்று விட்டது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது வேலையில்லா பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு வேலை கிடைத்து விடுமா? 

இல்லை, பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளில் இருந்து புதிய மலிவு விலைத் தொழிலாளர்களை வருவிப்பார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் அனுவித்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்காது. அனேகமாக ஒப்பந்தம் முடிந்தவுடன் திருப்பி அனுப்பும் நிலையில் வைத்திருப்பார்கள்.

அது போகட்டும். போலந்து, ருமேனிய குடியேறிகள் வருவது நின்று போனால், பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு, அல்லது இலங்கையர், இந்தியருக்கு நல்ல காலம் பிறந்து விடுமா? எப்போதும் இல்லை. பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய இனவாதிகளின் அடுத்த குறி அவர்களாகத் தானிருக்கும். பிரிட்டனில் பல தசாப்த காலம் வாழ்ந்தாலும், அவர்களது உரிமைகளை படிப்படியாகப் பறிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வார்கள். பிரிட்டிஷ் அரசும் அதை ஆமோதிக்கும். அப்போது அவர்களை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரப் போவதில்லை.

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு, தான் ஆபத்தில் இருந்து தப்பி விட்டதாக நினைக்குமாம். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் அப்படித் தான்.

Part - 1
 

Part - 2
 

Part - 3
 

Thursday, March 31, 2016

இலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு - வெளிவரும் இரகசியம்


முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் நடந்த புலி அழிப்பு போரில் அல்லது தமிழினப் படுகொலையில் பிரிட்டனின் பங்கு என்ன? சிறிலங்கா அரசு இது குறித்து எதையும் கூறாமல் மௌனமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இவர்கள் எல்லோருக்கும் எஜமான் பிரிட்டன். எஜமான விசுவாசம் கொண்ட அடிமைகளிடம் இருந்து தமிழ் மக்கள் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது.

ஈழப்போரை தொடக்கி வைத்ததில் மட்டுமல்ல, முடித்து வைத்ததிலும் பிரிட்டனின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 1977 ம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று சொல்லி தமிழர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்த நாளில் இருந்தே, பிரிட்டனின் ஒத்துழைப்பு கிடைத்து வந்தது. அன்று ஜே.ஆரின் அறிவுறுத்தலுக்கு அமைய, "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்கு, அன்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரின் அரசு உதவியது. கிழக்கிலங்கையில் அமைக்கப் பட்ட விசேட அதிரடிப் படைக்கு, பிரிட்டிஷ் கூலிப் படையான SAS பயிற்சி வழங்கியது. (பார்க்க: "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!)

இறுதிப் போரிலும், பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் நேரடியாக களத்தில் நின்றனர். வன்னியில் புலிகளையும், அவர்களோடு சேர்த்து ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் அழிப்பதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இது பற்றிய தகவல்கள் யாவும் இன்று வரையும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. VICE எனும் ஆவணப் படங்களை தயாரிக்கும் நிறுவனம் எடுத்த பெரு முயற்சியின் பயனாக அது வெளிவந்துள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தில் இருந்த இரகசிய ஆவணங்களை பார்வையிட்டுள்ளது. (Exclusive: Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lankahttp://www.vice.com/en_uk/read/sri-lanka-british-police-training-phil-miller)

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில், பிரிட்டிஷ் அரசு நேரடியாகவே பங்கெடுத்திருந்தது என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. இன்னமும் எல்லா இரகசிய ஆவணங்களும் வெளிவரவில்லை. இதுவரை பார்வைக்கு வந்த ஆவணங்களில் இருந்தே பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அழித்தொழிப்பு போரை நடத்துவது எப்படி என்பது குறித்து, பிரிட்டிஷ் ஆலோசகர்கள் சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். வட அயர்லாந்தில், IRA இயக்கத்தை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்ட அதிகாரிகள், தமது அனுபவங்களில் இருந்து கற்ற பாடங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இறுதிப் போர் நடந்த காலங்களில், பொலிஸ், இராணுவம் ஆகிய பாதுகாப்புப் படைகள் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேயின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. ஆகவே, பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் கோத்தபாயவுடன் கலந்தாலோசிக்காமல் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கி இருக்க முடியுமா? பிரிட்டன் ஒரு பக்கம் போர்க்குற்றங்களில் பங்கெடுத்துக் கொண்டே, ஐ.நா. சபையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டது. அப்பாவித் தமிழர்களும் பிரிட்டனின் மாய்மாலங்களை நம்பி ஏமாந்தார்கள்.

இறுதிப் போரில் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு பிரிட்டன் எத்தகைய ஆலோசனைகளை வழங்கியது? அது எவ்வாறு நடைமுறைப் படுத்தப் பட்டன? யாழ் குடாநாட்டில் நடந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் பற்றி, ஏற்கனவே பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் இயங்கிய புலி உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் விடாது தீர்த்துக் கட்டப் பட்டனர். புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்களும் கொலை செய்யப் பட்டனர்.

ஒரு ஊரில் ஒருவர் புலிகளை ஆதரிக்கிறார் என்று சந்தேகம் வந்தால் போதும். அரச புலனாய்வுத்துறையினர், தக்க தருணம் பார்த்திருந்து சுட்டுக் கொன்றனர். அவர் புலிகளுக்கு பெருமளவு உதவி செய்தாரா,  கொஞ்சமாக உதவினாரா என்ற கணக்கே இல்லை. சிலநேரம் நண்பன் என்பதற்காக ஒரு தடவை சந்தித்து பேசி இருக்கலாம். இதனால், ஒரு கட்டத்தில் யாழ் குடாநாட்டு மக்கள் உயிர் தப்புவதற்காக புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்கள்.

அது எப்படி சாத்தியமாகிற்று? யாழ்ப்பாண மக்களைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். சந்திக்கு சந்தி இருக்கும் சோதனைச் சாவடிகளில், சோதனை என்ற பெயரில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப் படுவார்கள். அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கலாம் என்பது படையினருக்கு நன்றாகத் தெரியும். தடுத்து வைக்கும் நபரை கொஞ்ச நேரம் வைத்து அடித்து உதைத்து விட்டு விட்டு விடுவார்கள். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நடக்கும்.

சிறிது காலத்தின் பின்னர், குறிப்பிட்ட இளைஞருடன் படையினர் நட்புடன் பழகுவார்கள். அவரை நண்பனாக்கிக் கொள்வார்கள். புலனாய்வுத்துறை தொலைபேசி இலக்கத்தை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். இப்படித் தான் ஒற்றர்கள் உருவாக்கப் பட்டனர். படையினரால் ஒற்றர்களாக மாற்றப் பட்ட தமிழ் இளைஞர்கள், ஊருக்குள் நடமாடும் புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வந்தனர். இது ஒவ்வொரு ஊரிலும் நடந்தது. அப்போது இந்த ஆலோசனைகளை வழங்கியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

பிரிட்டிஷ் இரகசிய ஆவணங்களில் இருந்து தெரிய வருவதாவது: "புலிகளை அழிக்க வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களின் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்." ஆமாம், பிரிட்டிஷ் ஆலோசனை மிகச் சரியாக நிறைவேற்றப் பட்டது. வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் ஒரு புலி இல்லாமல் ஒழித்துக் கட்டப் பட்டனர். கிழக்கு மாகாணத்தில், TMVP என்ற பெயரில் இயங்கிய முன்னாள் புலிப் போராளிகள் அரச படைகளுக்கு உதவினார்கள். பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்ட TMVP உறுப்பினர்கள், புலிகளையும், ஆதரவாளர்களையும் இனங் கண்டு அழிப்பதற்கு உதவினார்கள். அதுவும் பிரிட்டனின் ஆலோசனை தான்.

இதே நேரம், கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பிற பகுதிகளிலும், புலிகளுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரி இயக்கம் ஒன்று இரகசியமாக இயங்கி வந்தது. அரசினாலும், ஊடகங்களினாலும் "சிங்களப் புலிகள்" என்று நாமகரணம் சூட்டப் பட்ட அவர்கள், கொழும்பில் சில குண்டுவெடிப்புகளை நடத்தி உள்ளனர். அரசு அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை உருவாக்கியது. இந்த விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்களின் நடமாட்டங்களையும் கண்காணித்தார்கள். பொது மக்களின் விழிப்புக் குழுக்கள் வழங்கிய தகவல்களை அடுத்து பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமான விடயம் என்னவெனில், சிங்கள மக்களின் விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை பிடிப்பதற்கு மட்டும் உதவவில்லை. அரசை விமர்சித்து வந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளையும் கண்காணித்து வந்தன. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில், தென்னிலங்கையில் எத்தனை சிங்கள ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டனர், பயமுறுத்தப் பட்டனர் என்பதை நான் இங்கே விபரிக்கத் தேவையில்லை.

அன்று நடந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு பிரிட்டிஷ் அரசும் பொறுப்பு என்பது ஆச்சரியத்திற்குரியது. சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென ஆலோசனை கூறியது யார்? வேறு யார், பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் தான்.

எதற்காக பிரிட்டன் இலங்கை அரசை ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்? இந்து சமுத்திரத்தின் மத்தியில், இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து நடக்கும் இடத்தில் உள்ளது. ஆகவே, அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டியது அவசியம். இலங்கையில் எழுந்த தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவது, ஏகாதிபத்திய நலன் சார்ந்த விடயம்.

நாங்கள் ஈழப்போரை புலிகளின் நீதியான அறப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியத்தின் கண்களுக்கு அது பயங்கரவாதமாகத் தெரியும். நாங்கள் அதனை ஒட்டு மொத்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியம் அதனை தனக்கு எதிரான புரட்சி என்று கணித்து வைத்திருக்கும். 

நடந்து முடிந்த இனப்படுகொலையில் இருந்து, தமிழர்கள் இன்னுமா பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை? தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பதில் இன்னுமா உங்களுக்கு சந்தேகம்? தமிழ் மக்களின் எதிரி சிங்களப் பேரினவாத அரசு மட்டுமல்ல. அதனை பின்னால் நின்று இயக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியமும் தமிழர்களின் எதிரி தான்.

மேலதிக தகவல்களுக்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்

Sunday, December 14, 2014

பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை உங்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கின்றது!

மேற்கத்திய நட்பு நாடுகளைக் கூட, அமெரிக்க உளவுத் துறையான NSA வேவு பார்த்த தகவல்கள் பல ஏற்கனவே வெளியாகியுள்ளன. தற்போது, பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையான G.C.H.Q., பெல்ஜிய தொலைத்தொடர்பு நிறுவனத்தினுள் ஊடுருவி, பலரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட விடயம் வெளியாகியுள்ளது. 

பெல்ஜியத்தில், ஐரோப்பிய ஒன்றிய தலைமைச் செயலகங்கள், நேட்டோ தலைமையகம், மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் அமைந்துள்ளன. அங்கிருந்தவர்களின் தொலைபேசி உரையாடல்கள் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கலாம். அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் கதி? 

"சம அந்தஸ்து கொண்ட" ஐரோப்பிய ஒன்றிய நாடான, பெல்ஜியத்தின் தொலைத்தொடர்புகளுக்குள் ஊடுருவி உளவு பார்த்த பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை, தனது சொந்த நாட்டில் சும்மா இருந்திருக்குமா? பிரிட்டனின் முன்னாள் காலனிய அடிமை நாடுகளான இந்தியா, இலங்கையிலும் ஊடுருவி, அங்குள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்காமல் இருந்திருப்பார்களா?

பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையின் ஹேக்கர்கள், Belgacom எனும் பெல்ஜிய தொலைத்தொடர்பு திணைக்களத்தின் கணணிகளுக்குள் ஊடுருவி உள்ளனர். அதன் மூலம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடனான தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன. மின்னஞ்சல்கள் ஒட்டுப் பார்க்கப் பட்டன. எவராலும் கண்டுபிடிக்கப் படாமல், பல வருடங்களாக இது நடந்து கொண்டிருந்தது. அது எப்படி நடந்தது? 

பெல்கா கொம் (Belgacom) பெல்ஜியத்தின் மிகப் பெரிய, மிகவும் பழமையான, அரசு தொலைத்தொடர்பு நிறுவனம். இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான வீட்டுத் தொலைபேசி, கைத் தொலைபேசி இணைப்புகளை கட்டுப் படுத்துகின்றது. கணணி மயப் படுத்தப் பட்ட காலத்தில், பிற நாடுகளுடனான தொலைத் தொடர்பு விநியோக சேவைகளை BICS எனும் துணை நிறுவனம் பராமரித்து வருகின்றது.

Belgacom International Carrier Services என்பதன் சுருக்கம் தான் BICS.  அதற்கும் கீழே நூற்றுக் கணக்கான தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளன. சிங்கப்பூர், துபாயில் கூட, BICS கிளை நிறுவனங்கள் உள்ளன. 


BICS நிறுவனத்தின் கணனித் தொடர்பாடலை பராமரிக்கும் மூன்று தொழில்நுட்ப நிபுணர்களுடன் உளவு பார்த்த கதை ஆரம்பமாகின்றது. அப்பாவிகளான அந்த மூன்று ஊழியர்களும் LinkedIn இணையத்தின் பாவனையாளர்கள். ஏற்கனவே அவர்களின் கணணிகளுக்குள் ஊடுருவிய GCHQ ஹேக்கர்கள், LinkedIn தொடர்பை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு போலியான LinkedIn தளத்தை உருவாக்கி, அதற்கு அவர்களை வரவழைத்துள்ளனர். அங்கிருந்து ஒரு வைரசை அனுப்பி, அவர்களின் கணணிகளை தாக்கியுள்ளனர். 

"Regin" என்ற பெயரைக் கொண்ட வைரஸ் (malware), இலகுவில் கண்டுபிடிக்க முடியாத, மிகவும் வளர்ச்சி அடைந்த, தீய விளைவை உண்டாக்கும் மென்பொருள் ஆகும். 2009 ஆம் ஆண்டு தான், இந்த வைரஸ் தாக்குதல் நடந்திருக்க வேண்டுமென அனுமானிக்கப் படுகின்றது. 2011 ஆம் ஆண்டு வரையில், அது அழியாமல் மறைந்திருந்து, கணணிகளை சரியாக இயங்க விடாமல் பிரச்சினை கொடுத்துள்ளது. அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில் என்ன நடந்தது என்று தெரிய வந்தது. 

2011 ஆம் ஆண்டு, பெல்கா கொம் ஊழியர்கள் தமக்குள் பரிமாறிக் கொண்ட மின்னஞ்சல்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன. சேர்வர் (Server) பிரச்சினை கொடுக்கத் தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு, புதிய மைரோசாப்ட் (Microsoft) மென்பொருளை அப்டேட் (update) செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு பிரச்சினை பெரிதானதே தவிரக் குறையவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியைக் கோரினார்கள். மைக்ரோசாப்ட் நிபுணர்கள் வந்து பார்த்தும், அவர்களாலும் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை.  

அதற்குப் பிறகு, நெதர்லாந்தின் பிரபலமான ஐ.டி. நிறுவனமான Fox-IT நிபுணர்களை வரவழைத்து பரிசோதிக்க சொன்னார்கள். அவர்கள் வந்து பரிசோதித்த நேரம், ஒரு விசித்திரமான பொருளைக் கண்டுபிடித்தார்கள். கணனியில் இயங்கிக் கொண்டிருந்த மென்பொருள் ஒன்று, மைரோசாப்ட் மாதிரி இருந்தது. ஆனால், அது உண்மையில் மைரோசாப்ட் அல்ல. அது மாதிரி பாவனை செய்து கொண்டது. 

பெல்கா கொம் உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு செய்தது. பெல்ஜிய அரச புலனாய்வுத் துறையான ADIV உடன் தொடர்பு கொண்டது. ADIV கணிப்பொறி நிபுணர்கள், Fox-IT நிபுணர்களுடன் சேர்ந்து பிரச்சினையை ஆராய்ந்தார்கள். அப்போது தான், பல வருடங்களுக்கு முன்னர் ஊடுருவி இருந்த உளவறியும் வைரஸ் ஒன்றினை, சரியாக அழிக்காமல் விட்ட படியால் தான், கணனிகள் பிரச்சினை கொடுத்தன என்று தெரிய வந்தது. 

ஆனால், வைரஸ் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், திடீரென பெல்கா கொம் தலைமை நிர்வாகத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. Fox-IT உடனான ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டது. BICS ஊழியர்கள் அத்தனை பேரும், இரகசியக் காப்பு விதிகளை ஏற்றுக் கொள்ளும் படிவத்தில் கையொப்பம் போட வேண்டுமென வற்புறுத்தப் பட்டனர். வைரசை அப்படியே வைத்துக் கொண்டு, அது குறித்த ஆராய்ச்சி செய்த ஆதாரங்களை அழித்து விடுமாறு கோரியது! ஏன் என்று கேட்டவர்களுக்கு, பெல்கா கொம் தானாகவே பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்று பதில் கூறப் பட்டது. 

2013, ஆகஸ்ட் 30 அன்று, வைரசின் ஒரு பகுதி தானாகவே மறைந்து விட்டது. அந்தக் காலகட்டத்தில் பல தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பெல்ஜியத்தில் அதிகமாக விற்பனையாகும் De Standaard பத்திரிகை, முதன் முதலாக இந்தத் தகவலை வெளியிட்டது. சில தினங்களுக்குப் பின்னர், ஜெர்மனியின் Der Spiegel வார இதழ், ஸ்னோவ்டனின் இரகசிய ஆவணங்களை பிரசுரித்து இருந்தது. அவற்றில் ஒன்றில், பிரிட்டனின் அந்நிய நாடுகளை உளவறியும் பட்டியலில் பெல்கா கொம் இருக்கும் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. 

ஆயினும், இப்போதும் பெல்கா கொம் நிறுவனம் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வகையில் பேசி வருகின்றது. "அந்நிய நாடொன்றின் வைரஸ் தாக்குதல் நடந்திருந்தாலும், அது ஒரு சில வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளை மட்டுமே பாதித்துள்ளதாக..." கூறி சமாளித்து வருகின்றது. 


(தகவலுக்கு நன்றி: De Britten hadden de sleutel, NRC Handelsblad, 13 dec 2014)


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, October 23, 2014

ஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரிட்டனின் காலனிய சூழ்ச்சியும்


ஹாங்காங்கில் நடக்கும் மாணவர் போராட்டத்தை, "ஜனநாயக மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்" போன்று சித்தரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், அதன் பின்னணி பற்றி விபரிப்பதில்லை. ஹாங்காங் ஆசியாவில் ஒரு முதலாளித்துவ அதிசயம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, அங்கு நடந்த காலனிய எதிர்ப்பு போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. ஹாங்காங் பிரிட்டனின் காலனிய அடிமை நாடாக இருந்த காலத்தில், அது அமைதியாக இருந்ததாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி நடந்தது என்பதையும், பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் அதனை ஈவிரக்கமின்றி அடக்கியது என்பதையும் அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

நூறு வருடங்களாக ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்திருந்தாலும், ஆரம்பத்தில் அது ஒரு பணக்கார நாடாக இருக்கவில்லை. ஆசியாவில் இருந்த பிற ஐரோப்பியக் காலனிகள் போன்று கடுமையான சுரண்டலால் பாதிக்கப் பட்டிருந்தது. வசதி வாய்ப்புகளை விட, வறுமையும், பிணியும் அதிகமாக காணப்பட்டது. பிரிட்டனின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த சீனர்கள் மட்டும் ஹாங்காங் பிரஜைகள் ஆகவில்லை. சீன பெருநிலப் பரப்பில் இருந்து காலங்காலமாக குடியேறிகள் வந்து கொண்டிருந்தார்கள். சீன - ஜப்பான் போரின் பொழுதும், கம்யூனிஸ்ட் - குவாமிந்தாங் போரின் பொழுதும், பல்லாயிரக் கணக்கான சீனர்கள், அகதிகளாக வந்து சேர்ந்திருந்தனர். அவர்களின் வம்சாவளியினர், 21 ம் நூற்றாண்டில் வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றமை நகைப்புக்குரியது.


ஹாங்காங் மாணவர் போராட்டம் "ஜனநாயகத்திற்கானது" என்று கூறப் பட்டாலும், அதற்குள் சீன குடியேற்றத்தை எதிர்க்கும் இனவாத சக்திகளின் ஆதிக்கமும் காணப் படுகின்றது. 2012 ம் ஆண்டு, "வெட்டுக்கிளி எதிர்ப்பு இயக்கம்" ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. தீவிர வலதுசாரிகளின் அமைப்பு, பெருநிலப் பரப்பில் இருந்து வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்புப் நாளேடு ஒன்றில், "வெட்டுக்கிளி ஹாங்காங் மீது படையெடுக்க காத்திருப்பது" போன்றதொரு கருத்துப் படம் போட்டு, அதற்கு கீழே பின்வருமாறு எழுதி இருந்தது: "சீனாவில் இருந்து வரும் கர்ப்பிணிப் பெண்கள், ஹாங்காங்கில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம், ஹாங்காங்கின் மக்கள் நல கொடுப்பனவுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள்...."

பொதுவாகவே, ஹாங்காங் சீனர்கள், பெருநிலப்பரப்பில் வாழும் சீனர்களை கீழானவர்களாக பார்ப்பதுண்டு. காலனிய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை மறக்காமல், அவர்களை "நாகரிமைடையாத சீனர்கள்" என்று கருதிக் கொள்வார்கள். "ஹாங்காங் சீனர்கள் காண்டனீஸ்-சீன மொழி பேசுவார்கள். சீனாவில் உள்ள சீனர்கள் மாண்டரின்-சீன மொழி பேசுவார்கள்." என்று யாராவது இதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஹாங்காங்கில் மாண்டரின் - சீன மொழி பேசுவபவர்கள் மீதான துவேஷம் சற்று அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், ஹாங்காங் தீவுகளுக்கு அயலில் உள்ள சீன மாகாணங்களிலும் காண்டனீஸ் மொழி தான் பேசுவார்கள் என்பதை மறந்து விடலாகாது. ஹாங்காங்கில் குடியேறியுள்ள பெரும்பாலான சீனர்கள், காண்டனீஸ் சீன மொழி பேசுவோர் தான்.

ஹாங்காங் மாணவர்களின் போராட்டத்தை, ஹாங்காங் வர்த்தகர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு காரணம் உண்டு. வருடந்தோறும் ஹாங்காங் வரும் உல்லாசப் பிரயாணிகளில் 75% சீன பெருநிலப் பரப்பில் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, ஹாங்காங் அருகில் உள்ள ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையத்தில் ஹாங்காங் முதலாளிகள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர். ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையம் எண்பதுகளிலேயே இயங்கத் தொடங்கி விட்டது. அப்போதே சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான இரு தரப்பு போக்குவரத்து ஆரம்பமாகி விட்டது. அதாவது, ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே, சீனாவுடன் நல்லுறவு நிலவியது. ஆனால் அது பிற்காலத்தில் ஏற்பட்ட உறவு. அதற்கு முன்னர், காலனிய ஆட்சியாளர்களினால் ஹாங்காங் சீனாவிடம் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தது.

சீனாவில் தோன்றிய பொதுவுடமைப் புரட்சி, பெருமளவு சீனர்கள் வாழும் ஆசிய நாடுகளிலும் பரவியது. ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல. 1966 ஆம் ஆண்டின் இறுதியில், தொழிற்சாலைகளில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள், வெகு விரைவில் காலனிய நிர்வாகத்திற்கு சவாலாக மாறினார்கள். நகரத் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், அடிக்கடி காவல்துறையினருடனான மோதல்களில் முடிந்தது. 

பல நிறுவனங்களில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டங்களினால், ஹாங்காங் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. காலனிய படைகளில் கடமையில் இருந்த சீன இன போலிஸ்காரர்களை, தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நம்பினார்கள். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. சீனப் பொலிஸ்காரர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தனர்.

பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் நாட்டில், கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கப் படா விட்டாலும், அது பகிரங்கமாகவே இயங்கி வந்தது. கம்யூனிஸ்ட் செய்தித் தாள்கள் வெளியாகின. ஒரு வானொலி நிலையம் கூட இயங்கியது. அந்தளவுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. "மாவோவின் மேற்கோள்கள்" எனும் சிவப்பு நிற சிறிய கைநூல், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டது. சீனாவில் கலாச்சாரப் புரட்சி காலத்தில் நடந்தது போன்று, ஹாங்காங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களினால் எடுத்துச் செல்லப் பட்டது.

பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வனுமுறை பிரயோகித்தது. செய்தித்தாள்கள் தடை செய்யப் பட்டன. அச்சகங்கள் மூடப் பட்டன. கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். அரச ஒடுக்குமுறை காரணமாக, கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் தலைமறைவாக இயங்கத் தொடங்கினார்கள். காலனிய ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் குண்டு வீச்சுக்கு இலக்காகின. 1967 ஆம் ஆண்டு, ஒரு வருடத்திற்குள், ஹாங்காங் முழுவதும் நூற்றுக் கணக்கான குண்டுகள் வெடித்தன. காலனிய அதிகாரிகள், பொலிஸ்காரர்கள் மட்டுமல்லாது சில பொது மக்களும் குண்டு வெடிப்புகளுக்கு பலியானார்கள். அனேகமாக, பொது மக்களின் உயிரிழப்புகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு குறைந்திருக்கலாம்.

ஹாங்காங் கம்யூனிஸ்ட் கிளர்ச்சி முறியடிக்கப் பட்டமைக்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

  1. ஆயிரக் கணக்கான குண்டுகள் செயலிழக்க செய்யப் பட்டன அல்லது வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. 
  2. நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இரகசிய மறைவிடம் கண்டுபிடிக்கப் பட்டது. 
  3. கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள். ஆயிரக் கணக்கானோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அதை விட, ஆயிரக் கணக்கானோர் சீனாவுக்கு நாடுகடத்தப் பட்டனர். 
  4. எல்லாவற்றிற்கும் அப்பால், செஞ்சீனத்தின் ஆதரவு கிடைக்காமல் விட்டமை ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது. 


உண்மையில், மாவோ தலைமையிலான செஞ்சீனம், ஹாங்காங் புரட்சியை ஆரம்பத்தில் வரவேற்று ஆதரித்திருந்தது. ஹாங்காங் ஆதரவு போராட்டங்களையும் நடத்தி இருந்தது. ஆயினும், கிளர்ச்சி உச்சகட்டத்தை அடையும் நேரம், சீனப் படைகள் ஹாங்காங்கை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது. சிலநேரம் சீனத் தலைமையிடம் அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தாலும், பின்னர் கைவிடப் பட்டது. பிரிட்டனுடன் நேரடியாக மோதும் நிலையை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹாங்காங் சீனாவுக்கு திரும்பக் கிடைக்க இருந்தது என்பதையும் மறந்து விடலாகாது. இன்னொரு ஐரோப்பிய காலனியான மாக்காவ், போர்த்துக்கேயரின் பலவீனம் காரணமாக, ஏற்கனவே சீன ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது.

1967 கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் விளைவாக ஹாங்காங் ஒரு வகையில் நன்மை அடைந்தது என்றே கூற வேண்டும். ஏனென்றால், அது வரைக்கும் ஒரு வறிய நாடாக இருந்த ஹாங்காங், அதற்குப் பிறகு தான் பணக்கார நாடாக மாறியது. மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி உண்டாவதை தடுக்கும் நோக்கில், பிரிட்டிஷ் நிர்வாகம் பல விட்டுக் கொடுப்புகளை செய்தது. ஹாங்காங் சீனர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. பிரிட்டனில் இருப்பதைப் போன்று, சமூக நலத்துறை உருவாக்கப் பட்டது.

பிரிட்டிஷ் நிர்வாகம், புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி,  வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தது மட்டுமல்லாது, ஊதியமும் உயர்த்தப் பட்டது. ஹாங்காங் துறைமுகம் ஆசியாவில் மிகவும் முக்கியமான துறைமுகமாக மாறியது. இன்றைக்கும் ஹாங்காங்கின் பெருமளவு வருமானம் துறைமுகத்தில் இருந்து கிடைக்கின்றது. மொத்தத்தில், ஹாங்காங் ஆசியாவில் வளர்ந்து வரும் (முதலாளித்துவ) பொருளாதார அதிசயமாக மாற்றிக் காட்டப் பட்டது. கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்திரா விட்டால், ஹாங்காங் இன்றைக்கும் ஒரு வறிய நாடாகவே தொடர்ந்தும் இருந்திருக்கும்.

ஹாங்காங்கில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், 1997 ஆம் ஆண்டு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆசியாவின் "புலிப் பாய்ச்சல் பொருளாதார வளர்ச்சி" அத்துடன் முடிவுக்கு வந்தது. ஹாங்காங் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. 1997 நெருக்கடியில் இருந்து மீண்டு வருகையில், 2007 ஆம் ஆண்டு இன்னொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது ஹாங்காங்கில் வேலையில்லாப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

உயர்கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும், குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். அதை விட மாதாந்த ஊதியத்தில் அரைவாசி வீட்டு வாடைகைக்கு செலவிட வேண்டும். சுருக்கமாக, பொருளாதார நெருக்கடி காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஹாங்காங்கில் ஏற்பட்டன.

உலகில் பல இயக்கங்கள், தாங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக போராடுவதாக சொல்லிக் கொள்வதில்லை. ஹாங்காங்கின் ஜனநாயக இயக்கமும் அப்படித் தான். வெளிப்பார்வைக்கு மட்டும் தான் அது ஜனநாயகத்திற்கான இயக்கம். உள்ளே அது இனவாதிகள், பிரதேசவாதிகள், தீவிர வலதுசாரிகளின் ஆளுமைக்குள் உள்ளது. அது மட்டுமல்ல, முன்னாள் பிரிட்டிஷ் காலனிய எஜமானான பிரிட்டனின் பங்களிப்பும் உள்ளது. ஜனநாயகம் கோரும் மாணவர்கள் சிலர், வெளிப்படையாகவே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை ஆதரிக்கின்றனர்.

1967 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முடிவில், பிரிட்டிஷ் நிர்வாகம் பெரியதொரு சமூக சுத்திகரிப்பை செய்திருந்தது. காலனிய எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்டுகள் போன்றோரை பிடித்து சிறையில் அடைத்தது அல்லது சீனாவுக்கு நாடு கடத்தி இருந்தது. சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சிகளை மட்டும் இயங்க அனுமதித்தது. மேலும், தீவிர வலதுசாரிகள், காலனிய விசுவாசிகள் போன்றோரை வளர்த்தெடுத்தது. அன்று பிரிட்டிஷ்காரர்கள் நடைமுறைப் படுத்திய திட்டங்கள், இன்று பலன் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு, காலனிய கடந்த காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலதிக தகவல்களுக்கு:

Saturday, September 20, 2014

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி! பிரிட்டனின் பித்தலாட்டம்!!


இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது.  ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்!

ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், "இல்லை" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, "இல்லை" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல "ஆம்" ஓட்டுகள், "இல்லை" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 


மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில் வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால், முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும் போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான் உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.




உலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம் மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத் தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "ஆம்" என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "இல்லை" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில், கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.

மேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன் முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம். அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. "இல்லை" என்று வாக்களித்தால், மாநில சுயாட்சியும், அதிகாரப் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.

சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம் இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். "தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக் காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன் மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்." புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்;
ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு

Thursday, September 11, 2014

ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு


ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும், என்பதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பின் பின்னர், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லுமா? அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? எதிர்காலம் குறித்து யாராலும் கணிப்பிட முடியாமல் உள்ளது.

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டுமே எண்ணை, எரிவாயு வளம் உள்ளது. ஸ்காட்லாந்து பிரிவினை, பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கலாம். அதனால், பங்குச் சந்தையில் பதற்றம் நிலவுகின்றது. நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிரிட்டிஷ் பவுனுடைய பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

அது சரி, ஸ்காட்லாந்து தனி நாடாவது குறித்து, "தமிழீழ ஆதரவாளர்கள்" என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், "What about Tamileelam?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், தற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன? "ஸ்காட்லாந்து மாதிரி தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து, அதை மாபெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கலாமே?

குறிப்பாக, பிரிட்டனில் வாழும் தமிழீழவாதிகளான தமிழர்கள் பலர், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்திற்குரியது. கியூபெக் தனி நாடாவதை, எத்தனை கனடாத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர், தங்களை தமிழீழவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும், மேற்குலக நாட்டு அரசுக்களுக்கு விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர்.

முதலில் இதனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவாக கருத முடியுமா? இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலகட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. முன்பு பிரிட்டன் வகித்திருந்த பாத்திரத்தை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது, கண்ணுக்கு புலனாகும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெளித் தோற்றம் ஆகும். ஸ்காட்லாந்தில் எண்ணை, எரிவாயுத் துறையில் முதலிட்டுள்ள BP, உலகப் புகழ் பெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதித் துறை ஜாம்பவான்களான ஸ்காட்டிஷ் வங்கிகள் போன்றவற்றில், இங்கிலாந்தின் செல்வாக்கு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

பெரும் வணிக நிறுவனங்களின் பங்குகள், ஸ்காட்லாந்து பிரிவினைக்குப் பிறகும் மாறப் போவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, அவை தமது தலைமையகங்களை லண்டனில் வைத்திருக்க சாத்தியம் உண்டு. ஸ்காட்லாந்து தனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கப் படும். பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரே பவுன் நாணயத்தை வைத்திருப்பதற்கு ஸ்காட்லாந்து தேசியவாதிகள் விரும்பினாலும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். 

இது போன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்து பிரிந்து சென்றாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறையப் போவதில்லை. மேலும், லண்டனில் இருந்து கிடைக்கும் நிதியுதவியை இழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மாநிலங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை நினைத்துப் பார்க்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்து பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள், அண்மைக் காலத்தில் அதிகரித்தமைக்கு, இடதுசாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (Scottish National party (SNP)) தான் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு பாடுபட்டு வந்தது. அது ஒரு தேசியவாதக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், பொது மக்களைக் கவர்வதற்காக இடதுசாரி அரசியல் பேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இடதுசாரி சக்திகளை அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது.

SNP இன் தோற்றம் கூட, மார்க்கிரட் தாட்சரின் நியோ லிபரல் கொள்கையின் எதிர்விளைவாக உருவானது தான். தாட்சர் அறிமுகப் படுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்கும் மக்களை வரி என்ற பெயரில் சுரண்டி வந்தது. பெரும்பான்மை மக்களால் வெறுக்கப் பட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்து பரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இன் அரசியல் கூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்கள் நினைவுபடுத்தப் பட்டன. 

மேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போரை தண்டிக்கும் நோக்கில் bedroom tax எனும் புதிய வரி கொண்டு வரப் பட்டது. அதாவது, ஏழைக் குடும்பங்கள் வாழும் வீடுகளில், தேவைக்கு அதிகமாக படுக்கையறைகள் இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் வரி கட்ட வேண்டும். பெரும்பான்மை ஸ்காட்டிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம்.

Glasgow போன்ற நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சினையும் அங்கே அதிகம். அதனால், "ஸ்காட்லாந்து தனி நாடானால், சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்தும் இருக்கும், எண்ணை விற்பனையில் வரும் வருமானம் அதற்கு செலவிடப் படும்" என்றெல்லாம், SNP பிரச்சாரம் செய்து வருகின்றது. 

SNP கட்சியினர், தங்களை இடதுசாரி தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்வது பாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைக் கட்சியினரும், ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியினரும், இடதுசாரி கொள்கைகளின் கீழ்த் தான், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்லாது, லேபர் கட்சியும் ஸ்காட்லாந்து பிரிவினையை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சிக்கு தான் இழப்புகள் அதிகம். அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்காட்டிஷ் லேபர் கட்சியினர், தற்போது பிரிவினையை ஆதரிக்கிறார்கள். 

மேலும் பிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் எல்லாம் ஸ்காட்லாந்து பிரிவினயை எதிர்த்து வருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்தில் இடதுசாரி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளின் சம்மதம் அதற்கு அவசியம். தங்களது நாடுகளுக்கு உள்ளே பிரிவினைவாத சக்திகளை கொண்டுள்ள, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டலாம். 

சுதந்திர ஸ்காட்லாந்து ஏற்படுத்தக் கூடிய முதலாவது சர்வதேச தொடர்பு, IMF அல்லது உலகவங்கியிடம் கடன் வாங்குவது தான். அது அயர்லாந்து குடியரசான காலகட்டத்திற்கு தான் ஸ்காட்லாந்தை இழுத்துச் செல்லும். இறுதியில் தேசியக் கொடிகள் மட்டுமே மாறி இருக்கும். மற்றவை எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்.

Friday, August 22, 2014

அமெரிக்க சந்தையில் விற்கப் பட்ட வெள்ளையின அடிமைகள்


அமெரிக்கக் கண்டத்திற்கு ஆப்பிரிக்க கருப்பர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், "புதிய உலகம்" என அழைக்கப் பட்ட அமெரிக்கக் கண்டத்தில், வெள்ளையின அடிமைகளும் விற்கப் பட்டனர். இங்கிலாந்தின் முதலாவது காலனியான, அயர்லாந்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், அங்கு வாழ்ந்த ஐரிஷ் மக்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். ஐந்து இலட்சம் ஐரிஷ் பெண்கள், அமெரிக்காவில் பாலியல் அடிமைகளாக விற்கப் பட்டனர். 

உலகில் பல நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், இனச் சுத்திகரிப்புகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடுகளில் தான் அதிகளவில் நடந்துள்ளன. பாராளுமன்ற ஜனநாயகம் சுதந்திரமான தேர்தல்களை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 19 ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் சில நாடுகளில் இருந்த மன்னராட்சி முறைக்கு மாற்றாகத் தான் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டு வரப் பட்டது.

உலக வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்தில் தான் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்பட்டது. மன்னராட்சிக்கு எதிராக கலகம் செய்த, ஆங்கிலேய மேட்டுக் குடியினரின் பிரதிநிதியான ஒலிவர் குரொம்வெல், பேரழிவைத் தந்த உள்நாட்டுப் போரை வழிநடத்தினார். போரின் முடிவில், இங்கிலாந்து மன்னர் சிரச் சேதம் செய்யப் பட்டார். பாராளுமன்றம் இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. உலகில் முதல் தடவையாக பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டிய குரொம்வெல், ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

குரொம்வெல் தலைமையிலான புரட்டஸ்தாந்து படையினர், புரட்சியாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மன்னருக்கு ஆதரவான நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை ஒழித்தார்கள். ஆனால், பழைய நிலப்பிரபுக்களின் நிலங்கள், குரொம்வெல்லின் போர்வீரர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பங்கிடப் பட்டது. இன்று பிரிட்டனில் உள்ள நிலவுடமையாளர்கள் பலர், குரொம்வெல் காலத்தில் நிலங்களை அபகரித்தவர்கள் தான். வட அயர்லாந்தில், அது இன்றைக்கும் எரியும் பிரச்சினையாக உள்ளது.

பிரிட்டிஷ் காரர்கள், அயர்லாந்தில் நடத்திய இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்புகளை, பிற்காலத்தில் அனைத்துக் காலனிகளிலும் அறிமுகப் படுத்தினார்கள். வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய ஐரோப்பிய காலனியவாதிகள், ஆரம்பத்தில் செவ்விந்திய பூர்வ குடிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். கனடா முதல் மெக்சிகோ வரையில், ஆயிரக் கணக்கான கலப்பின காலனிகள் உருவாகி இருந்தன.

அதாவது, ஐரோப்பிய குடியேறிகளும், செவ்விந்தியர்களும் அருகருகே அயல் கிராமங்களாக வாழ்ந்து வந்தனர். நிறைய கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. ஆனால், பிற்காலத்தில் அமெரிக்காவில் அரசு அதிகாரத்தை நிலைநாட்டிய அதிகார வர்க்கத்தினர், இனக் கலப்பை தடை செய்தார்கள். அதற்குப் பிறகு தான், காலனிய விஸ்தரிப்பு யுத்தங்கள் நடந்தன. செவ்விந்திய பூர்வ குடிகள் இனவழிப்பு செய்யப் பட்டனர்.

17 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மன்னராட்சியை தூக்கியெறிந்து புரட்சி செய்த ஒலிவர் குரொம்வெல், அயர்லாந்து புரட்சியை மிகக் கொடூரமாக ஒடுக்கினார். அயர்லாந்து தீவில், பெருமளவு விவசாய நிலங்கள் ஆங்கிலேய நிலப்பிரபுக்களின் கீழ் இருந்தன. நிலப்பிரபுக்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஐரிஷ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அந்த மக்கள் எழுச்சியின் போது சுமார் 4000 பேர் கொல்லப் பட்டனர். ஆங்கில நிலப்பிரபுக்கள், ஐரிஷ் தொழிலாளர்களினால் படுகொலை செய்யப் பட்டனர். அது ஒரு வர்க்கப் புரட்சியாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் (17 ஆம் நூற்றாண்டு)கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களுக்கு இடையிலான மதப் பிரச்சினையாக தான் ஆரம்பித்தது.

குரொம்வெல் அனுப்பிய ஆங்கிலேயப் படைகள், ஐரிஷ் மக்கள் எழுச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்கள் தூக்கிலிடப் பட்டனர். அவர்களை பின்பற்றியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. ஆனால், இரண்டு நிபந்தனைகள். இங்கிலாந்துடன் போரில் ஈடுபட்டிருக்கும் எதிரி நாட்டிற்கு செல்லக் கூடாது. மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டுச் செல்ல வேண்டும். பெருமளவு ஐரிஷ் கிளர்ச்சியாளர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள். அதனால், அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களும் குழந்தைகளும் தனித்து விடப் பட்டனர்.

அயர்லாந்தின் நிலங்கள் மறு பங்கீடு செய்யப் பட்டன. கிளர்ச்சியை நசுக்குவதற்கு உதவிய பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு ஊதியமாக நிலங்கள் வழங்கப் பட்டன. எஞ்சிய ஐரிஷ் நிலவுடமையாளர்களுக்கு, பிரயோசனமற்ற தரிசு நிலங்கள் ஒதுக்கப் பட்டன. நாடுகடத்தப் பட்ட புரட்சியாளர்களின் குடும்பத்தினர், அந்த நிலங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1652 ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றியது. "தன்னைத் தானே பராமரிக்க முடியாத, அதாவது போதிய வருமானம் இல்லாத ஐரிஷ் பெண்கள், அடிமை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப் படலாம்." அயர்லாந்தை ஆக்கிரமிக்கும் போர் முடிந்த பின்னர் வேலையற்று இருந்த முன்னாள் போர்வீரர்கள், ஐரிஷ் பெண்களையும், குழந்தைகளையும் சுற்றி வளைத்து பிடித்து விற்று விடத் தொடங்கினார்கள். மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து வைத்து குறி சுடுவது போன்று, பிடிபட்ட ஐரிஷ் அடிமைகளுக்கும் செய்தார்கள்.

இங்கிலாந்து பாராளுமன்ற ஒப்புதலுடன், அடிமை வியாபாரிகள் ஐரிஷ் பெண்களை கப்பல்களில் கொண்டு சென்று, அமெரிக்காவில் விற்றார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறி இருந்த வசதி படைத்த ஆங்கிலேயர்கள், அழகான இளம் வயது ஐரிஷ் பெண்களை வாங்கி, தமது வீடுகளில் பாலியல் அடிமைகளாக வைத்துக் கொண்டார்கள். அழகில்லாத பெண்கள், பெருந்தோட்ட முதலாளிகளின் வீடுகளில் பணிப் பெண்களாக விற்கப் பட்டனர். சிலர் சிறுமிகளைக் வாங்கிச் சென்று பாவித்து விட்டு விபச்சார விடுதிகளில் தள்ளி விட்டார்கள்.

பார்படோஸ் தீவுக்கு கொண்டு சென்று இறக்கப் பட்ட வெள்ளையின ஐரிஷ் அடிமைகள், அங்கிருந்த பெருந்தோட்ட முதலாளிகளினால் கால்நடைகளைப் போன்று நடத்தப் பட்டனர். ஐரிஷ் பெண் அடிமைகளுடன் உறவு கொள்ளும் முதலாளிகள், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை விபச்சார விடுதிகளுக்கு விற்றனர். தம்மிடம் இருந்த கறுப்பின அடிமைகளை உறவு கொள்ள வைத்து, ஐரிஷ் பெண்களை பிள்ளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக வைத்திருந்தார்கள். ஏனெனில், கறுப்பு - வெள்ளை கலப்பில் பிறந்த சிறுமிகளை, விபச்சார விடுதிகளில் நல்ல விலைக்கு விற்க முடிந்தது.

பார்படோசில் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஐரிஷ் பெண்களின் வழித்தோன்றல்கள் இன்றைக்கும் அங்கே வாழ்கின்றனர். சுமார் 400 பேரளவில், மிகவும் வறுமையான நிலையில் சேரிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மட்டுமே தமது முன்னோரின் அயர்லாந்து பூர்வீகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டில் மிகச் சிறுபான்மையான இனம் என்பதால், பகை முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக ஒதுங்கி வாழ்கின்றனர்.

குறைந்தது ஐந்து இலட்சம் ஐரிஷ் அடிமைகள், அமெரிக்காவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்பப் பட்டுள்ளனர். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. 1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப் படும் வரையில், இந்த அடிமை வாணிபம் தொடர்ந்திருக்கிறது. கூடவே இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது. அடிமை வாணிபத்தில் ருசி கண்ட முன்னாள் பிரிட்டிஷ் படையினர், ஏழை ஆங்கிலேய சிறுமிகளை பிடித்தும் அடிமைகளாக விற்கத் தொடங்கி விட்டார்கள். அதனால், வெள்ளையின அடிமைகள் தொடர்பாக இங்கிலாந்தில் பல பக்கங்களில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் நூல்களை வாசிக்கவும்: 
White Cargo: The forgotten history of Britain's white slaves in America 
To Hell or Barbados: The Ethnic Cleansing of Ireland

Saturday, November 16, 2013

பொதுநலவாய நாடுகளின் மகாநாடு, யாருக்காக?




" எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் குருவே! இலங்காபுரி என்றென்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய சிற்றரசாக தொடர்ந்திருக்கும். கென்யா, மலேசியா, இந்த வரிசையில் இலங்கையிலும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி, நாட்டை மறுகாலனியாக்க வந்திருக்கும் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மகாராஜாவே, வருக... வருக... "

 ______________________________________________________________________________________


டேவிட் கமெரூனும், சம்பந்தரும், விக்னேஸ்வரனும் யாழ் நூலக மேல் மாடத்தில் (பால்கனி) நின்று கொண்டே, கீழே காணாமல்போன உறவுகளைத் தேடி அழும் தாய் மாரை கண்டு உருகும் காட்சி. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் வாகனம், காணாமல்போன சொந்தங்களை தேடி ஆர்ப்பாட்டம் செய்தவர்களால் வழிமறிக்கப் பட்டது. வாகனத்தை சூழ்ந்து கொண்டு, மேலே செல்ல விடாது தடுத்த தமிழ் மக்களை, பொலிஸ் பலவந்தமாக வெளியேற்றியது.

டேவிட் கமெரூன், தன் கண்முன்னே கண்ட ஸ்ரீலங்கா பொலிசாரின் அடக்குமுறையை தடுக்காமல், சூழ்ந்து நின்ற பொது மக்களிடம் குறைகளை கேட்டறியாமல், யாழ் நூலகத்திற்கு விரைந்து சென்றார். TNA தலைவர் சம்பந்தரும், வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனும், அங்கே அவருக்காக காத்திருந்தார்கள். No Comment. 
______________________________________________________________________________________

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழ் கூறு நல்லுலகு எங்கும் அது குறித்து, மயிர் பிளக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து, ஒரு ஆப்பிரிக்க நாடு விலகிக் கொண்டுள்ளது. அந்தத் தகவல், அமைப்பினுள் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கிய போதிலும், ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. 

கொழும்பு நகரில் பொதுநலவாய நாட்களின் மகாநாடு நடக்கவிருக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க நாடான காம்பியா அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில், காம்பியாவின் சர்வாதிகாரம், மனித உரிமை மீறல்கள் குறித்து, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தது. இருப்பினும், அந்த நாடு விலகிக் கொண்டதை, பிரிட்டனாலும், அந்நாட்டு ஊடகங்களாலும் "புரிந்து கொள்ள முடியவில்லையாம்." "இது பைத்தியக்காரத் தனமான முடிவு" என்று காம்பியா மீது தமது காழ்ப்புணர்வை காட்டி வருகின்றன. 

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் இருந்து விலகியதற்கு, காம்பியா கூறும் காரணங்கள் என்ன? "இது ஒரு காலனிய அமைப்பு. பொதுநலவாய நாடுகள் என்ற பெயரில், பிரிட்டன் தனது நவ காலனிய கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது. அது ஒரு ஜனநாயக நிறுவனம் அல்ல. அங்கே சர்வாதிகாரம் நிலவுகின்றது. அனைத்து முடிவுகளையும் பிரிட்டனே எடுக்கின்றது." பொதுநலவாய நாடுகள் விமர்சிக்கப் படுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, அதிலிருந்து விலகிய சிம்பாப்வே ஏறக்குறைய அதே காரணங்களை கூறியிருந்தது. உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், இந்தியா நினைத்தால் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை நடத்த விடாமல் தடுக்கலாம் என்று சில தமிழர்கள் நினைக்கின்றனர். அவர்கள் யாரும் பிரிட்டனை நோக்கி சுட்டு விரலை நீட்டுவதில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.

 ********************

"வட அயர்லாந்து பிரச்சினையில் நடந்ததைப் போன்று, இலங்கையிலும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப் பட வேண்டும். இது ஒரு நீண்ட கால செயற்திட்டம். இனங்களுக்கு, மதங்களுக்கு இடையில் நல்லுறவுப் பாலம் கட்டுவதை, இளைஞர்கள் சிறப்பாக செய்து காட்ட முடியும்." - பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு செயலாளர் வில்லியம் ஹேக்.

கொழும்பில் நடக்கும் பொதுநலவாய மகாநாட்டிற்கு வந்திருந்த வில்லியம் ஹேக், மாத்தறை நகரில் "இன நல்லிணக்க நிலையம்" ஒன்றை திறந்து வைத்துள்ளார். அந்த நிலையத்தை "ஸ்ரீலங்கா யுனைட்" என்ற அரசு சாரா நிறுவனம் நிர்வகிக்கின்றது. அந்த NGO வுக்கு நிதி வழங்குவதும், பிரிட்டன் தான். அந்த நல்லிணக்க நிறுவனம், நாடு முழுவதும் மூவினங்களை சேர்ந்த 15,000 பாடசாலை மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. "போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை நடந்தால், சர்வதேச சமூகம் தமிழீழத்தை தங்கத் தட்டில் வைத்துத் தரும்" என்று, தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களது பிரிட்டிஷ் எஜமான், இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்.

ஐக்கிய இலங்கை, இணக்க அரசியல் போன்றன, ராஜபக்சவின் "மகிந்த சிந்தனை" மட்டுமல்ல. அவையெல்லாம், தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கும், பிரிட்டிஷ் எஜமானர்களுக்கும் பிடித்த விஷயங்கள் தான். "ஆங்கிலேய அரசு ஐரிஷ் மக்களை அடக்கி ஒடுக்கியது போல, சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது" என்ற கழிவிரக்கம் காரணமாக இருக்கலாம்.

 ******************

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சிமகாநாடு, முக்கியமாக வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக நடைபெறுவதை, பிரிட்டிஷ் அமைச்சர்களே நேரடியாக கூறியுள்ளனர். குறிப்பாக, உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றான பிரிட்டனுக்கு இலங்கையில் கிடைக்கும் ஆதாயங்கள் எவை? உலக சுற்றுலா நிறுவனங்களால் சொர்க்கபுரி என புகழப்படும் இலங்கைத் தீவு, உல்லாசப் பயணிகளை சுண்டியிழுக்கும் நீளமான தங்க மணல் கடற்கரைகளை கொண்டது. மேற்கத்திய நாட்டு பயணிகளை கவரும், மலிவு விலை, ஆங்கிலம் பேசக் கூடிய மக்கள், போன்ற கூடுதல் தகுதிகளைக் கொண்டது. ஆனால், முப்பதாண்டு கால ஈழப்போர், பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை வர விடாமல் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

தற்போது அந்தப் பிரச்சினை இல்லை. புலிகளின் அழிவில், சர்வதேச முதலாளிகளின் எழுச்சி அலை ஒன்று உருவாகி உள்ளது. பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த கோடீஸ்வரர் ஒருவர், ஆடம்பர விடுதிகளையும், ரிசோட்களையும் கட்டுவதற்கு அனுமதி கேட்டு வந்துள்ளார். உலகம் முழுவதும் விடுமுறைகளை கழிக்கச் செல்லும் ஐரோப்பிய நாட்டவரில், பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களை இலங்கைக்கு இழுத்து வருவதும், சுற்றுலாத் துறை நிறுவனங்களின் நீண்ட கால திட்டமாகும்.

எல்லாம் சுபமாக நடந்தால், தாய்லாந்து போன்று, இலங்கையும் மேலைத்தேய உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியலாம். ஆனால், சுற்றுலாத் துறையில் கிடைக்கும் இலாபத்தில் பெரும்பகுதி, அதில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களிடம் போய்ச் சேரும்.

*****************

Thursday, April 11, 2013

"மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!


மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம் 
(பாகம் : இரண்டு)
********
"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் 
(1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.)

மார்கரெட் தாட்சர் தனது பிரதமர் பதவிக் காலம் முழுவதும், செல்வந்தர்களின் மீட்பராகவே இருந்தார். ஆனால், பொது மக்களுக்கு முன்னால், மிகவும் எளிமையானவராக காட்டிக் கொண்டார்.  தொலைக்காட்சி காமெராவுக்கு முன்னால், பொது இடங்களில் குப்பை பொறுக்கிப் போட்டார்.  அவர் தன்னை, ஒரு மளிகைக் கடைக் காரனின் மகளாக காட்டிக் கொள்வதில் பெருமைப் பட்டார். அதே நேரம், அவர் ஒரு இலட்சாதிபதியை கணவராக பெற்ற பாக்கியத்தையும், பணக்கார நண்பர்களையும் பற்றிய விபரங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தா வண்ணம் பார்த்துக் கொண்டார். இந்த இரட்டை வேடம் காரணமாக, அவரால் பலரை ஏமாற்ற முடிந்தது.

இன்றைக்கும், தமிழ் முதலாளித்துவ ஊடகங்கள், மார்க்கரட் தாட்சரின் மரணத்தை, ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என்பதைப் போல, மக்களுக்கு புளுகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டே, தமிழர்களின் எதிரியை மகிமைப் படுத்துகின்றனர். இந்த இரட்டை வேடம், அவர்களுக்கு புதிதல்ல. உலகம் முழுவதும், தென்னாபிரிக்க நிறவெறி அரசை கண்டித்து, அதன் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. மார்க்கரட் தாட்சர் நிறவெறியர்களுடன் சொந்தம் கொண்டாடினார். அப்போது சிறையில் இருந்த, கறுப்பின விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலாவை, பயங்கரவாதி என்று குறிப்பிட்டு பேசி வந்தார்.

தாட்சர் ஒரு இனவாதி என்ற ஐயம் பலருக்கு ஏற்படுவது இயல்பு. அவரைப் பொறுத்தவரையில், ஆங்கிலம் பேசும் மக்கள் மட்டுமே "நல்லவர்கள்", "நம்பகத் தன்மை" வாய்ந்தவர்கள். இதனால், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற ஆங்கிலேயர்கள் ஆளும் நாடுகள் மட்டுமே, பிரிட்டனின் நட்பு சக்திகள் என்று நம்பினார். அமெரிக்கா மீதான கண்மூடித்தனமான சகோதர பாசம், ஒரு அமெரிக்க நிறுவனம் ஒன்றின் "ஹெலிகாப்டர் விற்பனை ஊழலில்" விரிசல் கண்டது. இரண்டாம் உலகப்போரில், பிரிட்டன் (அமெரிக்காவுடன் சேர்ந்து) "அரைவாசி ஐரோப்பிய நாடுகளை விடுதலை செய்த கதைகளை" கூறி இனப்பெருமை பேசி வந்தார். இன மேலாண்மை எண்ணம் காரணமாக, மிகத் தீவிரமான ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பாளராக இருந்தார். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களாலும், தாட்சரின் நம்பிக்கைக்கு  இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அதுவே தாட்சரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

1984 ம் ஆண்டு, பிறைட்டன் நகரில, கன்சர்வேட்டிவ் கட்சி மகாநாடு நடைபெற்ற நட்சத்திர விடுதி, IRA யினால் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அதுவரையும் சிறியளவு தாக்குதல்களில் ஈடுபட்ட IRA, மிகப் பெருமெடுப்பில் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது. அந்தத் தாக்குதலில், தாட்சர் மயிரிழையில் உயிர் தப்பினார். பிரிட்டன் இன்னமும் வட அயர்லாந்து என்ற பகுதியை காலனிப் படுத்தி வைத்திருப்பதையும், IRA யின் போராட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு சவாலாக வளர்ந்து விட்டதையும் அந்த குண்டுவெடிப்பு உலகிற்கு எடுத்துக் காட்டியது. வட அயர்லாந்து பிரச்சினையில், மார்க்கரெட்  தாட்சர் ஆக்கிரமிப்பாளர்களான ஆங்கிலேய குடியேறிகளை ஆதரித்தார்.  விடுதலைக்காக போராடிய ஐரிஷ் மக்களை அடக்குவதில் குறியாக இருந்தார்.



இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து, ஈழத்தில் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த நிகழ்வை, தமிழர்கள் பலர் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு முன்னரே, 1981 ம் ஆண்டு, வட அயர்லாந்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பத்து அரசியல் கைதிகள் மரணத்தை தழுவிக் கொண்டனர். அதில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார். விடுதலைக்காக போராடும் ஐரிஷ் சிறுபான்மை இனத்தை  ஒடுக்கும், பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை உலகம் அறியச் செய்த போராட்டம் அது.

வட அயர்லாந்து சிறைச்சாலைகளில், பத்து அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த போதிலும், அவர்கள் பக்கம் திரும்பியும் பாராத கல்நெஞ்சக்காரியாக தாட்சர் விளங்கினார். பொபி சான்ட்ஸ் என்ற அரசியல் கைதி, சிறையில் இருந்த படியே தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார். உண்ணாவிரதமிருந்து மரணத்தை தழுவிக் கொண்ட பொபி சாண்ட்சின் மரண ஊர்வலத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, உலகம் முழுவதும் பேசப் பட்டது. அது தாட்சர் அரசுக்கு, சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

பிரிட்டனில் ஐரிஷ் சிறுபான்மை இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய மார்கரெட் தாட்சர், பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் எந்தப் பக்கத்தை ஆதரித்திருப்பார்? இதனை புரிந்து கொள்வது ஒன்றும் சிக்கலான விடயமல்ல. தாட்சர் பிரிட்டனை ஆண்ட காலத்தில் தான், இலங்கையில் தமிழீழப் போராட்டம் வீறு கொண்டெழுந்தது. அது பனிப்போர் காலகட்டம் ஆகையினால், பிரிட்டன் உலகம் முழுவதும் மார்க்சியத்தை வேரோடு அழிக்கும் புனிதப்போரில் ஈடுபட்டது. அன்றிருந்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தனே, மார்க்சிய எதிர்ப்பு புனிதப்போரில், பிரிட்டனின் கூட்டாளியாக காட்டிக் கொள்ள விரும்பினார். அந்தக் காலத்தில், புலிகள் உட்பட ஐந்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கு, இந்தியா நிதியும், ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கி வந்தது. இந்தியாவுக்கு சோவியத் யூனியன் ஆதரவளித்தது.

அன்று இலங்கையில் இருந்த ஜெயவர்த்தனே அரசு, தீவிரமான அமெரிக்க சார்பு அரசாக காட்டிக் கொண்டது. "வொயிஸ் ஒப் அமெரிக்கா"(VOA) வுக்கு, திருகோணமலையில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கினார். இன்று, இலங்கையில் சீனா கால்பதித்து விட்டது என்றும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போடப்படுவது உங்களுக்கு தெரியும். அன்றைய நிலைமை வேறு. இலங்கையில் அமெரிக்கா கால் பதித்து விட்டது என்றும், இந்தியாவை உளவு பார்ப்பதற்கே VOA தொலைத்தொடர்பு கோபுரம் கட்டப்படுவதாகவும் சந்தேகிக்கப் பட்டது. ஜெயவர்த்தன அரசுக்கு தலையிடி கொடுக்கும் நோக்குடன், தமிழீழ போராளிக் குழுக்களுக்கான இந்திய உதவியும் அதிகரிக்கப் பட்டது.

அன்றைய காலகட்டத்தில், ஈழப்போர் பற்றி செய்தி சேகரிக்க சென்ற மேற்கத்திய ஊடகங்கள், ஜெயவர்த்தனேயிடம் பேட்டி எடுத்தன. அந்தப் பேட்டிகளில், "புலிகள் போன்ற தமிழீழ போராளிக் குழுக்களை மார்க்சியவாதிகள் என்றும், அவர்கள் இலங்கை முழுவதையும் மார்க்சிய நாடாக்குவதற்காக போராடி வருவதாகவும்..." ஜெயவர்த்தனே குறிப்பிட்டுப் பேசி வந்தார். வெகுஜன ஊடகங்களில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன என்பதால் தான், அவை எமக்குத் தெரிய வருகின்றன.  வெளிநாடுகளுடனான, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் என்ன பேசப் பட்டன என்பது எமக்குத் தெரியாது. எது எப்படி இருந்தாலும்,  இலங்கை அரசு "மார்க்சிய விடுதலைப் புலிகளை" எதிர்த்துப் போராடி வருவதாக, மார்க்கரெட் தாட்சர் நினைத்திருப்பார்.

"மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்காக, தாட்சர் அரசு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தது. உண்மையில், தக்க தருணத்தில் பிரிட்டனின் உதவி கிட்டியிராவிட்டால், சிலநேரம் அப்போதே "தமிழீழம் உருவாகி இருக்கும்." ஏனெனில், தரைவழிச் சண்டையில் போராளிக் குழுக்களின் கை ஓங்கியிருந்தது. சிங்கள இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. சிறிய இராணுவ முகாம்களை கைவிட்டு விட்டு, பெரிய இராணுவ முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தது. வான்படையினரின் தாக்குதல்கள் காரணமாகத் தான், போராளிகளை எட்டத்தில் வைத்திருக்க முடிந்தது. விமானங்களை, ஹெலிகாப்டர்களை தாக்குவதற்கு ஏவுகணைகளோ, விமான எதிர்ப்பு பீரங்கியோ இல்லாத போராளிக் குழுக்களால், விமானத் தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. பல தடவை, அதுவே களத்தில் பின்னடைவை கொடுத்தது. 

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தாக்குதிறனை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாது, அவர்களை நிலைகுலையச் செய்த,   விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் ஒட்டியது யார்? ஈழப்போர் தொடங்கும் வரையில், வெறும் சம்பிரதாயபூர்வமான பணிகளிலேயே ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபட்டு வந்தது. படையினர் எந்தப் போரிலும் ஈடுபட்டு கள அனுபவம் கண்டவர்கள் அல்லர். அதனால், தமிழீழப் போராளிகளின் திடீர் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பயந்து ஓடினார்கள். அன்று வெறும் பத்தாயிரம் பேரை மட்டுமே கொண்டிருந்த, யுத்த அனுபவமற்ற ஸ்ரீலங்கா இராணுவத்தை வெல்வது இலகு என்று தான், ஈழ விடுதலை இயக்கங்கள் கணக்குப் போட்டன. ஆனால், அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. 

காரணம், இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதற்காக பிரிட்டிஷ் கூலிப்படையான SAS  தருவிக்கப் பட்டது. விமானப் படையின் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் ஓட்டுவதற்கு ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள் வந்திறங்கினார்கள். பிரிட்டிஷ் விமானிகள் ஓட்டிய ஹெலிகாப்டர்கள், விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது தாக்குதல்களை நடத்தின. அன்றைய காலத்தில், பல நூறு போராளிகளின் மரணத்திற்கும், பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கும், சொத்து அழிவுக்கும், பிரிட்டிஷ் கூலிப்படையினர் காரணமாக இருந்துள்ளனர். அதற்கெல்லாம், மார்க்கரெட் தாட்சர் அனுமதி வழங்கி இருந்தார். 

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து, மார்க்கரெட் தாட்சர் தெரிவித்த கருத்துக்கள் இவை:

"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் (1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.)

இவர் தான் மார்க்கரெட் தாட்சர். இவருக்காக தமிழர்கள் அழ முடியுமா?  

(முற்றும்)

*******************************************

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 
மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்

விடுதலைப் புலிகள் பற்றியும், ஈழப்போரில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன BBC க்கு வழங்கிய நேர்காணல். இதில் அவர் புலிகளை ஒரு மார்க்சிய இயக்கம் என்றும், இலங்கை முழுவதும் மார்க்சிய அரசை உருவாக்குவதே அவர்களின் இலட்சியம் என்றும் கூறுகின்றார்.