Saturday, September 20, 2014

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி! பிரிட்டனின் பித்தலாட்டம்!!


இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது.  ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்!

ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், "இல்லை" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, "இல்லை" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல "ஆம்" ஓட்டுகள், "இல்லை" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 


மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில் வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால், முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும் போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான் உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.




உலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம் மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத் தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "ஆம்" என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "இல்லை" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில், கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.

மேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன் முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம். அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. "இல்லை" என்று வாக்களித்தால், மாநில சுயாட்சியும், அதிகாரப் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.

சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம் இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். "தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக் காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன் மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்." புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்;
ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு

1 comment:

காரிகன் said...

ஸ்காட்லாந்தின் சுதந்திரம் தோற்றுப்போனது துரதிஷ்டம். கத்தியின்றி ரத்தமின்றி கைக்கெட்டிய ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஸ்காட்டிஷ் மக்கள் இழந்துவிட்டார்கள். இதற்கு ஸ்காட்லாந்தில் குடியேறியிருக்கும் வெளிநாட்டினரின் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. அவர்களுக்கும் இந்த வோட்டில் வாய்ப்பு கொடுத்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்றும் வந்தேறிகளால் ஸ்காட்டிஷ் விடுதலை அஸ்தமித்து போனது என்றும் சொல்கிறார்கள் சிலர்.