Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Thursday, December 31, 2020

மதம் ஒரு "போதைப்பொருள்" எனும் வறட்டு நாத்திகர்களின் பிரச்சாரம் குறித்து...

"மதம் மக்களின் அபின்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன கூற்று திரிபுபடுத்தப் பட்டு, பலரால் பிழையான முறையில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அந்தக் கூற்றில் கார்ல் மார்க்ஸ் மதத்தை போதைப்பொருளுடன் ஒப்பிட்டு சொன்னதாக வறட்டு நாத்திகர்களும் வாதாடுகிறார்கள். அது முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான பொய்ப் பிரச்சாரம்.

கார்ல் மார்க்ஸ் எழுதிய "ஹேகலின் வலது தத்துவம்" என்ற நூலுக்கான முன்னுரையில் தான் அந்தக் கூற்று இடம்பெறுகின்றது. அதற்கு முன்னுக்கும் பின்னுக்கும் என்ன எழுதி இருக்கிறது என்பதை வறட்டு நாத்திகர்கள் வாசிக்க விரும்புவதில்லை.

நூலில் இருந்து: (இலகுபடுத்தப் பட்ட மொழிபெயர்ப்பு)

//மதச்சார்பற்ற விமர்சனத்தின் அடிப்படையானது " மனிதர் மதத்தை உருவாக்குகிறார்கள். மதம் மனிதரை உருவாக்கவில்லை" என்கிறார்கள்.  குறிப்பாக, மதம் என்பது, மனிதர்கள் தாம் இன்னும் தம்மிடம் கண்டுகொள்ளாத அல்லது திரும்பவும் தொலைத்து விட்ட சுய உணர்வு அல்லது சுய மதிப்பீடு எனலாம். ஆனால் மனிதர்கள் என்போர் புலன்களால் அறிய முடியாத, உலகிற்கு வெளியே அலையும் ஜீவன்கள் அல்ல.

மனிதர்களின் உலகானது, அரசு, சமூகம், இவற்றின் அங்ககமாக மனிதர்கள் உள்ளனர். இந்த அரசும், இந்த சமூகமும் மதத்தை உற்பத்தி செய்கின்றன. (இன்று நாம் வாழும் உலகம்) ஒரு தலைகீழாக மாற்றப் பட்ட உலகாக இருப்பதால், அதுவும் உலகின் மறுவளமான சுய உணர்வாக உள்ளது.

மதம் என்பது, 

இந்த உலகின்... 

  •  பொதுவான கோட்பாடு. - பல்பொருள் களஞ்சியத்தின் சாராம்சம்.
  • அதன் வெகுஜன வடிவிலான தர்க்கீகம்.
  •  அதன் ஆத்மார்த்தமான கௌரவ உணர்வு.
  • அதன் பேரார்வம்.
  • அதன் அறம் சார்ந்த உறுதிப்படுத்தல்.
  • சம்பிரதாயபூர்வமான பூரணப் படுத்தல்
  • ஆற்றுப்படுத்தலுக்கும், நியாயப்படுத்தலுக்குமான உலகளாவிய அடிப்படை.

அது மனிதப்பிறவியின்  கற்பனையான மெய்யுணர்வு, ஏனென்றால் மனிதப்பிறவி உண்மையான மெய்யுணர்வை கண்டதில்லை. ஆகவே, மதத்திற்கு எதிரான போராட்டமானது, மறைமுகமாக அந்த உலகிற்கும் எதிரான போராட்டமாகும். மதம் அந்த உலகின் உணர்வுபூர்வமான வாசனைத் திரவியம் போன்றுள்ளது. மதரீதியான வருந்துதல் என்பது, நிஜமான வருந்துதலின் வெளிப்பாடாக இருக்கும் அதே நேரத்தில் அந்த நிஜமான வருந்துதலுக்கு எதிரான எதிர்வினையாகவும் உள்ளது. மதம் என்பது சபிக்கப் பட்ட படைப்புகளின் பெருமூச்சு.

மதம் என்பது இதயமற்ற உலகின் இதயத்துடிப்பு, அத்துடன் ஆன்மா இல்லாத நிலைமையில் ஆன்மாவாக உள்ளது. அது மக்களின் ஓப்பியம்(அபின்).// 

(கார்ல் மார்க்ஸ்)



சிலர் இங்கே கடைசியாக சொல்லப் பட்ட ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். அதை மட்டும் வைத்துக் கொண்டு கார்ல் மார்க்ஸ் மதம் ஒரு போதைப்பொருள் என்று சொல்லி விட்டார் என்று திரிக்கிறார்கள். உண்மையில் ஓப்பியம் என்பது என்ன?

கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஓப்பியம் மருந்துக் கடைகளில் சட்டபூர்வமாக விற்பனை செய்யப் பட்டது. அது மருத்துவர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. குறிப்பாக நோயின் கடுமை காரணமாக, அதிக வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருத்துவர்களே ஓப்பியம் கொடுத்து அமைதிப் படுத்துவார்கள்.

அன்றைய ஐரோப்பிய நாடுகளில் வறுமையில் வாழ்ந்த ஏழை மக்கள், பசியை மறப்பதற்கு சிறிதளவு ஓப்பியம் எடுப்பது வழமை. ஓப்பியம் உட்கொண்ட ஏழை உழைப்பாளிகள் பசியை மறந்து வேலை  செய்வதுடன், தாம் மகிழச்சியாக வாழ்வதாகவும் உணர்ந்தார்கள்.  பசியால் அழும் குழந்தைகளை தாய்மார் ஓப்பியம் கொடுத்து தூங்க வைத்தனர்.

இரக்கமற்ற உலகில் வாழும் மனிதர்கள்  தமது கவலைகளை மறப்பதற்காக, மதம் என்றார் ஒன்றை கருத்து நிலை சார்ந்த ஒப்பியமாக உருவாக்கிக் கொள்கின்றனர் என்பது தான் மார்க்ஸ் சொல்ல வந்தது. இங்கே மார்க்ஸ் மதத்தை ஓப்பியத்துடன் மட்டும் ஒப்பிடவில்லை. இதயம், வாசனைத்திரவியம், போன்றவற்றோடும் ஒப்பிடுகின்றார்.

அத்துடன் மதம் என்பது தலைகீழாக உள்ள உலகின் உள்ளுணர்வு, மனிதர்களின் கற்பனையான மெய்யுணர்வு, வருத்தத்தை தணிப்பதற்கான ஆற்றுப் படுத்தல்... என்றெல்லாம் விபரிக்கின்றார். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவோர் உள்நோக்கம் கொண்டவர்கள். 


வறட்டு நாத்திகர்கள், மதம் ஒரு போதைப்பொருள்(அபின்) என்று மார்க்ஸ் சொன்னதாக ஒரு தீய நோக்கோடு பரப்புரை செய்து வருகின்றனர்.  இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பறிக்க நினைக்கிறார்கள். ஒன்று, மத நம்பிக்கையாளர்களை மார்க்சியத்தில் இருந்து அந்நியப் படுத்தி விரிசலை உண்டாக்குவது. இரண்டு, சபல புத்தி கொண்ட மார்க்சியவாதிகளை தமது இனவாத நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு வருவது.

மனிதர்கள் தாம் இன்னமும் அடிமைச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருப்பதை அறிய முடியாமல் போடப்பட்டுள்ள திரையாக மதம் உள்ளது என்பது தான் மார்க்ஸ் சொல்ல வருவது. அதை நாம் இங்கே மார்க்சின் எழுத்துக்களில் இருந்து அறிந்து கொள்வோம்.

நூலில் இருந்து: 

//மாயத்தன்மை கொண்ட மகிழ்ச்சி தரும் மதத்தின் பங்களிப்பை இல்லாதொழிப்பதானது, அதே நேரத்தில் மக்களின் உண்மையான மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான கோரிக்கையாகவும் உள்ளது. அந்த நிலைமையின் மாயையை இல்லாதொழிப்பது என்பது, அதே நேரத்தில் இந்த மாயைகள் தேவைப்படும் நிலைமையை இல்லாதொழிப்பது என்றும் அர்த்தம் ஆகும். மதத்தின் மீதான விமர்சனம் என்பது, துன்பக் கேணி பற்றிய விமர்சனத்தை கருவாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் மதம் (மனிதர்களின்) துன்பக் கேணியை மறைக்கும் ஒளிவட்டமாக உள்ளது. 

இந்த விமர்சனம் (அடிமைச்) சங்கிலியை சுற்றிப் படர்ந்திருந்த கற்பனைப் பூக்களை அகற்றியுள்ளது. அதன் அர்த்தம் மனிதர்கள் கற்பனையற்ற, ஆற்றுதல் அற்ற சங்கிலியை அணிந்திருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, சங்கிலியை வீசியெறிந்து விட்டு உயிர்ப்புள்ள மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது தான். மதத்தின் மீதான விமர்சனம் மனிதனை மாயையில் இருந்து விடுவிக்கிறது. ஆகவே, அவன் தனது மாயையில் இருந்து விடுபட்டவனாக, உள்ளுணர்வை மீட்டெடுத்தவனாக சிந்தித்து, செயலாற்றி தனது உண்மைத்தன்மையை அமைத்துக் கொள்ள முடியும். ஆகவே, தானே உண்மையாக சூரியனாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பான். அது வரைக்கும், மதம் ஒரு மாயச் சூரியனாக மனிதனையே சுற்றிக் கொண்டிருக்கும்.

அதனால் இன்னொரு உலகின் உண்மை மறைந்த பின்னர், இவ்வுலகின் உண்மையை நிலைநாட்டுவதற்கான கடமை வரலாற்றுக்கு உள்ளது. வரலாற்றுக்கு சேவை செய்ய வேண்டிய முதன்மையான கடமை தத்துவத்திற்கு உள்ளது. மனிதகுல சுய அந்நியப்படுத்தலான புனித உருக்கள்  எனும் முகமூடி கழற்றப் பட்ட பின்னர், புனிதமற்ற உருக்களை காவித்திரிந்த வரலாற்றின் சுய அந்நியப் படுத்தலும் அம்பலப் படுத்தப் படும். ஆகவே, சொர்க்கத்தின் மீதான விமர்சனம், பூமியின் மீதான விமர்சனமாக மாறுகிறது. மதத்தின் மீதான விமர்சனம் சட்டத்தின் மீதான விமர்சனமாக மாறுகிறது. இறையியல் மீதான விமர்சனம் அரசியல் மீதான விமர்சனமாக மாறுகிறது.// (கார்ல் மார்க்ஸ்)


கடைசிப் பந்தி கிறிஸ்தவ மதம் போதிக்கும் மறு உலகக் கோட்பாட்டை மறுதலிக்கிறது. கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் துன்பப்படும் ஏழைகள் கடவுளிடம் முறையிடும் போதெல்லாம், மத போதகர்கள் அவர்களுக்கு சொர்க்கத்தில் மகிழ்ச்சிகரமான நித்திய வாழ்வு காத்திருக்கிறது என்று ஆறுதல் சொல்வார்கள். இங்கே "இன்னொரு உலகம்" என்பது சொர்க்கத்தை குறிக்கும். மன்னர்களும், பிரபுக்களும், பணக்காரர்களும் செல்வத்தில் திளைக்கையில், பெரும்பாலான உழைக்கும் மக்கள் ஏழ்மையில் வாடினார்கள். இன்றைக்கும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை. ஏழை- பணக்காரர் என்ற வர்க்க வேற்றுமையை மறைக்கும் மாயத் திரையாக மதம் உள்ளது.

ஆகவே மதத்தின் மீதான விமர்சனமானது, கூடவே மதம் பாதுகாக்கும் பணக்கார வர்க்க அரசியல், சட்டங்கள் மீதான விமர்சனமாகவும் இருக்க வேண்டும். மதம் மட்டுமல்லாது, வரலாறும் இந்த வேற்றுமைகளை மூடி மறைத்து வந்துள்ளது. ஆகவே, வரலாற்றின் போர்வையை களைய வேண்டிய கடமைப்பாடு தத்துவத்திற்கு உள்ளது. அதையே மார்க்சிய தத்துவமும் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றது. அதாவது மனிதர்களின் துன்பங்களை ஆற்றுப் படுத்தும் வலி நிவாரணியாக இருந்து வரும் மதத்தின் இருப்பை இல்லாதொழிப்பதென்பது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வைக்கும் பொதுவுடைமைக் காலத்தில் தானாக நடக்கும்.  

இந்த இடத்தில் தான் வறட்டு நாத்திகர்கள், மார்க்சியத்துடன் முரண்படுகிறார்கள். அவர்கள் கண்மூடித்தனமாக மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்களே அல்லாமல், மதம் எனும் மாயத்திரைக்கு பின்னால் உள்ள வர்க்க அரசியலை கண்டுகொள்வதில்லை. காரணம், வறட்டு நாத்திகர்களும் ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தில் நன்மை அடைந்த குட்டி பூர்ஷுவா பிரிவினராக உள்ளனர். இந்த முதலாளித்துவ சமூகமானது மதங்களை மட்டுமல்லாது, வறட்டு நாத்திகத்தையும்  உணவூட்டி வளர்த்து வருகின்றது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் நோக்கில் ஆதிக்க சக்திகளால் அனுப்பப்படும் மதவாத, வறட்டு நாத்திக அயோக்கியர்களை இனங் கண்டு புறம் ஒதுக்குவதும் மார்க்சியர்களின் கடமையாக உள்ளது.

- கலையரசன்

 29. 12. 2020  

Thursday, November 26, 2020

மாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்!

 

கம்யூனிசம் என்பது கார்ல் மார்க்சின் கண்டுபிடிப்பு அல்ல. உலகம் முழுவதும் முன்னொரு காலத்தில் இருந்த, ஆதிகால கம்யூனிச சமுதாயங்கள் குறித்து ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அவை சிலநேரம் ஏதாவதொரு மதம் சார்ந்தும் இருந்திருக்கலாம்.

 பொதுவாக உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் எதோ ஒரு கட்டத்தில் வர்க்கப் பிரிவினைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்கு மாறாக, வர்க்க பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை போதித்த ஒரு மதம் வரலாற்றில் இருந்துள்ளது. ஈரானில் தோன்றிய மாஸ்டாயிசம் என்ற கம்யூனிச மதம் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். ஆதி கால கிறிஸ்தவர்கள் ஒரு கம்யூனிச சமுதாயத்தில் வாழ்ந்தனர். இருப்பினும் கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதும், அது அரச மதமாகியது. அதனால் கிறிஸ்தவம் போதித்த சமத்துவ கொள்கைகள் கைவிடப் பட்டு, கிறிஸ்தவ மதமும் ஒரு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாக மாறியது. 

பண்டைய ஈரானில் நிலவிய சொராஸ்டிரிய மதத்தின் பல தத்துவங்கள் இன்றைக்கும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஈரானிய சாம்ராஜ்யத்தின் அரச மதமாகவும் சொராஸ்டர் மதம் இருந்து வந்தது.


ஈரானில் இஸ்லாமிய- அரேபியரின் படையெடுப்புகள் நடக்கும் வரையில், அங்கு சசானிய அரச வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களும் சொராஸ்திரிய மதத்தை தான் பின்பற்றி வந்தனர். கி.பி. 473 முதல் 531 வரை ஈரானை ஆண்ட சசானிய பரம்பரையை சேர்ந்த காவாத் மன்னனின் காலத்தில் ஒரு புதிய கம்யூனிச மதம் தோன்றியது. அதை தோற்றுவித்த மாஸ்டாக் என்ற மதகுருவின் பெயரால் அது மாஸ்டாகிசம் என்று அழைக்கப் பட்டது. 


உண்மையில் மாஸ்டாக் கூட ஒரு சொராஸ்திரி மதகுரு தான். அவரது போதனைகள் வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கியதாக இருந்தன. "ஆதி கால கம்யூனிசம்" என்று சொல்லத்தக்க பொதுவுடைமைக் கோட்பாடுகளை மதக் கருத்துக்களாக போதித்து வந்தார். அவரது போதனைகளால் பெருமளவு மக்கள் கவரப் பட்டனர். 


மாஸ்டாக் போதனைகளின் படி, கடவுள் இந்தப் பூமியை அனைத்து மனிதர்களுக்கும் படைத்துள்ளார். பூமியில் உள்ள செல்வங்களை அனைவரும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம். இருப்பினும் வலிமை படைத்த தீயவர்கள், வலிமை குறைந்த நல்லவர்களை அடக்கி ஒடுக்கி அனைத்து செல்வங்களையும் தாமே அனுபவிக்கத் தொடங்கினார்கள். இதனை மாஸ்டாக் இருமைவாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார். 

இத்தகைய இருமைக் கோட்பாடு (Dualism) இன்றும் பல மதங்களில் உள்ளது. உதாரணத்திற்கு கிறிஸ்தவ மதத்தில் அது ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையிலான போராட்டம் என்று சொல்லப் படுகிறது. இஸ்லாமிய மதத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான போராட்டம், அதாவது ஜிகாத் என்று இன்னொரு விதமாக விரிவான விளக்கம் கொடுக்கிறது. 


இருமைக் கோட்பாடு, ஏற்கனவே ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தில் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு மாஸ்டாக் சோஷலிச விளக்கம் கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. உலகில் தீமைகள் நடப்பதற்கான ஐந்து காரணிகள் என்று மாஸ்டாக் குறிப்பிடுவதும் சோஷலிச கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. அவர்கள் அதை நல்லதுக்கும் கெட்டதுக்கும், அல்லது வெளிச்சத்திற்கும் இருட்டுக்கும் இடையிலான போராட்டம் என்பார்கள். 


மாஸ்டாக் முக்கியமாக ஒரு வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை போதித்தார். அனைவருக்கும் சமமான உரிமைகள், மற்றும் சமமான நீதி வழங்கப் பட வேண்டும் என்றார். மேலும் சொத்துக்கள் அனைவருக்கும் பொதுவாக்கப் பட வேண்டும், தனியுடைமை ஒழிக்கப் பட வேண்டும் என்பது பிரதானமான போதனையாக இருந்தது. கடவுள் வளங்களை அனைவருக்கும் சமமமாக பங்கிட்டுக் கொடுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கைத் தவிர மேலதிகமாக எடுத்துக் கொள்ள ஆசைப் படக் கூடாது. இருப்பினும் பலமுள்ளவர்கள், பலவீனமானவர்களிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுத்து தமக்கென சொந்தமாக்கி உள்ளனர். பணக்காரர்கள் தமது பங்கிற்கு மேற்பட்ட செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 


இந்த இடத்தில் பெண்கள் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான போதனையை காண முடிகிறது. மாஸ்டாக்கிய மதத்தில் சுதந்திரமான காதல் திருமணங்கள் அனுமதிக்கப் பட்டிருந்தன. அத்துடன் பலதார மண முறை கடுமையாக எதிர்க்கப் பட்டது. அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் பலதார மணம் சர்வசாதாரணமான விடயமாக இருந்தது. ஈரானும் அதற்கு விதிவிலக்கல்ல. மாஸ்டாக் அதையும் ஒரு வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதாவது செல்வந்தர்கள் மட்டுமே பல பெண்களை மணம் முடிக்கிறார்கள். அன்றைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பெண்களும் சொத்துக்களாக கருதப் பட்டனர். ஒரு வர்க்க ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதாயத்தில் பணக்காரர்கள் பெண்களையும் தமக்குள் பகிர்ந்து கொள்வதால், ஏழைகள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையை போதித்தது. இஸ்லாம் நான்கு மனைவியர் மட்டுமே என்று சட்டம் போட்டு கட்டுப் படுத்தியது. ஆனால் கிறிஸ்தவமோ, இஸ்லாமோ பலதார மணத்தை வர்க்க கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறி விட்டன. 


சமூகத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுக்கு ஐந்து பிசாசுகள் காரணம் என்பது ஒரு மாஸ்டாக் போதனை. பொறாமை, கெட்ட எண்ணம், பழிவாங்கும் உணர்வு, தேவை, பேராசை ஆகிய ஐந்து பிசாசுகள் மனிதனை தீய வழியில் கொண்டு செல்கின்றன. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சமூகப் புரட்சி (சோஷலிசப் புரட்சி) அவசியம். அந்த வகையில் கார்ல் மார்க்ஸ் போன்ற சோஷலிச அறிஞர்கள் உலகில் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாஸ்டாக் ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அன்று பல இலட்சக் கணக்கான ஈரானியர்கள் மாஸ்டாக்கின் சமத்துவ கொள்கைகளால் கவரப் பட்டு புதிய மதத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் தமது சொத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு கம்யூனிச சமுதாயமாக வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மன்னன் காவாத் புதிய மதத்தை தழுவிக் கொள்ளும் அளவிற்கு பெரும்பான்மை மக்கள் மாஸ்டாகிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். 


இருப்பினும் அந்நாட்டில் பிற மதங்களை, குறிப்பாக அரச மதமான சொராஸ்திரிய மதத்தை பின்பற்றுவோரும் வாழ்ந்தனர். குறிப்பாக மேட்டுக்குடியினர் தனியுடைமையை ஏற்றுக் கொண்ட சொராஸ்திரிய மதத்திற்கு விசுவாசமாக இருந்தனர். இந்த சொத்துடைமை வர்க்கத்தினர், சொராஸ்திரிய மதகுருக்களுடன் சேர்ந்து புதிய கம்யூனிச மதத்தை அழிப்பதற்கு சூழ்ச்சி செய்தனர். அவர்களுடன் முடிக்குரிய இளவரசன் கொஸ்ரோவ் அனுஷீர்வனும் சேர்ந்து கொண்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனையில் நடக்கவிருக்கும் விருந்துக்கு வருமாறு மாஸ்டாக் மதகுருக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அது தமக்கு வைக்கப் பட்ட பொறி என்பதை அறியாமல் சென்ற மாஸ்டாக் மதகுருக்கள் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர்.
 

அந்த சம்பவத்திற்கு பின்னர், நாடு முழுவதும் மாஸ்டாக் மத நம்பிக்கையாளர்கள் வேட்டையாடப் பட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். பலர் உயிரோடு புதைக்கப் பட்டனர். முன்பு மாஸ்டாக்கிய மதத்தை தழுவியிருந்த மன்னன் காவாத், அன்று நடந்த சதிப்புரட்சி காரணமாக வெளியேற்றப் பட்டான். மூன்று வருடங்களுக்கு பின்னர் திரும்பி வந்த மன்னன் மாஸ்டாக் மதத்தை கைவிட்டு விட்டு, மறுபடியும் சொராஸ்திரிய மதத்தை பின்பற்றினான். அத்துடன் அவனே மாஸ்டாக் இனப்படுகொலையை முன்னின்று நடத்தினான். 


மாஸ்டாக் மதம் தொடர்பாக எழுதப்பட்ட அனைத்து நூல்களும் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டு விட்டன. அதனால் இன்று வரை மாஸ்டாக் மதம் பற்றிய முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியாது. உண்மையில் மாஸ்டாக் மதத்தின் எதிரிகள் எதிர்மறையாக எழுதி வைத்த தகவல்களில் இருந்தே, அது சம்பந்தமான விபரங்களை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு, மாஸ்டாக்கிய அழித்தொழிப்புக்கு பிறகு அந்நாட்டில் மீண்டும் தனியுடைமை வைத்திருக்கும் உரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. 


இருப்பினும் மாஸ்டாகிய மதம் முற்றாக அழிந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஈரான் இஸ்லாமியமயமாகிய பின்னரும் அவர்கள் பல்வேறு பெயர்களில் சிறு குழுக்களாக மாஸ்டாக் மதத்தை பின்பற்றினார்கள். மசாக்கியே, கொராமியே, கொராம் டினியே, சொர்க் ஜமேகான், செபித் ஜமேகன் என்று பல பெயர்களில் அழைக்கப் பட்டனர். காலப்போக்கில் அவர்களும் இஸ்லாமியராக மாறி விட்டாலும், சமத்துவ கொள்கைகளை கைவிடவில்லை. ஷியா- இஸ்லாத்தில் சில பிரிவுகள் சமத்துவ சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளன. அத்துடன், இன்றைக்கும் ஈரானில் ஏராளமான தீவிர மார்க்சிய- லெனினிசவாதிகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இது ஒரு வகையில் மாஸ்டாக் கம்யூனிசத்தின் பாரம்பரியமாகவும் கருதலாம். 


இன்றும் கூட மத்திய கிழக்கு நாடுகளில் அரேபியர்கள் மத்தியில் சோஷலிச அல்லது கம்யூனிச கொள்கைகளை பின்பற்றுவோரை "மாஸ்டாக் பெர்சியர்கள்" என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது குறித்து எல்லோருக்கும் தெரியாது என்றாலும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பிரச்சாரங்ககளில் அவ்வாறு குறிப்பிடப் படுவதுண்டு. 

 

- கலையரசன்

25-11-2020

 

இதே கட்டுரை யூடியூப் காணொளியாக பதிவேற்றப் பட்டுள்ளது:

Tuesday, February 27, 2018

"ஏக இறைவன் சூரிய தேவனே!": எகிப்தியரின் ஓரிறைக் கோட்பாடு


ஓரிறைக் கோட்பாட்டை தாமே கொண்டு வந்ததாக, யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்கள் மார் தட்டிக் கொள்கின்றன. ஆனால், பண்டைய எகிப்தில் பாரோ மன்னர்களின் வம்சாவளியில் வந்த அகநாதன், அவர்களுக்கு முன்னரே ஓரிறைக் கோட்பாட்டை உருவாக்கி விட்டிருந்தான்.

எகிப்திய மன்னனான அகநாதன், மித்தானி நாட்டை சேர்ந்த நெபர்தித்தி எனும் இளவரசியை மணம் முடித்திருந்தான். நெபர்தித்தி அகநாதனின் சிற்றன்னை என்றும் வரலாறு கூறுகின்றது. பண்டைய எகிப்தில் இரத்த உறவினர்களுக்கிடையில் திருமணம் நடப்பது சகஜமான விடயம்.

இங்கே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியது என்னவென்றால், அகநாதன் - நெபர்தித்தி திருமணத்தின் பின்னர் தான், எகிப்தில் ஓரிறைக் கோட்பாடு உருவானது. அநேகமாக, நெபர்தித்தி ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர்களது கலாச்சாரத்தில் சூரியனை வழிபடும் வழக்கம் இருந்த காரணத்தால், சூரியனே எகிப்தின் ஓரிறைக் கோட்பாட்டின் ஒரேயொரு கடவுளாக்கப் பட்டது.

ஆயினும், பிற்காலத்தில் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்திய யூத - கிறிஸ்தவ - இஸ்லாமிய மதங்கள், பல தெய்வ வழிபாட்டை கொண்டவர்களுடன் போரில் ஈடுபட்டதைப் போன்று தான், அப்போதும் நடந்துள்ளது.

எகிப்தில் ஆமுன் பூசாரிகள் தான் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தார்கள். இந்து மதத்தில் இருப்பதைப் போன்று, பல தெய்வ வழிபாட்டை நடைமுறைப் படுத்துவதன் மூலம், தமது செல்வத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

சூரியனை ஓரிறைக் கோட்பாட்டின் நாயகனாக்கிய அகநாதன், ஆமுன் பூசாரிகளை வன்முறை கொண்டு அடக்கி வைத்திருந்தான். அதனால் ஆமுன் பூசாரிகளின் சூழ்ச்சி காரணாமாக, அகநாதன் குடும்பத்தில் பலர் கொல்லப் பட்டனர்.

இறுதியாக அகநாதனின் ஒரு புதல்வி, பெரும் படை கொண்டு கார்னாக் நகரில் உள்ள ஆமுன் பூசாரிகள் மீது போர் தொடுத்தாள். அன்று நடந்த போரில். கார்னாக் பூசாரிகள் வெற்றி பெற்றதால், ஓரிறைக் கோட்பாடும் முடிவுக்கு வந்தது.

இந்த வரலாற்றில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஆரிய - திராவிட கலப்பு இந்திய உப கண்டத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவிலும் நடந்துள்ளது. எகிப்தியர்களும் திராவிடர்கள் தான். நெபர்தித்தி என்ற ஆரிய இளவரசியுடனான தொடர்பு தான், நாகரிக வளர்ச்சியாக கருதப்படும் ஓரிறைக் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது.

எகிப்தில் வழிபடப் பட்ட சூரியக் கடவுளின் பெயர் "ஆதொன்". பல எகிப்திய சொற்கள் பிற்காலத்தில் மருவி வந்துள்ளன. எகிப்திய ஆதொன், தமிழ்ச் சொல்லான ஆதவன் இரண்டும் ஒரே மாதிரி இருப்பது தற்செயலானதா? இருக்க முடியாது. நிச்சயமாக, பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருந்திருக்க வேண்டும்.

எகிப்தில் தீமைகளின் கடவுளுக்குப் பெயர் செத். ஆதொன் மதம் அரச மதமான பின்னர், செத் கடவுளை வழிபடுவது தடை செய்யப் பட்டிருந்தது. பண்டைய எகிப்திய ஓவியங்களில், செத் ஒரு பாம்பு மாதிரியும் வரையப் பட்டுள்ளது. செத் என்ற சொல்லில் இருந்து தான், "சாத்தான்" என்ற சொல் வந்தது. தமிழில் செத் என்றால் மரணம் என்று அர்த்தம். செத்துப் போதல் என்ற சொல், இன்றைக்கும் சாதாரண தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.

அகநாதன் என்ற பெயர் கூட, தமிழ்ச் சொல் போன்று ஒலிப்பதை அவதானிக்க வேண்டும். பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருந்துள்ளன. இவற்றை எல்லாம், துறை சார்ந்த அறிஞர்கள் ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும்.

Thursday, December 28, 2017

"கம்யூனிஸ்டுகள் மதத்தை தடை செய்வர்" எனும் பொய்ப் பிரச்சாரம் குறித்து...


இன்று வ‌ரை ப‌ல‌ரால் ந‌ம்ப‌ப் ப‌டும் பொய் ஒன்றுள்ள‌து. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த நாடுகளில் மதம் தடைசெய்யப் பட்டதாகவும், ஆலயங்கள் மூடப் பட்டதாகவும் இன்னமும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலத்தில், மக்கள் அதிகார மையங்களை நொறுக்கும் பொழுது, மத நிறுவனங்களும் தாக்கப்படுவது வழமை. 

மதத்திற்கு எதிரான கிளர்ச்சி பிரெஞ்சுப் புரட்சியுடன் ஆரம்பமானது. அதன் விளைவாக மதச்சார்பற்ற அரசுகள் தோன்றின. இன்று பல மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இது போன்ற சமூக மாற்றத்தை தான் கம்யூனிஸ்டுகள் ஆண்ட நாடுகளில் கொண்டு வர விரும்பினார்கள். 

ஆனால், முதலாளித்துவ எதிரிகளால் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன. "கம்யூனிஸ்டுகள் மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள்" என்று கூறி, மத நம்பிக்கை கொண்ட பாமர மக்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளானர்.

இந்த விடயத்தில், மதம் தொடர்பான கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரையை வாசித்தால் தெளிவு பிறக்கும். 13 மே 1909, புரெலேடார்ட் பத்திரிகையில் லெனின் எழுதியது. லெனின் நூல் திரட்டில் இருந்து எடுத்த கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். தமிழ் வாசகர்களுக்கு தெளிவு ஏற்படுவதற்காக நான் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்திருந்தாலும், லெனினின் மூலப்பிரதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பிரான்ஸ், ஜெர்மனியில் மதத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளதையும், ரஷ்யாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அந்த நாடுகளில் இருந்த பூர்ஷுவா வர்க்கத்தினரின் மத எதிர்ப்பு பாரம்பரியம், சோஷலிச இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது. 

பிரான்ஸில் என்சீக்லோபீடியர்கள் (Encyclopedists) எனும் தத்துவ அறிஞர்களின் குழு, தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டிருந்தது. தமிழகத்தில் உள்ள திராவிடர் க‌ழ‌க‌ம் முன்னெடுக்கும் நாஸ்திக இயக்கத்துடன் அதை ஒப்பிடலாம். அதே மாதிரி, ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் (Feuerbach) கூட தீவிர மத எதிர்ப்பாளராக இருந்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தோன்றிய பூர்ஷுவா வர்க்கத்தினர் எந்தவொரு மத எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. லெனினின் கூற்றுப் படி, "அந்தப் பொறுப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப் பட்டது." அந்தக் காலகட்டத்தில் (19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி) ரஷ்ய விவசாயிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அமைப்பான நரோட்னிக்குகள் (லெனின் அவர்களை "குட்டி முதலாளிய ஜனநாயகவாதிகள்" என்று குறிப்பிடுகிறார்.) கூட பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. 

ஆகவே, கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த "மத எதிர்ப்பு இயக்கம்", அந்தக் கால கட்டத்தில் (முதலாளித்துவ) மேற்கு ஐரோப்பாவில் நடந்த சமூக- அரசியல்  மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கருதப் பட வேண்டும். சுருக்கமாக சொன்னால், பிரான்ஸில் நடந்த முதலாளித்துவ புரட்சியின் தொடர்ச்சியாகத் தான், ரஷ்யாவில் நடந்த சோஷலிசப் புரட்சியும் மத நிறுவனங்களின் அரசியல் மேலாதிக்கத்தை இல்லாதொழித்தது.

லெனின் கூறியதாவது: 
//மார்க்சியத்தின் தத்துவார்த்த அடிப்படையானது இயங்கியல் பொருள்முதல்வாதமே. அதையே மார்க்ஸ், எங்கெல்சும் பிரகடனம் செய்தனர். அது 18 ம் நூற்றாண்டில் பிரான்ஸில் தோன்றிய பொருள் முதல்வாத தத்துவத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. 19 ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார். பொருள்முதல்வாதமானது முற்றுமுழுதாக நாஸ்திக வாதமே என்பதுடன், அது மதத்துடன் பகைமை கொண்டுள்ளது.//

பொருள்முதல்வாத தத்துவம் நாஸ்திகமே என்பதைக் கூறும் லெனின், எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" நூலையும் வாசிக்கக் கோருகின்றார். டூரிங் (Düring) என்பவர் ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு சோஷலிச தத்துவ அறிஞர். ஆனால் மார்க்சியவாதி அல்ல. (அதாவது மார்க்சுடன் கொள்கை முரண்பாடு கொண்டவர்). அப்போது கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூல் எழுதுவதில் மும்முரமாக இருந்த படியால், டூரிங்கின் வாதங்களை மறுக்கும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றிருக்கிறார். "டூரிங்கிற்கு மறுப்பு"(இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை இப்போதும் வாங்கலாம்.) நூலில் தீவிர நாஸ்திகம் எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். அதை லெனின் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு லெனின் எழுதியதை நான் இங்கு இலகுபடுத்தி தருகிறேன். மதத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதன் மூலம், அதை தொழிலாளர் கட்சியின் முக்கிய செயற்பாடாகுவதன் ஊடாக, "இடதுசாரிகளாக", "புரட்சியாளர்களாக" காட்டிக் கொள்வோரை எங்கெல்ஸ் கண்டித்துள்ளார். 1874 ம் ஆண்டு, பிரான்ஸில் பிளாங் என்ற சோஷலிச அறிஞர் வழிகாட்டலில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சி தோற்கடிக்கப் பட்டது. அப்போது பலர் லண்டனில் அகதிகளாக தஞ்சம் கோரி இருந்தனர். அந்த "பிலாங்கிஸ்ட் அகதிகள்" வெளியிட்ட அறிக்கையை எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். இது போன்ற மதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் மதத்திற்கு புத்துயிர் கொடுப்பதுடன், அது தானாகவே அழிந்து போவதைத் தடுத்து விடும் என்று கண்டித்துள்ளார்.

உழைக்கும் மக்களின் பெரும்பகுதியை புரட்சிகரமாக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே, ஒடுக்கப் பட்ட மக்களை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுதலை செய்யும். மதம் ஒரு கருத்துமுதல்வாதம் என்பதைக் கூறிய தத்துவ அறிஞர் டூரிங்கை பாராட்டிய அதே எங்கெல்ஸ், டூரிங்கின் "சோஷலிச நாட்டில் மதத்தை தடை செய்யும் புரட்சிகர கொள்கையை" கடுமையாக கண்டிக்கத் தயங்கவில்லை. எங்கெல்ஸ் அதை "பிஸ்மார்க் செய்தது போன்று முட்டாள்தனமான எதிர்விளைவுகளை தரும்" என்று குறிப்பிடுகிறார். "கலாச்சாரப் போராட்டம்"(Kulturkampf) என்ற பெயரில் அன்றைய ஜெர்மன் அதிபர் பிஸ்மார்க் கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அதைப் பலப்படுத்துவதில் முடிந்தது என்பதை லெனின் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார்.

பிஸ்மார்க் மதத்திற்கு எதிராக தடுப்புச் சுவர் எழுப்பியமை, பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியின் கவனத்தை திசை திருப்பியதுடன், பூர்சுவா வர்க்கத்தின் "மத எதிர்ப்பு போலித்தனத்தையும்" வெளிப்படுத்தியது. பிஸ்மார்க் செய்தது போன்று, டூரிங் வேறு வடிவில் செய்ய நினைக்கிறார் என எங்கெல்ஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளிவர்க்கம் அதற்காக தயார்படுத்தப் பட வேண்டும் என விரும்பினார். பாட்டாளிவர்க்கத்தை பொறுமையாக ஒழுங்குமுறைப் படுத்தி, தெளிவுபடுத்துவதன் மூலம் மதத்தை தானாக அழிய வைக்கலாம். ஆனால், அது மதத்திற்கு எதிரான அரசியல் போராக மாற்றப் படக் கூடாது.

மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம் தான். அது மதத்துடன் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் பகைமை கொண்டுள்ளது. என்சீக்லோபீடியர்கள், போயர்பாக் போன்றோரின் நிலைப்பாடும் அது தான். ஆனால், மார்க்ஸ், எங்கெல்சின் இயங்கியல் பொருள்முதல்வாதம் அதற்கும் அப்பால் செல்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை சரித்திர தளத்துடனும், சமூகவியல் தளத்துடனும் இணைக்கிறது. நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அது பொருள்முதல்வாதத்தினதும், மார்க்சியத்தினதும் தொடக்கமாக உள்ளது.

ஆனால், மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும் மேலே செல்கிறது. அதாவது நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கும் முதல், மக்களினதும், நம்பிக்கையினதும் மூலமாக உள்ள பொருள் வாதமாக வெளிப்படுத்தப் பட வேண்டும். மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சாரமாக குறுக்கக் கூடாது. ஆனால், மதத்தின் சமூக வேர்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் தீர்க்கமான நடைமுறையாக பிணைக்கப் பட வேண்டும்.

எதற்காக நகர்ப்புற பாட்டாளிகள், விவசாயிகள் மத்தியில் மதம் நிலைத்திருக்கிறது? "அதற்குக் காரணம் மக்களின் அறியாமை" என்று ஒரு முதலாளிய பொருள்முதல்வாதி கூறுவார். "மதம் ஒழிக, நாஸ்திகம் வாழ்க, எமது முக்கிய கடமை நாஸ்திகத்தை பரப்புவது தான்" என்று ஒரு முதலாளித்துவ முற்போக்குவாதி மேலும் கூறுவார். ஆனால், மார்க்சியர்கள் அதைத் தவறு என்கிறார்கள். ஏனென்றால், இது போன்ற கருத்தானது, மேலோட்டமான, முதலாளிய கலாச்சாரத்திற்கு உட்பட்ட பரப்புகை ஆகும்.

அது போன்றதொரு கருத்து மதத்தின் வேர்களை போதுமான அளவு வெளிப்படுத்துவதில்லை. அதாவது, கருத்தியல் பூர்வமானதே தவிர பொருள்முதல்வாதம் அல்ல. நவீன முதலாளிய நாடுகளில் இந்த வேர்கள் சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளன:
  • முதலாளித்துவத்தின் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறை. 
  • மிகப் பலமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத உழைக்கும் மக்களின் கையாலாகத்தனம். 
  • ஒவ்வொரு நாளும் பல தடவைகள் வருத்தி,காயப்படுத்தும் மனிதாபிமற்ற செயல்கள். 
  • அசாதாரணமான நிகழ்வுகளான யுத்தம், நிலநடுக்கம் போன்றன.

பயம் தான் கடவுளரை முன்னுக்கு கொண்டு வந்தது. கண்ணுக்கு புலப்படாத மூலதனத்தின் செயற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக இருந்தது. "கண்ணுக்கு புலப்படாத" என்று சொல்வதற்கு காரணம், மனிதர்களின் வாழ்வில் ஒரு கட்டத்தில், அவர்களை ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் மூலதனத்தின் சக்தி பற்றிய புரிதல் சாதாரண மக்களிடம் இல்லை. இது தான் தற்காலத்தில் ஒரு மதத்தின் வேர். ஒரு பொருள்முதல்வாதி அதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத, நாசமாக்கும் சக்தி படைத்த முதலாளித்துவத்தில் தங்கியுள்ள மதத்தின் வேரைக் கண்டறியாமல், நாஸ்திக பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து மதத்தை அகற்ற முடியாது.

(பிற்குறிப்பு: "மதம் குறித்து தொழிலாளர் கட்சியின் தொடர்பு பற்றி" என்ற தலைப்பில் லெனின் எழுதிய மூலப்பிரதியை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது.)

Wednesday, December 21, 2016

ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (நான்காம் பாகம்)

"தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் நிறையப் பேருண்டு. படிப்பறிவில்லாத பாமரர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், ஒரு சில வணிகவியல் பட்டதாரிகளும் அப்படிச் சொல்வது ஊரை ஏமாற்றும் அயோக்கியத்தனம். ஏனென்றால், பொருட்களை சந்தைப் படுத்தல் தொடர்பான மார்க்கெட்டிங் பாடத்தில், மிகத் தெளிவாக வர்க்கப் பிரிவினைகள் பற்றி விளக்கி இருப்பார்கள்.

சந்தைப் படுத்தலில் வர்க்க வேறுபாடுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதார விதி. பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சி, உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்பதும், அதற்குப் பின்னரே வர்க்க வேறுபாடுகள் தோன்றின என்பதும், எமது நாட்டு பாட நூல்களில் எழுதப் படவில்லை. இலங்கையும் ஒரு காலத்தில் ஆங்கிலேய காலனியாக இருந்ததையும், அப்போது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி அறிமுகப் படுத்தப் பட்டதையும் பலர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனது தந்தைக்கு வர்க்கங்கள் பற்றிய புரிதல் இருந்தது. அதை அவராகவே எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், கூடவே ஒரு பிழையான தகவலையும் சொன்னார். இலங்கையில் "மத்திய தர வர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக" கூறினார். எனது தந்தை மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் கூட, அப்படித் தான் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது 28 வயது வரையும், அதை நானும் உண்மை என நம்பி இருக்கிறேன். அப்போது நெதர்லாந்தில் சந்தித்த ஒருவர் மூலம் அறிவுக் கண் திறந்தது. அவர் நெதர்லாந்தில் ஜனநாயகத்தில் அதிக அக்கறை செலுத்தும் D66 என்ற கட்சி உறுப்பினரான இளம் பெண் ஆவார். இலங்கையில் உள்ள வர்க்கங்களின் விகிதாசாரம் பற்றி விசாரித்த பொழுது, நான் அப்பா சொன்ன விளக்கத்தை அப்படியே ஒப்புவித்தேன். அவரால் அதை நம்ப முடியவில்லை. நெதர்லாந்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைவு என்று சொன்னார். நான் சொல்வது உண்மையானால், இலங்கை உலகிலேயே தனித்துவமான நாடாக இருக்க வேண்டும் என்றார்.

உண்மையில் அதற்குப் பிறகு தான், நானும் வர்க்கங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதே வருடம், நெதர்லாந்தில் பல்கலைக் கழக நுழைவுப் பரீட்சைக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது வரலாறு, மற்றும் சமூகவியல் பாட நூல்களில் வர்க்கம் பற்றி எழுதி இருந்ததை ஆழமாக படித்தறிந்தேன். 

மேற்குலக நாடுகளில் உள்ள வர்க்க முரண்பாடு பற்றிப் பின்னர் எழுதுகின்றேன். உலகில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் வர்க்க மக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள் என்ற உண்மையை, நானும் காலம் தாழ்த்தித் தான் அறிந்து கொண்டேன் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பதினான்கு வயது வரைக்கும், நானும் தெய்வ நம்பிக்கை கொண்ட, ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட சாதாரணமான சிறுவனாகத் தானிருந்தேன். எனது முதலாவது கட்டுரையும் சைவ சமயம் பற்றியது தான். கடவுளை வழிபடுவது பற்றி நான் எழுதிய கட்டுரை கொழும்பு சைவ முன்னேற்றக் கழகம் வெளியிட்ட ஆண்டு மலரில் இடம்பெற்றிருந்தது. பாடசாலையில் சிவபுராணம் மனனம் செய்து ஒப்புவித்து பரிசு வாங்கி இருக்கிறேன். தேவாரம் பண்ணோடு பாடுவதற்கு அறிந்து வைத்திருந்தேன். பெரிய புராணம், கந்தபுராணம் நூல்களை எல்லாம் வாசித்திருந்தேன். 


அந்த வயதில் எனக்குள் எழுந்த முக்கியமான கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இருக்கவில்லை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்றால், எதற்காக பணக்காரர்களுக்கு வசதியை அள்ளிக் கொடுத்து, ஏழைகளை கஷ்டப் படுத்தி, மனிதர்களுக்கு இடையில் பாகுபாடு காட்ட வேண்டும்? அந்த வயதிலேயே, இந்துகளின் "கர்ம வினைப் பயன்" கோட்பாடு அபத்தமாகப் பட்டது.  நான் அறிந்த வரையில் ஏழைகள் தான் அதிக நேரம் கோயில்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

சிறு வயதில், எனது பெற்றோருடன் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும், கோயிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பதைக் கண்டேன். கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களும் கடவுளிடம் பிச்சை தான் கேட்டார்கள். ஆனால், அதை அவர்கள் நாகரிகமாக வரம் என்று சொன்னார்கள். வெளியே வந்த பக்தர்கள் தம்மிடம் இரந்தவர் தட்டில் சில்லறைகளை போட்டார்கள். அதை அவர்கள் பிச்சை என்றார்கள். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் எனக்கு ஒரு தத்துவத்தை போதித்தார்கள். ஒரு சாதாரணமான பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுள் எப்படி சக்தி படைத்ததாக இருக்க முடியும்?

யாழ் மேட்டுக்குடியினரின் பாடசாலை என்று பெருமை தேடிக் கொள்ள விரும்பிய யாழ் இந்துக் கல்லூரி, ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் தனது மாணவர்களை மூளைச்சலவை செய்து வந்தது. நான் படித்த காலத்தில் ஓர் இந்து அறிஞர் ஆன்மீக சொற்பொழிவாற்ற வந்தார். அவர் பேசி முடிந்த பின்னர் கேள்வி கேட்கச் சொன்னார். "இலட்சக் கணக்கான குழந்தைகள் பாலின்றி தவிக்கும் நாட்டில் எதற்காக சாமி சிலைகளுக்கு குடம் குடமாக பால் ஊற்றுகிறார்கள்?" என்று ஒரு மாணவன் கேட்டான்.

அதற்கு அவர், "கடவுளுக்கு பாலபிஷேகம் செய்தால் அவர் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கிடைக்க அருள் செய்வார்." என்று சொல்லிச் சமாளித்தார். ஆனால், அந்தப் பதில் எங்களை திருப்திப் படுத்தவில்லை. சாமிக்கு பாலபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டு கால வழக்கம். ஆனால் வறுமை இன்னும் ஒழியவில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் பாலும் கிடைப்பதில்லை. பாவம், இதற்கெல்லாம் பதில் கூறும் அளவிற்கு அந்த ஆன்மீக அறிஞர் படித்திருக்கவில்லை.

இலங்கை ஒரு "மதச் சார்புள்ள நாடு". அங்கு பள்ளிக்கூடத்தில் மதத்தை பிரித்துப் பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பாடசாலைகளில், ஆண்டு தோறும் சரஸ்வதி பூசை நடத்துவார்கள். "சரஸ்வதி கல்விக் கடவுள்" என்பது ஒரு சாட்டு மட்டுமே. 

நான் படித்த காலத்தில், எட்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டோம். நாரதரை, சரஸ்வதியை கிண்டலடிக்கும் பகுத்தறிவு நாடகம் அது. ஏதோவொரு புத்தகத்தில் நான் தான் அதை வாசித்து விட்டு நாடகமாக்குவோம் என்று சொன்னேன். நான் அதில் பெண் வேடமிட்டு, அதாவது சரஸ்வதியாக நடித்திருந்தேன். நாடகத்தில் இருந்த நகைச்சுவை வசனங்கள் மாணவர்களை சிரிக்க வைத்தன. பலருக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நாங்கள் ஒன்பதாவது, அல்லது பத்தாவது வகுப்புப் படிக்கும் பொழுது, யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கண்காட்சிகள் நடந்தன. யாழ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கண்காட்சி பார்க்க சென்றிருந்தோம். அப்போது, பாடசாலை மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி, பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் மூளையின் செயற்பாடுகள் குறித்து படம் கீறி வைத்திருந்தனர். மூளாய் (இடத்தின் பெயர்) வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அந்த இடத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன தகவல்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. எமக்கு சிறுவயதில் இருந்தே கடவுளைப் பற்றிய அச்சவுணர்வு திணிக்கப் படுகிறது. அது மூளையில் சேமிக்கப் படுகிறது. வளர்ந்த பின்னர் நாங்கள் அதை உண்மை என்றே நம்புகின்றோம் என்றார். தான் கடவுள் இல்லை என்று சொல்லி வருவதாகவும், அதனால் தனக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை என்றும் சொன்னார். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர் தான், நூலகத்தில் இருந்து மனோதத்துவ நூல்களை இரவல் எடுத்து வாசித்தேன். கடவுளை நம்புவது மனிதர்களின் உளவியல் பிரச்சினை என்பது அதற்குப் பிறகு தெரிய வந்தது.

நான் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்களது வகுப்பில் சசிகாந்தன் என்ற நண்பன் இருந்தான். இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்ப தாளில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்திருந்தான். அவன் ஒரு நாள் வகுப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். "கடவுள் இல்லை" என்பதே அந்த அதிர்ச்சியான தகவல். வகுப்பில் கெட்டிக்கார மாணவனான அவனை எல்லோரும் விஞ்ஞானி என்று அழைப்போம். தானாகவே சில கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறான். அப்படியான ஒருவன் கடவுள் இல்லை என்று வாதிடும் பொழுது அலட்சியப் படுத்த முடியவில்லை.

எமது வகுப்பில் அடிக்கடி கடவுள் பற்றிய வாக்குவாதங்கள் நடந்தன. சிலர் சசிகாந்தனை தீவிரமாக எதிர்த்தார்கள். பலர் குழம்பினார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே அவன் சொன்னதைக் கேட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடவுள் பற்றிய எனது சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் தந்தான். ஓய்வுநேரங்களில், வண்ணார்பண்ணையில் இருக்கும் அவனது வீட்டுக்கு சென்றும் பல விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்போது எனக்கு வேறு தொடர்புகள் மூலமாக, மார்க்சியம் பற்றிய அறிமுகம் கிடைத்திருந்தது. அது பற்றிய தகவல்களை சசிகாந்தனுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க சென்ற நேரம், என்னிடம் விசாரித்து ஈரோஸ் இயக்கத் தொடர்பை பெற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தான். சில வருடங்களுக்குப் பின்னர், போர்ச் சூழல் காரணமாக யாழ் குடாநாட்டில் பரவிய இனந் தெரியாத நோய்க்கு பலியாகி இறந்ததை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் அப்போது புலம்பெயர்ந்து சென்று விட்டேன்.

மேற்குறிப்பிட்ட அனுபவங்களுக்குப் பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், சாதி, வர்க்கம், மதம் என்பனவற்றுக்கு இடையிலான நெருங்கிய உறவு தெரிய வந்தது. இவையெல்லாம் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருந்தது மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று சமரசம் செய்து கொண்டு நிலைத்து நிற்கின்றன.

சாதிப் பாகுபாடு காரணமாக, ஒரே மதத்தை சேர்ந்த மக்களை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டுப்பாடுகள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அப்போது அடக்குமுறையாளர்கள் பக்கம் நின்ற கடவுள் எவ்வாறு சக்தி படைத்தவராக இருக்க முடியும்? இதே கேள்வி தான் கொழும்பில் தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் கொல்லப் பட்ட நேரத்திலும் எழுந்தது. நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து விட்டு, இன ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருந்தால் அங்கும் கடவுளின் சக்தி குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

வட பகுதியில் நடந்த விமானக் குண்டுவீச்சுகளில் இந்துக் கோயில்கள் சேதமானதை நேரில் கண்டிருக்கிறேன். அப்போது "இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போயின?" என்று சாதாரண பாமர மக்களே கேட்டிருக்கிறார்கள். போர்ச் சூழலில் வாழ்ந்த படியால், அதன் குரூரங்களை நேரில் கண்ட படியால், என்னைப் பொருத்தவரையில் அது கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது.

போரில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த பிறகும், பலர் கோயில்களில் தவமிருந்தார்கள். இங்கே தான் கடவுள் பற்றிய மனோதத்துவக் கோட்பாடு உதவுகின்றது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்ட மக்கள் ஒன்றில் புரட்சி செய்வார்கள் அல்லது கடவுளிடம் முறையிடுவார்கள்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2.வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!

Tuesday, January 12, 2010

கடவுள் எவ்வாறு தோன்றினார்? - அறிவியல் ஆதாரம்

ஆதி கால மனிதன், கடவுளையும், மதத்தையும் எவ்வாறு உருவாக்கினான்? விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் வீடியோ. நாகரீகம் எட்டிப் பார்க்காத தீவொன்றில் தனித்து விடப்பட்ட ஆதிவாசிகள். அங்கே திடீரென தோன்றும் விமானத்தைக் கண்டு கடவுள் என்று அதிசயிக்கின்றனர். தொடர்ந்து "விமானக் கடவுளுக்கு" ஆலயம் கட்டி வழிபடுகின்றனர். அன்றிலிருந்து தமது வழமையான வேட்டையாடி சேகரிக்கும் தொழிலை மறக்கின்றனர். ஆகாயத்திலிருந்து வரும் ஆண்டவருக்காக காத்திருக்கின்றனர். இது போன்ற (மூட) நம்பிக்கைகள், இன்று நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களிலும் காணக் கிடைக்கின்றன.