Showing posts with label சுதந்திர சிரிய இராணுவம். Show all posts
Showing posts with label சுதந்திர சிரிய இராணுவம். Show all posts

Friday, December 16, 2016

அலெப்போவின் முள்ளிவாய்க்கால்


சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அது ரஷ்ய விமானக் குண்டுவீச்சுகளின் பின்னர், சிரிய அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது. சிரியாவின் ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போரில் இது ஒரு பெரிய திருப்புமுனை என்று கருதப் படுகின்றது. அதாவது, உள்நாட்டுப் போரின் இறுதியில் வெல்லப் போவது யார், தோற்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அலெப்போ யுத்தம் இருந்துள்ளது.

சிரியாவில், குறைந்தது ஒரு டசின் இயக்கங்கள் சிரிய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகின்றன. அவற்றிற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. அனேகமாக எல்லா "விடுதலை" இயக்கங்களும், அல்கைதா அல்லது ஐ.எஸ். பாணியில் அமைந்த, இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் தான். சுன்னி முஸ்லிம் சமூகத்தினரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய அந்த இயக்கங்கள், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும், ஷியா முஸ்லிம்களையும் இனச் சுத்திகரிப்பு செய்து விட்டன. (சிரியா அடிப்படையில் ஒரு பல்லின கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் குழுமங்களின் தேசம்.)

உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில், சிரிய இராணுவம் ஆட்பலம், ஆயுதபலம் குறைந்திருந்த படியால், அலெப்போ போன்று பல பிரதேசங்களை கைவிட்டு விட்டு ஓடிக் கொண்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களினால் கைது செய்யப் பட்ட, அல்லது அவர்களிடம் சரணடைந்த சில நூற்றுக் கணக்கான படையினர் பொது இடங்களில் கழுத்து வெட்டிக் கொல்லப் பட்டனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருந்தன.

சரணடைந்த சிரியப் படையினர் மட்டுமல்ல, ஷியா, கிறிஸ்தவ மற்றும் பல சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களும், "தவறான இனத்தில் பிறந்த காரணத்தால்" படுகொலை செய்யப் பட்டனர். வாழ்வா, சாவா போராட்டத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, சிரிய இராணுவத்தினரும், சிறுபான்மை சமூகத்தினரும் அதிபர் ஆசாத் தலைமையின் கீழ் அணிதிரண்டனர். அப்படியானவர்களுக்கு ஆசாத் மீதான விசுவாசத்தை விட, தாம் சார்ந்த சமூகங்களின் பாதுகாப்பு முக்கியமாகப் பட்டதால் போர் தீவிரமடைந்தது. கிறிஸ்தவ, ஷியா, அலாவி போன்ற சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த வீரர்களை கொண்ட National Defence Force (NDF) என்ற ஊர்காவல் படைகள் சிரிய இராணுவத்தின் பக்கம் நின்று போரிட்டன.

இதற்கிடையே லெபனான் ஹிஸ்புல்லாவும் ஆசாத்திற்கு உதவியாக வந்தது. லெபனானில் எண்பதுகளில் நடந்த தசாப்த கால உள்நாட்டுப் போரில், சிரிய அரசு ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தை ஆதரித்திருந்தது. அந்த செஞ் சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக, ஆயிரக் கணக்கான ஹிஸ்புல்லா போராளிகள் தொண்டர் படையணியாக சிரியா போர்க்களத்தில் குதித்தனர். அவர்களுடன் ஷியா முஸ்லிம்களின் வல்லரசாக கருதப் படும் ஈரானும், தன பங்கிற்கு இராணுவ ஆலோசகர்களை அனுப்பி இருந்தது. இவர்கள் எல்லோரும் அலெப்போ யுத்தத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்கள் எவை? 
மேற்குலகால் ஆதரிக்கப் பட்ட அந்தக் கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம் சமூகத்தினர். சிரியாவில் மதத்தால் முஸ்லிமாக இருந்தாலும், சுன்னி, ஷியா, அலாவி என்று ஒவ்வொரு முஸ்லிம் மதப் பிரிவினரும் தம்மை தனித் தனியான இனமாக கருதிக் கொள்கிறார்கள். ஆகையினால், இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்கள் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை சுன்னி- முஸ்லிம் பிரிவினர் மீது திணித்து வந்தன. மது பாவனை தடை செய்யப் பட்டது. இசைத்தட்டில் பாடல்கள் கேட்பது கூட தடை செய்யப் பட்டது. பெண்கள் முகத்தை மூடும் கருநிற அங்கி அணிய கட்டாயப் படுத்தப் பட்டனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்திற்கும் இடையில் பெரிய கொள்கை வேறு பாடு எதுவும் கிடையாது. ஐ.எஸ். இயக்கம், சுன்னி- முஸ்லிம் சமூகத்தவரின் ஏக பிரதிநிதி தான் மட்டுமே என்று உரிமை கோருகின்றது. ஏனைய இயக்கங்களை "துரோகக் குழுக்கள்", "ஒட்டுக் குழுக்கள்" என்று குற்றஞ் சாட்டி தடை செய்துள்ளது. இதனால் அடிக்கடி சகோதர யுத்தங்கள் நடந்துள்ளன.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இயக்கங்கள் பற்றிய விபரம்:

1. சுதந்திர சிரிய இராணுவம்
சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய சுன்னி- முஸ்லிம் அதிகாரிகள், படையினர் உருவாக்கிய இயக்கம். அவர்களை "நல்ல போராளிகள்" என்று முத்திரை குத்தி, அமெரிக்கா நேரடியாக உதவி செய்து வந்தது. மேற்கத்திய ஊடகங்களில் அவர்கள் "மிதவாதிகளாக" காட்டப் பட்டனர். ஆனால், நடைமுறையில் சுதந்திர சிரிய இராணுவம் கூட இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் தான். மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் இருக்கலாம். ஆனால், அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். உண்மையில் சுதந்திர சிரிய இராணுவம் என்பது பல குழுக்களின் ஐக்கிய முன்னணி. அதற்கென பொதுவான தலைவர் எவரும் இல்லை.

2. நூர் அல் டின் அல் சென்கி (Nour al-Din al-Zenki)
மிகச் சிறிய இயக்கம். போராளிகளின் மொத்த எண்ணிக்கை 1500 இருக்கலாம். மத அடிப்படைவாத ஜிகாத்திற்காக போராடும் இந்த இயக்கத்திற்கு சி.ஐ.ஏ. நேரடியாக ஆயுதங்களை கொடுத்துதவி வந்தது! நிச்சயமாக, தாம் ஒரு ஜிகாதி இயக்கத்திற்கு உதவினோம் என்ற உண்மையை அமெரிக்கா வெளியில் சொல்லப் போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர், சிரிய அரசுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக ஒரு 12 வயது சிறுவனை கழுத்து வெட்டி கொலை செய்த கோரக் காட்சி வீடியோ பதிவாக வெளியாகி உலகம் முழுவதையும் உலுக்கி இருந்தது. அந்தக் குரூரச் செயலை செய்த பெருமை இந்த இயக்கத்தை சேரும்.

3. அஹ்ரர் அல் ஷாம் (Ahrar al-Sham)
ஆப்கானிஸ்தனில் தாலிபான் செய்தது போல, சிரியா முழுவதையும் இஸ்லாமிய மயமாக்க விரும்பும் கடும்போக்கு இயக்கம். 2014 ம் ஆண்டு வரையில் ஐ.எஸ்.சுடன் சேர்ந்து இயங்கி வந்தது. ஆனால், ஐ.எஸ். காரர்கள் இந்த இயக்கத்தின் போராளிகள் சிலரை சுட்டுக் கொன்ற படியால் பிரிந்து சென்று தனியாக இயங்கியது. ஐ.எஸ். சிரியாவுக்கும் அப்பால், உலகம் முழுவதும் இஸ்லாமியப் புரட்சியை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. அதற்கு மாறாக அஹ்ரர் அல் ஷாம் சிரியாவுக்குள் நின்று கொள்கிறது. மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை இருபதாயிரம் இருக்கலாம்.

4. பதே அல் ஷாம் (Fateh al-Sham)
மிக முக்கியமாக, அல்கைதாவுடன் தொடர்புடைய இயக்கம் இது தான். அல் நுஸ்ரா என்றால் எல்லோருக்கும் தெரியும். அண்மைக் காலத்தில் தான் பதே அல் ஷாம் என்று பெயர் மாற்றியது. தீவிரவாதம் இல்லாத, மிதவாத இயக்கமாக காட்டுவது அதன் நோக்கம். இதன் மூலம் சர்வதேச ஆயுத, நிதி உதவி கிடைக்கும் என்று கணக்குப் போட்டது. நீண்ட காலமாக, அல்நுஸ்ராவுக்கும், ஐ.எஸ். இற்கும் அடிக்கடி சகோதர யுத்தம் இடம்பெற்று வந்தது. இத்தனைக்கும் இரண்டுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் கிடையாது. அல்நுஸ்ராவும் இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் ஜிகாத் போராட்டம் நடத்துவதை குறிக்கோளாக கொண்ட இயக்கம் தான். அதனால் சர்வதேச தொண்டர்களின் உதவியும் கிடைத்திருந்தது. பல உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமிய இளைஞ்ர்கள், சிரியாவுக்கு போராடச் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அல் நுஸ்ராவிலும், இன்னொரு பகுதியினர் ஐ.எஸ். இலும் சேர்ந்தனர். எதிர்பாராத விதமாக அவ்விரண்டு இயக்கங்களின் சகோதர யுத்தத்டிற்குள்ளும் அகப்பட்டுக் கொண்டனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர், சிரிய அரச படையினரின் அடுத்த கட்ட படை நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. தற்போது அதற்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன. வட மேற்கில், அலெப்போவில் இருந்து வெளியேறிய கிளர்ச்சிக் குழுக்கள் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இடிலிப் பிரதேசம். மற்றது, வட கிழக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ராக்கா பிரதேசம்.

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதி நாலாபுறமும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. அந்நிய நாடுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டு விட்டன. அதனால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், துருக்கி எல்லையோரம் உள்ள இடிலிப் என்ற நாட்டுப்புறப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே சனத்தொகை குறைவு. ஆனால், துருக்கி ஊடாக கிடைக்கும் உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு அந்தப் பகுதியையும் கைப்பற்றுவது அவசியம்.

போருக்குள் அகப்பட்ட பொது மக்களின் நிலை என்ன? நிச்சயமாக பொது மக்களில் கணிசமான அளவு பிரிவினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக போராளிகளின் குடும்பத்தினர் இறுதி வரையில் இயக்கங்களோடு இருந்தனர். அலெப்போ நகரின் பகுதிகளை அரச படைகள் சிறிது சிறிதாக கைப்பற்றிக் கொண்டிருந்த நேரம், இயக்கப் போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். மக்களும் அவர்களோடு இழுபட்டுச் சென்றனர். தற்போது அனைவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து விட்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் சரணடைந்துள்ளனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர் நடந்ததாக சொல்லப் படும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் பற்றிய தகவல்கள் உண்மையா? போரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் அந்தத் தகவல்கள் யாவும் கிளர்ச்சி இயக்கங்களின் ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன. அவை எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது கேள்விக்குறி தான். அவை சுதந்திரமான ஊடகவியலாளரால் உறுதிப் படுத்தப் படவில்லை. (இது மேற்குலக அணுகுமுறை)

உண்மையில் போர் நடந்த இடத்தில் எந்தவொரு மேற்கத்திய ஊடகவியலாளரும் இருக்கவில்லை. இருப்பினும், பிரித்தானியாவிலும், துருக்கியிலும் உள்ள சிரிய கிளர்ச்சியாளரின் ஊடக மையங்கள் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அவை வெளியிடும், ஒரு பக்கச் சார்பான தகவல்களுக்கு மேற்குலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. மறுபக்கத்தில், சிரிய அரச ஊடகங்களும், ரஷ்ய ஊடகங்களும் கூட ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. அவற்றில் உண்மை எது, பொய் எதுவென்பது யாருக்கும் தெரியாது.

கிளர்ச்சிக் குழுக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் எதிர்பார்த்திராத அலெப்போவின் வீழ்ச்சி ஒரு பெரிய அதிர்ச்சி. இறுதி நேரத்தில் முற்றுகையை விலக்கிக் கொள்ளுமாறு ரஷ்யா ஊடாக அழுத்தம் கொடுத்தும் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆகையினால், இனி வருங்காலத்தில் ஆசாத் அரசு மீது போர்க்குற்ற விசாரணை கொண்டு வருவதற்காக தற்போதே படுகொலைகள் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.

உண்மையில் சில சரணடைந்த போராளிகளும், இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கிய மக்களில் சிலரும், அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப் படலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால், இவ்வளவு காலமும், மேற்குலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்த, மத அடிப்படைவாத வன்முறைக் கும்பல்களின் ஆட்சி நடந்த நேரம், அங்கு நடந்த குற்றங்கள் பற்றி யாரும் கவலைப் படவில்லை. மேற்குலகின் முக்கியமான பிரச்சினை "இஸ்லாமியப் பயங்கரவாதம்" அல்ல!

சிரிய அரச படைகளினால் அலெப்போ முற்றுகைப் போர் ஆரம்பமான போதே, கிளர்ச்சிக் குழுக்களை காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்தன. ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம் என்று காலம் கடத்தி வந்தன. ஆனால், அந்தத் தந்திரம் பலிக்கவில்லை.

தோல்வியின் விளிம்பில் நிற்கும், கிளர்ச்சிக் குழுக்களில் உள்ள போராளிகள் அலெப்போ வீழ்ச்சியின் பின்னர் மனமுடைந்து காணப்படுகின்றனர். உண்மையில், இறுதியாக நடந்த போரில் அவர்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டது. அரச படைகளும் அதற்கு உடன்பட்டன. அல்கைதாவுடன் தொடர்புடைய எண்ணாயிரம் போராளிகளும் மேற்குலக உதவியுடன் வெளியேற்றப் பட்டதாக அரச படைகள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தான், மேற்குலக ஊடகங்கள் "பதே போராளிகள்" என்று குறிப்பிடுகின்றன. அது அல்நுஸ்ரா இயக்கம் என்பதை மறைக்கின்றன.

மேற்குலக நாடுகள் மற்றும் செஞ் சிலுவைச் சங்கம் போன்றவற்றின் தலையீடு காரணமாக, கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேறும் பொது மக்களையும், போராளிகளையும் கொண்டு செல்வதற்கு பேருந்து வண்டிகள் அனுப்பப் பட்டன. அவர்களை இடிலிப் பிரதேசத்தில் கொண்டு சென்று விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கிளர்ச்சிக் குழுக்கள் பொது மக்களை தம்மோடு பணயக் கைதிகளாக பிடித்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அதை உறுதிப் படுத்த முடியவில்லை. போராளிக் குடும்பங்கள், இயக்க ஆதரவாளர்கள் ஆகிய பொது மக்களும் அவர்களுடன் செல்லக் கூடும். அவர்களைத் தவிர ஏனைய மக்கள் பலவந்தமாக கொண்டு செல்லப் படுவதையும் தவிர்க்க முடியாது.

இறுதிப் போர் இடிலிப் பகுதியில் நடைபெறவுள்ளது என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து விட்டது. அதாவது, அலெப்போவில் இருந்து வெளியேறிய இயக்கங்கள் அங்கு தமது பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் போரினால் இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான மக்களும் தங்கியிருப்பார்கள். அதனால், இடிலிப் பிரதேசத்தை கைப்பற்றும் போரில் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெருமளவு பொது மக்களும் கொல்லப் படலாம். அதை இப்போதே மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எதிர்வு கூறி விட்டனர்.

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, May 27, 2013

சிரியா போர்க் களத்தில் இருந்து சில குறிப்புகள்

  
இங்கேயுள்ள படத்தில், மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப் படும், சிரியாவின் "அல்கைதா விடுதலைப் போராளிகள்", சிரிய கிறிஸ்தவப் பெண் ஒருவரை வன்புணர்ச்சி செய்து, கோரமாக கொலை செய்த காட்சி. இந்த செய்திகள், உலகில் எந்த கிறிஸ்தவரது மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், சிரிய அரச படைகளும், கிளர்ச்சிக் குழுக்களும் மனித உரிமைகளை மீறுவதுடன், பொது மக்களையும் துன்புறுத்தி, பலி வாங்கி வருவதும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். போரில் ஈடுபடும் இரண்டு தரப்பினரும் பாரிய போர்க்குற்றங்களை புரிந்துள்ளன. ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே உலகிற்கு தெரிவித்து வருகின்றன.

சிரிய உள்நாட்டுப் போருக்கு காரணமான, மத ரீதியிலான சமூகப் பிரிவினைகள், அவற்றிருக்கு இடையிலான முரண்பாடுகள் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. கிறிஸ்தவ சிறுபான்மையினர் சிரியாவின் அசாத் அரசை ஆதரவளிப்பதால், கிறிஸ்தவ மக்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் வேட்டையாடிக் கொலை செய்யப் படுகின்றனர். அல்கைதா தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. ஆனால், "கிறிஸ்தவ நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகள், சிரிய கிறிஸ்தவர்களின் அவலங்களை புறக்கணித்து வருவதுடன், தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாத அல்கைதா தீவிரவாதிகளை ஆதரித்து வருகின்றன. உலகத்தில் எங்காவது கிறிஸ்தவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால், "கிறிஸ்தவ நாடுகள்" தட்டிக் கேட்கும் என்ற மாயை இங்கே உடைக்கப் படுகின்றது.

*****************


சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்ந்தால், அங்கே அல்கைதா ஆட்சியை கைப்பற்றி விடும். அதற்குப் பிறகு, இஸ்ரேல் மீதான ஜிகாத் அறிவிக்கப் பட்டாலும் ஆச்சரியம் இல்லை. முகம் தெரியாத பிசாசை விட, இவ்வளவு காலமும் பழகிய பிசாசே பரவாயில்லை என்ற முடிவுக்கு இஸ்ரேலிய இராணுவம் வந்துள்ளது. ஆசாத் அரசு பலவீனமாக இருந்தாலும், இஸ்ரேலுடன் சமாதானமாக இருக்கும் என்று நினைக்குமளவிற்கு நிலைமை வந்துள்ளது. இதைத் தான், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வார்கள்.

எகிப்தில் ஆட்சியில் இருப்பதைப் போன்ற, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி சிரியாவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அது ஆசாத் (இன்றைய அதிபரின் தந்தை) காலத்தில் தடை செய்யப் பட்டிருந்தது. எண்பதுகளில், ஹோல்ம்ஸ் நகரில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சி, ஈவிரக்கமின்றி நசுக்கப் பட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதரக் கட்சி உறுப்பினர்கள் மாண்டனர். அதற்குப் பிறகு, அந்தக் கட்சி தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக, சிரியாவில் பெரும்பான்மை சமூகமான சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் அதன் ஆதரவுத்தளம் இருந்தது.

2010 ல் சிரிய அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பயன்படுத்திக் கொண்டது. அப்போது உருவான ஆயுதக் குழுவுக்கு, சவூதி அரேபியாவும், கட்டாரும் நிதியும், ஆயுதங்களும் வழங்கின. இதே நேரம், ஆயுதக் குழுக்கள் இயங்கவும், பயிற்சி பெறவும், துருக்கி இடம் கொடுத்தது. எண்பதுகளில் நடந்ததைப் போன்று, 2010 போராட்டமும், சுன்னி முஸ்லிம்களின் எழுச்சியாக கருதப் பட்டது. (ஷியா, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிரியர்கள், அந்தக் கிளர்ச்சியில் பங்கு பற்றவில்லை. அவர்கள் இன்றைக்கும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர்.)

2010 ல் சிரிய அரசுக்கு எதிரான, சுன்னி முஸ்லிம் சமூக போராளிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தமது சமூகத்தை சேர்ந்த போராளிகளை எதிர்த்து போரிட விரும்பாத, சிரிய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சுன்னி முஸ்லிம் இராணுவ வீரர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருந்தது. சிரியா இராணுவத்தில் இருந்த, கணிசமான அளவு  சுன்னி முஸ்லிம் அதிகாரிகளும், படைவீரர்களும் துருக்கிக்கு தப்பி ஓடினார்கள். அவர்கள் அங்கிருந்து "சுதந்திர சிரியா இராணுவம்" (FSA) என்ற பெயரில் இயங்கினார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்கப் பட்டது போன்று, சிரிய சுதந்திர இராணுவம், பலமான எதிர்ப்புச் சக்தியாக உருவெடுக்கவில்லை.

சிரியா அரசுக்கு எதிராக போராடும் போராளிக் குழுக்களுக்கு, தாராளமாக நிதி, ஆயுதங்களை அள்ளி வழங்க பல வெளிநாடுகள் முன்வந்தன. இந்த வெளிநாட்டு நிதி, ஆயுதங்கள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈராக்கிய அல்கைதா சிரியாவிற்குள் ஊடுருவியது. பின்லாடனின் அல்கைதாவும், ஈராக் அல்கைதாவும் ஒன்றல்ல. ஈராக் அல்கைதா, அந்த நாட்டு சுன்னி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய அமைப்பு. பின்லாடனின் அல்கைதாவின் அரசியல் கொள்கைகளை வரித்துக் கொண்டனர். அதில் முக்கியமானது, முதலாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஒப்பந்தம் (Syces - Picot Agreement.).

முதலாம் உலகப்போரின் முடிவில் தான், இன்றுள்ள சிரியா, ஈராக் என்ற தேச எல்லைகள் பிரிக்கப் பட்டன. எல்லை பிரிப்பது குறித்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரபு மக்களுடனோ, அவர்களின் பிரதிதிகளுடனோ கலந்தாலோசிக்கப் படவில்லை. அதைக் காரணமாக காட்டும் அல்கைதா,  அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அதனால், ஈராக் நாட்டை மட்டுமல்ல, சிரியாவையும் சேர்த்து அரசமைப்பது அவர்களின் எதிர்கால இலட்சியம். ஈராக்கிய அல்கைதா, அல் நுஸ்ரா (Jabhat al-Nusra) என்ற பெயரில் சிரியாவில் களமிறங்கியது.

அது ஒரு அல்கைதா பாணி இயக்கம். அதன் அர்த்தம், அந்த இயக்கத்தில் எந்த நாட்டவரும் உறுப்பினராக சேரலாம். அதனால், சர்வதேச ஜிகாதிகளையும் ஒன்று சேர்க்க முடிந்தது. குறிப்பாக லிபியாவில் கடாபிக்கு எதிராக போரிட்ட போராளிகள் சிரியாவில் வந்து குவிந்தார்கள். ஆட்பலம் ஆயுத பலம் மிக்க அல் நுஸ்ரா, பல இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. சிரியா, லெபனானில் வாழும் மக்களுக்கு இந்த விபரங்கள் தெரியும். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் சிரியாவில் அல்கைதாவின் இருப்பை மூடி மறைத்து வந்தன. அல் நுஸ்ரா பெற்ற போர்க்கள வெற்றிகளை, FSA பெற்ற வெற்றிகள் என்று திரித்துக் கூறினார்கள். ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும், சிரியாவில் போரிடுவது பற்றிய தகவல்கள், அண்மைக் காலமாக வெளிவருகின்றன. அதற்குப் பிறகு தான், சிரியாவில் அல் நுஸ்ரா என்ற அல்கைதா பாணி இயக்கம் இருக்கின்றது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளவாரம்பித்தன.

"அல்கைதாவும், அமெரிக்காவும் எதிரிகள்" என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அமெரிக்க இராணுவத்தின், இரகசியமான துணைப்படை தான் அல்கைதா என்பது, ஏற்கனவே பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட விடயம். ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர். இப்போது, Al Nusrah ல் சேர்ந்து போராடி வருகின்றார். Eric Harroun என்ற 30 வயது இளைஞர், முஸ்லிமாக மதம் மாறி, சிரியாவின் "விடுதலைப் போராட்டத்தில்" பங்கெடுத்து வருகிறார். சிரிய தீவிரவாதக் குழுக்கள் மத்தியில், "அமெரிக்கன்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவர். ஆனால், இவர் மட்டுமே ஒரேயொரு அமெரிக்கர் அல்ல. இன்று வரையில், எத்தனை அமெரிக்கர்கள் சிரிய அல்கைதாவில் சேர்ந்து போரிடுகிறார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

Eric Harroun சிரியாவிலும், அமெரிக்காவிலும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவர். அதற்கு காரணம், சிரிய படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களில் பங்குபற்றியிருக்கிறார். சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதைக் காட்டும் வீடியோ ஒன்றில், இவர் தலையைக் காட்டுகிறார். அதைத் தவிர, இன்னொரு வீடியோவில், சிரிய அதிபர் ஆசாத்திற்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் விடுக்கின்றார். (அந்த Youtube வீடியோக்களை இணைத்துள்ளேன்) சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில், சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், எரிக் ஹரூனும் அவர்களில் ஒருவர் என்று சிரிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தான் இன்னும் சாகவில்லை என்று, Eric Harroun பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். மேலும், தான் Al Nusrah வில் சேரவில்லை என்றும், (மதச்சார்பற்ற) FSA வில் சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆயினும், சுதந்திர சிரிய இராணுவம் என்ற FSA, முழுக்க முழுக்க முன்னாள் சிரிய படையினரையும், சிரிய பிரஜைகளையும் கொண்ட படை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த அமெரிக்கர் போன்ற வெளிநாட்டு போராளிகள், பொதுவாக அல்கைதாவின் கிளை அமைப்பான Al Nusrah போன்ற இயக்கங்களில் சேர்வது ஊரறிந்த இரகசியம் ஆகும். அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பது இன்றைக்கும் பலருக்குத் தெரியாது. அதனால், ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

சிரியாவில் போரிட்ட இன்னொரு அமெரிக்கர் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. Matthew VanDyke என்ற பெயரை உடைய அந்த அமெரிக்கர், தான் ஒரு "ஊடகவியலாளர்" என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார். இவர் முன்பு லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போரிட்டவர். அங்கே வேலை முடிந்தவுடன் சிரியா வந்து விட்டார். இவரது புகைப்படமும், சிரிய அரச ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டதால் தான், வெளியுலகம் இவரைப் பற்றி அறிந்து கொண்டது. இவர்களைப் போல இன்னும் எத்தனை அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதிகள் என்ற பெயரில் உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த ஒபாமாவுக்கே வெளிச்சம்!
(US Army veteran fighting with al Qaeda, http://www.longwarjournal.org/videos/2013/03/us_army_veteran_fighting_with.php)
(Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad,  http://www.youtube.com/watch?v=2SEdheC8Yq4&feature=player_embedded)

சிரியாவில் இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாகின்றது. சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆயுதபாணி இயக்கங்கள், அல்கைதா போன்ற தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அயல்நாடான ஜோர்டானில் வைத்து, அல்கைதா போன்ற இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் இயக்கங்களில், வெளிநாட்டு போராளிகள் பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள், சிரியாவில் போரிட்டு வருகின்றன. இந்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தவை தான். ஆனால், அதனை மேற்குலக நாடுகள் மறுத்து வந்தன.

தற்போது, மேற்குலக நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் சிரியாவில் போரிடுவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. பிரிட்டனை சேர்ந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நேரம், ரஷ்யாவில் இருந்தும் பெருமளவு செச்னிய இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் எல்லாம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்ததை நினைவுபடுத்துகின்றன. எண்பதுகளில், சோவியத் படைகளினால் பாதுகாக்கப்பட்ட ஆப்கான் சோஷலிச அரசுக்கு எதிராக முஜாஹிதீன் இயக்கங்கள் போராடி வந்தன. அன்றும், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளித்து வந்தன. அன்றும், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தொண்டர் அணிகள், ஆப்கானிஸ்தானில் போரிட்டன. ஆப்கான் போர் முடிந்ததும், வெளிநாட்டு போராளிகள் தமது தாயகங்களுக்கு திரும்பி வந்து, தமது அரசுகளுக்கு எதிரான ஜிகாத் போராட்டங்களை நடத்தினார்கள். இவை எல்லாம் வரலாறு.

இன்று வரலாறு திரும்புகின்றது. அமெரிக்கா அன்று ஆப்கானிஸ்தானில் விட்ட அதே தவறை, இன்று சிரியாவில் விடுகின்றது. இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், சிரியா எல்லையில் இஸ்ரேல் இருக்கின்றது. நாளை, சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்த பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போகும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இஸ்ரேலுக்கு எதிராக தமது ஆயுதங்களை திருப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஒருவேளை, சிரியாவை சேர்ந்த போராளிகள் தயங்கினாலும், வெளிநாட்டு ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான போரை நடத்தப் போகின்றார்கள். இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது தெரியாமல் இல்லை. அதனால் தான், "முன் பின் பழக்கமில்லாத பிசாசுகளை விட, ஆசாத் போன்ற தெரிந்த பிசாசு ஆட்சியில் இருப்பதே உத்தமம்..." என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளே கூறுமளவிற்கு நிலைமை உள்ளது.
          **********

சிரியா பற்றிய முன்னைய பதிவுகள்: