Thursday, May 07, 2015

என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...


கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், "புத்தகம் புத்தகமாக வாசிக்க எமக்கு நேரமில்லை" என்றும், "எங்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை, சாதாரண மக்களுக்கு எதுவுமே புரியப் போவதில்லை" என்றும், மூலதனம் நூல் பற்றி அறிவுஜீவித் தனமாக நையாண்டி செய்வோர் பலருண்டு.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில், மூலதனத்தின் மூலப்பிரதி ஜெர்மன் மொழியில் வெளியான காலத்திலும், அதிகார வர்க்கத்தினர் அப்படித் தான் கருதி வந்தனர். 1872 ம் ஆண்டு, அதன் முதலாவது மொழிபெயர்ப்பு ரஷ்ய மொழியில் வெளியானது.

மூலதனம் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், சார் மன்னனின் தணிக்கை சபையினர் பார்வைக்கு சென்றது. அவர்கள் அந்த நூலை தடை செய்யாமல் விற்க அனுமதித்தார்கள். அதற்குக் காரணம், "அன்றைய ரஷ்யாவில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் சிறிய எண்ணிக்கையிலான படித்தோர் மட்டுமே மூலதனம் நூலை வாசிக்கப் போகிறார்கள். அப்படியே வாசித்தாலும், அது ஒரு சிலருக்கு மட்டுமே புரியப் போகின்றது."

அப்படி வாசித்துப் புரிந்து கொண்ட "ஒரு சிலர்" மிகப் பெரிய புரட்சியை நடத்துவார்கள் என்று, அன்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது ஒரு பழமொழி.

"தொழிலாளர்கள், கடின உழைப்பின் மூலம், தமது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிலேயே வாய்ப்புகள் உள்ளன. அதனால், புரட்சி அவசியமானது அல்ல!" இவ்வாறு கூறும் பலரை நமது சுற்றாடலில் கண்டிருப்போம். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவிலும் அப்படியானோர் இருந்தனர். சில மார்க்சியவாதிகளும், குறிப்பாக சமூக- ஜனநாயகவாதிகள், அத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். அன்று அவர்கள் "பொருளாதாரவாதிகள்" (Economists) என்று அழைக்கப் பட்டனர்.

அன்று லெனின் கூட ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியில் தான் இருந்தார். அதுவே அன்று சார் மன்னராட்சிக்கு எதிரான, பிரதானமான மார்க்சியக் கட்சியாக இருந்தது. அதன் தலைவர்கள் பலர், பிற ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர்.1903 ம் ஆண்டு, லண்டனில் நடந்த இரண்டாவது கட்சி மகாநாட்டில், ஒரு முக்கியமான பிளவு ஏற்பட்டது.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற அரசமைப்பை விரும்பிய பிரிவினர், மிகத் தெளிவான சமூக- ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மென்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். ஏற்கனவே, பொருளாதாரவாதிகளும் மேற்கத்திய ஜனநாயகப் பாதை சிறந்தது என்று நம்பினார்கள். மேற்கத்திய ஜனநாயக அமைப்பே சிறந்தது. அதற்குள், தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களது கொள்கை.

லெனின் தலைமையில் பிரிந்தவர்கள் போல்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் தொழிலாளர் வர்க்கம் அரசியல் தலைமைத்துவத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியம் என்று நம்பினார்கள். இது தொடர்பாக நடந்த விவாதங்களை, லெனின் "என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"என்ன செய்ய வேண்டும்?" இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ற நூலாகும். "தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள், தேர்தல் ஜனநாயகம் மூலம் சில சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியாதா?" "மேற்கத்திய நாடுகளில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் சிறந்தது அல்லவா?" இது போன்ற சந்தேகங்களை எழுப்புவோருக்கான பதில்கள் அந்த நூலில் உள்ளன. மின் நூலை இணையத்தில் தரவிறக்கிக் கொள்வதற்கு: http://www.padippakam.com/document/M_Books/m000016.pdf

ரஷ்யாவில் 1917 அக்டோபரில் நடந்த போல்ஷெவிக் கட்சியினரின் புரட்சி, ஒரு சதிப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு என்றே மேற்கத்திய பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அதே ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்தது தான், உண்மையான புரட்சி என்றும் கூறுகின்றன. பாடசாலைகளில் சரித்திர பாடம் படிக்கும் மாணவர்கள், பரீட்சையில் கேட்கப் படும் கேள்விகளுக்கு அப்படித் தான் விடை எழுத வேண்டும். மேற்குலக நாடுகள், அக்டோபர் புரட்சியை நிராகரித்து விட்டு, பெப்ரவரி புரட்சியை வரவேற்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

ஜனநாயகம் மாதிரி, புரட்சி என்ற சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு நாட்டில் நடக்கும் மக்கள் எழுச்சி மட்டுமே பலரால் புரட்சி என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அவ்வாறாயின், அண்மைக் காலத்தில் துனீசியாவிலும், எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சிகளும் புரட்சிகள் தான். ஆனால், அதற்குப் பின்னர், அந்த நாடுகளில் ஆட்சியாளர் மாறியதைத் தவிர, பெரியளவு சமூக மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ரஷ்யாவில் 1917 பெப்ரவரியில் நடந்த புரட்சியில், சார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்த்தப் பட்டது. (எகிப்து, துனீசியா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) அப்போதே சோவியத் அமைப்புகள் தோன்றி விட்டன. தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து, கணிசமான அளவு வெற்றிகளையும் பெற்றிருந்தார்கள். 

அது மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் கணிசமான அளவு மார்க்சியர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆயினும், அந்த மார்க்சியர்கள் மேற்கு ஐரோப்பிய சமூக- ஜனநாயகக் கட்சியினர் ஆவர். மென்ஷேவிக்குகள், சோஷலிச புரட்சியாளர்கள் போன்ற கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிவுஜீவிகளாக இருந்தனர். அதனால், அவர்கள் இன்றுள்ள பல முற்போக்கு பூர்ஷுவாக்கள் போன்றே காணப் பட்டனர்.

சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்றம், சார் மன்னனை பெயரளவில் பாதுகாத்து வைத்திருந்தது. சோஷலிசம் தோன்றுவதற்கு முன்னர், முதலாளித்துவ வளர்ச்சி அவசியம் என்று கருதியதால், ஏற்கனவே இருந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அது மட்டுமல்ல, தொழிலாளர்களின் சோவியத் என்ற அமைப்பு தனியாக இயங்கிய போதிலும், அதற்கு எந்த அதிகாரங்களையும் கொடுக்கவில்லை.

அத்தகைய நிலைமையில் தான், அக்டோபர் மாதம் போல்ஷெவிக் கட்சியினர் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அன்றைய தலைநகரான பெட்ரோகிராட்டில் (சென் பீட்டர்ஸ்பேர்க் என்பது ஜெர்மன் மொழிப் பெயர் என்தால், ரஷ்ய தேசியவாதிகளினால் அந்தப் பெயர் மாற்றப் பட்டிருந்தது.), அந்த ஆட்சிமாற்றம் நடைபெற்ற நேரம், பெரும்பான்மை மக்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது என்று சொல்லப் படுகின்றது. சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள குளிர்கால அரண்மனை மீதான தாக்குதலில், பெரியளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த அரண்மனையில் இருந்தது, கெரன்ஸ்கி தலைமையிலான சமூக- ஜனநாயக அரசாங்கம் தான்.

உண்மையில், அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் புரட்சி ஆரம்பமானது. செம்படையின் முன்னோடி அமைப்பான செம் பாதுகாவலர் படையில் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். பாராளுமன்றத்தினுள் நுளைந்த செம் பாதுகாவலர்கள், அறிவுஜீவி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியே விரட்டினார்கள். அதன் மூலம், அன்று வரையில் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்திடம் இருந்த அரசு அதிகாரம், தொழிலாளர்களின் அமைப்பான சோவியத்திற்கு மாற்றப் பட்டது.

அக்டோபர் புரட்சியின் பின்னர் என்ன நடந்தது? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மேட்டுக்குடியினர் ஒன்றுமில்லாதவர் ஆக்கப் பட்டனர். கொள்ளைக்காரரக்ளிடம் கொள்ளையடிப்பது தவறில்லை என்று உணர்ந்த மக்கள், பணக்காரர்களின் வீடுகளை சூறையாடினார்கள். காலங்காலமாக செல்வத்தில் வாழ்ந்து வந்த பிரபுக்கள், நிலவுடைமையாளர்கள், தங்களது மாளிகை போன்ற வீடுகளில் ஏழை, எளிய மக்களை குடியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த மேட்டுக்குடியினர், தம்மிடம் இருந்த சொத்துக்களை விற்று வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உழைக்காமல் சொகுசாக வாழ்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர் கடினமான வேலைகளை செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சில இடங்களில், அவர்களைப் பிடித்து மலசல கூடம் கழுவ வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. செல்வந்தர்கள் தம்மிடம் இருந்த வைரங்களை விற்று குடும்பத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு கஷ்டம் ஏற்பட்டது. பல பணக்காரர்கள், சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு வெளிநாடுகளுக்கு ஓடினார்கள்.

அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தான், கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய ஸ்தாபனம் அரசு நிர்வாகத்தை பொறுப்பேற்றது. வழமையான அரசியல் கட்சிகளுக்கு மாறாக, அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி உறுப்புரிமை வழங்கப் பட்டது. அது வரை காலமும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த, ஆலைத் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், போன்றவர்களுக்கு உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. மேட்டுக்குடியினரால் "தோட்டக் காட்டான்கள்" என்று இழிவு படுத்தப் பட்டவர்கள், பாராளுமன்ற ஆசனங்களில் சென்றமர்ந்து கொண்டார்கள்.

இது போன்றதொரு வர்க்கப் போராட்டத்தை தான் லெனின் கனவு கண்டார். அதைச் செயற்படுத்துவதற்கு பல கோட்பாடுகளை எழுதினார். அதனால் தான், அது இன்றைக்கும் மார்க்சிய- லெனினிச சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றது. லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சியினர், வர்க்கப் போராட்டம் தற்போது தேவையில்லை என்று நினைத்திருந்தால், இன்றைக்கும் ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒரு கட்சியாக அமர்ந்திருப்பார்கள். ரஷ்யாவும் இத்தாலி, ஸ்பெயின் மாதிரி, ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடாக இருந்திருக்கும்.

4 comments:

Muthurajkumar said...

நன்றி தோழர் வெகு நாட்களாக தேடித்திரிந்த புத்தகம்

Unknown said...

ரஷ்யபுரட்சியை பற்றி எளிய அறிமுகம் சிறப்பு

Unknown said...

👍

Unknown said...

புத்தகமாக கிடைக்குமா விலை?