Tuesday, May 05, 2015

கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை

தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில், முன்னொருபோதும் இல்லாதவாறு, கம்யூனிசம் குறித்த தேடல் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலானோர் அதனை தமக்கு நன்மை தரும் விடயமாக பார்த்தாலும், ஒரு சிறு பிரிவினர் தமக்கு ஆபத்தானது என்ற கோணத்தில் பார்க்கின்றனர். வசதியாக வாழும் படித்த மத்தியதர வர்க்க இளைஞர்களே அவ்வாறு எதிர்மறையாக பார்க்கின்றனர் என்பதும் தெளிவானது.

முகநூலில் கோபிகிருஷ்ணா என்ற நண்பருக்கும், எனக்கும் இடையில் நடந்த உரையாடலை இங்கே தொகுத்து தருகிறேன். எதிர்காலத்தில் கம்யூனிசம் குறித்த தேடலுடன் வரும் இளைஞர்களுக்கும் அது உதவும்.

 ---------------------------------------------------------------------------------------------

 கோபி கிருஷ்ணாவின் நிலைத் தகவலில் இருந்து ஒரு பகுதி:

//ஊடகவியலும், கம்யூனிசமும் பலவகையில் ஒன்று. இரண்டுமே புனிதமானவை, உயர்ந்தவை, மக்களுக்கானவை என்றெல்லாம் சொல்லப்படுது. ஆனால், நாங்கள் காண்பது எல்லாம் அதற்கு முழு எதிர்மாறாத் தான் இருக்கின்றன. அவை என்னவாறு புனிதம், சிறப்பானவை எண்டு கேட்டால் "1930-இல...." என்ற கதைகள் தான் சொல்லப்படுமே தவிர, அவற்றின் நிகழ்காலத்தப் பற்றிக் கதைப்பதில்லை. முதலாளித்துவத்துக்கு உலக வறுமையும், சீனாவில இருக்கிற அப்பிள் தொழிற்சாலை சிறுவர் ஊழியர்களும் உதாரணம் என்றால், ஸ்ராலின் காலத்தில இடம்பெற்ற கொலைகளும், ஃபிடல் காஸ்ரோ எப்பிடி ஜனநாயகத்துக்குப் புறம்பாச் செயற்பட்டார் என்பதும் தான் எனது உதாரணங்கள்.//

பதில்: கம்யூனிசம் இல்லாவிட்டால், சர்வசன வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை எல்லாம் இன்றைக்கும் கனவாக மட்டுமே இருந்திருக்கும். உங்களுக்கு படிப்பு, மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்ததும், பொது மக்களுக்கான பொதுப் போக்குவரத்து துறையை ஏற்படுத்துவதும் யார்?

கேள்வி: எனக்கான வசதிகள் வரிகள் மூலம் பெறப்பட்ட பணம் மூலம் வழங்கப்படுகிறது. நீங்கள் சொன்ன 8 மணிநேர வேலை, சர்வசன வாக்குரிமையில் கம்யூனிசத்தின் நேரடிப் பங்கை நான் அறிந்ததில்லை. உங்கள் வழியிலேயே வருவோம். கம்யூனிசம் தான் வழங்கியதாக வைத்துக் கொள்வோம். மனித நாகரிகமடைதலில் சமயங்கள் ஒரு குறிப்பிட்ட பங்கை ஆற்றியிருப்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக சமயங்கள் இப்போதும் போற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?

பதில்: அந்த "அறிவியலாளர்களில்" நீங்களும் ஒருவர் என்று நான் நம்புகிறேன்.ஆகவே மனித நாகரிகமடைதலில் கம்யூனிசத்தின் பங்கையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சரி, அவை போற்றப் பட வேண்டுமா? அவற்றின் வரலாற்றுப் பங்களிப்புக்கு மதிப்புக் கொடுப்பதில் தவறில்லையே? கார்ல் மார்க்ஸ் ஒரு நாஸ்திகர். அவர் கிறிஸ்தவ மதம் வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் வகித்தது என்று போற்றி இருக்கிறார். அது மட்டுமல்ல, முதலாளித்துவம் கூட வரலாற்றில் முக்கியமான, அதிலும் முற்போக்கான பங்காற்றி உள்ளது என்று போற்றி இருக்கிறார்.

அதே நேரம், கார்ல் மார்க்ஸ் கிறிஸ்தவ மதம், முதலாளித்துவம் குறித்து தனது கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளார். உங்களிடம் இருந்தும் அப்படி ஒரு மனப்பக்குவத்தை நாங்கள் எதிர்பார்க்கலாமா? எதையும் விமர்சிப்பதில் தவறில்லை. நீங்கள் தாராளமாக கம்யூனிசத்தை விமர்சிக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டாமா? போற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், தூற்றாமால் இருக்கலாம் அல்லவா? நீங்களும் ஒரு அறிவியலாளர் என்று நான் நம்புகிறேன். எதையும் அறியாமல், ஆராயாமல் பேசுவது அறிவியலாளருக்கு அழகல்ல.

முதலில் கம்யூனிசம் பற்றிய ஒரு சிறிய குறிப்பு. அதை நீங்கள், ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ காலத்தில் இருந்து தொடங்குவது தவறு. 17 ம் நூற்றாண்டில் இருந்தே பூலோக சொர்க்கம் ஒன்றை உருவாக்குவது சம்பந்தமான எண்ணக்கருக்கள் தோன்றி விட்டன. சமூக விஞ்ஞான அடிப்படையில் அதை கம்யூனிச சமுதாயம் என்று வரையறுத்தார்கள். 

கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்தே அது இருந்து வருகின்றது. 19 நூற்றாண்டில் நடந்த அரசமைப்புமாற்றங்களின் போது மக்கள் நலன்சார்ந்த அரசமைக்க விரும்பியோர் தம்மை சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். இன்றைக்கு சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், அனார்க்கிஸ்ட் பல பிரிவுகளாக இருந்தாலும், தொடக்கப் புள்ளி ஒன்று தான். இனி உங்களது கேள்விக்கு வருவோம்.

யார் வரி அறவிடுகிறார்கள்? அரசு. மக்களிடம் வரி எடுப்பதும், அரசு என்ற கட்டமைப்பும் இரண்டாயிரம் வருட கால பழமையான விடயங்கள். அப்போதெல்லாம் உலகில் எந்த அரசும், மக்களிடம் அறவிட்ட வரியைக் கொண்டு இலவச கல்வி, மருத்துவம் என்று வசதி செய்து கொடுக்கவில்லையே? ஏன்? குறைந்த பட்சம், தொழிற்புரட்சி காரணமாக முதலாளித்துவம் வளர்ந்த, 19 நூற்றாண்டில் ஓர் உதாரணத்தை காட்ட முடியுமா? ஏன்? 

இதற்கான பதில், எந்த முதலாளியும் மக்கள்நலன் கருதி செயற்படுவதில்லை. அரசு முதலாளிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதையே தனது கடமையாக கருதி வந்தது. அப்போதும் அரசு வரி அறவிட்டு வந்தது. யாரிடம்? சாதாரண உழைக்கும் மக்களிடம். அதே நேரம், மேட்டுக் குடியினருக்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டிருந்தது. எப்போது மாற்றம் வந்தது? சோஷலிச, கம்யூனிசக் கட்சிகள்உருவான பின்னர் தான்.

அந்தக் கட்சிகள் தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து போராடினார்கள். இலவச கல்வி, இலவச மருத்துவம், எட்டு மணி நேர வேலை, சிறார் தொழிலாளர்களுக்கு விடுதலை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் போன்ற பல கோரிக்கைகளை வைத்துப் போராடினார்கள். மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தான், அரசு அந்தக் கோரிக்கைகளை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டது. 

2ம் உலகப்போருக்குப் பின்னர், சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக வளர்ச்சி அடைய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் உருவானது. அதாவது, அயலில் இருக்கும் சோஷலிச நாடுகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் மேற்கத்திய நாடுகளில், நலன்புரி அரசு என்ற பெயரில் புதிய வகை சோஷலிசத்தை கொண்டு வந்தார்கள்.

கேள்வி: 1. இலவசக் கல்வி தொடர்பான வரலாறு. http://en.m.wikipedia.org/wiki/Free_education#History அதனை அறிமுகப்படுத்திய பெய்ன் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கும் அறிகுறியைக் காணோம். அத்தோடு, ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி என்பது மிகப்புதிது. ஆகவே, ஆச்சரியமில்லை.

2. இலவச மருத்துவம் தொடர்பாக இலகுவாகத் தேட முடியவில்லை. பிறகு கருத்திடுகிறேன்.

3. நீங்கள் சொல்பவற்றிற்கு நம்பகமான ஆதாரங்களை வழங்க முடியுமா?

4. மக்கள் உரிமைக்காகப் போராடும்போது அதற்காகச் செவிமடுப்பது தான் ஜனநாயக அரசு. அது கம்யூனிசத் தலைவர்களிடம் இருந்ததாகக் காணோம்.

பதில்: 18ம் நூற்றாண்டில் கம்யூனிஸ்டுகள் இருக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் உருவானார்கள். பெய்ன் போன்ற இலவசக் கல்வியை விரும்பிய சிந்தனையாளர்கள் வாழ்ந்திருந்தாலும், அன்று அது ஒருஅரசியல் இயக்கமாக பரிணமிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் தான் அது ஏற்பட்டது. இதற்கு ஆதாரம் எதுவும் தேடத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டு வரையில், மேற்கத்திய நாடுகளில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கல்வி கற்கும் வசதி, பணக்காரக்ளுக்கு மட்டுமே சாத்தியமான சலுகையாக இருந்தது. சோஷலிச நாடுகளில், கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன என்ற உண்மையை உங்களால்மறுக்க முடியாது.

//In the United States, socialism was prominent in the thinking of rationalistic New England and Northern reformers. For example, the first “free” public schools were established by Unitarian socialists who wanted to use them as a vehicle for undermining Christianity, changing America’s cultural values, and promoting the acceptance of socialism. This was a brilliant strategy for the left. No institution in America that has been more effective in promoting the acceptance of socialist ideals than the public school system. Ironically, Americans have bought so completely into public education that they do not even associate it with socialism.// http://patriotupdate.com/articles/beginnings-of-american-socialism-in-public-education/

கேள்வி: நான் அதில் என்ன சொன்னேனோ, அதைத் தான் திரும்பவும் செய்கிறீர்கள். "எவ்வாறு புனிதம், சிறப்பானவை என்று கேட்டால் 1930-இல..." ஜனநாயகம் மீது எனக்கு விமர்சனமுண்டு. அதை நான் இதற்கு முன்னர் பதிந்திருக்கிறேன். "மக்களில் அனேகர் முட்டாள்கள். முட்டாள்களால் தெரிவுசெய்யப்பட்டால் முட்டாள்கள் அதிகம் தெரிவுசெய்யப்படுவர்" என்றேன்.

பதில்: 1930 க்கு முன்னரும் உலகம் இருந்தது. அதைநீங்கள் கவனிக்க வேண்டும், ஆராய வேண்டும் என்று தான் சொல்கிறேன். எதையும் புனிதம் என்று வாதாட வரவில்லை. எதைப் பற்றியும் அறியாமல் பேசுவது தவறு என்று தான் சொன்னேன். உங்களைப் பற்றி எதுவும் தெரியாமல், ஒருவர் உங்களைப் பற்றி எதிர்மறையாக மட்டுமே பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்காக நீங்கள் புனிதமானவர் என்று அர்த்தம் அல்ல.

கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாமல் கருத்துக் கூறுவதைப் போன்று தான், ஜனநாயகம் பற்றிய உங்களது கருத்துக்களும் உள்ளன. உலகில் பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லது சோஷலிஸ்டுகள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பதிலாக சர்வசன வாக்குரிமை வேண்டுமென்று கோரியவர்கள் இடதுசாரிகள் மட்டும் தான். மார்க்சிய சமூக ஜனநாயகக்கட்சிகள், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக சர்வசன வாக்குரிமையை பெற்றுக் கொண்டார்கள்.

மேலும், தேர்தலில் விரும்பிய கட்சிக்கு வாக்களிப்பதற்குப் பெயர் பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒருவருக்கு வாக்குப்போட்டு விட்டு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். சோஷலிசநாடுகளில் அதற்குப் பதிலாக மக்கள் பங்குபற்றும் நேரடியான ஜனநாயகம் உள்ளது. மக்கள் ஜனநாயகத்தை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் பரவாயில்லை. குற்றம், குறை சொல்லாமல் இருப்பதற்கு முயற்சிக்கலாமே? சிறந்த கல்விமான், அறிவாளர் என்பதால் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

//ஸ்ராலின் காலத்தில இடம்பெற்ற கொலைகளும், ஃபிடல் காஸ்ரோ எப்பிடி ஜனநாயகத்துக்குப் புறம்பாச் செயற்பட்டார் என்பதும் தான் எனது உதாரணங்கள்.// இதிலே சில கேள்விகள்எழுப்பப் படவேண்டும். "ஸ்டாலின் கால கொலைகள்" : யார் கொல்லப் பட்டார்கள்? சாதாரண பொது மக்களா? இல்லை. 

சாமானியனான உங்களது பார்வையில் யார் கெட்டவர்கள்? ஊழல்வாதிகள், சுரண்டல்வாதிகள், கந்துவட்டிக்காரர்கள், பேராசை பிடித்த முதலாளிகள், நிலஅபகரிப்பு செய்த நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள்... இப்படியானவர்கள் தான் கொல்லப்பட்டனர். மக்கள் அல்ல. அதே போல, காஸ்ட்ரோ ஜனநாயகம் மறுத்ததும், குறிப்பிட்ட சில பிரிவினருக்குத் தான். மாபியாக்கள், கிரிமினல்கள், விபச்சார தரகர்கள், இவர்களை எல்லாம் கூப்பிட்டு விருந்து வைக்க சொல்கிறீர்களா? முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள் பார்ப்போம்.

கேள்வி: சோசலிச நாடுகளில் உள்ளது? ஏற்கனவே கேட்ட கேள்வி தான்.

1. உலகிலுள்ள உதாரணம் காட்டக்கூடிய சோசலிச நாடு எது? 2. சோசலிச நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் ஏன் ஜனநாயகத்திற்குப் புறம்பானவையாகக் காணப்படுகின்றன? (உதாரணம் - கியூபா, வடகொரியா, சீனா.)

எல்லா சோஷலிச நாடுகளிலும், மக்கள் ஜனநாயக அடிப்படையில் தான் ஆட்சி அமைந்துள்ளன. உலகில் முதல் முதலாக தோன்றிய சோஷலிச நாடு சோவியத் ஒன்றியம்என்பது உங்களுக்கு தெரியும். சோவியத் என்றால் என்னவென்று தெரியுமா? மக்கள் மன்றம். அது லெனின் தலைமையிலான போல்ஷெவிக்- கம்யூனிஸ்டுகள் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னரே ஏற்பட்டு விட்டது. ஒரு போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கூட அங்கம் வகிக்காத சோவியத் கூட இருந்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற அடித்தட்டு மக்கள் கூட, சோவியத் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இன்றும் "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று, பாராளுமன்றத்திற்கு, நகரசபைக்கு பிரதிநிதிகளை அனுப்பும் முறை அல்ல. மக்கள் நேரடியாக பங்குபற்றும் ஜனநாயக அமைப்பு அது. ஒவ்வொரு திட்டமும் மக்கள் பேரவையான சோவியத்தில் கூடி விவாதிக்கப்படும். பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும். 

சோவியத் மட்டுமல்ல, கட்சி அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மற்றும் பல வெகுஜன அமைப்புகள் எல்லாம் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். உங்களால் முடிந்தால், அதனை உங்களது ஊரில் அல்லது கல்லூரியில் நடைமுறைக்கு கொண்டு வந்து காட்டுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். முற்சாய்வுகள், முன்முடிவுகளுடன் உரையாட வராதீர்கள். அதற்குப் பெயர் விதண்டாவாதம். அவை ஜனநாயகத்திற்குப் புறம்பானதாக "காணப்"படவில்லை, காட்டப்படுகின்றன. அப்படி மேற்குலகில் பரப்புரை செய்யப்படுகின்றன. உண்மை எது, பொய் எது என்பதை நீங்கள் தான் ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை நம்புவீர்கள் என்றால், நீங்கள் தமிழர்கள் அனைவரும் இரத்தக்காட்டேரிகள் என்று தான் சொல்வீர்கள். சோஷலிசம், கம்யூனிசம் போன்றவற்றை அடியோடு வெறுக்கும் முதலாளித்துவ நாடுகளின் பிரச்சாரங்களை நம்பினால், சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் கிடையாது என்று தான் நினைப்பீர்கள்.

கேள்வி: முதலாவது பதில் - உஸ்ஸ். அவை அனேகமான நாடுகள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகின்றன. எனது ஞாபகம் சரியெனில், ஒருகட்டத்தில் தொழிற்துறை வளரவேண்டுமென குறிப்பிட்ட காலத்திற்கு கியூபா (அல்லது இன்னொமோர் சோசலிச நாடு) முதலாளித்துவத்தை ஊக்குவித்தது. இந்த நாடு ஒரு சோசலிச நாடு எனச் சொல்லுமளவிற்குள்ள நாட்டைச் சொல்லுங்கள்.

இரண்டாவது -வடகொரியாவில் தந்தைக்குப் பிறகு பதவிக்கு வந்தவர் தான் தற்போதையவர். அண்மைக் காலத்தில் பல இராணுவத் தளபதிகள் ஜனாதிபதியால் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில தலைமுடி அலங்காரங்களிலேயே முடி வெட்ட முடியும். இது ஜனநாயகம்?

சீனாவில் பேஸ்புக் உட்பட பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. எதிரணிகள் ஒடுக்கப்படுகின்றன. உச்சக்கட்ட கண்காணிப்பு இருக்கிறது. இது உண்மை.

//உஸ்ஸ். அவை அனேகமான நாடுகள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகின்றன.// அப்படி நான் சொல்லவில்லை. சோஷலிச நாடுகளில் ஜனநாயக அமைப்பு இருந்தது என்று தான் விபரித்தேன். ஜனநாயகத்தை, முதலாளித்துவத்துடன் சேர்த்துப் பார்ப்பது உங்களது அறியாமை. ஜனநாயகம் என்பது மக்களாட்சி. பெரும்பான்மையினரின் தெரிவு. ஜனநாயகம் தோன்றியதாக புகழப்படும் கிரேக்கத்தில், கட்சிகள் இருக்கவில்லை, இப்போதுள்ள மாதிரி தேர்தல்கள் நடக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பது பெரும் மூலதனத்தை மட்டும் தான். அதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். பெரும் மூலதனம் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டது. அவை பொருளாதார சர்வாதிகாரத்தை நடைமுறைப் படுத்துகின்றன. அதைத் தான் எதிர்க்க வேண்டும். சிறு தொழில் முனைவோர், சிறிய நிறுவனம் வைத்திருப்போர் எல்லாம் முதலாளிகள் அல்லர். சிலர் அப்படி தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். சோஷலிச நாடுகளில் சிறு தொழில்முனைவோருக்கு சுதந்திரம் கொடுப்பதால் எந்த நஷ்டமும் வரப் போவதில்லை. உங்களுக்கு தனியாக ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் தாராளமாக செய்யலாம். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் நீங்கள் வியாபாரம் செய்யலாம். ஒரு சோஷலிச நாட்டில் அதற்கு சுதந்திரம் இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல நாடுகள் தங்களை சோஷலிச நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. ஒவ்வொரு நாடும் தனக்குத் தெரிந்தவரையில் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்தி வந்தன. அது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தான் சோஷலிசத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேற்கு ஐரோப்பாவில் உள்ள நலன்புரி அரசு என்பது முதலாளித்துவ அமைப்பின் உள்ளே கொண்டு வரப் பட்ட சோஷலிசம் தான்.

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிய வேண்டும். நீங்கள் எதற்காக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கும் பிரச்சாரங்களை நம்புகிறீர்கள்? நீங்கள் சிறிலங்கா அரசு ஊடகம் சொல்வதை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால், உங்கள் பார்வையில் தமிழர்கள்எல்லோரும் இரத்தக்காட்டேரிகள் மாதிரி தெரிவார்கள். ஆகவே, உங்களது கண்ணாடியை கழற்றி வைத்து வாருங்கள். ஒரு அறிவாளர்மாதிரி நடந்துகொள்ளுங்கள். இரண்டு பக்கமும் விசாரித்து, அலசி, ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

வட கொரிய அதிபரின் தலைமுடி அலங்காரம் பற்றிய கட்டுக்கதை மேற்கத்திய ஊடகங்களினால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இது கிளுகிளுப்பூட்டும் கிசுகிசு பாணியிலான தகவல் மட்டுமே. வட கொரிய இராணுவத் தளபதிகள் ஊழல், அல்லது உளவுபார்த்தது போன்ற ஏதாவது குற்றச்சாட்டில் தான் தண்டிக்கப் பட்டார்கள். அதனை மேற்கத்திய ஊடகங்களே வெளிப்படுத்தி இருந்தன. இராணுவத் தளபதிகள் கூட தவறு செய்தால் தண்டிக்கப்படுவதற்காக, நீங்கள் அந்த நாட்டை பாராட்ட வேண்டும் அல்லவா? சீனாவில் இணையத்தளங்கள்முடக்கியதற்காக மூக்கால் அழுகிறீர்கள். அமெரிக்காவில், பிரான்சில் எத்தனை இணையத்தளங்களை முடக்கினார்கள்? NSA உலக நாடுகளை, பொதுமக்களை உளவு பார்த்ததை ஸ்னோவ்டன் அம்பலப் படுத்தியதை அறியவில்லையா?

இதைப் பார்த்த உடனே நான் வட கொரியா, சீனாவை "நியாயப் படுத்துகிறேன்" என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஒரு புனிதர் அல்ல. ஒரு பக்கச் சார்பானவர் தான். அதைக் காட்டுவதற்கே சிறு விளக்கம் கொடுத்தேன். இப்போதும் கூட மேற்குலக நாடுகள் பற்றி எதுவும் சொல்லாமல் மூடி மறைப்பதில் இருந்தே உங்களது சார்புத்தன்மை தெளிவாகி விடுகின்றது.

கேள்வி: கம்யூனிசத்தையும், உங்களுக்குப் பிடித்தமானவர்களின் படுகொலைகளையும் நியாயப்படுத்த நீங்கள் எடுக்கும் சிரமமே கம்யூனிசத்தைப் பரப்புபவர்களிடம் காணப்படும் பிரச்சினையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பதில்: முதலில் முன்முடிவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. விக்கிபீடியா தகவல்களும் ஒரு பக்கச்சார்பானவை தான். நீங்கள் கூட உங்களது பார்வைக்கோணத்தில் அதை எழுதலாம். இங்கே படுகொலைகளை நியாயப் படுத்துவதல்ல என் நோக்கம். எதையும் அறிவுபூர்வமாக ஆராய வேண்டும் என்று சொல்கிறேன். நீங்கள் ஒரு அறிவியலாளர், படித்தவர் என்ற நம்பிக்கையில் உரையாடுகின்றேன். புரட்சி நடக்கும் காலத்தில் கொலைகள் நடக்கும். அது உலக நியதி. மதங்கள் படுகொலை செய்யவில்லையா? ஜனநாயகம் படுகொலை செய்யவில்லையா? அமெரிக்கப் புரட்சியில் நடக்காத படுகொலைகளா? பிரெஞ்சுப்புரட்சியில் நடக்காத படுகொலைகளா? அதை எல்லாம் உதாசீனப் படுத்தி விட்டு "கம்யூனிசப் படுகொலைகளை" மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஏன்? இங்கே பிரச்சினை உங்களிடமும் உள்ளது.

கேள்வி: எல்லாவற்றையும் விமர்சித்த பின்பு தான் கம்யூனிசத்தை விமர்சிக்க முடியுமா?

பதில்: உங்களுக்கு கம்யூனிசம் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும். அது தோன்றுவதற்கு முன்பிருந்த முதலாளித்துவம், லிபரலிசம், தேசியவாதம், போன்ற பிற கொள்கைகளை கூட அறிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது என்ன நியாயம்? உண்மையில், ஐரோப்பாவில், மேற்குறிப்பிட்ட கொள்கைகளின் தோல்வியின் விளைவாகத் தான் சோஷலிசம், கம்யூனிசம் எல்லாம் தோன்றின. 19 ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் லிபரலிசம் என்ற புதிய கொள்கையை பரப்புவது தான் நெப்போலியன் போர்களின் நோக்கமாக இருந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் விளைவு. இல்லாவிட்டால் இன்றைக்கு நீங்கள் யாரோ ஒரு மன்னனுக்கு சலாம் போட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். ஒருநிலப்பிரபுவின் பண்ணையில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள்.

ஆமாம், ஐரோப்பா முழுவதும் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டுவது தான் லிபரலிசம் கொண்டுவந்த புரட்சியின் நோக்கம். அப்போது லிபரலிசம் படுகொலை செய்த மக்கள் எத்தனை மில்லியன்? இதே தான் அமெரிக்காவின் உள்நாட்டு போரிலும் நடந்தது. அதுநிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானமுதலாளித்துவத்தின் போர். முதலாம் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் காரணமாக அமைந்த கொள்கை எது? தேசியவாதம். அதற்கு முண்டு கொடுத்த முதலாளித்துவம். அந்த இரண்டு போர்களிலும் எத்தனை மில்லியன் மக்கள் கொல்லப் பட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.

கேள்வி: சரி. வேறு ஏதாவது நம்பத் தகுந்த ஆதாரம் காட்டுங்கள்? புரட்சி அல்லது போரில் கொலைகள் நடக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பல மில்லியன் பேரைக் கொன்றதை வெறுமனே "சண்டை என்று வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்" என்றளவில் எடுத்துக் கொள்ள முடியாது. மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் கொல்வதற்குத் தான் புரட்சி என்றால் அப்படியானொரு புரட்சி தேவையில்லை.

பதில்: உங்களுக்கு ஏற்கனவே பல தடவைகள் கூறி விட்டேன், தயவுசெய்து முற்சாய்வுகளுடன் உரையாடாதீர்கள். //பல மில்லியன் பேரைக் கொன்றதை// என்று நீங்களாகவே விசாரிக்காமல் தீர்ப்பு சொல்லி விடுகிறீர்கள். இந்த தவறு உங்களை அறியாமல் நடந்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். "முதலாம் உலகப்போரில் பத்து மில்லியன் மக்கள் இறந்தார்கள்" என்று சொல்வதற்கும், "பத்து மில்லியன் மக்களை கொன்றார்கள்" என்று சொல்வதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதல்லவா? பின்னையகூற்று யாரோ ஒருவரை குற்றம்சாட்டுகின்றது. யார் கொன்றார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. //"சண்டை என்று வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்" // என்று பாமரத்தனமாக பேச முடியாது. நீங்கள் ஒரு பாமரன் என்று நானும் நம்பவில்லை.

புரட்சி என்பது மாலைநேர தேநீர் விருந்தல்ல. அதுவும் ஒரு யுத்தம் தான். எவ்வாறு தேசங்களுக்கு இடையில் நடந்த யுத்தங்களை பார்க்கிறீர்களோ, அதே மாதிரித் தான் இதையும் பார்க்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நடந்த இனப்போரில் எத்தனை மில்லியன் கொல்லப் பட்டனர்? அதற்காக ஈழப்போரே வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?

நாடுகளுக்கு இடையில், இனங்களுக்கு இடையில் போர்கள் நடப்பதைப் போன்று, வர்க்கங்களுக்கு இடையிலும் போர்கள் நடப்பதுண்டு. அதை உலகம் தடுக்க முடியாது. ரோமர்கள் காலத்தில் நடந்த ஸ்பார்ட்டகாஸ் தலைமையிலான அடிமைகளின் எழுச்சி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்போது நடந்த போரில் எத்தனை மில்லியன் பேர் கொல்லப் பட்டார்கள்? அதற்காக அடிமைகளின் புரட்சி நடந்திருக்க கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? ரஷ்யா, சீனாவில் நடந்த புரட்சிகள் யாவும் வர்க்கப் போர்கள். அதாவது அடிமைகளின் எழுச்சி. அதை நீங்களோ, நானோ தடுக்க முடியாது. அது இயற்கை.

No comments: