Showing posts with label சோவியத் ஒன்றியம். Show all posts
Showing posts with label சோவியத் ஒன்றியம். Show all posts

Wednesday, September 11, 2019

செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி

செனோத்டெல் (Zhenotdel): சோவிய‌த் யூனிய‌னில் இய‌ங்கிய‌ ஒரு க‌ம்யூனிஸ்ட் - பெண்ணிய‌க் க‌ட்சி. அது பற்றிய சில குறிப்புகள்.


1917 அக்டோப‌ர் சோஷலிச‌ப் புர‌ட்சியின் நோக்க‌ங்க‌ளில் ஒன்றாக‌ பெண்க‌ளின் விடுத‌லையும் அட‌ங்கி இருந்த‌து. சார் ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில் பெரும்பால‌ன‌ பெண்க‌ள் எழுத்த‌றிவ‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மேல் த‌ட்டு வ‌ர்க்க‌ப் பெண்க‌ள் ம‌ட்டுமே க‌ல்விய‌றிவு பெற்றிருந்த‌ன‌ர். ஆக‌வே பெண்க‌ளை வீட்டு வேலைக‌ளில் இருந்து விடுத‌லையாக்கி, க‌ல்வி க‌ற்க‌ வைத்து, வேலைக்கும் அனுப்புவ‌தே புர‌ட்சியை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருந்த‌து.

இத‌ற்காக‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைமைப் பொறுப்புக‌ளில் இருந்த‌ (லெனினின் ம‌னைவி) ந‌டாஷா குருப்ஸ்க‌யா, இனேசா ஆர்ம‌ன்ட், ம‌ற்றும் அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை ஆகியோர் இணைந்து பெண்க‌ளுக்கான‌ க‌ட்சியை உருவாக்கினார்க‌ள். செனோத்டெல் என்ற‌ அந்த‌ இய‌க்க‌ம் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் அமைப்பு வ‌டிவ‌ம் கொண்டிருந்த‌து. ஆனால், கட்சிக்கு வெளியே சுத‌ந்திர‌மாக‌ இய‌ங்கிய‌து. சுருக்க‌மாக‌, அது முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளுக்காக‌ பெண்க‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்சி.

சோவிய‌த் யூனிய‌ன் முழுவ‌வதும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌. அது ம‌ட்டும‌ல்லாது அர‌ச‌ செல‌வில் பிள்ளை ப‌ராம‌ரிப்பு, க‌ர்ப்பிணிப் பெண் தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த்துட‌ன் கூடிய‌ விடுமுறை போன்ற‌ ப‌ல‌ உரிமைக‌ளையும் பெற்றுக் கொடுத்த‌து.

அன்றைய‌ மேற்கைரோப்பாவில் வாழ்ந்த‌ பெண்க‌ள் இதையெல்லாம் நினைத்துக் கூட‌ பார்க்க‌ முடியாத நிலைமை இருந்த‌து. அந்த‌ வ‌கையில் பெண்ணிய‌ வ‌ர‌லாற்றில் செனோத்டெல் இய‌க்க‌ம் வ‌கித்த‌ ப‌ங்க‌ளிப்பு (க‌ம்யூனிச‌) எதிரிக‌ளாலும் இன்று வ‌ரை போற்ற‌ப் ப‌டுகின்ற‌து.

ப‌தினொரு வ‌ருட‌ங்க‌ளாக‌ இய‌ங்கிய‌ செனோத்டெல் அமைப்பு, 1930 ம் ஆண்டு ஸ்டாலினால் க‌லைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌ன் நோக்க‌ங்க‌ள் பூர்த்திய‌டைந்து விட்ட‌ன‌ என‌ அப்போது அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து. ஆனால் ஏற்க‌ன‌வே அமைப்பின் உள்ளே விரிச‌ல்க‌ள் ஆர‌ம்பித்து விட்ட‌ன‌.

அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை முன்மொழிந்த‌ குடும்ப‌ங்க‌ளை ம‌றுசீரமைக்கும் கொள்கைக்கு பெரும‌ள‌வு ஆத‌ர‌வு கிடைக்க‌வில்லை. பெரும்பாலான‌ பெண்க‌ள் க‌ல்வி க‌ற்ப‌தையும், வேலைக்கு போவ‌தையும் த‌ம‌து உரிமைக‌ளாக‌ க‌ருதினாலும் பார‌ம்ப‌ரிய‌ குடும்ப‌க் க‌ட‌மைக‌ளை மாற்றிக் கொள்ள‌ ம‌றுத்த‌னர்.

அதாவ‌து புரட்சியின் விளைவாக அளவுகடந்த சுத‌ந்திர‌ம் கிடைத்தாலும் பெண்களால் சில‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை ஒரே நாளில் மாற்ற‌ முடியாமல் இருந்தது. உதாரணத்திற்கு, சமைப்பது, பிள்ளை பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளை பல பெண்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை. இத‌ற்கு க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌. மேலும் மதப் ப‌ழ‌மைவாத‌த்தில் ஊறிய‌ ம‌த்திய‌ ஆசியப் பகுதிகளில் ப‌ல‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. குறிப்பாக‌, பொது இட‌ங்க‌ளில் பூர்காவை க‌ழ‌ற்றி வீசிய‌ முஸ்லிம் பெண்க‌ளுக்கு ப‌ழ‌மைவாதிக‌ளால் உயிர‌ச்சுறுத்த‌ல் விடுக்க‌ப் ப‌ட்ட‌து. சில‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

செனோத்டெல் பெண்ணிய‌த்தை ம‌ட்டும‌ல்லாது, க‌ம்யூனிச‌த்தையும் உய‌ர்த்திப் பிடித்த‌து. பெண்க‌ளே மாற்ற‌த்திற்கான‌ உந்து ச‌க்தி என்ற‌து. பெண்க‌ளின் விடுத‌லை மூல‌மே உண்மையான‌ சோஷ‌லிச‌ ச‌முதாய‌த்தை க‌ட்டியெழுப்ப‌ முடியும் என‌ ந‌ம்பிய‌து. சோவிய‌த் யூனிய‌ன் மீது ஆயிர‌ம் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இருந்தாலும் அது அனைத்துல‌க‌ பெண்க‌ளின் விடுத‌லைக்கு முன்னோடியாக‌ இருந்த‌து என்ற‌ உண்மையை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.

Saturday, October 08, 2016

70 ஆண்டு கால சோவியத் யூனியனின் தோல்விக்கு காரணம் என்ன? - ஒரு விவாதம்


கனடாவில் வாழும் பிரபலமான அரசியல் ஆர்வலரும், இலக்கிய விமர்சகருமான நடராஜா முரளிதரனுக்கும் எனக்கும் இடையில் பேஸ்புக்கில் நடந்த விவாதத்தை இங்கே தொகுத்துத் தருகின்றேன். பொதுவுடைமை மற்றும் சோஷலிச நாடுகள் குறித்து மேற்குலக ஊடகங்களினால் செய்யப்படும் பரப்புரைகளை உண்மையென்று நம்புவோருக்கு பதிலடி கொடுக்க இது உதவும். பலரது சந்தேகங்களை தீர்க்க உதவும்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடராஜா முரளிதரன், முன்னொருகாலத்தில் சுவிட்சர்லாந்திற்கான விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் எழுந்த முரண்பாடுகளால் விலகி, கனடாவில் அகதித் தஞ்சம் கோரி, தற்போதும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார். திரு.முரளிதரன் இன்றைக்கும் ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் அதிக அக்கறை கொண்டவராகவும், சமகால இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராகவும் காணப் படுகின்றார்.

கேள்வி: (Nadarajah Muralitharan) இதை எழுதியுள்ள "கலை" முன்னாள் சோவியத் யூனியனுக்குச் சென்று அங்குள்ள புத்திஜீவிகள், தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் பொதுவுடமைக்கட்சி அங்கத்தவர்கள் என்று சிலரையாவது சந்தித்துப் பேசி இது குறித்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை குறிப்பிடக் கூடியதாக இருந்திருக்கும். இதற்கான வசதி அவருக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் அப்படி எழுதுவதில்லை. அவர் சில புத்தகங்களையே நம்பி வாதங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்த அரசுகள் தங்களுக்கான தத்துவத்தை ஊட்ட முனைந்திருக்கிறார்கள் என்பதே எனது தரப்பு. அது உலகம் எங்கணும் நடந்திருக்கிறது. ஆயினும் வீழ்ச்சியடைந்த... அல்லது தங்களது பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா? என்பதையே நான் உரையாட விரும்புகின்றேன்.

பதில்: நான் அப்படி யாரையும் சந்திக்கவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? தொண்ணூறுகளுக்கு பிறகு, ஏராளமான ரஷ்யர்கள் நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அவர்களில் சிலர் எனது நண்பர்களாக இருந்தனர். முன்பு சோவியத் யூனியனில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல, நானே வெள்ளை ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள நண்பர்களுடன் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களை சந்தித்து பேசி இருக்கிறேன்.

//அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது// எதையும் ஆராயாமல் எழுந்தமானமாக பேசுவது தவறு. இது பற்றி நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனது வலைப்பூவில் ஏராளமான தகவல்கள் உள்ளன. பெரும்பான்மை மக்கள் நிராகரித்ததாக கூறுவது ஒரு மோசடி. ஏற்கனவே மேற்குலக ஊடுருவல்கள் இருந்தன. கோர்பசேவ் ஆட்சிக்கு வந்ததும் சமாதானம் என்ற பெயரில் வெளிப்படையாக நடந்து கொண்டார். அது ஊடுருவலுக்கு மேலும் வழிவகுத்தது. எல்சின் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டார். அங்கு நடந்ததும் ஒரு சதிப்புரட்சி. முதலாளித்துவ ஆதரவாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். மக்கள் அங்கீகாரத்துடன் அது நடக்கவில்லை. அப்படியானால் அக்டோபர் கிளர்ச்சி ஏன் நடந்தது? (பார்க்க: 3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி)

கேள்வி: ஏறத்தாள 70 வருடங்கள் நன்னெறிப் பாடம் புகட்டப்பட்ட ரஷியாவில் இன்று நடைபெறுகின்ற உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்தீர்களானால் விளையாடுகின்ற கறுப்பின வீரர்களைப் பார்த்து நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும் , கிண்டலடிப்பதையும் காணலாம். இது மற்றைய முதலாளித்துவ நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வெட்கக் கேடாக இருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் மதவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.

பதில்: //நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும்// சோவியத் யூனியன் இருந்த காலத்தில் நடந்திருந்தால் அவர்கள் ஜெயிலுக்கு போயிருப்பார்கள். நீங்கள் அதை மனித உரிமை மீறல் என்று கண்டித்து இருப்பீர்கள். முதலாளித்துவம் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுக்கிறது. நிறவெறிக்கும் சுதந்திரம். இப்போ உங்களுக்கு திருப்தி தானே? அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம்... நிறவெறிக்கும் சுதந்திரம்... இதைத் தானே எதிர்பார்த்தீர்கள்?

//பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.// இது முதலாளித்துவவாதிகளின் செயல். நீங்க என்ன சேம் சைட் கோல் போடுறீங்க? போலந்தும் அண்மையில் கத்தோலிக்க சபையுடன் சேர்ந்து கருக்கலைப்பு தடைச் சட்டம் கொண்டு வந்தது. அயர்லாந்தில் எப்போதுமே இருந்து வருகின்றது. என்ன ஸார் குழம்பிப் போனீங்களா?

கேள்வி: முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம். இன்று நடைபெறுகின்ற தேர்தல் அமைப்பிற்கு ஊடாகக் கொம்யூனிஸ்ட் கட்சியினால் ஏன் அங்கு தேர்தலில் வெல்ல முடியாமல் உள்ளது ? அங்குள்ள மக்கள் அங்கு நடைமுறையில் இருந்த பொதுவுடமை ஆட்சியாளர்களை வெறுத்தார்கள். நிராகரித்தார்கள். அது கொர்பச்சோவின் வழியாக நிகழ்த்தப்பட்டது. சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பதில்: நீங்கள் தான் முழுப் பூசணிக்காயை மறைக்கிறீர்கள். எதையும் ஆராயாமல் பேசுகின்றீர்கள். முதலாளித்துவவாதிகள் ஆளும் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். பண பலத்தால் அடக்கப் பார்ப்பார்கள். அவர்கள் புட்டின் மாதிரி ஒருவரை பதவியில் அமர்த்துவார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு விட மாட்டார்கள். வெளிப்படையாக நடக்கும் தேர்தல்கள் மட்டுமே உங்களது கண்களுக்கு தெரிகின்றன. அதற்குப் பின்னால் திரைமறைவில் நடக்கும் சங்கதிகள் வெளியே வருவதில்லை. முதலாளிகளும் அரசும் சேர்ந்து நடத்தும் ஆட்சி இது.

//சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.// சதிப்புரட்சியில் ஈடுபட்ட கும்பல்கள் ஒரு சில இடங்களில் சிலைகளை உடைத்தன. அதை சதிப்புரட்சி ஆதரவாளர்கள் தான் கொண்டாடினார்கள். ஆனால், பெரும்பாலான சிலைகள் இன்னமும் உள்ளன. நம்பாவிட்டால் நீங்களாகவே நேரில் சென்று பாருங்கள். உக்ரைனில் இருந்த லெனின் சிலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரின் போது உடைக்கப் பட்டன. அது செய்தியிலும் வந்தது.

கேள்வி: வரலாற்றுப் பெருமை வாய்ந்த சோசலிசப் பாரம்பரியத்தில் வந்த ரஷியாவில்..... சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ? இது குறித்த ஆச்சரியத்தின் வெளிப்பாடே எனது குறிப்பு!

பதில்: //சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ?// எதற்காக ருவாண்டாவிலும், இலங்கையிலும் இனவாதம் கூடுதலாக இருக்கிறது? பொருளாதாரப் பிரச்சினைகள் வரும் பொழுது அவை கூடவே வரும். மேற்குலக நாடுகளில் அவை வெளித்தெரியாமல் இருப்பதற்கு காரணம் அங்குள்ள செல்வந்த நிலைமை. வேலைவாய்ப்புகள். மேற்குலகிலும் எந்தவொரு நாட்டிலாவது பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட்டல், வேலைவாய்ப்புகள் குறைந்தால், நிறவாதமும், இனவாதமும் அதிகரிப்பதை காணலாம். உதரணத்திற்கு, கிரீஸ். அமெரிக்காவில் பொலிசாரால் கறுப்பின மக்கள் அடிக்கடி சுட்டுக் கொல்லப் படுகின்றனர். அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் வெளிப்படையாகவே இனவாதம், நிறவாதம் பேசுகின்றார். அதை எல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் மறைக்கும் காரணம் என்னவோ?

கேள்வி: சோவியத் யூனியனிலும் மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் பொதுவுடமை அரசுகள் தோல்வியுற்றதற்கு அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடி முக்கிய அம்சமாகும். இந்த நாடுகளில் மைய்யப்படுத்தப்பட்ட அரசிடமே அதிகாரங்கள் குவிந்திருந்தது. சோவியத்தில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நிலமைகள் அமையவில்லை. இந்த மைய்ய அரசுகள் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுப்பதில் பெருங்கவனம் செலுத்தாமல் தொழிற்சாலைகளைக் கட்டமைக்கும் திட்டங்களையே அமுல்படுத்தின. மேற்கத்தேய அரசுகளுடனான பனிப்போரினால் மொத்த தேசிய வருவாயின் பெரும்பகுதி ஆயுத உற்பத்திக்கும் அணு ஆராய்ச்சிக்கும் விண்வெளி ஆய்வுக்கும் போய் சேர்ந்தது. இது மிகப்பெரிய பிழையான அணுகுமுறையாகும். இந்தத் தவறினால் சோவியத் யூனியன் மிகப்பெரிய உணவுத்தட்டுப்பாடுகளைச் சந்திக்கலாயிற்று. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பணவீக்கம் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது. வறுமை உருவாகியது. உணவுப் பொருட்களை முதலாளித்துவ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்களுக்கு பொதுவுடமை ஆட்சி முறைமையில் அதிருப்தி ஏற்பட்டு ஆட்சியை மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

பதில்: பனிப்போர் காரணமாக ஏற்பட்ட ஆயுதப் போட்டி பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது உண்மை தான். ஆப்கானிஸ்தான் போரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அது சோவியத் யூனியனையும், பிற சோஷலிச நாடுகளையும் மட்டும் பாதித்தது என்று சொல்வது பொய். மேற்குலக நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. எண்பதுகளில் மேற்குலகில் வேலையில்லாப் பிரச்சினை அதிகமாக இருந்தது. உண்மையில், அரசியல் சூழ்ச்சிகளை விரைவு படுத்தி சோஷலிச நாடுகளை உடைத்தும் அதற்காகத் தான். ஐரோப்பிய ஒன்றியம் முன்னாள் சோஷலிச நாடுகளை காலனிகளாக சேர்த்துக் கொண்டது. நேட்டோவும் அவர்களை சேர்த்துக் கொண்டது. அதனால் அமெரிக்க ஆயுதங்களுக்கு புதிய சந்தை கிடைத்தது. அதனால் தான், மேற்குலகம் தனது பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிந்தது. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அதனால் உங்களுக்கும் தெரியாது.

கேள்வி: முதலாளித்துவ நாடுகளை ஒப்பிட்டு உதாரணம் காட்டாதீர்கள். அது பிழையானது. மோசடியானது. உதவாக்கரையானது என்று கூறி நிராகரித்துக் கொண்டு மனித சமூகத்தை மீட்கப் புறப்பட்ட நாடுகளின் அணுகுமுறையும் அது போன்றதே என்று பல இடங்களில் ஒப்புநோக்கி எழுதிக் கொண்டிருப்பதை என்னால் உள்வாங்க முடியாதுள்ளது.

பதில்: நீங்கள் குறிப்பிடும் "சோஷலிச" நாடுகள் கூட உண்மையில் முதலாளித்துவ நாடுகள் தான். இனவாதம் வளர்வதற்கு 25 வருட கால முதலாளித்துவம் போதாதா? இது ஒப்பீடு அல்ல. பொருளாதாரம். ஒரு நாட்டில் முதலாளித்துவ பொருளாதாரம் இருந்தால், அங்கு இனவாதமும், நிறவாதமும் தலைவிரித்தாடும். அது எதிர்பார்க்க வேண்டிய விடயம். அமெரிக்காவில் நிறவாதம் இன்னமும் மறையாமல் இருக்கிறது. ஏனைய நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகளில் முன்னொரு காலத்தில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அந்தக் காலத்தில் நிறவாதம், இனவாதம் இருக்கவில்லை. ஆனால், கடந்த தசாப்த காலமாக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகின்றது. வறுமை அதிகரிக்கிறது. கூடவே இனவாதம், நிறவாதமும் அதிகரிக்கிறது. முன்னாள் சோஷலிச நாடுகளும் கடந்த 25 வருடங்களாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றன. அங்கு வறுமை, வேலையில்லாப் பிரச்சினை மேற்குலகை விட அதிகமாக உள்ளது. அதனால் நிறவாதம், இனவாதம் வளரும் தானே? இதற்காக நீங்கள் முதலாளித்துவத்தை அல்லவா குறை கூற வேண்டும்?

கேள்வி: அப்படியாயின் 25 வருடங்களுக்கு முன் வேறு நிலை இருந்தது என்கிறீர்களா ?

பதில்: ஆமாம். நிச்ச‌ய‌மாக‌. பொருளாத‌ர‌ங்க‌ளை ஒப்பிடுங்க‌ள். நாடுக‌ளை அல்ல‌.

கேள்வி: சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் வெறுமனே பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல காரணம்! அந்த நாடுகளில் நிகழ்த்தப்பட்ட கடுமையான சர்வாதிகார ஆட்சி அமைப்பு முறைமைகளினால் பொதுமக்களுக்கு நிறைய அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தன. ரூமேனியாவில் சசெஸ்குவும் மனைவியும் அரசனும் அரசியுமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஸ்ராலினின் ஆட்சிக் காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என எண்ணிறைந்தோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சைபீரியச் சிறை நிறைந்து வழிந்தது. ஸ்ராலினின் ஆட்சி கொடூரமான சர்வாதிகார ஆட்சியாக அமைந்தது. வட கொரியாவில் பரம்பரை மன்னர் ஆட்சி தொடருகிறது.

பதில்: இவையெல்லாம் வழமையான எதிர்ப் பிரச்சாரங்கள். பொதுவாக எல்லா நாடுகளிலும் மக்கள் தமது பொருளாதார நலன்களை மட்டுமே சிந்திப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் பற்றி அதிக அக்கறை கொள்வதில்லை. அமெரிக்காவில் ஒபாமா ஆண்டாலும், புஷ் ஆண்டாலும் ஒன்று தான். அவர்கள் தமக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத் தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மேலும் அந்த நாட்டில் இரு கட்சி சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் போட்டி போடும். ஏனைய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது.

முன்னாள் சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை, சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பது ஒரு பொய்ப் பிரச்சாரம். ஜனநாயகம் என்பது நீங்கள் நினைப்பது போல பொதுத் தேர்தல்கள், பல கட்சி ஆட்சி முறை மட்டுமல்ல. அது ஒரு வகை ஜனநாயகம். முதலாளித்துவம், பாராளுமன்ற முறைமை நிலவிய ஆரம்ப காலங்களில் மேற்குறிப்பிட்ட ஜனநாயகம் இருக்கவில்லை. கடுமையான சர்வாதிகார ஆட்சி நடந்தது. ஜனநாயகம் வந்த போதும், பணக்காரர்களுக்கு மட்டுமே வாக்குரிமை கொடுக்கப் பட்டது.

சோஷலிச நாடுகள் இன்னொரு வகையான ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன. ஒரு தேசத்திற்குள், தாம் விரும்பியவாறு ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. கிராமிய மட்டத்தில், மாவட்டங்களில், மாகாணங்களில் நடக்கும் தேர்தல்களில் தனி நபர்கள் போட்டியிடுவார்கள். கட்சி சார்பாக மட்டுமல்லாது, சுயேச்சையாகவும் போட்டியிடலாம். ஆனால், பணபலம் காட்டி வெல்ல முடியாது.(அமெரிக்காவில் நிலைமை வேறு. மில்லியன் கணக்கான டாலர்கள் செலவளித்தால் தான் ஜெயிக்க முடியும்.) 

ஒரு சோஷலிச நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்ந்தெடுக்கப் படுவார். நீங்கள் குறிப்பிட்ட ஸ்டாலின், ஸௌசெஸ்கு எல்லோரும் ஜனநாயக வழியில் பதவியைப் பிடித்தவர்கள் தான். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை கூடும் பாராளுமன்றம் அவர்களது பதவிக் காலத்தை நீடிப்பதுண்டு. சிலநேரம், பிரித்தானியா போன்ற பாராளுமன்ற - மன்னராட்சி நாடுகளில், மகாராணி அல்லது மன்னர் இருப்பதைப் போன்ற சம்பிரதாயத் தலைவராகவும் இருப்பார். பிரித்தானியா மன்னருக்கு அதிகாரம் இல்லையென்று ஒரு சாட்டு சொல்லாதீர்கள். மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. அவரது ஒப்புதல் இன்றி எந்த சட்டமும் நிறைவேற்ற முடியாது. மேலும் அந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தில் மன்னர் குடும்பமும் ஒன்று.

கேள்வி: சோசலிச ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் அங்கு சமத்துவத்தை ஏற்படுத்துவதில் நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்தன. தனி மனித விருப்புகள் நசுக்கப்பட்டதாக மக்கள் உணர்ந்தனர். மக்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது உழைப்புக்கும் திறமைக்கும் ஆற்றலுக்கும் அமைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் இயல்பாக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். தேவையின் அடியில் வருமானத்தைக் குறைத்து திணிக்கப்படுகிற சமத்துவம் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அடுத்தவர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதை மக்கள் விரும்பவில்லை. தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தாங்களே வாழ விரும்பினர். பொது உடமை...கூட்டுறவு வாழ்க்கை.... தேவைக்கு ஏற்ற சம்பளம் ஆகியவற்றை அடிப்படைகளாக கொண்டு உருவாக்கப்படும் சமத்துவத்தை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்திர மனிதர்களாக வாழ அந்த மக்கள் விரும்பினார்கள். இதுதான் மனிதர்களின் அடிப்படை இயல்பு! அங்கு நிகழ்ந்த பொதுவுடமை ஆட்சி முறைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதுவும் அங்கு நடைபெற்ற பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

பதில்: இத‌ற்கும் ஏற்க‌ன‌வே ப‌தில் அளித்து விட்டேன். நீங்க‌ள் குறிப்பிடும் அந்த‌ "ம‌க்க‌ள்" யார்? சுய‌ந‌ல‌வாதிக‌ள், ப‌ண‌த்தாசை பிடித்த‌வ‌ர்கள், த‌ன்ன‌ல‌ம் க‌ருதுவோர், செல்வ‌ந்த‌ர்க‌ள், முத‌லாளிக‌ள்.... இவ‌ர்க‌ளைப் பற்றிய‌து தான் உங்க‌ள‌து க‌வ‌லை முழுவ‌தும். இதைத் தான் வ‌ர்க்க‌ப் பாச‌ம் என்று அழைப்பார்க‌ள். அதாவ‌து, மேட்டுக்குடி, ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் மீது உங்க‌ளுக்கு இய‌ல்பாக‌வே அனுதாப‌ம் எழுகிற‌து. அவ‌ர்க‌ள‌து ந‌ல‌ன்க‌ளை பற்றி ம‌ட்டுமே க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள்.

ஏற்க‌ன‌வே சொன்னேன். ம‌க்க‌ள் ம‌க்க‌ள் தான். சோவிய‌த் ம‌க்க‌ளும், ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் கொள்கையை நம்புகிறார்க‌ள். அதில் ஒரு பிரிவின‌ரை ப‌ற்றி தான் நீங்க‌ள் சொன்ன‌து. ஆனால் பெரும்பான்மை உழைக்கும் ம‌க்க‌ள் ப‌ற்றி நீங்க‌ள் அக்க‌றைப் ப‌ட‌வில்லை. ஏற்ற‌த்தாழ்வான‌ முத‌லாளித்துவ‌ ச‌முதாய‌த்தில் அவ‌ர்க‌ள் வ‌றுமையில் வாழ்கிறார்க‌ள். அதைப் ப‌ற்றி உங்க‌ளுக்கென்ன‌ க‌வ‌லை? ஒரு இட‌த்தில் மேடு இருந்தால் அதுக்கு அருகில் ப‌ள்ள‌ம் இருக்கும். அதே மாதிரி ப‌ண‌க்கார‌ன் மென்மேலும் ப‌ண‌க்கார‌ன் ஆவான். ஏழை மென்மேலும் ஏழை ஆவான். ஐயோ பாவ‌ம் பண‌க்காரன் க‌ஷ்ட‌ப் ப‌டுகிறானே என்று நீங்க‌ள் ப‌ரிதாப‌ப் ப‌டுகிறீர்க‌ள்.

கேள்வி: கலை.... அப்படி நான் பணக்கார வர்க்கத்துக்காகப் பரிதாபப்படுகிறேன் என்ற மாயையைத் தயவுசெய்து ஏற்படுத்த வேண்டாம். நான் அங்கு நடைபெற்ற உண்மைகளையே பேச விரும்புகிறேன். வரலாற்றைத் திரிபுபடுத்திப் பேசுவதால் இங்கு ஏதும் நிகழப் போவதில்லை.

பதில்: உங்க‌ள‌து க‌வ‌லை முழுவ‌தும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் ப‌ற்றிய‌து தான். அது மாயை அல்ல‌, உண்மை. க‌ன‌டா மாதிரியான‌ மேற்க‌த்திய‌ முத‌லாளித்துவ‌ நாடுகளில் த‌னிந‌ப‌ர்வாத‌ த‌த்துவ‌த்தை ஊட்டி வ‌ள‌ர்க்கிறார்க‌ள். அத‌ற்குக் கார‌ண‌ம், அப்போது தான் ப‌ண‌க்கார‌ர்க‌ளிட‌ம் எவ்வாறு செல்வ‌ம் சேர்கிற‌து ஆராய‌ மாட்டீர்க‌ள். அவ‌ர்க‌ள் தீய‌ வ‌ழியில் சேர்த்திருப்பார்க‌ள்... பேராசை பிற‌ப்புரிமை அல்ல‌வா? செல்வ‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்பாத‌ சுய‌ந‌ல‌ம் பெரித‌ல்ல‌வா? நாங்க‌ளும் அப்ப‌டியே இருக்க‌ வேண்டாமா? எல்லோருக்கும் வேலை வாய்ப்பிருந்த‌தால் அது த‌ப்பில்லையா? எல்லோரும் க‌ல்வி க‌ற்ப‌து கூடாது அல்ல‌வா? எல்லோருக்கும் ம‌ருத்துவ‌ வ‌ச‌தி கிடைப்ப‌து அநியாய‌ம் அல்ல‌வா? எல்லோரும் மூன்று வேளையும் சாப்பிடுவ‌து கூடாது அல்ல‌வா? அந்த‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கிய சோவிய‌த் யூனிய‌னும், சோஷ‌லிச‌ நாடுக‌ளும் நாச‌மாக‌ப் போக‌ட்டும். இப்போது இல‌ட்ச‌க் க‌ண‌க்கானோருக்கு வேலை இல்லை, செல‌வுக்கு ப‌ண‌ம் இல்லை, பிள்ளைக‌ளுக்கு ப‌டிப்பு இல்லை, ம‌ருத்துவ‌ வ‌ச‌தி இல்லை, சாப்பாட்டுக்கு வ‌ழியில்லை. இப்போது உங்க‌ளுக்கு ரொம்ப ச‌ந்தோஷ‌மாக‌ இருக்குமே? ஊர் உல‌கில் எவ‌ன் எக்கேடு கெட்டால் என‌க்கென்ன‌ என்று க‌ல்நெஞ்ச‌க்கார‌ர்க‌ளாக‌ வாழ‌ வேண்டும். அது தானே உங்க‌ள் கொள்கை? ந‌ல்ல‌ த‌த்துவ‌ம்!

இன்று நாம் அனுப‌விக்கும் உரிமைக‌ள் சும்மா வ‌ர‌வில்லை. சோவிய‌த் யூனிய‌ன் உருவான பின்ன‌ர் தான், உல‌க‌ம் முழுவ‌தும் நாங்க‌ள் இன்று அனுப‌விக்கும் ச‌லுகைக‌ள் கிடைத்த‌ன‌. சோவிய‌த் சாத‌னைக‌ள்: 
1. இல‌வ‌ச‌க் க‌ல்வி 
2. இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ம் 
3. அனைவ‌ருக்கும், பெண்க‌ளுக்கும் வேலைவாய்ப்பு 
4. இல‌வ‌ச‌ குழந்தை ப‌ராம‌ரிப்பு 
5. (வெளிநாடுக‌ளுக்கும்) இல‌வ‌ச‌ சுற்றுலாப் ப‌ய‌ண‌ம் 
6. வீட்டு வ‌ச‌தி, வாட‌கை மிக‌ மிக‌க் குறைவு, மின்சார‌ம், எரிவாயு செல‌வு மிக‌வும் குறைவு. 
 7. மிக‌க் குறைந்த‌ செல‌வில் பொதுப் போக்குவ‌ர‌த்து சேவை.

சோவிய‌த் யூனிய‌னால் உல‌க‌ம் முழுவ‌தும் கிடைத்த‌ ந‌ன்மைக‌ள்: 
1. எட்டு ம‌ணி நேர‌ வேலை 
2. வ‌ருட‌த்திற்கு ஒரு மாத‌ம் விடுமுறை. 
3. ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை பெண்க‌ளுக்கும்


கேள்வி: சோவியத் யூனியனுக்கு நாம் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை. அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள்தான் வேறு வகையான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஆகவே எங்களைக் குற்றம் சாட்டுவது அடாத்து.உலக வரலாறு நிலப்பிரபுத்துவத்தில் இருந்து இருந்து முதலாளித்துவத்துக்குள் நுழைந்த போது சில சீர்திருத்தங்களும் சில மாற்றங்களும் ஏற்பட்டன. உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் சீர்திருத்தவாதிகளும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் போராடிக் கொண்டிருந்தார்கள். பொதுவுடமைக் கொள்கைகள் உலகில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தின என்பதில் எனக்கு எவ்வித மறுப்பும் கிடையாது. இங்கு உங்களோடு நான் கதைப்பது சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பாவையும் பற்றியே!

பதில்: // சோவிய‌த் யூனிய‌னுக்கு நாம் எந்த‌ அழிவையும் ஏற்ப‌டுத்த‌வில்லை// இங்கே "நாம்" என்ப‌து யார்? முத‌லாளிய‌ வ‌ர்க்க‌த்தை குறிக்கிற‌தா? CIA நிதியில் இய‌ங்கிய‌ Radio Free Europe எப்ப‌டியான‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து தெரியுமா? உங்க‌ளுக்குத் தெரியுமா? மேற்கு ஐரோப்பாவில் அக‌தி த‌ஞ்ச‌ம் கோருவோருக்கு வேலையும், இருப்பிட‌மும் கொடுக்கும் முறை ஏன் எப்போது வ‌ந்த‌து? மேற்கு ஐரோப்பாவுக்கு சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஐரோப்பிய‌ அக‌திக‌ளை க‌வ‌ர்ந்திழுக்க‌ கொண்டு வ‌ந்த‌ திட்ட‌ம் அது. உண்மையில் மேற்கில் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம் தான். இல‌குவாக‌க் கிடைக்கும் கார் போன்ற‌ ஆட‌ம்ப‌ர‌ப் பாவ‌னைப் பொருட்க‌ளும் உண்டு. 

அதிக‌ம் போக‌த் தேவையில்லை. நீங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளைப் பாருங்க‌ள். எத்த‌னை பேர் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் க‌வ‌ர்ச்சியில் ம‌ய‌ங்கி வ‌ருகிறார்க‌ள்? ஐரோப்பா வ‌ந்த‌வுட‌ன் சொந்த‌ வீடு, கார், என்று பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்? அதே நிலைமையில் தான் கிழ‌க்கு ஐரோப்பாவில் இருந்து வ‌ந்த‌ அக‌திக‌ளும் இருந்த‌ன‌ர். 

RFE வானொலியும் "மேற்கு ஐரோப்பாவுக்கு வாருங்க‌ள்... தேனும் பாலும் ஆறாக‌ ஓடுகிறது..." என்று ஆசை காட்டிய‌து. இதை விட‌ BBC, VOA வானொலிகளும் அந்த‌ ம‌க்க‌ளை குறி வைத்து பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌. ந‌ம‌து ம‌க்க‌ளில் எத்த‌னை பேர் அமெரிக்க‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்து விட்டு மேற்குல‌கில் எல்லோரும் ப‌ண‌க்கார‌ வாழ்க்கை வாழ்வ‌தாக‌ நினைக்கிறார்க‌ள் தெரியுமா? அதே தான் இங்கேயும்...

சோவிய‌த் யூனிய‌ன் வீழ்ச்சி அடையும் என்று ம‌க்க‌ள் எதிர்பார்க்க‌வுமில்லை, விரும்ப‌வுமில்லை. மேற்க‌த்திய‌ கைக்கூலிக‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ ஆட்சிக் க‌விழ்ப்புக்கும் ம‌க்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை. போல‌ந்தில் ம‌ட்டும் விதிவில‌க்கு. ஆனால் போலிஷ் ம‌க்க‌ள் க‌த்தோலிக்க‌ அடிப்ப‌டைவாதிக‌ளாக‌வும், தேசிய‌வாதிக‌ளாக‌வும் இருந்த‌ன‌ர். அர‌சிய‌லில்‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ நிறுவ‌ன‌த்தின் த‌லையீட்டை த‌டுக்க‌ முடிய‌வில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் க‌ட்சிக்குள் இருந்த‌ முத‌லாளிய‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள்.

பெரும்பாலான‌ ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்ப‌து தெரியாது. ப‌ல‌ர‌து நினைப்பு என்ன‌வென்றால், சோஷ‌லிச‌ கால‌த்தில் அனுப‌வித்த‌ ச‌லுகைக‌ள் அப்ப‌டியே இருக்கும் என்ப‌து தான். ஆனால் முத‌லாளித்துவ‌ம் நாட்டைக் கைப்ப‌ற்ற‌ இட‌ம் கொடுத்த‌து எவ்வளவு பெரிய‌ த‌வ‌று என்று பிற‌கு தான் தெரிந்த‌து. அர‌பிக் கார‌னின் கூடார‌த்திற்குள் ஒட்ட‌க‌த்திற்கு இட‌ம் கொடுத்த‌ க‌தை தெரியும் தானே?

கேள்வி: நாம் என்பதில் நான் என்பவன் இன்றைக்கும் கனடாவில் எவ்வித அடிப்படை உரிமைகளும் அற்று வாழ்பவன். எப்பவும் என்னைக் கனடிய அரசு நாடு கடத்த முடியும். மற்றும் எவ்வகையான அதிகார அமைப்புகளையும் சார்ந்து இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஒரு சாமானியனாகவே எனது கருத்துகளை இங்கு முன் வைக்கின்றேன். 18 ஆம் நூற்றாண்டில் உரிமைகளுக்காக பிரிட்டனிலும் பிரான்சிலும் நிகழ்ந்த போராட்டங்கள்! பிரிட்டனின் "சாட்டிஸ்ட்" இயக்கம்! Chartism, British working-class movement for parliamentary reform named after the People’s Charter, a bill drafted by the London radical William Lovett in May 1838...

பதில்: நீங்கள் இப்போ தான் சார்ட்டிஸ்ட் இயக்கம் பற்றிப் படிக்கிறீர்கள். உலகம் எங்கேயோ சென்று விட்டது நண்பரே! விஞ்ஞான சோஷலிசம் உருவாகி 150 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் குறிப்பிட்ட சோஷலிச நாடுகள் எல்லாம் அதை நடைமுறைப் படுத்தி ஓய்ந்து விட்டன...

கேள்வி: நல்லது.... உங்களது உலகம் அனைத்தையும் கற்றுக்கொண்ட மேதமைக்காக! வெறும் சோவியத்தில் மட்டும் அனைத்துமே நிகழ்ந்தது என்று நீங்கள் போர்த்த முனையும் போர்வைக்கு அப்பால் பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன என்பதை சுட்டுவதற்காகவும்... ஞாபகப்படுத்துவதற்காகவுமே "சாடிஸ்ட்" பற்றிக் கொணர்ந்தேன்! இவ்வகையான எண்ணிறைந்த போராட்டங்கள் வழியாகத்தான் மனித வரலாறு நகர்ந்திருந்திருக்கின்றது. மற்றும் நான் வரலாற்றைக் கற்றுக்கொண்டிருக்கும் "எளிய மாணவன்" தான்! இதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை.

பதில்: அதைத் தான் நானும் சொல்கிறேன்: //பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன // ஏற்கனவே உலகில் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி பிரான்ஸ் நாட்டில் தோன்றியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை நீங்கள் வாசித்தும் இருக்கிறீர்கள். பொதுவுடைமை எதிர்ப்பாளர்கள் தான் எடுத்ததற்கு எல்லாம் ரஷ்யா... ரஷ்யா... என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் விளங்கப் படுத்தி இருக்கிறேன். (அதையும் வாசித்து இருக்கிறீர்கள்.) நீங்கள் இங்கு குறிப்பிட்ட சாட்டிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, உத்தோப்பியா சிந்தனையும் 18 ம் நூற்றாண்டில் இருந்தது. உலகில் ஏற்றத் தாழ்வை ஒழிப்பதற்கும் அனைவருக்கும் செல்வம் பகிர்ந்தளிக்கப் படுவதற்கும், 19 ம் நூற்றாண்டில் விஞ்ஞான ரீதியான சோஷலிச கோட்பாடுகள் உருவாக்கப் பட்டன. அதை நீங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பணக்காரருக்கு ஆதரவாகப் பேசுவது ஒரு மாயை என்றீர்கள். அதுவே உங்களது மனச்சாட்சி. அதாவது உங்களால் பணக்காரர்களை நியாயப் படுத்த முடியவில்லை.

கேள்வி: பிரான்ஸ் பற்றி நீங்கள் குறிப்பிட்டது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் எல்லையைத் தாண்டி அதீதமாக எதனையும் ஆகா...ஓகோ...என்று மெச்சுகிற பொழுது அதன் நம்பகத்தன்மை தகர்ந்து விடுகிறது. நடுநிலையோடு வரலாறுகள் அனைத்தையும் ஆராய வேண்டியுள்ளளது. அதன் மூலமே தவறுகளையும், பிழைகளையும் களைய முடியும். "சுயவிமர்சனம்" என்பதன் அர்த்தம் என்ன ? சுயவிமர்சனம் இல்லாமல் வரலாற்றை முன்னோக்கி நகர்த்த முடியுமா ? விஞ்ஞானம் என்கிறீர்கள். அது என்ன ? அணு குறித்த இரசாயனவியலின் ஆரம்பகர்த்தா டோல்ரன். அவர் வகுத்தளித்த அடிப்படைகளில் இருந்துதான் அணு விஞ்ஞானம் முன்னேறியது. ஆனால் இன்று "டோல்ரனின் அணுக் கொள்கை" தவறானவை என நிரூபிக்கப்பட்டு முற்றிலும் புதிய கொள்கைகளும் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறுதான் நாம் பௌதீகவியலில் படித்த "ஒளி நேர் கோட்டில் செல்லும்" என்ற விதியும். இன்று அது அலை வடிவமாகி அதற்கு மேலாக வரையறுக்கப்பட்டுச் செல்கிறது. நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் படித்த "திணிவுக் காப்பு விதி"க்கு நிகழ்ந்ததும் அதுதான். ஐன்ஸ்டைன் திணிவு சக்தியாக மாற்றம் பெறுகிறது என்றார். இவ்வாறுதான் விஞ்ஞானம் முன்னேறிச் செல்கிறது. விஞ்ஞானத்தில் முடிந்த முடிபாக எதுவுமில்லை. அது புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கூடாக பழையவற்றைக் களைந்து புதியவற்றைக் கண்டு அடைகிறது. இது முடிவிலி காலம் வரை நீண்டு செல்லலாம். ஆனால் நாமெல்லோரும் "விஞ்ஞான சோசலிசம்" என்ற பத விளக்கத்துக்கூடாக சமூகத்தைத் தேக்கத்தில் வைத்திருக்க அசையாக் கட்டுமானத்துக்குள் உறைய வைத்திருக்க விரும்புகிறோமா என அச்சப்படுகிறேன்.

பதில்: 19 ம் நூற்றாண்டில் உருவான பாரிஸ் க‌ம்யூன் தான் உல‌கில் முத‌லாவ‌து சோஷ‌லிச‌ப் புர‌ட்சி. அத்ற்கு த‌லைமை தாங்கிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌த‌ர‌ப் ப‌ட்ட‌ கொள்கைக‌ளை பின்ப‌ற்றின‌ர். அனார்க்கிஸ்டுக‌ள், சோஷ‌லிஸ்டுக‌ள் போன்ற‌வ‌ர்க‌ள். பிரெஞ்சு பாட்டாளி வ‌ர்க்க‌ம் ந‌ட‌த்திய‌ புர‌ட்சி என்ப‌து தான் முக்கிய‌ம். மார்க்ஸ் அத‌ன் தோல்வியை ஆய்வு செய்து "பிரான்ஸின் உள்நாட்டுப் போர்" என்ற‌ நூல் எழுதினார். அதில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் உள்ள‌ன‌. அதில் முக்கிய‌மான‌ இர‌ண்டு (சுய‌)விம‌ர்ச‌ன‌ங்க‌ள். 1. தொழிலாள‌ர், விவ‌சாயிக‌ளின் இராணுவ‌ம் உருவாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். 2. த‌ற்போதுள்ள‌ அமைப்பில் முத‌லாளித்துவ‌ ச‌ர்வாதிகார‌த்திற்கு மாற்றாக‌ பாட்டாளி வ‌ர்க்க‌ ச‌ர்வாதிகார‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும்.

விஞ்ஞான‌ம் ப‌ற்றி நீங்க‌ள் கூறிய‌து மிக‌ச் ச‌ரி. அதைத் தான் மார்க்சிய‌மும் சொல்கிற‌து. அத‌னால் தான் அது விஞ்ஞான‌ சோஷ‌லிச‌ம் என்று அழைக்க‌ப் ப‌டுகின்ற‌து. நீங்க‌ள் உதார‌ண‌ம் காட்டிய‌ சார்ட்டிஸ்ட் இய‌க்க‌ம், உத்தோப்பிய‌ன் இய‌க்க‌ம் என்ப‌ன‌வும் சோஷலிச‌ சிந்த‌னை தான். ஆனால், விஞ்ஞான‌பூர்வ‌மான‌வை அல்ல‌. அவை கோட்பாடுக‌ள் ஆனால் விஞ்ஞான‌ம் அல்ல‌. அத‌னால் தான் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் விஞ்ஞான‌ சோஷ‌லிச‌த்திற்கான‌ ஆய்வுக‌ளை செய்த‌ன‌ர். இந்த‌ விப‌ர‌ங்களை எங்கெல்ஸ் எழுதிய‌ "க‌ற்ப‌னாவாத‌ சோஷ‌லிச‌மா? விஞ்ஞான‌ சோஷ‌லிச‌மா?" என்ற‌ நூலில் வாசிக்க‌லாம்.

மார்க்சிய‌ம் என்ப‌து சித்த‌ந்த‌ம் அல்ல‌. அது விஞ்ஞான‌ம். தாராள‌மாக‌ விஞ்ஞான‌ முடிவுக‌ளை திருத்தி எழுத‌லாம். மார்க்சிய‌த்தை விஞ்ஞான‌பூர்வ‌மாக‌ ஆய்வு செய்து குறைக‌ளை திருத்தி எழுதிய‌து தான் லெனினிச‌ம். பிற்கால‌த்தில் மாவோ அதிலும் திருத்த‌ங்க‌ள் செய்தார். ஆக‌வே, நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌. ஆனால், முத‌லாளித்துவ‌ பாதைக்கு திரும்புவ‌து திரிபுவாத‌ம்.

விஞ்ஞானத்தில் முடிந்த முடிவு இல்லை. மார்க்சியமும் அப்படித் தான். அது முதலாளித்துவ காலகட்டத்தில் இருந்து சோஷலிச காலகட்டத்திற்கு மாறுவதற்கான விஞ்ஞானம். ஆனால், கம்யூனிச காலகட்டத்திற்கான விஞ்ஞான ஆய்வுகள் பூரணமடையவில்லை. நீங்கள் விரும்பினால் அதற்கான ஆய்வுகளை செய்யலாம். ஆனால், சோஷலிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்திற்கு திரும்புவதற்குப் பெயர் விஞ்ஞானம் அல்ல. அது முன்னேற்றம் அல்ல, பின்னேற்றம். பிற்போக்குவாதம். இன்றைக்கும் டார்வினின் கூர்ப்பு கோட்பாட்டை பிழையென்று சொல்வோர் இருக்கிறனர். குறிப்பாக, மத அடிப்படைவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளே எல்லாவற்றையும் படைத்தார் என்று சொல்கிறார்கள். அதே மாதிரி, இன்றைய உலகில் யாரும் மன்னராட்சியை கொண்டு வர விரும்ப மாட்டார்கள். அது மாதிரித் தான் இதுவும்.

கேள்வி : பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா ?

(பிற்குறிப்பு: இது மேலே உள்ள கேள்வியில் இருந்து எடுத்த ஒரு பகுதி. மேலதிக விளக்கம் கொடுப்பதற்காக தனியாக எடுத்திருக்கிறேன்.)

பதில்: உலக வரலாற்றுக் காலகட்டத்தில், பாராளுமன்ற ஆட்சியும் இதே மாதிரியான நெருக்கடிகளை சந்தித்து இருந்தது. மன்னராட்சிக்குப் பதிலாக பாராளுமன்ற குடியரசு முறை வந்தது. ஆனால், அதற்காக பல போர்கள் நடந்துள்ளன. பெரும்பான்மை மக்களும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை.

கவனிக்கவும்: அன்றைய பாராளுமன்ற ஆட்சி ஒரு சர்வாதிகாரம், ஜனநாயகம் இருக்கவில்லை, தேர்தல்கள் நடக்கவில்லை. இருப்பினும், அது நிலைத்து நிற்பதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. சுற்றியுள்ள மன்னராட்சி நாடுகளின் சதிகளை முறியடிக்க வேண்டியிருந்தது.

பிரித்தானியாவில், 1649 ம் ஆண்டு மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பாராளுமன்ற ஆட்சிமுறை வந்தது. அது வெறும் பத்து வருடங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குப் பிறகு, பெரும்பான்மை ஆங்கிலேய மக்கள் பாராளுமன்ற ஆட்சியை நிராகரித்து, மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வந்தார்கள்.

நெதர்லாந்தில், 1795 ம் ஆண்டு, மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பதாவியாக் குடியரசு உருவானது. அதுவும் பத்தாண்டுகள் மட்டுமே நீடித்தது. பதவியிறக்கப் பட்ட நெதர்லாந்து இளவரசன், இங்கிலாந்து மன்னரின் உறவினன். அதனால், இங்கிலாந்து பல வழிகளிலும் டச்சு பதாவியாக் குடியரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன் விளைவுகளில் ஒன்று தான், டச்சுக்காரர் வசமிருந்த இலங்கைத் தீவு ஆங்கிலேயக் காலனியானது.

இறுதியில், நெதர்லாந்து மக்களில் ஒரு பகுதியினரும் பதாவியா குடியரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். பிரதமரும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், கலகக் கும்பலால் அடித்துக் கொல்லப் பட்டனர். பாராளுமன்றக் குடியரசு பெரும்பான்மை டச்சு மக்களால் நிராகரிக்கப் பட்ட பின்னர், அங்கு மீண்டும் மன்னராட்சி அமைக்கப் பட்டது.

நிலப்பிரபுத்துவத்திற்கு 1000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. முதலாளித்துவத்திற்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. அவற்றுடன் ஒப்பிடும் போது சோஷலிசத்தின் 70 வருட வரலாறு ஒரு பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை
கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை

Saturday, October 24, 2015

உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்


சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது. 

சோவியத் மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகளைப் பற்றிக் கேள்விப்படும் தமது மக்கள், புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று மேற்குலக அரசுகள் அஞ்சின. அதனால் தான், எதிர்காலப் புரட்சியை தடுக்கும் நோக்கில், தாமும் அதே மாதிரியான வசதிகளை தமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர். மனித சமுதாயம் முழுவதற்கும் சோவியத் யூனியன் வழங்கிய நன்கொடைகளின் விபரம்: 

 1. உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது. 

 2. வேலை செய்யும் அனைவருக்கும், வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத விடுமுறை வழங்கப் பட்டமை இன்னொரு சாதனை ஆகும். சில தொழிற்துறைகளில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட விடுமுறை கிடைத்தது. அது மட்டுமல்ல, விடுமுறைக் காலம் முழுவதும் முழுச் சம்பளம் வழங்கப் பட்டது. இதுவும் உலக வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.

3. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் ஏதாவதொரு தொழிற்சங்கம் பொறுப்பாக இருக்கும். அதில் அங்கத்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிற்சங்கப் பாதுகாப்பு கிடைத்து வந்தது. உதாரணத்திற்கு, தொழிற்சங்கத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நிறுவனமும் தமது ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது. 

4. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த ஒவ்வொரு பட்டதாரிக்கும், வேலை தேடிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதிப் படுத்தப் பட்டது. 

5. பாடசாலைக் கல்வியில் திறமைச் சித்தி பெற்ற அனைவரும், தாம் விரும்பிய கல்லூரிக்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ செல்ல முடிந்தது. தரப்படுத்தல் கிடையாது. கல்விக் கட்டணமும் அறவிடப் பட மாட்டாது. 

6. பாலர் பாடசாலை தொடங்கி, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையில், முற்றிலும் இலவசமாக வழங்கப் பட்டது. உலகிலேயே இலவசக் கல்வியை அறிமுகப் படுத்திய முதல் நாடு சோவியத் யூனியன் தான். 

7. உலகிலேயே முதல் தடவையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல் சத்திர சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். எங்கேயும், எப்போதும், காலவரையறை இன்றி இலவச மருத்துவ வசதி வழங்கப் பட்டது. எந்த மருத்துவமனையிலும் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கவில்லை. காலந் தாமதித்து சிகிச்சை வழங்கவில்லை. ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் (poliklinikas) இருந்தன. அந்த இடங்களுக்கு எவரும் சென்று வைத்திய ஆலோசனை பெறலாம். எக்ஸ் ரே படம் பிடித்தல், பற்களை கட்டுதல் அனைத்தும் இலவசம். 

8. ஒவ்வொரு உழைப்பாளியும், தனது நிறுவனத்தை சேர்ந்த முகாமையாளரிடம் சுற்றுலா பயணம் கோரி விண்ணப்பிக்க முடிந்தது. கடற்கரைக்கோ அல்லது வேறெந்த விரும்பிய சுற்றுலா ஸ்தலத்திற்கோ சென்று வர அனுமதி கோர முடிந்தது. ஒவ்வொரு வருடமும், தமது தொழிலாளரின் சுற்றுலா செலவுகளை, அந்த நிறுவனம் முழுமையாக பொறுப்பெடுத்தது. அதாவது, தொலைதூர பிரதேசத்திற்கான சுற்றுலா பயணமும் முற்றிலும் இலவசம். 

9. உலக வரலாற்றில் முதல் தடவையாக, ஒவ்வொரு சோவியத் பிரஜையும் இலவச வீட்டுக்கு உரிமை உடையவராக இருந்தார். வீட்டு வாடகை கிடையாது. முற்றிலும் இலவசம். உங்களது பெயரில் வீடு எழுதித் தரப் படும். அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பின்னர் உங்களது பிள்ளைகள் அங்கே வசிக்கலாம். வீடு கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டி இருந்தமை உண்மை தான். ஆனால், ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு புது வீடுகள் வழங்கப் பட்டன. இன்றும் கூட, ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் பெரும்பான்மையான மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

10. ஒவ்வொரு சோவியத் பிரஜையும், தங்கியுள்ள இடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர இலவச பயணச் சீட்டு வழங்கப் பட்டது. பஸ், மெட்ரோ, ரயில் எதுவாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு இலவச பயணச் சீட்டுகள் கொடுத்தனர். இதுவும் உலகிலேயே முதல் தடவை. 

11. தாயாகப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று வருட மகப்பேற்று விடுமுறை வழங்கப் பட்டது. ஆமாம், மூன்று வருடங்கள்! முதலாவது வருடம், அவர் சம்பாதித்த அதே சம்பளம் வழங்கப் பட்டது. இரண்டாவது, மூன்றாவது வருடங்கள் அரசு உதவித் தொகை கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்ல, மூன்று வருடங்கள் முடிந்ததும், அவர் முன்பு செய்த அதே வேலையை திரும்பவும் பெற்றுக் கொள்ள முடிந்தது. 

12. ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைகளுக்கான பால் அல்லது பால்மா இலவசமாக வழங்கப் பட்டது. பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் மூன்று வயதாகும் வரையில் இலவசப் பால் கிடைத்தது. இதற்காக, ஒவ்வொரு ஊரிலும் பால் நிலையங்கள் இருந்தன. பெற்றோர்கள் எந்த நேரத்திலும் அங்கே சென்று, தமது குழந்தைகளுக்கான பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரம்:
12 Awesome things Soviet Union gave to the people ahead of every other country in the world


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, May 15, 2015

USSR 2.0 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒரு பேரழிவு! - மக்கள் நீதிமன்றத் தீர்ப்பு


2010 - 2011 ம் ஆண்டு, ரஷ்யத் தொலைக்காட்சியில், கோடிக் கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சோவியத் யூனியன் காலத்தில் "குற்றங்களை" புரிந்த கம்யூனிசத் தலைவர்கள் தண்டிக்கப் படவில்லை என்ற ஆதங்கத்தில், தற்கால முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினர் அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தி இருந்தனர்.

பெரும்பான்மையான ரஷ்ய மக்கள், "கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள்... ஸ்டாலினிச கொடுங்கோன்மையை வெறுக்கிறார்கள்..." என்ற எண்ணத்தில் அந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டிருக்கலாம். சோவியத் கால கம்யூனிஸ்ட் தலைவர்களின் "குற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு" வழக்கறிஞர்கள் குழு ஒன்று தயாராக இருந்தது. பழைய KGB ஆவணங்களை எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார்கள். 

"சூட் விரேமேனி" (Sud Vremeni : நீதிபதியின் நேரம்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தான் நீதிபதிகளாக தீர்ப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். அதாவது, ஜூரிகள் மாதிரி பார்வையாளர்கள் பெரும்பான்மை வாக்குகளைப் போட்டு, ஒரு குறிப்பிட்ட தலைவரை குற்றவாளி என்று தீர்ப்புக் கூற முடியும்.

நீதிபதிகளுக்கு(மக்களுக்கு) தேவைப்படும் அனைத்து ஆதாரங்களையும், பழைய சோவியத் ஆவணங்களில் இருந்து எடுத்துக் காட்டினார்கள். வழக்கறிஞர்கள் தமது திறமையை எல்லாம் திரட்டி, ஸ்டாலின் போன்றவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னர், மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா?

"கூலாக் எனும் பணக்கார விவசாயிகளுக்கு எதிரான ஸ்டாலினின் போர், பேரழிவுகளை உண்டாக்கியது", என்பன போன்ற ஆதாரங்களை எல்லாம் பார்த்த பின்னரும், பெரும்பான்மையான (78%) மக்கள் ஸ்டாலின் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம்:
ஸ்டாலினின் கூட்டுத்துவ பண்ணை (Collective Farming) அமைப்பு, விவசாயிகள் மேல் பலவந்தமாக திணிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அது தான் சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது என்ற உண்மையை மறுக்க முடியாது. அது மோசமானதாக இருந்தாலும், சமுதாயத்திற்கு அத்தியாவசியமானது. அதனால், நியாயமானது. 
அதற்கு மாறாக, வெறும் 22% பார்வையாளர்கள் மட்டுமே அவையெல்லாம் குற்றங்கள் என்று தீர்ப்பளித்தனர்.

2 ம் உலகப்போர் காலத்தில், ஸ்டாலின் - ஹிட்லர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் பற்றி, எதிர்மறையான தகவல்கள் தான் மேற்கத்திய நாடுகளினால் பரப்பப் பட்டு வந்தன. அதாவது, "ஸ்டாலினும், ஹிட்லரும் கூட்டாளிகள் என்பதை ஓர் ஒப்பந்தம் மூலம் நிரூபித்து விட்டார்கள்" என்று, மேற்குலகில் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் பட்டது. அதையே, இன்றைய ரஷ்ய முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் எதிரொலிக்கின்றது. ஆகவே, அதுவும் மக்கள் தீர்ப்புக்கு விடப் பட்டது. 

அது ஒரு போர் தவிர்ப்பு ஒப்பந்தம் என்ற உண்மை தெரியாத அளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். அந்த ஒப்பந்தம், அந்தக் காலகட்டத்தில் அவசியமாக இருந்தது என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள். வெறும் 9% மட்டும், அது 2 ம் உலகப்போருக்கு காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேற்கத்திய சரித்திர நூல்களும், ஊடகங்களும், "ஸ்டாலினிசத்தை அம்பலப் படுத்திய" குருஷேவ்வின் ஆட்சிக் காலத்தை, ஆஹா...ஓஹோ... என்று புகழ்கின்றன. அதே நேரம், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த, பிரெஷ்னேவ் காலகட்டத்தை குறை கூறுகின்றனர். அதாவது, "சீர்திருத்தவாதி" குருஷேவுக்கு மாறாக, பிரெஷ்னேவ் ஒரு கடும்போக்காளர், "ஸ்டாலினிச சர்வாதிகாரி" என்று விமர்சிக்கின்றனர். 

ஆனால், பிரெஷ்னேவ் பற்றி, ரஷ்ய மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா? பிரெஷ்னேவ் காலகட்டம், மக்களுக்கு பல வசதி வாய்ப்புகளை உருவாக்கிய பொற்காலம் என்று, 91% பார்வையாளர்கள் தீர்ப்பளித்தனர்.

இறுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றிய வாக்கெடுப்பு வந்தது. "சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர், ரஷ்ய மக்கள் சுத்ரந்திரக் காற்றை சுவாசித்தார்கள். கம்யூனிச சர்வாதிகாரத்தை நிராகரித்து, மேற்கத்திய ஜனநாயகத்தை தழுவிக் கொண்டார்கள்...." இவ்வாறு தான் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. 

சோவியத் கால "கம்யூனிச சர்வாதிகாரத்தின் கீழ் அவலங்களை அனுபவித்த" ரஷ்ய மக்கள் என்ன சொல்கிறார்கள்? சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது ஒரு மாபெரும் இழப்பு. அது எமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரவலம் என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள்!


வீடியோ: ரஷ்ய மக்கள் நீதிமன்றமான Sud vremeni தொலைக்காட்சி நிகழ்ச்சி. 
இந்த வீடியோவின் தலைப்பு ரஷ்ய மொழியில்: 
Сталинская система и 1941 год (1941 ம் வருடத்திய ஸ்டாலினிச அமைப்பு): 

Thursday, May 14, 2015

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சோவியத் தொழிற்புரட்சி


ரஷ்யாவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஸ்டாலின் சிலை. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், சிலை உடைப்புக் காட்சிகளை காட்டி, கம்யூனிசம் புதைகுழிக்குள் சென்று விட்டது என்று பலர் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஆனால், அங்கே புதிது புதிதாக முளைக்கும் சிலைகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ரஷ்யாவின், வடக்கு ஒசேத்தியா மாநிலத்தில், லிபெத்ஸ்க் (Lipetsk) நகரில் இந்த ஸ்டாலின் சிலை புதிதாக நிர்மாணிக்கப் பட்டது. (http://gorod48.ru/news/314858/) ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் லிபெத்ஸ்க் கிளையினர், சிலையை நிர்மாணிப்பதற்கு நகர சபை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி இருந்தனர். எனினும், கடைசி நேரத்தில் மறுப்புத் தெரிவித்த நகர சபை, சிலையை தெருவில் வைக்காமல், கட்சி அலுவக வளாகத்தினுள் வைக்குமாறு அறிவித்தனர். எனினும், அந்த அறிவித்தல் பிந்தி வந்த படியால், ஏற்கனவே தீர்மானித்த இடத்தில் சிலை வைக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், ரஷ்யா ஐரோப்பாவில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நாட்டுப்புறங்கள் விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்தன. நகர்ப்புறங்களில் முதலாளித்துவம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.

சுருக்கமாக, அன்றைய சோவியத் யூனியன், அன்றிருந்த மேற்கு ஐரோப்பாவை விட ஐம்பது அல்லது நூறு வருடங்கள் பின்தங்கி இருந்தது. அப்படியான அரசியல்- பொருளாதாரப் பின்னணியில் தான் ஸ்டாலின் அதிபராகப் பதவியேற்றார்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், ரஷ்யாவின் நூறாண்டு கால பொருளாதாரப் பின்னடைவை வெறும் பத்து வருடங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்பினார். "நாங்கள் முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாக வளர்ச்சி அடைவோம், அல்லது அழிந்து விடுவோம்" என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டினார்.

"மேற்கு ஐரோப்பாவில் கடந்த நூறு வருடங்களில் நடந்த தொழிற்புரட்சி, சோவியத் யூனியனில் பத்து வருடங்களுக்குள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால், அயலில் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் போன்றன ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமித்து விடும் என்று கூறினார்.

ஸ்டாலினின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்பது போல, 1941 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி படையெடுத்து வந்து, உக்ரைன், வெள்ளை, ரஷ்யா, மற்றும் பல ரஷ்யாவின் ஐரோப்பிய பிரதேசங்களை ஆக்கிரமித்தது. ஆனால், அதற்கு முன்னர் ஸ்டாலினின் சோஷலிச தொழிற்புரட்சியானது, சோவியத் யூனியனை நவீன இராணுவ வல்லரசாக மாற்றி விட்டிருந்தது.

Gosplan எனும் அரச திட்டமிடல் அமைப்பு, இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி, சோஷலிச பொருளாதாரத்தை, மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சமமாக கொண்டு வந்தது. அதன் விளைவு, 1945 ம் ஆண்டு, முழு உலகிற்கும் தெரிய வந்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்கடிக்கப் பட்டன.

முப்பதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது, அதனோடு சேர்ந்திருந்த ஐரோப்பிய பொருளாதாரமும் சரிந்தது. அதே கால கட்டத்தில், ஸ்டாலின் ஆட்சி செய்த சோவியத் யூனியனின் சோஷலிச பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. அன்று ரஷ்ய ரூபிளின் பெறுமதி, அமெரிக்க டாலரை விட உயர்ந்திருந்தது.

அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கையில், சோவியத் யூனியனின் பொருளாதாரம் கிறங்க வைக்கும் அளவிற்கு துரித கதியில் வளர்ந்தது. நாடு முழுவதும் புதிய புதிய தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், ரயில் பாதைகள் நிர்மாணிக்கப் பட்டன. ஒன்றுமில்லாத கட்டாந்தரையில் இருந்து புதிய பிரமாண்டமான நகரங்கள் தோன்றின. மேற்கத்திய அறிவுஜீவிகள் கூட, சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சியை நேரில் பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தனர். மொஸ்கோ நகரில் மக்களின் பொதுப் போக்குவரத்துக்கான மெட்ரோ ரயில் நிலையங்கள், மாளிகைகள் போன்று கட்டப் பட்டன.

சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டம், பெருமளவு தொழில்நுட்ப நிபுணர்கள், முகாமையாளர்களை எதிர்நோக்கி இருந்தது. அரச திட்டமிடல் அமைச்சான Gosplan, 1930 ம் ஆண்டு மட்டும் 435000 பொறியியலாளர்கள் தேவைப் படுவதாக அறிவித்திருந்தது.

சோவியத் பொருளாதார வளர்ச்சியை, ஸ்டாலின் தனது சமூகப் புரட்சிக்கான களமாக பயன்படுத்த விரும்பினார். புதிய தொழில்நுட்ப நிபுணர்கள் பாட்டாளி வர்க்கப் பின்னணியை கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதன் படி, தொழிலாளர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்கப் பட்டனர். ஆரம்பப் பாடசாலைக் கல்வியை கூட முடித்திராத சாதாரண தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து, பொறியியளாராக அல்லது முகாமையாளராக வர முடிந்தது.

சோவியத் யூனியன் முழுவதும், கோடிக் கணக்கான தொழிலாளர்கள், தாம் வேலை செய்த தொழிலகங்களை விட்டு விட்டு படிக்கச் சென்றார்கள். அவர்கள் ஸ்டாலினின் முற்போக்கான அபிரிவிருத்தித் திட்டங்களில் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களே ஸ்டாலினிச அரசின் ஆதரவுத் தளமாக இருந்தனர். ஏனென்றால், அவர்கள் தமது சொந்த வாழ்க்கையில் என்றுமில்லாத முன்னேற்றம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அன்று உருவாகிய பாட்டாளிவர்க்க புத்திஜீவிகள் "Vydvizjentsy" என்று அழைக்கப் பட்டனர்.

(தகவலுக்கு நன்றி: "Revolutionary Russia", 1891 - 1991, by Orlando Figes)

Saturday, March 07, 2015

உலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்


வெனிசுவேலாவில், உழைக்கும் மக்களுக்காக கட்டப்பட்டு வரும் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட "சோஷலிச நகரம்". இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கக் கூடியதாக, திட்டமிட்டு உருவாக்கப் படுகின்றது. இப்படியான நகரம், தென் அமெரிக்காவிலேயே மிகப் பெரியது.

2.600 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 3456 மாடிக் கட்டிடங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இன்னும் 40 000 மாடிக் கட்டிடங்கள் கட்டப் படவுள்ளன. ஒவ்வொரு தொகுதியும், நான்கு சிறுவர் பாடசாலைகள், நான்கு இடைத்தர பாடசாலைகள், ஒரு நூலகம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு விளையாட்டு மைதானம் என்பனவற்றை கொண்டதாக இருக்கும்.

இந்த மிகப்பெரிய வீட்டுத் திட்டம், Valencia நகரில், US $ 590.000.000 செலவில் ஈரானின் உதவியுடன் கட்டப் படுகின்றது. வெனிசுவேலாவில் இதுவே முதலாவது சோஷலிச வீட்டுத் திட்டம் அல்ல. 2006 ம் ஆண்டு, தலைநகர் கராகசில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இது போன்ற நவீன குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன.

 *******

 உலகவங்கியின் அறிக்கையில் இருந்து: "லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும், மிகவும் சிறந்த கல்வியை வழங்கும் நாடாக கியூபா உள்ளது. கியூப மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி கற்கும் வசதி கிடைக்கிறது."



உலகிலேயே அதிகளவு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முதல் பத்து நாடுகளில் கியூபாவும் அடங்குகின்றது. அமெரிக்கக் கண்டத்தில் இரண்டாம் இடம், உலகளவில் நான்காம் இடத்தில் கியூபா உள்ளது. Inter-Parliamentary Union (IPU) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.


இவை கியூபாவில் தேசியப் பேரவை எனும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுவரொட்டிகள்.

கியூபாவில், 612 பாராளுமன்ற உறுப்பினர்களையும், அத்துடன் மேலதிக மாகாண அதிகார சபைகளுக்கான 15 பிரதிநிதிகளையும், 8.6 மில்லியன் வாக்காளர்கள், தேர்தல் மூலம் தெரிவு செய்வார்கள்.

தேர்தலில் கட்சிகள் போட்டியிடுவதில்லை. ஆனால், வேட்பாளர்கள் தனித் தனியாக போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒவ்வொரு தேர்தலிலும், பெருமளவு கட்சி சார்பற்ற சுயேச்சை உறுப்பினர்களும், மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படுகின்றனர்.

ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், பொது இடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அந்த சுவரொட்டிகளில், வேட்பாளர்கள் தமது வழமையான உறுதிமொழிகளையும், திட்டங்களையும் குறிப்பிட்டு எழுதலாம். அவற்றை பார்வையிடும் வாக்காளர்கள், தேர்தலில் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகளை போட்டு தெரிவு செய்வார்கள்.

*******

சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசம் எட்டிய சாதனைகள். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

Saturday, October 04, 2014

3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி

3 அக்டோபர் 1993, இந்தத் தினத்தில் என்ன நடந்தது என்ற தகவலை, உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதில்லை. "சோவியத் யூனியன் "வீழ்ந்து" விட்டது. ரஷ்ய மக்களே கம்யூனிசத்தை வெறுத்து, முதலாளித்துவத்தை தேர்ந்தெடுத்தார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் சதிகாரக் கும்பல், உண்மை பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியுமா?

உண்மையில், சோவியத் யூனியன் "விழவில்லை" அல்லது "உடைந்து நொறுங்கவில்லை." எல்சின் எனும் அமெரிக்க கைக்கூலியின் சதித் திட்டத்தினால் கலைக்கப் பட்டது. அதைப் பற்றி அங்கிருந்த மக்களுக்கு எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், எல்சினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக, மொஸ்கோ நகரில் மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது.

மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென்றும், சோஷலிசம் தேவை என்றும் போராடினார்கள். ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இறுதியில், எல்சினின் கூலிப் படைகள், ஆயிரக் கணக்கானோரை படுகொலை செய்து, மக்கள் எழுச்சியை நசுக்கின. ரஷ்யாவில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக, ஜனநாயகக் காவலர்களான மேற்கத்திய நாடுகள் முணுமுணுக்கக் கூட இல்லை.

  "சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், கம்யூனிசம் செத்து விட்டது. முன்னாள் கம்யூனிச நாடுகளில் வாழ்ந்த மக்கள், முதலாளித்துவத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக உளறிக் கொண்டிருக்கும் பலர் இன்றைக்கும் உள்ளனர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மேற்குலக ஊடகங்கள் செய்யும் பிரச்சாரங்களை, உண்மை என்று நம்பும் தற்குறிகள் அப்படித் தான் பிதற்றிக் கொண்டிருப்பார்கள்.


26 டிசம்பர் 1991 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் கலைக்கப் பட்டது. அதற்கு முன்னர், கிரெம்ளினில் கோர்பசேவுக்கு எதிரான கடும்போக்காளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி எடுத்திருந்தனர். அந்த சதி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், மேற்கத்திய ஆதரவு லிபரல் தலைவர்களின் சதிப்புரட்சி மிகவும் கவனமாக முன்னெடுக்கப் பட்டது.

"ரஷ்யாவும், உக்ரைனும் சேர்ந்திருந்தால் அது ஐரோப்பிய - ஆசிய கண்டங்களில் மிகவும் பலமான வல்லரசாக இருக்கும்..." என்று, அமெரிக்க வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் பிரெசென்ஸ்கி ஒரு தடவை தெரிவித்திருந்தார். அதனால், முதலில் உக்ரைனை பிரிக்கும் சதித்திட்டம் திரைமறைவில் அரங்கேறியது. உக்ரைனில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டது. 1 டிசம்பர் 1991, உக்ரைன் தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

உக்ரைன் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளை துரிதப் படுத்தியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், வெள்ளை ரஷ்யாவின் Brest நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பங்களா ஒன்றில், மூன்று சோவியத் குடியரசுத் தலைவர்களின் இரகசிய சந்திப்பு இடம்பெற்றது. ரஷ்ய பிரதமர் எல்சின், உக்ரைனிய பிரதமர் கிராவ்ஷுக், வெள்ளை ரஷ்யா பிரதமர் ஸ்டானிஸ்லாவ் சுஸ்கேவிச் ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் அந்த முடிவு எடுக்கப் பட்டது. கவனிக்கவும்: சோவியத் யூனியனை "வீழ்த்த" வேண்டுமென்று, சோவியத் மக்கள் நினைக்கவில்லை. மூன்று தலைவர்களின் இரகசியமான சதித் திட்டம் அது.


எல்சின் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிய உடனேயே, தனது அமெரிக்க எஜமான் ஜோர்ஜ் புஷ்ஷிடம், அந்த முடிவை அறிவித்தார். மேற்கத்திய ஊடகங்களில் தகவல் வெளியான பின்னர் தான், சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட விடயம், அங்கு வாழ்ந்த மக்களுக்கு தெரிய வந்தது.


ரஷ்யாவின் அதிகாரத்தை எல்சின் கைப்பற்றியிருந்த போதிலும், ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தனர். அவர்கள் ஜனநாயக வழியில், எல்சினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். கிளர்ச்சியில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வெளியில் மக்கள் ஆதரவும் இருந்தது. மக்கள் எழுச்சி ஒன்றின் மூலம், மீண்டும் சோவியத் யூனியனை கட்டமைப்பதும், சோஷலிசத்தை மீட்பதும் அவர்களின் தொலை தூர இலக்காக இருந்தது.


 3 அக்டோபர் 1993, மொஸ்கோ நகரில் ஒரு மக்கள் எழுச்சி ஏற்பட்டது. பலர் செங்கொடிகள், சோவியத் கொடிகள் ஏந்திய வண்ணம், வீதிகளில் இறங்கினார்கள். மொஸ்கோவாசிகள் நகர மத்தியில் தடையரண்கள்  போட்டு, பாதுகாப்பு வலையங்களை  உருவாக்கினார்கள். அவர்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள், ரஷ்யப் பாராளுமன்றத்தினுள்  உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்றத்தை சுற்றிவளைத்த எல்சினின் கூலிப்படைகள், மின்சாரத்தையும், தண்ணீரையும் துண்டித்தன. முற்றுகைக்குள், பல இன்னல்களுக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், எல்சினின் உத்தரவின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தின் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அன்றைய தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் மூடி மறைக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான உயிரிழப்புகள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டதாக, ரஷ்ய மக்கள் பேசிக் கொண்டனர். உலகம் முழுவதும் ஜனநாயக பஜனை பாடும் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், ரஷ்ய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை.

நடுநிலை தவறாத மேற்கத்திய ஊடகங்களும், அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதை ஒரு ஜனநாயகப் படுகொலையாக சித்தரித்து, உலக மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பவில்லை. அதே  நேரம், அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகில் யாராவது பட்டாசு கொளுத்திப் போட்டிருந்தால், இதே ஊடகங்கள் பயங்கரவாதம் என்று அலறித் துடித்திருக்கும். உலக நாடுகள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருக்கும்.

3 அக்டோபர் 1993 மக்கள் எழுச்சியை நினைவு கூரும் படங்களையும், வீடியோவையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:


1993 October uprising in Moscow. 






Thursday, May 15, 2014

ஐரோப்பாவில் கல்வி : முற்றிலும் இலவசம் அல்ல

"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

கல்வி கற்க விரும்புவதும், அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க வசதி செய்து கொடுப்பதும், ஒரு சிலரின் பார்வையில் "கம்யூனிசம்" என்றால், சாதாரண பாமர மக்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே விரும்புவார்கள். தமது சொந்தக் காசை செலவு செய்து வெளிநாட்டில் படிப்பவர்கள், தமது மூளை உழைப்பை பணக்கார நாடுகளின் அபிவிருத்திக்கு காணிக்கை ஆக்குபவர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதைப் போன்ற அறிவிலித்தனம் வேறு இருக்க முடியாது.

நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை உயர்கல்வி வரையில், கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு மாணவர்களும் இலவசமாக கல்வி கற்கலாம். ஆனால், "முற்றிலும் எல்லாம் இலவசம்" என்று கருதி விட முடியாது. நான் நோர்வேயில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். அந்த நாட்டில், இடைத்தர தொழிற்கல்வி இலவசமாக கிடைப்பதில்லை.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், பல்கலைக்கழக கல்வி கற்பவர்களை விட, தொழிற்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். நோர்வேயும் அதற்கு விதிவிலக்கல்ல. குடும்பக் கஷ்டம் காரணமாக, உடனடியாக வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள், ஏதாவதொரு தொழிற்கல்வியை தான் தேர்ந்தெடுப்பார்கள். கஷ்டப் பட்டவனிடம் பணம் பறிப்பது, என்ன வகை நியாயம் என்று தெரியவில்லை.

உயர்கல்விக்கு கட்டணம் எதுவும் அறவிடுவதில்லை. ஆனால், மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக, அரசு கல்விக் கடன் கொடுக்கிறது. இந்தக் கடனை, வேலை செய்யும் காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ், தற்போது பல தனியார் பாடசாலைகளும், தனியார் கல்லூரிகளும் வந்து விட்டன. அவர்கள் நிர்ணயிக்கும் விலையை கொடுத்து படிப்பது, பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே முடிந்த காரியம்.

முன்னொரு காலத்தில், ஜெர்மனியில் கல்வி இலவசமாக கிடைத்தது. அனால், இப்போது நிறைய கட்டணம் வசூலிக்கிறார்கள். முன்பு, கிழக்கு ஐரோப்பாவில் பல சோஷலிச நாடுகள் இருந்த படியால், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இலவசக் கல்வி வழங்கி வந்தார்கள். பெர்லின் மதில் விழுந்து, சோவியத் யூனியனும் உடைந்த பின்னர் அந்த தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கல்விக் கட்டணத்தை கூட்டி வருகின்றனர். இன்னொருவிதமாக கூறினால், இதுவரை காலமும் கல்விக்கு அரசு கொடுத்து வந்த மானியத்தை குறைத்துக் கொண்டு வருகின்றது.

சோஷலிச நாடுகளில் கல்வி முற்றிலும் இலவசம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்கள் சிலரை சந்தித்துப் பேசினேன். ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, கியூபா ஆகிய பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், புலமைப்பரிசில் (Scholarship) கிடைத்து, மொஸ்கோவில் படித்து விட்டு வந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்பதற்கு, குறிப்பிட்டளவு அதி புத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே புலமைப் பரிசு கொடுக்கிறார்கள். ஆனால், அது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே நன்மை பயக்கின்றது.

தங்களது சொந்தக் காசில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களானாலும், ஸ்காலர்ஷிப் கிடைத்து செல்லும் ஏழை மாணவர்கள் ஆனாலும், பெரும்பாலானோர் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்து தங்கி விடுகின்றனர். இதன் மூலம், மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த புத்திசாலி மாணவர்களின் மூளை உழைப்பை பயன்படுத்திக் கொள்ளும் பணக்கார நாடுகள், காலப்போக்கில் அந்த "சொத்தை" தமதாக்கிக் கொள்கின்றன. வறிய நாடுகளில் இதனை மூளை வெளியேற்றம் (brain drain) என்று அழைப்பார்கள். அதாவது, வறிய நாடுகளை சேர்ந்த அறிவுஜீவிகளின் திறமை, அந்த நாட்டு மக்களுக்கு பயன்படுவதில்லை. பணம் உள்ள நாடுகள் அதனை பயன்படுத்திக் கொள்கின்றன.

முன்னாள் சோஷலிச நாடுகளில் அப்படி அல்ல. அந்த நாடுகளை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், சோவியத் யூனியனில் உயர்கல்வியை முடித்து விட்டு, தமது சொந்த நாடுகளில் வேலை செய்து வந்தனர். சோவியத் யூனியனில் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒரு சில "அதி புத்திசாலி மாணவர்களுக்கு" மாத்திரம் கிடைக்கும் சலுகையா? அப்படி அல்ல. இது குறித்து, சோவியத் யூனியலில் கல்வி கற்ற எனது ஆப்கானிய நண்பர்களிடம் வினாவினேன். 

எண்பதுகளில், ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தக் காலங்களில், "சோவியத் ஒன்றியத்தில் உயர்கல்வி கற்க விரும்புவோர் பதிவு செய்யுமாறு" இடைத்தர, உயர்தர வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் வகுப்பாசிரியர் வந்து கேட்பார். வெளிநாட்டில் படிக்கும் ஆர்வமுள்ள எல்லா மாணவர்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும். இறுதித் தேர்வில் அதி கூடிய புள்ளிகள் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. 

ஒரு காலத்தில், சோவியத் யூனியனுடன் நட்புறவு பேணிய, முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த பிரஜைகள் எல்லோருக்கும், மேற்படிப்புக்காக சோவியத் யூனியனுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவை சோஷலிச நாடுகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. பிரேசில், இந்தியா, இலங்கை போன்ற சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பேணிய பன்னாட்டு மாணவர்களுக்கு அந்தச் சலுகை கிடைத்து வந்தது. 

சோவியத் யூனியனில், கல்விக் கட்டணம் கிடையாது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் வாழ்க்கைச் செலவையும் அரசே கொடுத்து வந்தது. மேலும் அது கடன் அல்ல. வெளிநாட்டு மாணவர்களாக இருந்தாலும், திருப்பிக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதனால், பண வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும், வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியது.

அது மட்டுமல்ல, கோடை கால விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அல்லது விரும்பாதவர்கள், ஏதாவதொரு வேலை செய்து சம்பாதிக்க முடிந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு படிக்கச் சென்றால் தான் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் தகவல் நம்ப முடியாமல் இருக்கலாம். சோவியத் யூனியனில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு தொழிலாளிக்கு கிடைத்த குறைந்த பட்ச சம்பளம் கூட, அண்ணளவாக மாதமொன்றுக்கு 1000 டாலர்கள்.

சோவியத் யூனியனில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வேலை செய்வதற்கு விசேட அனுமதி பெற்றிருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதே நேரம், கஷ்டப் பட்டு தேட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. வேலை செய்ய விரும்பியவர்கள், சும்மா ஒரு தொழிற்சாலைக்கு நேரில் சென்று கேட்டால் போதும். அங்கே எப்போதும் ஏதாவதொரு வேலை இருக்கும். ஒரு மாத கோடை கால விடுமுறையில், வேலை செய்து சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பி விட்டு படித்தவர்கள் நிறையைப் பேர். இந்தத் தகவல்கள் யாவும், அங்கு கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து பெறப் பட்டவை.


"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

Monday, May 12, 2014

கிழக்கு உக்ரைனில் உயிர்த்தெழும் சோவியத் பூதம்!

  • டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், "கிழக்கு உக்ரைன் ரஷ்யர்களும், இலங்கைத் (ஈழத்) தமிழர்களும் அவர்களுக்கு ஒன்று தான்" என்பதை பல தடவைகள் வலியுறுத்திக் கூறி வந்துள்ளேன். ஒடெஸ்ஸாவில் ரஷ்ய இனத்தவர் இனப்படுகொலை செய்யப் பட்டதாக, ரஷ்ய சிறுபான்மை இனத்தவரின் அனுதாபத்தை திரட்டிய ரஷ்ய பிரிவினைவாதிகள், அதனை பொது வாக்கெடுப்பு ஒன்றில் அறுவடை செய்துள்ளதாக, ஜெர்மனியின் வலதுசாரி- பழமைவாத பத்திரிகை ஒன்று (Die Welt) அழுது வடித்துள்ளது. "ரஷ்ய பிரிவினைவாதிகள்" வரும் இடத்தில் தமிழ் தேசியவாதிகளையும், ரஷ்யர்கள் என்று வரும் இடத்தில் ஈழத் தமிழர்கள் என்றும் போட்டு வாசித்துப் பாருங்கள். எல்லாம் கச்சிதமாகப் பொருந்துகின்றது.

கிழக்கு உக்ரைனில் நடந்து முடிந்துள்ள டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசுக்கான பொது வாக்கெடுப்பு, முழு ஐரோப்பிய கண்டத்திற்கும் அச்சுறுத்தல் என்று, கட்டுரை ஒன்றை (Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa) பிரசுரித்துள்ளது. அந்த சம்பவங்களை "சோவியத் யூனியனின் மீள் வருகையாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் எழுச்சியாகவும்," அந்த நாளேடு கருதுகின்றது. தற்போது ஜாடியை விட்டு வெளியே வந்துள்ள இந்தப் பூதம், விரைவில் முழு ஐரோப்பாவையும் பிடித்தாட்டும் என்று அது எச்சரித்துள்ளது.

அந்தக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்:

கிழக்கு உக்ரைனில் நடந்துள்ள சம்பவங்களை, வரலாற்றின் பரிசோதனைக் கூடமாக கருத வேண்டும். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் நடந்ததைப் போன்ற, அல்லது முப்பதுகளில் ஜெர்மனியில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகள் இவை. ஒரு சிறிய தீவிரமான வன்மைவாதிகளின் குழு அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமிக்கும். பத்து நாட்களுக்கு முன்னர், ஒடெஸ்ஸா நகர தீயில் 38 பேர் பலியானது போன்ற துயரச் சம்பவங்கள், நிலைமையை தீவிரமைடைய உதவுகின்றது. ஊடகங்கள் இது போன்ற காட்சிகளை மனதில் பதிய வைக்கும்.

"ரஷ்ய மக்களின் இனப்படுகொலை" நடந்த ஒடெஸ்ஸாவில், எப்படி தீப்பிடித்தது என்பது சரியாகத் தெரியவில்லை. பலியானவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக, தீவிர பிரிவினைவாதிகள், டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளின் சுதந்திரத்திற்காக நடந்த பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர்.

கிழக்கு உக்ரைனில் நடக்கும் சம்பவங்களினால், ஐரோப்பா முழுவதும் வாழும் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். ஜெர்மன் சமஷ்டி அரசாங்கமும், உக்ரைன் விடயத்தில் குற்றம் இழைத்துள்ளதாக கீசி (ஜெர்மன் இடதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்) கூறுகின்றார். உண்மை தான், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பல தவறுகளை இழைத்துள்ளன. ஆனால், ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரைன் நாடக மேடையில் அரங்கேறும் வெறுக்கத்தக்க நாடகத்தை புறக்கணிப்பது வெகுளித்தனமானது.

ஐரோப்பாவை இரண்டாக பிளக்கக் கூடிய இயக்கம் ஒன்றை, ரஷ்ய அரசு வளர்த்துக் கொண்டிருக்கிறது. "இரண்டாம் உலகப் போரை வெற்றி கொண்டோம், ஆனால் பனிப் போரில் தோற்றோம்" என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து எழும் இயக்கமானது, எதிர்ப்பவர்களை எல்லாம் பாசிஸ்டுகளாக கருதிக் கொண்டே, பெருந் தேசியவாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. "நோவோ ருசியா" (புதிய ரஷ்யா) பொது வாக்கெடுப்பின் பின்னர் ஐரோப்பா விழித்தெழுகின்றது. அங்கே ஜனநாயக அல்லது லிபரல் மனப்பான்மை கொண்டவர்களுக்கு இடமில்லை.

கிழக்கு ஐரோப்பாவின் மற்றைய பகுதிகளிலும் ஆபத்து காத்திருக்கின்றது. புட்டின் எழுப்பியுள்ள ஆவிகளை மீண்டும் சீசாவுக்குள் அடைப்பது கடினமானது. உக்ரைனில் இதே பாணியிலான பிரிவினைவாத இயக்கம், தொழிற்துறை மையமான டினியேபுரோபெட்ரோவ்ஸ்க் (Dnepropetrovsk) பிராந்தியத்தையும் கையகப் படுத்தும். அதன் அர்த்தம் கலகங்கள், சமர்கள், மரணங்கள். கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக பால்கன் நாடுகளிலும், இந்த உதாரணம் பின்பற்றப் படும்.

ரஷ்ய பிரிவினைவாதிகள் தமது டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

(Die Welt, 12-05-2014) 

Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa
*******

அன்பான தமிழ் பேசும் வலதுசாரிகளே!

ரஷ்யா பற்றிய மேலைத்தேய பிரச்சாரம் எதையும் நம்பாதீர்கள். மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள், இரட்டை வேடம் போடுகின்றன. ரஷ்யாவை வில்லனாக காட்டி, உங்களை ஏமாற்றிக் கொண்டே, ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி வருகின்றன. எல்லாவற்றிற்கும் காரணம், பொருளாதாரம். உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, அவர்களது பிரச்சாரத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவுகின்றது. "புதிய பனிப்போர்" என்பது கூட ஒரு கற்பனை தான்.

உக்ரைன் பிரச்சினை தீவிரமடைந்த பின்னர் தான், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஷிரேடர், புத்தினை நேரில் சந்தித்துப் பேசினார். ஷெல் தொழிலதிபர், தூர கிழக்கு ரஷ்யப் பகுதிகளில் எரிவாயு எடுக்கும் ஒப்பந்தம் போட்டார். இப்படிப் பல உதாரணங்களை குறிப்பிடலாம். உண்மையில், மேற்கு ஐரோப்பா முழுவதும், எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அவை என்றைக்கும் ரஷ்யாவை பகைத்துக் கொள்ளப் போவதில்லை.

ஜெர்மனி நுகரும் எரிவாயுவில் 30% ரஷ்யாவில் இருந்து வருகின்றது. அதனை விநியோகிக்கும் ஏகபோக உரிமை பெற்ற ரஷ்ய Gazprom, ஜெர்மனியில் பெட்ரோல் நிலையங்கள் உட்பட பல தொழிற்துறைகளில் கணிசமான அளவு முதலீட்டை செய்துள்ளது. நெதர்லாந்து நிறுவனமான Gasunie, ரஷ்ய Gazprom உடன் இணைந்து, "Northern stream" குழாய் பாதை அமைத்து வருகின்றனர். ரஷ்யாவில் இருந்து நேரடியாக கடல் வழி வரும் குழாய்கள், ஜெர்மனிக்கான மேலதிக எரிவாயுவை வழங்க உள்ளன.

"புதிய பனிப்போர்" அல்லது உக்ரைன் பிரச்சினைக்கு பின்னர், அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு வாங்கும் திட்டத்தை சிலர் பரிந்துரைத்தனர். அது நடைமுறைச் சாத்தியமில்லாத, அதிக செலவு பிடிக்கும் திட்டம் ஆகும். அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதென்றால், அது LNG எனப்படும் திரவமாக்கப் பட்ட எரிவாயுவாக, கப்பல்களில் ஏற்றித் தான் கொண்டு வரலாம்.

LNG ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களை அமெரிக்காவிலும், இறக்குமதி செய்யும் துறைமுகங்களை ஐரோப்பாவிலும் புதிதாக கட்ட வேண்டும். அதெல்லாம் நடந்து முடிய குறைந்தது 2 வருடங்கள் ஆகும். LNG ஆக மாற்றும் செலவு, துறைமுகம் அமைக்கும் செலவு, போக்குவரத்து செலவு இவற்றை எல்லாம் கூட்டிப் பார்த்தால், அமெரிக்க எரிவாயுவின் விலை பல மடங்கு உயர்ந்து விடும். செலவைக் குறைப்பதற்கு பதிலாக, கூட்டிக் கொள்வது மடத்தனமானது.

மேற்கு ஐரோப்பாவில், உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் அரசியல்வாதிகள், திரைமறைவில் ரஷ்யாவுடன் தொடர்ந்தும் நட்புப் பேண விரும்புகின்றனர். ஆச்சரியப் படத் தக்கவாறு, ரஷ்யா கிரீமியாவை இணைத்த நியாயத்தை புரிந்து கொள்ளுமளவிற்கு மனப் பக்குவம் பெற்றிருக்கின்றனர்.

"கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஷ்யா நேட்டோ விஸ்தரிப்பு குறித்து அஞ்சுவது தெளிவாகும். கிரீமியாவில் நேட்டோ இராணுவத் தளம் அமைத்து விடும் என்ற அச்சத்தில், ரஷ்யா அதனை தன்னோடு சேர்த்துக் கொண்டது." இவ்வாறு நெதர்லாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Ben Bot தெரிவித்தார்.

********

உக்ரைன் பிரச்சினை தொடர்பாக வந்த ஒரு தமிழ் பேசும் வலதுசாரியின் எதிர்வினை :

 //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! ரஷ்யாவும் ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும், கிழக்கு உக்ரேனில் இப்போது ஓங்கியிருப்பது, ரஷ்ய தேசியவாதமே என்பதையும் உணர வேண்டும்.//

அந்தக் கூற்றை, நாங்கள் ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! தமிழ்நாடும் (அல்லது இந்தியாவும்) ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும் வட-கிழக்கு இலங்கையில் இப்போது ஓங்கியிருப்பது, தமிழ் தேசியவாதமே என்பதையும் உணரவேண்டும்.//

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, தமிழ் தேசியவாதிகளின் போராட்டத்தை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால், அதே தமிழ் தேசியவாதிகள் உக்ரைன் விடயத்தில் மட்டும் தடம்புரள்வதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் உள்ள தேசியவாதிகள் மத்தியில், அந்தளவுக்கு பகை முரண்பாடுகள் நிலவுகின்றன. தேசியவாதிகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது. ஒரு தேசியவாதிக்கு இன்னொரு தேசியவாதியை பிடிப்பதில்லை.

நாசிஸத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்காத, உக்ரைனிய பேரினவாதத்திற்கு எதிரான, ரஷ்ய தேசியவாதிகளின் போராட்டத்தை, ஏன் இவர்கள் ஆதரிப்பதில்லை? உக்ரைனில் ரஷ்ய சிறுபான்மையினரின் மொழிப் பிரச்சினையை இவர்கள் ஏன் அங்கீகரிப்பதில்லை? இவர்களை தமிழ் தேசியவாதிகள் என்று அழைப்பதை விட, "அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவான வலதுசாரிகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.

ரஷ்யாவும், உக்ரைனும் முதலாளித்துவ நாடுகள் என்பதையும், இரண்டிலும் தேசியவாதிகள் பலமாக இருப்பதையும், எந்த தமிழ் பேசும் இடதுசாரியும் உணராமல் இருப்பதாக நான் கேள்விப் படவில்லை. கடந்த இருபது வருடங்களாக அதை சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் பேசும் வலதுசாரிகள் அப்படி அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில், அமெரிக்கா என்ன சொன்னாலும் அது வேத வாக்கு. அமெரிக்கா ஒரு நாட்டை ஆதரித்தால் இவர்களும் ஆதரிப்பார்கள், அதே நாட்டை அமெரிக்கா எதிர்த்தால் இவர்களும் எதிர்ப்பார்கள்.

தொண்ணூறுகளில், ரஷ்யாவில் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவம் நிலவிய போது, ரஷ்யாவை ஆதரித்தார்கள். ஆனால், அதே ரஷ்ய முதலாளித்துவம், அசுர வளர்ச்சி அடைந்து, அமெரிக்காவை எதிர்க்கும் அளவிற்கு வல்லரசு ஆனதும், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யாவை எதிர்க்கிறார்கள். எந்த வலதுசாரியும் சுயமாக சிந்திக்கத் தெரிந்து வைத்திருப்பதாக, நான் அறியவில்லை.

உலகில், முதலாளித்துவ நாடுகள் எல்லாம் நட்பாக இருப்பதில்லை. அவற்றிற்குள் முரண்பாடுகள் இருக்கும். அது சில நேரம் போராக வெடிக்கும். முதலாளித்துவம் எப்போதும், தனது நலன்களுக்கு பாதுகாப்பான தேசியவாதத்தை ஆதரிக்கும். முரண்பாடுகள் வளர்ந்து போர் வெடிக்கும் காலத்தில், மக்கள் ஆதரவை பெறுவதற்கு தேசியவாதம் உதவும்.

முதலாம் உலகப் போர் வெடித்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் இருந்ததெல்லாம் முதலாளித்துவ நாடுகள் தான். அது மட்டுமல்ல. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், தேசியவாதிகளின் ஆதிக்கம் நிலவிய‌து. லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலை வாசித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு எல்லாம் புரியும்.

********

டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு



உக்ரைனின் கிழக்கு மாநிலமான டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் மாநிலங்கள், "டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள், வாக்களிக்கும் நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் வாக்களித்தமையை, மேற்கத்திய தொலைக்காட்சி ஊடகங்கள் கூட காட்டின.

மாரியுபோல் நகரம், உக்ரைனிய இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. வாக்கெடுப்புக்கு முதல் நாள் கூட கடுமையான யுத்தம் நடந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். அத்தகைய மோசமான சூழ்நிலையிலும், மாரியுபோல் மக்கள் பெருமளவில் திரண்டு சென்று வாக்களிப்பில் கலந்து கொண்டார்கள். இதுவே, ஜனநாயகத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். மேலைத்தேய "ஜனநாயக" நாடுகள், டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பை ஜனநாயக விரோதமாகக் கருதுவது வேடிக்கையானது.

பொது வாக்கெடுப்பு தொடர்பாக, நெதர்லாந்தில் வெளிவரும் தினசரிப் பத்திரிகையில் இருந்து ஒரு தகவல்:
"டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு விரைவில் பிரகடனப் படுத்தப் படவுள்ளது. இனிமேல், உக்ரைனிய ஹிர்வியானா நாணயத்திற்கு பதிலாக ரஷ்ய ரூபிள் பயன்படுத்தப் படும். தனியரசு உருவான பின்னர், உக்ரைனிய இராணுவம் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக கருதப் படும். உக்ரைனிய இராணுவத்தை வெளியேற்றுவது, டொனியேட்ஸ்க் விடுதலைப் படையின் கடமையாக மாறும். அது சாத்தியமில்லாத பட்சத்தில் மட்டுமே, ரஷ்ய இராணுவ உதவி கோரப்படும்.
இந்த பொது வாக்கெடுப்பானது பிரிவினைவாதிகளைப் பொறுத்தவரையில், வெறுமனே மேற்குக்கு எதிரானதும், ரஷ்யாவுக்கு ஆதரவுமான கொள்கைப் போராட்டம் அல்ல. அவர்களுடைய வர்க்கப் போராட்டத்தில் அதுவும் ஒரு ஆயுதம். தொழிற்துறை நகரங்களின் கோடீஸ்வர தொழிலதிபர்கள் "நடுநிலைமை" வகிக்கின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனியார்மயமாக்கப் பட்ட நிறுவனங்களை, மீண்டும் நாட்டுடைமை ஆக்கும் திட்டம் வகுக்கப் படுகின்றது. இடைத்தர, கீழ்த்தர முதலாளிகளும் கூட, பொது வாக்கெடுப்புக்கு எதிராக இருந்தமை தற்செயல் அல்ல."
(Oost-Oekraïne vereffent de rekeningen, NRC Handelsblad, 12-05-2014)

இந்த நேரத்தில், "தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு" கோரிய தமிழ் தேசியவாதிகள் கள்ளமௌனம் சாதிக்கின்றனர். சீமான், வைகோ, போன்ற தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமார் கூட, எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் தமிழீழத்திற்காக பேசிக் கொண்டிருந்த இணைய ஆர்வலர்களும், அது பற்றி வாயே திறக்கவில்லை. இவர்கள், உண்மையிலேயே தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஆதரிக்கிறார்களா? அல்லது, சும்மா பொழுதுபோக்கிற்காக, தமிழீழ ஆதரவு அரசியல் செய்கிறார்களா?


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்: