Showing posts with label வேலைநிறுத்தம். Show all posts
Showing posts with label வேலைநிறுத்தம். Show all posts

Sunday, August 20, 2017

ஒரு முதலாளித்துவ நாட்டில் முற்றுப்பெறாத சோஷலிசத்திற்கான போராட்டம்


வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ள் மூல‌மே தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளை பெற்றுக் கொள்ள‌ முடியும். நான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் வசிப்பதாலும், அந்நாட்டின் வரலாறு படித்திருப்பதாலும், அங்கு நடந்த உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெதர்லாந்து வரலாற்றில், முதன்முறையாக 1823 ம் ஆண்டு கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது, வேலைநிறுத்தம், தொழிற்சங்கம் போன்றன தடைசெய்யப்பட்டிருந்த  காலகட்டம். அதனால் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு பகிரங்கமாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேலைநிறுத்தம் செய்வதால் தொழிலாளர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. சம்பளம் கிடைக்காதது மட்டுமல்லாது, வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. அத்துடன் வேறெந்த முதலாளியும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.அரச உதவி எதுவும் கிடைக்காத காலத்தில், குடும்பம் முழுவதும் பட்டினி கிடந்தது வாட வேண்டிய கட்டாயம் இருந்தது.

வைரக் கல் பட்டை தீட்டும் தொழில் செய்த கைவினைஞர்கள் மத்தியில் வலுவான தொழிற்சங்கம் இருந்தது. தொழிலாளர் நலன்களுக்காக உருவான (மார்க்சிய) சமூக ஜனநாயகக் கட்சி (SDP), அதனை முன்மாதிரியாகக் கொண்டு தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் அமைத்தது. அதனால், ஒரு தொழிலகத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் பொழுது, அவர்களுக்கான வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட முடிந்தது. 

ஐரோப்பாவில் தோன்றிய மார்க்சிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஆரம்ப காலத்தில் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தன. அதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர் மத்தியில் கருத்தொற்றுமை நிலவியது. சகோதர உணர்வு ஏற்பட்டிருந்தது. 

முதலாம் உலகப்போருக்கு முன்னர் பாட்டாளிவர்க்க சர்வதேசிய உணர்வு மிகவும் தீவிரமாக இருந்தது.அதனால், ஐரோப்பிய அரசுகள் தேசிய உணர்வை தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. அது பேரழிவு தந்த உலகப்போருக்கு இட்டுச் சென்றது.

1889 ம் ஆண்டு, ல‌ண்ட‌ன் துறைமுக‌த் தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். போராட்ட‌ முடிவில், துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்து கோரிக்கைக‌ளை ஏற்றுக் கொண்ட‌ன‌ர். வேலைநேர‌த்தை குறைக்க‌வும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்ட‌வும் ச‌ம்ம‌தித்த‌ன‌ர். முத‌லாளிக‌ள் தொழிலாள‌ர்க‌ளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் எவ்வாறு உருவான‌து?

ல‌ண்ட‌ன் துறைமுக‌த்தில் வேலைநிறுத்த‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ நேர‌ம், இங்கிலாந்து முத‌லாளிக‌ள் த‌ம‌து க‌ப்ப‌ல்க‌ளை, ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு அனுப்பினார்க‌ள். ல‌ண்ட‌ன் வேலைநிறுத்த‌ம் ப‌ற்றிக் கேள்விப்ப‌ட்ட‌ ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ர்க‌ள், பொருட்க‌ளை இற‌க்கி ஏற்ற‌ ம‌றுத்து விட்ட‌ன‌ர்.

இந்த‌ ச‌ர்வ‌தேச‌ ஒருமைப்பாடு அத்துட‌ன் நின்று விட‌வில்லை. ல‌ண்ட‌ன் தொழிற்ச‌ங்க‌த் த‌லைவ‌ர்க‌ள் ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு வ‌ந்த‌ன‌ர். எவ்வாறு போராட வேண்டும் என்று ட‌ச்சுத் தொழிலாள‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடுத்த‌ன‌ர்.

இந்த‌த் த‌ட‌வை ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ரின் முறை. அவ‌ர்க‌ளும் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். வேலை நேர‌த்தை குறைக்குமாறும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்டுமாறும் கோரிக்கை வைத்த‌ன‌ர். அர‌சு பொலிஸ் அனுப்பி வேலைநிறுத்த‌த்தை த‌டுக்க‌ப் பார்த்த‌து. தொழிலாள‌ர்க‌ள் பாதுகாப்பு அர‌ண் அமைத்து எதிர்த்து நின்ற‌ன‌ர். அங்கு ந‌ட‌ந்த‌ மோத‌லில் சில‌ருக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து.

இறுதியில் துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்த‌ன‌ர். தொழிலாள‌ரின் கோரிக்கைக‌ளை நிறைவேற்ற‌ ச‌ம்ம‌தித்த‌னர். இவ்வாறு க‌டுமையான‌ போராட்ட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் தான் ஐரோப்பிய‌ தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளைப் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அதிலும் துருக்கிப் பெண்கள் வேலை நிறுத்தம் செய்த வரலாறு நெதர்லாந்தில் நடந்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரம் வளர்ந்தது. உள்நாட்டு தொழிலாளருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், துருக்கி, மொரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து மலிவான ஒப்பந்தக் கூலிகளை இறக்குமதி செய்தனர்.

முதலாளிகள் அவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து, உழைப்பை சுரண்டி வந்தனர். தற்போது வளைகுடா அரபு நாடுகளில், தெற்காசியத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதே மாதிரித் அன்றைய ஐரோப்பாவிலும் நடந்து கொண்டிருந்தது.

அல்மேலோ நகரில் அமைந்திருந்த B.J.ten Dam என்ற தொழிற்சாலையின் உரிமையாளர் துருக்கிப் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார். கோழி இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப் பட்டனர்.

அந்தப் பெண் தொழிலாளர்கள் வாரத்திற்கு அறுபது மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். நெதர்லாந்தின் அடிபப்டை சம்பளத்தை விடக் குறைவாக கொடுக்கப் பட்டது. அத்துடன், விடுமுறை இல்லை. சுகயீன விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது.

அவர்கள் FNV என்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர் தான் நிலைமை மாறியது. 1978 ம் ஆண்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக நியாயமான ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை பெற்றுக் கொண்டனர். போராடாமல் எதுவும் கிடைக்காது.

நெத‌ர்லாந்தில் இதுவ‌ரை கால‌மும் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளை ஒருவ‌ர் ஆய்வு செய்துள்ளார். ஷாக் வ‌ன் டெர் வெல்ட‌ன் (Sjaak van der Velden) ஒரு முன்னாள்‌ ம‌ர‌வேலைத் தொழிலாளி. த‌ற்போது ம‌துபான‌சாலை ந‌ட‌த்துகிறார். அவ‌ரிட‌ம் எடுக்க‌ப் ப‌ட்ட‌ தொலைக்காட்சி பேட்டியில் இருந்து:

கேள்வி: க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளால் கிடைத்த‌ ப‌ய‌ன்க‌ள் என்ன‌?

ப‌தில்: ஏராள‌ம் உள்ள‌ன‌. வேலைநிறுத்த‌ங்க‌ள் ந‌ட‌ந்திரா விட்டால், இன்றுள்ள‌ வாழ்க்கை வ‌ச‌திக‌ளை நாங்க‌ள் அனுப‌வித்திருக்க‌ முடியாது.

நெத‌ர்லாந்தில், க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ங்க‌ளில் 15000 வேலைநிறுத்த‌ங்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌ன‌. அவ‌ற்றில் பெரும்பாலான‌வை 20ம் நூற்றாண்டில் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

4000 வேலைநிறுத்த‌ங்க‌ள் எதிர்பார்த்த‌ வெற்றிக‌ளை த‌ந்துள்ள‌ன‌. 3500 வேலைநிறுத்த‌ங்க‌ள் இறுதியில் முத‌லாளிக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ வைத்த‌ன‌.

வேலைநிறுத்த‌ம் செய்வதால் ந‌ன்மை உண்டாகின்ற‌து என்ப‌தை வ‌ர‌லாறு நிரூபித்துள்ள‌து. வேலையை இடை நிறுத்துவ‌து அல்ல‌ இங்கே முக்கிய‌ம். தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து ச‌க்தியை உண‌ர்ந்து கொள்வ‌தும், ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ரும் போது ப‌ல‌த்தைக் காட்டுவ‌துமே முக்கிய‌ம்.

மேற்கு ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போருக்கு முன்னரும், பின்னருமான நிலைமை இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது. போருக்கு முன்னர் வர்க்கப் போராட்டம் மூர்க்கமாக நடந்து கொண்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியில் பல குறைபாடுகள் இருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதாக காட்டிக் கொண்டது. அதன் தலைவர்கள், முதலாம் உலகப்போர் காலத்திலேயே விலைக்கு வாங்கப் பட்டு விட்டனர். இருப்பினும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை தடுக்கவில்லை.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கொண்டதுடன் மட்டுமல்லாது, முதலாளித்துவ அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த சம்பவங்களை ஓர் உதாரணமாக எடுத்துப் பார்க்கவும். இப்படித் தான் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

1940 ம் ஆண்டு, நெதர்லாந்து நாஸி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டது. நாஸி ஆக்கிரமிப்பாளர்கள் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியை (CPN) தடை செய்தனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியை (SDAP) தம்முடன் சேர்ந்து வேலை செய்ய வருமாறு அழைத்தனர். தாங்கள் "இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல, தேசப் பற்றாளர்கள்..." என்று நாஸிகள் சொல்லிக் கொண்டனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியினர் சேர்ந்து வேலை செய்ய மறுத்து விட்டனர். அதனால் அந்தக் கட்சியும் தடை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே SDAP இயங்குவதை நிறுத்திக் கொண்டது.

நாஸிகள் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்த யூதர்களை கைது செய்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் வேலையை ஆரம்பித்தனர். அப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஒட்டுமொத்த ஆம்ஸ்டர்டாம் நகரமும் வேலைநிறுத்தம் செய்தது. அதற்குப் பின்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்.

நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடொன்றில் நடந்த முதலாவது வேலைநிறுத்தப் போராட்டம் அது தான். முதல் நாள் செய்வதறியாது திகைத்து நின்ற நாஸிகள், அடுத்தநாள் அடக்குமுறையை ஏவி விட்டனர். டச்சு தொழிற்சங்க தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப் பட்டு, ஆஸ்திரியாவில் இருந்த தடுப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டனர். குறைந்தது அரைவாசிப் பேராவது அங்கிருந்து மீளவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், நெதர்லாந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டுகளுக்கு பெருமளவு ஆதரவு இருந்தது. பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகள் கம்யூனிஸ்டுகளை உண்மையான நாட்டுப் பற்றாளர்களாக பார்த்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், அரச குடும்பமும், பிற கட்சிகளின் தலைவர்களும் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடி விட்டனர். ஆனால் விடுதலைக்குப் பின்னர் அவர்களது கையில் தான் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது!

முன்னாள் SDAP கட்சியினரும், கிறிஸ்தவ கட்சி ஒன்றும் சேர்ந்து, புதிய சமூக ஜனநாயகக் கட்சியான தொழிற்கட்சி (PvdA) உருவானது. அதன் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மறுத்தனர். அதற்குப் பதிலாக லிபரல் கட்சிகளுடன் கூட்டு வைத்தனர்.  இந்த "இடது - வலது கூட்டரசாங்கம்" இன்று வரை தொடர்கின்றது.

1955 - 1959 காலப் பகுதியில், சமூக ஜனநாயகவாதிகளின் நீண்ட கால சோஷலிசக் கோரிக்கைகள், "நலன்புரி அரசு" என்ற பெயரில் அமுல்படுத்தப் பட்டன. உதாரணத்திற்கு, அனைவருக்கும் ஓய்வூதியம், மணமுறிவு பெற்ற தாய்மார், வேலையற்றோர், நிரந்தர நோயாளிகளுக்கான அரச கொடுப்பனவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். பாராளுமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் இந்த மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்தன. கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கட்சியான SGP மட்டும், "அபாயகரமான அரசு சோஷலிசம்" என்று கூறி எதிர்த்தது.

அதே காலகட்டத்தில் (1955), ஆம்ஸ்டர்டாம் நகரில் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அரசால் அங்கீகரிக்கப் படாத கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் அவர்களது போராட்டத்தை ஆதரித்தது. அந்தப் போராட்டத்தை பொது மக்களும் ஆதரித்தமை குறிப்பிடத் தக்கது. அரசு கருங்காலி சாரதிகளை கொண்டு சில டிராம் வண்டிகளை ஒட்டிய போதிலும், பொது மக்கள் அவற்றில் ஏற மறுத்தனர்.

ஆம்ஸ்டர்டாம் நகரின் பொதுப்போக்குவரத்து துறை ஓர் அரச நிறுவனம் ஆகும். அப்போது ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி, "வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதம்" என்றது! "தற்போதுள்ளது ஒரு புதிய சகாப்தம். முன்பிருந்த வர்க்கப் போராட்டம் மறைந்து, வர்க்க சமரசம் உருவாகி உள்ளது. அப்படியான நிலைமையில் வேலைநிறுத்தம் செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல..." என்று வாதிட்டது.

போருக்கு முன்னர் அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடிய அதே சமூக ஜனநாயகவாதிகள், தற்போது தாமே அடக்குமுறை அரசாக மாறி இருந்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை அடக்குவதற்காக பொலிஸ் படையை ஏவி விட்டனர். வேலைநிறுத்தம் செய்த குற்றத்திற்காக, ஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்ற தடைச்சட்டம், முப்பதுகளில் இருந்த முதலாளித்துவ அடக்குமுறை அரசினால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். அப்போது அதற்கு எதிராகப் போராடிய சமூக ஜனநாயகவாதிகள், பின்னர் அதே சட்டத்தைக் காட்டி அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்! அதற்கு அவர்கள் கூறிய ஒரே காரணம்: "வர்க்கங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்! நீங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்தால், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து தேசத்துரோகக் குற்றம் புரிகிறீர்கள்!! உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்கிறீர்கள்!!!" என்றது அன்றைய சமூகஜனநாயக அரசாங்கம்.

முன்னொரு காலத்தில் போராட்டக் குணாம்சம் கொண்டதாக இருந்த சோஷலிச தொழிற்சங்கமும் (NVV: தற்போது FNV) அரசுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. நலன்புரி அரசு என்ற பெயரில் முதலாளிகளுடனும், அரசுடனும் சேர்ந்து கூட்டு ஒப்பந்தங்கள் போடுவதில் பங்கெடுத்தது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவதில்லை என்ற நிபந்தனைக்கு தொழிற்சங்க தலைவர்கள் சம்மதித்தனர்.

அன்றிலிருந்து இன்றுவரை, இந்தத் துரோகம் தொடர்கதையாக உள்ளது. அண்மைக்காலமாக, அரசு கொண்டு வரும் சிக்கனப் பொருளாதார திட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றன. ஆனால், சமூக ஜனநாயக் கட்சியினரும், தொழிற்சங்கமும் அதற்கு ஒப்புதல் வழங்கி வருகின்றனர்.

Friday, June 23, 2017

3000 ஆண்டுகளுக்கு முந்திய எகிப்தில் நடந்த வர்க்கப் போராட்டம்

மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர், ப‌ண்டைய‌ எகிப்தில் ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப் போராட்ட‌ம். வ‌ர‌லாற்றில் ப‌திவுசெய்ய‌ப் ப‌ட்ட‌ உல‌கின் முத‌லாவ‌து வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம்.

கி.மு. 1170 ம் ஆண்டு. ப‌ண்டைய‌ எகிப்தில் தெற்கே உள்ள‌ டெய்ர் எல் மெடீனா (Deir el- Medina) என்ற‌ ஊரில் தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம், அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய ஊதிய‌ம் கால‌ தாம‌த‌மான‌து தான். ஆறு மாத‌ங்க‌ளுக்கு மேலாக‌ ஊதிய‌ம் கொடுக்க‌ப் ப‌ட‌வில்லை.

இன்றைக்கும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை க‌வ‌ரும் "அர‌ச‌ர்க‌ளின் ப‌ள்ள‌த்தாக்கு" ப‌குதிக்கு அருகில் டெய்ர் எல் மெடீனா உள்ள‌து. பாரோ ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில், அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ள் தான் க‌ல்ல‌றைக‌ளை க‌ட்டினார்க‌ள். (அந்த‌க் கால‌த்தில், இற‌ந்த‌ பாரோ ம‌ன்ன‌ர்க‌ளின் உட‌ல்க‌ளை, பிர‌மிட்டுக‌ளுக்கு ப‌திலாக‌ அங்கிருந்த‌ க‌ல்ல‌றைக‌ளில் புதைத்த‌ன‌ர்.)

அங்கு வேலை செய்து வ‌ந்த‌, ப‌ல்வேறுப‌ட்ட‌ தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ளுக்கும், தொழிலாள‌ர்க‌ளுக்கும் ஊதிய‌மாக‌ தானிய‌ம் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌து. (அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ப‌ண‌ப் புழ‌க்க‌ம் இருக்க‌வில்லை.) அவ‌ர்க‌ளுக்கு ஊதிய‌மாக‌ கிடைக்க‌ வேண்டிய் தானிய‌ங்க‌ள் தாம‌த‌மாக‌ வ‌ர‌த் தொட‌ங்கி, ஒரு க‌ட்ட‌த்தில் அரை வ‌ருட‌ கால‌ம் ச‌ம்ப‌ள‌ம் இன்றி வேலை செய்ய‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் ஏற்ப‌ட்ட‌து.

"நாங்க‌ள் ப‌ட்டினியால் சாகிறோம்..." என்று கோஷ‌ம் எழுப்பிய‌ தொழிலாள‌ர்க‌ள் வேலை செய்ய‌ ம‌றுத்த‌ன‌ர். வேலைநிறுத்த‌ம் செய்த‌து ம‌ட்டும‌ல்லாது, ஊர்வ‌ல‌மாக‌ சென்று, அர‌சு அலுவ‌க‌த்திற்கு முன்னால் அம‌ர்ந்திருந்து, எதிர்ப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். சுருக்க‌மாக‌, இந்த‌க் கால‌த்து தொழிலாள‌ர்க‌ளின் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம் மாதிரியே அப்போதும் ந‌ட‌ந்திருக்கிற‌து.

தொழிலாள‌ர்க‌ளின் இடைய‌றாத‌ போராட்ட‌ம் கார‌ணமாக‌ அர‌சு இய‌ந்திர‌ம் இற‌ங்கி வ‌ந்த‌து. ச‌ம்ப‌ள‌ப் பாக்கியை த‌ர‌ச் ச‌ம்ம‌தித்த‌து. அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய‌ தானிய‌ மூட்டைக‌ள் வ‌ந்து சேர்ந்த‌ன‌.

அன்று ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம், விரிவான‌ த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் ப‌திவுசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. அன்றைய‌ எகிப்திய‌ வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் ஒவ்வொரு நாளும் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை எழுதி வைத்துள்ள‌ன‌ர். (பார்க்க: Records of the strike at Deir el Medina under Ramses III)

இதிலே குறிப்பிட‌த்த‌க்க‌ விட‌ய‌ம் என்ன‌வெனில், அன்று ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப் போராட்ட‌மும் ப‌திவு செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. உழைக்கும் வ‌ர்க்க‌மும், அதிகார‌ வ‌ர்க்க‌மும் (காவ‌ல‌ர்க‌ள்) மோதிக் கொண்ட‌தை ப‌ண்டைய‌ வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் எழுதி வைத்துள்ள‌ன‌ர்.

ஒரு வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தால் டெய்ர் எல் மெடீனா ம‌க்க‌ள் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடித்து விட்ட‌ன‌ர்.

"முந்திய‌ ச‌முதாய‌ங்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் முழுவ‌தும் வ‌ர்க்க‌ப் போராட்ட‌ வ‌ர‌லாறாக‌வே இருந்துள்ள‌து." - கார்ல் மார்க்ஸ்

Tuesday, September 06, 2016

சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்

2 செப்டம்பர் 2016, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக பெருந்தொகையான உழைப்பாளிகள் கலந்து கொண்ட மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. 

இந்தியா முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு செய்தனர். உலக சனத்தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நாடென்பதால், பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் இதுவாக இருக்க வேண்டும். (The Labour Story that Big Media is Not Telling You; http://thewire.in/63622/labour-trade-unions-strike/
நரேந்திர மோடியின் அரசு, வெளிநாட்டு முதலீடுகளை கவரும் நோக்கில் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் தமது வேலை பறிபோகும் என்று இந்தியத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். சம்பள உயர்வு தொடர்பாக, அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்தது. அதற்குப் பிறகு தான், தொழிற்சங்கங்கள் கூட்டாக வேலைநிறுத்த அறிவிப்பு விடுத்தன. கடைசி நேரத்தில், வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்வதற்காக, அரசு மிகக் குறைந்த தொகை சம்பளம் கூட்டுவதற்கு முன்வந்தது. ஆனால், தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒபாமாவின் நாய்க்குட்டி சுகவீனமுற்றாலும் தலைப்புச் செய்தியாக வெளியிடும் சர்வதேச ஊடகம் எதுவும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி அறிவிக்கவில்லை. உலகில் சிறந்த ஜனநாயக நாடான அமெரிக்காவில், சொல்லி வைத்தால் போல் எல்லா ஊடகங்களும் மௌனம் சாதித்தன. CNN இன் சர்வதேச ஒளிபரப்பில் மட்டும் சில நிமிடங்கள் காட்டினார்கள். அமெரிக்காவில் யாரும் அதைப் பார்ப்பதில்லை. அதனால், இந்தியாவில் நடந்த வேலைநிறுத்தம் தெரியுமா? என்று யாரும் ஓர் அமெரிக்கரைப் பிடித்துக் கேட்டு விடாதீர்கள்.

உலகிற் சிறந்த ஜனநாயக நாட்டில் அப்படியொரு நிலைமை என்பதால், பிற உலக நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தெரிந்தாலும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பார்கள். வெனிசுவேலா நாட்டின் Telesur தொலைக்காட்சி மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. அதைத் தவிர, ஐரோப்பாவிலும் எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே சொன்னாலும் போனால் போகிறதென்று முக்கியத்துவம் குறைந்த செய்தியாக தெரிவித்தார்கள்.

அயல்நாடான இலங்கையில், தமிழ் ஊடகங்கள் எதுவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரச ஊடகம், தனியார் ஊடகம் எதுவானாலும் இந்த விடயத்தில் ஒன்று தான். 

இலங்கையில் வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகள் தனியார் நிறுவனங்களால் வெளியிடப் படுவதால், பெரும்பான்மையான தமிழ் வாசகர்களை கொண்டுள்ளன. ஆனால்,  இந்திய சுதந்திர தினத்திற்கு விசேட பதிப்பு வெளியிடும் வீரகேசரியும், தமிழ்த் தேசியர்களின் இதயகீதமான உதயனும், இந்திய வேலைநிறுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் தமது வலதுசாரி சுயரூபத்தையும், முதலாளிய விசுவாசத்தையும் இப்படியான தருணங்களில் வெளிப்படுத்த தயங்குவதில்லை. அது தானாம் நடுநிலைமை. 

இந்திய வேலைநிறுத்தம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 30 அன்று, கொழும்பு நகரில் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. அதிலும் பெருந்தொகையான மாணவர்கள் கலந்து கொண்டதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. கூட்டத்தை கலைப்பதற்கு பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்து தடியடிப் பிரயோகம் செய்தது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும், இலவசக் கல்விக்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சொன்னால் வெட்கக்கேடு. நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். 

அதே நாளில், ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் யாழ் நகருக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நூறு பேரளவில் இருக்கும். அன்று பலரை வரச் சொல்லிக் கேட்டதாகவும், நல்லூர்த் தேர்த் திருவிழா நடப்பதால் வர மறுத்து விட்டதாகவும் சமூகசேவகி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் செப். 2 பொது வேலைநிறுத்த‌ம், காட்டிக்கொடுக்கும் தொழிலாள‌ர் வ‌ர்க்க‌த் துரோகிக‌ளை க‌ல‌ங்க‌ வைத்துள்ள‌து. அன்று ப‌ல‌ர் வ‌க்கிர‌ங்க‌ளை கொட்டித் தீர்த்து த‌ம‌து கைக்கூலித் த‌ன‌த்தை வெளிப்ப‌டுத்தினார்கள்.

அண்மைக் கால‌ உல‌க‌ வ‌ர‌லாற்றில், ப‌ல‌ கோடி உழைப்பாளிக‌ள் ப‌ங்குப‌ற்றிய‌ வேலை நிறுத்த‌ப் போராட்ட‌ம் இந்தியாவில் ந‌ட‌ந்துள்ள‌து. ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ளே அத‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறிப்பிட்டு பேசியுள்ள‌ன‌.

நிலைமை இப்ப‌டியிருக்கையில், த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ம‌த்தியில் உள்ள‌, முத‌லாளிக‌ளுக்கு காட்டிக் கொடுக்கும் துரோகிக‌ள், வ‌ழ‌மை போல‌ எதிர்ப் பிர‌ச்சார‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர். உலகின் எந்த நாடாக இருந்தாலும்,வேலை நிறுத்தமானது தொழிற்சங்க நடவடிக்கையாகவே அறிவிக்கப் படுகின்றது. அந்த உண்மையை மறைத்த வலதுசாரிகள் வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். 

"இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டம்...", "வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது...", "பொது மக்களுக்கு இடையூறு செய்யும் கம்யூனிஸ்டுகள்..." இது போன்ற வதந்திகளை பரப்பி விட்டனர். சமூக வலைத்தளங்களில் இந்து மதவெறியர்களும், வலதுசாரிகளும், அது போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் உழைக்கும் மக்களின் எதிரிகள் தாங்களே என வெளிப்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்கா சிக்காக்கோ ந‌க‌ரில் தொட‌ங்கிய‌ தொழிலாளர்க‌ளின் உரிமைப் போராட்ட‌ம், 21ம் நூற்றாண்டிலும் தொட‌ர்கின்ற‌து. அமெரிக்கா, ர‌ஷ்யா, பிரித்தானியா, என்று தொழிலாள‌ர் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ நாடுக‌ளில் எல்லாம், அதை ந‌க்க‌ல் அடித்த‌, எதிர்ப் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ந்த‌ துரோகிக‌ள் இருந்திருக்கிறார்க‌ள். அவர்க‌ள‌து வ‌ர்க்க‌த் துவேஷ‌ ம‌ர‌ப‌ணு, க‌ண்ட‌ம் க‌ட‌ந்து சில த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ட‌த்த‌ப் ப‌ட்டிருக்க‌லாம்.

Tuesday, May 12, 2015

நெதர்லாந்தில் வேலையில்லாப் பிரச்சினையும், வேலைநிறுத்தப் போராட்டங்களும்


நெதர்லாந்தில், டில்பூர்க் (Tilburg) எனும் நகரத்தில், அடிப்படை வருமானம் தொடர்பான சமூகப் பரிசோதனை ஒன்று நடைபெறவுள்ளது. ரோபோ மயப்படுத்தல் காரணமாக, வருங்காலத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும். அதற்கு ஏற்றவாறு சமுதாய அமைப்பையும் மாற்ற வேண்டி இருக்கும்.

இன்று வரையில், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வேலையற்று இருப்பவர்களுக்கு அரச உதவித்தொகை வழங்கப் படுகின்றது. ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான மாதாந்த உதவித் தொகை அது. அந்த உதவித்தொகை பெறுவோர் வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்ல, மேலதிக பணம் சேமிப்பில் வைத்திருக்க முடியாது. எந்தநேரமும் அரச கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும். இது போன்ற நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

டில்பூர்க் நகரசபை, தற்காலிகமாக உதவித்தொகை பெறும் நூறு பேரை தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்யவுள்ளது. அதன் படி, அவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப் பட மாட்டாது. அவர்கள் மீதான அரச கண்காணிப்பும் நிறுத்தப் படும். மேலும், பகுதிநேர வேலை பார்த்து சிறிது பணம் கூட சம்பாதித்தாலும், அதை வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுவார்கள். (தற்போதைய நடைமுறையில், சம்பளப் பணத்தின் அளவுக்கு உதவித்தொகை குறைக்கப் படும்.)

இந்தப் பரிசோதனை முயற்சியின் நோக்கம் என்ன? இதனால் வேலையற்றவர்களின் மனநலம், உடல்நலம் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கிறார்கள். (தற்போதைய நிலைமையில், நிறையப் பேர் மன உளைச்சலால், அதனோடு சேர்ந்த உடல் உபாதைகளினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.)

அழுத்தங்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால், ஒருவர் சுதந்திரமாக தனது நன்மை குறித்து சிந்திக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், அவராகவே ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்வதற்கோ, அல்லது நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதற்கோ முன்வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அடிப்படை வருமானம் தொடர்பான பரிசோதனை முயற்சி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ள, மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நடைமுறைப் படுத்த ஆலோசிக்கப் பட்டுள்ளது.

ஐந்தாண்டு கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், தற்போது வளர்ந்து வருவதாக சொல்லப் படுகின்றது. அதே நேரம், அடிக்கடி வேலை நிறுத்தங்களும் நடக்கின்றன. அண்மையில், ஜெர்மன் ரயில்வே ஊழியர்களும், நெதர்லாந்து காவல்துறையினரும் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள்!

பொருளாதாரம் வளரும் நேரத்தில் எதற்காக வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தான் அதற்குக் காரணம். நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நேரம், முதலாளிகள் பல சாக்குப் போக்கு சொல்லி சம்பளத்தை அதிகரிக்க மாட்டார்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் அது எதுவும் செல்லுபடியாகாது. இலாபத்தில் தமக்கும் பங்கு வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இலாப விகிதம், வருடத்திற்கு எந்தளவு அதிகரிக்கின்றது என்ற துல்லியமான விபரத்தை, பெரிய இடதுசாரி தொழிற்சங்கங்கள் எடுத்து வைத்துக் கொள்கின்றன. அதைக் காட்டி, தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்க வேண்டும் என்று பேரம் பேசுகின்றன. முதலாளிகள் இணங்க மறுக்கும் பட்சத்தில், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

அவ்வாறு தான், நெதர்லாந்து காவல்துறையும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் குதித்தது. அதைத் தடுப்பதற்காக அரசு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. "அத்தியாவசிய சேவையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது" என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. ஆனாலும், அந்த தீர்ப்பையும் மீறித் தான், காவல்துறையினர் வேலைநிறுத்தம் செய்தனர். நீதிமன்றம் தடை போட்டு விட்டது என்பதற்காக உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா?

ஜெர்மனியில் வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. ஒவ்வொரு தொழிற்துறையும் ஒன்றை அடுத்து மற்றொன்று வேலைநிறுத்தத்தில் குதித்து வருகின்றன. பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

மேற்கு ஐரோப்பாவில் வாழும் உழைக்கும் வர்க்க மக்கள், போராடாமல் வாழ்க்கை இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது. உலகில் எந்த முதலாளியும் தானாக சம்பளத்தை உயர்த்தித் தர மாட்டான். அதற்கு நிறுவனமயப் பட்ட தொழிற்சங்க நடவடிக்கை அவசியம்.


நெதர்லாந்தில் கருத்து சுதந்திரம் படும் பாடு

கடந்த வருடம் நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் Fuck the King என்று கோஷம் எழுப்பிய ஆர்வலருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து, 6-5-2015 அன்று சில இனந்தெரியாத நபர்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள அரச மாளிகை சுவரில், Fuck the King என்று எழுதி இருந்தனர். நகரசபை நிர்வாகம், உடனே அந்த சுலோகத்தை அழித்து விட்டது. 

மேற்குலகில் கருத்து சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கிறது. நம்புங்கப்பா!

Wednesday, December 29, 2010

ஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்

டிசம்பர் 15, ஏதென்ஸ் நகரை ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் வேலைநிறுத்தத்தின் போது, அரச ஒடுக்குமுறை இயந்திரமான போலிசை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள். பெருமளவு உல்லாசப்பயணிகளை கவரும் ஏதென்ஸ் நகரம் அன்று போர்க்களமாக காட்சி அளித்தது.