Thursday, May 14, 2015

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சோவியத் தொழிற்புரட்சி


ரஷ்யாவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஸ்டாலின் சிலை. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், சிலை உடைப்புக் காட்சிகளை காட்டி, கம்யூனிசம் புதைகுழிக்குள் சென்று விட்டது என்று பலர் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஆனால், அங்கே புதிது புதிதாக முளைக்கும் சிலைகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ரஷ்யாவின், வடக்கு ஒசேத்தியா மாநிலத்தில், லிபெத்ஸ்க் (Lipetsk) நகரில் இந்த ஸ்டாலின் சிலை புதிதாக நிர்மாணிக்கப் பட்டது. (http://gorod48.ru/news/314858/) ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் லிபெத்ஸ்க் கிளையினர், சிலையை நிர்மாணிப்பதற்கு நகர சபை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி இருந்தனர். எனினும், கடைசி நேரத்தில் மறுப்புத் தெரிவித்த நகர சபை, சிலையை தெருவில் வைக்காமல், கட்சி அலுவக வளாகத்தினுள் வைக்குமாறு அறிவித்தனர். எனினும், அந்த அறிவித்தல் பிந்தி வந்த படியால், ஏற்கனவே தீர்மானித்த இடத்தில் சிலை வைக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், ரஷ்யா ஐரோப்பாவில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நாட்டுப்புறங்கள் விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்தன. நகர்ப்புறங்களில் முதலாளித்துவம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.

சுருக்கமாக, அன்றைய சோவியத் யூனியன், அன்றிருந்த மேற்கு ஐரோப்பாவை விட ஐம்பது அல்லது நூறு வருடங்கள் பின்தங்கி இருந்தது. அப்படியான அரசியல்- பொருளாதாரப் பின்னணியில் தான் ஸ்டாலின் அதிபராகப் பதவியேற்றார்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், ரஷ்யாவின் நூறாண்டு கால பொருளாதாரப் பின்னடைவை வெறும் பத்து வருடங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்பினார். "நாங்கள் முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாக வளர்ச்சி அடைவோம், அல்லது அழிந்து விடுவோம்" என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டினார்.

"மேற்கு ஐரோப்பாவில் கடந்த நூறு வருடங்களில் நடந்த தொழிற்புரட்சி, சோவியத் யூனியனில் பத்து வருடங்களுக்குள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால், அயலில் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் போன்றன ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமித்து விடும் என்று கூறினார்.

ஸ்டாலினின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்பது போல, 1941 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி படையெடுத்து வந்து, உக்ரைன், வெள்ளை, ரஷ்யா, மற்றும் பல ரஷ்யாவின் ஐரோப்பிய பிரதேசங்களை ஆக்கிரமித்தது. ஆனால், அதற்கு முன்னர் ஸ்டாலினின் சோஷலிச தொழிற்புரட்சியானது, சோவியத் யூனியனை நவீன இராணுவ வல்லரசாக மாற்றி விட்டிருந்தது.

Gosplan எனும் அரச திட்டமிடல் அமைப்பு, இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி, சோஷலிச பொருளாதாரத்தை, மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சமமாக கொண்டு வந்தது. அதன் விளைவு, 1945 ம் ஆண்டு, முழு உலகிற்கும் தெரிய வந்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்கடிக்கப் பட்டன.

முப்பதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது, அதனோடு சேர்ந்திருந்த ஐரோப்பிய பொருளாதாரமும் சரிந்தது. அதே கால கட்டத்தில், ஸ்டாலின் ஆட்சி செய்த சோவியத் யூனியனின் சோஷலிச பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. அன்று ரஷ்ய ரூபிளின் பெறுமதி, அமெரிக்க டாலரை விட உயர்ந்திருந்தது.

அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கையில், சோவியத் யூனியனின் பொருளாதாரம் கிறங்க வைக்கும் அளவிற்கு துரித கதியில் வளர்ந்தது. நாடு முழுவதும் புதிய புதிய தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், ரயில் பாதைகள் நிர்மாணிக்கப் பட்டன. ஒன்றுமில்லாத கட்டாந்தரையில் இருந்து புதிய பிரமாண்டமான நகரங்கள் தோன்றின. மேற்கத்திய அறிவுஜீவிகள் கூட, சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சியை நேரில் பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தனர். மொஸ்கோ நகரில் மக்களின் பொதுப் போக்குவரத்துக்கான மெட்ரோ ரயில் நிலையங்கள், மாளிகைகள் போன்று கட்டப் பட்டன.

சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டம், பெருமளவு தொழில்நுட்ப நிபுணர்கள், முகாமையாளர்களை எதிர்நோக்கி இருந்தது. அரச திட்டமிடல் அமைச்சான Gosplan, 1930 ம் ஆண்டு மட்டும் 435000 பொறியியலாளர்கள் தேவைப் படுவதாக அறிவித்திருந்தது.

சோவியத் பொருளாதார வளர்ச்சியை, ஸ்டாலின் தனது சமூகப் புரட்சிக்கான களமாக பயன்படுத்த விரும்பினார். புதிய தொழில்நுட்ப நிபுணர்கள் பாட்டாளி வர்க்கப் பின்னணியை கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதன் படி, தொழிலாளர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்கப் பட்டனர். ஆரம்பப் பாடசாலைக் கல்வியை கூட முடித்திராத சாதாரண தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து, பொறியியளாராக அல்லது முகாமையாளராக வர முடிந்தது.

சோவியத் யூனியன் முழுவதும், கோடிக் கணக்கான தொழிலாளர்கள், தாம் வேலை செய்த தொழிலகங்களை விட்டு விட்டு படிக்கச் சென்றார்கள். அவர்கள் ஸ்டாலினின் முற்போக்கான அபிரிவிருத்தித் திட்டங்களில் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களே ஸ்டாலினிச அரசின் ஆதரவுத் தளமாக இருந்தனர். ஏனென்றால், அவர்கள் தமது சொந்த வாழ்க்கையில் என்றுமில்லாத முன்னேற்றம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அன்று உருவாகிய பாட்டாளிவர்க்க புத்திஜீவிகள் "Vydvizjentsy" என்று அழைக்கப் பட்டனர்.

(தகவலுக்கு நன்றி: "Revolutionary Russia", 1891 - 1991, by Orlando Figes)

No comments: