Showing posts with label ஈழ விடுதலைப் போராட்டம். Show all posts
Showing posts with label ஈழ விடுதலைப் போராட்டம். Show all posts

Saturday, October 17, 2020

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

"அன்று தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்...!" என்று கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும் கூற்று மட்டுமல்ல. கவிஞர் தாமரை தனக்கு புலிகளின், ஈழத்து அரசியல் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். 

ஈழப்போர் முடிவுக்கு வரும் வரையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு அப்பால் புலிகளுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே ஏக பிரதிநிதிகளாக இருக்க விரும்பினார்கள். அதனால் தமக்கு எதிராக மட்டுமல்லாது, போட்டியாக இருந்த தமிழ்த்தேசியவாதிகளைக் கூட கொன்றொழித்தார்கள். ஆனால், வட- கிழக்கு முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்ன அரசியல் பேசுகிறார்கள் என்பது பற்றி அக்கறைப் படவில்லை. அவர்கள் எல்லோரும் தமக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருந்தாலும் புலிகளைப் பொறுத்த வரையில் "Never mind" கொள்கை தான். 

இந்தப் பின்னணியில் பார்த்தால், முரளிதரனின் அரசியல் நிலைப்பாட்டை புலிகள் அன்றே கணக்கெடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அன்று கிரிக்கெட் வீரர்கள் அரசியலை தாண்டி அனைத்து மக்களாலும் ஆராதிக்கப் பட்டார்கள். சிங்களவர்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள். இதற்கு புலிகள் இயக்க போராளிகளும் விதிவிலக்கல்ல. முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் எந்தத் தாக்குதலும் நடக்காது. அன்றைய தினங்களில் மட்டும் இராணுவத்தினரும், புலிகளும் "இலங்கையராக" ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து இரசிப்பார்கள். 

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் முத்தையா முரளிதரனை புலிகளே நேரில் அழைத்து வரவேற்று உபசரித்தார்கள். அவரது நட்சத்திர அந்தஸ்து புலிகளையும் மயக்கி இருந்தது. சில நாட்கள் வன்னியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஒழுங்கு படுத்தினார்கள். வன்னியில் புலிகளோடு சம்பந்தப் படாத ஒருவருக்கு கட் அவுட் வைத்திருந்தால், அது முரளிதரனுக்கு மட்டும் தான்! அத்துடன் கொக்க கோலா விளம்பரங்களும் சேர்ந்து கொண்டமை வேறு கதை. 

மீண்டும் அரசியலுக்கு வருவோம். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட முரளிதரனுக்கு அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது அபத்தமான பேச்சுகள் யாவும் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்தும், ஒரு சாமானியனின் உலகப் பார்வையில் இருந்தும் பிறக்கின்றன. இந்த உண்மை அன்று புலிகளுக்கும் புரிந்திருக்கும். உண்மையில் புலிகள் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்படையாக அரசை ஆதரித்த கொழும்பு/மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் தெரிந்து கொண்டே பேசிய நச்சுக் கருத்துகளுடன் ஒப்பிட்டால், முரளிதரன் பேசியது ஒன்றுமேயில்லை. Wait... இனித் தான் கிளைமாக்ஸ். அதே அரசியல்வாதிகள் சிலருடன் புலிகளும் நட்பு பாராட்டினார்கள்! எந்தளவுக்கு என்றால், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிப் போராளிகளுக்கு மறைவிடம் ஒழுங்கு படுத்தியதும் அவர்கள் தான்! 

சுருக்கமாக: கொழும்பு, மலையகத் தமிழர்களில் சிலர் அரசுக்கு ஆதரவாக இருப்பதை புலிகள் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இன்னும் சொன்னால், புலிகள் அதை அங்கீகரிக்கும் நிலையில் தான் இருந்தனர். இதற்கு தேசியத் தலைவர் பிரபாகரனே மிகச் சிறந்த உதாரணம். 

கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ஒருவர் கேள்வி கேட்டார்: 

"மலையகத் தமிழர்கள் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?" 

தலைவர் பிரபாகரன்: 

"அவர்கள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்!" 

 

மேலதிக தகவல்களுக்கு எனது காணொளியை பார்க்கவும்: 

 

Sunday, July 19, 2015

"புலிகள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?" - ஒரு விவாதம்


புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள் (http://kalaiy.blogspot.nl/2015/07/blog-post_16.html) என்ற கட்டுரைக்கு இவ்வாறு ஒரு இடதுசாரி நண்பர் எதிர்வினையாற்றி உள்ளார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" 

பிரபாகரனோ, புலிகளோ தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. தங்கள் உறுப்பினர்களை தோழர் என்று கூட அழைக்காதவர்கள். அதற்காக, புலிகள் இயக்கத்தினுள் இடதுசாரியம் இருக்கவில்லை என்று கூற முடியாது.

முதலில் இடது, வலது பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்காக, அது பற்றி கட்டுரையாளர் என்ன நினைக்கிறார் என்பது குறித்த சிறு விளக்கம்:
 ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் இடதுசாரியம். சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளின் அல்லது மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கும் அரசியல் வலதுசாரியம். இடதுசாரி, வலதுசாரி என்பது பொதுப்படையான இரண்டு பிரிவுகள். இரண்டுக்கும் நடுவில் நிற்கும் அரசியல் கட்சிகளும் உள்ளன. இந்தக் கலைச்சொற்கள், அரசியலை எளிமைப் படுத்தி புரிந்து கொள்வதற்காக பாவிக்கப்படுகின்றன. இடதுசாரிகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

புலிகள் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் எடுத்திருந்தால் அது இடதுசாரியம் தான். இல்லை, முதலாளிகளின் திறந்த சந்தை முக்கியம் என்று நினைத்திருந்தால் அது வலதுசாரியம் தான்.

"ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், முதலாளித்துவ நலன் சார்ந்ததாக இருந்தாலும், வரலாற்றுப் போக்கில் அது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றது." 150 வருடங்களிற்கு முன்னர் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த கார்ல் மார்க்ஸின் கூற்று அது. கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்த ஐரோப்பாக் கண்டத்தில், பிரெஞ்சுப் புரட்சியும், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்களும் நடந்து முடிந்திருந்தன.

இருபதாம் நூற்றாண்டின் அரசியல் கோட்பாட்டுக் கண்ணாடி அணிந்து பார்த்தால், "நெப்போலியன் ஒரு வலதுசாரி பாசிஸ்ட்" தான். ஆனால், அந்தப் போர்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட லிபரல் அரசுகளும், முதலாளித்துவ பொருளாதாரமும், இன்று பலரும் ஜனநாயகம் பற்றி பெரிதாக பீற்றிக் கொள்வதற்கு காரணமாக அமைந்திருந்தன. (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் ஜனநாயகம் இருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

புலிகள் இயக்கத்தில் காணப்பட்ட இடதுசாரியம் பற்றி எழுதினால், அதனை எந்தவொரு "புலி ஆதரவு வலதுசாரியும்" எதிர்ப்பதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு விடுவோம் என்று மௌனமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், "புலி எதிர்ப்பு இடசாரிகள்" அதை மறுத்துப் பேசுவதற்கு என்ன காரணம்?

ஒரு தடவை, வட கொரிய எதிர்ப்பாளர் ஒருவரை, புலி எதிர்ப்பாளர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து இருந்தேன். தன்னை ஒரு புலி ஆதரவாளர் மாதிரி காட்டிக் கொள்ளும் வலதுசாரியான அவருக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்வதை விட, அவருக்கு ஒன்றுமே புரியவில்லை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

புலி எதிர்ப்பாளர்கள், ஈழத்தின் யதார்த்தத்தை, மக்களின் மனப்போக்குகளை புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே தவறை தான் அந்த வட கொரிய எதிர்ப்பாளரும் செய்திருந்தார்.

வட கொரிய மன்னராட்சியை தூற்றுவதாலும், மனித உரிமை மீறல்களை கண்டிப்பதாலும், அங்குள்ள மக்களை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்த முடிவதில்லை. இன்றோ, நாளையோ, வட கொரிய மக்களின் எழுச்சி நடக்கும் என்று, அமெரிக்காவும் இலவு காத்த கிளியாக காத்திருந்து ஏமாந்து போனது.

ஒரு தடவை, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தமிழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தமிழர் என்பதால் ஈழப் போராட்டம் பற்றியும், புலிகள் பற்றியும் நிறையவே அறிந்து வைத்திருந்தார். ஒரு கம்யூனிஸ்டான அவர், தமிழ் தேசியப் புலிகளை (அல்லது வலதுசாரி பாசிசப் புலிகளை) தீவிரமாக ஆதரித்து வந்தார். "புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்த" தகவல் கூட அறிந்து வைத்திருந்தார். புலிகளின் மனித உரிமை மீறல்கள், குற்றங்களை அவர் இவ்வாறு நியாயப் படுத்தினார்: 
  • "சீனப் புரட்சியின் போது கொலைகள் நடக்கவில்லையா? மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி பிற இயக்கங்களை தடை செய்து அழிக்கவில்லையா?" 
  • "அவர்கள் சோஷலிசத்தின் பெயரால் செய்ததை, புலிகள் தேசியவாதத்தின் பெயரால் செய்தார்கள்." 
  • "இது ஒரு புரட்சிகர காலகட்டம். எல்லா நாடுகளிலும் போராட்டம் நடக்கும் பொழுது, கொலைகள், மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் நடக்கவே செய்யும். இவை இல்லாமல் போராட்டம் நடப்பதில்லை."


பலர் இங்கே நினைவுகூர விரும்பாத உண்மை ஒன்றுள்ளது. புலிகள் வலதுசாரிகளையும் கொன்றார்கள். அது மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளையும் கொன்றார்கள்! புலிகளால் கொல்லப் பட்ட அமிர்தலிங்கம் போன்றோர் யார்? இடதுசாரிகளா? இல்லை, வலதுசாரி தமிழ் தேசியவாதிகள். புலிகள் அவர்களை தான் முதலில் அழித்தொழித்தார்கள். அதற்குப் பிறகு புலிகள் சொல்வது மட்டுமே தமிழ் தேசியம் என்று ஏற்றுக் கொள்ளும் புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை உருவாக்கினார்கள்.

ஒரு நாட்டில் நடக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், மார்க்சிய பார்வையில் முற்போக்கானது. அது ஒரு ஜனநாயகப் புரட்சி என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. வலதுசாரிகளுக்கு இப்படி ஒரு மார்க்சியக் கோட்பாடு இருப்பது தெரியவே தெரியாது. இடதுசாரிகள் பலர் அதைக் கடந்து செல்லப் பார்க்கின்றனர். லெனின் அப்படியானவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள "தீவிர இடதுசாரிகள்" என்று அழைக்கிறார். லெனின் எழுதிய "இடதுசாரிக் கம்யூனிசம் - ஓர் இளம்பருவக் கோளாறு" என்ற நூல், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது.

இறுதிப்போர் காலத்தில், மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில், புலிகளுக்கு மக்களின் தார்மீக ஆதரவு இருந்து வந்தது என்ற உண்மையை மறுக்க முடியாது. அறிவுஜீவிகள் இதற்கு "Populist Strategy" என்று விளக்கம் கொடுக்கலாம். தீவிர வலதுசாரி சக்திகள் கூட, எப்போதும் இடதுசாரிய தந்திரோபாயத்தை வைத்து தான் மக்களை அணிதிரட்டுகின்றன.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியின் இறுதிக் காலத்தில், அந்த நாடு ஏகாதிபத்திய நெருக்குதலுக்குள் சிக்கித் தவித்தது. அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பிய இடதுசாரிகள் சதாம் ஆட்சியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஐரோப்பாவில் இருந்த ஈராக்கிய இடதுசாரிகள் அந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார்கள்.

சதாம் ஆட்சியை எதிர்ப்பதற்கு ஈராக்கிய இடதுசாரிகள் கூறிய காரணம்:"வலதுசாரி பாசிஸ்டான சதாம் ஹுசைன் ஈராக்கில் இருந்த இடதுசாரிகளை கொன்று குவித்தார். அவருக்கு இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" அதையே இன்று எனக்கு ஒரு நண்பர் கூறுகிறார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!"

அந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களைப் பொறுத்தவரையில் அது நியாயம் தான். ஆனால், அரசியலில் ஆர்வமற்ற பெரும்பான்மை மக்களுக்கு, வலதுசாரி, இடதுசாரி அரசியல் ஒன்றும் புரியப் போவதில்லை. தமிழ் தேசியவாதிகள் தமிழீழம் அமைத்து தருகிறோம் என்றால் அதை நம்புவார்கள். இஸ்லாமியவாதிகள் கிலிபாத் அரசு அமைக்கிறோம் என்றால் அதையும் நம்புவார்கள். மக்கள் எப்போதும் அப்படித் தான்.

ஈழப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில், ஒரு தடவை, கொழும்பில் தங்கியிருந்த என்னைப் பார்ப்பதற்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மா வந்திருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, விமானக் குண்டுவீச்சுகளுக்கு தப்பி, மிகுந்த சிரமங்களுடன் வந்திருந்தார். சொல்லொணா துன்பங்களை அனுபவித்த போதிலும், மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்திற்கே திரும்பிச் சென்றார். "இனிமேல் எந்தக் காலத்திலும் இராணுவம் அங்கே வராது. பெடியள் விட மாட்டாங்கள்..." என்று, புலிகளின் இராணுவ பலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

சாதாரண மக்கள் அப்படித் தான். அவர்கள் புலிகளை பாசிஸ்டுகள் என்று ஒதுக்கவில்லை. சிங்கள இனவாத இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்புவதற்கு, புலிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை, இன்றைய சிங்கள பேரினவாத அரசு பாதுகாத்து வருகின்றது என்ற உண்மை மக்களுக்கு புரியாது. தீவிரமாக அரசியல் பேசும், வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கே இன்னும் தெரியாத விடயம் அது. மக்களுக்கு தெரியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

"2009 மே மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று, இன்றைக்கு கட்டப்பொம்மன் வசனம் பேசும் வலதுசாரி "டமில் தேசியவாதிகள்", புலிகள் பலமாக இருந்த காலங்களில் வாய்களை மூடிக் கொண்டிருந்தார்கள். சொந்தக் கருத்து எதுவுமின்றி, கிளிப்பிள்ளை மாதிரி, புலிகள் சொன்னதை ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். "புலிகள் சொன்னதெல்லாம் வேதம். செய்வதெல்லாம் சரியாகும்." என்று பக்கப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

"உலகில் சிறந்த கல்விமான்களை கொண்ட, யூதர்களுக்கு நிகரான ஈழத் தமிழ் சமூகம்" என்று பெருமையடித்துக் கொண்டிருந்த, உயர் கல்வி கற்ற தமிழ் மேட்டுக்குடி வர்க்கம், பத்தாம் வகுப்பு கல்வியைக் கூட முடித்திராத புலிப் போராளிகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தது. ஈழத்தில் இப்படி ஒரு சமூகப் புரட்சி நடக்கும் என்று, அவர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். இன்றைக்கு புலிகள் அழிந்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தில் அவர்கள் மீண்டும் தமது மேதாவிலாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி சமூக மாற்றத்தை பல "இடதுசாரிகள்" கவனிக்கத் தவறி விடுகின்றனர். வாழ்க்கையில் கிடைக்கும் உயர்தரமான வசதி வாய்ப்புகள் என்ற மாயை, இடதுசாரிகளையும் வலதுசாரிகளாக மாற்றும் சக்தி படைத்தது. எங்களுக்கு பிரபாகரனோ அல்லது புலிகளின் தலைமையோ முக்கியமல்ல. அவர்கள வலதுசாரி பாசிஸ்டுகளாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு பின்னால் சென்ற மக்கள் தான் எமக்கு முக்கியம். இறுதிப்போரில் தனது இயக்கம் செய்த தவறுகளை விமர்சிக்கும், சாதாரணமான முன்னாள் புலிப் போராளி, இன்றைக்கும் தனது தலைவனின் வழிகாட்டல் சரியானது என்று நம்புகிறான். அப்படியானவர்களை எவ்வாறு வென்றெடுப்பது?

"மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்." - மாவோ




இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, May 18, 2015

தமிழ் நாடு, ஈழத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் - ஒரு மீளாய்வு


ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த அதே கால கட்டத்தில், தமிழ் நாடு விடுதலைப் போராட்டமும் நடந்தது என்ற தகவல், இன்றைக்கும் பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.


  1. ஆரம்பத்தில் இருந்தே, இந்திய அரசு ஈழத் தமிழரின் பிரச்சினையை, தனது வெளிவிவகார கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டிருந்தது. அது தனது நாட்டிற்குள் எந்த இடத்திலும் இனப் பிரச்சினை கிடையாது என்று உலகை ஏமாற்றிக் கொண்டிருந்தது. 
  2. ஈழத்தில் தமிழ் பூர்ஷுவா வர்க்கம், சிங்கள பூர்ஷுவா வர்க்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்திருந்தது. இனப் பிரச்சினையில் வட மாகாண குட்டி முதலாளிய இளைஞர்களும் பாதிக்கப் பட்ட பின்னர் தான், அது முப்பதாண்டு கால ஈழப் போராக பரிணமித்தது.


தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன் முதலாக தமிழ் தேசியத்தை நிறுவன மயப் படுத்தியது. அதன் தாக்கம் ஈழத்தில் பல இடங்களிலும் எதிரொலித்தது. இலங்கையில் வாழும் தமிழர்களும், தமிழக சினிமாப் படங்களின் இரசிகர்களாக, தமிழக சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்கள், உடனுக்குடன் ஈழத்திற்கும் கடத்தப் பட்டன. ஈழத் தமிழர்கள், திமுக தலைவர் கருணாநிதியை தமிழினத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. முதன்முதலாக தமிழீழக் கோரிக்கை வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தை சுவீகரித்து இருந்தது.

தமிழகத்து பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்த திமுக, தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டதும், அதற்கு பதிலாக உடனடியாக ஒரு மாற்று இயக்கம் தோன்றவில்லை. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்த தமிழரசன் குழுவினர் தமிழ்நாடு விடுதலையை தமிழ் பாட்டாளி வர்க்கக் கோரிக்கை ஆக்கினார்கள். எழுபதுகளுக்குப் பின்னர் ஈழத்தில் எழுந்த குட்டி முதலாளிய வர்க்கத்தின் எழுச்சியின் தீவிரத்திற்கு, த.வி.கூ. வினால் முகம் கொடுக்க முடியவில்லை. அதனால், விரைவிலேயே அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப் பட்டது. ஆனால், ஈழத்தில் எழுந்த மாற்று அரசியல் அமைப்புகள், பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டு தவித்தன.

எழுபதுகளில் சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்தும் நோக்கில், இலங்கை அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் சட்டம், வட இலங்கையை சேர்ந்த குட்டி முதலாளிய வர்க்க இளைஞர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தமிழகத்திலும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அது போன்ற எழுச்சியை உண்டாக்கி இருந்தாலும், அதன் பலன்களை ஏற்கனவே திமுக அறுவடை செய்து விட்டிருந்தது. ஈழத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சி, மிதவாத தமிழ் அரசியல் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. பாராளுமன்ற பாதையை நிராகரித்து, ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில், த.வி.கூ. தீவிரவாத இளைஞர்களை தனது அடியாட்படையாக வைத்திருக்க விரும்பியது. ஆயினும், தீவிரவாத இளைஞர்கள் மத்தியில் பரவிய இடதுசாரிக் கருத்துக்கள் தான், மிதவாத அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டியது எனலாம்.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும், எழுபதுகளின் தொடக்கத்தில் தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியும், ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் விதைத்தது. அதே மாதிரி, ஈழப் போராட்ட இயக்கங்களின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் தமிழகத்தில் எதிரொலிகளை உண்டாக்கிய நேரம், தமிழ் நாடு விடுதலைப் படை தோன்றியது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பௌதிகவியல் விதிகளுக்கு அமைய அனைத்தும் நடந்துள்ளன. அந்த உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அரசுகள் புரிந்து கொள்கின்றன. அதனால் தான், முப்பதாண்டு கால போருக்குப் பின்னர், மிகக் கொடூரமாக புலிகளை அழித்து, தெற்காசிய பிராந்திய விடுதலை இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெறுவதும், அதன் அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ளன. ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாடு விடுதலை பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருந்தது. பல்வேறு விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிலர் தமது தனிப்பட்ட கருத்தாக அதனை முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் தலைமை அது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருந்தது. 

இடதுசாரி இயக்கங்கள் கூட, இந்திரா காந்தி மறைவுக்கு அஞ்சலி செலுத்துமளவிற்கு, இந்தியாவின் கைப் பொம்மைகளாக இயங்கினார்கள். ஆயுதங்கள், நிதிகளை வழங்கி, ஈழ விடுதலை அமைப்புகளை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அது இறுதியில், இந்தியா விரும்பிய நேரம் அந்த இயக்கங்களை அழிப்பதற்கு வழி வகுத்தது.

ஈழத்தின் விடுதலைப் போராட்டம், தமிழ் பேசும் பூர்ஷுவா வர்க்க கோரிக்கையாக தொடங்கினாலும், அது குட்டி முதலாளிய இளைஞர்களினால் வழிநடாத்தப் பட்டு, பாட்டாளி வர்க்க மக்களின் கைகளில் வந்து சேர்ந்தது. பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவின்றி, முப்பதாண்டுகள் வெற்றிகரமாக போராட முடிந்திருக்காது என்று வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அந்தப் "பெரும்பான்மை மக்கள்" யார்? ஈழத்தின் தமிழ் உழைக்கும் மக்கள் அல்லவா? 

உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்த போராளிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தான் உருவானார்கள். சாதி ஒடுக்குமுறைக்கு பலியான, வறுமையினால் பாதிக்கப் பட்டவர்கள், அதாவது இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராடினார்கள். அந்த மக்களை நிறுவன மயப் படுத்துவதும், ஓர் இனத்தின் விடுதலைக்கு தலைமை தாங்க வைப்பதும், ஈழத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்றல்ல. ஆனால், ஒரு தேசிய இனத்தின் சுதந்திரமும், சுய நிர்ணய உரிமையும், அதற்கு அயலில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே சாத்தியமாகும்.

Monday, December 09, 2013

காஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத தமிழர்களும்


ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்த கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் கை விடப் பட்டு, தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுக்கும், தரகு முதலாளியக் கொள்கை மட்டுமே கோலோச்சுகின்றது. ஒரு சிலர் இதற்கு "தலைமுறை இடைவெளி காரணம்"  என்று சாட்டுப் போக்குச் சொல்லலாம். உண்மையில், பனிப்போர் முடிந்த பின்னர், உலகம் தலைகீழாக மாறி விட்டது. அதற்கு முன்னர், போலி சோஷலிச அரசு நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சமூக - ஜனநாயக கட்சிகளாக மாறி விட்டன. உலகளவில் ஏற்பட்ட இயங்கியல் மாற்றம் ஈழப் போராட்டத்தையும் பாதிக்காமல் விட்டிருக்காது.

இன்றைக்கும் சோவியத் யூனியன் இருந்திருந்தால், மண்டேலா தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழித்திருப்பார். தனது 95 வது வயதில், ரொபின் தீவில் ஒரு கைதியாக இறந்திருப்பார். மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும், மண்டேலாவின் மரணத்தை "ஒரு பயங்கரவாதியின் மறைவாக" கொண்டாடி இருப்பார்கள்.

பனிப் போர் முடிந்த பின்னர் தான், மண்டேலா சிறையில் இருந்து விடுதலையானார். அதற்குப் பின், அவர் தன்னை ஒரு காலத்தில் பயங்கரவாதி என்று ஒதுக்கிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் கை கோர்த்தார்.  மண்டேலா கைகோர்த்த மேலைத்தேய நாடுகள், தென்னாபிரிக்காவிலும், நமீபியாவிலும், அங்கோலாவிலும் கறுப்பின மக்களை இனப்படுகொலை செய்த நிறவெறி அரசை ஆதரித்து வந்தமை ஒன்றும் இரகசியமல்ல.

நெல்சன் மண்டேலா  மகிந்த ராஜபக்சவுடனும் கை கோர்த்திருப்பார். ஆனால், தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மண்டேலா ஆட்சி நடத்திய காலத்தில், மகிந்த ராஜபக்ச பதவியில் இருக்கவில்லை. அந்தக் காலங்களில், சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் ஜனாதிபதியாக இருந்தார். சந்திரிகாவும் ஈழப் போரில் பல்லாயிரம் தமிழர்களை கொன்றவர் தான். மண்டேலா அவருடன் கை கோர்ப்பதற்கு தயங்கவில்லை. "மண்டேலா தன்னை மகளாக கருதுவதாக..." சந்திரிக்கா சொல்லிப் பெருமைப் பட்டார்.

இவ்விடத்தில் எழும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை ஒன்று தான். அமெரிக்க ஏகாதிபத்திய தந்தையின் அரவணைப்பில், அனைத்து உலக நாடுகளின் தலைவர்களும் பிள்ளைகள் தான். நவ காலனிய அமைப்பை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள் கை கோர்த்துக் கொள்கிறார்கள். மக்களாகிய நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். நவ காலனிய தரகு முதலாளிகளை எதிர்க்க வேண்டும்.

இறுதியில் மண்டேலாவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசப் போக்கை பின்பற்றி வந்தார். (இல்லாவிட்டால், அவர் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது.) ஆயினும், அவர் தனது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற கியூபா, பிற கம்யூனிச நாடுகளின் உதவிகளை புகழ்ந்து பாராட்டினார். மண்டேலாவை விடுதலை செய்து, ஜனாதிபதியாக்கிய "நன்றிக் கடனுக்காக", கியூபாவுடனான உறவை துண்டிக்க வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்தியது. மண்டேலா அந்த பயமுறுத்தல்களுக்கு அடி பணிய மறுத்தார். இன்னும் இன்னும் பிடல் காஸ்ட்ரோவையும், கியூபாவையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

மண்டேலா, தென்னாபிரிக்க அரசியலில் பல தவறுகளை விட்டிருக்கலாம். (அவரது மாஜி மனைவி வின்னி கூட கடுமையான விமர்சனங்களை வைத்தார்.) இருந்த போதிலும், சர்வதேச மட்டத்தில் மண்டேலா நேர்மையான அரசியல் தலைவராக இருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, லிபரல் ஜனநாயகவாதி. ஆனால், கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளை, சமநீதிக்கான போராட்டத்தை ஆதரித்து பேசினார். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் உலக கம்யூனிச நாடுகளின் ஆதரவு மட்டும் இருந்திரா விட்டால், "ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ்" (ANC) என்றைக்கோ அழித்தொழிக்கப் பட்டிருக்கும். 

மண்டேலா அதனை பல தடவைகள் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார். "கொடுங்கோல் நிறவெறி அரசினால் நாங்கள் ஒடுக்கப் பட்ட நேரம், கம்யூனிச நாடுகள் தான் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டின. மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள், அடக்குமுறையாளர்களுடன் கூடிக் குலாவின. இன்று அவர்கள் எமது கம்யூனிச நண்பர்களுடனான தொடர்பை முறிக்கச் சொல்கிறார்கள். நாங்கள் அந்தளவு நன்றி மறந்தவர்கள் அல்ல." என்று மண்டேலா விளக்கம் அளித்தார். (பார்க்க:தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்) அப்படிப் பட்ட நேர்மையான மனிதரான மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மீண்டும் கம்யூனிச வெறுப்பை மக்கள் மனதில் விதைக்க எண்ணுகின்றனர். அதைக் காணும் பொழுது, ஆயாசமே எஞ்சுகின்றது. தமிழர்கள் அந்த அளவுக்கு நன்றி மறந்த இனமாக இருப்பது கவலைக்குரியது.

மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு பற்றி தெரியாத, புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகள் இப்படியான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்: 
//மண்டேலா, மற்றும் பிற போராளிகளுடன், பிடல் காஸ்ரோவை ஒப்பிடமுடியாது. பிடல் அமெரிக்காவின் எதிரியாக மட்டுமே இருக்கிறார். இன விடுதலைக்காக போராடும் மக்களை விட ராஜபக்சேக்களுடனேயே கை கோர்த்துக் கொள்கிறார்...// ஓ ... அப்படியா?

மண்டேலா தன்னை சிறையில் போடுவதற்கு காரணமாக இருந்த, தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசின் ஜனாதிபதி கிளார்க்குடன் கை குலுக்கி, நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர். 2008 வரையில் அமெரிக்கா மண்டேலாவின் பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை. மண்டேலா, தன்னை  பயங்கரவாதி என்று இழிவு படுத்திய,  மேற்கத்திய நாட்டுத்  தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டவர். ஆனாலும், அவர் ஒரு காலத்தில் கியூபா செய்த உதவிகளை மறக்கவில்லை. நமது தமிழ் தேசியவாதிகள் மறந்து விட்டார்கள்.

மேற்கத்திய நாடுகள் எல்லாம், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு கொடுத்து உதவிக் கொண்டிருந்த காலத்தில், பிடல் காஸ்ட்ரோ மண்டேலாவின் ANC க்கு உதவினார். தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட நமீபியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவினார். கியூபப் படைகள், அங்கோலாவிலும், நமீபியாவிலும் தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தை எதிர்த்து போரிட்டன. ஆயிரக் கணக்கான கியூப வீரர்கள், நிறவெறிக்கு எதிரான போரில் வீரச் சாவடைந்தனர். சிறையில் இருந்து விடுதலையடைந்த மண்டேலா, கியூபா ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய உதவியை பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.

இது ஒரு பொது அறிவு. 1983 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், இந்தியாவிடம் இருந்து பயிற்சியும், நிதியும் கிடைத்தன. 83 ஜூலைக் கலவரத்திற்கு பிறகு தான், மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 1987 ல், அதாவது இந்திய இராணுவத்துடன் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் தான், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து நிதியும், ஆயுதங்களும் வரத் தொடங்கின. 1983 க்கு முன்னர் யார் ஆயுதங்களும், பயிற்சியும் வழங்க முன்வந்திருப்பார்கள்? 

அந்தக் காலத்தில் தான், புலிகள் இயக்கம் சர்வதேச மார்க்சிய இயக்கங்களுடனும், கம்யூனிச நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 1978 ம் ஆண்டு, ஹவானாவில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டில் புலிகள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். அதில் இரண்டு பேர் சோவியத் யூனியனில் கல்வி கற்றவர்கள். அப்போது லண்டனில் இருந்த LTTE அமைப்பாளர் கிருஷ்ணர், கம்யூனிச நாடுகளிடம் உதவி கோரும் வகையில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, கியூபாவிற்கு அனுப்பி வைத்தார். ஹவானா மகாநாட்டில் அவை விநியோகிக்கப் பட்டன.

கியூபா சென்ற புலிகள் பிடல் காஸ்ட்ரோவுடன் கூட பேசி இருக்க முடியும். எழுபதுகளில் சில நேரம், புலிகளுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் தருவதற்கு கியூபா முன்வந்திருக்கலாம். (ஏன் அப்படி நடக்கவில்லை என்பதை பின்னால் பார்ப்போம்.) அருளரின் லங்கா இராணி நாவலில் இது மறைமுகமாக குறிப்பிடப் பட்டுள்ளது. 1977 ம் ஆண்டு கொழும்பில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப் பட்ட தமிழ் அகதிகள், லங்கா ராணி கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். லங்கா ராணி கப்பலில் சென்று கொண்டிருந்த தமிழ் அகதிகள், ஆயுதப் போராட்டத்தின் அவசியம் பற்றி விவாதிக்கின்றனர். அதில் ஒருவர் கியூபாவிடம் இருந்து உதவி பெற முடியும் என்று கூறுகின்றார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி, அந்த நாவல் விபரிக்கவில்லை.

லங்கா ராணி நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிஜமான மனிதர்கள். அவர்களின் உரையாடல்களும் உண்மையில் நடந்தவை. கியூபாவிடம் உதவி பெற்று ஆயுதப் போராட்டம் நடத்தலாம் என முடிவெடுத்தவர்கள், பின்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது பங்களிப்பை வழங்கி இருந்தனர். இன்றைக்கு அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம், அல்லது போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்கலாம்.

அன்று கியூபாவோ, பிடல் காஸ்ட்ரோவோ, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பை வழங்கியதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம், "சிங்கள அரசுடனான நட்புறவல்ல". கியூபா மட்டுமல்ல, லிபியா, சிரியா, தெற்கு யேமன் போன்ற நாடுகள் கூட, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கி வந்தன. அதே நேரம்,இலங்கை அரசுடனும் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தன. ஏனென்றால், அந்தக் காலத்தில் வளர்ந்து வந்த "அணிசேரா நாடுகள்" என்ற சர்வதேச அமைப்பை சீர்குலைக்க விரும்பவில்லை.

கியூபா ஈழப் போராட்டத்திற்கு நேரடியாக உதவாததற்கு, இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. பனிப் போர் காலகட்டத்தில், கியூபா லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மட்டுமே தனது செயற்பாடுகளை கொண்டிருந்தது. சோவியத் யூனியனும் அதையே விரும்பியது. (கேஜிபி யின் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட "The Mitrokhin Archive" நூலில் இது விரிவாக எழுதப் பட்டுள்ளது.) அதற்குப் பதிலாக, தெற்காசிய நாட்டு விடுதலை இயக்கங்களுடனான தொடர்பை, பாலஸ்தீன இயக்கங்கள் பேணி வந்தன.

அதாவது, உலகம் அன்றிருந்த நிலையில், ஒரு ஈழ விடுதலை இயக்கம், கியூபாவிடமோ, அல்லது சோவியத் யூனியனிடமோ உதவி கோரி இருந்தாலும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) தான் அதற்கு பொறுப்பேற்று இருக்கும். இறுதியில் அதுவே நடந்தது. அன்று லண்டனில் இயங்கிய மார்க்சிய-லெனினிச ஈரோஸ் இயக்கத்திற்கும், புலிகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. ஈரோஸும், PLO வும், இலங்கையில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு, லெபனானில் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தன.

லெபனானில் PLO விடம் இராணுவப் பயிற்சிக்கு சென்ற முதல் பிரிவு புலி உறுப்பினர்களில், அதன் தலைவர் உமா மகேஸ்வரனும் ஒருவர். பின்னாளில் உமா மகேஸ்வரன், பிரபாகரனுக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டதும், அதனால் இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டதும் தனிக் கதை. புலிகளிலும், அதிலிருந்து பிரிந்த புளொட்டிலும், ஆரம்பத்தில் லெபனான் பயிற்சி எடுத்தவர்களே பிற உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். 1983 ஜூலைக் கலவரத்திற்கு பின்பு தான், இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தது.

அந்தக் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாக தன்னை காட்டிக் கொண்டது. சோஷலிசத் தமிழீழம் வேண்டும் என்றது. புலிகளின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தவர்களும் மார்க்சிஸ்டுகள் தான். சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் (உதாரணத்திற்கு: கவிஞர் புதுவை இரத்தினதுரை), ட்ராஸ்கிச கட்சிகளில் இருந்தும் (உதாரணத்திற்கு: அன்டன் பாலசிங்கம்), பல மார்க்சிஸ்டுகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தனர். இந்திய பத்திரிகை ஒன்று, அன்றைய யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை பேட்டி எடுத்தது. அப்போது, "தமிழீழம் கிடைத்தால் எப்படியான அரசியல் - பொருளாதார கொள்கை நடைமுறைப் படுத்தப் படும்?" என்று கேட்ட கேள்விக்கு, கிட்டு கூறிய பதில் "புரட்சிகர கம்யூனிசம்"! (ஆதாரம்: விக்கிலீக்ஸ்)

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், "கம்யூனிசப் புலிகளை" கண்டு அஞ்சியதில் வியப்பில்லை. ஜேவிபி யும், புலிகளும் சேர்ந்து, இலங்கையை கம்யூனிச நாடாக்கி விடுவார்கள் என்று பயந்தார். அவ்வாறே மேலைத்தேய நாடுகளில் பிரச்சாரம் செய்தார். "மார்க்சியப் புலிகளை" அழிப்பதற்கு பிரிட்டனிடம் உதவி கோரினார். கம்யூனிச புலிகளை வளர விடக் கூடாது என்று சூளுரைத்துக் கொண்டு களமிறங்கிய பிரிட்டனின் SAS கூலிப்படையினர், இலங்கையில் விசேட அதிரடிப் படை (STF)என்ற புதிய இராணுவத்தை உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த பல தமிழினப் படுகொலைகளுக்கு STF அத்துமீறல்களே காரணமாக இருந்தன.

அநேகமாக, பனிப்போரின் இறுதிக் காலத்தில், புலிகளின் அரசியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இயக்கத்தினுள் இருந்த இடதுசாரிகள் ஓரங் கட்டப் பட்டனர். வலதுசாரிகளின் கை ஓங்கியது. வலதுசாரிகள் புலிகளை அமெரிக்க சார்பு இயக்கமாக வழிநடத்திக் கொண்டு சென்றார்கள். மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு நிறுவனங்கள், போராட்டத்திற்கு நிதியும், ஆயுதங்களும் அனுப்பும் அளவிற்கு பலம் பெற்று விளங்கின. அவை நேரடியாகவே மேற்கத்திய அரசாங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன. 

புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின் நிதி, சர்வதேச மூலதனத்தின் ஓரங்கமாக ஐக்கியமாகியது. முரண்நகையாக அதுவே, புலிகளின் அழிவுக்கும் உதவியது. இறுதிப் போர் நடந்த காலத்தில், மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், தமது ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தினார்கள். அமெரிக்காவில் "ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு" என்ற Lobby group உருவானது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட்ட, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் டாலர் நிதி வழங்கினார்கள். இன்றைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு, சிஐஏ  யின் கண்காணிப்பின் கீழ், அமெரிக்காவில் தான் இயங்குகின்றது. 

இதிலே ஒரு வேடிக்கையான முரண்பாட்டை கவனிக்க வேண்டும். வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், ஒரு பக்கத்தில் தங்களை புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டனர். மறு பக்கத்தில், புலிகளை அழிக்கத் துடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆதரவளித்தனர். அது எவ்வாறு சாத்தியம் என்பது, அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்கா புலிகளை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது என்ற விடயம், இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே வெளிப்படையாக தெரிந்தது. 

அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்கு முயன்ற சில தமிழர்களை, FBI மடக்கிப் பிடித்தது. இன்று வரையில், அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்து சமுத்திரத்தில், சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அவற்றை ஸ்ரீலங்கா கடற்படை தேடி அழிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. இது எல்லாவற்றையும் விட, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பிளேக், புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்:"புலிகள் மீண்டும் போருக்கு செல்லத் துணிந்தால், இலங்கை அரசின் பக்கம் நின்று, புலிகளை அழிப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குப்போம்..." என்று கூறினார்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம், கியூபா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சுட்டிக் காட்டி இருந்தது. அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மேற்படி உண்மையை மறைத்துக் கொண்டே,"பிடல் காஸ்ட்ரோ ராஜபக்சேக்களுடன் கை கோர்த்துக் கொண்டதாக" திரிபு படுத்தி பிரச்சாரம் செய்தனர். இன்றைக்கும் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படியான பிரச்சாரத்தை முன்னெடுக்கா விட்டால், தமிழ் மக்கள் மத்தியில் தங்களது இரட்டை வேஷம் கலைந்து விடும் என்று அஞ்சுகின்றனர். புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்த விடயம் அமபலப் பட்டு விடும் என்று அஞ்சுகின்றனர்.

ஒரு உண்மையான தேசிய விடுதலை இயக்கம் எதிர் நிலை வல்லரசுகளையும் சமமாக கருதி இருக்க வேண்டும். முதலாளித்துவம், சோஷலிசம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான இராஜதந்திர அணுகுமுறை இல்லாமல் போனது ஒரு பெரிய குறைபாடு. புலிகளின் அல்லது தமிழர்களின் பலவீனத்தை, ராஜபக்சேக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு, இப்போது புலம்புவதில் அர்த்தமில்லை.

*****************

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்
2.ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு
3."மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!

Friday, December 06, 2013

ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே, ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் தமிழினவாதிகள், யதார்த்தத்தை மறந்து சிந்திப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது புதிதாக முளைத்துள்ள போலி இடதுசாரிகள் சிலர், இடதுசாரியம் பேசிக் கொண்டு, புதிய மொந்தையில் பழைய கள்ளை இறக்கித் தருகிறார்கள். கள்ளில் கம்யூனிச வாசனையுடன் தமிழ் தேசியத்தை கலந்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற தேசியமும், சோஷலிசமும் கலந்த இயக்கங்கள் முளைப்பது, வரலாற்றில் இதுவே முதல் தடவை அல்ல. இன்று ரஷ்யாவில் உள்ள, "தேசிய போல்ஷெவிக் கட்சி" யுடன் அவர்களை ஒப்பிடலாம். அந்தக் கட்சியின் கொடியிலும் அரிவாளும், சுத்தியலும் சின்னம் இருக்கும். ஆனால், கொள்கை அளவில் மிகத் தீவிரமான ரஷ்ய தேசியவாதிகள். அவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களை ஏய்ப்பதற்காக, கம்யூனிஸ்டுகள் போன்று பாவனை செய்கிறார்கள்.

சமரன் குழு என்ற பெயரில், ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்வதாக சொல்லிக் கொண்டு, தாமாகவே கற்பனை செய்து புனைந்த கட்டுக்கதைகளை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார்கள். "புதிய ஜனநாயகம்" இதழில், அவர்களது பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தும் கட்டுரைகள் வந்துள்ளன. முகநூலில் "தமிழ் இனியன்" என்ற பெயரில் இயங்கும் ஒருவர், என்னுடன் ஈழம் பற்றிய விவாதத்திற்கு வந்தார். அதில் அவர் தவறாக புனைந்து கூறிய கருத்துக்களை, நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. 

குறிப்பாக, ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், டெலோ, புலிகள் ஆகிய இயக்கங்களுக்கு இடையில் நிலவிய ஒத்த கருத்துள்ள கொள்கைகள் பற்றிய விவாதம் எழுந்த பொழுது அதை மறுத்துரைத்தார். டெலோ, புலிகள் இவற்றிற்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளாக "இந்திய கைப் பாவைகள்" என்ற அளவுகோலை பயன்படுத்தினார். அதாவது, புலிகளைத் தவிர்ந்த பிற இயக்கங்கள், இந்தியக் கைப் பாவைகளாக இருந்தன என்பது தான், அவரைப் பொறுத்த வரையில் முக்கியமான "கொள்கை வேறுபாடு." அது சரியானதா என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஆகிய இயக்கங்களுக்கு இடையில் காணப்பட்ட, கொள்கை ரீதியான சில ஒற்றுமைகள்


  • இரண்டுமே வலதுசாரி தேசியவாதத்தை கொண்டிருந்தன. உதட்டளவில் கொஞ்சம் இடதுசாரியம் பேசின. இரண்டுமே இராணுவ கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அரசியல் வகுப்புகள் நடத்தப் பட்டாலும், அரசியல் பிரிவு வளர்வதற்கு ஊக்குவிக்கப் படவில்லை. அரசியல் பிரிவு கூட, இராணுவ வெற்றிகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு தான் பெரிதும் பயன்படுத்தப் பட்டது. 

  • டெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கியமை, அந்தக் காலத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய இராணுவத் தாக்குதல் ஆகும். சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில், நாற்பதுக்கும் குறையாத பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. டெலோ அதனை வீடியோ படமாக்கி, அதனை ஊர் ஊராக கொண்டு சென்று காட்டியது. அதன் மூலம், நிறைய புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடிந்தது. இராணுவ வெற்றியால் கவரப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரும் டெலோவுக்கு ஆதரவளித்தனர். 

  • பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். புலிகள் இராணுவ முகாம்களை தாக்கிய போதெல்லாம், வீடியோ படப்பிடிப்பாளர்களும் கூடச் சென்றார்கள். அவர்கள் படமாக்கிய வீடியோக்கள், வெளிநாடுகள் வரையில் பரவின. வீடியோ பிரச்சாரம் மூலம், புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டதுடன், மக்கள் ஆதரவையும் பெருக்கிக் கொண்டனர்.

  • இடதுசாரி தன்மை கொண்ட ஈழ விடுதலை இயக்கங்களில், எல்லோரும் அரசியல் பேசுமளவிற்கு பயிற்சியளிக்கப் பட்டது. ஆனால், வலதுசாரி இராணுவவாத இயக்கங்களான டெலோவும், புலிகளும் "அரசியல் ஆலோசகர்" என்ற தனியான பதவியை உருவாக்கினார்கள். டெலோவுக்கு சத்தியேந்திரா அரசியல் ஆலோசகராக இருந்தார். புலிகளுக்கு முன்னர் நித்தியானந்தனும், பின்னர் அன்டன் பாலசிங்கமும் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள்.

டெலோ, புலிகள் இரண்டு இயக்கங்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமைகளை சுட்டிக் காட்டியதும், தமிழ் இனியன் பின்வரும் விளக்கம் ஒன்றை தந்திருந்தார். கீழே, தமிழ் இனியனின் கூற்றை அப்படியே தருகிறேன்:

//இரண்டு இயக்கங்களுமே, ஏன் எல்லா இயக்கங்களுமே, தமிழீழ விடுதலையை முன்வைத்தே தோன்றின. அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. ஆனால், பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப் பாவையாக மாறினார்கள். அப்படி ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. எனவே, புலிகளும், டெலோவும் ஒத்த கருத்தில் இருந்தனர் எனச் சொல்வது அபத்தமானது.//

"எல்லா இயக்கங்களும் "தமிழீழ" விடுதலையை முன்வைத்தே தோன்றின." என்று தொடங்குவதே அவரது அரசியல் பாமரத்தனத்தை காட்டி விடுகின்றது. டெலோ, புலிகள், புளொட் ஆகிய மூன்று இயக்கங்கள் மட்டுமே "தமிழீழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயர்களிலேயே தமிழீழம் இருக்கும். ("தமிழீழ" விடுதலை இயக்கம், "தமிழீழ"விடுதலைப் புலிகள், "தமிழீழ"மக்கள் விடுதலைக் கழகம் )  ஈரோஸ், ஈபிஆர்எல்எப் ஆகியன "ஈழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயரிலேயே ஈழம் இருக்கிறது. ("ஈழப்" புரட்சி அமைப்பு, "ஈழ" மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி )

தமிழீழம், ஈழம் இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இருக்கிறது. அது தான் கொள்கை வேறுபாடு.  முதன்முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தான், தமிழீழம் என்ற சொல்லை பயன்பாட்டில் கொண்டு வந்தது. புத்தளம் முதல் அம்பாறை வரையிலான தமிழீழ வரைபடத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். அந்தக் கோட்பாட்டை, டெலோவும், புலிகளும் எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொண்டன. புளொட் பிற்காலத்தில் புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் ஆகும். ஆகவே அவர்களும், அதே தமிழீழத்தை ஏற்றுக் கொண்டமை புரிந்து கொள்ளத் தக்கது.

எழுபதுகளில், புலிகள் தோன்றிய சம காலத்திலேயே, ஈரோஸ் தோன்றி இருந்தது. ஈரோஸ் இயக்கத்தினர், தமிழீழம் என்ற சொல்லை நிராகரித்து, அதற்குப் பதிலாக ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அதற்கு ஒரு விசித்திரமான விளக்கம் கொடுத்தார்கள். "பாலஸ்தீனர்கள் அரபு-பாலஸ்தீனம் கோரவில்லை. அவர்களது தாயகம் பாலஸ்தீனம். அதே போல, நாம் தமிழர்களாக இருந்தாலும், எமது தாயகம் ஈழம்" என்றார்கள்.

அதாவது, தமிழீழம் என்ற பெயரில் இனவாத தொனி காணப் படுவதாகவும், ஈழம் என்பதற்குள் முஸ்லிம்களும் அடங்குவார்கள் என்பது அவர்களது கொள்கை. ஈரோஸ், ஈழ தேசத்தின் பிரஜைகளுக்கு  "ஈழவர்கள்" என்று பெயர் சூட்டி இருந்தது. பிற்காலத்தில், ஈரோஸில் இருந்து பிரிந்து சென்ற ஈபிஆர்எல்ப் இயக்கம், "ஈழம்" என்ற பெயரை தானும் சுவீகரித்துக் கொண்டது. (ஈழவருக்கு பதிலாக "ஈழ மக்கள்" என்ற பதத்தை பயன்படுத்தியது.)

தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புலிகள், புளொட் முன்மொழிந்த தமிழீழ வரைபடத்திற்கும், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் முன்மொழிந்த ஈழ வரைபடத்திற்கும் இடையில் வித்தியாசம் இருந்தது. தமிழீழ வரைபடத்தில் புத்தளம் மாவட்டம் சேர்க்கப் பட்டிருந்தது. ஈழ வரைபடத்தில் அது நீக்கப் பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, மலையகத் தமிழர்கள் வாழும் மலைநாட்டுப் பிரதேசம் இணைக்கப் பட்டிருந்தது. ஈரோஸும், ஈபிஆர்எல்ப் உம், மலையகத் தமிழ் மக்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். புலிகளும், டெலோவும் அவர்களை அலட்சியப் படுத்தினார்கள். ஈழப்போரின் பிற்காலத்தில், வன்னியில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் புலிகளில் இணைந்து போரிட்டது வேறு கதை. ஆனால், புளொட் அவர்களை ஏற்கனவே அரசியல் மயப் படுத்தி இருந்தது.

இந்த இடத்தில், இன்னொரு கொள்கை வேறுபாட்டையும் நாம் மறந்து விடலாகாது. உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலை இயக்கங்களிலும், வலதுசாரி, இடதுசாரி வித்தியாசம் இருக்கும். ஈழ விடுதலைப் போராட்டத்திலும் அது நடந்தது. டெலோ, புலிகள் ஆகியன வலதுசாரி இயக்கங்களாக தோற்றம் பெற்றன. அவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வலதுசாரி தேசியவாதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டன. ஆனால், இரண்டு இயக்கங்களிலும் தலைமைப் பொறுப்பில் சில இடதுசாரி உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் அன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு, சில இடதுசாரி கோஷங்களை முன்வைத்தார்கள். உதாரணத்திற்கு: சோஷலிசத் தமிழீழம். ஏற்கனவே, வட்டுக்கோட்டை மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கையிலும் சோஷலிசத் தமிழீழம் என்றே குறிப்பிடப் பட்டது. இவ்வாறான சில இடதுசாரி கோஷங்களை தவிர, நடைமுறையில் வலதுசாரி அரசியல் தத்துவமே பின்பற்றப் பட்டது.

//அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. // (தமிழ் இனியன்)

அப்படியான பொதுமைப் படுத்தலே தவறானது. ஈழப் போராட்ட வரலாற்றில் எதையுமே கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. டெலோ, புலிகள் ஆகிய இரண்டு இயக்கங்களுக்கு இடையில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு, "வல்வெட்டித்துறை தொடர்பு" ஒரு காரணமாக அமைந்திருந்தது. டெலோ தலைவர்கள் தங்கத்துரை, குட்டிமணி; மற்றும் புலிகளின் தலைவர்கள் பிரபாகரன், மாத்தையா ஆகியோர், வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

பல தசாப்தங்களாக, வல்வெட்டித்துறை படகோட்டிகள், அடிக்கடி படகுகளில் தமிழ்நாட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவர்கள் கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் வியாபாரிகளாக இருந்தாலும், அந்த தொடர்புகள் தலைமறைவு இயக்கங்களுக்கும் பிரயோசனமாக இருந்தன. அவர்கள் இந்தியாவில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து விற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். டெலோவும், புலிகளும், "வல்வெட்டித் துறை தொடர்புகளை", தமிழீழ அரசியலுக்கு பயன்படுத்தி வந்ததால் தான், ஒரு கட்டத்தில் பிரபாகரன் கூட டெலோ இயக்கத்தில் சேர்ந்து செயற்பட முடிந்தது.

தமிழ் இனியன் குறிப்பிடும் "பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும்", புலிகள் - புளொட் உறவில் இருக்கவில்லை. புலிகள் அமைப்பில் இருந்து உமா மகேஸ்வரன், சுந்தரம் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றதும், இரண்டு குழுக்களும் ஒன்றையொன்று எதிரிகளாக கருதிக் கொண்டன. "பிரபாகரன் உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது போல, உமாமகேஸ்வரன் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்தார்." சென்னை, பாண்டி பஜாரில், பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த செய்தி. பிளவின் ஆரம்ப காலங்களில், இரண்டு குழுவினரும், மாறி மாறி எதிர் தரப்பு உறுப்பினர்களை கொலை செய்தார்கள்.

//பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப்பாவையாக மாறினார்கள். // (தமிழ் இனியன்)

ஆரம்பத்தில், இந்திய அரசு அவர்களை புறக்கணித்து வந்தது. ஈழ விடுதலை இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டில் புகலிடம் கோரி இருந்தாலும், அங்கும் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை இருந்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் ஏற்பட்ட தொடர்பு ஓரளவு காப்பாற்றியது. அதுவும் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே சாத்தியமானது.

1983 ம் ஆண்டுக்குப் பிறகு, நிலைமை தலைகீழாக மாறியது. ஜூலை இனக்கலவரம், அதனால் இந்திய-இலங்கை அரசுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை, போராளிக் குழுக்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய மத்திய அரசு, அனைத்து இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சியளிக்க முன்வந்தது. புலிகளும் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியா ஆயுதமும், பயிற்சியும் கொடுத்த காரணத்தினால், ஐந்து பெரிய இயக்கங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

டெலோவுக்கு கருணாநிதியும், புலிகளுக்கு எம்ஜிஆரும் நிதியுதவி வழங்கினார்கள். ஆனால், இருவரும் இந்திய மத்திய அரசுக்கு தெரிந்தே அதனை செய்தார்கள். டெலோ இந்திய மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்தது உண்மை தான். ஆனால், அந்தக் காலத்தில் அதை யாரும் இழிவாகக் கருதவில்லை. மாறாக, அது "பெருமைக்குரிய விடயமாக" கருதப் பட்டது. டெலோவும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் "இந்திய தொடர்பை"  சொல்லிக் காட்டி, அரசியல் பிரச்சாரம் செய்து வந்தது. ஏனென்றால், இந்தியா படையனுப்பி ஈழம் வாங்கித் தரும் என்ற மாயை, அன்றைய தமிழ் மக்கள் மனதில் இருந்தது. பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்தியாவை "தாய் நாடு" போன்று கருதி வந்தனர்.

இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஏதோ ஒரு வழியில் கட்டுப் படுத்தி வந்தது. தமிழ்நாட்டில் அவர்களை சுதந்திரமாக இயங்க விட்டதாக காட்டிக் கொண்டாலும், RAW வுக்கு தகவல் கொடுக்கும் பலரை இயக்க மேல் மட்டங்களில் வைத்திருந்தது. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் RAW ஊடுருவி இருந்தது. புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா விவகாரம் ஒரு சிறந்த உதாரணம்.

டெலோ இந்திய மத்திய அரசின் செல்லப் பிள்ளையாக இருந்திருந்தால், எதற்காக புலிகளுடன் மோதல் வெடித்த காலத்தில் அதனை கைவிட்டது? டெலோவை அழித்த புலிகள், பெருந்தொகையான இந்திய ஆயுதங்களை கைப்பற்றியதுடன், "டெலோ இந்தியக் கைப் பாவையாக செயற்பட்டதாக" மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர். ஆனால், அப்போதும் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படவில்லை. (பிற்காலத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பொழுது தான், அந்த விரிசல் தோன்றியது.) யாழ்ப்பாணத்தில் டெலோவை தடை செய்த புலிகளை, இந்தியா தனது நாட்டில் தடை செய்யவில்லை. ஆகவே, இது ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம். பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை, இந்தியா முன்கூட்டியே அனுமானித்திருக்கலாம்.

1987-1990 வரையில், இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில், ஈபிஆர்எல்ப், ஈஎன்டீஎல்எப் ஆகியன இந்தியாவின் கைப் பாவைகளாக மட்டுமல்ல, அதற்கும் மேலே கூலிப்படைகளாக பயன்படுத்தப் பட்டன. ஆனால், இந்திய இராணுவம் வெளியேறும் நேரம், அவர்களை புலிகளின் கரங்களில் ஒப்படைத்து விட்டு ஓடி விட்டது. மேற்படி இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட, ஆயிரக் கணக்கான "தமிழ் தேசிய இராணுவ" இளைஞர்களும் புலிகளால் படுகொலை செய்யப் பட்டார்கள். இந்தியா நினைத்திருந்தால், தனது "கைப் பாவைகளை" காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக புலிகளின் கை ஓங்குவதற்கு அனுமதித்தது.

//(இந்தியாவின் கைப்பாவை ) ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. // (தமிழ் இனியன்)

1987 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், புலிகள் இயக்கம் இந்தியாவுடன் முரண்பட்டது. மிகப் பெரிய இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்வதற்கும் துணிந்தது. அதற்கு முன்னர் இந்தியா புலிகளையும் தனது கைக்குள் வைத்திருந்தது. முதன் முதலாக இந்தியாவிடம் இருந்து விலகியது புலிகள் அல்ல. எழுபதுகளில் இருந்து, ஈரோஸ் PLO வுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பிட்டளவு இளைஞர்களை லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்பியது. அதே மாதிரி, புளொட் PFLP  இடம்  பயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டது.

1984 ம் ஆண்டு, புளொட் இந்தியாவை விமர்சிக்கும் "வங்கம் தந்த பாடம்" என்ற சிறு நூலை, தமிழ் மக்கள் மத்தியில் விநியோகித்தது. (பங்களாதேஷ் பிரிவினையில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் அந்த நூலில் விபரிக்கப் பட்டிருந்தன.)   புளொட் இயக்கம், இந்திய அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளில் வாங்கிய ஆயுத தளபாடங்களை, ஒரு கப்பலில் கடத்திக் கொண்டு வர முயற்சித்தது. அந்த விடயம், இந்தியாவுக்கு தெரிய வந்த பின்னர், இந்தியக் கடற்படையினர் புளொட்டின் ஆயுதக் கப்பலை கைப்பற்றினார்கள். ஒரு புளொட் குழுவினர், மாலைத்தீவு வர்த்தகர் ஒருவரின் கூலிப்படையாக சென்று சதிப்புரட்சி மூலம் மாலைத்தீவை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சதிப்புரட்சியை முறியடித்த இந்திய இராணுவம், புளொட் கூலிப் படையினருக்கு கடுமையான தண்டனை வழங்கியது.

இந்தியாவுக்கும் பிற இயக்கங்களுக்கும் இடையிலான உறவு, அப்படி ஒன்றும் சிறப்பாக இருக்கவில்லை. சென்னையில் இருந்த டெலோவின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, இந்தியாவை விட்டு நாடுகடத்தப் பட்டார். யாழ்ப்பாணத்தில், அமெரிக்க அலன் தம்பதிகள் கடத்தலில் ஈடுபட்ட ஈபிஆர்எல்எப் மீது, இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கை எடுத்தார்.  (சி.ஐ.ஏ. என்று குற்றஞ்சாட்டி கடத்தப்பட்ட அலன் தம்பதிகள், இந்திரா காந்தியின் பயமுறுத்தலின் பின்னர் விடுவிக்கப் பட்டனர்.) இந்தியா இன்னொரு முக்கியமான தடைக் கல்லை போட்டது. இடதுசாரி ஈழ விடுதலை இயக்கம் எதுவும், தமிழ்நாட்டில் இருந்த நக்சல்பாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை, இந்தியா விரும்பவில்லை. அந்த இயக்கங்கள் தன்னிச்சையாக எடுத்த, அவ்வாறான முயற்சிகள் யாவும் தடுக்கப் பட்டன. 

தமிழ் இனியன் ஒரேயடியாக 1987 காலகட்டத்திற்கு தாவுகிறார். ஆனால், அப்போது கூட நிலைமை அவர் நினைப்பது போல இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் போய் இறங்கியதும், ஈழத் தமிழ் மக்கள் அவர்களை இரு கரம் நீட்டி, மகிழ்வுடன் வரவேற்றார்கள். அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் இந்தியப் படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்ததும், மக்கள் அதையும் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். இந்தியப் படைகளை, யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் வரவேற்றதற்கு காரணம், அவர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு. நீண்ட காலமாக, இந்தியா படையனுப்பி தங்களை காப்பாற்றும் என்று, தமிழ் மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படைகளின் வருகைக்குப் பின்னர், இரண்டு மாதமாக நிலவிய சமாதானம் குலைந்தது. இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. யுத்த காலத்தில் இந்திய இராணுவம் தனது கோர முகத்தை காட்டியது. இந்தியப் படைகள் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பன, புலிகளுக்கு தமிழ்ப் பொது மக்களின் அனுதாபத்தை பெற்றுத் தந்தது. ஒரு காலத்தில் வரவேற்கப்பட்ட இந்திய இராணுவம், அதே தமிழ் மக்களால் வெறுக்கப் பட்டது.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்தியப் படைகளின் அட்டூழியங்களை வெறுத்தாலும், இந்தியாவை நிராகரிக்கவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் இருந்து அரசியல் தீர்வு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பு போன்ற இன்றைய தமிழ்த் தலைமைகள், தமக்கு இந்திய ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். 

அதிகம் பேசுவானேன், புலிகளின் அழிவுக்கு முன்னர், தமிழகத்தில் நெடுமாறன் , வைகோ போன்ற புலி ஆதரவு அரசியல்வாதிகள், புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்திருந்தார்கள். "தமிழீழம் அமைந்தால், அது ஒருக்காலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படாது." என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள்.  இப்போதும், "இலங்கையில் சீனா கால் பதிக்கிறது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்."என்று இந்தியாவுக்காக கவலைப் படுகிறார்கள்.

தமிழ் இனியன் சொல்வது போல, "புலிகள் இந்திய கைப் பாவை ஆகாமல் இருந்ததால் தான், மக்கள் ஆதரவை பெற முடிந்தது" என்பது உண்மையானால், இன்று தமிழக தமிழினவாதிகள் அனைவரும், ஈழத் தமிழ் மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப் பட்டிருக்கும். 

Thursday, January 10, 2013

இலங்கையில் இடதுசாரி அரசியல் பற்றிய தமிழ் வலதுசாரிகளின் புனைவுகள்

புனைவு 1:
இடதுசாரிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாததால் தான், தமிழரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கட்சி தோற்றம் பெற்றது.

உண்மை நிலவரம் என்ன?
சிங்கள தேசியவாத சுதந்திரக் கட்சியின் தோற்றமும், தமிழ் தேசியவாத தமிழரசுக் கட்சியின் தோற்றமும், ஆச்சரியப்படத் தக்கவாறு நிறைய ஒற்றுமைகளை கொண்டுள்ளன. பிரிட்டிஷ் காலனியான இலங்கையின் ஆட்சி நிர்வாகம், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஒரு பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மேட்டுக்குடியினரையும், மறுபக்கம் தமிழ்க் காங்கிரஸ் தமிழ் மேட்டுக்குடியினரையும் பிரதிநிதித்துவப் படுத்தி வந்தன. இதனால் பெரும்பான்மை சிங்கள-தமிழ் உழைக்கும் மக்கள், தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு வந்தனர். பாராளுமன்ற தேர்தல்களில், கம்யூனிஸ்ட் அல்லது சோஷலிச கட்சிகள் மூன்றாமிடத்தை பிடித்து வந்தன. 

இலங்கையில் மேல்தட்டு வர்க்க அரசியல் தொடர்வதால் ஏற்படக் கூடிய விளைவுகளை, சில தலைவர்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் பிரிந்து சென்று, சிங்கள தேசியவாத அரசியலை முன்னெடுத்தார். சிங்கள உயர்சாதியினரான கொவிகமவினர் மட்டுமே அரசியல் அதிகாரத்தை வைத்திருந்த நிலை மாறி, அனைத்து சாதிகளையும் சிங்கள தேசியவாதம் ஒன்று சேர்த்தது. கண்டிய சிங்களவர்களுக்கும், கரையோர சிங்களவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்தது. யாழ் குடாநாட்டில், உயர்சாதி வெள்ளாளர்களின் கட்சியாக கருதப்பட்ட தமிழ் காங்கிரஸ், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை உதாசீனப் படுத்தி வந்தது. தமது அபிலாஷைகளை பிரதிபலிக்காத காரணத்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர் யாரும் தமிழ்க் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அவர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வந்தது. 

SJV செல்வநாயகம் தலைமையில், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள், தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார்கள். தமிழ் இன உணர்வு, தமிழ் மொழி உரிமை போன்றவற்றிற்கு பாடுபடுவதாக பிரச்சாரம் செய்து வந்தனர். இதன் விளைவாக, அனைத்து சாதிகளையும் தமிழர் என்ற பெயரில் ஒன்றிணைக்க முடிந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்றவற்றுக்கு இடையிலான பிரதேச வேறுபாடுகளும் மறைந்தன. சுதந்திரக் கட்சியும், தமிழரசுக் கட்சியும் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டன. இலங்கையில் அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில், எந்தவொரு இடதுசாரிக் கட்சியும் பெருமளவு வாக்குகளைப் பெற முடியவில்லை. இலங்கையில், கம்யூனிஸ்டுகள் பாராளுமன்ற தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றி விடுவார்களோ, என்று பயந்த காலம் மலையேறி விட்டது. இன்றைய சிங்கள-தமிழ் இளைய தலைமுறையினர், "கம்யூனிசம் என்றால் கிலோ என்ன விலை?" என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறி விட்டது. இலங்கையில் ஏற்படவிருந்த "சிவப்பு அபாயத்தை" அடியோடு ஒழித்துக் கட்டியதற்காக, சுதந்திரக் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்கும், முதலாளித்துவ வர்க்கம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

******************

புனைவு 2:
யதார்த்தத்தில் இருந்து விலகிய கண்ணோட்டத்தினால், பரந்துபட்ட தமிழ் மக்களிடமிருந்து "இடதுசாரிகள் " எனப்பட்டோர் அந்நியமாகி ஏறக்குறைய அழிந்துவிட்டனர்.

உண்மை நிலவரம் என்ன?
கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்த கொடிய யுத்தம், சர்வாதிகார அடக்குமுறை, நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள், மனிதப் பேரவலங்கள், இவை எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு, எப்படி இவ்வாறு பேச முடிகின்றது?

*****************

புனைவு 3:
இலங்கையில் கம்யூனிசம், கம்யூனிஸ்டுகளாலேயே அழிக்கப்பட்டது. அதற்கு, அன்று கம்யூனிஸ்டுகள் என்று மக்கள் மத்தியில் தமது பெயரை நிலைநாட்டியோரின் புரள்வுகளே காரணம். பெரும்பாலான மக்கள் இவர்களையே கம்யூனிஸ்டுகள் என்று நம்பினார்கள். எனவே மக்கள் இவர்களின் குத்துக்கரணங்களை, கம்யூனிஸ்டுகளின் குத்துகரணம் என்றே விளங்கி கொண்டனர். சிறிமா ஜேவிபியினரை வேட்டையாடி கொண்டிருந்தபோது இந்த போலி கம்யூனிஸ்டுகள் சிறிமாவின் அடிவருடிகிடந்தன.


உண்மை நிலவரம் என்ன?
மார்க்ஸ், லெனின் படங்களை வைத்திருப்பதாலேயே, அல்லது பொதுவுடைமை என்று பெயர் வைத்திருப்பதால், ஒரு கட்சி இடதுசாரிக் கட்சியாக மாறி விடுவதில்லை. அதே போல தமிழீழத்திற்காக போராடுவதாக சொல்வதாலேயே, ஒரு கட்சி தமிழ் தேசியக் கட்சியாகி விடாது. சுய விமர்சனங்களுக்கூடாக அந்த இலக்கை அடைவதற்கு, கட்சிக்குள்ளே போராட வேண்டும். போலிகளை மட்டுமே எதற்காக அடிக்கடி உதாரணம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? டக்லஸ், கருணா, பிள்ளையான், போன்ற எத்தனையோ முன்னாள் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகள், இன்று சிங்கள அரசின் அடிமைகளாக இருப்பதை எடுத்துக் காட்டி, தமிழ் தேசியவாதிகளே இப்படித் தான் என்று பேச முடியுமா? அவ்வாறு சிந்திப்பதே அபத்தமாக தெரிகின்றதல்லவா? நடப்பில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், ஆயுதபாணி இயக்கங்களும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டதால் தான், இன்று மக்கள் யாரையுமே நம்புவதில்லை.

முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணி, இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, போன்ற போலி தமிழ்தேசியவாத கட்சிகளின் குத்துக் கரணங்கள் எல்லாம் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவை தான். புலிகளை கூட எல்லா தமிழரும் ஆதரிக்கவில்லை. போர் நடந்த காலங்களிலும், போர் முடிந்த பின்னரும் புலிகளின் குறைகளை எடுத்துக் காட்டி பேசும் தமிழ் மக்கள் நிறையப்பேரை  யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் காணலாம். தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் நிறைய தவறுகள் விட்டுள்ளமை உண்மை தான். ஆனால், அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினையை மழுங்கடிக்கும், அல்லது புறக்கணிக்கும்  செயலை தான் நான் எதிர்க்கிறேன்.  அரசியல் தலைவர்களின்/கட்சிகளின் பிழையான அரசியலை விமர்சிக்கும் பூரண சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அதனை யாரும்  மறுக்கவில்லை. ஆனால் அதை மட்டுமே காட்டி, மக்களின் பிரச்சினையை மூடி மறைக்கும் செயல் அயோக்கியத்தனமானது.  ஸ்ரீலங்கா அரசு செய்யும் அதே அயோக்கியத்தனத்தை, இவர்கள்  கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் செய்கிறார்கள். நான் தமிழ் மக்களுக்கு தேவையான கம்யூனிசத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், முதலாளித்துவ ஆதரவாளர்கள்  "அந்த இடதுசாரி தலைவர், அல்லது அந்த கட்சி, அப்படியான தவறு செய்தார்கள்" என்று, கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி ஒரே பல்லவியை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  "புலிகள் என்ன பிழை விட்டார்கள்? இடதுசாரி கட்சிகள் என்ன பிழை விட்டார்கள்?" என்பதைப் பற்றி எல்லாம், இன்றுள்ள  தமிழ் மக்களுக்கு கவலை இல்லை. தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள்  வேறு. அவர்களது கவலைகள் வேறு.  இந்த வித்தியாசத்தை நாங்கள்  முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

*******************

புனைவு 4:
"டட்லிகே படே மசால வடே!" ( டட்லியின் வயிற்றில் மசால வடை ) என்று "இடதுசாரிகள்" "முற்போக்கு!" முழக்கமிட்டது 1966 இல் ; இனவாத மதவாத அரசியல் அமைப்பைக் கொல்வின் ஆர். டி.சில்வா என்ற "இடதுசாரி" உருவாக்கியது 1972 இல் ஆகும். "டட்லி வயிற்றில் மசாலா வடை என்று 1956லும், இனவாத அரசியலமைப்பை 1970லும் வரைந்தபோதே இலங்கையில் செயற்படு கம்யூனிசம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான, ஈழ விடுதலைப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் புறக்கணித்தார்கள்.


உண்மை நிலவரம் என்ன?
பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையில் சிங்களவர்-தமிழர் முரண்பாடு தீவிரமடைந்த காலத்தில், புத்திஜீவிகளும், இடதுசாரிகளும் இன அடிப்படையில் பிரிந்து சென்றார்கள். ஒரு பக்கம், சிங்கள இடதுசாரிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள். மறுபக்கம் தமிழ் இடதுசாரிகள் தமிழ் குறுந் தேசியவாத இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அறுபதுகளில், "டட்லியின் வயிற்றில் மசாலா வடை" என்று சிங்கள இனவாதம் பேசிய LSSP என்ற ட்ராஸ்கியவாத கட்சியில் இருந்து, முக்கிய தமிழ் அரசியல்வாதியான  ஆனந்தசங்கரி பிரிந்து சென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் இப்போது மறுபடியும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன? "டட்லி மசாலா வடை கதையை திரும்பத் திரும்ப இரைமீட்கும் தமிழ் முதலாளித்துவ ஆதரவாளர்கள்,  "இலங்கையில் கம்யூனிசம் என்பது ஒரு சிங்கள இனவாத பூச்சாண்டி" என்று, அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல. அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். 

எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் எடுபடுகின்றது. ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், மார்க்சியமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாகி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள். அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர். 

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம். ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர். அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது "சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று, ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

(பிற்குறிப்பு: இந்தக் குறிப்புகள், முகநூலில் நடந்த விவாதங்களின் போது எழுதப் பட்டவை ஆகும்)